Tag: பிள்ளைத் தமிழ்

  • குழவி மருங்கினும் கிழவதாகும்-14

    குழவி மருங்கினும் கிழவதாகும்-14

    மீனாட்சி பாலகணேஷ்

    (மொழி பயிலல்)

    பிள்ளைப்பருவத்தின் ஆடல்களும் செயல்களும் நிகழ்வுகளும் இலக்கணத்தால் வரையறுக்கப்பட்ட பத்துப்பருவங்களுக்கு மட்டுமே உட்பட்டனவன்று. எண்ணற்ற விளையாட்டுகளும், தாய்தந்தையரும், குடும்பத்தினரும் குழந்தையின் நலன்கருதிச் செய்யும் கண்ணேறு கழித்தல், காது குத்துதல் ஆகிய சில சடங்குகளும் இன்னபிறவும் குழந்தைப் பருவத்திற்கு மட்டுமே உரியனவாம். இவற்றுள் பல அரிதாகப் பாடப்பட்டும் பல பாடப்படாமலேயும் உள்ளன.

    இப்பருவங்களுள் பல ஆண்பால், பெண்பால் பிள்ளைத்தமிழ் நூல்களில் தனித்தனியாகப் பாடப்பட்டுள்ளன. சிற்றில் பருவம் ஒன்றே இருபாலருக்கும் பொதுவாக அமைந்துள்ளது. ஆண்மக்களின் வளர்ச்சிப் பருவத்தில் நிகழும் சில நிகழ்ச்சிகளும் சடங்குகளும் பிங்கலந்தை நிகண்டுவில் இலக்கணமாக வரையறுக்கப்பட்டுள்ளதனைக் காணலாம்.

           ‘ஆறாந் திங்களிற் கூறுதற் கற்றலோ
             டேழாந் திங்களி னின்னமு தூட்டலும்
             ………………………………………….
             பத்திற் பூணணி பன்னீ ராண்டினிற்
             கச்சொடு சுரிகை காமுறப் புனைதலென்
             றின்னிவை1 ……………………….,‘ என்பன பாடல்வரிகள்.

    இருப்பினும் பிங்கல நிகண்டு குறிப்பிடும் இப்பருவங்கள் கதிர்காமப்பிள்ளைத்தமிழ் எனும் ஒரேயொரு பிள்ளைத்தமிழ் நூலில் மட்டுமே பாடப்பட்டுள்ளது வியப்பிற்குரியதாகும்.

    சிவங். கருணாலய பாண்டியப்புலவர் இயற்றிய இந்நூல் இலங்கையிலுள்ள கதிர்காமம் எனும் பதியில் உறையும் முருகப்பிரானைப் பற்றியதாம். பதினான்கு பருவங்களைக் கொண்டமைந்த இந்நூலின் பருவங்கள் ஒவ்வொன்றும் மூன்று பாடல்களைக் கொண்டே அமைந்தவையாகும் என்பதும் இதன் இன்னொரு சிறப்பாகும். காப்பு, செங்கீரை, தாலாட்டு, சப்பாணி, முத்தம், வருகை, நிலாவழைத்தல், சிறுபறை முழக்கல், சிற்றில் சிதைத்தல், சிறுதேர் உருட்டல், ஆகிய பத்துப்பருவங்களுடன் மொழிபயிலல், உணவூட்டல், பூணணிதல், உடைவாள் செறித்தல் ஆகிய நான்கு பருவங்களும் சேர்த்து மொத்தம் பதினான்கு பருவங்களால் கவினுறப் பாடப்பட்டுள்ளது.

    மொழிபயிலல் பருவமானது இப்பிள்ளைத்தமிழில் செங்கீரைப்பருவத்திற்கு அடுத்து அமைக்கப்பட்டுள்ளது. மகவு, தன் தாய், சுற்றியுள்ளோர் ஆகியோர் பேசுவதனைக் கண்டு தானும் தனது தாய்மொழியின் வழக்குகளை அறிந்து பேசக் கற்றுக்கொள்ளுதல் எனப் பொருள் கொள்ளலாம். குழந்தையின் வளர்ச்சியில் இதுவும் மிக இன்றியமையாததொரு பருவமாகும். மொழியினைத் தன் தாயிடமிருந்தே அவள் தனக்குத் தாலாட்டுப் பாடும்போது கேட்டுக் குழந்தை கற்றறிகிறது. உறவுமுறைகள், உணர்வுகள், உணவு பற்றிய சொற்கள், காகம், நாய், பூனை முதலான விளையாட்டுத் தோழர்கள் ஆகியனவற்றைத் தாய் இப்பருவத்தில் குழந்தைக்குச் சிறுசொற்களாலும் சொற்றொடர்களாலும் அறிமுகப்படுத்துகிறாள்.

    இது ஆண், பெண் ஆகிய இருபருவத்துக் குழந்தைகளுக்கும் பொருந்துமாயினும் ஆண்பால் பிள்ளைப்பருவமாக ஒரேயொரு பிள்ளைத்தமிழில் மட்டுமே பாடப்பட்டுள்ளது. ‘ஆறாம் திங்களில் கூறுதற்கற்றல்’ என பிங்கல நிகண்டு இதனைக் குறிப்பிடுகிறது. இப்பருவத்திற்கான பாடல்கள் மூன்றே மூன்று ஆனவையாதலால் அனைத்தின்  சிறப்பையுமே நோக்கலாம்.

    முதற்பாடலின் மூலம் தமிழின் சிறப்பையும் அதைப் பயிலும் குழந்தை முருகனையும் புலவர் ஏத்துகின்றார். அங்கயற்கண்ணியம்மையின் மகனாகித் தமிழைப் பயிலும் மகனே! எமது குலத்தோரின் குடியினை ஆளவந்து மகவாய் உதித்து விளையாடல்களைப் புரிந்த இன்பவெள்ளமே!

    துரியாவத்தைக்கு மேலான துரியாதீதாவத்தை, கேவலாவத்தை, சகலாவத்தை, சுத்தாவத்தை ஆகியவை தொடராது பேசாமல் வாளவிருந்தவன் நீ ஆவாய்! நீ வெண்குன்றமெனப்படும் கயிலாயத்தில் பகல்பொழுது இரவுப்பொழுதென விளங்கும் பச்சை நிறங்கொண்ட பார்வதியம்மை இடப்புறமிருக்க, வெண்மைநிறங்கொண்ட சிவபெருமானும் வலப்புறமிருக்க, இவர்களுக்கிடையே சிவந்த செக்கர்வானம்போல விளங்கும் முருகப்பிரானாகிய குழவியே! (இவ்வரிகள் சோமாஸ்கந்த வடிவினை நமக்கு நினைவுபடுத்தி மகிழ்விக்கின்றன).

    முருகப்பெருமானே! அன்று நீ அன்னை, அத்தன் இவர்களிடமிருந்து கற்றுக்கொண்டு பேசும் ‘அம்மா, அப்பா, எனும் இனிய சொற்களை அடியேம் யாம் கேட்க ஆவலாக உள்ளோம்,’ எனும் கருத்திலமைந்த பாடலிதுவாகும். அம்மையே அப்பா எனும் சொற்களே அருமறையாகும் என உலகிற்கு உணர்த்தியவன் முருகப்பெருமான் என உட்பொருளாகக் கொள்ளலாம்.

      இகலுமிணை அங்கயற் கண்ணிமக வாய்த்தமிழி
             யன்றுபயி லஞ்ஞைசெம்மால்!
        எம்மனோர் குடியாள வந்துமக வாய்க்கூத்தி
             யற்றின்ப வெள்ளமே!
        …………………………………………………………………..
      பகலிரவு மாறப்ப சுந்தபச் சைக்குமறு
             பாலின்வெள் ளைக்குநடுவட்
        படர்செக்கர் வானன்ன செம்மையே யன்றவர்ப்
             பகர்மொழிப கர்ந்தவாற்றை
        ……………………………………………………………………………….
         வம்ம! வப்பாவென்னு மருமறைப் பாயிரம
             கத்தலர வாய்மலர்கவே2!

    மொழிபயிலல் பருவத்தின் இரண்டாவது பாடல்:

    ‘குறுகிய மதக்கொள்கையுடையோர் அறம் என எமக்கு உரைத்த பொருந்தாச் சொற்களைக் கேட்டதனாலும், ஈயாதார் இரப்போரைக் கடிந்துரைத்த கொடுஞ்சொற்களைக் கேட்டும், சிறுமை மிகுந்த குடியில் பிறந்த செல்வர் வறிய புலவர்களைச் செருக்கினால் இழித்துப் பேசக்கேட்டதனாலும் நல்ல அமிழ்தம் போலும் தமிழில் கேடுவிளைவிக்கும் வேறுசொற்களைச் சேர்த்துக் கூறுவதனைப் பலகாறும் கேட்டதனாலும் சீழ்வடியுமாறு உண்டான செவிப்புண் அழிந்து மறையுமாறு, கதிரமலையழகனே! அமிழ்தம் பொழிவாயாக! ‘அம்மா! அப்பா! எனும் சொல்லமிழ்தம் பொழிகவே!’ எனத் தாய்தந்தையர் வேண்டும் கூற்றாக இப்பாடல் அமைந்துள்ளது.

                ‘குறிய மதத்த ரறமெம்பாற்
                       கூறக் கேட்ட செவிப்புண்ணும்
                  ………………. கதிரமலை
                       யழகே! யமிழ்தம் பொழிகவே!
                 யம்மா! வப்பா! வென்னுஞ்சொல்
                       லமிழ்தம் பொழிக பொழிகவே3!’

    என்பன பாடல்வரிகள்.

    அம்மா அப்பா எனத் தாய்தந்தையரை அழைக்க அன்னை பயிற்றுவிக்கும் பருவம் இது எனவும் காண்கிறோம். கருத்திலும் கற்பனையிலும் வேறுபட்டு விளங்கும் இப்பாடல் தமிழின் பெருமையையும், வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டிய நல்லியல்புகளையும் இணைத்தும் கூறுகிறது.

    மூன்றாவதாகக் காணும் இப்பருவத்தின் கடைசிப்பாடலானது தமிழின் உயர்வைப் போற்றுகிறது. அதனை முருகன் பேசும் மழலையினோடு இணைத்தும் பாடுகின்றதனைக் கண்டு மகிழலாம். தாமரைமலரிலமர்ந்த பிரமன் மறைகளை ஓதவும், கல்லால மரத்தின் நிழலிலமர்ந்த தட்சிணாமூர்த்தியாகிய சிவபிரான் (தெற்குநோக்கியமர்ந்ததனால் இவனைத் தென்னன் என்கிறார்) உண்மைப்பொருளை சனகாதி முனிவர்களாகிய நால்வருக்கும் ஓதுகின்றான். இவர்கள் இவ்வாறு ஓதிட இவர்களுக்கு முன்பு அதனை உரைத்த பேராசிரியனே! (பிரமனுக்கும், தந்தை சிவபிரானுக்கும் மறைப்பொருளை உணர்த்தியவன் முருகன் எனும் தொன்மத்தை இதில் காணலாம்)

    புலர்காலைப்பொழுதினில் தேவர்கள் (தேவர்கள் கண்ணிமைக்காதவர்களாதலால் இமையோர் என்று குறிப்பிட்டார்) தொழுதிடும் கதிர்காமனே! நீ சொல்லிப்பழக வேண்டிய சொற்களை நாங்கள் உனக்குச் சொல்லிக்கொடுக்கவில்லை; (காலையில் துயிலெழுந்து படித்தால், கற்றால், அது உள்ளத்தில் பசுமரத்தாணி போற்பதியுமென்பது ஆன்றோர் வாக்காகும் அதனையே இங்கு கூறியுள்ளார் புலவனார்) நீ கூறி நாங்கள் கேட்டு இன்புற வேண்டியவற்றைக் கேட்கக் காத்துள்ளோம், ஊமைப்பிள்ளையே, என முருகனை விளிக்கிறார். இதுவும் ஒரு தொன்மத்தின்பாற்பட்டதே! (உப்பூரிகுடிகிழான் மகன் உருத்திரசன்மனெனும் ஊமைப்பிள்ளையாகி முருகன் வந்ததனைக் குறிப்பிடுகிறார்).

    உலகினில் மற்ற உயிர்கள் மெய்ப்புளகம் அடையுமாறு உரலினிடைக் கட்டப்பட்டவனாகிய கண்ணன் ஊதும் குழலிசையும் யாழிசையும் கசந்துபோகவும், உலர்ந்த மரங்களும் உயிருள்ளவை போன்று குழைந்திடவும் நீ மொழி பேசிட வேண்டும். நாவரசரான அப்பர் பெருமானை நீ ‘அப்பா’ என (ஆளுடைப் பிள்ளையாராகி) அழைத்ததெவ்வாறு? தம்மை அணுகிய பேயம்மையாகிய காரைக்காலம்மையாரை உன் தந்தை சிவபிரான் ‘அம்மையே’ என அழைத்தது எங்ஙனம் என விளக்கியருளுவாயாக என வேண்டுகிறார்.

            மலரவ னான்மறை யோதக் கல்லான்
                       மரநிழ லமர்தென்னன்
                 வாய்மையை நால்வர்க் கோத……
             ……………………………………………………………….
             உலகினி லேனைய வுயிர்மெய் யுயிர்ப்ப
                       உரலிடை யாப்புண்டோ
                 னூதுங் குழலிசை யாழிசை கைப்ப
                       உலர்மர முங்குழைய
             வலரன செந்நா வரசைய ழைத்தா
                       யஃதெங் கனமருளே4
    ………………………………………………………………..

    மொழிபயிலக் கற்ற சிறுமுருகன் ‘அம்மா, அப்பா’ எனப் பெற்றோரை அழைப்பதனைப் பலவிதமான உவமைகளால் மூன்று பாடல்களிலும் விளக்கியுள்ள நயம் போற்றத்தக்கது. மொழியில் அமையும் உரையாடல்களுக்குத் தொடர்புடைய கருத்துக்களையும் தொன்மங்களையும் கூறியுள்ளமையும் அழகாக அமைந்து சிந்தையைக் கொள்ளை கொள்கின்றது.
                                                                                                                                                                                                                      (வளரும்)

     பார்வை நூல்கள்:

    1. பிங்கல நிகண்டு
    2, 3, 4. கதிர்காமப் பிள்ளைத்தமிழ்- சிவங் கருணாலய பாண்டியப் புலவர்

    Share
  • குழவி மருங்கினும் கிழவதாகும்- 13.1

    குழவி மருங்கினும் கிழவதாகும்- 13.1

    மீனாட்சி பாலகணேஷ்   

       (சிறுதேர்ப்பருவம்- ஆண்பால்)

    ஆண்பால் பிள்ளைத்தமிழின் பத்தாம் பருவமாக சிறுதேர்ப் பருவம் அமையும். சிறுதேர் உருட்டுதலானது சிறுகுழந்தை நன்கு நடை பழகுவதற்காகவும், ஓடியாடி விளையாடவும் வகைசெய்யும் விதத்தில் ஊக்குவிக்கப்படும் விளையாட்டாகும். தற்காலத்திலும் குழந்தைகளுக்கு நடைவண்டி என நடை பழகுவதற்காக மரத்தாலான மூன்றுகால் சக்கரவண்டி ஒன்றினைக் கொடுப்பதனைக் கிராமப்புறங்களில் காணலாம். நகரத்துக் குழந்தைகள், நான்கு சக்கர ஊர்தி பொம்மைகளையும், நாய்க்குட்டி பொம்மைகளையும் கயிற்றால்கட்டி இழுத்தவண்ணம் நடப்பதனைக் காணலாம்.

                ‘பொற்காற் புதல்வர் புரவியின் றுருட்டும்

             முக்காற் சிறுதேர்1,’ என்று பட்டினப்பாலை, இச்சிறுதேரினை, சிறு குழந்தைகள் புரவியில்லாது உருட்டி விளையாடும் மூன்றுகால்களாலான சிறுதேர் எனக் கூறும்.

    ஐங்குறுநூறு, தலைவனின் உள்ளம் தன்மகன் புன்னகை புரிந்தவாறு தளர்நடை நடந்து சிறுதேர் உருட்டும் அழகினைக்கண்டு தலைவியைவிடப் புதல்வனிடத்தில் அன்புமிகுதியால் ஈடுபட்டதனைக் கூறுகிறது.

    ‘புணர்ந்தகா தலியின் புதல்வன் தலையும்

             ……………………………………………………………………

             சிறுதேர் உருட்டும் தளர்நடை கண்டே2,’ என்பன பாடல்வரிகள்.

    பிள்ளைத்தமிழின் ஒவ்வொரு பருவத்திலும் பாட்டுடைத் தலைவன் அல்லது தலைவியின் சிறப்புகள் கூறப்படும்; சப்பாணி, அம்மானை, சிறுபறை ஆகிய பருவங்கள் கைகளைப் பாடுபொருளாகக் கொண்டமையும்; வருகை, சிற்றில் (ஆண்பால்) ஆகியன கால்களைப் பாடுபொருளாகக் கொண்டு அவற்றின் சிறப்பைப் பேசும். தளர்நடை நடக்கும் ஆண்மகவு இழுத்துச் செல்லும் சிறுதேரைப்பேசும் சிறுதேர்ப்பருவம், தலைவன் செலுத்தும் தேர் தொடர்பான பல செய்திகளைத் தெரிவிக்கும்.

    இவையே பிள்ளைத்தமிழின் தனிச்சிறப்பாகும்.

    தளர்நடைபயிலும் சிறு ஆண்மகவு நடக்கக் கற்றுக்கொண்டு விட்டதனால் அவனுடைய தாய் அவனுக்கு விளையாட தச்சனிடம் செய்து வாங்கிய ஒரு அழகான சிறுதேரினைக் கொடுத்திருக்கிறாள். இலேசான, கனமற்ற மரத்தால் குழந்தை விளையாடுவதற்காகவே செய்யப்பட்டு, குழந்தை கையிலோ காலிலோ குத்திக் காயம் பண்ணிக்கொள்ளாமலிருக்க முன்னெச்சரிக்கையாக கூர்மையான முனைகள் எல்லாம் தேய்த்து மழுங்கவைக்கப்பட்டு செய்விக்கப்பட்ட விளையாட்டுத்தேர்! சிவப்பு, பச்சை, மஞ்சள் எனக் கண்ணைக்கவரும் வண்ணங்கள் பூசப்பட்டு, சில பட்டுத்துணித்துண்டுகளால் கொடிகளும் பறக்கும்படி அமைந்து மிக அழகாக இருக்கிறது. தாய் தனது ஆசைப்படி அதில் ஒரு அழகான அன்றலர்ந்த தாமரைப்பூவினையும் செருகிவைத்திருக்கிறாள்.

    இந்தத்தேரை அழகான ஒரு மணிக்கயிற்றினால் கட்டி, குழந்தை அதனை இழுத்து உருட்டும்போது ஒலியெழும்படியாகச் சில மணிகளையும் அங்கங்கே இணைத்துள்ளான் அதனைச் செய்த தச்சன். மிக்க மகிழ்ச்சியுடன் சிறுகுழந்தை தேரை இழுத்துக்கொண்டு செல்கிறான். தேர்ச்சக்கரங்கள் உருளும்போது மணிகள் இனிமையாக ஒலிக்க அதனை இழுத்து உருட்டும் தன் மகனைக்கண்டு தாயின் மனம் ஆனந்தத்தில் பூரிக்கின்றது. குழந்தையும் புது விளையாட்டில் உற்சாகமாக ஈடுபட்டுத் தெருவெங்கும் தேரினை இழுத்தவண்ணம் நடந்து செல்கிறான்.

    இந்தக்குழந்தை நம்மையெல்லாம் காக்கும் செந்தில்வாழ் கந்தன்; சேவற்கொடி கொண்ட குமரன். பக்தியிலும் தாயன்பிலும் திளைக்கும் புலவர் பகழிக்கூத்தர் தாமியற்றியருளிய திருச்செந்தூர் பிள்ளைத்தமிழில் குமரன் சிறுதேர் உருட்டுவதனை பரவசமாக வருணிக்கிறார்: குமரன் தேருருட்டுங்காலை மற்றும் பலரும் பலவிதமான தேர்களை உருட்டுகின்றனர் எனக்கூறும் நயம் வியக்கத்தக்கது.

    ‘தேவர்களுக்கரசன் இந்திரன்; மணம்மிகுந்ததும் தேன்சொரிவதுமான மாலைகளை அணிந்தவன்; ஆயிரம் யாகங்களைச் செய்து இந்திரபதவி பெற்று தக்கதருணத்தில் அரியாசனத்தில் அமர்ந்தவன்; அவனுடைய அழகிய தேரினை ஓட்டுபவன் (தேரினை உருட்டுபவன்) மாதலி எனும் பெருமைமிக்க தேர்ப்பாகன். உலகின் நிலைப்பாடு அழிந்துபட்டதென்று குபேரன் எனும் தேவன் தானும் ஒரு தேரை உருட்டுகிறான். அது என்ன? பழங்காலம்தொட்டே பகைமைகொண்ட அரக்கர்கள் அச்சமடையும்படி,  வடவரையாகிய இமயத்தினைப்பொரும் புஷ்பகவிமானத்தினை அவன் செலுத்துகிறான் (புட்பகத்தேரை உருட்டுகிறான்). வெற்றிமிகும்படி உதித்தெழுகின்ற ஆயிரம்கதிர்களைக் கொண்ட கதிரவன் ஆகாயத்தில் ஒளிபரப்பியவண்ணம் கோலம் நிறைந்த அழகான ஒளிவட்டத்தைப் பரிவட்டமாகக் கொண்டு சுடர் வீசுகின்றான்: உலகினைத்தன் ஒளியால் துலக்கி விளக்கமுறச் செய்கின்றான். சூரியனின் தேரோட்டியான அருணன்  முட்கோல் எனப்படும் தேரோட்டுபவனின் கைக்கோலை (சாட்டைக்கோலை) எடுத்துக்கொண்டு வலிமைமிகுந்த தேரினை உருட்டிவருகிறான். ஆகவே, செந்தில்பதியில் வாழும் கந்தனே! நீயும் உனது சிறுதேரினை உருட்டி வருவாயாக!’ எனப் பகழிக்கூத்தர் வேண்டுகிறார்.

                தண்டே னுடைந்தொழுகு மருமாலை நீள்முடி

                       தரிக்குஞ் சதக்கிருதுசெந்

             தருணமணி ஆசனத் தேறமா தலிசெழுந்

                       தமனியத் தேருருட்டப்

             ………………………………………………………………………………

             கொண்டே உதித்தசெங் கதிரா யிரக்கடவுள்

                       குண்டலந் திருவில்வீசக்

             ……………………………………………………………………………….

             திண்டே ருருட்டவளர் செந்தில்வாழ் கந்தனே

                       சிறுதேர் உருட்டி யருளே

             சேவற் பதாகைக் குமாரகம் பீரனே

                        சிறுதேர் உருட்டி யருளே3.

    புலவரின் ஆவல் இத்துடன் நிறைவுபெறவில்லை! இன்னும் யார்யார் என்னவெல்லாம் உருட்டினார்கள் எனக் குறிப்பிடுவதிலேயே முனைப்பாக இருக்கிறார். இதுவுமொரு அழகிய சொல்நயமும் தமிழ்நயமும் செறிந்த பாடல்!

    வாரணிந்த இளமுலைகளைக் கொண்ட இடைச்சியர்கள் (பொதுவியர்) தங்கள் ஆடை மோரினாலும் தயிரினாலும் முடைநாற்றம் வீசும் தகைமையர். தயிரினைக் கடைந்து வெண்ணையையும் உருண்டைகளாக உருட்டி, வெண்தயிரையும் உறிகளில் சேமித்து வைத்திருக்கிறார்கள். அவர்களுடைய வீடுகளுக்குள் கள்வனைப்போல் மெல்லப்புகுந்து அந்தத் தயிரினை உண்கிறான் ஒருவன்; பின் குடைத்தை உருட்டித்தள்ளி அதிலிருந்து வெண்ணையையும் அள்ளிவாரி (உருட்டி வாயில் இட்டுக்கொள்ளக்கூட அவகாசமின்றி) யாரும் காணும்முன்பு திருட்டுத்தனமாக மிக அவசரமாக வாயில் திணித்துக்கொண்டு உண்டுவிடுகிறான்; அதன்பின்பு தனது செங்கனி வாயினையும் துடைத்துக்கொண்டு ஒன்றுமே தெரியாதவன் போலச் செல்பவன், ஒரு பருத்த பெரிய சகடத்தைச் சிலம்பணிந்த தனது சிறுகாலால் எட்டியுதைத்து உருட்டி விளையாடிச் சிதைக்கிறான்! யாரிவன்? சகடாசுரனைக் கொன்ற கிருஷ்ணபெருமானே இவன். ‘அந்தப் பச்சைமாலின் மருகனே’ என முருகனைப் புலவர் விளிக்கிறார்: இவ்வாறு மாமனின் ‘சிறப்பைக்’கூறி விளித்த மருகனாகிய முருகனிடம், “உன்னிடம் தீராத பெரும்பக்தி கொண்ட அடியவர்களின் பழவினைகளாகிய கொடுமைகள் தீருமாறு நீ அத்தீமைகளைப் புறந்தள்ளி (உருட்டிவிட்டு) அனுக்கிரகம் செய்கிறாய் முருகா! மேலும் அத்துணை உலகங்களிலும், அண்டபகிரண்டங்களிலும் உனது  ஆணை (கட்டளை, அதிகாரம்) எனும் ஆக்ஞாசக்கரத்தை (ஆழியை) உருட்டிக் காக்கிறாய். இவ்வாறு செய்து, உனதடியைச்சேராத/வணங்காத அசுரர்களின் தலைகளாகிய குவடுகளை (மலைகளை) உருட்டுகின்றனை! நீ இந்தச் சிறுதேரையும் உருட்டியருளுக,” என வேண்டுவதாக இப்பாடல் அழகுற அமைகிறது.

    ‘சேவற்பதாகைக் குமாரகம்பீரனே,’ என ஆசையாக விளிக்கிறார். சேவல்கொடியைக்கொண்டு கம்பீரமாக விளங்குபவனே எனும் இப்பிரயோகம் தனித்துவம்கொண்டு விளங்குகிறது.

                   வாராரும் இளமுலை முடைத்துகிற் பொதுவியர்

                                 மனைக்குட் புகுந்து மெல்ல

                   வைத்தவெண் தயிருண்டு குடமுருட் டிப்பெருக

                                வாரிவெண் ணெயை யுருட்டிப்

                   பாராமல் உண்டுசெங் கனிவாய் துடைத்துப்

                                பருஞ்சகடு தன்னையன்று

                   பரிபுரத் தாளால் உருட்டிவிளை யாடுமொரு

                               பச்சைமால் மருக ……………………..

                    ……………………………………………………..

                  அண்டபகி ரண்டமும் அனைத்துலக முஞ்செல்லும்

                               ஆணையா ழியையு ருட்டிச்

                  சேராநி சாசரர் சிரக்குவ டுருட்டநீ

                                சிறுதேர் உருட்டி யருளே4

    முருகன் உருட்டும் சிறுதேரானது ஒவ்வொரு அடியாரின் உள்ளத்திலும் விதம்விதமான கற்பனைகளை உண்டுபண்ணுகின்றது.

                திருப்போரூர் முருகன் பிள்ளைத்தமிழின் ஆசிரியர் சிதம்பர அடிகளார் மனித உடலையே முருகன் எனும் தெய்வக்குழந்தை படைத்து உருட்டும் அற்புதமான தேராக உருவகிக்கிறார். பாதங்களே தேரின் சக்கரங்களாகவும், எலும்பே பெரிய பலகையாகவும், சொல்லும் நாடியே அச்சாணியாகவும், பருத்தமார்பு தேரின் தட்டாகவும், காற்றாடியைப்போல அலமலந்து சுழலும் வஞ்சம் நெருங்கிய ஐம்பொறிகள் சிறப்பான தேர்க்கொடிஞ்சியாகவும் உள்ளன; விருப்பம் பொருந்திய சிகையே தேர்க்கொடிஞ்சியாக அமைய, பேசும் சொற்களே பல வாத்தியங்களின் தொகுக்கப்பட்ட ஒலியாக அமைகின்றது; இவ்வாறு பெரிய வேகம் மிகுந்த பலவகை மாறுபாடுகளையும் கொண்ட உடல் எனக் கூறப்படும் தேரின்மீது பெறுதற்கரிய உயிர் எனப்படும் ஒரு சிறுவனை அமரச் செய்துள்ளாய்! மனம் எனும் குதிரைகளை இருவினைகள் எனும் கயிற்றினால் பூட்டி, உனது திருவருளே பாகனாக இருக்குமாறு அமைத்து குற்றமற நடத்தச் செய்தருளும் குமரேசனே! நீ உனது சிறுதேரினை உருட்டியருளுக, என வேண்டுகிறார் புலவர்.

                             பாததிகி ரியுமெலும் புப்பெரும் பலகையும்

                                         பகர்நாடி யுருவாணியும்

                             பரியமரு மத்தட்டும் ………………

                                         ……………………………………

                            காதல்தரு குஞ்சிக்கோ டிஞ்சியும் பலமொழி

                                        கலித்தபல் லியராசியும்

                                   …………………………………………………

                         பேதமுறு தேர்கள்மீ தாருயிர்ப் பிளையைப்

                                       பிறங்கிட விருத்திவெற்றிப்

                         பேசரு மனப்புரவி கட்டிவினை வடவழிப்

                                       ………………………………

                         தீதற நடத்திடச் செய்தகும ரேசனே

                                      சிறுதே ருருட்டியருளே5

    அழகான உருவகங்களைக் கொண்டமைந்த பாடலிதுவாகும். முற்பிறவியில் அல்லது இப்பிறவியில் நாம் செய்த வினைகளின்படிதான் ஆன்மாக்கள் அடுத்தடுத்த பிறவிகளில் உடல் பெறுகின்றன. இதனையே, “கணமொடு மலிந்த உடலென உரைதரும் பெரிய கடுவேகம் உடைய நானாபேதமுறு தேர்கண்மீது,” எனப் பொருத்தமாகக் கூறுகிறார். அவ்வினைப் போகங்களை அனுபவிப்பதற்கு அந்தவந்த உடல்களில் உயிர்களைப் பொருத்திக் கூட்டிவைப்பதனால், “ஆருயிர்ப் பிள்ளையைப் பிறங்கிட இருத்தி,” எனும் தத்துவமும் விளக்கப் பட்டுள்ளது.

    இத்தகைய பெரும் வேதாந்த தத்துவத்தை உள்ளடக்கிய பாடல்கள் பிள்ளைத்தமிழ் நூல்களில் பலவாகும்.

                                                                                      ***

    வேறொரு அடியாரின் சிந்தையில் உலகில் இயற்கை நியதிக்கேற்ப நடைபெறும் பலவிதமான செயல்களும் முருகனின் சிறுதேரோட்டத்திற்கு  இணையாகக் கூறப்படுகின்றன.

    சந்திரன் வானில் பலவேறு நட்சத்திரக் கூட்டங்கள் புடைசூழத் தன் விமானத்தில் உலாவருகிறான்;

    ஒளி (சவி) வாய்ந்த இரவி எனும் சூரியன் ஏழு புரவிகளைப்பூட்டித் தனது அழகான தேரில் உலாவருகிறான்;

    அரன் எனப்படும் சிவபிரான் தனது விடை வாகனத்தைச் செலுத்தி வர, மாயவனாகிய திருமால் தனது கருடவாகனத்தில் வலம் வருகிறான்; தாமரை மலரில் உறையும் பிரம்மன் தனது அன்னவாகனத்தில் வலம் வருகிறான்;

    முப்பத்து முக்கோடி தேவர்கள் வாழ்த்திடவும், இந்திரனுடைய அழகான தேவமங்கையர் இருபுறமும் கவரிகளைக்கொண்டு வீசிடவும், இளமையான நிலவு வட்டமான வெண்குடையை ஏந்திடவும், இருகொம்புகளையுடைய மலைபோலும் யானைகள் மரங்கள் நிறைந்த மலைகளைச் சுறி வலம்வரவும், நீ உன் சிறுதேரினை உருட்டுக என வேண்டுகிறார் புலவர்.

                           சந்திரன் பலவேறு தாராக ணங்கள்சூழ்

                                     தரவிமா னத்து லாவச்

                           சவிபெற்ற ரவிபுரவி யேழ்பூட்டி யேநெடும்

                                     தமனியத் தேர்சே லுத்த 

                                    …………………………………….

                           முளரிப் பொகுட்டயன் புள்ளூர முப்பத்து

                                    முக்கோடி தேவர் வாழ்த்த

                                    ………………………………………

                              …….. ஈரிருமருப் புப்பொ ருப்பு

                          சிந்துரம் கற்பகா டவிகடவி வலம்வரச்

                                     …………………………….

                          தென்மயில மலைவாழ வந்தகரு ணாகரா

                                       சிறுதே ருருட்டி யருளே6.

     இது மயிலம் முருகன் பிள்ளைத்தமிழில் நாம் காணும் அழகான பாடல்.

    உலகில் அனைத்தும்  இலயம் தவறாது   இயங்கிடவேண்டுமாயின் இறைவனின் அருளாணை வேண்டும். இதனையே முருகன் உருட்டும் சிறுதேராகக் காண்பார் இவ்வடியார்.

                                                                                                                                                                     – (வளரும்)

     

    பார்வை நூல்கள்:

    1. பட்டினப்பாலை
    2. ஐங்குறுநூறு
    3. பகழிக்கூத்தர்- திருச்செந்தூர்ப் பிள்ளைத்தமிழ்
    4. பகழிக்கூத்தர்- திருச்செந்தூர்ப் பிள்ளைத்தமிழ்
    5. சிதம்பர அடிகளார்- திருப்போரூர் முருகன் பிள்ளைத்தமிழ்
    6. திருவாரூர் வைத்தியநாத தேசிகர் – மயிலம் முருகன் பிள்ளைத்தமிழ்

     

     

    Share
  • குழவி மருங்கினும் கிழவதாகும்- 8.2

    முனைவர் மீனாட்சி பாலகணேஷ்

    குழவி மருங்கினும் கிழவதாகும்- 8.2

    (அம்மானைப் பருவம்)

    உலகவியல் தத்துவக் கருத்து ஒன்றை மீனாட்சியம்மை, அம்மானையாடும் போது உண்டாகும்  அதிசயமான குறிப்புகளுக்கு ஏற்றிக் காட்டுவதும் புலவனாரின் கவிதைச் சிறப்பின் உயர்வைப் புலப்படுத்துகின்றது.

    அம்மானையாடும்போது மீனாட்சியம்மை கையில் பிடித்திருப்பது முத்துக்கள் பதித்த அல்லது பெருமுத்துக்களால் ஆன அம்மானைக் காய்களாகும். அவளுடைய தாமரை மலர் போன்ற சிவந்த கையில் பொருந்தும் போது அவை தாமும் சிவந்த நிறத்தைப் பெறுகின்றன. அன்னையின்  கருணை வெள்ளம் பெருகும் கடைக்கண் பார்வையால் கறுப்பு நிறம் பெற்றும் அவை விளங்குகின்றன. அவளுடைய நிலவு முகத்தில் தோன்றும் வெண்மையான பற்களின் நகைப்பினால் வெண்ணிறத்தையும் அடைகின்றன.

    சாத்வீகம் எனும் சத்துவம் வெண்மை நிறத்தினையும், இராட்சதம் என்னும் இராசதம் சிவப்பு நிறத்தினையும் தாமஸம் எனும் தாமதம் கறுப்பு நிறத்தினையும் குறிக்கும். சத்துவம், இராசதம், தாமதம் ஆகிய குணநலன்கள் ஒவ்வோர் உயிரின் அறிவிலும் வெவ்வேறு விகிதங்களில் கலந்திருக்கும். இக்குணங்களின் அடிப்படையிலேயே உயிர்களிடையில் வேறுபாடுகள் காணப்படுகின்றன. முக்குணங்களின் சேர்க்கையினால் உலகம் உருவானது என ஒரு கருத்தும் நிலவுகின்றது.

    சத்துவ குணமானது, அறத்தோடு பொருந்திய சிந்தனை, தன் செயல்களை இறைவனுக்கு அர்ப்பணிப்பது, எளிமையாக இருத்தல் முதலியனவாம்;

    இராசத குணமாவது, ஊக்கம், வீரம், தான தருமம், கல்வி, ஆசை, வேட்கை, தற்பெருமை, இறுமாப்பு இவற்றுடன் மற்றவர்களை இகழ்வது, பராக்கிரமம், இன்பப் பற்று  ஆகிய செயல்களைச் செய்ய வைக்கும்.

    தாமத குணமென்பது காமம், வெகுளி, மயக்கம், பேராசை, வரித்தம், மோகம், கவலை, அச்சம், சோம்பல் ஆகியவை பொருந்தி, பகட்டுக்காகச் செயல்கள் செய்தலையும், தாழ்வான எண்ணங்களையும் அதிகப்படுத்துகின்றது.

                                          ‘நல் தரள அம்மனையொர் சிற்குணத்தினை மூன்று

                                         நற்குணம் கதுவல் காட்ட…

    என்பன பாடல் அடிகள். இவை அம்மானையாடுதலுடன் எவ்வாறு பொருந்தும்?

    உயிர்களின் ஒப்பற்றதோர் அறிவினை மூன்று வகையாகிய இக்குணங்கள் பற்றியுள்ளன என்பதனையே ஒரே விதமான முத்து அம்மானைக் காய்கள் பல நிறங்களை அடைவது என்பது உணர்த்துகிறது எனக் குறிப்பிடுகிறார் புலவர்!  பிள்ளைத்தமிழ்ப் புலவர்கள் மேலும் பலரும் இக்கருத்தினை நயம்பட எடுத்தாண்டுள்ளனர்.

    அம்மை மீனாட்சியும் ஐயன் சிவபெருமானும் அடியார்க்கு எளியர் என்கிறார் குமரகுருபரர். அம்மை அப்பர் (உமையும் சிவனும்) ஆகிய இருவரும் ‘துவாதசாந்தம்’ என்னும் ஒப்பற்ற உயர்ந்த பெருவெளியில் பொருந்தி இருக்கின்றனர். உறங்காமல் உறங்கும் நிலையிலுள்ள உயர்ந்த தவஞானியர் ஆகிய மெய்யடியார்களே இதை உணர்ந்தவர்கள்; அவர்கள் இறைவன்-இறைவியிடம் தாம் கொண்ட பேரன்பினால் ஊன் மட்டுமின்றி எலும்பும் உருகுமாறு நெகிழ்ச்சி அடைகின்றனர்; நமக்கு மிகவும் விருப்பமான ஒரு பொருளை நினைத்த மாத்திரத்தில் வாயில் நீர் ஊறும் அல்லவா? அது போல, அவர்களுடைய எண்ணத்தில் உறைவதனால், உள்ளத்தில் கசிந்து பெருகுகின்ற தேன் மீனாட்சி அன்னை! அவளை,

                                                    ‘ஒருபெரு வெளிக்கே விழித்துறங் கும்தொண்டர்

                                                    உழுவலன்பு என்புருகநெக்கு

                                          அள்ளூற உள்ளே கசிந்தூறு பைந்தேறல்

                                                    அம்மானை ஆடியருளே,’

    எனப் பெருமிதம் பொங்கப் பாடுகிறார் புலவர் பெருமான். இத்தகைய பல வேதாந்த, சித்தாந்தத் தத்துவங்களை ஆங்காங்கே பாடல்களில் பதித்து வைத்துள்ளார்.

                                                    ஆகம் கலந்தொருவர் பாகம் பகிர்ந்தபெண்

                                                    அம்மானை ஆடியருளே!’

    என்ற சொற்களால் உமையொரு பாகனின் அர்த்தநாரீசுவர வடிவத்தையும் அழகுறப் போற்றுகிறார்.

    பராசக்தி எனும் அன்னை மூன்றுவித ஆன்மாக்களை இவ்வுலகபந்தம் நீங்குமாறு எடுத்தெடுத்து மேலே விடுவிக்கிறாள்; ஆயினும் அவை தத்தம் உலகப் பாசக் கட்டினால் திரும்பத் திரும்பக் கீழே உலகிற்கே வருகின்றன. அவளும் சளைக்காமல் அவற்றைப் பின்னும் எடுத்து மேலே விடுக்கிறாள். அன்னை அம்மானை ஆடுவதும் இது போன்றே உள்ளதாம். அவள் அவற்றை மேலே விடுவிக்க, அவை உலகத்தின் புவியீர்ப்பு விசையால் இழுபட்டுக் கீழே வருகின்றன. அவளும் சலியாது அவற்றைத் திரும்ப மேலே விடுப்பது மூவகை ஆன்மாக்களுக்கு அருள்வது போன்றதே என்கிறார் திருப்புக்கொளியூர் பெருங்கருணையம்மை பிள்ளைத்தமிழின் ஆசிரியர்.

                                          ‘புவனமெங்குந் தங்கி நிலவுமூ வுயிர்களைப்

                                          போந்தபந் தத்தினின்றுன்

                                   பொற்கமல நற்கரத் தான்மீ துயர்த்திடும்

                                          போதுமவை புக்கவுலகின்

                                   கவனவெம் மாயையிற் கட்டுண்டு வீழ்ந்திடும்

                                          காலமெல் லாமவற்றைக்

                                   கையினாற் றாங்கிநீ மீளவும் உயர்த்தும்

                                                    கருணையின் செய்கைபோலாம்

                                   நவமணி குயிற்றியொளிர் அம்மனை எடுத்துநீ

                                          நன்குபெற மேல்விடுதலும்,’

    என்பன பாடல் அடிகளாம்.

    (மூவகை ஆன்மாக்கள்:

    பிரளயாகலர்- இவர்கள் மாயயை நீத்தவர்கள்; பிரளய காலத்தில் வீடுபேற்றையடைவார்கள்.

    விஞ்ஞானகலர்- இவர்கள் ஆணவ மலம் மட்டுமே உள்ள ஆன்மாக்கள்.

    சகலர்- மற்ற அனைவரும் இதில் அடங்குவர்; மும்மலமும் உடைய உயிர்கள் இவை.)

    சோணாசல பாரதியார் இயற்றியுள்ள திருவருணை உண்ணாமுலையம்மை பிள்ளைத்தமிழ், நயம் வாய்ந்ததும் அணியழகு ததும்புவதுமான பாடல்கள் பலவற்றைக் கொண்டிலங்குவது. காணப் போகும் பாடலில், மான் எனும் சொல், பின்வரு நிலையணியாகக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. இப்பிள்ளைத்தமிழ் நூல் முழுவதும் இத்தகைய அருமையான பாடல்களைக் கண்டு களிக்கலாம்.

    ‘பிட்சாடனராக வந்து நமது மனைவியரைத் தம்மீது ஆசைகொண்டு அலையச் செய்தும், திருமாலை அழகான மோகினியாக்கி நம்முன் அனுப்பி நம்மையும் காமத்தில் ஆழ்த்திவைத்த இவனை (இச்சிவபெருமானை) நாம் அழித்திட வேண்டும்’ எனத் தாருகாவனத்து முனிவர்கள் சினம்கொண்டு அபிசார வேள்வி செய்து புலி முதலியவற்றை வரவழைத்துப் பெருமான் மீது ஏவினர் என்பது வரலாறு. அந்தப் பெருமானை- அவன் எப்படிப்பட்டவன்?- கொடிய மானை, யானையை உரித்துக் கையில் பிடித்துக் கொண்டவன்- அவனுடைய பிறையும் கொன்றையும் சூடிய சடையில் நீர்வடிவாகிய பெண் (கங்கை) அமர்ந்துள்ளாள்; அவள், “உங்கள் கண்மானை (மனையாளான உமையை) நீங்கள் மகிழச் செய்யுங்கள்; என்னை ஒருவராலும் அசைக்க இயலாது,” என்று செருக்குடன் இருக்கிறாள். இதனை அந்த உண்ணாமுலையம்மையாகிய பார்வதி தன் தோழியரிடம் கூறி, “அந்த கங்கையின் செருக்கை நீக்கி அவளைத் தானே அசைந்து ஒழுகும்படிச் செய்கிறேன் பாருங்கள்,” என்று மலர்மான் (மலர்மகள்), கலைமான் (மகள்) ஆகிய தோழிகளிடம் கண்சாடையாகக் கூறுகிறாளாம். அதாவது உமையான இவள் பொற்காய்களை வீசி அம்மானையாடினால் சிவபிரான் உவந்து தலையசைப்பாராம். அப்போது அவர் சடையிலுள்ள கங்கை தானே அசைந்து ஒழுகுவாளல்லவா?

                                          நம்மானை அனையாரை ஆசைநீ ரோடையில்

                                          நலித்துமான் மானைஏவி

                                   நம்மையும் அழித்தவனை நாம்அழித் திடுதும்என

                                          நல்தரு வனத்தர்ஓட்டும்

                                   …………………………………………………………

                                   கலைமானை மலர்மானை விழிமானி னால்சொல்லிக்

                                          கனகஅம் மனைவீசிஅவ்

                                   அம்மானை முடிஅசைப் பிக்கும் வித மெனஎம்அன்னை

                                          அம்மானை ஆடியருளே

                                   ………………………………………

    இசையுடன் பாடினால் இன்னுமே இனிக்கும் சந்தநயம் மிகுந்த பாடலிதுவாகும்.

    பிள்ளைத்தமிழின் அம்மானைப் பாடல்களின்படி பெண்மகவு விளையாடும் அம்மானைக் காய்கள் ஏதேனும் ஒரு சமயக் கருத்தினையோ, தத்துவத்தையோ, தொன்மத்தையோ, புலவரின் கற்பனையையோ தமிழின் அழகும் சேர விளக்கும் நயத்தைக் கண்டோம். அன்னை தெய்வம் அடியாருக்கு அருள்செய்த திறத்தையும் சில அம்மானைப் பாடல்கள் விளக்குகின்றன.

    அன்னையின் திருவுருவின் அழகிலாழ்ந்து, நாள்பொழுது அனைத்தையும் மறந்துவிட்ட அடியாராகிய அபிராமி பட்டர் அரசனிடம், “நாளை பௌர்ணமி” என்று கூறிவிடுகிறார். ஆனால் அதுவோ அமாவாசை தினம். தன் அடியாரின் சொல்லைக் காப்பாற்றித்தர வேண்டி அபிராமியம்மை தனது காதணிகளில் ஒன்றினை எடுத்து ஆகாயத்தில் வீசி அதனை நிலவுபோல் ஒளிரச் செய்கிறாள். இந்த அதியற்புதச் செயலை அம்மை அம்மானை ஆடியதாகக் கூறி மகிழ்கிறார் புலவர் நடேச கவுண்டர். ‘அபிராமிபட்டருக்கு அருளியது போன்று எம்மடியார் அனைவருக்கும் என்றும் எப்போதும் அருளுவோம்’ எனவும் அன்னை கூறுவதாகப் பாடியுள்ளமை உள்ளத்தை உருக்குவது.

                                    ‘விண்டதண் டாமரையின் மதுவுண்ட வண்டென

                                          விளங்குநின் பாத மலரின்

                                       விம்முபர மானந்த மதுநுகர்ந் தமுதகவி

                                          விள்ளுமபி ராமபட்டன்

                                   தண்டலை உறாமலம் மாசைநாள் விண்மீது

                                          தண்மதி உதிக்கு மாறு

                                       தழைசெவிக் குழைவீசு கருணைநாயகிநுன்

                                          சரணமடை புலவருய்யக்

                                   கொண்டுமதி வீசுவேம் எம்மிட மதிக்கென்ன

                                          குறைவென்று தேற்றல்போல….’

                                          (சீர்காழி திருநிலை நாயகி பிள்ளைத்தமிழ்- அம்மானைப் பருவம்)

    திரு உத்தரகோச மங்கை பிள்ளைத் தமிழின் அம்மானைப் பாடலொன்று இன்னும் சில அரிய கருத்துகளை நயம்பட உரைக்கின்றது. நயமான கருத்துகள் சிந்தனைக்கு விருந்தாகின்றன.

    ‘அன்னையே! மும்மாரியாய்ப் பொழியும் மழைபோன்று தேவர் மலர்மாரி, பொன்மாரி, சவ்வாது புழுகு இவற்றாலான நன்மாரி மூன்றனையும் சொரிய, புலவர் பெருமக்கள் சொல்மாரியான (சல்லாபம்) பாடல்களைச் சொரிந்து உன்னை வணங்குகின்றனர். நீ அணிந்துள்ள சிவந்த மலர்மாலைகளும் பொன்மாலைகளும்  உடுத்தியுள்ள சரிகைப்பட்டும் புரண்டாடுகின்றது அம்மையே! செவ்வானும் சிவந்த பவளமும் இணையாகாது எனும்படி உன் திருச்செவ்வாய் மலர்ந்து பாடல் பிறக்கின்றது. அனைத்து மாதரும் துதிசெய்து வணங்கும் பொன்மான் எனும் திருமகளும், கலைகளை எடுத்தியம்பும் மானாகிய சரசுவதியும் வந்து உன்னுடன் அம்மானை ஆடுகின்றனர். எம்மானாகிய சிவபிரானும், அவன் கையிலேந்திய அந்தவொரு மானும் உடன் நின்றாடுகின்றனர். இந்த மாநிலம் போற்றும் குகவேளாகிய முருகன் ‘அம்மா’ என அழைக்கும் நீ உனது இருகையாலும் எடுத்து அம்மானையாடுக,’ என வேண்டுவதாக அமைந்ததொரு பாடல்.

                                      தம்மாலி யன்றபடி மும்மாரி யென்றுமலர்

                                          தன்மாரி பொன்மாரியும்

                                       சவ்வா துடன்புழுகு நன்மாரி யும்புலவர்

                                          சல்லாப மென்றுசொரிய

                                   ………………………………………………..

                                   எம்மாத ரும்துதிசெய் பொன்மானு டன்கலைசொல்

                                          இம்மானும் வந்தாடவே

                                       எம்மானும் நின்றொருகை அம்மானும் நின்றாட

                                          இம்மாநி லம்சொல்குகவேள்

                                   அம்மாஎன அம்மாநீ சும்மா எடுத்திருகை

                                          அம்மானை ஆடியருளே

                                       ……………………………………………

    இதில் மாரி, மான், அம்மா ஆகிய சொற்களைப் பலமுறை வெவ்வேறு பொருட்களில் சிறப்புறக் கையாண்டு பாடலை நயமுற அமைத்துள்ளார் புலவர். சிறந்த இலக்கிய விருந்து படைக்கும் பாடல்.

    திருப்பெருந்துறை சிவயோக நாயகி பிள்ளைத் தமிழின் அம்மானைப் பருவப் பாடல் ஒன்றும் அன்னை தெய்வத்தின் எங்கும் நிறைந்த இயல்பை அழகுற விளக்குகிறது.

    ‘அன்னை பராசக்தியாகிய சிவயோக நாயகியே, ஆயிரம் ஊர், நாமம், வடிவுகள், ஆயிர விதமான ஆடல் புரிபவர், ஆயிரம் தோள்கள், ஈராயிரம் காதுகள், ஓராயிர முகங்களும் நாவுகளும் கொண்டவர், ஆயிரம் நீள்முடி, ஆயிரம் தாள், மாலயன் ஆயிர நாட்களாகத் தேடியும் அறியவொண்ணாதவர் ஆகிய விடையேறும் பெருமானாகிய சிவனாரின் இரு கண்களும் குளிர நீ அம்மானை ஆடுக! அவன் வடிவாகிய சிவசத்தியே! ஆளுடைய நாயகியே, அம்மானையாடுக!’ என வேண்டுகிறார்.

                                  ஆயிரமூ ருடையார் ஆயிர நாமமுள்ளார் ஆயிர மேனியனார்

                                              ஆயிர மாடலினார்

                                ஆயிர மாகியதோள் ஆயிர மாயிருகா தாயிர மானனமோ(டு)

                                                                                                                                                 (ஆனனம் – முகம்).

                                             ஆயிர நாவுடையார்

                               ஆயிர நீள்முடிதாள் ஆயிர மாலயனார் ஆயிர நாளளியர்

                                           ஆவிடையா ரிருகண்

                              ஆயிர முங்குளிர் ஆடுக வம்மானை

                                          ஆளுடைய நாயகியே ஆடுக வம்மானை.

    இப்பாடலுக்குப் பேராசிரியர் முனைவர் கோ. ந. முத்துக்குமாரசுவாமி அவர்கள் அளித்துள்ள விளக்கம் பின்வருமாறு:

    இப்பாடலில் ஆயிரம் என்ற எண்ணுப் பெயர் வருமிடங்களில் ‘எண்ணற்ற’ என்று பொருள் கொண்டு நோக்கினால் பொருள் எளிதாகும். புருஷ சூக்தத்தின் தொடக்கமாகிய “ஸஹஸ்ர சீர்ஷா புருஷ: ஸஹஸ்ராக்ஷ ஸஹஸ்ரபாத்” எனும் வேத மந்திரத்தில் உள்ள ஆயிரத்தை அம்மைக்கு ஏற்றி ஆயிரம் ஊருடையார், பேருடையார், மேனியுடையார் என்று பாடியுள்ளார்.  இறைவனுக்கு இருவகைச் சத்தி கூறப்படும். ஒன்று சிவசத்தி. இது சிவனை விட்டுப் பிரியாத சத்தி. தாதான்மிய சத்தி எனப்படுமிது சித்து, சைதன்யம் என அறியப்படும். மற்றொன்று வேண்டும்போது பயன்படுத்திக்கொள்ளும் சத்தி. இது பரிக்கிரக சத்தி எனப்படும். இதுவே மாயை. பானைக்கு முதற்காரணம் அதன் அடிப்படை (material cause) மண். அதுபோல பிரபஞ்சத்துக்கு முதற்காரணம் மாயை. இறைவன் தன் சிவசத்தியினால் பிரபஞ்சத்தைப் படைத்து, அதில் சிவசத்தியினால் கலந்து நின்று சித்துப் பொருள்களுக்கு அறிவையும் சடப் பொருள்களுக்கு இயக்கத்தையும் தருகிறான். இவையனைத்தும் அம்மையின் செயல்களே. அதனால் அவளுக்கு மேனி ஆயிரம் என்றார். உருவுடைப் பொருள்களெல்லாம் சத்தியே; அம்மையே.   கூத்தன் பராசத்தியிடமாக  சுத்த மாயையாகிய ஞானாகாசத்தில் ஆடுகிறான். அம்மை வடிவாக அவன் செய்யும் ஐந்தொழில்  கூத்து, அவளுடைய கூத்தாகவே கூறப்படும். அன்னை ஆட்டத்திற்கு இந்தப் பிரபஞ்சக் கூத்து, உயிர்க்கூத்து மிகப் பொருத்தமாக உள்ளது.

    அனைத்துமே அழகான பாடல்கள். அன்னை தெய்வம் மயக்குறு மழலையாக இருப்பினும், அவளுடைய தெய்வத் தன்மையைப் பெருமையுற விளக்கும் இலக்கியச் சித்திரங்கள் இவை எனலாம்.

                                                    _______________________

    பார்வை நூல்கள்: 

    1. மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்- குமரகுருபரர்
    2. திருப்புக்கொளியூர் பெருங்கருணையம்மை பிள்ளைத்தமிழ்- சி. சுப்பிரமணிய முதலியார்.
    3. திருவருணை உண்ணாமுலையம்மை பிள்ளைத்தமிழ்- சோணாசல பாரதியார்
    4. சீர்காழி திருநிலை நாயகி பிள்ளைத்தமிழ்- கவியரசு கு. நடேச கவுண்டர்
    5. திரு உத்தரகோச மங்கை பிள்ளைத்தமிழ்
    6. சிவயோக நாயகி பிள்ளைத்தமிழ்- தஞ்சை சரசுவதி மகால் வெளியீடு.

    Share
  • குழவி மருங்கினும் கிழவதாகும்- 8.1

    முனைவர் மீனாட்சி பாலகணேஷ்  

    குழவி மருங்கினும் கிழவதாகும்- 8.1

    (அம்மானைப் பருவம்)

    வரிசைப்படுத்தப்பட்ட பிள்ளைத் தமிழின் பருவங்களின்படி, பெண்பால் பிள்ளைத் தமிழில் அம்மானைப் பருவம் எட்டவதாகச் சுட்டப்பட்டுள்ளது. இனி இத்தொடரில் நாம் காணப் போகும் அடுத்த சில பருவங்கள் பெண்மக்கள் அல்லது ஆண்மக்களுக்கே உரித்தானவையாகும். நயம்படப் பாடப்பட்ட இனிமையான பல பிள்ளைப் பருவங்களைக் காணப் போகிறோம்.

    மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழின் உரையாசிரியர், ‘பிள்ளையை நோக்கி மாதர்கள் முத்தம்மானை முதலிய அம்மானையை எடுத்தாடிட வேண்டும் எனக் கூறும் பருவமிது என அமைத்தனர்’ என்பார்.

    பெண்குழந்தைகளின் அம்மானை விளையாட்டென்பது ஒரு சிறப்பான விளையாட்டு. இது அவர்களுடைய நுண்ணறிவு எனும் புத்தி சாதுரியத்தினையும், வாக்கு வன்மையையும், பாடல்களைப் புனைந்து, இசையோடு பாடும் ஆற்றலையும், விரைந்து நொடிப்பொழுதினில் கண், கைகள், உடலசைவு ஆகியன ஒருமித்துச் செயல்படுதலையும் வளர்க்கும் விதத்தில் அமைந்துள்ளது என அறியலாம்.

    விறுவிறுப்பான அம்மானை விளையாட்டு, ‘துறு துறு’வென மூளைக்கும் வேலை கொடுப்பது! தமிழுக்கும் ஓர் அழகான இலக்கியம்!! மூன்று பெண்கள் அமர்ந்து பாடி, மூன்று அம்மானைகளைக் கொண்டு ஆடுவதால் இந்த விளையாட்டு ‘மூவர் அம்மானை’ எனவும் பெயர் பெற்றது. மூன்று பெண்கள் ஏதேனும் ஒரு செய்தியை அல்லது இறைவன்/ அரசன் பற்றிய கதையை அல்லது அவன் புகழை, வினா- விடையாக, அங்கதமாக, தூற்றுமறைத் துதியாக அல்லது விடுகதை போலப் பாடல்கள் புனைந்து பாடியவாறு அம்மானைக் காய்களை உயர வீசிப் பிடித்து விளையாடும் விளையாட்டே அம்மானை ஆகும்.

    பல சந்தர்ப்பங்களில் அம்மானை எனும் விளையாட்டினை விளையாடிய பெண்களால் புனைந்து பாடப்பட்டு வந்த பாடல்கள், ‘மூவர் அம்மானை’ எனும் பெயரில் தொகுக்கப்பட்டு 1861ஆம் ஆண்டு பதிப்பிக்கப்பட்ட ஒரு நூலில் காணப்படுகின்றன. இவை பெண்கள் அம்மானை ஆடுவதாகக் கருதியோ, அம்மானை ஆடுவதற்காகவோ புலவர்களால் புனையப்பட்டனவாகவும் இருக்கலாம்.

    பண்டைக் காலம் தொட்டு, மனிதர்கள் வாழ்க்கையை ஒழுங்கான நாகரிகமான நெறியாகக் கடைப்பிடித்து வாழத் துவங்கிய காலத்திலிருந்து, உயர்ந்த சிந்தனைகளும் அதன் தொடர்பான சீரிய எண்ணங்களும் தோன்றி வளர்ந்தன. தமிழ்நாட்டில் ஒரு காலக்கட்டத்தில் சைவ, வைணவ சமயங்கள் வேகம் பெற்று வளர்ந்து உயர்ந்து உன்னத நிலையை அடைந்தபோது மாந்தர்களின் வாழ்வில்  பிறப்பு, இறப்பு, ஆடல், பாடல், விளையாடல், கல்வி, கேள்வி என்ற எல்லா நிகழ்வுகளிலும் இறைவனின் புகழ் ஒரு அங்கமாகவே இசைக்கப்பட்டது.  அங்கதமாக, விடுகதையாக, புராணங்களாக, பக்தி இலக்கியங்களாக இவை தழைத்து வளர்ந்து தனிச் சிறப்புப் பெற்றன. சிறப்பாக, மகளிர் தம்முடைய தினசரி நடவடிக்கைகளான நீராடல், பலவிதமான விளையாட்டுகளைப் பொழுது போக்காக விளையாடுதல் ஆகிய எல்லாவற்றிலும் இறைவன் தொடர்பான பாடல்களைப் பலவிதமாகப் பாடி மகிழ்ந்தனர்.

    இவற்றுள்  பாவை நோன்பு, அம்மானை ஆகிய பெண்களின் விளையாட்டுகள் தொடர்பான நயம் மிகுந்த வாய்மொழி இலக்கியங்கள் என்னும் பாடல்கள் பின்பு சமய இலக்கியங்களிலும் இடம் பெற்றன. அவற்றுள் ஒன்று தான் அம்மானை எனப்படுவது.

    அம்மானை என்பது சிறு பெண்கள் முதல் எல்லா வயதுப் பெண்களும் விரும்பி ஆடும் ஒரு விளையாட்டாகும். இதற்காகவே செல்வந்தர் வீடுகளில் அம்மானைக் காய்கள், பெருமுத்துக்கள், பவளம், மரகதம் முதலியவற்றாலும், பொன்னாலும் செய்யப்படும். மற்றபடி, வழுவழுப்பான மர உருண்டைகளும், உலர்ந்த உருண்டைக் காய்களும் இன்ன பிறவும் கூடப் பயன்படுத்தப்பட்டன.

    பாடலைப் பாடி ஆடுவதனால் இதுவொரு அழகான இலக்கியமாகவும், உலா, கலம்பகம், பிள்ளைத் தமிழ் ஆகிய இலக்கியங்களில் ஓர் உறுப்பாகவும் அமைந்துள்ளது. மணிவாசகப் பெருந்தகையும் அம்மானைப் பாடல்களைப் பாடியாடும் பெண்கள் ஈசன் புகழை அழகுறப் பாடுவதாகப் பாடல்களை அமைத்துள்ளார்.

    அழகான, பொருள் நிறைந்த, இத்தகைய மூவர் அம்மானைப் பாடல்கள், கலம்பகம் எனும் நூல்களின் ஒரு அங்கமாக விளங்குகின்றன.  கலம்பகம் என்பதற்குக் கதம்பம் என்று பொருள் என்பார் தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாத ஐயர். பலவகைப் பாக்களால் இயற்றப் பெறுவதும் பலவகைப் பொருள்களைக் கொண்டதுமான ஒருவகைச் சிற்றிலக்கியமே கலம்பகம் எனப்படும். கலம்பகம் என்னும் சொல்லில் கலம் என்பது பன்னிரண்டையும் பகம் என்பது அதில் பாதியான ஆறினையும் குறிக்கும். ஆகவே பதினெட்டு உறுப்புகள் அமையப் பாடப் படுவது கலம்பகம் எனப்படும். அம்மானை என்பதும் இதில் ஒரு உறுப்பாக இடம் பெறும்.

    மூன்று பெண்களில் முதலாமவள் ஒரு பாட்டுடைத் தலைவனை மனத்தில் கொண்டு அவன் பற்றிய பொதுவான ஒரு செய்தியைக் கூறி அம்மானைக் காயை உயர வீசி ‘அம்மானை’ என்பாள்; இரண்டாவது பெண் அந்தச் செய்தியுடன் பொருந்திய ஒரு கேள்வியைக் கேட்டுக் காயை வீசி ‘அம்மானை’ என்பாள்; மூன்றாமவள் அதற்கு இரு பொருள் படும்படியான ஒரு சாமர்த்தியமான விடையைக் கூறிக் கொண்டே அம்மானையை வீசிப் பிடித்து ‘அம்மானை’ என்பாள். இதுவே அம்மானை விளையாடும் முறையாகும். காலம் செல்லச் செல்ல சில வேறுபாடுகளும் கொண்டு அம்மானை விளையாட்டு காணப்படுகிறது.

    திருப்பேரூர்க் கலம்பகத்தில் காணும் ஒரு அழகிய பாடல்:

    முதல் பெண் அம்மானை ஆட்டத்தை ஆரம்பித்து வைக்கிறாள்: புதிர் போடுவது போல ஒரு சேதியைக் கூறுகிறாள்: “பட்டிநாதன் எனப்படும் பேரூர் ஈசன், காட்டில் வேடனாக அலைகின்றவன்; கடலில் வலைவீசி மீன்பிடிப்பவன்; வயலில் பள்ளனாக இறங்கி வேலையும் செய்பவன், பார்த்தாயோ அம்மானே!” என அவனது திருவிளையாடல்களை (!) செய்தியாகக் கூறுகிறாள். தாள லயத்துடன் அம்மானையையும் உயரே வீசிப் பிடிக்கிறாள்.

                ‘காட்டிலே வேட்டுவன்பைங் கடலில் வலைவாணன்

                நாட்டிற்பள் ளன்பட்டி நாதன்கா ணம்மானை’

    அடுத்தவள் வேண்டுமென்றே குதர்க்கமாக, “அப்படியென்றால்  வேதம் ஓதும் அந்தணர்கள் அவனைத்  தம்வீட்டில் சேர்த்துக்கொள்ளும் பெருமை எப்படி ஆயிற்றோ அம்மா?” என வினவுகிறாள்.

                ‘நாட்டிலே பள்ளனெனில் நான்மறையோர் ஈங்கிவனை

              வீட்டிலே சேர்த்துகின்ற மேன்மையென்ன அம்மானை’

    அதற்கு மூன்றாமவள், “அந்தப் பெருமான் உலகியலுக்கு அப்பாற்பட்டவனடி அம்மானே! வீட்டுக்கும் உரியவனானவன் பார்!” என சாமர்த்தியமாக விடை கூறுகிறாள். “ஆமாம்! வீட்டின் உரிமையாளனைச் சேர்க்காமல் இருக்க இயலுமா?”எனும் பொருள் மறைந்து நிற்கிறதல்லவா?

                ‘வீட்டுக் குரிய விகிர்தன்கா ணம்மானை.’

    ‘பேரூரின் பட்டிநாதன் ஆகிய சிவபிரான் வேட்டுவனாகவும் (அருச்சுனனுக்கு வரமருளக் கொண்ட வேடம்), வலைவாணனாகவும் (திருவிளையாடல்), பள்ளனாகவும் (பேரூர்ப் புராணம்) எல்லாம் வந்தாலும், அவர்களிலிருந்து வேறுபட்டு வீடுபேற்றை (முத்தியை) அளிக்கவல்லவனாகவும் அல்லவோ திகழ்கிறான்,’ என்பது உட்பொருள்! பேரூர் முத்தித்தலம் ஆகும்! அப்பொருள் இதில் தொக்கிநிற்பது மிகுந்த அழகாக உள்ளது!

    ‘மானே! அம்மானே!’ எனும் பாடலுக்கேற்ற விளி அடுத்தடுத்த வரிகளில் வருவதனால் இவ்விளையாட்டு அம்மானை எனப் பெயர் பெற்றிருக்கலாம் என்று எண்ணவும் இடமுள்ளது.

    பழங்காலந்தொட்டு வாய்மொழி இலக்கியமாகவே இருந்த இந்தப் பழமையான அம்மானை விளையாட்டை கி. பி. 2ஆம் நூற்றாண்டில் முதன்முதலாக எழுத்தில்- சிலப்பதிகாரத்தில் பதிவு செய்தவர் இளங்கோவடிகள். சிலப்பதிகாரத்தின் வாழ்த்துக் காதையில் இளங்கோவடிகள் ‘அம்மானை வரி’ என நான்கு பாடல்களைப் பாடியுள்ளார். இவை சோழ வம்சாவளி வழிவந்த மன்னர்களின் பெருமையை விளக்கிக் கூறி, அத்தகையதொரு சோழ மன்னனை அடைய விழையும் பெண்களின்  விருப்பமாகப் பாடப்படுகின்றன.

    இவற்றை இங்கு விளக்கியதன் காரணம், ஒரு மிகத் தொன்மையான தமிழ் மகளிர் விளையாட்டு, இலக்கியத்தின் மூலமாக எவ்வாறு பழந்தமிழர் வரலாற்றுச் செய்திகளையும், புராணங்களின் சிறப்பையும், அவற்றின் கவிதை நயத்தையும் படம் பிடித்துக் காட்டுகின்றது எனப் புரிந்து கொண்டு ரசிப்பதற்காகத்தான்!

    இவையும் மூவர் அம்மானை வகையைச் சேர்ந்தவை: மூன்று பெண்கள் கூடிப் புராணங்கள் புகழும் சோழ மன்னர்களின் பெருமையைப் பாடி வாழ்த்துகின்றனர்.

    முதல் பெண்: “மிக்க நீரைக் கொண்ட கடலால் சூழப்பட்ட இவ்வுலகினை ஆட்சி செய்து  விண்ணவர் கோனாகிய இந்திரனின் உயர்ந்த அரணைக் காத்தவன் யார் சொல்? அம்மானை!”

                வீங்குநீர் வேலி உலகாண்டு விண்ணவர்கோன்

               ஓங்கரணம் காத்த உரவோன்யார் அம்மானை!

    இரண்டாமவள்: “இந்திரனின் உயர்ந்த மதிலினைக் காத்த வலியோன், விண்ணில் அசைந்து கொண்டிருந்த மூன்று ஊர்களையும் அழித்த சோழ மன்னன் பாரடி, அம்மானை!”

                ஓங்கரணம் காத்த உரவோன் உயர்விசும்பில்

               தூங்கு எயில் மூன்றெறிந்த சோழன்காண் அம்மானை!

    மூன்றாமவள் முத்தாய்ப்பாகக் கூறுகிறாள்: “அவ்வாறாயின், நாம் அந்தச் சோழனின் புகார் நகரத்தின் பெருமையைப் பாடுவோம் அம்மானை!”

                சோழன் புகார்நகரம் பாடேலோ ரம்மானை!

               (வாழ்த்துக்காதை- வஞ்சிக் காண்டம்-16)

    இவர்கள் தூங்கெயில் எறிந்த தொடிதோட் செம்பியனையும், மனுநீதிச் சோழனையும், சிபிச் சக்கரவர்த்தியையும், கரிகால் சோழனையும்,  வடவரை மேல் வேங்கைக் கொடியினைப் பொறித்த  சோழ மன்னனையும் பாடி, இவ்வாறெல்லாம் மங்கையர் அம்மானையைக் கையிலெடுத்துப் பாடுவதும் ஆடுவதும், அந்த ஆத்திமாலை சூடிய வேந்தனைத் தழுவிக் கூடிக் கொள்ளத்தான் எனக் கூறி மகிழ்கின்றனர்.

    இது தமிழ் மன்னர் புகழ் கூறும் அம்மானை!

    அம்மானை ஆடுவதுடன் அதற்கியைய இறைவன் பெருமையைப் பாடுவதையும் விரும்புகின்றனர் மாணிக்கவாசகர் காலத்துப் பெண்டிர்! தத்துவப் பொருள் செறிந்த இப்பாடல்கள், இறையனுபவத்தை உணர்ந்து விளக்கிக் களிக்கும் தொண்டர் கூற்றாக அமைகின்றன. இருபது இனிமையான பாடல்கள் உள்ளன- மூவர் அம்மானை எனக் கருத இயலவில்லை; மூன்றுக்கும் மேற்பட்ட பெண்கள் விளையாட இடமுண்டு எனப் பாடல்களைப் பயின்றாலே புரிந்து விடும். அம்மானை விளையாடும் பெண்களில் ஒவ்வொருத்தியும், ‘இவ்வாறு எனக்கு ஈசன் அருள் புரிந்தான்,’ எனக் கூறி அம்மானையை வீசி ஆடுகின்றாளாம். பக்தி ரசம் கசிந்துருகும் அமுதப் பாடல்கள்.

    அம்மானையாடும்போது காய்களை மேலே வீசி எறிந்து, ஒரு கையால் விரைந்து பிடித்து ஆட வேண்டும்; அப்பொழுது கையில் அணிந்துள்ள அழகிய வளையல்கள் ‘கல கல’ என ஒலி செய்கின்றனவாம்; பெண்களின் கண்களும் அம்மானை போகும் போக்கில் சென்று நோக்க வேண்டும் அல்லவோ? அப்போது தலையை உயர்த்துவதும் தாழ்த்துவதுமாய் இருப்பதால் காதில் அணிந்துள்ள மகரக் குழைகள் தாமும் சேர்ந்தாடுகின்றனவாம். இத்தனை வேகத்தில் தலை அசைவதால் மையை ஒத்த கருங்குழல் அவிழ்ந்து தோளிலும் கழுத்திலும் புரளுகின்றதாம்; கூந்தலில் சூடிய மலர்களில் இருந்து தேன் வழிந்து ஓடுகின்றது; அதனை உண்ண வரும் வண்டுகள் ரீங்காரமிட்டு ஒலிக்கின்றன.

                ‘கையார் வளைசிலம்பக் காதார் குழையாட

                மையார் குழல்புரளத் தேன்பாய வண்டொலிப்ப’

    இவ்வாறெல்லாம் ஆகும்படி தன்னை மறந்து இவள் யாரைப் பாடி ஆடுகிறாள்? எதனில் ஆழ்ந்து தன் நிலை மறந்தாள்?

    சிவந்த நிறத்து அண்ணல் அவன்- செய்யான்! வெண்மையான திருநீறு அணிந்தவன்; எல்லாத் தேவர்களும் அவனை வந்து கைகுவித்து (சேர்த்து) வணங்க, அவன் மட்டும் கைகளைக் குவிக்காமல் விரித்து, அபய வரத முத்திரை காட்டி அவர்களை அரவணைக்கிறான். ஆகவே சேர்ந்தறியாக் கையான்! எங்கும் நீக்கமற நிறைந்திருப்பவன்; அன்பர்கட்கு மெய்ப்பொருளாய் இருப்பவன்; அவன்பால் அன்பு கொள்ளாதவர்களுக்கு இருந்தும் இல்லாதவனாக இருக்கும் அறிவுப் பொருளை அவள் பாடுகிறாள்; மெய்மறக்கிறாள். ஆடுகிறாள்; தன் நிலையையும் மறந்தாள். அவன் தாளில் தலைப்பட்டாள்!

                ‘செய்யானை வெண்ணீ றணிந்தானைச் சேர்ந்தறியாக்

                கையானை எங்கும் செறிந்தானை அன்பர்க்கு

                மெய்யானை அல்லாதார்க்கு அல்லாத வேதியனை’

    அவன் யார்? எங்கு உள்ளான்? அவன் திரு ஐயாறு எனும் தலத்தில் எழுந்தருளி உள்ள பெருமான்; நாம் அவனைப் பாடி அம்மானை ஆடுதும்; அவனைப் பாடி ஆடுவோம் காணாய் பெண்ணே!

                ‘ஐயாறு அமர்ந்தானைப் பாடுதுங்காண் அம்மானாய்!‘ (திரு அம்மானை-13)

    இறைவனிடத்தில் உள்ளம் சென்று விட்டதால் தன் நிலை, சுற்றுப்புறம் எல்லாம் மறந்து விடும் நிலையை அம்மானை ஆடும் பெண்ணின் கூற்றின் மூலம் நயம்பட உரைக்கிறார் மணிவாசகப் பெருந்தகை!

    இது நம்மை இறைவனோடு இணைக்கும் அம்மானை!

                _______________________________

    பிள்ளைத் தமிழின் அம்மானைப் பருவப் பாடல்களைக் காணலாம்.

    முதலாக, அம்மானை விளையாட்டைப் பெண்குழந்தை விளையாடுவதனை ஒரு பருவமாக்கிப் பாடியது எதனால் எனச் சிந்திக்கலாம். எவ்வாறு இது விளையாடப்படுகிறது என மேலே கண்டோம். ஒரு குழந்தையின் வளர்ச்சிப் பருவத்தில் இவ்விளையாட்டுகள் அதன் உடலையும் உள்ளத்தையும் வலுப்படுத்தி, பொறிகளை ஒருமுகப்படுத்தச் செய்விக்கின்றன. ஆகவே அம்மானை, கழங்கு, பந்தாடுதல் ஆகிய விளையாட்டுகள் சிறுமியரின் வளர்ச்சிக்கு இன்றியமையாதனவாகும்.

    பிள்ளைத்தமிழ் எனும் சிற்றிலக்கியத்தில் இவை வகிக்கும் பங்கு இன்னும் அதிகப்படியான ஒரு பரிமாணம் கொண்டதாகும். அன்னை தெய்வமான பராசக்தி மீதே வெகுவான பெண்பாற் பிள்ளைத்தமிழ் நூல்கள் பாடப்பட்டுள்ளன. அவளோ அகிலாண்ட கோடியீன்று அன்னையாகிப் பின்னும் கன்னியென மறைபேசும் ஆனந்தரூப மயிலாவாள். அவளுடைய பெருமைகளை எல்லாம் பகர்ந்திட இது இன்னுமொரு பரிசாகும். அவற்றில் சிலவற்றைக் காணலாம்.

    அரசிளங்குமரி தடாதகை, தோழியருடன் அரண்மனை நந்தவனத்தில் அம்மானை ஆடிக்கொண்டிருக்கிறாள். விறுவிறுப்பாக உடனாடும் தோழியர் அவள் கையால் பிடித்து ஆடுகின்ற  முத்தம்மானையைப் பற்றிப் பிடித்துத் திரும்ப வீசி இடமும் வலமுமாக அலைந்து நிமிர்வதற்குள் மீனாட்சியோ ஓராயிரம் அம்மானைகளை எடுத்து வீசுகிறாள். அவை வரிசைப்பட வானில் அணிவகுத்து நிற்கின்றனவாம். இதனை நாம் ‘காட்சி உறைந்துள்ளது’ (Frozen picture) எனக் கூறுவோம் அல்லவா? அதுபோன்று அவை நிற்பது எவ்வாறு உள்ளதெனக் குமரகுருபரனார் கற்பனை செய்கின்றார்: ‘அன்னையே! நீ பெற்றெடுத்த எல்லா அண்டங்களையும் எடுத்து வரிசையாக வானில் நிறுத்திவைத்து உலகத்தோருக்குக் காண்பிப்பது போல உள்ளது,’ என்கிறார். மேலும் மீனாட்சி ‘விறுவிறு’வென்று அம்மானை ஆடியபோழ்தில் நந்தவனத்து மலர்களில் மதுவுண்ணும் வண்டுகள் அலைபட்டு ஆர்த்து எழுகின்றன; அவ்வமயம்  பசிய மகரந்தப் பொடியானது பெரும் தூசியாகப் பரந்து உலகை இருளடையச் செய்கின்றது. அதனைக் கண்டு அமராவதியில் வாழும் தேவர்களும் அளகாபுரியில் வாழும் கின்னரர்களும் அம்மையின் சேனை திரும்பவும் ஒரு போருக்குப் புறப்பட்டு விட்டதோ என்று கலக்கம் கொள்கின்றனராம். இவ்வாறு அவர்களைக் கலக்கம் கொள்ளச் செய்யும் மதுராபுரித் தலைவியே! அம்மானை ஆடியருளுக! என வேண்டுபவர் அருமையான ஒரு கருத்தை அனாயாசமாகக் கூறிப் பாடலை நிறைவும் செய்துள்ளார்.

    மனமொத்த தம்பதியரை ‘ஈருடல் ஓருயிர்’ என்பார்கள். இங்கு அம்மை ஒருத்தியே ‘ஓருடல், ஓருயிர்’ ஆகிய புகழ் பெற்றவள். அத்தனின் உடலிலும் சரிபாதியை அவள் பெற்றதனால் அவளை ‘ஆகம் கலந்து ஒருவர் பாகம் பகிர்ந்த பெண்’ என்று சித்தரிக்கிறார் குமரகுருபரனார்.

                   தமரான நின்துணைச் சேடியரில் ஒருசிலர்

                                 தடக்கையின் எடுத்தாடுநின்

                  தரளஅம்மனைபிடித்து எதிர்வீசிவீசி இட

                                 சாரிவல சாரிதிரியா

              நிமிராமுன் அம்மனையொர்ஆயிரம் எடுத்தெறிய

                                 நிரைநிரைய வாய்க்ககனமேல்

                  நிற்கின்றது அம்மைநீ பெற்ற அகிலாண்டமும்

                                 நிரைத்துவைத் ததுகடுப்ப

              இமிரா வரிச்சுரும்பு ஆர்த்தெழப்பொழிலூடு

                                 எழுந்தபைந் தாதுலகெலாம்

                  இருள்செயச் செய்துநின்சேனாபராக மெனும்

                                 ஏக்கமள காபுரிக்கும்

              அமரா வதிக்கும்செய் மதுராபுரித்தலைவி

                                 அம்மானை ஆடியருளே

                  ஆகம் கலந்தொருவர் பாகம்பகிர்ந்தபெண்

                                 அம்மானை ஆடியருளே!

    முத்து, பவளம், மாணிக்கக் கற்களால் செய்த அம்மானைகளைக் கொண்டு அம்மை விளையாடுவது எப்படிப்பட்ட திருக்காட்சியாக உள்ளது! முத்தால் செய்த அம்மானையானது அம்மையின் தாமரை மலர் போன்ற கையில் பிடிக்கப்பட்டதால், அம்மலர்க்கையின் இனிய நறுமணத்தைக் கொண்டுள்ளது. செறிந்த கூந்தலில் சூடியுள்ள மலர்களை நாடும் வண்டுகள், அவளுடைய மைதீட்டப் பெற்ற கண்களாகிய வண்டுகளுடன் கூடி முயங்கி மயங்குகின்றன. தடாதகைப் பிராட்டி அம்மானையை மேல் வீசி எறிந்து பிடித்து ஆடும்போது மலர்களின் நறுமணம் கமழும் அவளுடைய கூந்தலில் அமர்ந்துள்ள வண்டுகளும் உடன் எழும்பிச் சென்று அந்த அம்மானையின் மேல் கருத்தாகச் சென்று மீளும் அவளுடைய விழிகளாகிய கருவண்டுகளுடன் கூடி முயங்கி மயங்குகின்றனவாம்!

    கொத்தான மாணிக்கத் திரளினால் செய்யப்பட்ட அம்மானையானது குயிலினது குரல் போன்றதும், குழலின் இனிய இசை போன்றதுமான அவளது குரலினிமைக்கு உருகி, குளிர்ச்சி பொருந்திய சிறிய துளிகளைச் சிந்துகின்றன.

    அம்மானையாடும் பெண்மக்கள், பாடலையும் பாடியவண்ணம் ஆடுவர் என்பதனைக் கண்டோம் அல்லவா? மீனாட்சியும் அதற்கு விதிவிலக்கல்ல; தனது குயிலைப் பழிக்கும் குரலில் பாடியபடி அம்மானையாடுகிறாள். அக்குரலின் இனிமைக்குருகி மாணிக்கத்தாலாகிய அந்த அம்மானைக் காய்கள் குளிர்ச்சி பொருந்திய பனித்துளிகளைச் சிந்துகின்றனவாம்.

                முத்தம் அழுத்திய அம்மனை கைம்மலர்

                                 முளரி மணங்கமழ

                       மொய்குழல் வண்டுநின் மைவிழி வண்டின்

                                 முயங்கி மயங்கியிடக்

              கொத்து மணித்திரளிற் செயும் அம்மனை

                                 குயிலின் மிழற்றியநின்

                       குழலினிசைக் குருகிப் பனி தூங்கு

                                 குறுந்துளி சிந்தியிட……..

    பவளத்தாற் செய்யப்பட்ட அம்மானைகளோ, அவள் கையிலெடுத்து ஆடுவதால், அவளுடைய விரல்களாகிய பவளத் தளிரில் உருவாகின்ற சிறந்த செந்நிற ஒளியைக் கவர்ந்து வரப் போவதும் வருவதுமாகத் திரிகின்றனவாம்.

                வித்துரு மத்தில் இழைத்தவி நின்கை

                                 விரற்பவ ளத்தளிரின்

                       விளைதரும் ஒள்ளொளி திருடப் போவதும்

                                 மீள்வது மாய்த்திரிய….

    அன்னையின் அம்மானையாடலை மனக்கண்ணில் கண்டு இன்புற்றதனால் எழுந்த அரிய கருத்துகள் செறிந்த பாடல்கள் இவை எனலாம்.

                  ___________________________________________________________

    பார்வை நூல்கள்: 

    1. திருப்பேரூர்க் கலம்பகம்-  கவியரசு கு. நடேச கவுண்டர்
    2. சிலப்பதிகாரம்- இளங்கோவடிகள்
    3. திருவம்மானை- மாணிக்கவாசகர்
    4. மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்- குமரகுருபரர்
    Share