Tag: பி.எஸ்.டி. பிரசாத்

  • பாபாவை நினைப்பாய் மனமே!

    -பி.எஸ்.டி. பிரசாத்

    Sai Baba Shirdi (9)

    மனமே! மனமே! மனமே!
    பாபாவை நினைப்பாய்!
    தினமே! தினமே! தினமே!
    நினைத்தாலே சுகமே!
    சாயினாதன் சன்னதி!
    வேண்டி நின்றால் நிம்மதி!  (ம‌னமே!)

    ஆண்டி என்று சொன்னவர்க்கே அரசனானவன்! – தனை
    அண்டி வந்த அடியார்க்குத் தெய்வமானவன்!
    கன்றைக் காக்கும் தாய்ப்பசு
    போலக் காக்கும் ஈசனாம்!
    கோடி கோடி பக்தரின்
    அன்பைக் கொண்ட நேசனாம்!   (சாயினாதன் சன்னதி!)

    சீரடியில் அடிவைத்தால் கோடி புண்ணியம்! – பாபா
    ஈரடியைப் பணிந்தோர்க்கு ஏது சஞ்சலம்?
    பாபா பாதம் சரணமே!
    சேர்ந்தால் இல்லை துன்பமே!
    வெற்றி மேலும் மேலுமே!
    சேரும் நாளும் நாளுமே!  (சாயினாதன் சன்னதி!)

    Share
  • பெண்களுக்கெதிரான குற்றங்கள்

    — பி.எஸ்.டி.பிரசாத்.

    women life

    ​மங்கையராய் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடல் வேண்டுமம்மா ! – என்று கவிமணி பாடிய நம் மண்ணில் சமீப காலமாக பெண்களுக்கெதிரான வன்முறைகள் தொடர்ந்து அதிகரித்து வருவது அதிர்ச்சியையும் கோபத்தையும் ஏற்படுத்துகிறது.

    “தாயருகில் சேயாகி, தலைவனிடம் பாயாகி, சேயருகில் தாயாகும் பெண்ணே !” – என்று கவியரசு வைரமுத்து அவர்கள் திரையிசையில், பெண்ணின் வாழ்க்கைச் சக்கரத்து மாற்றங்களை அருமையாகப் பாடியுள்ளார். ஆனால், வயிற்றில் இருப்பது பெண் குழந்தை என்று தெரியப்படுகின்ற அந்த நேரம் முதல், எல்லாக் கட்டத்திலும், தன் வாழ்வில் துன்பங்களை சந்திக்க வேண்டியுள்ளது ஒரு பெண்ணால். சேயாக இந்த பூமியில் பிறக்கும் முன்பே கொன்றுவிடும் கூட்டம் – குழந்தை பருவத்திலே சிறுமியாக இருக்கும்போது, பாலியல் உட்பட பல்வேறு வகையான குற்றங்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. இதையும் தாண்டி குமரிப் பருவம் வந்தால் கேட்கவே வேண்டாம். இரைக்கு அலையும் கழுகுகளின் பார்வையிலிருந்து தப்பித்து கற்பைக் காத்து வளர்வது…அம்மம்மா !  Eve teasing, கற்பழிப்பு, கொலை….இன்னும் எத்தனை எத்தனை குற்றங்கள்…

    அலுவல்களுக்குச் செல்லும்போது, வேலை செய்யும் இடத்தில் பெண்கள் நடத்தப்படும் விதம் பல இடங்களில் விவாதிக்கப் படக் காணலாம். இதையும் தாண்டி அடுத்தக் கட்டத்தை அடைந்து வீட்டில் தனியாக இருக்கும் போது பொருளற்ற வாழ்வு வாழும் கொள்ளையர்கள், உயிரை மாய்த்து பொருளை சுருட்டிக் கொண்டு ஓடுகின்றனர். நினைத்துப் பாருங்கள்…என்னதாங்க நடக்குது? !

    தாடகையின் தொல்லை தாங்காது ரிஷிகளும், முனிவர்களும் அவதிப் பட்டுக்கொண்டிருந்த போது விஸ்வாமித்ரர் அவர்கள், ஸ்ரீ ராம பிரானிடம், தாடகையை வதம் செய்யச் சொன்னாராம். அதற்கு, ஸ்ரீராமன், “அவள் ஒரு பெண்…அவளை என்னால் கொல்ல இயலாது” என்று சொல்லி தயங்கியதாகவும், பிறகு விஸ்வாமித்ரர், ஸ்ரீ ராமனுக்கு பல காரணங்களைச் சொல்லி தாடகையை வதம் செய்ய வைக்கப் பெரும் பாடு பட்டார் என்றும் ராமாயணம் சொல்கிறது. இது போன்ற ராமாயணம் மற்றும் மகாபாரதக் கதைகளை தொலைக்காட்சியில் ஆர்வமுடன் பார்ப்பவராக இருந்தும், காட்சியில் வரும் தத்துவங்களையும், சொல்லப்படும் கருத்துக்களையும் மனதில் எடுத்துக் கொள்ளதவராய் இருக்கிறோம் என்பது மிகவும் வருந்தத் தக்கது. ஒரு அரக்கி, அழிக்கப் பட வேண்டியவள், அவளை கொல்வதற்கு, ‘அவள் ஒரு பெண்’ என்ற ஒரே காரணத்திற்காக  தயக்கம் காட்டிய ஸ்ரீராமனை முன்னுதாரணமாய் கொள்ள வேண்டாமா?

    காசும், பணமும் பெருகப் பெருக, மேலும் பணம் சம்பாதிப்பதற்கான குறுக்கு வழிகளிலும், பெண் போதையிலும் தான் மனம் அலைகின்றது.”கடமை, கண்ணியம், கட்டுப்பாடு” என்றக் கோட்பாடுகள் எல்லாம் காற்றோடு போய் கட்டுப்பாடற்ற நாகரீகத்தை நோக்கி பயணித்து வருகிறோம் என்பது கசப்பான உண்மையாகும்.

    “மகளிர் தினம்” கொண்டாடுவதால் பெண்களை போற்றுவோர் ஆக மாட்டோம். அந்த நாள் கூட பலருக்கு, வியாபார ரீதியாக “தள்ளுபடி விற்பனை” செய்வதற்கான வாய்ப்பாகத் தான் கருதப்படுகிறது. பெண்களுக்கு நிகழ்த்தப் படும் கொடுமைகளுக்குத் தள்ளுபடி செய்தபாடில்லை ! உண்மையிலேயே, உரத்த சிந்தனை தேவைப்படுகிறது …இந்த பிரச்சனையை எதிர் கொண்டு சமாளிக்க…வாருங்கள்…சிந்திப்போம் !

     

     

    படம் உதவிக்கு நன்றி:   http://eluthu.com/images/poemimages/l/112934.gif

    Share
  • தீராமல் எரிகின்ற தீ – பாடல்

    –பி.எஸ்.டி.பிரசாத்.

    Nithyshree

    கீழ்காணும் ஷீரடி சாய்பாபா மீதான பாடல், சமீபத்தில் வெளியான எனது முதல் ஆடியோ சி.டி. யில் இடம்பெற்றுள்ளது.

    இந்தப் பாடலை மதிப்பிற்குரிய நித்யஸ்ரீ அவர்கள் பாடி பெருமை சேர்த்துள்ளார்கள்.

    பாடலை மெட்டமைத்து, இனிமையான இசை சேர்ப்பு செய்துள்ளவர் திரு.குருபாத் அவர்கள்.

    பாடலைக் கேட்க: https://soundcloud.com/psdp1/theeramal-erigindra

     

    பாடல் வரிகள்:

    தீராமல் எரிகின்ற துனி என்னும் தீயாம் !
    தீராத நோய் தீர்க்க நமக்கருளும் உதியாம் !
    தீராத நோய் தீர்க்க நமக்கருளும் உதியாம் !

    தீன தயாளனாம் சாயி ! தீன தயாளனாம் சாயி !
    தீர்க்கமாய்த் தெரிகின்ற ஜோதி ! தீர்க்கமாய்த் தெரிகின்ற ஜோதி !

    (தீராமல்)

    தித்திக்கும் தீ…தீ….தீவினை எரிக்கும் தீ ! தீ !
    தித்திக்கும் தீ…தீ….தீவினை எரிக்கும் தீ ! தீ !

    எத்திக்கும் பரவும் ஓம்சாயி பக்தி !
    எத்திக்கும் பரவும் ஓம்சாயி பக்தி !

    (தீராமல்)

    திருமூர்த்தி பாதி ! திருமாலும் பாதி !
    குருசாயி சக்தி ! பாடவரும் சித்தி !

    (தீராமல்)

    ஆனந்தத் தீ ! ஆராதனைத் தீ !
    ஆரத்தி பார்க்க ஆகும் மனம் சாந்தி !
    ஆரத்தி பார்க்க ஆகும் மனம் சாந்தி !

    (தீராமல்)

    பி.எஸ்.டி.பிரசாத்.

     

     

     

     

     

     
    வலைத்தளம்: http://psdprasad-tamil.blogspot.com

     

     

     

     

    படம் உதவிக்கு நன்றி: http://tamil.oneindia.in/art-culture/essays/2012/nithyasri-perform-cincinnati-aid0136.html

    Share
  • என் பார்வையில் கண்ணதாசன்

    பி.எஸ்.டி. பிரசாத்

    என் பார்வையில் கண்ணதாசன்

     

    Kannadasan“வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி
    மக்களின் மன‌தில் நிற்பவர் யார்
    மாபெரும் வீரர் மானம் காப்போர்
    சரித்திரம் தனிலே நிற்கின்றார்”

    என்று பாட்டாலே வீரம் ஊட்டிய கவியரசு கண்ணதாசன், இன்று சரித்திரமாகி நிற்பதற்கான முக்கியமான காரணம் என நான் எண்ணுவது, பல்லாயிரம் தமிழ் ஆர்வலர்களுக்கு, கவிதை மற்றும் பாடல் அமைப்பு செய்வதற்கான இலக்கண எடுத்துக்காட்டுக்களாக விளங்கிய அவரது திரைப் பட பாடல் வரிகள்தான். அவரது பாடல் வரிகளை ரசித்து, நாமும் முயலலாம் எனக் கவிதை எழுத வந்தவர்கள் எத்தனை பேர்? அந்த வகையிலே, கவியரசு அவர்கள் என் பார்வையில், பாடலாசிரியர்கள் மற்றும் கவிஞர்களின் முன்னோடியாகவும், மாபெரும் தாக்கத்தையும், ஊக்கத்தையும் ஏற்படுத்தியவராகவும் பார்க்கிறேன்.

    முன்னோடிப் பாடல் வரிகள் (Inspirations):

    “உள்ளம் என்பது ஆமை அதில் உண்மை என்பது ஊமை” என்று துவங்கும் பாடலில் வரும் வரிகள்:

    “தெய்வம் என்றால் அது தெய்வம்
    அது சிலை என்றால் வெறும் சிலை தான்”

    திரு.கமல்ஹாசனின் தசாவதாரம் திரைப்படத்தில் வரும்

    “கல்லை மட்டும் கண்டால் கடவுள் தெரியாது..” என்ற பாடலுக்கு எப்பேர்பட்ட தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது?

    “ஆடி அடங்கும் வாழ்க்கையடா
    ஆறடி நிலமே சொந்தமடா” என்ற வரிகள்தான் பின் வந்த நாட்களில்,

    “நடந்தால் இரண்டடி இருந்தால் நான்கடி
    படுத்தால் ஆறடிபோதும்” என்ற பாடலுக்கு ஊக்கமாக இருந்திருக்குமோ?

    ‘கர்ணன்’ திரைப்படத்தில் வரும் இனிமையான பாடல்

    “இரவும் நிலவும் வளரட்டுமே…நம் இனிமை நினைவுகள் தொடரட்டுமே,,,”

    “இலைமறை காய்மறை”யாகச் சொல்வதற்கு இந்த வரிகளை உதாரணம் சொல்லலாம். இந்த வரிகள், நிறைய பாடல்களில் வெவ்வேறு சொல்லாக்கத்தில் இடம் பெற்றிருக்கிறது. எடுத்துக்காட்டாக, “அன்பு” என்ற திரைப்படத்தில் வரும் “தவமின்றி கிடைத்த” என்று தொடங்கும் பாடலில் வரும் வரிகளைச் சொல்லலாம்.

    “பகல் எல்லாம் இரவாகிப் போனால் என்ன? இரவெல்லாம் விடியாமல் நீண்டாலென்ன?
    நம் உயிர் ரெண்டும் உடல் ஒன்றில் வாழ்ந்தாலென்ன?”

    “ரத்தத் திலகம்” என்ற திரைப்படத்தில் வந்த பிரபலமான பாடல்தான் “கோப்பையிலே என் குடியிருப்பு” என்ற பாடல். அந்தப் பாடலில் “படைப்பதனால் என் பேர் இறைவன்” என்ற வரிகள் “மடை திறந்து தாவும் எனத் துவங்கும் பாடலில் வரும் “புது ராகம் படைப்பதாலே நானும் இறைவனே”  என்ற வரிக்கும், “பாட்டுக்களை படைப்பதனால் பிரம்மனாகிறோம்” என்ற வரிக்கும் என்னவொரு தாக்கமாக அமைந்திருக்கிறது !

    நீ காற்று…நான் மரம் என்று தொடங்கும் அருமையான பாடல். அப்பாடலில் “நீ வானம் நான் நீலம் உன்னில் நானாய்க் கல்ந்திருப்பேன்” என்ற வரிகள் வரும். இந்த பாடலின் அமைப்புக்கே கவியரசு அவர்களின் நீ எந்தன் வானம்…நான் அங்கு நீலம…நீ எந்தன் வாசல்…நான் அங்கு கோலம்” (படம்: அமரகாவியம் – பாடல்:  செல்வமே ஒரே முகம் பார்க்கிறேன்) என்னும் வரிகள் தான் ஊக்கமாய் அமைந்ததோ!

    வெவ்வேறு சூழ்நிலைகளுக்காக எழுதப்பட்ட பாடல்கள் என்றாலும், நாம் அடுத்து பார்க்க இருக்கும் பாடல், கண்ணதாசனின் தாக்கம் இருக்குமோ என்ற எண்ணத்தை ஏற்படுத்தத் தான் செய்கிறது.

    “சேச் சேச் சேச் சே ! ஆம்பளைங்களா நீங்க…ஆம்பளைங்களா – ஒரு ஆறு கஜம் சேலை கட்டி நாலு வளை போடுங்களேன் !”
    என்ற பாடல் (படம்: உரிமைக் குரல்)  – தேவர் மகன் படத்தில் வரும் “சாந்து பொட்டு…ஒரு சந்தன பொட்டு எடுத்து வெச்சுக்க  வெச்சுக்க மாமா !” என்ற பாடல்கள் !

    அடுத்ததாக, “பொம்பளையா லட்சணமா பொடவையக் கட்டு சும்மா குளுகுளுன்னு கிழுஞ்சு போன ட்ரௌசர விட்டு” (படம்: இளைய தலைமுறை) என்ற பாடல் வரிகளின் தாக்கம்….எந்த பாட்டில் தெரிகிறது சொல்லுங்கள்….ம்…சரியான விடை: “செந்தமிழ் நாட்டு தமிழச்சியே…சேல உடுத்தத் தயங்கினியே ! நெசவு செய்யும் திருநாட்டில் நீச்சல் உடையில் அலையிருயே !” என்ற பாடலுக்குத் தான். மறைந்த திரு. சாகுல் ஹமீது அவர்கள் நன்றாகப் பாடியிருப்பார்.

    முடிவுரை:

    இவ்வாறாக, இன்னும் அடுக்கிக் கொண்டே போகலாம்….இது வரை மட்டுமல்ல…இனி வரும் கவிஞர்கள் பலருக்கும் கவியரசு கண்ணதாசன் அவர்களின் பாடல் வரிகள் மாபெரும் இன்ஸ்பிரேஷனாக இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

    “மானிட இனத்தை ஆட்டி வைப்பேன் அவர்
    மாண்டுவிட்டால் அதை பாடிவைப்பேன் நான்
    நிரந்தரமானவன் அழிவதில்லை எந்த
    நிலையிலும் எனக்கு மரணமில்லை ​”

    என்று முழங்கிய கண்ணதாசன் அவர்கள் இன்றைய கவிஞர் என்னும் நிலவுக்கெல்லாம், சூரியனாக ஒளி தந்து என்றும் வாழ்பவராக என் பார்வையை பதிவு செய்கிறேன் !..வளர்க‌ அவர் புகழ் !

    பி.எஸ்.டி. பிரசாத்
    வலைத்தளம்: http://psdprasad-tamil.blogspot.com

    Share