Tag: புதுவை எழில்

  • வள்ளுவரும் கழுகாரும்

    புதுவை எழில்

    எச்சரிக்கை முன்னுரை:

    இதனை வெளியிடுபவர், படிப்பவர், பின்னூட்டம் இடுபவர்…
    மீது எல்லாம் பாதுகாப்புச் சட்டமும், வழக்குகளும் பாய்ந்தாலும் பாயக்கூடும்.
    ‘தில்’ உள்ளவர்கள் மேலே படியுங்கள் !

    விகடனாரை நோக்கி வேக வேகமாகப் பறந்துகொண்டிருந்த கழுகு அரசரை வழிமறித்துப் பிடித்தோம், ஒரு கையில் நல்ல காரம் போட்டு நெய்யில் வறுத்த முந்திரிப் பருப்பும் மறு கையில் புத்தம் புதிதாகச் செய்யப்பட்ட வேர்க் கடலை மிட்டாயுமாக!

    மூக்கில் வேர்வையும் கண்களில் கூர்மையுமாக நம் கைகளைக் கவனித்த கழுகார் “என்ன செய்தி? ஏன் வழி மறிக்கிறீர்” என்பது போலத் தலையைச் சாய்த்துப் பார்த்தார்!

    “திருவள்ளுவர் நாளுக்காக அவரைப் பேட்டி கண்டதாக அறிந்தோம். அதில் இருந்து கொஞ்சம் அவிழ்த்துவிட்டிங்கன்னா…”

    முந்திரியும் கடலை மிட்டாயும் நீட்டியபடியே தலையைச் சொரிந்தோம். மேலும் கீழுமாகத் தலையை ஆட்டிய கழுகார்
    அலகைத் திறந்தார் – பருப்பையும் கடலை மிட்டாயையும் கொறிப்பதற்காக!
    காத்திருந்தோம் பொறுமையாக. அவர் கொட்டியவற்றில் இருந்து…

    (திருவள்ளுவரைக் கழுகார் எடுத்த பேட்டி)

    கழுகார் : ”அண்மையில் ஏற்பட்ட பேரிடர் பெருவெள்ளம் பற்றி…”
    கேட்டு முடிப்பதற்கு முன்னாலேயே வள்ளுவரிடம் இருந்து பதில் வெள்ளம் போல் பாய்ந்து வந்தது :

    “கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே
    எடுப்பதூஉம் எல்லாம் மழை”.

    கழுகார் :
    “உட்கார்ந்த இடத்தில் இருந்தே அதிகாரம் தூள் பறக்க ஆணவம் குடை பிடிக்க அம்மாவின் ஆணையால் எல்லாவற்றையும் சரிசெய்த அம்மாவின் ஆட்சித் திறம், எதிர்காலம் பற்றி…”

    வள்ளுவர் :
    “இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
    கெடுப்பாரில் லானும் கெடும்”

    கழுகார் :
    “அம்மாவுக்கு எதிரா நிற்பவர் கலைஞர் தானே! தள்ளாத வயதிலும் பதவி ஆசையைத் தள்ளாத அவரைப் பற்றி உங்க கருத்து என்ன?”

    வள்ளுவர் :
    “சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான் அவனை
    இகல்வெல்லல் யார்க்கும் அரிது. “

    கழுகார் :
    “தன்னுடைய குடும்பத்தில் இருந்து யாரும் அரசியலுக்கு வரமாட்டார்கள். அப்படி வந்தால் நடுத் தெருவில் நிறுத்திச் செருப்பால் அடியுங்கள் என்று சொன்ன மருத்துவர் ஐயா தன் அன்புமகனை ,நடுவண் அரசில் அமைச்சராக்கி அழகு பார்த்தாரே.
    அவரைப் பற்றி என்ன நினைகிறீர்கள்?”

    வள்ளுவர் :
    “கனவினும் இன்னாது மன்னோ வினைவேறு
    சொல்வேறு பட்டார் தொடர்பு.”

    கழுகார் :
    “இராமனின் பாதுகை போல அரியணையில் தமிழக முதல் அமைச்சராக இருமுறை அமர்ந்த ஒ.பி.எஸ் பற்றி என்ன சொல்வீர்கள்?”

    வள்ளுவர் :
    “எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும் (பன்னீர்)
    செல்வர்க்கே செல்வம் தகைத்து.”

    கழுகார் :
    “தங்கள் குறைகள் இன்னும் நீங்கவில்லை என்று மக்கள் கூக்குரல் எழுப்புகின்ற போதும், அம்மாவின் ஆணையால் மக்கள் முழு நிவாரணம் பெற்றுவிட்டார்கள் ; வாழ்க்கை மீண்டும் சரியாகிவிட்டது என்று ஆர்ப்பரிக்கும் செயல்படாமல் ஆன்றவிந்து அடங்கிய அமைச்சர் பெரு மக்கள்?”

    வள்ளுவர் :
    “உலகத்தார் உண்டென்பது இல்லென்பான் வையத்து
    அலகையா வைக்கப் படும்.”

    கழுகார் :
    “நுணலும் தன் வாயால் கெடும் என்பதை நிரூபித்து வரும் இன்னோவா புகழ் நாஞ்சில் சம்பத் பற்றி உங்கள் கருத்து?

    வள்ளுவர் :
    “யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்
    சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு.”

    கழுகார் :
    முடியட்டும் விடியட்டும் என்று நடை பயணம் மேற்கொண்டு ஊர் வலம் வரும் ஸ்டாலின் பற்றி என்ன சொல்வீர்கள்?”

    வள்ளுவர் :
    “சகோதரி ஒளவையிடம் இருந்து இரு வரி கடன்
    வாங்கிச் சொல்லவா? :
    குடை நிழல் அமர்ந்து குஞ்சரம் ஊர்ந்தோர்
    நடை மெலிந்து வேறூர் நண்ணினும் நண்ணுவர்!”

    கழுகார் :
    “நாக்குத் துருத்தியும் தூ தூ என்று துப்பியும் ம் புகழ் சேர்த்துவரும் நடிகர் விசயகாந்து …?

    வள்ளுவர் :
    “துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
    துப்பாய தூஉம் மழை.” எனத் துப்புபவர்.

    கழுகார் :
    “ஊழல் அரசியல் வியாதிகள், லஞ்ச ஊழலில் திளைக்கும் அதிகாரிகள்… உணரவேண்டிய செய்தி என்ன?”

    வள்ளுவர் :
    “வேலொடு நின்றான் இடுவென் றதுபோலும்
    கோலொடு நின்றான் இரவு.”

    கழுகார் :
    “எப்போதும் ஏதாவது சிக்கலில் சிக்கி உழலும் சிம்புத் தம்பிக்குக் கூறுவது என்ன?”

    வள்ளுவர் :
    “பல்லார் முனியப் பயனில சொல்லுவான்
    எல்லாரும் எள்ளப் படும்.”

    கழுகார் :
    “பாவம் தமிழக மக்கள்! அவர்களுக்கு ஆறுதலாக ….இரண்டு வரி…”

    வள்ளுவர் :
    “தமிழக மக்களுக்கு ஆறுதலா!
    ஓட்டு , வாக்குச் சீட்டு என்று
    “ஒன்றெய்தி நூறிழக்கும் சூதர்க்கும் உண்டாங்கொல்
    நன்றெய்தி வாழ்வதோர் ஆறு.”
    எனச் சூடாகச் சொனார் வள்ளுவர்!

    கழுகார் :
    “சகாயம் IAS சாரைப்பற்றி இரண்டு வரி…?

    வள்ளுவர் :
    உள்ளத்தாற் பொய்யா தொழுகின் உலகத்தார்
    உள்ளத்து ளெல்லாம் உளன்.”

    அடுத்து… என்று நாம் தொடங்குவதற்கு முன்
    கழுகாரின் வாட்சப் சிணுங்கியது .
    எடுத்துக் கேட்டவர் ,

    “அச்சச்சோ , வள்ளுவர் பேட்டி கொடுத்த செய்தி மேலிடத்துக்குத் தெரிந்துபோய்விட்டதாம்!உடனடியாக வள்ளுவரைத் தமிழகத்தில் இருந்து தூக்கிவிட்டார்களாம்!

    அவர் மீது பாதுகாப்புச் சட்டம் பாய்கிறதாம் ; பல வழக்குகள் அவர் மீது போடப்பட்டு FIR உம் போட்டுவிட்டார்களாம்!

    “வள்ளுவரோடு யாரும் தொடர்பு வைத்துக்கொள்ளக் கூடாது ; அவர் தீக்குறளை எவரும் சென்றோதக் கூடாது” என்று கட்டளை போட்டிருக்கிறார்கள் ; அவர் எழுதிய நூல் ‘திருக்குறள்’ தடை செய்யப்பட்டுவிட்டதாம்….
    உடனடியாக வரச் சொல்லி விகடனார் கட்டளை!….

    ஆளை விடுமையா…” என்று பதறியபடியே கழுகார் இறக்கை விரித்துப் பறந்து போனார்!

    கல்லாய்ச் சமைந்து போய் நின்றிருந்த நம் முன்னே

    “விதியே விதியே தமிழச் சாதியை
    என் செய நினைத்தாய் எனக்குரையாயோ ?”
    என்று வேதனை பட்டபடியே பாரதியார் கடந்து போனார்!

    Share
  • விவேகானந்தர் 150 -ஆம் ஆண்டுப் பிறந்த நாள் விழாவும் பேராசிரியர் பெஞ்சமின் லெபோவுக்குப் பாராட்டு விழாவும்.

    கடந்த மாதம் 29 ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை மதியம் 3 மணி அளவில் விவேகானந்தர் விழா பாரீஸ் 14 -ஆம் வட்டத்தில் உள்ள Maison de l’Inde என்னும் கட்டிடத்தில் நடைபெற்றது.

    DSC_0034

    பிரான்சு சிவன் கோவில் தலைவர் திருமிகு அருட்செல்வர் சுகுமாறன் முருகையன் அவர்கள் தலைமை ஏற்க, ஆசிரியர் ப. சின்னப்பா, M.A, B.Ed தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடினார். இந்திய இல்லம் என்ற பொருள் கொண்ட ‘Maison de l’Inde’ -இன் இயக்குநர் திரு பிக்காஸ் சானியால் வரவேற்புரை நிகழ்த்தினார்.

    சுவாமி விவேகானந்தரைப் பற்றி இளம்பெண்கள் இருவரும் இளைஞர் ஒருவரும் சிற்றுரை ஆற்றினர். அவர்களுள் செல்வி கரின்லட்சுமி ஆங்கிலத்திலும் செல்வி சாரா கோதண்டம் பிரஞ்சிலும் செல்வன் ராமு பாலாஜி தமிழிலும் தம் உரைகளை அளித்தார்கள். செல்வன் ராமு பாலாஜி, விவேகானந்தர் போலவே வேடம் பூண்டு அனைவரையும் கவர்ந்தார்.

    பின்னர், பேராசிரியர் பெஞ்சமின் லெபோ தலைமையில் சிறப்புரைகள் நடந்தன . ஆசிரியர் ப. சின்னப்பா, M.A, B.Ed அவர்கள் ‘சிக்காகோவில் விவேகானந்தர்’ என்ற தலைப்பில் பேசினார் . பேராசிரியர் தளிஞ்சான் முருகையா அவர்கள் ‘பாரிசும் விவேகானந்தரும்’ என்ற தலைப்பில் உரையாற்றும் போது இதுவரை நமக்குத் தெரியாத பல செய்திகளை எடுத்துரைத்தார். இப்போது Maison de l’Inde இருக்கும் தெருவுக்குப் பக்கத்தில் உள்ள வீதியில்தான் விவேகானந்தர் தங்கி இருந்தார் என்ற செய்தி அனைவருக்கும் வியப்பை அளித்தது.விவேகானந்தர் பற்றிய பல தவல்களைப் புலவர் பொன்னரசு தம் உரையில் பரிமாறினார். ‘விவேகானந்தரும் தமிழர்களும்’ என்னும் தலைப்பில் இறுதியாக உரையாற்றிய பேராசிரியர் பெஞ்சமின் லெபோ, விவேகானந்தர் ஞான ஒளி பெற்றது கன்னியாக் குமரிக் கடல் பாறையில், அவரை அமெரிக்காவுக்கு அனுப்பி வைத்தவர் இராமநாதபுர அரசர் சேதுபதி, அவர் திரும்பி வந்தபோது முதல் வரவேற்பு அளித்தது தமிழகம், அவர் ஆற்றிய ஆங்கில உரைகளை முதல் முதலில் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டவர்கள் தமிழர்கள்… என வரிசையாக அடுக்கி அவரை உலகின் உச்சிக்குக்கொண்டு சென்றவர்கள் தமிழர்களே என நிலை நாட்டினார்.

    DSC_0083

    அதன் பின் மேடை ஏறிய முத்தமிழ்ச் சங்கத்தின் தலைவர் திருமிகு கோவிந்தசாமி செயராமன், பேராசிரியர் பெஞ்சமின் லெபோ எழுதி அண்மையில் புதுவைக் கம்பன் கழகம் வெளியிட்ட ‘கம்பன் களஞ்சியம் தொகுதி 1 ‘ என்னும் நூலைப் பாராட்டிப் பேசினார். பேராசிரியருக்கும் அவர் துணைவியாருக்கும் பொன்னாடை போர்த்தி மரியாதை செய்த சிவன் கோவில் தலைவர் திருமிகு அருட்செல்வர் சுகுமாறன் முருகையன், அவர் துணைவியார் இருவரும் சேர்ந்து பாராட்டுப் பத்திரத்தை வழங்கினார்கள். அந்த நூலுக்காகவும் பேராசிரியர் இத்தனை ஆண்டுகள் பிரான்சில் தமிழுக்கு ஆற்றிய அளப்பரும் தொண்டுகளுக்காகவும் வழங்கப்பட்ட அதில் பாராட்டுரை வெண்பாவில் அமைந்திருந்தது. திருவாளர்கள் கோவிந்தசாமி செயராமன், தமிழியக்கன் தேவகுமாரன், ஆசிரியர் சின்னப்பா, புலவர் பொன்னரசு, பேராசிரியர் தளிஞ்சன் முருகையா… எனப் பலரும் பொன்னாடை போர்த்திப் பேராசிரியரைப் பாராட்டினார்கள் .

    DSC_0088

    இதற்கிடையில் பிரான்சு நாட்டின் இந்தியத் தூதர் மேதகு அருண் குமார் சிங், தம் பரிவாரங்களுடன் வந்து சேர்ந்தார். அவர் முன்னிலையில் செல்விகள் சாரா கோதண்டம், ழுலியா கோதண்டம் பரத நாட்டிய விருந்து அளித்தனர். இந்தியத் தூதர் தம் உரையை நிகழ்த்திய பின்னர், பங்கு கொண்ட செல்வியர், செல்வனுக்குப் பரிசு வழங்கினார். பின், இந்திய இராமகிருஷ்ண மடத்தின் பொதுச் செயலர் சுவாமி சுத்திதானந்தா, பாரீசு இராமகிருஷ்ண மடத்தின் தலைவர் சுவாமி வீத்மோகானந்தா உரையாற்றினார்கள். இறுதியாகத் தமிழியக்கன் தேவகுமாரன் நன்றி உரைக்க விழா இனிதே நிறைவு பெற்றது. அனைவரும் சிற்றுண்டி அருந்திச் சென்றனர். இவ்விழாவிற்காக முன்னின்று உழைத்தவர்கள் – திருமிகு கோவிந்தசாமி செயராமன், திருமிகு தமிழியக்கன் தேவகுமாரன் –நம் பாராட்டுதல்களுக்கு உரியவர்களே!

    வருணனை : புதுவை எழில்.

    Share