Tag: பொன்ராம்

  • ஓய்வு!

    -பொன்ராம்

    அசையாத திரைச்சீலை
    எனது இதயக்கனத்தைப்
    புரிந்துகொண்டதோ!
    டிக்! டிக்! கடிகாரம்
    இந்த வீட்டின் சப்தம்
    எழுப்பும் சிறுகை அளாவிய
    குழந்தைமணி!

    சன்னலில் கட்டி விடப்பட்ட
    பாசிமணிகளுடன் தென்றல்
    நண்பர்களுடன் விளையாட்டுச் சப்தம்!
    தாள் கிழிக்கும் ஓசை
    எனது செவிகளுக்கு
    இன்னிசை நாதம்!

    சாய்வு நாற்காலியின்
    கிரீச் ஒலிகூட
    என்னுடன் சரிகமபதநி
    விளையாடி
    அலுத்துக் கிடக்கிறது!

    மௌனத்துடன் சங்கமிக்கும்
    எனதருமை முள்நாட்களுடன்
    நாட்காட்டி குறிப்பிட்டது
    எனது ஓய்வு வயதை!

    வாழ்க்கைப்படகு ஓடிய
    ஓட்டத்தில் அப்போதுதான்
    உணர்ந்தேன் என்னுடன்
    பயணித்த யாருமில்லை
    என்னருகில்!

    ஓடி வந்த நாலுகால்
    நன்றியினத்துடன்
    நான் மட்டுமே
    தீவாய்த் தனித்திருந்தேன்!

    தொலைத்த வாழ்க்கையை
    எங்குத் தேடியும் எனக்கு
    இன்றுவரை கிடைக்கவில்லை!

    வீசிய தென்றலாய்
    தெங்கொன்றில்
    குயிலொன்று இன்னிசையாய்க்
    கொடை கானம் பாடி
    வாழ்க்கைப்பாதை
    தேடிப் பறந்ததோ!                                                                                            

    Share
  • கானல் நீர் பெண்!

    -பொன்ராம் (லட்சுமி) 

    சாலையெங்கும் பெண் முன்னேற்றக்
    கானல் நீர்!
    சறுக்கி விளையாடிய                                                                     small girl - kanal neer pen
    சிறுமி…நடந்த பாலியல் வேட்டையில்
    கல்லறைப் பெட்டிக்குள்
    பன்னீர் ரோஜாக்களின்
    கண்ணீருடன் உறங்குகின்றாள்!

    வீதியெங்கும் முளைத்த
    மதுப்புட்டிகளின் விளக்குக் கம்ப
    வெளிச்சத்தில் ஆணாதிக்க இதய
    கான்கிரீட் கட்டிடங்கள்!

    பொய் வருத்தத்தில் முளைத்த
    சுயநலக் கள்ளிப்புதர்களாய்ப்
    போதை மருந்துப் பூக்களின்
    நாற்றம்!

    பெண்முன்னேற்றம் பாடிய
    ஊடகத்தில் அரைகுறை
    ஆடையுடன் வெண்குழல்
    ஒழிப்பு விளம்பரத்தில்
    யார் அங்கே வருவது?

    உயரத் தெரிந்த குடும்பப்
    பணிபீடப் பனைமரத்தின்
    உச்சியில் தெரிந்த
    நங்கை பனங்காய்களின்
    கருத்துப் பரிமாற்றம்
    யாருக்காக நாம்
    என்றே அறியாமல்
    வாழ்கிறோம்!

    பனையோலைத் தாத்தாவின்
    படல்காற்றுக் கண்ணீரில்
    நனைந்த விறகாய்,
    தூரத்துச் சிறுமியின்
    கல்லாமைக்காகக்
    கண்ணீர் விடுகின்றது!

    கனிந்த பனம்பழமோ
    மாதந்தோறும் வரதட்சணையாய்
    மாறிய தூரத்து இரட்டைக்குதிரை
    பூட்டிய சாரட்டில் சாரதியான
    பெண்ணிற்காக
    விருந்தோம்பலுக்காகக் காத்திருக்கிறது!

    விதைப்பார் யாருமின்றி
    நச்சென்று மண்மாதாவை
    முத்தமிட்டுக் காத்திருக்கும்
    விழிப்புணர்வு வித்தை
    விதைக்க மறந்த ஆணாதிக்கம்
    எங்கே?

    பனைமரத்தின் வேர்களில்
    புரையோடிக் கொண்டிருக்கும்
    சாதி, பாலியல் வன்முறைக்
    கிருமிகளை அழிக்க மந்திரமாய்
    மாற ஔவையாருக்கு
    எங்கே போவது?

                                

    Share
  • பணிக்குச் செல்லும் பெண்

    பொன்ராம் 1-images

    பனியில் பூத்த ரோஜா

    பார்த்து ரசிக்க ஆளின்றி

    வாடிக் கிடக்கிறது!

    வெண்டை விரலின் ஸ்பரிசம் தேடி

    தோட்டத்தில் வெண்டைப்பூவின் தேடுதல் ஆரம்பம்!

    என் குழந்தையின் மழலை

    அடுத்த வீட்டிற்கு மட்டும்

    சொந்தமாகி விட்டது!

    அடுப்படியின் சிணுங்கல் ஒலி

    அன்னியமாகி விட்டது!

    குளிர்பதனப் பெட்டியில்

    உறைந்த உணவுகள்

    அன்றாட நண்பர்களாகி விட்டன!

    ஆறிலக்கப் பணித்தொகை

    உறவுகளின் ஆற்றுப்படையாகி விட்டன!

    உடைகளின் எண்ணிக்கை

    எனது துயரத்தினை வெளிக்காட்டாத

    மெழுகு முகமூடிகள்!

    எதைக் கொண்டு வந்தோம்

    எதைக் கொண்டு செல்கிறோம்?

    என்ற நோக்கின்றி வாழும்

    உயிரிருந்தும் இயந்திர மனிதர்களாய் நாங்கள்

    எங்கு செல்கிறோம்?

    படத்துக்கு நன்றி

    http://www.hindu.com/mp/2007/03/08/stories/2007030800730100.htm

    Share