Tag: பொன்-ராம்

  • உயர்ந்த இடம்

    –பொன்.ராம்.

    என்ன காமெராவைப் பாத்துட்டு ஓடி வந்துட்ட ………….!

    பசிக்குதுன்னு சொன்னியே! அதான் கூட்டிட்டு வந்தேன் பாப்பா….என்கிட்டயும் காசில்ல…..அப்பா கொடுத்த காசுக்கு பெட்ரோல் போட்டாச்சு……….

    ‘ப்ச்’….எத்தனையோமுறை அப்பாட்டயும், அம்மாட்டயும் சொல்லியாச்சு……ஊரைச்சுத்திக்கடன்….வித்துட்டு இருக்கறதை வச்சு சந்தோஷமா இருங்கன்னு……. ஊரு உலகத்துக்காக பயந்து வாழுற என் அப்பா அம்மாவுக்காக பாக்குறேன். பெரிய பிசினஸ் புள்ளி.  ஆனா நான் எங்க நிக்குறேன்….பாத்தீங்களா! ரமேஷ் அண்ணா…..நான் காருக்குள்ளயே இருக்கேன்………..அம்மா உணவகத்துல என்ன இருக்கோ அத வாங்கிட்டு வாங்க……………….!

    அதெல்லாம் அங்க வச்சே சாப்பிடணும்……….,

    இல்ல……என் ஃப்ரெண்ட் அப்பாவுக்கு உடம்பு ரொம்ப முடியாதவரு….வயசு ரொம்ப ஆயிட்டதால அவரால சமைக்கமுடியாது. அதனால அவ போய் அவங்கப்பாவுக்கு கேக்கறப்ப கொடுத்தாங்க………

    டிஃபன்பாக்ஸ் எதுவும் வச்சிருக்கியா!

    வேலைக்காரிகிட்ட அம்மா பாத்திரம் சரியா கழுவுலன்னு சண்டை போட்டுட்டு,  இன்னைக்கு வரலை…..அதான் நானே கழுவி கொண்டுவந்திருக்கேன்.

    உனக்கேன் பாப்பா இந்தவேலை…… அம்மா உன்னை திட்டலையா!

    அம்மா அப்பாவோட சேந்து தண்ணியடிச்சுட்டு காலைலவரைக்கும் எந்திரிக்கலை……….! சமையல்காரியும் வரலை……..நாலுமணிக்குமேல எனக்கு எழுத வேண்டியிருந்தது…அதான் அடுப்படிக்கு போகலை……இல்லைன்னா சாதமாவது வச்சிருப்பேன்………….,  போகும்போது எனக்கு சமையல் புக் ஒண்ணு வாங்கி வக்கிறியாண்ணா………,  வெளில வந்து சாப்பாட்டுக்கு நிக்கறது அசிங்கமா இருக்கு…….யாராவது பாத்தா அப்பாட்ட சொல்லிடுவாங்க………….

    கண்ணில் எழுந்த கண்ணீரை அவள் பார்க்காதபடி தூசி விழுந்ததுபோல லேசாகத் துடைத்தபடி ஏன் பாப்பா! உங்க ஸ்கூல்லயே காண்டீன் இருக்குல்ல!

    அங்க போறதுக்கும் கைல காசு வேணும்ல……..ரெண்டுபேருக்கும் குடிக்கறதுக்கும், கார்ல அடுத்தவங்க பாக்கறதுக்கும் கடன்வாங்கி செலவு செய்யறாங்க….ஃபாரீன் மாதிரி படிச்சுக்கிட்டே வேலைன்னு இந்தியாவுல வந்தா நல்லாருக்கும்…..பத்துகூட முடிக்காத எனக்கு யார் வேலை தருவா இப்ப………..? காரு ஏன் மாறிப்போவுது அண்ணா?

    நான் உன்னை எல்கேஜில இருந்து வண்டில இந்த ஸ்கூலுக்கு கொண்டுவந்து விட்டுட்டு இருக்கறேன் பாப்பா! என்னைக்கும் நீ பசின்னு சொன்னதில்ல……..அதான் மனசு கேக்கல….என் வீட்டுல சாப்பிட்டு போகலாம்.

    ஆமா! இதுவரை நீங்க தனியால்ல இருக்கேன்னு நினைச்சிட்டு இருக்கேன்.

    இல்ல பாப்பா! எனக்குன்னு ஒரு சின்ன குடும்பம் இருக்கு…வா! வீடு வந்திருச்சு…இறங்கு………

    சுஜின்னு கூப்பிடு….எனக்கும் வயசாகுதுல்ல……….!

    இல்லை பாப்பா…..எனக்கு அப்படியே கூப்புட்டு பழகிடுச்சு……………..நீ கல்யாணமாகி புள்ளை பெத்தாலும் நீ எனக்கு பாப்பாதான்.

    கௌரி யார் வந்திருக்கான்னு பாரு………………!

    எட்டிப்பார்த்த கௌரி சுஜியை வாம்மா! வந்து உட்காரு என்றாள்.

    வீட்டைச்சுற்றிப் பார்த்த சுஜி அலமாரியில் இருந்த மதர் தெரசாவை வைத்த கண் வாங்காமல் பார்த்தாள்.

    அலமாரி முழுவதும் ஷீல்டுகளால் நிறைந்தபடி இருந்ததை வியந்து பார்த்தாள். நடுவில் ஒரு தேவதை டிரஸ் போட்ட எட்டுவயதுப்பெண் பாப்தலையுடன் சிரித்துக்கொண்டிருந்தாள்.

    அண்ணா இது யாரு………..?

    இது என் பொண்ணு……..!

    இப்ப எங்க……………….?

    கடவுளுக்கு அந்த பொண்ணை ரொம்ப பிடிச்சுப்போச்சாம்….அதான் பூமில ப்ரைஸ் நிறைய வாங்கிட்ட………….., என்கூடவந்து இருந்துக்கோன்னு கூட்டிக்கிட்டார்.  உன்ஸ்கூலுதான் பாப்பா…. உன்னோட ஒரு வயசு கம்மி………இருந்தா உன்னோட பேசிட்டு இருந்திருப்பால்ல………..சுவரில் தொங்கிய ஃபோட்டோவை வெறித்தான்.

    வா பாப்பா! டைனிங்டேபிள்ல உட்காருன்னு சொன்ன கௌரியை முதன்முதலாகப் பார்த்தாள்.

    வீட்டில் பரப்பி வைத்திருக்கும் ஹாட்பாக்ஸ், ஆடம்பர கண்ணாடி டம்ளர்,வெள்ளி பழத்தட்டு எனப் பார்த்துப் பழகிய கண்களுக்கு பரப்பிய வாழைஇலை சாப்பாடு அவளுக்குப் புதிதாகத் தெரிந்தது. அதைவிட கௌரி பரிமாறக் காத்திருந்தது  புதிதாகத் தெரிந்தது.

    சுஜி…எனக்கு ப்யூட்டிபார்லர்ல வேலை இருக்கு. நீ போய் வேலைக்காரிட்ட சொல்லி சாப்பிட்டுக்க…….! என்ற குரல் மனதில் ஒலித்தது.

    நான் உங்க பொண்ணு மாதிரின்னு நினைச்சுதானே வீட்டுக்கு கூட்டிட்டு வந்தீங்க….. தரையிலயே உக்காந்துக்கறேன்.

    வாஷ்பேசின் எங்க! ஓ சாரி! கொல்லைப்பக்கம் எங்கிருக்கு?

    ஓடிச் சென்று கையைக் கழுவித் துடைத்தபடி ஸ்கர்டை இழுத்துக்கொண்டு அமர்ந்த பெண்ணை பாசத்துடன் பார்த்தாள் கௌரி.

    இன்னைக்கு நீ வருவேன்னு தெரியாது…….டிஃபன் செய்யல……….அதுதான் உருளைக்கிழங்கு பொரியலும், முருங்கைக்காய்கூட்டும், தக்காளிக்குழம்பும், அப்பளமும் வச்சிருக்கேன். சாப்பிடுறியா……………….

    போடுங்க பசி உயிர் போகுது…..

    ரசித்துச் சாப்பிட்டாள் சுஜி.

    Swamiஅண்ணா! எனக்கொரு உதவி செய்வியா? சாப்பிட்டுக்கொண்டே பேசினாள் சுஜி.

    நான் டெய்லி இங்க வந்து சாப்புட்டுபோறதுக்கு எதாவது ஐடியா இருக்கா? படுத்துத் தூங்கக்கூடப் பிடிக்கல….எங்கயாவது போய் செத்துடலாம்னு தோணுது……….

    கௌரி தன் கணவனை ஆச்சர்யத்துடன் பார்த்தாள்.

    நீ சாப்பிட்டு கிளம்பு பாப்பா! ஸ்கூலுக்கு நேரமாய்டும்…..

    கதவருகில் யாரோ வந்து நிற்பதுபோல நிழலாட………! சிலையாய் நின்றாள் சுஜி. அப்பா என்று உச்சரித்த சொல் தொண்டைக்குள் பயத்தால் குழறியது.

    நான் அப்பவே நினைச்சேன். இவளைப்போய் இங்க கூட்டிட்டு வந்திருக்காரே…..அவங்க குடிச்சா உங்களுக்கென்ன? உங்களுக்கு இனி வேலை வெளில தேட வேண்டியதுதான். அலுத்துக்கொண்டாள் கௌரி.

    இரவுநேரத் தூக்கமின்மையாலா, அல்லது குடித்துச் சிவந்திருந்ததாலா எனத் தெரியாத அதிகாரக்கண்களில் என்றுமே கண்ணீரைப் பார்த்தறியாத சுஜி அன்று கண்ணீரைப் பார்த்தாள்.

    உனக்காகத்தானடா விழுந்து விழுந்து சம்பாதிக்கறேன். நம்ம கார் ஒண்ணை இங்க வொர்க்ஷாப்ல விட்டிருந்தேன். எடுக்கலாம்னு வந்தேன். வர்ற வழில உன் கார் இங்க நிக்குது…. என்னவோ டிரைவர் உன்னைச் என்ன செஞ்சிடுவானோன்னு பயத்துல மறைஞ்சு வந்தேன்.

    பாத்தா இங்க நீ இப்பிடி பேசுற…….ரமேஷ்! இனி இது உன் வீட்டுப்பொண்ணு மாதிரி நினைச்சுக்கோ! அது எப்ப சாப்பாடு கேக்குதோ போடுங்க…..  சுஜி முன்னாலேயே சொன்னமாதிரி கடனையெல்லாம் அடைச்சிடுறேன். மூட்டை தூக்கியாவது எம் பொண்ணைக் காப்பாத்துறேன்..  போதுமாம்மா..இனி நாங்க ரெண்டுபேரும் குடிக்கவும் மாட்டோம். அப்பாவோட ஸ்கூல் முடிஞ்சு வீட்டுக்கு வந்துடுறியாம்மா………!

    பன்னீர்ரோஜாக்களை யாரோ தனது தலைமேல் கொட்டியதுபோல உணர்ந்தாள் சுஜி. இதோ! சாப்பிட்டு வர்றம்பா…….ஆண்ட்டி நல்லா வச்சிருக்காங்க…………..

    நீங்களும் சாப்பிடுறீங்களாய்யா?

    சும்மாயிருங்க..! அவரு எவ்வளவோ ஒசந்த இடத்துல இருந்து வந்தவரு……அவர்கிட்டபோய்……..

    உசந்த இடம்கிறது பங்களாவுலயோ….போற கார்லயோ இல்லைம்மா…..பசிக்குதுன்னா…ஒருவேளை சாப்பிட சாப்பாடு கொடுக்கறாங்கபாருங்க …! அவங்கதான் உயர்ந்தவங்க……..கொண்டுவாங்க சாப்பாடை…….‘கீழேயே உக்காந்துக்கறேன்னு உயர்நதவன் என்ன! தாழ்ந்தவன் என்ன‘ எனப் பாடிய  அப்பாவைச் சிரித்தபடி பார்த்தாள் சுஜி. ‘சாதி இரண்டொழிய வேறில்லை‘ எனப் பக்கத்துவீட்டுகுடிசையில் யாரோ படிப்பதைக் கேட்ட சுஜி  அலமாரியில் ஒட்டியிருந்த விவேகானந்தர் படத்தின்கீழ்  ‘உன்னால் எதையும் சாதிக்க முடியும்‘ என்ற வாசகத்தை மனதுக்குள் மௌனமாகப் படித்தாள். அவளுக்கு வாழ்க்கையின் பொருள் புரிந்ததுபோல இருந்தது.

    Share
  • கலைமகள்

     

    பொன் ராம்

     

    கலைமகளே! பாராயோ!

    பணவாசம் வேண்டி

    பக்குவமாகச் சிரித்திடும் பகட்டு உலகில்

    பெண்ணுரிமையும் உளதோ!

    உலகை மறந்த சுதந்திர தேவி சிலையின் வாசம்

    அடி நெஞ்சில் இனித்திடும் அதிசயம் கேளாயோ?

    உடன்பிறந்தார் நினைவின்றி சுகபோகம்

    யாவையுமே நித்திய வாழ்வின் பொருளாய்

    ஊணுக்காக உற்றதுணையின் கைப்பிடியில்

    உழலுவதைப் பாராயோ!

    மண்ணுக்குள்ளே நல்லறிவைக் கொடுத்த மாதா

    மண்ணுக்குள் மக்கும்போதாவது வருவாரோ?!

    தாத்தா வைத்த தென்னையுமே

    தாகம் தீர்த்திட வந்ததே!

    தாகம் உலர்ந்த உதட்டிற்கு

    தண்ணீர் தரவே ஆளில்லை!

    பச்சை ஓலை போடுகையிலே

    பரிதவிக்கும் நடிப்பைக் காண

    கலைமகளே வாராயோ!

    பாசப்பனியினை விலக்கிய

    பரிதியும் சோகத்தில்

    மேகத்தாயின் மடியினிலே

    வெட்கப்பட்டு மறைந்திடுதே!

    இதயம் ஒன்று இருப்பதையே

    மறந்த நெஞ்சங்களுக்கு

    கலைமகளே என்ன வரமளிப்பாய்?

    படத்துக்கு நன்றி: http://www.vallamai.com/wp-content/uploads/2013/02/sad-woman-silhouette-225×300.jpg
    Share
  • உறவுகள்

    பொன் ராம்

    அன்று நான் தூங்காமல் ஏனோ விழித்திருந்தேன். உறக்கம் வராமல் என் அருகில் படுத்திருந்த ஜிம்மியும், ஏனோ என்னை அதன் பச்சைக்கலர் டார்ச் லைட் கண்களால் பார்த்தபடி இருந்தது. அதன் கண்களுக்கு சுமி தெரிந்தாளோ? என்னை அழைத்துச் செல்ல வந்திருப்பாளோ? என ஜிம்மி என்ன செய்கிறது என உற்றுப் பார்த்தேன். அது நான் பார்ப்பதறிந்து ஃபோட்டோவிலிருந்த சகுந்தலாவைப் பார்த்தது. அதன் கண்ணில் ஏனோ இரண்டொரு துளி நீரை என்னால் உணர முடிந்தது. இரட்டை சடையும்,டென்னிஸ் பேட்டுமாய் அவள் சிரிக்கின்ற கன்னங்குழி அழகை இறைவன் தான் பார்க்க ஆசைப்பட்டு எடுத்தானோ?
    ஏங்க! சகுந்தலாவுக்குப் பட்டுப்பாவாடை பச்சைக்கலரில் வாங்கலாமா?ஒரு ஃபோட்டோகூட எடுத்துடலாங்க! அவ வந்த பிறகு தான் இந்த வீட்டுல இத்தனை வசதி! சுமி!வேண்டாம்மா! நம்ம குடும்பத்துக்கு ஃபோட்டோ ஆகாது. நிலைக்காதுன்னு ஆச்சி சொன்னாங்க!

    ஒண்ணே ஒண்ணு தான்! அதுக்கப்புறம் உங்களைக் கேக்கவே மாட்டேன்! சொன்னது முரளிதரனின் காதுக்குள் இன்னமும் கேட்டுக்கொண்டே இருப்பது போல் ஒரு பிரமை!

    இருவருமே சொல்லாமலே சென்று விட்டீர்களே! என தொண்டைக்குள் ஏதோ மாட்டிய உணர்வு  தெரிந்தது. ஆட்டோவில் எவனோ வைத்த பாமிற்கு இவர்கள் தானா கிடைத்தார்கள்! பச்சைக்கலர் பட்டு கூட மிஞ்சவில்லையே அம்மா! என மனம் கூக்குரலிட்டு அழுதது. தவமாய் தவமிருந்து வாரிக் கொடுத்துவிட்டு நிற்கிறேனே! ஜிம்மி மட்டும் இல்லையென்றால் என்றோ இறந்திருப்பேன்!

    இருட்டி வெகு நேரம் ஆனபோதும் எங்கள் இருவருக்கும் வெளிச்சமிட ஏனோ மறந்த இறைவனை நினைத்தபடி இருந்தேன். ஜிம்மி நடக்க முடியாமல் எழுந்து சகுந்தலா இருந்த ஒவ்வொரு அறையாய் சென்று சிறிது நேரம் அப்படியே அமர்ந்து அவள் வைத்திருந்த ஒவ்வொரு பொருளாய்ப் பார்த்தது. அவளும், ஜிம்மியும் விளையாடிய பந்தை உருட்டித் தடுமாறி விழப்போனது. ஜிம்மி! என அழைத்த நான் கண்கலங்கியதைப் பார்த்து ஓடி வந்து எனது மடியில் படுத்தது. அழைத்து அழைத்துப் பார்த்தேன்!. அது எழுந்திருக்கவே இல்லை. வாழ்க்கையில் பல மரணத்தைப் பார்த்த என் கண்ணில் ஏனோ அன்று நீர் வரவேயில்லை. எனது அப்பா வாங்கிக் கொடுத்த ஈசிசேரில் படுத்தபடி ஜிம்மியைத் தடவியபடி இருந்தேன். உயிர் ஏனோ தன் வரவை யாருக்கும் சொல்லாமலே வருவது போல் சென்று விடுகிறது.

    காலைப்பனியில் மப்ளர் போட்ட செக்யூரிட்டி அய்யா! பால் என ஒருக்களித்த கதவை ஆச்சரியத்துடன் திறந்தான்! உள்ளே மடியில் ஜிம்மியுடன் ஃபோட்டோவைப்பார்த்த நிலையில் உயிர்பிரிந்த சாம்பசிவத்தைப் பார்த்த அதிர்ச்சியில் வெளியே தகவல் சொல்ல ஓடினான்.

    Share
  • இசைக்க மறந்த வீணை

      

    பொன்-ராம்    

     

    சன்னலோரத்து ரோஜா தலையை ஆட்டியபடி, கண்ணாடிக் கதவைத் தன் இதழ்வாயால் முத்தமிட்டுத் திறக்க முயற்சித்தபடி இருந்ததைக்கண்ட சிவா, “அப்பா! சூரியவெளிச்சம்  செடிக்குத் தேவை தானே! ஏன் கதவைச் சாத்தியிருக்கு? எனக் கேட்க,

     

    ஓவரா வெயில்பட்டா செடி வாடிப் போயிடும்பா, அந்த வெள்ளை ரோஜாவைப் பாத்தியா, ஓரத்தில பிங்க் நிறம் வச்சமாதிரி அதுக்கு பார்டர் வேற,  ஏம்பா நீதான் கதை எழுதறேன்னு உக்காண்டுருக்கியே, எழுந்து தண்ணீ ஊத்தறது, கதவைத் திறந்து வைக்கறது, ஏதோ சாஃப்ட்வேர் கம்பெனில வேலைல இருக்கோம்னு பொழுதன்னிக்கும் சிஸ்டத்தோட மல்லடிச்சிண்டு இருக்க, நீ காதுல பாட்டுக் கேட்க வயர் வயரா போட்டுக்கற,! ஆனா வாட்ச் கூட கட்டறதுல்ல. கேட்டா டிஸ்டர்ப்புங்கற.  ஏதோ இப்பதான் கொஞ்சம் நான் சொல்றேன்னு உனக்குப் பிடிச்ச லைனுக்கு வந்துண்டிருக்க.

     

      அப்பா இந்தக்காலத்து இளைஞர்களைப் பத்தி நீங்க இன்னும் புரிஞ்சுக்கலப்பா,     என்ன புரிஞ்சுக்கல?      அதோ பாருங்க பஸ் போயிண்டிருக்கு, ரோடு ஃபுல்லா தூசி பறக்குது, ரோடு போடறதா சொல்லி நாலு மாசம் ஆகுது. அங்கங்க பள்ளம், இன்னமும் யாரும் அதைச்  சரி செஞ்சமாதிரி தெரியல.

     

    பக்கத்துல டாஸ்மாக், விழுந்தான்னா அவன் வீட்டு கதி,   மழைக்காலமும் நெருங்கிடுச்சு, பக்கத்தாத்து சமையல்வேலை செய்யற மாமி பையன் இப்பத்தாம்பா வந்துசொல்லிட்டுப்போனான் அவன் இன்னும் ஸ்கூல் ஃபீஸ் கட்டலையாம்.

     

     உனக்கென்ன அதைப்பத்தி,     நீ தான் ஃபாரின் போய் கை நிறைய சம்பாதிக்கப் போற,   அப்புறம் என்ன உனக்கு அதைப்பத்தியெல்லாம் என்ன கவலை?       படிச்ச படிச்சதுக்குத் தகுந்த  வேலை கிடைச்சுது.  ஃபாரின் சான்ஸ் வந்தா  கிளம்பு. அதானே இந்தக் காலத்துப் பசங்களுக்கு கார்ல போகணும்.  வேணுங்கறத வாங்கணும், நிக்க ஒரு இடம், படுக்க ஒரு இடம், உட்கார ஒரு இடம், உலகம் ஃபுல்லா சுத்தி வரணும். சனி, ஞாயிறுன்னா ஃப்ரெண்ட்ஸ் இதானே உங்க எய்ம்?

     

    நிறையபேர் அப்படித்தாம்பா நினைச்சுண்டிருக்கா. நான் என்ன சொல்ல வர்றேன்னா.       நம்ம அப்புறமா பேசலாம், ”வா! கோயிலுக்குப் போகலாம்.சரி அப்படியே அம்மா படத்துக்கு அந்த ரோஜாவைப் பறிச்சு வச்சுட்டு வாப்பா.     அப்பா உங்களை நான் ஒரு கேள்வி கேக்கட்டுமா,

     

     ஏம்பா! நீங்க அம்மா இறந்ததுக்கப்புறம் இரண்டாம் கல்யாணம் செஞ்சுக்கலை.    மௌனமாக சுவரில் தொங்கியிருந்த தன் மனைவியின் படத்திலிருந்த கண்களை உற்றுநோக்கினார் அரவிந்த்.

     

     பூமியில பிறந்த மனிதர்கள் எல்லாம் அவங்க குழந்தைகள்னு நினைச்சுத்தாம்பா கடவுள் படைச்சாரு. நாம நம்ம கல்வி கத்துக்கறது, நம்ம பேரண்ட்ஸ், நமக்கு வழி காட்டின பெரியவங்க இவங்கள முன்னுதாரணமா வச்சுத்தாம்பா வாழறோம்,  என்னைப் பொறுத்தவரைக்கும் அப்பா, அம்மா, நமக்குக் கிடைத்த லைஃப் பார்ட்னர் எல்லாமே ஒரே ஒருத்தர் தாம்பா, பிடிச்சா வேற சட்டைய மாத்தியோ, வெரைட்டி ஃபுட் சாப்புடற மாதிரியோ இஷ்டத்துக்கும் இந்த உறவு முறையை மாத்திக்க முடியாதுப்பா.

     

     வாழ்க்கைன்னா நெளிவு சுளிவுன்னு இருக்கத்தான் செய்யும்.    அதுக்காக இஷ்டத்துக்கு வாழறது இல்லை வாழ்க்கை. இதாம்பா நா உங்கம்மாவோட வாழ்ந்த வாழ்க்கையில அனுபவிச்சு தெரிஞசுக்கிட்டது.  அதுக்காக நம்ம வசதியான லைஃபை நாம தொலைக்கணுமா?  பழகிய குரல் கேட்டு நிமிர்ந்தார் அரவிந்த்.  அப்துல்லா வாடா எப்ப வந்தே?  ஆச்சு   சன்னலோரத்து ரோஜாவுல ஆரம்பிச்சப்பவே வந்துட்டேன்.

     

    ஏண்டா வந்தவுடனே உள்ள வர்றதுக்கு என்னடா,   வாசப்படியிலேயே நின்னுண்ட,  அப்பாவுக்கும் பையனுக்கும் நடுவுல நான் யார்.     நான் கேக்க நினைச்சு மௌனமாகிப் போனதை உம் பையன் கேக்கறானே? நீ என்ன சொல்றன்னு பார்ப்போம்னு தான் வெயிட்  பண்ணினேன்.என்றார் அப்துல்லா.

    ஆமா என்ன கேட்ட, மனைவி இல்லாம இருக்கறத சொல்றியா,  இதோ இந்த படம் வெறும் உயிரற்ற ஜடமா வேணும்னா பாக்கறவங்க கண்ணுக்குத் தெரியலாம்,ஆனா  சில உறவுகளைப் பற்றி வெளியே பேசலாம்.ஆனா தாம்பத்ய துணை அப்படியில்லைன்னு நினைக்கிறேன், மௌனமானார் அரவிந்த்.

     

    பதில ரொம்ப கரெக்டா சொல்லிட்ட  என்றார் மேரி கொண்டுவந்த காப்பியை உறிஞ்சியபடி.  அவிக எப்பயுமே இப்பிடித்தான், நானும் இந்தப் பையன் மூணு வயசு இருக்கறப்பதான் இங்கு தோட்ட வேலைக்கு வந்தேன், உங்கப்பா தான் வீட்டு வேலை அத்தனையும்,  இதோ தம்பிக்கும் கல்யாண வயசு வந்தாச்சு.

     

    மேரி பாட்டி, சும்மா கல்யாணம்னு இப்பவே பேசாதீங்கோ,  எனக்குன்னு இன்னமும் சில கடமைகள் இருக்கு,   என்ன  செய்யப் போற?      நான் இங்க வந்ததே அதுக்குத்தான், நல்ல அலயன்ஸ் ஒண்ணு வந்துருக்கு,   உனக்கேத்த நல்ல குணம். உன் படிப்பு, அழகு, உன் கொள்கை எல்லாத்துக்கும் பொருத்தமா இருக்கும்னு எடுத்துட்டு வந்துருக்கேன். சாதகத்தோட   முடிச்சிட்டு ஸ்டேட்ஸ்க்குப் போயிடு“ என்றார் அப்துல்லா.

     

    அங்கிள்   நீங்க எந்தக் காலத்துல இருக்கீங்க,   சாதகம்   அது இதுன்னு,  செல்ஃபோனில் ஒலித்த குறையொன்றுமில்லை, பாடலை நிதானமாக இரசித்த சிவா, ஹலோ என்றான்.  கிடைச்சா வாங்கிடு,  உன் ஹஸ்பெண்ட் என்ன சொல்றார்?

     

    நான் என்ன அவ்வளவு பெரிய ஆளா, என் கொள்கையும், உன் கொள்கையுமே என்னைக்குமே ஒண்ணு தான் நிவி.     இசைக்க மறந்த வீணையாய் பெட்டிக்குள்ள இருக்கறத நான் விரும்பல நிவி.   ரி  அப்புறம் பேசறேன்.   அங்கிள் வந்திருக்கார் பேசுறியா, சரி வைக்கிறேன்,    என் ஃப்ரெண்டுப்பா, உங்களுக்கும் தெரியும்.  நம்ம வீட்டுக்கு பக்கத்துல இருந்தாளே நிவின்னு. அவதான் பண்ணா, அப்பறமா சொல்றன்பா அதப்பத்தி.

     

    அவளா, சரிப்பா, சரி எங்க விட்டோம், முடிவா  என்ன சொல்ற,   அப்பா 5  ரூபாய்க்கு ஷேர் ஆட்டோவுல டிராவல் பண்ணா தஞ்சாவூர்ல டிக்கட் தர்றவனுக்கும், சென்னைல கடைல குடை வாங்கினாகூட பில் தராம இருக்கறவன் மனசும் வேறயா இருக்கறதுப்பா.இடமும் வேறயா இருக்கறதுப்பா. மனசு அது போலத்தாம்பா சில நேரங்கள்ல ரொம்ப கனமாயிடுதுப்பா.

     

    பச்சை சாயத்துல தோச்செடுத்த வெள்ளை ரோஜா மாதிரி, இன்னைக்கு நாங்களும் தப்பா உங்க பார்வைல நிக்கறோம்,  நீங்க பணத்தை பிள்ளைங்க கிட்ட எதிர்பார்க்கறதில்ல,  உங்க சொந்தம், உங்க ஊர்,பெருமையா பிள்ளை ஸ்டேட்ஸ்ல இருக்கான், அப்படின்னு சொல்லிக்க மட்டும்தான் நினைக்கிறீங்க, சோஷியல் சர்வீசும் செய்யறீங்க,

     

    சில பேர் இருக்காங்கப்பா, கஷ்டப்பட்டுட்டேதாம்பா இருப்பாங்க, கடைசிவரை பிள்ளைங்க பணத்தை எடுக்கக்கூடாதுன்னு.  அவங்க ஐடியா என்னன்னே தெரியலப்பா,   வெளிநாட்டுக்கு எங்களுக்கு வாய்ப்பு கிடைக்கறதுன்னு போறோம். விவேகானந்தரையும், ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்” புறநானூறையும் நினைச்சுத்தாம்பா வாழணும்னு நினைக்கிறோம்.   அதுக்காக குடும்ப ஸ்டைல மாத்திக்க மாட்டோம்.

     

    இப்படித்தான் சொல்லுவீங்க, அப்பறம் உலக அழகி மாதிரி வேணும்பீங்க. சிரித்தார் அப்துல்லா.  நோ நோ  இட்ஸ் இம்பாஸிபிள்,  .உங்க லைஃப் ஸ்டைல்தாம்பா கரெக்ட். உலகெங்கும் இந்த லைஃப் ஸ்டைல் வரக்கூடாதா? அப்படின்னு நாங்க நினைக்காத நாளில்லை.

     

    இதெல்லாம் இந்தக்காலத்துக்கு சரிப்படுமா, தம்பி ” என்றாள் மேரி. ஏன் சரிப்படாது பாட்டி? எங்களால் முடிஞ்சவரைக்கும் செய்யறோம். அங்கங்க சாஃப்ட்வேர் இன்ஜினியர்ஸ் நாங்கள்லாம் இடம் வாங்கறோம்னு சொல்றீங்கள்ல. நீங்க உங்க அளவுல சோஷியல் சர்வீஸ் செய்யறத நாங்க உலகளவுல செய்யத்தான் பாடுபடறோம். இவ்வளவு செஞ்சும் அங்க பாருங்க, நாய்க்குப் பிஸ்கட் வாங்கிப் போடும் அந்தப் பிச்சைக்காரப்பாட்டியை.

     

    மாமரத்தில் ஒற்றைக்குயிலொன்று சடசடவென்று கூட்டமாகப் பறக்கும் வெள்ளைப்புறாக்களைத் துரத்தியதைக்   கண்கொட்டாமல் பார்த்தபடி, ஓரமாக இருந்த ஊன்றுகோலைத் தன் தோளுக்கு இடையில்  கொடுத்தபடி ரோஜாவைப் பறிக்க கட்டைக்கால்கள் சப்திக்க வேகமாக நடந்தான் சிவா.

     

    நடந்து கொண்டேகொஞ்ச நாளைக்கு முன்னாடி படிச்சேம்பா,   கட்டு கட்டா பண மூட்டையை டாய்லெட்ல யாரோ வச்சுட்டு போய்ட்டாங்களாம். கண்டுபிடிச்சாங்களான்னு தெரியல,   என .ஃபோட்டோவில் தெரசா சிரித்தபடி இருந்ததைப் பார்த்தபடி பேசினான்.

     

    மனுஷனுக்கு மனுஷன் அன்பு செலுத்த ஆளில்லைங்கறபோது அந்தப் பணத்தை வைக்கிற இடம் எதுன்னு பாத்தீங்களாப்பா   என்றான் சிவா.   பறித்த ரோஜாவை உள்ளங்கையில் வைத்து அதன்  வெள்ளை வண்ணத்தைப் பார்த்தபடி மௌனமானான்.

     

     எங்கோ துல்லியமான வீணையின் ஒலி கேட்க, அப்துல்லா வா! பக்கத்துல கௌரி ஆசிரமத்துல சில்ட்ரன்ஸ்டே செலிப்ரேஷன் இருக்கு,  அதுக்கு ஏதோ ப்ரோக்ராம் அரேஞ்ச் பண்றான்னு நினைக்கிறேன்,  ஆறு நாள்ல தீபாவளி வேற,   அதுக்கு வேற நிறைய வேலை கிடக்கு.    மகனே வா கோயிலுக்குப் போய்ட்டு   அவரவர் வேலையைப் பார்க்கலாம்”என்றார் அரவிந்த்.

     

    வீணை இசை நல்லாயிருக்குப்பா… பெட்டிக்குள்ளே இருந்திருந்தா இதெல்லாம் கேட்க முடியுமா? என்றார் அப்துல்லா. அதை அங்கீகரிப்பதுபோல் மௌனமாக சிவாவின் தோளைத் தட்டினார் அரவிந்த்.      

        

    டீபாயின் மேலிருந்த புத்தருடைய சிலையில் வைத்திருந்த பூ காற்றில் ஆடியபடி மௌனமாகச் சிரித்தது.

     

    Share