Tag: முனைவர் சு.இரமேஷ்

  • வ.சுப.மாணிக்கனாரின் வள்ளுவம் கூறும் விழுமியங்கள் – 2

    -முனைவர் சு.இரமேஷ்

    பொருட்பயனிலை

    அறிவு அறிவுக்கே, கல்வி கல்விக்கே, பொருள் பொருளுக்கே என்னும் கூற்று நடைமுறைக்கு ஒவ்வாது. கற்றதனால் ஆய பயனென் கொல் (2) என்னும் அறிவினான் ஆகுவது உண்டோ (315) என்னும் கல்வி அறிவுகளுக்கு காட்டுவதுபோல “செல்வந்தான் பெற்றத்தாற் பெற்ற பயன்” (524) ஒன்று உண்டு எனக்காட்டுகிறது. தமிழில் பொருள் பற்றிக் குறிப்பில் கோட்பானது ஈதலும் தூய்த்தலும் ஆகும்.

    உலகத்தில் இன்னும் சிலர் கடன்பட்டு இரவல் பட்டும் குடும்பக் கடன்போல் கொடைக்கடன் செய்வோர் உள்ளனர். தாய்க்குக் கொடுத்தால் அவள் தன் மகளுக்கு கொடுக்குமாப்போல பெற்றதையெல்லாம் பிறர்க்கே ஈயும் அன்பு நிறை நெஞ்சினர் அரிதாக நம்மிடை உள்ளனர் என்பதை,

    இன்னோர்க்கு என்னாது என்னொடுஞ் சூழாது
    வல்லாங்கு
    வாழ்தும் என்னாது நீயும்
    எல்லார்க்கும்
    கொடுமதி மனைகிழ வோயே!
    பழந்தூங்கு முதிரத்துக் கிழவன்
    திருந்துவேற்
    குமணன் நல்கிய வளனே” – (புறம்.163)

    என்ற இப்பாடல் கொடைபற்றிய திறனை அறிவிக்கின்றது.

    “வினை செய்தவன் தானே முழுப்பயனையும் நுகரவேண்டும் என்பதற்கு ஒப்ப, செல்வம் ஈட்டியவன் முழுவதும் தூய்க்க வேண்டும் என்னும் கொள்கையினர் தானுண்டு, தன் வாய்உண்டு, தன் உடல் உண்டு, தன்னையே நினையும் தடிப்பினாராய்ப் பெற்றோர் உறவினர் சுற்றும் அற்றவர் போலத் தூய்க்கும் அவாவினர் இவரைக் கண்ட வள்ளுவர்.

    இரத்தலின் இன்னாது மன்ற நிரப்பிய
    தாமே
    தமியர் உணல்” (229)

    என்று கூறும் ஆசானின் கொதி நெஞ்சம். இன்மை இடும்பைக் கிரந்து தீர்வாம் (1063) என்று இரப்பு பற்றிச் சினந்த புலவர், உணவுக் குவியல் இருந்தும் ஈயார் என்று காட்டுவார். கரும்புபோல் கொல்லப் பயன்படும் கீழ் (1078) என்று குறிப்பிடுகிறார். (வள்ளுவம், ப.82) கொடா நோன்பிகளுக்குக் கயவர் என்று பெயர் சூட்டினார்.

    தனித்து உண்பது அவா உணர்ச்சிக்கும் அச்ச உணர்ச்சிக்கும் அடிப்படை. “அறத்தான் வருவதே இன்பம்” (39) மக்கள் மெய்தீண்டல் உடற்கின்பம்  (65), ஈத்துவக்கும் இன்பம் (228) போன்றவை ஆசான் காட்டுகின்ற  நல்இன்பங்களாகும்.

    அதே நேரத்தில் துய்க்கும் இன்பத்தை கட்டுப்படுத்துவர் அல்லர் திருவள்ளுவர், “அருள் என்னும் அன்புஈன்குழவி” (757) என இயற்கையை ஆசிரியர் ஒப்புவர் தூய்ப்பின்பம் அறிபவனே பிறர்க்கு ஊட்டின்பம் அறிவான். “தான் இன்புறுவது உலகு இன்புறக் கண்டு” (399) என்றபடித் தன்னின்பம் கொண்டு பிறரை நுகர்விக்க வல்லவனாவான். அதே நேரத்தில் அறனொடு பட்ட இன்பத்தூய்ப்பை குறைத்துக் கொள்ளச் சொல்வார் வள்ளுவர் என்பதை குறிப்பிடுகின்றார். (வள்ளுவம், ப.84)

    ஆகாறு அளவிட்டிது ஆயினும் கேடில்லை
    போகாறு
    அகலாக் கடை”  – (478)

    என்று வருவாயைக் கடந்து வறுமைக் கோட்டிற்குள் அடி எடுத்துவையாதே என்பது இதன் கருத்தாகும். வரவு முழுவதையும் தூய்த்து இன்ப வாழ்வு நடத்துதலை ஆசிரியர் உடன்படுகிறார் என்பதை மூதறிஞர் குறிப்பிடுகின்றார்.

    மனை முழுதும் நிரம்பிய பொருள் இருந்தும் குறைந்துவிடும் என்று கருதி எடுத்து உண்ண மறுப்பவது கொடுத்து உண்க என்று எப்படிக் கூறுவது தன் வயிற்றை வஞ்சிக்கும் இவன் உலகிடக் கிடப்பதோர் கடமை இல்லை என்ற சினத்தால்,

    வைத்தான் வாய்சான்ற பெரும்பொருள் அஃதுண்ணான்
    செத்தான்  
    செயக்கிடந்தது இல்” – (1001) என்பர்.

    திருக்குறள் கற்கும்போதே ஒழுகும் எண்ணத்தார்க்கு முழுதும் கற்றபின் ஒழுகும் எண்ணம் உண்டாகாது அதுபோல பொருள் வருங்காலை செலவிடான் வந்த பின்னும் செலவிட நினையான். பூதங்காக்கும் பொருள் என்பது மொழி என்கின்றார்.

    ஆற்றின்  அளவறிந்து ஈக  அது பொருள்
    போற்றி  
    வழங்கும்  நெறி” (477)

    அளவறிந்து ஈவதே வள்ளுவம் எனத்துணிக என்று வாழ்நூல் செய்தவர் வள்ளுவர். அனைத்தும் ஈக என்று பொறுப்பின்றிக் கூறாமல் அளவறிந்து ஈக என்று நினைந்து சொல்லறிந்து மொழிந்தனர் என்பதைக் குறிப்பிடுகின்றார். – (வள்ளுவம், ப.91)

    கொடைக்கடன்

    கொடைக்கடன் ஒப்புரவும் ஈகையும் இருவகைப்படும். பொதுக்கொடை என்பது ஒப்புரவு (தனிக்கொடை) ஈகையாம் ஒப்புரவு என்கின்ற விளக்கு ஒ –பல்லுயிருக்கும் ஒத்த, புரவு –கொடை – அல்லது காப்பு என்பது பொருள்.

    “பேரறிவாளன் திருஊருணி நீர் நிறைந்தற்று” (215)

    “மாரிமாட்டு என்னாற்றுங் கொல்லோ உலகு” (211)

    எனப் பரந்த பொதுவுவமைகளை உயர்திணையுள்ளும் அஃறிணையுள்ளும் பல்லுயிர்க்குப் பொருந்திய பெருங்கொடை என்பதுவே ஒப்புரவு அதிகாரத்தின் கருத்து ஆகும். (வள்ளுவம், ப.84)

    இன்மை நிலை

    உலகில் இருப்போரும் உள்ளனர் இல்லாதோடும் உள்ளனர். நம் முன்னோர்கள் காட்டுமிராண்டியாக வாழ்ந்தபோது தாய்வழிச் சமூகமாக வாழ்ந்தனர். அனைத்தும் அனைவருக்கும் என்னும் பொதுவுடைமைக் காலமாக இருந்தது. காலப்போக்கில் உணவைப் பங்கீட்டுப் பிரச்சனையால் தனியுடமையும் ஆணாதிக்கம் உருவாயிற்று. வளர்ந்து தொழிலாளி முதலாளி ஆகிய இருவருக்குமான கொள்கைப் போர் நடந்துகொண்டிருக்கின்றது. ஆனால் தனியுடைமை என்று வரலாற்றுக் காலந்தொட்டு நீண்டும் கொண்டுதான் இருக்கின்றது. தனிவுடைமை என்பது இல்லாதார்க்கும் இருப்பவருக்குமிடையே சுய நல அரசுகளின் உதவியுடன் இடைவெளியானது நீண்டுகொண்டே இருக்கும் இருப்போர் இல்லாதோரின் பிரிவுகளும்  பிரச்சினைகளும் நீடிக்கும் ஒற்றுமையில்லாது மன்னுயிர்க்கெல்லாம் தீமைதவிர எதுவும் மிஞ்சாது. இதுவே தனிவுடைமையின் கொடுஞ்செயலாகும். இத்தகைய கொள்கைகொண்ட நாடுகளில் அன்றும் ஒருவன் பொருள் ஈட்டுவதற்கு எந்த ஒரு வரையறை இல்லை. “கோடி தொகுத்தார்க்கும்” (377) என்றபடி ஈட்டியவையெல்லாம் தொகுத்துக் கோடற்கு வரையறை இல்லை. பண்டைக் காலத்தில் செல்வர்களுக்கென தனி வரி விதிப்புமில்லை. இறை எல்லார்க்கும் ஒப்பவே வகுக்கப்பட்டது. பெருஞ்செல்வந்தர்பால் நேரடிப் பொருள்கேட்பது கொடுங்கோன்மை என்று அறிஞராலும் எண்ணப்பட்டது.

    வோலொடு நின்றான் இடுவென்றது போலும்
    கோலொடு
    நின்றான் இரவு” (552)

    இன்மையின் இன்னாது உடைமை முறைசெய்யா
    மன்னவன்
    கோற் கீழ்ப்படின்” (558)

    போன்ற குறள் தனியுடைமை மக்களின் பற்று மனப்பான்மைக்கு அன்றும் இன்றும் சான்று என்கிறார்.  – (வள்ளுவம், ப. 104)

    சிலரிடம் மறைந்திருக்கும் பொருளைச் சமப்படுத்த வேண்டி பெருங்கொடையான ஒப்புரவு பண்பினை தனியதிகாரமாக வகுத்தனர்.

    ”ஒப்புரவின் நல்லபிற பெறல்” (213)  என்றும் ஈதல் நன்று என்றும் குறிப்பிட்டுள்ளார் என்பதைக் குறிப்பிடுகின்றார்.

    ஒப்புரவும் ஈகையும் தனியுடைமை நாட்டிற்குக் காப்புத்தூண்கள் ஆவன. தனியுடைமை நாடுகளில் பொதுவுடைமை வழிகளைச் சிறுகச்சிறுக கையாள்கின்றன. (வள்ளுவம், ப.106) என்று கூறுவதால் பொதுவுடைமை கொள்கைதான் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வாகும் என்பதை குறிப்பிடுகிறார்.

    வள்ளுவர் வறுமை நிலைமையைத் துய்த்தாரோ அறியேன் ஆயினும் வறியோர் துன்பத்தினை  நன்கு அறிந்தவர் என்பதற்கு, “இன்மையின் இன்மையே இன்னாதது” (1041) இன்மை என ஒரு பாவி (1042), அறம் சாரா நல்குரவு (1047) எனக் துடிப்புள்ளம் கொண்டு வறுமையின் நிலையைப் புலப்படுத்துகின்றார். – (வள்ளுவம், ப. 108)

    வறியோர் வேறு தாம் வேறு எனப் பிரித்து நிற்றார் அல்லர் என்பதற்கு,
    இன்றும் வருவது கொல்லோ நெருநலும்
    கொன்றது போதும் நிரப்பு (கு.1048) என்ற குறள்வழி மனத்துடிப்பை எடுத்துரைக்கினர்.

    இன்மை நிலையைத் துடைப்பது உடையார் கடன் பிறர் மேற்றாக வைத்து ஆசான் கூறிய அறநிலையாகும். ஒருவன் பசித்திருந்தால்,

    உறுபசியும் ஓவாப்  பிணியும் செறுபகையும்
    சேராது  
    இயல்வது  நாடு” (734) என்ற குறளின்வழிப் பசியின்மை, பிணியின்மை, பகையின்மை என்னும் முக்கூற்று உடையது. இம்மூன்று உடைய நாடே நம்  முன்னோர்கள் காணவிழைந்த உலகம் என்கிறார். –  (ப.117)

    பசியும் பிணியும் பகையும் நீங்கி
    வசியும்
    வளனும் சுரக்க” – (சிலம்பு) என்று இளங்கோ பசிபணியைப் பற்றி பாடியுள்ளார்.

    அறிவுப் பிறப்பு

    மக்களுள் அறிவுப் பிறப்பும் உண்டு அறிவிலாப் பிறப்பும் உண்டு என்று கூறுவது வள்ளுவ முரண்பாடாகும். ஒரு சாதிக்கே அறிவு, ஆண்மை, பண்பு, நாகரிகம் இருக்கும் என்பது குறுகிய மனம் அறிவில் எழுந்த ஆகாக் கொள்கையாகும்.

    அறிவுப்பிறப்பால் வாய்த்த நாம் பெற்ற உடம்பால் குறையுடை யோமாயினும் அவ்வுடற்குறை நம் வாழ்வில் இடையூறும் இல்லை. ஆனால், வாழ்க்கை இழந்தவர் எனக் கருதுவது மானுடப்பிறப்பை அவமதிப்பதாகும்.

    உள்ளது கொண்டு இல்லது நிரப்பிக் கொள்ளும் நினைப்பரிய வன்மை நம் அறிவின் இயல்பு என்பது வள்ளுவம்,

    வெள்ளத் தனைய இடும்பை அறிவுடையான்
    உள்ளத்தின்
    உள்ளக் கெடும்” (421)

    அறிவு அற்றம் காக்கும் கருவி (வள்ளுவம், ப.421)

    என வரும் குறள்களே சான்றாகும் என்கிறார் மூதறிஞர். (வள்ளுவம், ப.132)

    மக்கள் வாழ்விற்கு நிறையுடலை அரிய பெருந்துணை என்றோ குறையுடலைத் தடுப்பரிய இடையூறு என்றோ கூறுவது வள்ளுவம் அன்று. நல்வாழ்விற்கு அறிவாட்சியே அடிப்படை என்பதை,

    அறிவுடையார் எல்லாம் உடையார் அறிவிலார்
    என்னுடையரேனும்
    இலர்” (430) என்னும் இக்குறளே தனிச் சான்றாகும்.

    மக்கட்கு ஒழுக்கம் அறிவு, கல்வி, ஊக்கம், முயற்சி என்னும் பிரிவில்லா இயற்கை நலங்களே பிறழ் வாழ்வு நலங்கள் என்பது வள்ளுவத்தின் கருத்தாகும். எல்லாரும் அறிவுத்தன்மை உடையவர்களே அதனை ஆட்சிப்படுத்தினால் எல்லாரும் நலம் பெறுவர்.

    அரியன கற்று மனக்குற்றம் அற்றவர் என்று நாம் எண்ணிய பெரியோர் மாட்டும் அறிவின்மை காணப்படும் சிறிதும் கற்றறியான் கண்ணும் பெருநலம் பயக்கும் இந்நிலையை அறிந்தவர் வள்ளுவர்,

    செயற்கரிய செய்வார் பெரியார் சிறியர்
    செயற்கரிய
    செய்கலா தார்” (26)

    என்னும் குறளின்வழி பெரியவர் சிறியர் என்பன ஒருவர் சுட்டாது இலக்கண வகையில் தோன்றிய காரணப் பெயர்கள். பெரியவர் என்றோ, சிறியவர் என்றோ பிறப்பில் ஒரு பகுப்பு இல்லை என்பது வள்ளுவம். பெரியாராயினர் இழிந்த செயலைச் செய்தால் சிறியராவார். சிறியவராயினும் அரிய செயலைச் செய்தால் பெரியராகவார் எனக் குறிப்பிடுவதை உணர்த்துகின்றார். (வள்ளுவம், ப.145)

    முடிவுரை

    வள்ளுவரின் நெஞ்சமானது அவரின்  குறளோடு ஒன்றிணைந்தது செயல்வடிவமே. வள்ளுவரின் நெஞ்சமாக அமைந்திருக்கின்றது என்றுரைக்கிறார்.

    திருக்குறட்குப் பொதுமை நிலைக்களம் அல்ல மக்கள் மனமே நிலைக்களமாக அமைகின்றது. நிலைப்பன்மைக்கேற்ப அறப்பன்மை வகுப்பது திருக்குறளின் முறையாகும். அவரவர் வாழ்நிலைக்கேற்ப பொருத்திக் கற்பதே குறட்கல்வி நெறியாக அமைகிறது.

    பொருளை ஈட்டலும் வேண்டும் தூய்த்தலும் வேண்டும். அகத்தூய்மையும் பொருள் ஒழுக்கம் அகங்கை புறங்கை போன்றன என்கிறார்.

    அறத்தான் வருவதே இன்பம் என்றும் பசியை மாற்றும் ஈகையாரும் செய்ய வேண்டுவன என்றுக் குறிப்பிடுகின்றார்.

    முயற்சியே உயிர்நிலை, செயலுக்குவரும் அறங்களைக் கூறுவதே வள்ளுவம் எனவும் யாருக்கும் ஒல்லும் நெறிகாட்டுவதே வள்ளுவம் என்று கூறுகின்றார்.

    பொதுமைப்படுத்துதலாம் வறுமை உள்ளிட்ட அனைத்துப் பிரச்சனைகளுக்கும் தீர்வு.  மக்களுள் சிறியவர் பெரியவர் என்பதை உணர்த்தினாரில்லை; மாறாக நடத்தையினால் ஒருவரின் தன்மை மாறுகிறது என்பதை வள்ளுவம் உணர்த்துகிறது.

    வள்ளுவனிஸம் என்ற கொள்கை உருவாக்க எவ்வகையில் இவை வழிவகுக்கும் என்பதற்கான மேலாய்வுக்கு எடுத்துச் செல்ல இக்கட்டுரை பரிந்துரைக்கின்றது.

    ******

    கட்டுரையாளர்
    உதவிப் பேராசிரியர்,
    தமிழாய்வுத்துறை,
    அ.வ.அ.கல்லூரி (தன்.)
    மன்னன் பந்தல்,     மயிலாடுதுறை.

     

     

    Share
  • வ.சுப.மாணிக்கனாரின் வள்ளுவம் கூறும் விழுமியங்கள் – 1

    -முனைவர் சு.இரமேஷ்

    முன்னுரை

    வளர்ந்துவரும் தமிழ்ஆய்வுக் களத்திற்குத் தமிழ்ப் பேரொளியாக விளங்கியவர் மூதறிஞர் வ.சுப.மாணிக்கனார். தமிழ்மரபு சார்ந்த ஆய்வுகளில் புதுமையான நெறிகளை வளர்ந்து வரும் சமூகத்திற்குக் கொடையாக அளித்தவர். தமது ஆய்வு நூல்களில் தமிழின் தனித்துவத்தைப் புலப்படுத்திச் சிந்திக்கச் செய்தவர். மறைமலையின் ஆய்வுத் திறனும்  திரு.வி.க.வின் மொழிநடையும் ஒருங்கே பெற்ற தமிழ்வல்ல மூதறிஞர். இவர், நுண்மாண் நுழைப்புலத்துடன் எழுதிய ‘வள்ளுவம்’ என்னும் நூலானது புதிய சிந்தனைத் தெளிவினை அளிக்க வல்லதாகும். 1953–இல் பாரி நிலையமும், 1987–இல் மணிவாசகர் நூலகமும் வெளியிட்ட இந்நூலை தமிழ்மண் பதிப்பகம் 2017 –இல் வெளியிட்டுள்ளது.

    இந்நூலில் பன்னிரண்டு கட்டுரைள் உள்ளன. அவையாவும் தொடர் சொற்பொழிவுகளாக அமைந்துள்ளன. ஆனால் அவையாவும் முன்னும் பேசப்பட்டவை அல்ல. வள்ளுவரை முன்வைத்துப் பேசினாற்போல் எழுதிய கற்பனைச் சொற்பொழிவுகள். நம்மிடை நேரே நின்று உரையாற்றுவதாய் அமைந்துள்ளன. ஏனெனில் “உங்களுக்கும் எனக்கும் நெஞ்சக்கலப்பும் சுற்றப் பிணைப்பும் உண்டாக்கும்” என்று முகவுரையில் பதிவு செய்கின்றார். இலக்கியநெறி உலகில் இஃது ஓர் புதிய உத்தியாகவே கருதமுடிகிறது. வரையறுத்துக் கொண்டு முரணறுத்து எழுதிய முறைநூலாக வள்ளுவம் என்னும் நூல் திகழ்கின்றது. இந்நூலில் உள்ள 12 தலைப்புகளில் முதல் ஆறு கற்பனை சொற்பொழிவுகளான 1. வள்ளுவர் நெஞ்சம், 2. பலநிலையறம், 3. பொருள் நிலை, 4. பொருட் பயனிலை 5. இன்மை நிலை, 6. அறிவுப் பிறப்பு ஆகிய தலைப்புகளில் அமைந்த கற்பனைச் சொற்பொழிவுகளை மட்டும் இக்கட்டுரை ஆராய்கின்றது.

    வள்ளுவர் நெஞ்சம்

    வள்ளுவரின் நெஞ்சத்திற்கும் திருக்குறளுக்கும் தொடர்பு என்னவென்பதை இத்தலைப்பு ஆராய்கிறது. திருக்குறள் வள்ளுவனாரின் அறிவுக்குழவி மட்டுமல்லாது வள்ளுவரின் நெஞ்சோடு நம் நெஞ்சினைப் பிணைக்கும் எண்ணக் கயிறு என்று கருதுமிவர், வள்ளுவரின் நெஞ்சமானது நிலத்தில் இட்ட வித்தாகவும் நெஞ்சம் தந்த அறிவு விதை தோற்றிய மரமாகவும் குறள்கள் மரம் தாங்கிய விதைகளாகவும் இருக்கின்றன என்று கருதுகிறார். பற்பல எண்ணங்களைத் தோற்றுவிக்கும் ஆற்றல்பெற்ற அறிவின் ஊற்றுக்கண்ணாகத் திகழும் திருக்குளை “நவில்தோறும் நூல்நயம் போலும்” (783) என்னும் குறளின்வழி எடுத்துரைக்கின்றார். (வள்ளுவம், ப.8). சொல் ஒருவனின் உள்ளக் கருத்தினை தொடக்கூடியது. அறத்தை ஒளித்துக்காட்டும் பொய்த்திறமும் சொல்லிற்கு உண்டு என்பதை, “வினைவேறு சொல்வேறு பட்டார் தொடர்பு” (819), “எனைத்தொன்றும் சொல்லினால் தேறற்பாற்றன்று” (825) சொல் என்பது மக்களின் நெஞ்சூர்தியல்ல… கருத்தூர்தி என்றுக் கருதுகின்றார்.

    நூலாசிரியரின் சொல்வழி நெஞ்சம்காண அவாவ வேண்டும். நெஞ்சம் காண்பதன் பொருள் என்னவெனில் “சொல்லியான் கருத்தாழமும், உணர்ச்சி நுகர்ச்சிகளையும் சொல்லத்தூண்டிய சூழ்நிலையையும், அவன் எதிர்பார்க்கும் பயனையும் உயிராக் காண்பது, இக்காட்சிக்கு அவன் ஆண்ட சொற்களையும் சொன்னடையும் உடலாகக் கொள்வது என்பதோடு கல்வி, ஒழுக்கம், குடிமை, நாகரிகம் என்றினை வாழ்க்கை நிலைகளையும் காணவொல்லும் அறிவூற்று” என்பதற்கு,

    நட்டார்போல் நல்லவை சொல்லினும் ஒட்டார்சொல்
    ஒல்லை
    உணரப்படும்” –  (குறள்.826) என்ற குறளைச் சான்றாக்குகின்றார்.

    மன நோக்கு

    நோக்கு என்பது மேலோடான பார்வையன்று அழுந்திக் காண்பதாகும். “பிறன்மனை நோக்காத பேராண்மை” (148) இதில் ‘நோக்காத’ என்பதற்கு பிறருடைய மனைவியை மனத்தில் நினைத்தலே பிழை எனவும், கண்பார்வை பிழையன்று என்றும் குறிப்பிடுகின்றார். இக்குறிப்பறிவை “கூறாமை நோக்கி” (701), “கண்ணொடு கண்ணினை நோக்கு ஒக்கின்” (1100) என்னும் காதற்குறளையும் ஆராய்ந்தால் நோக்கு என்பது கண்பார்வையன்று அது மனப்பார்வை” எனப் பொருள்படும் என்கிறார். – (வள்ளுவம், ப.11)

    திருக்குறள் முழுவதும் ஓடிப் பரந்து அவரின் நெஞ்சம் நிற்கும். இதனை,  தனி நெஞ்சம் என்கிறார். “ஏனெனில் அந்நினைவு வள்ளுவர் ஒருவர் மாட்டே பிறந்ததால். தனி நெஞ்சம் என்பதாவது செயல் செயல் செயல் சொல்வது செயலுக்கு வரவேண்டும்” என்ற கருத்தை நெஞ்சிலே இருத்திக் கொண்டு குறளை எழுதியவர் வள்ளுவர். மனிதன் வாழ்வாங்கு வாழ்தல் என்பதற்கு திருக்குறகத்து மக்கட்பேறு, விருந்தோம்பல், சுற்றந்தழால், ஈகை, நல்குரவு, மருந்து என்று உலக அதிகாரங்களைக் காண்கிறோம். எனவேதான், திருக்குறளை வாழ்க்கை நூல், செயல் நூல், உலக நூல் என்று அழைப்பது பொருந்தும். (வள்ளுவம், ப.21)

    கயமை

    கயமை என்பது கீழ்மை, பொதுமை என்பதாகும். (கௌர தமிழ் அகராதி, ப. 225) ஒழுக்கம் கைவரப் பெறாதவனை இகழ்ந்துரைக்கக் கயமையெனும் அதிகாரமே வைத்துள்ளார். ஏனெனில் வள்ளுவர் நெஞ்சக்கொதிப்பின் வெளிப்பாடே கயமையதிகாரம் என்கிறார். “மக்களே போல்வர் கயவர்” (1071), “தேவர்அனையர் கயவர்” (1073), “அறைபறை அன்னர் கயவர்” (1076), “ஈர்ங்கை விதிரார் கயவர்” (1077) போன்ற குறட்பாக்களை எடுத்தியம்புகிறார். அறம் பொருட்பாக்களின் எல்லையதிகாரமாகிய கயமைத் தலைப்பு ஆசிரியரின் மனக்கொதிப்பிற்கு அறிகுறி கற்பதாகும் என்பதை எடுத்துக்காட்டுகிறார் நூலாசிரியர்.

    புகழ்சான்ற திருக்குறளைப் போற்றுகின்றோம் என்பதோடு புகழ்ந்தவை போற்றிச் செயல் வேண்டும் இகழ்ந்தார்க்கு எழுமையும் இல் (538) என்பது தனி வள்ளுவம். செய்யாது குறள் காட்டும் அச்சமுடிபாக இருக்கின்றது. எனவே, யார்க்கும் செயல் வேண்டும் என்பதுதான் வள்ளுவர் காட்டும் உயிர்நிலை என்பதை இச்சொற்பொழிவு விளக்குகின்றது.

    பலநிலையறம்

    பலநிலையறம் என்னும் தலைப்பானது ஆழ்ந்து விளக்குதற்கு உரியதாகும். வாய்வழி உணவு போலவும் மூக்கு வழி உயிர்போலவும் திருக்குறள் கல்விக்கு இன்றியமையா நேர்வழியாகும்.

    உலக மக்கள் ஈட்டல், காத்தல், துய்த்தல், ஈதல்,  இவறல் (ஈயாமை) என்றின்னோரன்ன பொருள் நிலைகளாலும், கற்கும் நோக்கம் நூல் ஆர்வம் முறைகொள் வன்மை, சுவை நுண்மை, ஆழம், அகலம் என்றின்னோரன்ன கல்வி நிலையாலும், இயற்கையறிவு, நூலறிவு, நுண்ணறிவு, புரட்சியறிவு, தொழிலறிவு, ஆக்க அறிவு, படிப்பறிவு, தன்னறிவு என்றின்னோரன்ன அறிவு நிலையாலும் ஒருத்தர் போல் ஒருத்தரிலர். பொருள், கல்வி, அறிவுண்மைகள் ஒரு பாற்கிடக்க, பொருளிண்மை, அறிவின்மை என்ற இன்மை நிலைகளிலுந் தாம் நம்முன் வேறுபாடு கணிக்கத் தரமோ. இனைய நிலைப்பன்மை வேறுபாடுடெல்லாம் நுணிகித் தெளிந்த ஓராசிரியர் வள்ளுவர் ஆவார் என்கிறார்.

    “அன்பும் அறமும் பசியும் துறந்து ஈட்டுவாரும், வஞ்சகத்தால் பொருள் செய்து மகிழ்வாரும் பழி மலைந்து ஆக்கம் பெறுவாரும், பிறர் செல்வம் வெஃகித் தம்முடைமை விடுவாரும், இரந்தே வாழப் பயில்வோரும் ஆக உலகம் பொருள் வகையால் பல நிலையாளரைக் கொண்டது. பொருளில்லார்க்கு இவ்வுலகம் இன்மையும் நிலையாச் செல்வம் நிலையிற்று என்னும் மக்கள் மயக்கமும் சிலர் அறவே ஈயாமையும், துய்யாமையும், சிலர் முற்றும் தாமே துய்த்துலும், சிலர் அனைத்தும் பிறர்க்கே வழங்கலும் எனவாங்கு வள்ளுவப் பேராசிரியர் பொருள் பற்றி மக்கள் பால்கண்ட நிலைகள் பலப்பல” என்று பதிவு செய்கிறார். (வள்ளுவம், ப.32)

    ஞானப்பேதைகள்

    “நுழைபுலம் இல்லான் எழில்நலம்” (407) என அழகுப்பேதையும் “மேற்பிறந்தாராயினும் கல்லாதார்” (409) எனச் செல்வப் பேதையும்
    “கல்லாதான் சொற்காமுறுதல்” (402) என வாய்ப் பேதையும் வள்ளுவர் கண்ட ஞானப்பேதைகள். “இணர் ஊழ்த்தும் நாறா மலரனையர்” (650) எனப் பயனில் புலவரையும், அங்கணத்துள் உக்க அமிழ்தற்றால் (720) என அவையறியாப் புலவரையும் “கற்றறிந்தும் நல்லாரவை அஞ்சுவார்” (729) என அச்சப்புலவரையும், “பலநல்ல கற்றக் கடைத்தும்” (823) என மாணாப் புலவரையும் “கல்லாத மேற்கொண்டொழுகல்” (845) எனப் பிறதுறை விரிக்கும் சிறிய புலவரையும் கண்டவர்.

    செல்வர்முன் வறியவர்போல ஏக்கற்றும் கற்பாரும் அங்ஙன் கற்க நாணிக் கல்லாதொழிவாரும், கல்வியே கண்ணெனப் பெற்றாரும், கண்ணெப் பெயரிய புண்ணுடையாரும், செவிக்குணவாகிய கேள்வி இல்லாத பொழுது பசியாற்றிக் கொள்ளும் செல்வ மக்களும், செவிச்சுவை சிறிதும் அறியா ச்சோற்று மக்களும் வள்ளுவக் காட்சிகள். அறிவுத் தொழுகை செய்வாரும், மக்கள் மனவேட்பக் கலந்து பழகுவாரும், அவையஞ்சா மாற்றம் விடுக்கும் நோக்கொடு நிரம்பிய நூல் பயில்வோரும், பிறரின்பங்கண்டு கல்வி மேன்மேலும் விழைவாரும், கசடறக் கற்று கற்றப்படி நிற்பாரும் எனவாங்கு குறள் முதல்வன் கல்வி பற்றி மக்கற்பால் கண்ட நிலைகள் பற்பல என்று தான் கண்டவற்றைக் குறிப்பிடுகிறார். (வள்ளுவம், ப.33)

    சாதி மதங்கடந்தது

    திருக்குறள் சாதி, மதம், நாடு முதலிய பொதுமைப் பிறப்பிற்கு நிலைக்களமில்லை என்பதை மூதறிஞர் புலப்படுத்துகின்றார். ஒரேகுடி, ஒரே சாதி, ஒரே நெறி, ஒரே மொழி, ஒரே நாடு என்று நினைப்பவருள்ளும், பிறசாதி, பிற சமயம், பிறமொழி என வேற்றுமைப்பட்டாருள்ளும். நாம் பகுத்தறியத் தகும் வள்ளுவர் நுனித்துக் கண்ட வள்ளுவம் என்னை “மனத்துக்கண் மாசிலன் ஆதல்” (134) என்பது அப்பெருமகனார் காட்டிய நெறி நாம் அறையும் புறப்பொதுமையன்று. தனி நெஞ்சத்தூய்மை.

    சாதி சமய எண்ணமின்றியே அவற்றை எண்ணுவதும் வேண்டாமலே, உடலறிஞன் ஆள்தோறும் கைந்நாடி பார்த்து மருந்தளித்து உடல் நலம் செய்யுமாப் போலே உள்ளத்தறிஞானாகிய வள்ளுவரும் ஆள்தோறும் மனநாடிப் பார்த்து நிலைக்கேற்ற அறங்கூறி அகத்தூய்மை செய்பவர்.

    வள்ளுவர் பேரறிஞர் நிலைகொண்ட உண்மை என்ன? சாதி சமய நாட்டுப்பூசலனையவெல்லாம் எரிமலைபோலும் உள்ளப் பூசலின் வெளிப்பாடு மூட்டிய நீர்க் கொதிப்பும் போலும் நெஞ்சக் கொதிப்பின் புறப்பாடு. “காலம்பார்த்து உள்வேர்ப்பர்” (487) என்றபடி மனவெதுப்பின் வெளிப்பாடு. உள்ளப் பெரும் பூசல் தன் வெளிப்பாட்டிற்கு மடைவாய்ப் போல குடி, சாதி, சமயம், மொழி, கட்சி, நாடு என வரூஉம் பிரிவுகளை வாயிலாகக் கொள்கிறது என்பதன்றி இப்பிரிவுகள் அடைபடுமேல் வேறுபல புதிய வாயில்களை உண்டாக்கிக் கொண்டு முன்னையினும் வேகமாய்ப் பூசல் விளைவிக்கும் என்பதன்றிப் பொதுமை பறையான் உள்ளப்பூசல் அவிந்துவிடாது காண் (வள்ளுவம், ப.41) என்று குறிப்பிடுகிறார். அதாவது வேற்றுமையைக் காணும் எண்ணம் எழுகின்றபோது எப்படியாது வெவ்வேறு வடிவங்களைப் பிரிவினைவாதிகள்  நவீனத் தீணடாமை வடிவங்கள் போலவும், நீட் என்னும் சமூக அநீதித் தேர்வுப் போலவும் உருவாக்கிக் கொண்டே இருப்பார்கள் என்று குறிப்பிடுகின்றார். ஆனால்  உலக மக்கள் யாவரும் மனத்தூய்மையுடன் வாழ்வதற்கு எழுதப்பட்டது குறள் என்பதை அனைவரும் மறக்கின்றோம்.

    “நோய்நாடி நோய் முதல்நாடி” (948) என்ற மருத்துவ முறையைப் பின்பற்றாமல், ஊர், நாடு, அரசு போன்றவைகளால் குழப்பம் ஏற்படுகின்றது. காப்புச் செலவு எல்லாம் மக்கள் பசி தீர்க்கவும், அறியாமை அகற்றவும், மாசொழிக்கவும் பயன்படுத்த வேண்டும்.  மக்கள் நலியப் போர்ச் செலவுப் பெருக்கம், பொதுமைக் குரலால் யாருக்குப் பயன் பிற நாட்டுடன் போர் புரிவதற்கு மக்களின் வரிபணத்தில் பல இலட்சம் கோடிக்கு அணுஆயுதங்களையும் போர்க்கருவிகளையும் வாங்கிக் குவிப்பதனால்?  மக்களின் பசிப் பிணி தீராது என்பதை உணர்த்துகின்றார்.

    கல்வி

    “கற்க கசடற கற்பவை” (391)

    “கற்றில னாயினும் கேட்க” (414)

    “எனைத்தானும் நல்லவை கேட்க” (416)

    “என்ஒருவன் சாந்துணையும் கல்லாதவாறு” (397)

    “கசடற வல்லதூஉம் ஐயந்தரும்” (845)

    எனவரும் கல்வி பற்றிய பல குறள்களும் மக்களின் பல்வேறு நிலைகள் நோக்கிப் பிறந்தன என்பது வெளிப்படை. நீ இழந்து விட்டனை. இனி உனக்கு முன்னேற்றமில்லை, இனிமாள்வதுதான் உன் முடிவு எனத் தள்ளிவிடும் சிறுமை வள்ளுவர் உணர்ச்சியில் இல்லை. நீ பெரிதும் உயர்ந்து விட்டாய், இனிப் பெற வேண்டும் என்று புகழ்ந்துபேசும் அழிக்கும் போக்கு அவரிடம் இல்லை. இழிந்தார்க்கும் உயர்ந்தார்க்கும் எந்நிலையிலும் நல்வாழ்வு உண்டு என்னும் அழிவில் கொள்கையுடைவர் என்பதை வள்ளுவம் கொண்டுள்ளது என கூறுப்பிடுகிறார். – (வள்ளுவம், ப.50)

    பொருள் நிலை

    நம்மைப் பொருள் உடைமைக் காலத்திலும் இல்லாமைக் காலத்திலும் எவ்வாறு வள்ளுவர் வழி நடத்துகிறார் என்பதைக் கூறும்விதமாகப் பொருள் நிலைகுறித்த சொற்பொழிவு அமைகிறது.

    திருக்குறள் சந்தை

    திருவள்ளுவரை மூதறிஞர், வியாபாரி, வணிகர், மருத்துவர், உழவர் என்று குறிப்பிடுகிறார். பணமிருந்தாலும் சில சரக்குகள் விற்றுத் தீர்ந்துவிடும்; பொருள் கிடைக்காது. ஆனால், திருக்குறள் இக்குறைகள் அற்ற பெரும்சந்தை. வள்ளுவர் வணிகர் மட்டுமல்ல; மருந்தும்தானே செய்து மருத்துவமும் பார்க்கின்ற தமிழ் மருத்துவன் போல், குறளும் தானே விளைவித்துக் கொடுப்பதுவும் தானே கொடுக்கும் உழவர் எனக் குறிப்பிடுகின்றார். ஒருவன் எத்துக்கொடுக்க ஒருவன் வாங்கும் விற்பனைப் பண்டம் போல அல்லாமல் குடங்கொண்டு முகக்கும் குளத்து நீர் போலவும் தாமேகிடைப்பது குறட்பண்டம் என்றுரைக்கின்றார் (வள்ளுவம், ப.57).

    பொருளின் ஆற்றல்

    பொருள் செயல்வகை, நன்றியில் செல்வம், நல்குரவு, ஒப்புரவறிதல், ஈகை, ஊழ், ஊக்கமுடைமை, ஆள்வினையுடைமை என்ற அதிகாரங்களில் பொருட் குறள்கள் பரந்து கிடக்கின்றன. பொருளின் ஆற்றலை முழுதும் உணர்ந்த வள்ளுவர் அது நன்மை தீமைக்கும் கருவியாதலை எக்காலத்தும் மறந்தவரல்லர். இன்றியமையாப் பொருளை ஈட்டுவதற்கும் செலவிடுதலுக்கும் மக்கள் உறும் பல மாசுக்களைக் கண்ட வள்ளுவர்.

    “பொருளில்லது  இல்லை பொருள்”  (751) என்று சிறப்பித்தவர்

    பொருட்செல்வம் பூரியார் கண்ணும்உள”(241) என இழிந்துரைத்தார்.

    பொருள் என்பது ஓர் உலகக் கருவி அது குணம் பெருக்கவும் குறை நிரப்பவும் பயன்படவேண்டும். அது பண்டமாற்றும் பொதுக்கருவி என்ற தெளிவு வேண்டும். புறப்பொருளையெல்லாம் நல்லதற்கு தீயதற்கும் பயன்படுத்துதல் ஆளும் மனிதனின் நல்லதீய மனதைச் சார்ந்தது. குணமும் குற்றமும் பொருள் மேல் சார்ந்தது அல்ல. அதனை, ஆள்வோனைச் சார்ந்துள்ளது என்பதைப் புலப்படுத்துகின்றார். அதே நேரத்தில் பொருளாற்றலுக்கு ஓர் எல்லையுண்டு. பொருளிலும் சிறந்த பல பண்புகள் இன்றியமையாதன. அப்பண்புகள் இருப்பின் பொருள்நலஞ் செய்யும் இல்லையெனில் உடையானை கீழறுக்கும் என்பவற்றுக்கு,

    வகைமாண்ட வாழ்க்கையும் வான்பொருளும் என்னாம்
    தகைமாண்ட
    தக்கார் செறின்” (897) என்ற குறளை அளவீடாகக் காட்டுகின்றார். பொருளின் பண்பற்ற நிலையைக் குறிப்பிடுகையில்,

    நல்லவை எல்லாம் தீயவாம் தீயவும்
    நல்லவாம்  
    செல்வஞ் செயற்கு” (375) என்ற குறளை மேற்கோள் காட்டுகின்றார்.

    “செல்வத்தின் இயல்பு நிலையாமை என்பதால் அதனை நிறுத்தப் பாடுபடுதல் பேதைமைக் கருத்து என்று பொருளீட்டுதல் குற்றம் என்றோ வேண்டாம் என்றோ கருத்தாகாது. உடல் நிலையாது என்றதனால் மக்களைப் பெறுதல் இழிவு இல்லறம் இழிவு என்றும் கொள்ளப்படாது. பழம் அழுகிபோகும், பலகாரம் ஊசிப்போகும் எனத் தெரிவிப்பது தவறல்ல. அழுகுவதன் முன்மை என்பதே இயல்பு என்பதற்கு “அதுபெற்றால் அற்குப ஆங்கே செயல்” (333) என்று அதன் பயனனைக் குறிப்பிடுகின்றார்.” (வள்ளுவம், பக்.67-68)

    செல்வத்தை எந்த நோக்கத்துக்கு ஈட்டுகின்றனரோ, எதன்பற்றுக் காரணமாக சேர்க்கின்றனரோ அப்பற்று வழியாகவேத் தூய்மையூட்டல் செய்வதை,

    செப்பம் உடையவன் ஆக்கம் சிதைவின்றி
    எச்சத்திற்கு
    ஏமாப்பு உடைத்து” (112)

    என்ற குறளை எடுத்துக்காட்டி நும்பொருள் நும்மக்களைச் சேரவேண்டுமானால் நடுவுநிலைமையோடு பொருளை ஈட்டுமின் என்ற நெறித்தூய்மை விதிப்பர் (வள்ளுவம், ப.74) என்று எடுத்துரைக்கின்றார்.

    [தொடரும்]

    ******

    கட்டுரையாளர்
    உதவிப் பேராசிரியர்,
    தமிழாய்வுத்துறை,
    அ.வ.அ.கல்லூரி (தன்.)
    மன்னன் பந்தல்,  மயிலாடுதுறை.

     

     

    Share
  • சிலப்பதிகாரத்தில் சமூக அவலம்

    -முனைவர் சு.இரமேஷ்

    அறிமுகம்

    பன்முகத்தன்மை கொண்ட நவீனத்துவத்துடன் விளங்கும் காப்பியம் சிலப்பதிகாரம் ஆகும். பல்வேறுபட்ட குடிமாந்தர்களின் வாழ்க்கை முறைமைகளைப் பிரதிபலிப்பது மட்டுமல்லாது பண்பாட்டுக்கூறுகளின் வடிவங்களையும் தன்னகத்தே பொதித்துள்ள கருவூலமாகத் திகழ்கிறது. அத்தகைய காப்பியத்தை எழுதிய இளங்கோ அரச மரபில் வந்தவர் என்பதோடு துறவு மேற்கொண்டவர் என்பதால் குறிப்பிடத்தக்க அம்சத்தை இக்காப்பியம் பெற்றிருக்கிறது. அன்றைய நிலையிலான அரசியல், பொருளாதாரம், சமூகம் ஆகியவற்றின் நிலையிலிருந்து உணர்த்தி நீதி, அறம், ஊழ்வினை, துறவு போன்றவற்றை போதிக்கின்ற அதேநேரத்தில்  சமூக அநீதி, கொடுமைகளும் நிகழ்ந்தேறியிருப்பது பதிவாகியிருப்பதை  இக்கட்டுரை ஆராய்கிறது. 

    பொன்தொழிலாளர்கள் படுகொலை

    கோவலன் கொலைசெய்யப்பட்ட நாளிலிருந்து பாண்டிய நாட்டில் மழை வளம்குன்றி பூமி வறண்டு பஞ்சம் பசி தலைதூக்கியது. வெக்கை நோய்களும் பரவின. இவற்றைக் கண்ட கொற்கையிலிருந்த வெற்றிவேற்செழியன் பாண்டிய மன்னனானதும் நாட்டின் இந்த நிலைமைக்குக் காரணம் கண்ணகியின் கடுங்கோபம்தான் எனக்கருதி ஆயிரம் பொற்கொல்லர்களை பலியிட்டுப் பூசை செய்தான். அதன்பிறகு நல்லமழை பெய்து நோய்களும் நீங்கின. மக்கள் நலம் பெற்றனர் என்பதை, இளங்கோ,

    ”அன்று தொட்டு பாண்டிய நாடு மழைவறம்
    கூர்ந்து வறுமை எய்தி, வெப்பு நோயும்|குருவும் தொடர, கொற்கையில் இருந்த
    வெற்றி வேற் செழியன், நங்கைக்கு
    பொற்கொல்லர் ஆயிரவரைக் கொன்று,
    நாடு மலிய மழை பெய்து நோயும் துன்பமும்
    நீங்கியது”             (உரைபெறு கட்டுரை)

    என்று குறிப்பிடுகின்றார். எவ்வித விசாரணையும் இல்லாமல் கோவலன் கொலை செய்யப்பட்ட நாளில் இருந்து பாண்டிய நாடு வளம் பெறாமைக்குக் காரணம் கண்ணகியின் கடுங்கோபமேயாகும் என்று இதற்குப் பரிகாரமாக பொன்வேலை செய்யும் ஆயிரம் தொழிலாளர்களை (பொற்கொல்லர்களை) பலி என்ற பெயரில் படுகொலை செய்தது இதயத்தை உலுக்குகின்ற கொடுமையாக இருக்கிறது. ஒரு மன்னனுக்கு இருக்கக்கூடாத பெரும் மூடநம்பிக்கையுடன் தான் தோன்றித்தனமாக செயல்படும் ஹிட்லரிசத்தின் முன்மாதிரியாகவும் பார்க்கமுடிகிறது. இத்தகைய கொடுமை இவனோடு முடியாமல் பரவலாக்கல் என்னும் நோக்கத்தில் கொங்குநாட்டின் இளவரசர் இளங்கோசர் என்பானும் இலங்கைத் தீவின் கயவாகு மன்னனும் பலியிட்டு பூசைகள் செய்திருக்கின்றனர் என்பதை உரைபெறு கட்டுரையின் வாயிலாக அறிந்துகொள்ள முடிகிறது. நீதிகேட்டுப் போராடிய கண்ணகி, தெய்வமாகிப் உயிர்பலி கேட்பதாகக் கருதி  பலியிட்டிருப்பது வேத ஆகம விதிப்படி பார்ப்பனிய முறையில் நிகழ்த்தப்பட்டிருக்கிறது என்பது திண்ணமாகிறது. மனித பலியிடுதலை ‘நரபலி’ என்பர். இவ்வழக்கமானது தொன்மைக்காலத்திலிருந்தே வருகிறது. பலியிடுதல் பற்றிய சடங்கு முறையை யசூர் வேதத்தில் (பலிச்சடங்கு வேதம்) கூறப்படுகிறது. “யசூர் வேதத்தில் புனித அதிகாரத்தின் (பிராமணர்கள்) ஆயுதம் பலிகள் ஆகும்” என்பதை எடுத்துரைக்கிறார் எஸ்.ஜி.சர்தேசாய் (2012:184).   “கடவுளின் அருளைப்பெருவதுதான் சடங்குகளின் நோக்கம்” என்பதை எடுத்துரைக்கிறார் வி.புரோதோவ் (1988:60). பலி அக்னியில் பிறந்தது தெய்வ சோதியில் ஒன்றான அக்னி பலியிடுகிறவனின் பாவத்தை பட்சித்துப் போகும் அக்னியின் புண்ணியத்தால் பரலோகத்தில் சுடராவான்” என்று சதபத பிராமணம் குறிப்பிடுவதாக எடுத்துரைக்கிறார் தே.ஞானசேகரன்(2000:93). ஆகவே பலியிடுதல் தமிழ்ப்பண்பாட்டின் அடையாளமாகக் கருதமுடியாது. 

    மாதவிக்குக் கோவலன் இழைத்த கொடுமை

    மாதவி, முறைப்படியான ஆடல்கலையை நிகழ்த்தியமைக்குச் சோழ மன்னன் பச்சை மாலையையும் தலைக்கோல் பட்டமும் அதனோடு ஆயிரத்தெட்டு பொன் கழஞ்சுமாலையும் பரிசாகத் தந்தான். அம்மாலையை விலைகொடுத்து வாங்குபவர் மாதவிக்கு ஏற்ற கணவனாகலாம் என நகரின் இளைஞர்கள் கூடுமிடத்தில் ஒரு கூனிப்பெண் கூறியதைக்கேட்ட கோவலன் அதற்குண்டான விலையைக் கொடுத்து கூனியின் பின்னால் மாதவியுடன் சென்றுவிட்டான் என்பதை, 

    மாமலர் நெடுங்கண் மாதவி மாலை
    கோவலன் வாங்கிக் கூனி தன்னோடு
    மணமனை புக்கு மாதவி தன்னோடு   (அரங்கேற்று காதை 170-172) 

    என்று இளங்கோ குறிப்பிடுகிறார். ஆயிரத்தெட்டு பொன்கழஞ்சு மாலையை விலை கொடுத்து வாங்கும் பணபலமும் மனவலிமையும் பெற்றிருந்த கோவலன், அன்பு மிக்க குற்றமற்ற கண்ணகியை மணந்து சிலகாலம் மட்டுமே ஆகியிருந்தது. சந்தையில் ஒருபொருளை ஏலம் எடுப்பதுபோல் ஏதுமறியாத ஆடல் நங்கையாகிய மாதவியை போகப்பொருளாக எண்ணித் தேவைக்கேற்பப் பயன்படுத்திவிட்டுத் தூக்கியெறிந்துவிடலாம் என்ற யதேச்சதிகார எண்ணத்திலேயே கோவலன் மாதவியை விலை கொடுத்து வாங்கியிருக்கலாமென்று கருதமுடிகிறது. மேலும், மாதவி கணிகையர் குலம் என்பதை அறிந்து கோவலன் விலைமாதர் நோக்கில் இதை செய்திருக்கக்கூடும் என்பது புலனாகிறது.

    மாதவி ஒரு பெண்குழந்தையை பெற்றெடுத்தப் பிறகு தாயையும் பிள்ளையையும் பரிதவிக்க விட்டுவிட்டு கண்ணகியிடம், “வஞ்சகமும் பொய்யும் நிறைந்த ஒருத்தியோடு உறவாடி நற்குடியில் பிறந்த பெரியோர்கள் உருவாக்கி வைத்த செல்வத்தைத் தொலைத்து விட்டு நிற்கிறேன்” என்பதை

    சலம் புணர் கொள்கைச் சலதியொடு ஆடி
    குலம் தருவான் பொருள் குன்றம் தொலைந்த
    இலம்பாடு நாணுத் தரும் எனக்கு என்ன…  (கனாத்திறம் உரைத்த காதை- 69-71)

    என்று கோவலன் கூறுகிறான். இது தன் தவற்றை, தனது ஒழுக்கமின்மையை,  தன்னால் உண்டான குடும்பச்சிதைவை, மாதவியை விலைகொடுத்தேனும் வாங்கி நுகர்ந்து மீண்டும் கண்ணகியிடம் வந்துவிடலாம் என்ற இழிவான போக்கை மறைப்பதற்கான முயற்சியில் கண்ணகியைச் சாந்தப்படுத்திட ‘வஞ்சகமும் பொய்யும் நிறைந்த ஒருத்தியோடு’ என்று மாதவியைப் பழித்துரைக்கும் அவனின் கூற்று  மாதவிக்கு இழைத்த அநீதியைக்காட்டுகிறது.

    பிறன்மனை நோக்குகின்றவனைக் கொல்லும் சதுக்கப்பூதம் தன்மனைக்கு துரோகம் இழைக்கும் நயவஞ்சகரைத் தண்டிக்காமல் விட்டிருப்பது அரசர், அந்தணர், அடுத்து வணிகரையும் பூதம் தண்டிக்காமல் இருந்திருப்பதை இது காட்டுகிறது. மாதவியை தவறானவள் என்று கூறிய கோவலனின் நாக்கு மாதவியின் கடிதத்தைக் கோசிகமாணியிடம் வாங்கிப் படித்த பின்பு,

    தன்தீது இலள் எனத் தளர்ச்சி நீங்கி
    என்தீது என்றே எய்தியது உணர்ந்து ஆங்கு (புறஞ்சேரியிருத்த காதை 94-95)

    என்ற பாடல் வரிகள் மூலம் ‘மாதவி குற்றமற்றவள் எல்லாம் என் தவறே’ என்று கோவலன் மனம் பிறழ்ந்து பேசியது மாதவிக்கு இழைத்த கொடுமை மட்டுமல்லாமல் இழந்த செல்வத்தைக் கண்ணகியின் வாயிலாகப் பெற்றுவிடலாம் என்ற எண்ணத்துடன் தன்வழிக்கு நடத்த முற்பட்டிருக்கிறான் என்பது தெளிவாகிறது. 

    ஊழ் எனும் பெயரில் கொடுமை    

    கண்ணகியின் கதை முழுதும் சாத்தனார் கூறக் கேட்ட இளங்கோவடிகள், ஊழ்வினையை முன்வைத்தே எழுதப்படுவதை,

    அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாவதும்
    உரைசால் பத்தினிக்கு உயர்ந்தோர் ஏத்தலும்
    ஊழ்வினை உருத்துவந்து ஊட்டும் என்பதுஉம்
    சூழ்வினைச் சிலம்பு காரணமாகச்
    சிலப்பதிகாரம் என்னும் பெயரால்
    நாட்டுதும் யாமோர் பாட்டுடைச் செய்யுள் (பதிகம் 55-60)  

    எனக் குறிப்பிடுகிறார். சாத்தனார் கூறிய கதையை வைத்துக்கொண்டு மனித எதார்த்த அல்லது திட்டமிட்டு நடத்திய தவறுகளுக்கெல்லாம் ஊழ்தான் என்பதை அவ்வப்போது நினைவுப்படுத்திக் கொண்டிருக்கிறார். புகார் நகரத்தின் வணிகனான கோவலன் கண்ணகியைப் பிரிந்து நாட்டிய நங்கை மாதவியுடன் சில காலம் வாழ்ந்து துன்பப்பட்டுக் கண்ணகியுடன் மதுரைக்குச் சென்று கொலையுண்டதும் அதனால் கண்ணகி மதுரையை அழித்தது மட்டுமல்லாமல் பாண்டிய மன்னனும் கோப்பெருந்தேவியும் உயிர்நீத்தனர். இவை அனைத்திற்கும் அவரவர் செய்த ‘ஊழ்வினையைக்’ காரணம் காட்டுகிறார். 

    கனாத்திறம் உரைத்த காதையில், தேவந்தி தன் கணவன் பாசண்டச்சாத்தனால்  கைவிடப்பட்ட நிலையில் கணவனிடம் மீண்டும்  சேர்வதற்குக் கோயில் கோயிலாக வேண்டி அலைகிறாள். அந்த வேளையில் கண்ணகியைச் சந்தித்து “நீ உன் கணவனால் வெறுத்து ஒதுக்கப்பட்டவள் அல்ல, பின் ஏன் பிரிய நேரிட்டது என்றால், முற்பிறப்பில் உன் கணவனுக்காக செய்ய வேண்டிய நோன்பினை செய்யத் தவறிவிட்டாய். அது நீங்கிடவேண்டுமானால் பூம்புகார் நகரிலே இருக்கும் சோம குண்டம், சூரிய குண்டம் என்னும் இரு பொய்கையில் மூழ்கிப் பின்பு மன்மதக்கடவுளை வணங்கினால் இம்மையிலும் மறுமையிலும் உன் கணவனைப் பிரியாமல் வாழலாம்” என்று கூறினாள் என்பதைக் கூறுகிறார். முற்பிறப்பில் கண்ணகி நோன்பு மேற்கொள்ளவில்லை என்பதால் இப்பிறவியில் கணவனைப் பிரிய நேர்ந்தது என்னும் கருத்தானது நோன்பு என்னும் பெயரில் குடும்பம், வீடு என்ற நிலையில் பெண்களை மரபு மீறாமல் புற உலகைப்பற்றி அறியச்செய்யாமல் அடக்குமுறை ஏவப்பட்டிருக்கிறது என்பது புலனாகிறது. 

    மதிமயக்கத்தில் கோப்பெருந்தேவியின் பின்னால் ஓடிய மன்னன் பொற்கொல்லனின் பொய்க்குற்றத்தை ஆராயாமல் போகிற போக்கில்  ‘கொன்று வருக’ என்று கூறியது முன்செய்த தீவினை பயன்முற்றி மூளப்போகிற நேரம் வந்தது என்பதை, 

    வினைவிளை காலம் ஆதலின் யாவதும்
    சினை அலர் வேம்பன் தேரான் ஆகி
    ஊர் காப்பாளரைக் கூவி ஈங்குஎன
    தாழ் பூங்கோதை தன்கால் சிலம்பு
    கன்றிய கள்வன் கையது ஆகின்
    கொன்று அச்சிலம்பு கொணர்க ஈங்குஎன (கொலைக்களக் காதை 148-151)

    இளங்கோ கூறுகிறார்.

    கோவலன் வெட்டுண்டு கிடக்கும் பொழுது அநாதையாகிய கண்ணகி அழுது புரண்டு இத்தகைய பெரும் துன்பத்தை உண்டாக்கிய அரசன் இவ்வாறு செய்திட காரணம் தெரியாமல் தவிக்கும் எனக்கு நான் செய்த தீவினைதான் என்ன? என்பதை யாராவது சொல்ல மாட்டார்களா? என்று அழுது புலம்புவதை,

    மன்னுறு துயர்செய்த மறவினை அறியாதேற்கு
    என்னுறு வினைகாண் ஆ! இதுஎன உரையாரோ
    பார்மிகு பழிதூற்ற பாண்டியன் தவறிழைப்ப
    ஈர்வது ஓர்வினை காண் ஆ! இதுயென உரையாரோ
    கண்பொழி புனல்சோரும் கடுவினை உடையேன்முன் (ஊர்சூழ்வரி 41-47)

    எனக் குறிப்பிடுகிறார்.

    கட்டுரைக்காதையில் (155-170) கண்ணகி முன்பாக தோன்றிய மதுராபதித் தெய்வம் பாண்டியனும் கோவலனும் தவறு செய்யாதவர்கள். ஆனாலும், முன்செய்த தீவினை காரணமாக பழி ஒன்று உண்டு கேள் என்று கூறலானது. “சங்கமன் என்னும் வணிகன் சிங்கபுரத்துக் கடை வீதியில் தான் கொண்டு வந்திருந்த அணிமணிகளை விற்றுக்கொண்டிருந்த போது அப்பிறப்பில் பரதன் என்னும் பெயருடன் இருந்த உன் கணவன் கோவலன் அவனை அரசனிடம் கொண்டு சென்று இவன் பகை நாட்டு ஒற்றன் எனக் கூறி கொலை செய்தான். கணவனை கொன்ற செய்தியைக் கேள்வியுற்ற நீலி பதறித்துடித்து வீதியில் அழுதுபுரண்டு இது அரச நீதியோ எனக்கேட்டு வேதனையுடன் ஒரு மலை மீது ஏறி நின்று உயிர் துறக்கும்முன் எனக்கு இத்தகைய நிலைமையைச் செய்தவர்கள் யாரானாலும் நான் அடைந்த இத்துன்பத்தை அடைந்து மடிவார்கள்” எனக்கூறி உயிரை மாய்த்துக்கொண்டாள். இதுவரைப் பட்ட துன்பத்திற்கெல்லாம் காரணம் இதுவே. நான் சொல்ல வந்த உண்மைப்பொருளும் இதுவே  என்று கூறியதாக இளங்கோவடிகள் குறிப்பிடுகிறார்.

    இவ்வாறு நடப்பதற்கெல்லாம் காரணம் கோவலன் மற்றும் பாண்டியமன்னன்  செய்த தீவினைதான் எனக்கூறும் இளங்கோ, பாண்டிமா தேவியின் இறப்பு, கோவலனின் தந்தை, கண்ணகியின் தந்தை ஆகிய இருவரும் துறவு கொண்டது, கோவலன் தாயும் கண்ணகியின் தாயும் இறந்து போனது, மாதரி தீயிட்டுத் தற்கொலை செய்து கொண்டது, வழித்துணையாக வந்த கவுந்தியடிகள் நோன்பிருந்து இறந்தது, மாதவியும் மணிமேகலையும் துறவு கொண்டது, கோயிலில் ஆயிரம் பொற்கொல்லத் தொழிலாளிகள்  பலியானது இவைகளுக்கெல்லாம் என்ன முன்வினை காரணமாக இருக்கிறது என்று கூறவில்லை என்பது நோக்கத்தக்கது. 

    திருட்டு வழக்கில் மன்னன் இழைத்த அநீதி 

    நாடக நங்கையர் ஆடிய ஆட்டத்திலும் பாடிய பாட்டினிலும் தன்னை மறந்து லயித்திருந்த பாண்டிய மன்னனைக் கண்ட கோப்பெருந்தேவி காணப்பொறுக்காதவளாகி மன்னனுடன் ஊடல் கொண்டு அதை வெளிக்காட்டாமல் தனக்குத் தலைவலி வந்ததென்று பொய் சொல்லி அரங்கை விட்டு வெளியேறி அந்தப்புரம் நோக்கி சென்றாள். இதையறிந்த மன்னனும் சமாதானம் செய்ய அந்தப்புரம் நோக்கி விரைந்தான். அந்த நேரத்தில் மன்னரின் காலைப்பிடித்து வணங்கி அரசியின் காற்சிலம்பைத் திருடிய கள்வன் என்னுடைய வீட்டருகில் இருக்கிறான் என்று பொற்கொல்லன் கூறியதைக்கேட்ட மன்னன்,

    தாழ் பூங்கோதை தன்கால் சிலம்பு
    கன்றிய கள்வன் கையது ஆகின்
    கொன்று அச்சிலம்பு கொணர்க ஈங்கு (கொலைக்களக் காதை 151-153) 

    ‘கள்வனைக் கொன்று சிலம்பைக் கொண்டுவா’ என்று உத்தரவிட்டான். ஆனால், இவ்வாறு கூறும் பொற்கொல்லனின் பேச்சைக்கேட்ட மன்னன் குற்றச்சாட்டின் உண்மைத் தன்மையை ஆராயாமலும்  குற்றவாளியிடம் விசாரணை நடத்தாமலும்  கொலை செய்ய ஆணையிட்டது அரசனென்ற முறையில் நீதி தவறியிருப்பதைக் காட்டுகிறது. திருவள்ளுவர் செங்கோன்மை அதிகாரத்தில்,

    ஓர்ந்துகண் ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும்
    தேர்ந்துசெய் வஃதே முறை. (குறள்.541)

    என்றவழி, தன் குடிமக்கள் ஏதேனும் குற்றம் இழைத்தால் குற்றத்தின் தன்மையை ஆராய்ந்து ஒரு பக்கம் சாராது நடுவுநிலைமையுடன் உரிய தண்டனை வழங்குவதே முறையாகும் என்று கூறுகிறார்.

    கட்டுரைக்காதையில் கணவனை இழந்த நிலையில் கோபமும் ஆவேசமும் கொண்டிருந்த கண்ணகியின் முன்பாக மதுராபதித் தெய்வம் தோன்றி பாண்டிய மன்னன் குற்றமற்றவன் என்பதற்குச் சான்றாக ஒரு கதை கூறியது. “வார்த்திகன் மகன் தட்சிணாமூர்த்தி என்னும் அந்தணச்சிறுவன் பராசரனிடம் அணிமணிகளைப் பரிசாகப் பெற்று வருகிறான். அணிமணிகளோடு அவன் இருப்பதைக் கண்ட காவலர்கள், பாண்டிய மன்னனின் ஆபரணங்களை வார்த்திகன் திருடிவிட்டதாகக்கூறி அவனைக் கொடுஞ்சிறையில் அடைத்தனர். இதைக்கேள்வியுற்ற அவனது மனைவி கார்த்திகை அழுதுபுரண்டு வீதியில் புலம்பி அழுதாள். இந்தக்கொடுமையை தாங்காமல் துர்க்கை, ஐயைக்கோயில்களின் கதவுகள் தாமாக மூடிக்கொண்டன. இதைக்கேள்வியுற்ற பாண்டிய மன்னன் தீர விசாரித்ததில் வார்த்திகன் மீது தவறு இல்லாததை உணர்ந்து, 

    நீர்த்தன்று இது என நெடுமொழி கூறி
    அறியா மாக்களின் முறை நிலைத் திரிந்தவென்
    இறைமுறை பிழைத்தது  பொறுத்தல் நும்கடன் என  (115-117) 

    என்று கூறினான். ஆராயும் அறிவற்ற காவல் மக்களால் என்னுடைய அரச நீதி கெட்டுவிட்டது. என் தவறு பொறுத்தருள வேண்டும் தாயே! என்று கூறி நீர்வளம் மிக்க திருத்தங்கால் என்னும் ஊரையும் செல்வம் கொழிக்கும் வயலூரையும் பரிசாகத் தந்ததோடு வேந்தனானவன் நிலத்தில் விழுந்து வணங்குதல் என்ற மரபு இல்லை என்றாலும் வார்த்திகன் முன்பாக வீழ்ந்து வணங்கினான் என்ற கதையை கண்ணகியிடம் சொன்னது. ஆனாலும், திருட்டு வழக்கில் கோவலனுக்கு அநீதியும் வார்த்திகனுக்கு சன்மானமும் கொடுக்கப்பட்டிருப்பது அரச அநீதியாகும். கோவலன் வணிகன் என்பதாலும் வார்த்திகன் அந்தணன் என்பதாலும் அரச நீதி மாறுபடுவதைச் சிலம்பில் காணமுடிகிறது. 

    பூதங்கள் இழைத்த அநீதி 

    இந்திரவிழவூரெடுத்த காதையில் பூம்புகார் நகரின் சிறப்பைப்பற்றிக் குறிப்பிடுகையில் பொதுமக்கள் தவறு செய்கின்றபோது குறிப்பாகத் தவநெறியிலிருந்து தவறு செய்கின்றவர்களையும் மறைவாகத் தவறுசெய்கின்ற இழிந்த குணமுடைய பெண்களும் மன்னருக்கு துரோகம் இழைக்கும் அமைச்சர்களும் பொய்சாட்சி சொல்பவர்களும் புறங்கூறுபவர்களும், பிறன்மனை நோக்குபவர்களும் என் பாசக்கயிறுக்கு பலியாவார்கள் என்று நான்கு காத தூரம் கேட்கும்படி கொடிய குரலெழுப்பி கூவும். தவறு செய்பவர்களை அடித்துக்கொன்று தின்னும் சதுக்கப்பூதம் பூம்புகார் நகரில் இருந்தது. ஆனால், அரசன் செங்கோல் தவறினாலும் வழக்குரை மன்றத்தில் தீர்ப்புரைக்கும் நீதிபதி நடுவுநிலை மாறி ஒருபக்கமாக தீர்ப்புக்கூறினாலும் ஆங்கே தவறு நடந்ததை வாய்பேசாமல் அழுது வடிக்கும், கண்ணீர்க்குறிப்பால் உணர்த்தும் பாவைபூதம் மன்றமும் இருந்தது. பொதுமக்கள் தவறு இழைத்தால் சதுக்கப்பூதம் கொன்று தின்னும். ஆனால், மன்னனோ நீதிபதிகளோ தவறு செய்தால் பாவை பூதம் எதிர்த்துப்பேசாமல் தண்டிக்காமல் அழுதுபுலம்புவது என்பது பொதுமக்களுக்கு ஒரு நீதியும், அரசர், அந்தணர் போன்றோருக்கு மற்றொரு நீதியும் பூதங்களின் வடிவில்  வழங்கப்பட்டிருப்பது சிலம்பில் பதிவாகியிருக்கிறது. 

    முடிவு 

    *     பொய் சொன்ன குற்றத்திற்கு பொற்கொல்லர்களுக்கு மரண தண்டனை ஆனால் கொலை நிகழ்த்திய காவலர்கள் தண்டிக்கப்படவில்லை ஏனெனில் அதிகார  வர்க்கத்தின் சமூக விரோதப்போக்கை நிறைவேற்றித் தருவதால் காலங்காலமாக இன்றளவும் காக்கப்பட்டு வருகிறார்கள்.

    *     பூதமாகினும் சட்டமாகினும் அரசனையும் அந்தணனையும் தண்டிக்க வலிமை கிடையாது. இவர்களுக்கு உட்பட்டே இயங்கும் என்பது புலனாகிறது. இன்றளவும் இம்முறை நீடிக்கிறது.

    *     மாதவியைப் போகப்பொருளாகவும் கண்ணகியை வணிக நோக்குடனும் நடத்திய கோவலன் இருவருக்கும் அநீதி இழைத்திருப்பது  நடைமுறை மனித வாழ்வுக்கு உகந்ததில்லை.

    *     மனிதனின் தவற்றுக்கெல்லாம் முற்பிறவி, தீவினை, ஊழ்வினை என்று காரணம் கற்பிப்பது,  குறிப்பாக அரசர், அந்தணர், வணிகர் தவற்றை மறைப்பதற்கான ஒரு முயற்சியாகக் கருதப்படுகிறது.

    *     அரசருக்கும் வணிகருக்கும் நடக்கும் வர்க்க முரண்பாடாகச் சங்கமன் கொலையும், கோவலன் கொலையும் அமைந்திருக்கிறது.

    *     கோவலன் ஆடல் கலையிலும் ஆடலழகியிடமும் லயித்துப்போனதால் பொருளோடு வாழ்வையும் உயிரையும் இழந்தான். கண்ணகியைப் பரிதவிக்கவும் விட்டான். பாண்டிய மன்னனும் ஆடல் கலையிலும் ஆடலழகியிடமும்  லயித்து போனதால்தான் பெரும் உயிர்ச்சேதமும் பொருட்சேதமும் இழக்க நேரிட்டது. இது மன்னர்களுக்கும் வணிகர்களுக்கும் பொறுப்பில் இருக்கும் எவரும் நெறிதவறி நடந்தால் நாட்டில் குற்றங்கள் மட்டுமே நடக்கும். இவர்களுக்கு ஏற்படும் இச்சையை அதிகாரத் தவறென்று சொல்லலாமேயொழிய ஊழ் என்று கருதமுடியாது.

    *** 

    பார்வை நூல்கள்:

    1.ஞா.மாணிக்கவாசகன் (உ.ஆ), சிலப்பதிகாரம் தெளிவுரை, உமா  பதிப்பகம்1995.

    2.ந.மு.வேங்கடசாமி நாட்டார்(உ.ஆ.) கழகவெளியீடு,1942.

    3.க.ப.அறவாணன் (உ.ஆ.), திருக்குறள் தெளிவும் உரையும்,  தமிழ்க்கோட்டம்,2007.

    4.வி.புரோத்தோவ், இக்கால இந்திய மெய்ப்பொருளியல், நியூசெஞ்சுரி புக்  ஹவுஸ்,1998.

    5.எஸ்.ஜி.சர்தேசாய், பண்டைய இந்தியாவில் முற்போக்கும் பிற்போக்கும்,  நியூசெஞ்சுரி புக் ஹவுஸ்,2012.

    6.தே.ஞானசேகரன், மந்திரம் சடங்குகள் சமயம்,பார்த்திபன் பதிப்பகம்,2000.

    7.வெ.பெருமாள்சாமி, சிலப்பதிகாரம் மறுக்கப்பட்ட நீதியும் மறைக்கப்பட்ட  உண்மையும்,பாரதி புத்தகாலயம், 2008.

     

     

     

     

     

    Share