Tag: முனைவர் நா. கவிதா

  • சிற்றிலக்கியச் சமுதாய வாழ்வியல் மதிப்புகள்

    -முனைவர் நா.கவிதா

    இல்வாழ்க்கையில் தனிமனித நிலை, குடும்ப நிலை, உறவினர் நிலை, சமூக உறுப்பினர் நிலை, குடிமக்கள் நிலை என்னும் தளங்களில் மனிதர்கள் பாதுகாக்க வேண்டிய, ஆற் வேண்டிய பணிகள் போற்றத்தகுந்த பண்புகள் எனப் பன்முகக் கூறுகளை ஒழுங்குற வகைப்படுத்தினால் அவை வாழ்வியல் மதிப்புகள் ஆகும். இத்தகைய சமுதாய வாழ்வியல் மதிப்புகள் சிற்றிலக்கியக் காலகட்டத்தில் எத்தன்மையுடன் திகழ்ந்தன என்பனவற்றை ஆராய்வதாக இவ் ஆய்வு அமைந்துள்ளது.

    சமுதாய வாழ்வியல் மதிப்புகள் விளக்கம்

    உலகில் தோன்றும் ஒவ்வொரு மொழி இலக்கியமும் வாழ்க்கை மதிப்புகளை எடுத்துரைப்பதை முதன்மை நோக்கமாகக் கருதுகின்றது.

    வாழ்வியல் என்பதற்கு விளக்கம் தருகையில், “வாழ்வியல் என்பதில் ‘வாழ்வு’ என்பதன் பொருள் முறைமை, வாழ்தல் என்பதாகும். ‘இயல்’ என்பதற்கு ‘ஒழுங்கு’ என்று பொருள். வாழ்வு + இயல் = வாழ்வியல். முறையான ஒழுங்கினைக் கடைப்பிடித்து வாழும் வாழ்க்கை முறை வாழ்வியல் ஆகும்.”1 என்று கூறுவர்.

    மேலும் சமுதாய வாழ்வியல் மதிப்புகளே வாழ்வியல் நெறிகளாக மலர்கின்றன என்று கூறுவதை, “முறையான சமுதாய வாழ்க்கைக்குப் பயன்படுகின்ற பண்புகளே சமுதாய மதிப்புகள் (Social Values) எனப்படுகின்றன. இவையே சமுதாய ஒழுங்கு முறையினை உருவாக்கும் வாழ்வியல் நெறிகளாகின்றன; சமுதாயத்தின் குறிக்கோளை வகுத்துத் தந்து, மக்கள் நடத்தைக்கு வழிகாட்டுகன்றன.”2 என்பது சமூகவியலார் கருத்து.

    உடன்பாட்டு, எதிர்மறை வாழ்வியற் மதிப்புகள்

    சமுதாயவியல் அணுகுமுறையில் அதிகக் கவனத்தைப் பெறுவது சமுதாய வாழ்வியல் மதிப்புகள் சார்ந்தது ஆகும். இது “சமுதாய உறவுகளின் பிணைப்பிலே, சமுதாய நடப்பின் காரணமாகத் தோன்றுகிற சமுதாய உணர்வு வடிவங்களிலே ஒன்று”3 என தி.சு.நடராஜன் வரையறை செய்கின்றார். இவர் சமுதாய வாழ்வியல் மதிப்புகளைப் பின்வருமாறு பகுத்துக் கூறுகின்றார்.

    சமுதாய மதிப்புகள் (Social Values)

    உடன்பாட்டு மதிப்புகள்        எதிர்மறை மதிப்புகள்

    (Positive Values)                                (Nagative Values)

    காதல், கற்பு, தாய்மை, பாசம், புகழ்,          பொய்ம்மை, தீமை, பாவம், பக்தி, கொடை போன்றவை.                    குடிப்பழக்கம், லஞ்சம், பித்தலாட்டம்
    போன்றவை.”4

    சிற்றிலக்கிய காலச் சமுதாயத்திலும் இவ்விருவகை மதிப்புகளும் வழக்கில் இருந்தன என்பதனைச் சிற்றிலக்கிய கால கட்டத்தில் தோன்றிய இலக்கியங்களை ஆராய்வதால் அறியமுடிகிறது. இவ்விரு வகையானவற்றுள் உடன்பாட்டு மதிப்புகள் போற்றப்பட வேண்டியவை, எதிர்மறை மதிப்புகள் மாற்றப்பட வேண்டியன.

    உடன்பாட்டு மதிப்புகள் என்ற பிரிவினில் ஒருவனுக்கு ஒருத்தி என்ற ஒழுக்கம், தானம் வழங்கும் நெறி, நிலையாமை நெறியை அறிவதால் கிடைக்கலாகும் புகழ், பக்தியுணர்வு ஆகியவற்றை அடக்கலாம்.

    எதிர்மறை மதிப்புகள் என்ற பிரிவினில் கள் குடிக்கும் வழக்கம், பிறருக்குத் தீங்கு விளைவிக்கும் வசிய மருந்திடும் முறை ஆகியவற்றை அடக்கலாம்.

    ஒருவனுக்கு ஒருத்தி என்ற ஒழுக்கம்

    ஒருவனுக்கு ஒருத்தி என்ற தமிழ்ப் பண்பாட்டை உலகிற்குப் பறைசாற்றியது தமிழகம் எனலாம். ஒழுக்கத்தை உயிருக்கும் மேலாகக் கற்பித்தார் திருவள்ளுவர். அவர்தம் பார்வையில் கல்விக்கு இரண்டாம் இடம்; ஒழுக்கத்திற்கே முதலிடம். ஆக ஒழுக்கமாக வாழும் வாழ்க்கையே தவம். ஒழுக்கம்கெட்டு வாழும் வாழ்க்கையே சவத்திற்கு ஒப்பானது என்று கூறலாம். இவ்விடத்தில் கலாசாரம் குறித்துக் கூறும் இலக்கணம் குறிப்பிடத்தக்கது.

    “கலாசாரம் என்பது இடங்கள், எண்ணங்கள், நம்பிக்கைகள், சுய அடையாளங்கள், சமூக அடையாளங்கள், மொழி, இலக்கியம், கலை மற்றவர்களுடன் பழகும் முறைகள், குடும்ப அமைப்புகள், கட்டுப்பாடுகள் என வாழ்க்கையின் பல அம்சங்களை உள்ளடக்கியது. கலாசாரம் காலத்துக்கு காலம் இடத்துக்கு இடம் வேறுபடும்.”5 என்று கூறுவர். இத்தகைய பண்பாடு சமூகத்தின் அடையாளமாகும். சிற்றிலக்கிய காலச் சமுதாயத்தில் ஒருவனுக்கு ஒருத்தி என்ற ஒழுக்கம் ஏற்புடைய ஒன்று என்றாலும் ஒருத்திக்கு ஒருவன் என்பதுவே வழக்கில் இருந்தது.

    திருக்குற்றாலக் குறவஞ்சியில் குறவர்களின் வாயிலாக அவர்களின் குலமரபு குறித்த கருத்துக்களையும் அறிந்து கொள்ளலாம். குறவர்கள் ‘ஒருவனுக்கு ஒருத்தி’ என்ற ஒழுக்கத்தைப் பின்பற்றி வாழும் மக்கள் என்பதை,

    “உறவு பிடித்தாலும் விடோம் குறவர் குலம் நாங்கள்” (திருக்குற்றாலக் குறவஞ்சி, செ.எ., 7)

    என்ற அடிகள் வாயிலாக அறியலாம். இதிலிருந்து குறவர் குலத்தில் ஒருவரை வாழ்க்கைத் துணை உறவாகப் பிடித்துக் கொண்டனர் என்றால் எந்நாளும் அந்த உறவை கைவிடாத ஒழுக்கம் உண்டு என்பதை அறிய முடிகின்றது.

    ஆனால் இக் கலாசாரம் காலத்துக்கு காலம் இடத்துக்கு இடம் வேறுபடும் என்பதை முழுமையாக ஏற்றுக் கொள்ளலாம். தமிழகத்தில் நாயக்கர் ஆட்சி ஏற்பட்ட காலத்தில் ஆட்சி செய்த மன்னர்தம் கலாசாரம் மக்களுக்கும் பரவியது என்று கூறலாம். அதனில் ஒன்றே பலதார மணம்.  ஒருவனுக்கு ஒருத்தி என்ற ஒழுக்கம் பின்பற்றப்பட்டு வாழ்ந்த தமிழ் மக்களிடையே மன்னனைப்போன்று பலதார மணம் பின்பற்றப்பட்டது. இதனைப் பின்வரும் கூற்றினால் அறியலாம்.

          “மன்னன் எவ்வழியோ குடிகள் அவ்வழி” என்பதற்கு ஒப்ப நாயக்கர் கால ஆண்களும் ஒன்றுக்கும் மேற்பட்ட மனைவியரைப் பெற்றிருந்தனர். அத்துடன் உயர்வர்க்கத்தவரிடையே பலதார மணம் ஒப்புக்கொள்ளப்பட்ட ஒன்றாகும்.”6 என்ற கூற்று கலாசார மாற்றத்தை இயம்புகிறது.

    தானம் வழங்கும் நெறி

    தானம் வழங்குவதின் பயன்பாடுகள் குறித்து எடுத்துரைக்காத இலக்கியங்களே என்று கூறலாம். அத்தகைய தானத்தை எவ்வாறு, எத்தகைய நெறியுடன் வழங்க வேண்டும் என்பதை தைத்திரிய உபநிஷதம்,

    ச்ரத்தயா தேயம்! அச்ரத்தயா தேயம்! ச்ரியா தேயம்!
    ஹ்ரியா தேயம்!
    பியா தேயம்! ஸம்விலிதா தேசம்”
    7

    என்ற சுலோகத்தில் கூறுகின்றது. இதில், வருமானத்திற்கு ஏற்ப தானம் செய்தல் வேண்டும். அத்துடன் பணிவுடனும், தகுந்த அறிவுடனும் தானம் செய்வதே சாலச் சிறந்தது என்று தானம் குறித்துச் சுட்டப்பட்டுள்ளது. தானம் வழங்குதல் பற்றி முக்கூடற்பள்ளு, செய்தக்காதி நொண்டிநாடகம், நந்தனார் சரித்திரக் கீர்த்தனை போன்ற நூல்கள் குறிப்பிட்டுள்ளன. முக்கூடற்பள்ளுவில் பண்ணைக்காரனிடம் வடிவழகக் குடும்பன் தானமாக அளந்த நெல்லின் கணக்கு வகைகளை,

    “ஆடித் திரு நாளுக்கு நெல்
    ஆறாயிரங் கோட்டை நெட்டைத்
    தாடிப்பிச்சன் நேருஞ் சம்பா
    நெல் அளந்தேன்.
    வருபங் குனித் திருநாட்படி
    வகைக் காயிரம் கோட்டை சின்னத்
    திருவன் பயிரிடும் புள்ளியில்
    செந்தாழை நெல் அளந்தேன்.” (முக்கூடற்பள்ளு, செ.எ.,143)

    என்று குறிப்பிடுவதன் வாயிலாக அறியலாம். மேலும், ஆடித் திருநாளுக்குச் சம்பா நெல்லும், பங்குனித் திருநாளுக்கு செந்தாழை நெல்லும் அளந்து கொடுத்த வழக்கையே அறிய இயலுகின்றது.

    செய்தக்காதி நொண்டி நாடகத்தில் வள்ளல் செய்தக்காதியின் கொடை வளத்தை,
    “சங்கநிதி பதுமநிதி போல் நிதிவாரிச்
    சடையாமலிரு கையுங் கொண்ட கொடுக்க
    தருப்போற் கொடை கொடுக்கும் வட்டாவுந்
    தாம்பூல முந்துகிலந் தாங்கி நிற்க
    விருப்பொடு முத்துரத்தினப் பரீட்சையர்
    மேன்மை யொடு தானிருக்க” (செய்தக்காதி நொண்டி நாடகம், செ.எ.,190) என்ற பாடலடிகள் சுட்டுகின்றன.

    புகழ்பெறும் முறை

    சமயங்கள் எவ்வாறு தங்கள் கருத்தை வலியுறுத்தி இறைவனை நோக்கி மக்களை அழைத்துச் செல்கின்றனவோ, அதனைப் போன்றே அறஇலக்கியங்களும் நிலையாமைக் கருத்துக்களை வெளிப்படுத்தி மக்களுக்கு நல்வாழ்க்கை நெறியைக் கற்றுத் தருகின்றன. இவ்வுலகில் காணப்படும் செல்வம், இளமை, யாக்கை போன்றவை நிலையற்றவை என்று எடுத்துரைக்காத அறஇலக்கியங்களே இல்லை. குமரேச சதகம் இவ்வுலகில் எவை எவை நிலையற்றன என்று வரையறுத்துள்ளது. ஆநிரையும், வீடும், மனைவியும், உறவினரும், மக்களும், செல்வமும், அணிகலன்களும் கனவைப் போலவே மாறிவிடும் நிலையற்ற தன்மையுடையது. ஆகவே நிலையாமை நெறியினை உணர்ந்து வாழும் காலத்தே அறச் செயலைப் புரிதல் வேண்டும் என்று வழிகாட்டுகின்றது. இக்கருத்தினை,

    “மாடுமனை பாரிசனம் மக்கள்நிதி பூடணமும்
    மருவுகன வாகும் அன்றோ”
    (குமரேச சதகம், செ.எ.,73)

    என்ற வரிகளில் அறியலாம். இந்நெறியினை அறிந்து வாழ்வில் பின்பற்றினால் புகழ் என்ற உடன்பாட்டு மதிப்பு கிடைப்பது திண்ணம்.

    கள் குடிக்கும் பழக்கம்

    மக்கள் அன்றாட வாழ்க்கையில் மேற்கொள்ளும் பழக்கங்கள் வழக்கங்களாக அமைந்துவிடுகின்றன என்று கூறுவர். அவ்வகையில் கள் குடிக்கும் வழக்கம் அன்றிலிருந்து இன்று வரையிலும் மக்கள் மத்தியில் காணப்படுகின்றது. என்றாலும் அது எதிர்மறை மதிப்பாகவே விளங்கியது. கள்ளுண்ணுதல் குறித்துப் பதிவு செய்யாத சங்க இலக்கியங்களே இல்லை என்று கூறலாம். தெளியுங் கள்ளையும், நறவையும் உண்ட நபர்களுடைய உலகியல் கெட்ட மயக்கம் போல காணப்படுகின்றது என்று கூறுவதை,

    “தேறுகள் நறவுண்டார் மயக்கம் போற் காமம்”      (கலித்தொகை – நெய்தல் கலி-30:2)

    என்ற அடியின் மூலம் காணலாம். இவ்வாறே கள் குடிக்கும் வழக்கத்தினை சிற்றிலக்கியங்களில் முக்கூடற்பள்ளு, செய்தக்காதி நொண்டி நாடகம், நந்தனார் சரித்திரம் போன்ற நூல்கள் குறிப்பிடுகின்றன. முக்கூடற்பள்ளில் இடம்பெறும் பள்ளர்கள் தங்களது உழைப்பினால் விளைந்த நெல்லினைக் கண்ட மனமகிழ்ச்சியால் மிகுதியான மதுவைக் குடித்து மயக்கத்துடன் காணப்படுகின்றனர். அத்துடன் பெண்களும் மது அருந்தும் பழக்கத்தைக் கொண்டிருந்தனர் என்பதை,

    “வடிக்கும் மதுவைக் குடிக்கும் ஆசை
    மயக்கமும் பெருந் தியக்கமும்
    வரம்பிற் பாய்ந்து பரம்பிற் சாய்ந்த
    வாட்டமும் முகக் கோட்டமும்”
    (முக்கூடற்பள்ளு, செ.எ., 130)

    என்றும்,

    “பெண்பிள்ளை ஆண்டே – பொல்லாத்
    தண்ணீர் குடித்த வெறியால்
    முதற் சொன்னேன் ஆண்டே
    கால் மரம் வெட்டி விடுவிக்க
    வேணுங்கான் ஆண்டே” (முக்கூடற்பள்ளு, செ.எ., 107)

    என்றும் குறிப்பிடுவதிலிருந்து முறையே பள்ளர்கள் மது அருந்தி மயங்கிய விதத்தையும், ஆண்டையிடம் மூத்தபள்ளி கள்ளுண்ட வெறியிலே பள்ளனைக் காவலில் வைக்குமாறு கூறிவிட்டேன் விடுவிக்க வேணும் என்று முறையிடுவதையும் அறியலாம். மனமகிழ்வு மற்றும் துயர காலங்களில் கள் அருந்திய சூழலை மேற்கூறிய கருத்துக்களில் இருந்து அறியலாம்.

    செய்தக்காதி நொண்டி நாடகத்தில் இடம்பெறும் ஒடுங்காப்புலியை சுலூபுகான் கூடாரத்தில் உள்ள துலுக்கர்கள் வரவேற்று கஞ்சாத் தண்ணீர் தருகின்றனர். அதனை மறுக்காமல் இஸ்லாமிய மார்க்க நெறியைக்கூறிக் கொண்டே ஒடுங்காபுலி அருந்துகிறான். இதனை,

    கடைபடு கஞ்சாத் தண்ணீர் பாத்திரத்திற்
    கட்டளையிட்டார் பிரமன் கட்டளையன்றே
    யிடையூறு பேசாமல் மண்டிபோட
    டிருந்து பிசுமிச் சொல்லி யருந்தினேன்”                          (செய்திக்காதி நொண்டி நாடகம், செ.எ., 96) என்னும் வரிகளால் அறியலாம்.

    வசிய மருந்திடுதல்

    பொதுவாக மருந்து என்பது ஓர் உயிரினத்திற்கு ஏற்பட்ட நோயை அல்லது உடற்கேட்டைத் தீர்க்கவோ தணிக்கவோ பயன்படும் பொருள். ஆனால், வசிய மருந்து கொண்டு விலங்குகளையும் தன் வசியமாக்கலாம் என்பர். கருவூரார் எனும் சித்தர் இயற்றிய ‘கருவூரார் பலதிரட்டு’ என்ற நூலில் மிருகங்களை வசமாக்கும் முறை குறிப்பிடப்பட்டுள்ளது. வெண்குன்றி மூலிகை எடுத்து, ‘வம் வம் வசி வசி மிருகவசீகரி ஓம்’ என்ற மந்திரத்தை கூறி மூலிகை வேரை வாயில் போட்டு, எந்த மிருகத்தை அழைக்கிறோமா அது வசியமாகும் என்று கருவூரார் சுட்டுகிறார். இதனை,

    “பாரப்பா வேண்குன்றி மூலம் வாங்க
    நேரப்பா மந்திரத்தான் வம்வம் வசிவசி
    நிறைமிருக வசீகரி ஓமென்று போற்றி
    வேரப்பா பிடுங்கி யதைவா யிலிட்டு
    பேசவே மிருக வசீகரங் காணும்”8 

    என்ற பாடலடி சுட்டும். இவ்வாறு பண்டை காலம் தொட்டே தமிழர்களிடம் வசிய மருந்தினைப் பயன்படுத்தும் முறைமை இருந்ததை அறியலாம். எவ்வாறு விலங்குகளையும் வசியப்படுத்தலாம் என்று கூறினார்களோ அதனைப் போல மனிதர்களையும் வசியமிட்டு, தவறான ஒழுக்கத்தைக் கற்றுக்கொடுத்த பாங்கினை சிற்றிலக்கியங்கள் பதிவுசெய்துள்ளன. முக்கூடற்பள்ளு, குற்றாலக் குறவஞ்சி, செய்தக்காதி நொண்டி நாடகம் போன்ற நூல்கள் வசிய மருந்திடும் முறையைப் பதிவு செய்துள்ளன. முக்கூடற்பள்ளில் மூத்தபள்ளி மாடு குத்திய வடிவழகக் குடும்பனைக் காண வரும்போது இவ்வாறு நடக்கக் காரணம் இளையபள்ளி உனக்கு வைத்த கீழான வசிய மருந்தே என்று கூறுகிறாள். இதனை,

    “……………………………………………………………………………
    …………………… மருதூர்ச்
    சக்களத்தி புலைமருந்தின் வெறியோ
    முதலேயீ தார் விளைத்த இடும்போ – தெரிந்திலேன்
    முக்கூடல் அழகர் பண்ணைக் குடும்பா”
    (முக்கூடற்பள்ளு, செ.எ., 118) எனக் குறிப்பிடுவதிலிருந்து அறியலாம்.

    திருக்குற்றாலக் குறவஞ்சியில் வசிய மருந்துடன், வேறுசில மருந்துகள் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டுள்ளது. சிங்கியைத் தேடிவரும் சிங்கன், தன்னுடன் வந்திருக்கும் நூவனிடம் சிங்கி இருக்கும் இடத்தைக் கூறினால் உனக்கு வாடை மருந்துப் பொடி, அம்மியிலேறி ஊர்ந்து வரும் மரப்பாவையுங்கூடப் பின்தொடர்ந்து வரச் செய்யும் மாயப்பொடி, பிரிந்தவர் கூடியிருக்குமாறு செய்யும் மருந்து, பிரியாமல் கூடி இருப்பவரைக் கலைப்பதற்கான மருந்து, இத்துடன் பொட்டிட்டு வசீகரம் செய்யும் முறையையும் உனக்கு கற்றுத் தருவேன் என்று கூறுகிறான். இதனை,

    “வாடை மருந்துப் பொடியும் அம்மியூர்
    மரப்பாவை பின்தொடர மாயப்பொடியும்
    கூடியிருக்க மருந்தும் இருபொழுதும்
    …………………….
    கூடியிருப்பார்களைக் கலைக்க மருந்தும் …………
    திலக வசீகரம் செய்வேன் …………………
    சிங்கிதனைக் காட்டாய் ஐயே!”
    (திருக்குற்றாலக்குறவஞ்சி, செ.எ., 36) என்னும் பாடலால் அறியலாம்.

    செய்தக்காதி நொண்டி நாடகத்தில் வேசியர்கள் பொருள் பறிப்பதற்காக ஒடுங்காப்புலிக்கு மருந்துப் பொருள்களைக் கலந்துதரும் செய்தி காணப்படுகின்றது. இன்றும் வெற்றிலை, பால், உணவு முதலியவற்றில் மருந்தைக் கலந்துதரும் வழக்கம் நாட்டுப்புறங்களில் காணப்படுகின்றது. இந்த நாட்டுப்புற வழக்கத்தின் தாக்கமே நொண்டி நாடகத்தில் வேசியர் மருந்திட்டனர் என்று கூறுவதற்கு வழி வகுத்தது எனலாம். வசிய மருந்தினை தரும் முறையுடன், அதனை உட்கொண்டதால் உண்டாகிய விளைவையும்,

    “கைவேர்வையும் மருந்தும் பல
    காரத்துடன் கூட்டிச் சேரத் தந்தாள்
    தந்தட ருத்தா லே மித்
    தள்ளாடித் தள்ளாடி யுள்ளாகிச்
    சிந்தை தடுமா றியொட்டுச்
    சிட்டு போல் நானகப் பட்டுக் கொண்டேன்” (செய்தக்காதி நொண்டி நாடகம், செ.எ., 33)

    எனச் சுட்டுவதிலிருந்து அறிய முடிகின்றது. மேலும் பள்ளர்கள், குறவர்கள், திருடர்கள் வாழ்க்கையில் வசிய மருந்தினை பயன்படுத்தியுள்ளதை உணர இயலுகின்றது. சமுதாய வாழ்வியல் மதிப்புகளில் எதிர்மறை மதிப்பினைத் தருவதாக வசிய மருந்திடும் முறைமை திகழ்கின்றன. சிற்றிலக்கிய காலச் சமூகம் இம்முறையை வரவேற்கும் ஒரு பிரிவாக விளங்கியுள்ளமையையும் அறிய இயலுகின்றது.

    *****

    குறிப்புகள்

    1. நா.கதிரைவேற்பிள்ளை, தமிழ் மொழி அகராதி, ப.14.
    2. N.Shankar Rao, Sociogy, P.469.
    3. தி.சு.நடராசன், திறனாய்வுக்கலை, ப.63.
    4. மே.நூ., ப.55.
    5. http:// tawp.in தமிழ் விக்கிப்பீடியா, கலாச்சாரம், ப.2.
    6. Rajayyan, History of Tamilnadu, P.68.
    7. kadampavanpoonga.com, கடம்பவன பூங்கா, தானத்தில் சிறந்த தானம், ப.4.
    8. keetru.com, கருவூரார், கருவூரார் பாடல் திரட்டு, ப.9.

    *****

    கட்டுரையாளர் – உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை,
    தி ஸ்டாண்டர்டு ஃபயர் ஒர்க்ஸ் இராஜரத்தினம் மகளிர் கல்லூரி (தன்னாட்சி),
    சிவகாசி

     

    Share
  • ‘சங்க இலக்கியங்களின் சான்றாவணம் –  கீழடி’

    -முனைவர் நா.கவிதா

    ‘எங்கே  வரலாறு  மவுனம் சாதிக்கத் தொடங்குகிறதோ அங்கே இடப்பெயர்களும் ஊர்ப்பெயர்களும் தம் வாய் திறந்து பேசத் தொடங்கும்.’

    -எல்.வி. இராமசாமி ஐயர்

    ***

    தமிழகத்தில் இதுவரையிலும் நடைபெற்ற பல்வேறு தொல்லியல் ஆய்வுகளும் அகழ்வாய்வுகளும் பழந்தமிழ் மக்களின் வாழ்வியல் முறைகளைப் பல அரிய ஆதாரங்களால் விளக்குகின்றன. அவ்வகையில் இலக்கியங்களிலும் பல்வேறு தரவுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. “கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளொடு முன்தோன்றி மூத்தகுடி” என்ற வெண்பாமாலைக் கூற்று தமிழர்களின் பெருமையினைப் பழமையான தமிழ் மொழியினை, நாகரிகமான வாழ்க்கை முறையினை,  உலகிற்குப் பறை சாற்றுகின்றது என்பது மறுக்க இயலா உண்மை.

    பழந்தமிழர்கள் பயன்படுத்திய ஆயுதங்கள், முதுமக்கள் தாழிகள், மண்பாண்டப் பொருட்கள் பல்வேறு இடங்களில் அகழ்வாய்வு மூலமாகக் கிடைத்துள்ளன. அவற்றில் தமிழகத்திலே முதல் முறையாக கி.மு. 3-ஆம் நூற்றாண்டு  காலத்தில் வாழ்ந்த சங்ககாலத் தமிழர்களின் நகரமே மண்ணுக்குள் புதையுண்டு  இருப்பதை எடுத்துச் சொல்லும் அகழ்வாய்வே கீழடி எனும் கிராமம். எல்.வி.இராமசாமி ஐயர் அவர்களின் கூற்றுப்படி மதுரையின் வரலாற்றை மறக்க உலகம் முயலும் சமயத்தில் , தன் பெயரின் கீழேயே வரலாறு உறைந்திருப்பதை எடுத்துக்காட்டியது கீழடி என்னும் தொல்லியல் ஆவணம் ஆகும். அத்தகைய  கீழடியில் கண்டெடுக்கப்பட்டுள்ள சங்ககால மக்களின் அன்றாட வாழ்வியல் புழங்கு பொருட்களைப் பற்றி எடுத்துரைப்பதே இந்தஆய்வுக் கட்டுரையின் நோக்கமாகும்.

    கீழடி பள்ளிச்சந்தை புதூர்’ கண்டெடுக்கப்பட்ட திறம்:

    ஆதிகாலத்தில் மலை மீதுள்ள குகைகளில் வாழ்ந்து வந்த மனிதன்  நாகரிக வளர்ச்சியால் ஆற்றங்கரையில் வாழத் தொடங்கினான். இக்கால கட்டத்தில் தனக்கான உணவுகளை விவசாயம் மூலம் பயிரிடவும் பாதுகாப்பான வீடுகளை உருவாக்கவும் கற்றுக்கொண்டான். அத்துடன் பயன்பாட்டுப் பொருட்களை  மிகுதியாக உருவாக்கிய இக்கால மனிதனே சங்ககால மனிதன் என்றும் அழைக்கப்படுகிறான். தமிழகத்தில் ஓடும் கொள்ளிடம், காவிரி, வைகை, தாமிரபரணி போன்ற ஆற்றங்கரைகளில் சங்ககால மனிதனின் பல தொன்மப் பொருட்கள் ஆராய்ச்சியாளர்களால்  கண்டெடுக்கப்பட்டுத் தொடர்ந்து ஆய்வு செய்யப்பட்டும் வருகின்றன.

    அவ்வகையில் வைகை ஆறு உற்பத்தியாகும் வருச நாடு முதல் வைகை ஆறு முடிவடையும் ஆற்றங்கரை வரை ஆற்றின் இருபுறமும் சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்தை எல்லையாக வைத்துத் தொல்பொருள் ஆய்வாளர்கள் ஆய்வுகள் பல செய்து வந்தனர். அதில் 270 கிராமங்களில் சங்கத் தமிழர்கள் பயன்படுத்திய பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. முதுமக்கள் தாழிகள் பண்டை எழுத்துக்களுடன் கூடிய மட்பாண்டங்கள் முதலியவை விவசாய நிலத்தில் தென்னந்தோப்பில் ஏராளமாகக் கிடைத்தன. இது குறித்துத் தகவல் அறிந்த தொல்லியல் ஆய்வாளர்கள் அப்பகுதி முழுவதும் ஆய்வு மேற்கொள்ள ஆய்வின் முடிவில் சங்க கால மனிதன் அப்பகுதியில் வாழ்ந்தமைக்கான தடயங்கள் மிகுதியாக  கண்டெடுக்கப்பட்டன. கீழடி எனும் இப்பகுதியும் ‘குந்திதேவி சதுர்வேதி மங்கலம்’ என்று பாண்டிய அரசின் பெயரால் அழைக்கப்பட்டமையும் இவ்விடத்தில் நோக்கத்தக்கது. இதன் அடிப்படையில் கீழடி பள்ளிச்சந்தை புதூரில் தரைமட்டத்தில் இருந்து 3 அடி உயரமான மேட்டுப் பகுதியை அகழ்வாராய்ச்சிப் பணிக்குத் தேர்ந்தெடுத்தனர்.

    கீழடி – புதையுண்ட நகரம்:

    ஏறத்தாழ 2300 ஆண்டுகளுக்கு முந்தைய பழந்தமிழர்களின் 120 ஏக்கர் பரப்பிலான வாழிடம் அகழ்வாராய்ச்சி மூலமாகக் கீழடி எனும் கிராமத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இக் கிராமம் மதுரையில் இருந்து 18 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் திருப்புவனம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதியாகத் தற்பொழுது அமைந்துள்ளது. பெங்களுரில் உள்ள மத்திய அரசின் தொல்பொருள் ஆய்வுத்துறை கடந்த 2015 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரையிலும்  அகழ்வாராய்ச்சிப் பணிகளை  மேற்கொண்டு வந்துள்ளது. மீண்டும் 2016 ஆம் ஆண்டு  ஜனவரி மாதத்தில் அகழ்வாராய்ச்சிப் பணிகளைத் தொடங்க உள்ளதாகத் தொல்லியல் கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் கூறியுள்ளார். ஜனவரி மாத அகழ்வாராய்ச்சியில் பண்டைக்கால மக்களின் நாணயங்கள் பல கிடைக்கப்பெற்றன.

    பண்டைக்கால மண் பொருட்களின் சில்லுகளைச் சேகரித்துப் பிரித்து வைக்கப்பட்டுள்ள படம் ஆய்வுப்பணியில் கிடைக்கப்பட்ட பல மண்பாண்டப் பொருட்களின் சில்லுகள் பிரிக்கப்பட்டு பொது மக்கள் பார்வைக்காகவும் வைக்கப்பட்டதாகும். இதுவரையிலும் மொத்தம் 3 பிரிவாகப் பிரித்து 43 குழிகள்  12 அடி அகலத்திற்கும், 12அடி நீளத்திற்கும் வெட்டப்பட்டு  அவற்றில் அகழ்வாய்வுப் பணி வெற்றிகரமாக நடைபெற்றுள்ளது.

    கீழடியிலுள்ள குழிகளிலே தான் சிதைந்த நிலையிலான சங்ககால மக்களின் வீட்டின் செங்கல் சுவர்கள் தரைத்தளம்  தமிழ் பிராமி எழுத்துக்களுடன் கூடிய கருப்பு சிவப்பு  செம்பழுப்பு நிற பானைப் ஓடுகள், பெண்கள் அணியும் ஆபரணங்கள், தந்தத்தால் ஆன பொருட்கள்,  முத்திரை,  செம்பு ஆபரணங்கள்,  இரும்பு ஆயுதங்கள்,  உறைகிணறுகள், விளையாட்டுப் பொருட்கள், குலுதானி தொட்டிகள், 10 சங்க கால நாணயங்கள் (கி.பி.10ஆம் நூற்றாண்டைச் சார்ந்த சோழர் கால நாணயங்கள்) போன்ற பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவ்விடத்தில் கிடைக்கப்பெற்ற பொருட்களும் செங்கல் சுவர்களும் தரைத்தளமும்  கழிவு நீர்க் கால்வாய்களும் இதுவரையிலும் தமிழ்நாட்டில் எங்கும் கிடைத்ததில்லை என்பது தான் கீழடி அகழ்வாய்வின் சிறப்பம்சமாகும்.

    சங்க காலப் பாண்டியர்களின் தொல் நகர் பெருமணலூர்:

    கீழடியில் பூமியில் புதையுண்டு இருக்கும் இந்த நகரம் அக் கால கட்டத்தில் சுமார் 120 ஏக்கர் பரப்பளவில் அமைந்து இருக்க வேண்டும் என்று கணக்கிடப்பட்டு உள்ளது. சங்க காலத்தில்  வைகை நதியின் வலது கரையில் பண்டைய வணிகப் பெருவழிப்பாதை ஒன்று இருந்துள்ளது. மதுரையிலிருந்து  ராமேசுவரம் அழகன்குளம் துறைமுகப்பட்டினத்திற்குக் கீழடி திருப்புவனம் வழியாகவே  பாதை இருந்துள்ளது. தற்போது அப்பகுதி கீழடி என்றாலும் பண்டைக்காலத்தில் அதன் பெயர் என்ன என்பது இதுவரையிலும் கண்டுபிடிக்கவில்லை. மதுரைக்கு மிக அருகாமையிலேயே உள்ள இவ்வூர் வணிக நகரமாகத் திகழ்ந்துள்ளது. மேலும் பல கட்ட அகழ்வாராய்ச்சிகள் செய்தால் மட்டுமே கண்டிப்பாக அதன் பெயரைக் கூற இயலும் என்று தொல்லியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். 4 மீட்டர் நீளம், 4 மீட்டர் அகலம், 4 மீட்டர் ஆழம் என 43 குழிகள் தோண்டி நடத்தப்பெற்ற ஆய்வில் இதுவரையிலும் 1800 பழங்காலப் பொருட்கள் கிடைத்துள்ளன. இவற்றின் அடிப்படையில்  மதுரை – இராமேசுவரம் பகுதியின் முக்கிய வணிக நகராகக் கீழடி எனும் பகுதி இருந்தமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

    அத்துடன் கீழடியில் கி.மு.3ஆம் நூற்றாண்டிலிருந்து 10ஆம் நூற்றாண்டு வரையிலும் சங்க கால மக்கள் வாழிடமாகக் கொண்டு வசித்துள்ளனர். சாத்தனஇ; சேந்தன் இ அவதிஇ எரவாதன் இ பிசனஇ; ஏனன் இ உதிரன் உள்ளிட்ட தமிழ் இலக்கியப் பெயர்களைக் கொண்டு வாழ்ந்துள்ளனர். 10 ஆம் நூற்றாண்டிற்குப் பின்னர் அவர்கள் இடம் பெயர்ந்துள்ளனர். இந்த  ய10கத்தின் அடிப்படையில் ஆராய்ச்சியாளர்கள் கீழடியானது பாண்டியர்களின் தொல் நகரான பெருமணலூர் ஆகக் கூட இருந்திருக்கலாம் என்று கூறியுள்ளனர். தற்போதைய மதுரைக்கு முன்பு பாண்டியர்கள் ஆட்சி செய்த பெருமணலூர் பற்றி இலக்கியங்களிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இங்கிருந்த மக்களே கடம்பவனத்தை அழித்து இன்றைய மதுரையை உருவாக்கியிருக்க வேண்டும் என்றும் எடுத்துரைக்கின்றனர். இந்த ய10கத்திற்கு வலு சேர்க்கும் வண்ணம் கீழடியில் பண்டைக்காலத்தில் வாழ்ந்த மக்கள்  வெள்ளத்தாலே  இயற்கைச் சீற்றங்களாலோ பாதிப்படையவில்லை. அத்தகைய நிகழ்வு ஏதேனும் ஏற்பட்டிருந்தால் இன்று நமக்கு எவ்வகைச் சேதமும் இல்லாமல் முழுமையான பொருட்கள் கிடைத்திருக்க வாய்ப்பில்லை.

    மேலே காட்டப்பட்ட படம் நமக்கு இரு எண்ணங்களை ஏற்படுத்துகிறது. பண்டைக்கால மக்கள் முற்றிலுமாக இடமாற்றம் செய்திருக்கலாம் அல்லது இவ்விடம் மட்பாண்டங்கள் மிகுதியாக செய்யக் கூடிய தளமாகவும் இருந்திருக்கலாம் என்பதே அவை. இதனில்  ஆய்வாளர்கள் பின்வரும் கருத்தினை முழுமையாக ஏற்றுக் கொள்கின்றனர். பண்டைக்கால மக்கள் யாவரும் மிகப்பெரிய  இடமாற்றத்தை செய்துள்ளமையால் தான் பல்வேறு பயன்பாட்டுப் பொருட்கள் இவ்விடத்தில் முழுமையாகக் கிடைத்துள்ளன. இங்கு பெருமணலூர் என்பதற்கு ஆதாரம் மட்டும் கிடைத்தால் அதுவே உண்மையான மிகத்தொன்மையான மதுரை ஆகும். சங்ககால மக்கள் வாழ்ந்த பெருமணலூர் என்று கூறுவதற்கும் வாய்ப்புகள் மிகுதியாக கிடைக்கப்பெறும்.

    சங்க கால நகரம் என க்கணக்கிடும் முறை:

    தொன்மை நகரத்தின் வயதும் அங்குக் கிடைத்த பொருட்களின் வயதும் கதிரியக்க கார்பன் காலக்கணிப்பு மூலமாகவே துல்லியமாகக் கண்டறிய முடியும். இந்தக் கதிரியக்கக் கார்பன் காலக்கணிப்பால்  60ஆயிரம் ஆண்டுகள் வரையிலான பொருட்களின் கால நிலையினை அறிய இயலும். இப் பரிசோதனைக்காகக் கீழடியில் கிடைக்கப்பட்டுள்ள பொருட்கள் யாவும் பெங்களுரில் உள்ள மத்திய அரசின் தொல்பெருள் ஆய்வுத்துறையில் அகழாய்வுப் பிரிவிற்கு அனுப்பப்பட்டுள்ளது. கீழடியில் கிடைக்கப்பெற்ற  பொருட்கள் யாவும் சங்க கால நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ள பொருட்களுடன் ஒத்துச் செல்வதால் இவை யாவும் ஏறத்தாழ 2300 ஆண்டுகளுக்கு முற்பட்டதாக இருக்கக் கூடும் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். பழங்கால மண் பாத்திரங்கள் யாவும் உள்ளே கருப்பாகவும் வெளியே சிவப்பாகவும் காணப்படும். இந்தப் பானைகள்தான் அதிக அளவில் கீழடியில் கிடைக்கப்பட்டுள்ளன.

    பிராமி எழுத்துக்களுடன் மட்கல ஓடுகள்:

    தமிழ் பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட மட்கல ஓடுகள் அதிக அளவில் கீழடி அகழாய்வில் கிடைக்கப்பெற்றுள்ளன. மேலும் மட்கல ஓடுகளில் கீறல் குறியீடுகளும் அதிகளவில் உள்ளன. இப்பானைகளில் சங்க காலத்தில் பயன்பாட்டில் இருந்த பெயர்களான உதிரன் ஆதன்  திசன் இயனன் என்ற பெயர்களைப்  பிராமி எழுத்துக்களால் எழுதப்பட்டுள்ள முறைமையைக் காண்கையில் இப்பகுதியில் வாழ்ந்த தமிழ் மக்களின் கல்வித்திறனைப் பற்றி அறியமுடிவதோடு தமிழ்மொழியின் வளர்ச்சியையும் காணமுடிவது மிகச் சிறப்பானதாகும்.

    வரலாற்றாசிரியர்கள் தமிழ் எழுத்துக்கள் யாவும்  குறியீடுகளில் இருந்து தான் வளர்ச்சியுற்றது என்ற கருதுகோளை நவில்வதும் இவ்விடத்தில் குறிப்பிடத்தக்கதாகும். மேலும் தமிழ்பிராமி கல்வெட்டுகள் அதிக எண்ணிக்கையில் மதுரைப்பகுதியில் கிடைக்கப்பட்டுள்ளதால் தமிழ்மொழியின் பிறப்பிடம் மதுரைப் பகுதியாக இருக்கலாம் என்று மொழியியல் வல்லுநர்கள் தமது கருத்துக்களை முன்மொழிகின்றனர். மதுரை நகரின் தொன்மையை நவிலும் இத்தகைய முறைமைகளைக் கொண்டு கீழடி நகரம் பண்டைச் சங்க கால நகரம் என்று வரையறுத்துக் கூறுகின்றனர்.

    ஆபரணங்களும் விளையாட்டுப் பொருட்களும்:

    கீழடி அகழ்வாய்வில் கிடைக்கப்பட்ட பொருட்களில் வேறெங்கும் கிடைக்காத சங்க காலப் பெண்களின் ஆபரணங்கள் பல கிடைத்துள்ளன. அகேட் மணிகள், உடைந்த வளையல் துண்டு,  குஜராத் பகுதியைச் சார்ந்த சூது பவளம், பளிங்கு, பச்சை-மஞ்சள் – நீல நிறக் கண்ணாடி மணிகள் போன்ற விலைமதிப்பிட இயலாப் பொருட்கள் பல கிடைத்துள்ளன.  மேலும் இங்குத் தோண்டப்பட்ட 40க்கும் மேற்பட்ட குழிகளில் கிடைக்கப்பட்ட பொருட்கள் சங்க இலக்கியப் பாடல்களில் காணப்படும் பொருட்களே. சிலப்பதிகாரம் பரிபாடல் மதுரைக்காஞ்சி போன்ற இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் கல்மணிகள் மட்டுமே 600 கிடைத்துள்ளன.

    மேற்கூறிய மணிகள் இணைத்த அணிகலன்கள் பற்றி மதுரைக்காஞ்சியில் ‘செல்வப் பெண்டிர் நிலை’ எவ்வாறு இருந்தது என்பதில்  காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. குற்றம் நீங்கிய பொன்னால் செய்த ஆபரணங்களை அணிந்த பெண்டிர் தமது பொன்சிலம்பில் தேர்ந்தெடுத்த மணிகளை அணிந்துள்ளனர்.

    ‘தெள்ளரிப் பொற்சிலம்பு ஒலிப்ப ஒள்ளழல்
    தாஅற விளங்கிய ஆய்பொன் அவிர் இழை
    அணங்குவீழ் வன்ன பைந்தொடி மகளிர்’  (மதுரைக்காஞ்சி – 444-446)

    என்ற அடிகளில் காணலாம். அத்துடன் விளையாட்டுப் பொருட்களில் யானைத் தந்தத்தால் செய்யப்பட்ட தாயக்கட்டை (4 புள்ளிகள் உடைய தாயக்கட்டை) நொண்டி விளையாடுவதற்குப் பயன்படும் மண் சிலாக்கு, சதுரங்கக்காய் ஆகிய பொருட்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. கலித்தொகையில் குறளனின் உருவத்தைப் பற்றி  எடுத்துரைக்கையில்,

    வல்லுப்பலகை எடுத்து நிறுத்தன்ன
    கல்லாக் குறள!’ (கலித்தொகை 94-13)

    என்று பதிவு செய்யப்பட்டுள்ளது. சூதாடும் வல்லுப்பலகையினை நிறுத்தி வைத்தாற் போன்ற குறளனே என்று கூறுவதிலும்,  சூதாடு காயைப் போன்ற கட்டை வடிவமும் உடைய குறளன் என்று எடுத்துரைப்பதிலும் தாயக்கட்டையின் பயன்பாடு சங்க மக்களிடம் இருந்தமையை அறிய இயலுகின்றது.

    கீழடியில் கிடைக்கப்பட்டுள்ள ஒவ்வொரு பொருளுமே ஒரு தொல்லியல் ஆவணமே ஆகும். மிகப்பெரிய அளவில் நமது பண்டைய நாகரிகத்தை எடுத்துச் செல்லும் தளமாக கீழடி திகழ்கின்றது. எகிப்து, சீனா, ஜோர்டான் போன்ற நாடுகளில் நடத்தப்பட்ட அகழ்வாய்வு இடங்களை அங்குள்ள அரசினர் மூடிவிடாமல் திறந்த வெளி அருங்காட்சியமாகப் பாதுகாத்து வருகின்றனர். இதனைப் போன்றே கீழடியினை  திறந்த வெளி அருங்காட்சியமாக அமைக்க தமிழக அரசு ஆணை வழங்கினால் தமிழரின் பழம்பெருமையை உலகறியச் செய்யலாம்.

    கிழக்கு திசை நோக்கிய வீடுகள்:

    கி.மு.3 ஆம் நூற்றாண்டு காலத்தில் வாழ்ந்த சங்ககாலத் தமிழர்கள் தங்கள் வீட்டினைச் செங்கல் கட்டிடமாகக் கட்டி வாழந்து இருக்கின்றனர் என்பதனை இந்த உலகுக்கு பறைசாற்றுகிறது கீழடி. கி.பி.1964 ஆம் ஆண்டு சென்னைப் பல்கலைக் கழகத் தொல்லியல் துறை – உறையூரில்; மேற்கொண்ட அகழ்வாய்வில் பண்டைகாலப் பொதுமக்களின் இல்லங்கள் அமைப்பு கண்டெடுக்கப்பட்டது. அங்குள்ள  இல்லங்கள் யாவும் களிமண், செங்கல்துண்டுகள், பருக்கைக் கற்கள், பானை ஓடுகள் போன்ற பொருட்களால் அடித்தளமிட்டுக் கட்டப்பட்டுள்ளன. அதனைப் போன்றே கீழடியில் உள்ள வீடுகளும்  தரைத்தளங்களும் முழுமையான  செங்கல் கட்டிடமாக நமக்கு இன்று உயிரோட்டமாக கிடைத்துள்ளன.

    வீடுகளின் வெளிப்புறம் தண்ணீர் செல்ல வசதியாக செங்கல் கற்களால் வாய்க்கால்கள் வெட்டப்பட்டுள்ளன. மேலும் 5 அடி இடைவெளி விட்டு ஒவ்வொரு வீடும் கட்டப்பட்டுள்ளன. அத்துடன் ஒவ்வொரு வீட்டிற்கும் தனித்தனியாகச் சுற்றுச் சுவர் எழுப்பப்பட்டுள்ளன. அனைத்து வீடுகளும் கிழக்குத் திசையை நோக்கி அமைந்துள்ளன. அரிக்கன்மேடு, காவிரிபூம்பட்டினம், உறையூர் போன்ற அகழ்வாய்வில் கிடைக்கப்பெற்றதைக் காட்டிலும் கீழடியில் அதிக எண்ணிக்கையில் தொடர்ச்சியாகப் பல கட்டிடங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

    பண்டைமக்களின் நாகரிக வளர்ச்சியும் சுத்தம் சுகாதாரம் போன்றவற்றுக்கு முன்னுரிமையும் வழங்கினர். வீட்டின்  பின்புறத்தில் குளியலறைகளும் தண்ணீர் தொட்டிகளும் மாடுகளுக்காக மிகப்பெரிய குலுதானி தொட்டியும் கட்ட்ப்பட்டன. குலுதானி தொட்டிகள் வீட்டின் சுவற்றோடு இணைக்கப்பட்ட மிகப்பெரிய பானை வடிவில் அமைத்துள்ளனர். சங்க காலத்தில் கழிவுநீர் மேலாண்மையைப் பயன்படுத்தியுள்ள முறைமையிலான  தண்ணீர் தொட்டியும், ஹராப்பா நாகரிகம் போன்று சுடுமண் கழிவுநீர் கால்வாய் வசதியுடைய கட்டிட அமைப்பு போன்ற யாவும் நம்மை ஆச்சரியத்தின் உயரத்;திற்கு அழைத்துச் செல்கின்றது.

    சங்ககாலக் குடியிருப்பு அமைப்புகள் மிகவும் முன்னேறிய மேம்பட்ட நகரவாழ்வு இருந்தமைக்கான சான்றாகத் திகழ்கின்றன. இங்குள்ள குடியிருப்புப் பகுதியில் சுடுமண் ஓடுகள் இரும்புக் கம்பிகளால் வேயப்பட்டுள்ளன. அத்துடன் கூரைகளைத் தாங்க மரத்தூண்களை அமைத்துள்ள விதத்தினை குச்சி நடு குழிகள் மூலமாகவும்  அறிய இயலுகின்றது.

    சங்க கால மக்களின் தொல் எச்சங்கள் கீழடி:

    தமிழகத்தில் நடைபெற்ற அகழ்வாய்வுகளில் கீழடியில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வு தான் மிகப்பெரிய அளவில் நடைபெற்ற அகழ்வாய்வு என்று தொல்லியல் ஆர்வலர்கள் கூறியுள்ளனர். முத்துமணிகள், பெண்கள் விளையாடிய சில்லு, தாயக்கட்டை, சதுரங்க காய்கள், சிறு குழந்தைகள் விளையாடிய சுடுமண் பொம்மைகள் போன்ற  சங்க காலத்தில்  குறிப்பிடப்படும் பல தொல்பொருட்களும் கீழடியில் கிடைத்துள்ளன. பட்டடினப்பாலை  என்ற இலக்கியத்திற்காக  கரிகால் சோழனிடம் பதினோரு நூறாயிரம் பொன் பரிசைப் பெற்ற புலவர் உருத்திரங்கண்ணனார் உறைகிணற்றுப் புறஞ்சேரியினைப் பின்வருமாறு காட்சிப்படுத்துகிறார்.

    பறழ்ப்பன்றிப் பல்கோழி
    உறைக்கிணற்றுப்
    புறஞ்சேரி
    மேழகத்
    தகரொடு சிவல் விளையாட’  (பட்டினப்பாலை- 75.)

    ஊறை கிணறுகள் அமைந்துள்ள புறஞ்சேரியில் பன்றிக் குட்டிகளும், பலவகைக் கோழிகளும் திரிந்து விளையாடின. மற்றொரு பக்கத்தில் துருவாட்டின் (ஆட்டின் ஒரு வகை) கிடாய்களும்  கௌதாரிகளும் விளையாடின என்று பட்டினப்பாலையில் கூறப்பட்டிருக்கும் சுடுமண் உறைகேணிகள் போன்று இங்கு கண்டெடுக்கப்பட்டுள்ளன. அவை 4 அடி, 10 அடி,  18 அடி என்ற மூன்று அளவுகளிலான சுடுமண்ணால் வடிவமைக்கப்பட்டுள்ளன.

    சுடுமண் உறைகேணிகள்:

    ஆற்றங்கரையிலும் பெரிய குளத்திலும் உறை கிணறுகள் அமைத்து – நீர் எடுக்கும் முறையானது பண்டைய சங்க கால தமிழர்களின் வழக்கம் என்பதை  இவ் அகழ்வாய்வு கண்டுபிடிப்பின் மூலம்  உறுதி செய்யலாம். கீழடியில்  அதிக அளவிலான செங்கல் வீடுகளும்,  வீடுகளின் மேற்கூரையில் ஓடுகள் வேயப்பட்டிருந்ததையும்  கண் முன்னே காண இயலுகின்றது. ஓடுகளின் நடுப்பகுதி ஓட்டையுடன் செய்யப்பட்டு அவை இணைப்புகள் மூலமாக ஓடுகளாக வேயப்பட்டுள்ளன. அத்துடன் சாயத்தொட்டி ஒன்றும் அறியப்பட்டுள்ளது. ஆற்றங்கரை ஓரமாக வாழக் கூடிய மக்கள் நீராதாரங்களைத் தங்கள் தொழில் முன்னேற்றங்களுக்கு எங்ஙனம் பயன்படுத்தினர் என்பதற்கு இத்தொட்டி சான்றாதாரமாக விளங்குகின்றது. தென் இந்தியா முழுவதற்கும் கைத்தறி
    நெசவுத் தொழிலுக்குப் பெயர் போன உறையூரில் கிடைக்கப்பட்ட சாயத்தொட்டியினைப் போன்றே கீழடியில் உள்ள தொட்டியும் திகழ்கின்றது.

    பண்டைத்தமிழர்களின் நெசவுத்தொழிலுக்கான சாயத்தொட்டி தொல்லியல் நகரமாக சங்க இலக்கியத்தின் சான்றாவணமாகத் திகழும் சிவகங்கை மாவட்டம் கீழடி கிராமம் சங்க கால மக்களின் தொல் எச்சங்களே ஆகும்.

    மேலும் முத்திரையின் பயன்பாட்டினை நாம் பண்டை இலக்கியமான  பட்டினப்பாலையில் முழுமையாகக் காண முடிகின்றது. பண்டைக்க காலச் சங்க கால மக்களின் நெய்தல் நிலங்களில் காணலாகும் துறைமுகங்கள் தோறும் பண்ட சாலைகள் இருந்துள்ளன. அப்பண்ட சாலைகளில் இறக்குமதி, ஏற்றுமதிப் பொருட்கள் மீது அரச அலுவலர்கள் முத்திரையிட்டுள்ளனர். அங்குச் சிறந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தது. இக்கருத்துக்களைப்  பின்வரும் அடிகளில் காணலாம்.

    அளந்தறியாப் பல்பண்டம்
    வரம்பறியாமை
    வந்தீண்டி
    அருங்கடிப்
    பெருங்காப்பின்
    வலியுடை
    வல்லணங்கினோன்
    புலிபொறித்துப்
    புறம் போக்கியும்
    மலி
    நிறைந்த மலிமண்டபம்”(பட்டினப்பாலை-131-136)

    இத்தகைய புலி இலச்சினையின் பயன்பாட்டினை பட்டினப்பாலையில் காண்கிறோம். அதனைப் போன்றே வேலைப்பாடுடன் அமைந்த சுடுமண் இலச்சினை கீழடியில் கிடைக்கப்பெற்றுள்ளது. மேலும் தமிழகத்தில் இதுவரையிலும் நடை பெற்ற அகழ்வாராய்ச்சியில் தற்பொழுதுதான் முதல்முறையாக சுடுமண் முத்திரை (ஷீல்) கண்டறியப்பட்டுள்ளது. கலை வேலைப்பாடுடன் அமைந்ததாக இம் முத்திரை   திகழ்கின்றது.

    சுடுமண் முத்திரை:

    தற்போது ரப்பர் ஸ்டாம்ப் பயன்படுத்துவது போன்று சங்ககால மக்கள் தங்களின் வாணிப நோக்கத்திற்காகவே முத்திரைக் குறியீட்டை பயன்படுத்திருத்தல் வேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் நவில்கின்றனர். ஆக சங்க இலக்கியங்களின் தொல்லியல் ஆவணம் கீழடி என்ற கூற்றினைக் கட்டாயமாக மறுக்க இயலாது.

    முடிவுரை:

    பண்டைத் தமிழரின் நாகரிக வாழ்க்கை முறையையும் வீரத்தையும் விளையாட்டுத் திறனையும் பழங்காலத் தமிழ்நூல்களால் அறிந்து கொண்டிருக்கும் நமக்குக் கீழடி கண்முன்னே அக்காட்சிகளைக் காட்சிப்படுத்துகின்றன. தொல்லியல் ஆவணமாகத் திகழும் கீழடியில் கண்டெடுக்கப்பட்டுள்ள ஒவ்வொரு பொருளையும் தொகுத்துத் திறந்தவெளி அருங்காட்சியகமாகப் பராமரிக்க வேண்டும் என்பதே வரலாற்று ஆசிரியர்கள் தொல்லியல் ஆய்வாளர்களின் மிகப்பெரிய கனவாகும். கீழடியில் மீண்டும் 2016ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் தொடங்கப்பட்ட  அகழ்வாய்வில் சங்க கால மக்களின் பயன்பாட்டில் இருந்த நாணயங்கள் பல கண்டறியப்பட்டமையும் குறிப்பிடத்தக்கதாகும். அத்துடன் திறந்த வெளி அருங்காட்சியகத்திற்காக மத்திய அரசு இரண்டு ஏக்கர் நிலத்தினை ஒதுக்கவும் வழங்கப்பட்ட உத்தரவால்  பண்டை மக்களின் சான்றாவணம் கண்டிப்பாகப் பாதுகாக்கப்படுவது திண்ணம் என்பது புலனாகிறது. இதன் மூலமாக ஆய்வாளர்களின் திறந்த வெளி அருங்காட்சியகக் கனவு  நனவாகட்டும்.

    ***

    முனைவர்  நா.கவிதா
    தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர்
    எஸ்.எஃ;ப்.ஆர்.மகளிர் கல்லூரி (தன்னாட்சி)
    சிவகாசி.

     

     

    Share
  • விஷ்ணுசித்தரும் வாத்சல்ய பாவமும்

    -முனைவர் நா.கவிதா

    கண்ணன் கோகுலத்தில் வளர்ந்து வந்த வரலாறு மட்டுமே தனது உயிர் மூச்சாகக் கொண்டு பாசுரங்கள் இயற்றியவர் பெரியாழ்வார். ”மன்னர்கள் யாவரும் உய்யவரு கோமான் தன் கண்ணன் என” கோகுலத்தில் அனைவரும் கொண்டாடும்பொழுது, யசோதையாகத் தன்னைக் கருதி எல்லையின்றிப் பெருகும் அன்பால் பெருமாள்மீது இன்தமிழால் பாசுரங்கள் பாடியுள்ளார்.

    பெரியாழ்வார், குலசேகராழ்வார், திருமங்கையாழ்வார் ஆகியோர்  பெருமாளிடம் தாய்ப்பாவனையில் பாசுரங்கள் பாடியவர்கள் ஆவர். இவர்களில் குலசேகராழ்வார் மட்டும் தந்தை நிலையிலும் பாசுரங்கள் பாடியுள்ளார். இவற்றில் பெரியாழ்வாரின் தாய்ப்பாவனைப் பாசுரங்களின் சிறப்புகளையும், தாய் சேய் பாவ உணர்வாகிய வாத்சல்ய பாவம் எங்ஙனம் அமைந்துள்ளது எனும் கருத்தினை   எடுத்துரைப்பதாகவும்  இவ் ஆய்வுக் கட்டுரை அமைந்துள்ளது.

     வாத்சல்ய பாவம் (தாய் – சேய் பாவம்):

     திருமாலுக்குரிய பண்புகளில் ஒன்றாக krishna“வாத்சலயம்”என்பது குறிக்கப்படுகின்றது. “வத்ஸ்லா” என்பது கன்றினைக் குறிக்கும் வடமொழிச் சொல்லாகும். கன்றின் மேல் பசு கொள்ளும் அன்பினைப்போல் இறைவனும் உயிர்கள்மேல் அன்பு உடையவன் என்னும் கருத்தினையே இப்பண்பு உணர்த்துகிறது. அதுவே, தாய் – சேய் அன்பு நிலையே வாத்சல்ய பாவமாக எடுத்துரைக்கப்படுகின்றது. இத்தகைய பாவ உணர்வில் இறைவனின் உயர்ந்த நிலையையும், தனது தாழ்ந்த நிலையையும் முற்றிலும் அடியவர்கள் மறந்து விடுகின்றார்கள்.   இறைவனைத்  தம்முடைய குழந்தையாகப் பாவித்துத் தம்மைத் தாயாகவும், தந்தையாகவும் எண்ணி உண்மையான அன்பினை வெளிப்படுத்துகின்றனர். இப்பூலோகத்தைக் காப்பவனையே தனது அரவணைப்பால் காக்கப்பட வேண்டிய குழந்தையாக எண்ணி பாடுகிறார் விஷ்ணுசித்தர்.

    தாய் – சேய் பாவ பாசுரங்கள்

    வ.எண் பதிகங்களின் தொடக்கம் பாசுர எண் உள்ளடக்கம்
     

    1.

    வண்ண மாடங்கள் 13-22 கண்ணன் பிறந்தான்
     

    2.

    சீதக் கடலுள் 23-43 திருமேனி எழில்
     

    3.

    மாணிக்கங்கட்டி 44-53 கண்ணன் தாலாட்டு
     

    4.

    தண்முகத் துச்சுட்டி 54-63 அம்புலிப்புருவம்
     

    5.

    உய்ய வுலகுபடைத்து 64-74 செங்கீரைப்பருவம்
     

    6.

    மாணிக்கக் கிண்கிணி 75-85 சப்பாணிப்பருவம்
     

    7.

    தொடர்சங் கிலிகை 86-96 தளர்நடைப்பருவம்
     

    8.

    பொன்னியற் கிண்கிணி 97-107 அச்சோப் பருவம்
     

    9.

    வட்டு நடுவே 108-117 புறம் புல்கல்
     

    10.

    மெச்சூது சங்க 118-127 அப்பூச்சி காட்டுதல்
     

    11.

    அரவணையாய் ஆயரேறே 128-138 தாய்ப்பாலுண்ண அழைத்தல்
     

    12.

    போய்ப்பா டுடைய 139-151 காதுகுத்தல்
     

    13.

    வெண்ணெய் 152-161 நீராட அழைத்தல்
     

    14.

    பின்னை மணாளனை 162-171 குழல்வாரக் காக்கையை வா எனல்
     

    15.

    வேலிக்கேல் வெட்டி 172-181 காக்கையைய் கோல்  கொண்டு  வரக்  கேட்டல்
     

    16.

    ஆனிரை மேய்க்கநீ 182-191 பூச்சூட அழைத்தல்
     

    17.

    இந்திர னோடு 192-201 காப்பிடல் (திருஷ்டி கழித்தல்)
     

    18.

    வெண்ணெய் விழுங்கி 202-212 பிள்ளை விளையாட்டு
     

    19.

    தன்னே ராயிரம் 223-233 தாய்பாலூட்ட  அஞ்சுதல்

    பெரியாழ்வாரது பாசுரங்களில் ஏறக்குறைய பாதிக்கும் மேலாக தாய் – சேய் பாவமே காணப்படுகின்றது.  “தாயார் மகிழ ஒன்னார் தளரத் தளர்நடை நடந்தனை” என்று தனது குழந்தை வளர்கின்ற நிலையைக் கண்டு அவனது லீலைகளைப்  பாடியுள்ளார். சொற்சுவையும், பொருட்சுவையும் கொண்டதாக, இசையோடு பாடி மகிழும் வகையில் இப்பாடல்கள் யாவும் அமைந்துள்ளன.

    தேவகி யசோதையாக யசோதை பெரியாழ்வாராக

         பெரியாழ்வார் பாசுரங்களில் தாய்மை உணர்வு மிகுதியும் மிளிர்கின்றது என்பதைத் தொடக்கத்தில் இருந்தே கண்டுவருகிறோம். அதிலும் தொடக்கப் பாசுரங்களில் எல்லாம் பெரியாழ்வார் கண்ணனைத் “தேவகியின் குழந்தையாகவே” மறக்காமல் தேவகியை நினைவூட்டுகிறார். பின்னர், “யசோதையின் குழந்தை” என்பதையும் முன்வைத்ததோடு, ஒரு கட்டத்தில் தேவகி, யசோதை என்பதெல்லாம் மறைந்து – என் பிள்ளை, என்மகன் கோவிந்தன், என் சிறுக்குட்டன் என்று தன் மகனாகவே எண்ணிப்பாடி மகிழ்கின்றார்.

    ”சீதக் கடலுள் ளமுதன்ன தேவகி
    கோதைக் குழலா ளசோதைக்குப் போத்தந்த
    பேதைக் குழவி!” (நாலாயிர திவ்யப் பிரபந்தம் – 23) என்பதில் கண்ணன் தேவகி குழவியாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளான்.
    பின்னர்,
    மைத்தடங் கண்ணி யசோதை வளர்க்கின்ற
    செய்த்தலை நீல நிறத்துச் சிறுபிள்ளை!” (நாலாயிர திவ்யப்  பிரபந்தம்-34) என்று யசோதை வளர்க்கும் நீலநிறமான சிறுபிள்ளை என்று அடைமொழியிட்டுப் பாடுகிறார். அதனை அடுத்து, யசோதை மறைந்து பெரியாழ்வார் வெளிப்படையாக என்மகன் என்று கூறுகின்ற முறைமையை,

    ”என் மகன் கோவிந்தன்கூத்தினை இள மாமதீ
    நின்முகம் கண்ணுள ஆகில்,நீயிங்கே நோக்கிப் போ” (நாலாயிர திவ்யப்  பிரபந்தம்-54) என்ற பாசுரத்தில்  காணலாம். குழந்தைக்கு அம்புலியைக்காட்டி அமுது கொடுக்கும் இப்பதிகத்தில் பெரியாழ்வார் தனது குழந்தையைக் கோவிந்தா, பெருமான் என்று பதிவு செய்துள்ளார்.

    ”என் சிறுக்குட்டன் எனக்கோர் இன்னமுது எம்பிரான்
    தன் சிறுக் கைகளால் காட்டிக் காட்டி யழைக்கின்றான்” (நாலாயிர திவ்யப்  பிரபந்தம்-55)

    “என் குழந்தை மிகச் சிறியவன், இனிய அமுது போன்று இனிக்கக்கூடியவன் என்னைக் கண்டு வரும்படியாகக் கைகளால் சைகை காட்டி அழைக்கிறான்” என்பதில் பெருமிதத்துடன் எனது குட்டன், என்மகன் என்று கூறுவதில் மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறார். ஆக, மேற்கூறிய பாசுரங்களால் பெருமாளை வளா்ப்பதில் தனது அன்பினைப் பதிவுசெய்தவர்களாகத் தேவகி யசோதையாக யசோதை பெரியாழ்வாராக மிளர்வதைக் காண இயலுகின்றது.

    திருமேனி அழகில் மயங்கும் தாய்உள்ளம்

         தாய் தனது குழந்தையின் எல்லாச் செயல்களிலும்  தனது மனத்தினைப் பறிகொடுக்கிறாள். தனது குழந்தை தூங்கினாலும், அழுதாலும் அழகுடையதாகவே தாயின் பார்வையில் காண்ப்படுகிறது. அவ்வகையில் உலகையே படைத்த இறைவன் குழந்தையாக அவதரித்தவுடன் அழகில் மயங்கிய தாய்உள்ளம் கோகுலத்தில் உள்ள கோபியர்கள் அனைவரையும் அழைத்துக் கண்ணனின் அழகைக் காணவரும்படி அழைக்கிறது. பாதாதி கேச வருணனையாகப் பெருமாளின் பாதத்தில் தொடங்கிக் கால்விரல், முழந்தாள், தொடை, முத்தம், இடை, உந்தி, வயிறு, மார்பு, தோள்கள், கைகள், கழுத்து, வாய், மூக்கு, கண்கள், புருவம், மகரக்குழை, நெற்றி, குழல் என்று அனைத்து உறுப்புகளின் அழகையும் அணுஅணுவாக இரசிக்கிறார்.

         இங்கு யசோதையாகவே பெரியாழ்வார் மாறிவிட்டார் என்தற்கான மற்றொரு சான்று புலப்படுகிறது. தாயின் பார்வையில் குழந்தையின் உறுப்புகளில் வேறுபாடு இல்லை. அதனால்தான் ஆண் குழந்தையின் பிறப்பு உறுப்பை முத்தம் என்ற சொல்லினால் எடுத்துரைத்து வருணனை  செய்கின்றார்.

    “பேதைக் குழவி பிடித்துச் சுவைத்துண்ணும்
       பாதக் கமலங்கள் காணீரே, பவளவாயீர்! வந்து! காணீரே!”      (நாலாயிர திவ்யப் பிரபந்தம்-23)

    என்று பாதாதிகேச வருணனையில் பாதத்தினைக் காணக் கோபியர்களை அழைக்கின்றார். அப்பாதாதிகேச வருணனையின் உள்ளடக்கத்தைப் பின்வரும் பகுதியில்  காணலாம்.

    • பாதம் – தாமரை மலர் போன்ற பாதங்களை வாயில் வைத்து சுவைக்கும் அழகு.
    • பத்து விரல்கள் – முத்தும், மணியும், வயிரமும், நன்பொன்னும் கலந்தாற் போன்ற பத்து விரல்களின்அழகு.
    • கணுக்கால் – வெள்ளித்தண்டை பெருமானின் கணுக்காலில் இருப்பதால் தண்டைக்கு என்னே ஒரு பெருமை.
    • முழந்தாள் – கயிற்றால் அடிக்க வரும் யசோதையிடம் இருந்து தப்பிக்க கண்ணன் தவழும் பொழுது உள்ள முழந்தாள் அழகே அழகு.
    • தொடை – பூதனை, இரணியன் என்ற இருவரையும் கொன்ற கண்ணனின் தொடை அழகினைக் கோபியர்களே காண்பீர்களாக.
    • முத்தம் – அஸ்த நட்சத்திற்கு பத்து நாட்கள் முன்பு தேவகியின் வயிற்றில் பிறந்த கண்ணனின் முத்தத்தின் அழகை ஆனந்திக்கிறாள்.
    • இடை – இடையில்  உள்ள அரைஞாண், பவழவடம், முத்துவடம் இவற்றின் பெருமையைக் கூறல்.
    • உந்தி – குட்டியானை போன்று யாதவச் சிறுவர்களை வெற்றிபெறும் கண்ணனின் உந்தி அழகை அவன் துயிலும் பொழுது மட்டுமே காண இயலும்.
    • உதரம் – கண்ணனது விஷமம் தாங்காமல் கட்டப்பட்ட தாம்புக் கயிற்றால் உண்டாகிய தழும்பினைக் காணுங்கள்.
    • திருமார்பு – கௌஸ்துப மணி துலங்கும் கண்ணனது மார்பழகு.
    • தோள்கள் – சகடாசுரனை நாலைந்து மாதக் குழந்தையாக இருந்த கண்ணன் சிறிய பாதத்தால் உதைத்தழித்தான். அவனது தோள் அழகினைக் காண்பித்து மகிழ்தல்.
    • கைகள் – சங்கு, சக்கர ரேகைகள் பொருந்திய களவுசெய்து உண்ட நெய்ப்பசையுடைய கைகளின் அழகைத் தோழியரிடம் காட்டல்.
    • கண்டம் – நந்தகுமாரன் வயிற்றில் பிரளய காலத்தில் உலகங்களே அடைக்கலமாயின. அத்தகைய கழுத்து அழகினைக் கண்டு மெய்சிலிர்த்தல்.
    • வாய் – கொவ்வைக் கனியை ஒத்த வாயை உடைய சிங்கக் குட்டி கண்ணனே.
    • எள்ளுப்பூ நாசி – கண்ணனைக் குளிப்பாட்ட மஞ்சளால் நாவினை தேய்க்கும் பொழுது – கண்ணழகால், உதட்டில் தோன்றும் குறும்புச் சிரிப்பழகால், எள்ளுப்பூ நாசி அழகால் யசோதையையும் கோகுலத்தில் உள்ள அனைவரையும் பூரிப்படையச் செய்வான்.
    • கண்கள் – அசுரர்களின் தீமையை அழித்து வளர்கின்ற கண்ணனின் கண் அழகே அவனுக்கு அப்பெயரை இட்டுத்தந்தது. அக்கண்ணழகைக் காண இரு கண்கள் போதுமா?
    • புருவம் – கருப்பு வைரம் போன்ற புருவ அழகைக் காரிகையீரே காண்பீர்களாக.
    • காது – மகரகுண்டலங்களைக் காதில் அணிந்து அவற்றுக்குக் கண்ணன் பெருமை சேர்க்கிறான்.
    • நெற்றி – சிறுமிகளது விளையாட்டுப் பொருட்களான சிறுமுறம், குட்டிப்பானை, வளர்ப்பு மைனா ஆகியவற்றைப் பிடுங்கிக் கொண்டு நெற்றியில் முத்து முத்தாக வியர்வை அரும்ப ஓடும் கண்ணன் அழகைக் காணுங்கள்!
    • கூந்தல் – கன்றுகளை மடக்கக் கண்ணன் பொன்கொம்பினைப் பிடித்துக் கொண்டு ஓடும்பொழுது காற்றில் கண்ணனின் சுருண்ட முடிகள் அசைகின்ற அழகைக் காண  விரைந்து வருவீர்களாக.

    இவ்வாறு  கண்ணனின் அழகைக் கூறும் 21 பாசுரங்களை எவா் பக்திமையுடன் இயம்புகின்றனரோ அவர்கள் பெருமானுடன் பரமபதத்தில் பிரியாது இருப்பர் என்று கூறி இப்பாசுரப் பகுதியினை நிறைவு செய்கிறார்.

    ”சுருப்பார்குழலி யசோதை முன் சொன்ன
    திருப்பாத கேசத்தைத் தென்புதுவைப் பட்டன்
    விருப்பால் உரைத்த இருபதோ டொன்றும்
    உரைப்பார் போய் வைகுந்தத் தொன்றுவர் தாமே!”  (நாலாயிர திவ்யப் பிரபந்தம்-43)

    இப்பதிகப் பகுதியில் பெரியாழ்வார் தன்னை முழுமையாக யசோதையாக மாற்றிக் கொண்டமைக்குப் பல சான்றுகள் காணக் கிடக்கின்றன.

    வாய்மொழி இலக்கியப் பதிவாகத் தாலாட்டு :

    குழந்தையைத் தூங்கச் செய்வதற்காக உறவினர்கள் அளிக்கும் பரிசுப் பொருட்களை வரிசைப்படுத்திக்கூறித் தாலாட்டுப் பாடும் இயல்பான தாயாக பெரியாழ்வார் “தாலாட்டு”  என்ற பாசுரப் பகுதியில் மிளிர்கிறார். வாய்மொழி இலக்கியமாக மிளிரும் நாட்டுப்புற இலக்கியத்தில் குழந்தையைத் தூங்க வைக்கும் தாலாட்டுப் பாடல்களில் உறவினர்கள் பரிசுப் பொருட்களுடன் வந்து பார்க்கும் நிலை நவிலப்பட்டுள்ளது.

    “சின்னண்ணன் வந்தானோ கண்னே! – உனக்கு
    சின்னச் சட்டை கொடுத்தானோ? – உனக்கு
    பட்டு ஜவுளிகளும் கண்ணே! – உனக்கு
    பலவர்ணச் சட்டைகளும்
    பட்டுப் புடவைகளும் கண்ணே! – உனக்கு
    கட்டிக்கிடக் கொடுத்தானோ?”

    என்ற வாய்மொழி இலக்கியக் கருத்தினைப் பதிவுசெய்வது போன்று உலகின் முழுமுதல் கடவுளான பெருமாளுக்குப் பிரம்மா, சிவன் முதலிய கடவுளர்களும் ஏனைய தேவர்களும் பரிசுப் பொருட்களுடன் வந்த தத்தமது தகுதிக்கேற்ற இடத்தில்  நின்றனர் என்று பெரியாழ்வார் பாடுகிறார்.

    “மாணிக்கங் கட்டி வயிர மிடைகட்டி
    ஆணிப்பொன் னாற்செய்த வண்ணச் சிறுதொட்டில்
    பேணி யுனக்குப் பிரமன் விடுதந்தான்
    மாணிக் குறளனே தாலேலோ” (நாலாயிர திவ்யப் பிரபந்தம் – 44)

    திருமாலின்  உந்தியில் இருந்து பிறந்தமையால் பிரம்மனுக்குத் திருமால் தந்தை உறவாகும். அதே திருமால் கண்ணனாக அவதரித்த பொழுது பிரமன் ஆணிப்பொன்னால் சிறுதொட்டிலைத் தருகிறான். இந்திரனோ அழகான சதங்கையைத் தருகிறான். பரிசுப்பொருளைத் தந்துவிட்டு வெகுதூரத்திலும் இல்லாமல் அருகிலும் இல்லாமல் நடுவில் நின்றான் என்று கூறித் தாலாட்டுப் பாடிக் கண்ணனைத் தூங்கவைக்க முயல்கிறார்.

         சிவந்த திருக்கண்களை உடைய கருமேகம் போன்ற கண்ணனே, உனக்கு அனைத்து தேவர்களும் சங்கில் உயர்ந்ததாகத் திகழும் வலம்புரியையும், உனது திருவடிக்குச் சதங்கைகளையும், அழகிய முன்சரிவளையும், தங்க அரைஞாண் கயிறும், திருமார்பில் அணிய நாணும் அனுப்பியுள்ளனர் என்று பரிசுப்பொருட்களின் பட்டியலைக் குழந்தைக்கண்ணனிடம் கூறிவிட்டுத் தாலாட்டுப் பாடுகின்றார் பெரியாழ்வார். இதனை,

    “சங்கின்  வலம்புரியம் சேவடிக் கிண்கிணியும்
    அங்கைச் சரிவளையும் நாணும் அரைத்தொடரும்
    அங்கண் விசும்பில் அமரர்கள் போத்தந்தார்
    செங்கண் கருமுகிலே! தாலேலோ! தேவகி சிங்கமே தாலேலோ!”     (நாலாயிர திவ்யப்  பிரபந்தம் – 47)

    என்ற பாசுரத்தில் அறியலாம். அத்துடன் கண்ணனுக்கு வந்த பரிசுப் பொருட்கள் பற்றிப் பெரியாழ்வார் கூறும் கற்பனை வளத்தைப் பின்வரும் பட்டியல்  பகுதியில் காணலாம்.

    பெரியாழ்வாரின் கற்பனையும் ஆழ்ந்த அன்பும்

    வ.எண் பரிசுப் பொருட்கள் பரிசுவழங்கியவா்
    1. ஆணிப்பொன் தொட்டில் பிரம்மன்
    2. இடைச் சுரிகை ஈசன்
    3. சதங்கை இந்திரன்
    4. தேவர்கள் வலம்புரிச்சங்கு,சதங்கை,அரைஞாண் கயிறு,

    முன்சரிவளை

    5. குபேரன் ஐம்படைத்தாலி,ஆரம்
    6 வருணன் முத்தாரம்,சங்குவளை
    7 திருமகள் துளசிமாலை
    8 பூமாதேவி கச்சை,உடைவாள், தங்கவளையல், நவரத்தினச்சுட்டி, தங்கப்பூ
    9 பார்வதி வாசனைப்பொருட்கள்,

    கண்ணுக்கு மை, சிந்துரம்

    இத்தகையப் பரிசுப் பொருட்கள் பற்றிய விளக்கத்தில் பட்டா்பிரானின் கற்பனையும் பெருமாள்மீது அவர் கொண்டுள்ள ஆழ்ந்த அன்பும் புலப்படுகின்றது. எவர் இத்தகைய பத்து பாசுரங்களை பக்தியோடு படிப்பரோ அவர்களுக்கு எக்காலத்திலும் துன்பம் இல்லை.

    கருமலைக்குட்டியின் தளர்நடையில் மகிழும் விஷ்ணுசித்தர்:

         பாதங்களை முழுவதும் தரையில் பதிக்காமல் தத்தி நடைபயிலும் குழந்தையின் தளர்நடையில் யசோதை மனம்விரும்பி மூழ்கி காணப்படுகிறாள். ஓரடி எட்டு வைத்து நடைபயிலும் குழந்தை, தான் சாதித்த மனவுணர்வினால் பெரும் புன்னகையை வெளிப்படுத்தும். இதில் மனம் மகிழ்ந்து யசோதை இருப்பதை,

    “முன்நல் ஓர் வெள்ளிப் பெருமலைக்
    குட்டன் “மொடு மொடு” விரைந்தோட
    பின்னைத்  தொடர்ந்ததோர் கருமலைக்
    குட்டன் பெயர்ந்தடியிடுவது போல்
    பன்னியுலகம் பரவிஓ வாப்
    புகழ் பலதேவன் என்னும்
    தன் நம்பியோடப் பின்கூடச்
    செல்வான் தளர்நடை நடவானோ!” (நாலாயிர திவ்யப் பிரபந்தம் – 90)

    என்ற பாசுரத்தில் காணலாம். வெண்மலைக்குட்டி போல பலராமன் முன்னே ஓட, கருமலைக்குட்டி போன்ற கிருஷ்ணன் பின்னே தளர்நடை மிளிர உடன்பிறந்தோனைத் துரத்துகிறான். இத்தகைய நடையழகை  யசோதையுடன் பெரியாழ்வாரும் மானசீகமாகக் கண்டு மனம்மகிழ்கின்ற பகுதியே மேற்கூறிய பகுதியாகும்.

    மேலும், எம்பெருமானது தளர்நடை எவ்வாறு இருக்கவேண்டும் என்று தனது மன விருப்பத்தினை எடுத்துரைக்கிறார். பகைவர்களை வென்று, அவர்களின் தலையின் மேல் தளர்நடை எடுத்து நீ நடக்க வேண்டும். அந்நடை நடவானோ? என்று கேட்பதில்  கண்ணன் அவதாரமூர்த்தி என்பதை உணர்த்திச் செல்கிறார். இதனை,

    “தன்னைப் பெற்றோற்குத் தன்வா யமுதம்தந்
    தென்னைத் தளிர்ப்பிக்கின்றான்
    தன்னெற்று மாற்றலர் தலைகள்
    மீதெ தளர் நடை நடவானோ!”   (நாலாயிர திவ்யப் பிரபந்தம் – 89)
    என்ற பாசுரத்தால் அறியலாம். கண்ணனை நோக்கி நடவானோ? எனத் தனது வினாவினைக் கேட்பதன் வாயிலாகக் கண்ணன் அவதராமூர்த்தி என்பதையே கூறிச்செல்கிறார். 

    குழந்தைப் பராமரிப்பில் பெரியாழ்வார் உள்ளம்: 

         பெரியாழ்வாரின் பாசுரங்களில் காணலாகும் சொல்லாட்சியில் ஓர் அன்னையின் கவலையும், ஆதங்கமும், உண்மையான அன்பு மிகுதியும் மிளிர்கின்றன. ஓர் ஆண்மகனால் குழந்தைப் பராமரிப்புச் செயல்களாகிய நீராட்டுதல், பூச்சூடுதல், அணிகலன்கள் அணிவித்து அலங்கரித்தல், தூங்கச் செய்தல் போன்ற பணிகளைச் சிறப்பாக, அன்பாகச் செய்ய இயலுமா? என்பதைத் தனது நுட்பமான உணர்ச்சிகளால், நளினமான மன உணர்வுகளால் தன்னை யசோதையாகப் பாவித்து மிகச் சிறப்பாக, யதார்த்தம் புலப்படும் வகையில் பாசுரங்களைப் படைத்துச் செல்கிறார் பெரியாழ்வார்.

    “கறந்தநற் பாலும் தயிரும் கடைந்தஉறிமேல் வைத்த வெண்ணெய்
    பிறந்ததுவே முதலாகப் பெற்றுஅறியேன் எம்பிரானே
    சிறந்த நற்றாய் அலர்தூற்றும் என்பதனால் பிறா்முன்னே
    மறந்தும் உரையாட மாட்டேன்! மஞ்சனம் ஆடநீ வாராய்.” (நாலாயிர திவ்யப் பிரபந்தம் -158)

    என்ற பாசுரத்தில் முழுமையாக ஒரு தாயின் மனஉணர்வுகளோடு கண்ணனிடம் உரையாடும் பெரியாழ்வாரைக் காண இயலுகின்றது. கண்ணா! நீ பிறந்தநாள் முதற்கொண்டு கறந்த பாலையும் கட்டித்தயிரையும் உறியில் வைத்த வெண்ணெயையும் ஒருசேர நான் ஒருபொழுதும் பார்க்கவில்லை. நான் உனக்குச் சிறந்ததாயாக இருந்து நீ செய்த தீம்புகளை மற்றவர்முன் மறந்தும் பேசமாட்டேன்! என்று உறுதிமொழி தருகிறாள். ஆக, ”கண்ணா மஞ்சனம் ஆட வருவாயாக!” என்று தாய்மையுடன் அழைக்கிறார் பெரியாழ்வார்.

         நீராடும் முறைமைப்பற்றிக் கூறுகையில் குளிர்ச்சிக்காக நெல்லிக்காய் இட்ட நீரை நீராடுதலும், உடலுக்குப் பாதுகாப்பாக மஞ்சள் பயன்படுத்திய முறைமையையும் காண முடிகின்றது.

    “காய்ச்சின நீரொடு நெல்லி கடாரத்தில பூரித்து வைத்தேன்
    வாய்த்த புகழ்மணி வண்ணா! மஞ்சனம் ஆடநீ வாராய்.” (நாலாயிர திவ்யப் பிரபந்தம் – 154)

    என்பதிலும்,

    “மஞ்சளும் செங்கழு நீரின் வாசிகையும் நாறு சாந்தும்
    அஞ்சனமும் கொண்டு வைத்தேன், அழகனே! நீராட வாராய்.” (நாலாயிர திவ்யப்  பிரபந்தம் -155)

    என்ற பகுதியிலும், குறும்புகள் செய்யும் மாயக்கண்ணனை நீராட வருமாறு  அழைப்பதையும், நீராடப் பயன்படுத்திய பொருட்கள் பற்றியும் காணமுடிகின்றது. இன்றும் கோயில்களில் திருமாலின் திருமஞ்சனத்தின் போது பெரியாழ்வார் இயற்றிய நீராட அழைக்கும் பாசுரங்களைப் பாடுவது வழக்கமாகும்.

     காப்பிடும் வழக்கு:

         பெரியாழ்வார் தம்மைத் தாயாகவும், யசோதையாகவும், ஆயர்பாடியின் ஆய்ச்சியாகவும்,  செவிலித் தாயாகவும், பல தாயர்களின் கூற்றுகளில்  தமது பாசுரங்கள் அனைத்தையும் அமைத்துள்ளார். பக்திமை உணர்வின் பெட்டகமாக அன்பின் களஞ்சியமாகத் திகழும் இப்பாசுரங்கள் தாய் சேய் பாவத்திற்கு நல்லதோர் சான்றாகத் திகழ்கின்றது. இப்பகுதியில் காப்பிடல் (திருஷ்டி கழித்தல்) என்கின்ற பகுதி தாய்மையின் ஆழ்அன்பின் பதிவாகத் திகழ்கின்றது.

         கண்ணனின் அழகினைக் கண்டு, குறும்புகளைக் கண்டு கண்ணேறு வராதபடி காப்பிட வேண்டும் என்று யசோதை எண்ணுகிறாள். குழந்தைகள் உள்ள வீட்டில் கண்டிப்பாகக் கண்ணேறு  கழித்தல் செய்வர். ஏனெனில் சில கண்களுக்குத் தீமை விளைவிக்கும் சக்தி உண்டு என்ற நம்பிக்கை உண்டு. அதன்படியே யசோதை கண்ணனுக்குக் கண்ணேறு படாமல் இருக்கவும் அந்திப்பொழுதில் தீயசக்திகள்  நெருங்காமல் இருக்கவும் கண்ணனைக் காப்பிட  அழைக்கிறாள்.

    “மன்றில் நில்லேல். அந்திப் போது மதிள்திரு வெள்ளறை நின்றாய்!
    நன்று கண்டாய் என்றன் சொல்லு நான் உன்னைக் காப்பிட வாராய்”     (நாலாயிர திவ்யப் பிரபந்தம் – 193)

    என்ற அடிகளில் சந்திவேளையில் கெட்ட தேவதைகள் நாற்சந்தியில் நிற்கும். அதனால் கண்ணனுக்கு ஏதேனும் துன்பம் உண்டாகுமோ என்று யசோதை அஞ்சும் உள்ளத்தைக் காணமுடிகின்றது.

         மேலும் அந்திப்பொழுதில் விளக்கேற்றி அந்தணர்கள் சங்கிலே நீர் கொண்டு மந்திரம் கூறிக் காப்பிடும் வழக்கு உண்டு என்பதைப் பின் வரும் பாசுர அடிகளில் காணலாம்.

    “இருக்கொடு நீர்ச்சங்கிற் கொண்டிட்
     டெழில் மறையோர் வந்து நின்றார்
    தருக்கேல்நம் பிசந்தி நின்று
    தாய்சொல்லுக் கொள்ளாய் சிலநாள்
    திருக்காப்பு நானுன்னைச் சாத்தத்
    தேசுடை வெள்ளறை நின்றாய்
    உருக்காட்டு மந்தி விளக்கின்
    றொளிகொள்ள ஏற்றுகேன் வாராய்!” (நாலாயிர திவ்யப் பிரபந்தம் – 200)

    இங்கு யசோதையின் புலம்பல்மொழிகள் பதிவாகியுள்ளன. ”வேதம்கூறிக் கொண்டு நல்ல நீரை சங்கிலே ஏந்திக்கொண்டு வரும் பிராமணர்கள் கண்ணா உனக்கு இரட்சையிட வந்துள்ளார்கள். ஆனால்  நீயோ நாற்சந்தியிலே நின்று கொண்டிருக்கிறாய். அழகிய இரட்சையை உனக்கு இட, உன் வடிவத்தைக் காட்டும் அந்தி விளக்கை ஒளியுடன் நான் ஏற்றுவேன் என்றும் அதைக் காண விரைந்து வருவாயாக!” என்றும் யசோதை அழைக்கிறாள்.பண்டைக்கால காப்பிடும் வழக்கு முறைமைகளையும் இங்கு அறிய இயலுகின்றது.

         இவ்வாறாக, தாய்பாவனை என்ற பகுதியில் அவதார நாயகனுக்குத் தமிழகக்  குழந்தையின் வளர்ப்புமுறையை ஏற்றிக்கூறும் பொழுது பல்வேறு வழிமுறைமைகளைப் பதிவுசெய்துள்ளார் பெரியாழ்வார். தமிழக மக்களின் குழந்தை தொடர்பான காதுகுத்தல், தொட்டிலிடுதல், குழந்தையின் உணவினைத் தேர்ந்தெடுத்தல், யானைத்தந்தத்தால் செய்த சீப்பால் குழல்வாருதல்,  பூச்சூடல் போன்ற இன்னும் பல தரவுகளைப் பதிவுகளாக்கிப் பாசுரத்திற்குப் பொலிவும், படிக்கும் அடியவர்களுக்கு நெகிழ்வும், ஈடுபாடும் தோன்றும் வகையில் பாசுரங்கள் யாவற்றையும் சிறப்புடன் அமைந்துள்ளார்

    ***** 

    முனைவர் நா.கவிதா,
    உதவிப்பேராசிரயர், தமிழ்த்துறை,
    எஸ்.எஃப்.ஆர். மகளிர் கல்லூரி,
    தன்னாட்சி,
    சிவகாசி.

     

     

     

     

    Share