‘சங்க இலக்கியங்களின் சான்றாவணம் –  கீழடி’

2

-முனைவர் நா.கவிதா

‘எங்கே  வரலாறு  மவுனம் சாதிக்கத் தொடங்குகிறதோ அங்கே இடப்பெயர்களும் ஊர்ப்பெயர்களும் தம் வாய் திறந்து பேசத் தொடங்கும்.’

-எல்.வி. இராமசாமி ஐயர்

***

தமிழகத்தில் இதுவரையிலும் நடைபெற்ற பல்வேறு தொல்லியல் ஆய்வுகளும் அகழ்வாய்வுகளும் பழந்தமிழ் மக்களின் வாழ்வியல் முறைகளைப் பல அரிய ஆதாரங்களால் விளக்குகின்றன. அவ்வகையில் இலக்கியங்களிலும் பல்வேறு தரவுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. “கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளொடு முன்தோன்றி மூத்தகுடி” என்ற வெண்பாமாலைக் கூற்று தமிழர்களின் பெருமையினைப் பழமையான தமிழ் மொழியினை, நாகரிகமான வாழ்க்கை முறையினை,  உலகிற்குப் பறை சாற்றுகின்றது என்பது மறுக்க இயலா உண்மை.

பழந்தமிழர்கள் பயன்படுத்திய ஆயுதங்கள், முதுமக்கள் தாழிகள், மண்பாண்டப் பொருட்கள் பல்வேறு இடங்களில் அகழ்வாய்வு மூலமாகக் கிடைத்துள்ளன. அவற்றில் தமிழகத்திலே முதல் முறையாக கி.மு. 3-ஆம் நூற்றாண்டு  காலத்தில் வாழ்ந்த சங்ககாலத் தமிழர்களின் நகரமே மண்ணுக்குள் புதையுண்டு  இருப்பதை எடுத்துச் சொல்லும் அகழ்வாய்வே கீழடி எனும் கிராமம். எல்.வி.இராமசாமி ஐயர் அவர்களின் கூற்றுப்படி மதுரையின் வரலாற்றை மறக்க உலகம் முயலும் சமயத்தில் , தன் பெயரின் கீழேயே வரலாறு உறைந்திருப்பதை எடுத்துக்காட்டியது கீழடி என்னும் தொல்லியல் ஆவணம் ஆகும். அத்தகைய  கீழடியில் கண்டெடுக்கப்பட்டுள்ள சங்ககால மக்களின் அன்றாட வாழ்வியல் புழங்கு பொருட்களைப் பற்றி எடுத்துரைப்பதே இந்தஆய்வுக் கட்டுரையின் நோக்கமாகும்.

கீழடி பள்ளிச்சந்தை புதூர்’ கண்டெடுக்கப்பட்ட திறம்:

ஆதிகாலத்தில் மலை மீதுள்ள குகைகளில் வாழ்ந்து வந்த மனிதன்  நாகரிக வளர்ச்சியால் ஆற்றங்கரையில் வாழத் தொடங்கினான். இக்கால கட்டத்தில் தனக்கான உணவுகளை விவசாயம் மூலம் பயிரிடவும் பாதுகாப்பான வீடுகளை உருவாக்கவும் கற்றுக்கொண்டான். அத்துடன் பயன்பாட்டுப் பொருட்களை  மிகுதியாக உருவாக்கிய இக்கால மனிதனே சங்ககால மனிதன் என்றும் அழைக்கப்படுகிறான். தமிழகத்தில் ஓடும் கொள்ளிடம், காவிரி, வைகை, தாமிரபரணி போன்ற ஆற்றங்கரைகளில் சங்ககால மனிதனின் பல தொன்மப் பொருட்கள் ஆராய்ச்சியாளர்களால்  கண்டெடுக்கப்பட்டுத் தொடர்ந்து ஆய்வு செய்யப்பட்டும் வருகின்றன.

அவ்வகையில் வைகை ஆறு உற்பத்தியாகும் வருச நாடு முதல் வைகை ஆறு முடிவடையும் ஆற்றங்கரை வரை ஆற்றின் இருபுறமும் சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்தை எல்லையாக வைத்துத் தொல்பொருள் ஆய்வாளர்கள் ஆய்வுகள் பல செய்து வந்தனர். அதில் 270 கிராமங்களில் சங்கத் தமிழர்கள் பயன்படுத்திய பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. முதுமக்கள் தாழிகள் பண்டை எழுத்துக்களுடன் கூடிய மட்பாண்டங்கள் முதலியவை விவசாய நிலத்தில் தென்னந்தோப்பில் ஏராளமாகக் கிடைத்தன. இது குறித்துத் தகவல் அறிந்த தொல்லியல் ஆய்வாளர்கள் அப்பகுதி முழுவதும் ஆய்வு மேற்கொள்ள ஆய்வின் முடிவில் சங்க கால மனிதன் அப்பகுதியில் வாழ்ந்தமைக்கான தடயங்கள் மிகுதியாக  கண்டெடுக்கப்பட்டன. கீழடி எனும் இப்பகுதியும் ‘குந்திதேவி சதுர்வேதி மங்கலம்’ என்று பாண்டிய அரசின் பெயரால் அழைக்கப்பட்டமையும் இவ்விடத்தில் நோக்கத்தக்கது. இதன் அடிப்படையில் கீழடி பள்ளிச்சந்தை புதூரில் தரைமட்டத்தில் இருந்து 3 அடி உயரமான மேட்டுப் பகுதியை அகழ்வாராய்ச்சிப் பணிக்குத் தேர்ந்தெடுத்தனர்.

கீழடி – புதையுண்ட நகரம்:

ஏறத்தாழ 2300 ஆண்டுகளுக்கு முந்தைய பழந்தமிழர்களின் 120 ஏக்கர் பரப்பிலான வாழிடம் அகழ்வாராய்ச்சி மூலமாகக் கீழடி எனும் கிராமத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இக் கிராமம் மதுரையில் இருந்து 18 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் திருப்புவனம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதியாகத் தற்பொழுது அமைந்துள்ளது. பெங்களுரில் உள்ள மத்திய அரசின் தொல்பொருள் ஆய்வுத்துறை கடந்த 2015 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரையிலும்  அகழ்வாராய்ச்சிப் பணிகளை  மேற்கொண்டு வந்துள்ளது. மீண்டும் 2016 ஆம் ஆண்டு  ஜனவரி மாதத்தில் அகழ்வாராய்ச்சிப் பணிகளைத் தொடங்க உள்ளதாகத் தொல்லியல் கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் கூறியுள்ளார். ஜனவரி மாத அகழ்வாராய்ச்சியில் பண்டைக்கால மக்களின் நாணயங்கள் பல கிடைக்கப்பெற்றன.

பண்டைக்கால மண் பொருட்களின் சில்லுகளைச் சேகரித்துப் பிரித்து வைக்கப்பட்டுள்ள படம் ஆய்வுப்பணியில் கிடைக்கப்பட்ட பல மண்பாண்டப் பொருட்களின் சில்லுகள் பிரிக்கப்பட்டு பொது மக்கள் பார்வைக்காகவும் வைக்கப்பட்டதாகும். இதுவரையிலும் மொத்தம் 3 பிரிவாகப் பிரித்து 43 குழிகள்  12 அடி அகலத்திற்கும், 12அடி நீளத்திற்கும் வெட்டப்பட்டு  அவற்றில் அகழ்வாய்வுப் பணி வெற்றிகரமாக நடைபெற்றுள்ளது.

கீழடியிலுள்ள குழிகளிலே தான் சிதைந்த நிலையிலான சங்ககால மக்களின் வீட்டின் செங்கல் சுவர்கள் தரைத்தளம்  தமிழ் பிராமி எழுத்துக்களுடன் கூடிய கருப்பு சிவப்பு  செம்பழுப்பு நிற பானைப் ஓடுகள், பெண்கள் அணியும் ஆபரணங்கள், தந்தத்தால் ஆன பொருட்கள்,  முத்திரை,  செம்பு ஆபரணங்கள்,  இரும்பு ஆயுதங்கள்,  உறைகிணறுகள், விளையாட்டுப் பொருட்கள், குலுதானி தொட்டிகள், 10 சங்க கால நாணயங்கள் (கி.பி.10ஆம் நூற்றாண்டைச் சார்ந்த சோழர் கால நாணயங்கள்) போன்ற பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவ்விடத்தில் கிடைக்கப்பெற்ற பொருட்களும் செங்கல் சுவர்களும் தரைத்தளமும்  கழிவு நீர்க் கால்வாய்களும் இதுவரையிலும் தமிழ்நாட்டில் எங்கும் கிடைத்ததில்லை என்பது தான் கீழடி அகழ்வாய்வின் சிறப்பம்சமாகும்.

சங்க காலப் பாண்டியர்களின் தொல் நகர் பெருமணலூர்:

கீழடியில் பூமியில் புதையுண்டு இருக்கும் இந்த நகரம் அக் கால கட்டத்தில் சுமார் 120 ஏக்கர் பரப்பளவில் அமைந்து இருக்க வேண்டும் என்று கணக்கிடப்பட்டு உள்ளது. சங்க காலத்தில்  வைகை நதியின் வலது கரையில் பண்டைய வணிகப் பெருவழிப்பாதை ஒன்று இருந்துள்ளது. மதுரையிலிருந்து  ராமேசுவரம் அழகன்குளம் துறைமுகப்பட்டினத்திற்குக் கீழடி திருப்புவனம் வழியாகவே  பாதை இருந்துள்ளது. தற்போது அப்பகுதி கீழடி என்றாலும் பண்டைக்காலத்தில் அதன் பெயர் என்ன என்பது இதுவரையிலும் கண்டுபிடிக்கவில்லை. மதுரைக்கு மிக அருகாமையிலேயே உள்ள இவ்வூர் வணிக நகரமாகத் திகழ்ந்துள்ளது. மேலும் பல கட்ட அகழ்வாராய்ச்சிகள் செய்தால் மட்டுமே கண்டிப்பாக அதன் பெயரைக் கூற இயலும் என்று தொல்லியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். 4 மீட்டர் நீளம், 4 மீட்டர் அகலம், 4 மீட்டர் ஆழம் என 43 குழிகள் தோண்டி நடத்தப்பெற்ற ஆய்வில் இதுவரையிலும் 1800 பழங்காலப் பொருட்கள் கிடைத்துள்ளன. இவற்றின் அடிப்படையில்  மதுரை – இராமேசுவரம் பகுதியின் முக்கிய வணிக நகராகக் கீழடி எனும் பகுதி இருந்தமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் கீழடியில் கி.மு.3ஆம் நூற்றாண்டிலிருந்து 10ஆம் நூற்றாண்டு வரையிலும் சங்க கால மக்கள் வாழிடமாகக் கொண்டு வசித்துள்ளனர். சாத்தனஇ; சேந்தன் இ அவதிஇ எரவாதன் இ பிசனஇ; ஏனன் இ உதிரன் உள்ளிட்ட தமிழ் இலக்கியப் பெயர்களைக் கொண்டு வாழ்ந்துள்ளனர். 10 ஆம் நூற்றாண்டிற்குப் பின்னர் அவர்கள் இடம் பெயர்ந்துள்ளனர். இந்த  ய10கத்தின் அடிப்படையில் ஆராய்ச்சியாளர்கள் கீழடியானது பாண்டியர்களின் தொல் நகரான பெருமணலூர் ஆகக் கூட இருந்திருக்கலாம் என்று கூறியுள்ளனர். தற்போதைய மதுரைக்கு முன்பு பாண்டியர்கள் ஆட்சி செய்த பெருமணலூர் பற்றி இலக்கியங்களிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இங்கிருந்த மக்களே கடம்பவனத்தை அழித்து இன்றைய மதுரையை உருவாக்கியிருக்க வேண்டும் என்றும் எடுத்துரைக்கின்றனர். இந்த ய10கத்திற்கு வலு சேர்க்கும் வண்ணம் கீழடியில் பண்டைக்காலத்தில் வாழ்ந்த மக்கள்  வெள்ளத்தாலே  இயற்கைச் சீற்றங்களாலோ பாதிப்படையவில்லை. அத்தகைய நிகழ்வு ஏதேனும் ஏற்பட்டிருந்தால் இன்று நமக்கு எவ்வகைச் சேதமும் இல்லாமல் முழுமையான பொருட்கள் கிடைத்திருக்க வாய்ப்பில்லை.

மேலே காட்டப்பட்ட படம் நமக்கு இரு எண்ணங்களை ஏற்படுத்துகிறது. பண்டைக்கால மக்கள் முற்றிலுமாக இடமாற்றம் செய்திருக்கலாம் அல்லது இவ்விடம் மட்பாண்டங்கள் மிகுதியாக செய்யக் கூடிய தளமாகவும் இருந்திருக்கலாம் என்பதே அவை. இதனில்  ஆய்வாளர்கள் பின்வரும் கருத்தினை முழுமையாக ஏற்றுக் கொள்கின்றனர். பண்டைக்கால மக்கள் யாவரும் மிகப்பெரிய  இடமாற்றத்தை செய்துள்ளமையால் தான் பல்வேறு பயன்பாட்டுப் பொருட்கள் இவ்விடத்தில் முழுமையாகக் கிடைத்துள்ளன. இங்கு பெருமணலூர் என்பதற்கு ஆதாரம் மட்டும் கிடைத்தால் அதுவே உண்மையான மிகத்தொன்மையான மதுரை ஆகும். சங்ககால மக்கள் வாழ்ந்த பெருமணலூர் என்று கூறுவதற்கும் வாய்ப்புகள் மிகுதியாக கிடைக்கப்பெறும்.

சங்க கால நகரம் என க்கணக்கிடும் முறை:

தொன்மை நகரத்தின் வயதும் அங்குக் கிடைத்த பொருட்களின் வயதும் கதிரியக்க கார்பன் காலக்கணிப்பு மூலமாகவே துல்லியமாகக் கண்டறிய முடியும். இந்தக் கதிரியக்கக் கார்பன் காலக்கணிப்பால்  60ஆயிரம் ஆண்டுகள் வரையிலான பொருட்களின் கால நிலையினை அறிய இயலும். இப் பரிசோதனைக்காகக் கீழடியில் கிடைக்கப்பட்டுள்ள பொருட்கள் யாவும் பெங்களுரில் உள்ள மத்திய அரசின் தொல்பெருள் ஆய்வுத்துறையில் அகழாய்வுப் பிரிவிற்கு அனுப்பப்பட்டுள்ளது. கீழடியில் கிடைக்கப்பெற்ற  பொருட்கள் யாவும் சங்க கால நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ள பொருட்களுடன் ஒத்துச் செல்வதால் இவை யாவும் ஏறத்தாழ 2300 ஆண்டுகளுக்கு முற்பட்டதாக இருக்கக் கூடும் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். பழங்கால மண் பாத்திரங்கள் யாவும் உள்ளே கருப்பாகவும் வெளியே சிவப்பாகவும் காணப்படும். இந்தப் பானைகள்தான் அதிக அளவில் கீழடியில் கிடைக்கப்பட்டுள்ளன.

பிராமி எழுத்துக்களுடன் மட்கல ஓடுகள்:

தமிழ் பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட மட்கல ஓடுகள் அதிக அளவில் கீழடி அகழாய்வில் கிடைக்கப்பெற்றுள்ளன. மேலும் மட்கல ஓடுகளில் கீறல் குறியீடுகளும் அதிகளவில் உள்ளன. இப்பானைகளில் சங்க காலத்தில் பயன்பாட்டில் இருந்த பெயர்களான உதிரன் ஆதன்  திசன் இயனன் என்ற பெயர்களைப்  பிராமி எழுத்துக்களால் எழுதப்பட்டுள்ள முறைமையைக் காண்கையில் இப்பகுதியில் வாழ்ந்த தமிழ் மக்களின் கல்வித்திறனைப் பற்றி அறியமுடிவதோடு தமிழ்மொழியின் வளர்ச்சியையும் காணமுடிவது மிகச் சிறப்பானதாகும்.

வரலாற்றாசிரியர்கள் தமிழ் எழுத்துக்கள் யாவும்  குறியீடுகளில் இருந்து தான் வளர்ச்சியுற்றது என்ற கருதுகோளை நவில்வதும் இவ்விடத்தில் குறிப்பிடத்தக்கதாகும். மேலும் தமிழ்பிராமி கல்வெட்டுகள் அதிக எண்ணிக்கையில் மதுரைப்பகுதியில் கிடைக்கப்பட்டுள்ளதால் தமிழ்மொழியின் பிறப்பிடம் மதுரைப் பகுதியாக இருக்கலாம் என்று மொழியியல் வல்லுநர்கள் தமது கருத்துக்களை முன்மொழிகின்றனர். மதுரை நகரின் தொன்மையை நவிலும் இத்தகைய முறைமைகளைக் கொண்டு கீழடி நகரம் பண்டைச் சங்க கால நகரம் என்று வரையறுத்துக் கூறுகின்றனர்.

ஆபரணங்களும் விளையாட்டுப் பொருட்களும்:

கீழடி அகழ்வாய்வில் கிடைக்கப்பட்ட பொருட்களில் வேறெங்கும் கிடைக்காத சங்க காலப் பெண்களின் ஆபரணங்கள் பல கிடைத்துள்ளன. அகேட் மணிகள், உடைந்த வளையல் துண்டு,  குஜராத் பகுதியைச் சார்ந்த சூது பவளம், பளிங்கு, பச்சை-மஞ்சள் – நீல நிறக் கண்ணாடி மணிகள் போன்ற விலைமதிப்பிட இயலாப் பொருட்கள் பல கிடைத்துள்ளன.  மேலும் இங்குத் தோண்டப்பட்ட 40க்கும் மேற்பட்ட குழிகளில் கிடைக்கப்பட்ட பொருட்கள் சங்க இலக்கியப் பாடல்களில் காணப்படும் பொருட்களே. சிலப்பதிகாரம் பரிபாடல் மதுரைக்காஞ்சி போன்ற இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் கல்மணிகள் மட்டுமே 600 கிடைத்துள்ளன.

மேற்கூறிய மணிகள் இணைத்த அணிகலன்கள் பற்றி மதுரைக்காஞ்சியில் ‘செல்வப் பெண்டிர் நிலை’ எவ்வாறு இருந்தது என்பதில்  காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. குற்றம் நீங்கிய பொன்னால் செய்த ஆபரணங்களை அணிந்த பெண்டிர் தமது பொன்சிலம்பில் தேர்ந்தெடுத்த மணிகளை அணிந்துள்ளனர்.

‘தெள்ளரிப் பொற்சிலம்பு ஒலிப்ப ஒள்ளழல்
தாஅற விளங்கிய ஆய்பொன் அவிர் இழை
அணங்குவீழ் வன்ன பைந்தொடி மகளிர்’  (மதுரைக்காஞ்சி – 444-446)

என்ற அடிகளில் காணலாம். அத்துடன் விளையாட்டுப் பொருட்களில் யானைத் தந்தத்தால் செய்யப்பட்ட தாயக்கட்டை (4 புள்ளிகள் உடைய தாயக்கட்டை) நொண்டி விளையாடுவதற்குப் பயன்படும் மண் சிலாக்கு, சதுரங்கக்காய் ஆகிய பொருட்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. கலித்தொகையில் குறளனின் உருவத்தைப் பற்றி  எடுத்துரைக்கையில்,

வல்லுப்பலகை எடுத்து நிறுத்தன்ன
கல்லாக் குறள!’ (கலித்தொகை 94-13)

என்று பதிவு செய்யப்பட்டுள்ளது. சூதாடும் வல்லுப்பலகையினை நிறுத்தி வைத்தாற் போன்ற குறளனே என்று கூறுவதிலும்,  சூதாடு காயைப் போன்ற கட்டை வடிவமும் உடைய குறளன் என்று எடுத்துரைப்பதிலும் தாயக்கட்டையின் பயன்பாடு சங்க மக்களிடம் இருந்தமையை அறிய இயலுகின்றது.

கீழடியில் கிடைக்கப்பட்டுள்ள ஒவ்வொரு பொருளுமே ஒரு தொல்லியல் ஆவணமே ஆகும். மிகப்பெரிய அளவில் நமது பண்டைய நாகரிகத்தை எடுத்துச் செல்லும் தளமாக கீழடி திகழ்கின்றது. எகிப்து, சீனா, ஜோர்டான் போன்ற நாடுகளில் நடத்தப்பட்ட அகழ்வாய்வு இடங்களை அங்குள்ள அரசினர் மூடிவிடாமல் திறந்த வெளி அருங்காட்சியமாகப் பாதுகாத்து வருகின்றனர். இதனைப் போன்றே கீழடியினை  திறந்த வெளி அருங்காட்சியமாக அமைக்க தமிழக அரசு ஆணை வழங்கினால் தமிழரின் பழம்பெருமையை உலகறியச் செய்யலாம்.

கிழக்கு திசை நோக்கிய வீடுகள்:

கி.மு.3 ஆம் நூற்றாண்டு காலத்தில் வாழ்ந்த சங்ககாலத் தமிழர்கள் தங்கள் வீட்டினைச் செங்கல் கட்டிடமாகக் கட்டி வாழந்து இருக்கின்றனர் என்பதனை இந்த உலகுக்கு பறைசாற்றுகிறது கீழடி. கி.பி.1964 ஆம் ஆண்டு சென்னைப் பல்கலைக் கழகத் தொல்லியல் துறை – உறையூரில்; மேற்கொண்ட அகழ்வாய்வில் பண்டைகாலப் பொதுமக்களின் இல்லங்கள் அமைப்பு கண்டெடுக்கப்பட்டது. அங்குள்ள  இல்லங்கள் யாவும் களிமண், செங்கல்துண்டுகள், பருக்கைக் கற்கள், பானை ஓடுகள் போன்ற பொருட்களால் அடித்தளமிட்டுக் கட்டப்பட்டுள்ளன. அதனைப் போன்றே கீழடியில் உள்ள வீடுகளும்  தரைத்தளங்களும் முழுமையான  செங்கல் கட்டிடமாக நமக்கு இன்று உயிரோட்டமாக கிடைத்துள்ளன.

வீடுகளின் வெளிப்புறம் தண்ணீர் செல்ல வசதியாக செங்கல் கற்களால் வாய்க்கால்கள் வெட்டப்பட்டுள்ளன. மேலும் 5 அடி இடைவெளி விட்டு ஒவ்வொரு வீடும் கட்டப்பட்டுள்ளன. அத்துடன் ஒவ்வொரு வீட்டிற்கும் தனித்தனியாகச் சுற்றுச் சுவர் எழுப்பப்பட்டுள்ளன. அனைத்து வீடுகளும் கிழக்குத் திசையை நோக்கி அமைந்துள்ளன. அரிக்கன்மேடு, காவிரிபூம்பட்டினம், உறையூர் போன்ற அகழ்வாய்வில் கிடைக்கப்பெற்றதைக் காட்டிலும் கீழடியில் அதிக எண்ணிக்கையில் தொடர்ச்சியாகப் பல கட்டிடங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

பண்டைமக்களின் நாகரிக வளர்ச்சியும் சுத்தம் சுகாதாரம் போன்றவற்றுக்கு முன்னுரிமையும் வழங்கினர். வீட்டின்  பின்புறத்தில் குளியலறைகளும் தண்ணீர் தொட்டிகளும் மாடுகளுக்காக மிகப்பெரிய குலுதானி தொட்டியும் கட்ட்ப்பட்டன. குலுதானி தொட்டிகள் வீட்டின் சுவற்றோடு இணைக்கப்பட்ட மிகப்பெரிய பானை வடிவில் அமைத்துள்ளனர். சங்க காலத்தில் கழிவுநீர் மேலாண்மையைப் பயன்படுத்தியுள்ள முறைமையிலான  தண்ணீர் தொட்டியும், ஹராப்பா நாகரிகம் போன்று சுடுமண் கழிவுநீர் கால்வாய் வசதியுடைய கட்டிட அமைப்பு போன்ற யாவும் நம்மை ஆச்சரியத்தின் உயரத்;திற்கு அழைத்துச் செல்கின்றது.

சங்ககாலக் குடியிருப்பு அமைப்புகள் மிகவும் முன்னேறிய மேம்பட்ட நகரவாழ்வு இருந்தமைக்கான சான்றாகத் திகழ்கின்றன. இங்குள்ள குடியிருப்புப் பகுதியில் சுடுமண் ஓடுகள் இரும்புக் கம்பிகளால் வேயப்பட்டுள்ளன. அத்துடன் கூரைகளைத் தாங்க மரத்தூண்களை அமைத்துள்ள விதத்தினை குச்சி நடு குழிகள் மூலமாகவும்  அறிய இயலுகின்றது.

சங்க கால மக்களின் தொல் எச்சங்கள் கீழடி:

தமிழகத்தில் நடைபெற்ற அகழ்வாய்வுகளில் கீழடியில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வு தான் மிகப்பெரிய அளவில் நடைபெற்ற அகழ்வாய்வு என்று தொல்லியல் ஆர்வலர்கள் கூறியுள்ளனர். முத்துமணிகள், பெண்கள் விளையாடிய சில்லு, தாயக்கட்டை, சதுரங்க காய்கள், சிறு குழந்தைகள் விளையாடிய சுடுமண் பொம்மைகள் போன்ற  சங்க காலத்தில்  குறிப்பிடப்படும் பல தொல்பொருட்களும் கீழடியில் கிடைத்துள்ளன. பட்டடினப்பாலை  என்ற இலக்கியத்திற்காக  கரிகால் சோழனிடம் பதினோரு நூறாயிரம் பொன் பரிசைப் பெற்ற புலவர் உருத்திரங்கண்ணனார் உறைகிணற்றுப் புறஞ்சேரியினைப் பின்வருமாறு காட்சிப்படுத்துகிறார்.

பறழ்ப்பன்றிப் பல்கோழி
உறைக்கிணற்றுப்
புறஞ்சேரி
மேழகத்
தகரொடு சிவல் விளையாட’  (பட்டினப்பாலை- 75.)

ஊறை கிணறுகள் அமைந்துள்ள புறஞ்சேரியில் பன்றிக் குட்டிகளும், பலவகைக் கோழிகளும் திரிந்து விளையாடின. மற்றொரு பக்கத்தில் துருவாட்டின் (ஆட்டின் ஒரு வகை) கிடாய்களும்  கௌதாரிகளும் விளையாடின என்று பட்டினப்பாலையில் கூறப்பட்டிருக்கும் சுடுமண் உறைகேணிகள் போன்று இங்கு கண்டெடுக்கப்பட்டுள்ளன. அவை 4 அடி, 10 அடி,  18 அடி என்ற மூன்று அளவுகளிலான சுடுமண்ணால் வடிவமைக்கப்பட்டுள்ளன.

சுடுமண் உறைகேணிகள்:

ஆற்றங்கரையிலும் பெரிய குளத்திலும் உறை கிணறுகள் அமைத்து – நீர் எடுக்கும் முறையானது பண்டைய சங்க கால தமிழர்களின் வழக்கம் என்பதை  இவ் அகழ்வாய்வு கண்டுபிடிப்பின் மூலம்  உறுதி செய்யலாம். கீழடியில்  அதிக அளவிலான செங்கல் வீடுகளும்,  வீடுகளின் மேற்கூரையில் ஓடுகள் வேயப்பட்டிருந்ததையும்  கண் முன்னே காண இயலுகின்றது. ஓடுகளின் நடுப்பகுதி ஓட்டையுடன் செய்யப்பட்டு அவை இணைப்புகள் மூலமாக ஓடுகளாக வேயப்பட்டுள்ளன. அத்துடன் சாயத்தொட்டி ஒன்றும் அறியப்பட்டுள்ளது. ஆற்றங்கரை ஓரமாக வாழக் கூடிய மக்கள் நீராதாரங்களைத் தங்கள் தொழில் முன்னேற்றங்களுக்கு எங்ஙனம் பயன்படுத்தினர் என்பதற்கு இத்தொட்டி சான்றாதாரமாக விளங்குகின்றது. தென் இந்தியா முழுவதற்கும் கைத்தறி
நெசவுத் தொழிலுக்குப் பெயர் போன உறையூரில் கிடைக்கப்பட்ட சாயத்தொட்டியினைப் போன்றே கீழடியில் உள்ள தொட்டியும் திகழ்கின்றது.

பண்டைத்தமிழர்களின் நெசவுத்தொழிலுக்கான சாயத்தொட்டி தொல்லியல் நகரமாக சங்க இலக்கியத்தின் சான்றாவணமாகத் திகழும் சிவகங்கை மாவட்டம் கீழடி கிராமம் சங்க கால மக்களின் தொல் எச்சங்களே ஆகும்.

மேலும் முத்திரையின் பயன்பாட்டினை நாம் பண்டை இலக்கியமான  பட்டினப்பாலையில் முழுமையாகக் காண முடிகின்றது. பண்டைக்க காலச் சங்க கால மக்களின் நெய்தல் நிலங்களில் காணலாகும் துறைமுகங்கள் தோறும் பண்ட சாலைகள் இருந்துள்ளன. அப்பண்ட சாலைகளில் இறக்குமதி, ஏற்றுமதிப் பொருட்கள் மீது அரச அலுவலர்கள் முத்திரையிட்டுள்ளனர். அங்குச் சிறந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தது. இக்கருத்துக்களைப்  பின்வரும் அடிகளில் காணலாம்.

அளந்தறியாப் பல்பண்டம்
வரம்பறியாமை
வந்தீண்டி
அருங்கடிப்
பெருங்காப்பின்
வலியுடை
வல்லணங்கினோன்
புலிபொறித்துப்
புறம் போக்கியும்
மலி
நிறைந்த மலிமண்டபம்”(பட்டினப்பாலை-131-136)

இத்தகைய புலி இலச்சினையின் பயன்பாட்டினை பட்டினப்பாலையில் காண்கிறோம். அதனைப் போன்றே வேலைப்பாடுடன் அமைந்த சுடுமண் இலச்சினை கீழடியில் கிடைக்கப்பெற்றுள்ளது. மேலும் தமிழகத்தில் இதுவரையிலும் நடை பெற்ற அகழ்வாராய்ச்சியில் தற்பொழுதுதான் முதல்முறையாக சுடுமண் முத்திரை (ஷீல்) கண்டறியப்பட்டுள்ளது. கலை வேலைப்பாடுடன் அமைந்ததாக இம் முத்திரை   திகழ்கின்றது.

சுடுமண் முத்திரை:

தற்போது ரப்பர் ஸ்டாம்ப் பயன்படுத்துவது போன்று சங்ககால மக்கள் தங்களின் வாணிப நோக்கத்திற்காகவே முத்திரைக் குறியீட்டை பயன்படுத்திருத்தல் வேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் நவில்கின்றனர். ஆக சங்க இலக்கியங்களின் தொல்லியல் ஆவணம் கீழடி என்ற கூற்றினைக் கட்டாயமாக மறுக்க இயலாது.

முடிவுரை:

பண்டைத் தமிழரின் நாகரிக வாழ்க்கை முறையையும் வீரத்தையும் விளையாட்டுத் திறனையும் பழங்காலத் தமிழ்நூல்களால் அறிந்து கொண்டிருக்கும் நமக்குக் கீழடி கண்முன்னே அக்காட்சிகளைக் காட்சிப்படுத்துகின்றன. தொல்லியல் ஆவணமாகத் திகழும் கீழடியில் கண்டெடுக்கப்பட்டுள்ள ஒவ்வொரு பொருளையும் தொகுத்துத் திறந்தவெளி அருங்காட்சியகமாகப் பராமரிக்க வேண்டும் என்பதே வரலாற்று ஆசிரியர்கள் தொல்லியல் ஆய்வாளர்களின் மிகப்பெரிய கனவாகும். கீழடியில் மீண்டும் 2016ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் தொடங்கப்பட்ட  அகழ்வாய்வில் சங்க கால மக்களின் பயன்பாட்டில் இருந்த நாணயங்கள் பல கண்டறியப்பட்டமையும் குறிப்பிடத்தக்கதாகும். அத்துடன் திறந்த வெளி அருங்காட்சியகத்திற்காக மத்திய அரசு இரண்டு ஏக்கர் நிலத்தினை ஒதுக்கவும் வழங்கப்பட்ட உத்தரவால்  பண்டை மக்களின் சான்றாவணம் கண்டிப்பாகப் பாதுகாக்கப்படுவது திண்ணம் என்பது புலனாகிறது. இதன் மூலமாக ஆய்வாளர்களின் திறந்த வெளி அருங்காட்சியகக் கனவு  நனவாகட்டும்.

***

முனைவர்  நா.கவிதா
தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர்
எஸ்.எஃ;ப்.ஆர்.மகளிர் கல்லூரி (தன்னாட்சி)
சிவகாசி.

 

 

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “‘சங்க இலக்கியங்களின் சான்றாவணம் –  கீழடி’

  1. பயனுள்ள பதிவு. கீழடியில் கிடைத்துள்ள சுடுமண் கழிவுநீர் குழாய்கள் ஹரப்பாவை ஒத்ததாக இல்லை. மேற்காசியாவில் கி.மு.1600வாக்கில் ஹிட்டைட்டுகள் பயன்படுத்தியதை ஒத்துள்ளன. தமிழர் நாகரிகத்தை மீட்டுருவாக்கம் செய்வதற்கு பாக்கிஸ்தானை இணைத்துக் கொள்ளும்போது மேற்காசியாவையும் இணைத்துக் கொள்ளலாமே.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.