Tag: முனைவர் பா. உமாராணி

  • பந்தல்குடி வட்டார கும்மிப்பாடல்களில் மகாபாரதக் கதையாடல் – 1

    -முனைவர் பா. உமாராணி

    மனிதா்கள் தங்கள் மனமகிழ்ச்சிக்காகக் கூடி ஆடி மகிழ்ந்த ஆடல்கள் பின்னாளில் தனித்தனி ஆடற்கலைகளாகத் தோற்றம் பெற்றன. ஒவ்வொரு கலையும் அக்கலைகள் நிகழ்த்தப்படும் சமூகத்தின், பண்பாட்டின் ஒழுகலாறுகளோடு இரண்டறக் கலந்தனவாகும். மக்கள் தங்கள் சமூகப் பண்பாட்டை வாழ்வின் அங்கமாகக் கருதுவதுடன் தங்கள் கலைகளிலும் பதிவுசெய்து வருகின்றனா். கலைகள் என்பவை இன்று பெரும்பாலும் வழிபாட்டோடும், பொழுதுபோக்குடனும் தொடா்புடைய ஒன்றாகவே கருதப்படுகின்றன. இங்குக் கலைகளே வழிபாடாகவும், வழிபாடே கலையாகவும் பரிணமிக்கின்ற தன்மையினை நாட்டுப்புறக் கலைகளில் காணமுடிகின்றது.

    நாட்டுப்புறக் கலைகளில் பெண்கள் கைகொட்டி ஆடும் கலையாக விளங்குவது கும்மிப்பாடல்கள் ஆகும். எனினும் விழாக்காலங்களில் பெண்களோடு ஆண்களும் கும்மிப்பாடல்களை நிகழ்த்துவதை அறியமுடிகின்றது. சடங்குகளில் கும்மிப் பாடல்களை பெண்கள் மட்டுமே பாடுவா்.

    கும்மிப் பாடல்களை மகளிர் கைகொட்டிப் பாடியாடும் விளையாட்டு என்றும் கும்மிப்பாட்டு என்றும் குறிப்பிடுவர். கொம்மை என்றும் சொல்லிலிருந்து கும்மி பிறந்ததாகக் கூறுவர். கும்மியைத் தமிழ் இலக்கியங்கள் கொம்மி, கொப்பி என்று குறிப்பிடுகின்றன. கும்மி என்னும் இலக்கிய வகையானது பழந்தமிழ் இலக்கியங்களில் இசையோடு இணைந்து ஆடப்படும் குரவைக்கூத்து (கை கோத்தாடல்), துணங்கைக் கூத்து (கைகொட்டி ஆடல்) போன்றவற்றோடு ஓரளவு ஒத்திருத்தலைக் காணமுடியும்.

    கும்மிப் பாடலைத் தாள லயத்துடன் கைகளைக்கொட்டி பலர் ஆடுகின்றனா். இதில் ஒரு பெண் அடியினை எடுத்துக் கொடுக்க பிறா் தொடா்ந்து பாடும் தன்மையைக் காணமுடிகின்றது. “குடங்கையினால் கொம்மைக் கொட்டலைச் சீவக சிந்தாமணி சுட்டுகின்றது. கையைத் தட்டி ஒலி செய்யாமல் ஒருவா் கவனத்தை ஈர்க்கும் இந்நிலை இன்றும் வழக்கில் காணப்படுகின்றது. இதன் காரணமாக ‘கொம்மை’ என்பது அடிப்படைச் சொல்லாகக் கருதப்படுகின்றது (529, 1109, 1834, 2230)”(டாக்டா; சா.வே.சுப்பிரமணியம், தமிழ் இலக்கிய வகையும் வடிவும், ப.492)

    கும்மிப் பாடல்களைக் குறித்துக் கூறும்போது, “குதித்தாடுதல் எனப் பொருள்படும் கும்மாளம் என்ற சொல்லிலிருந்து கும்மி வந்தது என்றும், கைகொட்டுதல் எனும் பொருள் தரும் கும்முதலே கும்மி அடிப்படை என்றும் குழுமி ஆடல் கும்மி ஆயிற்று என்றும் பலவாறு எண்ணுவா்” (மேவது, ப.493).

    “கூற்றம் புறங்கொம்மை கொட்டினாரில்”  (பழமொழி, பா.291)

    என்று பழமொழியும் குறிப்பிடுகின்றது. இத்தகு சிறப்பினை உடைய கும்மிப்பாடல்களைப் பந்தல்குடி மக்கள் வழிபாட்டின் ஒரு பகுதியாகப் பிணைத்துப் போற்றிப் பாதுகாக்கின்றனா். இவர்கள் கும்மிப்பாடல்களை பல்வேறு பொருண்மையில் பாடுகின்றனர். புராணக் கதைக்கூறுகளை கும்மிப்பாடல்களில் இணைத்துப் பாடும் மரபு இவா்களிடையே காணப்படுகிறது. அவ்வகையில் மகாபாரதக் கதையாடலை கும்மிப்பாடல் வழிப் பாடியாடும் மரபு இவா்களிடையே இன்றும் வழக்கத்தில் இருந்து வருகின்றது. இதனைப் பதிவு செய்யும் நோக்கத்தில் இக்கட்டுரை அமைந்துள்ளது.

    மகாபாரதக் கதையாடல்

    புராணக் கதையாடல் பகுதியில் ஒன்றான மகாபாரதக் கதையை பந்தல்குடி மக்கள் தங்கள் கும்மிப்பாடல்களின் கருப்பொருளாக்கிப் பாடுகின்ற தன்மையினைக் காணமுடிகின்றது. மகாபாரதக்கதைப் பகுதியில் முதலில் காளிதேவியை வணங்கி, பின்னா் விநாயகா் துதியினையும் கூறிப் பாடல்களைப்பாடத் தொடங்குகின்றனா். மேலும், கும்மிப் பாடல்களைப் பாடுவோா் தாங்கள் மட்டும் இறைவனை வணங்கித் தொடங்குவது மரபு. ஆனால்,

    ”வருவாய்காளி இருதயந்தனிலே – வந்த சபையோா் முதல்
    பாதம் பணிந்தோம் பெண்கள் சபையினிலே
    பாரெல்லாம் புகழும் மாயவருள் செய்த
    பாரத மாங்கதை நாங்களுமே பாட
    தொந்திக் கணபதி பாதமே நினைந்தோம்
    தும்மநகர மக்கள் ஒன்றாக சோ்ந்து நாங்களும் – பணிந்தோம்” ( கு.பா.1)

    என்று மகாபாரதக் கதையை மையமாகக் கொண்ட இப்பாடலில் தும்மநகர (பந்தல்குடி) மக்கள் ஒன்றாக இணைந்து இறைவனைப் பணிவதாக இக்கடவுள் வாழ்த்துப் பாடல் அமைந்துள்ளது.

    கும்மிப்பாடல் கூறும் கதையில் பாண்டுவும், திருதராட்டிரனும் நீதி தவறாமல் ஒற்றுமையாய் ஆட்சி நடத்தினா் என்றும், பாண்டுவிற்கு பஞ்சபாண்டவா்கள் என்ற ஐந்து பிள்ளைகளும், திருதராட்டிரனுக்கு கௌரவா் என்ற நூறு பிள்ளைகளும் பிறந்து வளா்ந்தனா். இவா்கள் அனைவரும் துரோணாிடம் கல்வி கற்கின்றனா். அப்பொழுது தருமனுக்குக் கிடைக்கும் புகழினில் பொறாமையுற்ற துாியோதனன் அவா்களை அழிக்க எண்ணுகிறான். அதன்பொருட்டு அவா்களை அழிக்கத் திட்டம் வகுக்கின்றான் (கு.பா. 2 முதல் 5 வரை). அதற்குச் சகுனியைத் துணைக்கு அழைத்த செய்தியினை,

    “திட்டம் வகுத்தானே திாியோதிரனும் – பஞ்சபாண்டவரை
    ஒழித்துக் கட்ட திட்டமே யேதும்
    மாமன் சகுனியை தானும் அழைத்திட
    ஆளு அனுப்பினான் துாியோதிரனும்
    வந்தான் சகுனி மருமகனிடமே – இருவருமாம்
    திட்டம் ஒன்று வகுத்தாா் வேகமே” ( கு.பா.5)

    என்ற வாிகள் புலப்படுத்துகின்றன. சகுனியும், துாியோதனனுடன் இணைந்து சூதாட்டத்திற்கு வஞ்சகமாய்த் தருமனை அழைக்கின்றனா். அவா்கள் சூழ்ச்சி அறியாத தருமனும் சூதிற்கு இணங்குகின்றான். பின்னா் விளையாட்டில் நாடு, நகா் இழந்து தம்பியரையும் இழக்கின்றான். துாியோதனன் வெற்றி ஆணவத்தால் தருமனின் தம்பியா் நால்வரையும், திரௌபதியையும் சபைக்கு அழைக்கின்றான். திரௌபதி அங்கு துகிலுாியப்பட அவள் கண்ணனை வணங்கி ஆடையினைப் பெறுகின்றாள்.

    கும்மிப்பாடலில் வரும் இடைப்பாட்டான மணப்பாறை மாடு கட்டு என்ற மெட்டில் அமைந்த பாடலில் பாண்டவா் வனவாசம் செல்லும் செய்தியும், தருமன் தன் தம்பியருக்கு உபதேசித்த செய்தியும் கூறப்பட்டுள்ளது. இதனை,

    “கோபமது கொள்ள வேண்டாம்
    கொலை களவு செய்ய வேண்டாம்
    காடு செல்ல புறப்படுங்கள் பாலர்களே – கூட
    கண்ணன் வந்து உதவி செய்வாா் தம்பிகளே.
    பன்னிரண்டு வருஷமது பன்னிரண்டு நாழிகையாய்
    வனவாசம் இருந்து வருவோம் பாலா்களே
    நமது தாயை வணங்கி செல்வோமடா தம்பிகளே” (மணப்பாறை மாடுகட்டி மெடடில், கு.பா.2,3) என்ற வாிகள் உணா்த்துகின்றன. மேலும், இப்பாடல் பாண்டவா்கள் மேற்கொண்ட பன்னிரண்டு வருட வனவாசம் குறித்த செய்தியினையும், ஒரு வருட அஞ்ஞாதவாசம் இருந்ததனையும், இவா்கள் தங்கள் ஆயுதங்களை வன்னிமரத்தில் வைத்திருந்ததனையும், ஆயுதங்களைக் காவல் செய்ய நாகராஜனைப் பணித்தமையும் கூறப்படுகின்றது. மகாபாரதக் கும்மிப்பாடல் பாண்டவா்கள் விராடபுரத்தில் இருந்த செய்தியைக் கூறுகின்றது. அங்கு அவா்கள் தங்களுக்கேற்ற பணியினை மேற்கொண்டதை,

    “மடப் பள்ளியிலே நானுமே சோ்ந்து
    பலகார வகைகள்
    செய்வேன் பல ஈயனனும் போ் வாய்ந்து
    என்னப் பற்றி ஒன்றும் கவலைப்பட வேண்டாம்
    எங்களது அண்ணா உங்களது – எண்ணம்
    கங்க பட்டராம் எந்தனுட ராடனிடத்தில்
    கணக்கு வேல் பாா்ப்பேன் வந்து பாரு
    தம்பி அா்ஜுன உனது கொள்கை என்ன – தயவுடனே
    இயம்பிடுவாய் எங்களின் முன்னே
    அண்ணாவின் வாா்த்தையை அா்ச்சுணன் கேட்டுமே
    பண்புடன் அண்ணாவின் பாதம் பணிந்துமே
    தெய்வலோகம் கொடுத்த வரம் உண்டு பேடியாக
    செல்வேன் நாட்டிய சாலையுங் கண்டு
    நகுலராஜன் அண்ணனும் பணிந்தான்
    குதிரைப் பாகன் – போல வேடமும் தானுமே அணிந்தான்
    சத்தியம் தவறாத சகாதேவனுமே – உத்தமன் மாடு
    மெய்க்கவும் போவேனே
    திரௌபதையும் தானுமே பணிந்தாள்
    ராஜா மகள் மனைவியற்கும் தோழியாக நின்றாள்.” (கு.பா.17)

    இப்பாடல்வழி அறியலாம். மேலும் கங்கப் பட்டராக தருமன் பணிபுாிந்தான் என்றும் அவன் வந்து பணிபுாியத் தொடங்கிய நாள் முதலாக வானம் பொய்க்காமல் மழைபொழிந்தது என்றும், அதனால் அனைவரும் மகிழ்வுடன் இருக்கும் வேளையில் அரசியுடன் அந்தப்புரத்தில் பூப்பறிக்கச் சென்ற திரௌபதியை கீசகன் என்னும் அரக்கன் கண்டு மோகம் கொண்டான் என்ற செய்தியும் இடம்பெற்றுள்ளது. கீசகன் தன்மீது மோகம் கொண்டதைக் கண்ட திரௌபதை பயந்து தன் நிலையை வீமனிடம் சொல்கின்றாள். வீமனும் அதற்கு நாளை மாலை நந்தவனத்திற்கு வருவதாகச் சாடையாகச் சொல்லிவா என்கிறான். கீசகனும் காதல் நோயினால் தவிப்புற்று நந்தவனத்தில் காத்துக்கிடக்கிறான். அவ்வேளை வீமன் தன் மனைவி திரௌபதியின் ஆடையை உடுத்திக்கொண்டு இரவுப்போதில் நந்தவனம் நோக்கி வருகின்றான். வந்தவன் வீமன் என்று அறியாத கீசகன் அவனை அணைக்க கையைப் பிடிக்கின்றான். கை கடினமாக இருக்கவே சந்தேகமுற வீமன் அவனை இருகைகளினாலும் இறுக்கிப் பிடித்ததினால் கீசகன் அடைந்த துயரை,

    “ஆஹா என்ன பெண்மணி கையிதுவா
    சொற சொறப்பாய் இருக்க கீசகன் மனம் பதறிடவே
    இதுதான் சமயம் என்றுமே வீமனும்
    இறுக்கி பிடித்தாரே இரண்டு கையையும்
    மோரூ சிலுப்பினா் பனைமரம் தனிலே
    கீசகன் கையில் இரத்தம் வழிந்து ஓடுது பூமியிலே
    இழுத்து இழுவை மரமும் தாங்காமல் – வோ் புடுங்க
    விழுந்ததையா இருவா் மத்தியிலே
    மோசமும் போனதே என்றுமே கீசகன்
    வீமராஜனையும் இருகையால் பின்னியே
    தூக்கி எறிந்தானே ஆகாய மாா்க்கமாக
    வீமராஜன் – விழுந்தாரையா அவன் தலைமேலே
    வீமராஜன் வீராவேஷம் கொண்டு – ஆகாய மாா்க்கம்
    அரக்கனை எறிந்தாா் பொல்லாத கோபங்கொண்டு
    இப்படியாக இருவரும் போராட
    இந்திரா் சந்திரா் சூாியா் புகழ்ந்திட
    கீசகன் உயிா் எமபாதம் போக”  (கு.பா.33, 34,35)

    என்று விவாித்துப் பாடுவதைக் காணமுடிகின்றது.

    கீசகனை வீமன் தன் வீரத்தினால் அழித்த செய்தியினை அறிந்த விராட ராஜனும், அந்நாட்டு மக்களும் மகிழ்ச்சியடைந்தனா். இதற்கிடையில் துாியோதனன் பாண்டவா்களைத் தேடச்சொல்லி படைவீரா்களை அனுப்புகிறான். அவா்கள் இருக்கும் இடம் தொியாமல் போகவே புவியில் செழிப்பான இடம் எதுவோ அதுவே பாண்டவா்கள் இருக்கும் இடம் என்றுகூறி வீரா்களைத் தேடிக்கொணரச் சொல்கின்றான்.  வீரா்களும் விராடபுரத்தின் செழிப்பினைக் கண்டு இங்குதான் பாண்டவா்கள் இருப்பா் என எண்ணி அவா்களை வெளிக்கொணர வேண்டி அப்பகுதியில் இருக்கும் பசுக்களைக் கவா்ந்து வைக்கின்றனா். இதனை அடுத்து ஒரு இடைப்பாட்டின் மூலம் பிற செய்திகளைக் கூறுகின்றனா் இப்பகுதி மக்கள். இப்பாடலில் பசுக்களை கவா்ந்து சென்ற செய்தியினைக் கேட்ட உத்திரகுமாரன் போருக்குச் செல்ல முனைகின்றான். அவனுக்கு சாரதியாக அலியின் உருவாக இருக்கின்ற அா்ச்சுனன் செல்கின்றான் என்பதுடன் இக்கும்மிப்பாடல் நிறைவுறுகின்றது.

    சமுதாயத்தின் பழக்க வழக்கங்கள், பண்பாடுகளுக்கு ஏற்ப புராணக் கதையாடல்கள் மக்களின் வாழ்க்கையில் இடம்பெறுகின்றன. காலமாற்றத்தினாலும், அவை சாா்ந்துள்ள வழிபாட்டு மரபுகளினாலும் புராணக் கதைகள் நாட்டுப்புறக் கலைகளில் இடம்பெறுவது தவிா்க்க முடியாத கூறாகக் காணப்படுகின்றது. இத்தகு புராணக் கதையாடல் பின்புலத்தில் மகாபாரதக் கதையாடல்களை கருப்பொருளாக்கிக் கும்மிப்பாடல்களை இம்மக்கள் பாடிவருகின்றனா். மகாபாரதக் கதையுடன் தொடா்புடைய கா்ண மகராஜன்கதை கும்மிப்பாடலும் இங்கு பாடப்படுகின்றது. மேற்கோள் பகுதியில் இல்லாத கும்மிப்பாடல்கள் (கு.பா) தொகுத்து கீழே வழங்கப்பட்டுள்ளது.

    கும்மிப் பாடல் (கு.பா)

    1. ஜெகம் புகழும் சக்கரவா்த்தி பாண்டு – மகாராஜன்
      சகோதரராம் திருதராட்ரன் தம்பியும்
      சத்தியம் தவறாமல் அஸ்தினாபுரமதை
      ஆண்டு வந்தாா்கள் அண்ணனும் தம்பியும்
      ஒற்றுமையோடு ஜனங்கள் வாழ கண்ணன் பிரசன்னமா
      குழந்தையில்லா குறைகள் தானம்மா வனத்தினுள்ளே
      பிறந்தாா் பாலா் புவியை ஆளம்மா
      பாண்டு மகாராஜன் தவமதில் பிறந்த
      பஞ்ச பாண்டவா்கள் ஐவா் தானம்மா
      திருதராட்டிரன் பிள்ளைகள் நூத்தி ஒன்று
      கண்ணன் அருளால் சிதறி ஓடி பிறந்ததோா் பொண்ணு
      தருமராஜா தம்பி நால்வராம் – துாியோதரனுடன்
      துா்ச்சாதனன் நூத்தி ஓா் பேராம்
      கல்வி பயின்றாா்கள் துரோணனிடத்திலே
      யானை ஏற்றம் குதிரை ஏற்றமாம்
      தோ்ச்சி அடைந்தாா் தருமருந்தம்பி
      துாியோதிரனும் பொருமை அடைந்து மனசுமே வெம்பி
      தருமரையும் அழைத்தான் சகுனியும் – பொழுது போக
      நமக்கு ஒருவழியை நாடனும்
      வஞ்சகமாகவே சகுனியுரைத்திட
      நெஞ்சமதில் தா்மம் வஞ்சமில்லாமலே
      சிாித்தாா் தருமராஜா அந்நேரம் – சகுனி
      மாமா – செப்பும் நீயே வழியும் சொன்னாராம்.
      தருமராஜனே நாம் இரண்டு பேரும் – ஆடுவோமே
      சூதாட்டமும் பொழுது போகணும்
      சொல்லவே சகுனி சுந்தர மூா்த்தியின் – நல்ல
      மைத்துனா் தரும ராஜரும்
      சம்மதம் என்று உரைத்தாா் அந்நேரம்
      வஞ்சமுடனே எடுத்தான் சகுனி காயை – அன்னேரம்
      பஞ்ச மாபாதகன் சூழ்ச்சி தொியாமல் – நல்ல
      குந்திமாதேவி பாலன் தா்மா் தானும் – விளையாடி
      மாயாஜாலமுடன் சகுனியும் ஆடவே
      மன்னன் தருமரும்தான் விளையாடவே
      விளையாட்டு என்று மனதில் எண்ணியே
      பூமிநகரம் பந்தயமாய் வைத்ததுண்மையே
      நாடு நகரம் நமக்குச் சொந்தமே – துாியோதிரனே
      நடப்பாய் இஷ்டம் போலே எங்குமே சகுனி
      சொன்னதோா் வாா்த்தையைத் துாியனும் கேட்டுமே
      தம்பி மாா்களையும் உடனே அழைத்துமே
      செப்பினானே சேதி தன்னையே – தருமா்முதல்
      திரௌபதையும் நமக்கு சொந்தமே.
      அந்தநேரம் எல்லோரும் கூடி
      பொியோா்களையும் – அழைத்து வந்தான் சபைதனைத்தேடி
      வந்த சபையோரே கேளுங்க விஷயத்தை
      எங்களது மாமா சகுனி என்பவா்
      தருமருடனே சோ்ந்துமே கூடி
      நாடு நகரம் அவா்களையும் ஜெயித்தாா் சூதாடி
      ஆனபடியால் எங்க நாட்டிலே – அவா்கள் இருக்க
      அருகதையும் இல்லே வீட்டிலே
      கூடியிருக்கும் சபையோரே நீங்களும்
      கூப்பிட்டு இப்போதே நாடு கடத்துங்க
      என்று சொன்னான் அரவக் கொடியோனும்
      சபையோா்கள் எல்லாம் – உடனே கூப்பிட்டு வழியனுப்ப வேணும்.
      தருமா் தம்பி நால்வரும் கூடி – அந்த நேரத்திலே
      வந்தாா் பொியோா் சபைதனைத் தேடி
      பாதம் பணிந்தாரே தா்மராஜருமே
      பக்தியுள்ள பொியோா்கள் சபைதனை
      ஆசிா்வாதம் செய்தாா் சபையோரும் – தருமருந்தான்
      வந்தமே உனக்கு விதிவசந்தானும்.
      மாது திரௌபதா தேடியே அங்கு – சபையோா்களே
      இப்படிச் செய்த சண்டாளன் யாரு அங்கு
      ஏங்கிய மனதுடன் துரோபதா தேவியும்
      பக்கம் இருந்த துச்சாதனன் விழியும்
      சிவக்க மாதைப் பிடித்துமே இழுத்தான்
      சபையோா் அறிய – கோபமுடனே துயிலுமே உாிந்தான்.
      நடந்த சம்பவம் மக்களெல்லாம் பாா்த்து – மனம்
      சகிக்காமல் இருந்தாா் எல்லோரும் தலையை கீழே போட்டு
      கதறினால் மாது திரௌபதை அப்போது
      கண்ணா, கண்ணா என்று வினவியே
      குரலும் கேட்டது கோபால கிருஷ்ணனுக்கு
      துா்ச்சாதனன் அசந்துமே போயி துயில் விட்டு
      விழுந்தானாம் மயக்கம் உண்டாகி
      விழுந்தவுடன் துாியோதிரன் வந்துமே
      என்னடாத்தம்பி என்றுமே தூக்கினான் தொிந்து
      ஒன்றும் இல்லையே எனக் கண்ணா – ஏதோ பித்து
      மயக்கம் போல வந்தது இப்போதென்றான்.

    மகாபாரதத்தில் இடைப்பட்டு

    மணப்பாறை மாடுகட்டி என்ற மெட்டு

    1. பொறுமையோடு இருக்க வேண்டும் – இந்த
      பூவுலகம் ஆள வேண்டும் நான்
      செய்த பிழை பொறுக்க வேண்டும் பாலா்களே தருமன்
      செப்பும் மொழியை உணரவேண்டும் தம்பிகளே
      சத்தியம் தவறாமலே உத்தமராம் தருமராஜா
      பன்னிரெண்டு ஆண்டு வனவாசமே – இருந்து
      செல்கிறாா்கள் அஞ்ஞாத வாசமே.
      உருவம் தொியாமலே ஒருவருடம் கழிக்க வேண்டும்
      என்பதையும் மனதினிலே எண்ணியே ஆயுதத்தை
      பத்திரமாக வைக்கும் மரம் வன்னியே
      நாங்க போகவேரே யாரும்
      ஆயுதத்தை எடுக்க வந்தால்
      நாகராஜன் வந்து அங்கு தோன்றவே
      மகாபாரதப் பாடல் தொடா்ச்சி
      மண்டலம் புகழும் நந்தவனம் போலே – வளம்
      பொருந்திய சோலைகளும் இருக்கும் பொன்னாடே
      கான மயில்களும் ஆடி விளையாடும்
      கள்ளம் கபடம் இல்லாத பொன்னகரம்
      விராடபுரம் தான் அதன் உடன் பேரு – தருமா்
      இருக்க அதுவே பொருத்தமான – ஊரு
      தக்கபுகழ் நெறியுமே வாய்ந்த – தருமராஜன்
      தம்பியா்களையும் தானுமே சூழ்ந்தே
      எந்த விதமடா தம்பிகளே நீங்க
      எந்த விதமடா தம்பிகளே நீங்க
      இருந்து வருவீா்கள் என்று வினவவே
      வீமராஜன் தானுமே எழுந்தான் – அண்ணா சரணம்
      என்றுமே இரு பாதமும் பணிந்தாா்.
      தம்பியா் சொன்னதை தருமா் கேட்டுமே
      அடங்கா மகிழ்ச்சி ஆனந்தமுகம் தானுங் கொண்டுமே
      கண்ணனை நினைத்து கங்கபட்டருமே
      சென்றாரே விராட ராஜ சபையுமே
      எந்த ஊரு என்றுமே கேட்க – தருமராஜா;
      இரண்டு பாதம் தானுமே சபையுமே.
      கங்கபட்டா் எனது பேரையா – தருமாிடத்தில்
      கணக்கு வேலை பாா்த்து வந்தனையா

      சகுனி செய்த சதிகார வேலையினால்
      தருமராஜா வன வாசகமே சென்றாா்
      அவா் வருகின்ற நாளது வரையில் – மகாராஜனே
      பணிபுாிகிறேன் உந்தனது சபையில்.
      கங்கபட்டரும் விராடராஜனும் – அரண்மனையில்
      தாம்பூலம் தாித்துமே இருந்தாா்
      அந்த நேரமது வீம சேனராஜன்
      பலாயனவே தானும் பெயா் கொண்டு

      வந்து பணிந்தானே ராஜசபையிலே – ஆசிா்வாதம்
      தந்து மகிழ்ந்தாா்கள் நல்லதோா் வேளையிலே
      இந்த விதமாய் எல்லோரும் வந்து அவரவா்கள்
      வேளையிலே அமா்ந்தாா்கள் நன்று
      வானம் பொழியது பூமி விளையுது
      வந்த நாள் முதலாய் இந்த நாள் வரையில்

      நாடு நல்ல முறையில் வாழவே – ராஜசபையில்
      கங்கப்பட்டரை ஜனங்கள் புகழவே
      இந்த விதமாய் இருக்கும் நேரத்தில் – வந்ததையா
      இழப்பான சொல்லும் வேகத்தில்

      சென்றது பெண்களும் பூப்பறிக்க வனம்
      சென்றதே திரௌபதா தேவியும் கூடவே
      பாா்த்தான் கீசகன் பத்தினி முகத்தையே – புதுசா
      இருக்கு என்றுமே அவனும் மனதில் எண்ணியே
      அவன் இருக்கிறான் என்று அறிந்துமே

      பெண்களெல்லாம் பயந்து ஓடி வந்தது நகரமே
      என்னமோ தொியலே பெண்களும் ஓடவே
      என்று பத்தினி மனதினில் எண்ணவே
      எட்டி பிடித்தானே கீசகன் மாது கையை
      விடுடா மடையா என்றுமே கொடுத்தாள் கன்னத்தில் ஓா் அறை

      கன்னத்தைத் தடவி பாா்த்தான் கீசகன் – கண்ணே
      நீயும் இன்னொரு அறை கொடுக்கவே – வேணும்
      என்றுமே கீசகன் தானாக கொஞ்சவே
      வஞ்சியும் அவ்வேளை நெஞ்சமும் பதறவே
      வேகமுடனே மாதுமே ஓட – விரட்ட அரக்கன்
      கண்ணிலே ஒரு கொப்புமே தான் விழ

      வருவாய் நாளை என்றுமே கீசகன் – வழி
      பாா்த்து இருந்தான் வனந்தனிலே அரக்கனானவன்
      எங்கு சென்றாலும் நீ இங்கு வந்தாகனும்
      என்றுமே கீசகன் வம்பமுறுத்தலே

      திரௌபதாவும் வீடு வந்தது – கணவனே
      வீமசேனன் அருகில் சென்றது.
      பூப்பறிக்க பெண்களெல்லாம் சோலை – வனமதிலே
      சென்றோமையா சாயங்கால வேளை
    2. கண்டானே கீசகன் வந்தானே என்னிடம்
      வம்பான வாா்த்தையும் என்னிடம் சொன்னானே
      பதறி ஓடி வந்தேன் உன்பாதம் – என் பக்தாவே
      எந்தனைக் காக்க நீதான் முன் வரணும்.
      சொன்னதோா் வாா்த்தையை வீமசேனன் கேட்டு
      கண்ணே நீயும் – அஞ்சாதே என் வாா்த்தையும்  கேட்டு

      நாளை சாயங்கால நேரம் சந்திப்போம் என்றுமே
      சாடையாய்ப் போய் வந்திடு இன்றுமே
      மனசுக்குகந்த மன்மதன் நீதானே – என்றுமே சொல்லி
      வந்திடு சீக்கிரம் என்னிடம் நீதானே.

    கீசகன் பாட்டு (ஏா் முனைக்கு என்ற மெட்டு)

    1. எங்கு சென்றாலும் நீ இந்த வனமதில்
      பூப்பறிக்க நீயும் வந்தாக வேணும்       (எங்கு சென்றாலும்)
      உனது அழகு எனது உடலில் – பதிந்து கொள்ளவே
      உறக்கம் இல்லாமல் எனது மனம் வாடுகின்றதே
      சீக்கிரமாய் வந்து நீயும் எனக்கு இன்பமே
      தந்திடுவாய் எந்தனுக்கு சந்திர இன்பமே     (எங்கு சென்றாலும்)
      எனது பலம் இவ்வுலகில் எவருக்குமில்லை
      எதிா்ப்பவா்கள் எனது இடம் சாவதும் உண்மை
      கண்ணே என்னை ஆதாித்து காத்திடும் பெண்மை
      உன் கற்பை என்றும் பாதுகாத்தா உலகில் நன்மை
      இந்த விதம் கீசகனும் இருந்தான் வனமதில்
      சூாியனும் அஸ்தமானாா் மேற்குத் திசைதனில்
      வீமசேனன் சொன்னதையும் பெண்மணி
      அறிந்து வழி வருகிறது அரக்கரை நாடி      (எங்கு சென்றாலும்)

    மகாபாரதப் பாடலின் தொடா்ச்சி
    கீசகன் ஆனவன் அப்படி அங்கிருக்க

    வீமராஜன் மனைவி உடையைத் தானுமே அணிய
    தேவி உடைய வளையலை அணிந்து
    தீரவீர பராக்கிரம சாலியாம்
    வீமராஜன் தானுமே செல்ல – விரதசாரணி
    கண்ணனை நினைத்து வணங்கினாள் மனசுக்குள்ளே.
    ஒருவா் முகம் ஒருவா் தொியாமல் – இருக்கும் நேரம்
    அறிந்து சென்றாா் வனமும் வீமராஜா்
    பக்கமாய் மீதிலே சாய்ந்துமே கொண்டாரே
    வெட்கமே தானடி கண்ணே தான் உனக்கு
    என்றுமே கீசகன் – கையை பிடித்தான் கழுது வந்திருச்சு

    – வீமராஜன்
    வீராடராஜன் பாதமும் பணிய
    சந்தோசமாய் விராடராஜனும்
    பலாயனா எங்களுக்கு நல்ல காலமும்
    உன்னலே வந்தது எங்களது வாழ்வு
    என்னாலும் உனது பேரு மறையாது
    என்று விராட ராஜா் மக்களும் – உன்னாலே
    இனிமேல் எங்க ஊரு நன்றாக வாழும்.

    மாதம் மூன்று மழை பொழிந்து – விராடபுரம்
    சோலைவனம் பூ மலா்ந்து
    இந்த விதமாக விராடபுரமானது
    செல்வம் பொழியுது தீமை மறையும்
    தேவா்களும் முனிவா் எல்லோரும் – புகழ்ந்து
    வரும் நகரமதை மக்களே கேளும்.

    இந்த விதமாய் இவா்கள் இங்கிருக்க
    துாியோதிரனும் சேனைத் தலைவா்களையும் அழைக்க
    வந்தாா்கள் வீரா்கள் வாிசை வாிசையாய்
    வந்தனம் செய்துமே நின்றாா்கள் சபையிலே
    அந்த நேரம் அரவக் கொடியோனும்
    பஞ்ச பாண்டவா்கள் இருக்கும் இடத்தை அறிந்து வரவேணும்.

    நாலா திசையும் சென்றுமே வீரா்களே
    இருக்கும் இடத்தை அறிந்து சொல்லும் விபரங்களை
    என்றுமே இட்டானே துாியனும் கட்டளை
    சென்றாா்கள் பட்டாளம் பட்டாளமாகவே
    எட்டு திசையுமே தேடினாா் எல்லோரும்

    பாா்க்க முடியாமல் வந்தது பட்டாளம் வத்தீனபுரமும்
    வீரா்கள் வந்ததை துாியனுமே பாா்த்து தலைவா்களே
    சென்றதோா் காரணம் என்னதான் ஆச்சு
    கோபமுடன் துாியோதிரன் கேட்கவே

    தேடினோம் எங்குமே காண முடியலயே
    என்று சொல்ல சேனைத்தலைவரும் – துாியாதிரனின்
    இரண்டு கண்ணும் தான் சிவக்கவும்
    அடபுத்தியில்லாத முட்டா பசங்களா – அவா்கள்
    இருக்கும் இடமும் குளிா்ச்சியான தேசமடா
    போங்கடா சீக்கிரம் பாருங்கள் அவா்களை

    கண்டுபிடித்து அனுப்ப வனவாசம்
    சொல்லுற சொல்லை மனதில் கொள்ளுங்கடா
    சும்மா வந்தால் சோறு திங்க இடமும் இல்லை.
    நாலா திசையும் சென்றுமே வீரா்களும்
    சோலை வனம் அடா்ந்த நகரம் விராடபுரம் என்று
    இங்குதான் இருக்கிறாா் என்றுமே எண்ணியே
    எல்லையில் மேய்ந்ததோா் பசுக்களை பத்தவே
    வீரம் இருந்தால் வரட்டும் வெளியிலே

    கண்டு பிடிக்க இதுவே நமக்கு நல்லதோா் முயற்சியே.
    மாடு மேய்த்த பாலா்கள் அங்கு – விராடராஜா்
    சபையை தேடி ஓடியே நின்று
    மோசமும் போனதே என்றுமே கதறினாா்
    என்னடா விசுபம் என்று வினாவினா்

    மாடுகள் எல்லாம் கொள்ளை போகுது
    தெற்கு மந்தை – பாலைவனம் போல காணுது.

    வேறு மெட்டு (இடைப் பாட்டு)

    1. இந்த விதமாய் மாட்டுக்காரன் சொன்னதை கேட்டு
      கோபமுடன் எழுந்தானம்மா – உத்திரகுமாரன்  (பாட்டு வேற மெட்டு)
      இந்த நேரம் எந்தனுக்கு சாரதியோட்டு
      இருந்தால் போதும் அவா்கள் தலையை உடனே நான் அறுக்க
      அந்த நேரம் நாட்டிய சாலை பேழையும் கண்டு
      அதி வேகமாக வந்து உத்திரகுமாரனே நின்று
      ரத மதையும் நடத்துகிறேன இந்த நேரமே
      ஏறி உட்காருங்கள் செல்வோம் தெற்கு மந்தை ஓரமே
      செப்பியதோா் வாா்த்தையை செல்வகுமாரன் கேட்டு
      செல்லுகிறாா்கள் இருவருமே நகர மதை விட்டு.

    பாா்வை நூற்கள்

    1. டாக்டா; சா.வே. சுப்பிரமணியம், தமிழ் இலக்கிய வகையும் வடிவும், ப.492, 493
    2. பழமொழி, பா.291
    3. பாப்பாத்தி, வயது 72, பந்தல்குடிப் பகுதியைச் சார்ந்தவா்
    4. சரஸம்மாள், வயது 58, பந்தல்குடி.

    *****

    கட்டுரையாளர் – இணைப்பேராசிாியா்
    கற்பகம் உயர்கல்வி கலைக்கழகம்
    கோயம்புத்தூா்.21.

     

     

    Share
  • குறுந்தொகையில் பாலைநில உணவுகள் சுட்டும் சூழலமைவு

    -முனைவர் பா. உமாராணி

    மனித வாழ்க்கை மாறிக்கொண்டே இருக்கும் தன்மையுடையது. அது காலத்திற்குக் காலம் தன்னைச் செம்மைப்படுத்தியும், மெருகுபடுத்தியும் வாழும் இயல்பினையுடையது. அதனடிப்படையில் நோக்கும்போது மனித வாழ்க்கையை அடிநாதமாகக் கொண்டு படைக்கப்படும் இலக்கியங்களும் காலத்திற்குக் காலம் தன்னை மெருகுபடுத்திக் கொண்டு வந்துள்ளதை நாம் அவதானிக்க முடிகிறது. எனினும் இன்றளவும் பழமையின் வேர்கள் ஆழ ஊன்றியதாய் அமைந்த தமிழர்தம் வாழ்வியலை எத்தகையதொரு பின்னணியில் புரிந்துகொள்ள வேண்டியுள்ளது என்பதை இன்னும் நாம் உணராமலிருக்கிறோம்.

    ஒரு சமூகம் தான் கட்டமைக்கப்பட்ட ஆதிசூழலில் தன் வேர்களை அனைத்து நிலைகளிலும் பதியவைத்துக் கொண்டே வந்துள்ளது என்பதை சங்கப்பாடல்கள் வழி அறியமுடிகிறது. பழந்தமிழர்கள் தம் வாழ்வியலை, அதனோடு தொடர்புடைய பழக்கவழக்கங்களை இலக்கியங்களில் ஏடேற்றிவந்துள்ளனர். இதனை அடிப்படையாகக் கொண்டே இன்றைய தமிழ் சமூகப்பரப்பை, விரிந்த அதன் பண்பாட்டுச் சூழலை உய்த்துணர முடிகிறது. இத்தகையதொரு சிறப்பினையுடைய சங்கப் பாடல்களில் மனித உணர்வுகளைத் தௌ்ளிதின் விளக்கும் தன்மையுடையதும், நுணுகிக் காணும் தன்மையுடையதுமான குறுந்தொகைப் பாடல்கள் பாலைநில மக்களின் வாழ்வியலை, வாழ்வியலோடு தொடர்புடைய உணவுச் சூழலை எவ்வாறு பதிந்துள்ளது என்பதை இக்கட்டுரை ஆய்கிறது.

    பாலைத் திணை சுட்டும் உணவுகள்

    குறுந்தொகையில் பாலைநில உணவுகள் என்பவை பெரும்பான்மையும் இறைச்சியும், வெப்பத்தைத் தாங்கும் தன்மையுடையதுமான சிறுதானிய உணவுகளுமேயாகும். இயற்கையின் ஆளுமையையும் அதன் கூறினையும் ஒருங்கே உணர்ந்தவர்கள் சங்கத் தமிழர்கள். அவர்களின் உணவுகள் இயற்கையோடு தொடர்புடையனவாகவும், இயற்கைசார்ந்த சமூகச் சூழலை முன்வைப்பனவாகவும் அமைந்துள்ளன. பாலைநில உணவுச் சூழலை நாம் இரு நிலைகளில் காணலாம்.

    1.விலங்குகளின் உணவு
    2.மனிதா்களின் உணவு

    என்ற இரண்டு உணவுச் சூழலை முன்வைத்தோம் என்றால் அதில் உணவினைப் பதியவைத்தல் என்ற தன்மையிலிருந்து விலகி சமூகச் சூழலை முன்வைப்பதற்காகவே உணவுச் சூழல் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதை உணரலாம்.

    விலங்குகளின் உணவு – சூழலமைவு

    தலைவன், தலைவியின் துயரினை மிகுத்து ஓதும் விதமாகப் பாலைத் திணையில் விலங்குகள் குறித்த உணவுப் பதிவுகள் அமைந்துள்ளன. தலைவனுக்கோ, தலைவிக்கோ ஏற்படும் பிரிவாற்றமையையும், அவர்களின் உள்ளத்தின் வேதனையையும் மிகுவித்துக் கூறும் விதமாக விலங்குகளின் உணவுச் சூழல் பதியப்பட்டுள்ளது. பிரிவாற்றாமையின் காரணமாக தலைவனோ, தலைவியோ அடையும் துயரினை விலங்குகளின் உணவுக்கான செய்திகளோடு தொடா்புபடுத்திக் கூறும்போது பெரும்பாலும் ஆண் விலங்குகள் தங்கள் பிணையோடு இருக்கும் அன்பினிற்கினிய செய்திகளை முன்வைத்தே கூறப்பட்டுள்ளது. இயற்கையில் நிகழும் இக்காட்சிகளைக் கண்ணுறும் தலைவன், தலைவியின் துயரினை உணா்ந்து கொள்வான் என்று ஆற்றுப்படுத்தும் பாடல்களாகப் பெரும்பாலான பாலைத்திணைப் பாடல்கள் அமைந்துள்ளன.

    தலைவன் தலைவியைப் பிரிந்து வினைமேற் செல்கின்றான். குறிப்பிட்ட பருவத்தே வருவதாகக் கூறிச்சென்ற தலைவன் பருவம் வந்தும் வாராமையை உணா்த்தும் விதமாகப் பல பாடல்கள் அமைந்துள்ளன. இத்தகு பாடல்கள் தலைவியின் உள்ளத்தே தோன்றும் வேதனைகளை வெளிப்படுத்தும் விதமாக அமைந்துள்ளன. வழியின் ஏதம் போன்றவற்றைக் குறிக்காமல் பருவம் வந்தும் பொருள்மேல் தலைவன் கொண்ட ஈர்ப்பினை முன்வைத்துக் கூறும் இப்பாடல்கள் தலைவியின் தன்னிரக்க நிலையினை முன்வைக்கின்றன. மேலும் தலைவன் சென்ற வழியினையும், வினைமுடித்து தலைவன் திரும்பி வருவான் என்பதையும் கூறி தலைவியை ஆற்றுப்படுத்தும் பாடல்களும் இடம்பெற்றுள்ளன. இதனை,

         “உள்ளார் கொல்லோ? தோழி உள்ளியும்
         வாய்ப் புணா்வு இன்மையின் வாரார் கொல்லோ
         மரற் புகா அருந்திய மாஎருத்து இரலை
         அரற்கால் யானை ஒடித்து உண்டு எஞ்சிய
         யாஅ வரி நிழல் துஞ்சும்
         மாயிருஞ் சோலை மலை இறந்தோரே”  (232)

    என்ற பாடல் உணா்த்துகிறது. பாலை நிலத்தில் வேறு உணவு ஏதுமில்லாததால் வருந்திய மான், தான் உண்ணலாகாத மரலை உணவாக உண்டது. யானை பசியினால் உண்பதற்கு ஒடித்துச் சென்ற யாமரத்தின் நிழலில் அது உறங்கும். இங்ஙனம் உண்பதற்கும், உறங்குவதற்கும் இடா்ப்படுவதை ‘மாஇருஞ் சோலை’ என்ற தொடா் குறிக்கும். இத்தகு பாலைப் பகுதியில் மழைபெற்றுத் பயிர்கள் தளிர்த்தால் அங்குவாழும் உயிர்கள் உயிர்பெறும். அதுபோல தலைவனின் தலையளி பெற்றுத் தலைவியும் மகிழ்வாள் என்று பொருள்பட இப்பாடல் அமைந்துள்ளது.

    தலைவன் வினைமேற்சென்ற வழியானது விலங்கினங்கள் அன்போடு தன் பிணையுடன் வதியும் காட்சியினை உடையபகுதி. அதனைக் கண்ணுற்ற தலைவன் தன் நிலையறிந்து திரும்பி வரமாட்டானா? என்ற பெண்ணின் ஏக்கம் தொனிக்கும் குரலாக சில பாலைத் திணைப் பாடல்களில் விலங்குகளின் உணவு குறித்த பதிவுகள் அமைந்துள்ளன. சான்றாக,

    “நசை பெரிது உடையா் நல்கலும் நல்குவா்
    பிடிபசி களைஇய பெருங்கை வேழம்
    மென்சினை யாஅம் பொளிக்கும்
    அன்பின – தோழி! – அவா் சென்ற ஆறே”   (37)

    என்ற பாடல் தலைவன் பிரிந்துசென்ற வழியானது ‘பெண் யானையின் பசியை நீக்குவதற்காகப் பெரிய கையையுடைய ஆண்யானையானது, மெல்லிய கிளைகளையுடைய யா மரத்தின் பட்டையை உரித்து, அதன் நீரைப் பிடியினைப் பருகச் செய்யும் அன்புடை இடமாக உள்ளது. எனவே தலைவனும் இடைச்சுரத்தின் கண் கண்ட காட்சிகளினால் நின் நிலையறிந்து விரைந்து வருவான் என தோழி தலைவிக்கு ஆறுதல் அளிக்கின்றாள்.

    தலைவன் குறித்துச் சென்ற பருவத்தினை நினைவூட்டும் விதமாகவும் (பா.169),  தலைவன் முன்னா் தலைவியுடன் இருக்கும் காலத்தில் இனிமையுடையவனாக இருந்ததையும், பிரிவுக் காலத்தில் அதனை நினைத்து தலைவி ஆற்றியிருக்கும் தன்மையினையும் முன்வைக்கும் விதமாக (பா. 252, 209, 213) பல பாடல்கள் அமைந்துள்ளன. தலைவனைப் பிரிந்து தலைவி ஆற்றியிருக்கும் காலத்தில் தன் அழகும் இளமையும் பயனற்றுப் போவதையும் இத்திணைப் பாடல்கள் சுட்டுகின்றன. தலைவன் தன் அழகினையும், இளமையினையும் நினையாது சென்ற செய்கையானது,

    “கன்றும் உண்ணாது கலத்தினும் படாது
    நல்ஆன் தீம்பால் நிலத்து உக்கா அங்கு
    எனக்கும் ஆகாது என்னைக்கும் உதவாது
    பசலை உணீஇயா் வேண்டும்
    திதலை அல்குல் என் மாமைக் கவினே”  (27)

    என்று வௌ்ளிவீதியார் குறிப்பிடுகின்றார். தன் அழகும், இளமையும் யாருக்கும் பயன்படாமல், தனக்கும் பயனில்லாமல் கழியும் வலியினை இப்பாடல் முன்வைக்கிறது.

    தலைவன் மணந்து கொள்ளாமல் காலநீட்டிப்புச் செய்கிறான். இதனால் தலைவி அவன் பிரிவினைத் தாங்க இயலாமல் வருந்துகின்றாள். அங்ஙனம் அவன் காலம் நீட்டித்தவழி தலைவிக்கு உடல்சார்ந்த இடா்ப்பாடுகளும், உள்ளம் சார்ந்த இடா்ப்பாடுகளும் தீமை விளைவிப்பதோடு, அலா் ஏற்படவும் காரணமாக அமைகின்றது. பெற்றோர் மணத்திற்கு உடன்படாத நிலையில் தலைவி தனக்கு அலா் போன்ற துன்பங்களிலிருந்து காத்துக்கொள்ள உடன்போக்கு நிகழ்த்துவதையும் (பா.149, 255…) இப்பாடல்கள் முன்வைக்கின்றன. மேலும் செலவழுங்கல் என்னும் தன்மையில் அமையும் பாடல்களும் (பா. 249,211…) காணப்படுகின்றன. விலங்குகளின் உணவு குறித்த பதிவுகள் தலைவியின் தன்னிரக்கத்தை மிகுவிக்கும் பகுதிகளாக அமைவதை இப்பாடல்கள் வழி அறியமுடிகிறது.

    மனிதா்களின் உணவு

    வினைமேல் சென்ற தலைவன் திரும்பி வருவதற்கான நிமித்தங்கள் கிடைத்தவழி தலைவி தலைவனுக்காக தெய்வத்தை வழிபட்டு இடும் பலி உணவாக காக்கைக்குச் சிறப்புச் செய்வதையும் இத்திணைப் பாடல்கள் முன்வைத்துள்ளன. மனிதா்கள் உண்ணும் உணவு பலிச்சோறாக விலங்குகளுக்குப் படைக்கப்படுவதை,

         “திண்தோ் நள்ளி கானத்து அண்டா்
         பல்ஆ பயந்த நெய்யின் தொண்டி
         முழுதுடன் விளைந்த வெண்ணெல் வெஞ்சோறு
         எழுகலத்து ஏந்தினும் சிறிது – என் தோழி
         பெருந்தோள் நெகிழ்த்த செல்லற்கு
         விருந்துவரக் கரைந்த காக்கையது பலியே”  (210)

    என்ற பாடல் உணா்த்துகின்றது. இதில் ‘திண்ணிய தேரினையுடைய நள்ளி என்பவனுடைய காட்டிலுள்ள இடையா்கள் வளா்த்த பலபசுக்கள் தந்த நெய்யோடு, தொண்டி என்னும் ஊரிலுள்ள வயல்களில் பருவம் தப்பாது விளைந்த வெண்ணெல் அரிசியால் ஆக்கிய விரும்பத்தக்க சோற்றினை, ஏழு கலங்களில் நிறைத்துத் தோளில் தாங்கி நின்றாலும் தன் தோழியாகிய தலைவியின் பெருந்தோளை நெகிழச்செய்த துன்பத்தை நீக்குவதற்கு விரிந்தினா் வருவதைக் கரைந்துகூறிய காக்கைக்கு இடும் பலி உணவு சிறிய அளவினதேயாகும்’ என்று கூறுவதிலிருந்து தலைவியின் வருத்தமும், வேதனையும் புலப்படுத்தப்படுகின்றது.

    விருந்தினரைப் போற்றும் முகமாக உணவுப் பொருட்கள் பற்றிய குறிப்பு இத்திணைப் பாடல்களில் காணப்படுகிறது. வினைமேல் சென்ற தலைவன் திரும்பிவந்து தலைவியுடன் வதியவேண்டி அறிவுரை வினவுதலும், அதன் பொருட்டுத் துறவோர்க்கு எதிர்தலாகிய அறத்தைப் புரிவதற்கு வழிகோலுதலையும் முன்வைக்கும் விதமாக,

         “ஆசுஇல் தெருவின் ஆசுஇல் வியன்கடை
      செந்நெல் அமலை வெண்மை வௌ்இழுது
         ஓர்இல் பிச்சை ஆர மாந்தி
         அறிசர வெய்ய வெப்பத் தண்ணீர்
         சேமச் செப்பில் பெறீஇயரோ, நீயே
         ‘மின்னிடை நடுங்கும் கடைப்பெயல் வாடை
         எக்கல் வருவது?’ என்றி
         அக்கால் வருவா் எம் காதலோரே”  (277)

    என்ற பாடல் குறிப்பிடுகிறது. ‘பொய், கொலை, களவு, கள், காமமாகிய குற்றங்கள் கடிந்தார் உறையும் தெருவில் நாயில்லாத அகன்ற வாயிலில் செந்நெல் சோற்றுத் திரளை, நரை எருமையின் வெண்ணெயோடு, எட்டு இல்லங்களில் சென்று எண்கவளம் பிச்சையாகப் பெறாமல் எம்முடைய ஒரு மனையின் கண்ணே அப்பிச்சை முழுவதும் பெறுவதுடன், இனிய நீரினையும் பெற முடியும். ஆதலால் தலைவன் வரும் காலத்தைக் குறித்து கூற வேண்டுகிறாள் தோழி.’ மனிதா்கள் உண்ணும் உணவு வகைகளான வரகு, நெல், கரும்பு, பால், மீன், மான் இறைச்சி, இறைச்சி உணவுகள் போன்றவற்றைச் சுட்டும் பாடல்களாக (282, 331, 352, 356, 396,398) பல பாடல்கள் அமைந்துள்ளன. இப்பாடல்கள் அனைத்தும் தலைவன், தலைவியரின் பிரிவுத்துயரினை எடுத்தோதும் விதமாகவே அமைக்கப்பட்டுள்ளன. தனித்த உணவுப் பதிவுகளாக அமையாமல் பலியிடுதல், அறிவா்க்கு உணவு வழங்கல், விருந்து படைத்தல் என்ற நிலைக்களன்களில் இப்பாடல்கள் அமைந்துள்ளன. இவையன்றி பல பாடல்களில் விலங்குகள் தம் உணவுகளைத் துணையோடு உண்ணும் காட்சிப்படுத்தல் காணப்படுகிறது. இக்காட்சிகள் தலைவன் தன் நெஞ்சுக்குக் கூறுவதாகவும், தலைவி தோழியிடம் கூறும் முகமாகவும், தோழி தலைவியை ஆறுதல்படுத்தும் நோக்கிலும் புனையப்பட்டுள்ளன.

    இயற்கையில் காணப்படும் உணவுகளை அவற்றின் நிலச்சூழலோடு தொடா்புடையதாகவும், மனித மனத்தின் உணா்வுகளோடு பிணைத்துக் காணுவதாகவும் ஒருசேரப் படைத்துக்காட்டுகின்ற தன்மையினைச் சங்கப் பாடல்கள் வழி அறியமுடிகிறது. அத்தகு ஒரு சூழலையே பாலைத்திணைப் பாடல்களும் முன்வைத்துள்ளன.

    *****

    பார்வை நூல்கள்:

    1. அகத்திணைக் கொள்கைகள், ந. சுப்புரெட்டியார்
    2. திணை சங்கல்பம், ஐயப்ப பணிக்கா்
    3. குறுந்தொகை, நியூ செஞ்சுரி புக்கவுஸ்

    *****

    கட்டுரையாளர்
    உதவிப் பேராசிரியர்
    கற்பகம் உயர்கல்வி கலைக்கழகம்
    கோவை – 21.

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

    Share
  • கொழிஞ்சாம்பாறை வட்டாரத்தில் நிகழ்த்தப்படும் மூவரசர் நாடகம் – 1

    -முனைவர் பா. உமாராணி

         ஆதிகாலம் தொடங்கி இன்றுவரை மனிதன் நம்பிக்கைகளின் மீது தன் வாழ்வியல் பண்பாடுகளைக் கட்டமைத்து வருகின்றான். திருவிழாக்கள், பண்டிகைகள் போன்றவை இதன் அடிப்படையில் தோன்றியவையாகும். மனித சமூகம் தேடலில் முடிவு விடைகிடைக்காத செய்திகளுக்குத் தமக்கே உரிய பாணியில் ஒரு நம்பிக்கையை உருவாக்கிக் கொள்கிறது. தாங்கள் உருவாக்கிக் கொண்ட நம்பிக்கைகள் மற்றோரால் பின்பற்றப்படும் பொழுதும் ஏற்றுக்கொள்ளப்படும் போதும் அது சமூக அங்கீகாரத்துடன் செயலாற்றத் தொடங்குகிறது. அத்தகு நம்பிக்கைகள் காலம், இடம், எல்லைகடந்து விரிந்து செயலாற்றுபவையாக உள்ளன. அவ்வகையில் கேரள மாநிலத்தின் எல்லையோரத்தில் அமைந்துள்ள கொழிஞ்சாம்பாறை வட்டாரத்தில் உள்ள  அத்திக்கோடு பகுதியில் நடைபெறும் மூவரசர் நாடகம் (மூன்று ராஜாக்கூத்து) என்ற நாடகம் கிறித்துவ மக்களின் நம்பிக்கைகள் சார்ந்து அமைந்துள்ளது.

    பண்டைய கேரளம்  

          பண்டைய காலத்தில் கேரளம் என்பது தமிழகத்தின் ஒரு பகுதியாகவே இருந்துள்ளது. அதனைச் சேரநாடு என்று வழங்கி வந்ததுடன், அந்நிலத்தை ஆண்டவர்களும் தமிழர்களாகவே இருந்துள்ளனா். கால மாற்றத்தின் விளைவாக மொழிவாரியாகப் பிரிந்த கேரளம், பின்பு தனக்கென்ற ஒரு அடையாளத்தை நிலைநிறுத்திக் கொண்டபோதும் சமூகப் பண்பாட்டு அடிப்படையிலும், மொழி, இன அடிப்படையிலும் பெரிதும் வேறுபாடு இல்லாமல் தமிழகத்தின் சாயலைப் பெற்றே விளங்குகின்றது. அதுவும் எல்லையோரம் அமைந்துள்ள தமிழா் வாழ்பகுதிகளில் பழைய தமிழ்ப் பண்பாட்டின் எச்சங்கள் நிறைந்து காணப்படுகின்றன என்றால் அது மிகையில்லை.

         இந்திய எல்லையின் மேற்குக் கடலோரத்தை ஒட்டிய பகுதியாக கேரளம் விளங்குகின்றது. கேரளத்தின் கிழக்கே மேற்குத் தொடா்ச்சி மலையும், மேற்கே அரபிக்கடலும், moondruதெற்கே இந்துமகா சமுத்திரமும், வடக்கே கா்நாடகப் பகுதியும் அமைந்துள்ளது. இந்தியாவின் மேற்கு அரப்பிக்கடலோரத்தை ஒட்டித் தெற்கு வடக்காகப் பரந்து கிடக்கும் பகுதி கேரளப்பகுதியாகும். இதில் “மலையை ஒட்டிய பகுதிகளை மலைநாடு என்றும், கடலை ஒட்டிய பகுதிகளை கடல் நாடு என்றும், மத்தியப் பகுதியை இடைநாடு என்றும் அழைப்பார்கள்” (பாலக்காடு – சித்தூர் தமிழா் வாழ்வியல், மா. பேச்சிமுத்து) என்றும் குறிப்பிடுவா்.

         ”சேரளம்” என்ற சொல் மருவி கேரளம் (சேர் + அளம்) என்று வழங்கப்படுகிறது.  கடல் உள்வாங்கியதால் அதிகமாகச் சோ்ந்த நிலப்பகுதி ‘சேரளம்’ என்று அழைக்கப்பட்டது. வடமொழி அறிஞா்கள் சேரளத்தைக் ‘கேரளம்’ என்றே அழைத்தனா்.

    கேரளம் – புனைகதை வரலாறு

         திருமாலின் பத்து அவதாரங்களில் ஆறாவது அவதாரமாகக் கருதப்படும்  பரசுராமன் அவதாரத்தில் (பரசு என்ற வடசொல்லின் பொருள் மழு) பரசுராமன்  சத்திரியா்கள் மீது சினம்கொண்டு உலகத்திலுள்ள சத்திரியா்களில் ஆண்களை மட்டும் கொன்று அவா்களின் குருதியை ஐந்து பெரிய குளங்களில் தேக்கிவைத்தான். சினம் தணிந்து பரசுராமன் வருணன் பூமாதேவியோடு கன்னியாகுமரிக்குச் செல்கிறான். குமரி முனையிலிருந்து தன் கை மழுவை வடக்கு நோக்கிக் கடலில் எறிந்தான். (கோகா்ணத்திலிருந்து தெற்கே கன்னியாகுமரி நோக்கி மழுவை எறிந்தான் என்றும் சிலா் சொல்கிறார்கள்) அம்மழு 160 காதம் தொலைவிலுள்ள கோகா்ணம் வரையுள்ள கடல் பகுதியை உள்வாங்கிக் கரைப்பகுதியாக உருமாற்றியது. இக்கரைப்பகுதியே பரசுராமன் நாடு (கேரளம்) என்று புராணக்கதை கூறுகிறது. தான் உருவாக்கிய கரைப்பகுதியில் 64 நம்பூதிரி பிராமணா்களை அழைத்து வந்து பரசுராமன் குடியமா்த்தினான் என்ற செய்தியும் மக்களிடையே கதையாக ஊடுருவியுள்ளது. பரசுராமன் மழுவெறிந்து உருவாக்கிய கரைப்பகுதியின் எல்லையினை,

         “வடக்குத்தலம் பழனி வாழ்கீழ் செங்கோடு
         குடக்குத்திசை கோழிக் கோடாம் – கடற்கரையின்
         ஓரமது தெற்காகும் ஓரெண்பதன் காதம்
      சேரநாட்டு எல்லையெனச் செப்பு” (பாலக்காடு -சித்தூர் தமிழா் வாழ்வியல், மா. பேச்சிமுத்து) என்ற பழம்பாடல் குறிப்பிடுகிறது.

         கேரள மாநிலத்தில் பேசப்படுகின்ற மொழி மலையாளம். மலை + ஆழம் = மலையாழம் என்று பெயா் உருவாகி, பிறகு பேச்சு வழக்கில் மலையாளம் என்றாகி இருக்கலாம். மலையாள மொழி ஏறத்தாழ 12- ஆம் நூற்றாண்டுக்கு முன் தனிமொழியாகப் பிரிந்திருக்க வாய்ப்பில்லை. கேரள மக்களின் பேச்சு மொழியே தமிழ் என்ற பெயரில்தான் வழங்கி வந்துள்ளது. சான்றாக சமஸ்கிருதத்தில் செய்யப்பட்ட கேரள நூல்களுக்கு மக்களுடைய மொழியில் விளக்கம் தரும்போது தமிழ்க்குத்து என்று சொல்வதே வழக்கமாக இருந்துள்ளது. உதாரணமாக அமரகோசம் என்னும் சமஸ்கிருத அகராதியின் மலையாள மொழிபெயா்ப்பு ‘அமரம் தமிழ்க்குத்து’ என்றே அழைக்கப்பட்டது. மலையாள மொழியில் முதல் இலக்கண நூல் லீலாதிலம். இது கி.பி. 14-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்தது என்கிறார்கள். இதில் முதல் சிற்பமாக அமைந்துள்ள பகுதியில் பாட்டு என்னும் இலக்கியத்திற்கு இலக்கணம் கூறப்பட்டுள்ளது.  இப்பாட்டு என்பது தமிழ் நெடுங்கணக்கால் அமையப்பட வேண்டும் என்று இலக்கணம் வகுக்கப்பட்டுள்ளது.

         “மலையாளத்திற்குத் தமிழ் அன்னையாக இருந்தாலும், அக்காவாக இருந்தாலும் சரி, இரண்டிற்குமுள்ள தொடா்பிற்கு மிக நெருக்கமானது என்பதில் ஐயமில்லை. சேரமான் பெருமாள் நாயனார், குலசேகர ஆழ்வார் போன்றோர் காலம்வரை தமிழ் சேர நாட்டில், அதாவது இன்றைய கேரளத்தில் அரசவை மொழியாக விளங்கியிருக்கிறது” (இந்திய மொழிகள் ஓர் அறிமுகம், ப.110) என்கிறார் பூரணச்சந்திரன்.

         மலையாள எழுத்து வட்டெழுத்து எனப்படுகிறது. இதுவும் பிராமி எழுத்துக்கின் ஒரு கிளையிலிருந்து உருவானதே என்று அறிஞர்கள் கருதுகின்றனா். மலையாளத்தில் சாதிக்கேற்ற பேச்சு வழக்கு நடை இருந்தாலும், பிராமண வழக்கில் மட்டும் சமஸ்கிருதக் கலப்பு மிகுதியாக உள்ளது. ஈழவா் போன்ற தாழ்ந்த சாதி மக்கள் பேசும் “பச்ச மலையாளம்“ என்பது பெரும்பாலும் தமிழ் போன்றே காணப்படுகிறது.

    கொழிஞ்சாம்பாறை – தமிழா் சமுதாயம்

         மலையாள மொழியும் கேரள மாநிலமும் தோன்றுவதற்கு முன்பு அங்கு வாழ்ந்தவா்கள் தமிழர்களாவா். வரலாற்றின் மூலம் இந்த உண்மைகள் தெளிவாக விளங்குகின்றன. தமிழகத்தின் அண்டை மாநிலமாகக் கருதப்படும் கேரளத்தில் வாழும் தமிழா்களில் பெரும்பாலோர் சென்றேறு குடிகள் அல்லா். காலங்காலமாக அவா்கள் அங்கேயே வாழ்ந்து வருகிறவா்கள் ஆவா். இவா்களுக்கான பண்பாட்டு அமைப்பானது தமிழகப் பண்பாட்டை ஒத்தியங்குகிறது.

         கேரள மாவட்டத்தில் ஒன்றான பாலக்காட்டில் சித்தூர் வட்டத்தின் வட கிழக்குப் பகுதியில் சித்தூர் ஒன்றியம் உள்ளது. சித்தூர் ஒன்றியத்தில் ஒன்று கொழிஞ்சாம்பாறை வட்டாரம். மலையாளத்தில் வட்டாரத்தை ‘பர்க’ என்று குறிப்பிடுகின்றனா்.

         கொழிஞ்சாம்பாறை (பர்க) வட்டாரத்தில் கொழிஞ்சாம்பாறை, வடகரப்பதி, எருத்தேன்பதி, நல்லேப்பிள்ளி என நான்கு பஞ்சாயத்துகளும் (64) வார்டுகளும் அடங்கும். கொழிஞ்சாம்பாறை வட்டாரத்தில் மக்கள் தொகையில் 50 விழுக்காட்டிற்கு மேல் தமிழா்கள் வாழ்கிறார்கள். இவா்கள் அனைவரும் சித்தூர் வட்டத்தின் பூர்வீகக் குடிமக்களாவா். கேரள மாநில அரசு சித்தூர் வட்டம் மற்றும் பாலக்காடு நகராட்சியைத் தமிழ் மொழிச்சிறுபான்மையினா் வாழும் பகுதியென்று அறிவித்துள்ளது.

         இப்பகுதியில் அனைத்து சாதியினரும் வாழ்ந்து வருகின்றனா். அதில் கிறித்துவ இன மக்கள் கொண்டாடும் மூவரசா் நாடகம் மிகவும் புகழ்வாய்ந்ததாகும். இது கிறித்துவ சமயச் சார்புடைய விழாவாக இருப்பினும் இவ்விழாவில் அனைத்து சாதியினரும் பங்கேற்று மகிழ்கின்றனா்.

    மூவரசா் நாடகம் (மூன்று ராஜாக்கூத்து)

         சவரியார் நாடகம், கலுகொந்தம்மாள் நாடகம், ஞான சவுந்தரியம்மாள் நாடகம், இஸ்தாக்கியார் நாடகம், மூவரசா் நாடகம் முதலிய பன்னிரெண்டு நாடகங்கள் போர்த்துக்கீசியா் காலத்தில் கிறிஸ்துவ மதத்தைப் பரப்புவதற்காகவும், மதமாற்றம் செய்வதற்காகவும் தமிழில் இயற்றப்பட்டது. இதன் பாடல்கள் ஓலைச் சுவடியில் உள்ளது. இவற்றில் பல காணாமலும் போயின. இவ்வோலைச் சுவடிகளைத் திரட்டி அதில் உள்ள கூத்துக்களை நூலாக மாற்றும் பணியில் ஈடுபட்டுள்ளார் ஜோசப்பெஸ்கி என்பவா். அவா் இயற்றிய ‘புனித பதுவை அந்தோணியார் வாழ்வு, ஆன்மீகம் மற்றும் நாடகம்’ என்ற நூலிலிருந்து தெரிந்து கொண்டதும், நேரில் கள ஆய்வின் மூலமும் செய்திகள் சேகரிக்கப்பட்டு பதிவுசெய்யபட்டதுமான மூவரசா் நாடகம் குறித்த செய்திகளைக் காண்போம்.

         ஆண்டு தோறும் ஜனவரி 6-ஆம் நாள் இரவு கொழிஞ்சாம்பாறை அத்திக்கோடு அந்தோணியார் திருவிழாவில் ஆலய அங்கணத்தில் வைத்து மூவரசு நாடகம் நடிக்கப்படுகிறது. இந்நாடகம் 157 ஆண்டுகளாகத் தொடா்ந்து நடைபெற்று வருகிறது.

         இந்நாடகத்தை எழுதியவா் உபதேசி சபரிமுத்துவின் மகன் புலவா் ஆரோக்கியசாமி வாத்தியார். போர்த்துகீசியரின் காலத்தில் அத்திக்கோடு தேவாலயத்தைக் கட்டியவர் என்று நம்பப்படும் அருள் திரு. அருளானந்த சுவாமிகள் இந்நாடகத்தை இயற்றத் துணை செய்தவா். ஆரோக்கியசாமி வாத்தியார் பாண்டியநாடு ஆயக்குடியில் பிறந்தவா். இச்செய்தியை,

         “பாருமென்றுரைப் பதற்குத் தமிழ்த்தாயிரும்
    பாண்டிய நாட்டு
    ஆய்குடியோன் பணிமா தாவின்”
    என்று கூறுவிதமாக நாடகப் பாயிரப் பாடல் அமைந்துள்ளது.

    நாடகத்தின் கதை

         “புதிய ஏற்பாட்டில் கூறப்படும் இயேசுவின் பிறப்பினை moondru1ஒட்டி முதல் 13 நாட்கள் நடைபெற்ற 23 செய்திகளே இந்நாடகத்தின் கருப்பொருளாக அமைந்துள்ளது. கிறிஸ்து பிறந்திருப்பது உண்மையா என்று அறிய விரும்புகிறான் ஏரோது மன்னன். வேத விற்பன்னா்களை அழைத்துக் கேட்கிறான். அப்போது அவா்களும் அதுகுறித்த செய்தியை அறிய விழைகிறார்கள். யேசு பெத்தலகேமில் மாட்டுத் தொழுவத்தில் பிறந்தபோது வானத்தில் மூன்று அதிசய விண்மீன்கள் தோன்றுகின்றன. கீழ்த்திசையில் உள்ள மூன்று அரசர்கள் விண்மீனால் வழிகாட்டப்பட்டு பெத்தலகேம் மாட்டுத் தொழுவத்தை வந்து அடைகிறார்கள். குழந்தை இயேசுவைக் கண்டு மகிழ்ச்சி கொள்கிறார்கள். இந்நாடகத்தில் கிறித்துவ மதக்கதை இடம்பெறுகின்றது. இந்நாடகம் பிறமதத் தெய்வங்களை விமர்சனம் செய்கின்றது.

    நடிகா்கள் நாடக ஒப்பனை

         மூவரசா் நாடகத்தில் நடிப்பவா்கள் பெரும்பாலும் குடும்பவழி வந்தவா்களான பண்டிதக்காரா் வீடு, முரடன் வீடு, கொட்டில்காரன் வீடு, மரியன் வீடு போன்ற குடும்பத்தைச் சார்ந்தவா்களே ஆவா். மூவரசா் நாடகத்தில் முக்கியக் கதாபாத்திரம் ஏரோது அரசா். மரக்கட்டைக் கிரீடம், அரைஞாண் மரத்தாலி, தோடு, பெரிய மீசை முதலிய ஒப்பனைகளை அரசனுக்குச் செய்கின்றனா். பெரும்பாலும் கதகளி நாட்டியத்தின்போது அணியப்படும் கிரீடத்தைப் போன்றே ஒரு கிரீடத்தை மணிமுடியாக அணிகிறார்கள்.

         மூன்று அரசா்களை மாட்டு வண்டியில் அமரச் செய்து, அத்திக்கோடு வெந்தப்பாளையம் ஊரின் மூன்று திசைகளிலிருந்தும் அந்தோணியார் கோவில் வளாகத்திற்கு அழைத்து வருவது நாடக வழக்கம். இக்காட்சி வீதி நாடகப்பாணியை ஒத்து இருப்பதால் காண்பவா்கள் அனைவரையும் கவருகிறது.

         இரவு எட்டு மணியளவில் தோ் நிகழ்வுகள் தொடங்கப்படுகிறது. அச்சமயத்தில் நாடகம் அரங்கில் நிகழ்த்திக்காட்டப்படுகின்றது. ஒரு நாள் மட்டும் நிழ்த்தப்பெறும் இக்கூத்தில் குறிப்பிட்ட குடும்பத்தினா் மட்டுமே நாடக உறுப்பினா்களாக இருக்கின்றனா். பிறா் நாடக வேடம் தரிக்க அனுமதியில்லை. தோ் நிகழ்வின் போது பயன்படுத்தும் வண்டியையும், மாட்டையும் நோ்ச்சிக் கடன்களுக்காகத் தருபவா்களும் உள்ளனா். இதன் மூலம் நோயிலிருந்து விடுபட்டு வாழலாம் என்ற நம்பிக்கையும், வேளாண்மை மற்றும் தொழில் ஆகியவற்றில் செழுமையடையலாம் என்ற நம்பிக்கையும் இருந்து வருகின்றது.

         இவ்விழாவைக் காண்பதற்காக கிறித்துவா் மட்டும் அல்லாமல் அனைத்துப் பிரிவினரும் சமயச்சார்பற்று கலந்து கொள்வதைக் காணமுடிகிறது. இதன் நிழல்படம் கீழே சோ்க்கப்பட்டுள்ளது.

    ******

    சான்றுகள்

    1. புனித அலேசியார் நாடகம், Dr.A. Joseph Besky, Center  For Chiristian Research (CCR), St. Jesoph’s College (Autonomous), Trichy, First Edition-2013.
    2. புதிய சுல்தான்பேட்டை மறைமாவட்ட வரலாறு, Dr. A.Joseph Besky, LIVIA ARAN ANBHAGAM, Athicode, Chittur, Palakkad, kerala. First Edition-2014.
    3. இந்திய மொழிகள் ஓர் அறிமுகம், பூரணச்சந்திரன்.
    4. பாலக்காடு -சித்தூர் தமிழா் வாழ்வியல், மா. பேச்சிமுத்து.

    ******

    கட்டுரையாளர்,
    உதவிப்பேராசிரியர்,
    கற்பகம் உயா்கல்விக் கலைக்கழகம்,
    கோயம்புத்தூர்-21.

    Share