Tag: முனைவர் ப.திருஞானசம்பந்தம்

  • (Peer Reviewed) பதினெண்கீழ்க்கணக்கு : தமிழ் இலக்கிய வரலாற்று நூற்பதிவுகள்

    முனைவர் ப.திருஞானசம்பந்தம்
    முதுமுனைவர் பட்ட ஆய்வாளர்
    தமிழியற் புலம்
    மதுரை காமராசர் பல்கலைக்கழகம்
    மதுரை – 21

    பதினெண்கீழ்க்கணக்கு : தமிழ் இலக்கிய வரலாற்று நூற்பதிவுகள்

    மேனாட்டாரின் சிந்தனைகள், கல்வி மரபுகள் தமிழ் மொழியைக் கற்பதிலும் அது குறித்துச் சிந்திப்பதிலும் பல புதிய அணுகுமுறைகளை ஏற்படுத்தித் தந்தன. இலக்கிய வரலாறு என்ற துறை, அத்தகைய புதிய பயில்துறைகளுள் ஒன்றாகத் திகழ்கின்றது. 1930 தொடங்கித் தமிழில் எண்ணற்ற இலக்கிய வரலாறுகள் எழுதப்பட்டுள்ளன. இன்றும் எழுதப்பட்டு வருகின்றன. தமிழ் இலக்கிய வரலாறுகள் இலக்கியங்களின் கால அடிப்படையிலும், இலக்கிய வகைமைகளின் அடிப்படையிலும், பாட நோக்கிலும் எழுதி வெளியிடப்பட்டுள்ளன.

    இந்த வரிசையில் குறிப்பிட்டுச் சொல்லத்தக்க நிலையில் இலக்கிய வரலாற்று நூல்களை எழுதியவர்கள்: பி.டி.சீனிவாச ஐயங்கார், கா.சுப்பிரமணிய பிள்ளை, தி.வை.சதாசிவ பண்டாரத்தார், மது.ச.விமலானந்தம், மு.அருணாசலம், ச.வையாபுரிப்பிள்ளை, மா.இராசமாணிக்கனார், மு.வரதராசனார், ஹெப்சிபா ஜேசுதாசு, தமிழண்ணல், கார்த்திகேசு சிவத்தம்பி, பாக்கியமேரி, அ.கா.பெருமாள், க.பஞ்சாங்கம் முதலியோர். இலக்கிய வரலாற்று நூல்களில் தமிழின் தொன்மை இலக்கணமான தொல்காப்பியம் முதல் இருபதாம் நூற்றாண்டின் இலக்கியங்கள் வரை பதிவு செய்யப்பட்டுள்ளன. இவ்விலக்கிய வரலாற்றில் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களின் தொகுப்பு, நூற்பெயர்கள் குறித்த ஆய்வுகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுள்ளன. இவற்றில் காணப்படும் பதினெண்கீழ்க்கணக்குக் குறித்த பதிவுகளை இக்கட்டுரை கவனப்படுத்துகின்றது.

    பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் குறித்துச் செவ்விலக்கியப் பதிப்பு மரபிலும் ஆராய்ச்சி மரபிலும் பெரும் விவாதங்கள் நடைபெற்றுள்ளன. பதினெண் கீழ்க்கணக்கில் பதினெட்டாவதாக அமையும் நூல், ‘கைந்நிலை’ என்பது தொகுப்பு வழியும் ஆராய்ச்சியாளர்களாலும் இ.வை.அனந்தராமையரின் கைந்நிலை (1931) பதிப்பினாலும் தெளிவுபெற்றது. 1930களுக்கு முன்னர்க் கீழ்க்கணக்கைச் சார்ந்தது கைந்நிலையா? இன்னிலையா? என்ற விவாதம் பெருமளவில் முன்னெடுக்கப்பட்டது. 1915இல் வ.உ.சிதம்பரம் பிள்ளை இன்னிலையைப் பதிப்பித்த பிறகு, கீழ்க்கணக்கைச் சார்ந்தது இன்னிலைதான் என்று ஒரு சாரார் கருதினர். மற்றொரு புறம் இன்னிலை பொய் நூல், போலி நூல், கற்பித நூல் என்ற கருத்துகள் வலுப்பெற்றன. இறுதியாகக் கீழ்க்கணக்கைச் சார்ந்த நூல் கைந்நிலை என்பது உறுதிப்படுத்தப்பட்டது. பாடல்களின் எண்ணிக்கை அடிப்படையில் கைந்நிலையும் இன்னிலையும் கீழ்க்கணக்கைச் சாராத நூல்கள். திணைமாலை என்னும் பெயரிலான நூல்தான் கீழ்க்கணக்கைச் சார்ந்தது என்ற கருத்தும் மற்றொரு புறம் முன்வைக்கப்பட்டது. இவ்வகையான கருத்து நிலைகள், எவ்வாறு இலக்கிய வரலாற்று நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன என்பதைக் குறித்து நுட்பமாக ஆராய வேண்டியுள்ளது.

    தமிழ் இலக்கிய வரலாற்று நூல்களில் இடம்பெற்றுள்ள பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் குறித்த கருத்துகளைக் கீழ்க்கண்ட நிலைகளில் தொகுத்துக் கொள்ளலாம்.

    –           பதினெண் கீழ்க்கணக்கைச் சார்ந்தது இன்னிலை

    –           பதினெண் கீழ்க்கணக்கைச் சார்ந்தவை கைந்நிலையும் இன்னிலையும்

    –           பதினெண் கீழ்க்கணக்கைச் சார்ந்தது கைந்நிலை

    பி.டி. சீனிவாச ஐயங்கார் ஆங்கிலத்தில் எழுதிய History of the Tamils from the earliest times to the Tamils (1929) என்னும் நூல், பி.இராமநாதன் அவர்களால் மொழிபெயர்க்கப்பட்டு, தமிழர் வரலாறு (கி.பி.600 வரை) என்ற தலைப்பில் வெளிவந்துள்ளது. இந்நூலின் மொழிபெயர்ப்பாசிரியர் இராமநாதன் களப்பிரர் காலத்தில் தோன்றிய நூல்களாகக் கீழ்க்கணக்கு நூல்களைக் குறித்துள்ளார். “பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் அனைத்தும் கி.பி.500 – கி.பி.800 காலத்தவை என்பர்” (பி.இராமநாதன்: மொழிபெயர்ப்பு:2007:68). ஆனால் பி.டி.சீனிவாச ஐயங்கார் கி.பி.6-8 நூற்றாண்டில் தோன்றியனவாகக் கீழ்க்கணக்கு நூல்களைக் குறிப்பிடுகின்றார்.

    கி.பி.8ஆம் நூற்றாண்டு சார்ந்த முத்தரையரைக் குறித்து, நாலடியார் பாடல்கள் இரண்டு குறிப்பிடுகின்றன. களவழி நாற்பது, சோழன் செங்கணான் மீது பாடிய புறப்பாடல். ஐந்து நூல்கள் அகப்பொருள் சார்ந்தவை. களவழி நாற்பதும், இவ்வைந்து நூல்களும் பழைய புறம், அகப்பாடல் மரபின் தேய்ந்து போன கடைசிப் படைப்புகள். 12 நூல்கள் அற நூல்களாகும்; இவை அக்காலத்தில் இந்தியா முழுவதும் பிரபலமாக இருந்த சமஸ்கிருத நீதி நூல் பார்த்துப் பாடப்பட்டவை; தென் இந்தியாவில் ஆரியப் பண்பாடு நிலை பெற்றுவிட்டதைக் காட்டுகின்றன. இந்நூல்களில் பெரும்பாலானவை, யாப்பில் உள்ளனவேயொழிய கவிநயம் அற்றவை. ஆனால் அறக் கருத்துகளை நினைவிற் கொள்ளும் வகையில் மனப்பாடம் செய்ய எளிதானவை. உயர்ந்த ஒழுக்கத்தைப் புகட்டும் இவ்வறக் கருத்துகளை விஞ்சியவை வேறு எந்த நாட்டின் படைப்பிலும் இல்லை.

    (பி.டி.சீனிவாச ஐயங்கார்: பி.இராமநாதன்: மொழிபெயர்ப்பு: 2007: 236, 237)

    கீழ்க்கணக்கில் பன்னிரண்டு அற நூல்கள் உள்ளன என்று கூறும் பி.டி.சீனிவாச ஐயங்கார், அந்நூல்கள் எவை என்பதைக் கூறவில்லை. மற்றவர்களைப் போல் இவரும் பன்னிரண்டாவது நூலாக இன்னிலையைக் கருதித் தமது கருத்தை முன்வைத்துள்ளார் என்று எண்ணத் தோன்றுகின்றது.

    பதினெண் கீழ்க்கணக்கைச் சார்ந்தது இன்னிலை என்ற கருத்தை வலிறுத்தித் தமது இலக்கிய வரலாற்று நூல்களில் எழுதியவர்கள் கா.சுப்பிரமணிய பிள்ளை (1930), மு.வரதராசன் (1972) உள்ளிட்டவர்கள். இவர்கள் சமயச் சார்பின் அடிப்படையில் தமது கருத்துகளைப் பதிவு செய்திருக்க வேண்டும்.

    கா.சுப்பிரமணிய பிள்ளை 1930இல் இலக்கிய வரலாறு என்ற நூலை எழுதியுள்ளார். இவருக்கு முன் ஆங்கிலத்தில் எம்.எஸ்.பூரணலிங்கம் பிள்ளையாலும், பி.டி.சீனிவாச ஐயங்காராலும் இலக்கிய வரலாறு சுருக்கமாக எழுதப்பட்டுள்ளது. தமிழில் சுன்னாகம் குமாரசுவாமிப் புலவரின் புலவர் சரித்திரமும் சபாபதி நாவலரின் திராவிடப் பிரகாசிகையும் எழுதப்பட்டுள்ளது. குமாரசுவாமிப் புலவர் எழுதிய நூலில் இடம் பெற்றுள்ள புலவர் சரித்திரம் காலமுறைக்கேற்ப எழுதப்படவில்லை; அதுபோல் சபாபதி நாவலர் சில இலக்கியங்களின் இயல்புகளை மட்டுமே தமது நூலில் குறிப்பிட்டுள்ளார். இக்காரணத்தினால் தமிழில் இலக்கிய வரலாற்று நூலை முதலில் எழுதியதாகக் கா.சுப்பிரமணிய பிள்ளை முன்னுரையில் பதிவு செய்கின்றார். மேலும் இதன்கண் குறைபாடுகள் பல உள்ளன. அவற்றை ஆராய்ந்து திருத்தமான கொள்கைகளை வெளியிடுவதற்கு வாயிலாக இந்நூலை உருவாக்கியதாகக் குறித்துள்ளார். இந்நூலில் கடைச்சங்க காலத்தில் தோன்றிய நூல்களாகப் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களை இவர் அடையாளப்படுத்துகின்றார். (2007:முன்னுரை)

    பதினெண்கீழ்க்கணக்குள் ஒன்றான திருக்குறளின் காலம், திருவள்ளுவரின் காலம், திருவள்ளுவரின் வரலாறு, திருக்குறளின் சிறப்பு, திருக்குறளின் அமைப்பு, திருக்குறள் முன்வைக்கும் கருத்துகள், பரிமேலழகரின் உரை நயம், ஆகியவற்றை விரிவாகக் கா.சுப்பிரமணிய பிள்ளை விளக்குகின்றார். அடுத்து முப்பால் என்பது திருக்குறளைக் குறிக்காது என்ற சி.வை.தாமேதரம் பிள்ளை முதலிய அறிஞர்கள் கருதுகின்றனர்; ஆனால் முப்பால் என்பது திருக்குறள் எனப் பலரும் குறிப்பிடுகின்றனர். திருவள்ளுவ மாலையில் ‘வள்ளுவர் முப்பால்’ என்ற தொடர் இடம்பெறுகின்றது. நல்லந்துவனார், கீரந்தையார் முதலியோரும் முப்பால் என்ற தொடரைத் தனித்தனியே தமது நூல்களில் பயன்படுத்தியுள்ளனர். முப்பால் என்ற பெயரில் வேறு நூல்கள் காணப்படாமையால், திருவள்ளுவர் நூலே முப்பால் எனக் கொள்ளத்தக்கது என்கிறார் கா.சுப்பிரமணிய பிள்ளை.

    பிற கீழ்க்கணக்கு நூல்கள் குறித்த கருத்துகள் எதையும் குறிப்பிடாத கா.சுப்பிரமணிய பிள்ளை, சில நூல்களின் பெயர்களை மட்டுமே குறிப்பிட்டுச் செல்கின்றார்.

    ஏனைக் கீழ்க்கணக்கு நூல்களாவன, நாலடியார், நான்மணிக்கடிகை, இன்னா நாற்பது, இனியவை நாற்பது, களவழி நாற்பது, கார்நாற்பது, ஐந்திணையைப் பற்றிய திணைமொழியைம்பது, திணையெழுபது என்ற நான்கு நூல்கள். திரிகடுகம், ஆசாரக்கோவை, பழமொழி, சிறுபஞ்சமூலம், இன்னிலை, முதுமொழிக் காஞ்சி, ஏலாதி என்பன. (2007:197)

    கா.சுப்பிரமணிய பிள்ளையின் தமிழ் இலக்கிய வரலாறு எழுதப்பட்ட காலத்தில், பல பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் பதிப்பிக்கப்பட்டு, புழக்கத்தில் இருந்துள்ளன. சில நூல்கள் மட்டுமே பரவலான பதிப்பாக்கத்தைப் பெறவில்லை. இவ்வாறு இருக்க, கா.சுப்பிரமணிய பிள்ளை, பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் திருக்குறளைக் குறித்த கருத்துகளை மட்டுமே விரிவாகப் பதிவு செய்திருக்கின்றார். பதினெண்கீழ்க்கணக்கு என்றாலே அனைவரின் கவனத்தை ஈர்க்கக்கூடிய நூல் திருக்குறள்தான். எனவே கீழ்க்கணக்கு நூல்களில் திருக்குறளின் சிறப்புகளைக் கூறினால், மற்ற நூல்களின் சிறப்புகளைக் குறித்ததற்குச் சமம் எனக் கா.சுப்பிரமணிய பிள்ளை கருதியிருக்க வேண்டும். இக்காரணத்தால் தமது இலக்கிய வரலாற்றில் திருக்குறளின் சிறப்புகளை மட்டும் விரிவாகக் கா.சுப்பிரமணிய பிள்ளை பேசியிருக்கின்றார் எனலாம்.

    தமிழில் உள்ள முற்கால, இடைக்கால, தற்கால இலக்கியங்களின் வரலாற்றை ஆராய்ந்து விளக்குவதாக மு.வரதராசனின் தமிழ் இலக்கிய வரலாறு (1972) என்னும் நூல் உள்ளது. இந்நூல் சாகித்திய அகாதெமியின் வேண்டுகோளுக்கு இணங்க இயற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நூலில் மு.வரதராசன், கி.பி.1ஆம் நூற்றாண்டு முதல் கி.பி.5ஆம் நூற்றாண்டு வரையிலான காலகட்டத்தில் தோன்றிய நூல்களைப் பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் என்று குறிப்பிடுகின்றனர். கீழ்க்கணக்கு என்பதற்கு அடிகள் குறைந்த செய்யுட்களால் ஆகிய நூல்கள் என்கிறார். பதினெட்டு நூல்களில் பன்னிரண்டு நீதி நூல்கள் என்றும் ஐந்து நூல்கள் காதல் பற்றியது என்றும் ஒரு நூல் போர் பற்றியது என்றும் மூன்றாகப் பகுக்கின்றார். கீழ்க்கணக்கு நூல்களுள் திருக்குறளையும் நாலடியாரையும் மட்டும் விரிவாகப் பேசுகின்ற மு.வரதராசன், மற்றைய நூல்களின் அமைப்பைச் சுருக்கமாகக் குறிப்பிட்டுச் செல்கின்றார். இவற்றுள் பன்னிரண்டாவது நீதி நூலாக இன்னிலையை இவர் குறிப்பிடுகின்றார்.

    நான்மணிக்கடிகை, சிறுபஞ்சமூலம், திரிகடுகம் என்பவை நூறு நூறு செய்யுள் கொண்ட நீதி நூல்கள். ஏலாதி என்பதும் நூறு செய்யுள் உடையதே. இனியவை நாற்பது, இன்னா நாற்பது ஆகியவை நாற்பது நாற்பது செய்யுள் உடைய நீதி நூல்கள்.

    பழமொழி நானூறு என்பது நாலடியார் போல், நானூறு செய்யுள் கொண்டது. ஒவ்வொரு செய்யுளின் இறுதியிலும் அது கூறும் நீதிக்கு ஏற்ற பழமொழி ஒன்று உள்ளது. ஆகவே, இந்த நூலால் நீதிகளை உணர்வது மட்டும் அல்லாமல், அந்தக் காலத்தில் வழங்கிய நானூறு பழமொழிகளையும் அறிய முடிகிறது.

    ஆசாரக் கோவை அந்தக் காலத்தில் போற்றப்பட்டிருந்த ஒழுக்க விதிகள் பலவற்றை ஓதுகின்றது. முதுமொழிக் காஞ்சி, திட்பமான சிறு சிறு தொடர்களில் நீதிகள் பலவற்றை உணர்த்துகின்றது. மற்றுமொரு நீதி நூல், நாற்பத்தைந்து செய்யுள்களால் நீதிகளை உணர்த்தும் இன்னிலை என்பது.

    (மு.வரதராசன்:2001:80)

    பன்னிரண்டாவது நீதி நூலாக இன்னிலையைச் சேர்த்துக் கூறும் மு.வரதராசன், காதலைக் குறித்துப் பேசும் அக நூல்களைக் கூறும்போது கைந்நிலையைச் சேர்த்துக் குறிப்பிட்டுள்ளார்.

    கார் நாற்பது, திணைமொழி ஐம்பது, திணைமாலை நூற்றைம்பது, ஐந்திணை எழுபது என்பவை காதல் பற்றிய பாட்டுகள் கொண்ட நூல்கள். கைந்நிலை என்ற நூலையும் அவற்றோடு சேர்த்து எண்ணுதல் உண்டு. (மு.வரதராசன்:2001:80)

    என்று குறித்துள்ளார். இக்கருத்துகளை வைத்துப் பார்க்கும்போது இவர் இன்னிலை, கைந்நிலை இரண்டையும் கீழ்க்கணக்கு நூலாகக் கருதுகின்றார் என்பது புலப்படுகின்றது. ஆனால் பதினெட்டு என்ற கணக்கிட்டு இவர் காட்டும் நூல்களின் எண்ணிக்கை பொருந்திச் சென்றாலும், கீழ்க்கணக்கைச் சார்ந்த ஐந்திணை ஐம்பது என்ற நூலின் பெயரையும், இந்நூல் அகப்பொருள் பற்றிப் பாடப்பட்டது என்ற குறிப்பினையும் மு.வரதராசன் குறிப்பிடவில்லை. இது அச்சுப் பிழையால் நேர்ந்ததா? அல்லது அவர் இந்நூலைக் கூறாமல் விட்டுவிட்டாரா? என்பது குறித்து மேலும் சிந்திப்பதற்கு வாய்ப்பு உள்ளது.

    மது.ச.விமலானந்தம், தமிழ் இலக்கிய வரலாற்றுக் களஞ்சியம் என்னும் தலைப்பில் இரு தொகுதிகளை (1987) வெளியிட்டுள்ளார். போட்டித் தேர்வு உள்ளிட்டவற்றிற்குப் பயன்படக் கூடிய கருவி நூலாக இந்நூல் அமைந்திருப்பது இதன் தனிச்சிறப்பு. பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் குறித்தும் அவற்றின் எண்ணிக்கை குறித்தும் விரிவான நடைபெற்ற விவாதங்களை உள்வாங்கிய நிலையில் மது.ச.விமலானந்தம் அவர்களின் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களின் பதிவுகள் அமைந்துள்ளன. இவற்றைப் பின்வருமாறு தொகுத்துரைக்கலாம்.

    • பன்னிரு பாட்டியல் உரை குறிப்பு, தொல்காப்பியரின் அம்மை என்னும் வனப்பிற்குச் சான்றாகப் பதினெண்கீழ்க்கணக்கு அமைகின்றமை, மயிலைநாதர், பேராசிரியர் உரைகளில் பதினெண்கீழ்க்கணக்கு என்னும் பெயராட்சி இடம்பெற்றுள்ளமை முதலிய செய்திகள் முதன்மை நிலையில் உள்ளன.
    • கீழ்க்கணக்கு நூல்களைச் சுட்டும் பழம்பெரும் வெண்பாவை எடுத்துக்காட்டி, பதினெட்டு நூல்கள் குறித்து நிகழ்ந்த விவாதத்தை முன்வைக்கின்றார். இப்பழம்பாடலில் இடம்பெறும் ‘முப்பால்’ என்பது திருக்குறளைக் குறிக்காது என்னும் கருத்துடைய சி.வை.தாமோதரம் பிள்ளை, கே.என்.சிவராசப் பிள்ளை ஆகியோரின் கருத்துகளையும் தொகுத்துத் தருகின்றார்.
    • முப்பால் என்பது திருக்குறளே என்று கூறும் கா.சுப்பிரமணிய பிள்ளையின் கருத்தையும் எடுத்துரைக்கிறார்.
    • கீழ்க்கணக்கைச் சார்ந்த பதினெட்டாவது நூல், கைந்நிலையா? இன்னிலையா? என இருவேறுபட்ட கருத்துகள் இருந்ததைச் சுட்டி, பலரும் கைந்நிலை என்று கூறுகின்றனர் என்கிறார். பிரபந்த தீபிகை கீழ்க்கணக்கின் பதினெட்டு நூல்கள் எவை என்ற பட்டியலைத் தருகிறது என்று சுட்டுகின்றார். அதில் கைந்நிலை இடம்பெற்றுள்ளது.
    • கீழ்க்கணக்கு நூல்கள் பதினெட்டினுள் ஒன்று இன்னிலையா, கைந்நிலையா என்ற தமது கருத்தை இவர் வெளிப்படையாக முன்வைக்கவில்லை. பதினெட்டு நூல்கள் குறித்து அறிமுகப்படுத்துகையில் கைந்நிலையின் அமைப்பையே விளக்கியுள்ளார். ஐந்திணை அறுபது (ப.60) என்ற சிறப்புப் பெயர் இந்நூலுக்கு உண்டு என்று பதிவு செய்கிறார். இதன்வழிப் பதினெண் கீழ்க்கணக்கில் கைந்நிலையைத்தான் இவர் சுட்டுகின்றார் என்ற முடிவுக்கு நாம் வர முடிகின்றது. (மது.ச.விமலானந்தம்: 1987: 103 – 104, 108)

    பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் குறித்த விவாதங்களைத் தொகுத்து தமது இலக்கிய வரலாற்றில் பதிவு செய்யும் மது.ச.விமலானந்தம், இன்னிலை, கைந்நிலை ஆகிய இரு நூல்களின் பெயர்களையும் குறிப்பிடுகின்றார். ஆனால் பதினெட்டு நூல்கள் குறித்து அறிமுகப்படுத்துகையில் கைந்நிலை நூலைக் குறித்த கருத்துகளை மட்டுமே பதிவு செய்கின்றார். பதினெட்டாவது நூல் கைந்நிலை என்ற தெளிவு இவருக்கு இருப்பினும் பதினெட்டு நூல்களைத் தொகுத்துச் சொல்லுமிடத்து இன்னிலையினைச் சேர்ந்துக் குறிப்பிடுகின்றார். மற்ற இலக்கிய வரலாற்று ஆசிரியர்களுக்கு இருக்கின்ற பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் குறித்த பொதுவான கருத்தே இவரிடமும் வெளிப்படுகின்றது.

    தமிழண்ணல் புதிய நோக்கில் தமிழ் இலக்கிய வரலாறு என்னும் நூலை 1986இல் வெளியிட்டுள்ளார். இந்நூல் இலக்கிய நோக்கில் புதிய நோக்கு, தமிழக வரலாற்றுப் பின்புலம், வகைமை நோக்கில் தமிழ் இலக்கிய வரலாறு என்ற முப்பெருந்தலைப்புகளில் அமைந்துள்ளது. இந்நூல், பல்வகை இலக்கியங்கள், இலக்கணம், தத்துவம், உரை வகை உள்ளிட்ட பல உட்தலைப்புகளில் தமிழ் இலக்கிய வரலாற்றினை விரிவாக விளக்கிச் செல்கின்றது. இதில் பதினெண்மேற்கணக்கு, பதினெண்கீழ்க்கணக்கு நூல்களின் வகைத் தொகைகளைப் பற்றிக் குறிப்பிடுகின்றார். அதன்பின்னர், பதினெண்கீழ்க்கணக்கு நூல்களைச் சுட்டும் பழம்பாடலைத் தருகிறார் தமிழண்ணல். இப்பாடல்வழிப் பதினெண் கீழ்க்கணக்கில் உள்ள நீதி நூல்களின் எண்ணிக்கையைப் பன்னிரண்டு என்கிறார். இவர்தம் கருத்து பின்வருமாறு:

    இவற்றுள் நானாற்பது, நாலைந்திணை என்பன எட்டு நூல்களைக் குறிக்கும். இன்னிலை என்ற அறநூலை ஏற்பர் சிலர்; கைந்நிலை என்ற அறநூலை ஏற்பர் சிலர். இவற்றுள் இன்னிலை அடங்கிய நீதி நூல்கள் வருமாறு:

    1) திருக்குறள்

    2) நாலடியார்

    3) நான்மணிக்கடிகை

    4) இனியவை நாற்பது

    5) இன்னா நாற்பது

    6) திரிகடுகம்

    7) ஆசாரக் கோவை

    8) பழமொழி நானூறு

    9) சிறுபஞ்சமூலம்

     10) முதுமொழிக் காஞ்சி

    11) ஏலாதி

    12) இன்னிலை

    (தமிழண்ணல் :2011:153)

    பதினெட்டு நூல்கள் எவை என்பதை வரையறுப்பதில் தமிழண்ணல் அவர்களுக்கும் சிக்கல் இருந்துள்ளது. எனவே, பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் கைந்நிலை, இன்னிலை என்னும் இரண்டு நூல்களையும் சேர்த்தே இவர் குறிப்பிடுகின்றார். பத்தொன்பது நூல்கள் குறித்தும் தனித்தனியே அறிமுகத்தைத் தருகின்றார். இதில் சங்கத் தொகை நூல்களுக்குப் பிறகு திணையிலக்கிய வளர்ச்சியினைப் பதினெண் கீழ்க்கணக்கில் காணப்படும் அகம், புறம் பற்றிய நூல்களின் மூலம் புரிந்துகொள்ள முடியும் என்ற கருத்தையும் தமிழண்ணல் முன்வைத்துள்ளார். இவ்விடத்தில் பதினெண் கீழ்க்கணக்கின் புற, அக நூல்களினைக் குறித்த அறிமுகத்தைத் தரும்போது கைந்நிலையின் சிறப்பினைக் குறிப்பிட்டுள்ளார். அப்பகுதி பின்வருமாறு:

    கைந்நிலை

    திணைக்குப் பன்னிரண்டு வெண்பாக்களாலான அறுபது பாடல்களையுடையது. இந்நூல் வெண்பாக்கள் பல சிதைந்துள்ளன. இதன் ஆசிரியர் மாறோக்கத்து முள்ளி நாட்டு நல்லூர்க் காவிதியார் மகனார் புல்லங்காடனார் ஆவார். ‘‘இவர் காலம் கி.பி.5 ஆம் நூற்றாண்டு; இந்நூலில் பாசம், ஆசை, இரசம், கேசம், இடபம், உத்தரம் ஆகிய வடசொற்கள் வந்துள. தென்பாண்டி நாட்டில் கொற்கைக்கு அண்மையில் இவர் வாழ்ந்தாராதல் வேண்டும்’’ (தி.வை.சதாசிவ பண்டாரத்தார், தமிழ் இலக்கிய வரலாறு (கி.பி.250 – 600), 1955, ப.87) எனப் பேராசிரியர் தி.வை.சதாசிவ பண்டாரத்தார் இவரைப் பற்றிக் கூறியுள்ளார்.

                                                                   (தமிழண்ணல்:2011:146, 147)

    கைந்நிலையில் இடம்பெற்றுள்ள பாடல்களின் எண்ணிக்கை, நூலாசிரியர் பெயர் ஆகியவற்றைக் குறிப்பிட்டு, இந்நூலாசிரியர் வாழ்ந்த இடம் குறித்த சி.சதாசிவபண்டாரத்தின் கருத்தைச் சுட்டிக் காட்டுகின்றார். இக்கருத்தில் இவருக்கும் உடன்பாடு என்ற தெரிய வருகின்றது. இதற்கடுத்து இன்னிலை நூல் குறித்த அறிமுகத்தைத் தமிழண்ணல் தருகின்றார்.

    இன்னிலை

    பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் ‘கைந்நிலை’ ஒன்றென ஏலாதவர் இன்னிலை என்ற அறநூலை ஏற்பர். வ.உ.சி. அவர்கள் இன்னிலையை உரையெழுதிப் பதிப்பித்துள்ளார். இது பொய்கையார் எழுதியது. கடவுள் வாழ்த்துடன் 46 வெண்பாக்கள் உள்ளன. அறம், பொருள், இன்பம், வீடென நான்கும் பற்றி இது பேசுகிறது. இவர் ‘ஆக்கியளித்து அழிக்குக் கந்தழியின் பேருருவே’ (30) என்று சிவனைக் குறிப்பதால் இவரைச் சிவநெறியினர் என்பர் கா.சு.பிள்ளை அவர்கள். இவர் களவழி பாடிய பொய்கையாருக்குப் பிற்பட்டவர் என்று கூறுகிறார் (கா.சு.பிள்ளை, இலக்கிய வரலாறு, 1956, ப.285).

    திரிகடுகம், பெண்ணுக்கு இலக்கணம் கூறுவதுபோல, இன்னிலையும் கூறுகிறது.

    ஒத்த உரிமையளா ஊடற்கு இனியளாக்

    குற்றம் ஒரூஉம் குணத்தளாக் – கற்றறிஞர்ப்

    பேணும் தகையளாக் கொண்கன் குறிப்பறிந்து

    பேணும் தகையினாள் பெண்.

    பெண் ஒத்த உரிமை உடையனாதல் வேண்டும் என்ற கருத்து முதலில் வைக்கப்பட்டுள்ளமை சிந்திக்கத்தக்கது.

    (தமிழண்ணல்:2011:.171, 172)

    இவ்வாறு தமிழண்ணல் கைந்நிலை, இன்னிலை என்ற இரு நூல்களையும் பதினெண் கீழ்க்கணக்கைச் சார்ந்த நூல்கள் என்று குறிப்பிடுகின்றார். இன்னிலையினை வ.உ.சிதம்பரம் பிள்ளை, கா.சுப்பிரமணியப் பிள்ளை ஆகிய இருவரும் குறிப்பிடுவதன் காரணமாகத் தானும் இவற்றைக் குறிப்பிடுவதாகச் சுட்டுகின்றார்.

    தமிழண்ணல், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் வாயிலாக உலகத் தமிழிலக்கிய வரலாறு (தொன்மை முதல் கி.பி.500 வரை) என்ற தலைப்பில் ஒரு நூலை 2004இல் வெளியிட்டுள்ளார். இந்நூலில் அவர் கைந்நிலையைப் பதினெண் கீழ்க்கணக்கைச் சார்ந்த நூல் என்கிறார்.

    பதினெண்கீழ்க்கணக்கு எனும் பெயர், பிற்கால உரை நூல்களில் காணப்படுகிறது. சங்க காலத்தில் ‘கணக்காயர்’ எனும் பெயர், மொழி கற்பிக்கும் ஆசிரியரைக் குறித்தது. கணக்கு – இலக்கிய இலக்கண நூல் எனப் பொருள்பட்டது. நெடுங்கணக்கு என அகரவரிசை குறிக்கப்பட்டதும் காண்க. பத்துப் பாட்டையும் எட்டுத் தொகையையும் காலத்தால் முற்பட்டவை எனும் பொருளில் பதினெண்மேற்கணக்கு எனக் கொண்டு, இவை ‘பதினெண்கீழ்க்கணக்கு’ எனப்பட்டன. இவ்வாறு தொகுத்துப் பெயரிட்டது. கி.பி.5ஆம் நூற்றாண்டினதாகிய, வச்சிரநந்தி என்ற சமண முனிவரின், தமிழ்ச் சங்கத்தில் நடந்திருக்கலாம் என்பர்… கார்நாற்பது, ஐந்திணை ஐம்பது, ஐந்திணை எழுபது, திணைமொழி ஐம்பது, திணைமாலை நூற்றைம்பது, கைந்நிலை என்பன அகம் பற்றியன.

    (தமிழண்ணல் :2004:163,164)

    இதன் பின்னர், கைந்நிலையை ஏற்காதவர்கள் இன்னிலையைச் சேர்த்துக் குறிப்பிடுவர் என்கிறார். இக்கருத்தைத் தமது இலக்கிய வரலாற்று நூல்களில் தொடர்ந்து தமிழண்ணல் பதிவு செய்திருக்கின்றார்.

    புதிய நோக்கில் தமிழ் இலக்கிய வரலாறு, உலகத் தமிழ் இலக்கிய வரலாறு என்னும் இரு நூல்களிலும் இடம்பெற்றுள்ள பதினெண்கீழ்க்கணக்கு குறித்த தமிழண்ணல் அவர்களின் கருத்துகளைத் தொகுத்து பார்க்கையில், கைந்நிலை, இன்னிலை என்னும் இரு நூல்களையும் சேர்த்தே இவர் குறிப்பிட்டிருப்பதைப் பார்க்க முடிகின்றது. கைந்நிலை, இன்னிலை இவற்றில் தான் பதினெண் கீழ்க்கணக்கைச் சார்ந்ததாக எதைக் கருதுகின்றேன் என்று குறிப்பிடாமல் பொதுவாக அனைவரும் இவ்விரு நூல்களைக் குறிப்பிடுகின்றனர் என்ற நிலையிலேயே இவரின் பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் குறித்த கருத்துகள் அமைந்திருக்கின்றன.

                அ.கா.பெருமாள் எழுதிய தமிழ் இலக்கிய வரலாறு எனும் 2000ஆம் ஆண்டு முதன் முதல் வெளிவந்தது. பல பதிப்புகளைப் பெற்றுள்ள இந்நூல் முழுவதும் திருத்தப்பட்ட பதிப்பாக 2014ஆம் ஆண்டு வெளிவந்துள்ளது. இப்பதிப்பில் இடம்பெற்றுள்ள பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் குறித்த பதிவுகள் இங்கு விவாதத்திற்கு உட்படுத்தப்படுகின்றன.

                சங்க காலத்திற்கு அடுத்த காலக்கட்டம், களப்பிரரின் இடையீட்டுக் காலமாக வரலாற்று அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். இக்காலத்தில் பொதுவான மக்களின் ஒழுக்கங்களும் அழகுணர்ச்சியும் வழக்காற்றில் இருந்து மறைக்கப்பட வேண்டிய சூழல் இருந்தது. இக்காலத்தில் செல்வாக்கு பெற்றிருந்த சமண, பௌத்த, மதங்கள் பொதுவான ஒழுக்கத்தைக் கட்டாயமாக வற்புறுத்தின. இவ்வொழுக்கங்கள் இக்காலத்தில் தோன்றிய நீதி நூல்களுள் பிரதிபலித்தன. களப்பிரர் காலத்தில் பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் தோன்றின என்பர் திறனாய்வாளர்கள். இக்கருத்துகளை முதன்மையாகக் கொண்டு பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் குறித்த தமது கருத்தை முன்வைக்கின்றார் அ.கா.பெருமாள். இக்கருத்துகளைக் கீழ்க்கண்டவாறு தொகுத்துரைக்கலாம்.

    • பதினெண்கீழ்க்கணக்கு என்னும் சொல்லாட்சியினைச் சுட்டுகின்ற நன்னூலின் முதல் உரையாசிரியரான மயிலைநாதரின் உரைக் குறிப்பு, தொல்காப்பியப் பேராசிரியர் உரைக் குறிப்பு ஆகியவற்றை எடுத்துக் குறிப்பிடுகின்றார். இதன் மூலம் கி.பி.13-14ஆம் நூற்றாண்டளவில் பதினெண்கீழ்க்கணக்கு என்னும் சொல் வழக்கில் இருந்ததை அறிய முடிகின்றது.
    • மேற்கணக்கு, கீழ்க்கணக்கு என்னும் வழக்கைப் பன்னிரு பாட்டியல் தான் முதன்முதல் முன்வைக்கின்றது. அதற்குப் பிறகான பாட்டியல் நூல்கள் இப்பாகுபாட்டைச் சுட்டவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.
    • பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் குறித்த விவாதம் 1885இல் முடிவு பெறவில்லை என்று சுட்டியுள்ளார். ஆனால் இந்நூல்கள் குறித்த விவாதத்தை 1887இல் தமது கலித்தொகைப் பதிப்பின் மூலம் சி.வை.தாமோதரம் பிள்ளை தொடங்கினார் என்று குறிப்பிட்டுள்ளார். தொல்காப்பிய உரையாசிரியர்கள் அம்மை என்ற வனப்பினுள் கீழ்க்கணக்கு நூல்களை அடக்கியுள்ளனர்.
    • அ.கா.பெருமாள், பதினெண்கீழ்க்கணக்கு நூல்களை இரு நிலைகளில் பகுத்துக் காட்டுகின்றார். பதினோர் அற நூல்களை ஒரு பகுதியாகவும், ஐந்து அக நூல்கள், ஒரு புற நூலை மற்றொரு பகுதியாகவும் குறிப்பிடுகின்றார். ஐந்து அக நூல்களுள் ஒன்றாகக் கைந்நிலையைச் சுட்டி ‘ஐந்திணை அறுபது’ என்று இந்நூலுக்கு வழங்கும் சிறப்புப் பெயரினையும் குறிப்பிடுகின்றார்.
    • கைந்நிலையின் ஆசிரியர் பெயர், ஐந்து திணைக்குப் பன்னிரண்டு பாடல்கள் வீதம் அறுபது பாடல்கள் இந்நூலில் உள்ளன என்று குறிப்பிடும் அ.கா.பெருமாள், குறிஞ்சித் திணைப்பாடல்கள் சுவையாகவும் மரபான உவமை நயத்துடனும் விளங்குகின்றது என்கிறார்.

                 (அ.கா.பெருமாள்:2012:102)

                பாடத்திட்ட நோக்கில் பல இலக்கிய வரலாற்று நூல்கள் தற்காலத்தில் தோன்றி வருகின்றன. அவை குறிப்புகளாகவும்  வணிக நோக்கிலும் வெளியிடப்படுகின்றன. அந்த வகையில் வகைமை நோக்கில் தமிழ் இலக்கிய வரலாறு என்னும் நூலைப் பாக்யமேரி, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் நிறுவனத்தின் மூலம் 2008இல் வெளியிட்டுள்ளார். இதில் பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் குறித்தும், கைந்நிலையைக் கீழ்க்கணக்குள் ஒன்றாகச் சேர்ப்பதைக் குறித்தும் குறிப்பிட்டுள்ள கருத்துகளைப் பின்வருமாறு தொகுத்து உரைக்கலாம்.

    • பதின்மேல், பதின்கீழ் என்ற இச்சொற்கள் குறித்த விளக்கம், இந்நூல்களின் பாடல் எண்ணிக்கை, நுவல் பொருள்கள் ஆகியவற்றைப் பன்னிரு பாட்டியல் வழி எடுத்துரைக்கின்றார்.
    • தொல்காப்பியம் அம்மை என்ற வனப்பிற்கு இந்நூல்களைச் சான்றுகாட்டிச் சென்றுள்ளமையும் இவர் பதிவு செய்துள்ளார். (ப.151)
    • பதினெட்டு நூல்களுள் கைந்நிலை ஒன்றா? இன்னிலை ஒன்றா? என்று வினா எழுப்பி, கைந்நிலைதான் பதினெட்டில் ஒன்று என்று தெளிவாகச் சுட்டுகிறார் ஆசிரியர். இதற்கு மு.வை.அரவிந்தனின் கருத்தை மேற்கோள் காட்டித் தானும் அக்கருத்திற்கு உடன்படுகின்றேன் என்று உரைக்கின்றார். மேலும் இன்னிலையைப் போலி நூல் என்று குறிப்பிடுகின்றார். (பக்.161, 162)
    • ஐந்திணை அறுபது என்ற பெயரையும் சுட்டுகிறார். (ப.161)
    • பதினெட்டு நூல்களுள் கைந்நிலை அடங்கும் என்று தெளிவுபடுத்திய பின்னரும் இன்னிலை குறித்த விவரங்களை இவர் தருகிறார். (ப.162)

                தமிழகத்தின் நடுப்பகுதியில் இயங்கும் கல்லூரியின் பாடத்திட்ட நோக்கில் எழுதப்பட்ட தமிழ் இலக்கிய வரலாற்று நூல்களைச் சு.ஆனந்தன், ஈஸ்வர், ஸ்ரீசந்திரன் ஆகியோர் தனித்தனியே எழுதியுள்ளனர். இதில் குறிப்பிடப்பட்டுள்ள பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் குறித்த கருத்துகள் வருமாறு:

                சு.ஆனந்தன் தமது தமிழ் இலக்கிய வரலாறு (2002) நூலில் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களைக் குறிப்பிடும் பழைய வெண்பாவைச் சுட்டி, பேராசிரியரின் செய்யுளியல் உரைக் குறிப்பு, மயிலைநாதர் உரைக் குறிப்பு, கீழ்க்கணக்கு என்பதற்குப் பன்னிரு பாட்டியல் தரும் விளக்கம் ஆகியவற்றையும் எடுத்துத் தருகின்றார். மேலும் பதினெட்டு நூல்களின் பெயர், ஆசிரியர் ஆகியவற்றை இவர் அட்டவணைப்படுத்தித் தந்துள்ளார். இதில் இவர் கைந்நிலையினைப் பதினெட்டு நூல்களுள் ஒன்றாகவே குறித்துள்ளார். பதினெட்டு நூல்களைக் குறித்த தரவுகளைத் துல்லியமாகச் சேகரித்தும் தந்துள்ளார். கைந்நிலையினைக் குறித்துக் குறிப்பிடுகையில் இந்நூலின் ஆசிரியர் பெயர், இவரது ஊர்ப் பெயர், நூலினுள் உள்ள பாடல்களின் எண்ணிக்கை, பாடல் எண்ணிக்கையின் அடிப்படையில் கைந்நிலைக்கு அமைந்த ‘ஐந்திணை அறுபது’ என்ற சிறப்புப் பெயருக்கான காரணம் ஆகியவற்றையும் இவர் பதிவுசெய்திருக்கின்றார். இறுதியாக மற்ற தமிழ் இலக்கிய வரலாற்று நூல் ஆசிரியர்களுக்கு ஏற்படுகின்ற ஐயத்தை இவரும் எழுப்பி, தாம் கைந்நிலையினைக் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாகக் குறிப்பிடுவதற்கான காரணத்தைத் தெளிவாக முன்வைத்துள்ளார்.

    பதினெண் கீழ்க்கணக்கில் இடம்பெறுவது கைந்நிலையா, இன்னிலையா எனும் ஐயம் உளது. பெரும்பாலோர் கைந்நிலையைக் குறிப்பர். பதினெட்டு நூல்களைக் குறிக்கும் வெண்பாவை ஆராயின், கைந்நிலையே சரியானது என்பது விளங்கும்.

    (சு.ஆனந்தன் : 2003 : 64)

    இவ்வாறு கைந்நிலையைப் பதினெட்டு நூல்களுள் ஒன்றாகச் சேர்த்ததற்கான காரணத்தைத் தெளிவாய்த் தந்திருப்பது குறிப்பிடத்தக்கது. இக்கருத்துகளை ஜெ.ஸ்ரீசந்திரன் எழுதிய தமிழ் இலக்கிய வரலாறு, ஈஸ்வரன் எழுதிய தமிழ் இலக்கிய வரலாறு ஆகிய நூல்களிலும் காண முடிகின்றது.

    பாடத்திட்ட நோக்கில் எழுதப்பட்ட மற்றொரு நூல் மு.அருணாசலம், இராஜா வரதராஜா இருவரும் இணைந்து எழுதிய நூல், தமிழ் இலக்கிய வரலாறு. இந்நூலைத் திருச்சியில் உள்ள அருண் பதிப்பகம் 2012இல் வெளியிட்டுள்ளது. இந்நூலில் பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் குறித்து இடம்பெற்றுள்ள கருத்துகள் வருமாறு:

    சங்க காலத்தை அடுத்துத் தோன்றிய நூல்களை வகைப்படுத்தச் ‘சங்க மருவிய கால இலக்கியங்கள்’ என்னும் பெயர் வழங்கப்படுகின்றது. இவற்றைப் பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் என்றும் அழைப்பர். அடி அளவால் சிறிய பாடல்களை உடைய பதினெட்டு நூல்களின் தொகுப்பு இதுவாகும். பதினெண்கீழ்க்கணக்கு நூல்களைச் சுட்டும் வெண்பா வருமாறு:

    “நாலடி நான்மணி நானாற்பது ஐந்திணைமுப்

    பால்கடுகம் கோவை பழமொழி மாமூலம்

    இன்னிலைய காஞ்சியுடன் ஏலாதி என்பவே

    கைந்நிலைய வாங்கீழ்க் கணக்கு.”

    மேற்கூறிய வெண்பாவில் கைந்நிலைக்கு மாற்றாக இன்னிலை என்னும் நூல் இடம்பெற்றதாக ஒரு கருத்தும் உண்டு. சங்க மருவிய கால இலக்கியங்களில், பதினொரு நூல்கள் நீதி நெறிகளைப் போதிப்பதால், இக்காலத்தை நீதி நூல்களின் காலம் என்றழைப்பது பொருத்தமாகும். பதினெண்கீழ்க்கணக்கு நூல்களின் பெயர்ப் பட்டியல்:

    நீதி நூல்கள்

    1. திருக்குறள்                              திருவள்ளுவர்
    2. நாலடியார்                                சமண முனிவர்கள்
    3. நான்மணிக்கடிகை          விளம்பிநாகனார்
    4. இன்னா நாற்பது                  கபிலர்
    5. இனியவை நாற்பது           பூதஞ்சேந்தனார்
    6. திரிகடுகம்                                நல்லாதனார்
    7. ஆசாரக்கோவை                  பெருவாயின் முள்ளியார்
    8. பழமொழி                                  முன்றுறையரையனார்
    9. சிறுபஞ்சமூலம்                     காரியாசான்
    10. முதுமொழிக்காஞ்சி          கூடலூர் கிழார்
    11. ஏலாதி                                           கணிமேதாவியார்

    அக நூல்கள்

    1. கார்நாற்பது                             மதுரை கண்ணன் கூத்தனார்
    2. திணைமாலை                       மேதாவியார்
    3. ஐந்திணை                                 எழுபது மூவாதியார்
    4. ஐந்திணை ஐம்பது              மாறன் பொறையனார்
    5. திணைமொழி ஐம்பது     கண்ணன் சேந்தனார்
    6. கைந்நிலை                               புல்லங்காடனார்

    புறநூல்

    1. களவழி நாற்பது                    பொய்கையார்

    நீதி நூல்

    1. இன்னிலை                                பொய்கையார்

    (மு.அருணாசலம், இராஜா வரதராஜா : 2004 : 80, 81)

    தமிழ் இலக்கிய வரலாறு எழுதும் ஆசிரியர்கள் பலரும் இன்னிலைக்கு மாற்றாகக் கைந்நிலையைக் கொள்வர் என்று குறிப்பிடுவார்கள். ஆனால் இவ்விலக்கிய வரலாற்று ஆசிரியர்கள் இருவரும் கைந்நிலைக்கு மாற்றாக இன்னிலையைக் கொள்வர் என்று குறிப்பிடுகின்றனர். பதினெட்டு நூல்கள் என்ற வரையறை, சங்க மருவிய கால இலக்கியங்கள் பதினெட்டு என்று குறிப்பிட்டுவிட்டு கீழ்ப்பகுதியில் 19 நூல்களின் பெயர்களையும் ஆசிரியர் பெயர்களையும் பதிவு செய்கின்றனர். ஆனால் இன்னிலையை மட்டும் தனிப் பிரிவில் அதாவது நீதி நூல் என்ற மற்றொரு தலைப்பின்கீழ்க் குறிப்பிடுகின்றனர். மேலே கூறிய கருத்திற்கு முன்னுக்குப் பின் முரணாக இவ்விலக்கிய வரலாற்றாசிரியர்கள் கருத்துரைக்கின்றனர். கைந்நிலை, இன்னிலை இரு நூல்கள் குறித்தும் குறிப்பிட்டுள்ள கருத்துகள் பின்வருமாறு:

    கைந்நிலை

    அகப்பொருள் ஒழுக்கம் பற்றிய நூல். குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல் என்னும் வைப்பு முறை உடையது. இந்நூலில் மொத்தம் 60 பாடல்கள் இருந்து (திணைக்கு 12) 18 சிதைந்து, இப்போது 43 வெண்பாக்கள் மட்டும் கிடைக்கின்றன. இந்நூலின் ஆசிரியர் புல்லங்காடனார்.

    இன்னிலை

    மனிதர்கள் இனிமையான வாழ்வினை அடைய வழிவகை கூறும் இன்னிலை. இதன் ஆசிரியர், பொய்கையார். 45 வெண்பாக்களை உடைய இந்நூலில், சிவபெருமான் பற்றிய குறிப்புகள் வருகின்றன. 1915இல் வ.உ.சி. இந்நூலினைப் பதிப்பித்தார்.

    (மு.அருணாசலம், இராஜா வரதராஜா : 2004 :  87, 88)

    பாடத்திட்ட நோக்கில் எழுதப்படுகின்ற தமிழ் இலக்கிய வரலாறு அனைத்தும் இது போன்ற குழப்பங்களை முன்வைத்துச் செல்கின்றன. இத்தகைய இலக்கிய வரலாற்று நூல்களை வாசிக்கின்ற மாணவர்களுக்குப் பதினெண் கீழ்க்கணக்கைச் சார்ந்த பதினெட்டாவது நூல் கைந்நிலையா? இன்னிலையா? என்ற தெளிவு கிடைக்காமலேயே போய்விடுகின்றது.

    தொகுப்பாக

    தமிழ் இலக்கிய வரலாற்று நூல்களில் இடம்பெற்றுள்ள பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் குறித்த கருத்துகளை மூன்று நிலைகளில் புரிந்துகொள்ள முடிகின்றது. பதினெண்கீழ்க்கணக்கு நூல்களைச் சார்ந்த பதினெட்டாவது நூல் இன்னிலைதான் என்ற ஒரு சார் கருத்து. மற்றொன்று கைந்நிலைதான் கீழ்க்கணக்கைச் சார்ந்தது என்பது. இன்னொரு கருத்து, இவ்விரு நூல்களும் கீழ்க்கணக்கைச் சார்ந்தவை என்பது. இன்னிலை, பதினெண் கீழ்க்கணக்கில் ஒன்றாகப் பதிப்பிக்கப்பட்ட காரணத்தினாலேயே இன்றுவரை ஒரு போலி நூல், இலக்கிய வரலாற்றுத் தரவினுள் இடம்பெறுவது கேள்விக்குரியது. முடிவான நிலைப்பாடு இது என இனிவரும் காலங்களில் இலக்கிய வரலாற்றினை எழுதும் ஆசிரியர்கள் தெளிவுபடுத்த வேண்டும்.

    பாடத்திட்ட நோக்கில் எழுதப்படும் இலக்கிய வரலாற்று நூல்கள், இத்தவறான கருத்தினை மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வருகின்றன. இனிவரும் காலங்களில் எழுதப்படுகின்ற இலக்கிய வரலாற்று நூல்களை எழுதுகின்ற ஆசிரியர்கள் உண்மைத் தன்மையை உரிய வகையில் ஆராய்ந்து உரிய கருத்துகளை மட்டுமே இலக்கிய வரலாற்றில் பதிவு செய்ய வேண்டும் என்பதையே இக்கட்டுரை வலியுறுத்துகின்றது.

    சான்றாதார நூல்கள்

    1972    மு.வரதராசன், தமிழ் இலக்கிய வரலாறு, சாகித்ய அகாதெமி, புதுதில்லி.

    1998    ஜெ ஸ்ரீசந்திரன், தமிழ் இலக்கிய வரலாறு, சென்னை.

    2000    வி.செல்வநாயகம், தமிழ் இலக்கிய வரலாறு, குமரன் பதிப்பகம், முதல் பதிப்பு        1951, சென்னை – இலங்கை.

    2003    சு.ஆனந்தன், தமிழ் இலக்கிய வரலாறு, கண்மணி பதிப்பகம், திருச்சி, திருத்திய     பதிப்பு, முதல் பதிப்பு 2002.

    2004    கா.சுப்பிரமணிய பிள்ளை, தமிழ் இலக்கிய வரலாறு, காவ்ய பதிப்பகம், முதல்        பதிப்பு 1930, சென்னை.

    2004    தமிழண்ணல், உலகத் தமிழிலக்கிய வரலாறு (தொன்மை முதல் கி.பி. 50 வரை),    உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை, முதல் பதிப்பு.

    2005    மது.ச.விமலானந்தம், தமிழ் இலக்கிய வரலாற்றுக் களஞ்சியம், முதல் தொகுதி,      ஐந்திணைப் பதிப்பகம், சென்னை.

    2007    பி.டி.சீனிவாச ஐயங்கார், தமிழர் வரலாறு (கி.பி.600 வரை), தமிழாக்கம் :   பி.இராமநாதன், தமிழ்மண், சென்னை (முதல் பதிப்பு 1929).

    2008    பாக்யமேரி, வகைமை நோக்கில் தமிழ் இலக்கிய வரலாறு, நியூ செஞ்சுரி புக்          ஹவுஸ், சென்னை.

    2011    தமிழண்ணல், புதிய நோக்கில் தமிழ் இலக்கிய வரலாறு, மீனாட்சி புத்தக   நிலையம், மதுரை.

    2012    அ.கா.பெருமாள், தமிழ் இலக்கிய வரலாறு, சுதர்சன் புக்ஸ், நாகர்கோவில்.

    2012    மு.அருணாசலம், இராஜா வரதராஜா, தமிழ் இலக்கிய வரலாறு, அருண் பதிப்பகம்,            திருச்சி.

    –           ஈஸ்வரின், தமிழ் இலக்கிய வரலாறு, பாவை பதிப்பகம், மதுரை (பதிப்பாண்டு       இல்லை).

    ===========================================

    ஆய்வறிஞர் கருத்துரை (Peer Review):

    இலக்கிய வரலாறு குறித்த ஆய்வுகள் அதிகம் முன்னெடுக்காத சூழலில் ஆய்வாளர் தம் முயற்சியை மேற்கொண்டுள்ளார். பதினெண்கீழ்க்கணக்குத் தொகுப்பு நெறியில் உள்ள சிக்கல்களைக் குறிப்பிட்ட சில இலக்கிய வரலாற்று ஆசிரியர்களின் மூலமாகத் தெளிவை முன்வைக்கும் தன்மையில் தம் கருத்துக்களைப் பதிவு செய்துள்ளார். இலக்கிய வரலாற்று எழுதுநெறியில் ஈடுபட்ட ஆசிரியர்களின் மெத்தனப் போக்கை ஆய்வுக்கு உட்படுத்தியுள்ளார். இன்னிலை மற்றும் கைந்நிலை நூல்கள் குறித்து மூன்று விதமான புரிதல்களை இலக்கிய வரலாற்று நூல்கள் பதிவு செய்துள்ளமையை விவாதத்திற்கு உட்படுத்தியுள்ளார். வணிக நோக்கில் தரமற்ற இலக்கிய வரலாறு எழுதுவதை ஒரு பெரும் குறையாகக் குறிப்பிட்டுள்ளார். தொடக்க கால இலக்கிய வரலாற்று ஆசிரியர்களின் எழுதுநெறிக்கும் தற்கால இலக்கிய வராற்று ஆசிரியர்களின் எழுதுநெறிக்கும் உள்ள முரண்களை ஆய்வாளர் சுட்டிக் காட்டியுள்ளார். ஆய்வாளர் மயிலை. சீனியின் பத்தொன்பதாம் நூற்றாண்டு தமிழ் இலக்கிய வரலாறு என்னும் நூலினையும் ஆய்வுக்கு உட்படுத்தி இருப்பின் ஆய்வு மேலும் சிறப்பாக அமைந்திருக்கும். எனினும், இந்த முயற்சிக்குப் பாராட்டுகள்.

    ===========================================

     

    Share
  • பதினெண்கீழ்க்கணக்குப் பதிப்பு உருவாக்கம் – பரவல் – பதிப்பரசியல்

    முனைவர் ப.திருஞானசம்பந்தம்

    முதுமுனைவர் பட்ட ஆய்வாளர்

    தமிழியற் புலம்

    மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மதுரை – 21

                பத்தொன்பதாம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் இரத்தின நாயகர் சன்ஸ், மர்ரே நிறுவனம், திருநெல்வேலி சைவ சிந்தாந்த நூற் பதிப்புக் கழகம் ஆகியன தனிநபர் சார்ந்து, பதிப்புக்குழுவை உருவாக்கிப் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களை வெளியிட்டன. இருபதாம் நூற்றாண்டின் இறுதித் தொடங்கி இருபத்தோராம் நூற்றாண்டின் முற்பகுதிகளில் பாட நூல்கள் சார்ந்து பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் பதிப்பிக்கப்பட்டன. இவை பெரிதும் வணிக நோக்கத்தினை முதன்மையாகக் கொண்டிருந்தது. மேலும் எளிமைப்படுத்துதல் என்ற தன்மையில் சுருக்கமான உரைகளைக் கொண்ட பல பதிப்புகள் வெளிவந்திருக்கின்றன. இன்றும் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இவ்வாறு வெளிவரக் கூடிய கீழ்க்கணக்குப் பதிப்புகள் குறித்துத் தனியொரு சூழலில் விவாதிக்க வாய்ப்புண்டு. இரத்தின நாயகர் சன்ஸ், மர்ரே, கழகம் ஆகியவற்றின் மூலம் முன்னெடுக்கப்பட்டுள்ள பதினெண்கீழ்க்கணக்கு நூல்களின் பதிப்புச் செயல்பாடுகள், பதினெண்கீழ்க்கணக்கின் தொகுப்பு முறைகள், பதினெட்டு நூல்களின் எண்ணிக்கை குறித்த வரையறைகள் மட்டும் இங்குக் கவனப்படுத்தப்படுகின்றன.

                இரங்கசாமி நாயக்கர் 1870இல் சென்னைத் துறைமுகம் அருகே உள்ள கந்தகோட்டத்தில் ஒரு புத்தகக் கடையைத் தொடங்கினார். இது 1920இல் பி.இரத்தின நாயக்கர் ஸன்ஸ் பதிப்பகமாக உயர்வு பெற்றது. இப்பதிப்பகத்தின் மூலம் ஆத்திசூடி, சித்தர் ஞானக்கோவை, தனிப்பாடற்றிரட்டுகள், சித்த மருத்துவம் தொடர்பான நூல்கள் வெளியிடப்பட்டன. 1838ஆம் ஆண்டு திருத்தணிகை சரவணப் பெருமாள் ஐயர், திருக்குறளின் பரிமேலழகர் உரையைத் தழுவி, பதவுரையும் கருத்துரையும் விசேடவுரையும் எழுதிப் பதிப்பித்துள்ளார். இப்பதிப்பினைக் களத்தூர் வேதகிரி முதலியார் மீள்பதிப்பாகப் பி.இரத்தின நாயக்கர் சன்ஸ் பதிப்பகத்தின் மூலம் வெளியிட்டதாக ஒரு குறிப்பு கிடைக்கின்றது. புத்தகங்களில் இடம்பெற்றிருந்த சிறிய எழுத்துகள் வாசிப்பதற்கு ஏற்றதாக இல்லாத காரணத்தால் எழுத்துக்கள் பெரியதாக இடம்பெறும் வகையில், பெரிய எழுத்து கருட புராணம் பெரிய எழுத்து மகாபாரதம் என்று அட்டைகளில் அச்சிட்டு புத்தகங்களை வெளியிட்டனர். இதனைப் பிற பதிப்பகங்களும் பின்பற்றியுள்ளன. மேலும் கர்ண மோட்சம், அர்ச்சுனன் தபசு உள்ளிட்ட தெருக்கூத்து நாடகப் பிரிதிகளையும் இப்பதிப்பகம் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 1934இல் இரத்தின நாயகர் ஸன்ஸ் நிறுவனம் திருமகள் விலாச அச்சியந்திரசாலையின் மூலம் நாலடியார் மூலத்தையும் களத்தூர் வேதகிரி முதலியார் இயற்றிய உரையையும் சேர்த்து வெளியிட்டுள்ளது. இந்நூலின் முகவுரையில் பதினெண்கீழ்க்கணக்கின் பெயர்களைச் சுட்டும் பழம் பாடல்,  பன்னிரு பாட்டியல் கூறும் கீழ்க்கணக்கு என்பதற்கான விளக்கம் ஆகியன இடம்பெற்றுள்ளன.

    நாலடி நான்மணி நானாற்ப தைந்திணைமுப்

    பால்கடுகங் கோவை பழமொழி மாமூலம்

    இன்னிலைய காஞ்சியோ(டு) ஏலாதி யென்பவே

    கைந்நிலையொ டாங்கீழ்க் கணக்கு.

    இப்பாடலின் பின்னிரண்டு அடிகள், முந்தைய பதிப்பாசிரியர்கள் கொண்ட அடிகளில் இருந்து மாறுபட்டுள்ளன. ஆனால் பொருண்மை கொள்ளல் முறையில் மாற்றமில்லை. பதினெட்டு நூல்களின் பெயர்களை வேதகிரி முதலியார் தமது நாலடியார் பதிப்பில் தந்ததோடு, அவற்றுள் ஒன்றாகக் கைந்நிலையினைக் குறிப்பிடுகின்றார். இன்னிலையினைக் குறிப்பிடவில்லை.

    பதினெண் கீழ்க்கணக்கின் நூல்களாவன:-

    1. நாலடியார் 9. திணைமொழி ஐம்பது
    2. நாண்மணிக்கடிகை 10. திணைமாலை நூற்றைம்பது

                            நால் நாற்பது                         11. முப்பால்

    1. இனியவை நாற்பது 12. திரிகடுகம்
    2. இன்னா நாற்பது 13. கோவை ‘ஆசாரக்கோவை’
    3. கார்நாற்பது 14. பழமொழி
    4. களவழி நாற்பறது 15. மாமூலம் ‘சிறுபஞ்சமூலம்’

                நால் ஐந்திணை                    16. காஞ்சி ஷமுதுமொழிக்காஞ்சி|

    1. ஐந்திணை ஐம்பது 17. ஏலாதி
    2. ஐந்திணை எழுபது 18. கைந்நிலை என்பன.

     (களத்தூர் வேதகிரி முதலியார்: 1934 : 4).

    கீழ்க்கணக்கின் பெயர்களைச் சுட்டும் பழம் பாடலில் உள்ள கோவை, முப்பால் ஐந்தொகை என்ற தொடர்களுக்குரிய பொருள் கொள்ளல் முறையைக் குறித்தும் வேதகிரி முதலியார் தெளிவாக விளக்கியுள்ளார். கோவை, காஞ்சி என்பதற்குப் பொருள் – திருக்கோவையார், மதுரைக்காஞ்சி. முப்பாலுக்குத் திருக்குறள் அல்லாது வேறு நூல். ஐந்திணை என்பதற்கு ஐந்தொகை எனப் பாடங்கொண்டு வேறு ஐந்து நூல்கள் என இவர் காலத்து வழக்கிலிருந்த தொகை முடிபுகளை வேதகிரி முதலியார் மறுத்துரைக்கின்றார்.

                வேதகிரி முதலியாருக்குக் கீழ்க்கணக்கைச் சார்ந்து கைந்நிலை என்ற தெளிவான கருத்திருந்ததை மேற்கண்ட கூற்றின் மூலம் அறிந்து கொள்ளமுடிகின்றது.

                மர்ரே ராஜம் ஆங்கிலேயர்கள் நடத்தி வந்த ஏல நிறுவனத்தில் கணக்களாராகப் பணியாற்றினார். பின்னர் அந்நிறுவனத்தை ஏற்று நடத்தினார். ஏலத் தொழிலின் மூலம் பல்வேறு அறச்செயல்களைச் செய்து வந்த இவருக்குச் ச.வையாபுரிப்பிள்ளையோடு 1940இல் தொடர்பு ஏற்பட்டது. பல்வேறு அறச்செயல்களைச் செய்வதுபோல் நூல்களை அச்சிட்டு வழங்குவதும் அறக்கொடை எனச் ச.வையாபுரிப்பிள்ளை ராஜத்திடம் கூறுகின்றார். தமிழ்மொழி மீது ஈடுபாடு கொண்ட இவர் தமிழ்நூல்களைப் பதிப்பிக்கும் பொறுப்பைச் ச.வையாபுரிப்பிள்ளை அவர்களிடமே கொடுக்கின்றார். இதன்மூலம் தமிழ் இலக்கியங்கள் பல சந்தி பிரித்து எளிமையாக வாசிப்பதற்கு ஏற்றவாறு அச்சிட்டு வெளியிடப்பட்டன. திவ்ய பிரபந்தம், திருவாசகம், சிலப்பதிகாரம், மணிமேகலை, அட்டபிரபந்தம், கல்லாடம், பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பாட்டும் தொகையும், கம்பராமாயணம், பதினெண்கீழ்க்கணக்கு, வில்லிபாரதம் உள்ளிட்ட நூல்களை மர்ரே நிறுவனம் சந்தி பிரித்த பதிப்பாக வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இவற்றுள் பதினெண்கீழ்க்கணக்கு நூற் பதிப்பு முயற்சி குறித்தும், பதினெட்டு நூல்கள் எவை என்பது குறித்தும் முன்வைக்கப்பட்ட கருத்துகள் இங்கு விவாதத்திற்கு உட்படுத்தப்படுகின்றன.

                செவ்விலக்கிய நூல்களையும் பிற நூல்களையும் தனித்தனி நூல்களாக வெளியிட்ட மர்ரே நிறுவனம் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களை ஒரே தொகுதியாகப் பதிப்பித்தது. இப்பதிப்புப் பணியில் மே.வீ.வேணுகோபாலப் பிள்ளை, வி.மு.சுப்பிரமணியம், மு.சண்முகம் மூவரும் தங்களை ஈடுபடுத்திக் கொண்டுள்ளனர். பல்வேறு பிரதிகளை ஒப்புநோக்கி ஆராய்ந்து பதினெண்கீழ்க்கணக்கு நூல்களின் பதிப்பை உருவாக்கினர். இப்பதிப்பிற்குரிய ஆலோசனைகளைப் பெ.நா.அப்புஸ்வாமி, ரா.பி.சேதுப்பிள்ளை, தெ.பொ.மீனாட்சிசுந்தரனார், வேங்கடராஜுலு ரெட்டியார். கி.வா.ஜாகநாதன், அ.ச.ஞானசம்பந்தன், சா.கணேசன் ஆகியோர் வழங்கியுள்ளனர். இப்பதிப்பின் பதிப்புரையில் கீழ்க்கணக்கு என்ற சொல்லுக்கான விளக்கம், பதினெட்டு நூல்கள் குறித்த விவாதங்கள், பதினெட்டு நூல்களிலுள்ள பாடல்களின் எண்ணிக்கை, ஆழ்வார் திருநகரியின் ஏட்டுப் பிரதிக் குறிப்பு, பதினெட்டு நூல்களின் காலம், பதினெட்டு நூல்களின் பொருண்மை அடிப்படையிலான பகுப்பு மற்றும் விளக்கம் உள்ளிட்ட பல செய்திகளை விரிவாக அறிந்துகொள்ள முடிகின்றது. பதினெட்டு நூல்களுள் ஒன்றாகக் கைந்நிலையையே மர்ரே பதிப்பு கொண்டுள்ளது. இதற்குக் காரணம் மர்ரே பதிப்பு முயற்சியில் முன்னோடி நிலையில் செயல்பட்டவர் ச.வையாபுரிப்பிள்ளை. இப்பின்புலத்திலேயே மர்ரே பதிப்பு கைந்நிலையைப் பதினெண்கீழ்க்கணக்கின் ஒன்றாகச் சேர்த்து, இன்னிலையைச் சேர்க்கவில்லை.

                பதினெண்கீழ்க்கணக்கின் பல்வேறு பிரதிகளை ஒப்புநோக்க உதவி மூவருள் ஒருவரான மு.சண்முகம் பிள்ளை பிற்காலத்தில் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுக்குப் பதவுரை எழுதிய வெளியிடும்போது இன்னிலையைச் சேர்த்து வெளியிட்டுள்ளார். இது இங்குக் கவனத்திற் கொள்ளத்தக்கது.

                இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் திருநெல்வேலி சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் தமிழின் பல்வேறு பொருண்மை சார்ந்த நூல்களை உரைகளோடு வெளியிட்டது. அவற்றுள் பதினெண்கீழ்க்கணக்குப் பதிப்பும் ஒன்று. பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுக்கு ந.மு.வேங்கடசாமி நாட்டார், தி.பாலசுந்தனார், சி.புன்னைவனநாத முதலியார், சங்குப் புலவர் உள்ளிட்ட அறிஞர்கள் உரையெழுதியுள்ளனர். அவ்வுரைகளின் முன்னுரையில் பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் குறித்த கருத்துகளைப் பதிவுசெய்துள்ளனர். இதில் கீழ்க்கணக்கைச் சேர்ந்த நூல் கைந்நிலையா? இன்னிலையா? என்பது குறித்த விரிவாய் விவாதித்துள்ளனர். அவற்றைப் பின்வருமாறு தொகுத்துக் கொள்ளலாம்.

    • இன்னிலையை ஏற்பவர்கள் – ந.மு.வேங்கடசாமி நாட்டார், தி.சு.பாலசுந்தரனார் (இளவழகனார்)
    • கைந்நிலையை ஏற்பவர் – சி.புன்னைவனநாத முதலியார்
    • இன்னிலை, கைந்நிலை இரண்டையும் குறிப்பிட்டு இதில் எதை ஏற்பது என்ற தெளிவில்லாதவர் – சங்குப் புலவர்
    • திணைமாலை – மணி.திருநாவுக்கரசு

                பதினெண்கீழ்க்கணக்கைச் சேர்ந்த பதினெட்டு நூல்கள் எவையெவை என்பது குறித்த தெளிவு கிடைத்த பிறகும் 20ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் வெளிவந்த கழகப் பதிப்புகள் மீண்டும் குழப்பத்தை ஏற்படுத்தின. திருநெல்வேலி சைவசிந்தாந்த நூற்பதிப்புக் கழகம்வழி வெளிவந்துள்ள பதினெண்கீழ்க்கணக்கு நூற்பதிப்புகளில் ஒன்றாக இன்னிலை தொகுக்கப்படவில்லை (பக்.345). இக்குறிப்பை நெ.சுப்பையா பிள்ளை ‘பதினெண்கீழ்க்கணக்குச் சொற்பொழிவுகள்| என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார். ஆனால் பிற்காலங்களில் வெளிவந்த பதினெண்கீழ்க்கணக்குப் பதிப்புகளில் இன்னிலை, கைந்நிலை இரண்டும் சேர்த்து பதிப்பிக்கப்பட்டுள்ளன. கழகப் பதிப்புகளை உருவாக்கிய பதிப்பாசிரியர்கள் சிலர், தொடக்ககால பதிப்பாசிரியர்கள் முன்னெடுத்த பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் குறித்த விவாதங்களைத் தொடர்ந்துள்ளனர். இதன்மூலம் பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் குறித்த சில குழப்பமான முடிவுகளைத் தங்களது பதிப்புகளில் முன்வைத்துள்ளனர் என்பதை அறிய முடிகின்றது. இதில் குறிப்பிடத்தக்கவர்கள் ந.மு.வேங்கடசாமி நாட்டார், பு.சி.புன்னைவனநாத முதலியார், வா.மகாதேவ முதலியார், அ.நடராசப் பிள்ளை ஆகியோர்.

                ந.மு.வேங்கடசாமி நாட்டார் கீழ்க்கணக்கின் கார்நாற்பது (1925), களவழி நாற்பது (1924, 1935), இன்னா நாற்பது (1935), இனியவை நாற்பது (1936) என்னும் நான்கு நூல்களுக்கு உரை எழுதியுள்ளார். இவற்றை ‘நானாற்பது மூலமும் உரையும்| என்று ஒரே தொகுப்பாக்கி கழகம் வெளியிட்டுள்ளது. இவற்றின் முகவுரைகளில் பதினெட்டு நூல்களுள் ஒன்றாக இவர் இன்னிலையினைச் சுட்டுகின்றார். கைந்நிலையினை ஏற்கவில்லை. ஆனால் இவர் கீழ்க்கணக்கு நூல்கள் எவை என்பதைக் குறிப்பிடும் பழம்பெரும் வெண்பாவைக் காட்டி அதற்குக் கீழ் நால், ஐந்திணை, என்ற தொடரின் அடிப்படையில் எழுந்த விவாதங்களையும் சேர்த்து பதிவு செய்கின்றார்.

                நான்மணிக்கடிகை, முதுமொழிக்காஞ்சி, ஏலாதி ஆகிய நூல்களுக்குத் தி.பாலசுந்தரனார் இயற்றிய உரையோடு கழகம் வெளியிட்டுள்ளது. இதில் நான்மணிக்கடிகையின் பதிப்புரையில் கீழ்க்கணக்கு நூல்கள் பதினெட்டாவன எவை என்று கூறும்போது இவர் இன்னிலையினைச் சேர்த்து குறிப்பிட்டுள்ளார். கைந்நிலையினைக் குறிப்பிடவில்லை (தி.சு.பாலசுந்தரம்: 2007: iii). பிற நூல்களின் பதிப்புரையில் அந்நூல்கள் குறித்த செய்திகளை மட்டுமே சுட்டியிருக்கின்றார். பாலசுந்தரனார் கீழ்க்கணக்கு நூல்களுக்கு  உரை எழுதிய காலத்தில் வ.உ.சிதம்பரம் பிள்ளையின் இன்னிலை பதிப்பு பரவலாகப் புழக்கத்தில் இருந்தது. இக்காரணத்தினால் இன்னிலையை இவர் கீழ்க்கணக்கில் ஒன்றாகக் குறித்திருக்க வேண்டும்.

                திரிகடுகம், சிறுபஞ்சமூலம், ஆசாரக்கோவை, ஐந்திணையைம்பது, ஐந்திணையெழுபது, திணைமாலை நூற்றைம்பது முதலிய நூல்களுக்குச் சி.புன்னைவனநாத முதலியார் இயற்றிய விருத்தியுரையோடு கழகம் வெளியிட்டுள்ளது. இப்பதிப்புகளின் முகவுரையில் பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் எவை என்பது குறித்த தமது கருத்துகளைச் சி.புன்னைவனநாத முதலியார் முன்வைத்துள்ளார். குறிப்பாகத் திரிகடுகம், சிறுபஞ்சமூலம், ஐந்திணையைம்பது ஆகிய நூல்களின் முகவுரைகளில் கைந்நிலையினைப் பதினெண்கீழ்க்கணக்கைச் சார்ந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். ஆனால் இன்னிலையினை இவர் குறிப்பிடவில்லை. பிற நூற்பதிப்புகளின் முகவுரையில் இவ்வெண்ணிக்கைப் பற்றிய கருத்து எதையும் கூறாமல் அந்நூற்களின் அமைப்பு, பாடல்களின் சிறப்பு ஆகியவற்றை மட்டுமே விளக்கிச் சென்றுள்ளார். பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் எவை எவை என்பதைப் பட்டியலிட்டுக் காட்டும்போது கைந்நிலையினைக் குறிப்பிட்டாலும், கழக உரையாசிரியர்களில் மற்றவர்களுக்கு இருந்த கருத்துத் தெளிவு சி.புன்னைவனநாத முதலியாருக்கும் இல்லை. (2007: xvv). இக்கருத்தையே சிறுபஞ்சமூலத்தின் நூன்முகத்திலும் (2007:v) இவர் குறிப்பிட்டுள்ளார்.

                கழகத்தார் இன்னிலை, கைந்நிலை இரு நூல்களுக்கும் சங்குப்புலவரை உரையெழுதச் சொல்லி இரு நூல்களையும் அடுத்தடுத்து வெளியிட்டுள்ளனர். அவற்றின் பதிப்புரையில் இவற்றில் எதை நீக்கி எதைக் கொள்ளுவது என்ற மயக்கம் கழகத்திற்கு ஏற்பட்டதாகச் சங்குப்புலவர் குறிப்பிடுகின்றார். ‘‘பதினேழு நூல்களைக் காண்பீர்கள்: பதினெட்டாவது நூல் இன்னது எனத் துணிவின்றிப் புலவருலகம் மயங்குகிறது. ‘நாலடி நான்மணி’ என்ற வெண்பாவின் பாடவேறுபாடு இம்மயக்கத்திற்குக் காரணமாம். இதனை இந்நூலின் முன்னுரையிற் காண்க. துணிவாக ஒன்றைத் தேர்ந்தெடுத்த பின்னர் உரையெழுதி வெளியிடக் கருதிக் காலந் தாழ்த்திருந்தும் பயனின்றாய் முடிந்தது. இன்னிலையும், கைந்நிலையும், பதினெட்டாம் நூல் எனப் புலவருலகம் எண்ண ஏட்டிலிருந்து கொண்டுவந்து காட்டிப் பதித்து வெளியிட்டனர் இருசான்றோர். எதனைக் கொள்ளுவது எதனைத் தள்ளுவது என மயங்கி நிற்கும் காலம் இது” (இன்னிலை – கைந்நிலை, பதிப்புரை, ப.3). அடுத்து ‘கைந்நிலை வரலாறு’ என்ற தலைப்பில் இ.வை.அனந்தராமையரின் கைந்நிலை பதிப்பு முயற்சிகள், கிடைக்கும் கைந்நிலை ஏட்டுச் சுவடியில் உள்ள பாடல்களின் சிதைவு நிலை, ரா.இராகவையங்காரின் ஆலோசனை மற்றும் அவரிடம் இருந்து பெற்ற கைந்நிலை ஏட்டுச் சுவடியினை ஒப்புநோக்கிப் பதிப்பித்த இ.வை.அனந்தராமையாரின் கருத்து விளக்கம் ஆகியவற்றை விரிவாக எடுத்துக்காட்டுகின்றார். மேலும் கைந்நிலையின் பாடல்கள் இளம்பூரணர், நச்சினார்க்கினியர், நாற்கவிராச நம்பி ஆகிய உரையாசிரியர்கள் மேற்கோள் காட்டப்பட்டுள்ளமையினை எடுத்துக்காட்டி கைந்நிலையினைப் பதினெண்கீழ்க்கணக்கைச் சார்ந்தது என்று நிறுவ முயல்கின்றார். ஆனால் இறுதியாக இன்னிலை, கைந்நிலை இரு நூல்களில் எது பதினெண்கீழ்க்கணக்கைச் சார்ந்தது என்ற தெளிவினைச் சங்குப்புலவர் கூறவில்லை. மாறாக இதைத் தமிழ்ப்புலவர்கள் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும் என்று கூறிவிட்டுச் செல்கின்றார்.

    “இன்னிலை, கைந்நிலை என்ற இரு நூல்களிற் பதினெண்கீழ்க்கணக்கின் இறுதியாக நிற்கத்தக்க நூலைத் தேர்ந்தெடுத்துக் கொள்வது இனித் தமிழ் மொழிப் புலவர் கடமையாம்; இவ்விரு நூல்களுக்கும் விளக்கவுரை வரைவித்து அச்சிற்பதித்து வெளியிடுவது நம் கடமையாம் எனக் கழகத்தார் கருதினர். இவ்விரு நூல்களுக்கும் உரையெழுதும் கடமை எனக்குரிய தாயிற்று. கழகப் பணியாளர்களில் ஒருவனாதலின் மறுத்தற்கு வழியின்றி ஏற்று என் சிற்றறிவிற் கெட்டியவாறு உரை வரைந்து தந்தேன்”

    (சங்குப் புலவர், 2007: 9, 10).

    கழகத்தாரின் விருப்பத்தை நிறைவேற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் இரு நூல்களுக்கும் சங்குப்புலவர் உரையெழுதியதை மேற்சுட்டிய கருத்தின் வழிப் புரிந்துகொள்ள முடிகின்றது.

                மணி.திருநாவுக்கரசு முதலியார் ‘நாலடி நான்மணி’ என்று தொடக்கும் வெண்பாவில் ‘மெய்ந்நிலைய காஞ்சியோடு ஏலாதி என்பவே’ என்ற பாடத்தைக் கொண்டு பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் தொடர்பான விவாதத்தினை முன்னெடுக்கின்றார். பதினெட்டு நூல்களுள் இன்னிலையை ஒரு சாராரும், கைந்நிலையை ஒரு சாராரும், திணைமாலையை ஒரு சாராரும் உடன்படுகின்றனர் என்று குறிப்பிடுகின்றார். இவர் ஒரு சாரார் கருத்தை மட்டும்; பதிவுசெய்வது இங்குக் கவனத்திற்குரியது. “இனியொரு சாரார் மேலே சுறியவாறு ஐந்து திணை நூல்களையும் உடன்பட்டு, அதனோடு ‘இன்னிலை’, ‘கைந்நிலை’ என்னும் இரு நூல்களையும் கூட்டிக் கீழ்க்கணக்கு நூல்கள் இன்னின்னவெனக் கூறும் வெண்பாவின்கண் தொகை வரையறை காணப்படாமையின், பதினெட்டுக்குமேலும் இருபது நூல்கள் கீழ்க்கணக்கைச் சார்ந்தனவெனக் கொள்ளுதற் கண் வரக் கடவதாய இழுக்கென்னை என்பர். அது பொருந்தாமை மேலே காட்டிய பேராசிரியர் உரையான் இனிது உணரப்படும். அதனுள் அவர் பதினெண்கீழ்க்கணக்கெனத் தெளிவுறக் கூறியிருத்தல் காண்க” (மணி. திருநாவுக்கரசு முதலியார்: 2007: 5). திணைமாலை என்ற பெயரிலான நூலை ஐந்திணை நூல்களோடு சேர்த்து இவர் கணக்கிட்டு கொள்கின்றார். இன்னிலை, கைந்நிலை ஆகிய இரண்டு நூல்களையும் சேர்க்க இருபது நூல்கள் பதினெண்கீழ்க்கணக்கைச் சேர்ந்தது என்று கருத்து இருந்தது இதன்மூலம் புலனாகின்றது.

    தொகுப்பாக

                இரத்தின நாயகர் ஸன்ஸ், மர்ரே நிறுவனப் பதிப்புகளில் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களின் எண்ணிக்கை குறித்த தெளிவாகக் கருத்துகள் இருந்ததைப் பார்க்க முடிகின்றது. திருநேல்வேலி சைவ சித்தாந்த நூற் பதிப்பு கழகப் பதிப்புகள் சைவ சமயப் பற்றினை வெளிப்படுத்தும் வகையில் உரையினை எழுதிய ந.மு.வேங்கடசாமி நாட்டார், இளவழகனார், சி.புன்னைவனநாத முதலியார், சங்குப் புலவர், மணி.திருநாவுக்கரசு முதலியார் ஆகியோர் இன்னிலையினைக் கீழ்க்கணக்கினைச் சேர்ந்த நூல் என்று அடையாளப்படுத்த முயன்றுள்ளனர். இன்னிலை ஒரு போலி நூல், கற்பித நூல் என்று தெளிவான முடிபுகள் கண்ட பிறகும் இவ்வாறு இவர்கள் செயல்பட்டது மிகுந்த ஆச்சரியத்தைத் தருகின்றது.

                பதினெண்கீழ்க்கணக்கு என்ற எண்ணிக்கை வரையறையில் உள்ள குழப்பமான முடிவுகளுக்குத் தெளிவுகள் காணப்பட்ட பின்பும், மீண்டும் தெளிவைத் தேடிக் குழப்பங்கள் உருப்பெற்று வருகின்றன. இவ்வகையான குழப்பங்களுக்கு வெகுசனத் தளத்தில் பதினெண்கீழ்க்கணக்கின் பதிப்புகளைக் கொண்டு சென்ற பதிப்பு நிறுவனங்களே காரணமாக அமைகின்றன. இவை தொடக்க காலத்தில் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களைத் தனித்தனியே பெரும் புலவர்களைக் கொண்டு உரையெழுதச் செய்து பதிப்பித்தன. பின்னர்ப் பொருண்மை வாரியாக இவற்றைத் தொகுத்துப் பதிப்பித்தன. அதன் பின்னர் ஒட்டுமொத்தமாக உரையோடு கூடிய பதிப்பு, மூலப் பதிப்பு எனப் பல நிலைப்பட்ட பதிப்பாக்க முயற்சியில் ஈடுபட்டன. இத்தகைய செயல்பாடுகளின் மூலம் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களை மக்களிடையே பரவலாகக் கொண்டு சேர்த்தனர். இதுபோல் கல்வி நிறுவனங்களில் பயிலும் பாடமாகக் கீழ்க்கணக்கைச் சார்ந்த நூல்கள் தொடக்க காலம் முதல் இடம் பெற்றிருந்தன. எளிய உரை நோக்கிய மாணவர்களின் செயல்களால் பதிப்பு நிறுவனங்கள் பலரையும் உரையெழுதச் செய்து அதை அச்சிட்டு வழங்கலாயின. இம்முயற்சிகளே பதினெண்கீழ்க்கணக்கைச் சார்ந்த நூல்கள் எவை என்பதை மறுவாசிப்பு செய்யக் காரணமாயின. இந்த வாசிப்பினால் தொடக்க காலப் பதிப்பாசிரியர்களும் ஆராய்ச்சியாளர்களும் முன்வைத்த கருத்துகளை இவர்கள் மீண்டும் புதியனவாகத் தாங்கள் முன்வைப்பதைப்போல் முன்வைத்து ஒரு மாயத் தோற்றத்தினைக் கட்டமைக்க முயன்றிருக்கின்றனர். இவ்வகையான முயற்சிகளில் கீழ்க்கணக்கைச் சார்ந்தது கைந்நிலையா? இன்னிலையா? திணைமாலையா? என்ற குழப்பம் மீண்டும் தலைத்தூக்கியது.

    சான்றாதார நூல்கள்

    1925    ந.மு.வேங்கடசாமி நாட்டார், நானாற்பது மூலமும் உரையும் (கார்நாற்பது, களவழி   நாற்பது, இன்னா நாற்பது, இனியவை நாற்பது) திருநெல்வேலி தென்னிந்திய சைவ          சித்தாந்த நூற்             பதிப்புக் கழகம், சென்னை.

    1934    சமண முனிவர்கள் இயற்றிய நாலடியார் மூலமும் வேதகிரி முதலியார் இயற்றிய உரையும்,             பி.இரத்தின நாயகர் ஸன்ஸ், திருமகள் விலாச அச்சியந்திரசாலை, சென்னை.

    1956    பதினெண்கீழ்க்கணக்கு – காஞ்ச யேலாதி கோவை பதவுரை விளக்கங்களுடன்,     திருநெல்வேலி  தென்னிந்திய சைவ சித்தாந்தாந்த நூற் பதிப்புக் கழகம், சென்னை

    1981    பதினெண்கீழ்க்கணக்கு, பதிப்பு – ஆசிரியக் குழுவினரால் பல பிரதிகளை ஒப்புநோக்கி           வெளியிடப்பட்டது, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை, இரண்டாம் பதிப்பு.

    1982    வேம்பத்தூர் முத்துவேங்கடசுப்ப பாரதியார், பிரபந்த தீபிகை, பதிப்பாசிரியர்கள்:             ச.வே.சுப்பிரமணியன், அன்னிதாமசு, உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை.

    2007    பதினெண்கீழ்க்கணக்கு மூலமும் உரையும் (திரிகடுகம், நான்மணிக்கடிகை,         சிறுபஞ்சமூலம்),           திருநெல்வேலி            தென்னிந்திய சைவ சித்தாந்தாந்த நூற்          பதிப்புக்கழகம், சென்னை.

    2007    பதினெண்கீழ்க்கணக்கு மூலமும் உரையும் (இன்னா நாற்பது, இனியவை நாற்பது,           கார்நாற்பது, களவழி நாற்பது), கழக வெளியீடு, சென்னை.

    2007    பதினெண்கீழ்க்கணக்கு (ஐந்திணை ஐம்பது, ஐந்திணை எழுபது, திணைமொழி ஐம்பது,           திணைமாலை நூற்றைம்பது, இன்னிலை – கைந்நிலை), கழக வெளியீடு, சென்னை.a

    Share
  • சேக்கிழார் அடிகள் குருபூஜை – வைகாசி பூசம் – ஞாயிற்றுக்கிழமை 20.05.2018

    முனைவர் ப.திருஞானசம்பந்தம்

    மதுரை

    சேக்கிழாரின் கவின்மிகு கட்டளைக் கலித்துறை

    தில்லை வாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்

       திருநீல கண்டத்துக் குயவனார்க்கு அடியேன்

    என்று அடியவருக்கு அடியவராகத் தன்னைக் கருதி திருத்தொண்டத்தொகை எழுதியவர் சுந்தரர் பெருமான். அவர்தம் தொகையை ஒரு காப்பியமாக்கி ‘பெரிய புராணம்’ என்ற பொற்சுரங்கத்தைத் தமிழுக்குத் தந்தவர் சேக்கிழார் அடிகள். அருண்மொழித் தேவர் என்ற இயற்பெயர் கொண்ட சேக்கிழார் பெருமான் பன்னிரண்டாம் நூற்றாண்டில் வைகாசி மாதம் பூச நட்சத்திரத்தில் அவதரித்தவர். அருண்மொழித் தேவர் இளமையிலேயே கல்வி, அறிவு, ஒழுக்கங்களில் சிறந்து விளங்கினார். இதனை அறிந்த சோழ மன்னன் அவரைச் சோழநாட்டின் அமைச்சராக நியமித்தான். உத்தம சோழப் பல்லவன் என்ற பட்டத்தையும் தந்து சிறப்பித்தான். அருண்மொழித்தேவர் சிறந்த சிவ பக்தர். சோழநாட்டுச் சைவக் கோயில்களில் ஒன்றாகிய திருநாகேசுவரம் கோயிலின் இறைவனிடத்தில் மிகுந்த பக்தி உடையவர். இக்கோயில் போன்றே தனது ஊராகிய குன்றத்தூரில் திருநாகேசுவரம் என்ற பெயரில் கோயில் ஒன்றைக் கட்டினார்..

                இறைவனே ‘உலகெலாம்… என அடியெடுத்துக் கொடுக்க இவர் பெரியபுராணத்தை இயற்றினார் என்பர். பெரியபுராணம் தமிழின் இரண்டாவது தேசியக்காப்பியம் என்ற புகழைப் பெற்றது. பல இன, குல அடியார்களின் வாழ்க்கையை ஒருங்கே வைத்துப் பேசுகின்றது பெரியபுராணம். மேலும் தமிழின் முதல் கள ஆய்வு நூல் என்ற பெருமையும் இதற்கு உண்டு. மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை தனது சேக்கிழார் பிள்ளைத்தமிழ் நூலில் பக்திச் சுவை நனிசொட்டச் சொட்டப் பாடிய கவிவலவ’ என்று சிறப்பித்துள்ளார். பெரிய புராணத்தின் சரித்திரத்தன்மை மற்றும் சிறப்புகளை விவரித்து மா.இராசமாணிக்கனார் பெரியபுராண ஆராய்ச்சி என்ற ஆய்வுநூலை எழுதியுள்ளார். அ.ச.ஞானசம்பந்தனும் பெரியபுராணம் ஓர் ஆய்வு என்னும் அரிய நூலை ஆக்கியுள்ளார். தெ.பொ.மீனாட்சி சுந்தரனார் பெரியபுராணத்தை உலகப் பொதுநூல் என்று சிறப்பித்து இருக்கின்றார். பெரியபுராணம் காப்பியமா, பெருங்காப்பியமா என்ற விவாதங்கள் காலந்தோறும் தமிழ்ச்சூழலில் எழுப்பப்பட்டு விடையும் காணப்பட்டுள்ளன.

                திருமலைச் சருக்கம் தொடங்கி வெள்ளானைச் சருக்கம் முடிய பதின்மூன்று சருங்கங்களில் 4286 பாடல்களைக் கொண்ட காப்பியம் இது. சுந்தரரைப் பாட்டுடைத் தலைவராகக் கொண்டு எழுதப்பட்ட இந்நூல் பெருங்காப்பியமாக மட்டுமன்றித் தமிழ்ச்சுவையில் உயர்ந்த காப்பியமாகவும் விளங்குகின்றது. வடிவச்சிறப்பிலும் பிற்கால காப்பிய மரபிற்கு பெருங்கொடையளித்துள்ளது. 1762 அறுசீர் ஆசிரிய விருத்தங்கள், 92 எழுசீர் விருத்தங்கள், 256 எண்சீர் விருத்தங்கள், 344 கலிவிருத்தங்கள், 545 கலித்துறைகள், 1205 தரவுகொச்சகங்கள், 52 கட்டளைக் கலிப்பாக்கள், 11 அறுசீர் வண்ண விருத்தங்கள், 8 வண்ணக் கலிவிருத்தங்கள் 6வண்ண வஞ்சிவிருத்தங்கள் என ஒப்பற்ற யாப்பியல் விருந்தையே சேக்கிழார் சமைத்துள்ளார். மேலும் சம்பந்தர், நாவுக்கரசர், சுந்தரர் ஆகிய அடியார்களின் வரலாற்றைப் பாடும்போது அவர்கள் பயன்படுத்திய பாவடிவத்திலேயே அவர்களின் வரலாற்றினைச் சேக்கிழார் பாடியிருப்பது அவர்தம் புலமைத்திறத்திற்குச் சான்றாகின்றது. திருக்கொடிமாடச் செங்குன்றூரில் தம்முடன் வந்த அடியார்களுக்குச் சுரம்பற்ற அதனைத் தீர்க்க திருஞானசம்பந்தர் திருநீலகண்டர் பதிகம் பாடினார். பாடல் ஒன்று வருமாறு,

    அவ்வினைக் கிவ்வினை யாமென்று சொல்லு மஃதறிவீர்

    உய்வினை நாடா திருப்பதும் உந்தமக் கூனமன்றே

    கைவினை செய்தெம் பிரான்கழற் போற்றுதும் நாமடியோஞ்

    செய்வினை வந்தெமைத் தீண்டப்பெ றாதிரு நீலகண்டம்

     (திருநீலகண்டப் பதிகம்.1)

    இப்பாடல் கட்டளைக் கலித்துறை யாப்பிலானது. நேரசையில் தொடங்கி அடிதோறும் பதினாறு எழுத்துக்களைப் பெற்றுவருவது. இச்சூழலைத் தமது காப்பியத்தில் பாடிய சேக்கிழார் இதே கட்டளைக் கலித்துறை யாப்பில் பாடித் தம் புலமைத்திறத்தினைப் பறைசாற்றுகின்றார். அப்பாடல் வருமாறு,

    “அவ்வினைக் கிவ்வினை” என்றெடுத் “தைய முரசெய்த

    வெவ்விடம் முன்றடுத் தெம்மிடர் நீக்கிய வெற்றியினால்

    எவ்விடத் துமடி யாரிடர் காப்பது கண்ட” மென்றே

    “செய்வினை தீண்டா திருநீல கண்ட” மெனச் செப்பினால்

    (பெரியபுராணம் 2233)

    இப்பாடலும் மேற்குறித்த கட்டளையொழுங்கினையே பெற்றுள்ளது. அவ்வாறே திருநாவுக்கரசர் திருப்பாதிரிப்புலியூர் உறைகின்ற இறைவனைத் தனக்கு ஈன்றவளாய், எந்தையாய் விளங்குகின்றாய். பகீரதனின் தவத்தினால் பூவுலகிற்கு வந்த கங்கையைச் சூடியவனே என்று இறைவனைப் புகழ்ந்து பாடிய நிகழ்வினைச் சேக்கிழார் பாடும்போதும் இவ்வுத்தியைப் பயன்படுத்தியுள்ளார். நாவுக்கரசரின் பாடல் வருமாறு,

     

    ஈன்றாளு மாயெனக் கெந்தையு மாயுடன் றோன்றினராய்

    மூன்றா யுலகம் படைத்துகந் தான்மனத் துள்ளிருக்க

    ஏன்றா னிமையவர்க் கன்பன் றிருப்பா திரிப்புலியூர்த்

    தோன்றாத் துணையா யிருந்தனன் றன்னடி யோங்களுக்கே.

     (திருப்பாதிரிப்புலியூர்.1)

    இந்நிகழ்வை விவரிக்கும் சேக்கிழாரின் பாடல்வருமாறு,

     

    “ஈன்றாளு மானெயக் கெந்தையு மாகி” எனவெடுத்துத்

    “தோன்றாத் துணையாயி ருந்தனன் றன்னடி யோங்கட்” கென்று

    வான்றாழ் புனற்கங்கை வாழ்சடை யானைமற் றெவ்வுயிர்க்குஞ்

    சான்றா மொருவனைத் தண்தமிழ் மாலைகள் சாத்தினரே

    (பெரியபுராணம்.1399)

    இவ்வாறு காப்பியந்தோறும் புதுமையும் வளமையும் கொண்டு திகழ்வது பெரியபுராணம். இந்த ஒப்பற்ற காப்பியத்தைப் படைத்த சேக்கிழாரின் குருபூஜை இன்றளவும் வைகாசிமாதம் பூச நட்சத்திரத்தில் குன்றத்தூரில் உள்ள வடதிருநாகேஸ்வரம் திருக்கோயிலில் நடைபெறுகின்றது. இக்கோயிலில் சேக்கிழாருக்குத் தனிக் கருவறையும் உள்ளது. இந்த ஆலயத்தின் அருகிலேயே சேக்கிழாரின் பிறந்த வீடும் உள்ளது குறிப்பிடத்தக்கது. சேக்கிழாரின் நாமம் போற்றுவோம்.

    சான்று நூல்கள்

    சேக்கிழார், பெரியபுராணம் என வழங்கும் திருத்தொண்டர்புராணம் (பன்னிரண்டாம் திருமுறை), சைவசித்தாந்த மகாசமாஜம், சென்னை, மூன்றாம் பதிப்பு, 1987

    சம்பந்தர், திருஞானசம்பந்தர்சுவாமிகள் தேவாரப்பதிகங்கள், திருமுறை (1,2,3), கயப்பாக்கம் சதாசிவ செட்டியாரால் பார்வையிடப்பெற்றன, கழகம், 1973.

    நாவுக்கரசர், திருநாவுக்கரசர் சுவாமிகள் தேவாரப் பதிகங்கள், திருமுறை (4,5,6), கயப்பாக்கம் சதாசிவ செட்டியாரால் பார்வையிடப் பெற்றன, கழகம், 1973

    Share