Tag: முனைவர் மா.சியாமளாதேவி

  • தொல்காப்பியமும் புதுக்கவிதையும்

    -முனைவர் மா.சியாமளாதேவி

    படைக்கப்படுவன படைப்பு என்பது போல செய்யப்படுவன செய்யுள் எனக்கொள்கின்றது தொல்காப்பியம். இலக்கியக்கோட்பாடுகளைச் செய்யுளியல் ஆழமாகவும் அகலமாகவும் கூறுகின்றது. செய்யுள் என்ற சொல் இன்றைய இலக்கிய வழக்கில் பாட்டினை மட்டும் உணர்த்துவதாக உள்ளது. தொடக்க வகுப்பு முதல் பட்டப்படிப்புவரை உள்ள தமிழ்ப்பாட நூல்கள் பாடற்பகுதிகளைச் செய்யுட்பகுதி என்று சுட்டுகின்றன. இந்த வழக்கு இடைக்கால நூல்களிலும் காணப்படுகின்றன. ஆனால் தொல்காப்பியம் செய்யுள் என்ற சொல்லை இலக்கிய வகை அனைத்திற்கும் பொதுவான சொல்லாகவே பயன்படுத்துகிறது.

    வழக்கும் செய்யுளும் ஆயிரு முதலின் எனவும்
    எழுநிலத்து எழுந்த செய்யுள் தெரியின்
    அடிவரை இல்லன ஆறு என மொழிப

    எனவும் கூறப்படும் நூற்பாக்கள் இதனை உணர்த்தும்.

    எழுநிலமாவன பாட்டு, உரை, நூல், வாய்மொழி, பிசி, அங்கதம், முதுசொல் என்பன. அவற்றுள் பாட்டு ஒழிந்த ஆறும் அடிவரையறை என்பர்.எனவே செய்யுள் என்ற சொல் பாட்டு முதலிய ஏழு வகையினையும்  உணர்த்தும் பொதுச்சொல் ஆகும். அது பாட்டை மட்டும் உணர்த்தாமல் படைப்பிலக்கிய வகைகளாகிய உரைநடை, நூற்பா முதலிய பிற வகைகளையும் அடக்கியுள்ளது. இதனால் கவிதை, கதை, மருத்துவம், மெய்யியல் முதலியவற்றைப் பாட்டிலும், உரைநடையிலும் எழுதலாம் என்பது புலனாகிறது. அதனால் பண்டைய மருத்துவம், மெய்யியல் முதலியன பாட்டு வடிவில்  எழுதப்பட்டதையும் அறியலாம்.

    இன்றைய புதுக்கவிதை பாட்டு என்ற செய்யுள் வகையைத் தவிரப் பிற உரைநடை, நூற்பா, வாய்மொழி,பிசி, அங்கதம், முதுசொல் என்ற அடிவறையறை இல்லாத ஆறு செய்யுள் வகைகளையும் பயன்படுத்திக்கொள்கிறது.

    பாவிற்கும் பாவினங்களுக்கும் அடிப்படையான  அசை, சீர், அடி, தூக்கு, பா, அளவியல் என்ற ஆறு உறுப்புகளும் புதுக்கவிதையில் பயன்படுத்தப்படவில்லை. ஆனால், இவற்றின் தாக்கம் ஆங்காங்கே உண்டு.

    மாத்திரை, எழுத்து, இயல், அசை வகை, எனாஅ;
    யாத்த சீரே, அடி, யாப்பு எனாஅ;
    மரபே, தூக்கே, தொடைவகை, எனாஅ;
    …………
    நல்இசைப் புலவர்செய்யுள் உறுப்பு
    எனக்கூறி, வகுத்து உரைத்தனரே

    என்ற நூற்பாவில் கூறப்படும், செய்யுள் உறுப்புக்கள் முப்பத்து நான்கு. இவற்றில் மேற்கூறப்பட்ட அசை முதலான ஆறு உறுப்புக்கள் தவிர பிற 28 உறுப்புக்களும், புதுக்கவிதையில் பயின்று வருகின்றன.

    ஓர் இலக்கியப் படைப்பின் மூலப்பொருள்கள், சொற்கள், கருத்துக்கள் அதனைச் சொல்லும் முறை என்பனவாகும். ஒலிநயமுடைய சொற்கள் படிப்பவனின் மனத்தில் ஏற்ற மாற்றத்தை ஏற்படுத்தி, அவனிடம் தாம் சாதிக்க வேண்டியவற்றைச் சாதித்துக் கொள்கின்றன. தாளம் என்கிற கருவியை வைத்துக்கொண்டு தான் கவிஞன் கேட்போருடைய இருதயத்தைத் தட்டி எழுப்பிப் பாடாகப்படுத்தி விடுகிறான் என்பர். இந்தத் தாளம்  அறியச் சொல்லின் ஓசையை, அதற்கு மூலமான எழுத்தின் ஓசையைக் கணக்கிட வேண்டியுள்ளது. இந்தப் பணிக்குத் துணையாவது மாத்திரை ஆகும்.

    இம்மாத்திரை குறித்தே தொல்காப்பியம் எழுத்ததிகாரம் விரிவாகப் பேசுகின்றது. செய்யுளியலில் செய்யுளுக்குத் தக்கவாறு எழுத்தின் மாத்திரை குறித்துப் பேசுகின்றது.

    பாயிரத்துள்,

    வழக்கும் செய்யுளும் ஆயிரு முதலின்
    எழுத்தும் சொல்லும் பொருளும் (தொல்.பாயிரம்)

    ஆராய்தலென்று புகுந்தமையால், எழுத்தினுஞ் சொல்லனும் வழக்கிற்கும் செய்யுட்கும் வேண்டுவன. பொருளதிகாரத்துள்ளும் இதுகாறும் பெரும்பான்மையும் வழக்கிற்கு வேண்டுவன கூறிவந்தான், அப்பொருள்  பற்றிச் செய்யுள் கூறுமாகளின் இவ்வதிகாரத்துட் செய்யுளிலக்கண மெல்லாந் தொகுத்துக்கூறுகின்றான்,

    அவற்றுள்,

    மாத்திரை வகையும் எழுத்து இயல் வகையும்
    மேற்கிளந்தனவேஎன்மனார் புலவர்

    என்ற நூற்பாவிற்கு ‘மாத்திரை’ என்பது எழுத்தை உச்சரிக்கும் கால அளவு என்றும் ‘எழுத்துக்களுக்கு  ஓதிய இசையும் ஒலியும் பற்றிய அளவு’ என்றும் மாத்திரை என்பது எழுத்திற்கோதிய மாத்திரைகளுள் செய்யுளிள் விரவிக்கிடக்கும் அளவை’ என்றும் பொருள் கூறுவர்` பொருளுக்கிசைந்த ஒலிநயத்தைக் கவிஞர்கள் விரும்பிய வண்ணம் அமைக்கும் சுதந்திரம் வசனத்தில் அமைந்து கிடக்கிறது.

    மன வலியுண்டு என்று உரைநடையில் ஓசை பொருட்புலப் பாட்டிற்குத் துணை செய்வதை விளக்குவர்.உரைநடை முதலிய ஆறு அடிவரையறையற்ற யாப்பினைத்தளமாகக் கொண்ட புதுக்கவிதையில் ஒலிநயம் இடம் பெறுவதை,

    கயிறுண்டு உன் கையில்
    வாளுண்டு என் கையில்

    என்ற கவிதையில் காணலாம்.

    எழுத்தின் ஒலி அளவு பற்றிய அறிவு மாத்திரை அளவு பற்றிய அறிவு சொல்லைக் கையாளுவதில் ஒலிநயச் சேர்க்கையில் கவிஞனுக்குக் கைகொடுக்கும்.

    கட்ட வண்டி கட்டிக்கிட்டு
    கல்லப் பயிர ஏத்திக்கிட்டு
    கமிட்டிக்கு விக்க வந்தேன்
    காசு பணம் வாங்க வந்தேன்

    கட்ட(டை) வண்டி, பயிர(ரை) ஐகாரக்குறுக்கம் வந்தன.

    வெள்ளை வேட்டி கட்டினால்
    என்னடா தங்கவேலு….. என்பவர்கள்
    சட்டையோடு பார்த்தால்
    என்னடா என்பார்கள்
    வரலாறு அதிர்ச்சிகள் தருவது

    என்னடா என்பதில் வரும் ஒற்றளபெடை இயற்கை அளபெடை. உரையாடலில் ஓர் எழுத்துக்கு அழுத்தம் தரும்போது ஏளனம், இகழ்ச்சி, செருக்கு போன்ற உணர்வுகளை வெளிப்படுத்துவதாக அமைகிறது. பொருட்செறிவை, உணர்வழுத்தத்தை வெளிப்படுத்தப் புதுக்கவிதை அளபெடையைப் பயன்படுத்திக் கொள்கிறது.

    தமிழ் எழுத்துக்களைச் செய்யுளுக்கேற்ப வகைப்படுத்தும் தொல்காப்பியம், வடமொழி எழுத்துக் குறித்துச் சொல்லதிகார எச்சவியலில் சில குறிப்புகள் தருகின்றது.

    வடசொல் கிளவி வடவெழுத்து ஓரீஇ,
    எழுத்தொடு புணர்ந்த சொல் ஆகும்மே
    சிதைந்தன வரினும், இயைந்தன  வரையார் 

    வடசொற்கிளவியாவது வடசொற்கே உரியவெனப்படுஞ் சிறப்பெழுத்தினீங்கி இருளர் மொழிக்கும் பொதுவாகிய எழுத்தானியன்ற சொல்லலாம். வடசொல் என்பது ஆரியச் சொற்போலுந் சொல் என்பார் இளம்பூரணார்.

    பீரங்கியாம் பீரங்கி
    பேருபோன பீரங்கி
    பேரம் பேசிச் சந்தையிலே
    பெற்று வந்த பீரங்கி

    எனப் பீரங்கிப் பேர ஊழலைச் சுட்டிக்காட்டி, அரசியல் சிறுமையை விவரிக்கும் போது, புதிய சொல்லாக்கம்- தூய தமிழ்ச் சொல்லாக்கம், கவிதையின் புருட்புலப்பாட்டை முழுமைப்படுத்தும் என்று சொல்ல இயலாது. எனவே, பிற மொழிச்சொல்லை எடுத்தாளும் போது, எழுத்து அமைப்பையும் சொற்பயிற்சியையும் கருத்தில் கொண்டால், மரபுக்கு எதிரான தோற்றம் தராது.

    புரிந்த பின்
    இல்லை கேள்வி

    இந்த இரண்டு வரிக்கவிதை நூற்பா ‘சூத்திரம் போல நின்று பல எண்ணங்களை விவரிக்கின்றது.’ இதில் மோனையும், எதுகையும் நின்று ஒலிநயம் ஏற்படுத்துகிறது.

     

     

    Share
  • தொல்காப்பியத்தின் காலம்

    –முனைவர் மா.சியாமளாதேவி.

    tholkaapiyar
    தொல்காப்பியம் தமிழில் இன்று கிடைக்கப்பெறும் நூல்களுள் மிகவும் பழமையானது. அதில் காணப்பெறும் சில வழக்காறுகள், இலக்கணக்கூறுகள், வாழ்க்கை மரபுகள் சங்க இலக்கிய நூல்களுக்கும் முற்பட்டன என்பது, இன்று பலரும் ஒப்ப அறிந்த முடிபாகும். இதனால் அது ‘தமிழின் முதனூல்’ என்று போற்றப்படுகின்றது. மூவாயிரம் ஆண்டு பழமையுடையதாயினும், இன்றும் அதன் ஆளுமைத் தமிழ் மொழியில் பெரும்பகுதி நிலைத்து நிற்கிறது.

    நூலின் காலம்:
    எள்ளிலிருந்து எண்ணெய் எடுப்பது போல, இந்நூல் தோன்றுவதற்கு முன்பே இலக்கியங்கள் பல இருந்திருத்தல் வேண்டும். அவை காலப்போக்கில் இறந்துபட்டிருக்கலாம். இத்தகைய நூல்களில் பெயர்களையும், பகுதிகளையும் பிற்கால உரையாசிரியர்கள் மேற்கோளாகக் குறிப்பிடுவது, மேற்கூறிய கருத்தையே வலியுறுத்தும் சான்றாக உள்ளது. தொல்காப்பியர் தமக்கு முன் விளங்கிய ஆசிரியர்களின் நெறியையே தாம் எடுத்துரைப்பதாகக் கூறுகிறார். தொல்காப்பியர் தம் நூலில், சற்றொப்ப 260 இடங்களில் தமக்கு முன்பு இருந்த அல்லது தம் காலத்தில் வாழ்ந்த இலக்கண ஆசிரியர்கள் பலரைப் பலவாறு குறிப்பிட்டுள்ளார். நூலின் இடையே,
    ‘என்ப’- ‘என்மனார்’- ‘மொழிப’-
    ‘யாப்பென மொழிப யாப்பறி புலவர்’-
    ‘தோலென மொழிப தொன்மொழிப் புலவர்’

    என ஆங்காங்கு கூறிச்செல்வதாலும், ‘ நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும்’ என்றும் தமக்கு முற்பட்ட இலக்கிய மரபைக் குறிப்பிடுவதாலும், அவருக்கு முன்பே பற்பல இலக்கண நூல்களும் இருந்திருக்க வேண்டுமெனத் துணிந்துரைக்க முடிகிறது.

    “தொல்காப்பியப் பாயிரத்தில் ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன் என்ற தொடர் வடமொழியின் இலக்கணத்தில் வல்லுநரான பாணினியைக் குறிப்பிடாமல் அதற்கும் முந்தைய இந்திர வியாகரணத்தைப் பற்றிக் குறிப்பதால் பாணினிக்கும் (கி.மு.4ஆம் நூற்.) முற்பட்டவர் தொல்காப்பியர் என்பது புலப்படுகின்றது”1

    “மறைமலையடிகள், வெள்ளைவாரணார் போன்றோர் இறையனார் களவியல் உரைவழி நின்றும் அகச்சான்று, புறச்சான்று வழி நின்றும் தொக்காப்பியர் காலம் கி.மு.5000 ஆண்டுகட்கு முற்பட்டது என்றும் கூறுகின்றார்”2

    தொல்காப்பியம் தோன்றிய காலத்தைப்பற்றிக் கருத்து வேறுபாடுகள் பலவுண்டு. ஆண்டிலே முற்பட்டதென்று கூறுவோர் பலர். பிற்பட்டதென்று கூறுவோர் சிலர்.

    1. “வேதவியாசர் காலத்திற்கு முன்னே தொல்காப்பியம் செய்யப்பட்டது. இன்றுள்ள இருக்கு, எசுர், சாமம், அதர்வணம் என்ற நான்கு வேதங்களும் எழுதப்படுவதற்கு முன்னே தொல்காப்பியம் எழுதப்பட்டது.”

    2. முதற்சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம் என்ற மூன்று தமிழ்ச் சங்கங்கள் இருந்தன. இந்த முத்தமிழ்ச்சங்க வரலாற்றை இறையனார் அகப்பொருள் உரையிலே காணலாம். அந்த வரலாற்றை இறையனார் அகப்பொருள் உரையிலே காணலாம். அந்த வரலாற்றைக் கொண்டு கணக்கிட்டால் சற்றொப்ப 1300 ஆண்டுகளுக்கு முன்னே தோன்றியது தொல்காப்பியம் என்று முடிவு கட்டலாம்.

    3. தொல்காப்பியம் 5000 ஆண்டுகளுக்கு முன் தோன்றியது என்று கூறுவோர் உள்ளனர். தொல்காப்பியத்தில் கார்காலம் முதலில் கூறப்பட்டிருகின்றது. ஆதலால் இந்நூல் ஆவணி மாதத்தை ஆண்டின் முதல் மாதமாக வழங்கிய காலத்தில் எழுதப்பட்டிருக்க வேண்டும். இதுவே தொல்காப்பியம் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தொன்றியது என்போர் காட்டும் காரணமாகும்.

    4. மக்கள் இரும்பு, பொன் முதலிய உலோக வகைகளைக் கண்டுபிடித்தகாலம் கி.மு.5000 க்குப்பின் என்பர். தொல்காப்பியத்திலே உலோகங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. ஆதலால் அதன் காலம் கி.மு. 5000த்திற்கும் பிற்பட்டதுதான் என்பதில் ஐயம் இல்லை என்பர்.

    5. தொல்காப்பிய காலம் 2400 ஆண்டுகளுக்கு முன்னென்று மொழிவோரும் உள்ளனர். பாணினி இலக்கணத்திற்கு முன்னேயிருந்த ஐந்திர இலக்கணத்தைப் படித்தவர் தொல்காப்பியர். ஆகவே, தொல்காப்பியர் பாணினி காலத்திற்கு முன்னே வாழ்ந்தவர். பாணினியின் காலம் கி.பி.4ஆம் நூற்றாண்டு, தொல்காப்பியர் கி.பி.4ஆம் ஆண்டிற்கு முன்பிருந்தவர். இந்தக் கணக்கு உண்மையானால் தொல்காப்பியம் 2400 ஆண்டுகளுக்கு முன்னே தோன்றியதாகும்.

    6. தொல்காப்பியம் கி.பி.2ஆம் நூற்றாண்டில்தான் தோன்றியது.1800 ஆண்டுகளுக்கு முன் தோன்றிய நூல்தான் தொல்காப்பியம்; இதற்கு ஆதரவு உண்டு என்போரும் உள்ளனர். இவ்வாறு கூறுவோர் சிறுபான்மையினர்.

    7. எந்த வகையில் பார்த்தாலும் தொல்காப்பியம் கி.மு.2000 ஆண்டுகளுக்கு முன்னே தோன்றியிருக்க வேண்டும். ஆகையால் நாலாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட நூலேயன்றி பிற்பட்ட நூலில்லை என்போரும் பலர். இது தொல்காப்பியர் காலத்தைக் கணக்கிடும் பலராலும் ஒப்புக் கொள்ளப்படுகின்றதோர் முடிவு என்பர் சாமி. சிதம்பரனார்.”3 மேலும்,

    “சுந்தரமூர்த்தி தொல்காப்பியக் காலத்தைப் பற்றி, சங்க இலக்கிய மொழி நிலையையும் தொல்காப்பிய மொழி நிலையையும் வைத்துப் பார்க்கின் இது சங்க இலக்கியங்களுக்கு முன்னர் எழுந்திருக்க வேண்டும் என்று கி.மு.மூன்றாவது நூற்றாண்டுப் பகுதியை ஒட்டிய காலப் பகுதியில் தோன்றியிருக்கலாம் என்றும் எண்ணுவர். சங்க இலக்கியங்கள் கி.மு. இரண்டாவது நூற்றாண்டு வரையுள்ள காலப்பகுதியில் பல நிலைகளில் தோன்றியுள்ளன அவர் எண்ணம்” என்று கூறுகிறார்.

    சான்றெண்:
    1.சண்முக.செல்வகணபதி. மொழி வரலாறும் மொழி இயலும்.,ப.1
    2.சி.பாலசுப்பிரமணியன்., தமிழ் இலக்கிய வரலாறு.,ப.18
    3.சாமி.சிதம்பரனார். தொல்காப்பியத்தமிழர்., பக்.6-10
    4. Sundaramurthi, Early Literary Theories inTamil., pg.3-7

    துணை நூற்பட்டியல்:
    1.செல்வகணபதி.சண்முக.,
    மொழிவரலாறும் மொழி இயலும்.,
    பழனி; சிட்டிப்பதிப்பகம்
    மு.பதி.2002

    2.சிதம்பரனார்.சாமி.,
    தொல்காப்பியத் தமிழர்.,
    சென்னை; நியூசெஞ்சூரி புக் ஹவுஸ்.,
    மு.பதி.2002

    3.பாலசுப்பிரமணியன்.சி.
    தமிழ் இலக்கிய வரலாறு.,
    சென்னை; மனமலர்ப் பதிப்பகம்.,
    மு.பதி.2003.

    4.Sundaramurthy.G.,
    Early Literary theories in Tamil.,
    Chennai; sarvoday ilakkiya pannai.,
    F.E.1947

    முனைவர் மா.சியாமளாதேவி,
    உதவிப்பேராசிரியர்,
    தமிழாய்வுத்துறை, அ.வ.அ. கல்லூரி,
    மன்னன்பந்தல், மயிலாடுதுறை

    Share