தொல்காப்பியமும் புதுக்கவிதையும்

1

-முனைவர் மா.சியாமளாதேவி

படைக்கப்படுவன படைப்பு என்பது போல செய்யப்படுவன செய்யுள் எனக்கொள்கின்றது தொல்காப்பியம். இலக்கியக்கோட்பாடுகளைச் செய்யுளியல் ஆழமாகவும் அகலமாகவும் கூறுகின்றது. செய்யுள் என்ற சொல் இன்றைய இலக்கிய வழக்கில் பாட்டினை மட்டும் உணர்த்துவதாக உள்ளது. தொடக்க வகுப்பு முதல் பட்டப்படிப்புவரை உள்ள தமிழ்ப்பாட நூல்கள் பாடற்பகுதிகளைச் செய்யுட்பகுதி என்று சுட்டுகின்றன. இந்த வழக்கு இடைக்கால நூல்களிலும் காணப்படுகின்றன. ஆனால் தொல்காப்பியம் செய்யுள் என்ற சொல்லை இலக்கிய வகை அனைத்திற்கும் பொதுவான சொல்லாகவே பயன்படுத்துகிறது.

வழக்கும் செய்யுளும் ஆயிரு முதலின் எனவும்
எழுநிலத்து எழுந்த செய்யுள் தெரியின்
அடிவரை இல்லன ஆறு என மொழிப

எனவும் கூறப்படும் நூற்பாக்கள் இதனை உணர்த்தும்.

எழுநிலமாவன பாட்டு, உரை, நூல், வாய்மொழி, பிசி, அங்கதம், முதுசொல் என்பன. அவற்றுள் பாட்டு ஒழிந்த ஆறும் அடிவரையறை என்பர்.எனவே செய்யுள் என்ற சொல் பாட்டு முதலிய ஏழு வகையினையும்  உணர்த்தும் பொதுச்சொல் ஆகும். அது பாட்டை மட்டும் உணர்த்தாமல் படைப்பிலக்கிய வகைகளாகிய உரைநடை, நூற்பா முதலிய பிற வகைகளையும் அடக்கியுள்ளது. இதனால் கவிதை, கதை, மருத்துவம், மெய்யியல் முதலியவற்றைப் பாட்டிலும், உரைநடையிலும் எழுதலாம் என்பது புலனாகிறது. அதனால் பண்டைய மருத்துவம், மெய்யியல் முதலியன பாட்டு வடிவில்  எழுதப்பட்டதையும் அறியலாம்.

இன்றைய புதுக்கவிதை பாட்டு என்ற செய்யுள் வகையைத் தவிரப் பிற உரைநடை, நூற்பா, வாய்மொழி,பிசி, அங்கதம், முதுசொல் என்ற அடிவறையறை இல்லாத ஆறு செய்யுள் வகைகளையும் பயன்படுத்திக்கொள்கிறது.

பாவிற்கும் பாவினங்களுக்கும் அடிப்படையான  அசை, சீர், அடி, தூக்கு, பா, அளவியல் என்ற ஆறு உறுப்புகளும் புதுக்கவிதையில் பயன்படுத்தப்படவில்லை. ஆனால், இவற்றின் தாக்கம் ஆங்காங்கே உண்டு.

மாத்திரை, எழுத்து, இயல், அசை வகை, எனாஅ;
யாத்த சீரே, அடி, யாப்பு எனாஅ;
மரபே, தூக்கே, தொடைவகை, எனாஅ;
…………
நல்இசைப் புலவர்செய்யுள் உறுப்பு
எனக்கூறி, வகுத்து உரைத்தனரே

என்ற நூற்பாவில் கூறப்படும், செய்யுள் உறுப்புக்கள் முப்பத்து நான்கு. இவற்றில் மேற்கூறப்பட்ட அசை முதலான ஆறு உறுப்புக்கள் தவிர பிற 28 உறுப்புக்களும், புதுக்கவிதையில் பயின்று வருகின்றன.

ஓர் இலக்கியப் படைப்பின் மூலப்பொருள்கள், சொற்கள், கருத்துக்கள் அதனைச் சொல்லும் முறை என்பனவாகும். ஒலிநயமுடைய சொற்கள் படிப்பவனின் மனத்தில் ஏற்ற மாற்றத்தை ஏற்படுத்தி, அவனிடம் தாம் சாதிக்க வேண்டியவற்றைச் சாதித்துக் கொள்கின்றன. தாளம் என்கிற கருவியை வைத்துக்கொண்டு தான் கவிஞன் கேட்போருடைய இருதயத்தைத் தட்டி எழுப்பிப் பாடாகப்படுத்தி விடுகிறான் என்பர். இந்தத் தாளம்  அறியச் சொல்லின் ஓசையை, அதற்கு மூலமான எழுத்தின் ஓசையைக் கணக்கிட வேண்டியுள்ளது. இந்தப் பணிக்குத் துணையாவது மாத்திரை ஆகும்.

இம்மாத்திரை குறித்தே தொல்காப்பியம் எழுத்ததிகாரம் விரிவாகப் பேசுகின்றது. செய்யுளியலில் செய்யுளுக்குத் தக்கவாறு எழுத்தின் மாத்திரை குறித்துப் பேசுகின்றது.

பாயிரத்துள்,

வழக்கும் செய்யுளும் ஆயிரு முதலின்
எழுத்தும் சொல்லும் பொருளும் (தொல்.பாயிரம்)

ஆராய்தலென்று புகுந்தமையால், எழுத்தினுஞ் சொல்லனும் வழக்கிற்கும் செய்யுட்கும் வேண்டுவன. பொருளதிகாரத்துள்ளும் இதுகாறும் பெரும்பான்மையும் வழக்கிற்கு வேண்டுவன கூறிவந்தான், அப்பொருள்  பற்றிச் செய்யுள் கூறுமாகளின் இவ்வதிகாரத்துட் செய்யுளிலக்கண மெல்லாந் தொகுத்துக்கூறுகின்றான்,

அவற்றுள்,

மாத்திரை வகையும் எழுத்து இயல் வகையும்
மேற்கிளந்தனவேஎன்மனார் புலவர்

என்ற நூற்பாவிற்கு ‘மாத்திரை’ என்பது எழுத்தை உச்சரிக்கும் கால அளவு என்றும் ‘எழுத்துக்களுக்கு  ஓதிய இசையும் ஒலியும் பற்றிய அளவு’ என்றும் மாத்திரை என்பது எழுத்திற்கோதிய மாத்திரைகளுள் செய்யுளிள் விரவிக்கிடக்கும் அளவை’ என்றும் பொருள் கூறுவர்` பொருளுக்கிசைந்த ஒலிநயத்தைக் கவிஞர்கள் விரும்பிய வண்ணம் அமைக்கும் சுதந்திரம் வசனத்தில் அமைந்து கிடக்கிறது.

மன வலியுண்டு என்று உரைநடையில் ஓசை பொருட்புலப் பாட்டிற்குத் துணை செய்வதை விளக்குவர்.உரைநடை முதலிய ஆறு அடிவரையறையற்ற யாப்பினைத்தளமாகக் கொண்ட புதுக்கவிதையில் ஒலிநயம் இடம் பெறுவதை,

கயிறுண்டு உன் கையில்
வாளுண்டு என் கையில்

என்ற கவிதையில் காணலாம்.

எழுத்தின் ஒலி அளவு பற்றிய அறிவு மாத்திரை அளவு பற்றிய அறிவு சொல்லைக் கையாளுவதில் ஒலிநயச் சேர்க்கையில் கவிஞனுக்குக் கைகொடுக்கும்.

கட்ட வண்டி கட்டிக்கிட்டு
கல்லப் பயிர ஏத்திக்கிட்டு
கமிட்டிக்கு விக்க வந்தேன்
காசு பணம் வாங்க வந்தேன்

கட்ட(டை) வண்டி, பயிர(ரை) ஐகாரக்குறுக்கம் வந்தன.

வெள்ளை வேட்டி கட்டினால்
என்னடா தங்கவேலு….. என்பவர்கள்
சட்டையோடு பார்த்தால்
என்னடா என்பார்கள்
வரலாறு அதிர்ச்சிகள் தருவது

என்னடா என்பதில் வரும் ஒற்றளபெடை இயற்கை அளபெடை. உரையாடலில் ஓர் எழுத்துக்கு அழுத்தம் தரும்போது ஏளனம், இகழ்ச்சி, செருக்கு போன்ற உணர்வுகளை வெளிப்படுத்துவதாக அமைகிறது. பொருட்செறிவை, உணர்வழுத்தத்தை வெளிப்படுத்தப் புதுக்கவிதை அளபெடையைப் பயன்படுத்திக் கொள்கிறது.

தமிழ் எழுத்துக்களைச் செய்யுளுக்கேற்ப வகைப்படுத்தும் தொல்காப்பியம், வடமொழி எழுத்துக் குறித்துச் சொல்லதிகார எச்சவியலில் சில குறிப்புகள் தருகின்றது.

வடசொல் கிளவி வடவெழுத்து ஓரீஇ,
எழுத்தொடு புணர்ந்த சொல் ஆகும்மே
சிதைந்தன வரினும், இயைந்தன  வரையார் 

வடசொற்கிளவியாவது வடசொற்கே உரியவெனப்படுஞ் சிறப்பெழுத்தினீங்கி இருளர் மொழிக்கும் பொதுவாகிய எழுத்தானியன்ற சொல்லலாம். வடசொல் என்பது ஆரியச் சொற்போலுந் சொல் என்பார் இளம்பூரணார்.

பீரங்கியாம் பீரங்கி
பேருபோன பீரங்கி
பேரம் பேசிச் சந்தையிலே
பெற்று வந்த பீரங்கி

எனப் பீரங்கிப் பேர ஊழலைச் சுட்டிக்காட்டி, அரசியல் சிறுமையை விவரிக்கும் போது, புதிய சொல்லாக்கம்- தூய தமிழ்ச் சொல்லாக்கம், கவிதையின் புருட்புலப்பாட்டை முழுமைப்படுத்தும் என்று சொல்ல இயலாது. எனவே, பிற மொழிச்சொல்லை எடுத்தாளும் போது, எழுத்து அமைப்பையும் சொற்பயிற்சியையும் கருத்தில் கொண்டால், மரபுக்கு எதிரான தோற்றம் தராது.

புரிந்த பின்
இல்லை கேள்வி

இந்த இரண்டு வரிக்கவிதை நூற்பா ‘சூத்திரம் போல நின்று பல எண்ணங்களை விவரிக்கின்றது.’ இதில் மோனையும், எதுகையும் நின்று ஒலிநயம் ஏற்படுத்துகிறது.

 

 

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “தொல்காப்பியமும் புதுக்கவிதையும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *