Tag: முனைவர் ம. தமிழ்வாணன்

  • தொல்தமிழரின் சகுன நம்பிக்கைச் சுவடுகள்

    முனைவர் ம. தமிழ்வாணன்

    முதுநிலை ஆய்வு வல்லுநர்

    செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்

    தரமணி, சென்னை – 113

     

    பொதுவாகச் சகுனம் அல்லது நிமித்தம் என்பது மக்களின் வாழ்வியல் மரபுகளில் ஒன்றாக விளங்குகிறது. பண்டைத் தமிழக மக்களிடையே மரபாகச் சில நம்பிக்கைகள் நிலவி வந்திருக்கின்றன. நம்பிக்கை என்பது நம் நாட்டில் மட்டும் அல்லாமல் ஒவ்வொரு நாட்டிலும் பன்னெடுங்காலமாக வேரூன்றிக் கிடக்கின்றது. அவ்வகையில், தமிழர்களின் பண்பாடு சார்ந்த நம்பிக்கைகளைச் சங்க இலக்கியங்கள் பதிவு செய்திருக்கின்றன. உலகில் வாழும் எல்லா இன மக்களுக்கும் அவர்கள் சமயம் சார்ந்த நம்பிக்கைகள் இருப்பது இயல்பு. பழந்தமிழர்கள் தங்கள் வாழ்வில் பின்பற்றிய நம்பிக்கைகள் பலவிதமானவையாகும். அவற்றில் சிலவற்றை இன்றும் வழக்கொழியாமல் பாதுகாத்து பின்பற்றி வருகின்றனர். தங்களது எண்ணத்திற்குத் தக்கபடி ஏற்படுகின்ற குறிப்பிற்குத் தக்கவாறு நம்பிக்கையைக் கொண்டிருந்தனர். அக்குறிப்புகள் நன்மை சார்ந்ததாகவோ அல்லது தீமை சார்ந்ததாகவோ இருப்பதாகப் பழந்தமிழர்கள் கருதியும் வந்துள்ளனர். தமிழர்களது இலக்கியங்களான செவ்விலக்கியத்தில் காணக்கிடைக்கின்றன. இவை பற்றிச் சுருக்கமாக ஆராய்வோம்.

    சகுனம்(நிமித்தம்)

    சகுனம் அல்லது நிமித்தம் என்ற சொல்லுக்குக் காரணம், சகுனம், அடையாளம், பொருட்டு ஆகிய பொருள்கள் உள்ளன. சகுனம் என்பது இயற்கையின் மொழி! ஒரு வழிகாட்டலாக இயற்கை எவ்வாறு பேசுகிறது, தாவரங்கள், விலங்குகள் எவ்வாறு பேசுகின்றன என்பதைக் கொண்டு எதிர்வரும் பலன் அறிவதாகும். மனிதன் எவ்வளவோ நவீன  வாழ்க்கை முறைகளுக்கு போயிருந்தாலும் தவிர்க்க முடியாதவைகளாக சில விடயங்கள் இருக்கவே செய்கின்றன. அவற்றில் சகுனங்கள் மற்றும் நிமித்தங்களுக்கு நிச்சயம் இடம் உண்டு. மூட நம்பிக்கை என்று பலவற்றையும் ஒதுக்குபவர்கள் கூடச் சகுனங்கள், நிமித்தங்கள் ஆகியவற்றில் தங்களை அறியாமலே நம்பிக்கை வைத்திருப்பார்கள். நிமித்தங்கள் என்பவை நாம் எதிர்பாராமல் சுற்றுப்புறத்தில் நடப்பவை, நம்மை எதிர் நோக்கி இருப்பவை, கேட்கக்கூடிய சப்தங்கள் ஆகியவையாகும். இவற்றை இரண்டாகப் பகுப்பர் அவை, 1. சுபசகுனங்கள் 2. அசுப சகுனங்கள் ஆகும்.

    சுபசகுனங்கள்

    மக்களால் சுபசகுனமாகக் கருதப்படுவது வீணை, புல்லாங்குழல், மேளம், சங்கு, இவைகளைப் பார்ப்பதும், இவைகளின் ஒலிகளைக்கேட்பதும் ஆகும்.  அழகிய பெண்கள், நாட்டியப் பெண்கள், தயிர், மஞ்சள் கலந்த அரிசி(அட்சதை) கரும்பு, அருகம்புல், நீர் நிரம்பிய குடம், பூக்கள், மாலைகள், கன்னிப் பெண்கள், கருடன், ஆலயமணி ஓசை, விளக்கு, தாமரைப்பூ, நாய் தன் உடலைச் சிலிர்ப்பது, பிணம் எதிரே வருவது, பசு மாடுகள் போன்றவைகளாகும்.

    அசுப சகுனங்கள்

    மக்களால் அசுபசகுனமாகக் கருதப்படுவது அணையும் விளக்கு, தண்ணீர் பாத்திரம் சாய்ந்து நீர் வெளியேறுவது, உடுத்திய ஆடை கிழிவது, செருப்பு அறுந்து போதல், அமங்கல வார்த்தை,   ஒற்றைத் தும்மல், சத்தமான வார்த்தைகள், வீட்டில் மரம் முறிதல், பல்லி இடப்புறம் கத்துவது, பன்றி, பாம்பு, குதிரையைக் காண்பது, சத்தமிடல், எண்ணெய்க் குடம், விளக்குமாற்றை கையில் வைத்திருப்பது, தன் நட்சத்திரத்துக்கு உரிய பட்சி இடமிருந்து வலமாகச் செல்வது, விருட்சம் சாய்வது, மிருகம் இறந்து விட்டதாகக் கேட்பது, எருமை மாடு ஆகியவையாகும்.

    சகுனங்களாகக் கருதப்படுபவை எப்படிப்பட்டதாக இருந்தாலும், சென்ற காரியத்தில் வெற்றி கிடைத்தால், அதை நாம் நினைப்பதில்லை. தோல்வியில் முடியும்போதுதான் இந்த ஆராய்ச்சியில் இறங்குகிறோம். சகுனங்களால் எந்தச் செயலும் கெடுவதில்லை. வெற்றியோ தோல்வியோ அவற்றின் அறிகுறிதான் சகுனம் என்கிறார்கள். நிமித்தம் என்ற சொல்லானது தொல்காப்பியத்தில் காரணம், நிமித்தம், கூட்டம் ஆகிய பொருட்களில் பயின்று வந்துள்ளது. சங்க இலக்கியத்தில் இச்சொல்லாட்சி வழங்கப்படவில்லை. ஆனால் புள்(பறவை) என்ற சொல் நிமித்தம் என்ற பொருளில் பலவிடங்களில் சங்க இலக்கியத்தில் காணப்படுகிறது. அக்காலத்தில் புள் பெரும்பான்மையும் நிமித்தத்திற்கு உரிய பொருளாகக் கருதப்பட்டிருக்க வேண்டும். இதற்கேற்பவே பறவை புள் நிமித்தமாக தொல்காப்பியத்தில் சுட்டப்பட்டுள்ளது. [தொல்காப்பியம் பொருளதிகாரம் 88:16-17] சிலப்பதிகாரத்தில் நிமித்தம் என்ற தற்காலப் பொருளில் இச்சொல் பயின்று வந்துள்ளது.[ சிலப்பதிகாரம் 16-165-169]

    செவ்விலக்கியத்தில் சகுனச் செய்திகள்

    அங்கத்துடிப்புகள்

    தமிழிலக்கண நூலான தொல்காப்பியத்தில்,

    ஆவொடுபட்ட நிமித்தம் கூறலும்.

    செலவுறு கிளவியும் செலவழுங்கு கிளவியும்” (தொல்.கற்பு.36:3-4)

     என்று தொல்காப்பியர் பதிவிட்டுள்ளார். தலைவன் வெளியூருக்குப் போக இருக்கிறான். அந்தச் செய்தி கிடைக்கும் நேரம் பசு ஒன்று பால் நிறைய(மிகுதியாக) கறந்திருக்கிறது என்ற செய்தியும் கிடைக்கிறது. அதனால் தலைவனுக்கு நல்லது நடக்கும் என்று கருதி மகிழ்வுடன் விடை கொடுத்து தலைவி அனுப்பி வைத்தாள் என்பதை அடிகள் சுட்டக்காணலாம்.

    இரவு நேரங்களில் நிமித்தங்கள் (சகுனங்கள்) வெளிப்படத் தெரியாது. அதனால் பிறர் பேசும் வார்த்தைகள், பறவைகளின் ஒலி போன்றவற்றைக் கேட்டு சுபமா? அசுபமா? என அறிந்து பலனைக்  கண்டறிந்துள்ளனர். இதனை,

    படை இயங்கு அரவம் பாக்கத்து விரிச்சி” (தொல்.புறத்.3:1)

    என்னும் தொல்காப்பிய அடி வெளிப்படுத்துகின்றன. ஆண்களுக்கு வலதுபுறமும் பெண்களுக்கு இடது புறமும் கண், புருவம், தோள் முதலியன துடித்தல் நல்ல சகுனமாகும்.

    பொலந் துடிக்கு அமை மருங்குல்போல், கண்களும், புருவமும், பொன்-தோளும்,

    வலம் துடித்தன; மாதிரம் துடித்தன; தடித்து இன்றி, நெடு வானம்

    கலந்து இடித்தன; வெடித்தன, பூரண மங்கல கலசங்கள்.” (கம்ப,சுந்தரகாண்டம்.202:2-4)

    மற்றொரு பாட்டில் பெண்களுக்கு இடக்கண்ணும் ஆண்களுக்கு வலக்கண்ணும் துடித்தால் நன்மை என இன்றும் நம் தமிழர்களின் வழக்குகளில் இருப்பதைக் காண்கிறோம். சிலப்பதிகாரம் இதற்குச் சான்று தருகின்றது.

     “கள்ளுக நடுங்குங் கழுநீர் போலக்

    கண்ணகி கருங்கணும் மாதவி செங்கணும்

    உண்ணிறை கரந்தகத் தொளித்துநீர் உகுத்தன

    எண்ணுறை இடத்தினும் வலத்தினும் துடித்தன

    விண்ணவர் கோமான் விழவுநா ளதன்” (சிலம்பு. இந்திரவிழா ஊரெடுத்த காதை 236-240)

    இதில், கண்ணகி கோவலனைப் பிரிந்து வருத்தமுற்றிருந்தபோது, இந்திர விழாவில் கோவலனும் மாதவியும் கலந்து இன்புற்றிருக்கின்ற அவ்வேளையில், கண்ணகிக்கு வலக்கண்ணும் அதே நேரத்தில் மாதவிக்கு இடக்கண்ணும் துடித்தன என இளங்காவடிகள் கூற்றின் மூலம் பழந்தமிழர் வாழ்வில் நீண்ட பழக்கத்தில் இருந்திருத்தல் வேண்டும். எனினும் ஏனைய செவ்வியல் நூல்களில் இதனைப் பற்றிய குறிப்புகள் கிடைக்கவில்லை என்பதும் கவனத்தில் கொள்ளத்தக்கச் செய்தியாகும்.

    கனவும் விளைவும்

    பொதுவாகக் கனவு என்பது குறிப்பிட்ட ஒரு நிகழ்வினை உணர்த்துவதாக இருக்கின்றன என இலக்கியங்களின் வாயிலாக நாம் பல்வேறு இடங்களில் காணலாம். புறநானூற்றிலும் கனவினால் ஏற்பட்ட ஓர் அச்சத்தைப் பற்றிப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    எயிறுநிலத்து வீழவும் எண்ணெய் ஆடவும்

    களிறுமேல் கொள்ளவும் காழகம் நீப்பவும்

    வெள்ளி நோன்படை கட்டிலொடு கவிழவும்    

    கனவின் அரியன காணா நனவின்” (புறம்.41:8-11)

    இப்பாடலால் சோழன் கிள்ளிவளவனின் பகைவர்களுக்கு வற்றிய மரம் தீப்பிடித்து எரிவது போலவும் எரிகொல்லி விழுவது போலவும் யாரோ ஒருவர் தன் தலையில் எண்ணெய் வார்ப்பது போலவும் தன் படையானது முழுமையாக வீழ்ந்தன போலவும் கனவு கண்டதாக புலவர் கோவூர் கிழார் பதிவு செய்திருத்தலின் மூலம் கனவில் நிகழ்ந்த நிகழ்வு அவர்களது எதிர்கால வினைகளுக்குக் குறிப்புணர்வாக அமைந்திருப்பதனை இங்கே காணமுடிகிறது. மேலும் கனவு நிகழ்வின் மீதும் மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்தனர் என்பது விளக்கப்பட்டுள்ளது.

    சிலப்பதிகாரத்தில் கோவலனின் கனவில் கட்டிய ஆடையை பறிக்கொடுத்தல் மற்றும் கோட்டுமா உண்தல் ஆகிய நிகழ்வல்லாத செயல்களும் (சிலம்பு.15:97-98) கோப்பெருந்தேவியின் கனவில் இயற்கைக்கு ஒவ்வாத செயல் நிகழ்வுகளும் (சிலம்பு.20:1-7) தீய நிமித்த குறிகளாக காட்டப்பட்டுள்ளன. இராமாயணத்தில் சீதைக்கு இடம் துடித்ததினால் ஏற்படப்போகும் நன்மையை திரிசடை வாயிலாகக் கூறும் பாடல்வரிகள் கொண்டும் அறியலாம். பொன்வண்டு ஒன்று செவியினிடத்தில் இன்னிசையைப் பாடிச் சென்றதன் வாயிலாகவும் சிங்கம் கூட்டத்தோடு வந்து சீதையை அழைத்துச் செல்வது போல் கண்ட கனவின் வாயிலாகவும் சீதைக்கு நன்மை ஏற்படப்போகிறது என்பதனைத் திரிசடை உணர்த்துவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. திரிசடையின் கனவில் தனது பத்துத்தலைகளிலும் இராவணன் எண்ணெய்த்தேய்த்துக் கொண்டு கழுதையும் பேயும் பூட்டியத் தேரின் மீதேறி இரத்த ஆடையுடன் தென் திசை நோக்கி செல்வது போல் கண்ட நிகழ்ச்சிகள் தீ நிமித்தக்குறியாக சொல்லப்பட்டுள்ளது.

    கணியரும் கணித்தலும்

    தொல்தமிழ் மக்கள் நாள், கிழமைப் பார்த்து தங்களது செயலினைத் தொடங்கியுள்ளனர். செவ்வியல் நூலில் போர் தொடங்குவதற்குமுன் நல்ல நாள் பார்த்தனர் என்றும் அதற்கென அரண்மனை கணியர் என அழைக்கப்படும் கணியர் நாளைக் கணித்துக் கூறினர் என்றும் புறநானூற்றுப் பாடல் சொல்கின்றது.

    புலவர்களும் மன்னர்களைப் பாடிப் பரிசில் பெறவேண்டி, நாளையும் கோளையும் பார்த்துச் சென்றனர் என புறநானூறு மூலம் நாம் அறியலாம்.

    நாளன்று போடிப், புள்ளிடைத் தட்பப்

    பதனன்று புக்குத், திறனன்று மொழியினும்,” (புறம்.124:1-2)

    இதற்கு தொல்காப்பிய நூலிலும் சான்று உள்ளது. “குடையும் வாளும் நாள்கோள்”(தொல்.பொருள்.புறத்.11:1) என கூறுவதன் மூலம், போர் தொடுத்து செல்ல வேண்டிய திசையை நோக்கி, நல்ல நாளில் தன் வலிமையான வாளினை வலம் வரச் செய்தனர் என்றும் அறிந்து கொள்ள முடிகிறது. நல்ல வேளையை முழுத்தும் என அழைத்தனர். அதுவே தற்போது சுபமுகூர்த்தம் என அழைக்கப்படுவதைக் காணலாம்.

    குடைநாட் கோள்

    மறவர் எல்லாரும் நற்சகுனம் பார்த்துப் போர்க்கெனப் புறப்படுதல் என்பது இயலாதது. ஆதலின், குடை, வாள், முரசு ஆகியவற்றை நல்ல நாளில் நல்ல முழுத்தத்தில் புறவீடு செய்வதென்ற வழக்கம் வந்தது. அவ்வழக்கம் பற்றிக் குடையைப் புறவீடு செய்த இந்நிகழ்வு குடைநாட் கோள் என்பதாயிற்று.

    சென்று அடையார் மதில் கருதிக்

    கொற்ற வேந்தன் குடைநாள் கொண்டன்று.” (புற.வெண்பா.6:96)

    (அடையார் = பகைவர்)

    வாள்நாட் கோள்

    முன்பு கூறியது போலவே நல்ல நாளில் நல்ல முழுத்தத்தில் வாளினைப் புறவீடு செய்தலின் வாள்நாட் கோள் எனப் பெற்றது.

    கலந்துஅடையார் மதில்கருதி

    வலம்தருவாள் நாட்கொண்டன்று” (புற.வெண்பா.6:97)

    (வலம் = வெற்றி)

    தொல்தமிழர்கள் தங்கள் இல்லத்தில் நடைபெறும் திருமணங்களைத் திங்களும் உரோகினியும் கூடிய நாளில் நடத்தி வைத்துள்ளனர்.

    கனையிருள் அகன்ற கவின்பெறு காலை

    கோல்களால் நீங்கிய கொடு வெண்டிங்கள்

    கேடில் விழுப்புகழ் நாடலை வந்தென” (அகம்.86:5-7)

    நல்லாவூர் கிழார் பாடிய இவ்வடிகளில்  “வெண்டிங்கள் (திங்கள்) மற்றும் கேடில் விழுப்புகழ் (உரோகினி) நாடலை” என்னும் சொற்கள் உணர்த்தும் பொருளின் வழி அறிந்து கொள்ளலாம். மற்றொரு அகப்பாடலிலும் விற்றூற்று மூதெயினனார் பதிவு செய்துள்ளமை சுட்டத்தக்கது.

    இருவிசும்பு விளங்கத் திங்கள்

    சகடம் மண்டிய துகள்தீர் கூட்டத்துக்

    கடிநகர் புனைந்து கடவுட் பேணி

    படுமண முழவோடு பரூஉப்பணை இமிழ” (அகம்.136:4-7)

    மக்கள் திங்களும் உரோகினியும் கூடிய நாளை குற்றமற்ற நன்னாள் என்ற நம்பிக்கையைக் கொண்டிருந்தனர் என்றும் அத்தகைய நாளிலேயே பெரும்பாலான திருமணங்கள் நடைபெற்றன என்பதைத் தெளிவுபடுத்துகிறது. (திங்கள் சகடம் மண்டிய துகள் தீர் – திங்களை உரோகினி கூடிய நன்னாள்).

    வெள்ளியும் பிறவும்

    தூமகேது (கரந்துறை கோள் எனவும் கூறுவர்) என்னும் கோளின் தோற்றம் உலகிற்கு பெருந்தீங்கு என்பர். மைம்மீன் ஆனது சனிக்கோளைக் குறிப்பதாகும். புறநானூற்றில் பாரி மன்னனின் பண்புகளைப் பாடுகின்றபோது, ‘சனிமீன் புகையினும்’ – எல்லா திசையிலும் புகை தோன்றி, வெள்ளி தெற்கே நோக்கி ஓடினால் உன் நாட்டில் மழை தவறாது பொழியும் என்று புலவர் கபிலர் போற்றிக் கூறியுள்ளதன் மூலம் இத்தகைய நம்பிக்கை இருந்துள்ளது என அறிவிக்கின்றன.

                    “மைம்மீன் புகையினும் தூமந் தோன்றினும்

                    தென்திசை மறுங்கின் வெள்ளி ஓடினும்” (புறம்.117:1-2)

    செவ்விலக்கியத்தில் ஒன்றான முத்தமிழ்க் காப்பியமான சிலப்பதிகாரத்திலும் இளங்கோவடிகள் மேற்கூறிய கருத்தைப் பதிவு செய்திருக்கிறார்.

    கரியவன் புகையினும் புகைக்கொடி தோன்றினும்

    விரிகதிர் வெள்ளி தென்புலம் படரினும்” (சிலம்பு.நாடுகாண்.102-103)

    இதனால் இந்நம்பிக்கையானது வாழ்வியலில் தொடர்ந்து வந்துள்ளதை அறிய முடிகிறது.

    புள்ளின ஒலிகள்

    ஓர் தனிமனிதப் பழக்கவழக்கங்களும் நம்பிக்கைகளும் காலப்போக்கில் மாற்றம் பெறலாம். ஆனால் ஒரு சமுதாயத்தின் பழக்கவழக்கங்களும் நம்பிக்கைகளும் என்றும் மாற்றம் பெறாது. நற்றிணை முல்லைத்திணைப் பாடலொன்றில் பறவை நிமித்தத்தைக் கூறும் தலைவன் நம் வருகையைக் காக்கை முதலிய புள்ளினங்கள் அவருக்கு அறிவுறுத்தினவோ என்று கூறுவதாக அமைந்துள்ளது.

                “தோள்வழி யாப்ப ஈண்டுநம் வரவினைப்

              புள்அறி வுறீஇயின கொல்லோ”  (நற்.161:8-9)

    அக்காலத்தில் தன்னுடைய இல்லத்தருகிலே காகம் கரைந்தால் விருந்தினர் வருவர் என்ற நம்பிக்கை இருந்தது இதனைக் காக்கை பாடினியார் நச்செள்ளையார் பாட்டில் காணலாம். இன்றும் கிராமப்புறங்களில் அந்த நம்பிக்கை நீங்கா இடம்பெற்று விளங்குவதைக் காணமுடியும்.

    பெருந்தோ ணெகிழ்த்த செல்லற்கு       

    விருந்துவரக் கரைந்த காக்கையது பலியே.”    (குறுந்.210:5-6)

    தலைவியைப் பிரிந்து சென்ற தலைவன் விரைவில் வந்து சேருவான் என முன்னமையே தெரிவிக்கும் செயலாகக் குயில் கூவுதல் பார்க்கப்படுகிறது. இதில் குயில் கூவுதல் நல்ல சகுனமாகக் கருதப்படுகிறது. இதனை நற்றிணைப் பாடலில் காப்பியஞ்சேந்தனார் குறிப்பிடுகிறார்.

                    “மனைமா நொச்சி மீமிசை மாச்சினை

                    வினைமான் இருங்குயில்; பயிற்றலும் பயிற்றும்” (நற்.246:3-4)

    வீரர்கள் போருக்குச் செல்லும்போது சில பறவைகளின் ஒலியைக் கேட்டும் சகுனம் பார்த்தார்கள். அவை வீரர்களுக்கு உற்சாகத்தையும் நம்பிக்கையையும் கொடுத்துள்ளன. இதனைக் கபிலர் பாட்டிலும் கழைதின் யானையார் பாட்டிலும் காணலாம்.

                    “புள்ளிடைத் தட்ப” (புறம்.124:1)

                    “புள்ளும் பொழுதும் பழித்தல் அல்லதை” (புறம்.204:10)

    பதிற்றுப்பத்து பாடல் கரிக்குருவியின் ஒலி அழிவுக்கு அறிகுறியாகக் கருதப்பட்டதைக் காட்டுகின்றது. ஆந்தையின் அலறலை தீய சகுனம் என நம்பினர்.

                    “கருங்கண் பேய்மகள் கைபுடையூஉ நடுங்க

                    நேய்த்தோர் தூஉயநிறை மகிழ் இரும்பலி

                    எறும்பும் மூலசா இறும்பூது மரபின்

                    கருங்கண் காக்கையொடு பருந்து இருந்துஆர

                    ஓடாப் புட்கை ஒண்பொறிக் கழல்கால்” (பதிற்.30:36-40)

    முரசுக் கடவுளுக்கு பலிகொடுத்து அவற்றை காக்கையும் பருந்தும் உண்டால் பெரும் வெற்றி கிட்டும் எனவும், மேலும் பேய் பற்றிய நம்பிக்கையைக் கொண்டிருந்தனர் எனவும் “கருங்கண் பேய் மகள் கைபுடைய” எனும் வரியின் மூலம் நாம் அறியலாம்.

    குறிகூறும் கட்டுவிச்சி

    கட்டுவிச்சியிடம் குறி கேட்கும் வழக்கம் தொல்தமிழ்  மக்களிடம்  இருந்து இன்று வரை வழக்கில்  இருக்கின்றது. குறி சொல்கின்றவர்கள் தெய்வத்தின் உதவியினால் உண்மையை அறிந்து உரைக்கின்றனர் என நம்பினார்கள். குறி சொல்லும்போது  குலதெய்வத்தை வழிபட்டுக் சொல்கின்ற முறை  இருந்திருக்கிறது. குறுந்தொகைப் பாட்டில் குறி சொல்கின்ற பெண்டிரைக் கட்டுவிச்சி என்று அழைத்தமையை ஒளவையார் விளக்குகிறார்.

    அகவன் மகளே! அகவன் மகளே!

    மனக் கோப்பு  அன்ன நல்நெடுங் கூந்தல்

    அகவன் மகளே! பாடுக பாட்டே”     (குறுந்.23:1-3)

    இப்பாட்டில் தெய்வத்தை அழைத்துப் பாடுகின்ற கட்டுவிச்சி என்ற கருத்து அழகாகச் சுட்டப்பட்டுள்ளது.

    பல்லியின் ஒலிபலன்

    பல்லி எழுப்பும் ஒலியை நற்சகுனமாகக் கருதுவது வழக்கமான ஒன்றாகவே கருதப்படுகிறது. செவிலக்கியத்தில் தலைவனைப் பிரிந்து வாடும் தலைவி தலைவன் வரும் நாளை ஆவலோடு எதிர்பார்த்து நல்ல பலனை எதிர்நோக்கும்போது பல்லியும் ஓசை எழுப்பி அதற்கு இணக்கமான நல்ல நிமித்தத்தை அறிவித்ததாம்.

         “முன்னியது முடித்தனம் ஆயின் நன்னுதல்

         வருவம் என்னும் பருவரல் தீரப்

         படும்கொல் வாழி நெடுஞ்சுவர்ப் பல்லி” (நற்.169:1-3)

    பன்றியும் பல்லி சகுனம் பார்த்துத் தனக்கு இடையூறு நேரும் என்று குகையில் பதுங்குவதை அகநானூற்றில் 9, 88, 151, 289, 351 ஆகிய பாடல்களும் நற்றிணையில் 98ஆம் பாடலும் 169, 246 ஆகிய பாடல்களும் சகுனத்தை உணர்த்தி நிற்கின்றன. ஆண் பல்லி ஒன்று தன் துணையை அழைக்க ஒலி எழுப்பிய செய்தியையும் குறிப்பிடப்படுகின்றது. இதனை,

         “உகிர்நுதி புரட்டும் ஓசை போல

         செங்காற் பல்லி தன்துணை பயிரும்

         அம்காற் கள்ளி அம்காடு இறந்தோரே”  (குறுந்.16:3-5)

    என்று புலவர் பாலைபாடிய பெருங்கடுங்கோ பாடியுள்ளார். பல்லியின் ஒலியைக் கேட்டு சகுனம் பார்த்தல், இன்றும் நம்மிடையே தொடர்ந்து வருகிறது. தற்காலத்தில் அதற்கென பஞ்சாங்க நூல்கள் கூட விற்கப்படுகின்றன. அவற்றில் மேனியில் பல்லி விழுகின்ற இடத்தினைப் பொறுத்து பஞ்சாங்கத்தில் அதன் பலன்கள் விளக்கப்பட்டுள்ளன. அகநானூற்றின் 389ஆம் பாடல் பல்லியின் சொல் கேட்டு தன் பயணத்தைச் சிறிது நிறுத்தி பின்னர் பயணத்தைத் தொடர்ந்தனர் எனவும் தெரியவருகின்றது.

    விரிச்சியும் உன்னமும்

    ஒரு குறிக்கோளை அடையும் பொருட்டு ஒரு செயலை தொடங்குகின்ற பொழுது பிறர் கூறும் சொற்களையே சகுனமாகக் கொள்வதாகும். இவ்வழக்கம் தொல்தமிழரின் வாழ்வியலில் இருந்துள்ளமையை அறிந்துகொள்ள முடிகிறது. விரிச்சி என்பதன் பொருள் நற்சொல் கூறுதல் என்பதே ஆகும்.

    நெல்நீர் எறிந்து விரிச்சி ஓர்க்கும்

    செம்முது பெண்டின் சொல்லும் நிரம்பா” (புறம்.280:6-7)

    மற்றொரு செவ்வியல் நூலான முல்லைப்பாட்டிலும் இதற்கான சான்று காணப்படுகின்றன.

                    “நாழி கொண்ட நறுவீ முல்லை

                    அரும்பவிழ் அலரி தூஉய்க் கைதொழுது

                    பெருமுது பெண்டிர் விரிச்சி நிற்ப” (முல்.9-11)

    தற்காலத்திலும் தமிழர் இல்ல நிகழ்ச்சிகளில் முதலில் வாழ்த்துபவர்களாக முதுமை, வயதான பெண்களே ஆவர். ஒரு செயலைத் தொடங்கும் முன் பெரியோர்களிடம் ஆசிபெறுதல் இதனுடன் தொடர்புடையதாகும். இம்முறை இன்றும் வழக்கத்தில் இருந்துவருவது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

    உன்னம் என்பது ஒருவகை மரம் ஆகும். இம்மரம் தழைத்து வளர்ந்திருக்குமாயின் தாங்கள் தொடங்க இருக்கின்ற செயல் வெற்றி பெறும் எனவும் வாடி இருக்குமாயின் தீய செயலில் முடியக்கூடும் எனவும் குறிப்பு உணர்த்துவதாக நம்பப்பட்டது.

                    “பொன்னி னன்ன பூவிற் சிறியிலைப்

                    புன்கால் உன்னத்துப் பகைவன் எம்கோ” (பதிற்.61:5-6)

    மேற்குறிப்பிட்ட செய்திகளின் வாயிலாகத் தொல்தமிழ் மக்களிடத்தே சகுனம் பார்க்கும் வழக்கம் வாழ்வியலோடு இணைந்து பிரிக்க முடியாத அங்கமாக இருந்ததை நன்கு தெளிவுபடுத்துகிறது. மேலும் தொல்தமிழர்களின் நம்பிக்கைகளிலிருந்து அவர்கள் வானியல் சார்ந்த அறிவியலிலும் சிறந்து விளங்கியிருந்தனர் என்பதற்குக் கோள்களைக் கொண்டு ஆராய்ந்தறியும் திறனையும் பெற்றிருந்தனர் என்பதையும் நம்மால் மறுத்துவிடமுடியாது. எனவே தொல்தமிழரின் நம்பிக்கைகள் பல நம்மையும் அறியாமலேயே நம்முடன் தற்போதும் தொடர்ந்து வருகின்றன. அவற்றிற்குச் சான்றாகச் செவ்வியல் நூல்களின் வாயிலாக நம்பத்தகுந்த சான்றுகளின் மூலம் நாம் அறிந்தும் அவற்றினை அனுபவ ரீதியிலும் காண்கிறோம். இப்பழக்கங்கள் பன்னெடுங்காலமாக தமிழர்களின் வாழ்விலும் தொடர்ந்து வருபவை என இங்கே அறியவும் முடிகிறது. எனினும் எதற்கெடுத்தாலும் சகுனம் பார்த்து நேரத்தைக் கழிப்பதை விட தான் மேற்கொள்ளும் செயலில் ஈடுபாடும் ஆர்வமும் இருந்தால் மட்டுமே வெற்றிக்கனி கிட்டும். நல்ல குணத்துக்கு சகுனம் ஒரு பொருட்டல்ல. “தீதும் நன்றும் பிறர்தர வாரா”(புறம்.192:2), “இடரிலும் தளரினும்” (தேவாரம்.ஆவடுதுறைப் பதிகம்.10) சகுனமானது அதை நம்பக் கூடியவனையும் அதற்குப் பயப்படக் கூடியவனையும் தான் பாதிக்கும். ஆனால் யார் அதனை ஒரு பொருட்டாகவே கருதவில்லையோ அவனை ஒரு பொழுதும் பாதிக்காது.

    துணைநூற்கள்

    1. வையாபுரிப்பிள்ளை, ச., சங்க இலக்கியம் (பாட்டும் தொகையும்), பாரி நிலையம், சென்னை வெளியீடு, முதற் பதிப்பு 1940
    2. இராமநாதன், லெ.ப.கரு, சங்ககாலத் தமிழர் வாழ்வு,. வெள்ளையன் பதிப்புக் கழகம்,. இராமநாதபுரம்,. 2ஆம் பதிப்பு,. 1958
    3. சுப்பிரமணியன்.ச.வே.(ப.ஆ.), தமிழ்ச் செவ்வியல் நூல்கள் மூலம் முழுவதும், மணிவாசகர் பதிப்பகம், பாரிமுனை சென்னை. 2008
    4. தட்சிணாமூர்த்தி, அ., தமிழர் நாகரிகமும் பண்பாடும். ஐந்திணைப் பதிப்பகம், சென்னை
    Share
  • தொல்தமிழரின் உழவும் கலைச்சொற்களும்

    -முனைவர் ம. தமிழ்வாணன்

    இறைவனை வணங்கி வழிபடுவதை மரபாக கொண்டிருந்ததைப் போல, தங்கள் வாழ்வுக்கு அடிப்படையாக விளங்கும் இயற்கைப் பொருட்களைப் போற்றி வழிபடுகின்ற மனப்பாங்கும் தமிழர்க்குத் தொன்றுதொட்டு வந்த நற்பண்பாகும். பண்டைத் தமிழ்ச் சமுதாயத்தினரும் இன்றைக்கு இருப்பது போலவே உழவுத் தொழிலையே தங்கள் வாழ்க்கையின் உயிர் நாடியாகக் கொண்டிருந்தனர் என்பதனை ‘உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே’ எனப் புறநானூறு விளக்குகின்றது. அவ்வகையில் வேளாண்மைச் செயல்முறைக்கு அடிப்படையாக விளங்கும் நிலம், நீர் இவற்றின் மேலாண்மையை அறிதல், வேளாண்மைக்குக் களம் அமைத்துப் பசுமைப் புரட்சிக்கு வித்திட்டதாக அமையும். நாடு உய்வதும், உயர்வதும் பொருளாதாரம் உறுதிநிலை பெறுதலையும் வேளாண்மையின் வளர்ச்சியையும் பொறுத்து அமைவது. வேளாண்மையில்தான் எத்தனை எத்தனை மாற்றங்கள்? விரைந்து முன்னேறிவரும் வேளாண் நுணுக்கங்களைத் தெரிந்து பரிந்துரைகளைச் செயலாற்றிச் செம்மைப்படுத்துவது வேளாண்மையில் ஈடுபட்டிருக்கும் ஒவ்வொரு உழவனின் முக்கியக் கடமையாகும். இதற்குத் துணைநிற்பது வேளாண் செயல்முறைகளைத் தெள்ளத் தெளிவாக எடுத்துச் சொல்லக் கை கொடுப்பது நல்ல கலைச்சொற்கள் தான்.

    பண்டைய விவசாயம் கடுமையான உழைப்பிலும் அனுபவ இயற்சியிலும் அமைந்தது. ஆனால், இத்தகைய உழைப்புடன் வேளாண்மை விஞ்ஞான முறைகளைப் புள்ளி விவரங்களுடன் இணைக்கும்போது ஒரு பெரும் சக்தியாக மாறிப் புரட்சிகரமாகவும் காலச் சூழ்நிலைக்கேற்பவும் மாறுபாடடைந்து மக்களுக்குப் பயன்படுகிறது. பழையன கழிந்து புதியன புகுந்ததால்தானே இன்று நாம் பசுமையில் புரட்சி செய்து, உணவு உற்பத்தியில் தன்னிறைவினையும் காண நேர்ந்துள்ளது?

    நாடும் மொழியும் வளர்ந்தால்தான் வாழும் மக்களும் வளமான வாழ்வு பெறுவர். இதற்கேற்ப நமது இந்திய வேளாண்மையுடன் விஞ்ஞான அடிப்படையில் அமைந்த உண்மைக் கூறுகளை இணைந்த யாவரும் அறிந்துகொள்ளும் வகையில், தொழில்நுட்பங்களை எளிதில் புரிந்து செயல்படுத்திடும் வகையில் தாய்மொழியில் உணர்த்துதல் மிகவும் அவசியம், அறிவியல், கலைச்சொற்களைப் பொருள் சிதையாமல் பெயர்த்துத் தமிழில் வழங்க வேண்டும் என்ற வேட்கை நாளும் வளர்ந்து வருகின்றது. தமிழில், புதிய கலைச்சொல்லாக்கங்களைச் செய்தற்கு முன்னர், இலக்கியப்பழமை சார்ந்த அறிவியல் கலைச்சொற்களைப் பேணிக்காக்க வேண்டிய கடமையும் தமிழுக்கு உரியது.

    மொழிபெயர்க்கும்போது பிறமொழி சொற்களுக்கு இணையான பொருத்தமுடைய சொற்களை ஆய்ந்து காட்டி நல்ல சொற்களைக் கண்டெடுத்து உறுதிப்படுத்துவது சிறந்தது. பிறமொழிகளிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்க்கும்போது சொல்லுக்குச் சொல் நேரிடையாகவே மொழி பெயர்க்காமல் பொருளுக்குப் பொருள் பொருந்தி வரும் வகையில் மொழி பெயர்ப்பது சிறந்தது. மொழிபெயர்ப்பு என்பது ஒரு கலை, ‘கலை’ யாவும் வெறும் சொல்லால் மட்டும் சிறப்பதல்ல. சொல்லிய பொருளும், வழங்கும் மரபும் பயன்பட்டு வந்த வகையில் அறிந்தோராலேயே இக்கலை ஒளிர்வதாகும். சொற்பொருளை வழுவற உணர்ந்தோரே, புதிய சொற்களைத் தகுதியுடையாத ஆக்கவல்லவர். நாம் கடமையாற்றும் வகையில் எவரையும் சிந்திக்க வைக்கும் நிறந்த கருவூலமாக அமைதல் அவசியம். நம் பழைய இலக்கியங்களிலும், கல்வெட்டுகளிலும், செப்பேடுகளிலும் கணக்கற்ற சொற்கள் காணக்கிடக்கின்றன. அவற்றை எடுத்துப் பயன்படுத்திட, இல்லாத இடங்களில் புதிய சொற்களை உருவாக்கிடத் தளராத தமிழார்வமும் அயராத தமிழ்ப்பணித் திறனும் வேண்டும். கணக்கற்ற வேர்ச்சொற்களைப் பெற்றிருக்கும் தமிழ்மொழியில் புதிய சொற்கள் புனைவதில் தொல்லை இருக்காது. எனவே முனைப்புடன் செயல்படுவது சிறந்ததாக அமையும்.

    வேளாண்வளத்தில் கலைச்சொற்கள்

    வேளாண்மை இன்று நாடெங்கும் சிறப்புற்று வளர்ந்துவரும் ஓர் அறிவியல் துறை. வளமான மண்ணும் அளவான நீரும் உழவியலுக்கு இன்றியமையாத இரு கண்கள். உணவென்று சிறப்பித்துச் சொல்வது நிலத்தையும், நீரையும். மண்ணியல், உழவியல், நீர்வள இயல், வித்தியல், தாவரவியல், தாவர வினையியல், பயிர் நோயியல், நுண்ணுயிரியல், பூச்சியியல், உயிர் வேதியியல், மீன்வள இயல், வானவியல் என்றின்னோரன்ன முறைகள் பலவற்றையும் உள்ளடக்கிய அறிவியல் கலையாக வேளாண்துறை இன்று வீறுபெற்று நாளும் வளர்ந்து வருகின்றது.

    நிலவளத்தில் கலைச்சொற்கள்

    நிலப்பகுதிகள் மக்கள் வாழ்விற்கும் இயக்கத்திற்கும் பயிர் விளைச்சலுக்கும் உரியவை. எனினும் நிலப்பகுதிகள் அனைத்தும் ஒரே இயல்பும் தன்மையும் வாய்ந்தவை இல்லை. சில பகுதிகள் பண்படுத்தப்பட்டுப் பயிர் விளைவுக்கும் மக்கள் வாழ்க்கைக்கும் உரியவையாக, உகந்தவையாக இருக்கும். மேலும் இந்நிலப் பகுதிகள் சமமட்டமாக இல்லாமல் மேடு பள்ளம் நிரம்பியவையாகவும் இருக்கக்கூடும். நிலப்பகுதியில் அமைந்த இவ்வேறுபாடுகளைச் சுட்டும் கவிஞர் அந்த இடத்தில் வாழும் மக்களின் இயல்புக்கும், பண்பாட்டிற்கும் ஏற்ப நல்ல நிலம், தீய நிலம் என்று நிலப்பகுதி பெயர் பெறுகின்றது. இக்கருத்தை எடுத்துக்கூறுவதாக,

    “நாடா கொன்றோ காடா கொன்றோ
    அவலா கொன்றோ மிசையா கொன்றோ” (புறம்187)

    என்ற புறநானூற்றுப் பாடலில். பள்ளத்தை வழங்க அவல் என்ற சொல்லும், மேட்டைக்குறிக்க மிசை என்ற சொல்லும் பழங்காலம் முதற்கொண்டு வழங்கிய கலைச்சொற்கள் என்ற குறிப்பை அறியமுடிகிறது.

    நிலம் என்பது அனைத்துவகை நிலப்பகுதிகளையும் குறிக்கும் பொதுச்சொல். மாநிலம், நிலவரை என முன்னும் பின்னும் ஒட்டுச் சேர்த்தும் இப்பெயர் வழங்கப்பெறும். ஞாலம், உலகம், வையம் என்பனவும் நிலத்தைக் குறிக்கும் பிறசொற்களாக உள்ளன.

    நிலத்தை வன்புலம் மென்புலம், விடுநிலம் என்று பிரித்தரிந்து விவசாயம் செய்துள்ளனர். மேலும் குறிஞ்சி, முல்லை, நெய்தல், மருதம் என்ற நானிலத்தின் விளைநிலங்களையும் பிரித்தறிந்து பார்த்துள்ளனர். நிலங்களைக் குறிக்கும் சொற்கள் பல நிலைப்பெற்ற கலைச்சொற்களாக உள்ளன. விவசாயத்தில் தமிழர்கள் தலைசிறந்தவர்கள் என்பதனையும், தமிழனால் எதையும் செய்யமுடியும் என்பதனையும் இது எடுத்துரைக்கின்றன.

    1.குறிஞ்சி என்பது மலையும் மலை சார்ந்த நிலப்பகுதியுமாகும். இந்நிலத்தில் புன்செய் பயிரிடும் நிலத்தைத் துடவை (பெரும்.201) என அழைத்துள்ளனர். மரங்களை அழித்து விளைநிலமாக்கப்படும் புதிய புனத்தை ‘இதை’ என்றும் பழமையான விளைநிலத்தை ‘முதைபுனம்’ என்றும் அழைத்துள்ளனர்.

    2.முல்லை நிலம் என்பது காடும் காடு சார்ந்த நிலப்பகுதியாகும். இங்குள்ள நிலத்தைக் கொல்லை எனவும், மரங்கள் நிறைந்த பகுதியைப் புறவு, கானம், பாட்டம், தோட்டம் எனவும் பெயரிட்டு அழைத்துள்ளனர். மேலும் முல்லை நிலத்தைக் குறிக்கச் “சங்க இலக்கியங்களில் காடு, கானம், குறும்பொறை, கொல்லை, செந்நிலம், செஞ்சுவம், புறவு, புனம், புன்புலம், மென்புலம், முரம்பு, வன்புலம்” போன்ற சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.  (வி.சி. சசிவல்லி, பண்டைத்தமிழர் தொழில்கள்) இச்சொற்களில் பல இன்றும் வழக்கில் இருந்து வருகின்றன.

    3.மருதம் வயலும் வயல் சார்ந்த நிலப்பகுதியுமாகும். கழனி, வயல், பழனம், செறு ஆகிய சொற்கள் மருத நிலத்தைக் குறிக்கும் சொற்களாகும். கழனி என்பது சேற்றுவயலையும், பழனம் என்பது நெல்வயலையும் குறிக்கும் சொற்களாகும். வயல் என்பது விளைநிலத்தைக் குறிக்கும். சங்க இலக்கியங்களில் கழனி என்ற சொல் 67 இடங்களிலும், பழனம் என்பது 16 இடங்களிலும், வயல் என்பது 52 இடங்களிலும் வந்துள்ளது. இச்சொற்கள் பரவலாக தமிழகத்தில் இன்றளவும் பயன்பாட்டில் இருந்து வருகின்றன.

    1. நெய்தல் கடலும் கடல் சார்ந்த பகுதியும் நெய்தல் நிலமாகும். இந்நிலத்தில் மழைபெய்தால் நெல்விளையும், மழை பெய்யாவிட்டால் உப்பு விளையும். இந்நிலத்தில் உள்ள நிலப்பகுதிகளை அடைகரை, எக்கர், பரப்பு, கழி, கழனி, கானம் என்றெல்லாம் அழைத்துள்ளனர். எக்கர் என்ற சொல் 54 இடங்களிலும், பரப்பு என்பது 62 இடங்களிலும், கழனி என்பது 171 இடங்களிலும், கானம் என்பது 130 இடங்களிலும் வந்துள்ளது.

    மேற்கண்ட சொற்கள் நானிலங்களிலும் பயன்பாட்டின் அடைப்படையில் குறிக்கப்பட்டுள்ளன. இவை விவசாயத்தில் தமிழர் ஆழங்கால் பட்டுள்ளதைக் காட்டுவதாக உள்ளது.

    தமிழகத்து நிலப்பகுதிகளை மண்ணியல் அடிப்படையில் இன்றைய அறிவியலார் ஐந்து கூறுகளாக வகுத்துரைக்கின்றனர்.

    செம்மண்                     – Red Soil
    கரிசல் மண்                         – Black Soil
    வண்டல் அல்லது அடை மண்     – Alluvial Soil
    செம்புறை மண்              – Laterite Soil
    மணற்பாங்கான மண்       – Sandy Soil

    இங்கு குறிக்கப்பெற்ற வண்டல் மண் மருத நிலத்தில் ஆற்றுப்படுகைகளில் மிகுதியாக உள்ளது. செம்புறை மண் மலைப்பாங்கான நிலப்பகுதிகளில் அதாவது குறிஞ்சி நிலத்தில் அமையும். மணற்பாங்கான மண் கடற்கரைப் பகுதிகளாகிய நெய்தல் நிலத்துக்குரியது. முல்லை நிலப்பகுதிக்குச் செம்மண் அமைப்பு உரியது. எஞ்சிய கரிசல் மண் மிகுதியான அளவு நன்புலத்துக்கும் சிறுபான்மை புன்புலத்துக்கும் உரியதாகக் கொள்ளலாம். நன்புலம் இயற்கை நீர்வளம் உடைய நிலப்பகுதிகள், புன்புலம் செயற்கை நீர்வளம் உடைய நிலப்பகுதிகள். இன்றைய அறிவியல் செய்தியை அறிவியல் என்று அறியாமல் பயன்படுத்தியுள்ளனர் என்பது தெளிவான உண்மையாகும்.

    நீர் மேலாண்மையில் கலைச்சொற்கள்

    நாட்டு வளத்திற்கு அடிப்படைக் காரணியாக விளங்குவது நீர்வளம், நீர் வளத்தைத் தரும் வற்றாத பேராறுகள் நாட்டின் செல்வமாகத் திகழ்பவை. உயிர்களுக்கு அமுதாய்த் தாய்ப்பால் விளங்குவதுபோல் பயிர்களுக்கு நீர்வளம் இன்றியமையாதது. பிள்ளையின் வளர்ச்சிக்கு உரிய பாலாக விளங்குவது தாய்ப்பாலே. ஆவின் பாலும் பிறவகைப் பாலும் உயிர் வளர்க்கும் ஆற்றல் உடையவை எனினும், தாய்ப்பாலை நோக்க அவற்றிற்கு அடுத்த இடமே பொருந்தும். அதுபோல் பயிரின் வளர்ச்சிக்கும் பிறவகை நீர்ப்பாசன முறைகள் இருப்பினும் ஆற்றுப் பாசனமே சாலச்சிறந்தது. ஆற்று வெள்ளத்தில் பலவிடங்களில் அமைந்த வளங்கள் ஒருசேர அடித்து வரப்பட்டுச் சேர்க்கப்படுவதால் பயிரின் வளர்ச்சிக்குத் தேவையான ஊட்டச்சத்து வளமனைத்தும் கொண்டுள்ளன. எனவே ஆற்றுப் பாசன முறையே உயர்ந்தது என்று வேளாண்மை அறிவியல் நுட்பத்தைச் சங்க இலக்கியங்கள் விளக்குகின்றன. தமிழ்நாட்டின் எல்லைக்குள் மொத்தம் 33 ஆற்றுப் படுகைகளும், அந்த ஆறுகளுக்கு எண்ணற்ற துணையாறுகளும் உள்ளன. காவிரியும் வைகையும் சங்க இலக்கியத்தில் பெரிதும் இடம்பெற்றுள்ளன. அடுத்து ஆன்பொருநையும், பொருநையும், பெரியாறும் இடம் பெறுகின்றன. அரிசிலாறு, காஞ்சி, குமரி, சிலம்பாறு, சுள்ளியம், பேரியாறு, சேயாறு, பஃறுளி, பெண்ணை, வாணி என்ற ஆறுகளும் இடம்பெற்றுள்ளன. கங்கை, நர்மதா போன்ற வட இந்திய ஆறுகளுடன் ஒப்பிடும்போது நமது ஆறுகளின் நீர்வளம் மிகக்குறைவு. எனவே நீர்வளத்தைக் கருத்திற்கொண்டு கிடைக்கிற நீரை விரயமின்றிச் சிக்கனமாகப் பயன்படுத்துதல் நீர் மேலாண்மையில் ஒரு சிறந்த தொழில்நுட்பம். இலக்கியச் சிறப்புப்பெற்றிருந்தாலும் நீர் மேலாண்மை ஆய்வுக்கு ஆறுகள் பற்றிய விவரம் இன்றியமையாதது. மருத நிலம் ‘விழைவுஅறா வியன் கழனிகளை’ பெற்றிருந்ததற்கு இந்த ஆறுகளே காரணமாகும். நிலத்தில் நீர் அதிகமாகத் தேங்கி இருந்தாலும் அல்லது நிலத்தில் நீர் இல்லாமல் இருந்தாலும், பயிர்கள் நன்றாக வளர்ந்து அதிக மகசூலைத் தருவதில்லை. இவை இரண்டுக்கும் இடையே, பயிர்களின் இக்கட்டு நிலையறிந்து, நீர்த்தேவையைக் கருத்திற்கொண்டு பாசனம் செய்வது நல்லது.

    ஒரு நாட்டின் வளமும் நலமும் நீர்வளத்தைப் பொருத்தே அமையும் என்பது பண்டைத் தமிழர் கொண்ட கொள்கையாகும். விதைத்துவிட்டு வானத்து மழையை நோக்கும் புன்செய் நிலம் மிகப்பெரிய அளவினதாயினும் ஓர் அரசனது வெற்றிக்கு அது பயன்படாது. அதனால் பள்ளமான பகுதிகளில் நீர் நிலைகளை உருவாக்கியோரே இவ்வுலகில் தம் புகழை நிலைநிறுத்தியோராவர்.

    “வித்தின் வான்நோக்கும் புன்புலம் கண்ணகல்
    வைப்பிற்று ஆயினும் நண்ணி யாளும்
    இறைவன் தாட்கு உதவாதே” (புறம்.18;24-26)

    என்று புலவர்கள் மன்னர்கட்கு நீர்நிலைகளை அமைக்க வேண்டியதன் இன்றியமையாமையை எடுத்துரைத்தனர். ஆதலால் நிலையான வேளாண்மைக்குக் குறைவில்லா நீர்வளம் தேவை என்பதைப் பண்டைநாள் தொட்டே மக்கள் உணர்ந்து வந்துள்ளனர். இத்தகைய நீர்நிலைகளை உருவாக்கிக் கொடுப்பது மன்னர்கள் கடமையாகும். அத்தகையவனே உடம்பையும் உயிரையும் படைத்தவனாகவும் கருதப்பட்டான் என்பதனை

    “உணவெனப் படுவது நிலத்தொடு நீரே
    நீரும் நிலனும் புணரியோர் ஈண்டு
    உடம்பும் உயிரும் படைத்தசி னோரே” (குடபுலவியனார்)

    என எடுத்துரைத்துள்ளனர். நீர் நிலைகள் மன்னர்கள் அமைக்கவேண்டும் என்பது தலையாயக் கடமையாக இருந்துள்ளது. புலவர்கள் அரசர்களை வாழ்த்தும்போதும் நாட்டின்  நீர்வளம் பெருக்கவேண்டியதன் இன்றியமையாமையை உணர்த்தும் வகையில் ‘சோறும் நீரும் ஆகிய இருமருந்து விளைக்கும் நன்னாட்டுப் பொருந’ என்றும் ‘நெல்லும் நீரும் எல்லார்க்கும் எளியவென ஆளும் வேந்தே’ என்றும் விளித்துப் பாடியது குறிப்பிடத்தக்கது. ‘தீம்புனல் உலகம்’என்று போற்றப்படும் சிறப்பு வாய்ந்த மருத நிலத்தில் வளம்சான்ற ஆறுகள் பாய்ந்து வேளாண்மைக்கு வளம் சேர்த்தன.

    நீர்ப்பாசனத்தைப் பொறுத்தவரை, நிலத்தின் மேல்மட்ட நீரேயன்றி, நிலத்தடி நீரைப் பயன்படுத்தும் முறை பற்றிய ஆராய்ச்சியும் கிடைக்கும் நீரைச் சேதமின்றிப் பயன்படுத்தப் பல்வேறு நீர்ப் பாதுகாப்பு முறைகளும் அறிவியல் நோக்கில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மேலும் தட்பவெப்பநிலை, பயிர்வகை, நில இயல்பு ஆகியவற்றைப் பொறுத்து நீர்ச் சேதத்தைத் தவிர்க்க மேற்பரப்புப் பாசன முறை (Surface irrigation), வேரின் கீழ்மட்ட நீர்ப்பாசன முறை (sub/surface irrigation), தெளிப்பு நீர்ப்பாசனம், சொட்டுநீர்ப் பாசனம், ஆடல்ஸ் ஆகிய பல்வேறு நவீன நீர்ப்பாசன முறைகள் கண்டறியப்பட்டுள்ளன.

    உழவியற் கலைச்சொற்கள்

    உழவியல் செயல் முறைகளில், உழுதல், உரமிடுதல், களை மேலாண்மை, நீர்ப்பாய்ச்சுதல், பயிர்ப்பாதுகாப்பு என்ற ஐந்து கோணங்கள் இன்றியமையாதவை. இந்த ஐவகைக் கோணங்களையும் விளக்கும் வகையில்,

    “ஏரினும் நன்றாம் எருவிடுதல் கட்டபின்
    நீரிலும் நன்றதன் காப்பு” (குறள்.1038)

    என்ற திருக்குறள் அமைந்துள்ளது. உழுவதைக் காட்டிலும் உரமிடுதல் சிறந்தது. களை நீக்கியபின் நீர்ப்பாய்ச்சுவதைக் கட்டிலும் பயிர்ப் பாதுகாப்பு முக்கியமானது என்பது இக்குறள் காட்டும் கருத்து.

    இலக்கியங்களில் உள்ள உழவுச் சொற்கள் பாரம்பரியத்தை விளக்குகின்றன. அதேபோல் பள்ளு இலக்கியங்களில் உள்ள உழவுச்சார்ந்த சொற்கள் வட்டார மணம் கொண்டதாக உள்ளதையும் காணமுடிகிறது. பண்டைத் தமிழர்களிடம் வழக்கிலிருந்த உழவுத் தொழில் சார்ந்த சொற்கள் கலைச்சொல்லாக்கத்திற்கு முதல் படியாக அமைந்திருப்பதைக் காணலாம்.

    உழவுத்தொழில் சார்ந்த சில சொற்கள்

    நம் தமிழர்கள் பேச்சுவழக்கில் பயன்படுத்தும் உழவுத்தொழில் சார்ந்த சில சொற்கள் கலைச்சொற்களாக விளங்குவதைக் காணமுடிகிறது. அவ்வகையான சொற்கள் இங்கு பொருள் விளக்கத்துடன் கொடுக்கப்படுகின்றன.

    1. நல்லேர் கட்டுதல், பொன்னேர் கட்டுதல்- நல்லேரு கட்டுதல், பொன்னேரு கட்டுதல்- வருடத்தின் முதல் நாள் நல்லநாள் பார்த்து கட்டும் ஏர்.
    2. சேடை வைத்தல்- சேடெ வெக்கிறது- உழுவதற்கு முதல்முதலில் வயலுக்கு தண்ணீர் வைத்தல்.
    3. தொளி கலக்குதல், தொளியடித்தல்- தொளிமிதித்தல்- ஏர் பூட்டி உழுதபின்னர் விதைப்பிற்கு ஏற்ற வகையில் சரிசெய்தல்.
    4. விதையிடுதல்- வெதெவுடுதல்- உழுது பண்படுத்தப்பட்ட வயலில் விதையைத் தெளித்தல்.
    5. தெளியடித்தல்- தெளியடித்தல்- விதையிடுவதற்கு முன் கலங்கல் நீர் வடிகட்டுதல்.
    6. நாற்று முளைத்தல்- நாத்து மொளச்சிடுச்சி- விதைத்த விதை முளைவருதல்.
    7. சிலுப்பு நீர்க்கட்டுதல்- மிகக்குறைந்த அளவு மட்டுமே நீர்க்கட்டுதல்.
    8. கங்களவு நீர்ப்பாய்ச்சுதல்- கங்கு நீர்ப் பாச்சுதல்- நாற்று முளையின் அளவிற்கேற்பச் சீராக நீர்ப்பாய்ச்சுதல்
    9. வெட்டிவிட்டுச் சரித்தல்- வெட்டிவுடுதல்- நாற்றங்காலில் நீர் வடியவிடுதல்.
    10. நாற்றுக் குருத்தல்- நாற்று இளைத்து செறிந்து வளர்தல்
    11. நாற்று சமைத்தல்- நாத்துச் சமைத்தல்- நாற்றங்காலில் முளைத்த நாற்றுக்கள் பிடுங்கி நடுவதற்குரிய பருவத்தில் இருத்தல்
    12. தரிசடித்தல், முதல் ஓட்டு, தரிசு ஓட்டு – மொதெ ஓட்டு – நடுவதற்குரிய வயல்களை முதல்முறையாக உழுதல்.
    13. மறித்தடித்தல்- மரிச்சடித்தல்- இரட்டித்தல், மறுத்தடித்தல், இரண்டாவதுமுறை உழுதல்.
    14. இரண்டாஞ்சால் – ரெண்டாஞ்சாலு – நிலத்தை இரண்டாவது முறை உழுதல்.
    15. கிடை கட்டுதல்- கெடெ கட்டுதல் – உழவிற்கு முன்னை ஆடு, மாடுகளைக் கூட்டமாக இரவு முழுவதும் வயலில் அமர்த்துவது. நிலத்துக்கு வளம்சேர்க்கச் செய்யப்படும் செயல்.
    16. வேரூன்றல்- பயிர் புடிச்சிடுச்சி- பயிர்களை நட்ட பின்னர் மண்ணில் வேர்பிடித்து உறுதியாதல்.
    17. குறுத்துச் செறிதல், கிளை கொள்ளல், கணு வைத்து எழுதல், குளை இளைத்தல், தூர் கட்டுதல், தூர்வெடித்தல் – கப்பும் கிளையுமாகப் பயிர் வளர்தலைக் குறிக்கும் சொற்கள்
    18. மத்தாளித்தல், திமிரிப்போதல், அக்கிரோகமாக இருக்கு – மத்தலித்தல், அக்ரோமா இருக்கு – கதிர் விளைச்சல் வந்தும் மகசூல் கிடைக்காமலிருக்கும் பசுமை நீங்கிய நிலையில் காணப்படும் கதிர்.
    19. கருக்கொள்ளுதல், சூல் கொள்ளுதல், சூல் கட்டுதல் – கதிர் சூல் கொண்டு உருவாகுதல்.
    20. பொதி நீட்டுதல், பொதி கட்டுதல், பொதி பயிர், சூல் பயிர் – சூல் கொண்ட கதிர்கள் மெல்லத் தலை நீட்டுதல்.

    மேற்கண்ட வேளாண்மைக் கலைச்சொற்கள் தமிழின் கலைச்சொல் வளத்திற்கு எடுத்துக்காட்டாகும். எனவே தமிழில் முடியாது எனச் சொல்ல முடியாது. தமிழிலியே முயன்றால் தமிழில் கலைச்சொற்கள் பெருகும் என்பது உண்மையாகும்.

    துணைநூற்கள்

    1.சங்க இலக்கியம் (பாட்டும் தொகையும்) 1940, சு. வையாபுரிப்பிள்ளை, பாரி நிலையம், சென்னை வெளியீடு, முதற் பதிப்பு.

    2.இராமநாதன், லெ.ப.கரு, சங்ககாலத் தமிழர் வாழ்வு, 2-ஆம் பதிப்பு 1958, வெள்ளையன் பதிப்புக் கழகம்,. இராமநாதபுரம்,.

    3.சுப்பிரமணியன்.ச.வே. (ப.ஆ.), 2008, சங்க இலக்கியம், மணிவாசகர் பதிப்பகம், பாரிமுனை சென்னை.

    *****

    கட்டுரையாளர் – முதுநிலை ஆய்வு வல்லுநர்
    செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்
    தரமணி, சென்னை – 600113.

     

    Share
  • தொல்தமிழர் ஈகையின் மகத்துவம்

    -முனைவர் ம. தமிழ்வாணன்

    தொல்தமிழர்கள் இயற்கையோடு இணைந்த வாழ்க்கையை வாழ்ந்தனர். அதனைத் தாங்கள் படைத்த இலக்கியங்களில் பதிவு செய்து வந்துள்ளனர். செவ்விலக்கியங்கள் அக்கால மக்களின் இயல்பான வாழ்க்கையை எடுத்துக் காட்டுகிறது. மனித சமுதாயத்தில் அன்றாட வாழ்வில் நடைமுறைக்கு ஏற்ற வகையில் நலம் விளையக்கூடிய செயல் எதைச் செய்தாலும் அது அறச்செயலாகும். அறம் என்றால் தொண்டு, தூய்மை என்பது பொருளாகும். இத்தொண்டை எக்காரணம் கொண்டும் சுயநலம் கருதாமல், பொதுநலம் கருதியே செய்ய வேண்டும். என்பதை வலியுறுத்தும் விதமாக, ‘அறம் செய விரும்பு’ என்று ஔவையாரும், ‘அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க’ என்று வள்ளுவரும் கூறியுள்ளனர். தொல்தமிழர் அறத்தில் சிறந்தது ஈகையே என்பர். செவ்விலக்கியத்தை ஆய்வு செய்கின்றபோது அவர்களது ஈகைத்தன்மையை ஆங்காங்கே காணலாம். இத்தகைய தொல்தமிழரின் ஈகையின் மகத்துவத்தைச் சுருக்கமாகக் கீழே காண்போம்.

    ஈகை விளக்கம்

    ஈகை என்றால் கொடுத்தல்; இல்லாதவர்க்குக் கொடுத்தல். இரப்போர்க்கு இல்லையென்னாது கொடுப்பது சிறந்த அறமாகும். ஈகை என்பது பொருள் உடையவர்கள், இல்லாதவர்களுக்கு வழங்குவது. இது எவ்வித எதிர்பார்ப்பும், திரும்பப் பெறும் தன்மையும் அற்றது. உலகத்தாற் போற்றும் அறங்களில் முதன்மை இடம் பெறுவது, அறங்களில் சிறந்தது, மனித நேயத்தின் அடிப்படையாகத் திகழ்வது ஈகைப் பண்பாகும்.

    செல்வத்துப் பயனே ஈதல்
    துய்ப்பேம் எனினே தப்புந பலவே
    (புறம்.189:7-8) என்கிறார் மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார்.

    பிறருக்குக் கொடுத்துத் தானும் உண்டு வாழ்வதே வாழ்க்கையாகும். ஈகை குணம் தனிமனிதச் சிந்தனையில் தோன்றிச் சமுதாயப் பயனுடையதாக அமைகின்றது. வறுமையில் வாடும் மக்களுக்குத் தம்மால் இயன்ற உதவிகளைச் செய்யும் போது அச்செயல் உயர்ந்ததாகக் கருதப்படுகிறது. ஆதலால் தான் உலக இன்பங்களில் ஈகை இன்பம் உயர்ந்ததாக உலகத்தார் போற்றி வருகின்றனர்.  வறுமையில் வாடும் புலவரான பெருஞ்சித்திரனார் தான் பெற்றுவந்த பொருளைத் தன் மனைவியிடம் கொடுத்து, அதனைத் தம் சுற்றத்தாருக்கும் பகிர்ந்தளிக்கச் சொல்கிறார். இது தான் ஈகையின் மாண்பாகும்.

    இன்னோர்க்கு என்னாது என்னோடும் சூழாது,
    வல்லாங்கு வாழ்தும் என்னாது நீயும்
    எல்லோர்க்கும் கொடுமதி மனைகிழ வோயே! (புறம்.163.5-7)என்ற பாடலின் வழி விளக்குகிறார் அவர்.

    சங்க காலத்திலும் சிறுகுடி பண்ணன் போன்ற வண்மையாளரை புலவர் பசிப்பிணி மருத்துவன் என்று கூறிப் புகழ்ந்தனர். அக்காலத்தில் பகிர்ந்துண்ணல், கொடை, பரிசில், உணவிடல் என்ற பலநிலைகளில் சமூக வழக்கிலிருந்த ஈகை, குறள் காலத்தில் வறியவனின் பசி தீர்த்தல் என்ற பொருளில் இறுக்கம் பெற்றது என்பர். விருந்தோம்பல் என்பதும் அன்று ஈகையைச் சார்ந்ததாகவே கருதப்பட்டது. ஈகை என்பது தனி உயிர்த் துன்பம் நீக்கும் சிறப்புக் கொடையாகக் கருதப்படுகிறது.

    ஈகை என்று வள்ளுவர் சிறப்பித்து உரைப்பது வறியவர்க்குப் பசிபோக்கும் ஈகைக்(வயிற்றீகை) குணமாகும். இத்தகைய பண்பு இயல்பான நிலையில் உண்டாவதாகும். தன்னிடம் இல்லை என்ற துயரை எடுத்துரைக்கும் முன்பே கொடுக்கப்படுவது. அது எதையும் எதிர்பார்த்துச் செய்வதில்லை. ‘இம்மைச் செய்தது மறுமைக்காம்’ என்று புதிதாய் அன்று கூறப்பட்ட வினைக் கொள்கையைப் புலவர் மரபு ஏற்றதில்லை. உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் பாடலைக் காண்போம்.

    இம்மைச் செய்தது மறுமைக்கு ஆம் எனும்
    அற விலை வணிகன் ஆஅய் அல்லன்
    பிறரும் சான்றோர் சென்ற நெறி என
    ஆங்குப் பட்டன்று அவன் கைவண்மையே (புறம். 134)

    இப்பாடலில், ஆய் அறம் செய்யும் வணிகம் அல்லன். தன் பணத்தை இந்த உலகில் முதலீடு செய்து மறு உலகில் அதன் ஊதியத்தைப் பெறுவதில்லை. சான்றோர்களின் மரபார்ந்த வழியில் அவன் வாரி வழங்குகின்றான் என்கிறார் புலவர். அறம் அறத்திற்காகச் செய்யப்படவேண்டும். ஈகை ஈர உள்ளத்துடன் ஈகைக்காகச் செய்யப்படுவதாகும்.

    வறியவர்க்குக் கொடுப்பதில் ஒரு மகிழ்ச்சியான இன்பம் இருக்கின்றது; இதை ஏன் ஈயாதவன் உணர்வதில்லை என வியக்கிறார் வள்ளுவர். ஈயாமல் செல்வத்தைச் சேர்த்து வைப்பவர் இகழப்படுகிறார். நிரப்பிய உணவைத் தனித்து உண்பது, இரப்பதைவிட பார்வைக்கு அருவருப்பானது என்று கூறப்படுகிறது. சாதலை எவரும் விரும்புவதில்லை; ஆனால் கண்முன் பசித்தவன் இருக்க அவன் துயர் தீர்க்க முடியாத நிலையில் சாதலை ஒருவன் விரும்பலாம் எனவும் கூறப்படுகிறது.

    ஈகைக்குரிய இலக்கணம்

    கொடைப் பண்பிலிருந்து முற்றிலும் வேறுபட்ட பண்புடையது ஈகையாகும். திருவள்ளுவர் ஈகைக்கு இலக்கணம் வகுத்துள்ளமை சிறப்பாகப் பேசப்படுகிறது.

    வறியார்க்குஒன்று ஈவதே ஈகை மற்றுஎல்லாம்
    குறியெதிர்ப்பை நீரது உடைத்து. (குறள்.221)

    என்ற குறளின் பதிவில் திரும்ப உதவி செய்ய முடியாத ஏழைகளுக்குக் கொடுப்பதே ஈகையாகும்; பிற கொடைகள் யாவும் பயன்எதிர்பார்த்துக் கொடுக்கும் தன்மையை உடையது என்கிறார். இதிலிருந்து ஈகை என்பது வறியவர்களுக்குப் பதில் உதவி எதிர்பாராது கொடுக்கும் சிறு உதவியே ஈகை எனக் கொள்ளலாம். வறியோர் பசி தீர்த்தலே ஒருவன் தான் செல்வத்தைச் சேர்த்து வைக்கும் இடமென்று சங்ககால மக்கள் எண்ணி வாழ்ந்து வந்துள்ளனர்.

    ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது
    ஊதியம் இல்லை உயிர்க்கு. (குறள்.231)

    வறியவர்க்கு ஈதல் வேண்டும். அதனால் புகழ் உண்டாக வாழவேண்டும். அப்புகழ் அல்லாமல் உயிர்க்கு ஊதியமானது வேறொன்றும் இல்லை என்று வள்ளுவர் எடுத்துரைக்கிறார்.

    ஈகைக் குணம் உடையவர், ஊரின் நடுவே பலரும் அணுகிப் பயன் பெற முடியும் மரம் போன்று பலருக்கும் பயன் தருபவர்; ஊர் நடுவே இருப்பதால் பெண்பனையைப் போன்றவர். ஈயாதவர் சுடுகாட்டில் உள்ள ஆண்பனையைப் போன்று பயன் தராதவர். மேலும் அணுக இயலாத இடம் என்று பனை மரங்களின் இயல்புகளை மக்களின் பண்புக்கு உவமையாக்கும் நயம் சிறப்பிற்குரியதாகும்.

    நடுவூருள் வேதிகை சுற்றுக் கோள் புக்க
    படுபனை யன்னர் பலர்நச்ச வாழ்வார்
    குடிகொழுத்தக் கண்ணுங் கொடுத்துண்ணா மாக்கள்
    இடுகாட்டுள் ஏற்றைப் பனை.            (நாலடி.96)

    முரசின் ஒலி ஒரு குறிப்பிட்ட தூர அளவுக்குக் கேட்க இயலும். இடியின் ஒலி இன்னும் அதிக தூரம் கேட்கும். சான்றோர் ஒருவர் யாசித்தவர்க்கு ஒன்றைக் கொடுத்தார் என்ற சொல் மூன்று உலகங்களிலும் கேட்கப்படும் சிறப்பை உடையது என்று ஈகையின் சிறப்பைச் சுவைபடச் சொல்கிறது நாலடியார்.

    கடிப்பிடு கண்முரசம் காதத்தோர் கேட்பர்
    இடித்து முழங்கியதோர் யோசனையோர் கேட்பர்
    அடுக்கிய மூவுலகுங் கேட்குமே சான்றோர்
    கொடுத்தார் எனப்படுஞ் சொல் (நாலடி.100)

    ஒரு சிறிய அரிசியின் அளவாவது – நாள்தோறும் உங்களால் இயன்ற அளவு பிறருக்குக் கொடுத்துப் பின் உண்ணுங்கள்! ஏனென்றால், ஆழமான கடல் சூழ்ந்த இவ்வுலகில் சமைத்தல் இல்லாத அடுப்பினையுடைய வறியவர்களை, முற்பிறப்பில் பிறருக்கு ஒன்றும் உதவாது இருந்தவர்கள் என்று சான்றோர் உரைப்பர் என்பதைக் கீழ்க்குறிப்பிட்ட நாலடியார் பாடல் விளக்குகிறது.

    இம்மி யரிசித் துணையானும் வைகலும்
    நும்மில் இயைவ கொடுத்துண்மின் – உம்மைக்
    கொடாஅ தவரென்பர் குண்டுநீர் வையத்து
    அடாஅ அடுப்பி னவர். (நாலடி.94)

    வறியவர்க்கு உணவளித்தல்

    பூவுலகில் தானத்திலே சிறந்த தானம் அன்னதானம்; அது மட்டும்தான் போதும் என்று சொல்லக் கூடியது மற்ற எது கொடுத்தாலும் போதும் என்று மனம் வராது அதனால்தான் அதை சிறந்த தானம் என்கிறோம். அன்னதானத்தை வள்ளுவரும் போற்றுகிறார். ஈகை என்ற  இருபத்தி மூன்றாம் அதிகாரம் பொதுவாக ஈகையைப் பற்றிச் சொன்னாலும் அதில் நான்கு குறட்பாக்கள் அன்னதானச்  சிறப்பையே எடுத்துரைக்கின்றன.

    ஆற்றுவார் ஆற்றல் பசிஆற்றல் அப்பசியை
    மாற்றுவார் ஆற்றலின் பின் (குறள்.225)

    தவ வலிமை உடையவரின் வலிமை பசியைப் பொறுத்துக் கொள்ளலாகும். அதுவும் அப்பசியை உணவுக் கொடுத்து மாற்றுகின்றவரின் ஆற்றலுக்குப் பிற்பட்டதாகும்.

    அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதுஒருவன்
    பெற்றான் பொருள்வைப் புழி. (குறள்.226)

    வறியவரின் கடும்பசியைத் தீர்க்கவேண்டும்; அதுவே பொருள்பெற்ற ஒருவன் அப்பொருளைத் தனக்குப் பிற்காலத்தில் உதவுமாறு சேர்த்து வைக்கும் இடமாகும்.

    பாத்தூண் மரீஇ யவனைப் பசிஎன்னும்
    தீப்பிணி தீண்டல் அரிது. (குறள்.227)

    தான்பெற்ற உணவைப் பலரோடும் பகுத்து உண்ணும் பழக்கம் உடையவனைப் பசி என்று கூறப்படும் தீயநோய் அணுகுதல் இல்லை.

    இரத்தலின் இன்னாது மன்ற நிரப்பிய
    தாமே தமியர் உணல். (குறள்.229)

    பொருளின் குறைபாட்டை நிரப்புவதற்காக உள்ளதைப் பிறர்க்கு ஈயாமல் தாமே தமியராய் உண்பது வறுமையால் இரப்பதைவிடத் துன்பமானது.

    தேடிய உணவைத் தாமே தனித்து உண்ணும் தன்மையானது, பிச்சையெடுத்தலை விடவும் தீயது. சங்க காலத்தில் ஒரு  சேரமன்னன், உதியன் சேரலாதன் என்பவன். மகாபாரதப் போரில் பங்குகொண்ட இருதரப்புப் படை வீரர்களுக்கும் உணவளித்ததாகச் சங்கச் செய்தி சொல்கிறது. (சங்க காலம், மகாபாரதப்  போர்க்காலத்தை ஒட்டிய  தொன்மை வாய்ந்தது என்று சில ஆராய்ச்சியாளர்கள் ஊகிக்கிறார்கள்.) அதனாலேயே அவன் ‘பெருஞ்சோற்று உதியன்  சேரலாதன்’ என வழங்கப்பட்டான் என்று நம்பப்படுகிறது.

    பெருஞ்சோறு படைத்த அவனது மாபெரும் அன்னதானம், இலக்கியப் புகழ் பெற்றுவிட்டது. வானவரம்பன் என்றும்  அவனுக்கு ஒரு பட்டம் உண்டு. வானவரம்பன் என்கிற வகையில் வானத்தையே எல்லையாகக் கொண்டு பேரரசாட்சி  கண்டவன் என்பது இந்தப் பட்டத்திற்கான பொருளாகும்.

    ஈதலின் தனிச்சிறப்பு

    ஈதலின் அவசியத்தை உணர்த்துகின்ற வகையில் ஐந்து குறள்கள் விளக்கம் தருகின்றன.

    நல்ஆறு எனினும் கொளல்தீது மேலுலகம்
    இல்எனினும் ஈதலே நன்று (குறள்.222)

    பிறரிடமிருந்து பொருள்பெற்றுக் கொள்ளுதல் நல்ல நெறி என்றாலும் கொள்ளல் தீமையானது. மேலுலகம் இல்லையென்றாலும் பிறர்க்குக் கொடுப்பதே நல்லது.

    இலன்என்னும் எவ்வம் உரையாமை ஈதல்
    குலன்உடையான் கண்ணே உள (குறள்.223)

    `யான் வறியவன்’ என்னும் துன்பச் சொல்லை ஒருவன் உரைப்பதற்கு முன் அவனுக்கு கொடுக்கும் தன்மை, நல்ல குடிப்பிறப்பு உடையவனிடம் உண்டு.

    இன்னாது இரக்கப் படுதல் இரந்தவர்
    இன்முகம் காணும் அளவு. (குறள்.224)

    பொருள் வேண்டும் என்று இரந்தவரின் மகிழ்ந்த முகத்தைக் காணும் வரைக்கும் (இரத்தலைப் போலவே) இரந்து கேட்கப்படுதலும் துன்பமானது.

    சாதலின் இன்னாது இல்லை இனிதுஅதூஉம்
    ஈதல் இயையாக் கடை. (குறள்.230)

    சாவதைவிடத் துன்பமானது வேறொன்றும் இல்லை. ஆனால் வறியவர்க்கு ஒரு பொருள் கொடுக்க முடியாத நிலை வந்தபோது அச் சாதலும் இனியதே ஆகும்.

    ஈத்துஉவக்கும் இன்பம் அறியார்கொல் தாம்உடைமை
    வைத்துஇழக்கும் வன்க ணவர்? (குறள்.228)

    தாம் சேர்த்துள்ள பொருளைப் பிறர்க்குக் கொடுக்காமல் வைத்திருந்து பின் இழந்துவிடும் வன்கண்மை உடையவர் பிறர்க்குக் கொடுத்து மகிழும் மகிழ்ச்சியை அறியாரோ? என்று ஈகையின் சிறப்பைக் குறள் மெய்ப்பிக்கின்றது.

    இல்லறவியலின் புகழ் அதிகாரத்திலும் ஈதல் அவசியத்தை உணர்த்திய வள்ளுவர் மூன்று குறள்களில் தனது மிகச் சிறப்பான பதிவினை இட்டுள்ளார். அத்தகைய குறளையும் விளக்கத்தையும் கீழே காணலாம்.

    உரைப்பார் உரைப்பவை எல்லாம் இரப்பார்க்குஒன்று
    ஈவார்மேல் நிற்கும் புகழ். (குறள்.232.)

    புகழ்ந்து சொல்கின்றவர் சொல்பவை எல்லாம் வறுமையால் இரப்பவர்க்கு ஒரு பொருள் கொடுத்து உதவுகின்றவரின் மேல் நிற்கின்ற புகழேயாகும்.

    ஒன்றா உலகத்து உயர்ந்த புகழல்லால்
    பொன்றாது நிற்பதுஒன்று இல்.  (குறள்.233)

    உயர்ந்த புகழ் அல்லாமல் உலகத்தில் ஒப்பற்ற ஒரு பொருளாக அழியாமல் நிலைநிற்க வல்லது வேறொன்றும் இல்லை.

    நிலவரை நீள்புகழ் ஆற்றின் புலவரைப்

    போற்றாது புத்தேள் உலகு. (குறள்.234.)

    நிலவுலகின் எல்லையில் நெடுங்காலம் நிற்கவல்ல புகழைச் செய்தால், வானுலகம் (அவ்வாறு புகழ்செய்தாரைப் போற்றுமே அல்லாமல்) தேவரைப் போற்றாது.

    ஈகைக்காகவே செல்வம் எனச் செல்வம் நியாயப்படுத்தப்படுகிறது. உபரி உணவும் சொத்தும் பொருளும் அறத்தோடு பிணைக்கப்பட்டு விட்டதால் குற்றமற்றதாகி விடுகின்றன.

    ஈதலும் துய்த்தலும் இல்லோர்க்கு இல் (குறுந்.63:1)

    என்றும் பொருளைத் தேடுவதே பிறருக்குக் கொடுக்கத்தான் என்னும் பொருளில்,

    பிறர்க்கு என முயலும் பேர் அருள் நெஞ்சமொடு
    காமர் பொருட் பிணி போகிய
    நாம் வெங் காதலர் சென்ற ஆறே. (நற்.186:8-10)

    என்றும் செவ்விலக்கியங்கள் அறத்தின் பேரால் ஈகையின் சிறப்பை விளக்குகின்றன.

    மனித குலத்தின் சிறப்புகளில் ஈகையும் ஒன்று. அது பிறர்படும் துன்பத்தைக் கண்டு இரங்கலும், அத்துன்பத்தைப் போக்க முயல்வதும் ஆகும். அந்த வகையில் எழுந்த செயலே ஈகையாக மலர்ந்துள்ளது. வாழ முடியாதவர்களையும், வாழத் தெரியாதவர்களையும், வாழ்வை இழந்தவர்களையும் ஏற்றுக் காப்பது சமுதாய நலத்தைக் காக்கும் நற்செயலாகும். எல்லோரும் ஈகையை மேற்கொள்ள வேண்டும். அவரவர் தங்கள் உழைப்பின் பலனில் ஒரு பகுதியை ஒதுக்கி வைத்து, மற்றவர்களுக்குக் கொடுத்து உதவ வேண்டும்.(தென்கச்சி கோ.சுவாமிநாதன், வானொலியில் இன்று ஒரு தகவல், பாகம் – 8, பக். 106-108) அவ்வாறு உதவும் போது மனமும் எளிதாகும், ஏற்பவரின் வாழ்வும் வளமாகும்.

    மேற்கண்ட செய்திகளால் ஈகை என்னும் வறியவர்க்கு உதவும் அரும்பெரும் பண்பு தொல்தமிழர்களிடையே அக்காலத்திலேயே இருந்தமை வியப்பிற்குரியதாக உள்ளது. இத்தகைய ஈகைப் பண்பால் அம்மக்களின் பழக்க வழக்கப் பண்பாட்டுச் சிறப்பு வெளிப்பட்டு நிற்பதை உணரமுடிகிறது. மேலும் இடைக்காலத்திலும் பிற்காலத்திலும் தமிழ்மன்னர்கள் வறியவர்க்கு உணவளிக்கும் அன்னசாலைகளை நிறுவி பசியாற்றிய செய்திகள் காணக்கிடைக்கின்றன. தற்காலத்திலும் கிராமங்களில் கோயில் திருவிழா, சல்லிக்கட்டு, விளையாட்டுப்போட்டி போன்ற பொதுநிகழ்ச்சிக்கு வருகின்ற யாவர்க்கும் உணவு அளித்து இன்புறுவதைக் காணமுடியும். எனவே நாமும் வறியவர்க்கு உதவி நற்பேறுகளைப் பெறுவோம்.

    கருவிநூற்கள்

    1. திருக்குறள், மணக்குடவர் உரை, கோ. வடிவேலுசெட்டியார் பதிப்பு 1925
    2. திருக்குறள், பரிமேலழகர் உரை, ஏ.ரங்கசாமிமுதலியார் & சன்ஸ் பதிப்பு, மதராஸ் 1931
    3. திருக்குறளுக்கு மிக எளிய உரை, சாமி சிதம்பரனார் உரை, திருவள்ளுவர் வரைகலையகம், சென்னை 2001
    4. திருக்குறள், வ.உ.சிதம்பரனார் உரை, இரா.குமரவேலன் பதிப்பு, பாரிநிலையம் சென்னை 2008
    5. தமிழ்ச் செவ்வியல் நூல்கள் மூலம் முழுவதும், சுப்பிரமணியன்.ச.வே.(ப.ஆ.), மணிவாசகர் பதிப்பகம், பாரிமுனை சென்னை. 2008

    *****
    கட்டுரையாளர் – முதுநிலை ஆய்வு வல்லுநர்
    செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்
    தரமணி, சென்னை – 113

     

    Share