Tag: முனைவர் ஹெப்சி ரோஸ் மேரி. அ

  • மலையாளம் தமிழ் அகராதி

         தமிழோடு நெருங்கிய தொடர்பு கொண்ட திராவிட மொழிகளில் ஒன்றே மலையாளம்.  இன்று இலக்கியச் செல்வங்களுடன் புதுப் பொலிவு பெற்றுத் திகழும் மலையாள மொழி பண்டைய தமிழ் நாட்டின் மேற்குப் பகுதியான சேர நாட்டில் பேசப்பட்டு வருகிறது.  இதற்குப் பதிற்றுப்பத்து, சிலப்பதிகாரம் போன்ற நூற்களே சான்றாகும்.  மலையாள மொழியின் தொடக்க காலத்தில் தோன்றிய இலக்கியங்களிலும் தமிழின் ஆதிக்கமே மிகுந்துள்ளது.  இம்மொழி தனித்தனியாகப் பிரிந்தாலும் இன்றும் அம்மொழி பேசுவோர் இலக்கணமோ அகராதியோ இன்றி தமிழர் மலையாளத்தையும் மலையாளி தமிழையும் புரிந்துகொள்ளத்தான் செய்கின்றனர்.   இருப்பினும் மொழியின் உள்ளமைப்பில் ஏற்படுகின்ற மாற்றங்களும் பிறதொடர்புகளும் வேறுபடுவதால் செப்பமாக மொழியைப்பயில்வதற்கு இலக்கண நூல்களும் அகராதிகளும் ஏழவேண்டிய தேவை எழுகிறது.  இத்தேவையை நிறைவு செய்யும் வகையில் கேரளப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை மலையாளம் தமிழ் அகராதி ஒன்றை உருவாக்கி 2016 – ஆம் ஆண்டில் வெளியிட்டது.

          மலையாளம் தமிழ் அகராதி உருவாக்கத்திற்கு வித்திட்டவர்கள் இத்துறையின் மேனாள் பேராசிரியர் பெருமக்களாவார்.  அவர்கள் இத்துறையில் பணியாற்றிய காலத்தில் ஆய்வு மாணவர்களைக்கொண்டு சங்க இலக்கியம் முதல் தற்கால இலக்கியம் வரையிலான அனைத்து இலக்கியதங்களுக்கும் சொல்லடைவு உருவாக்கி அகராதி தொகுப்பிற்கு வித்திட்டனர்.  அவர்களுள் குறிப்பிடத்தக்கவர் பேரா. மா . இளையபெருமாள் ஆவார்.  அவர் மலையாள இலக்கண நூல்களைத் தமிழுக்கும்  தமிழ் இலக்கண நூல்களை மலையாளத்திற்கும் மொழிபெயர்த்துள்ளார். மேலும் அவர் மலையாளம் –  தமிழ் , தமிழ் – மலையாளம் அகராதியையும் தயாரித்து வைத்திருந்தார். அது அச்சில் வராமல் போனது. அவரைத் தொடந்து தற்போது பணியாற்றும் பேரா. ப. . ஜெயகிருஷ்ணன் அவர்களின் தலைமையில் நான் உள்ளிட்ட துறையின் பேராசிரியர்கள், ஆய்வாளர்கள் போன்றொரின்  அரிய முயற்சியால் உருவானதே இவ்வகராதி. இதனை கேரளப் பல்கலைக்கழகப் பதிப்புத்துறை வெளியிட்டுள்ளது.

    அகராதி அமைப்பு

          மலையாளம் – தமிழ் அகராதி வரலாற்றில் இது முதன்மையானது.  மலையாளம் தலைச்சொல்லாக அமைகிறது.  தொடர்ந்து அச்சொல்லுக்காண இலக்கண விளக்கம் , ஆங்கில ஒலிபெயர்ப்பு , தமிழ் விளக்கம் என்ற அமைப்பில் இவ்வகராதி அமைந்துள்ளது. தலைச்சொல் மலையாள சொல்லாக இருப்பதால் மலையாளம் அறியாத அனைவரும் எளிதில் வாசிக்கும் வகையில் ஆங்கில் ஒலிபெயர்ப்பு ( Translitration)  கொடுக்கப்பட்டுள்ளது. பின்வரும் நிலையில் இவ்வகராதி அமைந்துள்ளது.

    இவ்வகராதிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைச்சொற்கள் தற்கால மொழிப்பயன்பாட்டிற்கு ஏற்ற முறையிலான இருபதாயிரம் மலையாளச் சொற்கள் தேர்வுசெய்யப்பட்டன. இச்சொற்கள் சப்ததாராவலியில் இருந்தும், மலையளப்பேரகராதியில் இருந்தும் மலையாளச் சொல்தரவகத்திலிருந்தும் எடுக்கப்பட்டவையாகும்.

    இருமொழி அகராதி உருவாக்கச் சிக்கல்களும் தீர்வுகளும்

         ஒருமொழி அகராதி உருவாக்குவதை விட பணிச்சுமையும் குழப்பங்களும் கொண்டதே இருமொழி அகராதி உருவாக்கம்.  இருமொழி அகராதியின் தலையாய நோக்கம் ஒருமொழியிலுள்ள சொற்களைப் பிரிதொரு மொழிச்சொல்லோடு ஒப்புமைப்படுத்திக்க காட்டுவதாகும்.தமிழும் மலையாளமும் ஒரு மொழிக்குடும்பத்தைச் சார்ந்த மொழிகள் என்றாலும் அம்மொழிகள் பேசுவோர் இருவேறு சமூகத்தைச் சார்ந்தவர் ஆவர்.  அவர்களின் பழக்கவழக்கங்கள், பண்பாடுகள், மொழிக்கூறுகள், போன்றவை பல நேரங்களில் சிக்கல்களைத் தோற்றுவிக்கின்றன.    உலகமொழிகள் அனைத்திலும் அவ்வவ் மொழிக்குரிய தனித்தன்மைகள் காணப்படத்தான் செய்கின்றன.  பிஞ்சு, காய் போன்ற சொற்கள் ஆங்கிலத்தில் இல்லாதது போல கணினி, பேருந்து போன்ற சொற்கள் மலையாளத்தில் இல்லை. எனினும் மலையாலத்திற்கே உரிய  தனிப்பட்ட சொற்கள் அம்மொழியில் காணப்படத்தான் செய்கின்றன.  சான்றாக,

         மாப்பு சாக்ஷி – என்ற சொல்லிற்கு இணையான  தமிழ் சொல் இல்லை. அதற்கு அகராதியில் ஒரு தொடராகத்தான் விளக்கம் கொடுக்க முடிந்தது. அதாவது ”குற்றங்களைச் செய்து விட்டு கூட இருப்பவரைக் காட்டிக்கொடுத்து சாட்சி கூறுபவன்”. எனபொருள் விளக்கம் கொடுக்கப்பட்டது.

         கேரளப் பண்பாட்டோடு தொடர்புடைய சில பண்பாட்டுச் சொற்களுக்கு விளக்கம் தரும்போதும் சிக்கல்கள் ஏற்பட்டது.  சான்றாக,

    கை நீட்டம் – என்ற சொல்லுக்கு இணையான தமிழ்ச்சொல் இல்லை. அதற்கு “ விசுப்பண்டிகையின் போது கொடுக்கப்படும் பரிசுப்பொருள் ‘ என் விரிவான முறையில் விளக்கம் கொடுக்கப்பட்டது.

    அஞ்சாம்புரை – நம்பூதிரிப் பெண்ணை விசாரணைக்காக வைக்கப்படும் அறை

    படிப்புர-  வெளிப்புறக் கதவுள்ள வீடு.  இச்சொற்கள் கேரளப் பண்பாட்டோடு தொடர்புடைய சொற்களாகும்.

         மலையாளம் தமிழ் அகராதி உருவாக்கத்தின்போது தமிழ் மலையாள ஒலியொற்றுமையுடைய சொற்களுக்கு பொருள் எழுதும்போதும் சிக்கல்கள் தோன்றின.

    கழி- மலையாளத்தில் சாப்பிடுதல் என்னும் பொருளில் வரும். தமிழில் வெளியேற்றுதல், மலம் கழித்தல் என்னும் பொருளில் வரும். அதேபோன்று  அவசரம்- என்ற சொல் மலையாளத்தில் சந்தர்ப்பம் வாய்ப்பு என்ற பொருளில் வருகிறது. தமிழில் சீக்கிரம் என்ற பொருளில் வருவதைக்காணலாம்.

    ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்

    சான்றோன் எனக்கேட்ட தாய்  – என்ற குறளுக்கேற்ப

         மலையாளம் தமிழ் அகராதி உருவாக்கத்தின் போது பல்வேறு சிக்கல்கள் தோன்றினும் இன்று இருமொழியாளர்களுக்கும் பயன்படும் விதத்தில் அமைந்திருப்பது மகிழ்ச்சியே.

    ஆசிரியர்:-

    முனைவர் ஹெப்சி ரோஸ் மேரி. அ

    உதவிப்பேராசிரியர், கேரளப் பல்கலைக்கழகம்

    Share
  • பாணப்பாட்டும் பண்பாட்டு மரபுகளும்

    -முனைவர். ஹெப்சி ரோஸ் மேரி. அ

    ’பாணப்பாட்டு’ என்பது பாணர் இன மக்கள் பாடும் பாட்டாகும். இதனைத் துயிலுணர்த்துப்பாட்டு, பாணர்பாட்டு என்றெல்லாம் அழைப்பர்.  பாணரினமக்கள் பல தலைமுறைகளாக இப்பாடலைப் பாடிவருகின்றனர்.  கால மாற்றத்திற்கேற்ப இப்பாடலில் பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. இக்கட்டுரை மலையாளத்திலுள்ள பாணப்பாட்டை அறிமுகம் செய்து அதன்வாயிலாக அறியலாகும் தமிழர் பண்பாட்டு மரபுகளை எடுத்துரைக்க முயல்கிறது.

    பாணர்களின் தோற்றம்

    பாணர்களின் தோற்றம் பற்றிய பலகதைகள் மலையாள நாட்டுப்புறப் பாடல்கள்களில் நிலவுகின்றன. கணிதசாஸ்திரத்தில் பண்டிதனாக விளங்கியவர் வரருசி. இவர் பறையர் இனத்தைச் சார்ந்த பெண்மணியைக் காதலித்துத்  திருமணம் செய்தார்.  இவர்கள் ஜோதிடத்தையும் கணிதத்தையும்  நாடெங்கும் சுற்றித்திரிந்து பரப்பினர்.  பிராயாணம் செய்யும்போது பல இடங்களில் வைத்தும் பதினோரு பிள்ளைகளைப் பெற்றார்.  ஒவ்வொரு குழந்தையும் பிறக்கும்போதும் ‘வாய் இருக்கிறதா’ என்று கேட்பார். இருக்கிறது என்று சொன்னால் அக்குழந்தையை அங்கேயே விட்டுவிட்டு சென்றனர். பன்னிரெண்டாவது குழந்தை பிறந்ததும் அதன் தாய் அக்குழந்தைக்கு வாய் இல்லை என்று கூறினார். எனினும் பலன் இல்லை. அதனையும் அங்கேயே விட்டுவிட்டுச் சென்றனர்.  வரருசி விட்டுச் சென்ற பன்னிரெண்டு பிள்ளைகள் யாரெல்லாம் என்று கேரள இலக்கிய வரலாற்றில் உள்ளூர் குறிப்பிடுகிறார்.

    மேழத்தோளக்னி கோத்திரி ரஜகனுளியனூர்த்தச்சனும் பின்னே வள்ளோன்
    வாயில்லாகுந் நிலப்பன் வடுதலமருவும் நாயர் காரய்க்கல் மாதா
    செம்மே கேளூப்புகுற்றன், செறிய திருவரங்கத்தெழும் பாணனாரும்
    நேரே நாராயண பத்திரனு முடநகவூர் சாத்தனும் பாக்குனாரும்
    இதில் வரும் திருவரங்கத்தெழும் பாணனார் என்பது சுருங்கி காலப்போக்கில் திருவரங்கன் என்றானது.  இக்கதைப் பாணர்களின் தோற்றத்தைக் குறிப்பிடுகிறது.  இக்கதையினையே பாணர்கள் துயிலெழுத்துப்பாடலில் பாடி வருகின்றனர்.

    தொல்காப்பியத்தில் பாணர்

    தொல்காப்பியத்தில் பாணர் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன.  தொல்காப்பியம் பொருளதிகாரத்தில், நிலம்பெயர்ந்து உரைத்தலும் அவள் நிலை உரைத்தல் கூத்தர்க்கும் பாணர்க்கும் யாத்தவை உரிய தொல். பொரு:167. தலைவியைவிட்டுத் தலைவர் பிரிந்துசென்ற இடத்தில் சென்று தலைவியின் நிலையைக் கூறும் மரபு கூத்தருக்கும் பாணர்க்கும் உரிய மரபாகும்.  தலைவன் தலைவியரின் அந்தரங்க இரகசியங்களையும் பாணர்கள் அறிந்திருந்தனர் என்பதை இச்சூத்திரம் தெளிவுபடுத்துகிறது.  மேலும்

    ”தோழி தாயே பார்ப்பான் பாகன்
    பாணன் பாட்டி இளையர் விருந்தினர்
    கூத்தர் விறலியர் அறிவர் கண்டோர்
    யாத்த சிறப்பின் வாயில்கள் என்ப” – (தொல் பொரு.194)

    என்று தொல்காப்பியம், பொருளதிகாரம் கூறுகிறது.  இச்சூத்திரத்தில் மிக முக்கியமான செய்திப் பரிமாற்றத்திற்குரிய வாயில்களுள் பாணரும் பாட்டியும் குறிப்பிடத்தக்கவர்களாவர்.  இங்கு பாணன் என்ற சொல் ஆடவரையும் பாட்டி என்ற சொல் பாணர்குலப் பெண்களையும் குறிக்கிறது.  தொல்காப்பியர் கூறும் பாட்டி என்ற சொல் சங்ககாலத்தில் பாடினி என்று வழங்கப்பட்டது.  ’பாட்டி’ என்ற சொல்லுக்குத் திவாகர நிகண்டு பாணர் இனப் பெண்டிரைக் குறிப்பதாகக் கூறுகிறது.  சங்ககாலத்தில் இப்பாணர்கள் யாழ் இசைத்துப் பாடினர். அவ்யாழ் சீறியாழ், பேரியாழ் என இரண்டுவகைப்பட்டதென்று ஆற்றுப்படை நூல்கள் வாயிலாக அறியலாம்.  மேலும் பெரும்பாணாற்றுப்படையும் சிறுபாணாற்றுப்படையும் பாணர்களின் வாழ்க்கையைப் பிரதிபலிக்கிறது.  யாழ்ப்பாணர், இசைப்பாணர், மண்டைப்பாணர் என்ற மூன்று வகைப்பட்ட பாணர்களைப் பெரும்பாணாற்றுப்படை குறிப்பிடுகிறது.  இவர்களுள் இசைப்பாணர்களை உயர்ந்தவர்களாகக் கருதுகின்றனர். இவர்கள் போர்க்களத்திற்குச் சென்று பெரும் வீரர்கள் போர்செய்யும் முறையைக் கண்டு அவர்களைப் பற்றிப்பாடும் உரிமையைப் பெற்றிருந்தனர்.  மண்டைப்பாணர்கள் தாழ்ந்தவர்களாகக் கருதப்பட்டனர். காரணம் இவர்களுக்குக் குறிப்பிடத்தக்க தொழில்கள் இல்லாமல் ஊர் ஊராக அலைந்து திரிந்து மன்னர்களையும் நிலக்கிழார்களையும் புகழ்ந்து பாடல்கள்பாடிப் பரிசில்பெற்று வாழ்க்கை நடத்தினர். இவர்கள் பழுமரம் தேரும் பறவை போலத் தங்கள் உணவிற்காகப் பல்வேறு இடங்களிலுள்ள மன்னர்களை நாடிச்சென்றனர் என்பதை,

    பழுமரம் தேரும் பறவை போல
    கல்லென் சுற்றமொடு கால் கிளர்ந்து திரிதரும்
    புல்லென யாக்கைப் புலவுவாய் பாண
    (பெரும்பாணாற்றுப்படை)

    என்ற பெரும்பாணாற்றுப்படைப் பாடல்களால் அறிகிறோம். இவர்கள் மன்னர்களை நாடிச்சென்றதற்குக் கேரள நாட்டுப்புறக் கதைப்பாடல்களில்  பல  கதைகள் வழங்குவதைக் காணலாம்.

    கைலாயமலையில் சிவனும் பார்வதியும் சூதாடினர். அப்பொழுது சிவபெருமான் தோற்கவே அதைக் கண்டுகொண்டிருந்த பாணன் மாதரிடம் தோற்றுவிட்டாய் என்று சிவபெருமானைக் கேலி செய்கிறான். கோபம் கொண்ட சிவபெருமான் சூதை எடுத்து தரையில் வீசினார்.  பூமியில் வந்த பாணன் சிவபெருமானைச் சபித்தான். உடனே சிவபெருமானும்   நோய்வாய்ப்பட்டார். அவருடைய நோயைப் போக்குவதற்கு ஆயிரம் கன்னிகைகள் குரவையிட்டனர், ஆயிரம் பேர் பள்ளிச் சங்கு ஊதினர். அப்படி இருந்தும் சிவபெருமான் எழவில்லை. இறுதியில் வேலனிடம் சிவபெருமானின் நோய்க்கான காரணத்தை வினவ பாணன் இட்ட சாபமே அதனைப் பாணன்தான் போக்கவேண்டும் என்றான். பாணன் சிவபெருமானின் திருச்சன்னிதியில் நின்று அவரைப் புகழ்ந்து பாடவே சிவபெருமான் சாபம் நீங்கித் துயிலுணர்ந்தார். உடனே சிவபெருமான் உனக்கு என்ன வேண்டும் என்று கேட்கவே ஏதாவது ஒருவரம் தந்தால் போதும் என்று பாணனும் கூறுகிறான் அதற்குச் சிவபெருமான்,

    ஏதும் ஒந்நுமே இல்லாத்தானு
    ஏழு வீடே துயிலுணரு ஞான் தோற்றிட்டுண்டிதேடா
    மலநாட்டிலே மகாஜனங்ஙளே என்னயெந்நே நினப்பவரு
    விளக்குடனே கொளுத்துமடா
    அறியாத்த பாபிகளு படியடச்சு விலக்குமெடா
    விலக்கும் வீட்டில் மறந்நிட்டுமே என்றே நாமமே ஸ்துதிக்கருது
    ஈ வரமே தன்னிதேடா நினக்கும் நின்றே சந்ததிக்கும். –  (பாணன்மார் பாட்டு – 53-59) என்று வரம் கொடுக்கிறார்.

    சிவபெருமான் கொடுத்த வரங்கள் பற்றி மேலும் பல கதைகள் வழங்குவதைக் காணலாம்.  என்ன வரம் என்று கேட்டதற்கு ஒரு யானையைக் கொடுத்தார்.  யானையை வளர்க்கத்தெரியாத பாணன் சிவபெருமானிடம் அதனைத் திரும்பக் கொடுக்கவே அவர் அவன் உழுது பிழைப்பதற்காக இரண்டு எருமைகளைக் கொடுக்கிறான். அவ்வெருமைகளைக் கலப்பையின் இரு துருவங்களிலும் கட்டிஉழத் துவங்குகிறான். இரண்டும் எதிர்திசையைப் பார்த்து செல்லவே அவ்வெருமைகளையும் சிவபெருமானிடம் திரும்பக் கொடுக்கிறான். உடனே சிவபெருமான்’ ’ஒந்நுமில்லாத்தான் ஏழு வீட்டில் போய் பாடி வாழ்க’ என்று வரம் கொடுப்பதாகக் கூறுகின்றனர்.

    இன்றும் கேரளத்தில் வாழும் பாணர்களின் தொழில் வீடுவீடாகச் சென்று பாடிப் பொருள்கள் பெறுவதாகும்.  இவர்கள் பாடும் பாட்டினைத் துயிலுணர்த்துப்பாட்டு என்று அழைப்பர்.  பாணனும் பாட்டியும் அதிகாலைப் பொழுதில் துடி, கிண்ணம், கைமணி முதலிய இசைக்கருவிகளை இசைத்த வண்ணம் ஒவ்வொரு வீடாகச் சென்று வீட்டின் வெளியில் நின்று முதலில் துடி முழக்கி கனைத்துக் காட்டுவர்.  வீட்டார் பாணன் வரவை அறிந்து முற்றத்தில் விளக்கேற்றி அலங்கரித்துப் பாணரை அழைப்பர்.  பாணன் முற்றத்தில் அமர்ந்து சிவபெருமான் தங்களை இத்தொழில் செய்வதற்கு வரம் கொடுத்த கதையான திருவரங்கன் கதையைப் பாடுவர்.  பின்னர் வீட்டாரின் விருப்பத்திற்கேற்ப ஹரிச்சந்திர சரிதம், கிருஷ்ண லீலை முதலிய சில கதைப் பாடல்களையும் பாடும் மரபு உண்டு.  பொதுவாக இவர்கள் கர்க்கடக மாதம் அதாவது ஆடி மாதத்தில்தான் பாடச் செல்வர்.  பாணர்கள் பாடியதற்காக அரிசி, தேங்காய், எண்ணெய் முதலிய பொருட்களை வழங்குவர். வடக்கன் பாட்டிலும் பாணர்கள் பல பகுதிகளில் அலைந்து திரிந்து பாடிப் பரிசில் பெறுகின்ற தன்மையைக் காணமுடிகிறது.

    பாணப்பாட்டில் பண்பாட்டு மரபுகள்

    சமூக அமைப்பு ஒரு காலத்திலிருந்து மற்றொரு காலத்திற்கு மாறிவரும் தன்மையுடையது.  பண்பாட்டு வரலாற்றில் ஓர் இனத்தாருடைய பழக்கவழக்கங்களும் எண்ணங்களும் மாறிவருவதைக் காணலாம்.  ஒரு சமூகத்தின் பழமையான பழக்கவழக்கங்களை நாம் நாட்டுப்புறவியல் வழியாக அறிந்துகொள்ள முடியும்.  ஒவ்வொரு பிரிவினரிடையேயும் வெவ்வேறு பழக்கவழக்கங்கள் நிலவி வந்துள்ளன. இப்பாணப்பாட்டு வழியாகப் பாணர் சமூகத்தின் பண்பாடுகளை அறிந்துகொள்ள முடிகிறது.

    பாணர்கள் தங்களுக்கென்று ஒரு தொழில் அறியாதவர்கள் என்றும் இவர்கள் வீடுவீடாகச் சென்று சிவபெருமானின்  பெருமைகளைப் பாடிக் கிடைக்கும் பரிசில்களை வைத்தே வாழ்ந்தனர் என்பதையும் பாணப்பாட்டு மூலம் அறிந்து கொள்ள முடிகிறது. இவர்கள் பாடிப் பொருள் பெறுதல் மட்டுமன்றி இவர்களுள் சிலர் யானைக்கு நெற்றிப்பட்டம் கட்டுதல், முத்துக்குடை தைத்தல், கோவிலுக்குத் தேவையான ஓலையாலாகிய பொருட்களைப் பின்னுதல் முதலிய வேலைகளில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் ஊர் ஊராகச் சுற்றித்திரிந்து வருகின்ற காட்சியை,

    ’நந்நு நந்நே திருவரங்கா
    இத்தற நாளுமே போகருதே’ (பா.பா 106-107)

    என்று கூறுவதில் இருந்து ஒரு இடத்தில் தரித்து நிற்காமல் சுற்றித்திரியும் தன்மையுடையவன் என்றும் அவனைப் போகாமல் இருப்பதற்காக வேண்டுவதாகவும் இவ்வரிகள் அமைகின்றன.

    ஒருவர் நோய்வாய்பட்டால் முதலில் இறைவனுக்கு வழிபாடு செய்தனர். என்பதைப் இப்பாணப்பாட்டு வாயிலாக அறிகிறோம். சிவபெருமான் நோய்வாய்பட்டபோது ஆயிரம் கன்னிகைகள் தாலப்பொலி எடுத்தனர், ஆயிரம் பேர் சங்கு ஊதினர், வேலனை அழைத்து இதற்கான காரணத்தை அறிந்தனர். இதனை,

    ஆயிரமே பிராமணரு ஆனவர்ஷமே நமஸ்காரம்
    ஆயிரமே கன்னிகளு கைவிளக்கே தாலப்பொலி
    ஆயிரமே மங்கமாரு மாடித்தற்றோ வாய்க்கரவ
    ஆயிரமே சங்குகாரு பள்ளிசங்குணர்த்து ந்நவரு – (பா.பா 28-31)

    என்ற வரிகள் உணர்த்துகின்றன. இது சங்ககாலம் முதல் தமிழகத்தில் நிலவிய பாணர் பண்பாட்டினை விவரிக்கிறது.  பாணர்கள் துயிலுணர்த்தி  இறைவன் புகழ் பாடியதற்கு,

    ஒரு நெல்லுமே அன்னம் வேண்டா
    ஒருழக்குப் பாலும் வேண்டா’   ( பா.பா 75.76) என்ற வரிகளில் இருந்து அன்னமும் பாலும் பரிசிலாக வழங்கினர் என்பதையும் பாலை உழக்கால் அளந்தனர் என்பதையும் அறிகிறோம். மட்டுமல்லாமல் ஆணும் பெண்ணும் சூதாடும் வழக்கம் அக்காலத்தில் இருந்ததை’ பொன்னினெந்த சூதெடுத்து பகவானும் திரிச்சு வச்சு’ என்ற வரிகள் வாயிலாக உணர்கிறோம்.

    மாலைப் பொழுதில் கிருட்டினனின் பெருமைகளைப் பஜனையாகப் பாடும் வழக்கம் இருந்தது. இன்றும் கேரளப் பாணரிடையே இம்மரபு நின்று நிலைக்கின்றன.

    வச்சுண்ணான் கொச்சுருளி
    இட்டுண்ணான் இலத்தளிக
    கண்கான்மானணி விளக்கு
    நீர்குடிப்பான் வெள்ளிக்கிண்டி
    வெயில் தாங்கும் குடையெடுத்து ( பா.பா 220 -223) என்ற வரியில் இருந்து பாணர்கள் உருளியில் உணவெடுத்து, தளிர் இலையில் உணவுண்டு, வெள்ளிக்கிண்டியில் நீர்பருகி, வெயிலிற்கும் குடைபிடித்து வந்தனர் என்பதை இவ்வரிகள் உணர்த்துகின்றன. இறைவனுக்குக் கிழக்குப் பார்த்தே விளக்கு ஏற்றினர். இது இன்றும் தமிழரிடையே காணப்படும் ஒரு பண்பாடாகும்.

    ஹரிச்சந்திரபுராணத்தில் இறப்புச்சடங்கு நிகழ்த்தும் முறை காணப்படுகிறது.  பாலுள்ள விறகை அருகில் அடுக்கி நெய்யுள்ள விறகை நெஞ்சில் அடுக்கியே ஈமக்கடனைச் செய்தனர்.

    பாணப்பாட்டைப் பார்க்கும்போது பண்டைய சங்ககாலத்திய தமிழர் மரபுகள் இவர்களது பாடலில்  இலைமறை காயாகப் பதிவாகியுள்ளதைக் காணலாம். பாணர் மரபையும் அவர்களது வாழ்வியலையும் இப்பாணப்பாட்டு எடுத்துரைக்கிறது.  காலமாற்றத்திற்கேற்ப நிகழ்ந்த பண்பாட்டு மாற்றத்தையும் இது எடுத்துரைக்கத் தவறவில்லை. கேரளீயருக்கே ஆன சில பண்பாடுகளும் பாணப்பாட்டில் பதிவாகியுள்ளன.

    *****

    துணை நூல் பட்டியல்

    1. ஆனந்தகுமார் .பா இலக்கியமும் பண்பாட்டு மரபுகளும்,  நியூ        செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை, 2005.
    2. இராமநாதன். ஆறு நாட்டுப்புறப் பாடல் களஞ்சியம், மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம், 2002.
    3. குளோரி. தா நாட்டுப்புறப் பாடல்களில் இடம்பெறும் பழக்கவழக்கங்களும் நம்பிக்கைகளும், காவ்யா, சென்னை, 2008
    4. பார்கவன் பிள்ளை. ஜி கேரளத்திலே பாணன்மார் பாட்டுகள்,   நேஷணல் புக் ஹவுஸ், கோட்டயம்,2009.
    5. பார்கவன் பிள்ளை. ஜி கேரளத்திலே நாடோடிப் பாட்டுகள், சாகித்திய வேதி, திருவல்லா.

    *****

    கட்டுரையாளர் – உதவிப்பேராசிரியர்,
    கேரளப் பல்கலைக்கழகம்.

     

    Share
  • நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திச் சங்க இலக்கியம் கற்பித்தல்

    -முனைவர். ஹெப்சி ரோஸ் மேரி. அ

    நவீன உலகில் மனித வாழ்வோடு பின்னிப் பிணைந்து உறவாடிக்கொண்டிருக்கும் கருவியாகத்  தொழில்நுட்பம் செயல்படுகிறது. இதற்கு மிகச் சிறந்த சான்றாக விளங்குவது மனிதனின் ஆறாம் விரலாகக் கருதப்படும் தொலைபேசி. தொழில்நுட்பங்கள்  நுழையாத இடமே இல்லை என்று கூறும் அளவிற்குத் தொழில்நுட்ப சாதனங்கள் எல்லாத் துறையையும் ஆக்கிரமித்துக் கொண்டன.  இத்தகைய தொழில்நுட்பங்களும் தொழில்நுட்ப சாதனங்களின் பெருக்கமும் ஒருபுறமிருந்தாலும் அவ்வளர்ச்சியில் பங்குபெறாத, கண்ணேறிட்டுப் பார்க்காத சமூகமும் நம்மைச் சுற்றி காணப்படத்தான் செய்கின்றது.  தொழில்நுட்பங்கள் பெருகிவரும் இன்றைய சூழலில் கல்வித்துறையும் இத்தொழில்நுட்பங்களுடன் இணைந்து பல எட்டாக்கனிகளைத் தனதாக்கியுள்ளன. மொழிதவிர்த்த ஏனைய கல்வித்துறையில் தொழில்நுட்பங்கள் வேரூன்றிக் காய்காய்த்துக் கனியத் தொடங்கிய நிலையில் தமிழ்மொழியும் இதில் பின்தங்கிய நிலையிலேயே காணப்படுகிறது. பழம்பெருமைகளைப் பறைசாற்றிக் கொண்டிருக்கும் நாம் அப்பழமையான இலக்கியங்களைப் பழமையான கல்விமுறையிலேயே கற்றும் கற்பித்தும் வருகின்றோம். பழமையான இலக்கியங்களை நவீனத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்திக் கற்பிக்க வேண்டிய தூரம் வெகுதூரம் என்பது கசப்பான உண்மையாகும்.  இக்கட்டுரை சங்க இலக்கியத்தை நவீனத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி எவ்வாறு கற்பிக்கலாம் என்பதை எடுத்தியம்புகிறது.

    மரபுசார்ந்த  கல்வி முறைகள்

    கல்வி முறைகளில் சிறந்திருந்த ஆதிமனிதன் குருகுலக் கல்வி முறையை மேற்கொண்டான்.  மன்றங்களில் தொடங்கிய கல்வி முறையில் சாதியம் புகுந்து கோயில்களில் வைத்துக் கல்வி கற்பிக்கப்பட்டது.  எல்லாருக்குமாக இருந்த கல்வி ஒரு குறிப்பிட்ட வகுப்பினருக்கு எனச் சுருங்கியது.  பின்னர் ஆங்கிலேயர் ஆட்சிகாலத்தில் இது ஒழிக்கப்பட்டு எல்லாரும் கல்வி கற்கும் முறை உருவானது.  நன்னூல் கூறும் கல்வி முறையைப் பார்க்கும்போது( நன் 40, 41 )  சோழர் காலத்துக் கல்வி முறை இதில் பதிவாகியுள்ளது என்பது உறுதி.  அதாவது, வினாவை எழுப்பி அதற்கு பதில்கூறும் ஒருவகைக் கல்வி முறையே இருந்தது.  சான்றாக  மு.வை அரவிந்தன் உரையாசிரியர்கள் என்னும் தம் நூலில் ( 1996:6,7) மேற்கோளாகக் காட்டும் உரைப்பகுதி இதற்குத் தக்க சான்றாக அமையும். “கட்டுவிச்சியை வினவ, அவள் அறியாதவள் போல இக்கருமம் முடித்தற் பொருட்டு இவ்வகை சொன்னாள். என்னை? வரைவு பொருட்டுத் தலைமகன்போக அவன் வரைவு நீட்டித்தலான் இவளது ஆற்றாமையான் உண்டாகிய நோயை முருகனால் வந்தது என்று வினவலாமோ? இஃது அங்ஙனம் ஆயின் குறி என்பது பொய்யேயாம் என்பது கடா. அதற்கு விடை : குறியும் பொய்யன்று இவளும் பொய் கூறினாள் அல்லள்”  என்னும் திருக்கோவையார் பேராசிரியர் உரையைப் பார்க்கும்போது கேள்வி கேட்டு விடையளிக்கும் கல்வி முறையே அன்றைய சமூகத்தில் இருந்தது எனத் தெரிகின்றது.

    மேலும் நன்னூலில் இடம்பெரும் “செவி வாயாக நெஞ்சு களனாக” பாயிரம் 49 என்னும் தொடர், காதால் கேட்டு மனத்தில் நிறுத்தும் முறையை உணர்த்துகிறது. அதாவது மனப்பாடம் செய்யும் முறை வழக்கில் இருந்தது என்பதைத் தெளிவுபடுத்துகிறது.  இம்மரபு பத்தொன்பதாம் நூற்றாண்டு வரை நீடித்திருந்ததையும் இதற்கான காரணத்தையும் சீனி வேங்கடசாமி பின்வருமாறு விளக்குகிறார். “கணக்காயரிடம் பொருள்அறியாது மனப்பாடம் செய்த மாணவர்கள் பிறகு தகுந்த புலவரிடம் சென்று அவர்களிடம் தாம் மனப்பாடம் செய்த நூல்களுக்கு உரை கேட்பர்.  அச்சுப் புத்தகம் இல்லாத காலத்தில் ஏட்டுச் சுவடிகளும் கிடைப்பது அருமையாக இருந்த காலத்தில்  இம்முறை ஏற்றதாக இருந்தது. மாணவர்கள்  உருப்போட்டு ஆத்திசூடி, கொன்றை வேந்தன், நல்வழி, நன்னூல், நிகண்டு போன்ற  நூல்களைக் கற்றனர்” என்று குறிப்பிடுகிறார்.  (2001:51) மாணவர்கள் ஆசிரியனிடம் பாடம் கேட்கும்போதும் ஒருவகையான கசப்பு உணர்வை பெற்றனர் என்பதை உ.வே.சா தமது என்சரிதம் என்னும் நூலில் ’அம்பலவாண முனிவரிடம் தம் ஆசிரியர் மீனாட்சி சுந்தரம் பிள்ளை பெற்ற கசப்பான அனுபவத்தைப்          ( 1956:44) பதிவாக்கியுள்ளார்.  ஆங்கிலேயர் ஆட்சியில் பல கல்வி நிறுவனங்களும், பல்கலைக்கழகங்களும் அச்சுக்கூடங்களும் தோன்றின.  அச்சுநூல்கள் பரவலாக வெளிவரத் தொடங்கின. இதனால் மனப்பாடக் கல்வி மறைந்தது. சமய எல்லைகளைக் கடந்து பலவகையான இலக்கண இலக்கியங்களைப் பயிலவும் அவற்றைப் பிற இலக்கியங்களுடன்  ஒப்பிட்டுப் பார்க்கும் கல்வி முறையும் நடைமுறைக்கு வந்தது.

    கல்வித்துறையில் நவீன தொழில் நுட்பங்கள்

    பழங்காலக் கல்விமுறை ஆசிரியனை மையமிட்ட கல்விமுறையாக இருந்தது.  நவீனக் கல்வி முறை  ஆசிரியரை மையமிட்ட கல்வி முறையிலிருந்து மாணவனை மையமிட்ட கல்வி முறைக்கு மாறிக் கொண்டிருக்கிறது. மாணவனை மையமிட்ட கல்வி முறைக்கு நகரும்போது கற்பித்தலில் முக்கியப்பங்கு வகித்த ஆசிரியரின் இடம் கேள்விக்குறியாக ஆக்கப்படுவதும், ஆசிரியரின் இடத்தைக் கருவிகள் பிடித்துக் கொள்வதும் இயங்கியல் நிலை என்பதை உணர வேண்டிய கட்டாயத்தில்நாம் இருக்கிறோம். மரபான வகுப்பறைக் கல்வியில் நீண்ட காலமாகப் பயன்பாட்டில் இருந்து வரும் கருவிகள் கரும்பலகைகளும் வெண்கட்டிகளும். ஆசிரியனின் குரலால் மட்டுமே தகவல்களையும், சூத்திரங்களையும், கருத்துக்களையும், விளக்கங்களையும், வழிமுறைகளையும் சொல்லி, மாணவர்களின் மனத்தில் பதியவைக்க முடியாத நிலையில் கரும்பலகையும் வெண்கட்டிகளும் பயன்பாட்டில் வந்தன.  இந்நிலை தற்காலம்வரை தொடர்கிறது. ஆசிரியரின் உடல் நலம் கருதி வண்ணப் பலகைகளும் எழுதுகோல்களும் பின்னர்ப் பயன்பாட்டுக்கு வந்தன.

    இன்று கற்றல் கற்பித்தலில்  தொழில் நுட்பக்கருவியான  கணினி முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. இக்கணினி வகுப்பறைகளில்  புதிய பயன்பாடுகளை உருவாக்கிக் கொண்டே இருக்கிறது. இது கற்பிக்கும் ஆசிரியர்களின் வேலைப் பளுவை இலகுவாக்குவதோடு கற்பித்தல் உத்தியையும் மாற்றி மாணாக்கர்களின் கற்றல் முறையையும் மாற்றிவிடும் கருவியாகவும் செயல்படுகிறது.

    ஓர் ஆசிரியன் ஒரு மடிக் கணினியையும் தனது பயன்பாட்டிற்கெனக் குரல் பதிவானையும் (Voice Recorder), தகவல் சேமிப்பானையும் (Pen Drive) வாங்கி வைத்துக் கொண்டால் நூலகம், வகுப்பறை, தேர்வுக்கூடம் என அனைத்திலும் நவீனத்தொழில் நுட்பத்தின் உதவியோடு கற்பிக்கும் தொழிலைச் செய்துவிட முடியும். ஆசிரியரின் நேரடி வருகை இல்லாமலேயே கூட இக்கருவிகள் அவரது இடத்தை நிரப்பிவிடும் தன்மை கொண்டவை. கணினியின் திரவப் படிகத் திரை வகுப்பறையில் இருக்கும் கரும்பலகையின் மாற்று வடிவமாக விளங்கத் தக்கது. அதனை இணையத்தின் மூலம் இணைத்து விடும் நிலையில் அதுவே ஒரு நூலகம். சாதாரண நூலகம் அல்ல உலக நூலகங்கள் அனைத்தோடும் இணைத்துக் கொள்ளும் மாபெரும் நூலகம். அந்நூலகத்தில் அச்சிட்ட நூல்கள் மட்டுமே கிடைக்கும் என்பதில்லை. குரல் வடிவ நூல்களும் காட்சி வடிவ நூல்களும் கூடக் கிடைக்கின்றன.

    அது மட்டுமல்லாமல் இப்போது கற்பித்தலில் வல்லுநர்களை வரவழைத்து அவரிடம் பாடம்கேட்கும் முறைக்கு மாறாக, இணையவழி வகுப்பறைகளில் வல்லுநரும் மாணாக்கரும் இருக்கும் இடத்தில் அப்படியே அமர்ந்து கொள்ளலாம். பாடம் நடத்தலாம்; பங்கேற்கலாம். தேர்வு எழுதலாம்; மதிப்பீடு செய்யலாம். தேர்ச்சி பெற்ற பேராசிரியர்களாகவும் வல்லுநர்களாகவும் விளங்குபவர்களின் குறிப்புகளைக் குரல் பாடமாகவும், நகரும் காட்சிப் படிமங்களாகவும் மாற்றிவிட்டால், அவரது இன்மைக்குப் பின்வரும் அடுத்த தலைமுறை மாணவனும் அவரிடம் பாடங்கேட்க முடியும்.

    கற்பித்தலின் மற்றொருகூறு சக்தி மையம் அல்லது பவர் ஆகும். இது கறபித்தல்-கற்றல் வினையில் முக்கியப் பங்காற்றும் தன்மை கொண்டது. கரும்பலகையில் எழுதிப்போட்டுப் பாடம் நடத்துவதற்குப் பதிலாக வண்ண வண்ண எழுத்துக்களோடும் படங்களோடும் கூடிய பாடங்களை வெண்திரையில் வழங்கலாம். தேவையான காலஅளவில் நிறுத்தித் தங்கள் விருப்பம் போலப் பக்கங்களைப் புரட்டிக் காட்டிப் பாடம் நடத்தலாம். அல்லது ஒவ்வொரு பக்கமும் இத்தனைக் கால அளவிற்குத் தெரிய வேண்டும் என முடிவு செய்து நகர்த்தும் வாய்ப்புகளும் உண்டு. நகரும் குறிப்புகளுக்கேற்ற விளக்கங்களை ஆசிரியர் நேரடியாக இருந்து விளக்கவும் செய்யலாம். அல்லது அவற்றைக் குரலாகப் பதிவு செய்துவிட்டு இயக்கவும் செய்யலாம்.  இத்தகைய தொழில் நுட்பங்களை நாம் எட்டிவிட்டோம் என்பது பெருமைக்குரிய ஒன்றாகும். 

    தொழில்நுட்பங்களைப் பயன்படுத்திச் சங்க இலக்கியத்தைக் கற்றல்

    தொழில்நுட்பச் சாதனங்கள் கல்வித்துறையில் ஒரு பெரும் புரட்சியை ஏற்படுத்தியுள்ளதை நாம் கண்டோம்.  இனி இத்தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி எவ்வாறு சங்க இலக்கியத்தைக் கற்கலாம் என்பதைக் காண்போம். இன்று இணையம் வழியாகக் கல்வி கற்கவும் தேர்வு எழுதவும் பட்டம் பெறவும் உதவும் வழியில் பல திறந்தநிலைப் பல்கலைக்கழகங்கள் தோன்றியுள்ளன. அவ்விணையம் வழியாகப் பாடம்கேட்கும்போது ஆசிரியர் ஒருவர் நின்று பாடம்எடுக்கும் முறை காணப்படுகிறதே ஒழிய நாம் மேற்கூறிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்திய ஒரு வகுப்பைக் காண்பது இயலாத ஒன்றாகப் காணப்படுகிறது.. அதாவது அவ்விணையம் வழியாகவும் மரபுசார்ந்த கல்வி முறையே புகுத்தப்படுகிறது. ஆசிரியர் தகவலாளராகவும் மாணவர்கள் தகவல் பெறுபவர்களுமாகவே காணப்படுகின்றனர். அரசு கல்வி நிறுவனங்களிலும் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்திய வகுப்புகள் மிகக் குறைவாகவே காணப்படுகின்றன. அரசின் உதவித்தொகையில் பல ஸ்மார்ட் வகுப்பறைகள் இன்று அரசு கல்லூரிகளில் பள்ளிகளிலும்  நிறுவப்பட்டிருப்பினும் அது பயன்படுத்துவாரின்றியே காணப்படுகின்றன. ஒரு சில தனியார் கல்லூரிகளில் மட்டுமே பயன்பாட்டில் உள்ளன.  இதற்குக் காரணம் முறையான பயிற்சி இல்லாமையும் ஆங்கிலப் புலமை இல்லாததுமே காரணமாகும்.

    கான்பூசியசின் கருத்துப்படி “நான் கேட்கிறேன் மறக்கிறேன், நான் பார்க்கிறேன் நம்புகிறேன், நான் செய்கிறேன் புரிந்து கொள்கிறேன்” மாணவர்கள் கண்டு, கேட்டு, உணர்ந்து கற்கும் ஒரு கல்வி முறை அவசியமாகிறது.  அத்தகைய ஒரு கல்வி முறையைக் கொடுக்க நவீனத் தொழில்நுட்பங்கள் பெருமளவிற்கு உதவிசெய்கின்றன. இத்தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சங்க இலக்கியத்தைக் கற்பிக்கும் முறையை இங்குக் காண்போம்.சங்க இலக்கியப் பாடல்களை இசையோடு பாடி மாணவர்களைக் கேட்க வைக்கலாம்.

    • சங்கப்பாடல்களில் வரும் காட்சிகளை வரைந்து ஓவியங்களாக்கிக் காட்சிப்படுத்தலாம்.
    • இணைய நூலகம் வழியாகச் சங்க மொழியை, அதன் பொருளைப் புரிந்துகொள்ள வைக்கலாம்.
    • சங்கப் பாடல்களில் வரும் காட்சிகளை மாணவர்களை வைத்தே நடித்துக் காட்டலாம்.
    • சங்கப் பாடல்களில் வரும் வரலாற்றுப் பதிவுகளைக் கதை போன்று கூறி மாணவர்களுக்குப் புரியவைக்கலாம்.
    • சங்கப் பாடல்களில் பயின்று வரும் அணி, உவமைகளை எடுத்துவிளக்கி தொடர்களில் பயின்றுவரும் இலக்கண அமைதிகளையும் அக்கால மொழி அமைப்பையும் எடுத்துரைத்து விளக்கலாம்.
    • சங்கப்பாடல்களில் பயின்றுவரும் மரம், செடிகொடிகள், பூ வகைகள் விலங்குகள் இவற்றைக் காட்சிப்படுத்தி கற்பிக்கலாம்.
    • சங்கப் பண்பாடுகளையும் கலைகளையும் நிகழ்த்திக்காட்டலாம்.

    இம்முறைகளைப் பயன்படுத்தினால் சங்கப்பாடல்களை எளிதில் புரிந்து கொள்வதோடு அப்பாடல்களின் பொருளும் காட்சிகளும் மாணவனின் மனத்தைவிட்டு நீங்காமல் என்றும் நின்று நிலைக்கும் தன்மையோடும் காணப்படும் என்பதில் ஐயமில்லை.

    தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மரபு நிலையில் கற்பித்தல்

    மரபு முறையாகக் கற்பித்தலில் சங்க இலக்கியப் பாடல்களைக் கூறி அதன் திணை, துறை ஆகியவற்றை விளக்கி சிறப்புக்கூறுகளான முன்னம், உள்ளுறை, இறைச்சி, அணிநயம் போன்றவற்றை எடுத்தியம்பி இலக்கியத்தின் ரசனையைப் பெருக்கலாம். 

    முன்னம்

    சங்க அகத்திணைப் பாடல்களுக்கு யார் கூற்று, யாரிடம் கூறியது என்ன காரணத்திற்காகக் கூறியது என்பனவற்றை விளக்கிக் கொடுக்கப்பட்டுள்ள அடிக்குறிப்பே முன்னம் எனப்படுகிறது. இதைத் தொல்காப்பியர்,

    இவ்விடத்து இம்மொழி இவர் இவர்க்கு உரிய என்று
    அவ்விடத்து அவரவர்க்கு உரைப்பதை முன்னம் (தொல் 1463)

    என்று விளக்கியுள்ளார். குறுந்தொகையில் வரும் பாடல்கள் அனைத்தும் கூற்றுகளாக வருவதால் ‘முன்னம்’ என்ற கருத்தாக்கத்தின் அடிப்படையில் கற்பித்தல் மிக மிக அவசியமாகிறது.  குறுந்தொகையில் தலைவன் கூற்றாக 61 பாடல்களும் தலைவி கூற்றாக 180 பாடல்களும் தோழி கூற்றாக 141 பாடல்களும்  நற்றாய் கூற்றாக 9 பாடல்களும் பரத்தை கூற்றாக 5 பாடல்களும் பிறர் கூற்றாக 5 பாடல்களும் அமைந்துள்ளன. முன்னம் பற்றிய அடிக்குறிப்புகள் பிற்காலத்தில் தொகுத்தவர்கள் எழுதி இருக்கலாம். பாடலைப் படிக்கும்போது யார் யாரிடம் கூறியது என்ற முன்னம் மாறுவதற்கு வாய்ப்புகள் உள்ளன.

    எ.கா:

    செங்களம் படக்கொன்று அவுணர்த் தேய்த்த
    செங்கோல் அம்பிற் செங்கோட்டி யானைக்
    கழல் தொடிச் சேஎய் குன்றம்
    குருதிப் பூவின் குலைக் காந்தட்டே. ( குறு.1)

    போர்களத்தில் இரத்த வெள்ளம் பெருக அவுணர்களைக் கொன்றழித்த, குருதிதோய்ந்த அம்பினையும் குருதிபடிந்த கொம்புகளுடைய யானையையும் உடைய முருகன் இருக்கும் குன்றம் இரத்தம் போன்ற காந்தள் பூக்கள் நிறைய உடையது என்று கூறி தலைவனிடம் தோழி கையுறை மறுத்தது என்று துறை வகுத்தனர் சான்றோர்கள். இப்பாடலின் காட்சிகளைக் கண்களுக்குப் புலப்படும் காட்சிகளாகக் காட்டலாம்.

    இதே பாடலுக்கு நச்சினார்க்கினியர் ‘இது தோழி தலைவியை இடத்துய்த்து நீங்கியது’  என்ற துறை வகுத்துள்ளார்.  அதாவது முருகனது குன்றின் மேல் குருதிபோலப் பூக்கும் காந்தள் பூக்கள் நிறைய உள்ளன.  நான் அப்பூக்ளைப் பறித்துவரச்செல்கிறேன் நீ இங்கேயே இரு” என்று கூறித் தோழி தலைவியைப் பிரிகிறாள்.  எனக் கூறியிருப்பதும் பொருத்தமே ஆகும்.  இவ்வாறு ஒவ்வொரு பாடலையும் வேறுபட்ட முன்னத்தின் அடிப்படையில் கற்பித்தால் பாடலின் நயம் சிறக்கும் என்பதில் ஐயமில்லை. பல உரையாசிரியர்களின் உரைகளைக் கொண்டு ஒரேஇடத்தில் இவ்வுரைகளைக் கண்டும் சங்க இலக்கியத்தைக் கற்பிக்கலாம்.

    உள்ளுறை

    உள்ளுறை என்பது தெய்வம் ஒழிந்த கருப்பொருள்களை அடிப்படையாகக் கொண்டு உள்ளுறுத்துக் கூறும் உவமையாகும்.  அதாவது புலவன் தான் கருதிய பொருளை உட்பொருளாக வைத்து வெளிப்படையாக உவமையை மட்டும் கூறுதலாகும். குறுந்தொகையில் பல பாடல்களில் இதுபோன்ற உள்ளுறை உவமம் வந்துள்ளமையைக் காணலாம்.

    வேரல் வேலி வேர்கோட் பலவின்
    சாரனாட செவ்வியை யாகுமதி
    யாரஃ தறிந்திசி னோரே சாரற்
    சிறுகோட்டுப் பெரும்பழம் தூங்கி யாங்கிவள்
    உயிர்தவச் சிறிது காமமோ பெரிதே. ( குறு.18)

    சிறிய கொம்பில் பெரிய பழம் தொங்குவது போல இத்தலைவியின் உயிர் மிகச் சிறுமையை உடையது காமநோய் மிகப் பெரியது. அதனை அறிந்தவர் யார்? ஒருவரும் இல்லை. இவள் உயிர்விடுதல் நேரவும் பெறும் அல்லாமல் பிறர் வரைந்தும் கொள்வர் என்ற உள்கருத்தை மிகத் சாதுரியமாகச் சொல்லிச் செல்கிறார் புலவர்.  இதேபோன்ற குறுந்தொகைப் பாடல் ஒவ்வொன்றிலும் மேம்போக்காகக் கூறப்பட்டிருக்கும் உவமைகளுக்குள் ஓர் ஆழ்ந்த பொருள் மறைந்திருப்பதை வெளிக்கொணர்ந்து கற்பிக்கும் வாய்ப்புகள் உள்ளன.

    இறைச்சி

    இறைச்சி என்பது கருப்பொருள்களின் ஒரு பகுதியாகிய ஆடு, மாடு, மான், மயில் முதலிய விலங்குகளையும் பறவைகளையும் குறிப்பதாகும்.

    எ.டு:

    நசை பெரிது உடையர் நல்கலும் நல்குவர்
    பிடிபசி களைஇய பெருங்க வேழம்
    மென்சினை யாஅம் பொளிக்கும்
    அன்பின் தோழி அவர் சென்ற ஆறே. (குறு: 37)

    தலைவன் சென்ற வழியானது யானை தன் பிடியின் பசியை நீக்குவதற்காக யாமரத்தின் பட்டையை உரித்து அதிலுள்ள ஈரச்சுவையைப் பருகச் செய்யும் அன்பைப் புலப்படுத்தும் காட்சிகளை உடையது.  என்று கூறுவதன் மூலம் தலைவன் அந்தக் காட்சிகளைக் கண்டு தலைவியின் நினைவு ஏற்பட்டு விரைவாக வந்து சேர்வான் என்ற பொருள் கொள்ளப்படுகிறது. இப்பாடலில் வரும் யாஅ மரத்தின் தன்மைகளை விளக்கியும் அதன் சிறப்புக்களைத் தொழில்நுட்பம் வாயிலாக எடுத்துரைத்தும் இப்பாடலைக் கற்பிக்கலாம்.

    இன்று வளர்ச்சி அடைந்துள்ள பல துறைகளின் அடிப்படையிலும் சங்க இலக்கியத்தைக் கற்பிக்கலாம்.  இலக்கியக் கல்வியின் நோக்கம் மாறுபடுவதற்கேற்ப இலக்கியத்தின் பொருளும் விரிவடைந்து கொண்டே செல்கிறது.  மக்களின் வாழ்க்கைத்தரம் சமூக உறவுநிலை பொருளாதாரம் நாடுகள் பற்றிய செய்திகள் போன்ற சமூகவியல் செய்திகளும் இலக்கியங்களில் பரவலாகக் காணப்படுகின்றன.

    எ.டு:

    கோடுஈர் இலங்குவளை ஞெகிழ நாடொறும்
    பாடில கலிழுங் கண்ணொடு புலம்பி
    ஈங்கிவ ணுறைதலும் உய்குவமாங்கே. ( குறு: 11)

    என்ற பாடலில் வடுகர் பற்றிய செய்திகளும் கட்டி என்ற மன்னன் பற்றியும் மொழிதெரியாத நாட்டின் குறிப்புக்களும் பொருள்தேடி வேற்று நாட்டிற்குச் செல்லும் குறிப்பும் உள்ளன.  மேலும் இப்பாடலில் முல்லைநில மக்களின் சமூக வரலாற்றுச் செய்திகளும் பதிவாகியுள்ளன.  நிலவியல் அமைப்புகளைக் காட்சிப்படுத்தி விளக்கலாம்.

    உளவியல்

    இலக்கியங்களை உளவியல் அடிப்படையில் அணுகி பல முடிவுகளைக் கண்டறிந்து கூறுவது புதிய ஆய்வு முறையாகும். குறுந்தொகையில் மனித உணர்வுகளை அப்பட்டமாகப் பிரதிபலிக்கும் பல பாடல்கள் உள்ளன.  நீண்ட நாள் பிரிவு கழிந்து தலைவன் வந்துவிட்டான் என்ற செய்தியைத் தோழி தலைவியிடம் கூறுகிறாள். அந்த இன்ப அதிர்ச்சியை ஒரு தலைவி எப்படி வெளியிடுகிறாள் என்பதை மிக அருமையாக இப்பாடல் காட்டுகிறது.

    நீ கண்டனையோ? கண்டோர்க் கேட்டனையோ?
    ஒன்று தெளிய நசையினம் மொழிமோ
    வெண்கோட் டியானை சோணை படியும்
    பொன்மலி பாடலி பெறீஇயர்
    யார் வாய் கேட்டனை காதலர் வரவே.  (குறு: 75)

     நீ பார்த்தாயா? பார்த்தவர்கள் கூறக் கேட்டாயா? யாராயிருந்தாலும் அவர்களுக்கும் பாடலிபுரத்தைப் பரிசாக அளிப்பேன் என் காதலர் வரவை யார் கூறினார்கள் என்று ஒரு பெண் ஆர்வமாகக் கேட்கும் வடிவில் அமைந்துள்ளதைக் காணலாம்.  தலைவியின் மன நிலையைக் காட்சிகளாக எடுத்துரைக்கலாம்.

    தொழில் நுட்பங்கள் பெருகிவரும் இக்காலத்தில் அவற்றைப் பயன்படுத்தி விளக்குவதால் சங்க இலக்கியத்தைக் கற்பவர்களின் எண்ணிக்கை மேலும் உயர்வுபெறும். தொழில்நுட்பத்தின் துணைகொண்டு எளிதில் கற்கலாம். சங்கத்தமிழின் மொழி நடையையும் எளிதில் புரிந்துகொள்ள இவை வழிசெய்யும். பழமையான இலக்கியங்களைக் கற்பிப்பதற்குத் தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தும்போது அதன் சாத்தியங்கள் விரிவடையும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

    பயன்பட்ட நூல்கள்

    1. உ.வே.சா- குறுந்தொகை, உவேசா நூல் நிலையம், சென்னை
    2. சுப்பிரமணியன். நா – சங்ககால வாழ்வியல், நீயூ சென்சுரி புக் , சென்னை.
    3. ராமசாமி. அ – தமிழ் இலக்கியம் கற்பித்தலும் நவீனத் தொழில் நுட்பமும்

    *****

    கட்டுரையாளர்,
    உதவிப்பேராசிரியர்,
    கேரளப் பல்கலைக்கழகம்

     

     

    Share
  • புறநானூறு காட்டும் போர் நிர்வாகமும் மேலாண்மையும்

    முனைவர். ஹெப்சி ரோஸ் மேரி.அ

    உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை

    கேரளப் பல்கலைக்கழகம்

    திருவனந்தபுரம்.

    வீரத்தையும்  காதலையும் சங்ககால மக்கள் தம் இரு கண்களாகக் கொண்டனர். எனவேதான் சங்க இலக்கியங்கள் காதலையும் வீரத்தையும் பாடுபொருளாகக் கொண்டன.  காதலை அகநூல்களும் வீரத்தைப் புறநூல்களும் எடுத்தியம்பின.  எனினும் அகநூல்களில் புறச்செய்திகளும் புறநூல்களில் அகச்செய்திகளும் இடம் பெறுவதைக் காணலாம்.  புறநானூறு என்றதுமே சங்ககால மக்கள் நடத்திய போர்களும் அவர்களது வீரச்செயல்களுமே நமது நினைவுக்கு வரும்.  ஆனால் போரினால் விளையும் துன்பங்களை எடுத்துக்கூறி போர்களைத் தடுப்பதற்குரிய வழிமுறைகளையும் கட்டாயமாகப் போர்செய்ய வேண்டிய சூழல்களில் பொது மக்களுக்குத் துன்பம் ஏற்படாதவாறு அவர்களைப் பாதுகாத்த சங்ககால மக்களின் நிர்வாகத் திறனையும் புறநானூறு பதிவாக்கியுள்ளன.  இக்கட்டுரை        புறநானூறு காட்டும் அக்கால மன்னர்களின் போர் நிர்வாகத்தையும் போரிடர் மேலாண்மை திறத்தையும் எடுத்துரைக்க முயல்கிறது.

     

    போரும் காரணங்களும்

         போர் என்றவுடனே நமது நினைவுக்கு வருவது போரின் அழிவும் துன்பமும் தான்.  மனிதகுலம் தோன்றிய காலம் முதல் இன்றுவரை போராட்ட உணர்வு மேலோங்கியே வந்திருக்கின்றது.  நமது நாட்டில் நிகழ்ந்ததாகக் கருதப்படும் போர்களால் மக்கள் மிகுந்த துன்பத்தையே அனுபவித்தனர்.  அறிவிலும் ஆற்றலிலும் வளர்ந்து கூடிவாழ முற்பட்ட பின்னரும் தொடக்ககால போர் வெறி குறைந்தபாடில்லை.  போர் முறையில் ஈட்டியும், வாளும் துப்பாக்கியும் செயலிழக்க புதிய போர்க்கருவிகள் கண்டுபிடிக்கப்படுகின்றன.  ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு நாட்டிலும் இராணுவத் தளவாடங்களுக்காக ஒதுக்கப்படும் தொகையும் பெருகிக்கொண்டே இருக்கிறது.  வல்லாண்மை மிக்க நாடுகள் இந்த உலகத்தைப் போல பதினைந்து உலகங்களை அழிக்கின்ற அளவிற்கு அணு ஆயுதப் போர்க்கருவிகளைக் குவித்துக் கொண்டிருக்கின்றன.  இத்தகைய அணு ஆயுதங்களைப் பெருக்குவதற்குக் காரணமாக அமைந்த போருக்குரிய சில காரணங்களைக் காண்போம்.

         ’இந்தியாவில் போர்’ என்னும் நூலில் போருக்குரிய காரணங்களாகக் கீழ்வருவனவற்றை இராமசந்திர தீட்சிதர் சுட்டுகிறார்.  மறவனின் போர் விருப்பமும் உடல்தினவும் வழிவழியாகப் போர் செய்யத் தூண்டுவனவாக அமைந்தன என்று குறிப்பிடுகிறார்.  போரையே தொழிலாகவும் போர்க்கள சாவையே புகழுக்குரியதாகவும் தமிழர் விரும்பினர். சங்ககால வீரத்தாயும் தன்மகன் போர் செய்வதையே பெருமையாகக் கருதினாள்.  சான்றாக,

               ’புலிசேர்ந்து போகிய கல்லளை போல

               ஈன்ற வயிறோ விதுவே

    தோன்றுவன் மாதோ போர்க்களத் தானே’     – புறம் 86

    என ஒரு தாயிடம் நின் மகன் எங்கு உள்ளான்? என்று வினவியவர்க்கு அவன் போர்களத்து இருப்பான். அவனைப் பெற்ற வயிறு புலி இருந்து சென்ற கன்முழை போன்று இங்கு உளது என்று கூறுவதாக அமைகின்றது.

     மேலும்  பண்டைய தமிழர் போர் வீரர்களாக இருப்பதையும் போரில் களிறுகளை வீழ்த்துவதைப் பெருமைக்குரிய செயல்களாகவும் கருதியுள்ளனர்.  இத்தகைய வீரச் செயல்களைப் புலவர்கள் புகழ்ந்து பாடுதல் வேண்டும் என்று புலவர்களுக்குப் பொருள் கொடுத்து ஆதரித்தனர்.

    ‘ வெறுத்த கேள்வி விளங்கு புகழ்க் கபிலன்

    இன்று உளன் ஆயின் நன்றுமன் என்ற நின்

    ஆடுகொள் வரிசைக்கு ஒப்ப                 – புறம் :53

    கபிலர் இல்லையே என்று வருந்திய மாந்தரஞ்சேரலிரும் பொறையிடத்து இளங்கீரனார் ‘ நின் புகழ் முற்றுப் பெற்று விடவில்லை அதனைப் பாடி முடிதல் எம்மனோர்க்கு இயலா. கபிலர் இருந்தால் சிறப்புற நின்னை பாடுவான். ஆயினும் என்னால் இயன்றவரைப் பாடுவேன் பாடாதிருந்தால் அரிது என விளக்கினார்.

    இத்தகைய எண்ணம் உலகம் முழுமையும் இருந்ததை சி.எம். பெளராவின் வீரயுலகப் பாடல் என்னும் நூல்வழி அறியமுடிகிறது.  ஆக போர் என்பது மனிதனின் மனப் போக்கினால் உருவானது மட்டுமன்று உலகத்தின் இயல்பும் கூட எனப் புறநானூறு கூறுகின்றது.

    ‘ஒருவனை ஒருவன் அடுதலும் தொலைதலும்

    புதுவதன்று இவ்வுலகத் தியற்கை                 –     புறம் – 76

    என்ற அடிகள் சுட்டுகின்றன.  எனவே போர் பலவழிகளில் நிகழ்ந்துள்ளன.  மன்னர்கள் தன் எல்லைகளைப் பரப்புவதற்காகவும்  தன் புகழை நிலை நாட்டுவதற்காகவும் போர் செய்தனர். சான்றாக,

               முழங்கு முந்நீர் முழுவது வளைஇப்

               பரந்துபட்ட வியன் ஞாலம்

               தானிற் தந்து தம்புகழ் நிறீஇ      புறம் 18

    கடலால் சூழப்பட்ட இவ்வகன்ற உலகத்தை மன்னன் தன் முயற்சியால்  கொண்டு தன் புகழை நிலை நாட்டியதை இவ்வரிகள் சுட்டுகின்றன.

    மேலும்  தன்மானம் காரணமாகவும் ( புறம் 75)  புலவர்கள் தம் வீரச் செயல்களைப் புகழ்வதற்காகவும், போர் நிகழ்த்தினர் என்ற செய்தியையும் புறநானூறு வாயிலாக அறிகின்றோம்.

    மகளிர் காரணமாகப் போர் நிகழ்ந்ததைப் புறநானூறு பதிவாக்கியுள்ளது. அதாவது மகட்கொடை மறுப்பு காரணமாகப் போர் நிகழ்ந்ததைப்  புறம் 116, 337, 342 போன்ற பாடல்கள் எடுத்தியம்புகின்றன.

    போரால் ஏற்படும் துன்பம்

    போரால் மக்கள் பல துன்பத்திற்கு ஆளானதைச் சங்க இலக்கியங்கள் படம் பிடித்துக் காட்டுகின்றன. போர்களத்தில் பிணங்கள் எங்கும் கிடக்கும் தோற்றம் தச்சனின் உலைக்களத்தில் கிடக்கும் கருவிகளைப் போன்றிருந்தது என்றும் ( களவழி 15) வீரர்கள் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டதால் அவர்கள் உடலிலிருந்து சொட்டுச் சொட்டாகக் குருதி ஒழுகும் காட்சி கார்த்திகை விழாவில் வரிசையாக வைக்கப்பட்டுள்ள கார்த்திகை விளக்கு போன்று  ( களவழி 21) இருந்தது என்றும் யானைகள் போர்க்களத்தில் கிடக்கும் காட்சி குன்றுகளைப் போலிருந்தது என்றும் ( களவ 21) களவழி நாற்பது போர்க்களக் காட்சியை எடுத்தியம்புகிறது.  புறநானூற்றில் ஒரு பெண் தன்கணவன் போரிடச் சென்று திரும்பி வராதது கண்டு போர்களம் நோக்கிப் புறப்பட்டாள் . அங்கே அவளது கணவன்

    ‘ எடுப்ப எழாஅய் மார்பம் மண்புல்ல

    இடைச் சுரத்து இறுத்த மள்ள          ( புறம்254)

    எழுப்ப எழாதவனாய் மார்பில் புண்பட்டு சுரத்திடை வீழ்ந்து கிடக்கின்றான் என்பதை இவ்வரிகள் உணர்த்துகின்றன.

    …………….யானும்

    மண்ணுறு மழித் தலைத் தென் நீர்வார

    தொன்று தாம் உடுத்த அம்பகைத் தெரியற்

    சிறுவெள் ஆம்பல் அல்லி உண்ணும்

    கழிகல மகளிர் போல

    வழி நினைத்திருத்தல் அதனினும் அரிதே          –     புறம் 288

    இவ்வரிகள் போர்களத்தில் தன் கணவன் இறந்த  செய்தியைக் கேட்ட பெண்ணின் மன நிலையைப் படம் பிடித்துக் காட்டுகின்றன. முடிகளைந்து தலையைக் கழுவுதலும் அல்லி அரிசியை உண்டு அணிகலன்களைக் களைந்து கைம்பெண் போல கணவன் இறந்த பின்பு வாழ்தல் அரிது என்று ஒரு பெண் புலம்புவதாக அமைகிறது.  இதிலிருந்து போர்த்துன்பத்தால் வீரர்கள் இறந்து படுவதும் அவ்வீரர்களின் மனைவியர் பெரும் துன்பத்திற்கு ஆளானதையும் புறநானூறு வழி அறிந்து கொள்ள முடிகிறது.

    போர் நிர்வாகம்

           நாட்டை ஆளும் மன்னனுக்குத் துணையாக அமையக் கூடியவற்றுள் மிகமுக்கியத்துவம் வாய்ந்தது படை ஆகும்.  இதனைத் திருவள்ளுவர்,

               ’படைகுடி கூழமைச்சு நட்புஅரண் ஆறும்

               உடையான் அரசருள் ஏறு         – திரு 381

    என்று படை, குடி, கூழ், அமைச்சு, நட்பு, அரண் என்ற ஆறங்கங்களைக் உடையவன் அரசருள் ஏறு போன்றவன் என்று எடுத்துரைக்கின்றார்.  இவ்வாறனுள் முதலிடம் பெறுவது படை ஆகும்.  இப்படையை நிர்வகித்தல் அரசனின் தலையாய கடமையாகும்.

    சங்ககால மன்னனுக்கு எனத் தனியான ஒரு நிலையான படை இல்லை என்பதை சங்க இலக்கியம் வழி அறிய முடிகிறது.  போர்க்காலத்தில் திரட்டப்படுவனவே படைகளாக அமைந்துள்ளன. அப்படைகள் போர் புரிந்து பல வெற்றிகளையும் பெற்ற செய்தியையும் அறிய முடிகிறது. சிறு குழந்தைகள் வரையிலும் போரில் ஈடுபட்ட செய்திகள்   புறநானூறில் பதிவாகியுள்ளன.   புறநானூற்றின் வாயிலாக அக்காலத்தில் யானைப்படை, குதிரைப்படை, காலாட்படை ,தேர்ப்படை  என்ற நாற்படை பற்றிய குறிப்புகள் காணக்கிடக்கின்றன.  எனினும் அதனை மன்னன் எவ்வாறு நிர்வகித்தான் என்பதற்கான அகச் சான்றுகள் மிகக் குறைவாகவே காணக்கிடக்கின்றன.

         தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் தன் சிறுவயதிலேயே போர்த்தொழிலை மேற்கொண்டவன்.  அவனைப் புகழும் இடைக்குன்றூர் கிழார்,

    ’ கிண்கிணி களைந்தகா லொண்கழ றொட்டுக்

    நெடுந்தேர்க் கொடுஞ்சி பொலிய நின்றோன்

    யார்கொல் வாழ்கவன் கண்ணி தாட் பூண்டு

    தாலி களைந்தன்று மிலனே பால்விட்

    டயினியு மின்றயின்றனனே       –     புறம் -77

    இப்பாடல் வரிகளில் காலிலே வீரக் கழலை அணிந்த ஐம்படைத் தாலிகழற்றாத இவன் பால் பருகுதலை விட்டு இன்று உணவு உண்டனன் என்று குறிப்பிடுகிறார்.  அதாவது போர்த்தொழில் செய்ய விரும்புவோர் உடல்வாகை ஊக்குவிக்கும் சத்தானஉணவு வகைகளை உண்டான் என்ற செய்தி இலைமறை காயாக இப்பாடலில் இருப்பதைக் காணலாம்.  போர் வீரர்கள் பல உணவு வகைகளை உண்டு தம் உடல் வலிமையைப் பெருக்கினர் என்பதையும் அறியமுடிகிறது.  பாரதப்போரில் பெருஞ்சோறிட்ட உதியன் சேரலை இங்கு நினைவு கூறத் தக்கது.

    போர் செய்யும் முறை

    அக்காலத்தில் நிகழ்ந்த போர் முறைகளைத் தொல்காப்பியம் எடுத்தியம்புகின்றது.  பழங்காலத்தில் ஐந்து நிலைகளில் போர் நிகழ்ந்ததைத் தொல்காப்பியம் சுட்டுகிறது.  இவ்வைந்து நிலைகளுக்கும் ஐவகையான பூக்களை அணிந்தனர்.  இது இக்காலத்து சீருடைகள் அணிவதற்கு இணையானது என்ற பூரணசந்திரன் அவர்களின் கருத்து இங்கு ஒத்து நோக்கத்தக்கது.  தொல்காப்பியர் கருத்துப்படி ஆ நிரைகளைக் கவர்தலே  போரின் தொடக்கமாகும் இதற்கு வீரர்கள் வெட்சிப்பூச் சூடுவர்.  ஆ நிரைகளை மீட்க வருவோர் கரந்தைப் பூச்சூடுவர்.   கோட்டையில் நின்று போர் செய்வோர் உழிஞைப்பூச் சூடுவர்.  கோட்டையை முற்றுகை இடுதலைத் தவிர்ப்பதற்கு நொச்சிப்பூ சூடுவர்.  மட்டுமல்லாது இரு பெரும் வேந்தர்களும் ஒருகுறிப்பிட்ட இடத்தில் நின்று போர் செய்வதற்குத் தும்பைப்பூ சூடுவர். இப்போரில் நால்வகைப் படைகளையும் பயன்படுத்துவர்.  புறநானூறில்   நால் வகைப் படைகளையும் பயன்படுத்துவதால் பெரும்பான்மையும் தும்பைப் போரைப் பற்றியே அதிகமாகப் பேசுகிறது எனலாம்.

    மேலும் அக்காலத்தில் போருக்கென சில விதிமுறைகள் இருந்தன.  அன்று நேருக்கு நேர் வாள், வில், ஈட்டி போன்றவை கொண்டு போரிடும் முறைகள் காணப்பட்டன.

    ’உடன்று மேல் வந்த வம்ப மள்ளரை

    வியந்தன்று மிழிந்தன்று மிலனெ யவரை

    அழுந்தப் பற்றி யகல் விசும்பார்ப்பெழக்

    கவிழ்ந்து நிலஞ்சேர வட்டதை’         புறம் – 77

    என்ற வரிகளில் தன் எதிரில் வந்து நின்ற பகைவர்களை இறுகப் பிடித்து ஆகாயத்தில் ஒலியெழ உடல் நிலத்தில் விழவீழ்த்தியதை எடுத்தியம்புகிறது. எனவே அக்காலத்தில் நேருக்கு நேர் எதிர்த்து போரிட்டனர் என்பதை அரியலாம். புறமுதுகிட்டு ஓடும் எதிரியையும் ஆய்தம் இன்றி நிர்கதியாய் நின்றோரையும் தாக்குதல்கூடாது என்பது அக்கால மரபு.

    போரிடர் மேலாண்மை

    போர்த்துன்பத்தால் ஏற்படும் அபாய நிலைகளைத் தவிர்ப்பதற்கு எடுக்கப்படும் ஒழுங்கு நடவடிக்கைகளைப் போரிடர் மேலாண்மை எனலாம்.  அழிவு ஏற்பட இருக்கும் பகுதியை அவசரமாகக் காலி செய்தல், பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவும் உறையுளும் வழங்குதல், வந்த போரை எதிர்கொள்ள படை பலத்தைப் பெருக்குதல் போன்றனவும் இவற்றுள் அடங்கும்.

         போரிடரால் மக்களுக்குப் பேரழிவு ஏற்படாதவாறு போர் நிகழ இருக்கும் இடத்தின் அருகிலுள்ள மக்களைப் பாதுகாப்பான இடத்திற்குச் செல்லுமாறு பறை அடித்து அறிவிக்கும் நிகழ்ச்சி புறனானூற்றில் இடம் பெற்றுள்ளது.

    ’ஆவும் ஆன் இயற்பார்பன மாக்களும்

    பெண்டிரும் பிணியுடையீரும் பேணித்

    தென்புல வாழ்நர்க்கு அருங் கடன் இருக்கும்

    பொன்போல் புதல்வர்ப் பெறாஅ தீரும்

    எம் அம்பு கடிவிடுதும்  நும் அரண் சேர்மின்       புறம்-  9

    பசுவும் பசுவினியல்பை ஒத்த பார்ப்பனரும் பெண்களும் நோயுற்றவரும் இறந்து தென்திசையில் வாழும் முன்னோருக்குச் செய்யும்  அரிய சடங்குகளை மதித்துச் செய்யும் புதல்வர்களைப் பெறாதவர் எனப்பலரும் கேட்பீராக யாம் எம் அம்புகளை விரைவுபட செலுத்திப் போரிட உள்ளோம் யாவரும் பாதுகாப்பான இடத்தை அடையுங்கள் என்று ஆபத்தான இடத்தில் இருந்து பாதுகாப்பான இடத்திற்கு மக்களை இடம்பெயரச் செய்யும் உயரிய பண்பு அன்றைய மக்களிடையே நிலவியிருந்தது.  இது இன்றைய போர் முறையில் இருந்து முற்றிலும் மாறுபட்டது என்பது நினைவு கூறத்தக்கது.

         போர்க்களத்தில் படையை அழித்தல், மன்னர்களைக் கொல்லுதல், பகை மன்னர்களின் முரசு, காவல்மரம் இவைககளைக் கவர்ந்து கொள்ளுதல் கடிமரத்தை அழித்தல்,  ஊரை எரிப்பதுடன் நீர் நிலைகளை உடைத்தல் விளைந்த வயல்களில் தீமூட்டுதல் எனப் பல்வேறு இழிச் செயல்களையும் செய்தனர்.  இதனை மனதில் கொண்ட புலவர்கள் போரைத் தூண்டாமல்  போர் நடக்காமலிருக்க என்னென்ன முயற்சிகளை மேற்கொள்ள வேண்டுமோ அத்தகைய முயற்சிகளைச் செய்துள்ளனர்.

    சோழர் குடியில் பிறந்த நலங்கிள்ளியும் நெடுங்கிள்ளியும் போர் செய்வதற்குத் தயாராக இருந்தனர்.  அப்போது கோவூர்க்கிழார் என்னும் புலவர் உங்கள் இருவர் மாலையும் ஆத்திப்பூவால் ஆனது.  போரில் இருவரும் வெற்றியடைதல் இயலாதது. ஒருவர் வென்று மற்றவர் தோற்பர்.  உங்களில் யார் தோற்பினும் உங்கள் குடியின் தோல்வியையே அது உணர்த்தும் .  உங்களை ஒத்த சேரர்களுக்கும் பாண்டியர்களுக்கும் இத்தோல்வி பெரும் மகிழ்ச்சியைத் தரும் எனவே போர் செய்வதை நிறுத்துங்கள் என்று கூறுகின்றார்.  இதனைப் பின்வரும் புறநானூற்றுப் பாடல் எடுத்தியம்புகிறது

    ‘ நின்ன கண்ணியும் ஆர்மிடைந்தன்றே நின்னொடு

    பொருவோன் கண்ணியும் ஆர்மிடைந்தன்றே

    ஒருவீர் தோற்பினும் தோற்பதும் குடியே

    இருவீர் வேறல் இயற்கையும் அன்றே அதனால்

    குடிப்பொருள்  நன்று நும் செய்தி கொடித்தேர்

               நும்மோர் அன்ன வேந்தர்க்கு

    மெய்ம்மலி உவகை செய்யும் இவ் இகலே         புறம் – 45

    மேலும் தந்தை மகனுக்கு இடையே நடந்த போரைத் தவிர்த்தலையும்  புறம் 213 ஆம் பாடலால் அறிகிறோம். போரால் ஏற்படும் விளைவுகளை எடுத்துக் கூறி போரைத் தடுத்தலையும் ( புறம் 77) புற நானூறு சுட்டுகிறது.

         சங்ககால மன்னர்கள் போர்த்தொழிலில் மட்டுமன்று படையின் வலிமையறிந்து படையை நிர்வகிக்கும் திறனையும் பெற்றிருந்தனர். போரினால் ஏற்படும் தீமைகளை உணர்ந்து போரிடருக்குரிய மேலாண்மைத் திறனை பெற்ற செய்தியையும் புறநானூறு வாயிலாக அறிந்துகொள்ள முடிகிறது.

    பயன்பட்ட நூல்கள்

    • சாமிநாத ஐயர் உ. வே (ப.ஆ)புற நானூறு , தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர், 1988
    • தமிழ் வேலு- சு – களவழி களமும் காலமும், தென்பெண்ணைப் பதிப்பகம், தென்னார்க்காடு,1997
    • பரிமேலழகர் திருக்குறள், பூம்புகார் பதிப்பகம், சென்னை 1986
    Share
  • தமிழ் மலையாள ஆக்கப்பெயர்கள்

    முனைவர் ஹெப்சி ரோஸ் மேரி.

    உதவிப்பேராசிரியர்

    கேரளப்பல்கலைக்கழகம், காரியவட்டம்

    திருவனந்தபுரம்

     

                    பெயர் அல்லது வினைச்சொற்களுடன் விகுதிகளைச் சேர்த்து ஆக்கப்படும் பெயர்ச்சொற்கள் ஆக்கப் பெயர்கள் எனப்படும்.  தமிழ் மொழியில் ஏராளமான புதிய சொற்கள் இவ்வாறே ஆக்கிக் கொள்ளப்படுகின்றன. பழந்தமிழ் இலக்கண நூல்கள் வெளிப்படையாக ஆக்கப்பெயர்களை உருவாக்கும் முறையைக் கூறவில்லை.  எனினும் 11 ஆம் நூற்றாண்டில் தோன்றிய வீரசோழியம் பெயராக்க விகுதிகளை எடுத்தியம்புகின்றன.  இக்கட்டுரை தமிழ் இலக்கண நூல்கள் கூறும் ஆக்கப்பெயர்களை மலையாள இலக்கண நூலான கேரள பாணினீயத்துடன் ஒப்பிட்டு நோக்குகின்றது.

    ஆக்கப்பெயர் – விளக்கம்

     

                    பொதுவாக பெயர் அல்லது வினைச்சொற்களுடன் விகுதிகளைச் சேர்த்து ஆக்கப்படும் பெயர்ச்சொற்கள் ஆக்கப் பெயர்கள் (Derivative) எனப்படும். தொல்காப்பியத்தில் ஆக்கப்பெயர்கள் பற்றிய விளக்கம் காணப்படவில்லை. எனினும் வடமொழிமரபைப் பின்பற்றி இடைக்காலத்தில் தோன்றிய வீரசோழியமும் பிரயோகவிவேகமும் ஆக்கப்பெயர்களை விளக்குகின்றன.  இவ்விலக்கண நூல்கள் இதனைத் தத்திதன் என்று அழைக்கின்றன. தத்திதம் என்ற சொல்லுக்கு மலையாளம் ஆங்கில மொழியகராதி Derivative,  Nominal Derivative ஆகிய பொருள்களைச் சுட்டுகின்றது

    தத்திதன் என்பது வடமொழி வழக்கு. வீரசோழியமும் கேரள பாணினீயமும்  தத்திதாந்த பதத்திற்கு (ஆக்கப்பெயர்களுக்கு) இலக்கணம் கூறவில்லை. பிரயோகவிவேகம் இதற்கு,

    துன்னும் தொடர்மொழி எல்லாம் ஒழித்து முன்சொல்தனைப் போய்

    மன்னும் பிரத்திய்யமே தத்திதாந்தம் – (பிவி.29)”

    என்று இலக்கணம் கூறுகின்றது. அதாவது முன்சொல் தன்னைத் தொடர்ந்து வரும் ஏனைய சொற்களை நீக்கி விகுதிபெற்றுத் அத்தொடர்மொழியின் பொருளை உணர்த்தும் சொல்லே தத்திதாந்தம் அல்லது ஆக்கப்பெயராகும்.

    எ.டு

                    வலையால் முயன்று உண்பவன் -> வலையன்

    இத்தொடரில் ’வலை’ என்னும் சொல் நிற்க ‘ஆல் முயன்று உண்ணும்’ என்ற தொடர்மொழி கெட்டு வலை + அன்  எனச்சேர்ந்து வலையன் என்று ஆகிறது.

    பெயராக்கவிகுதிகள் / ஆக்கப்பெயர் விகுதிகள்

                    வீரசோழியர் ஆக்கப்பெயருக்குரிய பொதுவான விகுதிகளாக அன் முதலான பதினேழு விகுதிகளைச் சுட்டிக்காட்டியுள்ளார்(வீ.சோ.52). பிரயோக விவேகமும் கேரள பாணினீயமும் ஆக்கப்பெயர்களின் வகைகளைக் கூறி அவற்றின் கீழ் பெயராக்க விகுதிகளைச் சுட்டுகின்றன.

    ஆக்கப்பெயர் – வகைகள்

    ஆக்கப்பெயர்களின்  வகைகளை வீரசோழியம் கூறவில்லை.  ஆனால் விகுதிகளை ஆண்பாற் பெயரில் வரும் விகுதி, பெண்பாற் பெயரில் வரும் விகுதி, பொருளை விளக்கும் விகுதி என மூன்றாகப் பாகுபடுத்தியுள்ளது. பிரயோகவிவேகம் தத்திதனை (ஆக்கப்பெயர்களை) மூன்றாக வகைப்படுத்தியுள்ளது. வீரசோழிய ஆசிரியர் பொதுப்படையாக விளக்கிச் சென்ற  காரிகைகளிலே கேரள பாணினீய ஆசிரியர் விளக்கும் தத்திதன் வகைகள் இடம்பெற்றுள்ளன.  கேரள பாணினீயம் வடமொழியின் அடிப்படையில் பெயர், பண்பு, சுட்டு முதலான சொற்களை அடியாகக் கொண்டு பிறக்கும் சொற்களைத் ’தத்திதம்’ என்றும் வினைச் சொற்களினின்று தோன்றும் பெயர்ச் சொற்களைக் ’கிருத்து ’என்றும் குறிப்பிடுகிறது. (கே.பா பக் 195).

    எ.டு

    தத்திதங்கள்

    புத்தியுள்ளவன்                                                        புத்திமான்

    வ்யாகரணமறியுந்நவன்                  வையாகரணன்

     

    கிருத்துகள்

    தர்சிக்குந்நவன்                      த்ருஷ்டாவு

    தர்சிக்குந்ந க்ரிய                   த்ருஷ்டி

                    வடமொழியிலுள்ள தத்திதன், கிருத்து ஆகியவை மலையாள மொழியில் காணப்படவில்லை. இருப்பினும் மலையாள மொழியில் காணப்படும் இத்தகைய ஆக்கப்பெயர்களை நான்காக வகைப்படுத்தி,  ஆக்கப்பெயர்களின் உருவாக்கத்திற்குப் பெயர், வினை, பண்பு, எண், சுட்டுப்பெயர் முதலானவற்றிற்குச் சேர்க்கப்பட வேண்டிய விகுதிகளை விளக்கிக் கூறுகிறர் ஏ.ஆர். ராஜராஜவர்மா. அடிப்படைத் தமிழிலக்கணம் என்னும் நூலில் எம்.ஏ. நூஃமான் ”பெரும்பாலான ஆக்கப் பெயர்கள் பெயர் அல்லது வினைச்சொற்களில் இருந்தே ஆக்கப்படுகின்றன” என்று குறிப்பிடுகிறார். எனினும் அவர் தரும் எடுத்துக்காட்டுகளுள் பெரும்பாலானவை பெயர், பண்பு, வினை போன்ற சொற்களில் இருந்து ஆக்கப்படுவதைக் காணலாம். கீழ்க்காணும் அட்டவணை பிரயோகவிவேகமும் கேரளபாணினீயமும் கூறும் பெயராக்க விகுதிகளின் வகைகளைச் சுட்டுகின்றது.

    வரி.எண் பிரயோகவிவேகம் கேரளபாணினீயம்
    1. சாமானிய தத்திதன் நாமநிர்ம்மாயித தத்திதம்
    2. அவ்விய தத்திதன் பூரணிதத்திதம்
    3. பாவ தத்தித்டன் தன்மாத்திரத் தத்திதம்
    4. தத்துவதத்திதம்

     

     

    சாமானிய தத்திதன் / நாமநிர்ம்மாயித தத்திதம்

     

                     பொதுப்பெயரை அடுத்து வரும் விகுதிகளைக் குறிப்பதே இத்தத்திதம். இதனைப் பிரயோகவிவேகம் சாமானிய தத்திதம் என்றும் கேரளபாணினீயம் தன்மாத்திரத் தத்திதம் என்றும் அழைக்கின்றன. வீரசோழியம் இவ்வாறு பெயரிட்டு வகைப்படுத்தவில்லையாயினும் சில பொதுவான விகுதிகளைச் சுட்டுகின்றன.

    எ.டு

    அன் – கெளரவன் – குமரமரபினன்

    இயன் – ஆதித்தியன் – அதிதிமகன்

    ஈனன் -குலீன்ன் – குலத்தினுள் விழுமியோன்

    இகன்–தெளவாரிகன் – துவாரத்தில் நிற்பான்

    ஏயன் – காங்கேயன் – கங்கையின் மகன்

    வான் – குணவான் – குணத்தை நன்றாக உடையவன்

    வதி – குணவதி – குணத்தை நன்றாக உடையவள்

     

     

    அவ்விய தத்திதன் / பூரணிதத்திதம்

                    விகுதி பெற்று வரும் இடைச் சொற்களையே அவ்வியதத்திதன் என்கிறது பிரயோகவிவேகம்.  அதாவது சுட்டுப்பெயருள் பிளந்து நில்லாத இடப்பெயர்களும், எண் முதலியவை ஏழாம் வேற்றுமைப் பொருளோடு நின்றனவும் ஆகிய ஏழாம் வேற்றுமை இடப்பொருள் உணர்த்தும் இடைச்சொற்களை அவ்விய தத்திதன் என்கிறது.

    எ.டு

    ஒருவயின், இருவயின் –எண்

    அவ்வயின், எவ்வயின் – சுட்டுப்பெயர் பிளந்து நில்லாத இடப்பெயர்

     வீரசோழியம் எண்ணுப்பெயருடன் வரும் தத்திதனை விளக்கவில்லை.  எண்ணுப்பெயருடன் ’ஆம்’ என்னும் விகுதி இணைந்த வடிவம் தமிழ் மொழியில் சங்கமருவிய காலத்திலிருந்தே காணப்படுகிறது (இரண்டாம் சந்தி  – மணிமே 30 -150) . மேலும்’’ஆவது’ என்ற விகுதி சேர்ந்த எண்ணுப்பெயர் வடிவம் (இரண்டாவது, மூன்றாவது) இன்றைய தமிழில் பயின்று வருகின்றன. கேரள பாணினீய ஆசிரியர் பூரணித் தத்திதத்தை,

                                                    ஸங்க்யா நாமத்தில்ல மென்னு

                                                    வரும் பூரணிதத்திதம் (கே.பா .94)

    என்ற நூற்பாவில் குறிப்பிடுகிறார்.   அதாவது, எண்ணுப் பெயர்களுடன் ‘ ஆம்’  என்னும் விகுதி சேரும்போது உருவாகும் பெயர்ச் சொற்களே பூரணித் தத்திதம் என்று அழைக்கப்படுகிறது.

    எ.டு

                                    ஒன்னு + ஆம் – ஒன்னாம்,

    ரண்டு + ஆம் – ரண்டாம்,

    நூறு + ஆம் – நூறாம்

     

    பாவ தத்திதன் / தன்மாத்திரத் தத்திதம்

     

    இது பண்புப்பெயர்கள் ஏற்கும் விகுதிகளைப் பற்றியதாகும்.  வலி, நெடு என்னும் குணத்தின் பின் மை, அம், பு, து, வு, கம் வல், அளவு, அதி என்னும் விகுதிகள் வரும் என்று  வீரசோழியம் கூறியுள்ளது (வீ.சோ.55). இக்காரிகைக்கு உரையெழுதும் பெருந்தேவனார் குணமாவது நெடு, முறு, கரு, பசு, வெளு, கெடு, இள, தண், வெம், அரி, எளி, பெரு, செறு, பரு, நேர்.மலி,  என இவை முதலாக வரும் என்று உரையெழுதியுள்ளார். பண்பின் முதல் நிலையோடும் ஆண், பெண் முதலாகிய பெயரோடும் மகர, ஐகாரமும் சிறுபான்மை உகரமும் பொருந்திவருவது பாவதத்திதன் என்று பிரயோகவிவேகம் கூறுகிறது. கேரள பாணினீயம் பல பண்புகளின் இருப்பிடமாகிய ஒரு பொருளின் ஒரு தனிப்பண்பை மட்டும் சிறப்பித்துக் கூறுவது தன்மாத்திரத் தத்திதம் என விளக்குகிறது.

    எ.டு

    செம்மை, சிறுமை, கறுமை,செறும, வெண்ம, புதும

     

    தத்துவத் தத்திதம்

          வீரசோழியம் தத்துவத் தத்திதனைத் தனியாகப் பெயரிட்டு விளக்கவில்லை எனினும்  தத்திதன்கள் பயின்று வரும் பதினாறு இடங்களை 53, 54 அம் காரிகைகளில் விளக்கிக் கூறுகின்றது. அவையாவன,  உண்ணும் இதனால் (வலையன்), உரைக்கும் இதனை (வேதியன் – வேதத்தினை உரைப்பவன்), உடையான் இது ( கொந்தத்தை உடையான் –கொந்தவன்), பண்ணும் இதனை (மருந்தைப் பண்ணுவான் – மருத்துவன்), பயிலும் இதனை (கூத்தன்), பயன் கொள்ளுமிதில் (வில்லி), எண்ணும் இதனை (சோதிடன்), இதனுக்கு நாயகன் (சிலம்பன்) ஈங்கு இருக்கும் (பட்டினவன்), நண்ணும் இதனை (பாண்டியன்), இதை ஒக்கும் (பொன்னன்), இங்குளன் (அகத்தன்), மகன் இவனுக்கு (ஆதித்யன்), மகன் இவளுக்கு (காங்கேயன்) இந்த வர்க்கத்தினன் (செம்பியன்), இவனைத் தெய்வமாகக் கொண்டவன் (பெளத்தன்). இன்னும் இவைபோன்ற பிறபொருளிலும் வரும் என்றும் வீரசோழியம் குறிப்பிடுகின்றது. பிரயோகவிவேகம் சாமானிய தத்திதன் வகைகளுள் இதனை அடக்கிக் கூறுகிறது.  கேரள பாணீனியம்       அது உள்ளது, அதனில் உள்ளது, அங்கிருந்து வருவது, அங்குத்தோன்றியது முதலான பொருளைக் குறிக்கும் பெயர்ச் சொற்களைத் தத்துவத் தத்திதம் என்று குறிப்பிடுகின்றது.  இத்தகைய பெயர்ச் சொற்களின்  உருவாக்கத்திற்கு அடிச் சொற்களுடன் ‘அன்’ விகுதியைச் சேர்க்க  வேண்டும் என்றும் விளக்குகிறது (கே.பா. 92). இத் தத்துவத் தத்திதன் வீரசோழியம் கூறும் வகைகள் சிலவற்றை ஒத்ததாகும்.

    எ.டு

     

     

     

    வீ.சோ/பி.வி கே.பா
    அது உள்ளது கள்ளன் கள்ளத்தனத்தை உடையவன் மூப்பன் மூப்பை உடையவன்
    அதனின் உள்ளது பாண்டியன் பாண்டிய நாட்டில் உறைபவன் ஆலங்ஙாடன் சர்க்கர
    அங்கிருந்து வருவது           – கிழக்கன் காற்று

     

    ஆக்கப்பெயர்களை வடமொழியில் தத்திதன் என்பர். வடமொழிமரபைப் பின்பற்றி தமிழில் தோன்றிய வீரசோழியமும் ஆக்கப்பெயர் விகுதிகளைப் பட்டியலிட பிரயோகவிவேகமும் கேரளபாணினீயமும் ஆக்கப்பெயர்களின் வகைகளைப் பட்டியலிட்டுக் காட்டுகின்றன. தமிழில் பிற்காலத்தில் தோன்றிய அடிப்படைத் தமிழிலக்கணம் ஆக்கப்பெயர்களை வகைப்படுத்தவில்லை. எனினும் ஆக்கப்பெயர்கள் உருவாக்கும் முறையை விளக்குகின்றது. பயன்பாட்டியல் நோக்கிலே இவ்வாக்கப்பெயர்கள் இடைக்காலத்தில் தோற்றம் கண்டன என்பது குறிப்பிடத்தக்கது. இன்று தமிழில் ஏராளமான புதிய சொற்கள் இவ்வாறே ஆக்கிக் கொள்ளப்படுகின்றன.

    பயன்பட்ட நூல்கள்

    • இளயபெருமாள்.மா –      கேரள பாணினீயம்(மொ.பெ),தமிழ்த்துறை, கேரளப் பல்கலைகழகம்,1977.
    • கோபாலையர். தி.வே – பிரயோகவிவேகம், தஞ்சை சரஸ்வதிமகால், தஞ்சை, 1973.
    • கோபாலையர். தி.வே – வீரசோழியமும் பெருந்தேவனார் இயற்றிய உரையும்,  நாச்சியார் அச்சகம், , திருச்சி,2005.
    • ராஜராஜவர்மா. ஏ. ஆர் – கேரளபாணினீயம், டிசி. புக், திருவனந்தபுரம், 2000.
    • மீனாட்சி சுந்தரம்.தெ.பொ –               Foreign Models in Tamil Grammar, Kerala University Co – operative store press, Trivandrum,1974.
    • வேலுப்பிள்ளை –      தமிழ் வரலாற்று இலக்கணம், குமரன் புத்தக இல்லம் , சென்னை, 2002.
    • ஹெப்சி ரோஸ் மேரி.அ –      வீரசோழியம் நேமிநாதம் ஓர் ஒப்பாய்வு அச்சிடப்படாத ஆய்வேடு, கேரளப்பல்கலைக்கழகம், திருவன்ந்தபுரம் – 2006

     

    Share