Tag: மு. ஜெயலட்சுமி

  • இசைப்பாடலிலே உன் உயிர்துடிப்பு – பகுதி 2

    –மு. ஜெயலட்சுமி.

     கண்ணதாசன் பிறந்தநாள் நக்கீரன் படம்

    கண்ணதாசனின் கவிதையாளுகை

    “என்றன் பாட்டுத் திறத்தாலே, இவ்வையத்தைப்
    பாலித்திடல் வேண்டும்”
    என்றான் முண்டாசுக் கவிஞன்.  இதற்கு இலக்கணமாக இவ்வுலகம் பயன்பெறக்கூடிய வகையில் தம் பாடல்களால் மக்களை ரசித்து, அவர்கள் நினைவில் நீங்காது இடம் பெற்றவர் கவிஞர் கண்ணதாசன். கவிஞர் கண்ணதாசன் சங்கப்பாடல் முதல் சிற்றிலக்கியம் வரை – தாம் படித்த கவிதைகளின் சாரத்தையெல்லாம் காதல் பாடல்களாகத் திரையில் வடித்துள்ளார்.  இவரது கருத்தாழமிக்க பாடல்கள் ஒலிக்காத விழாக்களே இல்லையென்று சொல்லாம்.  அவற்றை நாம் இங்கு காண்போம்.

    காதல் பெருமை:
    காதல் என்பது “ஒரு ஆணும் ஒரு பெண்ணும் மனதளவில் ஒருவரை ஒருவர் விரும்புவது’’ என்று மட்டும் கூறிக் கொண்டிருந்த காலக்கட்டத்தில், அந்த காதலுக்குப் பல பரிணாமங்களை வடிவமைத்துக் காட்டிய பெருமை கண்ணதாசனுக்கே உண்டு!
    உலகமெங்கும் ஒரே மொழி
    உள்ளம் பேசும் காதல் மொழி
    ஓசையின்றி பேசும் மொழி
    உருவமில்லா தேவன் மொழி !” —————-(நாடோடி)
    காதல் என்பது புனிதமானது; பெருமைக்குரியது; உலகம் முழுவதும் பரவியது என்பது கவிஞர் கண்ணதாசனின் கருத்து.  காதல் சிறப்பை, “உலகெங்கும் நிலவுவது காதல் என்று அதன் பரப்பினைக்’’ கூறுகிறார்.

    மேலும் மக்களால் போற்றப்படும் காதல், நிலையுடையது என்னும் கருத்தில் அதேப் பாடலில்
    “கோடி மனிதர் பேசிய பின்னும்
    குறைவில்லாமல் வளர்வது காதல்” ————–(நாடோடி)
    என்று காதல் தவறு உடையதன்று; அது ஏற்றுக் கொள்ளக் கூடியது.  என்றெல்லாம் எழுதிக் காதல் பெருமையைக் கவிஞர் கண்ணதாசன் வலியுறுத்துகிறார்.

    காதல் தோற்றம்:
    காதல் தோற்றம் சாட்சியினால் நிகழ்கிறது.  சாட்சி காணும் கண்கள், காதலுக்கு அடிப்படை என்பதைக் கவிஞர் கண்ணதாசன் காதல் என்றால் ஆணும் பெண்ணும் வேண்டும்.  அந்தக் காதலின் துவக்கம் கண்கள் மூலமே நிகழ்கின்றது.  கண்கள் என்ற வாசல் வழியே சென்று கருத்தினில் கலந்து இரண்டு மனங்களையும் வயப்படுத்துகின்றது காதல்.  காதலில் மனதுக்கு முன்னால் கண் செயல்படத் துவங்கி விடும், இருவரின் பார்வையும் சந்தித்த உடனேயே மனமும் அங்கே சென்று விட்டது முதலில் பார்த்தவர் யார் என்ற பேச்சுக்கே இடமின்றி `கண்டபோதே சென்றன அங்கே’ என்ற வரிகள் மூலம் இரண்டும் ஒன்றாலையே நிகழ்ந்ததாகக் கூறுகின்றார்கள்.
    “கண்கள் எங்கே நெஞ்சமும் அங்கே
    கண்ட போதே  சென்றன அங்கே’’ ——————–(கர்ணன்)
    கண்ணுக்கும் மனதுக்கும் உள்ள இந்த உறவையும் அந்த உறவின் மூலமாக வெளிப்படுகின்ற காதல் உணர்வையும் இவ்வரிகள் அழகாக காட்டுகின்றன.

    தலைவன் தலைவியைப் பார்க்கிறான்.  அவள் கனிவு முகம் இவனைக் காதல் வயப்படுத்துகின்றது.  நேற்றுவரை இவள் என் கண்ணுக்குத் தோன்றாமல் இருந்தது எப்படி? நேர் வழியாம் காதல் வழியில் செல்ல என்னை மாற்றிவிட்டாளோ என்று மகிழ்கிறான்.
    “கண்ணெதிரே தோன்றிளாள்
    கனிமுகத்தைக் காட்டினாள்
    நேர்வழியில் மாற்றினாள்
    நேற்றுவரை ஏமாற்றினாள்” ——————-(இருவர் உள்ளம்)
    அவள் கனிவுமுகம், தனியாகச் சென்ற இவள் உள்ளத்தைத் தைத்தது; மனம் மகிழ்ந்தது; இனம் புரியாத மயக்கத்தை ஏற்படுத்தியது.  இங்கே காதலை மென்மையாக காட்டுகிறார்.

    காதலின் உணர்வு:
    “சொல்லித் தெரியாது சொல்ல முடியாது
    உள்ளத்திலிருப்பது எது? – வரும்
    உறக்கத்தைக் கெடுப்பது எது?” ———————(கல்யாணியின் கணவன்)
    என்று காதலின் உணர்வை துல்லியமாகச் சொல்லியுள்ளார்.

    “ஒருத்தி ஒருவனை நினைத்துவிட்டால்
    அந்த உறவுக்குப் பெயர் என்ன?
    காதல்” —————————————(சாரதா)
    இப்பாடலில் ஒருவன் ஒருத்தியை நினைத்துவிட்டால் என்று எழுதி இருந்தாலும் இசைக்கு ஒத்து வந்திருக்கும். ஆனால் ஒருத்தி ஒருவனை நினைத்துவிட்டால் என்று அவர் எழுதியிருக்கும் காரணம், கதைப்படி காதல் வயப்பட்ட கதாநாயகிதான் காதலை தொடங்குகிறாள் என்பது ஒரு புறம் இருந்தாலும், ஒருத்தி ஒருவனைத்தான் நினைப்பாள், ஆனால் ஒருவனோ பலரை நினைப்பான் என்று, பெண்ணுக்குரிய கண்ணியத்தை உச்சியில் ஏற்றிவைத்து அழகுப் பார்த்தவர்.

    “உன்னை காணாத கண்ணும் கண்ணல்ல உன்னை
    எண்ணாத நெஞ்சும் நெஞ்சல்ல நீ சொல்லாத சொல்லும்
    சொல்லல்ல நீ இல்லாமல் நானும் நானல்ல
    இங்கு நீ யொரு பாதி நானொரு பாதி
    இதில் யார்பிரிந்தாலும் வேறென்னமீதி” —————-(இதயக் கமலம்)
    மனிதனில் ஆண்பாதி பெண்பாதி, ஒரு பாதி இன்னொரு பாதியை தேடுவது தானே காதல் !

    சுதந்திர உணர்வு:
    “சிட்டு குருவிக்கென்ன கட்டுப்பாடு
    தென்றலே உனக்கெது சொந்த வீடு
    உலகம் முழுதும் பறந்து பறந்து
    ஊர்வலம் வந்து விளையாடு
    உலகம் முழுதும் பறந்து பறந்து
    ஊர்வலம் வந்து விளையாடு” ————————(சவாலே சமாளி)
    சிட்டுக்குருவியைப் போல சுறுசுறுப்பாகவும், தென்றலைப்போல சுகமாகவும் மனித இனம் உலகம் முழுவதும் பறந்து திரிந்து இயற்கையை அனுபவித்து மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்கிறார்.  இன்பத்தை எப்பொழுதும் அடைய வேண்டும் என்ற எண்ணம் நம் உணர்வுகளில் கலந்த ஒன்று.  அதற்கு கட்டுப்பாடு இல்லாது இருக்க வேண்டும்.  இதில் கவிஞரின் சுதந்திர உணர்வை வலுப்படுத்துகிறது.

    இளமைக் காதல்:
    காதலுக்கு நிலைக்களனாகிய இன்பம் எல்லா உயிர்க்கும் உண்டு.  கீழுள்ள இந்த வரி கவிதை கருத்துக்கு மேலும் வலு சேர்க்கிறது.  மார்கழி மாதத்தில் பனி இல்லாமலும், மன்னராக இருப்பவன் படைபலம் இல்லாமலும், இனிப்புச் சுவை இல்லாத முக்கனிகளும், இசை இல்லாத முத்தமிழும், கலையில்லாத நாடகமும் எப்படி இருக்க முடியாதோ அப்படித்தான் வாலிபத்திலும் காதல் இல்லாமல் இருக்காது என்று ஒற்றை வரியில் சவால் விடும் அளவிற்கு காதலுக்கு ஆட்படாத வாலிப நெஞ்சமே இல்லை என்று கூறுகிறார்.
    “காதல் இல்லாத வாலிபமா?’’ ————-(ஆனந்த ஜோதி)
    என்றும்,
    உடம்பு தளர்ந்தாலும், தோல் சுருங்கிப் போனாலும், தன் தலைவி மீது அன்பு ஊறிக் கொண்டே இருக்கவேண்டும்.  அதுதான் முழுமையான – செழுமையான காதல் என்கிறார்.  இதையே…

    “இளமையிலே காதல் வரும்
    எதுவரையில் கூட வரும்?
    முழுமைபெற்ற காதலெல்லாம்
    முதுமைவரை ஓடி வரும்” –——————-(திருடாதே)
    என்கிறார். காதல் தலைவி, தன்னுள் காதல் தோன்றிய இரகசியத்தை தன் தலைவனுக்கு உரைக்கிறாள்.  அதில் இளம்பருவத்தை உடைய தலைவனிடம், இளமைப் போய் முதுமை சேர்ந்தாலும், இருவர் காதலும் மாறாது என்று காதல் கோட்பாடுகளை எடுத்துக் காட்டியுள்ளார்.

    “இளமையின் இன்ப ரகசியம்
    இயற்கையில் வந்த அதிசயம்
    இதை வாழ்ந்து பார்த்தவர் ஆயிரம்
    அதில் நாமும் இன்றொரு காவியம்
    இந்த இளமை போகலாம் முதுமை சேரலாம்
    இருவர் காதலும் மாறுமோ?”——-(காதலிக்க நேரமில்லை)
    என்றும்…

    “காதலுக்கு ஜாதி இல்லை மதமும் இல்லையே,
    கண்கள் பேசும் வார்தையிலே பேதமில்லையே
    வேதமெல்லாம் காதலையே மறுப்பதில்லையே
    மேகம் செய்த உருவம் போல மறைவதில்லையே?” —-(பாவ மன்னிப்பு)
    என்றும் காதலில் வாய் பேசுவதைவிடக் கண்கள் பேசுவதே அதிகம்.  எந்த ஆணுக்கும் அல்லது பெண்ணுக்கும் இதில் வேறுபாடு இல்லை.  வானில் நீந்திச் செல்லும் மேகங்கள், நம் கற்பனைக்கேற்ற உருவத்தைக் காட்டும்; ஆனால் அந்த உருவங்கள் சற்று நேரத்தில் கலைந்து விடும்.  ஆனால் காதல் அப்படிக் கலைவதில்லை என்கிறார்.

    “இதயம் பொல்லாது
    கண்ணெதிரே பெண்ணழகை
    கண்ட பின்னே இளமைவேகம்
    கொள்ளாமல் நில்லாது”—————————-(இதயம்)
    என்பன போன்று காதல் அற்புதத்தைக் கோடிட்டு; பலவித காதல் கவிதைகளை இயற்றியுள்ள பெருமையும் இவருக்குத்தான் உண்டு.

    கனவாகும் காதல்:
    கவியரசு கண்ணதாசன் 1948-இல் திரையுலக வாழ்க்கைக்கு வந்தார்.  `கன்னியின் காதலி’ என்னும் திரைப்படத்திற்காகத் தம் முதல் பாடலை எழுதினார்.  படத்தின் பெயரிலேயே காதல் அமைந்தக்காரணத்தினால் காதலிலேயேத் தொடங்கினார்.  ஆண் வேடம் தரித்த பெண், மற்றொரு பெண்ணுக்கு ஆறுதல் கூறுவது போல் உள்ள சூழலுக்கு,
    “கலங்காதிரு மனமே – நீ
    கலங்காதிரு மனமே – உன்
    கனவெல்லாம் நனவாகும்
    ஒரு தினமே’’ –——————–(கன்னியின் காதலி)
    என்று எழுதினார்.

    தலைவன் தலைவியின் அழகை வர்ணிக்கும் விதம் மென்மையைக் குறிக்க, `அவள் காற்றினில் பிறந்தவள்’ என்று சொன்னதே கற்பனைதான்.  கற்பனையே கற்பனை செய்து இவளை வடித்தது என்பது ஆதிதமான கற்பனை.  பொதுவாக எந்த பெண்ணும் இன்னொருத்தி தன்னை விட அழகானவள் என்று ஒப்புக்கொள்ளமாட்டாள்.  ஆனால் இவளோ, மற்றொரு பெண்ணே இவள் மீது ஆசை கொள்ளும் அளவிற்கு அழகானவளாம்!

    “காற்றினில் பிறந்தவளோ புதிதாய்க்
    கற்பனை வடித்தவளோ?
    …………………….
    பெண்ணுக்குப் பெண்ணே பேராசை கொள்ளும்
    பேரழகெல்லாம் படைத்தவளோ?” —————- (மாலையிட்டமங்கை)
    என்று காதலன் தலைவியை வர்ணிக்கும் கவித்திறன் அருமையிலும் அருமை.

    காதலியின் கோபமும் காதலனின் கேள்வியும்:
    நிலவையும், காதலையும் சேர்த்துப்பாடாத கவிஞர்களே இல்லையெனலாம்.  காதலன் நேரம் கழித்து வந்து விட்டான்.  வந்தது மட்டுமல்லாமல், காதலியின் மனதுக்கு விருப்பமில்லாத வகையில் நடந்து கொள்கின்றான்.  காதலிக்கு கோபத்தால் முகம் சிவந்து விடுகிறது.  ஆசையாக தொட வந்தவனையும் தவிர்க்கின்றாள்.  நிலவின் குளிர்சியை உடையவளுக்கு, நெருப்பாக எரியும் கோபமும், மலரைப் போன்ற மென்மையானவள் முள்ளாய் மாறியதற்கு என்ன காரணம் என்று கேட்கிறான்.  இதையே
    “நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்
    நெருப்பாய் எரிகிறது
    இந்த மலருக்கு என்மேல் என்னடி கோபம்
    முள்ளாய் மாறியது” ———————- (போலீஸ்காரனின் மகள்)
    என்று வளமான கற்பனை உடையவராக கவிஞர் கண்ணதாசன் மிளிர்கிறார்.  சூழலையும் மனோபாவத்தையும் பொறுத்துதான் காதல் கூட இனிமையாய் இருக்கும் என்று சுட்டுகிறார்.

    பண்பாடு மாறாத காதல்:
    காதல் கொள்கிறாள் காதலி. காதலனோ, ஏற்கனவே திருமணமாகி மனையாளைப் பறிக்கொடுக்கிறான்.  அவனை தன் காதலனாக நினைத்து அவனிடம் அன்பாகப் பேசி நெருங்குகிறாள்.  அவனுக்கோ காதலில் மனம் செல்லவில்லை.  இருப்பினும் அவன், அவள் மனதை புண்படாதவாறு தன் கருத்தை வெளிப்படுத்துகிறான்.  எந்த ஒரு சூழ்நிலையிலும், நம் பக்கத்து நியாயத்தையும் மனநிலையையும் எடுத்து வைக்க முடியும் என்பதை இந்த வரிகள் காட்டுகின்றது.
    “நிலவே என்னிடம் நெருங்காதே
    நீ நினைக்கும் இடத்தில் நான் இல்லை..
    மலரே என்னிடம் மயங்காதே
    நீ மயங்கும் வகையில் நான் இல்லை “—————————-(ராமு)

    நான் நீ யாவது நீ நானாவது:
    காதல் செய்யும் போது கருத்து வேறுபாடுகள் வரலாம்.  அந்த நேரத்தில் நீ நீயாகவும், நான் நானாகவும் இருந்தால் பிரச்சினையை எளிதில் தீர்க்க இயலாது.  அதனால் நான் நீயாகவும், நீ நானாகவும் இருந்தால் பிரச்சினையைப் புரிந்து கொண்டு அதை தீர்க்க முடியும் என்கிறார். கவிஞர் இங்கு “உலகங்கள்” என்று ஏன் சொல்கின்றார் என்றால், சமுதாயத்தில் சொந்தம் பந்தம் போன்று பல்வேறு தளங்களில் மனிதனுக்குக் கடமைகள் உள்ளன.  இப்படி இருவரின் கடமைகளிலும் பொறுப்புகளிலும் ஒன்றாகின்ற நிலைதான் காதலின் உயர்நிலை, நீ எந்த கோணத்தில் புரிந்து கொள்கிறாயோ, அந்தக் கோணத்தில் தான் எனக்கு புரிய வைக்க முடியும்.  நானும் புரிந்துக் கொள்ள முடியும் என்கிறார்.
    “நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்
    நாளோடும் பொழுதோடும் உறவாட வேண்டும்
    நான் காணும் உலகங்கள் நீ காண வேண்டும்
    நீ காணும் பொருள் யாவும் நானாக வேண்டும் “————(பாலும் பழமும்)

    புதுமையான காதல்:
    அங்கம் சிறிது குறையுடைய ஆடவனை மங்கை ஒருத்தி மணக்க நேரிடுகிறது.  ஆனாலும் அவள் மனம் அதற்காக வருந்தவில்லை, மற்றொருவனை நாடி ஓடவில்லை.  உறுப்புக் குறைந்தவர்களை காதலர்களாகப் பாடப்பெறுவதில்லை.  கண்ணதாசன் இதிலும் புதுமையை காட்டுகிறார்.  மங்கையர் உள்ளம் அங்கம் குறைந்தவனைக் காதலிக்க மறுப்பதில்லை என்று அங்கக் குறைவு அன்புமிகு காதலுக்கு தடையில்லை என்றும், உண்மைக் காதலை சமுதாயத்தின் உச்சியில் ஏற்றி வைத்து அழகுப் பார்த்தவர்.
    “தங்கத்திலே ஒரு குறை இருந்தாலும்
    தரத்தினில் குறைவதுண்டோ? – உங்கள்
    அங்கத்திலே ஒரு குறை இருந்தாலும்
    அன்பு குறைவதுண்டோ?”————————-(பாகப் பிரிவினை)
    என்றும்,

    “கைகால் விளங்காத
    கணவன் குடிசையிலும்
    காதல் மனம் விளங்க வந்தாள் அன்னையடா” ———-(பாகப் பிரிவினை)
    என்று குழந்தையை தாலாட்டும் போதும், தன்னுடைய மகனுக்கு அங்கக் குறைவினை எடுத்துச் சொல்லி காதல் மனத்தையும் தாலாட்டுப் பாடலுடன் சேர்த்து வெளிப்படுத்திய திறன் கவிஞர் கண்ணதாசனுக்கு மட்டுமே உரிய சிறப்பாகும்.

    பெண்மை தாய்மையில் நிறைவுறுகிறது:
    ஒரு மனிதன் பிறக்கும் போது இருந்தே அவனுடைய இன்ப துன்பங்கள் ஆரம்பித்து விடுகின்றன. கவியரசரின் கவிதையில் தத்துவக் கருத்துக்கள், பிறப்பிலிருந்து தொடங்குகிறது.
    “தந்தை தவறு செய்தார்
    தாயும் இடம் கொடுத்தாள்
    வந்து பிறந்து விட்டோம்
    வெறும் பந்தம் வளர்த்து விட்டோம்”-———(அவன்தான் மனிதன்)
    என்ற வரிகள் பிறப்பையும், பந்தத்தையும் எடுத்துக்காட்டுகிறது.  இங்கே “தாயும் இடம் கொடுத்தாள்” என்பது, தந்தைக்கு மட்டுமல்ல, நாம் இருந்து வளர்வதற்கும் தாய் கருவரை எனும் இடம் கொடுத்தாள் என்கிறார்.  இதில் பெண்மை தாய்மையில் நிறைவு பெறுவதை குறிப்பால் மிக அழகாக உணர்த்துகின்றார்.

    முடிவுரை:
    ‘காதல்’ என்ற பாடுபொருளை கவிஞர் கண்ணதாசன் எங்கனம் தம்முடைய திரையிசைப் பாடல்களில் மிகவும் திறம்பட நயமுடன் எடுத்தாண்டுள்ளார் என்பது தெரிகிறது.  தாம் கற்றறிந்து போற்றிய, தம் உள்ளம் கவர்ந்த இலக்கியத் தொடர்களை எளிய தமிழ் மக்களுக்கு அறிமுகப்படுத்தும் கவிஞர் கண்ணதாசன் கவின்மிகு பாங்கு எண்ணியெண்ணி மகிழத்தக்கதாகும்.  தமிழ் இலக்கியத்திற்க்குள் புதைந்து கிடந்த காதல் இன்பத்தை பாமர மனிதரின் சிந்தனைக்கு எட்டும் வண்ணம் செதுக்கிய பெருமை கவிஞர் கண்ணதானையே சாரும் என்பதை யாரும் மறுக்கவே முடியாது.

    படம் உதவி நக்கீரன் இணையதளம்: http://www.nakkheeran.in/users/frmGallery.aspx?G=41226&GS=4&GV=1972

    Share
  • இசைப்பாடலிலே உன் உயிர்துடிப்பு – பகுதி 1

    –மு. ஜெயலட்சுமி.

    கண்ணதாசன் பிறந்தநாள் நக்கீரன் படம்

    திரையிசைப் பாடல்களில் திருக்குறள்

     

    முன்னுரை:
    கவியரசு கண்ணதாசன் அவர்கள் திரைப்படங்களுக்குப் பாடல்கள் ஏராளமாகப் புனைந்ததன் மூலம் இன்றும் நிலைத்த புகழ் பெற்றவராய் விளங்குகிறார்.  பாமரரும் புரிந்துக்கொள்ளக் கூடிய எளிய தமிழில் நல்ல கருத்துக்கள் பலவற்றை உள்ளடக்கிப் பாடல்கள் படைத்துள்ளார்.  அவர் எழுதியுள்ள பாடல்கள் பலவும் மக்கள் மனதில் என்றென்றும் நிலைத்து நிற்கும் வல்லமைப் பெற்றது.  ஒரு கவிஞன் தன் கவிதையைச் சிறப்படையச் செய்ய எண்ணினால் சொற்களை இடமறிந்து கையாளும் திறம் மிக்கவனாக இருத்தல் வேண்டும்.  கவிஞரவர்கள் சொற்களை இடமறிந்து பொருளோடு பயன்படுத்துவதில் திறமைமிக்கவராய்த் திகழ்கிறார்.  கவிஞர் நல்ல சொல்லாட்சியோடு தகுந்த வடிவில் கற்பனை மிளிர்ந்திடப் பிறந்தமையால் இன்றும் அவர் படைப்புகள் புகழ் ஓங்கி நிற்கின்றன.

    என்னுடைய பேனாவிலிருந்து சிந்தும் மை பணமாகாமற் போனாலும் போகலாம்; சரித்திரமாகாமற் போகாது” என்கின்ற தன்னம்பிக்கை கவிஞருக்கே உரிய தனித்தன்மை.  ஒரு கவிஞனின் சிறப்பை, அவன் வாழ்ந்த காலத்தைக் கொண்டே நிர்ணயிக்க வேண்டும்.  இன்று என் பாடல்களை நான்கு கோடி மக்கள் ரசிக்கின்றார்கள்; பாடுகிறார்கள்.  அதைக் கண்ணால் பார்க்கும் போதும், காதால் கேட்கும் போதும் எனக்கு உற்சாகம் பெருக்கெடுத்து ஓடுகிறது.  அதனால் மேலும் மேலும் நான் எழுதுகிறேன் என்று குறிப்பிடுகிறார்.

    பொறுமை:
    காலம் காலமாய் பொறுமையைக் கடைபிடித்து ஒரு தாய் இந்த மண்ணின் பெருமையை காப்பாற்றி வருகின்றாள்.  இந்த பண்பு அவளின் பிறப்பிலேயே வந்தது என்பதைக் கவிஞர்
    “மண் வளர்த்த பொறுமையெல்லாம் மனதில் வளர்த்தவளாய்
    கண்மலர்ந்த பெண்மயிலை நானடைந்தேன்
    நீ வளர்ந்து மரமாகி நிழல்தரும் காலம் வரை
    தாய் மனதைக் காத்திருப்பேன் தங்க மகனே” ……………………………. (பாகப்பிரிவினை)
    என்ற வரிகளின் மூலம் தந்தை தன் மகனுக்கு தாயின் பெருமையைச் சொல்லி அவனுடைய கடமையை உணர்த்துவதை அழகாக படம் பிடித்துக் காட்டுகிறார் கவிஞர்.

    “அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
    இகழ்வார்ப் பொறுத்தல் தலை”.……………………………………………………………. (குறள் – 151)
    என்பது வள்ளுவரின் வாக்கு.

    பலவகை கருவிகளைக் கொண்டு தன்னை அகழ்கின்ற மக்களுக்கு, வாழ்க்கைக்குத் தேவைப்படும் அனைத்துப் பொருள்களையும் கொடுத்துக் காப்பாற்றுகின்ற நிலத்தைப் போன்று, தன்னை அவமதித்துத் துன்புறுத்துபவர்களையும் பொறுத்துக் கொண்டு அவர்களுக்கு உதவி செய்வதே தலையாய பண்பு.

    காதல்:
    சங்க காலம் முதற்கொண்டு அனைத்து இலக்கியங்களிலும் காதல் வரிகள் இல்லாமலில்லை.  இன்னும் சொல்லப்போனால் காதல் இல்லாத இலக்கிய பக்கங்களே இல்லை என்று கூறுமளவிற்கு “காதலை” அழகுபடக்  கையாண்டிருக்கின்றனர். “உலகப் பொதுமறை” என்று சிறப்பித்து கூறப்படும் வள்ளுவம் கூட தன்னுள் மூன்றில் ஒரு பங்கு இடத்தை காதலுக்கு என்று ஒதுக்கி வைத்து புகழ் சேர்க்கிறது.

    காதல் என்னும் மாளிகைக்கான கதவுகளின் திறவுகோல்தான் கண்கள் என்கிறார் கவிஞர்.  கண்கள் பேசுவதாகவும், அப்படி பேசுவதை மொழியாகவும், கண்களின் அசைவை சிரிப்பாகவும் வர்ணித்தவர் கவிஞர்.
    “நிலவென்ன பேசும், குயிலென்ன பாடும்
    மலரென்ன சொல்லும் மனதிலே!
    கதை பேசுமோ, இன்பக்கவி பாடுமோ இங்கு
    கண்ணோடு கண் சொல்லும் மொழியிலே”.……………………………… (ராணி சம்யுக்தா)
    இப்பெருமைமிகு காதலின் துவக்கத்திற்கு, கொடியசைத்து வரவேற்பிதழ் அளிக்கும் கண்கள் எந்த அளவு பெருமை கொண்டதாய் இருக்க வேண்டும் என்று சிந்திக்கிறார் கவிஞர்.

    வள்ளுவரோ,
    “எண்ணெண்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
    கண் என்பவாழும் உயிர்க்கு”.……………………………………………………………….. (குறள் – 392)
    என்று எண் அறிவு, எழுத்தறிவு, அதாவது கணக்கு, இலக்கியம் இரண்டும் மக்களுக்குக் கண்ணெணப் போற்றிப் பாராட்டத் தக்கவையாகும் என்கிறார் அத்துடன் நில்லாது கண் உடையவர் மட்டுமே அறிவிற்சிறந்தவர் என்றும், அறிவு அற்றவர்கள், கண்கள் பெற்றவராயிருந்தும், அக்கண்கள், முகத்தில் தோன்றிய புண்கள் என்றும் சுட்டுகிறார்.  இதிலிருந்து கண்களின் பெருமை தெரிகிறது.
    “கண்ணுடையவர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு
    புண்ணுடையவர் கல்லா தவர்”……………………………………………………………. (குறள் – 392)

    காதலே பெருமை கொண்டது.  அப்பெருமை மிகு காதலைக் கொள்வது கண்கள்! அதனால் தலைவன் தலைவியை கீழ்கண்ட பாடல் மூலம் வர்ணிக்கிறார்.
    “பொன்னென்பேன் – சிறு
    பூவென்பேன் – காணும்
    கண்ணென்பேன் – வேறு
    என்னென்பேன்?”…………………………………………………………………. (போலீஸ்காரன் மகள்)
    என்று தன் காதலியை ‘கண்’  என்று வர்ணிக்கிறார்.
    கண்களின் உயிரே பார்வைதானே! பார்வையற்ற கண்கள் இருந்தென்ன பயன் விளையும்?  அந்த பார்வைதானே தலைவனை காதல் கொள்ளவைத்தது.  அதனால் தலைவி பதில் உரைக்கிறார்.
    “………………கண்கள்
    நானென்றால் – பார்வை
    நீயென்பேன்!”………………………………………………………………………….. (போலீஸ்காரன் மகள்)
    அதாவது, நான் கண் என்றால், நீ அதன் பார்வை என்று! இந்த மேன்மைக்கு பதிலைப் பெற்ற தலைவன், தான் அவள் கண்களில் கலந்திருப்பதாக கூறுகிறான்.

    தலைவியிடம் காதல் பிறந்தது என்பதை உணர்ந்த காதலன், அந்த காதலை எப்படி உறுதி செய்வது என்று தலைவியைப் பார்த்து, தான் கொடுத்த பார்வைக் கேள்விகளுக்குப் பதில் கேட்கிறாள்.
    “எந்தன் – பார்வையின் கேள்விக்கு
    பதிலென்ன சொல்லடி ராதா! ……………………………………………………………….. (சுமைதாங்கி)
    என்று கேட்க, அதற்கு தலைவி, என் பார்வையே, உன் பார்வையின் கேள்விக்குப்பதில் என்று, கூறி தலைவனை காதலில் மூழ்கடிக்கிறாள்.
    “உந்தன் – பார்வைக்குப் பார்வை
    பதிலாய் விளைந்தது ராஜா!”  ……………………………………………………………….. (சுமைதாங்கி)
    காதலின் துவக்கமே பார்வையில் தான்.  அதற்கு மாற்றுக்கருத்து இல்லை.

    தலைவி, தன் காதலனைப்பார்க்கும் போது, தன் கண்ணைச் சுருக்கிக் கொண்டு, பார்ப்பதை, கவிஞர் கண்ணதாசன் பாதி கண்மூடி, பின் திறந்து பார்ப்பதாகக் கூறுகிறார்.  அந்த பாதிப்பார்வையே தலைவனுக்குக் காதலை ஏற்படுத்தி விருந்து படைக்கிறது.  அந்த பாதிக்கண் பார்வையிலேயே காதல் வலைவீசி, காதல் சிறையில் தலைவனை அடைத்துவிட்டாளாம் அந்த தலைவி,
    “பாதிக்கண்ணை மூடித்திறந்து
    பார்க்கும் பார்வை காதல்விருந்து !
    …………………………..
    சின்னக் கண்ணில் என்னை அடைத்தாள் !”……………………………….. (இது சத்தியம்)
    மற்றும்,
    “பாதிகண்களை மூடித்திறந்து பார்ப்பதில் இன்பம்” ……………… (எங்கள் தங்கராஜா)
    என்பன போன்ற பல புதுப்புது பரிமாணங்களை, இந்த இருபதாம் நூற்றாண்டில் நம் கண்ணுள்ளே கோடிட்டுக் காட்டியவர் கவியரசு கண்ணதாசன்.

    இக்கருத்தை வள்ளுவபெருமான்,
    “குறிக்கொண்டு நோக்காமை அல்லால், ஒருகண்
    சிறக்கணித்தாள் போல நகும்”………………………………………………………….. (குறள் – 1095)
    என்பதன் மூலம், தலைவன், தன் மீது குறிப்பாய் இருப்பதைப் பிறர் அறியுமாறு பார்க்காமல் விடுத்து, நான் மட்டும் அறிந்து கொள்ளுமாறு கடைக்கண்ணைச் சிறிதே மூடி, இமைகளை படபடவென இமைத்து நகைப்பாள், என்கிறான். இதில் நகும் என்ற வார்த்தை, அவளாக நினைப்பதாகப் பொருள் கூறாது.  ஒரு கண் சிறக்கணி ஆவதால், உதடு நகுகிறது.  அதற்குக் காரணம் தலை சற்றே சாய்ந்துள்ளதாம்.  அது, சரசக்கலையில் ஒரு வகையாம்!

    “பாயுது பாயுது கண்ணம்மா
    பதுங்குது பதுங்குது பொன்னம்மா,
    சாயுது சாயுது தலையம்மா
    சரசத்திலே ஒரு வகையம்மா!
    பொண்ணாப் பொறந்தவ நானம்மா
    ஆசை வராதா சொல்லம்மா?” …………………………………………………………….. (மணியோசை)

    இங்கு தலைவி, நான் பெண் என்பதால், ஆசைவரக் கூடாதா?  என்று வினாவும் எழுப்புகிறாள்.  காதலில் சரசத்தின் விளைவால், தலை “சற்றே” சாய்தலையும் குறிப்பிடுகிறார்.
    “தங்கச்சி சின்னப்பொண்ணு
    தலை என்ன சாயுது!” ………………………………………………………………………….. (கறுப்புப் பணம்)
    என்றும்,
    “காற்று வந்தால் தலை சாயும்?
    நாணல்
    காதல் வந்தால் தலை சாயும்?
    நாணம்!” ……………………………………………………………………………………… (காத்திருந்த கண்கள்)
    இவ்வரிகளிலிருந்து, காதல் வரும்போது, கண்ணியர்க்கு நாணமும் உடன் வந்து விடுகிறதென்றும் நாணம் வருவதென்பது காதலில் தலை சாய்வதின் தொடர்ச்சி என்றும் தலைவியின் தவிப்புகளைப் பல பரிமாணங்களில் காட்டிய கவிஞர் கண்ணதாசன் நாணத்தில் தலை சற்றே சரிவதாகக் காட்டி அது காதலின் வெளிப்பாடு என்கிறார்.

    காதல் என்பதை சரிவரப்புரிந்து கொள்ள முதிர்ச்சி இல்லாத நிலையில்,  இச்சமூகம் இருந்த போதும், உலகம் என்ன சொல்லும் என்பதைப் பற்றி கவலையே படாமல், தன் உள்ளம் சொல்வதையே வெளிப்படுத்திய உண்மைக் கவிஞன் என்பது மறுக்க இயலா உண்மை!

    குடும்பம்:
    ஒரு குடும்பத் தலைவர், குடும்பத் தலைவி என்றால் இருவரும் கருத்து வேறுபாடு இல்லாமல் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து குடும்பம் நடத்தினால் அது ஒரு பல்கலைக்கழகத்திற்கு சமம்.
    “நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம்
    அன்புமணி வழங்கும் சுரங்கம் வாழ்க வாழ்க” …………………………….. (தங்கப்பதக்கம்)
    என்று திரையிசைப் பாடலில் கவிஞர் கண்ணதாசன் குறிப்பிட்டுள்ளார்.

    இதையே வள்ளுவப் பெருந்தகை,
    “அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
    பண்பும் பயனும் அது”………………………………………………………………………………..(குறள் – 45)
    என்று வலியுறுத்துகிறார்.  இதற்கு மாறாக நடந்தால் குடும்பம் என்பது இன்பத்திலிருந்து மருவி கொடுந்துன்பமாக மாறிவிடும் என்கிறார்.

    மழலைச் செல்வம்:
    “குழலினிது யாழினிது என்பர் தம்மக்கள்
    மழலைச் சொல் கேளாதவர்”…………………………………………………………………….(குறள் – 66)
    தம் குழந்தைகளின் மழலைச் சொல் பெற்றோர்க்கு குழல், யாழ் இரண்டின் இசையை விட மிகுந்த இன்பம் பயப்பதாகும்.  குழந்தைப் பேற்றால் மகிழ்ந்தோர் தன் மனம் மகிழுமாறெல்லாம் உருவகப்படுத்தி மகிழ்வர், அவ்வாறே கவிஞரும் மகிழ்கிறார்.

    கவிஞன் என்பவன் வெள்ளை உள்ளமும் உயரிய பண்புகளும் கொண்டவனாவான்.  மக்களின் கண்களுக்கு தெரிகின்ற பொருள்கள் கவிஞரின் கண்களுக்குப் பாடுபொருளாக மாறி, கண்களுக்குத் தனிப்பட்ட உணர்ச்சியைத் தூண்டிக் கவிபாட வைக்கும்.
    “மீட்டாத வீணை இது வீசிவரும் தென்றல்
    வாடாத முல்லை இது பாடிவரும் தேனீ
    தெவிட்டாத இனிமை இது திகட்டாத புதுமை
    பளிங்கான பதுமை இது பழகாத இளமை”.……………………………. (தென்றல் வீசும்)
    எனக் கவிஞர் பெண் குழந்தையை உருவகித்துள்ள திறம் புலப்படுகிறது.

    “முத்தான முத்தல்லவோ
    முதிர்ந்து வந்து முத்தல்லவோ
    கட்டான மலரல்லவோ
    கடவுள் தந்த பொருளல்லவோ!” ………………………………………..(நெஞ்சில் ஓர் ஆலயம்)
    எனவும் குறிப்பிடுகிறார்.  கவிஞருக்கு தாய்மை என்ற உணர்வில், தாலாட்டு என்ற முத்துப் பிறக்கின்றது.
    கவியரசரின் நல்ல சொல்லாட்சியோடு தகுந்த வடிவில் கற்பனை மிளிர்ந்திடப் பிறந்தமையால் இன்றும் அவர் படைப்புகள் புகழ் பூத்துத் திகழ்கின்றன.

    கவியரசர் கண்ணதாசன் ஒரு மாபெரும் கவிஞன்.  பண்டிதத் தமிழைப் பாமரர்களுக்கும் சாசனம் செய்தவர்.  தற்போது நாம் வாழும் காலத்தில் கம்பனுக்கு அடுத்தபடியாக கவியரசர் கண்ணதாசன் போன்று மக்கள் மனதை ஈர்த்த கவிஞர் பூவுலகில் நாம் கண்டதில்லை.  எமக்குத் தொழில் கவிதையென்று பாடிய பாரதிபோல்
    “இசைப்பாடலிலே என் உயிர்துடிப்பு, நான் பார்ப்பதெல்லாம் அழகின் சிரிப்பு”
    என்று கவியரசர் கண்ணதாசன் தன்னைப்பற்றிக் கூறியுள்ளார்.  கண்ணதாசனின் உயிர் துடிப்பையும், அவர் கவிதை அழகின் சிரிப்பையும் நாள்தோறும் தமிழ் கூறும் நல்லுலகெங்கும், பட்டித் தொட்டிகளில், கற்றவர் கல்லாதவர் பேதமின்றி அவர் பாடலை கேட்டு மயங்குவதில் இருந்தே நாம் தெரிந்துக்கொள்ளலாம்.

    (தொடரும் …)

    படம் உதவி நக்கீரன் இணையதளம்: http://www.nakkheeran.in/users/frmGallery.aspx?G=41226&GS=4&GV=1972

    Share