Tag: ராஜலக்ஷ்மி பரமசிவம்

  • என் பார்வையில் கண்ணதாசன்

    –ராஜலக்ஷ்மி பரமசிவம்

    என் பார்வையில் கண்ணதாசன்

    Kannadasanகண்ணதாசன் பாடல்கள், கவிதைகள் பற்றிய கட்டுரைப் போட்டியில் சேர்ந்து கொள்வது என்று தீர்மானமான பின்தான் யோசிக்க ஆரம்பித்தேன். கவியரசைப் பற்றிய கட்டுரையை நான் எழுதுவதா…….. ……சற்றே தயங்கி ஓடி ஒளிந்து கொண்ட மனசாட்சியைப் பிடித்து இழுத்து வைத்து , “கவிதை என்பது மெத்தப்படித்தவர்கள் மட்டுமே படித்து ரசிப்பது என்கிற நிலைமையை மாற்றி பாமரரையும் சேரும் விதமாய் கவிதை எழுதியவர் நம் கவிஞர். அதனால் நீ ரசித்த அவருடைய கவிதைகள் பற்றி எழுத என்ன தயக்கம்?” என்று மனசாட்சியை சமாதானப்படுத்தி விட்டு எழுத அமர்ந்தேன்….

    அடுத்த பிரச்சினை தலை தூக்கியது…

    எந்த விதமான கண்ணதாசன் பாடல்களைப் பற்றிக் கட்டுரை வடிப்பது என்று அலைபாய்ந்து கொண்டிருந்தேன். காதலா, வீரமா, ஆன்மீகமா, தத்துவமா, தேசப்பற்றா, சமுதாய அக்கறையா …. ….எதைப் பற்றி எழுதுவது எதை விடுவது. கவியரசு எழுதிக் குவித்திருப்பவை எண்ணற்றவை. ஏராளமோ ஏராளம். அத்தனையும் முத்துக்களே. அதில் தனியாக ஒரு தலைப்பை எடுத்துக் கொண்டால் மற்றவை விடும்படி ஆகிவிடுமே என்று தோன்ற நாம் ஏன் என்னைப் பாதித்த , பிடித்த, நான் மயங்கிய பாடல்கள் என்று எடுத்துக் கொண்டால் என்ன என்று தோன்ற அப்படியே கட்டுரை எழுத ஆரம்பிக்கிறேன்.

    மீண்டும் ஒரு சுணக்கம். எனக்குப் பிடித்த கவிஞரின் பாடல்களோ ஏராளம். எதைச் சொல்ல…. எதை விட…..மிகசிலப் பாடல்களை பற்றி எழுத நினைத்தேன்.

    ஒரு சில பாடல்கள் என்னுள் ஏற்படுத்திய தாக்கத்தைத் தொகுத்துக் கட்டுரையாக எழுதுகிறேன்.

    நான் பள்ளி செல்லும் வயதில் , சினிமா பார்ப்பதும், சினிமா பாட்டு கேட்பதும் இமாலயக் குற்றம் என்கிற நிலை இருந்த நாளில் கூட என் மனதில் புகுந்த கொண்ட பாட்டு,

    அம்மா என்பது தமிழ் வார்த்தை
    அதுதான் குழந்தையின் முதல் வார்த்தை
    கவலையில் வருவதும் அம்மா அம்மா

    அன்றைய சிறு வயது சங்கடங்களுக்கு மட்டுமா “அம்மா அம்மா “. இன்றும் கூட நான் சவால்களை எதிர் கொள்ளும் போதும், கவலைகளில் நான் மூழ்கும் போதும் தெம்பு தருவது ” அம்மா ” என்கிற வார்த்தை தான். எத்தனை நிதரிசனமான உண்மை. அதை அழகிய பாட்டாய் வடித்து நமக்குள் ஊற்றெடுக்கும் தாய் பாசத்தை நாமே உணரும்படி செய்தது இந்தப் பாட்டு என்று சொன்னால் மிகையாகாது. அந்த சிறு வயதில் என்னைப் பாதித்த மற்றுமொரு பாட்டு என்று சொன்னால் அது இந்தப்பாட்டு .

    அகர முதல எழுத்தெல்லாம் அறிய வைத்தாய் தேவி
    ஆதி பகவன் முதலென்றே உயர வைத்தாய் தேவி 

    சரஸ்வதி சபத்தத்தில் வரும் இந்தப் பாட்டு நம் மனதை உருக வைத்தப் பாடல்களில் ஒன்று. இந்தப் பாட்டுக் காதில் விழுந்தாலே நம் கண் முன் சரஸ்வதியின் உருவம் வருவதைத் தடுக்க முடியாது. அத்தனை வலிமை வாய்ந்த வரிகள். இருபது முப்பது வருடங்களுக்கு முன் இந்தப் பாட்டு மிக மிகப் பிரபலம். பல சிறுவர் சிறுமிகளின் மனதைத் தொட்ட பாட்டு என்றே சொல்ல வேண்டும்.

    சகோதரப் பாசம் பற்றி எழுதியுள்ள பாடல்கள் உணர்ச்சி மிகுதியால் கண்கள் குளமாகும். பாசமலர் படத்தில் வரும் அண்ணன் தங்கைப் பாசத்தை கவியரசர் சொல்லும் விதமே அலாதிதான்.

    சிறகில் எனை மூடி அருமை மகள் போல
    வளர்த்த கதை சொல்லவா
    கனவில் நினையாத காலம் இடை வந்து
    பிரித்த கதை சொல்லவா…

    என்று ஒரு தங்கை தன் சகோதரன் மேல் கொண்டிருக்கும் எல்லையற்ற அன்பை விளக்கும் வரிகளில், நாம் நம்மையே தங்கையாகவோ அண்ணனாகவோ நினைக்கத் தவறுவதில்லை என்பது உண்மையே!

    பதின்ம வயதிலோ சொல்லவே வேண்டியதில்லை. காதல் ரசம் சொட்டும் பாடல்கள், திருட்டுத் தனமாய் மனதில் போய் ஒளிந்துக் கொண்டு இன்றளவும் வெளியே வர மறுக்கும் பாடல்கள் பட்டியலிட்டால் பக்கம் போதாது. “அத்திக்காய் அத்திக்காய் ” பாடல் மிகவும் மென்மையாக அதே சமயத்தில் காதலர்களிடையே இருக்கும் காதலின் மகத்துவத்தை அருமையாய் விளக்கும் பாடல்.

    “மாலைப் பொழுதின் மயக்கத்திலே ” பாடல் திருமதி சுசீலா குரலின் இனிமையுடன் ஒலிக்கும் போது மயங்காதவர்கள் யார்? இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.

    சிவகங்கை சீமையில் வரும் “கனவு கண்டேன் நான் கனவு கண்டேன்” என்கிற பாடலைக் கேட்கும் போது மனம் கண்டிப்பாய் அவரவர் திருமண நிகழ்வை மீண்டும் மனதிற்குள் பார்த்து மகிழாமல் இருக்க முடியாது. நம்மை மீண்டும் இளமைக்குத் திருப்பும் சக்தி வாய்ந்தவை இந்தப் பாடல்கள்.

    பாடலுக்கும், கவிதைக்கும் இந்த சக்தி உண்டா என்கிற வியப்பு மேலிடுகிறது. கண்ணதாசனின் பேனா மை செய்யும் விந்தையல்லவா இது.

    சிறுவர்களுக்கும், வாலிப வயதினருக்கும் மட்டுமா கவியரசு பாடல்கள் புனைந்துள்ளார். எல்லா வயதினருக்கும், எல்லா வித நிலையிலும் நாம் ஆறுதல் தேடிக் கொள்ள உதவியாய் பாடல்கள் வந்து விழுந்திருக்கின்றதே! வாழ்வின் ஓர் அங்கமான சோகத்தையும் விடவில்லை கவிஞர். சோகப் பாடல்களில் சோகத்தை பிழிந்ததோடு இல்லாமல் ஆறுதலும் தரவல்லவர் கவியரசர்.

    காலம் ஒருநாள் மாறும் – நம்
    கவலைகள் யாவும் தீரும்
    வருவதை எண்ணி சிரிக்கின்றேன்
    வந்ததை எண்ணி அழுகின்றேன்
    சிலர் அழுவார் சிலர் சிரிப்பார் – நான்
    அழுதுகொண்டே சிரிக்கின்றேன்

    கவலைகள் மட்டுமே வாழ்க்கை என்று நினைத்து விடலாகாது என்பதை எவ்வளவு எளிதாய் காலம் மாறினால் கவலைகளும் நீங்கும் என்பதில் அழகாய் விளக்குகிறார்.

    சோதனைமேல் சோதனை போதுமடா சாமி
    வேதனைதான் வாழ்க்கையென்றால் தாங்காது பூமி

    என்கிறப் பாட்டை கேட்கும் போது மனம் கனத்துப் போவதைத் தடுக்க முடியவில்லை. சோதனைகள் பார்க்காத மனிதர்கள் உண்டா? சவால்களும் வாழ்க்கையின் அங்கமே என்கிற ஆறுதல் உணர்வைத் தரும் பாடல். கண்டிப்பாக அவர் எதிர் நோக்கிய சவால்களே இப்பாடலின் ஆதாரம் என்றே நான் நம்புகிறேன்.

    கவிஞர் மரணத்தை விட்டு விட்டாரா என்ன? அதையும் பாட்டிற்கு கருப்பொருளாக்கும் தைரியம் நம் கவியரசுக்கு மட்டுமே உண்டு என்று நினைக்கிறேன். அந்தப்பாட்டு எவ்வளவு பெரிய ஹிட் என்று நான் சொல்ல வேண்டியதில்லை.

    வாழ்க்கை என்பது வியாபாரம்; வரும்
    ஜனனம் என்பது வரவாகும்; அதில்
    மரணம் என்பது செலவாகும்
    போனால் போகட்டும் போடா

    இரவல் தந்தவன் கேட்கின்றான் ; அதை
    இல்லை என்றால் அவன் விடுவானா?
    உறவைச் சொல்லி அழுவதனாலே
    உயிரை மீண்டும் தருவானா?

    இந்த வரிகளில் சொன்னவை அத்தனையும் உண்மை தானே! மரணத்தைக் கூட லாவகமாய் கையாளும் தந்திர வார்த்தைகளுக்கு சொந்தக்காரர் கவியரசே என்று சொல்லலாம் .

    கண்ணதாசன் பெயருக்கு ஏற்றார் போல் பக்திமான் கூட. “திருமால் பெருமைக்கு நிகரேத ” என்கிற பாடலில் பெருமாளின் பத்து அவதாரங்களின் காரணத்தையும், அவதார மகிமையும் இந்தப்பாடலில் ஒளிர்வது கண்கூடு. இது போல் இன்னும் நிறைய பாடல்கள் பக்தி மணம் கமழ எழுதிவைத்துள்ளார் கவிஞர். அத்தனையும் எழுத இங்கே எனக்கு இடமில்லை.

    கவிஞர் தேன் மழையாய் பொழிந்திருக்கும் பாடல்களில் ஒரே ஒரு துளி எடுத்து சுவைத்ததில் நான் பெற்ற இனிமையை இங்கே பகிர்ந்திருக்கிறேன்.

    Share
  • அன்புள்ள தோழி மணிமொழிக்கு

    ராஜலக்ஷ்மி பரமசிவம்

    அன்புள்ள தோழி  மணிமொழிக்கு,

    நீயும் உன் வீட்டினரும் நலமுடன் இருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.

    இப்பொழுது கடிதம் எழுத என்ன அவசியம் என்று தோன்றலாம்.மேலே படி உனக்கே புரியும்.

    எனக்கு மிகவும் தெரிந்த ஒருவருடைய மகள், நன்கு படித்தவள், நல்ல உத்தியோகம், சம்பளம், கண் நிறைந்த கணவன், அழகான குழந்தை  என்று வாழ்ந்து கொண்டிருந்தவள் சட்டென்று விவாகரத்து செய்வதாக சொன்னவுடன், என் மனம் தாங்க முடியாத வேதனையில் ஆழ்ந்தது. என் ஆதங்கத்தை யாரிடமாவது சொல்ல நினைத்தேன். அதனால் தான் இக்கடிதம் எழுதுகிறேன். இப்பொழுதெல்லாம் விவாகரத்து என்பது சர்வ சாதாரணமாகி விட்டதே என்கிற  ஆதங்கம் தான் மேலோங்கியது. எங்கே தவறு செய்கிறோம் என்று யோசித்தேன். என் மனதில் தோன்றியதை  இதோ கொட்டி விட்டேன்.

    உலகமே நம்மைப் பார்த்து  மூக்கில் விரல் வைக்கும் ஒரு விஷயம் உண்டென்றால், அது நம் குடும்ப அமைப்பு தான். அந்தக் குடும்ப அமைப்பை போற்றிப் பாதுகாத்து, சிறிதளவும் சிதையாமல் அடுத்தத் தலைமுறைக்கு கொண்டு செல்வதில், நம் பெண்களுக்கு மாபெரும் பங்கு இருக்கிறது என்பதை யாருமே மறுக்க முடியாது. அதை  நம் பெண்களும் லாவகமாக, நேர்த்தியாக  கொண்டு சென்றார்கள்.

    ஆனால் இப்பொழுது அந்தக் குடும்ப அமைப்பு கொஞ்சம் கொஞ்சமாக சிதைந்து கொண்டிருக்கிறது. நான் சொல்லவில்லை. குடும்ப நல நீதி மன்றத்தில் மலையாய்  குவிந்திருக்கும் விவாகரத்து வழக்குகள்  வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன.

    நம் பாட்டித் தலைமுறைப் பெண்கள் வீட்டிற்குள்ளேயே தன் ராஜாங்கத்தை அடக்கி வாழ பழக்கப்பட்டவர்கள். பெரும்பாலும் கூட்டுக் குடும்ப வாசிகள் இவர்கள். அவர்களுக்கு  கருத்து சுதந்திரம் கிடையாது. அவர்களுக்கு அடுத்தத் தலைமுறைப் பெண்கள் வீட்டையும், அலுவலகப்  பணியையும் ஒருங்கே செய்து இரட்டைக் குதிரை சவாரி  செய்தவர்கள். அவர்களுக்கு ஓரளவு சுதந்திரம் இருந்தது என்று சொல்லலாம். அதற்கும் அடுத்த தலைமுறைப் பெண்கள், இக்கால இளம் மங்கையர், பெயருக்குப் பின்னால் பல பட்டம் தாங்கியவர்கள். இவர்களில் பெரும்பாலோர் அலுவலகத்தில் பணி புரிகிறவர்கள். இவர்களுக்கு இன்னும் கூடுதல் சுதந்திரம் இருக்கிறது. இவர்களுக்கு அவர்கள் கணவர்களுடைய உதவி பெரிய அளவில் கிடைக்கவே செய்கிறது. சமையலாகட்டும், குழந்தை வளர்ப்பிலாகட்டும் எல்லாவற்றிலும் கணவன் உதவிக் கரம் நீட்டுகிறான். பொருளாதாரத்திலும் பெண்களின் நிலைமை முன்னேறியிருகிறது. இக்காலப் பெண் பொருளாதாரத்திற்காக கணவனை நம்பியிருக்க வேண்டிய நிர்ப்பந்தமில்லை. இது அத்தனையும் பாராட்டுக்குரியதே. ஆனால் விவாகரத்தும் அதிகமாகிக் கொண்டு வருகிறது. ஏன்? மிகப் பெரிய கேள்வி இது.

    இந்தத் தன்னிறைவுத் தன்மையை சில பெண்கள் தவறாகப் பயன்படுத்திக் கொள்கிறார்களோ என்கிற சந்தேகம் எழுகிறது. பெண்களின் பொருளாதார முன்னேற்றத்தினால் அவர்களின் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை, சகிப்புத்தன்மை எல்லாவற்றையும்  தொலைத்து விட்டார்களோ என்கிற அச்சம் எழுகின்றது. விட்டுக்கொடுத்துப் போவது என்பது அடங்கி வாழ்வது என்று தவறாகப் புரிந்து கொள்வதன் விளைவு, விவாகரத்தில் முடிகிறது. நான் எல்லாப் பெண்களையும் சொல்லவில்லை. அற்பக் காரணங்களுக்காக விவாகரத்து செய்து, வாழ்க்கையைத் தொலைத்து விட்டு நான் சுதந்திரமாக இருக்கிறேன் என்று பெருமைப்படும் பெண்களை என்ன சொல்வது? இப்படிக்  கண்ணை விற்று ஓவியம் வாங்கத் துணியும் பெண்களைப் பற்றி தான் குறிப்பிடுகிறேன்.

    ஆணாகட்டும், பெண்ணாகட்டும் திருமணத்திற்கு முன் கனவுகளையும், கற்பனைக் கோட்டைகளையும் கட்டி வைத்திருப்பார்கள். சந்தேகமில்லை. அந்த எதிர்பார்ப்புகள் நடக்கவில்லையென்றால், அந்தக் கனவுக் கோட்டை தகர்ந்து நொறுங்கிப் போவதை அவர்களால் எதிர்கொள்ள முடியாமல் போய், ஒரு கால கட்டத்தில் தம்பதிகள் கோர்ட் படியேறி விடுகிறார்கள்.

    சரி. விவாகரத்தும் ஆகிவிடுகிறது என்றே வைத்துக் கொள்வோம். அதற்குப் பிறகு…..? தம்பதிகள் இருவருக்கும் வாழ்க்கை ஒரு பெரிய கேள்விக்குறி தானே! குழந்தைகள் இருந்தால் அவர்களும் உள  ரீதியாக அலைகழிக்கப்படுவது நிஜம்.

    அப்படி என்றால் என்ன சொல்ல வருகிறாய்? விட்டுக் கொடுப்பது எப்பொழுதும் மனைவியாகத் தான் இருக்க வேண்டும் என்று சொல்கிறாயா? ஏன் கணவன் விட்டுக் கொடுத்தால் குறைந்து போய் விடுமா? என்று  விவாதம் செய்ய வேண்டாம். தம்பதிகளுக்குள் யார் விட்டுக் கொடுப்பது என்பதில் சர்ச்சையே இருக்க வேண்டாமே. தொலை நோக்கில் பார்த்தோமானால், யார் விட்டுக் கொடுப்பது என்கிற வீர விளையாட்டில் இன்று தோற்பவர் தான், பின்பு வெற்றி காண்கிறார்.

    எங்கோ படித்தது நினைவிற்கு வருகிறது. திருமணம் என்பது வங்கி சேமிப்பு  கணக்குப் போன்றது. நாம் எவ்வளவு அன்பை செலுத்துகிறோமோ, கண்டிப்பாக அது வட்டி போட்டு பலமடங்காகி  நமக்கு திருப்பி வரும். அன்பு மட்டும் தான் பலமடங்காக வருமா என்ன?  வெறுப்பை உமிழ்ந்தால், அதுவும் பலமடங்காகி விடும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

    இந்த  சமயத்தில் ‘ O Henry ‘ன்  கதை  ஒன்று   நினைவிற்கு  வருகிறது.

    நிறைய பேருக்கு இது தெரிந்திருக்கலாம்.

    அதன் தமிழாக்கம் இதோ…

    வறுமையில் வாடும் கணவன் மனைவி. ஒருவருக்கு ஒருவர் கொடுத்துக் கொள்வதற்கு அன்பைத் தவிர வேறெதுவும் பெரிதாக இல்லை. மனைவி தன் நீண்ட அழகிய கூந்தலை சீவி முடித்து கொண்டையிடும்போது ஒரு “ப்ரூச்” இருந்தால் அழகாக இருக்குமே என்று நினைக்கிறாள். அவள் நினைப்பது அவள் கணவனுக்குத் தெரியும்.

    ஆனால் வாங்குவதற்கு கணவனிடம் வசதியில்லை. கிறிஸ்துமஸ் பரிசாகவாவது குடுக்க முயல்வோம் என்று நினைக்கிறான் கணவன்.

    கிறிஸ்துமஸ் வருகிறது…

    மனைவிக்கு, அவள் கணவனிடம் இருக்கும் பாரம்பர்யமான வாட்ச் பற்றித் தெரியும். அதற்கு தங்க ஸ்ட்ராப் வாங்கி கொடுக்க நினைக்கிறாள். கிளம்புகிறாள். கணவனோ இவள் கூந்தலிற்கு ‘ப்ரூச்’ வாங்கக் கிளம்புகிறான்.

    இருவரும் பணத்திற்காக அலையோ அலை என்று அலைகிறார்கள்.

    கிடைக்கவில்லை. மாலை இருவரும் வீடு திரும்புகிறார்கள், மனைவி வாட்ச் ஸ்ட்ராப்புடனும், கணவன் ‘ப்ரூச்’சுடனும்.

    வீடு திரும்பிய இருவருமே அதிர்ச்சிக்குள்ளாகிறார்கள்.

    கணவன் தன்னுடைய பாரம்பர்ய வாட்சை விற்று ப்ரூச் வாங்கியிருக்கிறான்.

    மனைவியோ தன் கணவருக்காக அழகிய நீண்ட கூந்தலை ‘விக்’ செய்யும் கடைக்கு விற்று விட்டு வாட்ச் ஸ்ட்ராப் வாங்கி வந்து விடுவாள்.

    இருவருக்கும் புரிகிறது தாங்கள் வாங்கி வந்தது இனிமேல் உபயோகப்படாது என்று. கண்கள் குளமாகின்றன.

    காதலோடு மனைவியை இழுத்து அணைத்துக் கொள்கிறான்.

    அங்கு வார்த்தைகளே இல்லாமல் காதல் உணரப்பட்டது.

    வறுமையின் உச்சத்திலும் காதல் வளமாக இருக்கிறது இல்லையா?

    உண்மைக் காதல், துணையை அவர்களின் குறைகளோடு ஏற்றுக்கொள்ளச் செய்யும் என்பதில் சந்தேகமேயில்லை. இதை சகோதரிகள் உணர்ந்து கொள்வார்களா? குறையில்லாத மனிதர் யார்? ஒருவரை சுட்டிக்காட்ட முடியுமா நம்மால்?

    இதை மனதில் வைத்தால் கண்ணை விற்று ஓவியம் வாங்க முயல மாட்டோம்.

    நீ என்ன நினைக்கிறாய் இதைப் பற்றி…. சொல்லேன்.  நான் நினைப்பது சரி தானே?

    அன்புடன்,

    உன் தோழி,

    ராஜலக்ஷ்மி பரமசிவம்.

    Share
  • குழந்தைகள் பத்திரமாக இருக்கிறார்களா?

    ராஜலக்ஷ்மி பரமசிவம்

    “என் பிரென்ட்  நாளை சர்க்கஸ் போகிறாள். நீ எப்பொழுது என்னை அழைத்துப் போகிறாய்? “

    “எனக்கு அந்த பொம்மை வேணும்.”

    நீங்கள்  யூகித்தது சரியே.  இது ஒரு சின்னஞ்சிறு குழந்தையின்  சிறிய ஆசைகள்.

    எத்தனை அழகான சந்தோஷமான   உலகம் இந்தக் குழந்தைகளுடையது. பேராசைகள் அற்ற, கள்ளம் கபடமில்லாத, பொறாமைகள் இல்லாத உலகம் அவர்களுடையது.

    அவர்களுடைய ஆசைகள் எல்லாமே சின்ன சின்ன ஆசைகள் தான். நாம் அதையெல்லாம் நிறைவேற்றி  வைக்கிறோமா என்பது கேள்விக்குறியே . ஆசைகள் நிறைவேற்றுவதைப் பற்றி அப்புறம் பார்க்கலாம்.அவர்களைத் துன்புறுத்தாமல் இருந்தாலே போதும் என்று தோன்ற வைக்கிறது இப்பொழுது நடக்கும் சம்பவங்கள் எல்லாம்.

    ஆசிரியரே, தன மாணவியிடம், தவறாக நடந்து கொள்வது,  சில சமயங்களில்,  அப்பாவே தன பெண்ணிடம்  முறை தவறி நடப்பது , என்று அவ்வப்பொழுது கேள்விப்பட்டுக் கொண்டிருக்கிறோம்.  ஆனால் நம்மால் என்ன செய்ய முடிகிறது  என்கிற ஆதங்கம் நம் ஒவ்வொருவருக்குள்ளும் இருப்பதை  மறுக்க முடியாது.பெரும்பாலும்  பெண் குழந்தைகள் தான் இதில் பலியாகிறார்கள். இங்கொன்றும், அங்கொன்றுமாக ஆண் குழந்தைகளும் இப்படி பாதிக்கப் படுவதுண்டு. அவர்கள் உடல் ரீதியாக மட்டுமல்ல உளரீதியாகவும்  பாதிக்கப் படுகிறார்கள்.

    இதற்கெல்லாம் என்ன காரணம்? நம்மால் இந்த சமுதாயத்தை திருத்த முடியுமா? எல்லோருக்கும் நம்மால் பாடம் எடுக்க முடியுமா என்ன? அதெல்லாம் நடவாதக்  காரியம் தான்.ஆனால் நம் வீட்டுக் குழந்தைகளைக்  காப்பாற்ற வேண்டிய மாபெரும் பொறுப்பு நமக்கு இருக்கிறது. அவர்களுக்கு எது நல்லது என்பதை எவ்வளவுக்கெவ்வளவு  ஜாக்கிரதையாக தேர்வு  செய்கிறோமோ ,அதைவிடவும் அதி ஜாக்கிரதையாக  அவர்களுக்கு எது கெடுதல் விளைவிக்கக் டியது என்பதை ஆய்ந்தறிந்து, அதிலிருந்து அவர்களை காப்பாற்றுவது  மிக மிக  அவசியம்.

    அந்தக் காலத்தில், பெண்பிள்ளைகளும், ஆண்களும் தனித்தனியாக  படித்து வந்தகாலம். இப்பொழுது காலம் மாறி விட்டது எனலாம்.ஆண்களும், பெண்களும் சேர்ந்து படிப்பது  என்பது காலத்தின் கட்டாயம்.  பல சமயங்களில் தங்களுக்குத் தெரியாமல் தங்களை தாக்க வரும் மனித மிருகங்களிடமிருந்தும் தங்களைக் காப்பாற்றிக் கொள்வது எப்படி என்பதை நாம் தானே அவர்களுக்குச் சொல்லித் தர வேண்டும்.இதில் பெற்றோர்களின் பங்கு மிகப் பெரியது என்று சொல்லலாம். அதே சமயத்தில், ஆசிரியர்களின் பங்கும்  முக்கியமானதே! இருவரும், ஒருவரைஒருவர் குற்றம் சாட்டிக் கொள்வதை நிறுத்திவிட்டு   தங்கள் கடமையை சரிவர  செய்தோமானால் , நம் குழந்தைகளுக்கு எந்த சேதாரமும் இல்லாமல் காப்பாற்றி விடலாம்.

    இதென்ன பிரமாதம் என்று தோன்றலாம்.”  குட் டச் ”  “பேட்  டச் ” என்று சொல்லிக் கொடுத்து விட்டால் ஆச்சு. அது எவ்வளவு கடினம் என்பது பல பெற்றோர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் மிக நன்றாகத் தெரியும்.

    அந்தக் கால்த்தில்,  நம் பாட்டிகள் சொல்வதுண்டு,  சொந்த சகோதரனேயானாலும்  பத்து , பன்னிரெண்டு வயதிற்கு மேல் தன்  சகோதரியை அடிப்பதோ, தொட்டு விளையாடுவதோ கூடாது. இப்பொழுது யோசித்துப் பார்த்தால் எத்தனை எத்தனை உண்மை அதில் அடங்கியிருக்கிறது என்று தெரியும்.

    ஆனால் அதையெல்லாம்  எங்கே கேட்கிறோம் நாம். அதெல்லாம் பத்தாம் பசலித் தனம் என்று நினைத்து நமக்கு நாமே குழி வெட்டிக் கொள்வது தான் இப்பொழுது நடந்தேறுகிறது.

    பெற்றோர்களும்  இப்பொழுது தங்கள் குழந்தைகளுக்கு சுதந்திரம் என்கிற பெயரில்  அவர்களை  பலவித ஆபத்துகளில் கொண்டு போய் விட்டு விடுகிறார்கள். ஒரு சில வருடங்களுக்கு முன்பு ஒரு மாத இதழில் படித்தது நினைவிற்கு வருகிறது. தன தோழியின்  வீட்டிற்குப்  போய் விளையாடிவிட்டு அங்கேயே  தோழியுடன்  இரவைக் கழித்து விட்டு வரும்(Sleep Over), ஒரு பதின்மூன்று வயதுப் பெண்ணை , தோழியின் தந்தையே  சீரழித்து கர்ப்பமாக்கி விட்டது நினைவிற்கு வந்து வேதனைப் படுத்துகிறது. இது நடந்தது நம் நாட்டில் இல்லை என்று பெரு  மூச்சு விடலாம் . ஆனால்  அந்த நிம்மதி அதிக நேரம் நீடிக்காது. இந்த sleep over மேற்கத்தியக் கலாசாரம் நம் நாட்டிலும் இப்போது   புகுந்து விட்டது என்பது  அங்கொன்றும்  இங்கொன்றுமாக  குழந்தைகள் பேசுவதிலிருந்துத் தெரிய வருகிறது. எதைத்தான் மேலை நாட்டிலிருந்து காப்பியடிப்பது என்கிற விவஸ்தை வேண்டாமா? இதைப் பெற்றோர்கள் முளையிலேயே கிள்ளி  எரிந்து விட்டால் நலம்.

    “good touch, bad touch   ஆகியவற்றை சொல்லிக் கொடுப்பதில் இருக்கும்  சங்கடங்கள்  ஏராளம் . குழந்தைகள்  கேட்கும் கேள்விகளுக்கு நாம் பதில் சொல்லி மாளாது. ஆனாலும் நாசுக்காக சொல்லித் தான் தீர வேண்டும்.

    பெற்றோர்களுக்கும், ஆசிரியர்களுக்கும்  உதவுவதற்காக  உங்களுடன் ஒரு காணொளியைப் பகிர்கிறேன். இதைத் தைரியமாக குழந்தைகளுக்கு  போட்டுக் காட்டலாம். எந்த சங்கடமான  காட்சிகளும்  இல்லாதப் படம். குழந்தைகள், அவர்களின் பெற்றோர்   ஆகியோர் கண்டிப்பாகப் பார்க்க வேண்டிய காணொளி.

    Child Line India வெளியிட்டுள்ள  காணொளி இது.

    உங்கள் நண்பர்களுடனும், உறவுனர்களுடனும் இதைப் பகிர்ந்து கொள்ளுங்களேன்.

    link  www.youtube.com/watch?v=4xQCauzPzY4

    காணொளி  நன்றி: Child Line Foundation India.

    Share