–ராஜலக்ஷ்மி பரமசிவம்

என் பார்வையில் கண்ணதாசன்

Kannadasanகண்ணதாசன் பாடல்கள், கவிதைகள் பற்றிய கட்டுரைப் போட்டியில் சேர்ந்து கொள்வது என்று தீர்மானமான பின்தான் யோசிக்க ஆரம்பித்தேன். கவியரசைப் பற்றிய கட்டுரையை நான் எழுதுவதா…….. ……சற்றே தயங்கி ஓடி ஒளிந்து கொண்ட மனசாட்சியைப் பிடித்து இழுத்து வைத்து , “கவிதை என்பது மெத்தப்படித்தவர்கள் மட்டுமே படித்து ரசிப்பது என்கிற நிலைமையை மாற்றி பாமரரையும் சேரும் விதமாய் கவிதை எழுதியவர் நம் கவிஞர். அதனால் நீ ரசித்த அவருடைய கவிதைகள் பற்றி எழுத என்ன தயக்கம்?” என்று மனசாட்சியை சமாதானப்படுத்தி விட்டு எழுத அமர்ந்தேன்….

அடுத்த பிரச்சினை தலை தூக்கியது…

எந்த விதமான கண்ணதாசன் பாடல்களைப் பற்றிக் கட்டுரை வடிப்பது என்று அலைபாய்ந்து கொண்டிருந்தேன். காதலா, வீரமா, ஆன்மீகமா, தத்துவமா, தேசப்பற்றா, சமுதாய அக்கறையா …. ….எதைப் பற்றி எழுதுவது எதை விடுவது. கவியரசு எழுதிக் குவித்திருப்பவை எண்ணற்றவை. ஏராளமோ ஏராளம். அத்தனையும் முத்துக்களே. அதில் தனியாக ஒரு தலைப்பை எடுத்துக் கொண்டால் மற்றவை விடும்படி ஆகிவிடுமே என்று தோன்ற நாம் ஏன் என்னைப் பாதித்த , பிடித்த, நான் மயங்கிய பாடல்கள் என்று எடுத்துக் கொண்டால் என்ன என்று தோன்ற அப்படியே கட்டுரை எழுத ஆரம்பிக்கிறேன்.

மீண்டும் ஒரு சுணக்கம். எனக்குப் பிடித்த கவிஞரின் பாடல்களோ ஏராளம். எதைச் சொல்ல…. எதை விட…..மிகசிலப் பாடல்களை பற்றி எழுத நினைத்தேன்.

ஒரு சில பாடல்கள் என்னுள் ஏற்படுத்திய தாக்கத்தைத் தொகுத்துக் கட்டுரையாக எழுதுகிறேன்.

நான் பள்ளி செல்லும் வயதில் , சினிமா பார்ப்பதும், சினிமா பாட்டு கேட்பதும் இமாலயக் குற்றம் என்கிற நிலை இருந்த நாளில் கூட என் மனதில் புகுந்த கொண்ட பாட்டு,

அம்மா என்பது தமிழ் வார்த்தை
அதுதான் குழந்தையின் முதல் வார்த்தை
கவலையில் வருவதும் அம்மா அம்மா

அன்றைய சிறு வயது சங்கடங்களுக்கு மட்டுமா “அம்மா அம்மா “. இன்றும் கூட நான் சவால்களை எதிர் கொள்ளும் போதும், கவலைகளில் நான் மூழ்கும் போதும் தெம்பு தருவது ” அம்மா ” என்கிற வார்த்தை தான். எத்தனை நிதரிசனமான உண்மை. அதை அழகிய பாட்டாய் வடித்து நமக்குள் ஊற்றெடுக்கும் தாய் பாசத்தை நாமே உணரும்படி செய்தது இந்தப் பாட்டு என்று சொன்னால் மிகையாகாது. அந்த சிறு வயதில் என்னைப் பாதித்த மற்றுமொரு பாட்டு என்று சொன்னால் அது இந்தப்பாட்டு .

அகர முதல எழுத்தெல்லாம் அறிய வைத்தாய் தேவி
ஆதி பகவன் முதலென்றே உயர வைத்தாய் தேவி 

சரஸ்வதி சபத்தத்தில் வரும் இந்தப் பாட்டு நம் மனதை உருக வைத்தப் பாடல்களில் ஒன்று. இந்தப் பாட்டுக் காதில் விழுந்தாலே நம் கண் முன் சரஸ்வதியின் உருவம் வருவதைத் தடுக்க முடியாது. அத்தனை வலிமை வாய்ந்த வரிகள். இருபது முப்பது வருடங்களுக்கு முன் இந்தப் பாட்டு மிக மிகப் பிரபலம். பல சிறுவர் சிறுமிகளின் மனதைத் தொட்ட பாட்டு என்றே சொல்ல வேண்டும்.

சகோதரப் பாசம் பற்றி எழுதியுள்ள பாடல்கள் உணர்ச்சி மிகுதியால் கண்கள் குளமாகும். பாசமலர் படத்தில் வரும் அண்ணன் தங்கைப் பாசத்தை கவியரசர் சொல்லும் விதமே அலாதிதான்.

சிறகில் எனை மூடி அருமை மகள் போல
வளர்த்த கதை சொல்லவா
கனவில் நினையாத காலம் இடை வந்து
பிரித்த கதை சொல்லவா…

என்று ஒரு தங்கை தன் சகோதரன் மேல் கொண்டிருக்கும் எல்லையற்ற அன்பை விளக்கும் வரிகளில், நாம் நம்மையே தங்கையாகவோ அண்ணனாகவோ நினைக்கத் தவறுவதில்லை என்பது உண்மையே!

பதின்ம வயதிலோ சொல்லவே வேண்டியதில்லை. காதல் ரசம் சொட்டும் பாடல்கள், திருட்டுத் தனமாய் மனதில் போய் ஒளிந்துக் கொண்டு இன்றளவும் வெளியே வர மறுக்கும் பாடல்கள் பட்டியலிட்டால் பக்கம் போதாது. “அத்திக்காய் அத்திக்காய் ” பாடல் மிகவும் மென்மையாக அதே சமயத்தில் காதலர்களிடையே இருக்கும் காதலின் மகத்துவத்தை அருமையாய் விளக்கும் பாடல்.

“மாலைப் பொழுதின் மயக்கத்திலே ” பாடல் திருமதி சுசீலா குரலின் இனிமையுடன் ஒலிக்கும் போது மயங்காதவர்கள் யார்? இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.

சிவகங்கை சீமையில் வரும் “கனவு கண்டேன் நான் கனவு கண்டேன்” என்கிற பாடலைக் கேட்கும் போது மனம் கண்டிப்பாய் அவரவர் திருமண நிகழ்வை மீண்டும் மனதிற்குள் பார்த்து மகிழாமல் இருக்க முடியாது. நம்மை மீண்டும் இளமைக்குத் திருப்பும் சக்தி வாய்ந்தவை இந்தப் பாடல்கள்.

பாடலுக்கும், கவிதைக்கும் இந்த சக்தி உண்டா என்கிற வியப்பு மேலிடுகிறது. கண்ணதாசனின் பேனா மை செய்யும் விந்தையல்லவா இது.

சிறுவர்களுக்கும், வாலிப வயதினருக்கும் மட்டுமா கவியரசு பாடல்கள் புனைந்துள்ளார். எல்லா வயதினருக்கும், எல்லா வித நிலையிலும் நாம் ஆறுதல் தேடிக் கொள்ள உதவியாய் பாடல்கள் வந்து விழுந்திருக்கின்றதே! வாழ்வின் ஓர் அங்கமான சோகத்தையும் விடவில்லை கவிஞர். சோகப் பாடல்களில் சோகத்தை பிழிந்ததோடு இல்லாமல் ஆறுதலும் தரவல்லவர் கவியரசர்.

காலம் ஒருநாள் மாறும் – நம்
கவலைகள் யாவும் தீரும்
வருவதை எண்ணி சிரிக்கின்றேன்
வந்ததை எண்ணி அழுகின்றேன்
சிலர் அழுவார் சிலர் சிரிப்பார் – நான்
அழுதுகொண்டே சிரிக்கின்றேன்

கவலைகள் மட்டுமே வாழ்க்கை என்று நினைத்து விடலாகாது என்பதை எவ்வளவு எளிதாய் காலம் மாறினால் கவலைகளும் நீங்கும் என்பதில் அழகாய் விளக்குகிறார்.

சோதனைமேல் சோதனை போதுமடா சாமி
வேதனைதான் வாழ்க்கையென்றால் தாங்காது பூமி

என்கிறப் பாட்டை கேட்கும் போது மனம் கனத்துப் போவதைத் தடுக்க முடியவில்லை. சோதனைகள் பார்க்காத மனிதர்கள் உண்டா? சவால்களும் வாழ்க்கையின் அங்கமே என்கிற ஆறுதல் உணர்வைத் தரும் பாடல். கண்டிப்பாக அவர் எதிர் நோக்கிய சவால்களே இப்பாடலின் ஆதாரம் என்றே நான் நம்புகிறேன்.

கவிஞர் மரணத்தை விட்டு விட்டாரா என்ன? அதையும் பாட்டிற்கு கருப்பொருளாக்கும் தைரியம் நம் கவியரசுக்கு மட்டுமே உண்டு என்று நினைக்கிறேன். அந்தப்பாட்டு எவ்வளவு பெரிய ஹிட் என்று நான் சொல்ல வேண்டியதில்லை.

வாழ்க்கை என்பது வியாபாரம்; வரும்
ஜனனம் என்பது வரவாகும்; அதில்
மரணம் என்பது செலவாகும்
போனால் போகட்டும் போடா

இரவல் தந்தவன் கேட்கின்றான் ; அதை
இல்லை என்றால் அவன் விடுவானா?
உறவைச் சொல்லி அழுவதனாலே
உயிரை மீண்டும் தருவானா?

இந்த வரிகளில் சொன்னவை அத்தனையும் உண்மை தானே! மரணத்தைக் கூட லாவகமாய் கையாளும் தந்திர வார்த்தைகளுக்கு சொந்தக்காரர் கவியரசே என்று சொல்லலாம் .

கண்ணதாசன் பெயருக்கு ஏற்றார் போல் பக்திமான் கூட. “திருமால் பெருமைக்கு நிகரேத ” என்கிற பாடலில் பெருமாளின் பத்து அவதாரங்களின் காரணத்தையும், அவதார மகிமையும் இந்தப்பாடலில் ஒளிர்வது கண்கூடு. இது போல் இன்னும் நிறைய பாடல்கள் பக்தி மணம் கமழ எழுதிவைத்துள்ளார் கவிஞர். அத்தனையும் எழுத இங்கே எனக்கு இடமில்லை.

கவிஞர் தேன் மழையாய் பொழிந்திருக்கும் பாடல்களில் ஒரே ஒரு துளி எடுத்து சுவைத்ததில் நான் பெற்ற இனிமையை இங்கே பகிர்ந்திருக்கிறேன்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *