Tag: வள்ளலார்

  • வள்ளலார் காட்டும் மரணமிலாப் பெருவாழ்வு

    வள்ளலார் காட்டும் மரணமிலாப் பெருவாழ்வு

    திண்டிவனத்தில் ஒன்பதாம் வகுப்புப் படிக்கும் செல்வி வி.கிருத்திகா, ‘வள்ளலார் காட்டும் மரணமிலாப் பெருவாழ்வு’ என்ற தலைப்பில் இன்று ஆற்றிய உரை இங்கே.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • உங்கள் வயிறு என்ன இடுகாடா? – வி.கிருத்திகா பேச்சு

    உங்கள் வயிறு என்ன இடுகாடா? – வி.கிருத்திகா பேச்சு

    திண்டிவனத்தில் எட்டாம் வகுப்புப் படிக்கும் வி.கிருத்திகா, ‘அருட்திரு வள்ளலாரின் புலால் உண்ணாமையும் ஜீவகாருண்யமும்’ என்ற தலைப்பில் உரை ஆற்றியிருக்கிறார். புலால் உண்ணாமையின் பயன்களை விவரித்த அவர், மனிதர்கள் இறந்த பின் மண்ணில் புதைக்கிறோம். புலால் உண்போர், ஆடு, மாடு, கோழி போன்ற உயிர்களைக் கொன்று தங்கள் வயிற்றையே அவற்றுக்கு இடுகாடாக மாற்றிவிடுகிறார்கள் எனப் பேசியிருக்கிறார். அவரது உரையை இங்கே கேளுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • வானத்தின் மீது மயிலாடக் கண்டேன்

    வானத்தின் மீது மயிலாடக் கண்டேன்

    அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை என்ற அமுத வாசகத்தை அருளிய வடலூர் வள்ளல் பெருமான், இராமலிங்க அடிகள் இயற்றிய ‘வானத்தின் மீது மயிலாடக் கண்டேன்’ என்ற வானளாவிய புகழ்பெற்ற பாடலை, கான பிரம்மம் கிருஷ்ணகுமார் குரலில் கேளுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • பெருஞ்சித்திரனாரும் வள்ளலாரும் – பேராசிரியர் அரசேந்திரன் நேர்காணல்

    பெருஞ்சித்திரனாரும் வள்ளலாரும் – பேராசிரியர் அரசேந்திரன் நேர்காணல்

    சந்திப்பு: அண்ணாகண்ணன்

    தமிழறிஞரும் வேர்ச்சொல் ஆய்வு வல்லுனருமான கு.அரசேந்திரன் அவர்களை அவரது இல்லத்தில் (08.09.2020) சந்தித்தேன். அரசேந்திரன், சென்னை, தாம்பரம், கிறித்தவக் கல்லூரியின் தமிழ்த் துறைத் தலைவராகத் திகழ்ந்து, ஓய்வு பெற்றவர். இவர் ஆக்கிய கால் அடி தாள் சொல் வரலாறு, உலகம் பரவிய தமிழின் வேர்-கல் ஆகிய ஆய்வு நூல்கள், பெரும் புகழ் பெற்றவை. கம்பராமாயணத்தில் அணிகள் என்னும் பொருளில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர். பாவலர் பெருஞ்சித்திரனாரின் மாணவர். தமிழ்த் தேசிய உணர்வு கொண்டவர். வள்ளலார் வழி நடப்பவர்.

    இந்த நேர்காணலில் பெருஞ்சித்திரனாரையும் வள்ளலாரையும் தம் வழிகாட்டிகளாக ஏற்றுக்கொண்டது ஏன் என்று விளக்குகிறார்.

     

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • இறையியல் சிந்தனைகள் – ஸ்டீவ் ஜாப்ஸும் வள்ளலாரும் – 21

    இறையியல் சிந்தனைகள் – ஸ்டீவ் ஜாப்ஸும் வள்ளலாரும் – 21

    அவ்வைமகள்

    21. ஞானோதயக் காலம் 

    இந்தியாவில், மக்களிடையே காணப்பட்ட சுதந்திரம் மிகுந்த சமயப் பழக்கங்களும் பயிற்சியும் மற்றும் மன்னர்களின் மூன்று தட்டு, தர்மபரிபாலனத்தில், அன்று காணப்பட்ட  செம்மையான முறைமைகள் ஆகியன  ஐரோப்பாவில் உதித்த, Age of Enlightenment எனப்படும் ஞானோதயக் காலம் பிறக்க முன்னோடிகளாக இருந்தன. ஞானோதயக் காலத்தின் நோக்கம் என்னவென்றால், ஆட்சிமுறைமை மூன்று தட்டுகளாக (சட்டம், நீதி, நிர்வாகம்) இருக்கவேண்டும் என்பதும், சமயம் என்பது  ஆட்சியாளர்கள் கையில் இல்லாமல், மக்கள் வாழ்வியலில், அவர்களது பரிபூரண மனச் சுதந்திரத்தில், சனாதனமாகப்   பொருந்தியிருக்க வேண்டும் என்பதாகும்.

    இந்நிலையில், சனாதனம் என்ன என்பதை அறிந்துகொள்ளுதல் நலம். சனாதனம் என்பது, இனம், நிறம், குலம், சாதி, பிறப்பிடம், வாழுமிடம், பேசும் மொழி, சமயம் சார்ந்த பழக்கங்கள், பொருளாதார  ஏற்றத்  தாழ்வுகள், இவற்றையெல்லாம் தாண்டி, ஒவ்வொரு தனி மனிதனுக்கும் இருக்கவேண்டிய இன்றியமையா நல்லொழுக்கங்கள்  (virtues) ஆகும். இந்த நால்லொழுக்கங்கள் யாவன என்றால்:  தூய்மை, நேர்மை, ஜீவகாருண்யம், நற்சிந்தை, கருணை, பொறுமை, சகிப்புத்தன்மை, சுயக் கட்டுப்பாடு, பெருந்தன்மை, விரதம் ஆகியன. இங்கு விரதம் என்பதைத் தியாகம் என்றும் கொள்ளலாம். அவரவர் வாழும் வாழ்முறை மற்றும் சூழலுக்கு ஏற்ப ஒவ்வொருவரும் இந்த நல்லொழுக்கங்களை அவர்களால் இயன்ற வகையால் ஆற்றுதல்  வேண்டும் என்பது தான் சனாதனத்தின் சாராம்சம். சமயத்தைவிட சனாதன தர்மம் தான் முக்கியமானது.

    சமுதாயம் என்பது தோப்பு; இதில் தனி மனிதர்கள், தனித்தனி தாவரம் போன்றவர்கள். தனி மனிதர்கள் சேர்ந்து சமுதாயம் எனும் தோப்பை உருவாக்கும்போது, தனிமனித ஒழுக்கங்கள் மற்றும் தனிமனித வளம் ஆகியனவற்றைப் பொறுத்தே, சமுதாயமெனும்  தோப்பின் ஒழுக்கமும் வளமும் அமைகிறது. எனவே, நல்லொழுக்கப் பண்புகள் யாவையும் உடைத்தவராய் தனிமனிதர்கள் உருவாக்கப்பட வேண்டும்  என்பது மட்டுமே சனாதன தர்மத்தின் நோக்கம்.

    இத்தகைய உன்னத  மார்க்கமான சனாதன தர்மத்தை அடைவதே, ஐரோப்பிய ஞானோதய காலத்தின் தலையாய நோக்கமாக இருந்தது. எனவே, ஞானோதய  கால முன்னோடிகளின் சித்தாந்தம் என்னவென்றால் – அவர்களால் வேண்டப்பட்டது, என்னவென்றால்: சனாதன தர்மம் கூறும் நல்லொழுக்கங்கள், தமக்கும், தம் சந்ததிகளுக்கும், பயிற்றுமாறு, பயிற்சிக்குமாறு அவரவர் தமக்குத் தோதான சமயப் பண்பாட்டு முறைமையை மேற்கொள்ளும் சுதந்திரம் வேண்டும் என்பதே. சமயம் என்பது தனிமனிதர்களின் கையில் இருக்கவேண்டிய கருவியே தவிர, ஆட்சியாளர்கள் கையில் இருக்கவேண்டிய ஆயுதம் இல்லை

    சமயத்தை ஆட்சியாளர்கள் தம் கையில் எடுத்துக்கொண்டு மனிதர்களையும் சமயத்தையும் ஆளக்கூடாதுசமயத்தை ஆளவேண்டியவர்கள்  மனிதர்களே தவிர, ஆட்சியாளர்கள் அல்லர்.

    இவ்வாறாக, ஞானோதய காலத்தில், ஐரோப்பா முழுவதும், சமயத்தை ஆட்சியாளர்களிடமிருந்து விலக்கப் போர்களும் போராட்டங்களும் நடக்க, அதே காலக்கட்டத்தில், மதவெறி பிடித்த, மதம் மூலம் மட்டுமே ஆட்சி நடத்தவேண்டும் என்கிற குறிக்கோள் கொண்ட ஐரோப்பியக் காலனி  ஆட்சியாளர்களோ,  தமது குடியேற்ற நாடுகளில், தமது ஆட்சிபலத்தின் முலம் கிறித்துவ மதத்தை, வன்முறையாக நிலைநாட்டலானார்கள். துரதிருஷ்டவசமாக, அன்று நம் தாய்நாடு காலனியாளர்கள் கைப்பிடியில் இருந்தது.

    புண்ணிய பூமி, ஞான பூமி, என்று ஆதி காலந்தொட்டே ஞானோதயக்  களஞ்சியமாக இருந்து வரும் பூமியாக நம் நாடு இருப்பினும், ஐரோப்பிய ஞானோதய காலத்தில், அந்த ஐரோப்பிய ஞானோதயத்துக்கே நம் நாடுதான் முன்மாதிரி நாடாய்க் கருதப்பட்டது என்றாலும் கூட, நம் நாட்டில், சுதேசி சமயமான இந்து சமயம், காலனி ஆதிக்க மதவெறியாளர்களால் கடுமையான சமய நெருக்கடிக்கு இலக்காகிறது.

    எனவே, அக்காலக்கட்டத்தில், இந்து சமயம்,  முன்னெப்போதும் இல்லாத முனைப்போடு எழுந்து நின்று, தனது கால்களைத் தன் சொந்த பூமியில் நிலைநாட்ட வேண்டிய  நிர்ப்பந்தம்  எழுந்தது.

    இந்தக் காலக்கட்டத்தை, இந்தியாவின் புதிய ஞானோதய காலம் என்று அழைப்பது பொருந்தும். சொல்லப்போனால், அது, மிகவும் சிக்கலானதொரு காலக்கட்டம். வரலாறு காணாத, இடர்ப்பாடு மிகுந்த காலம் அது. வெளியிலிருந்து வந்தவன், ஆட்சியைப் பிடித்தது மட்டுமில்லை;  தன் சமயத்தைப் பலம்கொண்டு பரப்பியது மட்டுமில்லை;  சுதேசி இந்து சமயத்தைப் பற்றி இல்லாததும் பொல்லாததுமாகப் புளுகினான் – இழித்துரைத்தான் – கேலி செய்தான் – கிண்டலடித்தான், தண்டித்தான், இந்துசமய தெய்வங்களை “Demons” பேய்கள் என்றான்,  இந்து சமயத்தில் இருப்பவர்கள் காட்டுமிராண்டிகள் – நாகரீகமற்றவர்கள் என்றான் – கோயில்களை, வழிபாட்டுத் தலங்களை இடித்தொழித்து, சர்ச்சுகளைக் கட்டினான். மக்கள் புத்தி பேதலித்தாற்போல் ஆகி, உண்மையெது பொய்யெது என்று புரியாமல் திணறலானார்கள். எனினும், ஆட்சியாளனை எதிர்த்துக்கொண்டு வாழ்வது சுலபமில்லை என்று சிலர் பய உணர்விலேயே  மதம் மாறிப் போயினர். வெகுபலரோ, ஆட்சியாளர்கள் மற்றும் கிறித்துவ மதக்கருவிகள் தந்த வெகுபல சலுகைகளினால் மதம் மாறினர், பிறரையும் மதம் மாற்றினர்.

    இந்நிலையில்தான், இந்து சமயப் பண்பாட்டு இயக்கங்கள் தோன்றுகின்றன. 1828இல் பிரம்ம சமாஜம்; 1857இல் பிரார்த்தனை சமாஜம்; 1865இல் சமரச வேத சன்மார்க்க சங்கம்; 1875இல் பிரம்ம ஞானசபை; 1897இல் ராமகிருஷ்ணா  மிஷன் என்று தொடர் சங்கிலியாய் ஒரு எழுச்சி நடக்கிறது.

    இவற்றுள், வள்ளலார் நிறுவியது: சமரச வேத சன்மார்க்க சங்கம்; 1872இல்.  சமரச சுத்த சன்மார்க்க சத்ய சங்கம் என்று பெயர் திருத்தம் செய்து வள்ளலார் இந்தச் சமயப்  பண்பாட்டு  இயக்கத்தை, அவ்வமயம்  நடாத்திச் செல்கிறார்.

    வங்காளத்தில் தோன்றிய பிரம்ம சமாஜம், மஹாராஷ்டிராவில் தோன்றிய பிரார்த்தனை சபை ஆகியவற்றிலிருந்து வள்ளலாரின் சமரச வேத சன்மார்க்க சங்கம் (சமரச சுத்த சன்மார்க்க சத்ய சங்கம்) எவ்வாறு வேறுபட்டது? ஏற்கெனவே இரண்டு இயக்கங்கள் எழும்பி நிற்க, அவற்றுடன் சேர்ந்து இயங்காமல், தான் தனியாக ஒரு இயக்கம் துவங்க வேண்டிய தேவை வள்ளலாருக்கு ஏன் ஏற்பட்டது என்கிற இரண்டு கேள்விகள் இப்போது நம்முள் எழுகின்றன.

    விந்திய சாத்பூரா மலைத்தொடருக்குக் கீழே தெக்கணத்தில் தோன்றிய முதல் சுதேசி சமயப் பண்பாட்டுப் புரட்சி எதுவென்று பார்த்தால்,  அது வள்ளலாருடையதுதான்.

    விந்திய சாத்பூரா மலைத்தொடருக்கு மேலே வட இந்தியாவில், மிகக் குறிப்பாக, வடகிழக்கு இந்தியாவில், வங்காளத்தில்,  கல்கத்தாவில் (இன்றைய கொல்கத்தா) தோன்றியது பிரம்ம சமாஜம், வடமேற்கில், மகாராஷ்டிரத்தில், குறிப்பாக, பாம்பேயில் (இன்றைய மும்பை) தோன்றியது பிரார்த்தனை சமாஜம்.

    இவை இரண்டுமே நடப்பில் இருப்பதான சுதேசி சமயமான இந்துசமயப் பண்புகளை ஆதரிக்காது அவற்றை எதிர்த்தவை. இரண்டிற்குமே அரசியல் சார்பு இருந்தது.

    இதிலே, பிரம்ம சமாஜம் என்பது, முழுக்க முழுக்க ஆங்கிலேயரின் கைக்கூலி இயக்கமாகும். இதனை பிரமோ சமாஜ் என்ற பெயரில், முதலில் தொடங்கியவர் ராம் மோகன் ராய். இவர் ஒரு செல்வந்தச் சீமான். குலின் எனப்படும் அரசகுல பிராமண வகுப்பைச் சேர்ந்தவர். கிழக்கிந்திய கம்பெனி அவ்வப்போது இந்தியச் செல்வந்தர்களிடம் வட்டிக்குக் கடன் வாங்குவதுண்டு. ராம் மோகன் ராய் இவ்வாறு, கிழக்கிந்திய கம்பெனிக்கு  வட்டிக்குப் பணம் தந்து உதவி வந்தார்; இவ்வாறான பழக்கத்தில் தான்,  ராம் மோகன் ராயின்  கணக்குப் போடும் துல்லியத்தையும், கில்லாடிக்குக் கில்லாடியாய் அவர் நடந்துகொள்ளும்  சாமர்த்தியத்தையும்,  பேச்சுச் சாதுரியங்களையம்  கிழக்கிந்திய கம்பெனி கவனிக்கிறது. இந்தியாவில், தான் வேரூன்றி நிலைநிற்க வேண்டுமென்றால்,  இவனைக் கூட்டாளியாக்கிக் கொள்ளுவது வேண்டும் என்கிற எண்ணம் கிழக்கிந்திய கம்பெனிக்குத் தோன்றுகிறது. எனவே, ராம் மோகன் ராயை, கிழக்கிந்திய  கம்பெனியில் நல்ல சம்பளத்துக்கு வேலைக்கு வர இயலுமா எனக் கேட்க,  அவரும் ஒப்புக்கொள்கிறார். இவ்வாறு,   கிழக்கிந்திய கம்பெனியின் சிப்பந்தியாகிறார் ராம் மோகன் ராய்.

    ஏற்கெனவே, முகலாய அரசர், இரண்டாம் அக்பருக்கும் இவருக்கும் கொஞ்சம் நெருக்கம் இருந்து வந்தது. கிழக்கிந்திய கம்பெனியில் எழுத்தர் பணி என்ற பதவி. கம்பெனியின் கணக்கு வேலை, வழக்குகளுக்கு எனக் கோர்ட்டுக்குத் தேவையான எழுத்துவேலை செய்வது, இந்தியர்கள் தொடர்பான பிரச்சினைகளில் வாய்ச் சவடால் செய்து பஞ்சாயத்துப்  பேசுவது, இந்துச் சட்டம் என்ற பெயரில், ஆவணங்களை எழுதி அவற்றை ஒரு சட்ட நூலாக கிழக்கிந்திய கம்பெனி இந்தியர்களுக்கு எதிராகப் பயன்படுத்துமாறு செய்வது போன்ற வேலைகளைக் கிழக்கிந்தியக் கம்பெனிக்காக, ராய் செய்துவந்தார்.

    இத்தோடு, கிழக்கிந்திய கம்பெனியின் சொற்படி, கிறித்துவ மதத்தை உயர்த்தியும் சுதேசி மதங்களைத் தாழ்த்தியுமான நூல்கள் எழுதுவதும் அவர் வழக்கம். ஆங்கிலேயர்களும் கிறித்துவ மதமும் உயர்வானவை என்பதைத் தொடர்ந்து ருசுப்படுத்துவதற்காக, ஆங்கிலக் கிறித்துவ மதபோதகர்களோடு கூட்டு சேர்ந்து கொண்டு, அவ்வப்போது, சுதேசி மக்களிடையே மறைமுகமாக, சமய பண்பாட்டுப்  பிரச்சினைகளைத் தூண்டிவிட்டு, அவற்றிற்கு, தான் முன்னின்று, ஆங்கில அரசின் மூலம், கிறித்துவர்கள் மூலம், கிறித்துவக் கொள்கைகள் மூலம்  தீர்வு காணுவதுபோல நாடகமாடுவது என்பதெல்லாம் ராம் மோகன் ராயின் வேலைகள்.

    இவை ஒவ்வொன்றுக்கும் அவருக்கு ஆங்கிலேயர்களால் சம்பளத்தைத்  தாண்டி, கூடுதல் சன்மானம் வழங்கப்பட்டது. எவ்வளவுக்கு எவ்வளவு, இந்து சமயத்தில் குழப்பம் விளைவித்து அதன் ஸ்திரத்தைக் குலைக்கமுடியுமோ முடியுமோ அவ்வளவுக்கு அவ்வளவு அவருக்குச் சன்மானம் வழங்கப்பட்டது. ஏனெனில், அவ்வாறான ஒவ்வொரு நிகழ்விலும், ஆங்கிலேயர்கள் அப்பிரச்சினையில் தலையிட்டு, தீர்வு காண்பதற்கான ஒரு சூழல் ஏற்படும்; ஆங்கிலேயர்கள், புதுப் புதுச் சட்டங்கள் இயற்றி, ஒரு பக்கம் நற்பேரும் மற்றோர் பக்கம், இந்திய மக்களை ஆள – பிரித்தாள வசதியும்  ஏற்படும் – பொய் வழக்கு போட்டு அவர்களைத் தண்டித்து அடக்கி ஆள வழி பிறக்கும். கிறித்துவ மதமாற்றத்தையும் அப்படியே சுலபமாக நடத்தி விடலாம்.

    ஆக, ராம் மோகன் ராய்க்கு வழங்கும் சன்மானம் என்கிற ஒரே கல்லில் பல மாங்காய்களை அடித்து வீழ்த்திக் கொண்டுவிட முடியும் என்பது தான் ஆங்கிலேயரின் கணக்கு.

    1803இல் கிழக்கிந்திய கம்பெனியில் சேர்ந்த ராம் மோகன் ராய், அதே ஆண்டில், வேலையில் சேர்ந்த ஒரு சில மாதத்திற்குள்,  கம்பெனியின் ஆதிக்கம் ஓங்கவும், கிறித்துவ மதம் ஓங்கவும் ஓர் அற்புதமான சதித்  திட்டம் தீட்டிவிடுகிறார் – அதை நடைமுறைப்படுத்தியும் காட்டுகிறார். அதனால், ஆங்கிலேயர்களின் கிறித்துவ மதமாற்றம் செய்வோரின் மிகுந்த நம்பிக்கைக்கும் நெருக்கத்துக்கும் உள்ளாகிறார். அந்த நிகழ்ச்சிதான்  “சதி” எனும் உடன்கட்டை ஏறுதல் எனும் நிகழ்ச்சி.

    1803இல் திடீரென்று வில்லியம் கேரி என்பவர் ஒரு அறிக்கை வெளியிடுகிறார்: “கல்கத்தாவைச் சுற்றிய  30 மைல் சுற்றுவட்டாரத்தில் 1803இல் மட்டும் 438 உடன் கட்டை ஏறுதல்கள் நிகழ்ந்திருக்கின்றன – இந்து சமயத்தில் நிகழும் இந்தக் காட்டுமிராண்டித்தனம் எனக்கு மிகுந்த மனவேதனையைத் தருகிறது” என்று.

    இந்த வில்லியம் கேரி யாரென்று பார்த்தால், அவர் ராம் மோகன் ராயின் நண்பர்;  கிறித்துவ மதபோதகர்;  மதமாற்ற வித்தகர்; ஏற்கெனவே, இவ்விருவரும் வித்யா வாகிஷ் எனும் ஒரு சம்ஸ்கிருத பண்டிதரும் சேர்ந்து, “மஹா நிர்வாண தந்த்ரா”எனும் நூலை வடமொழியாம் சமஸ்கிருதத்தில் எழுதி வெளியிட்டார்கள் (வடமொழி அறியாத கேரி இந்நூலை எழுதியிருக்க வாய்ப்பே  இல்லை என்பது உலகோர் கருத்து – பின்னாளில் வித்யாவாகிஷ் கேரியை தம் நட்பு வட்டத்திலிருந்து விலக்கிவிட்டார் என்பதும் இந்நூலை எழுதியது வித்யாவிகாஷ்  என்பதற்குச் சான்று. இந்நூல், வித்யாவிகாஷால் எழுதவைக்கப்பட்டது என்பதும் கூடத் தகும்). வில்லியம் கேரி, கிழக்கிந்திய கம்பெனியின் தொடர்பில் 1803இலிருந்து இருந்து வந்ததையும் நாம் அறிகிறோம்.

    1803க்குப் பிறகு,  சுமார் பதினைந்து ஆண்டுகள் கழித்து மீண்டும், உடன்கட்டை ஏறுதல் பற்றிய சேதி, மீண்டும் வருகிறது: 1815-1818 காலக்கட்டத்தில் உடன்கட்டை ஏறுதல், வங்காளத்தில் இரட்டிப்பாகிவிட்டது என்று.

    ஆக, பொய்யுரையும், பணம் கொடுத்துத் தூண்டிவிடப்பட்ட நிகழ்வாகவும் தான் உடன்கட்டை ஏறுதல் அன்று ஆங்கிலேய ஆட்சியில் நடந்திருக்கிறது என்பதை நம்மால் ஊகிக்கமுடிகிறது.

    கேரியும், மோகன் ராயும், ஆங்கிலேயர்களும் நடத்திய இந்த நாடகத்தில், அடுத்த கட்ட அரங்கேற்றம் என்னவென்றால். ராம் மோகன் ராய், இவ்விஷயத்தை ஆங்கிலேய ஆட்சியாளர்களுக்குத் தெரிவித்து, இந்து சமயத்தில் இவ்வாறு நடக்கும் இழிவான செயல்களில் தலையிட்டு – அவற்றைச் சட்டத்தின்  மூலம் தடுக்குமாறு வேண்டுகோள் வைக்கிறார். உடன்கட்டை ஏறுதல் தடைச் சட்டம் வருகிறது. ராம் மோகன் ராய், இந்து சமயத்தின் சீர்த்திருத்தவாதி என்று  மிகப்பெரிய புகழை அடைகிறார்.

    இவ்வாறு, ராம் மோகன் ராய், இந்தியர்கள் சார்பான விஷயங்களில், ஆங்கிலேயர்கள் தமக்கு வசதியான முடிவெடுக்க, ஆலோசனை தரும் உயர்நிலை ஆலோசகராகவும், இந்திய மக்கள் பிரதிநிதியாகவும் ராம் மோகன் ராய்,  பல விஷயங்களில் பகிரங்கமாகவே செயல்படலானார். இவற்றுள், பால்ய விவாகம் எனப்படும் குழந்தைகள் திருமணத் தடையும் அடக்கம்.

    இவையாவும், கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சித்  தந்திரமே தவிர, எந்த ஒரு இந்திய பிரஜையும், ராம் மோகன் ராயைத் தம் தலைவராக கிழக்கிந்திய கம்பெனியிடம் மொழிந்துரைக்கவில்லை. ஆக, கைக்குள் கையாக ஆங்கிலேயருக்காகச் செயல்பட்டவர் ராம் மோகன் ராய். அதனால் தான் அவருக்கு அத்தனைப் பெரும் புகழும் பதவிகளும் அந்தஸ்தும் செல்வாக்கும் கிடைத்தன.

    ஒரு பக்கம், கிழக்கிந்திய கம்பெனிக்கு இத்தனை நெருக்கமாக இயங்கிய அதேவேளையில், இன்னொரு பக்கம்,  இரண்டாம் அக்பருக்கும் அவர் நெருக்கமாகவே நடந்துகொள்ளலானார். கிறித்துவ மதத்தை உயர்த்திப் பேசும் நூல்களை எழுதுவது போலவே, இஸ்லாமியத்தை உயர்த்தும் சில நடவடிக்கைகளிலும் அவர் ஈடுபட்டார். “மீரட் உல் அக்பர்” என்று இஸ்லாமியர்களுக்கான ஒரு செயதித்தாளையும்  பெர்சிய மொழியில் வெளியிட்டு வந்தார்.

    பிரிட்டிஷாரின் வலு பெருகப் பெருக, முகலாய மன்னர்கள் தாக்குப்பிடிக்க இயலாமல் போன நிலையில், பிரிட்டிஷாருக்கு நெருக்கமாயிருந்து  தேர்ச்சி பெற்ற  ராம் மோகன் ராயின் தயவு, இரண்டாம் அக்பருக்கு மிகவும் தேவைப்பட்டது. ராம் மோகன் ராய் அவ்வப்போது காட்டி வந்த இஸ்லாமிய வாஞ்சையும் இந்தத் தயவுத் தேவையில் அடக்கம். இரண்டாம் அக்பரிடம் ராய்க்கு இருந்த நெருக்கத்தை, கிழக்கிந்திய கம்பெனியும், இந்திய மக்களிடையே தமது “இமேஜ்” வளர, மிக அற்புதமாகப் பயன்படுத்திக்கொண்டார்கள்.

    சுதேசி சமயப் பண்பாட்டுக்கு எதிராகச் செயல்படுவதைக் குறைகூறும் அதிருப்தியாளர்களின் வாயை அடைப்பதற்காகத் திட்டம் தீட்டப்படுகிறது. ராம் மோகன் ராய் பிறருக்காகப் பாடுபடுவதாகக் காட்டவும், கிழக்கிந்திய கம்பெனி இந்தியாவில் சமயப் பண்பாடுகளைப் பாதுகாப்பதில் மிகுந்த அக்கறை காட்டுகிறது என்று மக்கள் நம்புமாறும் ஒரு தந்திர அரசியல் செயல் வடிவம் பெறுகிறது.

    இரண்டாம் அக்பர், தமது பணச்செலவில், ராம் மோகன் ராயை, தமது தூதுவராக பிரிட்டனுக்கு அனுப்புகிறார். அனுப்புமுன், ராம்  மோகன் ராய்க்கு ராஜா என்ற பட்டத்தைச் சூட்டி, இவரே இந்திய நாட்டு மக்களின் மானசீக ராஜா என்பதாக,  “ராஜா ராம் மோன் ராய்” பிரிட்டன் செல்கிறார்.

    உடன்கட்டை ஏறுதலைத் தடை செய்து,  வில்லியம் பென்டிங்க் இயற்றிய Bengal Sati Regulation of 1829 மறுக்கப்படாமல் உறுதி செய்யவேண்டும் என்றும், இரண்டாம் அக்பருக்கான உதவித் தொகையை (Stipend) அதிகரிக்க வேண்டும் என்றும் இரண்டு கோரிக்கைகளுடன் பிரிட்டன் சென்ற ராஜா ராம் மோகன் ராயின் கோரிக்கைக்கு ஏற்ப, பிரிட்டிஷ் அரசும் இரண்டாம் அக்பருக்கான உதவித் தொகையில்  30,000 பவுண்டுகள் சேர்த்து அதிகத் தொகையாக அளிக்க ஆணையிடுகிறது.

    “ராஜா” பட்டத்துடன், ராம் மோகன் ராயின் புகழ் இன்னமும் பெருகுகிறது.

    ராம் மோகன் ராய் கெட்டிக்காரத்தனம்  நிறைந்த அரசியல்  தந்திரவாதி, பணம், புகழ், அந்தஸ்து மட்டுமே அவருக்கு முக்கியம், சுதேசி சமயப் பண்பாடுகளோ, நாட்டின் சுயமரியாதையோ அவருக்கு முக்கியம் இல்லை என்பதற்குப் பற்பல எடுத்துக்காட்டுகள் உண்டு. அவற்றைத் தரவுகள் மூலம் நாம் தெரிந்துகொள்ள முடியும். இந்தக் கேரியுடன் அத்தனை நெருக்கமாகப் பழகினாரோ, பின்னாளில், அதே கேரியுடன் பிணக்கு ஏற்படுகிறது, கேரியின் பாப்டிஸ்ட் கிறித்துவம் தாழ்ந்தது என்றும்  “Unitarianism” எனப்படும் நவீன யூத மதமே உயர்ந்தது என்றும் கேரியைப் பழித்து அதனை ஆதரிக்கிறார். கிழக்கிந்தியக் கம்பெனியைத் தாண்டி, ஐரோப்பியர்கள் இந்தியாவில் குடியேற்றம் செய்ய – விவசாயம் செய்யவும் ஆதரிக்கிறார். (கிழக்கிந்திய கம்பெனியில்  வேலை பார்த்த வகையில், அவர்கள் இந்தியாவில் ஈட்டிய பெரும் செல்வம் கண்டு பொறாமை பட்டவராக இதைச் செய்ததாக உணர்கிறோம்).

    குழந்தைகள் திருமணத் தடைச் சட்டத்தைக் கொண்டவர் என்ற புகழை ஈட்டுவதில் மட்டுமே அவருக்கு ஆசை இருந்தது; அதனைப் பின்பற்றும் நோக்கம் அவருக்கு இல்லை என்பதும் உண்மை. இவருடைய மகளை, குழந்தையாக இருக்கும்போதே திருமணம் செய்து கொடுத்தவர்.

    ஆத்மீய சபா, யூனிடேரியன் கம்யூனிட்டி ஆகியனவற்றையும் தொடங்கி பல்வேறு வகைகளில் தம்மை பிரபலப்படுத்திக்கொண்டவர்.

    இன்று, நம்மிடையே இருக்கும் பல அரசியல்வாதிகளின் தந்திரங்களின் ஒட்டுமொத்தப் பிரதிநிதியாக அன்றே ராம் மோகன் ராய் பரிமளித்தார்.

    ஆக, பணம், புகழ், அந்தஸ்துக்காக, அந்நியர்களுடன் நெருக்கமாக இருந்து அவர்களின் இச்சைக்காய் எதனையும் செய்யத் தலைப்பட்டவராகவே ராம் மோகன் ராய் இயங்கி வந்தார்.  சுதேசி சமயம், சுதேசி மொழிகள், சுதேசிப் பண்பாடுகள், பற்றிய அக்கறை இல்லாத அவர்,  அந்நியரைக் குளிரவைத்து, அவர்கள் என்ன விரும்புகிறார்களோ அவற்றை அவர்களுக்காகச் சாதித்துத் தரவேண்டும் என்கிற ஒரே நோக்கம் கொண்டவர்.  சர்ச்சுகளின் கைக்கூலியாகச் செயல்பட்டு சுதேசி சமயப் பண்பாட்டுக்கு அவர்  செய்து போந்த நாசவேலைகள் பற்பல.

    சொந்த மக்களையும், சுதேசிப்  பண்பாடுகள், மொழி, இலக்கியம், கலை, காவியங்கள், கல்வி என எதனையும் பழிக்கவும் அழித்தொழிக்கவும் அவர் துணிந்தவரானார்.

    துரதிர்ஷ்ட வசமாக, அந்நிய ஆட்சியாளர்களுக்குக் கைக்கூலியாகச் செயல்பட்டவர்கள் மட்டுமே அன்று கவுரவிக்கப்பட்டார்கள். பட்டம், பதவிகள் தந்து உயர்நிலையில் வைத்து,  ஆராதிக்கப்பட்டார்கள் என்ற நிலையில் பிரம்ம சமாஜம் மற்றும் அதனை அடுத்துத் தோன்றிய பிரார்த்தனை சமாஜம் போன்றவற்றின்  சுதேசி சமயப் பண்பாட்டுச் சேவைகள் என்று சொல்லும்படியான விஷயம் இல்லை என்பது தெளிவு.

    இங்கு தான் வள்ளலார் எனும் தனிமனிதர், ஒரு சுதேசி சமயப் பண்பாட்டுப் பாதுகாவலராக எழுகிறார். அவரது  சுதேசி சமய இயக்கம் தோன்றுகிறது. ஆன்மீக உலகில், அது ஒரு விடிவெள்ளிக் காலம்.

    (மேலும் பேசுவோம்)

    Share
  • தமிழகம் கண்ட ஆன்மிகச் சீர்திருத்தவாதி!

    தமிழகம் கண்ட ஆன்மிகச் சீர்திருத்தவாதி!

    -மேகலா இராமமூர்த்தி

     

    இந்திய வரலாற்றில் அரசர்களுக்கு இணையான புகழொடு திகழ்பவர்கள் வள்ளல்கள். முதலெழு வள்ளல்கள், இடையெழு வள்ளல்கள், கடையெழு வள்ளல்கள் என்று இவர்களை மூவகைப்படுத்திச் சொல்வார்கள். இவ்வரிசையில் கடையெழு வள்ளல்களே தமிழ்மரபில் தோன்றிய சிறப்புக்குரியவர்களாய்த் திகழ்கிறார்கள். அவ்வழிவந்த 19ஆம் நூற்றாண்டு வள்ளலே வள்ளலார் என்று தமிழக மக்களால் அன்போடும் பக்தியோடும் அழைக்கப்படும் இராமலிங்க அடிகள்.

    தமிழ்நாடு செய்த தவத்தின் பயனாய், தென்னார்க்காடு மாவட்டம் சிதம்பரத்தை அடுத்துள்ள மருதூரில் 1823ஆம் ஆண்டு அக்டோபர் 5ஆம் நாள் இராமையா பிள்ளைக்கும் சின்னம்மையார்க்கும் மகவாய்த் தோன்றினார் இராமலிங்கர்.

    தாம் இப்புவியில் பிறந்த காரணத்தை,

    ”அகத்தே கறுத்துப் புறத்துவெளுத்
              திருந்த உலகர் அனைவரையும்
         சகத்தே திருத்திச் சன்மார்க்க
              சங்கத் தடைவித் திடஅவரும்
         இகத்தே பரத்தைப் பெற்றுமகிழ்ந்
              திடுதற் கென்றே எனைஇந்த
         உகத்தே இறைவன் வருவிக்க
              உற்றேன் அருளைப் பெற்றேனே” 5485) என்று என்று நமக்கு அறியத் தருகின்றார்.

    இளமையிலேயே திருத்தணிகை முருகனின் அருட்காட்சியைக் கண்ணாடியில் கண்டவராக அறியப்படும் அடிகளார், முறையாகக் கல்விபயிலாமலேயே அனைத்தையும் இறையருளால் முற்றாகக் கற்றவர் என்பதற்கு அவருடைய பாடல்களிலேயே அகச்சான்றுகள் கிடைக்கின்றன.

    ”சாதிகுலம் சமயமெலாம் தவிர்த்தெனைமேல் ஏற்றித்
    தனித்ததிரு அமுதளித்த தனித்தலைமைப் பொருளே
    ஆதிநடுக் கடைகாட்டாது அண்டபகி ரண்டம்
     
    ஆருயிர்கள் அகம்புறம்மற் றனைத்தும்நிறை ஒளியே
    ஓதிஉணர்ந் தவர்எல்லாம் எனைக்கேட்க எனைத்தான்
    ஓதாமல் உணர்ந்துணர்வாம் உருவுறச்செய் உறவே
    சோதிமய மாய்விளங்கித் தனிப்பொதுவில் நடிக்கும்
    தூயநடத் தரசேஎன் சொல்லும்அணிந் தருளே”
    என்கிறார்.

    இவ்வாறு முறையாகக்கல்வி பயிலாமலேயே ஞானம் கைவரப் பெற்றவர்களைச் சாமு சித்தர்கள் என்றழைப்பார்கள். அவர்கள் முற்பிறவிகளில் செய்த சரியை கிரியை யோகம் முதலிய உயர்செயல்களின் பயனாய் இப்பிறவியில் ஞானமார்க்கத்தில் நின்று சித்திபெறுவதற்கென்றே பிறந்தவர்கள் என்று கூறப்படுகின்றது.

    “ஒருமைக்கண் தான்கற்ற கல்வி  ஒருவற்கு
    எழுமையும் ஏமாப் புடைத்து”
    எனும் குறளின் கருத்துக்கு அடிகளின் வாழ்க்கை சிறப்பாய்ப் பொருந்துகின்றது எனலாம்.

    இளமையில் முருகனைத் தம் வழிபடு கடவுளாகக் கொண்டிருந்த வள்ளல் பெருமானார், திருஞானசம்பந்தரை வழிபடு குருவாகவும், திருவாசகத்தை வழிபடு நூலாகவும் கொண்டிருந்தார் என்பதனை அவர் வாழ்க்கை வரலாறு உணர்த்துகின்றது.

    சென்னையில் 35 அகவை வரை வாழ்ந்த அவர், தம் பன்னிரண்டாம் அகவை தொடங்கி 35ஆம் அகவை வரை நிதமும் திருவொற்றியூருக்குச் சென்று இறைவனை வழிபடும் வழக்கத்தைக் கொண்டிருந்தார். ஒற்றியூரில் கோயில்கொண்டிருக்கும் ஒற்றியப்பரையும், வடிவுடையம்மையையும்,  முருகனையும் பல பதிகங்களில் பாடிப் பரவியிருக்கின்றார்.

    திருவொற்றியூரிலுள்ள நந்தியோடை அடிகளாருக்கு மிகவும் விருப்பமான இடமாகும். அந்த நந்தியோடையின் கரையிலே தென்னஞ்சோலையின் ஒருமருங்கிலே அமர்ந்து, மெல்லென வீசுங்காற்றை நுகர்ந்தும், ஓடையிலே ஓடும் தெண்ணீரின் ஓட்டத்தைக் கண்டும் அதனை உண்டு மகிழ்ந்தும், மரநிழலின் அருமையை ஆரத்துய்த்தும் இன்புற்ற பொழுதெல்லாம் இறைவன் திருவருள் நலத்தையும் உன்னி உன்னி அதன்கண் திளைப்பார் அவர்.

    இத்திளைப்பே பின்னர் அவர் பாடிய செய்யுள் ஒன்றிலே திறம்பட வெளிப்படுவதாயிற்று. அச்செய்யுள் இயற்சொற்களால் இயன்றுளதேனும், திட்பமும் நுட்பமும் பெற்றுப் பலநோக்குடன் திகழ்வதைக் காணலாம்.

    கோடையிலே இளைப்பாற்றிக் கொள்ளும்வகை கிடைத்த
              குளிர்தருவே தருநிழலே நிழல்கனிந்த கனியே
         ஓடையிலே ஊறுகின்ற தீஞ்சுவைத்தண் ணீரே
              உகந்ததண்ணீர் இடைமலர்ந்த சுகந்தமண மலரே
         மேடையிலே வீசுகின்ற மெல்லியபூங் காற்றே
              மென்காற்றில் விளைசுகமே சுகத்தில்உறும் பயனே
         ஆடையிலே எனைமணந்த மணவாளா பொதுவில்
              ஆடுகின்ற அரசேஎன் அலங்கல்அணிந் தருளே”

    வள்ளலார் ஒற்றியூரில் வாழ்ந்தகாலத்தே நிகழ்ந்த வியத்தகு செயல்கள் சிலவற்றை அறிந்துகொள்வோம்.

    திருவொற்றியூர்த் தேரடித் தெருவில் ஒரு வீட்டுத் திண்ணையில் நீண்ட நாள்களாகத் துறவி ஒருவர் இருந்துவந்தார். அவர் உடை ஏதும் உடுத்துவதில்லை. தெருவழியாகப் போவோர் வருவோரையெல்லாம் அவரவர் குணங்களுக்கேற்ப, ‘மாடு போகிறது, கழுதை போகிறது, நாய் போகிறது, நரி போகிறது’ என்று சொல்லிக் கேலிசெய்து கொண்டிருப்பார்.

    அடிகள் திருவொற்றியூருக்குச் செல்லும்போதெல்லாம் தேரடித்தெரு வழியாகச் செல்வதில்லை. தெற்குமாட வீதியிலுள்ள நெல்லிக்காய்ப் பண்டாரச் சந்தின் வழியாகச் சென்று கோயிலை அடைவதே வழக்கம். நெல்லிக்காய் ஊறுகாய்ப் பக்குவமாய்ச் செய்து அன்பர்களுக்கு இடும் பண்டாரமொருவர் அச்சந்தில் வசித்ததால் அஃது அப்பெயர் பெற்றது.

    அடிகளும் உடன்செல்வோரும் சிற்சில சமயங்களில் அப்பண்டாரத்தின் வீட்டில் உண்பதுண்டு. வழக்கத்துக்கு மாறாக ஒருநாள் அடிகள் தேரடித் தெரு வழியாகச் சென்றார். அன்று புதிதாக அடிகளைக் கொண்ட அத்துறவி, “இதோ ஓர் உத்தம மனிதன் போகிறான்!” எனக் கூவியவாறே தமது கைகளால் மெய்யைப் பொத்திக்கொண்டார். அடிகள் அவரிடம் சென்று சற்று அளவளாவினார். அதன்பின்னர் அந்நிர்வாணத் துறவியார் அங்கில்லை. அன்றிரவே அவ்விடம் விட்டகன்றார். அடிகளைக் காண்பதற்காகவே அவர் அத்தனை நாள் அங்கே காத்திருந்தார் போலும்!

    இதுபோன்றே, மற்றொருநாள் நள்ளிரவில் பசியோடு தம்வீட்டு வாயிற் திண்ணையில் அடிகளார் படுத்திருந்தபோது, ஒற்றியூர் அன்னையான வடிவுடையம்மை தம் அண்ணியாரின் கோலத்தில் வந்து தமக்கு அமுதளித்துப் பசிபோக்கியதை நெகிழ்ச்சியோடு தம் பாடலில் பதிவுசெய்திருக்கின்றார் வள்ளல் பெருமானார்.

    இராமலிங்கர் பாடிய பாடல்களின் தொகுப்பு திருவருட்பா என்று அழைக்கப்படுகின்றது. ஆறு திருமுறைகளாக வகுக்கப்பெற்றுள்ள அத் திருப்பாடல்களின் எண்ணிக்கை 5818 ஆகும். இவையன்றி அடிகளார் அவ்வப்பொழுது தம் நண்பர்களுக்குக் கடிதமாகவும் சிறப்புப் பாயிரமாகவும் எழுதிய தனிப்பாடல்களும் பலவுள.

    உரைநடை நூல்கள் அரிதாகத் தோன்றிய அப் பத்தொன்பதாம் நூற்றாண்டில் மனுமுறை கண்ட வாசகம், ஜீவகாருண்ய ஒழுக்கம் எனும் இரண்டு உரைநடை நூல்களை அடிகளார் எழுதியுள்ளார்.

    மனுமுறை கண்ட வாசகம் என்பது, ‘வாயிற் கடைமணி நடுநா நடுங்க ஆவின் கடைமணி உகுநீர் நெஞ்சுசுடத் தான் தன் அரும்பெறற் புதல்வனை ஆழியின் மடித்தோனா’கிய மனுச்சோழன் முறைசெய்த வரலாற்றைக் கூறுவது.

    அடிகளார் பதிப்பித்த நூல்கள் மூன்று. அவை ஒழிவிலொடுக்கம், தொண்டமண்டல சதகம், சின்மய தீபிகை என்பன.

    தொண்டமண்டல சதகத்தின் நூற்பெயர் இலக்கணம் குறித்த விளக்கத்தின் இறுதியில் இந்நூல் தொண்ட மண்டலமா, தொண்டை மண்டலமா என்று வினவுவோருக்கு விடையளிக்கும் வகையில்,

    ”ஆதொண்டச் சக்கரவர்த்தி என்பவர் தாம் அரசு செய்யும் காலத்தில் தம்மால் கட்டுவித்த ஆலயங்களில் தம் பெயரிலச்சினையைச் சிலையின்கண் பொறிப்பித்தனர். ஆண்டும் ஆதொண்ட என்றே இலக்கண அமைதி பெற்றிருக்கின்றது. இதனைத் திருவலிதாயம், திருமுல்லைவாயில் முதலிய சிவதலங்களில் சென்றேனும் கண்டு தெளியக் கடவர்” என்று கல்வெட்டுச் சான்றுகாட்டி முடிக்கின்றார்.

    திருவலிதாயம், திருமுல்லைவாயில் கல்வெட்டுக்களில் ‘தொண்ட மண்டலம்’ என்றே காணப்படுகின்றது என்று அடிகள் கல்வெட்டுச் சான்றாதாரம் காட்டுவதிலிருந்து அவர் திருக்கோயில்களுக்குச் செல்லுங் காலங்களில் கோயிலின் கட்டடக்கலை, சிற்பக்கலை கல்வெட்டுக்கள் ஆகியவற்றை ஆராயும் வழக்கமுடையவர் என்பதை அறிகின்றோம். அவ்வகையில் தமிழகத்தின் முதல் கல்வெட்டு ஆராய்ச்சியாளர் இராமலிங்க அடிகளே எனக் கருதுவதில் பிழையில்லை.

    சிறந்த தமிழ்ப்பற்றாளரான அடிகளார், ஒருமுறை சென்னையில் சங்கராசாரிய சுவாமிகளுடன் உரையாட நேர்ந்தபோது சங்கராசாரியார் சமஸ்கிருதமே எல்லா மொழிகளுக்கும் தாய் என்று கூறியிருக்கின்றார். அதைக்கேட்ட அடிகளார், அஃது உண்மை அன்றென மறுத்ததோடல்லாமல், சமஸ்கிருதம்தான் தாய் என்றால் தமிழே தந்தைமொழி எனக்கூறித் தமிழின் சிறப்பை விளக்கியிருக்கின்றார். அத்தோடு அமையாது, தமிழ்மொழியே அதிசுலபமாகச் சுத்த சிவானுபூதியைக் கொடுக்கவல்லது என்பதையும் தெளிவாய்ச் செப்பியிருக்கின்றார்.

    இறைநம்பிக்கை மிகுந்தவராக வள்ளலார் விளங்கியபோதினும், ஒற்றுமைக்கும், உண்மைக்கும் புறம்பான வேதங்கள், புராணங்கள், இதிகாசங்கள் முதலியவற்றை மறுத்து அவற்றின்மீது லட்சியம் வைக்கத் தேவையில்லை என்கின்றார். இவற்றால் ஒரு பயனும் இல்லை, இவை சூதாகச் சிலவற்றைச் சொல்ல வந்த புனைந்துரைகள் எனவும் விளம்பிச் சனாதனக் கொள்கைகளின் வேரில் வெந்நீரை ஊற்றுகின்றார்.

    கலையுரைத்த கற்பனையே நிலைஎனக் கொண்டாடும்
    கண்மூடி வழக்கம் எலாம் மண்மூடிப் போக… (3768)

    என்று கண்மூடித்தனமான மூடநம்பிக்கைகளைக் கருணையின் வடிவான வள்ளலார் கடுமையாய்ச் சாடுகின்றார். நால்வருணம் என்னால் படைக்கப்பட்டிருக்கின்றது என்று பகவத்கீதையில் கண்ணன் உபதேசிப்பதாய் உள்ளது. ஆனால் வள்ளலாரோ,

    “நால்வருணம் ஆசிரமம் ஆசாரம் முதலா
    நவின்றகலைச் சரிதம் எலாம் பிள்ளை விளையாட்டே
    மேல்வருணம் தோல் வருணம் கண்டறிவார் இலை …. (4174)

    என்று தமது சீர்திருத்தத்தை அருட்பாவில் காட்டிச் சமுதாயப் பாகுபாட்டைச் சாடுகின்றார்.

    தெய்வத்தை வழிபடுவதற்கு இடைத்தரகர்கள் தேவையில்லை என்றுரைக்கும் அவர், தெய்வத்திற்காக அதிகப் பொருட்செலவில் செய்யப்படும் பூசைகள், சடங்குகள் போன்றவற்றையும் மொட்டையடித்தல், காதுகுத்துதல், காவடி எடுத்தல், தீ மிதித்தல், தேர் இழுத்தல் முதலியவற்றையும் பக்குவமும் பகுத்தறிவுமற்ற செயல்கள் என்று துணிந்துரைக்கின்றார்.

    செத்தவர்களுக்கு செய்யும் பித்ரு காரியங்களான கருமாதி, திதி முதலிய சடங்குகளைக் கூட வீணாகப் பயனின்றிச் செய்யாமல் அந்த நாளில் அவர்களை (இறந்தவர்களை) நினைத்து ஏழைகளுக்கும், பசித்தவர்களுக்கும் அன்னதானம் செய்ய வலியுறுத்துகின்றார். பெண்களிடம் தாலி வாங்கும் சடங்கை ஒழிக்கவேண்டும். பிணத்தை எரிக்காமல் புதைக்கவேண்டும் என்பனவும் வள்ளலாரின் கொள்கைகளாகும்.    

    சமரசத்தையும், சீவகாருண்யத்தையும் வள்ளலாரைப்போல் ஆழமாகவும், அழுத்தமாகவும் வலியுறுத்தியவர்கள் வேறு எவருமில்லை எனலாம். 

    ”அப்பா நான் வேண்டுதல் கேட்டருள் புரிதல் வேண்டும்!
    ஆருயிர்கட்கெல்லாம் நான் அன்புசெயல் வேண்டும்!”
    எனும் தம்முடைய உயர்ந்த எண்ணத்தைத் தமிழ் விண்ணப்பமாக இறைவனிடம் வைத்தவர் அவர்.

    ”கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
    எல்லா வுயிரும் தொழும்”
    எனும் குறளுக்கு இலக்கணமானவர்.

    வாழ்வுக்கு வழிகாட்டும் வள்ளுவத்தை மக்களுக்குப் பாடமாக்கிச் சொல்ல திருக்குறள் வகுப்பை முதன்முதலில் தொடங்கிய ஆசான் அவர். எளிமையும் தன்னடக்கமும் வலிமையானவை என்பதை அண்ணல் காந்தியடிகளுக்கும் முன்னதாய்ச் செயலில் காட்டியவர். கூறுபோட்டு மனிதர்களைக் கொள்ளைகொண்ட சாதி, மதப் போக்குகளுக்கு இடையில் சோறுபோட்டு அவர்களுக்குச் சாகாக் கலையைச் சொல்லிக்கொடுக்கக் கடைவிரித்தவர்.

    மதங்கடந்த மனிதநேயம், அதனையும் கடந்த ஆன்மநேயம் என்பதுதான் இராமலிங்க வள்ளலின் முடிமணியான கோட்பாடாய்த் திகழ்ந்தது. துன்புறும் உயிர்களுக்காக மட்டுமின்றி, வாடிய பயிர்களுக்காவும் வாடிநின்ற அந்தப் பேரருளாளரைப் போற்றுவோம்; அவர் வகுத்தளித்த கொலை புலை தவிர்த்த நன்னெறிப் பாதையில் பயணிப்போம்!

     கட்டுரைக்கு உதவியவை:

    1. http://www.tamilvu.org/ta/library-l5F31-html-l5F31noo-144976
    2. இராமலிங்க அடிகள் வரலாறு – ஊரன் அடிகள், சமரச சன்மார்க்க ஆராய்ச்சி நிலையம்.
    3. http://www.vallalar.org/tamil

     

    Share