Tag: விஜய்

  • ஜனநாயகன் – விஜயின் பிரம்மாஸ்திரம்

    ஜனநாயகன் – விஜயின் பிரம்மாஸ்திரம்

    – அண்ணாகண்ணன்

    தேர்தலுக்கு முன்னால் இந்தப் படம் வெளியாகியிருந்தால், அத்தனைத் தொகுதிகளையும் விஜய் அள்ளியிருப்பார். இதைத் தடுத்து நிறுத்தியதால், எல்லாம் முடிந்துவிட்டது என்று பொருள் இல்லை. அடுத்து, இடைத்தேர்தல், உள்ளாட்சித் தேர்தல், மக்களவைத் தேர்தல், 2031 சட்டமன்றத் தேர்தல் என இனி நடக்கப் போகிற ஒவ்வொரு தேர்தலிலும் ஜனநாயகன், மிகப் பெரிய தாக்கத்தைச் செலுத்தும்.

    இதில் உள்ள குறிப்பிட்ட சில காட்சிகளைத் தொலைக்காட்சியில் மீண்டும் மீண்டும் ஒளிபரப்பினால் அல்லது சமூக ஊடகங்களில் பகிர்ந்தால், அதன் விளைவும் வீச்சும் நினைத்துப் பார்க்க முடியாத அளவு இருக்கும். தமிழில் ஜனநாயகன், தெலுங்கில் ஜனநாயகுடு, இந்தியில் ஜன் நேதா எனப் பல மொழிகளில் வௌியாகியிருப்பதால், இந்திய அளவில் விஜயின் செல்வாக்கு உயரும்.

    அந்த அளவுக்குத் தேர்தலை மையப்படுத்திய படம் இது. குழந்தைகள், பெண்கள், கிராமத்து மக்கள் எனப் பல்வேறு தரப்பினரையும் கவரும் வகையில் திரைக்கதை அமைத்திருக்கிறார்கள். மக்களின் உணர்வுகளைத் தூண்டும் வகையிலும் உடனே செயலாற்ற உந்தும் வகையிலும் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை மக்கள் தீர்மானிக்கும் வகையிலும் இந்தப் படம் அமைந்துள்ளது.

    விஜய் மட்டுமின்றி, அமைச்சர்கள் என்.ஆனந்த், அருண்ராஜ் ஆகியோரும் திரையில் தோன்றுகிறார்கள். தளபதி வெற்றி கொண்டான் என்ற பெயரில் விஜயின் பட்டப் பெயர், விஜய் என்ற பெயரின் பொருளான வெற்றி ஆகியவை இடம் பெற்றுள்ளன. அத்துடன் இந்தப் பெயர்ச் சுருக்கமும் கட்சியின் பெயர்ச் சுருக்கமும் (டிவிகே) ஒன்றாக வருமாறு வைத்திருக்கிறார்கள். சமூகப் பிரச்சினைகள் பலவற்றையும் இதில் விஜய் அதிரடியாகத் தீர்த்து வைக்கிறார். தங்களுக்காக ஒருவர் சூப்பர்மேனாக நின்று போராட வேண்டும் என்ற மக்களின் நீண்ட கால எதிர்பார்ப்பைப் பரபரப்பாக நிறைவேற்றி இருக்கிறார்கள்.

    எம்.ஜி.ஆர். பாடல்கள், அதிமுகவுக்கு இன்றும் வாக்குகளைச் சேர்த்து வருகின்றன. அது போல், இந்தப் படத்தின் காட்சிகளும் பாடல்களும் த.வெ.க.வுக்கு மிகப் பெரிய பலம் சேர்க்கும். எம்.ஜி.ஆரும் விஜய் பக்கம் இருப்பது போல் காட்சிகள் உள்ளதால், எம்.ஜி.ஆர். ரசிகர்களும் விஜய் பக்கம் வருவார்கள்.

    ஜனநாயகன் என்ற பெயரிலேயே கன் (Gun) இருப்பதால், படத்திலும் ஏராளமான துப்பாக்கிகள் வெடிக்கின்றன. வன்முறை அதிகம் என்பதால், வயது வந்தோருக்கான படம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    குழந்தைகளுக்குச் சில நல்ல செய்திகளை விஜய் அழுத்தமாகச் சொல்கிறார். ஆனால், வயது வந்தோருக்கான படம் எனச் சான்றிதழ் பெற்றுள்ளதால், குழந்தைகளிடம் அந்தச் செய்திகள் சென்று சேருமா? ஏனெனில் அவர்களால் திரையரங்கிற்குச் சென்று இதைப் பார்க்க முடியாது. தொலைக்காட்சியிலும் ஓடிடி தளங்களிலும் இந்தப் படம் வெளியாகும்போது, என்ன நடக்கும் என்று தெரியவில்லை.

    இதைப் பொழுதுபோக்குப் படம் என்பதை விட, அதிரடி அரசியல் திரைப்படம் என்றே சொல்ல வேண்டும். தனது திறமை என்ன, வலிமை என்ன என்று இயக்குநர் எச்.வினோத் நிரூபித்திருக்கிறார்.

    இதை எதிர்கொள்ள, இன்னும் நிறைய அரசியல் திரைப்படங்கள் வரலாம். ஆனால், ஜனநாயகனுக்கு வலிமை சேர்ப்பது கதை மட்டுமில்லை, விஜய் என்னும் ஆளுமை. அவரது பிரம்மாஸ்திரம், இந்த ஜனநாயகன். இது செல்லும் இடமெங்கும் வெல்லும்.

    Share
  • தமிழக முதலமைச்சர் விஜய், நீடூழி வாழ்க!

    தமிழக முதலமைச்சர் விஜய், நீடூழி வாழ்க!

    அண்ணாகண்ணன்

    தமிழக முதலமைச்சர் விஜய், நீடூழி வாழ்க

    செயலே சிறந்த சொல் என்பதற்கு வாழும் எடுத்துக்காட்டாக இருக்கிறார். அவர் அமைதியாக இருக்கிறார். ஆனால், தமிழகத்தில் பெரும் மாற்றங்களைக் காண்கிறோம்.

    வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்காமல் தேர்தலில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, இலஞ்சம், ஊழலுக்கு எதிராக ஒரு மெளனப் புரட்சி நிகழ்ந்துகொண்டிருக்கிறது.

    முந்தயை ஆட்சிக் காலத்தில் சிஎம்டிஏ (CMDA), டிடீசிபி (DTCP) மூலம் கட்டட அனுமதிக்கு சதுர அடிக்கு ரூ.27 வீதம் வசூலிக்கப்பட்டு வந்த ‘பார்ட்டி ஃபண்ட்’ (Party Fund) முறை, ரத்து செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பல ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்தக் கட்டாய வசூல் முறை முற்றிலுமாக நீக்கப்பட்டுள்ளது.

    2006 -2011 தி.மு.க., ஆட்சியில் மின் துறை அமைச்சராக இருந்தபோது, தனியார் வீராசாமி சூரியமின் உற்பத்தி திட்டத்தில், அரசு அனுமதிக்கு, 1 மெகா வாட்டுக்கு 5 லட்சம் ரூபாய் ‘கட்சி நிதி’ வசூலிக்கப்பட்டது. அதையடுத்து, அ.தி.மு.க., ஆட்சியில் விஸ்வநாதன் அமைச்சராக இருந்த காலத்தில், 10 லட்சம் ரூபாயாக அதிகரிக்கப்பட்டது. பின், தங்கமணி அமைச்சரான பின், 15 லட்சம் ரூபாயாக கூடியது. கடந்த தி.மு.க., ஆட்சியில், செந்தில் பாலாஜி பதவி காலத்தில், 1 மெகா வாட்டிற்கு, 25 லட்சம் ரூபாயாக அதிகரிக்கப்பட்டது. உதாரணமாக, ஒரு நிறுவனம், 10 மெகா வாட் மின் திட்டத்துக்கு, அரசு அனுமதி கோரி விண்ணப்பித்தால், 2.5 கோடி ரூபாய் ‘அழ’ வேண்டும். 25 ஆண்டுகளாக இருந்து வந்த இந்த ஊழல் நடைமுறை, த.வெ.க., ஆட்சிக்கு வந்த பின் தற்போது முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுவிட்டது (தினமலர் செய்தி).

    ‘அங்கீகாரம் புதுப்பித்தல் மற்றும் தடையில்லாச் சான்றுக்கு, தனியார் பள்ளிகளிடம் கடந்த ஐந்தாண்டுகளில், 300 கோடி ரூபாய் லஞ்சம் பெறப்பட்டுள்ளது’ என, தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிக் மேல்நிலை மற்றும் சி.பி.எஸ்.இ., பள்ளிகள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் நந்தகுமார் கூறியுள்ளார். ஒவ்வொரு பள்ளிக்கும், ரூ.5 லட்சம் முதல் ரூ.30 லட்சம் வரை பணம் பெறப்பட்டு அங்கீகாரம் வழங்கப்பட்டது. கடந்த ஐந்தாண்டுகளில், அங்கீகாரத்துக்காக, தனியார் பள்ளிகளிடம் மொத்தம், 300 கோடி ரூபாய்க்கும் அதிகமான பணம் வசூலிக்கப்பட்டது. பெற்றோர் ஆசிரியர் கழக மாநாட்டு மலர் வெளியிட, ஒவ்வொரு பள்ளியிடமும், 50,000 முதல் 1,00,000 ரூபாய் வரை வசூலிக்கப்பட்டது. அதே போல, தி.மு.க., கட்சி பொதுக் கூட்டத்துக்கு, தனியார் பள்ளிகளின் வாகனங்கள் வலுக்கட்டாயமாக பயன்படுத்தப்பட்டன. இப்போது எந்தக் கையூட்டும் இல்லாமல் ஒப்புதல் வழங்கப்படுகிறது. இடைத்தரகர்களின் தலையீடு இல்லாமல், தகுதியின் அடிப்படையில் மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது. முறையான பாதுகாப்புச் சான்றிதழ்களைக் கொண்டுள்ள பள்ளிகள், எந்தவித லஞ்சமும் செலுத்தாமல் எளிதாகப் புதுப்பித்தல் ஆணைகளைப் பெற முடியும் (தினமலர் செய்தி).

    வாகனங்களுக்கு விருப்பமான (பேன்சி) எண்களைப் பெற முறைகேடுகள் மற்றும் லஞ்சம் நடைபெறுவதைத் தடுக்க, தமிழக அரசு இ-ஏல (e-auction/e-bidding) முறையைக் கொண்டுவந்துள்ளது.இதன் மூலம் முறையான வெளிப்படைத்தன்மை உருவாக்கப்பட்டுள்ளதுடன், விருப்பமான எண்களுக்கு அரசு நிர்ணயித்த அடிப்படை கட்டணத்தை மட்டும் செலுத்தி இணையவழியாகப் பெறலாம் (இந்து தமிழ் திசை).

    தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் லஞ்சம் மற்றும் ஊழலை ஒழிக்க, சுகாதாரத் துறை கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. துறையில் “ஒரு ரூபாய் கூட லஞ்சம் இருக்காது” என அரசு திட்டவட்டமாக அறிவித்துள்ளது. ஸ்ரீரங்கம், காஞ்சிபுரம் போன்ற மருத்துவமனைகளில் லஞ்சம் வாங்கிய ஊழியர்கள் மீது துறை ரீதியான கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. (பாலிமர் நியூஸ்).

    தமிழகம் முழுவதும், முறைகேடுகளில் ஈடுப்பட்ட குவாரிகளை மூட அரசு உத்தரவிட்டுள்ளது. கல் குவாரிகளின் உரிமங்களைப் புதுபிக்கவும், புதிய குவாரிகளைத் தொடங்கி நடத்தவும், விரிவுபடுத்தவும் பெரும் தொகைகளை கட்சி நிதி என்ற பெயரில் லஞ்சமாக கொடுக்க வேண்டிய நிலை, விஜய் ஆட்சியில் ஒழிக்கப்பட்டுள்ளது. ஒரு பைசா லஞ்சம் கொடுக்காமல், தனது கல் குவாரியின் உரிமத்தைப் புதுப்பிக்க முடிந்ததாக கரூரைச் சேர்ந்த கல் குவாரி உரிமையாளர் ஒருவர் கூறியுள்ளார் (யாழ் இணையத்தளம்).

    பள்ளிக்கரணை குடியிருப்புத் திட்டம் ரத்து: சென்னை பெரும்பாக்கம் – மேடவாக்கம் இடையே பள்ளிக்கரணை சதுப்பு நிலப்பகுதியில் தனியார் நிறுவனம் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட வழங்கப்பட்ட சுற்றுச்சூழல் அனுமதியை மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் (SEIAA) ரத்து செய்துள்ளது.

    பி.ஏ.பி. கால்வாய் சீரமைப்புத் திட்டம் ரத்து: ரூ.4,500 கோடி மதிப்பிலான பி.ஏ.பி. (பரம்பிக்குளம் – ஆழியாறு) கால்வாய் சீரமைப்பு திட்டம் கைவிடப்பட்டு, அதற்குப் பதிலாகக் குழாய் மூலம் தண்ணீர் கொண்டு செல்லும் புதிய திட்டம் தயாரிக்கப்படவுள்ளது.

    கோயில் திருமண மண்டபங்கள் ரத்து: திருக்கோயில்களின் நிதிச்சுமையைக் கருத்திற்கொண்டு, தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை ரூ.246 கோடி மதிப்பிலான 46 புதிய திருமண மண்டபங்கள் மற்றும் வணிக வளாகங்கள் கட்டும் திட்டங்களை அதிரடியாக ரத்து செய்துள்ளது.

    சென்னை – உத்தண்டி உயர்மட்ட சாலை திட்டம் ரத்து: சென்னை திருவான்மியூர் முதல் உத்தண்டி வரை கிழக்குக் கடற்கரைச் சாலையில் (ECR) ரூ.2,100 கோடி மதிப்பில் 13.3 கி.மீ தூரத்திற்கு உயர்மட்ட சாலை அமைக்கும் திட்டம் ரத்து. ஒரு கிலோ மீட்டருக்கு நிர்ணயிக்கப்பட்ட தொகையில் ரூ. 10.89 கோடி அதிகமாக டெண்டர் விடப்பட்டதாக எழுந்த புகாரை அடுத்து, இந்த டெண்டரை தமிழக அரசு ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

    இவை அனைத்தும் பத்திரிகைகளில் வந்த செய்திகள். இன்னும் இவை போன்ற பல்வேறு செய்திகள் வந்தவண்ணம் உள்ளன. பட்டா மாறுதலுக்கு லஞ்சம் கொடுக்கவில்லை, குவாரி புதுப்பித்தலுக்கு லஞ்சம் கொடுக்கவில்லை, பள்ளி அங்கீகாரப் புதுப்பித்தலுக்கு லஞ்சம் கொடுக்கவில்லை எனப் பயனாளிகள் நேரடியாகப் பேசியிருக்கிறார்கள்.

    இவை அனைத்தும் விஜய் அரசு பொறுப்பேற்ற ஒரு மாதத்தில் நடைபெற்றுள்ளன. அப்படியானால், ஒட்டுமொத்த அரசு எந்திரமும் விஜய் சொன்னதைச் செய்கின்றது. செயலில் காட்டுகின்றது என்பதே உண்மை. ஆனால், விஜய் வாயைத் திறந்து பேசவில்லை என்பதையே திமுக மீண்டும் மீண்டும் பேசுகின்றது. விஜயோ, செயலே சிறந்த சொல் என்று செய்து காட்டி வருகிறார்.

    ஆக்கப்பூர்வமாக அரசு செயல்படுகிறது. தொலைநோக்குடன் கூடிய திட்டங்கள் உருப்பெறத் தொடங்கியுள்ளன. நம்பிக்கை அளிக்கும் நாயகராகத் திகழ்கிற விஜய் நீடு வாழ்க! நிலைபெற வாழ்க! மக்கள் மனங்களில் நின்று வாழ்க! மனம் நிறைந்து வாழ்க!

    Share
  • ரகசியக் காப்பு உறுதிமொழியில் ஒரு பிழை

    ரகசியக் காப்பு உறுதிமொழியில் ஒரு பிழை

    அண்ணாகண்ணன்

    முதலமைச்சர், அமைச்சர்கள் உள்ளிட்டோர் ஏற்றுள்ள ரகசியக் காப்பு உறுதிமொழியில் ஒரு பிழை உள்ளது.

    இதன் ஆங்கில வடிவம்

    Form of oath of secrecy for the Chief Minister:

    “I, A.B., do swear in the name of God / solemnly affirm, that I will not directly or indirectly communicate or reveal to any person or persons any matter which shall be brought under my consideration or shall become known to me as the Chief Minister for the state of Tamil Nadu, except as may be required for the due discharge of my duties as the Chief Minister.”

    இப்போதுள்ள தமிழ் வடிவம்:

    நான், தமிழ்நாட்டு அரசின் முதலமைச்சர் என்ற முறையில் எனது கவனத்திற்கு வருவதும் அல்லது எனக்குத் தெரியவருவதுமான எந்த ஒரு பொருளையும், முதலமைச்சரின் கடமைகளை உரியவாறு நிறைவேற்றத் தேவையான அளவுக்கன்றி, ஒருவரிடமோ அல்லது பலரிடமோ நேர்முகமாகவோ அல்லது மறைமுகமாகவோ அறிவிக்கவோ அல்லது வெளிப்படுத்தவோ மாட்டேன் என்று ஆண்டவன் மீது ஆணையிட்டு உறுதிமொழிகிறேன்.”

    ஆங்கிலத்தில் உள்ள matter என்பதைத் தமிழில் பொருள் எனப் பெயர்த்திருக்கிறார்கள்.

    பொருள் என்ற சொல்லுக்குத் தமிழில் பல பொருள்கள் உள்ளன. அர்த்தம், பணம், பொருண்மம், சடப் பொருள், பருப்பொருள், உட்பொருள், மறைபொருள்… என ஏராளமான அர்த்தங்கள் உள்ளன. இதில் எந்தப் பொருளை அவர்கள் சொல்கிறார்கள் என்பது இந்தச் சொல்லாட்சியில் கூர்மையாக இல்லை.

    ரகசியக் காப்பு உறுதிமொழியில் உள்ள matter என்பது, விஷயத்தைக் குறிக்கிறது. கூகுள் கூட இதை எவ்விஷயத்தையும் என்றே மொழிபெயர்க்கிறது. இதைச் செய்தி என்றும் சொல்லலாம். ஆனால், News என்ற பொருள் அதற்கு ஏற்கெனவே உள்ளது. தகவல், விவரம் என்று கூறலாம். ஆனால், விஷயம், விவரம் ஆகியவை தமிழ்ச் சொற்கள் இல்லை. தகவல் என்பது தமிழா என்று ஆராய வேண்டும். ஆனால், தரவு என்ற சொல், டேட்டாவைக் குறிக்கிறது. ரகசியக் காப்பில் உள்ள மேட்டர் என்பது ஒரு வகையான டேட்டா. எனவே இதைத் தரவு என்றே குறிப்பிடலாம்.

    விஜய்க்கு முன்னதாகப் பொறுப்பேற்ற முந்தைய முதலமைச்சர்களின் ரகசியக் காப்பு உறுதிமொழியையும் கவனித்தேன். அவர்களும் மேட்டரைப் பொருள் என்றே சொல்லியிருக்கிறார்கள். இந்தப் பொருளைத் தரவு என்று மாற்றுவது பொருத்தமாக இருக்கும்.

    இவ்வளவும் சொல்லிவிட்டு ரகசியக் காப்பில் ரகசியம் என்பது மட்டும் தமிழா என்றும் நீங்கள் கேட்கலாம். அது தமிழில்லை. அதைக் கமுக்கம் எனத் தமிழில் அழைக்கிறோம். கமுக்கக் காப்பு உறுதிமொழி அல்லது தரவுக் காப்பு உறுதிமொழி என இனி அழைக்கலாம். தமிழ்நாட்டில் தமிழ் ஆட்சி மொழி என்பதை நிலைநாட்ட, இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தலாம்.

    #vijay #cmvijay #tvk #tamil #tamilnadu #swornin #oath #terminology

    Share
  • விஜய் எனும் சாதனையாளன்

    விஜய் எனும் சாதனையாளன்

    அண்ணாகண்ணன்

    ஏனெனில்
    ஓய்வுக்குப் பிறகு இல்லை, உச்சத்தில் இருக்கும்போதே நீ அரசியலுக்கு வந்தாய்

    ஏனெனில்
    கட்சி தொடங்கிய இரண்டே ஆண்டுகளில் நீ ஆட்சியைப் பிடித்தாய்

    ஏனெனில்
    மாறி மாறி அமைந்த 59 ஆண்டுக்கால திராவிட ஆட்சியை நீ அகற்றினாய்

    ஏனெனில்
    தனித்து நின்று, ஒன்றே முக்கால் கோடி வாக்குகளை நீ பெற்றாய்

    ஏனெனில்
    வாக்குக்குப் பணம் கொடுத்து வெல்லும் பார்முலாக்களை நீ தூக்கி எறிந்தாய்

    ஏனெனில்
    த.வெ.க. வேட்பாளராகப் பல்வேறு சாதியினருக்கும் வாய்ப்பளித்து வெற்றி பெற வைத்தாய்

    ஏனெனில்
    பொதுத் தொகுதிகளில் தலித் வேட்பாளரை நிறுத்தி வெற்றி பெறச் செய்தாய்

    ஏனெனில்
    இளைஞர்களை நீ முன்னிறுத்தினாய். த.வெ.க. சட்டமன்ற உறுப்பினர்களில் 23 பேர், 35 வயதுக்கு உட்பட்டவர்கள்

    ஏனெனில்
    அரசியல் பொதுக்கூட்டம், மாநாடு, பரப்புரை ஆகிய அனைத்தையும் குறுகிய நேரத்தில் நிகழ்த்தினாய். இதன் மூலம் புதியதொரு விதி செய்தாய்

    ஏனெனில்
    உன் மதத்தை நீ மறைக்கவில்லை. நான் ஜோசப் விஜய் என்று வெளிப்படையாகச் சொன்னாய்

    ஏனெனில்
    எளிய திரைப்பட ரசிகர்களை நீ அரசியல்மயப்படுத்தினாய்

    ஏனெனில்
    வாக்குரிமை இல்லாத குழந்தைகள் மனத்தையும் நீ வெற்றி கொண்டாய்

    ஏனெனில்
    மக்களின் நம்பிக்கையாக, மாற்றத்தின் அடையாளமாக நீயே இருக்கிறாய்

     

    Share