தமிழக முதலமைச்சர் விஜய், நீடூழி வாழ்க!

0
Vijay sworn in

அண்ணாகண்ணன்

தமிழக முதலமைச்சர் விஜய், நீடூழி வாழ்க

செயலே சிறந்த சொல் என்பதற்கு வாழும் எடுத்துக்காட்டாக இருக்கிறார். அவர் அமைதியாக இருக்கிறார். ஆனால், தமிழகத்தில் பெரும் மாற்றங்களைக் காண்கிறோம்.

வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்காமல் தேர்தலில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, இலஞ்சம், ஊழலுக்கு எதிராக ஒரு மெளனப் புரட்சி நிகழ்ந்துகொண்டிருக்கிறது.

முந்தயை ஆட்சிக் காலத்தில் சிஎம்டிஏ (CMDA), டிடீசிபி (DTCP) மூலம் கட்டட அனுமதிக்கு சதுர அடிக்கு ரூ.27 வீதம் வசூலிக்கப்பட்டு வந்த ‘பார்ட்டி ஃபண்ட்’ (Party Fund) முறை, ரத்து செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பல ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்தக் கட்டாய வசூல் முறை முற்றிலுமாக நீக்கப்பட்டுள்ளது.

2006 -2011 தி.மு.க., ஆட்சியில் மின் துறை அமைச்சராக இருந்தபோது, தனியார் வீராசாமி சூரியமின் உற்பத்தி திட்டத்தில், அரசு அனுமதிக்கு, 1 மெகா வாட்டுக்கு 5 லட்சம் ரூபாய் ‘கட்சி நிதி’ வசூலிக்கப்பட்டது. அதையடுத்து, அ.தி.மு.க., ஆட்சியில் விஸ்வநாதன் அமைச்சராக இருந்த காலத்தில், 10 லட்சம் ரூபாயாக அதிகரிக்கப்பட்டது. பின், தங்கமணி அமைச்சரான பின், 15 லட்சம் ரூபாயாக கூடியது. கடந்த தி.மு.க., ஆட்சியில், செந்தில் பாலாஜி பதவி காலத்தில், 1 மெகா வாட்டிற்கு, 25 லட்சம் ரூபாயாக அதிகரிக்கப்பட்டது. உதாரணமாக, ஒரு நிறுவனம், 10 மெகா வாட் மின் திட்டத்துக்கு, அரசு அனுமதி கோரி விண்ணப்பித்தால், 2.5 கோடி ரூபாய் ‘அழ’ வேண்டும். 25 ஆண்டுகளாக இருந்து வந்த இந்த ஊழல் நடைமுறை, த.வெ.க., ஆட்சிக்கு வந்த பின் தற்போது முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுவிட்டது (தினமலர் செய்தி).

‘அங்கீகாரம் புதுப்பித்தல் மற்றும் தடையில்லாச் சான்றுக்கு, தனியார் பள்ளிகளிடம் கடந்த ஐந்தாண்டுகளில், 300 கோடி ரூபாய் லஞ்சம் பெறப்பட்டுள்ளது’ என, தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிக் மேல்நிலை மற்றும் சி.பி.எஸ்.இ., பள்ளிகள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் நந்தகுமார் கூறியுள்ளார். ஒவ்வொரு பள்ளிக்கும், ரூ.5 லட்சம் முதல் ரூ.30 லட்சம் வரை பணம் பெறப்பட்டு அங்கீகாரம் வழங்கப்பட்டது. கடந்த ஐந்தாண்டுகளில், அங்கீகாரத்துக்காக, தனியார் பள்ளிகளிடம் மொத்தம், 300 கோடி ரூபாய்க்கும் அதிகமான பணம் வசூலிக்கப்பட்டது. பெற்றோர் ஆசிரியர் கழக மாநாட்டு மலர் வெளியிட, ஒவ்வொரு பள்ளியிடமும், 50,000 முதல் 1,00,000 ரூபாய் வரை வசூலிக்கப்பட்டது. அதே போல, தி.மு.க., கட்சி பொதுக் கூட்டத்துக்கு, தனியார் பள்ளிகளின் வாகனங்கள் வலுக்கட்டாயமாக பயன்படுத்தப்பட்டன. இப்போது எந்தக் கையூட்டும் இல்லாமல் ஒப்புதல் வழங்கப்படுகிறது. இடைத்தரகர்களின் தலையீடு இல்லாமல், தகுதியின் அடிப்படையில் மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது. முறையான பாதுகாப்புச் சான்றிதழ்களைக் கொண்டுள்ள பள்ளிகள், எந்தவித லஞ்சமும் செலுத்தாமல் எளிதாகப் புதுப்பித்தல் ஆணைகளைப் பெற முடியும் (தினமலர் செய்தி).

வாகனங்களுக்கு விருப்பமான (பேன்சி) எண்களைப் பெற முறைகேடுகள் மற்றும் லஞ்சம் நடைபெறுவதைத் தடுக்க, தமிழக அரசு இ-ஏல (e-auction/e-bidding) முறையைக் கொண்டுவந்துள்ளது.இதன் மூலம் முறையான வெளிப்படைத்தன்மை உருவாக்கப்பட்டுள்ளதுடன், விருப்பமான எண்களுக்கு அரசு நிர்ணயித்த அடிப்படை கட்டணத்தை மட்டும் செலுத்தி இணையவழியாகப் பெறலாம் (இந்து தமிழ் திசை).

தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் லஞ்சம் மற்றும் ஊழலை ஒழிக்க, சுகாதாரத் துறை கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. துறையில் “ஒரு ரூபாய் கூட லஞ்சம் இருக்காது” என அரசு திட்டவட்டமாக அறிவித்துள்ளது. ஸ்ரீரங்கம், காஞ்சிபுரம் போன்ற மருத்துவமனைகளில் லஞ்சம் வாங்கிய ஊழியர்கள் மீது துறை ரீதியான கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. (பாலிமர் நியூஸ்).

தமிழகம் முழுவதும், முறைகேடுகளில் ஈடுப்பட்ட குவாரிகளை மூட அரசு உத்தரவிட்டுள்ளது. கல் குவாரிகளின் உரிமங்களைப் புதுபிக்கவும், புதிய குவாரிகளைத் தொடங்கி நடத்தவும், விரிவுபடுத்தவும் பெரும் தொகைகளை கட்சி நிதி என்ற பெயரில் லஞ்சமாக கொடுக்க வேண்டிய நிலை, விஜய் ஆட்சியில் ஒழிக்கப்பட்டுள்ளது. ஒரு பைசா லஞ்சம் கொடுக்காமல், தனது கல் குவாரியின் உரிமத்தைப் புதுப்பிக்க முடிந்ததாக கரூரைச் சேர்ந்த கல் குவாரி உரிமையாளர் ஒருவர் கூறியுள்ளார் (யாழ் இணையத்தளம்).

பள்ளிக்கரணை குடியிருப்புத் திட்டம் ரத்து: சென்னை பெரும்பாக்கம் – மேடவாக்கம் இடையே பள்ளிக்கரணை சதுப்பு நிலப்பகுதியில் தனியார் நிறுவனம் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட வழங்கப்பட்ட சுற்றுச்சூழல் அனுமதியை மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் (SEIAA) ரத்து செய்துள்ளது.

பி.ஏ.பி. கால்வாய் சீரமைப்புத் திட்டம் ரத்து: ரூ.4,500 கோடி மதிப்பிலான பி.ஏ.பி. (பரம்பிக்குளம் – ஆழியாறு) கால்வாய் சீரமைப்பு திட்டம் கைவிடப்பட்டு, அதற்குப் பதிலாகக் குழாய் மூலம் தண்ணீர் கொண்டு செல்லும் புதிய திட்டம் தயாரிக்கப்படவுள்ளது.

கோயில் திருமண மண்டபங்கள் ரத்து: திருக்கோயில்களின் நிதிச்சுமையைக் கருத்திற்கொண்டு, தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை ரூ.246 கோடி மதிப்பிலான 46 புதிய திருமண மண்டபங்கள் மற்றும் வணிக வளாகங்கள் கட்டும் திட்டங்களை அதிரடியாக ரத்து செய்துள்ளது.

சென்னை – உத்தண்டி உயர்மட்ட சாலை திட்டம் ரத்து: சென்னை திருவான்மியூர் முதல் உத்தண்டி வரை கிழக்குக் கடற்கரைச் சாலையில் (ECR) ரூ.2,100 கோடி மதிப்பில் 13.3 கி.மீ தூரத்திற்கு உயர்மட்ட சாலை அமைக்கும் திட்டம் ரத்து. ஒரு கிலோ மீட்டருக்கு நிர்ணயிக்கப்பட்ட தொகையில் ரூ. 10.89 கோடி அதிகமாக டெண்டர் விடப்பட்டதாக எழுந்த புகாரை அடுத்து, இந்த டெண்டரை தமிழக அரசு ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

இவை அனைத்தும் பத்திரிகைகளில் வந்த செய்திகள். இன்னும் இவை போன்ற பல்வேறு செய்திகள் வந்தவண்ணம் உள்ளன. பட்டா மாறுதலுக்கு லஞ்சம் கொடுக்கவில்லை, குவாரி புதுப்பித்தலுக்கு லஞ்சம் கொடுக்கவில்லை, பள்ளி அங்கீகாரப் புதுப்பித்தலுக்கு லஞ்சம் கொடுக்கவில்லை எனப் பயனாளிகள் நேரடியாகப் பேசியிருக்கிறார்கள்.

இவை அனைத்தும் விஜய் அரசு பொறுப்பேற்ற ஒரு மாதத்தில் நடைபெற்றுள்ளன. அப்படியானால், ஒட்டுமொத்த அரசு எந்திரமும் விஜய் சொன்னதைச் செய்கின்றது. செயலில் காட்டுகின்றது என்பதே உண்மை. ஆனால், விஜய் வாயைத் திறந்து பேசவில்லை என்பதையே திமுக மீண்டும் மீண்டும் பேசுகின்றது. விஜயோ, செயலே சிறந்த சொல் என்று செய்து காட்டி வருகிறார்.

ஆக்கப்பூர்வமாக அரசு செயல்படுகிறது. தொலைநோக்குடன் கூடிய திட்டங்கள் உருப்பெறத் தொடங்கியுள்ளன. நம்பிக்கை அளிக்கும் நாயகராகத் திகழ்கிற விஜய் நீடு வாழ்க! நிலைபெற வாழ்க! மக்கள் மனங்களில் நின்று வாழ்க! மனம் நிறைந்து வாழ்க!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.