அடையாத விழிகள் (சிறுகதை)

0

முனைவர் நா. தீபா சரவணன்
உதவிப்பேராசிரியர்
குமரகுரு பன்முகக்கலை அறிவியல் கல்லூரி, கோவை.

“எவ்வளவு முயற்சி செஞ்சும் இத மட்டும் பண்ணவே முடியல. நாசுவ மாரிமுத்துவ வரச்சொல்லியிருக்கோ. பார்க்கலா அவரு வந்து பூச செஞ்சு ஐஸ் பெட்டில படுக்க வெக்கும் போது அவருகிட்ட சொல்லலா. அவங்களுக்குத் தெரியும் எப்படி பண்ணனும்னு. செவ்வாக்கெழமை நைட்டு எறந்தது காலைலதா ஐஸ் பெட்டி கெடைக்கும்னு சொல்லிட்டாங்க கிட்டத்தட்ட ஒம்பது மணி நேரமாச்சு.  எழவு வீட்டுக்கு வர்ற ஒவ்வொருத்தரும் பொணம் இப்படி கண்ண தொறந்துட்டு இருக்கக் கூடாதுன்னு சொல்லிக்கிட்டே தான் இருக்காங்க நாங்களும் ஏதேதோ செஞ்சிட்டு தா இருக்கோ. ஆனா முடிய மாட்டேங்குது. நேத்து எறந்ததும் கையை மடக்கிவெச்சு  வெள்ளத்துணி போடவே ரொம்ப சிரமமாதா இருந்துச்சு  கையெ மடக்கவே முடியல’.

மாரிமுத்தண்ணன் காலைல ஆறு மணிக்கெல்லா ஐஸ்பெட்டியோட வந்துட்டாரு. வருண் ஓடிப்போய் பெட்டியை எறக்கினான்.  அந்த அண்ணந்தா எப்போதும் அப்பாவுக்கு முடிவெட்ட வீட்டுக்கு வருவாரு.  அதனால சின்ன வயசிலிருந்தே தெரியும்.

“அண்ணா….. பாருங்க. அப்பா எறந்து இவ்வளவு நேரமாச்சு கண்ணு மட்டும் மூடவே மாட்டேங்குது நாங்களும் என்னெல்லாமோ செஞ்சு பார்த்துட்டோம். வாயும் பாருங்க  பல்ல கடிச்சுட்டு  இருக்காரு.  வாய மூடுறதும் சிரமமா இருக்கு.”

“ சரி தம்பி நான் பாத்துக்குறேன். பூசைக்கு  தேங்காய் பழம் கொடுங்க.  எந்த எடத்தில பெட்டி வெக்கணும்.  வடக்கு தல வெச்சு  படுக்க வைக்கணும். அங்க கரண்ட் பாக்ஸ் இருக்கா ?”

“இருக்குண்ணா”

“ யாரு எறந்தாலும் வடக்குதா தல வெப்பாங்களா இல்ல வயசாகி எறந்ததால இப்படியாண்ணா”

“இல்லப்பா பொணத்த வடக்கு தல வச்சுதா படுக்க வெப்பாங்க. வடக்கு தல வெச்சு  வாழ்ந்தவங்களுமில்ல. தெக்க தல வச்சு தேஞ்சவங்களுமில்லன்னு சொல்லுவாங்க. அதனாலதான் வீட்டுல படுக்கும் போது வடக்கு தல வெச்சுப் படுக்கக் கூடாதுன்னு சொல்லுவாங்க.”

“ஓ….. அண்ணா இப்படி பொணம் கண்ணத்தொறந்து இருக்கக் கூடாதாமா”

“இருப்பா”

வெள்ளைத் துணியால் போர்த்தப்பட்ட தேகத்தை தலைப்பகுதியை மாரிமுத்துவும், கால் பகுதியை மகன் வருணும் பிடித்துத்தூக்கி ஐஸ் பெட்டியில் படுக்க வைத்தனர். ஒரு லிட்டர் பிளாஸ்டிக் பாட்டிலில் தண்ணீர் நிரப்பிக் கொண்டுவரச் சொல்லி தலையைத் தூக்கி வைத்து விட்டார். ஒரு வெள்ளை வேஷ்டி கேட்டார். ஒரு வேஷ்டியை நான்காகக் கிழித்து ஒருபகுதியைத்  தலையோடு சேர்த்து தாடைக்குக் கீழ் வழியாக இறுக்கமாகக் கட்டினார். பிறகு பொணத்தின் கண்களை மூடியபடி கொஞ்ச நேரம் கைகளால் அழுத்திப் பிடித்தார். தலைப்பகுதியை இழுத்துக்கட்டியதும் வாய் மூடியது.   கண்கள் மீது ஒரு சின்ன ஐஸ் கட்டியை  உடைத்து வைத்தார். ‘இப்போ மூடிரும் பாருப்பா’ என்று பெட்டியின் மூடியை எடுத்தார். ஐஸ் கரைந்ததும்  கண்கள் டப்பென்று  திறந்து கொண்டன, ஐஸ் கட்டியிலிருந்து வடிந்த நீர் கண்ணீர் விடுவது போல இருந்தன.

“நான் எத்தனையோ பொணத்தப் பார்த்திருக்கே உங்க அப்பா யாரையோ ரொம்ப எதிர்பார்த்து காத்துகிட்டு இருந்தாரு போல அதனாலதா கண்கள் மூட மாட்டேங்கிறது. பாக்கலாம் ஐஸ் பெட்டியில வெச்சு கொஞ்ச நேரமானதும் சிலவேள கண்கள் தானா அடைஞ்சுடும். இல்ல அவரு யார ரொம்ப விரும்பி எதிர்பார்த்தாரோ அவங்க வந்துட்டாங்கனா  தானாக மூடிடு. ஒங்க அப்பாவுக்கு வீடு நெறய ஆளு இருக்கிறதுதானே ரொம்பப் புடிக்கும். உங்க அப்பாவும் நானு சின்ன வயசுல இருந்தே சிநேகிதம். அவரு மொதலாளி நானு சாதாரண நாசுவெங்கற மாதிரியெல்லா பழக மாட்டாரு. நா வந்தாலும் மொதல்ல எனக்கு வயிறு நெறைய சாப்பாடு போட்டு தா வேலயத்தொடங்கச் சொல்லுவாரு எந்த நேரத்தில யார் வந்தாலும் வயிறார சோறு போடுவாரு.”

“உங்க அப்பச்சி சொல்லிக்கிட்டே இருப்பாங்க இவனுக்கு ராமகிருஷ்ணன்னு பேரு வச்சது தப்பா போச்சுன்னு. இராமர் குடும்பத்துக்காக பதினாலு வருசம் காட்டுக்குப் போய் கஷ்டப்பட்டது மாதிரி இவனும் குடும்பத்துக்காக கஷ்டப்படுறான். கிருஷ்ணன நம்பி மகாபாரத போர் நடந்த   மாதிரி  இவன நம்பி இவனுக்குக்கீழ ஆறு உடன்பொறந்தவங்கனு என்னெ பாக்கும்போதெல்லா  கரிசனப்படுவாங்க.”

தங்கைங்க நாலு பேரும் அண்ணன் எறந்த சேதி கேட்டு அழுதுகொண்டே  வந்தனர். முந்தைய நாள் தான் கடைசி தங்கை வனிதாவின் இரண்டாவது பையன் கல்யாணம். மூத்த அண்ணன் இல்லாமல் நடந்த முதல் குடும்ப நிகழ்வு. அதற்கும் அவர் கலந்துகொள்ளத்தயாராகவே இருந்தார். உடல் ஒத்துழைக்கவில்லை படுக்கையை விட்டு எழவே முடியவில்லை புதிய வேஷ்டி எல்லாம் அதற்காக எடுத்து வைத்திருந்தார். திருமணத்திற்கு மொதநாள் மாப்பிள்ளை வீட்டில வீட்டு சாமி கும்பிடும்போது வனிதா கோயம்புத்தூர் வீட்டிலிருந்து வீடியோகால் பண்ணினா.  அனைவரும் அழுது விட்டனர் வீடியோகாலில் அவருடைய தேகத்தைப் பார்த்து. தினமும் சவரம் செய்து முகத்தை பளபளன்னு வைத்திருப்பவர். தாடியும் மீசையும் வளர்ந்து மீசை  வாயை மூடி கிடந்தது.  குழந்தை பெற்ற வயிறு பத்து மாதத்திற்குப் பிறகு எப்படி வெற்றிடமாகக் குழியாக இருக்குமோ அதேபோல வயிறு  குழியாக இருந்தது. விலா எலும்புகளை எண்ணிப் பார்க்கலாம். அப்படி எலும்புக்கூடாக இருந்தார். கம்பீரமாக குடும்பத்திற்கே பெரியமாமாவாக இருந்த ராமகிருஷ்ணன்  இப்போது பார்க்க முடியாத ஒரு சிதைந்த உருவமாக இருந்தார்.

ஏன் பெரிய மாமா  என்று பெயர், தங்கைகளுக்கு ஒரு பிரச்சனை என்றால் மனதில் எண்ணுவதற்குள் அங்கு நிற்பார். அதேபோல தங்கைகளின் பிள்ளைகளுக்கு வயசுக்கு வந்த சீரு செய்வது. கல்யாண சீருசெய்வது. நல்லது கெட்டதுக்கு பொறந்த வீட்டு சீரு செய்வதுனு எதுக்குமே சளைக்க மாட்டார். பாரபட்சம் பார்க்காம எல்லா தங்கைளுக்கும் ஒரே மாதிரி செய்வார்.  அவருக்கு படுத்த படுக்கையிலிருந்த போதும்  கவலை மாமஞ்சீருக்குத் தன்னால கலந்து கொள்ள முடியலயே என்பதுதான். மாமஞ்சீரு நல்லபடியா முடிஞ்சுதானு செய்கை மூலம் கேட்டார்.

“நல்லபடியாக முடிஞ்சுது மாமா. ரிசப்ஷன் முடிஞ்சதும் நானே உங்கள வந்து பாக்கறே மாமா” மாப்பிள்ளை அனிருத் சொன்னார். அவர் உடனே வீடியோவை நிறுத்த சொல்லிட்டாரு. கல்யாண வீட்டில் அந்த சோக அமைதி கலையவே கொஞ்ச நேரம் ஆனது.

நாலு தங்கச்சிக மூணு தம்பிங்க அவங்க  கொழந்தைங்க  என மகள்கள் பன்னிரெண்டு பேர் ஒவ்வொருத்தரு வீட்டிலயும் மாத்தி மாத்தி ஒவ்வொரு விசேஷம் வரும். அந்த காலத்தில சொத்து சுகம் சேர்த்த வழியில்லாம பெருசானா ஒருத்தருக்கு ஒருத்தரு ஒத்தாசயா இருக்குமேனு அப்பச்சியும் தாத்தாவும் யோசிச்சு ஏழு புள்ளகள பெத்துக்கிட்டாங்க. கரு உருவாகாமல் தடுக்க வைத்தியமெல்லா ஏது அந்த காலத்துல. ஏழு பேரும் கடைசி வரை ஒற்றுமையா இருக்கணும்ங்குறதுதா பெரிய அண்ணன் ராமகிருஷ்ணனோட ஆசையும். அம்மா அப்பா காலத்துல இருந்த ஒத்துமையும் பொருளாதாரத்தையும் நாம எதிர்பார்க்க முடியாது என்று ஏழு பேருமே இரண்டு மூன்று பிள்ளைகளுக்கு மேல பெற்றுக்கொள்ளவில்லை. அப்படியும் மொத்தம் பதினாலு பேர்.

ராமகிருஷ்ணனுக்கு தனது தங்கைகளைப் பார்ப்பது அவ்வளவு புடிக்கும்.  தங்கைகளும் அதே பாசத்தோடு தான் இருப்பார்கள். அண்ணன் வந்து சபையில் நிற்பதே கௌரவமாக நினைப்பவர்கள். திடீரென்று உடல்நிலை சரியில்லாமல் இரண்டு மாதத்தில் படுத்த படுக்கையானது யாராலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. வீட்டு விசேஷங்களுக்கு மட்டும் முக்கியத்துவமல்ல. குடும்பத்தில் யார் எதை சாதித்தாலும் பாராட்டக்கூடியவர். பாராட்டென்றால் வெறுமனே ஃபோன்ல பாராட்டறதோ நேர்ல பாராட்டுறதோ இல்ல. குடும்பமே பெருமைப்படும்படி மாதிரியான பாராட்டு. இரண்டாவது தங்கை கீதாவின் மகள் பி.எச்டி முடித்த போது குடும்ப சகிதமாக பாராட்டு விழாவிற்கு ஏற்பாடு செய்திருந்தார்.   அன்றுதான் வனிதா வீட்டு கிரகப்பிரவேசம் அங்கேயே மதிய உணவிற்குப் பிறகு அனைவரும் ஒன்றாகக் கூடி கீதாவின் மகளுக்குப்  பொன்னாடை போர்த்தி கேடயம் கொடுத்து தன் குடும்பத்தில் முதல் டாக்டர் பட்டம் பெற்றவள் என பாராட்டினார். மற்றவர்களும்  அவரவருக்கு முடிந்த அளவிற்குப் பரிசுகள் கொடுத்தனர். குடும்பத்தினரின் வெற்றியைப் பாராட்டுவதற்கான பிள்ளையார் சுழியான நிகழ்வு அதுதான். அன்றிலிருந்து,  குடும்பத்தில் யார் பத்தாம் வகுப்பு பன்னிரெண்டாம்  வகுப்பு முடித்தாலும் அவர்களுக்கு அனைவரும் பணம் திரட்டி  ஏதாவது ஒரு பரிசு பொருள் வாங்கி கொடுப்பது வழக்கமாகியது.  அதுபோக சித்தி பெரியம்மா பிள்ளைகள் வெளிநாட்டிலிருந்து வரும்போது ஒன்றுகூடி gettogether வைத்து அனைவரும் அவரவர் வீட்டில் சமைத்ததை ஒன்றாக ஒரு வீட்டில் அமர்ந்து உண்பர். உறவுகளுக்குள் எந்த விரிசலையும் வளர விடக்கூடாது என்பதில் தெளிவாக இருப்பார். கடன் வாங்கியாவது முறைச் சீர்களைச் சரியாக செய்ய வேண்டும் என்பது அவரது கொள்கை. அதே போல அனைவரையும் ஒன்றாக வீட்டுக்கு அழைத்து ஒன்றாக சாப்பிட்டு தம்பி தங்கை குடும்பத்தார் நன்றாக அமர்ந்து சாப்பிடும் அழகைப் பார்க்க மிகவும் விரும்புவார். அப்பச்சியும் தாத்தாவும் இறந்து    பன்னிரெண்டு  வருடமாச்சு. ஒவ்வொரு வருடமும் அம்மாவின் இறந்த நாளன்று அனைவரையும் அழைத்து பூசை முடித்து சாப்பாடு போட்டுச் சாப்பிட வைத்து மகிழ்ந்து பிறகுதான் அவர் உண்பார்.  யார் எந்த நேரத்தில் வீட்டுக்கு வந்தாலும் வகை வகையாகச் சமைத்துப் போடுவதில் அவரது மனைவியும் சலிக்கவே மாட்டார். இறப்பதற்கு பத்து நாட்களுக்கு முன்பு கூட கீதா வந்தபோது, அவளுக்குப் பிடிக்குமே என்று இரால் வாங்கி சமைத்துச்  சாப்பிட வைத்து அனுப்பினார். வீட்டுக்கு யார் வந்தாலும் சாப்பிடாமல் போகக்கூடாது என்பது அவருடைய இலட்சியம் அவருடைய இந்த திடீர் மரணத்தை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை

“எம்மகெ குடும்பப் பொறுப்பத் தோளில சுமக்க ஆரம்பிச்சுட்டா இனி எனக்கு எந்த கவலையும் இல்ல அவனோடக் கடைசி காலம் வரைக்கு அவெ தம்பி தங்கைகளைக் கைவிடமாட்டா. நா… நிம்மதியா கண்ண மூடிடுவே” என்று ராமகிருஷ்ணனோட அம்மா மகனப்பத்தி பெருமையா பேசுவாங்க .

சிறிதுநேரம் கழித்து மாரிமுத்து மீண்டும் பெட்டியைத்  திறந்து கண்களை அடைக்க முயற்சித்தார். மூக்கு வழியாக இரத்தம் வரத் தொடங்கியது. அப்போதும் கண்கள் மூடவே இல்லை. மூன்று தங்கையும் ஒரு தம்பி குடும்பத்தாரும் வந்தனர். மற்றொரு தங்கை வந்து கொண்டிருக்கிறாள். மகள் இன்னும் வரவில்லை. எல்லோர் வாயும்  முணுமுணுத்தது.

‘ஒருவேள மகளப் பார்த்தா கண்கள் அடையுமோ? மகளை எதிர்பார்க்கிறாரோ என்னமோ’.

கார் வந்து நின்றது.  காரிலிருந்து இறங்கியதும் ‘அப்பா…….. அப்பா……. என்று தெருவே கேட்கும்படி சத்தம் போட்டுக்கொண்டு வந்தாள் லட்சனா.  அவள் கதறியழுது ஓய்ந்த பிறகு அவளிடம் கூறினர் கண்களை மூடிவிட. அவளும் அழுது கொண்டே செய்தாள்.  ஒரு நிமிடம் கண்கள் மூடியபடி இருந்தன. மீண்டும் திறந்தன.  ஆனால் அவள் தொட்ட பிறகு வெளியில் நீட்டிக்கொண்டிருந்த இரண்டு பற்கள் நன்றாகத் தெரிந்தன. இது சிரிப்பா ? இந்த சிரிப்பிற்கு என்ன அர்த்தம்?

உற்றார் உறவினர் என அனைவரும் வந்தனர். பொணம் எடுப்பதற்கான நேரம் நெருங்கியது.   நாலு மணிக்கு மயானம் செல்ல வேண்டும்.

“சரி பொணம் எடுக்க நேரமாச்சு. மொறக்காரங்க தண்ணி எடுக்க வாங்க…” ஐந்து பேர் கிளம்பினர் ஈரத்துணியுடன் தண்ணீர் கொண்டுவரப்பட்டது. சுவிட்சை நிறுத்திவிட்டு ஐஸ் பெட்டியின்   மூடியைத் திறந்தார். கண்கள் அடையவே இல்லை. நன்றாக விழித்துக்கொண்டு படுத்திருப்பது போலிருந்தது.  நான்குபேர்  சேர்ந்து பொணத்தைத் தூக்கி வந்து வாசலில் போடப்பட்ட கட்டலில் குளிப்பாட்டுவதற்காகப் படுக்கவைத்தனர்.

“அரப்பு வெக்கறவங்கல்லா வந்து வையுங்க…”

ஒரு சின்ன பானையில் அரப்பும் இன்னொரு பானையில் தேங்காய் எண்ணெயும், ஒரு குண்டாவில் தண்ணியும் தலைமாட்டில் வைக்கப்பட்டன. ஒவ்வொருவராக வந்து இடது கையில் எண்ணெய் தொட்டு அரப்பைத்தொட்டு தலையில் வைத்து விட்டு அங்கேயே பாத்திரத்தில் வைத்திருந்த தண்ணீரில் கையை நனைத்துத் தொங்கவிடப்பட்டிருந்த துணியில் துடைத்து விட்டுச் சென்றனர்.

“பெரியவரு கையில பணம் வெச்சு வாங்கறவங்கெல்லா வாங்குங்க…..” என்றுகூறிவிட்டு   மாரிமுத்து மேனியில் போர்த்தியிருந்த வெள்ளைத் துணியை அகற்றினார்.

‘சுடுகாட்டுக்கு எடுத்திட்டுப்போகும்போது கண்களை மூடிவிட்டு ஒடனே தூக்கிக்கலாம்னு மாரிமுத்து எண்ணினார். என்னமோ சொல்ல வந்து சொல்ல முடியாம போயிருப்பாரோ கண்கள் திறந்து இருக்கக்கூடாது.’

கையில் பணம் வைத்து வாங்குவதற்காகக் கையை விரித்த போது வலது கை இறுக மூடியிருந்தது. மாரிமுத்து வருணை   அழைத்தார்.

 “இங்க பாருப்பா, அப்பா கையை இறுக்கமா மூடி இருக்காரு கையில் என்னமோ வச்சிருக்காரு.”

விரல்களைப் பலவந்தமாக விரித்தார் ஒரு தினசரி கேலண்டர் பேப்பரை இறுக்கமாகப் பிடித்திருந்தார். வருண் அதை எடுத்து மெதுவாக விரித்துப்பார்த்தான்.  கைகள்  ஆடி ஆடி எழுதப்பட்டதுபோல எழுத்துகள் கோணல் மாணலாக இருந்தன. வருண் அக்கேலண்டர் பேப்பரை பெரிய அத்தையிடம் கொடுத்தான். பெரிய அத்தைக்குக் கண்கள் சரியாகத்தெரியாததால் அருகில் நின்றிருந்த இன்னொரு தங்கையும் எட்டிப்பார்த்தாள்.  இருவரும்  சேர்ந்து வாசித்துப் பார்த்தனர்.

“சா….ப்பி…..ட்டு போ…ங்….க”

என்று கிறுக்கப்பட்டிருந்தது.  வாசித்ததும் அனைவரின் அழுகை சத்தமும் அதிகமானது.

ராமகிருஷ்ணனின் கண்கள்  மெதுவாகத் தானாகவே அடைந்தன.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.