Author: தீபா சரவணன்

  • அடையாத விழிகள் (சிறுகதை)

    முனைவர் நா. தீபா சரவணன்
    உதவிப்பேராசிரியர்
    குமரகுரு பன்முகக்கலை அறிவியல் கல்லூரி, கோவை.

    “எவ்வளவு முயற்சி செஞ்சும் இத மட்டும் பண்ணவே முடியல. நாசுவ மாரிமுத்துவ வரச்சொல்லியிருக்கோ. பார்க்கலா அவரு வந்து பூச செஞ்சு ஐஸ் பெட்டில படுக்க வெக்கும் போது அவருகிட்ட சொல்லலா. அவங்களுக்குத் தெரியும் எப்படி பண்ணனும்னு. செவ்வாக்கெழமை நைட்டு எறந்தது காலைலதா ஐஸ் பெட்டி கெடைக்கும்னு சொல்லிட்டாங்க கிட்டத்தட்ட ஒம்பது மணி நேரமாச்சு.  எழவு வீட்டுக்கு வர்ற ஒவ்வொருத்தரும் பொணம் இப்படி கண்ண தொறந்துட்டு இருக்கக் கூடாதுன்னு சொல்லிக்கிட்டே தான் இருக்காங்க நாங்களும் ஏதேதோ செஞ்சிட்டு தா இருக்கோ. ஆனா முடிய மாட்டேங்குது. நேத்து எறந்ததும் கையை மடக்கிவெச்சு  வெள்ளத்துணி போடவே ரொம்ப சிரமமாதா இருந்துச்சு  கையெ மடக்கவே முடியல’.

    மாரிமுத்தண்ணன் காலைல ஆறு மணிக்கெல்லா ஐஸ்பெட்டியோட வந்துட்டாரு. வருண் ஓடிப்போய் பெட்டியை எறக்கினான்.  அந்த அண்ணந்தா எப்போதும் அப்பாவுக்கு முடிவெட்ட வீட்டுக்கு வருவாரு.  அதனால சின்ன வயசிலிருந்தே தெரியும்.

    “அண்ணா….. பாருங்க. அப்பா எறந்து இவ்வளவு நேரமாச்சு கண்ணு மட்டும் மூடவே மாட்டேங்குது நாங்களும் என்னெல்லாமோ செஞ்சு பார்த்துட்டோம். வாயும் பாருங்க  பல்ல கடிச்சுட்டு  இருக்காரு.  வாய மூடுறதும் சிரமமா இருக்கு.”

    “ சரி தம்பி நான் பாத்துக்குறேன். பூசைக்கு  தேங்காய் பழம் கொடுங்க.  எந்த எடத்தில பெட்டி வெக்கணும்.  வடக்கு தல வெச்சு  படுக்க வைக்கணும். அங்க கரண்ட் பாக்ஸ் இருக்கா ?”

    “இருக்குண்ணா”

    “ யாரு எறந்தாலும் வடக்குதா தல வெப்பாங்களா இல்ல வயசாகி எறந்ததால இப்படியாண்ணா”

    “இல்லப்பா பொணத்த வடக்கு தல வச்சுதா படுக்க வெப்பாங்க. வடக்கு தல வெச்சு  வாழ்ந்தவங்களுமில்ல. தெக்க தல வச்சு தேஞ்சவங்களுமில்லன்னு சொல்லுவாங்க. அதனாலதான் வீட்டுல படுக்கும் போது வடக்கு தல வெச்சுப் படுக்கக் கூடாதுன்னு சொல்லுவாங்க.”

    “ஓ….. அண்ணா இப்படி பொணம் கண்ணத்தொறந்து இருக்கக் கூடாதாமா”

    “இருப்பா”

    வெள்ளைத் துணியால் போர்த்தப்பட்ட தேகத்தை தலைப்பகுதியை மாரிமுத்துவும், கால் பகுதியை மகன் வருணும் பிடித்துத்தூக்கி ஐஸ் பெட்டியில் படுக்க வைத்தனர். ஒரு லிட்டர் பிளாஸ்டிக் பாட்டிலில் தண்ணீர் நிரப்பிக் கொண்டுவரச் சொல்லி தலையைத் தூக்கி வைத்து விட்டார். ஒரு வெள்ளை வேஷ்டி கேட்டார். ஒரு வேஷ்டியை நான்காகக் கிழித்து ஒருபகுதியைத்  தலையோடு சேர்த்து தாடைக்குக் கீழ் வழியாக இறுக்கமாகக் கட்டினார். பிறகு பொணத்தின் கண்களை மூடியபடி கொஞ்ச நேரம் கைகளால் அழுத்திப் பிடித்தார். தலைப்பகுதியை இழுத்துக்கட்டியதும் வாய் மூடியது.   கண்கள் மீது ஒரு சின்ன ஐஸ் கட்டியை  உடைத்து வைத்தார். ‘இப்போ மூடிரும் பாருப்பா’ என்று பெட்டியின் மூடியை எடுத்தார். ஐஸ் கரைந்ததும்  கண்கள் டப்பென்று  திறந்து கொண்டன, ஐஸ் கட்டியிலிருந்து வடிந்த நீர் கண்ணீர் விடுவது போல இருந்தன.

    “நான் எத்தனையோ பொணத்தப் பார்த்திருக்கே உங்க அப்பா யாரையோ ரொம்ப எதிர்பார்த்து காத்துகிட்டு இருந்தாரு போல அதனாலதா கண்கள் மூட மாட்டேங்கிறது. பாக்கலாம் ஐஸ் பெட்டியில வெச்சு கொஞ்ச நேரமானதும் சிலவேள கண்கள் தானா அடைஞ்சுடும். இல்ல அவரு யார ரொம்ப விரும்பி எதிர்பார்த்தாரோ அவங்க வந்துட்டாங்கனா  தானாக மூடிடு. ஒங்க அப்பாவுக்கு வீடு நெறய ஆளு இருக்கிறதுதானே ரொம்பப் புடிக்கும். உங்க அப்பாவும் நானு சின்ன வயசுல இருந்தே சிநேகிதம். அவரு மொதலாளி நானு சாதாரண நாசுவெங்கற மாதிரியெல்லா பழக மாட்டாரு. நா வந்தாலும் மொதல்ல எனக்கு வயிறு நெறைய சாப்பாடு போட்டு தா வேலயத்தொடங்கச் சொல்லுவாரு எந்த நேரத்தில யார் வந்தாலும் வயிறார சோறு போடுவாரு.”

    “உங்க அப்பச்சி சொல்லிக்கிட்டே இருப்பாங்க இவனுக்கு ராமகிருஷ்ணன்னு பேரு வச்சது தப்பா போச்சுன்னு. இராமர் குடும்பத்துக்காக பதினாலு வருசம் காட்டுக்குப் போய் கஷ்டப்பட்டது மாதிரி இவனும் குடும்பத்துக்காக கஷ்டப்படுறான். கிருஷ்ணன நம்பி மகாபாரத போர் நடந்த   மாதிரி  இவன நம்பி இவனுக்குக்கீழ ஆறு உடன்பொறந்தவங்கனு என்னெ பாக்கும்போதெல்லா  கரிசனப்படுவாங்க.”

    தங்கைங்க நாலு பேரும் அண்ணன் எறந்த சேதி கேட்டு அழுதுகொண்டே  வந்தனர். முந்தைய நாள் தான் கடைசி தங்கை வனிதாவின் இரண்டாவது பையன் கல்யாணம். மூத்த அண்ணன் இல்லாமல் நடந்த முதல் குடும்ப நிகழ்வு. அதற்கும் அவர் கலந்துகொள்ளத்தயாராகவே இருந்தார். உடல் ஒத்துழைக்கவில்லை படுக்கையை விட்டு எழவே முடியவில்லை புதிய வேஷ்டி எல்லாம் அதற்காக எடுத்து வைத்திருந்தார். திருமணத்திற்கு மொதநாள் மாப்பிள்ளை வீட்டில வீட்டு சாமி கும்பிடும்போது வனிதா கோயம்புத்தூர் வீட்டிலிருந்து வீடியோகால் பண்ணினா.  அனைவரும் அழுது விட்டனர் வீடியோகாலில் அவருடைய தேகத்தைப் பார்த்து. தினமும் சவரம் செய்து முகத்தை பளபளன்னு வைத்திருப்பவர். தாடியும் மீசையும் வளர்ந்து மீசை  வாயை மூடி கிடந்தது.  குழந்தை பெற்ற வயிறு பத்து மாதத்திற்குப் பிறகு எப்படி வெற்றிடமாகக் குழியாக இருக்குமோ அதேபோல வயிறு  குழியாக இருந்தது. விலா எலும்புகளை எண்ணிப் பார்க்கலாம். அப்படி எலும்புக்கூடாக இருந்தார். கம்பீரமாக குடும்பத்திற்கே பெரியமாமாவாக இருந்த ராமகிருஷ்ணன்  இப்போது பார்க்க முடியாத ஒரு சிதைந்த உருவமாக இருந்தார்.

    ஏன் பெரிய மாமா  என்று பெயர், தங்கைகளுக்கு ஒரு பிரச்சனை என்றால் மனதில் எண்ணுவதற்குள் அங்கு நிற்பார். அதேபோல தங்கைகளின் பிள்ளைகளுக்கு வயசுக்கு வந்த சீரு செய்வது. கல்யாண சீருசெய்வது. நல்லது கெட்டதுக்கு பொறந்த வீட்டு சீரு செய்வதுனு எதுக்குமே சளைக்க மாட்டார். பாரபட்சம் பார்க்காம எல்லா தங்கைளுக்கும் ஒரே மாதிரி செய்வார்.  அவருக்கு படுத்த படுக்கையிலிருந்த போதும்  கவலை மாமஞ்சீருக்குத் தன்னால கலந்து கொள்ள முடியலயே என்பதுதான். மாமஞ்சீரு நல்லபடியா முடிஞ்சுதானு செய்கை மூலம் கேட்டார்.

    “நல்லபடியாக முடிஞ்சுது மாமா. ரிசப்ஷன் முடிஞ்சதும் நானே உங்கள வந்து பாக்கறே மாமா” மாப்பிள்ளை அனிருத் சொன்னார். அவர் உடனே வீடியோவை நிறுத்த சொல்லிட்டாரு. கல்யாண வீட்டில் அந்த சோக அமைதி கலையவே கொஞ்ச நேரம் ஆனது.

    நாலு தங்கச்சிக மூணு தம்பிங்க அவங்க  கொழந்தைங்க  என மகள்கள் பன்னிரெண்டு பேர் ஒவ்வொருத்தரு வீட்டிலயும் மாத்தி மாத்தி ஒவ்வொரு விசேஷம் வரும். அந்த காலத்தில சொத்து சுகம் சேர்த்த வழியில்லாம பெருசானா ஒருத்தருக்கு ஒருத்தரு ஒத்தாசயா இருக்குமேனு அப்பச்சியும் தாத்தாவும் யோசிச்சு ஏழு புள்ளகள பெத்துக்கிட்டாங்க. கரு உருவாகாமல் தடுக்க வைத்தியமெல்லா ஏது அந்த காலத்துல. ஏழு பேரும் கடைசி வரை ஒற்றுமையா இருக்கணும்ங்குறதுதா பெரிய அண்ணன் ராமகிருஷ்ணனோட ஆசையும். அம்மா அப்பா காலத்துல இருந்த ஒத்துமையும் பொருளாதாரத்தையும் நாம எதிர்பார்க்க முடியாது என்று ஏழு பேருமே இரண்டு மூன்று பிள்ளைகளுக்கு மேல பெற்றுக்கொள்ளவில்லை. அப்படியும் மொத்தம் பதினாலு பேர்.

    ராமகிருஷ்ணனுக்கு தனது தங்கைகளைப் பார்ப்பது அவ்வளவு புடிக்கும்.  தங்கைகளும் அதே பாசத்தோடு தான் இருப்பார்கள். அண்ணன் வந்து சபையில் நிற்பதே கௌரவமாக நினைப்பவர்கள். திடீரென்று உடல்நிலை சரியில்லாமல் இரண்டு மாதத்தில் படுத்த படுக்கையானது யாராலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. வீட்டு விசேஷங்களுக்கு மட்டும் முக்கியத்துவமல்ல. குடும்பத்தில் யார் எதை சாதித்தாலும் பாராட்டக்கூடியவர். பாராட்டென்றால் வெறுமனே ஃபோன்ல பாராட்டறதோ நேர்ல பாராட்டுறதோ இல்ல. குடும்பமே பெருமைப்படும்படி மாதிரியான பாராட்டு. இரண்டாவது தங்கை கீதாவின் மகள் பி.எச்டி முடித்த போது குடும்ப சகிதமாக பாராட்டு விழாவிற்கு ஏற்பாடு செய்திருந்தார்.   அன்றுதான் வனிதா வீட்டு கிரகப்பிரவேசம் அங்கேயே மதிய உணவிற்குப் பிறகு அனைவரும் ஒன்றாகக் கூடி கீதாவின் மகளுக்குப்  பொன்னாடை போர்த்தி கேடயம் கொடுத்து தன் குடும்பத்தில் முதல் டாக்டர் பட்டம் பெற்றவள் என பாராட்டினார். மற்றவர்களும்  அவரவருக்கு முடிந்த அளவிற்குப் பரிசுகள் கொடுத்தனர். குடும்பத்தினரின் வெற்றியைப் பாராட்டுவதற்கான பிள்ளையார் சுழியான நிகழ்வு அதுதான். அன்றிலிருந்து,  குடும்பத்தில் யார் பத்தாம் வகுப்பு பன்னிரெண்டாம்  வகுப்பு முடித்தாலும் அவர்களுக்கு அனைவரும் பணம் திரட்டி  ஏதாவது ஒரு பரிசு பொருள் வாங்கி கொடுப்பது வழக்கமாகியது.  அதுபோக சித்தி பெரியம்மா பிள்ளைகள் வெளிநாட்டிலிருந்து வரும்போது ஒன்றுகூடி gettogether வைத்து அனைவரும் அவரவர் வீட்டில் சமைத்ததை ஒன்றாக ஒரு வீட்டில் அமர்ந்து உண்பர். உறவுகளுக்குள் எந்த விரிசலையும் வளர விடக்கூடாது என்பதில் தெளிவாக இருப்பார். கடன் வாங்கியாவது முறைச் சீர்களைச் சரியாக செய்ய வேண்டும் என்பது அவரது கொள்கை. அதே போல அனைவரையும் ஒன்றாக வீட்டுக்கு அழைத்து ஒன்றாக சாப்பிட்டு தம்பி தங்கை குடும்பத்தார் நன்றாக அமர்ந்து சாப்பிடும் அழகைப் பார்க்க மிகவும் விரும்புவார். அப்பச்சியும் தாத்தாவும் இறந்து    பன்னிரெண்டு  வருடமாச்சு. ஒவ்வொரு வருடமும் அம்மாவின் இறந்த நாளன்று அனைவரையும் அழைத்து பூசை முடித்து சாப்பாடு போட்டுச் சாப்பிட வைத்து மகிழ்ந்து பிறகுதான் அவர் உண்பார்.  யார் எந்த நேரத்தில் வீட்டுக்கு வந்தாலும் வகை வகையாகச் சமைத்துப் போடுவதில் அவரது மனைவியும் சலிக்கவே மாட்டார். இறப்பதற்கு பத்து நாட்களுக்கு முன்பு கூட கீதா வந்தபோது, அவளுக்குப் பிடிக்குமே என்று இரால் வாங்கி சமைத்துச்  சாப்பிட வைத்து அனுப்பினார். வீட்டுக்கு யார் வந்தாலும் சாப்பிடாமல் போகக்கூடாது என்பது அவருடைய இலட்சியம் அவருடைய இந்த திடீர் மரணத்தை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை

    “எம்மகெ குடும்பப் பொறுப்பத் தோளில சுமக்க ஆரம்பிச்சுட்டா இனி எனக்கு எந்த கவலையும் இல்ல அவனோடக் கடைசி காலம் வரைக்கு அவெ தம்பி தங்கைகளைக் கைவிடமாட்டா. நா… நிம்மதியா கண்ண மூடிடுவே” என்று ராமகிருஷ்ணனோட அம்மா மகனப்பத்தி பெருமையா பேசுவாங்க .

    சிறிதுநேரம் கழித்து மாரிமுத்து மீண்டும் பெட்டியைத்  திறந்து கண்களை அடைக்க முயற்சித்தார். மூக்கு வழியாக இரத்தம் வரத் தொடங்கியது. அப்போதும் கண்கள் மூடவே இல்லை. மூன்று தங்கையும் ஒரு தம்பி குடும்பத்தாரும் வந்தனர். மற்றொரு தங்கை வந்து கொண்டிருக்கிறாள். மகள் இன்னும் வரவில்லை. எல்லோர் வாயும்  முணுமுணுத்தது.

    ‘ஒருவேள மகளப் பார்த்தா கண்கள் அடையுமோ? மகளை எதிர்பார்க்கிறாரோ என்னமோ’.

    கார் வந்து நின்றது.  காரிலிருந்து இறங்கியதும் ‘அப்பா…….. அப்பா……. என்று தெருவே கேட்கும்படி சத்தம் போட்டுக்கொண்டு வந்தாள் லட்சனா.  அவள் கதறியழுது ஓய்ந்த பிறகு அவளிடம் கூறினர் கண்களை மூடிவிட. அவளும் அழுது கொண்டே செய்தாள்.  ஒரு நிமிடம் கண்கள் மூடியபடி இருந்தன. மீண்டும் திறந்தன.  ஆனால் அவள் தொட்ட பிறகு வெளியில் நீட்டிக்கொண்டிருந்த இரண்டு பற்கள் நன்றாகத் தெரிந்தன. இது சிரிப்பா ? இந்த சிரிப்பிற்கு என்ன அர்த்தம்?

    உற்றார் உறவினர் என அனைவரும் வந்தனர். பொணம் எடுப்பதற்கான நேரம் நெருங்கியது.   நாலு மணிக்கு மயானம் செல்ல வேண்டும்.

    “சரி பொணம் எடுக்க நேரமாச்சு. மொறக்காரங்க தண்ணி எடுக்க வாங்க…” ஐந்து பேர் கிளம்பினர் ஈரத்துணியுடன் தண்ணீர் கொண்டுவரப்பட்டது. சுவிட்சை நிறுத்திவிட்டு ஐஸ் பெட்டியின்   மூடியைத் திறந்தார். கண்கள் அடையவே இல்லை. நன்றாக விழித்துக்கொண்டு படுத்திருப்பது போலிருந்தது.  நான்குபேர்  சேர்ந்து பொணத்தைத் தூக்கி வந்து வாசலில் போடப்பட்ட கட்டலில் குளிப்பாட்டுவதற்காகப் படுக்கவைத்தனர்.

    “அரப்பு வெக்கறவங்கல்லா வந்து வையுங்க…”

    ஒரு சின்ன பானையில் அரப்பும் இன்னொரு பானையில் தேங்காய் எண்ணெயும், ஒரு குண்டாவில் தண்ணியும் தலைமாட்டில் வைக்கப்பட்டன. ஒவ்வொருவராக வந்து இடது கையில் எண்ணெய் தொட்டு அரப்பைத்தொட்டு தலையில் வைத்து விட்டு அங்கேயே பாத்திரத்தில் வைத்திருந்த தண்ணீரில் கையை நனைத்துத் தொங்கவிடப்பட்டிருந்த துணியில் துடைத்து விட்டுச் சென்றனர்.

    “பெரியவரு கையில பணம் வெச்சு வாங்கறவங்கெல்லா வாங்குங்க…..” என்றுகூறிவிட்டு   மாரிமுத்து மேனியில் போர்த்தியிருந்த வெள்ளைத் துணியை அகற்றினார்.

    ‘சுடுகாட்டுக்கு எடுத்திட்டுப்போகும்போது கண்களை மூடிவிட்டு ஒடனே தூக்கிக்கலாம்னு மாரிமுத்து எண்ணினார். என்னமோ சொல்ல வந்து சொல்ல முடியாம போயிருப்பாரோ கண்கள் திறந்து இருக்கக்கூடாது.’

    கையில் பணம் வைத்து வாங்குவதற்காகக் கையை விரித்த போது வலது கை இறுக மூடியிருந்தது. மாரிமுத்து வருணை   அழைத்தார்.

     “இங்க பாருப்பா, அப்பா கையை இறுக்கமா மூடி இருக்காரு கையில் என்னமோ வச்சிருக்காரு.”

    விரல்களைப் பலவந்தமாக விரித்தார் ஒரு தினசரி கேலண்டர் பேப்பரை இறுக்கமாகப் பிடித்திருந்தார். வருண் அதை எடுத்து மெதுவாக விரித்துப்பார்த்தான்.  கைகள்  ஆடி ஆடி எழுதப்பட்டதுபோல எழுத்துகள் கோணல் மாணலாக இருந்தன. வருண் அக்கேலண்டர் பேப்பரை பெரிய அத்தையிடம் கொடுத்தான். பெரிய அத்தைக்குக் கண்கள் சரியாகத்தெரியாததால் அருகில் நின்றிருந்த இன்னொரு தங்கையும் எட்டிப்பார்த்தாள்.  இருவரும்  சேர்ந்து வாசித்துப் பார்த்தனர்.

    “சா….ப்பி…..ட்டு போ…ங்….க”

    என்று கிறுக்கப்பட்டிருந்தது.  வாசித்ததும் அனைவரின் அழுகை சத்தமும் அதிகமானது.

    ராமகிருஷ்ணனின் கண்கள்  மெதுவாகத் தானாகவே அடைந்தன.

    Share
  • பாதணி (சிறுகதை)

    முனைவர் நா. தீபா சரவணன்
    உதவிப்பேராசிரியர்
    குமரகுரு பன்முகக்கலை அறிவியல் கல்லூரி, கோவை.

    “மிஸ் எதுக்கு இப்படி அவசரமா ஓடிவர்றீங்க நாங்க நிக்கறோம். இப்பதா டீ குடிச்சோம் மெதுவா வாங்க.” என்றான் கிளீனர் மணி.

    “நீங்கதான மிஸ் மொத ஆளா ஏர்றீங்க லேட்டானா யாருக்குத் தெரியப்போகுது` என்றார் டிரைவர் ஆறுமுகம்.

    அகிலா ‘வணக்கம்’ சொல்லி விட்டு வேகமாக ஏறி உட்கார்ந்தாள். கைக்கடிகாரத்தைப் பார்த்தாள். மணி 7.25. இளம் சந்தன நிறத்தில் பள்ளி வேன் தனக்காகக் காத்திருப்பது தூரத்திலிருந்து பார்க்கும்போதே தெரியும். அன்றைக்கெல்லாம் இப்போது இருக்கற மாதிரி பள்ளி, கல்லூரி வாகனங்கள் மஞ்சள் நிறத்தில் தான் இருக்கவேண்டும் என்ற கட்டாயம் கிடையாது. எந்த நிறத்தில் வேண்டுமானாலும் இருக்கலாம். அதற்குப்பிறகு வெள்ளை, மஞ்சள், இளநீலம் என மூன்று நிறங்கள் பள்ளி கல்லூரிப் பேருந்த்திற்கென ஒதுக்கப்பட்டிருந்தது. அதற்குப்பிறகுதான் தற்போதுள்ள மஞ்சள் நிறம் அமலுக்கு வந்தது. அகிலாவுக்குத் திருமணமாகி இது மூன்றாவது வருடம். ஒரு பெண் குழந்தை. ஆனால் பார்த்தால் வயது தெரியாது. துடியலூர் வழியிலுள்ள சரோஜா பப்ளிக் பள்ளியில் கணினி ஆசிரியராகப் பணி புரிகிறாள். புதூருக்கு அடுத்த பெருமாள் கோயிலில் வீடு. பள்ளிப்பேருந்து சரியாக 7.15க்கு பெருமாள் கோயிலுக்கு வந்துவிடும். அகிலா தான் முதலில் ஏறுவாள். சாலையைக்கடந்து வந்து ஏறவேண்டும். எதிரே உள்ளத்தெருவில் கொஞ்சதூரம் உள்ளே நடந்துசெல்ல வேண்டும். அகிலாவிற்குத் தானொரு பள்ளியாசிரியர் என்ற கர்வம் பார்த்தெல்லாம் யாரிடமும் பழகத்தெரியாது. அவள் ஏறி இரண்டு ஸ்டாப்பிற்கு யாரும் ஏறுவதில்லை. மற்ற மாணவர்கள் ஏறும்வரை மணியிடமும், ஆறுமுகத்திடமும் சகஜமாக பேசிக்கொண்டு வருவாள். ஒருமுறை வீட்டில் முறுக்கு செய்தார்கள் என்று இருவருக்கும் கொண்டு வந்து கொடுத்தாள். அவர்களுக்கு அப்படி ஓர் ஆனந்தம்.
    “இப்படியெல்லாம் யாரும் எங்ககிட்ட பேச மாட்டாங்க மிஸ். எங்கள டிரைவர், கிளினர் அப்படினுதா பழகுவாங்க. சில டீச்சருக பேருந்து ஏறும்போது நான் அவங்க பையெல்லா வாங்கிப் புடிக்கணும். அதிகாரத்தோடயே நடந்துக்குவாங்க. நீங்க வித்தியாசமா இருக்கீங்க மிஸ் ” மணி சொல்லுவான்.

    பள்ளி இருக்கிற எடத்தில சரியான அளவு போக்குவரத்து வசதியில்லை. அதனால ஒன்னு அவரவர் வாகனத்திலதா வரணும். இல்ல, பள்ளி வாகனம் இதுதான் வழி. ஆசிரியர்களுக்குப் பேருந்தில் இலவசம். நல்ல வசதியான பள்ளிதான். கோவையில் உள்ள தொழிலதிபர்களின் குழந்தைகள் அனைவரும் அங்குதான் படிக்கிறார்கள். இருபது ஆண்டுகளுக்கு முன்பே குதிரைப் பந்தயத்திற்கு செல்வதற்கானப்பயிற்சி, நீச்சல்,ஸ்கேட்டிங் போன்றவைகளையும் கற்றுக்கொடுத்த ஒரே பள்ளி.

    அடுத்த இரண்டு நிறுத்தம் தள்ளி இரண்டு மாணவர்கள் ஏறுவார்கள் அடுத்த நிறுத்தத்தில் இரண்டு மாணவர்களும், இரண்டு ஆசிரியர்களும். அதில் ஒரு மாணவியின் அம்மாவும் அதே பள்ளியில் ஆசிரியர்தான்.

    பேருந்து அமைதியாக இருந்தது. ஆறுமுகமும், மணியும் எதுவும் பேசவில்லை. மாணவர்களும் ஆசிரியர்களும் ஆங்கிலத்தில் பேசிக்கொண்டனர். தமிழில் பேசினால் அசெம்பிளியில் ஃபைன் கட்ட வேண்டுமே.

    மாலை திரும்ப வரும் போதும் அகிலாதான் கடைசியில் இறங்குவாள். அனைவரும் இறங்கிவிட்டபிறகு. அகிலா மட்டும்தான் பேருந்தில் இருந்தாள். மணி கதவைச் சாத்திவிட்டு அப்போதுதான் சீட்டில் வந்து உட்கார்ந்தான்.

    “மிஸ் நீங்க ஒருத்தங்கதா மிஸ் எங்களயெல்லாம் மதிச்சு பேசறீங்க. மத்தவங்கெல்லா எங்கள கேவலமா தா நெனக்கறாங்க. எங்களுக்கும் இன்னக்கி மீட்டிங்கில பசங்ககிட்டயோ, டீச்சர்ஸ்கிட்டயோ நாங்க பேசக்கூடாதுனு சொல்லியிருக்காங்க. இந்தாங்க மிஸ் எங்க தோட்டத்தில காய்ச்சது. சாப்பிடுங்க.” என்று அவன் பைக்குள்ளிருந்து ஒருசீப்புப் பழத்தை எடுத்து நீட்டினான். அகிலா அதில் ஒன்றை எடுத்துக்கொண்டாள்.

    “அப்படியா! தோட்டமெல்லா இருக்கா அப்புற ஏ இந்த வேலக்கி வர்றீங்க.”

    “சாகுபடிய நம்பீட்டிருந்தா குடும்பத்த ஓட்ட முடியாது. தோட்டத்தில தென்னமரந்தா வெச்சிருக்கோம். தண்ணி இல்லாமயே கெடக்கு. அம்மா, அண்ணா, அண்ணினு எல்லாருமே அந்த வேலக்குப் பழகினவங்க. அவங்களுக்கே அங்க வேலயக்காணொ நாமளாவது வெளில வந்து நாலு காசு சம்பாரிச்சு கொடுத்தா ஏதோ ஒத்தாசயா இருக்குமேனுதா வர்றோம்.”

    “மிஸ். வேலக்கி சேத்தும்போது பேருந்த மட்டும் கவனிச்சாப் போதும்னு சொன்னாங்க. இப்ப கொஞ்சம் கொஞ்சமா, தோட்டவேலை, சாப்பாடு பரிமாற்ர வேல. தட்ட எடுக்கறதுனு ஒண்ணு ஒண்ணா சொல்றாங்க மிஸ்.”

    பேச்சு திசைமாறியது. அப்பாடா நாம எறங்கற எடம் வந்திடுச்சு.

    “சரி வர்றேண்ணா, வர்றேன் மணி”. என்று இறங்கி விட்டாள்.

    “நாளைக்கிப் பாக்கலா மிஸ்” என்றான் மணி.

    அகிலாவுக்கும் கோவை புதிதுதான். உடுமலைப்பேட்டைக்கருகில் ஒரு சிறு கிராமம் தான் அவளுடையது. மரங்கள் நிறைந்த வயல்வெளிகள், கிணறு, வீதியெங்கும் மரம் செடிகொடிகள், ஒவ்வொரு வீட்டிற்கும் பெரிய பெரிய வாசல் என செழிப்பான இயற்கை சூழலில் வளர்ந்த அவளுக்கு இங்கு எல்லாத்தெருவும் ஒரே மாதிரியாகத் தெரிந்தது. எதுவழியாகச் சென்றால் எப்படி வெளியில் வருவது என்று தெரியாத அளவிற்கு எங்கும் நெருக்கமாக இருக்கும் கட்டிடங்கள். பெரிய கோலம் போட இடமில்லாத அளவிற்கு சின்ன வாசல். மரங்களற்ற வறட்சியான தெருக்கள், குழாயடியில் வரிசையாக வைக்கப்பட்டிருக்கும் குடங்கள். எட்டு அடிக்கு ஒரு ஹோட்டல், அல்லது ஒரு பேக்கரி. வலம் வந்து வழிபடக்கூட இடமில்லாத கோயில்கள் என அனைத்துமே அவளுக்குப் புதிதாகத்தான் இருந்தது. நகரத்தில் சாமிக்குக்கூட இவ்வளவு இடம் இருந்தால் போதுமோ என மனதில் எண்ணிக் கொண்டாள்.

    அவள் பேருந்திலிருந்து இறங்க வேண்டிய நிறுத்தத்தின் பெயரும் பெருமாள் கோயில் பஸ்ஸ்டாப் தான். அவ்வளவு பெரிய ஊருக்குப் பேருந்து நிறுத்தத்தின் பெயர் பெருமாள்கோயில். ஆனால் கோயிலோ பெட்டிக்கடை அளவிலிருந்தது. கோயிலுக்கு அமைதியைத் தேடிப் போவார்கள். ஆனால் இந்தப்பெருமாளோ பாவம் வண்டிகளின் பேரொலியைக்கேட்டு சாலைநடுவில் இருக்கிறார். எப்படியும் பெருமாள் உறங்க இரவு 12 மணி ஆகிவிடும். அப்போதுதான் சாலையில் வாகனங்கள் குறைந்து அமைதியாகும். இரவு ஏழு மணிக்கெல்லாம் ஒருவரும் வீட்டை விட்டு வெளியே வராத அமைதியாக இருந்து பழகிய அவளுக்கு, இரவு பதினொரு மணியாகியும் சாலைகளில் வாகனங்களின் ஓயாத இரைச்சல், மனிதர்களின் நடமாட்டம், சாலையோரக்கடைகள், வண்டிக்கடைகளில் உணவிற்காக நிற்கும் கூட்டம் என அனைத்துமே ஆச்சரியமாகத்தான் இருந்தது. கிராமத்தில் எட்டு மணிக்குமேல் வெளியே வரவே பயமா இருக்கும். ஒன்பது மணிக்கு வர்ற கடைசி பேருந்தில நாலுபேரு இருந்தாலே பெரிசு.

    திருமணமான புதிதில் இரவு ஒன்பது மணிக்குத்தான் இருவரும் சாப்பிட்டுவிட்டு ஒரு ரூபாய் காயின் போட்டு அம்மாகிட்ட பேச மெயின் ரோட்டுக்கு வருவார்கள். வீட்டுத்தெருவிலிருந்து மெயின் சாலை வர பத்துநிமிடம் நடக்கவேண்டும். பதினைந்து வருடங்களுக்குமுன்பு லேன்ட்லைன் ஃபோன் மட்டும்தானே வீடுகளில் இருக்கும். திருமணமாகி வந்த பெண்ணிற்கு பிறந்தவீட்டை தொடர்புகொள்ள தற்போது உள்ளதுமாதிரி அலைபேசி, வீடியோ இதெல்லாம் கிடையாதே. பேருந்திலிருந்து இறங்கி நடந்துகொண்டிருந்த அகிலா தானாகவே சிரித்துக்கொண்டே நடந்துகொண்டிருந்தாள். இந்த பெருமாள் கோயில் நிறுத்தத்தை நினைக்கும்போது அவளுக்கு சுவாரஸ்யமான நிகழ்வு ஒன்று நினைவுக்கு வந்தது.

    ‘ஏப்ரல் பத்தாம் தேதி எனக்கும் வினோதுக்கும் திருமணம் நடந்தது. திருமணத்துக்கு முன்னால உடுமலைப்பேட்டையில வீட்டுக்குப் பக்கத்தில உள்ள ஒரு பள்ளியில வேலைக்குப் போயிட்டிருந்தே. எட்டாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்புவரை பாடம் நடத்தனும். மார்ச்சில கல்வியாண்டு முடிந்து ஏப்ரல் மாசத்திலதான் திருமணமானது. திருமணமாகி அஞ்சாவது நாள் பத்தாம்வகுப்புத் தேர்வு விடைத்தாள் திருத்த நியமனக்கடிதம் வந்துச்சு. சரி அவரும் வேலைக்கு போயிட்டார்னா வீட்டில சும்மாதானே இருக்கோம். அத்தையு நானும் எவ்வளவு நேரம் பேசிட்டு இருக்கறது. சும்மா இருக்கறதுக்கு பேப்பர் திருத்தறதுக்காவது போலாமேனு போனேன். திருத்தற இடம் சிங்காநல்லூரில இருக்கு. வினோத் காலைல ஆபீசுக்குப் போகும்போது சிங்காநல்லூர் அரசு பள்ளில விட்டுவிட்டு அப்படியே வேலைக்குப்போனார். முதல் அனுபவம், முதல்நாள் விடைத்தாள் திருத்தற வேல இரவு எட்டு மணிவர நடந்தது. வினோத் சொன்ன அதேவழியில வந்து 1- சி பேருந்தில ஏறனே. வடவள்ளினு போட்டிருந்துச்சு. இந்த ஊர்ப்பெயர பார்த்தாலே சிரிப்பாக இருந்தது. அதென்ன வட. போண்டா பஜ்ஜியெல்லா இல்லயானு தோன்றியது. பேருந்தில கொஞ்சநேரம் கழிந்துதான் டிக்கெட் கொடுக்க வந்தார். பெருமாள்கோயில் ஒன்னு குடுங்க என்று பணத்தை நீட்டினேன்.

    “எந்த பெருமாள் கோயில் மா”

    அப்போதுதா கொஞ்சம் வயிறு கலங்கியது.

    “அண்ணா! எத்தன பெருமாள் கோயில் இருக்குனு தெரியாதுனா பெருமாள் கோயில்னு டிக்கட் வாங்க சொன்னாரு. நான் ஊருக்குப் புதுசு ண்ணா”

    “ஏம்மா எந்தக்கோயில்னு தெரியாம எப்படி எறங்குவே?”

    அழவேண்டும் போலத்தோன்றியது

    போன் கிடையாது. யாரையும் தெரியாது. எங்க எறங்கறதுனு தெரியாது.மூஞ்சி தொங்கிப்போனது

    “இல்லண்ணா அவரு வந்து நிக்கறேனு சொல்லி யிருக்கார். முன்னாடி நிப்பாருண்ணா

    “ சரி இதோ இவங்க அடுத்த ஸ்டாப்பில எறங்கிருவாங்க. இங்க முன்னாடி டிரைவர்கிட்ட வந்து உட்காரும்மா. எடம் வந்தா சொல்லுமா நிப்பாட்டறே.”

    “ம்ம்ம்……..”

    தேவையா? இது தேவையா கல்யாணம் முடிஞ்சு அஞ்சு நாள்தாஆச்சு. ஊரும் பழகல, தெருவும் பழகல. அதுக்குள்ள இது தேவயானு எனக்கு நானே திட்டிக்கொண்டே. ஒருவழியா ஒவ்வொரு நிறுத்தத்திலும் வெளியே எட்டி எட்டிப் பார்த்து வினோதைத்தேடினே. ஒரு வழியா பெருமாள் கோயில் ஸ்டாப்பில வினோத் கை காட்ட இறங்கிட்டே’ என நடந்த நிகழ்வை நினைத்துக்கொண்டு மனதிற்குள் சிரித்தவளாய் நடந்தாள். அவள் வீட்டிற்கு 10 நிமிடங்கள் நடக்கவேண்டும். வடிவக்கா வழியில பார்த்து “என்ன வேல முடிச்சு வர்றியா?”

    “ஆமாக்கா நீங்க எங்க கா கோயிலுக்கா?”

    “ஆமாப்பா இன்னக்கி சங்கடஹர சதுர்த்தி அதுதா விநாயகருக்கு மால கொடுத்திட்டுக் கும்பிட்டு வர்றலானு போயிட்டிருக்கே. இன்னக்கி கொஞ்சம் சீக்கிரமா வந்திட்டியோ”

    “இல்லக்க எப்பவும் வர்ற நேரந்தா சரி வர்றே கா” என்றபடி நடந்தாள். சரி என்று தலையசைத்துவிட்டு அவளும் நடந்தாள். அந்தத் தெருவைச்சுற்றி வினோதோட சொந்தக்காரங்க நெறயபேரு இருக்காங்க. கொஞ்சநேரம் சாப்பிட்டு வெளியில காத்தாட நடக்கலாமுனு பாத்தா எந்தத் தெருவுக்குப்போனாலும் ஏதாவது ஒரு சொந்தக்காரங்க பேச புடிச்சுடுவாங்க. பேசி பேசியே நேரமாகிடும். அப்பறம் நடக்கவே முடியாது. வீட்டுக்குத் திரும்ப வந்துவிட வேண்டியதுதா. அதுவும் ஒருவகையில நல்லாதா இருக்கு நம்மள சுத்தியும் நம்ம சொந்த பந்தங்கல்லா இருக்கறது. ஆனா இந்த தலமுற புள்ளகளுக்கு இதெல்லா எங்க புடிக்குது. அவங்களுக்கு தனியா இருக்கறதுதா புடிச்சிருக்கு. சொந்தபந்தங்க கூட சேர்ந்திருக்கறதையே தொல்லையா நெனக்கறாங்க. அதைவிட காமெடியான மற்றொரு விசயமும் நினைவுக்கு வந்தது. திருமணம் முடிந்து ஐந்தாவது நாள் தொடங்கி மூன்று நாட்களுக்குள் விடைத்தாள் திருத்தும் பணி முடிஞ்சது. ஏற்கனவே நேர்முகத்தேர்வு முடிந்து ஒரு பள்ளியில் தேர்வாகியிருந்தே. அடுத்த பத்துநாட்களுக்குள் அந்தப்பள்ளியில் வேலைக்கு வரச் சொல்லியிருந்தாங்க. கோடைக்கால விடுமுறை என்பதால் ஆசிரியர்கள் மட்டுந்தா வேலைக்கு வந்திருந்தாங்க. வீட்டில கல்யாணத்துக்காக போட்ட பந்தல் கூட இன்னும் கழட்டவில்லை. எனக்கு அந்த பந்தல் தான் வீட்டிற்கு அடையாளம். எனக்குப் பொதுவாகவே இடங்கள், மனிதர்களோட முகம், இவங்கள எங்க சந்திச்சோங்கறதெல்லாம் நெனவில வெச்சிருப்பதில கொஞ்சம் ஞாபகசக்தி குறைபாடுதான். அன்றும் காலை எப்போதும் போலப் பள்ளிக்குக் கெளம்பிட்டே. வரும்போது எப்போதும் போலப் பேருந்து இறங்கி 10 நிமிடம் நடந்தாயிற்று. வீடு வரவேயில்லை. அவளுக்குச் சந்தேகமானது. தெரு மாறி வந்து விட்டோமோ. வீட்டைக்காணோம். அப்போதுதா பின்னால அத்தையோட குரல் கேட்டது.

    “ம்மா அகிலா எங்க போறே? வீடு இங்கே இருக்கு.” அகிலா வீட்டைக்கடந்து செல்வதைப்பார்த்து பக்கத்து வீட்டுக்காரம்மா அத்தைகிட்ட சொல்ல. சமையல்கட்டிலிருந்து அத்தை வெளியில ஓடி வந்து கூப்பிட்டுருக்காங்க.

    “அத்தெப் போகும்போது பந்தல் இங்கெ இருந்துச்சே. அதுக்குள்ள யாரு கழட்டனது? நான் பந்தலத்தா அடையாளமா வெச்சிருந்தே”. அத்தைக்கு சிரிக்கறதா வருத்தப்படறதானு தெரியல. சிரிச்சாங்க.

    “என்னம்மா நீ இப்படி இருக்கே.வா உள்ள வா. இதுதா வீடு.”

    பக்கத்து வீட்டுக்காரம்மா வேற பாத்துகிட்டு இருக்காங்க. அவமானமாப் போச்சு.

    இப்படி இந்த ஊருக்கு வந்து அடைந்த சின்ன சின்ன நிகழ்வுகளையும், வேடிக்கையான அவமானங்களையும் எண்ணிச் சிரித்துக்கொண்டே நடந்தாள்.

    அடுத்த நாள் பள்ளிவிட்டு வரும்போது எப்போதும் மூன்றாவது சீட்டில் உட்கார்ற அகிலா அன்று படிக்கட்டு ஏறினதும் வலப்புற சீட்டில் உட்கார்ந்தாள். ஒவ்வொரு மாணவர்கள் இறங்கும்போதும் மணியும் படிக்கெட்டிலிருந்து இறங்கி ஏற வேண்டும். சிறு பிள்ளைகள் என்றால் தூக்கி இறக்கி விடவேண்டும். பெரிய பிள்ளைகள் என்றால் அவர்களின் புத்தகப்பையை இறக்கி வைக்க வேண்டும். புத்தகப்பைதான் கிலோ கணக்கில பாரமா இருக்கிறதே. ஆனால் பணக்காரப்பள்ளில படிக்கறதனால என்ன ஒரு நல்ல காரியம்னா. வண்டிலிருந்து எறங்கனதும் வேலக்காரங்க காரவெச்சிட்டு நிப்பாங்க. இதே மிடில்கிளாசு புள்ளகனா கழுத சொமக்கறமாதிரி அத சொமந்துட்டுதா போகுதுக. அதுக சாப்படற சாப்பாடு இந்த மூட்டயத் தூக்கறதுக்கே போதாது.

    ஒரு ஸ்டாப்பில மட்டும் நாலு பிரைமரி மாணவர்களும் மூன்று பெரிய மாணவர்களும் இறங்க வேண்டும். மணி ஒவ்வொருவரையாக இறக்கி விட்டுக்கெண்டிருந்தான். ஒன்பதாம் வகுப்பு வினிதா இறங்கும்போதுதான் அகிலா மணியைக் கவனித்தாள். தயங்காமல் கேட்டுவிடவேண்டும் என்றெண்ணினாள். அனைவரும் இறங்கும்வரை காத்திருந்தாள். இவள்தானே கடைசியில் இறங்குவாள். பேருந்தில் யாரும் இல்லாதபோது கேட்டுவிட்டாள்.

    மணி வெறும் சிரிப்பை மட்டும் விடையாகக்காட்டி நிறுத்திவிட்டான்.

    “அதைத்தா மிஸ் நானும் இவங்கிட்ட பல தடவ சொல்லீட்டே. சொன்னா காதிலயே வாங்கிக்க மாட்டீங்கறா என்றார் ஓட்டுனர் ஆறுமுகம்.

    நாளக்கு இப்படி இருக்கக்கூடாது என்று கூறிவிட்டு இறங்கி விட்டாள்.

    அடுத்த நாள் மணியைப பார்த்ததும் கேட்டாள்.

    “இனியும் நீ மாறலியா மணி. இவ்வளவு தடவ ஏறிஎறங்கற கால்ல ஏதாவது ஆணியோ கண்ணாடியோ குத்திச்சுன்னா அதுக்கப்பறம் டாக்டர்கிட்ட போய் செலவு செய்யறதுக்கு இப்பவே ஒரு செருப்ப வாங்கிப்போட வேண்டியதுதானே. ஏ செருப்பு போட மாட்டேங்கறே”

    “ இப்படியே பழகிடுச்சு மிஸ். இந்தமாச சம்பளம் வந்தரட்டு மிஸ் கண்டிப்பா வாங்கிடறேன்.”

    அடுத்தநாள் அகிலா 50 ரூபாய் எடுத்து தனது பேகில் வைத்தாள் 2004-ல் 50 ருபாய்க்கு மதிப்புதான். சம்பளமே 3000/- ரூபாய்தான். செருப்பு வாங்க மணிக்கு பணம் கொடுக்கலாமா? ஏதாவது தப்பாப்போயிடுமோ. அவங்களே தோட்டமெல்லாம் வெச்சிருக்காங்க. காசு கொடுத்தா ‘ஏங்க மிஸ் நாங்கென்ன அவ்வளவு கேவலமானவங்களான்னு’ சொல்லிடுவானோ? ஒருவேள பிராண்டடு செருப்புதா போடுவானோ? அம்பது ரூபாய்க்கு என்ன செருப்பு வாங்கறதுன்னு யோசிப்பானோ?. வினோத்கிட்டயாவது ஐடியா கேட்கலாம்னு பாத்தா.

    “ இப்போதா நீயே பள்ளில போய் சேந்திருக்கே அதுக்குள்ள ஒனக்கு எதுக்கு இந்த வேண்டாத வேல. காசு போகுமேனு சொல்லல. கொடுத்து கேவலப்படாதேனு சொல்றேனு.’ ஒரே பதிலா சொல்லிடுவாரு. எடுத்த பணத்த பேகிலேயே வைத்துவிட்டாள்.

    அன்று பள்ளி அரையாண்டுத்தேர்வின் கடைசி நாள். அடுத்த நாளிலிருந்து கிறிஸ்துமஸிற்காக பத்து நாள் பள்ளி விடுமுறை.

    விடுமுறை முடிந்து முதல் நாளே அகிலா பேருந்த தவறவிட்டு ஆட்டோவில் போனாள். எப்போதுமே அப்படித்தானே வேலக்குபோறவங்களுக்கு சனி ஞாயிறு முடிஞ்சு திங்கட்கிழம வந்தாலே ஒரு சின்ன சோம்பேறித்தனமாயிடும் கிளம்ப, இதில பத்துநாள் லீவுமுடிஞ்சு போறது. அந்த சோம்பேறித்தனம்தா பேருந்து வர்ற நேரத்துக்கு அவளால கிளம்ப முடியவில்லை. பள்ளி முடிந்து திரும்ப வரும்போது பார்த்தா டிரைவரும் கிளினரும் வேறு யாரோ. ஒரு வேள பேருந்து மாத்தி விட்டிருப்பாங்களோ?. அவள் எதுவும் பேசவில்லை. தொடர்ந்து இரண்டு நாட்களும் வேற டிரைவரும் கிளினரும்தான் வந்தாங்க. அவங்களுக்கு என்னாச்சுனு கேட்கலாமா? வேண்டாமா? ரொம்ப நேரம் தயங்கினாள். ஆனால் கேட்கவில்லை.

    பள்ளில டிரைவர், கிளீனர் பத்தியெல்லாம் யாரும். பேசமாட்டாங்க. மூணாவது நாள் காலையில வினோத் பள்ளியில இறக்கிவிட்டாரு. ஆபீஸ் வேலயா அந்தப் பக்கம் யாரையோ பார்க்க வேண்டி இருந்ததால இறக்கிவிட்டாரு. திரும்பப்போகும்போது பேருந்தில வரசொல்லிட்டாரு. வரும்போது பேருந்தில வந்தா. ஆறுமுகம் வந்திருந்தாரு. பேருந்திலிருந்து எல்லோரும் இறங்கும் வரை காத்திருந்து கேட்டாள்.

    “எங்க ரெண்டு நாளா ரெண்டு பேத்தயும் காணோம். மணி இன்னக்கு வரலியா லீவா? “

    “மிஸ் ஒங்களுக்கு விஷயமே தெரியாதா?

    தெரியலையே. சொல்லுங்க. மணிக்கு வேற வேல கெடச்சிருச்சா? இல்ல கல்யாணமா?”

    “மணி எறந்திட்டா மிஸ்.நம்மளவிட்டு போயிட்டா மிஸ். அவ எறந்து நேத்தயோட எட்டு நாளாச்சு. அதுக்குதா நானும் லீவு போட்டிருந்தே”

    “நெஞ்சடைத்தது ஐயோ என்…..னா……ச்சு”

    “நாங்க டிரைவர் கிளீனர் எல்லாரும் சேர்ந்து லீவில கேரளாவில நெல்லியாம்பதிங்கற ஒரு எடத்தில வாட்டர் ஃபால்சுக்குப் போயிருந்தோம். மணியும் வந்திருந்தா. எல்லாரும் குளிச்சு வெளையாண்டுட்டு திரும்பிட்டோம் மிஸ்.வர்ற வழில குளம் மாதிரி ஒரு எடத்தில வித்தியாசமா ஒரு கலர்ல தாமரப்பூ பூத்திருந்துச்சு.”

    அதுக்குள்ள ஒருத்தர் வெளியில டூவீலர்ல பேருந்துக்கு நேரா வந்தாரு. ‘பாருங்க எப்படி வர்றானு’ என்று பேச்சு எங்கோசென்றது.

    “சொல்லுங்கண்ணா என்னாச்சு.?”

    “அந்த தாமரப்பூ பாக்கறதுக்கு சுத்திலும் நீலநிறத்தலயும் நடுவுல எளஞ்செவப்பாவும் இருந்துச்சு. நாங்க அத பாத்திட்டு பேசாம வந்திட்டோம். கடைசில அவ நம்ம கோகுலண்ணாகூட வந்திட்டிருந்தா. அவனுக்கு அந்த பூவ பறிக்கணும்னு ஆச. எல்லாருமே சொன்னோம் வேண்டா பாற வழுக்கும் வழுக்கும்னு. இருண்ணா வந்தடறேனுட்டு அந்தப்பாறமேல நின்ன பூவ எட்டிப்புடுங்கனா. பாற ஈரமா இருந்திருக்கும்போல செருப்பில்லாம வெறுங்கால்ல போனதால காலு வழுக்கிடுச்சு. பொதக்குழில போய் விழுந்திட்டான் மிஸ். கையப்புடிச்சு இழுக்க இழுக்க உள்ளே இழுத்துட்டுப்போயிடுச்சு. திடீர்னு மழவேற வந்திருச்சு. Fire Service வந்து மூணு மணிநேரம் போராடித்தான் வெளில எடுத்தாங்க. அதுக்குள்ள அவன் போய்ட்டா மிஸ்.” ஆறுமுக அண்ணாவின் குரலும் இடறியது. ஆம்புலன்சில வீட்டுக்குக்கொண்டுபோகும்போது நைட்டுமணி ரெண்டாயிடுச்சு மிஸ். பாவம் அவனோட அம்மாவ நெனச்சாதா கவலயா இருக்கு. அவ அப்பா எறந்தபின்ன இவனுக்காகதா அந்த அம்மா தோட்டவேலைசெஞ்சு கஷ்டப்பட்டிட்டு இருந்தாங்க. அவ அண்ணனும் வீட்டுக்கு அவ்வளவுக்கா எதுவும் கொடுக்க மாட்டாரு. இப்போதா இவ வேலக்குப்போக ஆரம்பிச்சதுக்கப்பறம் கொஞ்சம் நிம்மதியா இருந்தாங்க. அவங்களுக்குத்தா என்ன சொல்லி சமாதானப்படுத்தறதுனே தெரியல.”

    என்ன பேசறதுனு தெரியாம கைக்குட்டையால் கண்களைத் துடைத்தாள் அகிலா

    “மிஸ் நாங்க கேரளா போகும்போதுகூட ஒங்களப்பத்தி பேசிட்டு வந்தா மிஸ்.”

    கேட்க ஆர்வமாகத்தா இருந்தது ஆனா மனது கனத்தது.

    “ அவ சொல்லிகிட்டே இருந்தா மிஸ். ஊருக்குப்போனதும் போய் நல்லொரு செருப்பா வாங்கணுண்ணா. இனியு செருப்புப்போடாம போனா அகிலா மிஸ் கோவிச்சுவாங்க. பாவம் நம்ம மேல இருக்கற அக்கரயிலதான அவங்க இத்தனதடவ சொல்றாங்கனா”

    “நா அப்பவே கேட்டே ஏண்டா டூரு வரும்போதே வாங்கிருக்க வேண்டியதுதானேனு. அதுக்கு அவ என்ன சொன்னா தெரியுமா மிஸ். பள்ளி தொறந்து போகும்போது புதுசா போட்டா நல்லா இருக்கு. இப்பவே வாங்கிட்டா பழசு மாதிரி இருக்குண்ணா. வாங்கும்போது ஆத்தாவுக்கு ஒரு செருப்புவாங்கித் தரணு. அதுதா அதயு கூட்டிகிட்டு கடைக்குப்போகணு. அண்ணங்கிட்ட கேட்டுகிட்டே இருந்துச்சு. அண்ண கண்டுக்கடறமாதிரி தெரியல. பாவண்ணா சேத்தில செருப்பில்லாம நடந்து நடந்து காலெல்லா அழுகிக்கெடக்குனு வருந்தினா.

    அவளால் கண்ணீரை கட்டுப்படுத்தவே முடியவில்லை.

    என்ன சொல்வது. பெருமாள்கோயிலில் வண்டி நின்றது.”

    “மிஸ் உங்க ஸ்டாப்” என்றார்

    சட்டென்று பையை எடுத்துக்கொண்டு இறங்கினாள். ஆறுமுகத்திடமும் எதுவும் சொல்லவில்லை. கண்களை துடைத்துக்கொண்டு நடக்கத்தொடங்கினாள்.

    பையில் வைத்திருந்த ஐம்பது ரூபாயை வெளியில் எடுத்துப்பார்த்தாள்

    “ஒரு வேளை ஐம்பது ரூபாய் கூட ஓர் உயிரைக் காப்பாத்த உதவி இருக்குமோ.?”

    Share
  • வண்டிக்கடை (சிறுகதை)

    வண்டிக்கடை (சிறுகதை)

    முனைவர் நா. தீபா சரவணன்
    உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை
    குமரகுரு பன்முகக் கலை அறிவியல் கல்லூரி
    கோவை- 49

    “அண்ணா இன்னக்கி சட்னி ரொம்ப நல்லா இருக்குண்ணா. இன்னு ரெண்டு இட்லி வைங்க” என்றான் முகிலன்.

    முத்தையா மகிழ்ச்சியுடன் பரிமாறினார். சாப்பிடுபவர் உறவும் இல்லை. தெரிந்தவரும் இல்லை. ஆனால் இரவு மட்டுமே இருக்கும் அந்த வண்டிக்கடைக்கு வருபவர்கள் அனைவரும் அவரிடம் மிகவிரைவில் நெருங்கிப்பழகி விடுவார்கள்.

    வீட்டிலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் தான் கடை. வியாபாரம் செய்யும் இடம் அரசமரத்தடி. இரவு மட்டுமே வியாபாரம். வண்டியைத்தள்ளிக் கொண்டு ஐந்து மணிக்கெல்லாம் வீட்டிலிருந்து கிளம்பிவிடுவார். மாவு, சட்னி, குழம்பு எல்லாம் வீட்டிலேயே தயார்செய்து வண்டியில் வைத்து விடுவார். கடையில்வைத்து தான் பலகாரம் செய்வார். மனைவியை கடைக்கு வியாபாரம் செய்யவிட்டதில்லை. வீட்டில் அனைத்து வேலைகளையும் அவள் கவனித்துக்கொள்வாள். வீடும் வாடகைதான். இப்போது கடைக்கு உதவ மக்களாகிய சரவணனும், அசோகனும் மட்டும்.

    “பார்க்க சின்ன வண்டிக்கடைன்னு நெனைக்காதடா ..ஒரு தடவ சாப்பிட்டுப் பாரு, அப்புற நீ ஹோட்டல் பக்கமே போகமாட்டே. “ என சாப்பிடுபவர்கள் பேசிக்கொள்ளும் போது முத்தையாவிற்குப் பெருமையாக இருக்கும். எல்லாம் மனைவி சொல்லிக்கொடுத்த கைப்பக்குவம்.

    கடையில் இட்லி, தோசை, ரோஸ்டு, புரோட்டோ, பனியாரம், ஆப்பம், புட்டு இவ்வளவு வகை சுடச்சுட கிடைக்கும். ஒவ்வொரு டிஃபனுக்கும் தேங்காய் சட்னி, காரச்சட்னி, புளிச்சட்னி, சாம்பார், பொடி இவ்வளவும் எவ்வளவு வேண்டுமானாலும் கிடைக்கும். அடுப்பிற்குப் பக்கத்தில் நின்று ஆர்டர் கேட்பவர்களுக்கு சூடாக சுட்டுவைப்பது முத்தையாவின் வேலை. புரோட்டா தேய்ச்சு சுடறதும் பனியாரமும் மூத்தவன் சரவணனோட வேல. சாப்பிட வர்றவங்களுக்கு பரிமாறி காசு கணக்குபோட்டு வாங்கறது இளையவன் அசோகனோட வேல.

    வியாபாரம் முடிந்து வீட்டிற்கு வண்டியைத் தள்ளிக்கொண்டு போக மணி பத்தரை ஆகிவிடும். வீட்டிற்குப்போனதும் முத்தையா கை கால் கழுவி விட்டு முதல் வேலையாக மனைவி இரத்தினத்தின் படத்திற்கு விளக்கு வைப்பார்.

    ‘நீ இன்னக்கி இருந்திருந்தா நம்ம புள்ளகள நல்லா கவனிச்சிருப்ப. பாரு அதுகளும் நம்மள மாதிரியே கஷ்டப்படுதுக.”
    அப்பா இல்லாம ஒரு பொண்ணு புள்ளகள வெச்சிட்டு எவ்வளவு கஷ்டப்படுவாளோ அதவிடக் கஷ்டம் அம்மா இல்லாம அவங்கள வளர்த்தரதுன்னு நீ போனதுக்கப்பறந்தாம்மா தெரிஞ்சுது என்று கண்ணீர் வடித்தார்.

    அவரது கண்ணீரை யாரும் பார்க்கவில்லை பெரியவன் வண்டியிலிருந்து எல்லா பொருட்களையும் கீழே இறக்கிவிட்டு வண்டியை சுத்தம் செய்து கொண்டிருந்தான். அசோகன் பாத்திரங்களைக் கழுவிக்கொண்டிருத்தான். முத்தையா மக்கள் இருவருக்கும் பால்கலக்கி கொடுத்து அவர்களை படுக்க சொல்லிவிட்டு அடுத்தநாளைக்குத் தேவையான அரிசி உளுந்து ஊறவைத்து வெங்காயம் தோலுரித்துவைத்து, சாம்பாருக்குத் தேவையான காய்கறிகளை சரிபார்த்து எடுத்துவைத்துவிட்டு படுக்கப்போகும்போது மணி 12.30.

    பறவைகளின் ஒலி அடங்கி தவளை சத்தம் நின்று, காற்றின் ஓசை காதுகளில் கேட்குமளவிற்கு ஊரே அமைதியாக இருந்தது. நேரத்தை அறிவிக்க ஒலிக்கும் பஞ்சாலையின் சைரன் ஒலி போன்று ஆந்தையின் அலறல் ஒலி இடைவிட்டு இடைவிட்டு கேட்டுக்கொண்டிருந்தது.

    தூங்காமல் விழித்துக்கொண்டிருந்த முத்தையாவின் காதுகளில் இரத்தினத்தின் குரலும் ஒலித்துக்கொண்டிருந்தது.
    “ஏங்க இந்த தாலி ஆறு பவுன் இருக்கும் என்ன கஷ்டம் வந்தாலும் அத மட்டும் வித்திடாதீங்க.”

    மரணப்படுக்கையில் இருக்கும்போது அவள் வைத்த ஒரே வேண்டுகோள் அது. ஏங்க நா சாகறவர நா இத கழட்ட விடமாட்டே. நா செத்ததுக்கப்பறமும் இத மங்கலப்பொருளா தா பாக்கணும்”

    “ஏம்மா நான் சேத்து வெச்ச காசெல்லாம் வைத்தியத்துக்கு செலவாயிடுச்சு. அதப்பத்தி நா கவலப்படல. டாக்டர்தா ஒரு ரெண்டு இலட்சம் செலவு செஞ்சா சரி பண்ண வாய்ப்பு இருக்கானு பாக்கலாம்னு சொல்றாரேம்மா. இப்போ பவுனு இருபத்தஞ்சாயிரத்துக்குப்போகும்.. உன் தாலிய கொடுத்தா மீதி பணத்த எங்கயாவது பொரட்டிக்குவே”

    “இல்லீங்க இது நம்ம புள்ளகளுக்கு நான் சேத்து வெச்சிருக்கிற ஒரேசொத்து. இத ரெண்டா பிரிச்சு வர்ற மருமகளுக்கு தாலியா செஞ்சு போடுங்க. பசங்களக்குனு நாம வேறு எதயும் சேர்த்து வைக்கல. கிட்னி ஆப்பரேசன் செஞ்சாலும் வாய்ப்பு குறைவுதானு தானே டாக்டர் சொல்றாரு. எனக்கென்ன சாக ஆசயாவா இருக்கு. நம்ம பசங்களுக்கு ஒரு நல்ல காரியம் செஞ்சு பாக்கணுந்தா. ஆனா அன்னாடங்காச்சிகளுக்கு கடவுள் ஏதாவது ஒரு வியாதிய குடுத்திட்டா கடைசில கஞ்சிக்கே வழி இல்லாமப் போயிடும். எனக்கொன்னும் ஆகாது. நம்ம கோயில் பூசாரி சுந்தரத்துக்குத் தெரிஞ்ச ஏதோ வைத்தியர் இருக்காறாம். கைவைத்தியம் பண்றவரு. அவரப் போயி பாக்கலா. இப்போ போய் தூங்குங்க.” என்று இரத்தினத்துடன் பேசியதை எண்ணிப்பார்த்தான்.

    அவள் சாகும்போது பெரியவன் எட்டாவது. சின்னவன் ஆறாவது படிக்கிறான். இப்போ பெரியவனுக்கு வயசு இருபது. காலம் எவ்வளவு சீக்கிரம் ஓடுகிறது. பெரியவன பிளஸ்டூ வரைதா படிக்கவெக்க முடிஞ்சுது. சின்னவனயாவது படிக்க வெக்கலாம்னுதா நெனச்சே. ஆனா நானும் சரவணனும் தனியா கஷ்டப்படறத பாத்திட்டு அவனேதா ‘அப்பா நா இனிமே படிக்கலப்பா உங்ககூட கடை வேலயப்பாக்கறேனுட்டு பத்தாவதோட நிறுத்திட்டா. டீச்சரு வீட்டுக்கே வந்து கூப்பிட்டு பாத்தாங்க. அவெ எனக்கு படிக்கப்புடிக்கலனு ஒரே பதிலா சொல்லிட்டா. நானும் நமக்கு ஒத்தாசயா இருக்குமேனு விட்டுட்டே.. கல்யாணம்னு வரும்போது இப்படியெல்லா பிரச்சனை வருங்கற யோசன போகலெ.

    ” ஏம்ப்பா பசங்களுக்கு இன்னும் ரெண்டு மூணு வருசத்தில கல்யாண வயசு வந்துடும். வேலக்குப் போகாமா இப்படி உனக்கு ஒத்தாசயா வெச்சிட்டிருந்தா யாரு பொண்ணு கொடுப்பாங்க’ என்று புரோகித நண்பர் மாரிமுத்து கூறியது முத்தையாவின் மனதில் ஓடிக் கொண்டிருந்தது. ஆனால் இந்தத் தொழிலை மாற்றவும் மனதில்லை. சாப்பாட்டுக்கே வழியில்லாம இருந்த போது இரத்தினத்தோட யோசனையோடு தொடங்கப்பட்ட தொழில். பலநேரங்களில் பட்டினியாக இருப்பதிலிருந்து எங்களக் காப்பாத்தின தொழில்.

    ஒரு பெரிய கடையாப் பார்த்து வாடகைக்கு எடுத்து கொஞ்கம் சாமான்களை வாங்கிப்போட்டு மக்கள வெச்சு ஹோட்டல் நடத்தினா பசங்களுக்குத் திருமணம் ஆக வசதியாக இருக்குமென்ற யோசனை வந்தது. அதற்கு முதலீடாக தாலி மட்டுந்தான் மனதில் தோன்றியது.

    ஒரு நாள் கடைவேலை முடிஞ்சு வந்ததும் மக்களை அழைத்தான். இரத்தினத்தின் படத்திற்கு முன்னால் மூவரும் நின்றனர். “இத பாருங்கப்பா அம்மா ஆசப்ட்டது இந்த தாலி வர்ற மருமக்களுக்குணு. அத உருக்கி ஆளுக்கு ரெண்டு பவுன் வச்சிட்டு, மீதி ரெண்டு பவுன வித்து, அந்தக்காச முதலீடா போட்டு நம்ம கடய பெரிசு பண்ணலாம்னு இருக்கே என்ன சொல்றீங்க”

    “இதெல்லா எதுக்குப்பா எங்ககிட்ட கேட்டுட்டு நீங்க எது செஞ்சாலும் செரியாதாப்பா இருக்கும்” என்று இருவரும் ஒரே பதிலை சொன்னார்கள்.

    மறுநாள் காலையிலிருந்தே அதே யோசனைதா ஓடிக்கிட்டே இருந்தது. அன்னிக்கினு பாத்து கடையில் சரியான கூட்டம். சட்னி தீர்ந்து விட்டது. சரி வீட்டிற்குச் சென்று சட்னி அரைத்து வரலாம் என்று சென்றான் முத்தையா. சட்னி அரைத்து விட்டு வெளியே வரும்போது

    “நாளக்கி வெள்ளிக்கிழமயு அதுவுமா ஏன் தாலியெ விக்கணும். இன்னக்கே கடய பசங்கள பாத்துக்கச்சொல்லிட்டு போயிட்டு வந்தர்லாம்’. என்றெண்ணி தாலியை டாயர் ஜோப்பில் போட்டான்.

    என்றுமில்லாத கூட்டம் அன்றைக்கு. தட்டுகளைக்கழுவ உட்காரும் போது ஞாபகம் வரவே தாலியை அசோகிடம் கொடுத்து யாருக்கும் தெரியாம வைக்கச் சொன்னான். ஜீன்சு போட்டிருந்ததால அவ கல்லாப்பெட்டில இருக்கற பணநோட்டுகள தூக்கி அதற்கடியில் வைத்தான். நாம தானே பணம் வாங்கறோம் இங்க பத்திரமாதா இருக்கும்னு எண்ணிக்கொண்டான். சரவணன் புரோட்டா போடுவதில் மும்முரமாக இருந்தான். அன்று கூட்டம் அதிகமாக இருந்ததால தாலி விற்க முடியவில்லை. மணி 10.30 ஆகிவிட்டது. வீட்டிற்கு வந்து பணம் எண்ணி கணக்கு சொல்வது அசோகின் வேலை.

    கை கால் கழுவிவிட்டு வந்த முத்தையா அசோகிடம் தாலியைக் கேட்டான். ஓடிப்போய் கல்லாப் பெட்டியைப் பார்த்த அவன் பேயறைந்து நின்றான். தாலி பெட்டியில் இல்லை. யாரையும் கல்லாவை தொடவிடமாட்டான் அசோகன். அன்று கூட்டத்தில், ஐ டி கம்பெனில வேல செய்யற மனோஜும், சுந்தர அண்ணாவும் சாப்பிட்டுருந்தாங்க. அவங்க ரெகுலர் கஸ்டமர்ஸ்தா. ஆனா என்ன கம்பெனில வேல பாக்கறாங்கனெல்லா தெரியாது. அசோகிடம் எப்போதுமே நெருங்கிப்பேசுவார்கள். அஞ்சோ, பத்தோ மீதியிருந்தா வாங்க மாட்டார்கள். வெச்சுக்கோப்பா’ என்று சொல்லிவிட்டு போவார்கள்.

    ஆனால் அன்று மீதி அம்பது ரூபாய் கேட்கவே. சாப்பிட்டுக்கொண்டிருந்தவர்களுக்கு சட்னி ஊத்திக்கொண்டிருந்த அசோகன்,‘ சுந்தரண்ணா கல்லாவிலிருந்து எடுத்துக்கோங்கண்ணா என்று கூறிய நினைவில் ஸ்தம்பித்து சிலையாய் நின்றான்.

    Share
  • கடவுளாய் (சிறுகதை)

    கடவுளாய் (சிறுகதை)

    முனைவர் நா. தீபா சரவணன்
    உதவிப்பேராசிரியர்
    குமரகுரு பன்முகக் கலை அறிவியல் கல்லூரி, கோவை.

    கணவன் பூமிநாதன் இறந்தபிறகு அவருடைய கனவை எப்படியாவது நெறவேத்தனும்னு நெனச்சு இலங்கையிலிருந்து கடல் வழியாக வந்து டூரிஸ்டு பஸ்ஸில ஏறி இராமேஸ்வரம் சிவன் கோயிலுக்கு வந்து இன்னயோட அஞ்சு நாட்களாச்சு. ‘இராவணன கொல செஞ்ச பாவத்த இராமரே இங்கேதா தீர்த்துகிட்டாராம். அரக்கன் தானே இராவணன். தப்பு செஞ்சதுக்குதானே தண்டனை. இதிலென்ன பாவம் இருக்கு. ம்ம் அதுவும் சரிதா அடுத்தவ பொண்டாட்டிமேல ஆசப்படறது தப்புதா. இருந்தாலும் இராவணன் கண்ணியமா இருந்தாரே. ஆனா இப்போ நடக்கறத பாத்தா எத்தன பொம்பளப்புள்ளக  பலியாகுதுக பாவம். எல்லாத்தயும் செஞ்சிட்டு யோக்ய சிகாமணிகளா ஒருசிலரு ஊருக்குள்ள சுத்திகிட்டுத்தானே இருக்கானுக. இதெல்லா எப்போ சரியாகப்போகுது. நமக்கு இங்க மூணுவேள சோத்துக்கே வழியக்காணோ.  நம்ம ஒலக நடப்பப்பத்தி யோசிச்சு என்ன பண்ணப்போறோம். அன்னதானம், வாழைப்பழம், பிரசாதம் என எப்படியோ வயறு நெறஞ்சுடுது.  இனியும் இப்படி எத்தன நாட்களுக்கு இந்தப்பொழப்பு, தூணில சாஞ்சு கண்களை மூடி யோசிச்சிட்டிருந்தாள் இலட்சுமி.  குலசேகரன் மடியில் தலை வைத்துப் படுத்துக் கொண்டிருந்தான்.  இந்த ஐந்து நாட்களாக யோசித்ததில் அவளுக்கு  ஒரு யோசனை தோன்றியது.

    இராமேசுவரம் வந்த அன்று அவள் பார்த்த காட்சிகளைச் சிந்தையில் தெளிய விட்டாள். கடலில் மூழ்கி குளிக்கின்ற பலராலும் கழட்டிவிடப்பட்ட ஆடைகள்.  பலராலும்  கழட்டிவிடபட்ட  உள்ளாடைகள், துண்டுகள் என ஆங்காங்கே குவிந்து கிடந்தன.  குளித்து முடிந்ததும் ஆடைமாற்றிவிட்டுதான் கோயிலுக்குள் செல்லவேண்டும்.   இலட்சுமி, பையனை வெளியில் நிற்கச் சொல்லிவிட்டு பெண்கள் ஆடைமாற்றும் இடத்திற்குப் போனாள்.  தனித்தனியாக அறை அறையாக இருக்கும் என்று   எதிர்பார்த்தாள்.   சுத்திலும் மறைக்கப்பட்ட   மதிற்சுவர்  மட்டுந்தான் உயரமாக இருந்தது.  உள்ளே அப்படியே வெட்டவெளி. ஒருத்தர் உடைமாற்றுவதை  மற்றவர் பார்க்கலாம். ஆனால் யாரும் யாரையும் கண்டுகொள்வதில்லை. ஒரே ஒரு இடத்தில் மட்டும் வலைபோன்ற  கூடை வைக்கப் பட்டிருக்கிறது.

    கழட்டிய  பயனற்ற  ஆடைகளை இடுவதற்காக.  ஆனால் கடலில் மூழ்கிக் குளித்துவிட்டு பாவங்களை களைந்தபிறகு, கழட்டிய ஆடைகளை மீண்டும் தொட்டால் பாவம் ஒட்டிக்கொள்ளும் என நம்புகின்றார்கள். அதனால் அந்த ஆடைகளை பலர் அப்படியே ஈரத்துடன் கழட்டின இடத்திலேயே விட்டுவிட்டுச் செல்கின்றனர். ஈரமான ஆடைகள் ஆங்காங்கே கிடந்தன.  இரண்டு நாட்களுக்கு ஒரு முறை தான் சுத்தம் செய்வார்களோ என்னமோ அந்த ஆடைகளை எடுத்துச் சென்றாலும் யாரும் கேட்க மாட்டார்கள். அதில் நல்ல ஒரு சேலையை எடுத்து அலசி காயப்போட்டாள்.   காய்ந்த பிறகு அந்த சேலையை மடிப்பு எடுத்து அழகாகக் கட்டினாள். குலசேகரனுக்கும் அதே போலச் சட்டை ஒன்றை  ரெடிபண்ணி மாத்திவிட்டாள்.  இப்போது இவர்களைப் பார்த்தால் யாருக்கும் எந்த ஐயமும் வராது.

    அங்குக் கிடந்த ஆடைக்குவியல்களில் சில நல்ல ஆடைகளையும் துடைக்கும் துண்டுகளையும் எடுத்துக்கொண்டு கடற்கரையை நோக்கி நடந்தாள். அங்கேக் கிடந்த சோப்புத்துண்டுகளைப் பொறுக்கிப்போட்டு நன்றாகக் கசக்கினாள். கொஞ்சதூரத்தில் ஒரு பைப்பும் இருந்தது. நன்றாகத் துவைத்து ஆங்காங்கே காயப்போட்டு எடுத்தாள். ஆழகாக அழுத்தி அழுத்தி அயர்ன் போட்டது போல மடக்கி எடுத்தாள்.

    உடம்பில் தெம்பு இருக்கும் போது நாம் பிறரிடம் கையேந்தி பிச்சை கேட்கக் கூடாது. அது உண்மையிலேயே இயலாத ஊனமுற்றவர்களுக்காக ஒதுக்கப்பட்டத்தொழில். கைகால்கள் நன்றாக இருக்கும் போது நாம் பிறரிடம்  கையேந்தப் பழகினால் அது நம்மை மனதளவில் முடமாக்கி விடும். செய்யக்கூடாது  என்று தலையை அசைத்தாள்,  கோயிலின் நுழைவு வாயிலிருந்து கடலுக்குச் செல்லும் வழி எங்கும் பல கடைகள் இருந்தன. பூசைசாமான்கள், மலர்கள், அலங்காரப் பொருட்கள் பிரசாதம், சடங்குப் பொருட்கள், சந்தனமாலைகள், துணிகள் விற்கும் கடைகள்  எனப்பல கடைகள். அதில் சில கடைகளுக்கு முன்பு வேட்டி, துண்டு போன்றவை அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.  அதில் சிறிய ஒரு கடையைப் பார்த்து நடந்தாள்.  வயதான ஒரு தாத்தா உட்கார்ந்திருந்தார்.

    “தாத்தா இந்தத் துண்டு, துணியெல்லா யாரோ பயன்படுத்தினதுதா. ஆனா நல்லா தொவச்சிருக்கே. இதெ வாங்கிக்கோங்க. வாங்கி உங்க கடையில வையுங்க. விக்க வேண்டா. வாடகைக்கு.” என்று தயங்கித் தயங்கி கூறினாள்.  “யாராவது மாத்திக்கத்துணி எடுக்க மறந்தவங்களுக்கு இந்த வாடகைத் துணி ரொம்ப ஒதவியா இருக்கும்.” என்று கெஞ்சிக் கொண்டு நின்றாள் இத்தோடு இது நான்காவது கடை. ஒரு வழியாக அவரைப் பேசி சம்மதிக்க வைத்தாள்.

    “இப்படி  வேணும்னா செய்யலா  தாத்தா. எனக்கு ஒரு நாளைக்கு எவ்வளவு துணிகள் வெளியில போகுதோ அதப்பொறுத்து காசு கொடுங்க.” என்று மறுபடியும் கெஞ்சினாள். ஒத்துக்கொண்டார் கடைக்காரர். நன்றி நிறைந்த மனதோடு கையெடுத்துக் கும்பிட்டாள். உத்வேகம் பிறந்தவளாய் அடுத்த ஆடைகளை அலசச் சென்றாள்.

    கோயிலுக்கு வருகின்ற பலரும்  வாடகைக்கு ஆடை கேட்டு வந்தார்கள். வார்த்தை தவறாமல்   வந்த வருமானத்தில் ஒரு பகுதியைக் கடைக்காரர் லட்சுமிக்கும் கொடுத்தார். அவளது கையில் அன்றாடச்  செலவுக்கு பணம் புழங்கத் தொடங்கியது. பல நேரங்களில் கோயில் பிரசாதமே உணவாக இருந்ததால் காசு அதிகம் செலவாகவில்லை. அது போகக் கோயிலுக்கு போகின்ற வழியில் இருக்கின்ற சில கடைகளுக்கு முன்னால் கூட்டிப்பெருக்கி தண்ணீர் தெளித்து கோலமிடுவாள். கோயிலுக்குள் செல்பவர்களின் செருப்புகளைக் காவல் காப்பாள். யாரிடமும் கைநீட்டி இவ்வளவு பணம் வேண்டும் என்று கேட்க மாட்டாள். அவர்களாகக் கொடுக்கின்ற பணத்தை வாங்கிக் கொள்வாள்

    அமாவசை முடிந்து வருகின்ற புதன்கிழமையன்று அப்துல் கலாம் ஐயா படித்த பள்ளிக்குப் போகவேண்டும் என்று எண்ணியிருந்தாள்.  திட்டமிட்டபடியே பள்ளிக்குச் சென்றாள். எப்படியாவது கையில காலில விழுந்தாவது குலசேகரன பள்ளில சேர்க்கணும்  தலைமையாசிரியரை பார்க்கணும் காலை 8 மணிக்குப் பள்ளிக்குச் சென்றாள் மதியம் 12.30 மணி வரை காத்திருந்தாள். தற்போது அப்பள்ளியின் தலைமையாசிரியர் பெயர் வைத்தியநாதன். அவர் இப்பள்ளியில் பொறுப்பேற்று இரண்டு வருடங்கள் ஆகின்றன.

    “ஐயா வணக்கம்.”

    “வணக்கம். வாங்க  என்ன விஷயம்?”

    “ஐயா  எம்புள்ள பேரு கலாம். கலாம் ஐயா படிச்ச பள்ளில என் பையனும் படிச்சு பெரிய ஆளா வரணும்ங்குறது அவ அப்பாவோட கனவு. என் பையன உங்க பள்ளியில சேர்க்கணு  சார் .”

    “எந்த வகுப்பு?”

    “நாலாம் வகுப்பு ஐயா.”

    “மூணாவது வரை படிச்ச டி.சி கொடுங்க”

    “இல்ல ஐயா அது வந்து….. வந்து ……நாங்க வேற ஊர்ல படிச்சோம் ஐயா. அங்க கொடுத்த டி. சி தொலைஞ்சு போச்சு”

    “டி.சி இல்லாம சேர்க்க முடியாதுமா.  இனி ஒரு மொற அந்த பள்ளில போய் கேட்டுப் பாருங்க.  நீங்க இதுக்கு முன்னாடி இங்கே வந்திருக்கீங்களா?”

    “இல்லீங்களே.  ஐயா திரும்ப அந்தப் பள்ளிக்குப் போக இயலாது. அங்க ஒரு தகராறு செய்துட்டோம். வேற ஏதாவது வழி இருக்கா ஐயா. நீங்க வேணா இவன மூணாம் வகுப்பு பாடங்களக் கேட்டு பாருங்களேன். இல்ல ஏதாவது எழுத வெச்சுப் பாருங்களேன்.

    ‘இயலாது’ இந்த வார்த்தை வைத்தியநாதனுக்கு மண்டைக்குள் ஏதோ குடைந்து கொண்டிருந்தது. இந்த அம்மாவ வேறு எங்கேயோ பார்த்து இருக்கோமே யோசித்துப்பார்த்தார்.

    “சரிமா ஒரு எழுத்துத் தேர்வு வைக்கிறேன் சரியா எழுதினா பார்ப்போம் இல்லனா வேற வழி இல்லம்மா இங்க சேர்த்த முடியாது.      நீங்க வெளியில வெயிட் பண்ணுங்க.”

    மேசை மேல இருந்த மணியை தட்டினார்.  “காளி அண்ணே இங்க வாங்க. இந்தப் பையன கீதா டீச்சர்கிட்ட கூட்டிட்டுப் போய் நாலாம் கிளாசுக்கு டெஸ்ட் வைக்கச் சொல்லுங்க.” என்றார்.

    இலட்சுமி வெளியில்  காத்திருந்தாள். வைத்தியநாதன் நெற்றியைத் தடவிக்கொண்டு  நாற்காலியில் குனிந்தபடி உட்கார்ந்து எதையோ யோசித்தான். திடீரென ஞாபகம் வந்தவனாய் பீரோவில் உள்ளிருந்து ஒவ்வொரு பைல்களாக தூக்கிப்பார்த்தான். ஒரு ஃபைலுக்குள் இருந்து ஒரு கவரை எடுத்தார்.  அதில் இலட்சுமியின் குடும்பப் புகைப்படம் இருந்தது.

    வைத்தியநாதனின் தந்தை துரைசாமி எழுதின  ஒரு கடிதமும் உடன் இருந்தது.

    ‘மகனே வைத்தியநாத என்னைப்போலவே ஏதோ ஒரு காரணத்துக்காக இயக்கத்தில சேர்ந்தவன்தான் பூமிநாதன். அவன் ரெண்டுதடவ கடல் கடந்து தமிழகத்திற்குச் சென்றுவிட்டா. அகதிகள் முகாமில வெச்சு  விசாரணைக்கப்பறம்  மீண்டும் சூழ்நிலைக்கைதியாக இங்கேயே வந்து மாட்டிக்கொண்டார. என்ன செய்ய?  இதேபோல நான் ஒரு முகாமில் தங்கி இருந்தபோது உன்னை யார் என்று தெரியாதுன்னு உன் எதிர்காலத்தை யோசிச்சு  சொன்னே. அப்போ   இவ காணாம போன எம்பையனு   மீனவ முத்தையானு ஒருத்தரு சொன்னாரு. முத்தையா போல ஒருத்தரும்  இவனக் காப்பாத்த  வரல. சொன்ன  மாதிரியே முத்தையா  தன்னுடைய கடைசி காலம் வர உன்ன அவரு மகனாவே படிக்க வச்சு இப்படி ஒரு பதவியும் வாங்கி கொடுத்தாரு. பூமிநாத ரொம்ப நல்லவன். அவன் இயக்கத்தில தனக்குக் குடும்பம் இல்லைன்னு சொல்லி இருக்கிறா. அவனுக்குக் குடும்பம் இருப்பது எனக்கு மட்டுந்தான் தெரியும். அவனுடைய கனவு, இலட்சியம், சிந்தனை,  ஆசை, விருப்பம் எல்லாமே அவனுடைய பையனப் படிக்க வைக்கணுங்கறது  மட்டுந்தா. அவனுடைய குடும்ப ஃபோட்டோவை உனக்கு அனுப்பித் தர்றே. இந்த கடிதம் உன் கைக்குக் கிடைக்கும்போது நானும் அவனும் உசுரோட இருப்போமா இல்லையான்னு தெரியாது. இந்த கடிதத்த மிகவும் சிரமப்பட்டுத் தான் உனக்கு கொண்டு சேர்த்துள்ளேன் இந்த புகைப்படத்தில் இருக்கிற பையனுக்கு எப்படி யாவது படிக்க வழி பண்ணுப்பா. இப்படிக்கு உன் வளர்ச்சிக்காக உன்னைப் பிரிந்து வாழும் உன்னுடன் உன் அப்பா.’ என்று முடிந்திருந்தது   கடிதத்தை மடக்கிவைத்துவிட்டு போட்டோவை திரும்ப ஃபைலுக்குள்ளேயே வைத்தார்.

    “காளி அண்ணே அந்த  அம்மாவை கூப்பிடுங்க டீச்சர்கிட்ட இருந்து டெஸ்டு பேப்பரையும் வாங்கிட்டு வாங்க.”

    காளி அண்ணன் நடையும் ஓட்டமுமாக வந்தார்.  விடைத்தாளை வாங்கி பார்த்தார்  வைத்தியநாதன்.

    “ம்மா பைய  நல்லா படிக்கிற பையனா இருக்கா. நாங்க சேர்த்துக்கறோம்” என்றார்.

    அவள் கண்களில் தண்ணீர் வழிகிறது என்பதை ரவிக்கைக்குள் நீர் வழிந்து ஓடிய போது தான் உணர முடிந்தது.

    “ அவ அப்பா எங்கே?”

    “அவ அப்பா ஆக்சிடென்டில எறந்துட்டாருங்க ஐயா”

    ‘உங்களுக்கு வீடு எங்கே?”

    “இங்க தாங்க ஐயா. இராமேஸ்வரம் கோயில் பக்கம்.”

    “உன் பேரு இலட்சுமி. பையன் பேரு கலாம் எப்படி?  கலப்பு திருமணமா?”

    “இல்லங்க ஐயா இவன் பேரு சேகர். அவன் அப்பாவுக்கு இவன் அப்துல் கலாம் ஐயா மாதிரி பெரிய ஆளா வரணும்னு ஆசை அதுனால பையன அப்படித்தான் கூப்பிடுவாரு. அதனால அந்த பேரையே வெச்சிரலாம்னு விட்டுட்டேன் சார்.”

    பூர்விகமாகவே நீங்க இங்க தானா மா? எவ்வளவு வருஷமா இங்க இருக்கீங்க?”

    “ஐயா அது வந்து எங்க பாட்டிக்கு அம்மா காலத்தில இருந்தே இங்கதான்யா. அவரு எனக்கு ஒன்னு விட்ட மாமா மொற ஆகுது. அவிக வீடும் இங்கதான் கோவிலுக்கு மேவரம். பூ வியாபாரம்.” கேட்ட கேள்விகளுக்கும் கேட்காத கேள்விகளுக்கும் சேர்த்து பதில் அவன் வெளியில் நீட்டிக்கொண்டிருந்த இலட்சுமியின் குடும்பப் புகைப்படத்தை உள்ளே தள்ளிவிட்டார்.

    “உங்க வீட்டுக்காரர் பேரு?”

    “அவரு  பேரு மயில்சாமி  ”

    ஆனால் சரிபார்க்கப்பட்ட விடைத்தாளில் மாணவன் பெயருக்கு நேராக குலசேகரன் என்றும் தந்தை பெயருக்கு நேராக பூமிநாதன் என்றும் எழுதி இருப்பதைப் பார்த்தார்.  ஏன் இவனுக்கு நான் இனியொரு முத்தையாவாக இருக்கக்கூடாது.

    மௌனமாகச் சிரித்துக்கொண்டே சேர்க்கை அட்டையில் கையெழுத்திட்டார்.

    Share
  • மனித வடிவில்…… (சிறுகதை)

    மனித வடிவில்…… (சிறுகதை)

    முனைவர் நா. தீபா சரவணன்
    உதவிப்பேராசிரியர்
    குமரகுரு பன்முகக் கலை அறிவியல் கல்லூரி, கோவை.

    விடியற்காலை நான்கு மணி இருக்கும்… “மீனவர்கள்  இன்றும் கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம்”………. காவல்துறை வாகனம் எச்சரிக்கை விட்டுக்கொண்டு இருபக்கமும் மணல் நிறைந்த தார்ச்சாலை வழியாக வேகமாகச் சென்றது.

    கீதாவுக்கு இது ஏழாவது மாசம் வயிற்றைத் தள்ளிக்கொண்டு கணவன் சுந்தரத்துடன் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள்.

    “ஏங்க, மீனு இன்னும் கொஞ்சம் ஐஸ்கட்டில கெடக்கு. இன்னைக்கும் டூரிஸ்டுக்காரங்க வரலேன்னா அது நொஞ்சுரும்.  ஒலத்தவும் முடியாது. வெயிலடிக்குமானும் தெரியல”

    “என்ன பண்ண நம்ம பொழப்பு இப்படி ஆயிப்போச்சு.  தூக்கி வீசு. நமக்கு இந்த மீன் புடிக்கறதத் தவிர வேற ஒரு எழவுந்தெரியாது. ஏதோ கடலில போய் மீன் புடிச்சா மட்டு சாப்பாடு கெடச்சிடுமா?.  எப்போ கடலுதண்ணி வந்து நம்ம ஊர அழிச்சுதோ அதோட நம்ம எனத்தோட வாழ்க்கெயும் முடிஞ்சு போச்சு.”

    “ஏங்க புலம்புறிங்க. நா இப்ப என்ன கேட்டுட்டே”

     “பொலம்பாம என்ன பண்ண. வருசத்துல நாலஞ்சு மாசம் மழக்காலமாப்போச்சு, கடலுக்கும் போக முடியல. மாசத்துல பாதி நாளு புயலு எச்சரிக்க.  மீதி சில நாளு இலங்கக்காரங்களோட தாக்குதலு.  தனுஷ்கோடினு  ஒரு பகுதி இருந்துச்சு. அது அழிஞ்சு போய் இம்புட்டு வருசமாச்சு. அந்தப்பகுதி மக்களுக்கு ஏதாவது ஒரு பாதுகாப்பு இருக்கா. இல்ல,  வீடுகதா நல்லா இருக்கா.  ஏ… சுனாமி வந்த ஊரெல்லா மறுபடியும் பழைய நெலமக்கு வரல?.  நம்ம ஊர மட்டும் பழய வரலாறா காமிச்சு சுத்துலா இடம்னு மாத்திட்டாங்க. இங்கே இருக்கறவங்க நெலமய யோசிச்சுப்பாரு.  சுத்துலாக்காரங்கள  நம்பித்தான நாம பொழப்பு நடத்துறோம்.  சுத்திப்பாக்க வர்றவிக  எல்லாரு  இங்க வந்து சாப்புடுறாங்களா?.  யாரோ ஒரு சிலரு வராங்க. அதிலே  பாதி நாளு அவங்களையும் விடறதில்ல. பொழுதுபோய் பொழுது விடிஞ்சா வயத்துப் பொயப்புக்கே வழியில்லாம இருக்கோ. வடக்கனுக  ஒருத்த ஊர வுட்டுட்டு வந்தாப்போதும் அப்படியே அவ ஊரயே கூட்டிட்டு வந்து இங்கிட்டு  தங்கிடறானுக. பொயப்புக்காக ஊருவிட்டு ஊரு போயிடறானுக. நாமதா சித்தப்பா, பெரியப்பா, மாமான்னு எல்லாரும் ஒன்னுக்குள்ள ஒன்னா கெடந்து இங்கேயே சாகுறோம். இதக்கடந்து நம்ம யோசனப் போகுதா? உரிமையோடு பழகுன இந்த மண்ண விட்டுட்டு எங்கிட்டுபோயி ஒண்டறது. வாழ்வோ? சாவோ? அது இந்த மண்ணோடு தா அப்படின்னு எங்கப்பங்கார சொல்லிப்புட்டு போய் சேந்துட்டா. மனசு கேட்க மாட்டேங்குது. நாளக்கு எம்புள்ளயும் இந்த சொந்த பந்தத்தை விட்டுப்புட்டுப் போக மனசில்லாம இங்கனயே தங்கிக்கினு, நம்ம பொழப்பு இப்படித்தா முடியப் போகுது .” என்று தலையில் தட்டினான்.

    வங்காள விரிகுடாவும், இந்தியப்பெருங்கடலும்  சங்கமிக்கின்ற அழகிய இடம். பல கிலோமீட்டர் தூரத்திற்குத் தார் சாலையின் இரு பக்கங்களிலும் கடல்.   ஒரு பக்கம் அமைதியானக் கடல். மறுபக்கம் அதிபயங்கர ஓசையை எழுப்பிக்கொண்டு அலைகளுடன் ஆர்ப்பரிக்கும் கடல். சுற்றுலா வழிகாட்டிகள் அமைதியானக் கடல் பரப்பைப் பெண் கடல் என்றும் ஆர்ப்பரிக்கும் கடல் பரப்பை ஆண் கடல் என்றும்தான் விளக்குகிறார்கள். திரும்பிய திசை எங்கும் கடல்நீர். ஆர்ப்பரிக்கும் அலை ஓசை.  மிதமான ஈரக்காற்று. சுண்ணாம்பு போன்ற வெள்ளை மணல் படுகைகள். காற்றில் அடித்து வரும் அலைகளிலிருந்து நம்மீது தெளிக்கும் பன்னீர்த்துளிகளாய் நீர்த்துளிகள்.  கடலலைகளை இரசிக்கப்பிடிக்காத மனித மனமும் உள்ளதோ. அலையின் ஓசைகளில், அதன் ரம்மியங்களில் மூழ்கிப்போவது எத்தனை எத்தனை நினைவலைகள்.  ஆபத்துகள் நிறைந்தது என்று தெரிந்தும் கால்களை நனைக்காமல் மீள மனம் வருமா?.

    “மத்தவங்களுக்கு அழகா இருக்கற கடலு நம்மளபோல இருக்கற அன்றாடங்காட்சிகளுக்கு  ஒரு சாபமாப்போச்சு. அறுபது வருஷமாச்சு நாம எல்லாத்தயும் எழந்து”

    என்று புலம்பலைத் தொடர்ந்தான் சுந்தரம். “நம்ம பொழப்பப்பாரு…… யாராவது சுத்துலாக்காரங்க வந்தா போய் ‘சாப்பிட வாங்க’. ‘சாப்பிட வாங்க’ன்னு கெஞ்சி கையப்புடிக்காத கொறயா இழுக்கணும். அவன் பக்கத்துக் கடைக்கு போயிட்டா  அது மாமன் மச்சா கடையா இருந்தாலும் நமக்கு வியாபாரம் போச்சுன்னு அம்போன்னு இருக்க வேண்டியதுதா. அந்தி விழுந்தா வெளிச்சத்தில உட்கார வகுசு இருக்கா? பொழுதுபோக ஒரு டி.வி பொட்டி இருக்கா? ஊருக்கெல்லா கரண்டு இருக்கு. ஆனா நம்ம பொழப்பு இருட்டுக்குள்ளயே கெடக்கு. இங்க வர்றவனுகளப் பாக்கும்போது வயிறு பத்திகிட்டு வருது. அடுத்த ஜென்மத்துலயாவது நாம இவனுக வீட்டுல நாயாவாவது பொறக்க மாட்டோமான்னு தோணுது. என்னக்கோ ஊர சுத்திப்பார்க்க வர்றவனுக கடலுக்கு எல்லையே இல்லன்னு ஆசையா பாத்துகிட்டுப் போறானுங்க. ஆனா, நமக்கு இந்த ரெண்டு கடலுந்தானே எல்லையாவேப் போச்சு. ஒவ்வொரு பொழுதயும் பயந்துகிட்டே கழிக்க வேண்டியதா இருக்கு. இதில பாதி நாளு ஏதாவது மண்டபத்திலத் தங்க வெச்சர்றாங்க. கடல் தாயே….. ஒனக்குக் காது கேட்குமா……”

    “போதும் மாமா..  நா ஒண்ணும் பேசல. சும்மா பெனாத்தாம போய் படு. நாளைக்குக் கடலுக்குப் போவியாமா.”

    அடுத்தநாள் பொழுதுசாய சுந்தரம் வலைகளைத்தூக்கிப் படகில் போட்டுக்கொண்டு கடலை நோக்கிப் புறப்பட்டான். சாயுங்காலம் கிளம்பினால்தான் விடியற்காலம் மீனுடன் திரும்ப முடியும். இரவு அலைகள் அதிகமாக இருக்கின்ற நிலவொளியில்தான் மீனவர்களின் வேலையே ஆரம்பமாகிறது.

    2

    “ம்மா ரொம்பப் பசிக்குது மா…………. இன்னிக்காவது நம்மள யாராவது பாப்பாங்களாமா…….”

    குலசேகரனோட வாயப்பொத்தினாள்  இலட்சுமி.

    இலங்கையிலிருந்து எப்படியோ தப்பித்து வந்து இராமேஸ்வரம்சென்று, மகனை அப்துல்கலாம்போல படிக்க வைக்கணும்ங்கிறது குலசேகரனுடைய அப்பா பூமிநாதனுடைய கனவு. பூமிநாதனோட அப்பாவின் குடும்பம் இராமேஸ்வரம் வழியாக மீன்பிடிக்க வந்தபோது எல்லை மீறினதால இலங்கை கடற்படையால் கைது  செய்யப்பட்டவர்கள். அக்கைதிகளுள் ஒரு கூட்டத்தை உருவாக்கி அங்கேயே தங்கி விட்டார். அவரின் சண்டித்தனத்துக்குச் சரியானது  இயக்கத்தில சேர்வதுதான் சரியென்று இணைந்து விட்டார். உடன் வந்த நாலு பேரையும் சேர்த்து விட்டு, அங்கேயே கல்யாணமும் முடித்து  பூமிநாதனப் பெற்றெடுத்தார். இயக்கத்தோடப் போராட்டப் பயிற்சிக்காக பூமிநாதனையும் அழைச்சிட்டுப் போவார். மறைந்திருந்து தாக்கும் பயிற்சி அளிக்கும்போது கால்தவறி விழுந்து கல்லில் மண்டை அடி பட்டு இறந்திட்டார். மகனையும் அதே இயக்கத்துக்குத் தாரைவார்த்து கொடுத்துவிட்டார். ஆனா பூமிநாதன் வளர்ந்து பெரியவனானதும்   தெளிவானவனாகிவிட்டான். ‘எக்காரணம் கொண்டும் தன் மகனை இந்த இயக்கத்தில சேர விடக்கூடாதுன்னு மனைவி இலட்சுமியையும்  மகனையும் அவர் இயக்கத்தில சேர விடவே இல்லை.  அவர் சாகும்போது கடைசியா ‘எம்புள்ளய எப்படியாவதுப் படிக்க வைன்னு’ சொல்லிவிட்டு கண்ண மூடினார்.’ என்று கூறிய அவருடைய நினைவுகளை அசைபோட்டாள் இலட்சுமி.  ‘

    ‘அவருக்கு சத்தியம் செஞ்சுக் கொடுத்த வார்த்தைக்காக எம்புள்ளைய கூட்டிட்டு யாருக்குந்தெரியாம காட்டுவழியா இரவெல்லா நொழஞ்சு நொழஞ்சு ஒரு கடல் எல்லைக்கு வந்திருக்கே. ஏதாவது  மீன் புடிக்கிறவங்க கண்ணுல பட்டாக்கூடப் போதும். அவங்ககிட்ட எப்படியாவது கேட்டு இராமேஸ்வரம் போயிடுவே. நேத்து இரவு முழுக்க  இந்தக் குளுருலேயே உட்கார்ந்து கெடக்கோ. ஒரு படகெயாவது கண்ணுல காட்டு சாமி. என்று இலட்சுமி வானத்தைப் பார்த்துக் கும்பிட்டாள். ‘குலசேகர அப்படியே அவென்ட அப்பாவ உருச்சு வெச்சிருந்தா. அவ அப்பா எப்பவுமே இவனெ கலாம் கலாம்னுதா கூப்புடுவாரு. எப்படியாவது என்டெ தங்கத்தெ பள்ளிக்கொடத்தில சேத்தரணு. நானும் அவரும் ஜீவிச்ச வாழ்க்கக்கு என்னெ கண்ணோட மணியா வெச்சு  பாத்ததுக்கு அவருக்காக நா இதக்கூட செய்யலேன்னா அவரோட ஆத்மா சாந்தி அடையாம  அலயுமே.’ என்று புலம்பினாள்.

    காடு வழியாக நிமிர்ந்து நடக்காமல்  நடு நடுவே முட்டிப்போட்டு மறைந்து மறைந்து நடந்து வந்ததில அவர்களுடைய உள்ளங்கைகளில் வலியின் கொடூரம். குலசேகரனின் தலமுடியைக்   கைகளால் கோதிவிட்டு கண்களிலிருந்து வடிந்த கண்ணீரை புடவை முந்தானயால் ஒத்தினாள்.  திங்கட்கிழமைக் கெளம்பனது.  இப்போ புதன்கிழமை. நடுராத்திரி ஆயிடுத்து. ‘தூரத்தில் ஒரு படகு தெரிந்தது. சாமி இந்தப் படகெயாவது காட்டிடு சாமி.’ மெதுவாக நகர்ந்து வந்த படகு இலட்சுமியைப் பார்த்து நகர்ந்து வந்தது.கடவுளுக்கு அவளது பிரார்த்தனை கேட்ட து.

    திருமணமாகி நான்கு வருடத்திற்குப்பிறகு  கருத்தரித்த கீதாவை நினைத்துக்கொண்டு படகை செலுத்திய சுந்தரத்தின் கண்களுக்கு,  தூரத்தில் ஒரு சின்ன கை  அசைவது தெரிந்தது. மீன்பிடி படகு என்பதால் கொஞ்சம் வேகமாகச் செல்லும்.  மனம் கேட்கவில்லை. அவர்களை நோக்கிப் படகை நகர்த்தினான்.  இன்னும் இரண்டு மீட்டர் போனால் இலங்கை எல்லைப்பகுதி  வந்து விடும். அதற்குமுன் நீர் ஒழுகிப்போவது போன்ற அலைகள் குறைந்த  பெரிய நீர்  பரப்பு உள்ளது. சிறுவன் அந்தத் தண்ணீரில் குதித்துவிட்டான்.  யாரும் இல்லாமல் தத்தளிப்பானோ? மூழ்கி விடுவானோ?. அவனெக் காப்பாத்தப் போய் நமக்குச் சிக்கலாகி விடுமோ? பரவால்ல. சின்னப்பயனா தெரியுறா. நாலு வருடமா குழந்தை இல்லாத கவல என்னன்னு எனக்குத் தெரியும். படகு அவன் அருகில் செல்வதற்கு முன் அவன்  கொஞ்சதூரம் நீந்தி வந்து விட்டான். அவனுடன் நாப்பது நாப்பத்தைந்து மதிக்கத்தக்க ஒரு பொண்ணும்.

    ‘எங்கள காப்பாத்தவந்த எங்குலசாமி, எங்கள எப்படியாவது கூட்டிட்டு போ சாமி! எம் பையனைப் படிக்க வைக்கணு. இங்கே இருந்தா இயக்கத்தில சேர்த்து விட்டுருவாங்க.” என்று சுந்தரத்தைப்பார்த்து கையெடுத்து கும்பிட்டாள்.

    “ஐயோ! சாமிங்களா நீங்க இலங்கக்காரங்களோ. ஆளவிடுங்கப்பா கொழந்தப்பய  தண்ணீல கெடக்கானேனு வந்தே.  இந்த வேல நமக்காகாது.  ஆள விடுங்க’ சாமி என்று துடுப்பைத் திருப்பினான்.

    “மகனே ஒன்னய பாக்குறதுக்கு எனக்குப் பொறக்காத பையனாட்ட தெரியுற தங்கோ. எங்களுக்குக் கல்யாணமான வருசத்தில கொழந்த பொறந்திருந்தா ஒன்னய மாதிரி வளர்ந்திருப்பாஞ்சாமி. எட்டு வருஷம்கிட்ட கொழந்த இல்லாம எல்லாக்கடவுளையு வேண்டிதா கெடச்சது. ரெண்டு நாளா எங்களக் காப்பாத்த கடவுள் வடிவத்தில  யாராவது வருவாங்கன்னு காட்டுக்குள்ளேயே கெடந்தோ மகனே.  எப்படியாவது கருணை வையுப்பா.  உங்குடும்ப நல்லா தழச்சு வளரு. என்று ஈரச்சேலையுடன் வணங்கினாள்.

    “ம்மா இங்கன இருந்து, அங்க ஒருசிலர கூட்டிக்கினுப்போக வருவாங்க  அப்ப வாங்க. இப்ப வந்தா சிக்கிருவீங்க.”

    தாயின் கதறல், சிறுவனின் முகம், ‘என்டெ மகனாட்ட  இருக்கேன்னு  வெள்ளந்தியா சொன்ன வார்த்தைகள். அந்த நேரத்தில அவர்களை அப்படியொரு நிர்கதியில் விட்டுட்டுப்போக அவனுக்கு மனம் வரவுமில்லை.  அவனை என்னமோ செய்தது.

    “அம்மா  நாமபோற வழியில போலீசுக்காரனுவ பாத்தாங்கன்னா என்னயும் சேத்து உள்ள வச்சிருவானுக.”

    சுந்தரத்தின் மன எண்ணங்களை உணர்ந்தவளாய் “இல்லெ மகனே நான் ஒனக்கு ஒங்க குடும்பத்துக்கு எந்த தொந்தரவு கொடுக்கமாட்டே. என்னை நம்புப்பா. இது என்டெ வீட்டுக்காருமேல சத்தியம். எங்கள எப்படியாவது  கரைகிட்ட வர கூட்டிக்கிட்டுப் போனாப் போதும். அதுக்கப்பறம் நாங்க கண்ணுலகூட படமாட்டோம். என்ன நம்புப்பா. இது என்டெ கடவுளா இருக்கற வீட்டுக்கார நெனச்சு சொல்றே.  என்ன கரையில மட்டும் சேர்த்தாப் போதும்.

    “நீங்க அங்கன போயி என்ன பண்ண முடியு?. நீங்க பேசுறதே ஒங்கள மாட்டிக்கொடுத்துரு.”

    “இல்லையப்பா எனக்கு ரொம்ப குளிருது.  குளிர்ல வாய் ஒளருது.  எனக்கு வேற மாதிரியும்  பேச வரும். என்ன பண்ண என்னோட வீட்டுக்காரோட மொழிய பேசும்போதெல்லா அவர்கூட இருக்கறதா நெனப்பு. நான் என்ன மாத்தி பேசிக்கடறே.”

    அவனுக்கு விட்டுச்செல்லவும் மனமில்லை. சிக்கலில் மாட்டவும் விருப்பமில்ல. சிலநிமிட தயக்கத்திற்குப்பிறகு “சரி சீக்கிர ஏறுங்க. ஆனா நாஞ்சொல்றத நீங்க கேட்கணு. நல்லா குமிஞ்சுதா ஒட்காரோனு. போலீஸ் ரவுண்ட்சு போயிட்டு இருப்பாங்க. ஏறுங்க………   நானே சாப்பாட்டுக்கே வழியில்லாமதா மீன்புடிக்கவே வந்தே. கொஞ்சம் முன்னாடிதானே சரக்குவண்டி போச்சு, அதுல போயிருக்கலாமில்ல.”

    “இல்லெ சாமி அதுல நெறெய பேரு இருந்தாங்க. எங்களக்காப்பாத்த  உங்களாட்ட ஒரு கடவுள், ஒரே ஒரு கடவுள் வருவாருனு காத்துக்கெடந்தோ.”

    இருவரையும் ஏறச்சொல்லி சைகைக் காட்டினான்.   இருவரும் சுந்தரத்துக்கு நேராக மீன் வலைக்கு  அந்தப்பக்கம் உட்கார்ந்தனர், மீன்கள் வலைக்குள் துள்ளிக் கொண்டிருந்தன. வலைக்கு அந்தப்பக்கமாக இருவரும் அமர்ந்தனர்.   மௌனம் சிறிதுநேரம் நீடித்தது.

    “இதா பாருங்கம்மா மணி ரெண்டுதா ஆகுது. நாம்போயி கரையில எறக்கி விட்டுடறே.  அதுக்கப்புற என்னான்ட எதுவு கேட்டு தொந்தரவு பண்ணக்கூடாது.”

    “இல்லை மகனே உங்களை ஒரு தொந்தரவும் செய்ய இயலாது என்னை நம்புங்கள்.”

    சற்றுதூரம் சென்றதும் மோட்டார் படகில் போலீஸ்காரர்கள் ரோந்து வருவது தெரிந்தது. மீன்பிடித்து வருபவர்களை அவர்கள் ஒன்றும் செய்ய மாட்டார்கள். சந்தேகத்திற்கு உரியப் படகுகள் ஏதாவது தென்படுகிறதானு  பார்ப்பதுதான்  அவர்கள் வேலை.

    “அம்மோ போலீஸ் வண்டி வருது. அப்படியே படுத்துக்கோங்க.”

    தனது சேலைக்குள் பொதிந்த உடம்போடு சேர்த்து இறுக்கி அணைத்திருந்த தனது மகனையும் சேர்த்து அப்படியே படுத்துக்கொண்டாள்.  சுந்தரம் சீக்கிரமாக  தார்ப்பாயைத் தூக்கி அவர்கள் மேலே போட்டுவிட்டு  அதற்கு மேல் மீன்வலையைத் தூக்கிப் போட்டான். மீன்கள் வலைக்குள் பிடைவது தார்ப்பாய் வழியாக அவர்கள்  உணர்ந்தனர், முடியாமல் குலசேகரன் நெளிந்தான். அவனை மேலும் இறுக அணைத்துக்கொண்டாள். உயிரைப் பாதுகாத்து ஊர்ப்போய் சேருவது எண்ணமாக இருப்பதால் அவள் தன் ஆடையின் ஈரத்தைப்பற்றி யோசிக்கவில்லை. ஆடை முழுவதும் ஈரம். குளிர் நடுக்கியது. சுமார் அதிகாலை இரண்டரை மணி இருக்கும், படகு கரையை அடைந்தது. உடன்வந்த படகுகள் எல்லாம் கரைசேர்வதுவரை மெதுவாக துடுப்பிட்டான்  சுந்தரம். “எல்லோரும் அரை மணி நேரத்தில் மீன மார்க்கெட்டுக்கு எடுத்துட்டுப்போயிடுவாங்க. அதுக்கப்புறம் யாருக்கும் தெரியாம எறங்கிப் போயிடனு சரியா…”

    அவள் கையெடுத்துக் கும்பிட்டாள்

    சுந்தரத்தின் மச்சினன்  கடற்கரையில் சைக்கிளில் காத்து நின்றான்.  சுந்தரன்  மச்சினனுடன் மீனை எடுத்துக் கொண்டு போனான். இலட்சுமி சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு, யாரும் இல்லாத சமயம் பார்த்து தலையைத்தூக்கி ஒருமுறை கடலைத் திரும்பி பார்த்தாள். ‘இவ்வளவு தூரம் கடந்து வந்து விட்டோம்! பிறந்த மண்ணை விட்டு! அடிமை மண்ணை விட்டு! தன் கணவன் வாழ்ந்த  மண்ணை விட்டு. கண்ணீர் ததும்பி நின்றதால் கடல் எல்லை தண்ணீரின்றி சலனமற்று இருளாகத் தெரிந்தது. அமைதியான கடல். எல்லையில்லா நீர்ப்பரப்பு.  மீண்டும் தான் வாழ்ந்த மறுகரையை நினைக்கவே கூடாது என்று குனிந்து கடல்நீரை எடுத்துத் தலையில் தெளித்து ஆசீர்வாதம் பெற்றுக் கொண்டாள். குலசேகரன் தலை மீதும் தெளித்து விட்டாள்.  கண்களில் ஒத்தி கொண்டாள்.

    கும்ம்ம்மிருட்டு.  சாலை எது? ஓரக்கரை எது? என்று தெரியாமல் இருந்தது. அந்த ஊர் மக்களின் காவல்தெய்வம் சங்கிலிக்கருப்பனாக கடல் மட்டும் ஓயாமல் சிலம்பொலிகளாய் அலைகளை எழுப்பிக் கொண்டிருந்தது. தனுஷ்கோடியின் வளைவு நன்றாகத் தெரிந்தது, இரு கடலும் சங்கமிக்கின்ற பகுதியைக் கூர்ந்து கவனித்தாள், அவளின் இடதுகை பக்கமுள்ள கடலோ அலைகளை வேகமாக வீசியது, வலது பக்கக்  கடல் அமைதியாக இருந்தது. துணியின் ஈரமும், காற்றின் வேகமும், யாராவது பார்த்து விடுவார்களோ என்ற பயமும், அவர்களது நடையின் வேகத்தைக் குறைத்தது. குலசேகரனை இழுத்துக்கொண்டு முன்னோக்கி வேகவேகமாக நடந்தாள். ஆங்காங்கே சிலரின் நடமாட்டம் தெரிந்தது. ஆனால், யாரும் கண்டுகொள்ளவில்லை. இனியும் விடிவதற்கு நேரம் இருக்கு. ஓடிப்போய் பாதி பிய்ந்து தொங்குகின்ற ஓர் ஒற்றைக்  குடிசையின்   பின்புறமாகத்   தஞ்சம் புகுந்தனர்.

    “ம்மா எனக்கு ரொம்ப ஒறக்கமா வருது.” இரண்டு நாட்களாக அலைந்துவந்த களைப்பு உண்மையில் அவளையும் தளர்த்தவே செய்தது.

    “ஒறங்கலாம் பா. நல்லாவெடியறவர இங்கதா இருக்கணு. வெடிஞ்சதுக்கப்பறோ டூரிஸ்டு வண்டிக வரத்தொடங்கனதும் கூட்டத்தோடு கூட்டமா இங்கன இருந்து போயிரலா.”  என்று ஆசுவாசப்படுத்திக்கொண்டு, பிய்ந்துபோன கூரைக்கடியில்  கிடந்த சில அட்டைகளை எடுத்து விரித்தாள். மகனை அதில் படுக்கச் சொன்னாள். அவன் படுத்ததும் உறங்கி விட்டான்.  காற்று பலமாக வீசியது. மணற்துகள்கள் குலசேகரனின் தலை முழுக்க ஒட்டியிருந்தன. அவனுடைய  தலையை தட்டி விட்டுக்கொண்டும், தடவிக்கொண்டும், தூங்கிக்கொண்டிருந்த குலசேகரனை  பார்த்துக்கொண்டே இருந்தாள். கன்னத்தில் அழுத்தி ஒரு முத்தமிட்டாள். ‘என் ராசா என்னோட அடிவயுத்தில பால்வார்க்க வந்தவ. நல்லா இருப்படா மகனே. உனக்கு எந்த துன்பமும் நேரக்கூடாது என்று மனதில் எண்ணியவளாய் குளிரில் நடுங்கிக்கொண்டு இரு தொடைகளுக்கிடையில் கைகளை வைத்துப்  படுத்துக்கொண்டிருந்த தன் மகன்மீது  கண்ணீர்த்துளிகள் விழாமல் புடவையால் துடைத்துக் கொண்டாள்.  பாதி கிழிந்த அரிசிப்பையொன்று அங்கு கிடந்தது. அந்த அரிசிப்பைக்குள் குலசேகரனின் கால்களைத் தூக்கி  வைத்தாள். முட்டி  வரை மூடியது. பாதி உடல் மணலிலும் பாதி உடல் அட்டைகளிலுமாகப் படுத்துக்கொண்ட அவள் மகனின் மேனியை சேலையால் இறுக மூடினாள். தலை மணலில் படாதவாறு தனது கையை நீட்டி அதன்மேல் தலையை மெதுவாகத் தூக்கிவைத்தாள்.  கொஞ்சம் குளிர் நின்றது.

    3

    அசதியில் நன்றாகத் தூங்கிவிட்டார்கள். குடிசைக்குப்பின்புறம் என்பதால் யாரும் கவனிக்கவும் இல்லை. விடியலின் வெளிச்சம் பளீரென இருந்தது. வண்டிகளின் இரைச்சல், மக்களின் பேச்சு சத்தம், பலமொழிகளின் கலவை, காதுகளில் விழுந்தன. நாம் தமிழ்நாட்டில் இருக்கிறோமா? இல்லை ஏதாவது வடக்குப் பகுதிக்கு வந்துவிட்டோமா எனும் அளவிற்கு இந்தி பேசுபவர்களின் கூட்டம் அதிகம், வயதான பெண்மணிகள் அரைக்கால் சட்டையில் வெள்ளைவெளேர் என்றிருக்கும் தொடைப்பகுதி தெரியும்படியான  டிரௌசரும், பனியனும் போட்டிருந்தனர். பனியனில் மார்புக்கு நடுவில் மாட்டிய கூளிங்கிளாசுடன்  நிறையப் பெண்கள். உடையில் ஆண்பெண் வித்தியாசமே தெரியவில்லை.

    சுற்றுலாப்பயணிகளை வேடிக்கைப்பார்த்துக்கொண்டிருந்த இலட்சுமி ‘என்ட வீட்டுக்காரரும் என்ன எப்பவும் அழகா சிங்காரிச்சுக்கத்தா சொல்லுவாரு. வாடிப்போய் இருந்தா அவருக்கும் பிடிக்காது. என்ன வருத்தமானாலும் நாம உடையில காட்டக்கூடாதுங்கறது அவரு விருப்பமா இருந்துச்சு.” என்று பெருமூச்சு விட்டாள்.’

    இரண்டு நாட்களாகப் புயல் எச்சரிக்கை காரணமாக தனுஷ்கோடிக்குச் சுற்றுலாப்பயணிகள் செல்ல இடப்பட்டிருந்த தடை நீங்கியது.  அடுத்தநாள் நிறைய கூட்டம். கூட்டத்தோடு கூட்டமாக இலட்சுமியும் பையனுடன்சென்று தனுஷ்கோடியின் அழகைக் கண்டு ரசித்தாள். இரண்டு கடல்கள் சங்கமிக்கின்ற காட்சியைப்பார்க்க அவ்வளவு இரம்மியமாக இருந்தது. காலை உணவிற்கு நல்ல வேளை சுந்தரம்  கொடுத்த பிஸ்கட் இருந்தது.  தப்பிவந்து தமிழ்நாட்டை அடைந்ததில்  உருவான மகிழ்ச்சி வயிற்றை அடைத்திருந்தது. எப்படியாவது இராமேஸ்வரம் கோயில் செல்லவேண்டும். அரசு பஸ்ஸில் ஏறினால்  இடையில் செக்கிங் வந்தால் மாட்டிக்கொள்வோம், கையில் காசுவேறில்லை. இரவு முழுவதும் அமைதியாக இருந்த இடம் காலையில் சுற்றுலாப் பயணிகளின் வண்டிகளால் போக்குவரத்து நெரிசல்  நிரம்பி வழிந்தது. வெள்ளரிக்காய், மாங்காய் விற்பவர்கள், வண்டிகளில் வேர்க்கடலை மற்றும் சோளம் விற்கும் வியாபாரிகள், சங்கினாலான அலங்கார பொருட்களைத் தூக்கி நடப்பவர்கள். புகைப்படம் எடுக்கும் கலைஞர்கள். வழியோரங்களில் சுடச்சுட மீன் வறுவல்களின் வாசம்.  கருவாட்டுக்கடை, குளிர்பானக்கடை, ஐஸ்க்ரீம் வண்டி என அவ்விடமே பரபரப்பாக விளங்கியது. அதிகாலையில் அமைதியாக இருந்த இடமா இது. இடையிடையே காக்கி உடை அணிந்த காவல்காரர்களின் அறிவிப்பு. யாராவது வண்டியின்டிக்கியைத்திறப்பார்களா என்று ஒவ்வொரு வண்டியாகப் பார்த்துக்கொண்டிருந்தாள்.   ரொம்ப நேரம் கழித்து ஒரு ஆம்னி பஸ்ஸின் டிக்கியைத் திறந்தவர் அதை சரியாக மூடாமல்  போனதைப் பார்த்தாள்.  அதற்குள் ஏறி பெட்டிகளுக்கிடையில் அவனுடன் அமர்ந்துகொண்டாள்.

    பஸ் இராமேஸ்வரம் நோக்கிச்சென்றது. பூனாரைமுனை  வந்ததும் ஏதோ சந்தேகம் வண்டியை ஓரங்கட்டி நிறுத்திவிட்டு டிரைவர் இறங்கி டிக்கியைத்திறந்தார். இலட்சுமி கையெடுத்துக் கும்பிட்டாள்.  இவர்களை இப்போது நடுவில் இறக்கி விட்டால் நாம் சிக்கிவிடுவோம். உள்ளிருக்கும் பயணிகள் என்ன நினைப்பார்கள்.  பேசாமல் கதவை இழுத்து மூடிவிட்டுச் சென்றுவிட்டான். சந்தன மாரியம்மன் தெரு வந்ததும் டிரைவர் வண்டியை மறுபடியும் நிறுத்தினார். ஆள் நடமாட்டம் அதிகம் இல்லாத அந்தப்பகுதியில் ஓட்டுநர் இறங்கி டிக்கியைத் திறந்து அவர்களை வெளியில் இறங்கும்படி சைகைக் காட்டினார். கையைப்பிடித்து இழுத்து வெளியில் இறக்கிவிட்டார். இருவரும் திசையற்று நின்றனர். இவ்வளவு நேரம் மூச்சடக்கி இருந்ததற்கு வெளிக்காற்று ஆசுவாசமாகத்தான் இருந்தது.  ஏதோ லட்சியத்தை அடையப்போவதுபோன்ற உள்ளுணர்வு. மகனின் தலைமுடியைக் கோதிவிட்டு நெற்றியில் முத்தமிட்டாள். “பதினொரு  வயசுல எவ்வளவு பொறுமை, எவ்வளவு சாந்தம்,  எதையும் பொறுமையாக எதிர்கொள்ளும் சகிப்புத்தன்மை உண்மையில் நான் கொடுத்துவெச்சவதா.  பசிவந்தாக்கூட வாயத்திறந்து கேட்க மாட்டேங்கறா. என்னுடைய நெலம தெரிஞ்சு நடத்துகுறா எஞ்செல்லமே” என்று குலசேகரனை, நாதியற்றவளாய்  கட்டி அணைத்தாள்.

    இறக்கிவிட்ட  பேருந்து சென்ற வழியிலேயே சிறிதுதூரம் நடந்தனர்.  அங்கேதான் அப்துல்கலாம் அவர்கள் பிறந்த வீடு, நினைவு மண்டபமாக இருந்தது, அவளுக்கு ஆச்சர்யம் தாங்கவில்லை. அந்தஇடம் அவளுக்குக் கோயிலாகத் தெரிந்தது. நின்ற இடத்திலேயே நின்றுகொண்டு மண்ணைத் தொட்டு வணங்கினாள். மகனையும் தொட்டுக் வணங்க சொன்னாள். மனம் குளிர்ந்தது. கடல்வெப்பக்காற்று அவர்களைத் தென்றலாக வரவேற்றது.   இராமேஸ்வரம் கோயிலுக்கு எப்படி போகவேண்டுமென்று   வழிநெடுக விசாரித்து விசாரித்து,  கோவில் வாயிலை அடைந்தனர்.

    இராமாயணத்தில் இராமர்,  இராவணனைக் கொன்ற பாவத்தைத் தீர்ப்பதற்காக  இலங்கையிலிருந்துத் திரும்ப வரும்போது இராமேஸ்வரம் மணலால் லிங்கம்  உருவாக்கி பூஜித்து  பாவத்தைக் கழித்த இடம் என்பது வரலாறு.  இராமேஸ்வரம் கடலில் மூழ்கி நீராடினால் வாழ்க்கையில் அறிந்தோ அறியாமலோ செய்த பாவங்கள் தீரும் என்பது நம்பிக்கை. சின்ன வயதிலிருந்தே இதேபோன்ற  புராணக் கதைகளைக் கேட்டு வளர்ந்தவள் இலட்சுமி. எனவே, தனது புதிய வாழ்க்கையைக் கடலில் நீராடி பாவங்களைக் கழுவிய பிறகு தொடங்கலாமென்று கடலை நோக்கி நடந்தாள்.

    இராமேஸ்வரக் கடலில் அவ்வளவாக அலைகள் இல்லை.  அமைதியாக  இருந்தது. இராமர் பூசை செய்ததால் அவரைப்போலவே அமைதியாகிவிட்டதோ? இலட்சுமி மகனுடன் கடலில் மூழ்கி எழுந்தாள். பலராலும் அகற்றி விடப்பட்ட துணிகள், துண்டுகள், விட்டுப்போன சோப்புகள் என ஆங்காங்கே கிடந்தன. அவள் மனதிலும் புதிய எண்ணம் தோன்றியது. கடலில் நீராடியபிறகே கோயில் பிரகாரத்திற்குள் நுழைய வேண்டும். கோயிலிலுள்ள 22 தீர்த்தங்களில் நீராடினால் நாம் செய்த பாவங்கள் அனைத்தும்  நீங்கிவிடும் என்பது ஐதீகம். ஆனால் சீட்டு எடுக்க வேண்டும். சீட்டு வாங்கக் காசில்லை. கோயிலுக்கு  வெளியிலேயே பலர் வாளியை வைத்துக்கொண்டு அழைத்தனர்.

    காற்றில் ஏதோ ஒரு சீட்டு பறந்துவந்து இலட்சுமியிடம் விழுந்தது. சீட்டை கையிலெடுத்து கண்களில் ஒத்தினாள். தீர்த்தமாடும் பகுதிக்கு நடையும் ஓட்டமுமாக விரைந்தாள். அன்றைக்குக் கூட்டம் குறைவாகத்தான் இருந்தது. ஏனோ, மனதில் குளிர்ச்சி பொங்கியது.  தீர்த்தத்தில் நீராட எங்கு முதலில் செல்லவேண்டும் எனற ஐயமின்றி ஒவ்வொரு கிணறுக்கருகிலும் ஒன்று இரண்டு என்று எழுதிவைக்கப்பட்டிருந்தது. முதல் தீர்த்தம் மகாலெட்சுமி தீர்த்தம். தன்பெயரில் முதல் தீர்த்தம் இருந்ததில் அவளுக்கு பூரிப்பு. கருங்கற்களாலான ஆழமான சின்னக் கிணறு அது. அதில் வாளி விட்டு தண்ணீர் முகந்து எடுக்கிறார்கள். கூட்டமாக நின்றால் அவர் எல்லார் மீதும் படும்படி அள்ளி வீசி ஊற்றுவார். வாளி மிகப்பெரியதொன்றுமில்லை. பெரிய மக் மாதிரி இருக்கும். ஓவ்வொரு கிணறுக்கும் கொஞ்சதூரம் நடக்க வேண்டும். சுற்றிலும் மதில். ஓயாமல் தண்ணீர் விழுந்துகொண்டே இருக்கிறது. ஆனால்,  கொஞ்சம்கூட வழுக்கவே இல்லை. கிணற்றுமேடுமீது நின்றுதான் அவர் முகர்ந்து ஊத்துகிறார். ‘நளதீர்த்தம்’. ‘சேதுமாதவதீர்த்தம்’, ‘நீலதீர்த்தம்’ என சில தீர்த்தங்கள் தள்ளித்தள்ளி இருக்கும்.  ஒரு கிணற்றினை இரண்டாக பகுத்ததுபோல. ‘சிவ தீர்த்தம்’. ‘சந்திர தீர்த்தம்’ ‘சர்வ காயத்ரி’, ‘சரஸ்வதி’, ‘சாவித்திரி தீர்த்தமும்’. ‘கங்கா’, ‘யமுனா’, தீர்த்தமும் அடுத்தடுத்து இருந்தது. தீர்த்தநீர் தலையில் விழ விழ அவளுக்கு புத்துணர்ச்சியும் புது எண்ணமும் பிறந்தது.   இறுதியாக ‘கோடி தீர்த்தம்’.  மற்ற தீர்த்தங்களை  யாரோ ஊற்றுவார்கள்.              கோடிதீர்த்தத்தை அர்ச்சகர்தான் ஊற்றுவார். வாளியில் அல்ல  சின்ன கமண்டலத்தில். ‘இராமன் லிங்கத்தை பிரதிஷ்டைசெய்யும்போது நீர் தேவைப்பட்டதால் தனது அம்பின் நுனியை, பூமிமீதுவைத்து அழுத்தியதால் பூமியைப்பிளந்துகொண்டு வந்த தீர்த்தமே இந்த  ‘கோடி தீர்த்தம்’ என்று மகனுக்கு சொல்லிக்கொடுத்தாள்.’ கோயிலில் ராமநாதசுவாமி உட்பட அனைத்து சாமிகளுக்கும் இந்தக் கோடி தீர்த்தத்தில்தான் அபிஷேகம் செய்கிறார்கள். இருபத்தி இரண்டு தீர்த்தங்களிலும் நீராடிவிட்டு ஆடைமாற்றியப்பிறகு சிவபெருமானை தரிசிக்க வரிசையில் நிற்கவேண்டும். இலட்சுமியிடம் ஈர  உடையை மாற்றி உடுத்த வேறு ஆடை கூட கிடையாது. குலசேகரனுக்கும் அதே நிலைதான். சிறிதுநேரம் வெயிலில் நின்றால் காய்ந்துவிடும் என்று வேகவேகமாக நடந்தாள். பெரிய பெரிய தூண்கள். தூண்களில் செதுக்கப்பட்ட சிற்பங்கள். ஒரேமாதிரியான வளை வடிவில் அரண்மனைபோல அமைக்கப்பட்ட பிரகாரங்கள், கருங்கற்சுவர்கள் என ஒவ்வொன்றும் ஆச்சர்யம் தரும்விதமாக சினிமாக்களில் பார்ப்பதுப்போல இருந்தன.

    “கடவுளே என்னை யாருமே அடையாளம் கண்டுக்கக் கூடாது. ஏங்கிட்ட எதுவு கேட்கவு கூடாது” என்று மனதுக்குள் புலம்பிக்கொண்டிருந்தாள் இலட்சுமி. ஊர், பெயர், வீடு, வேலை, குடும்பம்னு இப்படி எல்லாமும் இருக்கறவங்களே எதை எதையோ தேடி அலையும்போது எதுவும் இல்லாத அவளுக்கு வேறுவிதமான  பதட்டம். கடவுளைத் தரிசிக்க வரிசையில் நிற்பதற்காக அவசரமாக நடந்துகொண்டிருக்கும்போது இடது பக்கம் ஒரு பெரிய விநாயகர் சிலை. அதை சிலர் நின்று வணங்கிச்செல்கிறார்கள். சிலர் போகின்ற போக்கில் வணங்குகிறார்கள். இலட்சுமியும் அதைக் கவனிக்காமல்தான் சென்றாள். அச்சிலைக்கு பூசைசெய்யும் வயதானப்பாட்டி  ‘இங்கே வாம்மா’ என்று இலட்சுமியை அழைத்தாள்.  “ஐயோ ஏதோ சிக்கல் போல மாட்டிக்கொண்டோம்” என்று பயந்து பயந்து அருகில் போனாள்.

    ‘பாட்டி மூன்று விரல்களால் விபூதியைத்தொட்டு அவ்விருவர் நெற்றியிலும் பூசிவிட்டாள். மறுபடியும் விபூதியில் விரல்களை நெனைத்து ‘இனி ஒனக்கு எல்லா காரியமும் நல்லா நடக்கும்மா. கவலய விடு.’  என்று  நெற்றியில் பூசினாள். கடவுள் நேரடியாகக் காட்சி தரமாட்டாரே இதுபோல வேறு வேறு உருவத்தில் காட்சி தருவது போலிருந்தது.  இந்தப் பாட்டி மட்டுமல்ல கடவுள்? தப்பித்து, தனுஷ்கோடிக்கு வரத் துணையாக இருந்த சுந்தரனும் கடவுள்தான். அறிந்தோ அறியாமலோ பஸ்ஸில இவ்வளவு தூரம் வரஉதவின பேர் தெரியாத அந்த டிரைவரும் கடவுள்தான். இவ்வளவு நேரம்  சந்தேகப்பட்டு எந்த கேள்வியும் கேட்காத  இந்தப் பிரபஞ்சமே கடவுள்தான் என்று எண்ணிக்கொண்டாள்.  ஆனால் இவர்கள் மனித உருவில் வந்த கடவுள்கள். இலட்சுமி மயங்கி பாட்டியின்  காலுக்கடியில் விழுந்துவிட்டாள். கண்விழிக்க சற்றுநேரம் ஆனது. கண்விழித்துப் பாத்தால் அவளைச்சுற்றி பலர் ‘உடோ உடோ னு’ சொல்ற வார்த்தைகள் மட்டும் அவள் காதில்  விழுந்தது. கூட்டத்தில நின்றிருந்த பெரிய மீசைவைத்த செக்யூரிட்டி அவளது கண்களுக்குப் போலீசுக்காரராகத் தெரிந்தார். கூட்டத்தில குலசேகரனைக்காணவில்லை. அவளுக்கு ஓ ஓ என்று கத்தவேண்டும் போலிருந்தது. அவளது கண்கள் அவனையே தேடின. அவனை மட்டும் தேடின. குலசேகரா…….. குலசேகரா…… எதுவும் நினைவில் இல்லாதவளாய் நிலையற்றுத் தேடினாள்.

    Share
  • உணர்வுகள் (சிறுகதை)

    உணர்வுகள் (சிறுகதை)

    முனைவர் நா. தீபா சரவணன்
    உதவிப் பேராசிரியர்
    குமரகுரு பன்முகக் கலை அறிவியல் கல்லூரி, கோவை.

    ‘கமலா எனக்கு சீரு முடிச்சு இது நாலாவது வருஷம். இப்போ வரைக்கும் எனக்கு இப்படி ஆனதே இல்லடி.’

    ‘ எனக்கு ஞாபகம் இருக்குடி என்னோட சீரு முடிஞ்சு ஒரு மாசம் கழிச்சுதானே உனக்கு சீரு வச்சாங்க சுமி…. கரெக்டா?’

    ‘ஆமா. ஆனா இதுவரைக்கும் டேட் தவறனதே இல்ல. ரெண்டு நாள் மூணு நாள் முன்ன பின்ன ஆகும். இப்போ நாலு நாள் ஆச்சு இன்னும் ஒண்ணுமே ஆகல.’

    ‘ வெயிட் பண்ணு பார்ப்போம் உனக்கு எதுக்கெல்லாம் கவலைப்படணும்னு வெவஸ்தயே இல்ல.’

    ‘இல்லடி………… போன மாசமும் ஆறு நாள் கழிச்சு தான் ஆச்சு நான் அம்மாகிட்ட பொய் சொன்னே கரெக்ட்டா ஆச்சுன்னு இந்த தடவை சொல்லவும் முடியாது அம்மாவே டேட் குறிச்சி வெச்சிருக்கா.’

    ‘இன்னைக்கு நாம காலேஜ் சேர்ந்து ஃபர்ஸ்ட் செமஸ்டர் கடைசி எக்ஸாம். நாளைலிருந்து 25 நாளக்கி லீவு. லீவ் என்ஜாய் பண்ணுவியா இத உட்கார்ந்து இப்ப போய் பேசிட்டு. சுமி ரொம்ப யோசிக்காத வா அச்சாயங்கடையில போயி ஒரு பழம் பொரி சாப்பிட்டா சரியாகும் வா’

    குழப்பத்துடன் சென்றாள். இனி கமலாவ காலேஜ் திறக்கறவரப் பார்க்கவும் முடியாது. இது போன்ற விஷயங்களை ஷேர் செய்யவும் முடியாது என வருந்தினாள் சுமி. வீட்டுக்குக் கிளம்பி வந்துவிட்டாள்.

    அம்மா, துபாயிலிருந்து அப்பா வர்ற குஷியில் இருந்தா. துபாயில் பெரிய வைட் காலர் வேலை ஒன்றுமில்லை. பிளம்பிங் வேலை தான். போய் நாலு வருஷம் ஆச்சு சீருக்கு வந்தது அதுக்கப்புறம் இப்போதான் வராரு. இவங்க இருக்கிறது  ஒரு கிராமம். தப்பட்டன்கிழவன்புதூர். பஸ் வசதி மிகக் குறைவுதான், ஆனால் ஆற்றின் ரம்மியமான ஓசை, ஈரமான சாரல் காற்று, அடுக்கி வைத்த தென்னந்தோப்புகளின் மிருதுவான காற்று, காற்றில் மிதந்து வரும் வாழைக்கனிகளின் வாசம் என்று இயற்கையோடு கலந்த உணர்வுகள். பிளஸ்டூவிற்குப் பிறகு சுமி எப்படியோ கோயம்புத்தூரில் இலவசமாக ஒரு காலேஜ்ல சீட் வாங்கிட்டா.  லீவு விட்டா வந்துருவா.

    வசதிகள் குறைவா இருந்தாலும் ஒட்டு ஒறவோடு பழகுற கிராமம். லீவுக்கு வரும்போது சுமி அங்கலாய்ப்போட வந்தா. போன மாசம் 16ஆம் தேதி விலக்கானது.  இன்னைக்கு தேதி 20 ஆச்சு அம்மா போனதும் முதல்ல அதுதான் கேட்பா. போன அன்னைக்கு மறந்துட்டா அடுத்த நாள் காலைல எழுந்ததும் முதல் கேள்வியே அம்மாவோடது அதுதான்.

    “ஏம்புள்ள நீ இன்னும் விலக்கு ஆகல.  27ஆம் தேதி கல்யாணத்துக்குப் போகோணும். அதுக்குள்ள ரெடி ஆயிடுவியா?. அப்பா சொந்தக்காரங்க கல்யாணத்துக்கு ரெண்டு நாளு அங்க போய் இருக்கலாங்கற திட்டத்தோட வர்றாரு. நீ வேற போற நேரத்துக்கு முக்குல உட்கார்ந்துடாதே”

    “இல்லம்மா இன்னைக்கு அஞ்சு நாள் தள்ளியாச்சு இன்னும் ஆகல.”

    ‘சரி பார்ப்போம்.   தோட்டத்திற்குப் போன செண்பகம் நன்றாகப் பழுத்த பப்பாளியையும், எள்ளுருண்டை பாக்கெட்டையும் சுமித்ராவுக்குக் கொண்டு வந்து கொடுத்தாள். சீக்கிரமா விலக்கு ஆவதற்காக.

    தேதி 23 ஆனது பப்பாளியும். எள்ளுருண்டையும் வேலை செய்யவில்லை. அவளது அப்பா ஊர்ல இருந்து வந்த முசுவில் யாரும் இதைப்பற்றி யோசிக்கவே இல்ல.

    சரி முன்னப்பின்ன ஆகும். ஆகும்போது ஆகட்டும். கல்யாணத்துக்கு எதுக்கும் முன்னெச்சரிக்கையாக எல்லாம் எடுத்துட்டுப் போனாள் சுமி. சுமியின் அப்பா வெங்கடேசனின் ஒண்ணு விட்ட அத்தை பையனுக்குக் கல்யாணம். அவனுக்கு உறவினர்களைப் பார்த்த மகிழ்வு, சொல்லி அடங்காது. கொண்டாடி தீர்க்க டாஸ்மாக் மட்டும் செல்லவில்லை.

    28-ஆம் தேதி ஊருக்குத்  திரும்பின போது தான் செண்பகத்துக்கு ஞாபகம் வந்தது, சுமி இனியும் விலக்காகவில்லை என்று. தனக்குத் திருமணமாகி வந்த புதிதில் விலக்கானால் தன் மாமியார் காட்டும் சுத்தத்தை எண்ணிப் பயப்படுவாள். படுக்க, பாய் தரமாட்டார்கள், தலையணை கிடையவே கிடையாது. விடிவதற்குள் ஆத்துக்குப் போயி குளிச்சிட்டு வரணும். மாத்திக்கத்துணி எடுத்துகிட்டு போகக்கூடாது. ஈரத் துணியோட வீட்டுக்கு வந்ததுகப்பறம்தா துணி மாத்தணும், மூணாவது நாள்  பயன்படுத்தின துணிக,, போர்வை எல்லாத்தையும் நெனச்சுப் போடணும்.வீட்ட சாணிபோட்டு வளிச்சு விடணும். கோமியம் எடுத்திட்டு வந்து வீட்ட சுத்திலும் தெளிச்சு விடணும்.  அம்மாடி இப்போ நெனச்சுப் பார்த்தாலே மலைப்பா இருக்கு.

    சுமியோ மிகவும் சோர்வாகக் காணப்பட்டாள். 13 நாட்கள் தள்ளிப்போனது கல்யாண வீட்டில் இரண்டு தடவை வாந்தி வேறு எடுத்தாள். செண்பகத்திற்கு வயிறு கலங்கியது நம்ம பொண்ணு தப்பான வழிக்கு எதுவும் போயிருக்க மாட்டா. இருந்தாலும் காலம் வேற கெட்டுக் கெடக்கு. போன மாசந்தா காலேஜிலிருந்து டூர் போறாங்கன்னு கொடைக்கானல் போயிட்டு வந்தா. போன இடத்தில ஏதாவது……….. சொல்ல பயப்படுறாளோ? அப்பா இருக்காரேனு யோசிக்கிறாளோ? அப்படி எல்லாம் செய்யாது எம்புள்ள. கடவுளே நம்ம ஜாதி சனத்துக்கு தெரிஞ்சா சும்மா இருப்பாங்களா ஊரே ஒன்னு கூடிருமே. நானா கற்பனை பண்றேனா? வயசு புள்ளைய வச்சிருக்கிற எல்லா அம்மாவும் இப்படித்தான் யோசிப்பாங்களா?

    சுமி ஒரு தடவை பேரன்ட்ஸ் மீட்டிங் வர முடியலன்னு அவங்க மேம் கிட்ட பேசச் சொல்லி ஒரு நம்பர் கொடுத்தா. அவங்கள கூப்பிட்டுக் கேட்போம். ஒரு எளவும் புரிய மாட்டேங்குது. இல்ல இனியும் ஒரு வாரம் பொறுத்துப் பாக்கலாமா? உடம்புல சத்துமானம் கொறவா இருந்தாலும் இப்படித்தான் ஆகும். வேண்டாம் நாளைக்கே மேம் கிட்ட கூப்பிட்டுக் கேட்டுப் பாக்கலாம்.

    சுமி மிகவும் சோர்வாகக் காணப்பட்டாள். உணவில் நாட்டம் குறைந்தது. வாய்க்கு எதுவும் பிடிக்காமலானது.சோர்ந்து சோர்ந்து படுத்துக்கொண்டாள். மறுநாள் காலையிலேயே

    “சுமி நானு டௌனு வர போயிட்டு வந்திடறேன்” என்று பழைய நோக்கியா ஃபோன கையில் எடுத்துக்கொண்டு சென்றாள்.

    “ஹலோ மேடம் நான் சுமியோட அம்மா பேசுறேன். இல்ல……….. சுமிக்கி விலக்கு 15 நாளா தள்ளிப்போயிருக்கு. என் பொண்ணு பத்தி நானே தப்பா பேசக்கூடாது இருந்தாலும் பெத்த வயிறு எரியுது காலேஜ்ல அவளுக்கு ஏதாவது பையனோட சகவாசம் இருக்கானு கேட்கத் தான் கூப்பிட்டேன்.”

    “என்ன கேக்குறீங்க? பெத்தவங்க. நீங்க உங்க பொண்ணு எப்படின்னு உங்களுக்குத் தெரியாதா அதெல்லாம் ஒன்னும் இல்ல அவ நல்ல பொண்ணு”

    “இல்லைங்க மேடம், கொடைக்கானல் போன எடத்தில ஏதாவது ஒன்னு கிடக்க ஒன்னு ஆயிருந்துச்சுன்னா?”

    “அம்மா நீங்க தேவையில்லாம மனச போட்டுக் குழப்பிக்காதீங்க இது இப்போ இருக்கிற பிள்ளைகளுக்கு சாதாரணமா இருக்கிற ஒரு விஷயம் நீங்க ஒரு நல்ல கைனகாலஜிஸ்டாப் போய் பாருங்க”

    “யாருங்க மேடம்”

    ‘கைனகாலஜிஸ்ட்’

    “சரிங்க மேடம் நான் கூப்பிட்டுப் பேசினதா அவகிட்ட சொல்லாதீங்க…. வெச்சிர்றே”

    ‘ம்ம்ம் சரிங்க’

    22 நாட்கள் தள்ளி ஆகிவிட்டது. சுமியின் நடவடிக்கைலயும் நிறைய மாற்றம். அவ மேடம் சொன்ன டாக்டர பாக்கணும்னா டவுனுக்கு தான் போகணும். அவங்க அப்பாவுக்குத் தெரியாம தான் போகணும் ஏன் எதுக்குன்னு கேட்டு என்னைத் தொலைத்துவிடுவாரு. இது தான் புள்ளைய வளத்துற அழகானு என்ன அங்கேயே வெட்டிப் போட்டாலும் போடுவாரு. சுமிகூட படிக்கிற பொண்ணோட அக்காவுக்குக் கல்யாணம் மதுக்கரைலனு பொய் சொல்லி அம்மாவும் மகளும் கிளம்பினர்.

    சுந்தராபுரத்தில் நல்ல ஒரு ‘கைனகாலஜிஸ்ட்டிடம் சென்றனர் அந்த டாக்டர் சுமியை நன்றாகப் பரிசோதித்து பார்த்துவிட்டு “நீங்க நினைக்கிற மாதிரி ஒன்னும் இல்லம்மா. இது நார்மல் தான். விட்டமின் மாத்திரை மட்டும் எடுத்துக்கோங்க. நார்மலாவே சரி ஆயிடும்” என்றார்,

    ‘ச்சே அதுக்குள்ள நம்ம புள்ளையை என்னெல்லாமோ நினைச்சிட்டோமே. சாமி மன்னிச்சுக்கோ’

    வீடு திரும்பினர் டாக்டர் சொன்னது ஆறுதலாக இருந்தாலும் செக்கப் முடிஞ்சு ஒரு வாரம் ஆகிப்போச்சு. ஒருவேளை இவ டாக்டர் கிட்ட சொல்ல வேண்டாம் நான் அம்மாகிட்ட பேசிப் புரிய வச்சிக்கிறேன்னு சொல்லி இருப்பாளோ? மறுபடியும் வயிற்றில் புளி கரைந்தது. இனி அவ அப்பாகிட்ட சொல்ல வேண்டியதுதான். வேற வழி இல்ல. இப்போ கொஞ்சம் அவ வயிறு பெருசா இருக்கிற மாதிரி இருக்கு. வெயிட்டா இருக்குனு அவளே சொல்றா. எப்படி ஆரம்பிக்கிறது என்று தெரியவில்லை. ஒரு நாள் நள்ளிரவு தூக்கம் வராமல் உருண்டு படுத்த அவள் புருஷனை உலுக்கினாள்.

    ‘ஏங்க நாம வீட்டை மாத்திட்டு டவுன் பக்கம் போகலாமா இங்க கொடுக்கிற வாடகைய அங்க கொடுத்துட்டா போச்சு’

    பகலில் தூங்கியதால் தூக்கம் வராத அவனும் எழுந்து உட்கார்ந்தான்.

    “இல்லே எங்க ஜாதி சனமெல்லாம் சுத்துமுத்தும் இருக்கு. நல்லது கெட்டதுக்கு ஓடி வருவார்கள் சரிதா ஆனால் அதுவே நமக்கு உபத்திரவமா மாறக்கூடாது இல்ல”

    “என்ன சொல்ற எனக்கு ஒரு எளவும் புரியல. நான் இன்னும் ரெண்டு வாரத்துல திரும்பிப் போயிருவேன் அப்போ நீ தனியா இருப்பேனு தான் நம்ம சாதி சனத்துக்கு கூட உன்னை இருக்க சொல்றேன் உனக்கு என்ன பிரச்சனை இப்போ?”

    “இல்ல சொன்னா டென்ஷன் ஆகாம கேட்கணும். நம்ம சுமி அவ தப்பு பண்ணிட்டான்னு சொல்ல வரல. போன மாசம் அவளுக்கு தூரம் ஆகவே இல்லை. இப்போ அவளோட நடவடிக்கைகளைப் பார்த்தா பயமா இருக்கு . வயிறு வேற பெருசாருக்கிற மாதிரி இருக்குன்னு சொல்றா. நல்லதோ கெட்டதோ நம்ம ஜாதி சனத்துக்கு புள்ளி வெச்சா போதும். கோலம் போட்டு ரோடு போடுவாங்க.  அப்புறம் அவ வாழ்க்கை? நாம ஒரே புள்ளைய வச்சிருக்கோம். மூதேவி வாயைத் திறந்து எதையும் சொல்லவும் மாட்டேங்குது. எனக்கு அப்படியே மூளையே வெடிக்கிற மாதிரி இருக்கு.”

    தனக்கு என்ன ஆச்சுன்னு குழம்பிய மனத்தோடு படுத்தும் உறங்காமல் விழித்துக்கொண்டிருந்த சுமித்ரா, அம்மா பேசியது அவ்வளவையும் கேட்டுக் கொண்டுதானிருந்தாள். உண்மையிலேயே எனக்கு என்னமோ பிரச்சனை இருக்கு. என்னமோ இருக்கு. என்னவா இருக்கும். வயிறு வேற அப்பப்ப ரொம்ப வலிக்குது. கொடைக்கானல் போகும்போது பஸ்ல கிருஷ்ணா மட்டும்தான் எங்கிட்ட நெருக்கமாப் பழகி, எங்கிட்ட ஏதோ சொல்ல முயற்சி செஞ்சா. எல்லாருக்கும்தா அவ கூல்ட்ரிங்க்ஸ் ஸ்நாக்ஸ் வாங்கி கொடுத்தா எல்லாரும் தான் அதைச் சாப்பிட்டோம். பஸ்ல போன சலிப்பில நல்லா படுத்துத் தூங்கிட்டேன். மேம் கூடவே தான் இருந்தாங்க. எனக்கு கன்பியூசனா இருக்கு. கிருஷ்ணா என்ன விரும்புறான்னு பிரண்ட்ஸ் எல்லாம் சொல்லுவாங்க ஆனால் நான் எஸ் சொல்லவே இல்லையே ஒரு வேள…….. ச்சேச் சே வாய்ப்பில்லை.

    அப்புறம் ஏன் தல சுத்துது கொடைக்கானலில் எல்லாரும் எழுந்த பிறகு கடைசியா தான் நான் எழுந்தேன். இரவு என்ன ஆகி இருக்கும். இல்ல என் உடம்பு நார்மலா இல்லன்னு மட்டும் தெரியுது.

    முழுசா கேட்ட வெங்கடேசன் ‘அட போடிஇவளே……. .  இல்ல என் பொண்ணு தப்பு பண்ணியிருக்க மாட்டா. நாளைக்கு காலைல டவுன்ல ஏதாவது நல்ல ஹாஸ்பிடலா பார்த்துப் போயிட்டு வரலாம். ஸ்கேன் பண்ணிப் பார்த்தா தெரிஞ்சிரப் போகுது. கொடைக்கானல் ஏற்காடு சுத்திப் பார்க்கப் போறோம்னு ஊர்ல சொல்லிடுவோம். ஒரு வாரம் கழிச்சு வரலாம்.

    ‘தனக்கு என்ன ஆயிற்று என்று தெரியாமலே தற்கொலை கூட செய்து கொள்ளலாம் என்று சுமித்ராவிற்குத் தோன்றியது. ஆனால் இந்த நிலைமையில் நான் அப்படி செஞ்சா எங்க அம்மாவோட சந்தேகம் உறுதி ஆயிடும். ஊர் சும்மா இருக்காது அப்படி ஒரு களங்கத்தோட நான் சாக விரும்பல எனக்கும் எனக்கு என்ன ஆச்சுன்னு தெரியணும்.  அப்பா என் மேல இவ்வளவு அசைக்க முடியாத நம்பிக்கையோடு இருக்கும்போது அவரை ஏமாத்தக் கூடாது இருந்தாலும்…………..’

    காலை விடிந்ததும் மூவரும் கிளம்பி கோவையில் உள்ள ஐ.எப்.சி. மருத்துவமனைக்கு வந்தனர். கைனகாலஜிஸ்ட்கிட்ட அப்பாய்ன்மென்ட் வாங்கியாச்சு. பீரியட் தள்ளிப் போயிருக்கு என்று செக்கப் அறையில் படுக்க வைக்கப்பட்டாள். உள்ளே வரும்போதே சிஸ்டர் “மாசமா இருக்கியாமா?” என்று கேட்டுக்கொண்டே வந்தார்.

    “எனக்கு இனியும் கல்யாணமே ஆகல சிஸ்டர்.’’

    சிஸ்டர் பார்த்த  கேவலமான பார்வை அவளை உருக்கியது.

    டாக்டர் வந்தாரு நல்லா வயத்த அமர்த்தி செக்கப் செய்தாங்க. ஒரு டியூப்பில் ஜெல் தடவி பிறப்புறுப்புக்குள் விட்டு ஸ்கேன் பண்ணினாங்க. வலி உசுரு போற மாதிரி இருந்துச்சு. ஏதேதோ மெடிக்கல்  ரிப்போர்ட் ரெடி பண்ணனாங்க. செக்கப் புல்லா முடிச்சு ‘அம்மாவைக் கூப்பிடுமா’ என்றாங்க. என்னைக் கொஞ்சம் வெளியில நிக்க சொன்னாங்க. எனக்கும் என்னன்னு தெரிஞ்சுக்கணும்னு இருந்துச்சு.

    “நீங்கதான் சுமியோட அம்மாவா?  நீங்க மட்டும் தான் வந்திருக்கீங்களா அவங்க அப்பா இருந்தா உள்ள வரச் சொல்லுங்க. நான் சொல்றத பதற்றப்படாம கேளுங்க,”

    செண்பகத்திற்கு இதயத் துடிப்பு இ.சி.ஜியின் எல்லையைத் தொடும் அளவிற்குப் போனது, அடி வயிறு புரண்டு தொண்டை அடைத்தது, நாக்கு வறண்டது. கண்கள் பிதுங்கின,

    “நீங்க நெனைக்கிற மாதிரி உங்க பொண்ணுக்கு தப்பா எதுவும் நடக்கல. ஆனா நீங்க அவள அப்படி நினைச்சு மன உளைச்சலுக்கு ஆளாக்கியிருக்கீங்க”என்று சொல்லி, கொஞ்ச நேரம் கழித்துக் கூறினார். “பெண்களுக்குக் கருமுட்டை உருவாகற இடம் தான் ஓவரி. அது ரெண்டு இருக்கும் அதுதான் குழந்தை பிறக்க ரொம்ப முக்கியம் அதுல ஒரு ஓவரி ஃபுல்லா உங்க பொண்ணுக்கு தண்ணி நெறஞ்சிருக்கு. அதனால அது ஃபுல்லா இன்பெக்க்ஷன் ஆகி இருக்கு. சோ சர்ஜரி பண்ணி அந்த ஓவரியை ரிமூவ்  செய்யதறதத் தவிர வேற வழி இல்ல. இல்லனா இனி ஒரு ஓவரியையும் அது பாதிச்சிடும். ஆயிரத்தில் ஒருத்தருக்கு இந்த மாதிரி பிரச்சனை வரும். எப்படி வருது என்ன காரணம்னல்லா சொல்ல முடியாது. எவ்வளவு சீக்கிரமாகக் கல்யாணம் பண்ணி வைக்க முடியுமோ அவ்வளவு சீக்கிரமா கல்யாணம் பண்ணி வச்சிருங்க. மாப்பிள்ளை பார்க்கும்போது இந்த விஷயத்தைச் சொல்லாமப் பாருங்க அவங்க ஏற்கனவே உடல் ரீதியா பாதிச்சுருக்காங்க. நீங்க உங்க பிரஷர அவங்கமேல காமிச்சு மனதளவில பலவீனமானவங்களா மாத்திடாதீங்க. அவங்க மனதால பாதிப்பு அடைச்சுடுவாங்க. கருமுட்டை உருவாகறது கஷ்டமாயிடும்.”

    செண்பகம் முந்தானையால் கண்களை ஒப்பினாள். சுமியிடம் வயித்தில சின்ன கட்டி. அதை சர்ஜரி செய்து அகற்ற வேண்டும் என்று மட்டும் கூறினர். தன்னுடைய கற்புத்தன்மை நிரூபிக்கப்பட்டது. கர்ப்பமா இருக்குமோ என்ற அம்மாவின் அங்கலாய்ப்பு, சிஸ்டர் பார்த்த கேவலமான பார்வை, மனத்தில் ஏற்பட்ட பயம் என அவள் அடைந்த மன உளைச்சலுக்கு இது பெரிதாகத் தெரியவில்லை அடுத்த நாளே  ஆபரேஷனுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

    அரசாங்க வேலை வாங்கிட்டு அம்மா, அப்பாவப் புது வீடு கட்டி  உட்கார வெச்சிட்டுதான்  கல்யாணம் பண்ணுவேன்னு சவால் விட்ட மகளை எண்ணிக்  கண் கலகிங்கினாள் செண்பகம். செண்பகத்திற்கும்  ஆசையில்லாமல் இல்லை. புள்ளய அவசரமா கல்யாணம் பண்ணிக் கொடுத்திட்டா  பாரம்  ஒழிஞ்சிடும்னு  நெனக்கற பெற்றோர்களுக்கிடையில் செண்பகம்  சற்று வித்தியாசமானவள்.

    சுமி ப்ளஸ்டூ படிக்கும்போதே கணவரோட வகையறால ஒருத்தரு            மாப்பிள்ளை இருக்குனு சொல்லி வந்தாரு. அதைத் தட்டிக் கழித்தாள். செண்பகம்

    ‘புள்ள இன்னும் கொஞ்சநாள் பெத்தவங்க வீட்டில இருக்கட்டும். அவசரமா கல்யாணம் பண்ணி என்ன ஆகப் போகுது. ஒரு வருசத்தில கையில புள்ளயோட வந்து நிக்கும். அப்பறம் அத வளத்து ஆளாக்கவே பொழுதுக்குக்  கஷ்டப்படணும். அஞ்சுக்கும் பத்துக்கும்   இனி ஒருத்தங்க  கைய  எதிர்பார்த்திட்டு இருக்கணும். கொஞ்சநாள்  படிச்சு முடிச்சிட்டு ஏதோ வேலைக்குப் போட்டம். நமக்கு எதுவும் தரவேண்டா.  அவ  சம்பாதிச்சு  அவ  தேவைக்கு , அவ செலவு செஞ்சுகட்டும். ஒடம்பயும் கொஞ்சம் தேத்திட்டு அதுக்கப்பறம் கல்யாணத்தப் பத்தி யோசிப்போம்” என்று கணவனிடம் சொல்லிக்கொண்டிருந்தவள்.

    ஆப்பரேஷன் தியேட்டருக்குள் போகும்போது சுமி அவள் அம்மாவைப் பார்த்த பார்வை, செண்பகத்தை உப்பு போடப்பட்ட நத்தையாகச் சுருங்கச் செய்தது. இரண்டு மணிநேர ஆபரேஷன்  முடிந்து  அறைக்குக் கொண்டு வரப்பட்டாள். சுமிக்கு  இன்னும் சுயநினைவு வரவில்லை ஆனால் கண்களின் ஓரங்களில் கண்ணீர் ஓயாமல் வந்து கொண்டிருந்தது. அறுவை சிகிச்சையின் வேதனை வருத்தி அவளைக் கண்ணீர் விட வைத்ததா? இல்லை தூய்மை நிரூபணமானதன் ஆனந்தக் கண்ணீரா? மகளின்  நிலையை எண்ணி வருந்திக் கொண்டிருந்தான் கணேசன். வருத்தத்திற்கு முற்றுப்புள்ளியாக அமைந்தது செண்பகத்தின்

    “ஏங்க கையோடு நம்ம குமரேச  புரோக்கர வரச்சொல்லி சீக்கிரமா மாப்பிள்ளை பார்க்கச் சொல்லலாம்” என்கிற வார்த்தைகள்.

    எப்படி இந்த பொம்பளைங்க மட்டும் உடனுக்குடனே சூழ்நிலைக்குத் தகுந்தமாதிரி தங்கள மாத்திக்கிறாங்க என்ற ஆச்சர்யத்தோடு, கண்ணீரை, மறைத்துக்கொண்டு திரும்பிப்  பார்த்தான் வெங்கடேசன்.

    Share
  • ஜனங்கள் வம்சங்கள் மொழிகள்

    ஜனங்கள் வம்சங்கள் மொழிகள்

    முனைவர்.நா.தீபா சரவணன்
    உதவிப்பேராசிரியர்
    குமரகுரு பன்முகக் கலை அறிவியல் கல்லூரி, கோவை.

    ஏதோ பெயர் எழுதப்பட்ட பட்டணம். பனிக்காலப் படலங்கள். என்னுடைய பழையகம்பளி குளிரைத் தாங்க போதுமானதாக இருக்கவில்லை. வெயிலோ வெளிரிய ஒரு பிரகாசமாய் இருந்தது.

    எதிரிலிருந்து  மக்கள், கூட்டமாக வருவதை நான் பார்த்தேன். கூட்டத்தின் மௌனம் என்னை ஆச்சரியப்படுத்தியது. நான் வெளியில் இறங்கி  நின்றேன்.

    நாலு பேர் சேர்ந்து சுமக்கக் கூடிய மூன்று சின்னச்சின்ன சவப்பெட்டிகள் எனக்கு முன்பு மெதுவாக நகர்ந்தன.

    சவப்பெட்டிகளுக்கு வெண்மை நிறம். மேல் பாகத்தில் சிலுவைச் சின்னங்கள். சவப்பெட்டிகளுக்குப் பின்னால் நடப்பவர்கள் சிலர் அமைதியாக அழுதுகொண்டு வந்தார்கள். அனைவரும் கடந்து சென்ற பிறகு நான் வெளியில் நடுவில் சென்று நின்று இறுதி யாத்திரைக்கு நேராகப்  பார்த்தேன். மூன்று குழந்தைகள் இறந்திருக்கின்றனர் என்பதல்லாமல் எனக்கு ஒன்றும் புரியவில்லை.

    ‘மரணத்தின் சாவி யாருடைய கையில்?’

    ஒரு பெருமூச்சுவிட்டபடி நான் பயணத்தைத் தொடர சிந்தித்துக் கொண்டிருந்தபோதுதான் தளர்வோடு வருகின்ற  ஊனமுற்ற ஒரு வயதானவர் என் கண்களில் பட்டார்.  நிறம் மங்கியதும் பல இடங்களில் கிழிந்ததுமாக இருந்தது அவர் அணிந்திருந்த கோட்டும்,  கழுத்தில் சுற்றப்பட்ட மப்ளரும், தலையில் தொப்பியும் மிகப் பழையதாக இருந்தது. தொப்பியினால் மறைக்கப்படாமல் தலையின் இருபக்கங்களிலும் நரைத்த முடிகள் எழுந்து நின்றன.

    ‘அவங்க ரொம்ப தூரம் போயிட்டாங்களா ‘ தளர்ந்த ஒரு பார்வையுடன் கிதைத்துக்கொண்டு அவர் கேட்டார்.

    இறுதி ஊர்வலம் ஒரு வளைவு திரும்பி மரங்களுக்கு அப்புறம் மறைந்திருந்தது.

    ‘இதோ அங்கதான் போயிருப்பாங்க. மரக்கூட்டங்களுக்கு நேராக கைநீட்டி நான் கூறினேன்.

    மரங்களுக்குமேல் ஒளி கிரணங்களைப் பரப்புகின்ற வானம் மேகமாய் காட்சி அளித்தது.

    அவர் மறுபடியும் இழுத்து இழுத்து நடக்கத் தொடங்கினார்.

    ‘நில்லுங்க. யாரு செத்தாங்கணு எங்கிட்ட தயவுசெய்து சொல்லுங்க நான் ஆவலோடு கேட்டேன்.’

    அவர் நின்றார் .

    ‘நீங்க பாக்கலையா ?’

    ‘பார்த்தே. ஆனா என்ன நடந்துச்சுன்னு எனக்கு புடிபடல’

    திடீரென்று அவருடைய முகபாவம் மாறியது.

    ‘எங்களோட மூணு குழந்தைங்களையும் அவங்க கொண்ணுட்டாங்க’ அவர் தடுமாற்றத்துடன் கூறினார்.

    ‘யாரு……..? ஓர் அடி முன்னால வெச்சே

    ‘அப்போ உங்களுக்கு ஒண்ணும் தெரியாது ….இல்லையா?’

    ‘நான் கொஞ்ச நேரம் முன்னாடிதா இந்த மக்கள் கூட்டத்தில வந்தே.’

    ‘நீங்க யாரு’ அவர் என்னை  மேலும் கீழும் பார்த்தார்.

    நான்  தயங்கினேன். உடனே கூறுவதற்கான தெளிவானதொரு பதில் எங்கிட்ட இல்ல. அப்படி நிற்கும்போது என் காதுகளில் கடல் ஆரவாரித்தது. பிறகு  பாலைவனத்தில் காற்று வீசி அடிக்கின்ற சத்தம் கேட்டது. சிறிது நேரத்தில் மலைவாசிகளான செந்நாய்கள் ஊளை இடுவது கேட்டது.

    ‘உம் பார்த்தா நீயும் எங்க வம்சத்தில் பட்டவன்தானு  தோணுது.’ வயதானவர் கூறினார்.

    ‘அவருடைய வம்சம் என்னவென்று நான் விசாரிக்கல. அவரு அத விளக்கவும் தயாரா இல்ல.’

    ‘தூங்கிகிட்டு இருந்த நம்மளோட மூணு குழந்தைங்களை அவனுக பெட்ரோல்  குண்டெறிந்து  கொன்றது, தீயில் வெந்து எரிந்து  குழந்தைங்க மூணுபேரும் சவப்பெட்டில தூங்கிடுவாங்கன்னு அவங்க நினைக்க வேண்டாம். பெட்ரோல் குண்டு நம்மகிட்டயும் இருக்கே. அவங்க பக்கம் குழந்தைங்களும்.’

    உணர்ச்சிவசப்பட்டதால் அவரின் முகம் இறுகியது.

    மூச்சு வாங்கிக்கொண்டு கழுத்தில் சொடுக்கு எடுத்தார். எனக்கு எதுவும் கேட்கவோ சொல்லவோ இடம் தராமல் அவர் முன்னோக்கி நடந்தார்.

    நான் கருணையோடு செய்வதறியாமல் அசைவின்றி அவரைப் பார்த்தேன். ஓரங்களில் மரங்கள் சலனமின்றி நின்றன, மரத்துண்டுகளில் கூர்மையான மஞ்சள் துண்டுகள்.

    வயதானவர் தளர்ச்சியோடு   நடந்தார். நான் அதுக்குமேல அங்க நிக்கல. பாதையில் பலத்தக் காற்று வீசியது. இடையிடையே என் பார்வை வானத்தின் தூய்மையில்  நீண்டு சென்றது. பாதையோரங்களில் தானாக வளர்ந்த செடிகள் சின்னச்சின்ன நீல வர்ணப் பூக்களுடன் நின்று கொண்டிருந்தன. அவைக் காற்றில் மெல்ல அசைந்தன. வழியில் உளளச் சின்ன வண்ணத்துப்பூச்சிகள் சில செடிகளை வலம் வைத்துப் பறந்து கொண்டிருந்தன.

    காது உள்ளவன் கேட்கிறான். நான் ஆர்வத்தோடு திரும்பிப்பார்த்தேன். எனக்குப் பின்னால் வேற்று மொழியின் சத்தம் கேட்டது.  பாரம்பரிய உடையணிந்து நான்கு புரோகிதர்களின் தலைமையில் ஏதோ காரியத்தை சொல்லி சக்தமான எதிர்ப்பு தெரிவித்துக் கொண்டு பெண்களும் குழந்தைகளும் உட்பட நிறைய பேர் வந்து கொண்டிருந்தார்கள். அவர்கள் அனைவரும் மிகவும் கோபத்துடன் காணப்பட்டனர். புரோகிதர் ஒருவருடைய கழுத்தின் நரம்புகள் எப்போது வேண்டுமானாலும் வெடிக்கலாம் என்ற பயத்தை ஏற்படுத்தியது. உயர் இரத்த அழுத்தம் காரணமாக இருக்கலாம். அவருடைய முகம் சிவந்தும், கண்கள் முன்னுக்குத்தள்ளியும் இருந்தன.

    பாதை இழந்தவனாக நான் ஒதுங்கி நிற்க, கோபத்தோடு வந்தக் கூட்டம், கடந்து சென்றது. ஆரவாரம் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்தது. பிறகு கேட்காமலானது.

    ‘ஹா நீ என்ன இங்கே இருக்கிறே குந்தம் விழுங்கின மாதிரி கரகரத்த ஒரு சத்தம் என் காதுகளில் விழுந்தன.

    திரும்பிப் பார்த்தபோது நான் என்னவென்று தெரியாமல் திகைத்தேன்.கைலி  மடக்கிக் கட்டி, கையில் ஒரு பீடியுடன் ஒருவன் எனக்கு நேராக நொண்டிநொண்டி வந்தான். அவரையே தான் நான் கல்லறைக்குப் போறவழில பார்த்தேன். ஒரு சந்தேகமும் இல்லை. அவரேதான். ஆனால் தோற்றமும் மொழியும் முற்றிலும் வேறு. சட்டையின் மேல் பாகத்தில் இரண்டு பட்டன்கள் போடாததால் அவருடைய பரந்த மார்பு, நிறைந்த ரோமங்களோடு வெளியில் தெரிந்தது.

    ‘தேவாலயத்திற்கு  எதிர்ப்பு அறிவிக்கப் போறத நீ பாக்கலையா? உன்னுடைய இரத்தம் கொதிக்கலையா? இல்ல நீ எங்கக் கூட்டத்தச் சேர்ந்தவன் தானே அவர் என்னை முழுசாக அளந்தார்.

    மீண்டும் நான் அவரின் முன்பு தயங்கி நின்றேன்.  மீண்டும் என் காதுகளில் கடல் ஆர்ப்பரிக்கவும், காற்று வீசவும். செந்நாய்கள் ஊளையிடவும் செய்தன.

    ‘சீக்கிரமா போகணும் இல்லைனா  அவனுக தேவாலயத்தில் புகுந்திடுவாங்க. நிறைய போலீஸ்காரங்கள இறக்கி இருக்காங்கன்னு செய்தி. இறக்கட்டும் எத்தன போலீஸ்காரங்க இருந்தாலும் அந்தக் கழுதைகளை இன்னைக்கு தேவாலயத்திற்குள்ள ஏற விடமாட்டோம். அது நிச்சயம்.’ அவர் ஆவேசத்துடன் கூறினார்.

    பீடியில் தீ அணைந்திருந்தது. அவர் சட்டை பாக்கெட்டில் இருந்து தீப்பெட்டி வெளியில் எடுத்தார்.

    ‘போக விடணுமா?’

    ‘வேண்டாம்’ நான் கூறினேன்.

    உதடுகளைக் குவித்து முகத்தை ஏதோ ஒரு வார்த்தைக் கூறுவது போலாக்கி அவர் பீடி பத்த வைத்தார் .அவருடைய மூக்கு துவாரங்கள் இரண்டும் சிம்னிக் குழாய்களாக மாறி கடும் மணத்தைக் காற்றில் கலரச்செய்தது. கஞ்சா……

    திடீர்னு நான் அதிர்ச்சியானேன்.  நான் ஆச்சர்யத்தோடு வயதானவரின் முகத்தைப் பார்த்தேன். அவருடையக் கண்களில் பிரகாசம் பரவியிருந்தது.

    ‘வெடிவைக்கத் தொடங்கிட்டாங்க.  இனி நல்லா இருக்கும். நான் வீட்டுக்குப் போறேன்.’ அவர் திரும்பி நடந்தார்.

    நொண்டியாக இருந்தாலும் நம்ப முடியாத வேகத்தில் அவர் பாதுகாப்பான தூரத்திற்கு அகன்றார்.

    நான் இறந்தவனைப் போல நின்றேன்.

    Share
  • வாசம் (மொழிபெயர்ப்புச் சிறுகதை)

    மூல நூலாசிரியர்: சி.வி.பாலகிருஷ்ணன்
    மொழி : மலையாளம்
    தமிழில்: முனைவர்.நா.தீபா சரவணன்

    முனைவர்.நா.தீபா சரவணன்
    உதவிப்பேராசிரியர்
    குமரகுரு பன்முகக் கலை அறிவியல் கல்லூரி, கோவை

    பரந்துநீண்ட வழியோரங்களில் கறுப்புநிறக் கொம்புகளும், கரும்பச்சை இலைகளும், மண்ணிற்கு மேல் நிறைய வேர்களுமாக பல வருடம் பழமையான  ஒரு பைன் மரம். அதற்குக்கீழ்  சென்று நின்றால் அதிசயமான ஏதோ ஒன்று நம்மை வந்து தொடுவது போலத் தோன்றும். பழைய கதைகளில் வருகின்ற கைகள் விரித்து  நிற்கின்ற ஒரு பூதத்தை  இரவு நேரங்களில் அது நினைவுபடுத்தும். நிசப்தமான இரவுகளில் ஒவ்வொரு  பைன் மரங்களின்  இலைகள் கொழிந்து விழும்போதும் பெரிய ஒரு முழக்கத்தைக் கேட்கலாம்.

    இலட்சுமிக்குட்டி பைன் மரத்திற்குக் கீழே, முகத்தைத் தொங்கபோட்டுக்கொண்டு உட்காந்திருந்தாள். எண்ணெய் பசையில்லாத பறந்து கிடந்த முடி, கெட்டியான பருத்தித் துணியில் பாவாடையும் ஜாக்கெட்டும். கை மணிக்கெட்டுகளில் ஒவ்வொரு கறுப்பு வளையல் கழுத்தில் எப்போதோ மந்திரித்துக் கட்டிய கறுப்பு நிறக்கயிறு.

    வழியில் நின்று கொண்டிருந்த  இலட்சுமிக்குட்டிக்கு நேராக பெருங்காற்று தூசிகள் கிளப்பிக்கொண்டு வீசின. தூசி வலைக்குள் அகப்பட்ட அவள் விடாமல் இருமினாள்.

    சில நேரங்களில் கரியிலைகளோடு மேற்குக்காற்றும் வீசியது.  இலைகள் மட்டுமல்ல தொட்டாச்சிணுங்கி பூக்களும், எருக்கஞ்செடி பூக்களும் மேற்குக் காற்றில் கலந்திருக்கும். அவையில் சில இலட்சுமிக்குட்டியின்  ஆடையிலும், செம்பட்டை முடிகளிலும் ஒட்டிப் பிடித்திருக்கும். அவள் அசையவில்லை. சில வேளைகளில் அவள் மீது பைன் மரத்தின் இலைகள் கொழிந்து விழும்.

    குயவர்களின் குடிசைகள் அங்கிருந்து வெகு தொலைவிலில்லை. குடிசைகளுக்கிடையில் சக்கரங்கள், வெயிலில் காய்வதற்காக வைக்கப்பட்ட மண்பானைகள், சேற்றின் சின்ன சின்ன கூமாரங்கள். அதற்குப்பின்னால்  நதிவரை சதுப்பு வயல்கள். இலட்சுமிக்குட்டி சதுப்பு வயல்களில் நண்டும், மீனும் தேடி அலைவதுண்டு. எப்போதும் தனியாக காக்கைகளுடனும், நாரைகளுடனும், பருந்துகளுடனும் பேசிக்கொண்டு அவள் நடப்பாள்.  ஆற்று வழியாக சங்குகளை நுரைத்து நகர்கின்ற படகுகளுக்கு நேராக அவள் சத்தமிடுவாள். நதியோரங்களில் வளர்ந்த புதர்களிலிருந்து பூக்களைப் பறித்து முடிக்குள் திருகுவாள். அப்படி அலைந்து திரியக்கூடாதுனு  பாத்திரங்களை எடுத்திட்டுக் கிளம்பும்போதெல்லாம் அம்மாளு அவகிட்ட சொல்லுவாள்.

    “ நான் எங்கேயும் போக மாட்டே’ சாணிபோட்டு மெழுகப்பட்டத் திண்ணையிலிருந்து அவள் சொல்லுவா.

    அம்மாளு பக்கத்து குடிசையில் பாட்டியம்மாகிட்ட அவமேல எப்பவுமே  ஒரு கவனம் வேணும்னு சொல்லிட்டே இருப்பா.  பத்து, பதினேழு வயசானாலும் புத்தி சுவாதீனம் குறைவு. பாட்டிம்மா தன்னோட ரெண்டு கண்களும்   அவ மேல தா இருக்கும்னு  உறுதியளிப்பா.  ஆனா பாட்டிம்மாவுக்கு தூரப்பார்வை மிகக்குறைவு. அதோடு எப்பப் பார்த்தாலும் தூங்கிட்டுதா இருப்பாங்க.

    பாட்டிம்மாவெ  எப்படி தன் வசப்படுத்தணும்னு  இலட்சுமிக்குட்டிக்கு நல்லாத் தெரியும். நண்டு சுட்டுக்கொடுத்தா போதும்.

    தீக்கனலில் போட்டு நண்டு சுட்டெடுக்கற வாசம் கேட்டா பாட்டிம்மாவுக்கு பொறுமை இருக்காது. தொண்ணூறு வயசு முடிஞ்சுது இப்போதும் நண்டு மேலயும் மீன்மேலயும் உள்ள விருப்பம் தீரவே இல்ல.

    சுட்டெடுக்கப்பட்ட நண்டின் ஓடுகளை அடர்த்தியெடுக்கும்போது போது, பாட்டிம்மாவுக்கு பழைய நாட்கள் ஞாபகத்துக்கு வரும். சதுப்பு நிலங்களிலும், ஆற்றோரங்களிலும் அலைந்து திரிந்து பாட்டியம்மாவும் நிறைய நண்டுகளை பிடித்ததுண்டு. ஒரு தடவ பெரிய ஒரு நண்டு கைத்தலத்தில் இறுக்கின வலி தொண்ணூறு வயசாகியும் போகல. நண்டு ஓட்டையிட்ட கைத்தலத்தை நீட்டிப்பிடித்துக் கொண்டு,  சதுப்பு வயல்கள் தாண்டி குடிசைக்கு கொடுங்காற்றின்  வேகத்திற்கு ஓடி வந்தாள். நினைத்துப்பார்த்தா சிரிக்காம இருக்க முடியாது அந்த நண்டோட ருசியோ அதுவும் இப்போ வர மறக்க முடியாது அடிக்கடி இலட்சுமி தா அத ஞாபகப்படுத்திக் கொண்டிருந்தாள்.

    அம்மாளுக்கும் பொக்கனுக்கும் லட்சுமி ஒரே மகளல்ல. அவளுக்குக் கீழே அஞ்சு பேரு. மூணு பேரு பக்கத்துல இருக்குற எல்.பி ஸ்கூலுக்கு போறாங்க. ரெண்டு பேரு ஹைஸ்கூலுக்கும். அவங்கெல்லாம் காலையில போனா சாயங்காலந்தா திரும்ப வருவாங்க. அவங்க போறதுக்கு முன்னாடியே அப்பாவும், அம்மாவும் தூக்குப்போசி எடுத்துட்டு போயிடுவாங்க. தினமும் சந்தையும் இருக்கு.

    இலட்சுமிக்குட்டி அவங்ககூட போகமாட்டா அவளுக்கு விருப்பம் சதுப்பு வெளிகளில சுற்றி நடப்பதில்தான்  மூளை வளர்ச்சி அடையாத பொண்ணு. அப்படி நடக்கலாமா? மூள வளர்ச்சி அடையலேன்னாலும் பதிமூணு வயசில் அவள் ருதுவாகியிருந்தாள்.

    ‘ருதுவானப் பெண் அவள்’ அம்மாளு , பொக்கங்கிட்ட அடிக்கடி சொல்லுவா.

    அவன் ஆற்றோரத்திற்குப் போய் கல்யாணியின் காய்ச்சின சாராயம் குடித்துவிட்டு வந்த நேரம் என்றால் அது கேட்டா போதும் கோபம் வரும்.

    ‘நீதானே பெத்த?’

    மூளை வளர்ச்சி இல்லாத ஒரு மகளை பெத்ததுக்கு அவன் அம்மாளுவுக்கு ஒருபோதும் மன்னிப்பு அளிக்கத் தயாராகவில்லை

    ‘நான் பெத்ததா?  அது சரி அப்போ உங்களுக்கு இதுல பங்கில்லையா?’

    அம்மாளு எதிர்த்து கூறுவாள்,

    ‘பங்கு……….. த்தூ……..’

    அம்மாளு ஆவேசமாக நெருங்குவா அடுப்படில இருக்கற  நேரம்பார்த்து கலகம் தொடங்கினாங்கன்னா கையில ஒரு விறகு கொள்ளியோ, கரண்டியோ இருக்கும்.

    “ம்ஹூம் என்ன?’

    ‘பல தடவ சொன்ன விஷயந்தான்’

    இலட்சுமிக்குட்டி அவனோடதல்ல.’

    ‘வேற யாரோடது?’

    அது அவனுக்குத் தெரியாது சந்தைக்கும், திருவிழாவுக்கும் போறவதானே அம்மாளு. பல ஆம்பளகளோட அவ பழகுவதுண்டு.

    ‘சொல்லு யாருடையது?’

    ‘அது உனக்குத் தானே தெரியும்.’

    ‘என்னோட நீலிபகவதி தாயே’

    உள்ளம் கலங்கியுள்ள அந்த பேரொலியில் குயவக் குடிசைகள் அலறும். ஆனா பொக்கனுக்கு ஒரு அசைவும் இருக்காது.

    ‘நீலியார் பகவதி உண்மை அறியாதவள் அல்லவே.!’ பூசப்படாத மண் சுவரில் சாய்ந்து உட்கார்ந்து அவன் புகை விடுவான். மாரிலடித்து அழுகின்ற அம்மாளுவை ஆறுதல்படுத்த  பக்கத்து வீட்டுப் பெண்கள் அதற்குள் பாய்ந்து வந்திருப்பார்கள். பாட்டிம்மா பக்கத்துக் குடிசையில முன்னாடி உட்காந்து பொக்கனை சத்தமாக குத்தம் சொல்லிக் கொண்டிருப்பா.

    என்ன பார்க்கிறோம் என்ன கேட்கிறோம் என்று உணராமலே இலட்சுமிக்குட்டி.

    அவ தலைல களிமண்ணுனு பொக்கன் சொல்லுவா.

    ‘எடுத்து சட்டியும் பானையும் செஞ்சுக்கோ’ பாட்டிம்மா நல்ல சூடான பதிலடி கொடுப்பா.

    ‘நேத்தும் நண்டோ மீனோ கொண்டு வந்திருப்பா’

    ‘போடா ஒனக்குத் தெரியாது. அவ புத்திசாலி பொண்ணுதா’

    ‘ம்ஹும்’

    ‘அஞ்சாம் வகுப்பு வர படிச்சவதானே அவ’

    ‘பள்ளிக்கூடத்துக்கு  அனுப்பற வேலய நா செஞ்சிட்டே அவ ஏதாவது படிச்சாளா?’

    ‘ரெண்டாங்கிளாஸ்ல படிச்ச பாட்டு அவ நேத்துக்கூட எங்கிட்ட பாடி காமிச்சா என்ன ஒரு ஞாபக சக்தி.’

    சேற்று வயல்களில் நண்டும் மீனும் நீந்தற சத்தம் அப்போது பொக்கனுக்குக் கேட்க முடிந்தது. இலட்சுமிக்குட்டி அப்போதுவரை ஒரு துண்டு  கிள்ளித் திங்க கூட அவ அப்பாவுக்குக் கொண்டு வந்ததில்ல. அந்த அழுத்தம் அவருக்குள்ளும் இருந்தது. எதுக்குக் கொண்டு வரணும்? அப்பா அல்லவே!’ வேண்டாம் எனக்கொன்னும் கேட்க வேண்டா நான்தா அவளோட அப்பா அல்லவே.  அவன் மரணித்த நிர்விகார எண்ணங்களுக்குள் கடந்து போவான். மெதுமெதுவாக இருள் வந்து குயவர் குடிசைகளை மூடும். புணருகின்றவர்களின் முக்கல், முனகல்  தவிர வேறொன்றும் கேட்பதற்கில்லை. அப்படி  ஓர் இரவு விடிந்தபோது இலட்சுமிக்குட்டி மாசமாய் இருப்பது அம்மாளுவுக்குத் தெரிய வந்தது. இலட்சுமிக்குட்டிப் பாயில் படுத்திருந்தாள். அவளுடைய அடி வயிறு கனமானதாக இருந்ததை அம்மாளு அறிந்து கொண்டாள். சந்தேகம் தீர்க்க அம்மாளு அவளுடைய அடிவயிற்றில் தொட்டுப் பார்த்தாள். அடுத்த நொடி நீலியார்பகவதி அம்மாளை சத்தமாகக் கூப்பிட்டு விட்டாள். நாக தேவதைகளை அழைத்தாள். குயவக்குடிசைகள் பதைபதைத்து உணர்ந்தன.

    அதற்குள் அம்மாளு இலட்சுமிக்குட்டியை வாசலுக்கு இழுத்துத் தள்ளியிருந்தாள்.

    “எனக்குத் தெரியாது………. எனக்குத் தெரி   யாது’ இலட்சுமிக்குட்டி அழுது கொண்டு சொன்னாள்.

    ‘பொழுது விடியல. அதுக்கு முன்னாடியே தொடங்கியாச்சு.’ பாட்டிம்மா, தடி கையில் எடுப்பதற்கு முன்பாக அம்மாளுவைப் புலம்பினாள். ‘இப்படி இருப்பாங்களா ஒரு அம்மா, இந்தப் பொண்ணையும் அவ வயித்துல சுமந்தவ தானே!, நொந்து பெத்தவ தானே!,  முலையூட்டினவதானே!,  அப்படி பலதையும் புலம்பிக் கொண்டு பாட்டிம்மா தடி ஊன்றிக்கொண்டு வெளியில் இறங்கினாள்.

    பொக்கணும், அம்மாளுவும்  பேய் பிடிச்சவங்க மாதிரி   ஆடித் தள்ளனாங்க இலட்சுமிக்குட்டி தரையில் கிடந்துத் துடித்தாள்.

    ஓடிவந்த குயவர் பொக்கனப்பிடித்துத் தள்ள முயற்சித்தார்கள். குயத்திகள் அம்மாளுவையும் தள்ளினார்கள். பாட்டிம்மா குனிந்து உட்கார்ந்து  இலட்சுமிக்குட்டியைத் தன்னோடு சேர்த்து அணைத்தாள்.

    ‘கொஞ்சம் அடங்கு அவ செத்துருவா”

    ‘சாகட்டும்’

    ‘வேண்டாம் இப்படி ஒரு மூதேவிய இங்கே’

    ‘என்ன தப்பு செய்தா இவ?’

    ‘அவளோட வயித்துலப் பாருங்க.’

    பார்வைக் குறைபாடுடையக் கண்களால் பாட்டிம்மா இலட்சுமிக்குட்டியைப் பார்த்தாள். நடுங்குகின்ற வலது கை அவளுடைய வயிற்றின்  மேல் பாகமாய் நகர்ந்தது. வயிறு கனமுடையாதத்தான் இருக்கிறது என்று பாட்டிம்மாவுக்கும் தோன்றியது.

    “மகளே எங்கிட்ட சொல்லு யாரு? பாட்டிம்மா கேட்டாள்

    ‘நெசமாவே எனக்குத் தெரியாது பாட்டி……….மா’

    விதும்புதலுக்கிடையில் இலட்சுமிக்குட்டி சொன்னாள்.

    பாட்டிம்மாவுக்கும் கோபம் வந்தது.

    ‘அப்புறம் உனக்குத் தெரியாமலா?. உனக்குத் தெரியாமத்தா ஒரு ஆம்பள உன் மேல படுப்பானா?”

    இலட்சுமிக்குட்டி குழம்பினா.  பாட்டிம்மா அவளோட ரெண்டு தோள்களையும்  பிடித்தாள்.

    ‘அவ ஒங்கிட்ட சொல்லி இருப்பா யார்கிட்டயும் சொல்லக் கூடாதுன்னு, சொன்னா கொன்னுடுவேன்னு இல்லயா?’

    ‘இல்ல’

    ‘பணம் கொடுத்தானா ஒனக்கு?’

    ‘இல்ல’

    ‘ எப்படி இருப்பா அவ ‘

    இலட்சுமிக்குட்டியோட நினைவுக்கு ஒரு வாசம் அப்போதுதான் கடந்து வந்தது. ஒரு தேகத்தின் வாசம். அது அந்த நிமிடமே கொடூரமானது. இலட்சுமிக்குட்டி அந்த வாசத்தை உட்கொள்ள மூக்குகளை விரித்துக்கொண்டு அங்கும் இங்கும் முகத்தை நீட்டினாள்.

    ‘என்னடி புள்ள பாட்டிம்மா அவளுடைய செய்கைகளைப் பார்த்துட்டு அதிர்ச்சிக்கு ஆளானாள்.

    ‘ஒரு வாசம்…………….’ அவள் சொன்னாள்.

    தன்னுடைய திடுக்கத்தை சுற்றிலும் வேடிக்கைப்பார்த்து நிற்கின்றவர்களுக்கு நேராகப் பார்த்தாள்.  அம்மாளு சாப வார்த்தைகளுடன் இலட்சுமிக்குட்டியைப் பிடித்து உயர்த்தினாள்.  அவள் நகர்ந்தாள். கருநொச்சிகளுக்கிடையிலிருந்து அம்மாளு அவளை உதறித் தள்ளினாள்.

    ‘போ எங்கேயாவது போ…….. நாசமாப் போனவளே இலட்சுமிக்குட்டி குப்புற அடிச்சு விழுந்தாள். அம்மாளு  அழுது கொண்டே பின்னாடி நகர்ந்தாள். இலட்சுமிக்குட்டி மெதுவாக எழுந்தாள். வேறு யாரும் அங்கு செல்லவில்லை. பாட்டிம்மாவும் அசையவில்லை.

    ‘அந்த வாசம்……… எனக்கு நல்ல உறுதியாத்தெரியும்.  பைன்மரங்களுக்குக் கீழே நடக்கும்போது இலட்சுமிக்குட்டி தனக்குத்தானே புலம்பினாள்.

    பைன்மரத்திலிருந்து இலைகள் கொழிந்து விழுந்தன. அகன்ற பாதை வழியாக ஒருவன் நடந்து வந்தான்.

    இலட்சுமிக்குட்டி சிரமத்தோடு எழுந்து அவனுக்கு நேராக நடந்தாள். அவள் தன்னுடைய தேகத்தை முகர்ந்த போது அவனுடைய முகம் வெளிரியது.

    Share
  • மலபாரில் சிக்கார் (மொழிபெயர்ப்புச் சிறுகதை)

    மலபாரில் சிக்கார் (மொழிபெயர்ப்புச் சிறுகதை)

    மூல நூலாசிரியர்: சி.வி.பாலகிருஷ்ணன்
    மொழி : மலையாளம்
    தமிழில்: முனைவர்.நா.தீபா சரவணன்
    உதவிப்பேராசிரியர்
    குமரகுரு பன்முகக் கலை அறிவியல் கல்லூரி, கோவை.

    யாரைக் கொல்லலாமென்று ஆலோசித்து இருட்டைப்பார்த்துக் கொண்டிருந்தபோது ஒரு துர்மந்திரவாதியின் ஜல பாத்திரத்தில் தெளிவது போல அவர்களுக்கு ஒரு முகம் தெளிவானது. கல்லொடைக்கும் சாத்துவின்  இருளான முகமே அது. எப்போதும் போல ஒரு பாட்டில் கள்ளு குடித்துவிட்டு கள்ளின் நிறமுடைய ஸ்வட்டரைக் கையிலேந்திக்கொண்டு வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருக்கும் சாத்துவுக்காக காத்துக்கொண்டு அவர்கள் பதுங்கி நின்றார்கள். ஆனால் சற்று நேரமாகியும் சாத்து அது வழியாக வரவில்லை. அவர்கள் அசௌகர்யத்துடன் காணப்பட்டனர்.

    ‘சாத்தண்ணன் முன்னாடியே போயிருப்பாரு’ பவித்ரன் சொன்னான்.

    முதல் நாள் அவரு 7:00 மணிக்குத்தான் போனாரு என்பதை சிவதாசன் நினைவூட்டினான்.

    ‘இன்னக்கி ஒரு வேள வேலைக்குப் போய் இருக்க மாட்டாரு. நமக்கு வீட்டுக்குப் போலாம் நந்தன் கத்தியால கழுத்தை சொரிவதற்கிடையில் சொன்னான்.

    ‘வேலைக்குப் போலன்னாலும் சாத்துஅண்ணன் சாயங்காலம் கள்ளுக்கடைக்குப் போகாம இருக்க மாட்டாரு.’ சுதாகரன் கூறினார்.

    “ஆமா. அது சரிதான் சாத்துஅண்ணனுக்கு தினமும் கள்ளு குடிக்காம இருக்க முடியாது’. கர்ணன் சிரித்தான்.

    இருந்தாலும் நாம  வீட்டுக்குப் போய் கேட்கலாம். அங்கேயா இருந்தா  சீக்கிரமா காரியம் சாதகமாகும். நந்தன் சொன்னான்.

    அதுக்கும் யாரும் ஒத்து வரல அவங்க கல்லொடைப்பவரான சாத்துவோட வீட்டை இலட்சியமாக்கி நடந்தனர். கார்த்திகை மாத இரவு குளிரத் தொடங்கி இருந்தது.

    கல்லொடைப்பவரான சாத்துவின் மூத்தமகள், வனஜாவின் அஞ்சு வயசான மகனுக்கு வெளியில் சின்னதா ஒரு சீமெண்ணெய் விளக்கிற்குப் பக்கத்தில் உட்கார்ந்து மாதுவம்மா கதை சொல்லிக் கொண்டிருந்தாள். மாதுவம்மா சாத்துவோட அம்மா. வயசு எண்பதை நெருங்கி இருந்தது.

    ‘சாத்து அண்ணா இல்லயா?” வெளியில் இருந்து ஒரு கேள்வி எழுந்தது.

    மாதுவம்மா கதையை நிறுத்தினாள்.

    ‘யாரது?” மாதுவம்மா கேட்டாள்.

    இருட்டுல வெளில யாருன்னு மாதுவம்மாவுக்குத் தெரியல.

    சாத்துண்ணாகிட்ட ஒரு வேலை சொல்லணும். தான் யார் என்பதை வெளிப்படுத்தாமல் பவித்ரன் கூறினான்.

    ‘சாத்து  ஆஸ்பத்திரிக்குப் போயிருக்கா. மாதவிக்கு உடம்பு சரியில்ல.’ ஆஸ்பத்திரியில இன்னைக்கு அட்மிட் ஆக்கியிருக்கு. ஆப்ரேஷன் தேவப்படும்னு  சொல்லி இருக்காங்க.’ மாதுவம்மா கூறினாள்.

    பவித்ரன் திரும்பினான்

    ‘யாரு வந்து கேட்டாங்கனு சொல்லணும்? மாதுவம்மா சத்தமாகக் கேட்டாள்.

    நான் பார்த்துக்கிறேன். பவித்ரன் இருள் வழியாக நடந்து அகன்றான்.

    மாதுவம்மா தான் கூறிக்கொண்டிருந்த கதைக்குத்திரும்பினாள். பவித்ரன் மற்றவர்களிடத்துச் சென்றான். சாத்து சற்று தூரமாக உள்ள ஆஸ்பத்திரியில் தனது மனைவி மாதவி காபியில் ரொட்டித் துண்டு முக்கி உண்பதை பார்த்துக்கொண்டு பக்கத்தில் இருந்தான்.

    ‘இனி இப்போ என்ன செய்யறது.’ கர்ணன் இருட்டில் நடக்கும் போது தனக்குத்தானே பேசினான்.

    ‘சாத்துஅண்ணாவோட மகளோட மகனிருக்கானே அங்கே…….. அங்கே போய் அவனைக் கொன்றாலோ?’ சுதாகரன் கேட்டான்.

    ‘அவ சின்னப் பையனாச்சே’ நந்தன் சொன்னான்.

    அவனோட அப்பாவ  கிடைச்சாலும் போதும். சிவதாசன் சொன்னான்.

    சனிக்கிழமை ராத்திரில   கொஞ்சம் இங்க வாங்க. கர்ணன் சொன்னான்.

    யாரை கொல்லலாம்னு அவங்க மறுபடியும் வட்டமாக உட்கார்ந்து யோசிச்சிட்டிருக்கும்போது ஒரு டார்ச் வெளிச்சம் அவர்களுக்கு நேராக வந்தது. டவுனில் கண்ணாடி மாத்தி வாங்கப் போன நாணு மாஸ்டர் ஊருக்குத் திரும்பி வந்துட்டார். வலது கையில் டார்ச் லைட்,  இடது கையில  ஒரு பை.

    கண்ணாசுபத்திரிக்குப் போயி பரிசோதிச்சு புதிய கண்ணாடியும் வாங்கிட்டு பஸ்ஸ்டாண்டுக்கு நடக்கும்போது அதுக்குப் பக்கத்தில ஒருபக்கம் வெங்காயமும் உருளைக்கிழங்கும் மலிவு விலைக்கு விக்க வெச்சிருக்கறத  அவரு பார்த்தாரு. ரெண்டையும் ஒவ்வொரு கிலோ வாங்கினார்.

    நம்மூரு விலையோட ஒப்பிட்டுப் பார்த்தா ஏழு ரூபாய் லாபம். ரெயில்வே ஓவர்பிரிட்ஜ் ஏறும்போது எதிர்பாராமல் பழைய தோழி ஒருவரை சந்தித்தார். பல வருடங்களுக்கு அப்புறம் உள்ள சந்திப்பு அதோடு அவர் மிக சந்தோஷவான் ஆனார்.

    பஸ் ஸ்டாண்டில் பேக்கரிக்கு முன்பாக நிக்கும்போது அவருக்கு சின்ன மகளின்  நினைவு வந்தது. அவளுக்காக  அவர் ஒரு கிண்ணப்பத்தை வாங்கினார்.

    பஸ்ஸ விட்டிறங்கி பையை தூக்கிக்கொண்டு வீட்டைப் பார்த்து நடந்தார்.

    “யாரது அங்கே? அவர் டார்ச் அடித்துக்கொண்டு கேட்டார்.

    நாணுமாஸ்டர் என்று பவித்ரனோடச் சத்தம் கேட்டு உணர்ந்தான்.

    ‘நான் தான் சாரே பவித்ரன்.’ அவன் சொன்னான்.

    ‘நீ என்ன இங்கே இருட்டில அவர் கேட்டார்.

    ‘சும்மாதா உட்கார்ந்திட்டு இருக்கே’ அவன் சொன்னான்.

    ஓர் இளைஞன் இருட்டுல சும்மா இருக்கிறது அவ்வளவு நல்ல காரியம் இல்லை என்று சிந்தனையுடன் அவன் நடக்கத் தொடங்கிய போது அவருக்கு வேறு ஒரு யோசனையும் தோன்றியது.

    ‘நீ எம்ப்ளாய்மென்ட் எக்ஸ்சேஞ்சுக்கு போனியா?” அவர் கேட்டார்.

    ‘இல்ல’ அவன் சொன்னான்

    ‘அது சரி உங்க அப்பாகிட்ட நேத்து கூட சொல்லிருந்தேனே’ அவர் குரல் உயர்த்தினார்.

    அவருக்கு அவன் மேல கோபம் வந்தது இந்தக் காலத்தில் ஒரு வேலை கிடைக்கிறது கொஞ்சம் கஷ்டமானதுனு தெரியாமல் இல்லை. இருந்தாலும் நம்ம பக்கமிருந்து ஒரு முயற்சி வேண்டாமா? பாறக்கண்டியில் வேலுவோட மகன் பவித்திரனுக்கு வேலைய வெச்சு நீட்டிட்டு ஒரு அரசு பிரதிநிதியும் இங்கே வர மாட்டாங்களே?’

    நாளைக்காவது போய் எம்ப்ளாய்மென்ட் எக்ஸ்சேஞ்சில் ஒரு ரெஜிஸ்டர் செய்யணும்னு பவித்ரங்கிட்ட கண்டிப்போடு சொன்னதுக்கப்புறம் நாணு மாஸ்டர் தனக்கு நேராக உள்ள வழியைப்பார்த்து நடந்தார். இருட்டு வழியாக அவருடைய டார்ச்சின் வெளிச்சம் வயல்வெளிகளில் நகர்ந்தது

    ‘நமக்கு அவனெத் தூக்கனாலோ.?’ கர்ணன் ஆவேசத்தோடு மத்தவங்ககிட்டக் கேட்டான்.

    வேண்டா சாரே பவித்ரன் திடிர்னு சொன்னான்.

    ‘சாரே யுதிர்ஷ்டரும், அர்ஜுனரும், பீமரும், துரோணாச்சாரியார் கிட்ட போர் செய்யலாமா?’ குருவை கொன்றோம் என்ற வருத்தத்திற்கு அவசியமில்லை என்றுதானே துரோணர் யுத்தத்திற்கு முன்பு தன்னை வந்து பார்த்த யுதிர்ஷ்டங்கிட்ட  சொன்னாரு. கர்ணன் எதையோ எண்ணிக்கொண்டு சுற்றிலும் உள்ளவரைப் பார்த்தார். இருட்டில் யாரோட முகமும் தெளிவாகத் தெரியவில்லை.

    ‘அது சரிதா நந்தன் சொன்னான். அவன் தன்னுடைய கத்தியை மீண்டும் விரித்தான். அதன் வாய்ப்பக்கம் மின்னியது.

    முதல் குத்து ஒன்னோடதா  இருக்கட்டும் கர்ணன் பவித்ரங்கிட்ட சொன்னான்.

    கையும் காலும் வெட்டிக்கொத்தி தனித்தனியாக்கணும்.சிவதாசன் கூறினான்.

    ‘தலையெ வெட்டி மதில்சுவரு மேல வைக்கலாம்’ சுதாகரன் சொன்னான்

    அவர்கள் மொத்தமாக வயல் வரம்பில் நகருகின்ற டார்ச் வெளிச்சத்திற்கு நேராகப் பார்வையை செலுத்திக்கொண்டு வேகமாக நடந்தனர்.

    வரம்பில் விட்டில் பூச்சிகளின் இரைச்சல் ஓயவில்லை. இருபக்க  வயல்களிலுமிருந்து சாணியினுடையவும், சேற்றினுடையவும் நாற்றம் மிகுந்தது. நாணு மாஸ்டர் அதை கனிசமாக ஏற்றார். ஒரு விட்டில் பூச்சி குறும்பு காட்டும் விதம் அவருடைய இடதுகாலில் இடறியது.  புதிய கண்ணாடி அணிந்ததிலும், மலிவு விலைக்கு வெங்காயமும், உருளைக்கிழங்கும் வாங்க முடிந்ததிலும், பழைய ஒரு தோழியை பல வருடங்களுக்குப் பிறகு எதார்த்தமாகக் காண முடிந்ததிலும், ஒரு விட்டில் பூச்சியின் ஸ்பரிசம் ஏற்றதிலும் உள்ள மனமகிழ்ச்சியோடு அவர் நடந்தார்.

    Share
  • பயணமும் பணமும் (சிறுகதை)

    பயணமும் பணமும் (சிறுகதை)

    முனைவர். நா. தீபா சரவணன்
    உதவிப்பேராசிரியர்
    குமரகுரு பன்முகக் கலை அறிவியல் கல்லூரி, கோவை

    ‘விஸ்வா விடு நாங்க எடுத்துக்கறோம். நீ இந்த அளவுக்கு எங்களுக்கு உதவுறதே பெரிய விஷயம். பெட்டிய விடு.’

    ‘விடுங்க பெரியப்பா. உங்களுக்கு செய்யறதுல எனக்கு என்ன சங்கடம். விடுங்க நான் வண்டில கொண்டு போய் வைக்கிறேன் என்றான் விஸ்வா.

    ‘கிளம்பிட்டீங்களா சித்தப்பா……….. என்று கேட்டுக்கொண்டே அவசரமாக ஆட்டோவை விட்டு இறங்கினான் கண்ணன்.
    ஒரு வாடக வந்துருச்சு  சித்தப்பா அதுதான் கொஞ்சம் லேட்டாயிடுச்சு.

    ‘பரவால்ல கண்ணா அதுதா எங்களுக்கு விஸ்வா இருக்கானே எதுன்னாலும் பாத்து பாத்து செய்யறதுக்கு அப்பறம் எங்களுக்கு என்ன  கவல.’’

    ‘ அப்பா எப்படி இருக்காரு இப்ப  துணி தெச்சிட்டு இருக்காரா? தைக்கிறதுக்கு வருதா ?’’

    ‘அப்பப்போ ஏதாவது தைப்பாரு.  பெருசா  ஒண்ணுமில்ல சித்தப்பா. அவராலையும் இப்போ முடியறதில்ல.  என்ன கடைசி காலத்துல ஒரு தடவையாவது வெளிநாடு எங்கயாவது கூட்டிட்டு போடான்னு சொல்லிகிட்டே இருப்பாரு .

    ‘அவனுக்கு என்ன சொல்லுவா.   பொழைக்கத் தெரியாம பொழைச்சாச்சு. யார் பேச்சயும் கேட்கவும் மாட்டா. ஆனா ஆசை மட்டும் நெறைய இருக்கு.’

    ‘ஆமா சித்தப்பா.  பார்க்கலாம். சரி நீங்களும் சித்தியும் எவ்வளவு நாள் கொடைக்கானல் தங்க போறீங்க. விஸ்வா அண்ணாவும் தங்கறாரா?’

    ‘அவ இல்லாம நாங்க எங்க போவோம். நீயும் தானப்பா எங்க கூட தங்கறேன்னு’ விசுவாவை பார்த்துக் கேட்டார் கமலநாத்.

    ‘வீட்ல சுனிதா கிட்ட சொல்லிட்டு தான்  வந்தே பெரியப்பா’ என்று கூறியவாறு பெட்டிகளை எடுத்து அவன் கார் டிக்கில வைத்தான்.

    ‘விஸ்வாண்ணா கார்லயே போறீங்களா?’

    ‘ஆமா அவன் சொன்னா கேட்க மாட்டேங்குறா. எங்கார்ல போலாங்கறா’

    ‘சரி சித்தப்பா பார்த்து போயிட்டு வாங்க. கண்ணன் கிளம்பினான்.’

    வேகமாக வீட்டை அடைந்த கண்ணனை ஏம்ப்பா லேட்டா வர்றே என்ற மிரட்டல் தொணியில் தையல் மெஷினை மிதித்துக் கொண்டே மருதாசலம் கேட்டான்.

    ‘சித்தப்பாவும் சித்தியும்  இன்னக்கி  கொடைக்கானல் சுத்திப்பார்க்க கிளம்பறாங்க. சில ஐட்டம்ஸ் வாங்கிட்டு வர சொன்னாங்க. சரி வர வழி தானேனு வாங்கி கொடுத்துட்டு வழி அனுப்பி வெச்சிட்டு வர்றேன் .’

    ‘தனியாவா?’

    ‘இல்ல விஸ்வாண்ணாவும் கூடப் போறாரு. அவரு கார்ல தான் இவங்க போறாங்க. அந்த அண்ணன் போகாம இருப்பாரா?’

    ‘ம்ஹூம் கொடுத்து வச்சவங்க பைய, பிரான்ஸ்ல இருந்து மாசாமாசம் காசு அனுப்புறான். இங்கே எல்லாத்தையும் விஸ்வா தன் பிள்ளையா இருந்து கவனிச்சுக்கறா. ம்ஹூம் அதுக்கும் ஒரு கொடுப்பின வேணும்.’

    கை கால் மூஞ்சி கழுவிட்டு வர்றதுக்குள்ள லதா டிஃபன் எடுத்துவைத்தாள். மகள் கீதா ஹோம் வொர்க்  எழுதிக் கொண்டிருந்தாள். கண்ணனுக்கு மனக்கஷ்டமாக இருந்தது. மனசுக்குள்ள நெனச்சுகிட்டா சித்தப்பா, பசங்கள நல்லா படிக்க வெச்சாரு. வெளிநாட்டில் செட்டில் ஆகியிருக்காங்க. நமக்குத் தெரிஞ்சது இந்த ஆட்டோ தொழில் மட்டும்தான். கவர்ன்மென்ட் பள்ளில பத்தாவது வர படிக்கவெச்சாரு.  இதுல எப்ப பார்த்தாலும் அவங்களோட நம்மள வச்சு ஒப்பிட்டு பார்த்துட்டு இருக்கிறது வேற ஒரு கொறச்சல். கோபந்தா வருது. வேற வழி சகிச்சிகிட்டுதானே ஆகணும். சாப்பிட்டு படுக்கையறைக்கு சென்றவன் இருந்த மன வருத்தத்தில் கீதா சாப்பிட்டாளா என்று கூட கேட்கவில்லை. படுத்துத் தூங்கி விட்டான்.

    2

    கொடைக்கானல் மாலை 4 மணிக்கு வண்டி போய் சேர்ந்தது.  ஹோட்டல் அறையில் பெட்டிகளை எடுத்து வைத்துவிட்டு அவர்களை சிறிது நேரம் ஓய்வெடுக்கவிட்டு, வேறொரு அறைக்குச்சென்றான் விஸ்வா.

    ‘ஏங்க இந்த விஸ்வா நம்ம பெத்த புள்ள மாதிரி நாம எப்ப கூப்பிட்டாலும் ஓடிவரா நாம பெத்த புள்ள கூட நம்மள இந்த மாதிரி அக்கறையா கவனிப்பானானு தெரியல.

    ‘ஆமா அவ அப்பா இறந்தது அவனால ஏத்துக்க முடியல. இன்னும் கொஞ்ச நாளு இருப்பாருன்னு எதிர்பார்த்தா. அதனால் தான் சின்ன ஹாஸ்பிடலா இருந்தாலும் நல்ல ஹாஸ்பிடலா அட்மிட் பண்ணி பாத்துக்கிட்டா.’

    ‘ஆமா அவனுக்கு அப்பா மேல பாசம் அதிகம்தா. தங்கவேல் அண்ணனும் அப்படித்தான் என்னன்னாலும் புள்ளைக்கி புள்ளைக்கினு யோசிப்பாரு. அப்படியே யோசிச்சு கட்டுனதுனால தான் இப்ப இவ்வளவு பெரிய சொந்த வீட்ல இருக்கா.’

    ‘சரிதா நீங்க சொல்றது அவன் பொண்டாட்டி சுனிதாவும் மாமியா சாகுற வரைக்கும் நல்லா தா பாத்துகிட்டா. அந்த அம்மா கழுத்தில் கெடந்த எட்டு பவுன் தாலியை கூட நாத்தனாருக்கே கொடுத்துட்டா. ஆனா அந்த அம்மா கிட்ட எப்படியும் அதை சேர்த்தாம 40 பவனாவது இருந்திருக்கும். அது யாருக்கு போச்சுன்னு தெரியல .’

    ‘நமக்கு எதுக்கு அதெல்லாம் அது அவங்க ஃபேமிலி விஷயம். விஸ்வநாதன் நம்மகிட்ட எப்படி இருக்கான்னுதா பாக்கணும். ஞாயிற்றுக்கிழமையானா நோன்வெஜ்ஜோட  காலைல  வந்து நிக்கறா. எங்க போறதா இருந்தாலும் நம்மளையும் அவங்க பேமிலியோட சேர்த்து கூப்பிட்டு போறான். என்ன வேணும்னாலும் சொன்னா உடனே வாங்கிட்டு வர்றான். டாக்டர் கிட்ட போகணும்னா கூட்டிட்டு போறா. ஃபோன் பண்ணனா உடனே வந்து நிக்கறா. இதை விட என்ன வேணும். போய் படுத்து தூங்கு.’

    கொடைக்கானலில் ஒரு வாரம் சுத்தி பார்த்துவிட்டு வீடு திரும்பினர். கமலநாதனும், தங்கவேலுவும் பால்ய நண்பர்கள். தங்கவேலு ஒரு வயது தான் சின்னவன். இருவரும் ஒரே தெருவில் குடியிருந்தவர்கள். பிறகு தங்கவேலுவிற்கு அரசு வேலை கிடைத்து விட்டது. கமலநாதனுக்கு அதே  பர்னிச்சர் வேலைதான். பர்னிச்சர் என்றால் லட்சங்கள் புரளும் வியாபாரம். பெரிய பெரிய விலை உயர்ந்த மரங்களை வியாபாரிகளுக்கு கைமாத்தி விடுற வியாபாரம். அவருக்குனு ரெகுலர் கஸ்டமர்ஸ் இருந்தாங்க. யாரு எப்ப வருவாங்க எப்படி  டீலிங் பேசுவாங்கன்னு தெரியாது. ஆனா பிசினஸ் போயிட்டே இருக்கும் அந்த சில டெக்னிக்ஸ யாருக்கும் சொல்லியே தர மாட்டார்.

    3

    கண்ணன் ஆட்டோ ஓட்டுன காசை கொஞ்சம்  பெரிய ஸ்டீல் உண்டியல் வாங்கி அதில் போட்டு வச்சான்.  சரி அப்பாவுக்கும் ஒரு ஆசை தானே விமானத்தில் போய் ஏதாவது ஒரு வெளிநாட்டில் போய் இருந்துட்டு வரணும்னு. துபாய் தான் பக்கமா இருக்கு அங்கே கூட்டிட்டு போலாம். அதுக்கு தான் உண்டியல்ல காசு சேர்த்துக்கொண்டிருந்தான்.  சித்தப்பா பசங்க ஃபிரான்சில இருக்கிறதுனால அவர் அடிக்கடி போயிட்டு வருவாரு. ஒருவேளை அவரை பார்த்து கூட இவருக்கு இப்படி ஒரு எண்ணம் வந்திருக்கலாம். சரி ஒரு தடவை முயற்சி செய்து பார்க்கலாம் மனைவி லதாவும் அதற்கு எதிர்ப்பு ஒன்றும் சொல்ல  மாட்டா . கொடைக்கானலில் இருந்து கார்ல திரும்பி வரும் போதுதான் கமலநாதன், விஸ்வா கிட்ட சொன்னார்.

    ‘விஸ்வா…………. வீட்ல போய் இனி வேலைக்கு ஒரு ஆள் விட்டு கொஞ்சம் மராமத்து வேலை எல்லாம் செய்யணும்.’

    ‘ஏன் பெரியப்பா திடீர்னு ‘

    ‘உங்கிட்ட சொல்லலையா வினோத் பேமிலியோட அடுத்த மாசம் வர்றா.’

    ‘அப்படியா எவ்வளவு மாச லீவு.’

    ‘இல்ல திரும்ப போறதப்பத்தி இங்க வந்துதா யோசிக்கணும்னு சொல்றா’

    ‘அப்படியா ?’

    ‘ஆமா ‘

    பார்ப்போம் வீட்டுக்கு வந்து ஒரு வாரம் கழித்து கமலநாதன் விசுவாவுக்கு போன் செய்தார். ‘ஏம்ப்பா இந்த பக்கம் ஆளையே காணோம்.’

    ‘பெரியப்பா கொஞ்சம் வேலை பிசி.’

    ‘சரி சரி பாருப்பா அந்த வீட்டு மெயின்டன்ஸ்க்கு ஆளக்கேட்டிருந்தேனே!’

    ‘ஆ……. ஆமா மறந்துட்டே………. வரச்சொல்றே .

    ‘பெரியப்பா நா அப்புறம் பேசுறேன் .’

    வினோத் ஊரில் இருந்து குடும்பத்தோடு வந்தான் விஸ்வநாதன் அவனை ஏர்போர்ட்டுக்கு ரிசீவ் பண்ண போனான் வீட்டில் கொண்டு வந்து விட்டுச் சென்றவன் ஒரு வாரமா வரவே இல்லை. போன் பண்ணாலும் சரியா ரெஸ்பான்ஸ் இல்ல.

    ஒரு வாரம் மகன்கூட நல்லா ஊரச்சுத்திட்டு வீட்ல உட்காந்திட்டு இருக்கும்போது அப்பாவுக்கும் மகனுக்குமான விவாதம் தொடர்ந்து பெரிதாகிக்கொண்டே சென்றது.

    ‘அப்பா எனக்கு உங்க சொத்தெல்லாம் ஒன்னும் வேண்டா.  நாம இந்த வீட்டக் காலி பண்ணிட்டு உங்களுக்கு பிசினஸ் பாக்குறதுக்கு வசதியா டவுன பார்த்து போவோம்.  உங்க கூட இருந்து உங்க பிசினச கத்துக்கறே.’

    ‘அப்போ நான் சொன்னப்ப எல்லாம் கேட்கல. என்னால பிசினஸ் பார்க்க முடியலன்னு அப்போ இதெல்லாம் முடியாதுன்னு சொல்லிட்டு இப்போ எனக்காக ஒரு கஸ்டமர் வட்டாரத்தை உருவாக்கி வச்சிருக்கேன் இப்போ உனக்கு என் பிசினஸ் வேணுமா ? .’

    ‘சரி உங்க பிசினஸ் வேண்டாம். இந்த வீட்ட கொடுத்துட்டு டவுன்ல நல்ல ஒரு வீடா பார்த்து வாடகைக்கு போலாம். இத வாடகக்கு விட்டர்றலாம்’

    ‘என்னோட இந்த வீட்டை விட்டுட்டு நான் பொறந்த இந்த வீட்ட விட்டுட்டு உன் கூட வந்து அடிமையா இருக்கணுமா. அதெல்லாம் முடியாது.’

    ‘அப்பா  ஏன் இப்படி எல்லாம் பேசுறீங்க.’

    ‘ஆமா பேசாம எனக்கு முடியலடா எங்க கூடவே இருடான்னு ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி அப்படி கெஞ்சினே. அப்ப எல்லாம் ஒனக்கு எதுவும் தோணல.  இப்போ  உன்னோட மாமனார் செத்திட்டாரு  அவரு  பிசினஸ் பார்க்க ஆளு வேணும் அதனால இங்க செட்டில் ஆயிடலாம்னு வந்திருக்கே. உன்ன விட விஸ்வா எவ்வளவோ மேல். நாங்க பெறாத புள்ளையா இருந்தாலும் எங்களுக்கு இன்னும் ஒவ்வொரு காரியத்தையும் பார்த்து பார்த்து பண்ணுறா.  எதயும் எதிர் பார்க்க மாட்டா.’

    ‘ஆமா மாமனார் பிசினஸ் பாத்துக்க தான் வந்தே. இப்ப என்ன அதுக்கு உங்க பிசினஸ நீங்களே பாருங்க, ஆனா இந்த வீட்ல எனக்கு முழு உரிமை இருக்கு. தனியா இருக்கிறது தான் எங்களுக்கு பிடிக்கும்னு தானே அங்கே வந்தப்போ ஒரே மாசத்துல திரும்பி வந்தீங்க. நா அங்க ரெண்டு குழந்தைகள வெச்சிட்டு தனியா கஷ்டப்படுறேன்னு கொஞ்சமாவது யோசிச்சு பார்த்தீங்களா .’

    ‘இந்தர்றா உனக்கு இந்த வீடு தானே வேணும். வெச்சுக்கோ. நான் இப்பவே இங்கிருந்து போறேன். கண்ணனப் பாரு அவங்க அப்பா அவனுக்கு ஒண்ணுமே சேத்து வைக்கல ஆனா அவங்க அப்பனுக்கு ஒண்ணொண்ணும் பார்த்து பார்த்து செய்யறா, அவங்க அப்பா ஆசைப்படுறாருனு கொஞ்சம் கொஞ்சமா காசு சேர்த்து வச்சு அவங்க அப்பாவை துபாய்க்கு கூட்டிட்டு போறான். நேத்துதான் எனக்கு போன் பண்ணி சொன்னா இந்த வாரத்தில் துபாய் போறோம் சித்தப்பானு.  ஒன்ன எல்லாம் படிக்க வெச்சு ஆளாக்கனதுக்கு நீ இப்படித்தாண்டா கடைசில பேசுவே. நானும் எங்க கூட கடைசி காலத்தை கழிக்கதான் வந்திருக்கேன்னு நினைச்சே. இனிமே நீ இருக்கிற வீட்ல நான் இருக்க மாட்டே.  நான் இப்பவே கிளம்பறேன்டா  நீயே இரு என்று ஒரு பெரிய பை நிறைய  துணிகளை போட்டுக்கொண்டு வெளியிலிறங்கினான். செண்பகம் கோயிலுக்கு போயிட்டு வர்ற வரைக்கும் கூட காத்திருக்கல. ஆட்டோ ஏறிச் சென்று விட்டார்.

    4

    ‘ஏங்க நீங்க உங்க பெரியப்பா வீட்டுக்கு போய் ரொம்ப நாளாச்சு ஏன் போகலையா?’

    ‘அதுதான் அவருடைய பையன் ஊர்ல இருந்து வந்திருக்கறானே.’

    ‘அதுக்கு என்ன இப்போ இதுக்கு முன்னாடி வந்தப்போ உங்க கார்ல தானே ஊரு சுத்துனாங்க இப்ப மட்டும் என்ன ஆச்சு?’

    ‘இனி அவன் திரும்ப வெளிநாட்டுக்கு போக மாட்டானாம்’

    ‘ ஏ………..?’

    ‘அவ அப்பாவோட பிசினஸை பார்க்க போறானாம்’

    ‘அதுக்கும் நீங்க அவங்க வீட்டு போறதுக்கும் என்ன இருக்கு?’

    ‘உண்மைய சொல்லட்டுமா நான் அவரு வீட்டுக்கு போறது, வேணுங்கிறதெல்லாம் வாங்கி கொடுக்கறதெல்லாம் காரணமாத்தான் .’

    ‘என்ன சொல்றீங்க ?’

    ‘ஆமா நான் என்ன லூசா? எங்க அப்பாவும் அவரும் நல்ல நண்பர்களாத்தா இருந்தாங்க. அண்ணந்தம்பியாதா பழகனாங்க, நான் இல்லைன்னு சொல்லல. எங்க அப்பாவுக்கு கவர்மெண்ட் வேலை அவருக்கு பிரச்சனை இல்ல. ஆனா என்ன கமலநாத சித்தப்பாவோட பிசினஸ் விஷயங்கள தெரிஞ்சுக்கணும்னு எவ்வளவு தடவை அனுப்பி இருப்பாரு.  போறப்ப எல்லாம் எடுபிடியா என்ன வெச்சிருந்தாரு.  முக்கியமான கஸ்டமர்ஸெ பார்க்கப்போகும் போது என்ன ஒரு தெரு தள்ளி  நிக்க வெச்சுட்டு போவாரு. அவரோட பிசினஸ் சூட்சமங்கள கத்துக்கணும்னு தான் அவருக்கு ஹெல்ப் பண்ற மாதிரி போனே. என்னோட வண்டில கூகுள் மேப் ரெக்கார்டோட செட் பண்ணி இருக்கேன் அதனால தான் நிறைய இடத்துக்கு அவங்க கார எடுக்க விடாம, நம்ம கார எடுத்துட்டு போனே. அவங்க பிசினஸ் டீலிங் பேசும் போதெல்லாம் நான் காருக்கு வெளியில்தான் நிப்பேன்.  அவங்க உள்ள உட்கார்ந்து பேசுனதெல்லாம் ரெக்கார்ட் ஆயிருக்கு. நல்லா வெண்ணெய் திரண்டு வர்ற நேரத்துல பானை ஒடஞ்ச மாதிரி ஊர்ல இருந்து அவரு பைய வந்திட்டா. இனி எனக்கு சொல்லித்தரவா போறாரு.’

    ‘ நிஜமா நீங்க இதுக்கு தான் போறீங்கன்னு தெரியாம போச்சு.’

    ‘ நாமும் நம்ம லைஃப்ல செட்டில் ஆக வேண்டாமா? திவ்யா பிளஸ் டூவந்துட்டா அடுத்த வருஷம் நீட். அவ ஏவரேஜாதா படிப்பானு எனக்கும் தெரியும். ஆனா அவளை டாக்டர் ஆக்கணும்ங்குறது எங்கனவு. வருமானத்த ஜாஸ்தி பண்ண வேண்டாமா?’

    ‘இதுக்கே நீ ஷாக் ஆனா என்ன பண்றது. உனக்கு தெரியாத இன்னொரு விஷயத்தையும் சொல்றேன் ஆத்திரம் வரும்போது எல்லாத்தையும் சொல்றதுதா.  எங்க அப்பாவ நல்லா கவனிச்சிருந்தா இன்னும் ரெண்டு வருஷம் நல்லா இருந்திருப்பாரு. அவரோட பேங்க் பேலன்ஸ் ஃபுல்லா காலி பண்ணித்தா வைத்தியம் பார்த்தேன் ரெண்டாவது ஒரு ஆபரேஷன் பண்ணனும்னு டாக்டர் சொன்னாரு. முப்பது நாள் போகட்டும்னு சொன்னப்பதான் வீட்டுக்கு கூட்டிட்டு வந்தேன். அந்த ஆபரேஷன் செலவுக்கு கண்டிப்பா எனக்கு அவர் கட்டுன வீட்ட தான் அடமானம் வைக்கணும். அதுவும் பத்துமா இல்ல விக்க வேண்டியது வருமானு தெரியல. மொதல் ஆபரேஷனுக்கப்பறம் அவருக்கு கேஸ் ட்ரபுள் இருக்கிற ஐட்டம், கூல்டிரிங்க்ஸ், சிசர், ஊறுகா, மது இதெல்லா  கொடுக்க கூடாதுனு டாக்டர் தெளிவா சொல்லியிந்தாரு. வேற வழி தெரியல மனசாட்சியை கட்டி போட்டுட்டு தான் பிரிட்ஜ் ஃபுல்லா கொக்க கோலாவும், சரக்கு பாட்டிலுமா வாங்கி அடிக்கினே. அவரு அத பார்த்தா சும்மா இருக்க மாட்டார்னு எனக்குத்தெரியும். ஆனா நானா ஊத்திக் கொடுக்கல. அவராத்தான் எடுத்து குடிச்சிட்டாரு. கேஸ் அடச்சு உயிரை விட்டுட்டாரு.’

    வாயில் கைப்பொத்தி  திகைத்துப்போயி  உக்காந்தா சுனிதா.

    ‘என்ன ஷாக் ஏங்க உங்கள பாக்கவே பயமா இருக்கு. நாளைக்கு எங்களையும் இப்படி எல்லாம் யோசிப்பீங்களானு சினிமா டயலாக் எல்லாம் பேசாதே. எல்லாம் நம்ம குடும்பத்துக்காகத்தான் மத்தவங்களுக்கு முன்னாடி என் பொண்ணு டாக்டர் ஆகணும் அவ்வளவுதான். இப்படி பாக்குற அளவுக்கு நான் ஒன்னும் கொலைகாரன் கிடையாது. செய்ற வேலைல  சாதகங்களைத் தேடுறேன் அவ்வளவுதான். எல்லாம் நம்ம எதிர்காலத்துக்காகத்தான். அந்த கிழவங்கிட்டதா கொஞ்சம் ஏமாந்திட்டேன். அந்த ஆட்டோக்காரன் கண்ணன  அவருகிட்ட நெருங்க விடாம கவனமா இருந்தே. ஆனா அவன் பையன் இப்படி உடனே வருவானு  யோசிக்காம போயிட்டே…. ச் …..சே…..’

    விஸ்வாவின் வீட்டை நம்பி தஞ்சம் புக நெனச்சு வந்த கமலநாதன் கதவுக்கு வெளியில் நெஞ்சை பிடித்துக் கொண்டு விழுந்தார். ஆட்டோவில் இருந்து இறங்குகிற  மனைவி செண்பகத்தின் குரலும், மகனின் குரலும் கேட்டது. கமலநாதனின் எண்ணங்கள் மிதக்கத் தொடங்கின, வாயு மண்டலத்தில் பறப்பதாக உணர்ந்தார் .

    சத்தம் கேட்டு  விஸ்வாவும் சுனிதாவும் வெளியில் வந்தனர்

    Share
  • நாய் – பிம்பம் (மொழிபெயர்ப்புச் சிறுகதை)

    நாய் – பிம்பம் (மொழிபெயர்ப்புச் சிறுகதை)

    மூல நூலாசிரியர்: சி.வி.பாலகிருஷ்ணன்
    மொழி : மலையாளம்
    தமிழில்: முனைவர்.நா.தீபா சரவணன், உதவிப்பேராசிரியர்
    குமரகுரு பன்முகக் கலை அறிவியல் கல்லூரி, கோவை.

    அம்மு சிவப்புநிற மஞ்சாடிக்கொட்டைகளைப் பொறுக்கிக்கொண்டிருக்கும்போது வேனலின் முதல் மழை பெய்யத் தொடங்கியது. வரம்பிற்கு அப்புறம் வழியாக கால்நடை வியாபாரியான சங்கரன்  பசுவொன்றை  ஓட்டிக்கொண்டு வந்தான்.

    ”அம்மு மஞ்சாடியா  பொறுக்குற? அவன் சும்மா விசாரித்தான்.

    அவள் கையில் உள்ள செரட்டையை நீட்டிக் காண்பித்தாள்.

    “ இது இரண்டாவது. கொஞ்சம் கூட போட்டா இதுவும் நிறைஞ்சுரும்.” அவன் நடந்து புளிய மரத்துக்கு அடியில் போனான்

    ”அப்பா இல்லையா? வீட்ல அவன் கேட்டான்.”

    “ இல்ல” அம்மு சொன்னா

    “எங்க போனாரு?”

    ”பாலத்துக்கு பக்கத்துல ஒருத்தரு லாரி இடிச்சு செத்தாரில்ல. அது அப்பாவுக்கு உறவுமொறல ஒரு மாமா ஆகுது. செத்துப்போன செய்தி வந்ததும் அப்பா கிளம்பிட்டாரு.”

    ”அம்மாவோ”

    “அம்மாவும் போய் இருக்காங்க”

    பெய்து கொண்டிருந்த மழை அதற்குள் சற்று அதிகமானது.

    அம்மு ரெண்டு செரட்டைகளையும் எடுத்துக்கொண்டு வீட்டைபார்த்து வேகமாக நடந்தா. வீட்டின் முற்றத்தில் தம்பியை உட்கார வைத்துவிட்டுதான் அவள் மஞ்சாடிக்கொட்டைகளைப் பொறுக்க சென்றிருந்தாள். அவன் ஒரு மரத்தாலான பொம்மையுடன் விளையாடிக்கொண்டிருந்தான்.

    ”நமக்கு இனி மஞ்சாடி வெச்சு விளையாடலாம். நெறைய மஞ்சாடி கிடைச்சிருக்கு” அம்மு அவங்கிட்ட சொன்னா.

    ஒரு சாக்பீஸ் எடுத்துத் தரையில கட்டம் போட்டா. மண்ணில குழிபண்ணி ஒவ்வொரு குழியிலும் மஞ்சாடி போட்டு விளையாடுவது தான் அவளுக்குப் பிடிக்கும். ஆனா அது ரெண்டரை வயசு மட்டுமே ஆன அவனோடு சேர்ந்து விளையாடுற விளையாட்டல்ல. அதுக்கு ஒத்த வயசுள்ள யாராவது வேணும். மழை பெய்றதுனால இனி யாரும் வர மாட்டாங்க.

    ”நான் தொடங்கறேன்.” அம்மு சொன்னாள்.

    தம்பியோட விளையாட்டும் சேர்த்து  அவளே விளையாட வேண்டி இருந்தது. அவனுக்கு விளையாட்டோட விதிமுறை ஒண்ணும் தெரியாதது மட்டுமல்ல சில நேரம் அவனே தெரியாமல் மஞ்சாடி கொட்டைகளைத் தட்டி விடவும் செய்வான்.

    மண்ணிலிருந்து ஈசல்கள் தூரம் தூரமாக பறந்தன. சங்கரன்குட்டி ஈசல்களுக்கிடையில்  வீட்டைப் பார்த்து நடந்தான்.

    ”அம்மு விளையாடுறியா?” அவன் கேட்டான்.

    அவள் முகம் உயர்த்தினாள்

    அவன் தனியாகத்தான் இருந்தான்.

    ”பசு எங்கே?”

    ”அத மேய விட்டுட்டேன். கோயில்கிட்ட நெறைய புல்லு வளர்ந்திருக்கறத பார்த்தப்போ அதுக்கு ஒரு சந்தோஷம் அப்படின்னா அங்கேயே கெடக்கட்டும்னு  வந்துட்டேன்.”

    அவன் வெளியில் திண்ணையில் உட்கார்ந்தான். இடைவழி சூன்யமாயிருந்தது. ஈசல்கள் பறந்துகொண்டிருந்தன.

    அவன் சட்டை பாக்கெட்டிலிருந்து ஒரு பீடியெடுத்தான்.

    ”கொஞ்சம் தீ வேணுமே அம்மு.”

    “அடுப்பில தீ எப்பவோ அணஞ்சாச்சு”

    ”தீப்பெட்டி இல்லையா?.”

    “சங்கரன் குட்டி அண்ணாக்கு பீடி குடிக்காம இருக்கக் கூடாதா?”

    “என்னோட செல்லம் இல்ல. போய் தீப்பெட்டி எடுத்துட்டு வா. மழை தூறும்போ பீடுகுடிக்க  நல்ல சுகமா இருக்கும்.”

    ”அடுக்களைல தீப்பெட்டி ஒருவேள அப்பா எடுத்துட்டு போயிருப்பாரு.”

    ” நீ வீட்டுக்குள்ள போய் பாருமா. எங்காவது இல்லாம இருக்காது.”

    ”இந்த சங்கரன் குட்டி அண்ணன வெச்சிட்டு முடியல.”

    அம்மு மஞ்சாடிக்கொட்டைகள கீழே வைத்துவிட்டு எழுந்தாள். சங்கரன்குட்டி, அவளை கண்களால் ஈர்ப்புடன் மேலிருந்து கீழவர அளந்தான். அத கவனிக்காம அவள் உள்ளே போனா.

    தீப்பெட்டி எங்க வச்சிருக்காங்கன்னு அவளுக்கு சரியா தெரியாது. அடுப்பு திட்டிலும், கரிப்புகைப்படிந்த ஜன்னலிலும் தீப்பெட்டியை காணாமல் அவள் சுவர் அறைகளில் தேடினாள். அதுக்குள்ள நிறைய லொட்டு லொசுக்கு சாமான்கள்.  மஞ்சத்தூளினுடையவும், மிளகாய்த்தூளினுடையவும், மஞ்சளினுடையவும்  நெடி. நாலஞ்சு சின்ன கரப்பான் வகைகள் அதில ஒண்ணு சின்ன சீன பரணிக்கு பக்கத்து வழியாக நகர்ந்தது. வேறொன்று எண்ணெய் பாத்திரத்தில் பற்றி பிடித்திருந்தது.

    சங்கரன்குட்டி இடைவழியில் மீண்டும் பார்வையை செலுத்தி திண்ணையில் மேலே ஏறி வீட்டிற்குள் நுழையத் தொடங்கும் போது எங்கிருந்து என்று அறியாமல் ஒரு நாய் அங்கே பாய்ந்து வந்தது. அது அவனுக்கு நேராக நின்று குரைத்தது. பௌ….பௌ….. வாலை உயர்த்திக்கொண்டு குரைத்துக் கொண்டே இருந்தது.

    ”இது எங்கிருந்து வந்துச்சு. நாசமாப் போன நாய். சங்கரங்குட்டி அத பார்த்து பல்லைக் கடித்தான். அப்படி ஒரு நாயை அம்முவோட வீட்டிலயோ அக்கம் பக்கத்திலயோ இதுக்கு முன்னாடி  பார்த்ததா நெனைவேயில்ல.

    ”போடா இங்கிருந்து……… நல்ல காரியத்துக்குப் போகும்போது குறுக்கே வந்திட்டு.” அவன் கதவுக்கருகில் நெருங்கினான்.

    நாய் கேட்கவில்லை. அது ஒரு குதி குதித்தது. அவன் திரும்பிப்பார்த்தான்.

    ”போய் பீய தின்னுடா.” அவன் நாய்கிட்ட எரிந்து விழுந்தான்.

    இரண்டு அடி கூட எடுத்து வெச்சாப் போதும் வாசப்படி தாண்டி உள்ள இருந்து  கதவை இழுத்து அடைத்து தாழ்போட்டறலாம்னு நெனச்சான். ஆனா அது நடக்கல.  அதுக்குள்ள நாய் முன்னுக்கு குதித்து அவனுடைய காலில் கடித்தது. அவன் கதறினான்.  வலி அந்த அளவுக்கு சகிக்க முடியாததாக இருந்தது.

    அம்மு தீப்பெட்டி எடுத்துகிட்டு முற்றத்திற்கு வரும்போது சங்கரங்குட்டி நொண்டி நொண்டி இடைவழியை லட்சியமிட்டு வேக வேகமாக நடந்து நீங்கினான்.

    “சங்கரங்குட்டி அண்ணா……. தீப்பெட்டி………” அவள் சத்தமாகக் கத்தினாள்.

    அவன் திரும்பிப் பார்க்கவில்லை. அம்மு ஆச்சரியத்தோடு நின்றாள். வாசலில் உக்ரபாவத்தில் நிக்கற கருப்பு நிற நாயை இதற்கு முன் பார்த்ததே இல்லை. அதுக்கு பயப்படுத்தற அளவுக்கு உருவமொண்ணும் பெரிசா இல்ல.  ஒரு சாதாரண நாய். ஆனா அதோட முகம் அசாதாரணமான பயமுடையதாக இருந்தது.

    ” நீ எங்கிருந்து வர?” அம்மு பயத்தோடு கேட்டா.

    நாய் இப்போது அதன் உக்ரபாவம் கைவிட்டு  வாலை தாழ்த்தி செல்லமாக ஒரு சத்தமிட்டது.  வாலாட்டிக்கொண்டு அம்முவை உரசிக்கொண்டு அன்பை வெளிப்படுத்தும் விதம் ஒரு சத்தம் எழுப்பிக்கொண்டு   மெதுவாக முற்றத்தில் இறங்கியது.

    இடைவழியாக சங்கரங்குட்டி போன வழியைப் பார்த்து  சத்தமாகக் குரைத்தது.

    பிறகு அது எங்கோ போய்  மறைந்தது.

    Share
  • விருப்பமான ஒரு பிறந்தநாள் கேக் (மொழிபெயர்ப்புச் சிறுகதை)

    விருப்பமான ஒரு பிறந்தநாள் கேக் (மொழிபெயர்ப்புச் சிறுகதை)

    முனைவர்.நா.தீபா சரவணன்
    உதவிப்பேராசிரியர்
    குமரகுரு பன்முகக் கலை அறிவியல் கல்லூரி, கோவை.

    பிறந்தநாள் கேக் ஐந்து மணிக்குக் கொடுக்க வேண்டும் என்பதே ஒப்பந்தம். நான்கு மணிக்கு முன்பாகவே அதன் வேலை நிறைவடைந்திருந்தது. பேக்கரியில் அனைவரும் பார்க்கும் விதத்தில் காட்சிப்படுத்தியதுடன் என் வேலை முடிந்தது.

    ’பேக்கரி உரிமையாளர் பாராட்டுற விஷயத்துல ஒரு கஞ்சப்பையனல்ல. அவர் என் முதுகில் தட்டி வாழ்த்துக்களைப் பொழிந்தார். பேக்கரியில் வேலை பாக்கிற வேற இருவரை பொறாமைப்பட வைக்கணும்னு அவரு நினைச்சாரோ என்னமோ?’

    என்ன வாழ்த்தும்போது அவர் ஓரக்கண்ணால அவங்களையும் பார்த்தது  என்னக் கொஞ்சம் உணர்ச்சிவசப்பட செய்தது.

    கேக்கின் மேல்பாகத்தில் பாலாடை நிறத்தில் ’ஹாப்பி பர்த்டே’ என்று எழுதியதோடு அதுக்கு சுத்திலுமாக 20 சிவப்பு மெழுகுவர்த்திகள் அழகாக அடுக்கி வைக்கவும் செய்யப்பட்ட இந்த கேக் யாருக்கு என்று சில வாடிக்கையாளர்கள் கேட்காமல் இல்லை. அவர்களின் ஆர்வத்தை குறைக்க பேக்கரி உரிமையாளரோ,  நானோ, மற்ற ஊழியர்களோ தயாராகவில்லை. அப்படி கேக்கிற்கு ஒரு குழப்பமான சூழ்நிலை வந்தது. அது ப்ளம் கேக்கா? இல்ல சாக்லேட் கேக்கா? என்று ஒரே பார்வையில் கண்டறியக்கூடிய  சாமர்த்தியசாலி ஒருவர்  ’இவ்வகை ஒரு கேக்கை என்  வாழ்நாளிலேயே நான் பார்த்ததில்லை என்று மனதில் தோன்றிய எண்ணங்களை வெளிப்படுத்தியபோது பெருமையும், பெரு மகிழ்வும் கட்டுப்படுத்த சிறிது சிரமப்பட வேண்டி இருந்தது. ’நுண்ணிய கலை நுணுக்கங்களால் செய்த ஒரு சிற்பத்திற்கு இணையானது என்பது மற்றொரு வாடிக்கையாளரின் மதிப்புரை. அவரின் முன்பாக நான் முடிந்தவரை பணிவுடனிருந்தேன்.  இன்று கேக் எப்போதும் விட சிறப்பானதாக வர முழு முயற்சி செய்திருந்தேன். 20 வயது பிறந்தநாள் கொண்டாட இருக்கும் தீஷா என்ற பெண்ணின் முகம் அடிக்கடி என் நினைவில் வந்தது. ஒருவேளை அதுவே என்னை அதிகமாக உற்சாகப்படுத்தி இருக்கலாம். திராட்சைப் பழம் போட்டு சுட்டெடுக்கும் கேக்கின் அதிக வாசம் தான் அவளை சுயமாக கார் ஓட்டிக்கொண்டு இங்கு வர வைத்திருக்கும் என்று நான் கற்பனை செய்ததுண்டு. கேக்கின் கீழ்பாகம் செர்ரி பழத்தினால் அலங்கரிக்கும் போது அவளுடைய உதடுகளை குறித்து நான் எண்ணியதுண்டு.  செர்ரியின் அதே நிறம்தான் அவைகளுக்கும்.

    சுவரில் மாட்டப்பட்ட கடிகாரம் ஐந்து மணி என்று கூவிக் கூறியது. நீல நிறத்தில் உள்ள ஒரு சின்ன கார் எந்த நொடியும் பேக்கரியில் வந்து நிற்கலாம். எனது கண்கள் அடிக்கடி வெளியே எட்டி பார்த்தன.  கேக்குடன் பங்களாவிற்கு நானே செல்ல வேண்டி இருக்குமென்று ஞான அறிவு இதற்கிடையில் என்னுள் ஒலித்தது. காரண காரியத்தோடு விளக்கக் கூடிய ஒன்றாக அவ்வெண்ணம் இருக்கவில்லை.

    பதினைந்து நிமிட காத்திருப்பிற்குப் பிறகு பேக்கரி உரிமையாளர் தொலைபேசி வழியாக பங்களாவைத் தொடர்பு கொள்ள முயற்சித்தார்.  அது பயன்படவில்லை.  பங்களாவின் தொலைபேசி தற்காலிகமாக வேலை செய்யவில்லை என்ற தகவல் இரண்டு மூன்று முறை ரிசிவர் வழியாக கேட்டது. ஒரு டாக்ஸி பிடித்து முடிந்தவரை வேகமாக கொண்டு போய் கொடுத்துவிட்டு வர என்னிடம் கட்டாயப்படுத்தினார். சம்மதத்தின் அறிகுறியாக தலையை ஆட்டிக்கொண்டு டாக்ஸி பிடிக்க நான் வெளியிலிறங்கினேன்.

    அதிக நேரம் காத்திருக்க வேண்டிய அவசியம் வரவில்லை.  சரியாக ஐந்து முப்பது மணிக்கு நான் கிளம்பினேன். ஹோப் வில்லா’ டாக்ஸி ஓட்டுனருக்கு அறிமுகமான இடம் தான். கரும்பனைகளையும் பாறை கூட்டங்களையும் பின் தள்ளிக்கொண்டு டாக்ஸி டெய்ஸி தோட்டங்களுக்கிடையில் உள்ள சமமான பரப்பை அடைந்தது. தூரமாக பாதை இறக்கமாகச் செல்வதை டிரைவர் சுட்டிக்காண்பித்தார். பார்த்துக் கொண்டிருக்கவே குன்றின் மேற்பகுதி முழுவதுமாக மறைந்தது வழியோரங்களில் அங்கும் இங்குமாக குரங்குகள் காட்சியில் தெரிந்தன. சில குரங்குகள் மரங்களில் அமர்ந்து கொண்டு டாக்ஸிக்கு நேராக பார்த்து இளித்துக்கொண்டிருந்தன.  கரும் பாறைகளிலிருந்து உடைந்து வந்த நீர்ப்பாதை கூடுதல்  நீர் இல்லாமல் பாதையின் குறுக்காகச் சென்றது.  மலைச்சரிவின் மரங்களுக்கிடையில் காளான்கள்.

    ”டிம்…………….. ஓர் இரைச்சல் கேட்டது. டாக்ஸியின் எஞ்சின் சலனமற்றது.  ஓட்டுநர் கீழே இறங்கினார்.

    என்ன ஆச்சுன்னு நான் தலைய வெளியில விட்டு ஆராய்ந்தேன்.  ஓட்டுனர் போனட்டை தாழ்த்தி விட்டு எனக்குப் பக்கத்தில வந்தார். அவருடைய முகம் வெளிர்த்திருந்தது.

    நான் சுற்றிலும் பார்த்தேன் நீண்ட பாதையும் குன்றுகள் இறங்குகின்ற மலைச்சரிவுகளும் கண்களில் தெரிந்தன.

    ஓட்டுனர்  மன்னிப்பு கேட்கத் தயாரானார்

    “ வேண்டாம்.”

    நான் கோபத்தோடு பிறந்தநாள் கேக்கை வெளியில் எடுத்தேன். உடம்ப வளச்சு நிக்கிற டிரைவரை கவனிக்காம நான் இறங்கி நடந்தேன். அவன் பின்னாலிருந்து என்னமோ அழைத்து சொன்னான்.  நான் அதை கவனிக்கல. என் மனசு கொந்தளிச்சது.  ஒரு பிறந்தநாள் கேக்கை கையில எடுத்திட்டு நீண்ட வழியாக உள்ள இந்த மலைப் பாதையில் என்னுடைய பயணம் கொஞ்சம் கூட சரியானதல்ல என்று நான் எனக்குள்ளேயே சொல்லிக் கொண்டேன். சில பறவைகளின் கீச்சு குரல் கேட்டது. வானம்  மங்கிய நீல நிறமாக இருந்தது. குளிர்க் காற்று வீசியது இரண்டு பக்கங்களிலும் தேயிலைச் செடிகள் ஆடிக் கொண்டிருந்தன.

    ஒற்றையடிப் பாதை. இருட்டுறதுக்கு முன்னாடி நான் ஹோப் வில்லா’ போயிடலாம்னு நினைச்சாலும் இவ்வளவு தூரம் கடந்து பங்களாவோட கேட் கதவை அடைவதற்குள்ள பகல் வெளிச்சம் முழுவதுமாக மங்கி இருந்தது. சொந்தக்காரங்க வர நேரம் ஆகியும் கேட் திறந்து வைக்கவில்லை.

    அடங்காத ஒரு விலங்கைப் போல முரண்டு கொண்டு கேட்காமல் காவல்காரன் எனக்கு நேராக வந்தார். இதுக்கு முன்னாடி மிலிட்டரியில் இருந்தவராக இருக்கணும்.

    ”பேக்கரியில் இருந்து வரேன்”. நான் சொன்னேன்.

    “இது என்னது?” அவரின் கரகரத்த குரல் உயர்ந்தது.

     ”கேக் சூடாறவில்லை”

    “ சூடு ஆறிருச்சானு நான் கேட்கலையே!”

    இல்லன்னு எனக்கு சொல்ல வேண்டி வந்தது. அவன் கேட் திறந்தான். பங்களா தூரமாக மரங்களுக்கு இடையில் தெரிந்தது. அந்தப் பக்கமாக நடக்கும் போது தேக்கினுடையவும், பெரிய மரங்களினுடையவும் உச்சியில் இருந்து குளிர் கீழே இறங்கியது. பன்றி தொழுவம் எதிரில் தென்பட்டது. பங்களாவில் நிறைய பன்றிகளும், முயல்களும் உண்டென்று   கேள்விப்பட்டிருக்கறே. தோட்ட உரிமையாளரான பால்அகஸ்டின் பன்றிகளையும் முயல்களையும் வளர்த்துவதில் மட்டுமல்ல வேட்டையாடுவதிலும் விருப்பம் உள்ளவனாவான்.

    நான்  முற்றத்தை அடைந்தேன். வெளியில் உள்ள தூண்களுக்கு நடுவில்  தொங்கிக் கொண்டிருந்த விளக்கை யாரோ ஏற்றியவுடன் அவ்விடம் பிரகாசமானது.

    கேட் காவல்காரனின் வயதை ஒத்த ஒருவர் ஒரு மது பாட்டிலையும் ஏந்திக் கொண்டு அவசரமாக முற்றத்திற்கு வந்தார்.

    ’ஹில்டா’ அவன் திரும்பி நின்று கொண்டு சத்தமாகக் கூப்பிட்டார். ’வாத்து ரோஸ்ட் சீக்கிரம் கொண்டு வரணும்.’

     ஊதா நிறத்திலுள்ள பாதி உடையும், கவுனுமாக ஹில்டா இடது பக்க கதவு வழியாக ஓடி வந்தாள்.

    “ பன்றியோ?”

    ”அது அங்கே இருக்கட்டும்”

    ”சாமுவேலு அண்ணா போய்க்கோங்க. நான் உடனே கொண்டு வரேன்.”

    ”தாமதிக்கக் கூடாது”

    “விரோனியருடைய குழப்பம் தான்”

    ”அதெல்லாம் எனக்குத்தெரிய  வேண்டா. இது ரெண்டாவது பாட்டில் ஆச்சு நினைப்பிருக்கட்டும்.”

    சாமுவேல் ஒரு தாக்குதலின் கௌரவம் குறையாத முகத்துடன் படிகளிறங்கினான். பிறந்தநாள் கேக்குடன் நான் வந்திருக்கிறேன் என்ற போதும் கூட அவருடைய முகபாவத்தில் எந்த மாற்றமும் இல்லை.

    ”ஆகட்டும். என்னமோ ஆகட்டும். நீ பேச வேண்டியது எங்கிட்ட இல்ல எஜமாங்கிட்ட. எங்கூட. வா”

    அவர் எங்க கூட்டிட்டுப்போறாருனு  எனக்குத் தெரியல. சில அடிகள் நடந்த போது ஒரு பொருள் என் கண்ணில பட்டது. அங்கே கொஞ்சம் இருட்டா இருந்துச்சு.

    உள்ளே என்னமோ சிதறிக்கிடந்தது.

    ‘இன்னைக்கு முழுசும் தகர்க்கறதாவே இருக்கு.’ சாமுவேல் புலம்பினாரு.   உள்கூடங்களில் கண்ணாடி ஜன்னல்களுக்கு முழுவதும் கெட்டியான சிவப்பு நிற திரைசீலை இடப்பட்டிருந்தது. கதவு மல்லாக்கத் திறந்து வைத்திருந்த நிலையில் அதற்கும் கர்ட்டன் இருந்தது. அதன் ஒவ்வொரு பகுதியும் இரண்டுப் பக்கங்களிலுமாக தொங்கியது. அதற்கும் சிவப்பு நிற திரைச்சீலை தான். உள்ளே நல்ல வெளிச்சமாய் இருந்தது. ஆனால் வராண்டாவிலும் வெளியிலும் உள்ள விளக்குகள் ஏனோ ஏற்றப்படவில்லை.

    உள்ளே ஒரு நாய் குரைத்தது. அது என்னை ஆச்சரியப்படுத்தியது.

    ”பத்திரமா இருந்துக்கோ”

    சாமுவேல் மிருதுவான சத்தத்தில் எனக்கு முன்னறிவிப்பு தந்தான்.

    நான் கேக் தட்டை இறுக்கமாகப் பிடித்தேன்.

    சாமுவேல் பின் தொடர சைகை காட்டினான். நான் அவரின் பின்னாடி கட்டிடத்திற்குள்ளாக கடந்து வந்தேன். வரவேற்பறை சூனியமாய் இருந்தது. டீபாயில் ஒரு ஸ்படிகப் பாத்திரத்தில் பல அளவுகளில் உள்ள துண்டுகள். கொஞ்சம் முன்பாக நான் கேட்ட சத்தம் என்னவாக இருக்கும் என்று அதை பார்த்த போது அனுமானிக்க முடிந்தது.

    வரவேற்பறையில தவிட்டு நிறத் துணி போடப்பட்ட சோபாவும், மேலே கண்ணாடிப் பதிக்கப்பட்ட உயரம் குறைந்த மேசையும் தவிர வேறு சாமான்கள் ஒன்றுமில்லை. வலது மூலையில் ஓர் அலங்காரப் பொருளாக வைக்கப்பட்ட காவிவர்ண வேருக்கு மேல் ஒரு பீங்கான் சிலை. படுக்கையறைக்குள் கதவுக்கு மேலாக ஒரு ரோஸ்வுட் கடிகாரம். படுக்கை அறையில் இருந்து மதுவின் வாசம் வரவேற்பறை வரை வீசியது.

    நான் ஒரு நிழல் போல சாமுவேலுடன் நடந்தேன்.

    பால் அகஸ்டினை பல முறையாக நான் தூரமாக நின்று பார்த்ததுண்டு. நீளமானதும் பறந்ததுமான உடல். தலையின் பாதிக்கு மேல் நெற்றியே ஆக்கிரமித்திருந்தது. கன்னங்கள் உப்பி இளகி தொங்கிக் கொண்டிருக்கும். மேலுதட்டின் பாதி வரை வெட்டப்பட்டு மேல் பக்கம் வடிவமைக்கப்பட்ட மீசை. இடைவெளி இல்லாமல் சேர்ந்த புருவங்கள். கீழே மிகச்சிறிய கண்கள். சிக்காரியாவின் உருவம். பின்பாகமாக படுக்கையில் இரட்டைத்தலை துப்பாக்கி. வேட்டைக்கு உடன் கூட்டிட்டு போகக்கூடிய நாய் காலுக்குக்கீழ்  இல்லை. அதற்கு பதிலாக முதலாளிக்கு சமமான வேறொரு இருப்பிடத்தில் இருந்தது.

    ”யாரது?”

    ’தீஷாம்மா ஆர்டர் போட்ட பிறந்தநாள் கேக்கு எடுத்துட்டு வந்திருக்கே.’

    சாமுவேல் இத சொன்னதும் எல்லாம் விளக்கப்பட்டதாக நான் உணர்ந்தேன். அது தவறாகியது. இருப்பிடத்தில் சாய்ந்து உட்கார்ந்து பால்அகஸ்டின் மெதுவாக முணுமுணுத்தார். நாய் எனக்கு நேராக குறைத்துக் கொண்டு குதித்தது. நான் அரண்டு போய் கதவை இலட்சியமிட்டு குதித்தேன். ஹில்டா அடுக்களையிலிருந்து வாத்து ரோஸ்டுடன் அவசரப்பட்டு வரக்கண்ட நேரம். அதுதான் காரணம். ட்ரே நிலத்தில் விழுந்தது. பின்னாலிருந்து  அலறல் கேட்டது. பால்அகஸ்டின் துப்பாக்கிக்குக் கை நீட்டுகிறான் என்பதை அறிந்தவுடன் ஏன்னு தெரியாமல் நான்  அதிர்ச்சிக்குள்ளானேன்.  என் அதிர்ஷ்டம் நாயின் கவனம் அதற்குள் ஹில்டா தரையில் வீழ்த்திய வாத்து ரோஸ்டின் மேல் திரும்பியது. நான் வேகமாக வெளியில் குதித்தேன். வெளியில் இருட்டு பரவியிருந்தது. நான் செடிகளுக்கு இடையில் பதுங்கி இருந்தேன். சதுப்பு நிலம் என்பது போல எனக்குச் சுற்றிலும் கொசுக்கள் இரம்பின.

    பிறகு பார்க்கும்போது நான் நிறைய விருந்தாளிகளுக்கு நடுவில் இருந்தேன். பங்களாவின் பரந்த வாசலில் விருந்தினர்கள் குழப்பவாதிகளாக நின்றனர். யாரும் வரவேற்க வராதிருந்ததுதான் குழப்பத்திற்கு காரணம்.  அது நிலைத்திருக்க, கடும் மஞ்சள் நிறத்தில் பட்டு சேலை அணிந்த ஒரு பெண் ஒரு மூலையில் தள்ளி நின்று சின்ன  கைக் கண்ணாடியில் பார்த்து உதடுகளில் லிப்ஸ்டிக் அடித்தாள். பங்களாவின் முற்றத்தில் விருந்தினர்களின் வாகனங்கள். அவைக்கு அருகில் கோட்டும் டையும் உடுத்திய ஒருவன் அழகாக பொதியப்பட்ட ஒரு பரிசுப்பொருளை கையில் ஏந்தி நின்றார். வேறு சிலருடைய கையிலும் பரிசு பொருட்கள் காணப்பட்டன. என் கையிலோ பிறந்தநாள் கேக். பல மின் விளக்குகளின் வெளிச்சத்தில் என்றாலும் எல்லார் முகத்திலும் சலனமான நிழல் விழுந்திருந்தது. பிறந்தநாள் கேக்கை யாரிடம் கைம்மாறுவது என்று தெரியாமல் குழம்பினேன்.

    அதற்குள் ஒருவர் படிக்கட்டுகளில் இருந்து இறங்கி வந்து எதிர்பாராத காரணங்களால் பிறந்தநாள் கொண்டாட்டம் ரத்து செய்யப்பட்டதாக அறிவித்தார்.

    ’என்னது?’ பிறந்தநாள் கொண்டாட்டம் இல்லையா?’ ஒரு விருந்தாளி சத்தமாகக் கேட்டார்.

    “ஆமாம் எதிர்பாராத சூழ்நிலையால் அப்படி ஒரு முடிவு எடுக்க வேண்டியதா போச்சுனு மேடம் வருத்தத்தோட சொன்னாங்க” ஒருவர் விளக்கினார்.

    ”வெட்கம்……….”

    “ மேடத்தை கூப்பிடுங்க.”

    “ மன்னிக்கணும் மேடம் யாரையும் பார்க்க விரும்பல.”

    “தீஷா இருப்பாளே. அவளை கூப்பிடுங்க குறைந்தபட்சம் பரிசுகளையாவது அவளிடம் ஒப்படைக்கலாமே.”

    ”பிறந்தநாள் கொண்டாட்டத்தை ரத்துசெய்ததால  பரிசுகளையும் வாங்கக் கூடாது என்பதுதான் முடிவு.”

    அவர் ஓர் அரங்கு என்பதாக பாவித்து  புறம் திரும்பி நடந்து  மறைந்தார். தோல்வியையும் அசௌகர்த்தையும் பங்கிட்டுக் கொண்டு விருந்தினர் ஒவ்வொருத்தராக போய்க் கொண்டிருப்பதை, ஒரு கதவிற்குப் பின்னால் இருந்து ஹில்டா எட்டிப் பார்ப்பதை நான் கவனித்தேன். ஏற்கனவே முனங்கிக் கொண்டிருக்கும் கொசுக்களுக்கு இடையிலிருந்து விருந்தாளிகளுக்கு மத்தியில் நான் வந்ததே ஹில்டாவைப் பின்தொடர்ந்து தான்.

    நான் பிறந்த நாள் கேக்குடன் அவளுக்கு முன்னால் பாய்ந்தேன்.

    ‘ஹில்டா.’

    அவள் பின் வாங்கினாள். நான் கதவு வழியாக நுழைந்தேன். அவள் அறையை விட்டு போயிருக்கவில்லை.

    ’ம்ஹும்? என்ன வேணும்?’

    ’எனக்கு மேடத்தை பார்க்கணும்’

    ’மேடம் இப்போ யாரையும் பார்க்க மாட்டாங்கன்னு மேத்யூ சார் சொன்னது கேக்கலையா?’

    ’கேட்டுச்சு அது எனக்கு தொடர்பில்லாதது’

    ஹில்டாவின் நெற்றி சுழிந்தது. ஏன் எனக்குத் தொடர்பு இல்லைன்னு விளக்க முயற்சித்தேன். அதாவது நான் விருந்தில் பங்கேற்க வந்த ஆள் அல்ல. என் கையில் இருப்பது பிறந்தநாள் பரிசுமல்ல. தனிப்பட்ட முறையில்  ஆர்டர் கொடுத்து செய்த கேக்கோட வந்திருக்கிறேன்.

    அப்போது அடுக்களையில் மணி முழங்கியது.

    ’மேடம் கூப்பிடறாங்க’

    ஹில்டா என்னமோ எடுப்பதற்காக அடுக்களைக்கு வேகமாக நடந்தாள். நானும் பின் தொடர்ந்தேன்.

    அடுக்களையில் சின்ன மேசை மேல் முழுசாக பொரித்தெடுத்த ஒரு பன்றிக்கறிக்கு அருகில் மண்டி போட்டு உட்கார்ந்து  சேலை அணிந்த ஒரு பெண் கண்ணீர் விடுவதை கண்டு நான் மிரண்டேன்.

    ’விரோனி, போதும், ஹில்டா ஆணை இடுவது போல கூறினாள்

    ’என்னோட மனக்குமுறல நான் அழுதுதா தீர்க்க முடியும்.’ வீரோனி அழுகையைத் தொடர்ந்தாள்.

    நான் விரோனியை பார்த்துக் கொண்டிருக்கவே ஹில்டா நிலவறையிலிருந்து வேக வேகமாக ஒரு மது பாட்டிலுடன் வெளியில் வந்தாள். அடுக்களையிலிருந்து பங்களாவின் மேலே  செல்ல  படிக்கட்டுகள் இருந்தன. ஹில்டா படிகள் ஏறத் தொடங்கினாள். நானும் படிக்கட்டு ஏறுவது என்று தீர்மானித்தேன். ஹில்டா என்னை விலக்கவில்லை.

    ‘உண்மையில அங்க என்ன நடந்துச்சு? எனக்கு ஒன்னும் புரியல’

    நாங்க மேலே உள்ள வராண்டாவை அடைந்திருந்தோம்.

    ஷ்……ஷ்………

    ஹில்டா ஒரு முன்னறிவிப்பாக சுவரோடு சாய்ந்து நின்றாள். ஏதோ ஆபத்திலிருந்து தப்பிக்க நானும் அப்படியே செய்ய வேண்டும் என்று அவள் சைகையில் கூறினாள். வயது காரணமாக குருடர்களான இரண்டு பேர் ’தீஷாவின் பெரியம்மாவும் பெரியப்பாவும்’ என்று ஹில்டா என் காதில் ரகசியமாக கூறினாள். தட்டுத் தடுமாறி முன்னால் வந்தார்கள். பெரியப்பா வெள்ளியால் கட்டப்பட்ட மூங்கில் ஊன்றுகோலை கையில் வைத்திருந்தார். பெரியம்மாவின் கழுத்திலும், காதுகளிலும், கைகளிலும் நிறைய ஆபரணங்கள்.

    ’பொகையிலயும் சாப்பிட்டு நடக்கப் போறாங்க. ஒரு வழியும் இல்ல’

    ஹில்டா குரல் தாழ்த்தி கூறினாள். ஆனால் பெரியம்மா என்னமோ சத்தம் கேட்பது போல நின்று காதுகளை கூர்மையாக்கினார். ஹில்டா பாதங்களை ஊன்றி இடையிலூடாக  நடந்தாள். ஹில்டா பேய்களைப் போல நிற்கின்ற பெரியம்மாவினுடையவும் பெரியப்பாவினுடையவும் மேலிருந்து  பார்வையை அகற்றினாள். நானும் அப்படியே செய்தேன்.

    இடைவெளியில் இரண்டு பாகங்களிலாக படுக்கையறைகள்.

    வெளியில் காத்து நிற்கக் கூறி ஹில்டா ஒரு அறைக்குள் போனாள்.  திரும்பி வரும்போது கையில் மது பாட்டில் இருக்கவில்லை.

    ’எனக்குப் போயி, சூப்பு எடுத்துட்டு உடனே வரணும்’.

    ஹில்டா ஆடையைத் தூக்கி பிடித்துக்கொண்டு வேறொரு அறைக்கு நேராக நடந்தாள். அதன் கதவுகள் அடைந்து கிடந்தன. தீஷாவின் பெயர் அழைத்து ஹில்டா கதவை ஒரு முறை தட்டியதுதான் தாமதம், என்னவோ ஒரு பொருள் கதவுக்கு நேராக சத்தமாக வீசி எறியப்பட்டது அதற்குப் பின்னால் ஆக்ரோஷம் உயர்ந்தது. ’போ………. போ……….’

    ஹில்டா பேக்கரி என்றும், பிறந்தநாள் கேக்கென்றும் ஆக்ரோஷத்திற்கு இடையில் கூறினாலும் கதவு அடைந்தே தான் கிடந்தது. டேபிள் லைட்டை போல பல பொருட்களும் கதவிற்கு நேராக தூக்கி எறியற சத்தம் முழங்கியது. நான் அதிர்ச்சியோடு செய்வது அறியாது நின்றேன்.

    ’வந்திரு…… இனி இங்க நிக்க வேண்டாம் இந்த கேக்க இங்கே யாரும் வாங்கப் போறதில்லை. நீ இதை திரும்ப எடுத்துட்டு போ. அது முடியாதுன்னா நான் வேற வழி ஒன்னு சொல்றேன்.’ ஹில்டா என்னை கூட்டிக்கொண்டு நடத்தாள். நாங்க பொகையிலை (போதை)  திங்கிற பெரியப்பாவையும் பெரியம்மாவையும் கடந்து கீழே இறங்கினோம்.

    ஹில்டா என்னை வழிநடத்தியது ஒரு பன்றித் தொழுவத்திற்கு.  அதற்குள் பத்திருபது பன்றிகள் நெருக்கமாக நின்றிருந்தன. அவற்றில் சில குட்டிகள். வளர்ந்த பன்றிகளின் சின்ன கண்களில் உதாசினமும் விரக்திமும்  நிழலோடியது.

    ‘இவைகள்ல ஏதாவது ஒன்று பிறந்தது இன்றைக்காக இருக்கக் கூடாதா?’ என்று ஹில்டா கூறினாள்.

    சரிதான் நான் பிறந்த நாள் கேக்கை கொஞ்சம் கூட தயங்காமல் பன்றிகளுக்கு முன்பு வைத்தேன்.

    பன்றித் தொழுவத்திற்கும், ஹோப் வில்லாவிற்கும், புடக்காலியில் உள்ள மரங்களுக்கும், வெளியில் பறந்து கிடக்கின்ற தேயிலை தோட்டத்திற்கும் மேலே அமைதியும், தூய்மையும் ஆன பிறந்தநாள் இரவு.

    Share
  • சைக்கிள் (சிறுகதை)

    சைக்கிள் (சிறுகதை)

    முனைவர் நா. தீபா சரவணன்
    உதவிப்பேராசிரியர்
    குமரகுரு பன்முகக் கலை அறிவியல் கல்லூரி, கோவை.

    “ஹலோ………     ஹலோ………….”

    “ஹலோ………………….. சொல்லு காயத்ரி”

    “ஏய், இந்து நேரமாச்சு. இன்னும் வரலயா. நீ”

    “வந்திட்டு இருக்கேன். நீ கிளம்பிக்கோ.”

    “ஏன் லேட்டாகுமா. நா  எப்பவும் போல வடகோவ டர்னிங்க்ல தா நிக்கறே. ஓண்ணாத்தானே போவோம்.  வா வெயிட் பண்றேன்.”

    ”இல்ல வேண்டாம். நீ போ. நா இப்போதா அக்ரி காலேஜ் வர்றே. கொஞ்சம் லேட் ஆகும். எனக்கு First ஹவர் Free தா இந்த மாச பர்மிஷன் இருக்கு லேட் ஆனா பர்மிஷன் போட்டுக்கறேன்.”

    “ஏ வண்டி ஏதும் பஞ்சர் ஆயிடுச்சா?”

    “இல்ல காயத்ரி. ஒரு ஸ்வாரஸ்யமான சம்பவம். ஒரு வாரமா நெனச்சிட்டு இருந்தேன். இன்னக்குதா நடக்குது. நா வந்து சொல்லறே. நீ கிளம்பு. இன்னக்கு உங்க டிப்பார்ட்மென்ட் ஈவன்ட் வேற இருக்குல்ல. பிரின்ஸிகிட்ட ரெஜிஸ்டர் போயிடப்போகுது. நா வந்தர்றே. ”

    ’என்ன இவ ரொம்ப உற்சாகமாப் பேசறா. பர்மிஷன் போடறேங்கறா. வீட்லயும் இல்ல. அக்ரி வந்திட்டேங்கறா. ரெண்டு பேரும் வெயிட் பண்ணி ஒண்ணாதானே பீளமேடு வரப் போவோம். இந்த காலேஜில வேலக்கு சேர்ந்ததிலிருந்து இப்படித்தானே போய்கிட்டு இருக்கோம். அவ தைர்யத்திலதா நானே வண்டில போகவே ஆரம்பிச்சே. சரி வரட்டும் வந்து என்னானு கேட்டுக்கலாம். ’

    ’ச்சே ஒரு போட்டோ கூட சரியா விழமாட்டேங்குது. விடக்கூடாது. மறுபடியும் கொஞ்சதூரம் வண்டிய ஓட்டிட்டு போய் நின்னு எடுக்கலாம். ஒரு வாரமா நா அவுங்கள கவனிச்சுட்டு வர்றது அவங்களுக்குத் தெரிய வாய்ப்பில்ல. அவங்களுக்குத் தெரியாமத்தா வீடியோ எடுக்கணும். தெரிஞ்சா என்ன நினைப்பாங்க. தினமும் அவங்க  நேரமும் நா போற நேரமும் ஒண்ணாதா இருக்கு. அவங்களுக்குள்ள என்ன ஒரு புரிதல். என்ன ஒரு முயற்சி. என்ன ஒரு பாசம். விட்டுக்கொடுக்கறது. இருந்தா இப்படி இருக்கணும். அவங்களுக்குப்பின்னாலிருந்து போட்டா எடுத்தாச்சு. வண்டியைக் கொஞ்சம் பாஸ்டா ஓட்டிட்டுப்போயி முன்னாடி தெரியாத மாதிரி நின்னு அவங்க ரெண்டுபேரும்  வற அழக வீடியோ எடுக்கலாம். நம்ம வீட்டுக்காரர் குமாருக்கு இத காமிக்கணும். அப்போதாவது குமாருக்கு புரியட்டும். ஊரு உலகத்தில எப்படி எல்லாம் இருக்காங்கணு.

    நா  ஒருவாரமா பாக்கற இவங்க மட்டும் வீட்டில சும்மாவா இருப்பாங்க. கண்டிப்பா ஏதோ ஒரு வேலக்குப் போயிட்டு தா இருப்பாங்க. இருந்தாலும் தினமும் எப்படி டைம் ஒதுக்கறாரு. காலைல அத ஒரு கடமையா செய்றாரு. வேலக்குப்போற பெண்களுக்கு வீட்டில நிறைய வேல இருக்கும்னு அட்ஜஸ்ட் பண்ணிட்டுதானே இவரு இதப்பண்றாரு. அப்போ குழந்தைக்கும் சந்தோஷமா இருக்கும். காலைல குளிரு, பனி இதெல்லாம் பார்க்காம குடும்பம்னு நெனச்சு எப்படி நடந்துக்கறாரு. பலதடவ சொல்லி பார்த்தாச்சு. குமாருகிட்ட குழந்த முன்னாடி அந்த மாதிரி  பேசாதீங்கணு. எப்போ பார்த்தாலும் குமாருக்கு விஷ்ணுவ திட்டறதே வேல. அஞ்சாவது போறான். ஆனா அப்பா பாசம்னா  என்னானே  தெரியாது. பாட்டி தாத்தா கூடவே இருந்திருந்தாக் கூட அவெ ஏங்கமாட்டா ரெண்டு பேரோட பெத்தவங்களும் ஊர்ல தோட்டத்த விட்டுட்டு வர்ற எண்ணமே கிடையாது. ஏதாவது விசேஷத்துக்கு நாங்கதா அங்க போகணும். நா மாசமா இருக்கும்போது குமாரு பெண்குழந்தை வேணும்னு ரொம்ப ஆசப்பட்டாரு. இல்லனு சொல்லல. வீடு முழுக்க அழகான பெண்குழந்தைங்க போட்டாவா மாட்டி வெச்சாரு. ரொம்ப ரொம்ப எதிர்பார்ப்பு. அவரு ஒரே பையனா வீட்ல வளர்ந்தாரா அதனாலயோ என்னமோ பெண் குழந்தைங்க மேல அப்படி ஒரு விருப்பம். அந்த கனவக் கலைச்ச மாதிரி விஷ்ணு வந்து பொறந்தது அவருக்கு ஏனோ பிடிக்கல. ஆண் குழந்தனா என்ன பெண் குழந்தைனா என்ன? கடவுள் தந்தது சந்தோஷமா வளக்க வேண்டியது தானே. அவரு வேல விட்டு வரும்போது  விஷ்ணு ப்ரன்ஸோட விளையாடப் போயிட்டா போதும். ‘கழுத ஊரு மேய போயிடுச்சா. இதுக்குதா சொல்றது. இதே பொட்டப் புள்ளயா இருந்தா ஓடி வந்து என்ன வரவேற்கும்னு  புலம்பவாரு. எதுக்கெடுத்தாலும் அவரு வாயில வர்ற வார்த்த

    ’ஒண்ணக் கொண்டு போயி ஹாஸ்டல்ல சேத்தணும். அவங்க போடற போட்டிலதா நீ உருப்புடுவ.’

    சொல்லி சொல்லியே விஷ்ணுவுக்கு ஹாஸ்டல்னாலே பயமாயிடுச்சு. பைய நைட் தூக்கத்தில எல்லாம் கூட ஹாஸ்டல்ல விடாதீங்க விடாதீங்கணு புலம்பறா. ஏங்க குழந்தய அப்படி சொல்லி பயமுறுத்தாதீங்கணு பலமுறை சொல்லிப் பார்த்தாச்சு. அவன் நண்பர்களெல்லாம் சைக்கிள் வெச்சிருக்காங்க எனக்கும் ஒரு சைக்கிள் வாங்கி குடுங்கணு பலதடவ அழுது அழுது கேட்டிருக்கான்.

    அப்போதெல்லாம் குமாரின் பதில்

    ’எதுக்கு இன்னும் ஓவரா ஊர் மேயவா. எனக்கே ஓட்டத்தெரியாது. உன்ன உட்காரவெச்சு  நா வேற சைக்கிள் ஓட்ட சொல்லித்தரணுமா. வேல விட்டு நா வர்ற அலுப்புக்கு ஒனக்கு இது ஒரு கொரச்சல். போய் படிக்கற வேலயப்பாரு. ஹாஸ்டல்ல கொண்டு போயி விட்டனா அப்பறம் சரியாயிடும் அங்க சைக்கிள வெச்சிட்டு என்ன பண்ணுவே. ’

    குமார மீறி என்னால சைக்கிள வாங்கிக்கொடுக்கவும் முடியாது. அழுதிட்டே ஓடி வந்து மடில படுத்துக்குவா அவன் அப்பாவ பத்தி அவனுக்கும் நெறைய எதிர்பார்ப்புதா. ஆனா எங்கிட்ட சொல்லமாட்டான்.

    ஒரு வாரமா நானும் வேலக்குப்போகும்போது அக்ரிகாலேஜ்கிட்ட பார்க்கறே இந்த அப்பா எவ்வளவு அழகா ஸ்கேட்டிங் ஹெல்மெட், கைமுட்டிக்கு அடிபடாம இருக்க கவர். கால்முட்டிக்கு ஸ்கேட்டிங்க் க்னீ கேப். எல்லாம் போட்டுட்டு. மகனுக்கு சைக்கிள் ஓட்ட ட்ரெயினிங் கொடுக்கறாரு. மகன ரோட்டோரமா லெஃப்ட்ல ஒதுக்கி அப்பா அவன் பக்கத்திலேயே எப்படி மெதுவா ஓட்டிட்டு வர்றாரு. இவருக்கு ஆபீஸ்ல பிரஷர் இருக்காதா? அதயும் தாண்டி மகனுக்காக தினமும் எவ்வளவு நேரத்த செலவு பண்றாரு. இவரு என்ன ஹாஸ்டல்ல விட்டிருவேனு மிரட்டறாரா. பார்த்தா விஷ்ணு மாதிரிதா இருக்கா.   தினமும் பார்க்கறே மெய்மறந்து ஆசயோட பார்க்கறே. எதிர்பார்ப்பைக் கனவாக்கி நின்னு ரசிக்கறே. ஆள நின்னு கவனிக்க நேரமிருக்காது. இன்னக்கு எப்படியாவது வீடியோ எடுத்து குமாருகிட்ட காமிச்சாவது சொல்லிப்பார்க்கலாம். மனசு  மாறி ஒரு வேள சைக்கிள் வாங்கிக்கொடுக்க முடிவு பண்ணீட்டார்னா. பர்மிஷன் போடறதுனு ஆயிடுச்சு. குமாருகிட்ட பர்மிஷன் போட்டு . இந்த போட்டோ எடுக்கற வேலய செஞ்சேனு சொல்லக்கூடாது. வீட்டிலேயே கொஞ்சம் வேல இருந்துச்சு. சப்பாத்திக்கு மாவு பெசஞ்சு  ஃப்ரிட்ஜில வெச்சிட்டு வந்தேனு ஏதாவது சொல்லணும். என்ன வேணும்னாலும்  சொல்லலாம் ஏனா எனக்கு முன்னாடியே குமாரும், விஷ்ணுவும் கிளம்பிப் போயிடுவாங்க. காலைல மெதுவா கிளம்பினாலேப் போதும். ஆனா நான் கிளம்பறதுக்கு முன்னாடியே அவசரமா கிளம்பிடுவாங்க.

    அவர்களின் சைக்கிளுக்கு  முன்னால் சென்று சில போட்டோக்களை எடுத்து மீண்டும் வண்டியை ஒட்டிச்சென்று முன்னால் சென்று நிறுத்தி வீடியோ எடுத்தேன்.

    ’எனக்கும்  இப்படித்தானே அப்பா ஒரு சைக்கிள் வாங்கித்தர அவ்வளவு யோசித்தார். டைப்பிங் க்ளாஸுக்கும் வீட்டிற்கும் ஒன்றரை கிலோமீட்டர் தினமும் நடந்தே போகணும். கேட்டா ’ 2 கி.மீ தூரம் இருக்கற ஸ்கூலுக்கே நடந்து போயி பத்தாவது முடிச்சாச்சு. இனி எதுக்கும்பார்.’ அப்போ எல்லாம் நடக்கறது சிரமமே இல்ல. கூடப்பேசிட்டு வற இரண்டு தோழிகளும், ஒரு அஞ்சு அம்பலங்கா எலயும் அஞ்சாறு தொவரையும் இருந்தா போதும். அம்பலங்கா எல என்ன வியாதிக்கு திங்கறதா? சாப்பிடலாமா? இல்லையானு கூடத்தெரியாது. கொஞ்சம் புளிப்பா இருக்கும். வாயில போட்டு மென்னுகிட்டே வீடு வந்திருவோம்.

    தொண்ணூறுகளில் பெண்கள் சைக்கிள் ஓட்டறதே ஆச்சர்யமான விஷயமாக இருந்த கிராமம் அது. விஷுவிற்கு சொந்தக்காரங்க வீட்டுக்கு ஒவ்வொருத்தர் வீட்டுக்கா போயி கைநீட்டம் வாங்குவோம். அப்போ மட்டும் அப்பா அப்பாவோட சைக்கிள ஓட்டத்தருவாரு. அது காலு எட்டவும் எட்டாது. ஏறி உட்கார்ந்து கொஞ்ச தூரத்துக்கு யாராவது சைக்கிளப் புடிச்சிட்டு கூடவே வரணும். அதுக்கப்பறந்தா கைவிடணும். பாவம் கொஞ்ச தூரம் ஓடறதுக்குள்ள அப்பாவுக்கு மூச்சு வாங்கும். அதனால  எறங்கிடுவேன். வயசு 75 ஆச்சு இன்னும் அப்பாகிட்ட அதே சைக்கிள்தா. அப்பாவைப்போலவே அதுவும் ஒரு சுமைதாங்கி. என் கல்யாண வேலை அத்தனையும் சைக்கிள்ல போயி தானே அப்பா செஞ்சாரு. பஸ்ஸை விட்டு கல்யாணத்துக்காக இறக்கும் ஒவ்வொரு காய்கறி மூட்டையையும் மூட்ட தூக்கறவன கூப்பிட்டா பத்து  ரூபா, ஆட்டோக்கு 20 ரூபானு பஸ்ஸ விட்டு இறங்கி மூட்டைய பஸ்ஸடாப்ல வெச்சிட்டு வீட்டுக்கு வந்து சைக்கிள் எடுத்திட்டுப்போய் ஒவ்வொரு மூட்டையாக வீட்டிற்குக்கொண்டு வருவார். பஸ்ஸடாப்பிற்கும் வீட்டிற்கும் ஒரு கிலோ மீட்டர் இருக்கும்.. பைப் ஒடைந்து தண்ணி வராத நாட்களில் கொடத்தக் கட்டி நாலு கிலோமீட்டர் தூரத்திலிருந்து தண்ணி எடுத்துட்டு வர்றதும் அந்த சைக்கிள்லதா. அடுப்பெறிக்க  விறகு வாங்க. ரேஷன் பொருட்கள் வாங்க, மாவு பொடிக்க, சொசைட்டில போயி பாலு வாங்க. காய்கறி வாங்கனு இப்படி ஒரு நாளைக்கு எத்தன தடவ அந்த சைக்கிள எடுத்திட்டுப் போவாருனு தெரியாது. அப்பாகூட போகும்போது நா எப்போதும் சைக்கிள் கேரியலில்தான் உட்காருவேன். தங்கச்சிக்கு சைக்கிளின் முன்னால கம்பியில. ஸ்பெஷல் குட்டி சீட். கால் வைக்கறதுக்கு அதிலேயே செட் பண்ணியிருந்தார். அக்காவும் தம்பிக ரெண்டு பேரும் வரமாட்டாங்க. இத்தன வேலக்கும் பயன்படுத்தற சைக்கிள்ல அம்மாவ உட்கார வைக்க முடியலயேனு வருத்தம் அப்பாகிட்ட இருக்கதா செய்யும் போல. அம்மா அதுக்கல்லா வரவேமாட்டாங்க. எங்க வீட்ட விட்டு வெளிய எறங்கறதே அபூர்வம்தா.

    இத்தனக்கும் சித்தப்பா சைக்கிள் கடதான் வெச்சிருந்தாரு. சைக்கிள வாடகைக்கு விடற கட. சைக்கிள்ல பின்னாடி நம்பர் போட்டிருக்கும். ஒரு நோட்ல பேரு எழுதி சைக்கிள் நம்பர் போட்டுட்டு டைம் எழுதி வெச்சிட்டு கொடுக்கணும். 2 ரூபா முன் கூட்டியே கொடுத்திட்டு சைக்கிள  எடுத்திட்டு போலாம். ஒருமணி நேரத்துக்குள்ள வந்துட்டா ஒரு ரூபாயை திரும்ப வாங்கிக்கலாம். சித்தப்பா என்னை அடிக்கடி கடைல உட்கார வைப்பாரு. எனக்கும் நோட்ல எழுதிட்டு காசு வாங்கறது ரொம்பப்புடிக்கும். சித்தப்பாகிட்டயும் சொல்லிபார்த்திட்டே

    “சித்தப்பா எனக்கு லேடி சைக்கிள் வாங்கி குடுங்க. இல்ல கடைக்காவது வாங்குங்க. நானும் வாடகைக்கொடுத்து எடுத்துக்கறே எங்கிட்ட கைநீட்ட காசு நெறைய இருக்கு.”

    ”சொல்லிவெசச்சிருக்கே கிடச்சா கொண்டு வர்றேனு சொல்றாரு. பார்ப்போம்னு சொல்லுவாரு.  அது நடக்கவும் இல்ல.

    அப்போ ஒன்பதாவது படிக்கறேனு நெனக்கறே. வீட்டில ஏதோ மராமத்து வேல நடந்திட்டு  இருந்துச்சு. ஒரு மேஸ்திரியும் ரெண்டு கையாளும் வேல செஞ்சிட்டு இருந்தாங்க. பின்னாடிப்பக்கம் அடுக்களையிலிருந்து வெளியிலிறங்கற திட்டு ஒடஞ்சிருச்சு. சரிசெய்யணும். கொஞ்சம் அல்லற சில்லற வேலயும் இருந்துச்சு.  வேலைக்காக வாங்கின அளவான சிமெண்ட் தீர்ந்ததும் மேஸ்திரி சிமெண்டு வேணும்னுட்டார். அப்பா இருந்தா சைக்கிள்ல கொண்டுவருவார். அப்பா வேலக்கிப் போயிட்டாரு. கடைல போயி சொன்னா மூட்டை தூக்கறவங்க கொண்டு வந்து தருவாங்க. ஃபோன் இல்லாத காலம் லேண்ட்லைன் ஃபோன் இருந்தவர்களை பெரிய பணக்காரர்களாக நினைத்து ஆச்சர்யமாகப் பார்க்கப்பட்ட காலம். ஒரு கிலோ சாப்பாட்டு அரிசியே எட்டு ரூபாதா.. மூட்ட தூக்கறவங்களுக்கு 10ரூபா கொடுத்தா அப்பா திட்டுவார். மேஸ்திரி சிமெண்ட் இல்லேனா மீதி வேலய நாளக்கி வந்து பண்ணிக்கலாங்கறாரு. நா வேகமா அம்மாவ கூப்பிட்டேன்.

    ’ம்மா எங்கூட வர்றீங்களா. சிமெண்ட நானே சைக்கிள்ல வெச்சு கொண்டு வர்றேன். புள்ளய பையனமாதிரி வளர்த்திருக்கோம்னு அம்மாவுக்குப் பெரும வேற. சைக்கிள எடக்கால் போட்டுக்கூட ஓட்டத்தெரியாது. உருட்டிக்கொண்டே கடைவர போயாச்சு. காசு கொடுத்ததும் போர்ட்டர் ஒரு மூட்டையை கொண்டுவந்து சைக்கிளில் வைக்க வந்தாரு. என்னை சைக்கிளை நன்றாகப் பிடிக்கச்சொன்னார். ”பரவால்லண்ணா வையிங்கனு” சொன்னதும் அவரு பின்னாடி கேரியல் கம்பியை  இழுக்காமல் அப்படியே வைக்கப்போனார். ’அண்ணா கேரியல் கம்பியை இழுத்திட்டு வையிங்க.’

    ’வேண்டாம்மா சிமெண்ட் 50 கிலோ வெயிட் அப்படியே நின்னுரும்.’ என்று சொன்னதும்  பொத்துனு  சைக்கிள் பின்னாடி மூட்டய வெச்சாரு. முன்னாடி லேசா உருட்டிட்டுப்போக  சௌகர்யமா ஸ்டேண்டை எடுத்துவிட்டுட்டு புடிச்சிட்டு இருந்தேன். பின்னாடி வெயிட்டை வெச்சதும் சைக்கிள் அப்படியே முன்னாடி பாகம் மேலே தூக்கிருச்சு. எனக்கு இது தெரியவே தெரியாது. எப்படி கீழே கொண்டு வர்றதுணு வேற பதட்டமா போச்சு. பஸ்ஸடாப்பிற்கு பக்கம்தா சிமெண்ட் கட வேற. . எல்லோரும் பாத்து சிரிப்பாங்களேணு அவமானம் வேற. அப்போ அங்கே பஸ்ஸடாப்பில் உட்கார்ந்து கத பேசிட்டு இருந்த முத்து அண்ணன்தா ஓடி வந்தாரு. ”கொண்டா நா கொண்டுபோய் வீட்ல விடறேனு” சொன்னாரு.

    அப்பவும் இயலாமையை ஒத்துக்காம ”இல்ல வேண்டாம்னா ஸ்டேண்ட் போட்டு நிறுத்திக்குடுங்க நா மெதுவா தள்ளிட்டு போய்க்கறே. அம்மா பின்னாடி புடிச்சுப்பாங்க.” மறுபடியும் ஸ்டேண்ட் தள்ளிவிட்டதும் சைக்கிள் தள்ளாடத்தொடங்கியது. அந்த அண்ணன் ”தள்ளும்மா நீ” என்று அவரே ஓட்டிட்டு வந்து வீட்டில சிமெண்ட எறக்கிவெச்சிட்டு நடந்து போனாரு. அன்னக்குப் பட்ட அவமானமோ என்னமோ இப்போ டூவீலர்ல இப்படி பறக்கறே.

    பத்தாவது முடிந்து டைப்பிங் க்ளாஸ் லோவர் முடிஞ்சு இப்போ ப்ரி டிகிரி வேற. அப்போதெல்லாம் பத்தாவது முடிச்சதும் காலேஜ். ப்ளஸ் ஒன் ப்ளஸ் டூ கிடையாது. காலேஜுக்கு பஸ்ல போயிடுவேன். கடைக்குப்போக, டைப்பிங் க்ளாஸ் போகத்தான் ஒரு சைக்கிள் கேட்டிட்டே இருந்தேன்.

    புலம்பி புலம்பி கேட்டு கேட்டு அழுது அழுதுகடைசியா அப்பா எனக்கு ஒரு சைக்கிள் வாங்கித்தந்தாரு. ப்ளஸ் டூ படிக்கும்போது நாலாவது அஞ்சாவது படிக்கற புள்ளக ஓட்டற கால்வண்டி. நா அப்பவே நல்ல ஒயரம் . என் ப்ரண்ஸலேயே நான் தா கொஞ்சம் ஒயரம் ஜாஸ்தி. அந்த கால்வண்டியே எனக்கு மாருதி கார் கிடச்சமாதிரி இருந்துச்சு. சைக்கிள் கிடச்சது மட்டும்தா என்னால பார்க்க முடிஞ்சுது. பல வருடமா போராடிக்கேட்டு, அழுது புலம்பி எனக்குனு தனியா கிடச்ச ஒரு வண்டி. அது சின்னதா? பெரிசா? என் உயரத்துக்கு அது எப்படி இருக்கும் நா ஓட்டிட்டுப்போனா சர்க்கஸில கோமாளி சின்ன சைக்கிள ஓட்டுவாரே அது மாதிரி இருக்குமா என்றெல்லாம் நினக்கத் தோணல. அதில பைய மாட்டிட்டு கடைக்குப் போயிட்டு போயிட்டு வற ரொம்பப் புடிக்கும். இப்போ இருக்கற புள்ளக எவ்வளவு மெச்சூடா இருக்காங்க. எனக்கெல்லா அப்போ  ஒண்ணுமே தெரியாது. பத்தாவது படிக்கும்போது எங்க கணக்கு வாத்தியாரு அதுக்குத்தானே திட்டிட்டே இருப்பாரு. ’கழுதகளாட்ட வளர்ந்திருக்கீங்க. புள்ளக பையனுக இப்படியா சேந்து ஆடறதுனு’ ஒட்டுமொத்த க்ளாஸையும் திட்டுவாரு.  நாங்க வகுப்பு பசங்க புள்ளக வேறுபாடு பாக்காம ஒண்ணா சாப்பிடுவோம். லஞ்ச் பிரேக்கில ஒண்ணா விளையாடுவோம். ஓண்ணா திட்டு வாங்குவோம். கால மாற்றத்தை நினைச்சா ஆச்சர்யமா இருக்கு. டி.வி ல வர ஒவ்வொரு நிகழ்ச்சிய பாத்தா ‘ஏழாவது படிக்கும்போதிருந்து லவ் பண்ணிட்டு இருக்கோம். எட்டாவது படிக்கும்போதிலிருந்து லவ் பண்ணிட்டு இருக்குமோனு. இப்போ வளர்ற புள்ளகள மீடியா எதஎதயோ யோசிக்க வைக்குது. நாங்க படிக்கும்போதெல்லா லவ்வுனா என்னானே தெரியாதே. திட்டு வாங்க மட்டும்தா தெரியும்.

    காலேஜ் முடிச்சு மத்தியானம் 3 மணிக்கு வந்திருவேன். வந்ததும் ஏதாவது வாங்க வேணுமானு கேட்டு பைய மாட்டிட்டு கடைக்குப் போயிடுவே. கடைக்கு சைக்கிள்ல போயிட்டு போயிட்டு வற ரொம்பப்பிடிக்கும். அதுவும் அம்மா ரெண்டு பொருள் சொன்னா ரெண்டையும் ஒண்ணா வாங்கிட்டு வரமாட்டேன். ஒண்ணு ஒண்ணாதா வாங்கிட்டு வருவே. ரெண்டு தடவ சைக்கிள்ல கடைக்குப் போறதுக்காக. சைக்கிள கொண்டு போயி கடைக்கு முன்னாடி ஸ்டேண்டு போட்டு  நிறுத்தும்போது  எல்லாரும் என்ன பாப்பாங்க. நான் நெனச்சே என்ன பெருமையா பாக்கறாங்கணு. ஆனா இப்போ நெனச்சுபாத்தா தெரியுது எப்படி நக்கலா பாத்திருப்பாங்கணு ஒரு வேள சைக்கிளிலிருந்து கீழே விழுந்தாலும் அடி பெரிசா பட்டறக்கூடாதுனு அப்பா யோசிச்சிருப்பாரோ. இல்ல அவரு பட்ஜெட்டிற்கு இதுதா ஒத்து வந்திருக்குமோ. இல்ல சின்னதா வாங்கி குடுத்தா வீட்டுக்குள்ளேயே வாசல்ல ஓட்டிட்டு இருப்பே வெளில போகமாட்டானு சிந்திச்சிருப்பாரோ. எப்படியோ எனக்கு அப்படியாவது ஒரு சைக்கிள் கிடச்சது. ஆனா என் பையனுக்கு அதுவும் கிடைக்க மாட்டேங்குது.

    அவங்க ரெண்டுபேரும் ரொம்பதூரம் போகற வர  வீடியோ எடுத்தபிறகு பின்னால இருந்து இரண்டு மூன்று போட்டோ எடுத்தேன். சரி. இனியும் ஒரே ஒரு போட்டோ அவங்க ரெண்டு போரோட முகமும் நன்கு தெரியற மாதிரி ஒரு போட்டா எடுத்தா நல்லா இருக்கும். ஹெல்மெட் போட்டிருக்கறதனால சரியா முகமும் தெரியமாட்டேங்குது. ஒரு வேள நமக்குத் தெரிஞ்சவங்களா இருப்பாங்களோ. பின்னாடி பாத்தா எங்கேயோ பாத்த மாதிரியும் இருக்கு. தினமும் பாக்கறதனால அப்படி தோன்றியிருக்கலாம்.  எதுக்கும் பக்கத்தில போயி பாக்கலாம். வண்டிய வேகமா ஸ்டாட் செய்தேன். அவங்க ரொம்ப தூரம் போயிட்டாங்க நானும் வேகமாக ஓட்டினேன் அவர்கள் அருகில் வந்ததும் மெதுவாக அவங்களோட சேரந்து பயணிப்பது போலவே ஓட்டினேன். அப்பா மகனின் உரையாடல் காதுகளில் விழுந்தது.

    ”அப்பா முடியலப்பா….. ப்ளீஸ் காலு வலிக்குது”

    அப்பா பையனோட முதுகு பக்கம் பிடித்து அப்படியே தூக்கறத பாத்தே. பையன் சீட்டிலிருந்து சற்று இருக்கையை தூக்கினான்.

    “நோஞ்சா எதுக்கும் கையாலாகாத உதவாக்கர ஏதாவது தெரிஞ்சக்கணும்னு தோணுதா.”

    ”இல்லப்பா  நேத்து  ஃபுட்பால்  க்ளாஸில  விழுந்துட்டேன். நைட்டு ஹிந்தி டியூஷன் முடிச்சு வர்ற  லேட்டானதால ஹோம்வர்க் பண்ணல. மிஸ் வெளியயே நிக்க வெச்சிட்டாங்க. காலு வலிக்குதப்பா.”

    ”மூணாவது  படிக்கும்போதே  ஒனக்கு இவ்வளவு சோம்பேறித்தனம். திங்கறயில்ல மூணு வேள வக்கனயா. வலிச்சா பரவால்ல ஓட்டு. வீட்டில இருக்கவே  விடக்கூடாது. உன்ன கொண்டு போயி ஏதாவது ஹாஸ்டல்ல தள்ளி விடணும். அப்பதா  நீ எல்லா உருப்படுவே. என்னோட  ஒரு  கனவையும் உங்கிட்ட நிறவேத்த முடியாது. ஃபுட்பாலுக்கு க்ளாஸ், ஹிந்தி டியூசன், பாட்டு க்ளாஸ், கராத்தே, சைக்கிள் எல்லாமே சேத்துவிடறே இல்ல அப்போ நீ இப்படிதா பிஹேவ் பண்ணுவ.. அழுகாம ஓட்டு.”

    என் வண்டியோட வேகத்தக் கூட்டினேன் கொஞ்ச தூரம் போனதும் எனக்குத்தெரியாம ஏதோ ஒரு நெருடல் ஓரமா வண்டிய நிறுத்திட்டு என் மொபைலைக் கையிலெடுத்தேன்.

    Share
  • ஸ்ராவணி (மொழிபெயர்ப்புச் சிறுகதை)

    முனைவர். நா. தீபா சரவணன்
    உதவிப்பேராசிரியர்
    குமரகுரு பன்முகக் கலை அறிவியல் கல்லூரி, கோவை.

    மூல நூலாசிரியர்: சி.வி.பாலகிருஷ்ணன்
    மொழி : மலையாளம்
    தமிழில்: முனைவர்.நா.தீபா சரவணன்


    மரணம். . . . .

    இரண்டாவது  நாளும் மருத்துவமனை  படுக்கையில் கிடக்கும் ஸ்ராவணியைத் தேடிவரவில்லை. ஆனால் வந்ததோ ஒரு தனியார் தொலைக்காட்சியின் மேக்கப்மேனும் ஒரு பெண் நிருபரும். இரண்டு கேமரா அசிஸ்டென்டுகளும் உடன் இருந்தனர். மருத்துவ அதிகாரிகளின் அனுமதி அவர்களுக்கு ஏற்கனவே கிடைத்திருந்தது.

    “இல்ல நாங்க ஒருவிதத்திலும் சிறுமியை  தொல்லை  செய்யமாட்டோம்.”

    நிருபரான ரேணுகா இரண்டாவது நாளும் மரணம் தேடிவராத மாணவியின் பெற்றோரிடம் நயமாகக் கூறினாள். மேக்கப் மேன் சுனில் பட் அதிகம் பேசாத குணம் உடையவனாதலால் தலையை மட்டும் ஆட்டி ரேணுகாவிற்குத் துணைநின்றான். எப்படியிருந்தாலும் எங்களுக்கு நிறைய வேலை இருக்கு கொஞ்சம் அவசரம்ங்கற தோரணை அவனது முகத்தில் ஓடியது.

    ”சொல்லப்போனா நேத்தே நாங்க வந்திருக்க வேண்டியது. எங்க துரதிர்ஷ்டம் என்ன நடந்துச்சுனு இன்னைக்குக் காலைலதா ஆபீஸ்க்கே தெரியுது. உடனே  நாங்க இங்க வர்றோம்.”

    ரேணுகா விளக்கினாள். அதற்குமேல் அவளுக்கொன்றும் சொல்வதற்கில்லை. தனது படபடக்கின்ற மனதுக்கு ஓய்வு கொடுக்கலாம் என நினைத்து தனது பையிலிருந்து சிகரெட் பாக்கெட்டை வெளியில் எடுத்தாள். ஆனால் மருத்துவமனைக்குள் புகைக்கலாமா என்ற சந்தேகத்தில் மீண்டும்  அதை பைக்குள்ளேயே வைத்தாள்.

    “டோன்ட் கெட் எக்ஸைட்டடு. டேக் இட் ஈஸி” சுனில் மெல்லிய குரலில் கூறினான்.

    ”ஐ ஆம் ஆல்ரைட்” அவள் சிரிக்க முயற்சித்தாள்

    சென்ட் தேரேசாஸ் உயர்நிலைப்பள்ளியில் மூன்றாவது மாடியிலிருந்து ஸ்ராவணி குதித்தது மிகக்கொடுமையான விஷயம் என்றாலும் இரண்டாவது நாளாகியும் மரணம் அவளைத்தேடி வரவில்லை. ஃபினோயில் வாசமுள்ள வழிகள், படிக்கட்டுகள் வராந்தா, மொட்டைமாடி என எங்காவது மரணம் பதுங்கி நின்றுகொண்டிருக்கும். இல்லை நிறம் மங்கின ஜன்னலுக்கருகில் நிலத்தைத்தொடாமல் வாயுவில் கலந்து ஜன்னல் கம்பிகள் வழியாக அவளைப்பார்த்துக் கொண்டிருக்கும். விழுந்து நொறுங்கிய பல பாகங்களையும் சேர்த்து வைத்துத் துணியால் மூடப்பட்ட ஒரு மண்பொம்மை போல கிடக்கிறாள்.

    பளீரென  ஓர்  ஒளி கண்களில்  பட்டபோது அவள் நெளிந்துகொண்டு கண்களைத் திறந்தாள். ஆனால் பாதி திறந்த கண்கள்  வெளிச்சத்தை எதிர்கொள்ள முடியாமல்  மூடவேண்டியிருந்தது.

    “கட்”- ரேணுகா கூறினாள்.

    சென்ட் தேரேசாஸ் ஹைஸ்கூலின் தரைத்தளத்தில் உள்ள ஆபீஸ் அறையிலிருந்து சிஸ்டர் மெர்சிலின் மிருதுவான இருக்கையிலிருந்து மேக்கப்மேன் சுனில்பட்டைப்  பார்த்தார்.

    ”ஓ.கே”- சுனில் கூறினான்

    ரேணுகா கேமராவின் ஒரு பக்கத்தில் குனிந்து நின்றுகொண்டு சிஸ்டர் மெர்சிலினிடம் பேசத்தொடங்குமாறு கை அசைத்துக் கூறினாள்.

    “ஸ்ராவணி, யெஸ் ஐ ரிமம்பர்…… அவள் மார்க்ஷீட் வாங்க தனியாகத்தான் வந்தாள். சிஸ்டர் இடாவும், சிஸ்டர் க்ரிஸ்பினும்  இங்க  எம்முன்னாடி உட்கார்ந்து சில ரெஜிஸ்டர்கள சரி செய்திட்டிருந்தாங்க. அப்போதுதான் ஸ்ராவணி வந்தா”

    ஸ்ராவணி அறைக்குள் ஏறிவந்தபோது சிஸ்டர் இடாவும், சிஸ்டர் க்ரிஸ்பனும் ஒரு நிமிடம் முகமுயர்த்தி அவளைப் பார்த்தனர். சிஸ்டர் இடா அவளுக்கு பௌதீக ஆசிரியர். வரலாற்று ஆசிரியர் க்ரிஸ்பின். முகபாவத்தில் எந்த மாற்றமும்  இல்லாமல் அவளைப் பார்த்தனர். இருவரும் தங்களின் வேலையைத் தொடர்ந்தனர். அவள் சிஸ்டர் மெர்சிலினுக்கு அருகில் நின்றாள். அவளுடைய முகத்தில் தயக்கம் தெளிவாகத்  தென்பட்டது.

    ”நீ இந்த முறையும் பாஸ் பண்ணல. இந்த மார்க்ஷீட்ட எடுத்திட்டுப்போய் பேரன்ஸ்கிட்ட காட்டு. அவங்களுக்கு சந்தோஷமா இருக்கும்.” சிஸ்டர் மெர்சிலின் கூறினாள்

    சிஸ்டர் இடாவும் சிஸ்டர் க்ரிஸ்பினும் வேலைக்கிடையில் மெதுவாக  சிரித்தனர்.

    ’யூனிஃபாமும் புத்தகமும், ஷூஸும் எல்லாம் வாங்கி இங்க அனுப்பும்போது  மனசில என்ன நெனச்சீங்கனு அவங்ககிட்ட கேட்கணும். சிஸ்டர் மெர்சிலின்  மார்க் சீட்டை ஸ்ராவணிக்கு நேராக நீட்டினாள். அவள் மார்க் சீட்டை வாங்கிய உடனே சிஸ்டர்  காலிங் பெல்லில் விரல் அமர்த்தினார்.

    ஸ்ராவணி வெளியேறினாள். அடுத்த சுற்று தெல்மா ஜோர்ஜினுடையது. பிறகு மேகாஜெயின். அதுக்கப்புறம் பவ்யலட்சுமி, அவளுக்குப்பிறகு ராகேஸ்வரி. அடுத்தது நேஹா மைத்ரா. பிறகு அனுஸ்ரீ கிட்வானி  பிறகு டெல்னாஸ்  ஒரே மாதிரி சீருடை அணிந்த சிறுமிகளின் நீண்ட வரிசை அவர்களுக்கு பக்கத்து வழியாக ஸ்ராவணி நடந்தாள்.

    ”இதுதான்  ஸ்ராவணியோட மார்க் சீட் ” ரேணுகா கேமராவின் நேராக அதை உயர்த்திப்பிடித்தாள். அடுத்தடுத்து கீழ்கீழாக குறிக்கப்பட்ட எண்களின் மேல் கேமராவின் நுண்ணியக்காட்சிப் படர்ந்தது. ரேணுகா மார்க் சீட்டின் மறுபக்கத்தைக் காட்டினாள். அங்கே எண்களில்லை. சில வார்த்தைகள். வித்தியாசமான ஒரு மன்னிப்புக்கடிதம். அதற்குக்கீழ் ’உங்களுக்கு சொந்தமான ஸ்ராவணி’

    ”நா  அவளோட அப்பா…….”

    அவர் ரேணுகாவின் முகத்தைப்பார்த்துக் கூறினார். கூட்டமான ஒரு தெரு வழியாக அவர் மூச்சு வாங்க ஓடினார். பலரும் இடித்துக்கொண்டு ஓடியதால் அவருடைய ஓட்டம் தடைபட்டது. சில வாகனங்கள் அவருக்கு அருகில் வந்து திடீரென பிரேக்கிட்டு நின்றன.  ஃபோன் சத்தங்கள் முழங்கின. வித்தியாசமான ஒரு போட்டிக்கிடையில்  மதம் பிடித்த குதிரையைப்போல அவர் பாய்ந்தார்.

    ’வித்யா மந்திர் ஹயர் செகன்ட்ரி’ பள்ளியில் பிரின்ஸிபல் அருணா தேசாய் ரிஸீவரைக் கீழேவைத்துத் தனக்கு முன்னால் உள்ள ஆங்கில ஆசிரியரான சாகரிடம் கூறினார்.

    ”சென் தேரேசாசில் ஒரு சிறுமி மூன்றாவது மாடியிலிருந்து குதித்து விட்டாள். அந்த குண்டு சிஸ்டரோட அகம்பாவம் இனி  கொஞ்சம் குறையும். அவ வெளியில என்ன  சமாதானம்  சொல்லுவாள்

    ”நம்மை தோற்கடிக்கக் கிடைக்கற ஒரு வாய்ப்பையும் சென்ட் தரேசாஸ் வீணாக்கனதில்ல” சாகர் ஞாபகப்படுத்தினான்.

    ஆ……….மா……….

    ”இத நமக்கு பெரிசு பண்ணனும்”

    ”இப்ப நாம இதைப் பெரிசாக்கணும்”

    ”நம்ம சிஸ்டர் மேர்சிலினை இப்பவே போய் பாக்கலாம்”

    சில நிமிடங்கள் கழிந்து அருணா  தேசாவும், சாகரும் கிளம்பினர். அருணாதான் கார் ஓட்டினாள். சாகர் இடதுபக்கம் உட்கார்ந்தான். கார் சென்ட்தெரேசஸை இலட்சியமிட்டு அதிவேகமாகச் சென்றது.

    சிஸ்டர் மேர்சிலினாவின் முகம் திடீரென இனம் புரியாமல் இருண்டது. பார்க்க வந்தவர்கள் கதவுக்கருகில் நின்றனர்.

    அருணாதேசாவும் சாகரும் ஒருவரையொருவர் பார்த்தனர். ஒரு வரவேற்பை எதிர்பார்ப்பதில் அர்த்தமில்லை என்ற சிந்தையைப் பங்கிட்டு அறைக்குள் நுழைந்தனர்.

    ”ரொம்ப சங்கடமா இருக்கு சிஸ்டர் மேர்சலின்” – அருணா தேசாயி கூறினாள்

    சிஸ்டர் மேர்சிலின் மனதில் ஒரு முணுமுணுப்பு மேலிட்டது. ’தேவிடிச்சி சங்கடமா இருக்குதாமா’

    ”உட்காருங்க!…….”. மனதின் முணுமுணுப்பை அடக்கிக்கொண்டு உபச்சாரப்பூர்வமாக சிஸ்டர் மேர்சிலின் கூறினாள்.

    ”அருணாவும்  சாகரும் திடீர்னு இங்கெ!!!!!……”

    ”குழந்தைங்க இப்படி அவங்களப்பத்தி ஓர் உணர்வில்லாமப்  பழகினா நாம என்ன செய்யமுடியும்? சமூகம் நம்மைத்தானே  குத்தஞ்சொல்லும்.”

    சிஸ்டர் மேர்சிலானாவின் மனது மறுபடியும் சகிக்கமுடியாமல் புலம்பியது. ’காமப்பிசாசு. அழுக்கு   டிச்சிலிருக்கற புழு, மூதேவி.’

    ’ஆமா’- சிஸ்டர் மேர்சிலினா  ஆழ்ந்த சிந்தனையிலிருந்து வெளிவந்தவளாய் கூறினாள்.

    ”இனி இப்போ  பேப்பர்காரங்க இத ஊதி பெரிசு பண்ணுவாங்களே அதுதா பிரச்சனை”.  சாகர்  சுட்டினான்.

    ”டி.வி.காரங்க சும்மா இருப்பாங்களா? ”அருணா கேட்டாள்.

    ரேணுகா, சுனில் பட்டின் காதுகளில் ஏதோ கூறினாள். சுனில் கேமரா ஆஃப் செய்தான். அந்த நிகழ்வின் இறுதியில் ஸ்ராவணி கண்கள் மூடிக்கிடந்தாள்.

    ஒரு முழக்கம் கேட்கிறதே அவள் செவிமடுத்தாள். கடல் அலைகள். கேட்வே ஆஃப் இந்தியாவிற்கு நேராக உயர்ந்து வீசி பலவகை நீர்க்கைகளாக அவை வாயுவில் கலந்தன. எல்லைக்கருகில் நிற்கிறவர்கள் ஆரவாரம் செய்தனர். மின்சார விளக்குகளின் ஒளியில் நீர்க்கரங்கள் மின்னியது. ஸ்ராவணி தம்பியின் கையைப்பிடித்துக்கொண்டு  பின்னால் நகர்ந்தாள்.

    அப்போது கறுப்பு நிறக் கோட்டும் பெரிய தொப்பியும் வைத்த ஒருவன் இருட்டிலிருந்து அவளுடைய முன்னால் வந்தான். தோளில் மாட்டின பையிலிருந்து ஒரு கத்தி எடுத்து அவன் தனது கழுத்தில் குத்தினான். ஸ்ராவணி பயந்து சத்தமிடத்தொடங்கினாள். அவனின் கை அசைந்தது. கைப்பிடிவரைத் தாழ்ந்து இறங்கிய கத்தி மறுபடியும் வெளியில் நீண்டு வந்தது. அவன் சிரித்தான். இரண்டு பன்றிகள் போல இருந்தது. ட்ராகுலாவின் முகமாயிருந்தது அவனுக்கு. ஸ்ராவணி அடக்கிப்பிடித்த சத்தத்துடன் பின்னால் நகர்ந்தாள். அவன் தனது செயற்கைப் பற்களை கைகளில் உமிழ்ந்துவிட்டு சத்தமாக சிரித்தான்

    . ஹ……..ஹ….ஹ….ஹ…….

    ”ஸ்டார்ட்” ரேணுகா கூறினாள்

    சுனில் கேமரா ஆன் செய்தான்.

    மாறுவேடக்காரனுடைய சிரிப்பு ஸ்ராவணியின் காதுகளில் முழங்கிக்கொண்டிருந்தது.

    Share
  • அம்மாவும் அலைபேசியும் (சிறுகதை)

    அம்மாவும் அலைபேசியும் (சிறுகதை)

    முனைவர். நா. தீபா சரவணன்
    உதவிப்பேராசிரியர்
    குமரகுரு பன்முகக் கலை அறிவியல் கல்லூரி, கோவை.

    யசோதா அவசர அவசரமாக மூன்று டிஃபன் பாக்ஸிலும் எலுமிச்சம்பழ சாதத்தைப் போட்டாள். உருளைக்கிழங்கு வறுவல், சின்னவன் சேதுவிற்கு காரமில்லாமல் தனியாக, பெரியவன் குமாருக்கு பெப்பர் போட்டு மொறுமொறுவென்று, கணவன் கணேசுக்கு ரொம்ப வறுக்காமல் மிருதுவாக. பொரியல் டப்பாவை நிரப்பினாள். சுடுதண்ணீர் வைத்து மூன்று பாட்டில்களிலும் ஊற்றினாள். மூன்று லஞ்ச் பேக் ரெடி. கணேஷ் இருவரையும் ஸ்கூலில் இறக்கிவிட்டு பிறகுதான் வாடகை எடுக்க வேண்டும். பெரியவன் குமாரின் பத்தாம் வகுப்பு பி ப்ளாக் ஒருபக்கம், சேதுவின் மூன்றாம் வகுப்பு இ ப்ளாக் ஒருபக்கம். பெரியவன் தனியாக போய்க் கொள்வான். சின்னவன வகுப்பு வாசல் வரை கொண்டுபோய் விடவேண்டும். ஆம்னி வேன் இ.எம்.ஐயில் வாங்கினது இது ஒரு சௌகர்யம். தனது பிள்ளைகளை கூட்டிட்டு வர்ற அதே வழியில் அதே பள்ளியில் படிக்கும் மேலும் இரண்டு மாணவிகள் வண்டியில் வருவார்கள்.  ஒருத்தி 3-ம் வகுப்பு சேதுவின் க்ளாஸ் மற்றொருத்தி ஏழாம் வகுப்பு.

    அவசர அவசரமாக மூவரும் வண்டியில் ஏறி உட்கார்ந்தனர். அவர்கள் சென்ற பிறகு யசோதா ஐந்து நிமிடம் உட்காருவாள். டீயைக்குடித்து விட்டு மறுபடியும் வேலை தொடங்குவாள். முதலில் பாத்திரம் கழுவி, வீட்டை ஒதுக்கி, வீடு கூட்டி துடைத்து, சாப்பிட உட்காருவதற்குள் மணி 10.00  ஆகிவிடும். காலை டிஃபன் சாப்பிடுவாள். டி.வி.ல பாட்டு மட்டும் ஓடிக்கொண்டிருக்கும். கொஞ்ச நேரம் உட்கார்ந்துவிட்டு வெளியில் வைத்திருக்கும் ரோசாச்செடி, கொய்யாமரம் சாமந்தி செடிக்கடியில் ஏதாவது செய்துவிட்டு இரண்டு பக்கெட் துணியை எடுத்துக்கொண்டு துவைக்கச்செல்வாள். துவைத்து விட்டு அவள் குளித்து வருவதற்குள் மணி 12.00 ஆகிவிடும். ஒரு மணிவரை ஓய்வு. ஒன்று வீட்டில் உள்ள ஏதாவது கிழிந்த தலையணைக் கவர், இல்லை துணிகளை தைத்துக் கொண்டிருப்பாள். இல்லை ஏதாவது அறையை சுத்தம் செய்வாள். எப்போதாவது பக்கத்து வீட்டு கீதாவிடம் போய் கொஞ்சநேரம் பேசிவிட்டு வருவாள். பல நாட்களில் கணவனின் வண்டி வாடகை வீட்டுப்பக்கம் வந்தால் மதியம் சாப்பிட்டு விட்டுதான் செல்வான். சாப்பிட்டபிறகு காய்ந்த துணிகளை எடுத்து மடக்கிவைத்து இரவு டிஃபனுக்கு ரெடி செய்வதற்குள் பசங்க ஸ்கூலில இருந்து வந்திருவாங்க. அப்புறம் அவங்களுக்கு பால் கலக்கிக் கொடுத்து சாப்பிட ஏதாவது வைத்துவிட்டு, கொண்டுசென்ற லஞ்ச் பாக்ஸெல்லாம் கழுவிவிட்டு சின்னவனுடன் கொஞ்சநேரம் பாடம் சொல்லிகொடுக்க உட்காருவாள். பெரியவன் டியூசன் போறதால அந்த வேல இல்ல. நைட் டிஃபன் வேல முடிஞ்சதும் அடுத்தநாள் சமையலுக்கான வெங்காயம் காய்கறிகளை எல்லாம் தோல் எடுத்து வைப்பாள். ஒரு நாள் விட்டு ஒரு நாள் அரிசி ஆட்டற வேலயும் இருக்கும். எல்லாம் முடிந்து படுக்கப்போவதற்குள் மணி 10.30 ஆகிவிடும். இதுதான் அவளது அன்றாட ஓட்டம். ஆனால் பேரு ஹெளஸ் வைஃப்.

    செவ்வாய் கிழமை

    வழக்கம்போல காலை சாப்பிட்டுவிட்டு துணி துவைக்க பக்கெட்டை எடுத்து வைத்துக்கொணடிருந்தாள். வீட்டு வாசலில் பைக் சத்தம் அவர்கள் குடியிருக்கும் தெருவில் ஆங்காங்கே சில வீடுகள்தான் இருக்கும் பகல்பொழுது பெரிதாக நடமாட்டமிருக்காது. ஹெல்மெட்டை கழட்டினபிறகுதான் தெரிந்தது வந்திருப்பது நிஷாந்த் என்று. நிஷாந்த் யசோதாவின் அக்கா குமுதாவின் பையன். காலேஜ் முடித்துவிட்டு சொந்தாமாக வர்க்ஷாப் வைத்திருக்கிறான். அக்கா குமுதாவிற்கு கவர்ன்மென்ட் ஆபீஸில் கிளர்க் வேலை. நிஷாந்திற்கு ஒரேஒரு தங்கை ஜோதி. இவனுக்கும் அவளுக்கும் இரண்டு வயதுதான் வித்தியாசம். யசோதாவை அம்மா என்றுதான் கூப்பிடுவான் . குமுதாவை மம்மி என்று அழைப்பான்.

    ”வாடா என்ன இந்தப்பக்கம். திடீர்னு.”

    ”ஒண்ணுமில்லம்மா வர்க்ஷாப்ல பெரிசா வேல இல்ல.  அதுதா…. உங்கள பாத்து ரொம்ப நாளாச்சே பாத்துட்டு போலாம்னு வந்தே”

    ”மெலிஞ்ச மாதிரி இருக்கீங்கம்மா. ஏம்மா உடம்பு ஏதும் சரியில்லையா….”

    ”போடா நானே வெயிட் போட்டிட்டேனு இருக்கேன். ”

    யசோதா பேரழகி இல்லையென்றாலும் நல்ல கட்டை தேகம். உயரத்திற்கேற்ற உடல்வாகு. பெரிய  கண்கள். சிறிய மூக்கு, பெரிய உதடுகள், திரண்ட மார்பு, பார்த்தால் இரண்டு பிள்ளைகள் பெற்றவள் போலிருக்கமாட்டாள்.

    ”சரி நீ உட்காரு. காபி போடவா? டீ போடவா?”

    ”இல்லம்மா காலைல சாப்பிடல. டிஃபன் ஏதாவது இருக்கா?”

    அவன் எப்போதும் யதார்த்தம்தான். சின்னம்மா வீடுதானே தயங்கமாட்டான்

    சரி இரு வர்றேன் துணியை சோப்புபொடியில் ஊறவைத்து விட்டு வந்து தோசை வார்த்துக்கொடுத்தாள்.

    ”உங்களோட உளுந்து சட்னி சாப்பிட்டு ரொம்பநாளாச்சும்மா”

    ”சரி சாப்பிட்டு இருடா. நா போயி குளிச்சிட்டு வந்திடறேன்.”

    ”ஏ இனியும் குளிக்கலயா. இல்லேனா காலலயே குளிச்சிருவீங்க.”

    ”இல்லடா இப்ப எல்லா வேல முடியறதுக்கே 12 மணி ஆயிடுது. அதுக்கப்பறந்தா குளிக்கறது. தினமும் இந்த நேரமாயிடும்.”

    ”சரி நீங்க போயி வேலய பாருங்கம்மா. நான் கொஞ்ச நேரமிருந்திட்டு கிளம்பிடுவே.”

    அவள் அவசர அவசரமாக துணிகளை துவைத்து காய போட்டுவிட்டு குளித்துவிட்டு வந்தாள்.

    டி.வி.பார்த்துக் கொண்டிருந்த நிஷாந்த் எழுந்து

    ”சரிம்மா நான் கிளம்பறேன் என்றான். ”

    ”இருடா சாப்பிட்டு போலாம்”

    ”வேண்டாம்மா முடிஞ்சா நாளைக்கி வர்றேன்.”

    ”வர்றேனா முதலலேயே சொல்லுடா. ஏதாவது சிக்கன் கிக்கன் வாங்கி வெக்கறே.”

    ”அதெல்லாம் வேண்டாம்மா நேரம் கிடச்சா வர்றேன்.”

    புதன்கிழமை

    அடுத்தநாள் பசங்கள அனுப்பினதும். டயர்டா இருக்குனு யசோதா படுத்திட்டிருந்தா வண்டி சத்தம் கேட்டு வெளியில் பார்த்தா நிஷாந்த்

    ”வா….டா…..”

    ”உங்க கையால சிக்கன் வெச்சு தர்றேனு சொன்னீங்க. அதுதா மிஸ் பண்ண மனசுவரலம்மா. எங்க  வீட்ல இதெல்லா எங்க செய்றாங்க. எல்லா ஸ்விகிதா”

    ”ஐயோ நீ வர்றேனு உறுதியா சொல்லலயா வராம போயிடுவியோனு வாங்கலடா.”

    ”சரி பரவால்லம்மா ஒடம்ப பாத்துகோங்க. எனக்கு சங்கடமில்ல.” என்று டீ மட்டும் குடித்துவிட்டுச் சென்றான்.

    அன்றிரவு “ஏங்க நிஷாந்த் பாவம் சிக்கன் வெச்சிருப்பேன் சாப்பிடலாம்னு வந்தாங்க. பாவம் பைய ஏமாந்து போனா. அக்கா வேற கேம்ப்க்கு போயிருக்காளாம். வர்றதுக்கு ஒரு வாரம் ஆகுமாம். ஆசயா வந்திட்டு பைய சாப்பிடாம போனது சங்கட்டமா இருக்கு.”

    ”அதுக்கெதுக்கு இப்போ உட்கார்ந்து பெனாத்திட்டிருக்கே. நாளக்கி வாங்கி சமச்சு குடுத்திட்டா போச்சு. பேசாம தூங்கு. காலைல நானே வாங்கி குடுத்திட்டு போறேன்.”

    ”ம்ம்…….சரி”

    வியாழக்கிழமை

    ”ஹலோ நிஷாந்த்………. இன்னிக்கு வாப்பா இங்க வந்து சாப்பிடலாம். அவங்களுக்கு தக்காளி சாப்பாடு செஞ்சு குடுத்தனுப்பீட்டே. இனிமே தா சிக்கன் வேல ஆரம்பிக்கணும்.”

    ”அந்த வேல மட்டும்தானம்மா. குளிக்கற வேல துணி தொவைக்கற வேல எல்லாம் முடிஞ்சுதா.”

    ”இல்லப்பா இனிமேதா……. ஏ எதுக்கு கேட்கற”

    ”இல்ல நா எப்போ வந்தாலும் நீங்க பிசியா இருக்கீங்க. எல்லா வேலயும் முடிச்சு ஃப்ரீயா இருந்தா கொஞ்ச நேரம் பேசிட்டு போவேன். ”

    ”சரி நீ வா வர்றதுக்குள்ள முடிச்சர்றேன்.”

    அவன் வருவதற்குள் அவசரமாக சமைத்துவிட்டு, துணிதுவைத்துவிட்டு பாத்ரூமிற்குள் சென்று கதவு சாத்தினதும் வண்டி சத்தம் கேட்டது. அவர்களது பாத்ரூம் வீட்டிற்குள் இல்லை. வெளியில் தான் உள்ளது. 5சென்ட் இடத்தில் ஒவ்வொரு அறையாக கட்டிக்கொண்டிருக்கிறார்கள். ஹாலும் சமையலறையும் எக்ஸ்ட்ரா ஒரு ரூமும் கட்டி குடி வந்துவிட்டார்கள். காசு கிடைக்கும் போது ஒவ்வொன்றாக கட்டிக்கொள்ளலாம் என்பதுத் திட்டம். எனவே பாத்ரூம் வெளியிலிருந்தது.

    வண்டி சத்தம் கேட்டதும்

    ”நிஷாந்த்……….. டி.வி போட்டு பாத்திட்டிரு இதோ ரெண்டு நிமிஷத்தில வந்தர்றே.” என்று பாத்ரூமிற்குள்ளிருந்து சத்தமிட்டாள் யசோதா

    ”சரிம்மா மெதுவா வாங்க” என்று டி.வில பாட்டு போட்டு உட்கார்ந்தான்.

    பாட்டு சத்தம் பாத்ரூம் வரை கேட்டது.

    திடீரென பாத்ரூம் கதவோரம் யாரோ ஓடுவது போல தோன்றியது யசோதாவிற்கு.

    வேக வேகமாக பாத்ரூம் கதவை  தாழிட்டுக்கொண்டு வீட்டிற்குள் நுழைந்தாள் யசோதா. நிஷாந்த் டி.வி பார்த்துக்கொண்டிருந்தான்.

    நிஷாந்த் உங்கூட யாராவது வந்தாங்களா?

    இல்லயே…. ஏம்மா

    இல்ல யாரோ இந்தப் பக்கம் போர்ற மாதிரி சத்தம் கேட்டுது. அதுதா கேட்டேன். அவன் சீக்கிரம் தனது வண்டி அங்கிருக்கா என்று வெளியில் வந்து பார்த்தான்

    அப்பாடா….சாவி வண்டிலேயே இருந்தது ஓடிப்போய் எடுத்து வந்தான்.

    இங்க யாரும்மா ஓடறா. உங்க பிரம்மையா இருக்கும். பகலிலே யாராவது வீடு புகுந்து கொண்ணு போட்டாக்கூட அக்கம்பக்கத்தில யாருக்கும் தெரியாது. இங்க யாரு வர்றா. நான்தா இங்கேயே உட்காந்திட்டிருக்கறனே.

    ஒரு வேள பேய் நடமாட்டம் ஏதாவது இருக்குமோ. ஏதோ யோசித்து விட்டவள் போல சரி வா…… சாப்பாடு போடறேன் என்று சோறு போட்டாள்.

    வயிறு நிறைய சிக்கனும் முட்டையும் தின்றுவிட்டு

    ”கைப்பக்குவம் மாறவே இல்லம்மா……. சூப்பர் லஞ்ச். சரிம்மா வர்க்ஷாப்ல ஒரு பையன உட்கார வெச்சிட்டு வந்திருக்கே. நான் போய் அவன சாப்பிட அனுப்பணும் என்று கிளம்பிவிட்டான்.

    யசோதா ஏதோ குழப்பத்துடன் வேலையைத் தொடர்ந்தாள்

    வெள்ளிக்கிழமை

    இன்றும் நிஷாந்த் சாப்பாட்டிற்கு வருவான் என்று தெரியும். அம்மா ஊரில் இல்லையென்றால் அவள் தங்கை ஏதாவது செய்து ஒப்பேத்திக்கொள்வாள். இவனுக்கு வக்கனையா வேணும்னு குமுதா திட்டிக்கொண்டே இருப்பாள்.

    அன்று என்றும் விட முன்னதாகவே அவள் வேலை முடித்து 11 மணிக்கே குளிக்கப்போனாள். நிஷாந்தின் வண்டி சத்தம்.

    ”நல்ல வேளை ப்பா குளிக்கப்போக பயந்திட்டே இருந்தே. நீ வந்தே”

    ”ஐயோ அம்மா இந்த வயசிலயுமா பயப்படுவீங்க. போங்க நா இங்க வெளியிலேயே உட்கார்ந்திருக்கே. யாரு வர்றாங்கணு பாக்கறே. ”

    ”யசோதா குளித்து முடிக்கும்போது அதேபோல ஓடும் சத்தம் கேட்டது.”

    ”டேய் இங்கதான உட்காந்திட்டிருந்த இன்னக்கி ஓடற சத்தம் கேட்டிச்சில்ல.”

    ”ம்மா… இங்கேயேதா இருக்கறே. எனக்கு ஒரு சத்தமும் கேட்கல.”

    ”நீ ஃபோன பாத்திட்டு உட்காந்திட்டிருந்தா எப்படி கேட்கும். எனக்கு நல்லா கேட்டிச்சு.”

    ”ம்மா பசிக்குது. ஏதாவது தர்றீங்களா. ”

    ”சரிடா வா.சாப்பிடு”

    நிஷாந்த் கிளம்பினதும் யசோதா பயந்துபோய் கதவை சாத்திக்கொண்டு கீதா வீட்டிற்குக் கிளம்பினாள்.

    சனிக்கிழமை

    அடுத்தநாள் காலைல குளிக்கற டைமிங்க மாத்திட்டு கீதா சொன்னமாதிரி பாத்ரூமுக்குள் போனாள். அன்றைக்கு காலைல டிஃபனுக்கே நிஷாந்த் வந்திருந்தான். அவனுக்கு தோசை சுட்டு கொடுத்துவிட்டு குளிக்கப்போனாள். அவன் சாப்பிட்டுக்கொண்டிருந்தான்.

    பாத்ரூமிற்குள் சென்று தாழிட்டுக்கொண்டு, போட்டிருந்த நைட்டியை கழட்டி வேற நைட்டியை அவசரமாக எடுத்து போட்டாள். மெதுவாக குளிப்பது போல தண்ணீரை மொந்து மொந்து கீழே ஊற்றினாள். தண்ணீரை ஊற்றிக்கொண்டே சுற்றிலும் கண்பார்வையை ஓடவிட்டாள். திக்கென்று ஆனது. பாத்ரூம் சுவர் மேல்புறத்திற்கும் கூரைக்கும் இடையில் உள்ள இடைவெளியில் ரெட்கலர் ரெட்மி ஃபோன் ஒன்று, தான் குளிப்பதை வீடியோ எடுத்துக்கொண்டிருந்தது. அவளுக்கு சத்தம் போடவேண்டும் என்றிருந்தது. வாயை பொத்திக்கொண்டு பதட்டப்படாமல் தண்ணீரை எடுத்து எடுத்து ஊற்றினாள். கொஞ்சநேரம் கழித்து தண்ணீர் ஊற்றுவதை நிறுத்தினதும் மெதுவாக ஃபோன் கை கீழே இறங்கியது.

    உள்ளே வந்தவள் நிஷாந்திடம் சொல்லலாம் என்று நினைத்தாள். வேண்டாம் மகனிடம் எப்படி? என்ன நினைப்பான்?

    கிச்சனில் நின்று அதையே யோசித்துக்கொண்டிருந்தாள். நிஷாந்த் தண்ணிகுடிக்க சமையலறைக்கு வந்தவன் தண்ணீர் குடித்துவிட்டு ஃபோனை திட்டிலேயே வைத்துவிட்டு போய்விட்டான். கறுப்பு நிற சாம்சங்க் ஃபோன். அப்போ ரெட்கலர் ரெட்மி இல்ல.

    கணவனுக்கு ஃபோன் செய்து நடந்ததை கூறலாம் என்று ஃபோனை எடுத்துக்கொண்டு வெளியில் வரும்போது நிஷாந்த் டி.வி பார்த்துக்கொண்டே யாரிடமோ பேசுகின்ற சத்தம் கேட்டது. கிச்சனில் பார்த்தாள் அவனது ஃபோன் அங்கேயே இருந்தது. அப்போ அவன் யார்கிட்ட பேசுறான். எட்டிப்பார்த்தாள். நிஷாந்த் கையில் அதே ரெட்கலர் ரெட்மி. ஒரு நிமிடம் இதயம் நிற்பது போலிருந்தது. அடக்கிக்கொண்டு மெதுவாக வெளியில் வந்து கதவை வெளியிலிருந்து தாழிட்டாள். சிறிது தூரம் வந்து கணவனுக்கு ஃபோன் செய்தாள்.

    அவன் உடனே வந்தான். நடந்ததை கூறினாள். அவனுக்கு கொஞ்சம் கூட நிஷாந்த் மேல் சந்தேகம் வரவில்லை. ஆதாரமில்லாம எப்படி கையாள்வது யோசித்தான்.

    ”என்ன சித்தப்பா இந்த நேரத்துக்கு”

    ”இந்தப்பக்கம் வாடக வந்துச்சு. சரி ஒரு டீ குடிச்சிட்டு போலாம்னு வந்தே. நீ கிளம்பிட்டியா.”

    ”ஆமா சித்தப்பா ஒரு அஞ்சு நிமிஷம் உட்கார்ந்திட்டு கிளம்பிடுவேன்.”

    ”ஃபோன வண்டில வெச்சிட்டேன்.. ஒரு நிமிஷம் ஃபோன குடு. ஒருத்தங்க இந்த நம்பருக்குக் கூப்பிடசொன்னாங்கணு கூறி ஒரு பேப்பரை கையிலெடுத்தான்”

    நிஷாந்த் திடீரென்று தெரியாம ரெட்கலர் ரெட்மியை எடுத்து நீட்டினான். கிச்சனில் வைத்த ஃபோனை மறந்தே போய்விட்டான். கொடுத்தபிறகுதான் கவனித்தான்.

    ”சரி ஃபோன் பேசிட்டு தந்திருவாரு” என்று பார்த்துக்கொண்டே இருந்தான்.

    டப்பென்று ஃபோனை கட்பண்ணிவிட்டு கேலரியை பார்த்தான் கணேசன். அதில் யசோதா குளிக்கும் வீடியோ இருந்தது.

    அவள் குளிக்கவில்லை. ஆடையுடன் தண்ணீர் ஊற்றிக்கொண்டிருந்தாள்

    நாடி நரம்பெல்லாம் துடித்தது. இரண்டு மூன்று நாளா அவ சொல்லிட்டிருக்காளே. அப்போ இவன் குளிக்கறத வீடியோ எடுத்திருப்பானே. ஐயோ அவ சொன்னப்பவே கொஞ்சம் உஷாரா இருந்திருக்கலாம்.

    வெக்கு வெக்கென்று வீட்டிற்குள் போனான்.

    நிஷாந்தை செயரோடு சேர்த்து எட்டி ஒரு உதை.

    செயரோடு கீழே விழுந்தான்.

    ”என்னாச்சு சித்தப்பா”

    ”என்னடா இது என்று மொபைலை காட்டினான்.

    நகர்ந்து வந்து கணேசின் இருகால்களையும் கட்டிக்கொண்டான்.

    மன்னிச்சிடுங்க சித்தப்பா

    என்ன காரியம்டா செஞ்சிருக்கே. அவ உனக்கு அம்மாடா

    யசோதா வாயை பொத்தி நின்று அழுது கொண்டிருந்தாள்.

    ”நா தப்பான கண்ணோட்டத்தில எடுக்கல சித்தப்பா என்ன நம்புங்க. ஃப்ரண்டஸ்தா சித்தப்பா. யு ட்யூப்ல போட கேட்டாங்க. வீடியோ குடுத்தா காசு தர்றேனு சொன்னாங்க சித்தப்பா. நம்புங்க ப்ளீஸ்……..

    ”அதுக்கு என்ன கார்யம்டா பண்ணி வெச்சிருக்கே”

    என்ன மன்னிச்சிடுங்கம்மா என்று யசோதாவின் கால்களை ஓடிவந்து கட்டிப்பிடித்தான்.

    அவள் எதுவும் பேசவில்லை

    கணேசன் பெல்ட்டை உருவி சரமாரியாக அடித்தான்

    நகர்ந்து நகர்ந்து சுவரில் சாய்ந்து அழுதுகொண்டே உட்கார்ந்தான்

    உன் தங்கச்சியையும் அம்மாவையும் இப்படிதா வீடியோ எடுப்பியாடா. மகனப் போல நினச்சிருக்காளேடா…. எப்படிடா மனசு வந்துது.

    என்ன மன்னிச்சிடுங்க சித்தப்பா

    போடா நாயே வெளில…….. இனிமே இந்தப்பக்கமே தல வெச்சு படுக்காத

    ஃபோனையும், சிம்கார்டையும் சுக்கு நூறாக உடைத்தான்.

    ”ப்ளீஸ் சித்தப்பா மன்னிச்சிடுங்க. மம்மிகிட்ட சொல்லிடாதீங்க. ப்ளீஸ் சித்தப்பா மம்மிக்கு தெரிஞ்சா என்ன உயிரோடயே விட மாட்டாங்க”

    ”ப்ளீஸ்……. ப்ளீஸ்…….

    ”கிளம்படா இங்கிருந்து நீ செஞ்ச கார்யத்துக்கு உன்னப் பாக்கறதே பாவம். முதல்ல வெளில போ.

    அழுதுகொண்டே வண்டியை ஸ்டார்ட்செய்தான். சத்தத்தை அந்தத்தெருவே வேடிக்கை பார்த்தது.

    அவனை விரட்டிவிட்டு உள்ளே வந்து பார்த்தான். யசோதா மயங்கிக்கிடந்தாள். தண்ணீர் தெளித்து எழுப்பினான்

    அவள் பித்துப்பிடித்தவள் போல ஓரிடத்திலேயே பார்த்துக்கொண்டிருந்தாள். ”ஏங்க இப்படியெல்லா…………………………………. நா என்னங்க தப்பு செஞ்…….சே”

    ”ஒண்ணுமில்ல. அவன் வீடியோவ பாத்தே அப்படியொண்ணுமில்ல. ஒரு கெட்ட கனவா நெனச்சு மறந்திடு.”

    ”இல்லங்க ஊர்க்காரங்க தெரிஞ்சா நான்தா அவன இங்க வரவெச்சதா சொல்லுவாங்களே. என் நடத்தையதானே கேவலமா பேசும்.”

    ”ஊர்க்காரங்கள பத்தி கவலப்படாத. நம்ம வேலய பாப்போம்.”

    ”ஏங்க உங்களுக்கு எம்மேல கோபம் வரலியா. என் மேல சந்தேகமா இருக்கா.”

    ”போ போய் வேலயப்பாரு. பசங்க பாட்டி வீட்டில இருக்கறதும் நல்லதுதா. பசிக்குது ஏதாவது சாப்பிட எடுத்திட்டு வா.”

    ”இல்லீங்க எனக்கு………”

    ”இனிமே இதப்பத்தி பேசாதே. குமுதா வீட்டுக்கு வந்தரட்டும் அதுக்கப்பறம் என்ன பண்றதுனு யோசிக்கலாம்.”

    காபி போடப்போனவள் வெகு நேரமாகியும் வராததால் கிச்சனில் போய் பார்த்தால் மயங்கிக்கிடந்தாள். தண்ணீர் தெளித்துப் பார்த்தான் எழவில்லை. மூச்சுவிட சிரமப்பட்டுகொண்டிருந்தாள்.

    யசோதாவை காரில் ஏற்றி உட்கார வைத்தான்.

    நேராக மருத்துவமனைக்கு வண்டியை ஓட்டினான்.

    டாக்டர் இவ வீட்டில தனியாதா இருக்கா. எதையோ பார்த்து பயந்திட்டானு நெனக்கறே திடீர்னு ஃபோன் பண்ணி வரச் சொன்னா.

    பரிசோதித்த டாக்டர் ஒண்ணுமில்ல நல்லா தூங்கி எழுந்திருச்சா சரியாயிடும். ஒரு ரெண்டு பாட்டில் ட்ரிப்ஸ் போட்டிட்டு கூட்டிட்டுப் போய்க்கோங்க. ரொம்ப டயர்டா இருக்காங்க. தூக்க மருந்து போட்டிருக்கே.  பயப்பட ஒண்ணுமில்ல.

    அட்மிட் பண்ணி  ட்ரிப்ஸ் ஏறிக்கொண்டிருந்தது

    நன்றாக தூங்கிக்கொண்டிருந்தாள்

    கண்களின் ஓரங்களிலிருந்து கண்ணீர் வடிந்து கொண்டிருந்தது.

    ”ஏங்க சார் எதையோ நினைத்து வருத்தப்படறமாதிரி தெரியுது.” என்றார் டாக்டர்

    ஒண்ணுமில்ல டாக்டர். அவ அழுதிட்டு இருக்காளே அதுதா

    இட்ஸ் குயட் நேச்சுரல். ஓவர் டிப்ரஷனா இருக்காங்க அதனாலதா.

    அவன் சொல்லவும் முடியாமல் தவித்தான்.

    ’இவளுக்கு எதுக்காக தூங்கும்போது கூட கண்ணீர் வருது. மகனா நெனச்சவன் இப்படி செஞ்சிட்டானேன்னு அழுகறாளா? யுட்யூப்ல எல்லாரும் பாத்திருப்பாங்கணு நெனச்சு வருத்தப்படறாளா?. ஊர்க்காரங்கள நெனச்சு கவலப்படறாளா? இல்ல என்னை யோசிக்கறாளா?

    மருந்தின் வீர்யம் இமைகளை மயக்கி. எண்ணங்களை உறக்கியது. ஆழ்மன நினைவலைகளை உறங்க வைக்க முடியவில்லை.

    ஆறுதல்களால் ஆறாத ரணமாக அவள் மனது வலித்தது. நன்றாக மயங்கிய போதும் கண்ணீர் நிற்கவில்லை

    பெண்களின் சில ஆழ் மன உணர்வுகளுக்கும் மௌனமான கண்ணீருக்கும் யாராலும் ஆறுதல் கூறமுடியாது.

    Share