கடவுளாய் (சிறுகதை)

முனைவர் நா. தீபா சரவணன்
உதவிப்பேராசிரியர்
குமரகுரு பன்முகக் கலை அறிவியல் கல்லூரி, கோவை.
கணவன் பூமிநாதன் இறந்தபிறகு அவருடைய கனவை எப்படியாவது நெறவேத்தனும்னு நெனச்சு இலங்கையிலிருந்து கடல் வழியாக வந்து டூரிஸ்டு பஸ்ஸில ஏறி இராமேஸ்வரம் சிவன் கோயிலுக்கு வந்து இன்னயோட அஞ்சு நாட்களாச்சு. ‘இராவணன கொல செஞ்ச பாவத்த இராமரே இங்கேதா தீர்த்துகிட்டாராம். அரக்கன் தானே இராவணன். தப்பு செஞ்சதுக்குதானே தண்டனை. இதிலென்ன பாவம் இருக்கு. ம்ம் அதுவும் சரிதா அடுத்தவ பொண்டாட்டிமேல ஆசப்படறது தப்புதா. இருந்தாலும் இராவணன் கண்ணியமா இருந்தாரே. ஆனா இப்போ நடக்கறத பாத்தா எத்தன பொம்பளப்புள்ளக பலியாகுதுக பாவம். எல்லாத்தயும் செஞ்சிட்டு யோக்ய சிகாமணிகளா ஒருசிலரு ஊருக்குள்ள சுத்திகிட்டுத்தானே இருக்கானுக. இதெல்லா எப்போ சரியாகப்போகுது. நமக்கு இங்க மூணுவேள சோத்துக்கே வழியக்காணோ. நம்ம ஒலக நடப்பப்பத்தி யோசிச்சு என்ன பண்ணப்போறோம். அன்னதானம், வாழைப்பழம், பிரசாதம் என எப்படியோ வயறு நெறஞ்சுடுது. இனியும் இப்படி எத்தன நாட்களுக்கு இந்தப்பொழப்பு, தூணில சாஞ்சு கண்களை மூடி யோசிச்சிட்டிருந்தாள் இலட்சுமி. குலசேகரன் மடியில் தலை வைத்துப் படுத்துக் கொண்டிருந்தான். இந்த ஐந்து நாட்களாக யோசித்ததில் அவளுக்கு ஒரு யோசனை தோன்றியது.
இராமேசுவரம் வந்த அன்று அவள் பார்த்த காட்சிகளைச் சிந்தையில் தெளிய விட்டாள். கடலில் மூழ்கி குளிக்கின்ற பலராலும் கழட்டிவிடப்பட்ட ஆடைகள். பலராலும் கழட்டிவிடபட்ட உள்ளாடைகள், துண்டுகள் என ஆங்காங்கே குவிந்து கிடந்தன. குளித்து முடிந்ததும் ஆடைமாற்றிவிட்டுதான் கோயிலுக்குள் செல்லவேண்டும். இலட்சுமி, பையனை வெளியில் நிற்கச் சொல்லிவிட்டு பெண்கள் ஆடைமாற்றும் இடத்திற்குப் போனாள். தனித்தனியாக அறை அறையாக இருக்கும் என்று எதிர்பார்த்தாள். சுத்திலும் மறைக்கப்பட்ட மதிற்சுவர் மட்டுந்தான் உயரமாக இருந்தது. உள்ளே அப்படியே வெட்டவெளி. ஒருத்தர் உடைமாற்றுவதை மற்றவர் பார்க்கலாம். ஆனால் யாரும் யாரையும் கண்டுகொள்வதில்லை. ஒரே ஒரு இடத்தில் மட்டும் வலைபோன்ற கூடை வைக்கப் பட்டிருக்கிறது.
கழட்டிய பயனற்ற ஆடைகளை இடுவதற்காக. ஆனால் கடலில் மூழ்கிக் குளித்துவிட்டு பாவங்களை களைந்தபிறகு, கழட்டிய ஆடைகளை மீண்டும் தொட்டால் பாவம் ஒட்டிக்கொள்ளும் என நம்புகின்றார்கள். அதனால் அந்த ஆடைகளை பலர் அப்படியே ஈரத்துடன் கழட்டின இடத்திலேயே விட்டுவிட்டுச் செல்கின்றனர். ஈரமான ஆடைகள் ஆங்காங்கே கிடந்தன. இரண்டு நாட்களுக்கு ஒரு முறை தான் சுத்தம் செய்வார்களோ என்னமோ அந்த ஆடைகளை எடுத்துச் சென்றாலும் யாரும் கேட்க மாட்டார்கள். அதில் நல்ல ஒரு சேலையை எடுத்து அலசி காயப்போட்டாள். காய்ந்த பிறகு அந்த சேலையை மடிப்பு எடுத்து அழகாகக் கட்டினாள். குலசேகரனுக்கும் அதே போலச் சட்டை ஒன்றை ரெடிபண்ணி மாத்திவிட்டாள். இப்போது இவர்களைப் பார்த்தால் யாருக்கும் எந்த ஐயமும் வராது.
அங்குக் கிடந்த ஆடைக்குவியல்களில் சில நல்ல ஆடைகளையும் துடைக்கும் துண்டுகளையும் எடுத்துக்கொண்டு கடற்கரையை நோக்கி நடந்தாள். அங்கேக் கிடந்த சோப்புத்துண்டுகளைப் பொறுக்கிப்போட்டு நன்றாகக் கசக்கினாள். கொஞ்சதூரத்தில் ஒரு பைப்பும் இருந்தது. நன்றாகத் துவைத்து ஆங்காங்கே காயப்போட்டு எடுத்தாள். ஆழகாக அழுத்தி அழுத்தி அயர்ன் போட்டது போல மடக்கி எடுத்தாள்.
உடம்பில் தெம்பு இருக்கும் போது நாம் பிறரிடம் கையேந்தி பிச்சை கேட்கக் கூடாது. அது உண்மையிலேயே இயலாத ஊனமுற்றவர்களுக்காக ஒதுக்கப்பட்டத்தொழில். கைகால்கள் நன்றாக இருக்கும் போது நாம் பிறரிடம் கையேந்தப் பழகினால் அது நம்மை மனதளவில் முடமாக்கி விடும். செய்யக்கூடாது என்று தலையை அசைத்தாள், கோயிலின் நுழைவு வாயிலிருந்து கடலுக்குச் செல்லும் வழி எங்கும் பல கடைகள் இருந்தன. பூசைசாமான்கள், மலர்கள், அலங்காரப் பொருட்கள் பிரசாதம், சடங்குப் பொருட்கள், சந்தனமாலைகள், துணிகள் விற்கும் கடைகள் எனப்பல கடைகள். அதில் சில கடைகளுக்கு முன்பு வேட்டி, துண்டு போன்றவை அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அதில் சிறிய ஒரு கடையைப் பார்த்து நடந்தாள். வயதான ஒரு தாத்தா உட்கார்ந்திருந்தார்.
“தாத்தா இந்தத் துண்டு, துணியெல்லா யாரோ பயன்படுத்தினதுதா. ஆனா நல்லா தொவச்சிருக்கே. இதெ வாங்கிக்கோங்க. வாங்கி உங்க கடையில வையுங்க. விக்க வேண்டா. வாடகைக்கு.” என்று தயங்கித் தயங்கி கூறினாள். “யாராவது மாத்திக்கத்துணி எடுக்க மறந்தவங்களுக்கு இந்த வாடகைத் துணி ரொம்ப ஒதவியா இருக்கும்.” என்று கெஞ்சிக் கொண்டு நின்றாள் இத்தோடு இது நான்காவது கடை. ஒரு வழியாக அவரைப் பேசி சம்மதிக்க வைத்தாள்.
“இப்படி வேணும்னா செய்யலா தாத்தா. எனக்கு ஒரு நாளைக்கு எவ்வளவு துணிகள் வெளியில போகுதோ அதப்பொறுத்து காசு கொடுங்க.” என்று மறுபடியும் கெஞ்சினாள். ஒத்துக்கொண்டார் கடைக்காரர். நன்றி நிறைந்த மனதோடு கையெடுத்துக் கும்பிட்டாள். உத்வேகம் பிறந்தவளாய் அடுத்த ஆடைகளை அலசச் சென்றாள்.
கோயிலுக்கு வருகின்ற பலரும் வாடகைக்கு ஆடை கேட்டு வந்தார்கள். வார்த்தை தவறாமல் வந்த வருமானத்தில் ஒரு பகுதியைக் கடைக்காரர் லட்சுமிக்கும் கொடுத்தார். அவளது கையில் அன்றாடச் செலவுக்கு பணம் புழங்கத் தொடங்கியது. பல நேரங்களில் கோயில் பிரசாதமே உணவாக இருந்ததால் காசு அதிகம் செலவாகவில்லை. அது போகக் கோயிலுக்கு போகின்ற வழியில் இருக்கின்ற சில கடைகளுக்கு முன்னால் கூட்டிப்பெருக்கி தண்ணீர் தெளித்து கோலமிடுவாள். கோயிலுக்குள் செல்பவர்களின் செருப்புகளைக் காவல் காப்பாள். யாரிடமும் கைநீட்டி இவ்வளவு பணம் வேண்டும் என்று கேட்க மாட்டாள். அவர்களாகக் கொடுக்கின்ற பணத்தை வாங்கிக் கொள்வாள்
அமாவசை முடிந்து வருகின்ற புதன்கிழமையன்று அப்துல் கலாம் ஐயா படித்த பள்ளிக்குப் போகவேண்டும் என்று எண்ணியிருந்தாள். திட்டமிட்டபடியே பள்ளிக்குச் சென்றாள். எப்படியாவது கையில காலில விழுந்தாவது குலசேகரன பள்ளில சேர்க்கணும் தலைமையாசிரியரை பார்க்கணும் காலை 8 மணிக்குப் பள்ளிக்குச் சென்றாள் மதியம் 12.30 மணி வரை காத்திருந்தாள். தற்போது அப்பள்ளியின் தலைமையாசிரியர் பெயர் வைத்தியநாதன். அவர் இப்பள்ளியில் பொறுப்பேற்று இரண்டு வருடங்கள் ஆகின்றன.
“ஐயா வணக்கம்.”
“வணக்கம். வாங்க என்ன விஷயம்?”
“ஐயா எம்புள்ள பேரு கலாம். கலாம் ஐயா படிச்ச பள்ளில என் பையனும் படிச்சு பெரிய ஆளா வரணும்ங்குறது அவ அப்பாவோட கனவு. என் பையன உங்க பள்ளியில சேர்க்கணு சார் .”
“எந்த வகுப்பு?”
“நாலாம் வகுப்பு ஐயா.”
“மூணாவது வரை படிச்ச டி.சி கொடுங்க”
“இல்ல ஐயா அது வந்து….. வந்து ……நாங்க வேற ஊர்ல படிச்சோம் ஐயா. அங்க கொடுத்த டி. சி தொலைஞ்சு போச்சு”
“டி.சி இல்லாம சேர்க்க முடியாதுமா. இனி ஒரு மொற அந்த பள்ளில போய் கேட்டுப் பாருங்க. நீங்க இதுக்கு முன்னாடி இங்கே வந்திருக்கீங்களா?”
“இல்லீங்களே. ஐயா திரும்ப அந்தப் பள்ளிக்குப் போக இயலாது. அங்க ஒரு தகராறு செய்துட்டோம். வேற ஏதாவது வழி இருக்கா ஐயா. நீங்க வேணா இவன மூணாம் வகுப்பு பாடங்களக் கேட்டு பாருங்களேன். இல்ல ஏதாவது எழுத வெச்சுப் பாருங்களேன்.
‘இயலாது’ இந்த வார்த்தை வைத்தியநாதனுக்கு மண்டைக்குள் ஏதோ குடைந்து கொண்டிருந்தது. இந்த அம்மாவ வேறு எங்கேயோ பார்த்து இருக்கோமே யோசித்துப்பார்த்தார்.
“சரிமா ஒரு எழுத்துத் தேர்வு வைக்கிறேன் சரியா எழுதினா பார்ப்போம் இல்லனா வேற வழி இல்லம்மா இங்க சேர்த்த முடியாது. நீங்க வெளியில வெயிட் பண்ணுங்க.”
மேசை மேல இருந்த மணியை தட்டினார். “காளி அண்ணே இங்க வாங்க. இந்தப் பையன கீதா டீச்சர்கிட்ட கூட்டிட்டுப் போய் நாலாம் கிளாசுக்கு டெஸ்ட் வைக்கச் சொல்லுங்க.” என்றார்.
இலட்சுமி வெளியில் காத்திருந்தாள். வைத்தியநாதன் நெற்றியைத் தடவிக்கொண்டு நாற்காலியில் குனிந்தபடி உட்கார்ந்து எதையோ யோசித்தான். திடீரென ஞாபகம் வந்தவனாய் பீரோவில் உள்ளிருந்து ஒவ்வொரு பைல்களாக தூக்கிப்பார்த்தான். ஒரு ஃபைலுக்குள் இருந்து ஒரு கவரை எடுத்தார். அதில் இலட்சுமியின் குடும்பப் புகைப்படம் இருந்தது.
வைத்தியநாதனின் தந்தை துரைசாமி எழுதின ஒரு கடிதமும் உடன் இருந்தது.
‘மகனே வைத்தியநாத என்னைப்போலவே ஏதோ ஒரு காரணத்துக்காக இயக்கத்தில சேர்ந்தவன்தான் பூமிநாதன். அவன் ரெண்டுதடவ கடல் கடந்து தமிழகத்திற்குச் சென்றுவிட்டா. அகதிகள் முகாமில வெச்சு விசாரணைக்கப்பறம் மீண்டும் சூழ்நிலைக்கைதியாக இங்கேயே வந்து மாட்டிக்கொண்டார. என்ன செய்ய? இதேபோல நான் ஒரு முகாமில் தங்கி இருந்தபோது உன்னை யார் என்று தெரியாதுன்னு உன் எதிர்காலத்தை யோசிச்சு சொன்னே. அப்போ இவ காணாம போன எம்பையனு மீனவ முத்தையானு ஒருத்தரு சொன்னாரு. முத்தையா போல ஒருத்தரும் இவனக் காப்பாத்த வரல. சொன்ன மாதிரியே முத்தையா தன்னுடைய கடைசி காலம் வர உன்ன அவரு மகனாவே படிக்க வச்சு இப்படி ஒரு பதவியும் வாங்கி கொடுத்தாரு. பூமிநாத ரொம்ப நல்லவன். அவன் இயக்கத்தில தனக்குக் குடும்பம் இல்லைன்னு சொல்லி இருக்கிறா. அவனுக்குக் குடும்பம் இருப்பது எனக்கு மட்டுந்தான் தெரியும். அவனுடைய கனவு, இலட்சியம், சிந்தனை, ஆசை, விருப்பம் எல்லாமே அவனுடைய பையனப் படிக்க வைக்கணுங்கறது மட்டுந்தா. அவனுடைய குடும்ப ஃபோட்டோவை உனக்கு அனுப்பித் தர்றே. இந்த கடிதம் உன் கைக்குக் கிடைக்கும்போது நானும் அவனும் உசுரோட இருப்போமா இல்லையான்னு தெரியாது. இந்த கடிதத்த மிகவும் சிரமப்பட்டுத் தான் உனக்கு கொண்டு சேர்த்துள்ளேன் இந்த புகைப்படத்தில் இருக்கிற பையனுக்கு எப்படி யாவது படிக்க வழி பண்ணுப்பா. இப்படிக்கு உன் வளர்ச்சிக்காக உன்னைப் பிரிந்து வாழும் உன்னுடன் உன் அப்பா.’ என்று முடிந்திருந்தது கடிதத்தை மடக்கிவைத்துவிட்டு போட்டோவை திரும்ப ஃபைலுக்குள்ளேயே வைத்தார்.
“காளி அண்ணே அந்த அம்மாவை கூப்பிடுங்க டீச்சர்கிட்ட இருந்து டெஸ்டு பேப்பரையும் வாங்கிட்டு வாங்க.”
காளி அண்ணன் நடையும் ஓட்டமுமாக வந்தார். விடைத்தாளை வாங்கி பார்த்தார் வைத்தியநாதன்.
“ம்மா பைய நல்லா படிக்கிற பையனா இருக்கா. நாங்க சேர்த்துக்கறோம்” என்றார்.
அவள் கண்களில் தண்ணீர் வழிகிறது என்பதை ரவிக்கைக்குள் நீர் வழிந்து ஓடிய போது தான் உணர முடிந்தது.
“ அவ அப்பா எங்கே?”
“அவ அப்பா ஆக்சிடென்டில எறந்துட்டாருங்க ஐயா”
‘உங்களுக்கு வீடு எங்கே?”
“இங்க தாங்க ஐயா. இராமேஸ்வரம் கோயில் பக்கம்.”
“உன் பேரு இலட்சுமி. பையன் பேரு கலாம் எப்படி? கலப்பு திருமணமா?”
“இல்லங்க ஐயா இவன் பேரு சேகர். அவன் அப்பாவுக்கு இவன் அப்துல் கலாம் ஐயா மாதிரி பெரிய ஆளா வரணும்னு ஆசை அதுனால பையன அப்படித்தான் கூப்பிடுவாரு. அதனால அந்த பேரையே வெச்சிரலாம்னு விட்டுட்டேன் சார்.”
பூர்விகமாகவே நீங்க இங்க தானா மா? எவ்வளவு வருஷமா இங்க இருக்கீங்க?”
“ஐயா அது வந்து எங்க பாட்டிக்கு அம்மா காலத்தில இருந்தே இங்கதான்யா. அவரு எனக்கு ஒன்னு விட்ட மாமா மொற ஆகுது. அவிக வீடும் இங்கதான் கோவிலுக்கு மேவரம். பூ வியாபாரம்.” கேட்ட கேள்விகளுக்கும் கேட்காத கேள்விகளுக்கும் சேர்த்து பதில் அவன் வெளியில் நீட்டிக்கொண்டிருந்த இலட்சுமியின் குடும்பப் புகைப்படத்தை உள்ளே தள்ளிவிட்டார்.
“உங்க வீட்டுக்காரர் பேரு?”
“அவரு பேரு மயில்சாமி ”
ஆனால் சரிபார்க்கப்பட்ட விடைத்தாளில் மாணவன் பெயருக்கு நேராக குலசேகரன் என்றும் தந்தை பெயருக்கு நேராக பூமிநாதன் என்றும் எழுதி இருப்பதைப் பார்த்தார். ஏன் இவனுக்கு நான் இனியொரு முத்தையாவாக இருக்கக்கூடாது.
மௌனமாகச் சிரித்துக்கொண்டே சேர்க்கை அட்டையில் கையெழுத்திட்டார்.