pexels-pixabay-207983

முனைவர் நா. தீபா சரவணன்
உதவிப் பேராசிரியர்
ஸ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி, கோவை.

‘கமலா எனக்கு சீரு முடிச்சு இது நாலாவது வருஷம். இப்போ வரைக்கும் எனக்கு இப்படி ஆனதே இல்லடி.’

‘ எனக்கு ஞாபகம் இருக்குடி என்னோட சீரு முடிஞ்சு ஒரு மாசம் கழிச்சுதானே உனக்கு சீரு வச்சாங்க சுமி…. கரெக்டா?’

‘ஆமா. ஆனா இதுவரைக்கும் டேட் தவறனதே இல்ல. ரெண்டு நாள் மூணு நாள் முன்ன பின்ன ஆகும். இப்போ நாலு நாள் ஆச்சு இன்னும் ஒண்ணுமே ஆகல.’

‘ வெயிட் பண்ணு பார்ப்போம் உனக்கு எதுக்கெல்லாம் கவலைப்படணும்னு வெவஸ்தயே இல்ல.’

‘இல்லடி………… போன மாசமும் ஆறு நாள் கழிச்சு தான் ஆச்சு நான் அம்மாகிட்ட பொய் சொன்னே கரெக்ட்டா ஆச்சுன்னு இந்த தடவை சொல்லவும் முடியாது அம்மாவே டேட் குறிச்சி வெச்சிருக்கா.’

‘இன்னைக்கு நாம காலேஜ் சேர்ந்து ஃபர்ஸ்ட் செமஸ்டர் கடைசி எக்ஸாம். நாளைலிருந்து 25 நாளக்கி லீவு. லீவ் என்ஜாய் பண்ணுவியா இத உட்கார்ந்து இப்ப போய் பேசிட்டு. சுமி ரொம்ப யோசிக்காத வா அச்சாயங்கடையில போயி ஒரு பழம் பொரி சாப்பிட்டா சரியாகும் வா’

குழப்பத்துடன் சென்றாள். இனி கமலாவ காலேஜ் திறக்கறவரப் பார்க்கவும் முடியாது. இது போன்ற விஷயங்களை ஷேர் செய்யவும் முடியாது என வருந்தினாள் சுமி. வீட்டுக்குக் கிளம்பி வந்துவிட்டாள்.

அம்மா, துபாயிலிருந்து அப்பா வர்ற குஷியில் இருந்தா. துபாயில் பெரிய வைட் காலர் வேலை ஒன்றுமில்லை. பிளம்பிங் வேலை தான். போய் நாலு வருஷம் ஆச்சு சீருக்கு வந்தது அதுக்கப்புறம் இப்போதான் வராரு. இவங்க இருக்கிறது  ஒரு கிராமம். தப்பட்டன்கிழவன்புதூர். பஸ் வசதி மிகக் குறைவுதான், ஆனால் ஆற்றின் ரம்மியமான ஓசை, ஈரமான சாரல் காற்று, அடுக்கி வைத்த தென்னந்தோப்புகளின் மிருதுவான காற்று, காற்றில் மிதந்து வரும் வாழைக்கனிகளின் வாசம் என்று இயற்கையோடு கலந்த உணர்வுகள். பிளஸ்டூவிற்குப் பிறகு சுமி எப்படியோ கோயம்புத்தூரில் இலவசமாக ஒரு காலேஜ்ல சீட் வாங்கிட்டா.  லீவு விட்டா வந்துருவா.

வசதிகள் குறைவா இருந்தாலும் ஒட்டு ஒறவோடு பழகுற கிராமம். லீவுக்கு வரும்போது சுமி அங்கலாய்ப்போட வந்தா. போன மாசம் 16ஆம் தேதி விலக்கானது.  இன்னைக்கு தேதி 20 ஆச்சு அம்மா போனதும் முதல்ல அதுதான் கேட்பா. போன அன்னைக்கு மறந்துட்டா அடுத்த நாள் காலைல எழுந்ததும் முதல் கேள்வியே அம்மாவோடது அதுதான்.

“ஏம்புள்ள நீ இன்னும் விலக்கு ஆகல.  27ஆம் தேதி கல்யாணத்துக்குப் போகோணும். அதுக்குள்ள ரெடி ஆயிடுவியா?. அப்பா சொந்தக்காரங்க கல்யாணத்துக்கு ரெண்டு நாளு அங்க போய் இருக்கலாங்கற திட்டத்தோட வர்றாரு. நீ வேற போற நேரத்துக்கு முக்குல உட்கார்ந்துடாதே”

“இல்லம்மா இன்னைக்கு அஞ்சு நாள் தள்ளியாச்சு இன்னும் ஆகல.”

‘சரி பார்ப்போம்.   தோட்டத்திற்குப் போன செண்பகம் நன்றாகப் பழுத்த பப்பாளியையும், எள்ளுருண்டை பாக்கெட்டையும் சுமித்ராவுக்குக் கொண்டு வந்து கொடுத்தாள். சீக்கிரமா விலக்கு ஆவதற்காக.

தேதி 23 ஆனது பப்பாளியும். எள்ளுருண்டையும் வேலை செய்யவில்லை. அவளது அப்பா ஊர்ல இருந்து வந்த முசுவில் யாரும் இதைப்பற்றி யோசிக்கவே இல்ல.

சரி முன்னப்பின்ன ஆகும். ஆகும்போது ஆகட்டும். கல்யாணத்துக்கு எதுக்கும் முன்னெச்சரிக்கையாக எல்லாம் எடுத்துட்டுப் போனாள் சுமி. சுமியின் அப்பா வெங்கடேசனின் ஒண்ணு விட்ட அத்தை பையனுக்குக் கல்யாணம். அவனுக்கு உறவினர்களைப் பார்த்த மகிழ்வு, சொல்லி அடங்காது. கொண்டாடி தீர்க்க டாஸ்மாக் மட்டும் செல்லவில்லை.

28-ஆம் தேதி ஊருக்குத்  திரும்பின போது தான் செண்பகத்துக்கு ஞாபகம் வந்தது, சுமி இனியும் விலக்காகவில்லை என்று. தனக்குத் திருமணமாகி வந்த புதிதில் விலக்கானால் தன் மாமியார் காட்டும் சுத்தத்தை எண்ணிப் பயப்படுவாள். படுக்க, பாய் தரமாட்டார்கள், தலையணை கிடையவே கிடையாது. விடிவதற்குள் ஆத்துக்குப் போயி குளிச்சிட்டு வரணும். மாத்திக்கத்துணி எடுத்துகிட்டு போகக்கூடாது. ஈரத் துணியோட வீட்டுக்கு வந்ததுகப்பறம்தா துணி மாத்தணும், மூணாவது நாள்  பயன்படுத்தின துணிக,, போர்வை எல்லாத்தையும் நெனச்சுப் போடணும்.வீட்ட சாணிபோட்டு வளிச்சு விடணும். கோமியம் எடுத்திட்டு வந்து வீட்ட சுத்திலும் தெளிச்சு விடணும்.  அம்மாடி இப்போ நெனச்சுப் பார்த்தாலே மலைப்பா இருக்கு.

சுமியோ மிகவும் சோர்வாகக் காணப்பட்டாள். 13 நாட்கள் தள்ளிப்போனது கல்யாண வீட்டில் இரண்டு தடவை வாந்தி வேறு எடுத்தாள். செண்பகத்திற்கு வயிறு கலங்கியது நம்ம பொண்ணு தப்பான வழிக்கு எதுவும் போயிருக்க மாட்டா. இருந்தாலும் காலம் வேற கெட்டுக் கெடக்கு. போன மாசந்தா காலேஜிலிருந்து டூர் போறாங்கன்னு கொடைக்கானல் போயிட்டு வந்தா. போன இடத்தில ஏதாவது……….. சொல்ல பயப்படுறாளோ? அப்பா இருக்காரேனு யோசிக்கிறாளோ? அப்படி எல்லாம் செய்யாது எம்புள்ள. கடவுளே நம்ம ஜாதி சனத்துக்கு தெரிஞ்சா சும்மா இருப்பாங்களா ஊரே ஒன்னு கூடிருமே. நானா கற்பனை பண்றேனா? வயசு புள்ளைய வச்சிருக்கிற எல்லா அம்மாவும் இப்படித்தான் யோசிப்பாங்களா?

சுமி ஒரு தடவை பேரன்ட்ஸ் மீட்டிங் வர முடியலன்னு அவங்க மேம் கிட்ட பேசச் சொல்லி ஒரு நம்பர் கொடுத்தா. அவங்கள கூப்பிட்டுக் கேட்போம். ஒரு எளவும் புரிய மாட்டேங்குது. இல்ல இனியும் ஒரு வாரம் பொறுத்துப் பாக்கலாமா? உடம்புல சத்துமானம் கொறவா இருந்தாலும் இப்படித்தான் ஆகும். வேண்டாம் நாளைக்கே மேம் கிட்ட கூப்பிட்டுக் கேட்டுப் பாக்கலாம்.

சுமி மிகவும் சோர்வாகக் காணப்பட்டாள். உணவில் நாட்டம் குறைந்தது. வாய்க்கு எதுவும் பிடிக்காமலானது.சோர்ந்து சோர்ந்து படுத்துக்கொண்டாள். மறுநாள் காலையிலேயே

“சுமி நானு டௌனு வர போயிட்டு வந்திடறேன்” என்று பழைய நோக்கியா ஃபோன கையில் எடுத்துக்கொண்டு சென்றாள்.

“ஹலோ மேடம் நான் சுமியோட அம்மா பேசுறேன். இல்ல……….. சுமிக்கி விலக்கு 15 நாளா தள்ளிப்போயிருக்கு. என் பொண்ணு பத்தி நானே தப்பா பேசக்கூடாது இருந்தாலும் பெத்த வயிறு எரியுது காலேஜ்ல அவளுக்கு ஏதாவது பையனோட சகவாசம் இருக்கானு கேட்கத் தான் கூப்பிட்டேன்.”

“என்ன கேக்குறீங்க? பெத்தவங்க. நீங்க உங்க பொண்ணு எப்படின்னு உங்களுக்குத் தெரியாதா அதெல்லாம் ஒன்னும் இல்ல அவ நல்ல பொண்ணு”

“இல்லைங்க மேடம், கொடைக்கானல் போன எடத்தில ஏதாவது ஒன்னு கிடக்க ஒன்னு ஆயிருந்துச்சுன்னா?”

“அம்மா நீங்க தேவையில்லாம மனச போட்டுக் குழப்பிக்காதீங்க இது இப்போ இருக்கிற பிள்ளைகளுக்கு சாதாரணமா இருக்கிற ஒரு விஷயம் நீங்க ஒரு நல்ல கைனகாலஜிஸ்டாப் போய் பாருங்க”

“யாருங்க மேடம்”

‘கைனகாலஜிஸ்ட்’

“சரிங்க மேடம் நான் கூப்பிட்டுப் பேசினதா அவகிட்ட சொல்லாதீங்க…. வெச்சிர்றே”

‘ம்ம்ம் சரிங்க’

22 நாட்கள் தள்ளி ஆகிவிட்டது. சுமியின் நடவடிக்கைலயும் நிறைய மாற்றம். அவ மேடம் சொன்ன டாக்டர பாக்கணும்னா டவுனுக்கு தான் போகணும். அவங்க அப்பாவுக்குத் தெரியாம தான் போகணும் ஏன் எதுக்குன்னு கேட்டு என்னைத் தொலைத்துவிடுவாரு. இது தான் புள்ளைய வளத்துற அழகானு என்ன அங்கேயே வெட்டிப் போட்டாலும் போடுவாரு. சுமிகூட படிக்கிற பொண்ணோட அக்காவுக்குக் கல்யாணம் மதுக்கரைலனு பொய் சொல்லி அம்மாவும் மகளும் கிளம்பினர்.

சுந்தராபுரத்தில் நல்ல ஒரு ‘கைனகாலஜிஸ்ட்டிடம் சென்றனர் அந்த டாக்டர் சுமியை நன்றாகப் பரிசோதித்து பார்த்துவிட்டு “நீங்க நினைக்கிற மாதிரி ஒன்னும் இல்லம்மா. இது நார்மல் தான். விட்டமின் மாத்திரை மட்டும் எடுத்துக்கோங்க. நார்மலாவே சரி ஆயிடும்” என்றார்,

‘ச்சே அதுக்குள்ள நம்ம புள்ளையை என்னெல்லாமோ நினைச்சிட்டோமே. சாமி மன்னிச்சுக்கோ’

வீடு திரும்பினர் டாக்டர் சொன்னது ஆறுதலாக இருந்தாலும் செக்கப் முடிஞ்சு ஒரு வாரம் ஆகிப்போச்சு. ஒருவேளை இவ டாக்டர் கிட்ட சொல்ல வேண்டாம் நான் அம்மாகிட்ட பேசிப் புரிய வச்சிக்கிறேன்னு சொல்லி இருப்பாளோ? மறுபடியும் வயிற்றில் புளி கரைந்தது. இனி அவ அப்பாகிட்ட சொல்ல வேண்டியதுதான். வேற வழி இல்ல. இப்போ கொஞ்சம் அவ வயிறு பெருசா இருக்கிற மாதிரி இருக்கு. வெயிட்டா இருக்குனு அவளே சொல்றா. எப்படி ஆரம்பிக்கிறது என்று தெரியவில்லை. ஒரு நாள் நள்ளிரவு தூக்கம் வராமல் உருண்டு படுத்த அவள் புருஷனை உலுக்கினாள்.

‘ஏங்க நாம வீட்டை மாத்திட்டு டவுன் பக்கம் போகலாமா இங்க கொடுக்கிற வாடகைய அங்க கொடுத்துட்டா போச்சு’

பகலில் தூங்கியதால் தூக்கம் வராத அவனும் எழுந்து உட்கார்ந்தான்.

“இல்லே எங்க ஜாதி சனமெல்லாம் சுத்துமுத்தும் இருக்கு. நல்லது கெட்டதுக்கு ஓடி வருவார்கள் சரிதா ஆனால் அதுவே நமக்கு உபத்திரவமா மாறக்கூடாது இல்ல”

“என்ன சொல்ற எனக்கு ஒரு எளவும் புரியல. நான் இன்னும் ரெண்டு வாரத்துல திரும்பிப் போயிருவேன் அப்போ நீ தனியா இருப்பேனு தான் நம்ம சாதி சனத்துக்கு கூட உன்னை இருக்க சொல்றேன் உனக்கு என்ன பிரச்சனை இப்போ?”

“இல்ல சொன்னா டென்ஷன் ஆகாம கேட்கணும். நம்ம சுமி அவ தப்பு பண்ணிட்டான்னு சொல்ல வரல. போன மாசம் அவளுக்கு தூரம் ஆகவே இல்லை. இப்போ அவளோட நடவடிக்கைகளைப் பார்த்தா பயமா இருக்கு . வயிறு வேற பெருசாருக்கிற மாதிரி இருக்குன்னு சொல்றா. நல்லதோ கெட்டதோ நம்ம ஜாதி சனத்துக்கு புள்ளி வெச்சா போதும். கோலம் போட்டு ரோடு போடுவாங்க.  அப்புறம் அவ வாழ்க்கை? நாம ஒரே புள்ளைய வச்சிருக்கோம். மூதேவி வாயைத் திறந்து எதையும் சொல்லவும் மாட்டேங்குது. எனக்கு அப்படியே மூளையே வெடிக்கிற மாதிரி இருக்கு.”

தனக்கு என்ன ஆச்சுன்னு குழம்பிய மனத்தோடு படுத்தும் உறங்காமல் விழித்துக்கொண்டிருந்த சுமித்ரா, அம்மா பேசியது அவ்வளவையும் கேட்டுக் கொண்டுதானிருந்தாள். உண்மையிலேயே எனக்கு என்னமோ பிரச்சனை இருக்கு. என்னமோ இருக்கு. என்னவா இருக்கும். வயிறு வேற அப்பப்ப ரொம்ப வலிக்குது. கொடைக்கானல் போகும்போது பஸ்ல கிருஷ்ணா மட்டும்தான் எங்கிட்ட நெருக்கமாப் பழகி, எங்கிட்ட ஏதோ சொல்ல முயற்சி செஞ்சா. எல்லாருக்கும்தா அவ கூல்ட்ரிங்க்ஸ் ஸ்நாக்ஸ் வாங்கி கொடுத்தா எல்லாரும் தான் அதைச் சாப்பிட்டோம். பஸ்ல போன சலிப்பில நல்லா படுத்துத் தூங்கிட்டேன். மேம் கூடவே தான் இருந்தாங்க. எனக்கு கன்பியூசனா இருக்கு. கிருஷ்ணா என்ன விரும்புறான்னு பிரண்ட்ஸ் எல்லாம் சொல்லுவாங்க ஆனால் நான் எஸ் சொல்லவே இல்லையே ஒரு வேள…….. ச்சேச் சே வாய்ப்பில்லை.

அப்புறம் ஏன் தல சுத்துது கொடைக்கானலில் எல்லாரும் எழுந்த பிறகு கடைசியா தான் நான் எழுந்தேன். இரவு என்ன ஆகி இருக்கும். இல்ல என் உடம்பு நார்மலா இல்லன்னு மட்டும் தெரியுது.

முழுசா கேட்ட வெங்கடேசன் ‘அட போடிஇவளே……. .  இல்ல என் பொண்ணு தப்பு பண்ணியிருக்க மாட்டா. நாளைக்கு காலைல டவுன்ல ஏதாவது நல்ல ஹாஸ்பிடலா பார்த்துப் போயிட்டு வரலாம். ஸ்கேன் பண்ணிப் பார்த்தா தெரிஞ்சிரப் போகுது. கொடைக்கானல் ஏற்காடு சுத்திப் பார்க்கப் போறோம்னு ஊர்ல சொல்லிடுவோம். ஒரு வாரம் கழிச்சு வரலாம்.

‘தனக்கு என்ன ஆயிற்று என்று தெரியாமலே தற்கொலை கூட செய்து கொள்ளலாம் என்று சுமித்ராவிற்குத் தோன்றியது. ஆனால் இந்த நிலைமையில் நான் அப்படி செஞ்சா எங்க அம்மாவோட சந்தேகம் உறுதி ஆயிடும். ஊர் சும்மா இருக்காது அப்படி ஒரு களங்கத்தோட நான் சாக விரும்பல எனக்கும் எனக்கு என்ன ஆச்சுன்னு தெரியணும்.  அப்பா என் மேல இவ்வளவு அசைக்க முடியாத நம்பிக்கையோடு இருக்கும்போது அவரை ஏமாத்தக் கூடாது இருந்தாலும்…………..’

காலை விடிந்ததும் மூவரும் கிளம்பி கோவையில் உள்ள ஐ.எப்.சி. மருத்துவமனைக்கு வந்தனர். கைனகாலஜிஸ்ட்கிட்ட அப்பாய்ன்மென்ட் வாங்கியாச்சு. பீரியட் தள்ளிப் போயிருக்கு என்று செக்கப் அறையில் படுக்க வைக்கப்பட்டாள். உள்ளே வரும்போதே சிஸ்டர் “மாசமா இருக்கியாமா?” என்று கேட்டுக்கொண்டே வந்தார்.

“எனக்கு இனியும் கல்யாணமே ஆகல சிஸ்டர்.’’

சிஸ்டர் பார்த்த  கேவலமான பார்வை அவளை உருக்கியது.

டாக்டர் வந்தாரு நல்லா வயத்த அமர்த்தி செக்கப் செய்தாங்க. ஒரு டியூப்பில் ஜெல் தடவி பிறப்புறுப்புக்குள் விட்டு ஸ்கேன் பண்ணினாங்க. வலி உசுரு போற மாதிரி இருந்துச்சு. ஏதேதோ மெடிக்கல்  ரிப்போர்ட் ரெடி பண்ணனாங்க. செக்கப் புல்லா முடிச்சு ‘அம்மாவைக் கூப்பிடுமா’ என்றாங்க. என்னைக் கொஞ்சம் வெளியில நிக்க சொன்னாங்க. எனக்கும் என்னன்னு தெரிஞ்சுக்கணும்னு இருந்துச்சு.

“நீங்கதான் சுமியோட அம்மாவா?  நீங்க மட்டும் தான் வந்திருக்கீங்களா அவங்க அப்பா இருந்தா உள்ள வரச் சொல்லுங்க. நான் சொல்றத பதற்றப்படாம கேளுங்க,”

செண்பகத்திற்கு இதயத் துடிப்பு இ.சி.ஜியின் எல்லையைத் தொடும் அளவிற்குப் போனது, அடி வயிறு புரண்டு தொண்டை அடைத்தது, நாக்கு வறண்டது. கண்கள் பிதுங்கின,

“நீங்க நெனைக்கிற மாதிரி உங்க பொண்ணுக்கு தப்பா எதுவும் நடக்கல. ஆனா நீங்க அவள அப்படி நினைச்சு மன உளைச்சலுக்கு ஆளாக்கியிருக்கீங்க”என்று சொல்லி, கொஞ்ச நேரம் கழித்துக் கூறினார். “பெண்களுக்குக் கருமுட்டை உருவாகற இடம் தான் ஓவரி. அது ரெண்டு இருக்கும் அதுதான் குழந்தை பிறக்க ரொம்ப முக்கியம் அதுல ஒரு ஓவரி ஃபுல்லா உங்க பொண்ணுக்கு தண்ணி நெறஞ்சிருக்கு. அதனால அது ஃபுல்லா இன்பெக்க்ஷன் ஆகி இருக்கு. சோ சர்ஜரி பண்ணி அந்த ஓவரியை ரிமூவ்  செய்யதறதத் தவிர வேற வழி இல்ல. இல்லனா இனி ஒரு ஓவரியையும் அது பாதிச்சிடும். ஆயிரத்தில் ஒருத்தருக்கு இந்த மாதிரி பிரச்சனை வரும். எப்படி வருது என்ன காரணம்னல்லா சொல்ல முடியாது. எவ்வளவு சீக்கிரமாகக் கல்யாணம் பண்ணி வைக்க முடியுமோ அவ்வளவு சீக்கிரமா கல்யாணம் பண்ணி வச்சிருங்க. மாப்பிள்ளை பார்க்கும்போது இந்த விஷயத்தைச் சொல்லாமப் பாருங்க அவங்க ஏற்கனவே உடல் ரீதியா பாதிச்சுருக்காங்க. நீங்க உங்க பிரஷர அவங்கமேல காமிச்சு மனதளவில பலவீனமானவங்களா மாத்திடாதீங்க. அவங்க மனதால பாதிப்பு அடைச்சுடுவாங்க. கருமுட்டை உருவாகறது கஷ்டமாயிடும்.”

செண்பகம் முந்தானையால் கண்களை ஒப்பினாள். சுமியிடம் வயித்தில சின்ன கட்டி. அதை சர்ஜரி செய்து அகற்ற வேண்டும் என்று மட்டும் கூறினர். தன்னுடைய கற்புத்தன்மை நிரூபிக்கப்பட்டது. கர்ப்பமா இருக்குமோ என்ற அம்மாவின் அங்கலாய்ப்பு, சிஸ்டர் பார்த்த கேவலமான பார்வை, மனத்தில் ஏற்பட்ட பயம் என அவள் அடைந்த மன உளைச்சலுக்கு இது பெரிதாகத் தெரியவில்லை அடுத்த நாளே  ஆபரேஷனுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

அரசாங்க வேலை வாங்கிட்டு அம்மா, அப்பாவப் புது வீடு கட்டி  உட்கார வெச்சிட்டுதான்  கல்யாணம் பண்ணுவேன்னு சவால் விட்ட மகளை எண்ணிக்  கண் கலகிங்கினாள் செண்பகம். செண்பகத்திற்கும்  ஆசையில்லாமல் இல்லை. புள்ளய அவசரமா கல்யாணம் பண்ணிக் கொடுத்திட்டா  பாரம்  ஒழிஞ்சிடும்னு  நெனக்கற பெற்றோர்களுக்கிடையில் செண்பகம்  சற்று வித்தியாசமானவள்.

சுமி ப்ளஸ்டூ படிக்கும்போதே கணவரோட வகையறால ஒருத்தரு            மாப்பிள்ளை இருக்குனு சொல்லி வந்தாரு. அதைத் தட்டிக் கழித்தாள். செண்பகம்

‘புள்ள இன்னும் கொஞ்சநாள் பெத்தவங்க வீட்டில இருக்கட்டும். அவசரமா கல்யாணம் பண்ணி என்ன ஆகப் போகுது. ஒரு வருசத்தில கையில புள்ளயோட வந்து நிக்கும். அப்பறம் அத வளத்து ஆளாக்கவே பொழுதுக்குக்  கஷ்டப்படணும். அஞ்சுக்கும் பத்துக்கும்   இனி ஒருத்தங்க  கைய  எதிர்பார்த்திட்டு இருக்கணும். கொஞ்சநாள்  படிச்சு முடிச்சிட்டு ஏதோ வேலைக்குப் போட்டம். நமக்கு எதுவும் தரவேண்டா.  அவ  சம்பாதிச்சு  அவ  தேவைக்கு , அவ செலவு செஞ்சுகட்டும். ஒடம்பயும் கொஞ்சம் தேத்திட்டு அதுக்கப்பறம் கல்யாணத்தப் பத்தி யோசிப்போம்” என்று கணவனிடம் சொல்லிக்கொண்டிருந்தவள்.

ஆப்பரேஷன் தியேட்டருக்குள் போகும்போது சுமி அவள் அம்மாவைப் பார்த்த பார்வை, செண்பகத்தை உப்பு போடப்பட்ட நத்தையாகச் சுருங்கச் செய்தது. இரண்டு மணிநேர ஆபரேஷன்  முடிந்து  அறைக்குக் கொண்டு வரப்பட்டாள். சுமிக்கு  இன்னும் சுயநினைவு வரவில்லை ஆனால் கண்களின் ஓரங்களில் கண்ணீர் ஓயாமல் வந்து கொண்டிருந்தது. அறுவை சிகிச்சையின் வேதனை வருத்தி அவளைக் கண்ணீர் விட வைத்ததா? இல்லை தூய்மை நிரூபணமானதன் ஆனந்தக் கண்ணீரா? மகளின்  நிலையை எண்ணி வருந்திக் கொண்டிருந்தான் கணேசன். வருத்தத்திற்கு முற்றுப்புள்ளியாக அமைந்தது செண்பகத்தின்

“ஏங்க கையோடு நம்ம குமரேச  புரோக்கர வரச்சொல்லி சீக்கிரமா மாப்பிள்ளை பார்க்கச் சொல்லலாம்” என்கிற வார்த்தைகள்.

எப்படி இந்த பொம்பளைங்க மட்டும் உடனுக்குடனே சூழ்நிலைக்குத் தகுந்தமாதிரி தங்கள மாத்திக்கிறாங்க என்ற ஆச்சர்யத்தோடு, கண்ணீரை, மறைத்துக்கொண்டு திரும்பிப்  பார்த்தான் வெங்கடேசன்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.