ஸ்ராவணி (மொழிபெயர்ப்புச் சிறுகதை)

0

முனைவர். நா. தீபா சரவணன்
உதவிப்பேராசிரியர்
குமரகுரு பன்முகக் கலை அறிவியல் கல்லூரி, கோவை.

மூல நூலாசிரியர்: சி.வி.பாலகிருஷ்ணன்
மொழி : மலையாளம்
தமிழில்: முனைவர்.நா.தீபா சரவணன்


மரணம். . . . .

இரண்டாவது  நாளும் மருத்துவமனை  படுக்கையில் கிடக்கும் ஸ்ராவணியைத் தேடிவரவில்லை. ஆனால் வந்ததோ ஒரு தனியார் தொலைக்காட்சியின் மேக்கப்மேனும் ஒரு பெண் நிருபரும். இரண்டு கேமரா அசிஸ்டென்டுகளும் உடன் இருந்தனர். மருத்துவ அதிகாரிகளின் அனுமதி அவர்களுக்கு ஏற்கனவே கிடைத்திருந்தது.

“இல்ல நாங்க ஒருவிதத்திலும் சிறுமியை  தொல்லை  செய்யமாட்டோம்.”

நிருபரான ரேணுகா இரண்டாவது நாளும் மரணம் தேடிவராத மாணவியின் பெற்றோரிடம் நயமாகக் கூறினாள். மேக்கப் மேன் சுனில் பட் அதிகம் பேசாத குணம் உடையவனாதலால் தலையை மட்டும் ஆட்டி ரேணுகாவிற்குத் துணைநின்றான். எப்படியிருந்தாலும் எங்களுக்கு நிறைய வேலை இருக்கு கொஞ்சம் அவசரம்ங்கற தோரணை அவனது முகத்தில் ஓடியது.

”சொல்லப்போனா நேத்தே நாங்க வந்திருக்க வேண்டியது. எங்க துரதிர்ஷ்டம் என்ன நடந்துச்சுனு இன்னைக்குக் காலைலதா ஆபீஸ்க்கே தெரியுது. உடனே  நாங்க இங்க வர்றோம்.”

ரேணுகா விளக்கினாள். அதற்குமேல் அவளுக்கொன்றும் சொல்வதற்கில்லை. தனது படபடக்கின்ற மனதுக்கு ஓய்வு கொடுக்கலாம் என நினைத்து தனது பையிலிருந்து சிகரெட் பாக்கெட்டை வெளியில் எடுத்தாள். ஆனால் மருத்துவமனைக்குள் புகைக்கலாமா என்ற சந்தேகத்தில் மீண்டும்  அதை பைக்குள்ளேயே வைத்தாள்.

“டோன்ட் கெட் எக்ஸைட்டடு. டேக் இட் ஈஸி” சுனில் மெல்லிய குரலில் கூறினான்.

”ஐ ஆம் ஆல்ரைட்” அவள் சிரிக்க முயற்சித்தாள்

சென்ட் தேரேசாஸ் உயர்நிலைப்பள்ளியில் மூன்றாவது மாடியிலிருந்து ஸ்ராவணி குதித்தது மிகக்கொடுமையான விஷயம் என்றாலும் இரண்டாவது நாளாகியும் மரணம் அவளைத்தேடி வரவில்லை. ஃபினோயில் வாசமுள்ள வழிகள், படிக்கட்டுகள் வராந்தா, மொட்டைமாடி என எங்காவது மரணம் பதுங்கி நின்றுகொண்டிருக்கும். இல்லை நிறம் மங்கின ஜன்னலுக்கருகில் நிலத்தைத்தொடாமல் வாயுவில் கலந்து ஜன்னல் கம்பிகள் வழியாக அவளைப்பார்த்துக் கொண்டிருக்கும். விழுந்து நொறுங்கிய பல பாகங்களையும் சேர்த்து வைத்துத் துணியால் மூடப்பட்ட ஒரு மண்பொம்மை போல கிடக்கிறாள்.

பளீரென  ஓர்  ஒளி கண்களில்  பட்டபோது அவள் நெளிந்துகொண்டு கண்களைத் திறந்தாள். ஆனால் பாதி திறந்த கண்கள்  வெளிச்சத்தை எதிர்கொள்ள முடியாமல்  மூடவேண்டியிருந்தது.

“கட்”- ரேணுகா கூறினாள்.

சென்ட் தேரேசாஸ் ஹைஸ்கூலின் தரைத்தளத்தில் உள்ள ஆபீஸ் அறையிலிருந்து சிஸ்டர் மெர்சிலின் மிருதுவான இருக்கையிலிருந்து மேக்கப்மேன் சுனில்பட்டைப்  பார்த்தார்.

”ஓ.கே”- சுனில் கூறினான்

ரேணுகா கேமராவின் ஒரு பக்கத்தில் குனிந்து நின்றுகொண்டு சிஸ்டர் மெர்சிலினிடம் பேசத்தொடங்குமாறு கை அசைத்துக் கூறினாள்.

“ஸ்ராவணி, யெஸ் ஐ ரிமம்பர்…… அவள் மார்க்ஷீட் வாங்க தனியாகத்தான் வந்தாள். சிஸ்டர் இடாவும், சிஸ்டர் க்ரிஸ்பினும்  இங்க  எம்முன்னாடி உட்கார்ந்து சில ரெஜிஸ்டர்கள சரி செய்திட்டிருந்தாங்க. அப்போதுதான் ஸ்ராவணி வந்தா”

ஸ்ராவணி அறைக்குள் ஏறிவந்தபோது சிஸ்டர் இடாவும், சிஸ்டர் க்ரிஸ்பனும் ஒரு நிமிடம் முகமுயர்த்தி அவளைப் பார்த்தனர். சிஸ்டர் இடா அவளுக்கு பௌதீக ஆசிரியர். வரலாற்று ஆசிரியர் க்ரிஸ்பின். முகபாவத்தில் எந்த மாற்றமும்  இல்லாமல் அவளைப் பார்த்தனர். இருவரும் தங்களின் வேலையைத் தொடர்ந்தனர். அவள் சிஸ்டர் மெர்சிலினுக்கு அருகில் நின்றாள். அவளுடைய முகத்தில் தயக்கம் தெளிவாகத்  தென்பட்டது.

”நீ இந்த முறையும் பாஸ் பண்ணல. இந்த மார்க்ஷீட்ட எடுத்திட்டுப்போய் பேரன்ஸ்கிட்ட காட்டு. அவங்களுக்கு சந்தோஷமா இருக்கும்.” சிஸ்டர் மெர்சிலின் கூறினாள்

சிஸ்டர் இடாவும் சிஸ்டர் க்ரிஸ்பினும் வேலைக்கிடையில் மெதுவாக  சிரித்தனர்.

’யூனிஃபாமும் புத்தகமும், ஷூஸும் எல்லாம் வாங்கி இங்க அனுப்பும்போது  மனசில என்ன நெனச்சீங்கனு அவங்ககிட்ட கேட்கணும். சிஸ்டர் மெர்சிலின்  மார்க் சீட்டை ஸ்ராவணிக்கு நேராக நீட்டினாள். அவள் மார்க் சீட்டை வாங்கிய உடனே சிஸ்டர்  காலிங் பெல்லில் விரல் அமர்த்தினார்.

ஸ்ராவணி வெளியேறினாள். அடுத்த சுற்று தெல்மா ஜோர்ஜினுடையது. பிறகு மேகாஜெயின். அதுக்கப்புறம் பவ்யலட்சுமி, அவளுக்குப்பிறகு ராகேஸ்வரி. அடுத்தது நேஹா மைத்ரா. பிறகு அனுஸ்ரீ கிட்வானி  பிறகு டெல்னாஸ்  ஒரே மாதிரி சீருடை அணிந்த சிறுமிகளின் நீண்ட வரிசை அவர்களுக்கு பக்கத்து வழியாக ஸ்ராவணி நடந்தாள்.

”இதுதான்  ஸ்ராவணியோட மார்க் சீட் ” ரேணுகா கேமராவின் நேராக அதை உயர்த்திப்பிடித்தாள். அடுத்தடுத்து கீழ்கீழாக குறிக்கப்பட்ட எண்களின் மேல் கேமராவின் நுண்ணியக்காட்சிப் படர்ந்தது. ரேணுகா மார்க் சீட்டின் மறுபக்கத்தைக் காட்டினாள். அங்கே எண்களில்லை. சில வார்த்தைகள். வித்தியாசமான ஒரு மன்னிப்புக்கடிதம். அதற்குக்கீழ் ’உங்களுக்கு சொந்தமான ஸ்ராவணி’

”நா  அவளோட அப்பா…….”

அவர் ரேணுகாவின் முகத்தைப்பார்த்துக் கூறினார். கூட்டமான ஒரு தெரு வழியாக அவர் மூச்சு வாங்க ஓடினார். பலரும் இடித்துக்கொண்டு ஓடியதால் அவருடைய ஓட்டம் தடைபட்டது. சில வாகனங்கள் அவருக்கு அருகில் வந்து திடீரென பிரேக்கிட்டு நின்றன.  ஃபோன் சத்தங்கள் முழங்கின. வித்தியாசமான ஒரு போட்டிக்கிடையில்  மதம் பிடித்த குதிரையைப்போல அவர் பாய்ந்தார்.

’வித்யா மந்திர் ஹயர் செகன்ட்ரி’ பள்ளியில் பிரின்ஸிபல் அருணா தேசாய் ரிஸீவரைக் கீழேவைத்துத் தனக்கு முன்னால் உள்ள ஆங்கில ஆசிரியரான சாகரிடம் கூறினார்.

”சென் தேரேசாசில் ஒரு சிறுமி மூன்றாவது மாடியிலிருந்து குதித்து விட்டாள். அந்த குண்டு சிஸ்டரோட அகம்பாவம் இனி  கொஞ்சம் குறையும். அவ வெளியில என்ன  சமாதானம்  சொல்லுவாள்

”நம்மை தோற்கடிக்கக் கிடைக்கற ஒரு வாய்ப்பையும் சென்ட் தரேசாஸ் வீணாக்கனதில்ல” சாகர் ஞாபகப்படுத்தினான்.

ஆ……….மா……….

”இத நமக்கு பெரிசு பண்ணனும்”

”இப்ப நாம இதைப் பெரிசாக்கணும்”

”நம்ம சிஸ்டர் மேர்சிலினை இப்பவே போய் பாக்கலாம்”

சில நிமிடங்கள் கழிந்து அருணா  தேசாவும், சாகரும் கிளம்பினர். அருணாதான் கார் ஓட்டினாள். சாகர் இடதுபக்கம் உட்கார்ந்தான். கார் சென்ட்தெரேசஸை இலட்சியமிட்டு அதிவேகமாகச் சென்றது.

சிஸ்டர் மேர்சிலினாவின் முகம் திடீரென இனம் புரியாமல் இருண்டது. பார்க்க வந்தவர்கள் கதவுக்கருகில் நின்றனர்.

அருணாதேசாவும் சாகரும் ஒருவரையொருவர் பார்த்தனர். ஒரு வரவேற்பை எதிர்பார்ப்பதில் அர்த்தமில்லை என்ற சிந்தையைப் பங்கிட்டு அறைக்குள் நுழைந்தனர்.

”ரொம்ப சங்கடமா இருக்கு சிஸ்டர் மேர்சலின்” – அருணா தேசாயி கூறினாள்

சிஸ்டர் மேர்சிலின் மனதில் ஒரு முணுமுணுப்பு மேலிட்டது. ’தேவிடிச்சி சங்கடமா இருக்குதாமா’

”உட்காருங்க!…….”. மனதின் முணுமுணுப்பை அடக்கிக்கொண்டு உபச்சாரப்பூர்வமாக சிஸ்டர் மேர்சிலின் கூறினாள்.

”அருணாவும்  சாகரும் திடீர்னு இங்கெ!!!!!……”

”குழந்தைங்க இப்படி அவங்களப்பத்தி ஓர் உணர்வில்லாமப்  பழகினா நாம என்ன செய்யமுடியும்? சமூகம் நம்மைத்தானே  குத்தஞ்சொல்லும்.”

சிஸ்டர் மேர்சிலானாவின் மனது மறுபடியும் சகிக்கமுடியாமல் புலம்பியது. ’காமப்பிசாசு. அழுக்கு   டிச்சிலிருக்கற புழு, மூதேவி.’

’ஆமா’- சிஸ்டர் மேர்சிலினா  ஆழ்ந்த சிந்தனையிலிருந்து வெளிவந்தவளாய் கூறினாள்.

”இனி இப்போ  பேப்பர்காரங்க இத ஊதி பெரிசு பண்ணுவாங்களே அதுதா பிரச்சனை”.  சாகர்  சுட்டினான்.

”டி.வி.காரங்க சும்மா இருப்பாங்களா? ”அருணா கேட்டாள்.

ரேணுகா, சுனில் பட்டின் காதுகளில் ஏதோ கூறினாள். சுனில் கேமரா ஆஃப் செய்தான். அந்த நிகழ்வின் இறுதியில் ஸ்ராவணி கண்கள் மூடிக்கிடந்தாள்.

ஒரு முழக்கம் கேட்கிறதே அவள் செவிமடுத்தாள். கடல் அலைகள். கேட்வே ஆஃப் இந்தியாவிற்கு நேராக உயர்ந்து வீசி பலவகை நீர்க்கைகளாக அவை வாயுவில் கலந்தன. எல்லைக்கருகில் நிற்கிறவர்கள் ஆரவாரம் செய்தனர். மின்சார விளக்குகளின் ஒளியில் நீர்க்கரங்கள் மின்னியது. ஸ்ராவணி தம்பியின் கையைப்பிடித்துக்கொண்டு  பின்னால் நகர்ந்தாள்.

அப்போது கறுப்பு நிறக் கோட்டும் பெரிய தொப்பியும் வைத்த ஒருவன் இருட்டிலிருந்து அவளுடைய முன்னால் வந்தான். தோளில் மாட்டின பையிலிருந்து ஒரு கத்தி எடுத்து அவன் தனது கழுத்தில் குத்தினான். ஸ்ராவணி பயந்து சத்தமிடத்தொடங்கினாள். அவனின் கை அசைந்தது. கைப்பிடிவரைத் தாழ்ந்து இறங்கிய கத்தி மறுபடியும் வெளியில் நீண்டு வந்தது. அவன் சிரித்தான். இரண்டு பன்றிகள் போல இருந்தது. ட்ராகுலாவின் முகமாயிருந்தது அவனுக்கு. ஸ்ராவணி அடக்கிப்பிடித்த சத்தத்துடன் பின்னால் நகர்ந்தாள். அவன் தனது செயற்கைப் பற்களை கைகளில் உமிழ்ந்துவிட்டு சத்தமாக சிரித்தான்

. ஹ……..ஹ….ஹ….ஹ…….

”ஸ்டார்ட்” ரேணுகா கூறினாள்

சுனில் கேமரா ஆன் செய்தான்.

மாறுவேடக்காரனுடைய சிரிப்பு ஸ்ராவணியின் காதுகளில் முழங்கிக்கொண்டிருந்தது.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *