Tag: விஜய் விக்கி

  • ஆண்களே…! இதில் நீங்கள் எந்த வகை?

    -விஜய் விக்கி

    பாயும் ஆறு முதல் பதறவைக்கும் புயல் வரையிலும் எங்கும் எதிலும் பெண்களின் நாமம்தான்… அரசியல் முதல் அறிவியல்வரைக்கும் பெண்ணுரிமை பற்றிய பேச்சுகள்தான்… நிலவு, காற்று, வானம் என வர்ணிக்கும் அழகெல்லாம் பெண்களுக்கென்றே உரித்தாகிவிட்டது. பெண்களைச் சுற்றியே சுழல்கின்ற இந்த உலகத்தில், ஆண்களைப்பற்றி எண்ணிப்பார்ப்பதே அபூர்வமான சிந்தனையாகிவிட்டது. அந்த அபூர்வச் சிந்தனையின் ஒரு துளிதான் இந்தக் கட்டுரையும்!

    ஓர் ஆணுக்கு எது அழகு? பெண்களைக் கவர்கின்ற ஆண்களின் ஆளுமைதான் அழகு! ஆறு அடிகள் உயரமும், ஆஜானுபாகுவான உடல்வாகும், ஆர்யாவின் கசின் போன்ற புறத்தோற்றமும் ஒரு பெண்ணிடம் ஆணின் மீதான ஈர்ப்பை உண்டாக்குவதைவிட, ஆண்மகனின் ஆளுமைதான் அதிகம் கவர்ச்சியை உண்டாக்குகிறது என்கிற அறிவியல் உண்மையைத்தான் இங்கே பார்க்கப்போகிறோம்.

    அந்த ஆளுமையின் அடிப்படையில் ஆண்களை ஐந்து வகையாக பிரிக்கிறது உளவியல் உலகம்.

    ஆல்பா (alpha), பீட்டா (beta), காம்மா (gamma), ஒமேகா (omega), சிக்மா (sigma) என்கிற ஐந்து பிரிவுகளுக்குள் உலகின் முன்னூறு கோடி ஆண்களையும் புகுத்திவிடமுடியும்.

    ஒரு தமிழ்த் திரைப்படம் என்றால், அதன் முதல் காட்சியே ஹீரோ இன்ட்ரொடக்ஷன்தான்! அதன்படிப் பார்க்கையில், ஆல்பா ஆண்களைத்தான் இங்க முதலில் அறிமுகப்படுத்தணும். காரணம், இந்த உலகம் ஆல்பா ஆண்களைத்தான் நாயகர்களாக ஏற்றுக்கொள்கிறது. நாம் மட்டும் விதிவிலக்கா என்ன?

    ஆல்பா ஆண்கள் யார்? அவர்களை எப்படி அடையாளம் கண்டுகொள்வது?

    நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும்,
    நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்,
    திமிர்ந்த ஞானச் செருக்கும்

    இந்த பாரதியின் வரிகளே ஒட்டுமொத்தமாக ஆல்பா ஆளுமையைக் குறிப்பாக உணர்த்திவிடுகிறது. சற்று விளக்கமாகக் கூறவேண்டுமானால், இவர்கள் வலிமையான மனவுறுதி பெற்றவர்கள். எப்போதும் தம்மை வெற்றியாளராகவே கருதுபவர்கள். அதற்காக எப்போதும் வெற்றிபெற்றுக்கொண்டே இருப்பார்களா? என ஆச்சர்யப்படவேண்டாம். ஆல்பா ஆண்களுக்கு அவ்வப்போது தோல்வியும் நேரிடலாம். ஆனால், அந்தத் தோல்விகளில் துவண்டு மேலே எழமுடியாமல் தடுமாறுபவர்கள் அல்லர். விழுந்த வேகத்திலேயே நம்பிக்கையோடு எழுந்து நிற்கும் குதிரை போன்றவர்கள். தன்னுடைய தோல்வியைக்கண்டு பிறர்
    எள்ளி நகையாடக்கூடாது எனவும், தம் மீது பிறருக்குப் பரிதாபம் உண்டாகக்கூடாது எனவும் எண்ணுவதால் தமது தோல்வியின் தடம், சுவடே தெரியாமல் மறைந்துபோகும் அளவிற்கு அடுத்த இலக்கை நோக்கிப் பயணிப்பவர்கள்.

    ஒருமுறை கிடைத்த தோல்வியின் மூலம் கிடைக்கும் கற்பினையால், அடுத்த இலக்கின் வெற்றி எதிரிக்கு சம்மட்டி அடியாய் அடிக்கவேண்டுமெனக் கடுமையாக உழைப்பவர்கள். அதேபோலத் தமது வெற்றியைப் பிறரிடம் சொல்லித் தம்பட்டம் அடித்துக்கொள்பவர்கள் இல்லை. வெற்றியைக்கூட அதிகம் வெளிப்படுத்திக்கொள்ள எத்தனிக்காமல், மேற்கொண்டு அதைத்தாண்டிய வரலாற்று வெற்றிக்காக உழைப்பவர்கள். வெளித்தோற்றம் ஆல்பா ஆண்களைத் தீர்மானிப்பதில்லை. ஆனால் ஒருமுறை பேசுவதிலேயே தனது ஆளுமையைப் பிறருக்கு பதியவைத்துவிடுவார்கள்.

    எதிரே நிற்பவரின் கண்களை எதிர்கொண்டுதான் பேசுவார்கள். பேச்சில் தெள்ளிய நீரோடை போன்ற தெளிவு இருக்கும். அநாவசியப் பேச்சுகள் இருக்காது. பேசும் வார்த்தைகளில் கண்ணியம் தொனிக்கும். அவர்கள் நடையில் கூட ஒரு நிதானம் இருக்கும். எடுத்துவைக்கும் அடிகளில் ஓர் அழுத்தம் தென்படும். நான்கு நபர்களுக்கு மத்தியில் பேசிக்கொண்டிருக்கும்போது, தான் நிற்கவேண்டிய இடத்தைக்கூட யோசித்துதான் நிற்பார்கள். பேசும் சில மணித்துளிகளிலேயே அந்தக் குழுவைத் தன்வசப்படுத்திவிடுவார்கள்.

    ஒரு குழுவாகச் செயலை செய்வதாக இருந்தால்கூட, ஆல்பா ஆண்களின் தலையீடுதான் அதில் பிரதானமாக இருக்கும். தாம் செய்யவேண்டிய விஷயங்கள் மட்டுமல்லாது, பிறர் செய்வதற்கான பணிகளைக்கூட இவர்கள்தான் தீர்மானிப்பார்கள். எதிர்கொள்ளும் இலக்கினில் ஏதேனும் பிரச்சனைகள் உண்டாகுமேயானால், அதனைத் துணிச்சலாக முன்னின்று எதிர்கொள்வர். ஒரு மன அழுத்தமான சூழலில் கூடத் தம் மனக்குமுறலை பிறரிடம் வெளிப்படுத்தமாட்டார்கள். எந்தத் தருணத்திலும் தம் பலவீனம் பிறருக்குத் தெரியக்கூடாது என்பதில் தெளிவாய் இருப்பார்கள். கடுமையான சூழலில் கூடப் பொறுமையாகவும், பிறருக்குப் பதற்றத்தை உண்டாக்காத அளவிலும் செயல்படுவார்கள்.

    பிறர் தம்மை அங்கீகரிக்க வேண்டுமென எப்போதும் எதிர்பார்க்காதவர்கள். தமக்கான உலகத்தில், தமக்குப் பிடித்தவற்றைச் செய்தால் போதும். அதற்கு யாரோ ஒரு மூன்றாம் நபரின் பாராட்டுப்பத்திரம் பெரிய விஷயமில்லை என நினைப்பவர்கள். மகிழ்ச்சி என்பது தாம் செய்யும் செயல்மூலம் கிடைப்பது, அந்தச் செயலின்வழி கிடைக்கும் பாராட்டால் கிடைப்பது அன்று என உணர்ந்தவர்கள்.

    உடை உடுத்துவது முதல் செயல்கள் செய்வதுவரை எது தமக்குப் பிடிக்கிறதோ அதைமட்டும்தான் செய்வார்கள். எல்லோருக்கும் நல்லவனாக, நண்பனாக இருக்கவேண்டுமென நினைப்பவன் ஆல்பா ஆணாக முடியாது. “எல்லோருக்கும் பிடித்தவனாக இருக்கணுமென்றால், நீ பிரியாணியாகத்தான் இருக்கணும்!” என்றொரு பழமொழி உண்டு. இவர்கள் பிரியாணி அல்ல….மொத்தத்தில் தன்னை நம்புபவன், தனக்காக வாழ்பவன், தன்னம்பிக்கை உடையவன் என்று மூன்றே வார்த்தைகளில் சொல்லிவிடலாம். இவ்வளவுதான் ஆல்பா ஆளுமை!

    இதனை முன்வைத்தே நாம் பீட்டா ஆளுமையை எளிமையாகக் கணித்துவிடமுடியும்! எல்லா விஷயங்களிலும் நேரெதிர் ஆளுமைதான் பீட்டா.

    பீட்டா ஆண்களைப் பொறுத்தவரை ஒரு குறிப்பிட்ட பாதுகாப்பு வளையத்தைத் தாண்ட விரும்பாதவர்கள். துணிச்சலாக ஒரு சவாலை ஏற்கத் தயங்கி, தன் வட்டத்தைத் தாண்ட தயங்குபவர்கள். ஒரு புதிய முயற்சியைக் கையிலெடுத்து, அதிலெதாவது தோல்வி உண்டாகுமானால், அதனைக் கிரகிக்கும் மனத்திடம் இல்லாதவர்கள். அந்தத் தோல்விக்கு பயந்தே, எல்லை தாண்டிப் பயணிக்க விரும்பாதவர்கள். தமது கூச்ச சுபாவத்தால், புதியவர்களிடம் பழகிடத் தடுமாறுபவர்கள். “நல்ல பையன்” பெயரைத் தக்கவைத்துக்கொள்ள விரும்புபவர்கள். எப்போதும் அவர்களுக்குப் பிறரின் அங்கீகாரம் தேவைப்பட்டுக்கொண்டே இருப்பதால், சற்றுக் கடுமையான விஷயமாகக் கருதப்படும் செயல்களில் ஈடுபட விரும்பாதவர்கள். பிறரைத் திருப்திப் படுத்துவதிலேயே தம் நேரத்தைச் செலவிடுவர். எல்லோருக்கும் தாம் பிடித்தவராக இருக்கவேண்டுமென நினைப்பவர்கள்.

    எல்லா விஷயங்களிலும் நூல் பிடித்தபடி, கோடிட்டு வாழ நினைப்பவர்கள். அப்படி வாழ்வதன்மூலம் பிறர் தம்மை அதிகமாக மதிப்பார்கள் என்று நினைப்பார்கள். இவர்களின் எல்லாச் செயலுக்கும் அர்த்தமிருக்கும்; தம்மை அழகூட்டிக்கொள்ள அதிகம் மெனக்கெடுவார்கள், பிறருக்கு உதவுவார்கள். ஆனால் இவை எல்லாமுமே பிறரின் அங்கீகாரம் கருதியே செயல்பட்டிருக்கும். ஒரு விவாதம் எழுகிறதென்றால், அதில் தம் தரப்பில் வாதம் புரிய முறையான விஷயங்கள் இருந்தால் கூட, அதை வெளிப்படையாய்ப் பேசத் தயங்குவார்கள்.

    மனத்திற்குள் எழும் ஆதங்கங்களை, எச்சிலைப்போல விழுங்கிக்கொள்வார்கள். தாம் தமது நியாயத்தை முன்வைத்தால், மற்றவரின் முகச்சுளிப்பை எதிர்நோக்க
    வேண்டிவருமோ எனவும் மற்றவரின் பகையைச் சுமக்க நேரிடுமோ எனத் தயங்கியே மௌனித்து போவார்கள். ஓர் உதவியைப் பிறருக்குச் செய்யும்போது கூட, என்றைக்காவது ஒருநாள் அதற்கான பதிலுதவி கிடைக்குமென எதிர்பார்த்தே செய்வார்கள். ஏதாவது விதத்தில் ஆதாயம் கிடைக்குமெனில் தயங்காமல் உதவி செய்வார்கள்.

    ஒரு குழுவாகச் செயல்படும்போது, பீட்டா ஆண், “நான் என்ன செய்யணும்னு சொல்லுங்க!” எனப் பிறரின் கட்டளைக்காகக் காத்திருப்பார்கள். தாமே முன்வந்து
    எதையாவது செய்து, அது சொதப்பிவிடுமோ? எனத் தயங்குவார்கள். அதையும் மீறித் தவறு நிகழும் பட்சத்தில், “நீங்க சொன்னதுதானே செய்தேன்!” என்று
    தப்பித்துக்கொள்ளும் முன்னெச்சரிக்கையோடு செயல்படுவார்கள். அதாவது ஒரு செயலைச் செய்வதற்கு முன்பே அதில் தோல்விதான் உண்டாகும் என்கிற எதிர்மறைச் சிந்தனை அவர்களுக்குள் பொதிந்திருக்கும். செயலைச் செய்துமுடிக்கும்வரை, “நான் செய்றது சரியா?.. இதைத்தானே நான் செய்யணும்னு சொன்னிங்க?” என்று ஒவ்வொரு நகர்வுக்கும் ஒப்புதல்பெற நினைப்பார்கள். என்றைக்குமே தம் விருப்பத்திற்காக ஒரு செயலைச் செய்யமாட்டார்கள். பிறர் விருப்பத்தை முன்னிறுத்தியே காரியத்தில் இறங்குவார்கள். அதனால், செய்யும் செயல்களில் முழு மனத்துடன் ஈடுபட முடியாமல் தவிப்பவர்கள். உலகமே தமக்கு எதிராய்ச் செயல்படுவதாய் நினைப்பார்கள். ஒரு தோல்வி ஏற்படும்போது, அதில் தம்மைத்தவிர தம்மைச் சூழ்ந்திருக்கும் அத்தனை பேரின் மீதும் பழியைப் போடுபவர்கள். விளையாட்டாய்த் தம்மைப் பகடி செய்யும்போதுகூட, அதில் ஆயிரம் கற்பிதங்கள் கற்பித்துத் தம்மை நொந்துகொள்வார்கள்.

    எளிதில் உணர்ச்சியவயப்படுபவர்கள்; சோர்ந்து போகக்கூடியவர்கள். எல்லோரிடமும் நல்லவர்களாக இருக்க முற்பட்டு, ஒருகட்டத்தில் நடித்து வாழும் சூழலுக்குத் தள்ளப்படுவார்கள். தம் சுயத்தை இழந்து பிம்பமாக வாழ்பவர்கள். தம் இயல்பை மீறிய விஷயங்களுக்கும் ஒப்புதல் கொடுத்துவிட்டு, பின்பு வாக்கினைக் காப்பாற்ற முடியாது தவிப்பார்கள்.

    பிறரின் பாராட்டு ஒன்றே அவர்களின் ஒரே குறிக்கோளாக இருக்கும். எந்த ஒரு கேள்விக்கும் அவர்களிடம் விடை இருக்கும். “எனக்குத் தெரியாது!”ன்னு ஒரு பதிலைச் சொல்லவே விரும்பமாட்டார்கள். தெரியாத விஷயங்களைக் கூடத் ‘தெரியும்!’ என்று சொல்லி, அதன்மூலம் சிக்கல்களை
    உருவாக்கிக்கொள்வார்கள். இவைதான் பீட்டா ஆளுமை!

    ஆல்பா ஆளுமையைப்பற்றி படித்தபோது, ஏதோ திரைப்படத்தின் கதாநாயகனைப்பற்றி விவரிப்பதைப் போலத் தோன்றியிருக்கலாம். ஆனால், உலகம் ஹீரோக்களால் சூழப்பட்டது இல்லை என்ற நிதர்சனம் அறியாதவர்கள் இல்லையே நாம்.

    அந்தவகையில் நம்மில் பெரும்பாலானவர்கள் பீட்டா ஆண்களாகத்தான் இருக்கிறார்கள். ஆனால், பெரும்பாலும் அதனை ஏற்கத் தயங்குவார்கள்.
    ஒருவன் தன்னை பீட்டா ஆணாக ஏற்றுக்கொள்வது மட்டுமே, ஆல்பா ஆணாகத் தம்மை மாற்றிக்கொள்வதற்கான முதல் படி” என்கிறார்கள் உளவியலாளர்கள்.

    ஒரு குழந்தை பிறக்கும்போதே அதன் ஆளுமை தீர்மானிக்கப்படுவதில்லை.. பீட்டா ஆணாக ஒரு குழந்தை உருவாவதற்கு நிறைய காரணிகள் இருக்கின்றன. குழந்தை வளர்ந்த விதம், வாழும் சமூகச் சூழல், தந்தையின் ஆல்பா நிலையைப் பார்த்து வளரமுடியாத சூழல் எனப் பல்வேறு காரணிகள் உண்டு. தந்தை ஆல்பா நிலையில் இருந்து வழிநடத்திடாத காரணம் பிரதானமாகக் கருதப்படுகிறது.

    ஆளுமை மிக்கத் தந்தையின் தடம் அவன் மனத்தில் பதியமறுத்து, பெண்மையின் தடம் பதிவேருகிறது. ஆய்வாளர்கள் சொல்வதென்னவென்றால், குகைகளில் வாழும்போதே நமது மூதாதையர் பீட்டா ஆளுமை பெற்றவர்களாகத்தான் வாழ்ந்தார்கள். காலப்போக்கில் தப்பித்தவறி உருவானதுதான் ஆல்பா கலாசாரம் என்கிறார்கள்.

    காரணிகள் எதுவாக இருந்தாலும், எதிர்பாலினத்திடம் அதிக ஈர்ப்புக் கொண்டவர்கள் ஆல்பா ஆண்கள்தான் எனும்போது பரிணாம வளர்ச்சியைக் குற்றம் சொல்லுதல் முறையில்லை. ஆல்பா ஆண்களிடம் பெண்கள் பாதுகாப்பை உணர்வதாக ஆய்வுகள் தெரிவிக்கிறது. வாழ்க்கையின் கடைமட்டத்தில் இருந்தால்கூட, இவனால் உயர்நிலைக்கு வரமுடியும் என்று பெண்கள் நம்புகிறார்கள். ஆனாலும், நம் ஊர்களில் ‘பிழைக்கத் தெரிஞ்சவன்’ என்ற பாராட்டுக்கு உரியவர்கள் பீட்டா ஆண்கள்தான்.

    இவர்களில் யார் சிறந்தவர்கள்? என்ற விவாதத்திற்குள் செல்லவிரும்பவில்லை. அவரவர் விருப்பம் அவரவருக்கு என்பதால் மற்ற மூன்று பிரிவுகளைப்பற்றிச் சுருக்கமாக பார்த்துவிடலாம்.

    ஒமேகா – ஆல்பா ஆண்களைப் போலவே நம்பிக்கை உடையவர்கள், புத்திசாலிகள், செய்யும் செயல்களின் தெளிவு உடையவர்கள். ஆனால், ஆல்பா ஆண்களைப் போல அல்லாமல், தமக்காகவே வாழ்பவர்கள். எவருடனும் உணர்வுப்பூர்வ ஒட்டுதல் இல்லாதவர்கள். வெகு சிலரை மட்டுமே நம்புவார்கள், அதனினும் வெகு சிலரைத்தான் நெருங்கிய வட்டத்துக்குள் சேர்த்துகொள்வார்கள். தலைமையைப் பற்றி கவலைப்படாதவர்கள். ‘எனக்கு நானே தலைவன்!’ என்று வாழ்பவர்கள்.

    காம்மா – ஒருவகையான தலைமறைவு நபர்கள். ஆல்பாவைப் போல, தாங்கள் இருக்கும் இடத்தைத் தம் வசப்படுத்துபவர்களும் அல்லர்; அருகில் நின்று ஆமோதிக்கும் ‘பீட்டா’ போலவும் அல்லாதவர்கள். அறையின் சுவர்களைப்போல அவர்களும் ஒரு பிராப்பர்ட்டிதான். யாருக்கும் தொந்தரவு செய்யாதவர்கள், அதேநேரத்தில் பிறருக்கு மறக்கமுடியாத அளவுக்குத் தம் இருப்பினைக் காட்டிக்கொள்பவர்களும் அல்லர். தலைமைக்கும் ஆசைப்படாது, பின்தொடர்பவர்களாகவும் இருக்க விரும்பாதவர்கள். அதிகச் சிரமமில்லாத இலக்கை, தமக்கு வசதிப்பட்டால் கையில் எடுத்துக்கொள்வார்கள்.

    சிக்மா – திறமையான சாணக்கியர்கள். தன் இரைக்காகக் காத்திருக்கும் சிலந்தியைப்போலத் தனக்கான வாய்ப்புக்காகக் காத்திருப்பார்கள். தம் இலக்கினை அடைவதற்குப் பிறருக்குக் குழிபறித்துக் காத்திருப்பவர்கள். ஆல்பா ஆண்கள் போலவே, ஒரு குழுவில் இவர்களுடைய குரலுக்கு அதிக வலிமை இருக்கும். ஆனால், அது தலைமைப் பண்பினால் உண்டாகும் மதிப்பு அன்று! “இவன் பேச்சைக் கேட்காவிட்டால், நம்மை எதிலாவது (சிக்கல்களில்) மாட்டிவிடுவானோ?” என்ற அச்சத்தில் பிறர் ஆமோதிப்பார்கள். விதியே என நொந்து இவரைத் தலைவனாக ஏற்றுக்கொள்வார்கள். இதன்காரணமாகச் சில நேரங்களில் ஆல்பா ஆண்களை விட அதிக உயரத்துக்குச் செல்லும் வாய்ப்புகள் கூடக் கிடைக்கலாம். வாய்ப்புக் கிடைக்கும்வரை பீட்டா போலவும், கிடைத்தபிறகு ஆல்பா போலவும் மாறிக்கொள்ளும் ’அமைதிப்படை அமாவாசை’கள்!

    இவ்வளவுதான் ஆண்கள்! இனக்கவர்ச்சி என்பது ஏதோ ஒரு சபலம் சம்மந்தப்பட்ட விடயமன்று! மனித இனத்தின் பரிணாம வளர்ச்சியின் அடிநாதமே இனக்கவர்ச்சிதான். ஏவாளின் மீது ஆதாமுக்கு இனக்கவர்ச்சி ஏற்பட்டிருக்காமல் போயிருந்தால், என்னாகியிருக்கும்?

    ஆகையால் பெண்களைக் கவர்கின்ற ஆண்களின் ஆளுமைப் பட்டியலை இங்கே வரையறுத்திருப்பதும் அவசியமாகவே படுகிறது. “அவன் திமிர்பிடிச்சவன்!” என்று ஆல்பா ஆளுமையைப் புறந்தள்ளும் பெண்களும் உண்டுதான். அத்தகைய பெண்கள் பீட்டா ஆண்களைத் தேடிப்பிடிப்பதும் உண்டு. ஆனால், பெரும்பாலும் பெண்களின் தேடல், ஆல்பா ஆளுமை மிக்க ஆண்களைச் சுற்றியே சுழல்கிறது என்பதுதான் உண்மை.

    ஒருவன் தன் ஆளுமையை வளர்த்துக்கொள்ள முதல் படியே, தனது ஆளுமையின் படிநிலையை உணர்வதுதான். அந்தவகையில் ஆளுமைகளைப்பற்றி அறிந்துகொள்வதுதான், தலைமைப்பண்பு மிக்க ஆல்பா ஆணாக உருவாவதன் முதல்நிலை. இதனைச் சரியாகப் புரிந்துகொண்டால் உங்களுக்கும் ஒரு ஹீரோ இன்ட்ரொடக்ஷன் பாடல் தயாராகிவிட்டது என்று பொருள் கொள்க!

    Share
  • அரிதாரம்

     விஜய் விக்கி

    தீபாராதனை முடிந்து, அர்ச்சகர் கொடுத்த திருநீறை மடித்துவைக்க காகிதத்தைத் தேடிய அமுதாவிற்கு, கசங்கிய, அழுக்கான, தண்ணீரில் ஊறிய காகிதங்கள் மட்டும்தான் கண்களுக்கு அகப்பட்டது… வேறு வழியின்றி, சேலையின் முந்தானையில் கொட்டி முடிச்சுப்போட்ட பிறகுதான்தான் மனம் சற்று நிதானமானது… வழக்கம்போலவே அர்ச்சனையில் உடைத்த தேங்காய்முடிக்குள் அதனை கொட்டியிருக்கலாம்தான்… ஆனால், கடந்தமுறை அப்படி செய்திருந்த தேங்காயில் சட்னி செய்தபோது, “ஏன் சட்னி ஒரு மாதிரி ஸ்மெல்லா இருக்கு!”ன்னு மூன்று இட்லிகளோடு சிற்றுண்டியை முடித்துக்கொண்ட கணவனின் முகம் மனதிற்குள் வந்துபோனதால்தான் இன்றைக்கு காகிதத்தைத் தேடவேண்டிய கட்டாயம் இவளுக்கு…

    மாலையின் வெளிச்சம் மெள்ள மங்கிக்கொண்டிருந்தது.. பிரகாரத்தின் இடதுபுறம் ஒரு தூணில் சாய்ந்தபடி அமர்ந்துகொண்டாள் அமுதா.. பைக்குள்லிருந்து ‘க்ர்ர்ர்… க்ர்ர்ர்..’ அலைபேசி வைப்ரேட்டியது.. ‘அரவிந்த்’ என திரை பளிச்சிட, ஸ்வைப் செய்து காதில் வைத்தவாறு “கோவில்ல இருக்கேங்க.. கொஞ்சநேரம் இருந்துட்டு வரேனே!” பணிவாகப் பேசினாள்..

    “ஹ்ம்ம் சரி… கிளம்புறப்போ கால் பண்ணு, கார் வரச்சொல்றேன்.. இருட்டிடும்ல” கணவனின் அக்கறையான பதில்.. சிவப்பு பொத்தானை அழுத்தி, மொபைலை கைப்பைக்குள் திணித்துக்கொண்டாள்.. ஒரு மணி நேரத்திற்கொருமுறை, எவ்வளவு பணிச்சுமையில் சிக்கித் தவித்தாலும் அரவிந்திடமிருந்து ஒரு அழைப்பு வந்துவிடுவதுண்டு..

    “எங்க இருக்க?… சாப்டியா?.. இவ்ளோ நேரம் ஏன் சாப்டாம இருக்க?” நலன்சார்ந்த கேள்விகள்தான் அதில் பிரதானம்.. நடந்துசென்றால்கூட நெற்றி வியர்க்காத தூரத்திலிருக்கும் கோவிலுக்கு கார் அனுப்பும் இதுபோன்ற வினோத அக்கறைகளை அரவிந்திடம் மட்டும்தான் காணமுடியும்!

    இப்போ வீட்டிற்கு சென்றாலும் ஒன்றும் செய்துவிடப்போவதில்லை.. சட்னியும் கூட செய்து வைத்தாகிவிட்டது, தோசை வார்த்துக்கொடுக்க ஐந்து நிமிடங்கள் போதும்.. அதுவரை என்ன செய்வது?.. படித்த புத்தகம் எதையாவது எடுத்து புரட்டிக்கொண்டு வேண்டுமானால் இருக்கலாம்.. அப்படி பலமுறை புரட்டிய காகிதங்களே கிழியும் தருவாயில் தொக்கித்தான் நிற்கின்றன.. இப்போதும்கூட கிரிக்கெட்டில் ‘லொட்டு’ லொட்டு’ன்னு தட்டிக்கொண்டிருப்பதை வைத்த கண் விலகாமல் பார்த்துக்கொண்டிருப்பார் அரவிந்த்.. அப்பப்போ, ‘செம்ம ஷாட்!… ஐயோ அவுட் ஆகிட்டான்!’ன்னு தனியே புலம்பிக்கொண்டிருக்கும் அவரைத்தாண்டி, சுவற்றை மட்டும்தான் வெறித்துக் கொண்டிருக்கவேண்டும்… அதற்கு பதிலாக இந்த கோவிலில் வேடிக்கை பார்க்கத்தான் எவ்வளவோ விஷயங்கள் கொட்டிக்கிடக்கிறதே!…

    வலதுபுறத்தில், படிகளின் ஓரத்தில் அமர்ந்து கிசுகிசுத்துக்கொண்டிருக்கும் அந்த புதுமண ஜோடியை கண்களால் கணித்துக்கொண்டிருக்கிறாள் அமுதா.. திருமணம் முடிந்து அதிகபட்சம் பத்து நாட்கள்தான் ஆகியிருக்கணும்!.. தாலியின் மஞ்சள் கூட இன்னும் மங்கவில்லை, நெற்றியின் வகிட்டுக் குங்குமம் அந்த அனுபவமின்மையை பிரதிபலித்தது… அந்த புதுப்பெண்ணின் கைகளில் வைத்திருந்த மருதாணி வாசனையை அவள் கணவன் நுகரத்துடிக்கிறான்… அவளோ, அக்கம் பக்கத்தில் ஆட்கள் இருப்பதாய் மறுக்கிறாள்… அவன் ஏதோ காதுகளுக்குள் கிசுகிசுக்க, அவள் வெட்கப்பட்டுச் சிரித்தவாறே பதில் சொல்கிறாள்.. மேற்கொண்டு அவற்றை பார்க்க விரும்பாதவளாக வேறுபக்கம் பார்வையை படரவிட்டாள் அமுதா..

    திருமணமான புதிதில் இவளுக்கும் அப்படியோர் அனுபவம் வாய்த்தது… ஏதோ பரிகார நிவர்த்திக்காக புதுமணதம்பதியை மட்டும் கோவிலுக்கு அனுப்பிவிட்டு, ‘சின்னஞ்சிறுசுகள் தனியா போயிட்டு வரட்டும்!’ என ஒதுங்கிக்கொண்டார்கள் பெரியவர்கள்… வழிபாடு முடிந்து இப்படியோர் பிரகாரத்தில் அமர்ந்திருந்தபோது, அமுதாவிற்கும் அரவிந்திடம் கேட்க ஆயிரம் கேள்விகள் வரிசைகட்டிக் காத்திருந்தன… மொபைலில் சென்செக்ஸ் புள்ளிகளை கணித்துக்கொண்டிருந்த கணவனிடம், எப்படி கேள்வியை தொடங்குவது? என்றுதான் புரியவில்லை…

    “நீங்க படமெல்லாம் பார்ப்பிங்களா?” அப்பாவியாக பேச்சைத் தொடங்கினாள்..
    “ஹ்ம்ம்…”
    “எந்த ஹீரோ பிடிக்கும்?”
    “லியோனார்டோ டி காப்ரியோ”

    இந்த பதிலின் அர்த்தம் அவளுக்கு புரியவில்லை… ஆனால், மேற்கொண்டு கேள்விகளை தவிர்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் சொல்லப்பட்ட பதிலென்பது மட்டும் புரிந்தது.. மீதமிருந்த தொல்லாயிரத்து தொன்னூற்றெட்டு கேள்விகளும் தொண்டைக்குள் விழுங்கிய எச்சிலோடு கரைந்துபோனது..

    திருமணமாகி கிட்டத்தட்ட ஆறு மாதங்களுக்கு மேல் ஆகிறது… என்றாலும், இன்னும் முழுமையாய் புரிந்துகொள்ள முடியாத சூட்சமமாய்தான் இருக்கிறான் அரவிந்த்… சற்று ஏழ்மையான குடும்பத்தின் மூத்த மகளுக்கு, கனிம வளத்துறையில் உயரிய பொறுப்பு வகிக்கும் வசதியான வரன் அமைந்ததை எண்ணி இன்னும் சிலாகித்துக்கொண்டிருக்கிறார் அமுதாவின் அப்பா… “நம்ம அமுதாவ அவங்களுக்கு ரொம்பப் பிடிச்சிருக்காம்.. ஜாதகமும் நல்லா பொருந்திருக்கு, யோசிக்காம முடிச்சிடுங்க!” தூரத்து உறவினர் வழியே வந்த வாய்ப்பை இவளின் அதிர்ஷ்டமாகத்தான் பார்த்தார்கள் வீட்டார்… “நம்ம அமுதா யோகத்துக்கு அவ ராணி மாதிரி இருப்பான்னு சொன்னேனா இல்லையா?” அப்பா பெருமை பீற்றிக்கொண்டார்… மாமானாரைக்கூட ‘அப்பா’ என உரிமையோடு விளிக்கும் மாப்பிள்ளை எத்தனைபேருக்கு வாய்த்திருக்கமுடியும்?… வாய்வார்த்தைக்கு மட்டுமல்லாது, மகனாகவே பலமுறை குடும்பத்து பிரச்சினைகளின்போது முன்னின்ற அரவிந்த்துக்கு இவள் அப்பா ரசிகர் மன்றம் தொடங்கினால்கூட அதிசயமில்லை..

    அவர்கள் கணிப்பும், யோசனையும் பொய்யாகவில்லை… வசதியான வாழ்க்கை.. முழுமையான சுதந்திரம், ராணி போலத்தான் வாழ்கிறாள்.. ஆனால்….

    பின்னாலிருந்து ஒரு கை அவள் தோளின் மீது படர, திடுக்கிட்டுத் திரும்பினாள் அமுதா.. வாய் முழுக்க புன்னகையோடு நின்றுகொண்டிருக்கும் அந்த பெண்ணை சட்டென அடையாளம் காணமுடியவில்லை.. ஒருவழியாய் நிழல் உலகத்திலிருந்து தன்னை மீட்டுக்கொண்டு, எதிரே நிற்பவளை அடையாளம் காண்பதில் மனம் முனைப்பானது…

    “அமுதா மிஸ் தான நீங்க?” அமுதா மிஸ்’ஸா?.. ஏதோ ஒருகாலத்தில் பணிபுரிந்தது.. இவளுக்கே மறந்துபோயிருந்த இறந்தகாலமாயிற்றே, அந்த தனியார் பள்ளியின் ஆசிரியை பணி!… அதை நினைவுகூர்ந்து இன்றைக்கு அழைக்கும் இந்தப்பெண் யார்?.. அட ஆமா!.. அந்த தெத்துப்பல், புருவத்தின் மேலிருக்கும் மரு… ஒருவழியாய் ஊகித்துவிட்டவளாக, “பானு மிஸ்தான நீங்க?”

    ஆச்சர்யம் பொங்க வினவினாள்… கடந்த ஆறு மாதங்களாக தடயமே இல்லாது தனது வாழ்க்கைப் புத்தகத்தில் மறைந்துபோன மனிதர்களுள் ஒருத்திதான் பானுவும்…

    பானு, கலகலப்பாக பேசுபவள்.. மனதிற்குள் தோன்றியதை பட்டென போட்டு உடைத்துவிடும் கண்ணாடி மனசுக்காரி.. உணவு இடைவேளையில் அவள் திறக்கப்போகும் டிபன் பாக்ஸ்க்காக காத்திருந்த ஏழெட்டு சக ஆசிரியைகளுள் அமுதாவும் ஒருத்தி..’ ஒவ்வொன்றாய் நினைவுகள் வரிசைக்கட்டி மடையை திறந்து கொண்டு மனதிற்குள் கொட்டத்தொடங்கின…

    “பரவால்லையே… ஞாபகம் வச்சிருக்கிங்க!”

    “எப்டி மறக்கமுடியும்?… அந்த கத்தரிக்காய் தொக்கு இப்பவும் கண்ணு முன்னால வந்துபோகுது!” சிரித்துக்கொண்டாள் அமுதா..

    “கத்தரிக்காய்லாம் ஞாபகம் இருக்கு, என்னைய கல்யாணத்துக்கு இன்வைட் பண்ணனும்னு மட்டும் மறந்தாச்சுல்ல?”

    “ஐயோ சாரி பானு… அவசரமா ஏற்பாடு பண்ணிட்டாங்க… அவரு ஜாதகத்துல ரெண்டு மாசத்துக்குள்ள கல்யாணம் பண்ணனும்னு சொல்லிட்டாங்களாம்… அதான், நெருங்கிய சொந்தக்காரங்களுக்கு மட்டும் சொல்லி கோவில்லையே சிம்பிளா நடந்துமுடிஞ்சிடுச்சு… ப்ரெண்ட்ஸ், கூட வேலை பாக்குறவங்கன்னு யாரையும் இன்வைட் பண்ணமுடியலன்னு ரொம்ப கஷ்டமா போச்சுப்பா…” பானுவின் கையைப்பிடித்து அழுத்தியபோது அவள் முகத்தில் ஏமாற்றம் தெரிந்தது…

    “சரி விடுங்க… பொம்பளைங்க நாம நெனச்சா எல்லாம் நடக்குது?… உங்க ஹஸ்பன்ட் எப்டி இருக்காரு?… கவர்மென்ட் ஜாப்னு சொன்னாங்க, வசதியான குடும்பமாமே.. சொத்துபத்துன்னு பாரம்பரியமான குடும்பம்னுலாம் சொன்னாங்களே!.” எல்லாவற்றையும் விசாரித்து வைத்திருக்கிறாள் போலும்..

    “ஆமா… மினரல்ஸ் டிப்பார்ட்மெண்ட்ல வர்க் பண்றார், பெரிய குடும்பம்தான்.. இங்க திருச்சிலதான்… ஆமா, நீங்க எப்போ தஞ்சாவூர்லேந்து இங்க வந்திங்க?”

    “மூணு மாசமாச்சு… திருச்சிதான் எனக்கும் புகுந்தவீடு”

    பானுவின் கழுத்தை கவனித்தாள் அமுதா… அட ஆமா, தாலி இருக்கிறது.. அவளிடம் கோபித்துக் கொள்வதில் அர்த்தமில்லை.. அவளுக்குமான பதிலாகத்தான் முன்னமே, ‘பொம்பளைங்க நாம நெனச்சா எல்லாம் நடக்குது?’ன்னு சொல்லிவிட்டாள்…

    “கங்க்ராட்ஸ்பா…” வாழ்த்துகளைத் தாண்டி, கடந்த கால நினைவுகளை அசை போட்டுக் கொண்டிருந்தபோதுதான் பானுவின் கழுத்தினை எதேச்சையாக கவனித்து,

    “அதென்ன உங்க கழுத்தில சிவந்து போயிருக்கு?.. காயம் போல இருக்கே..”
    அக்கறையாய் வினவினாள் அமுதா…

    பானுவிடம் பதில் வார்த்தைகளாக வரவில்லை, அசட்டுச் சிரிப்பு மட்டும்தான் வெளிவந்தது… எதற்காக வெட்கப்படுகிறாள்? அமுதா புரியாமல் ஏறிட்டுப் பார்த்தாள்… சற்று கூர்ந்து அந்த காயத்தை கவனித்தபோதுதான், பற்களின் தடம் அவள் கண்களுக்கு புலப்பட்டது… அமுதாவிற்கு சுருக்கென்றது…

    கேட்டிருக்கக்கூடாத கேள்வியோ?.. என்ன நடந்திருக்கிறது? என்பது எளிதாக அனுமானிக்க முடிந்த விஷயம்தான்… அதனை இவ்வளவு துழாவியிருக்க வேண்டாம்!..

    “ஐயோ நீங்க சொன்னதும்தான் ஞாபகம் வருது.. அவரு அர்ச்சனை சீட்டு வாங்குறதுக்குப் போனார், உங்கள பார்த்ததும் அவரை மறந்துட்டேன் பாருங்க…

    போய் சாமி கும்பிட்டுட்டு வரேன், இங்கயே இருங்க.. நிறைய பேசுவோம்!”

    துள்ளிக்குதித்து கணவனை நோக்கி ஓடினாள் பானு…

    ஆனால் அமுதாவிற்கு அவளுடன் பேச்சைத் தொடர விருப்பமில்லை… மனதினுள் ஏதோ ஒரு இன்ஸ்டன்ட் கவலை சூழ்ந்துகொண்டது.. சட்டென பேட்டரியின் சார்ஜ் இழந்த மொபைல் போல முகத்தின் பிரகாசம் மங்கிப்போனது.. பானு தன் பார்வையைவிட்டு மறைந்த மறுகணம், சட்டென எழுந்து வீட்டை நோக்கி நடக்கத்தொடங்கினாள்..

    இப்போதெல்லாம் யாரோ கணவன், அவன் மனைவியிடம் காதலோடு பேசுவதை பார்த்தாலே அவள் மனதிற்குள் அனிச்சையாய் அமிலம் சுரக்கிறது… கோபம் சுளீரிடுகிறது..

    இப்போதுகூட பானுவின் கணவன் மீது, “கோவிலுக்கு போற பொண்ணுகிட்ட இப்டியா நடந்துக்கர்றது?.. பொண்டாட்டியாவே இருந்தாலும் இதல்லாம் அசிங்கமா இல்ல?”ன்னு கோபம் வருகிறது… இவள் வேகமாய் கிளம்பவும் அந்த கோபம்தான் காரணம், கொஞ்சம் கூடுதல் நேரம் பானுவிடம் பேசியிருந்தால் அநேகமாய் அந்த மனக்குமுறல் வார்த்தைகளாக வெளிவந்திருக்கும்.. இப்போது மட்டுமல்ல.. பார்க்கில் காதலன் மடியில் சாய்ந்திருக்கும் காதலியை பார்த்தபோதும், திரையரங்கில் கார்னர் சீட் தேடிப்போகும் தம்பதிகளை பார்க்கும்போதும், திரைப்படங்களில் அன்யோன்யமாக நடிக்கும் நடிகர்களைப் பார்த்தால்கூட இப்படிப்பட்ட கோபங்கள் அனிச்சையாகவே உண்டாகிறது.. ‘இதல்லாம் சமூக சீர்கேடு!.. அன்யோன்யம்னா வீட்டுக்குள்ள இருக்கணும், இப்டி பப்ளிக்ல அசிங்கமா… ச்ச ச்ச… மனுஷனுக்கும் நாய்க்கும் வித்யாசம் இல்லையா?’ன்னு அவ்வப்போது பொங்கித்தீர்ப்பதும் உண்டு… ஆனால், இந்த கோபங்கள் சமூக அக்கறையைத் தாண்டிய, அது ஒருவித மனவிரக்தியின் வெளிப்பாடு என்பது அவள் மனதிற்கு மட்டுமே தெரிந்த உண்மை… ஆனால், அந்த உண்மையை அமுதாவின் ஈகோ என்றைக்குமே ஏற்றதில்லை என்பது வேறு விஷயம்!..

    இருட்டிப்போயிருந்தது.. சாலையின் இருட்டு பயமில்லை, நாய் குரைப்பதில் கவனம் இல்லை, மதுவின் நெடி வீசும் யாரோ சில சிகரெட்’வாலாக்கள் தன்னைக் கடந்துசென்றபோதும் எவ்வித சலனமும் இல்லை… இவள் கவனம் முழுக்க மனதின் வலிகளைப்பற்றியே சிந்தித்துக்கொண்டிருக்கிறது.. எதற்கு இப்படியொரு கோபம், கவலை அவளுக்குள்?.. வசதியான வாழ்க்கை, அக்கறையான கணவன், முழுமையான சுதந்திரம்.. தன்னை மட்டுமல்லாது, தனது குடும்பத்தினையும் மிகுந்த பாசத்துடன் அணுகும் மணவாளன்… தன் தகுதியை மீறிக் கிடைத்த வாழ்க்கையென எத்தனையோ முறை எண்ணியிருக்கிறாள்… ஆனால், எல்லாமும் இருந்து ஏதுமற்றதாய் ஒரு வெறுமை எப்போதுமே அமுதாவை ஆட்கொண்டிருப்பதுதான் சிக்கலே.. உப்பில்லாத உணவு பண்டங்களை போல, உணர்ச்சிகளற்ற வாழ்க்கை அது…

    திருமணமான புதிதில் அரவிந்த் உடல் சார்ந்த இன்பங்களில் அதிகம் நாட்டமில்லாமல் இருப்பதை கவனித்தபோது, ‘சரி பழக்கமில்லாத பொண்ணுங்கிறதால தயங்குறார் போல!’ என அதனைப் பெரிதாய் பொருட்படுத்தவில்லை.. ஆனால், நாட்கள் செல்ல அந்த இடைவெளி இன்னும் அதிகரித்துக்கொண்டே செல்லும்போதுதான் அவளுக்குள் ஒருவித பயம் உதித்தது.. ‘ஒருவேளை என்னைய பிடிக்கலையோ?’

    இப்படித்தான் தாழ்வுமனப்பான்மை மொட்டாய் அரும்பியது… அமுதாவை பொறுத்தவரை பேரழகி இல்லை என்றாலும், களையான முகத்தவள்… செயற்கை ஒப்பனைகள் இல்லாமலேயே, முகப்பொலிவு மங்காதவள்… கல்லூரி காலம் முதல், பணிபுரியும் நாட்கள் வரையென இவளை மனைவியாக்கிக்கொள்ள எத்தனித்த ஆண்களின் எண்ணிக்கை மட்டும் டசன் கணக்கைத் தாண்டும்… அப்படியிருக்க அரவிந்துக்கு மட்டும் ஏன் பிடிக்கவில்லை?.. யாரோ ஒரு தோழி மூலம், அழகு நிலையம் கூட சென்று பார்த்துவிட்டாள்… புருவத்தைச் செப்பனிட முடிந்தது,

    கரும்புள்ளிகளை காணாமல் போக செய்திட முடிந்தது… பேஷியல், பவுண்டேஷன் க்ரீம், மஸ்காரா என செயற்கை ஒப்பனைகளால் அலங்கரித்தபோதிலும், அரவிந்தின் பார்வை மட்டும் இன்னும் இவள் பக்கம் திரும்பியபாடில்லை…

    “பொண்ணுங்க மல்லிப்பூ வச்சிருந்தாதான் தனி அழகே!” என்றைக்கோ ஒருமுறை நண்பரிடம் அரவிந்த் சம்பாஷித்த பேச்சினை கவனித்த அமுதாவிற்கு அன்றுமுதல் மல்லிகைப்பூவும் உடலின் ஒரு அங்கமாகவே மாறிவிட்டது.. மல்லிகை மணம் ஏற்படுத்திய ஒவ்வாமை தலைவலியை தாங்கிக்கொண்டு, மலர் சூடிய மங்கையாய் அரவிந்தின் எதிரில் நிற்பாள்..

    இன்னும் வேறென்னவெல்லாம் குறை கண்டிருக்கிறார் என்னிடம்?… எவ்வளவோ இயல்பை மீறிய மாற்றங்களை உள்வாங்கி வெளிப்படுத்தியபோதும், அதனை பொருட்டாகவே கண்டுகொள்ளாத கணவனின் பார்வை என்றைக்குத்தான் இவள் பக்கம் ஏறிடுமோ தெரியவில்லை!..

    ‘ஒருவேளை இவருக்கு திருமணத்திற்கு முன்பே வேறு பெண்ணுடன் காதல் இருந்திருக்குமோ?’ ஆறு மாதங்களாய் அதற்கான தடயங்களை தேடியும், அப்படி ஒரு சான்றும் சிக்கவில்லை.. திருமணத்திற்கு பின்னும் கூட எத்தனையோ பெண்கள், இவள் அறிந்தே அரவிந்திற்கு தூண்டில் போட்டனர்… “தூண்டில் முள்ளில் சிக்கிட அரவிந்த் ஒன்றும் கெண்டை மீன் இல்லை, திமிங்கலம்” பலமுறை கணவனை
    நினைத்து இப்படி சிலாகித்ததுண்டு.. கடைக்கண் பார்வை பட்டால் கவிழ்ந்துவிட பெண்கள் என்னவோ தயாராகத்தான் இருந்தார்கள், இவன் நிமிர்ந்து பார்த்தால்தானே அதெல்லாம் நடக்கப்போகிறது!.. ராமன்தான்… ஆனால், சீதையைக்கூட தொட மறுக்கும் ராமன்… அணிலாய் நினைத்து தொட்டால்கூட, மூன்று கோடுகளுக்காவது கொடுப்பினை இருந்திருக்கும்.. அதற்கும் வழியில்லாத அசோகவனத்து சீதை இவள்..

    அதற்காக உடலுறவில் ஈடுபடவில்லை என்றெல்லாம் நினைத்திட வேண்டாம்… அத்திபூத்தார் போல அவ்வப்போது, ஒரு உடலியல் நிகழ்வாக மட்டும் அது நடப்பதுண்டு… முத்தம் கூட இல்லாமல், கருவை உருவாக்குவதில் மட்டுமே முனைப்பாகிய முற்றிலும் எந்திரத்தனமான நிகழ்வு அது.. ஆனால், அமுதாவின் ஏக்கம் வேறு மாதிரியானது… அது செக்ஸ் சார்ந்தது இல்லை..

    கதைகளில் படித்த காதல், திரைப்படங்களில் காட்சிப்படுத்தப்பட்ட அன்யோன்யம், அக்கம்பக்கத்தில் பார்த்தறிந்த நெருக்கம்… ஒருவேளை தான் வாழ்வதுதான் உண்மை, மற்றவை எல்லாம் கற்பனையா? என்கிற யோசனை கூட அடிக்கடி வருவதுண்டு… நிஜத்தில் தன்னை சமாதானப்படுத்திக்கொள்ள அவளாகவே ஏற்படுத்திக்கொள்ளும் காம்ப்ரமைஸ் கற்பனைகள் அவை… இப்போது பார்த்த பானுவின் கழுத்து காயத்தடம் போன்ற நிகழ்வுகள், அந்த கற்பனை பிம்பத்தினை அவ்வப்போது சிதறிப்போகச் செய்துவிடுகின்றன… மீண்டும் பழையபடி ஒருவித காம்ப்ளக்ஸ் அவளைத் தொற்றிக்கொள்கிறது…

    இப்படி அன்யோன்யம் இல்லாது போவதால், அக்கறையில்லாத கணவனாகவும் அரவிந்த்தை பார்த்திட முடியாது.. கனிவான கவனிப்பில் சராசரி கணவன்மார்களைவிட சற்று கூடுதல் மதிப்பெண்களே கொடுக்கும் அளவிற்கு பொறுப்பானவன்…

    இதோ அமுதா இப்போது கடந்துசெல்லும் பாரதி ஹாஸ்பிட்டலே அதற்கொரு சாட்சிதான்…. இரண்டு மாதங்களுக்கு முன்பு டெங்கு காய்ச்சலால் கிட்டத்தட்ட ஒருவாரம் இங்குதான் அனுமதிக்கப்பட்டிருந்தாள் அமுதா..

    நிமிர்ந்து அமர்ந்திடக்கூட உடலில் வலு இல்லாமல் சுரத்தே இன்றி படுக்கையில் கிடத்தப்பட்டிருந்த அந்த நாட்களில் அரவிந்த்’தான் அவ்வளவு அக்கறையாக கவனித்துக்கொண்டான்.. பழச்சாறு பிழிந்து கொடுப்பது, கைத்தாங்கலாக நிமிர்த்தி அமரச்செய்தது, வேளாவேளைக்கு மாத்திரைகள் கொடுத்தது… “நீங்க ஏன் லீவ் போடுறீங்க?.. அம்மாவை வரச்சொல்றேன், நீங்க ஆபிஸ் போங்க!” அமுதாவும் சொல்லிப்பார்த்தாள்… அவன் மனம்தான் அதற்கு ஒப்பவில்லை.. “பரவால்ல… எனக்கொரு கஷ்டமும் இல்ல!” என்றான் பதிலுக்கு…

    “என் மனைவியை நான்தானே பார்த்துக்கணும்!” என்கிற தொனியிலான பதிலது.. இவ்வளவு அக்கறையாக இருப்பவர் ஏன் அன்யோன்யத்தை விரும்பவில்லை?.. பாசம் இல்லாமல் அக்கறை உருவாகிட வாய்ப்பில்லை.. பாசம் இருக்கும் பட்சத்தில் அது காதலாய் ஏன் கனியவில்லை?…

    ‘ஒருவேளை எனக்கு பிடிக்காதுன்னு நினைச்சு அதல்லாம் அவர் செய்றதில்லையோ?’ என்ற சந்தேகம்கூட ஒருமுறை எழுந்தது… சரி, அதையும்தான் வெட்கத்தைவிட்டு சோதித்து பார்க்கலாமே!.. தானாக அரவிந்திடம் அன்யோன்யமாக இருக்க முற்பட்டு கட்டி அணைத்தாள்… அந்த பிடியிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்ட அரவிந்த், அவளை வித்தியாசமாக ஏறிட்டு வெறித்துப்பார்த்தான்… அந்த பார்வையில், அமுதாவின் சப்த நாடிகளும் ஒடுங்கிப்போனது..

    அநேகமாய் இவள் நடத்தையில் கூட அவனுக்கு சந்தேகம் ஏற்பட்டிருக்கலாம்… இந்த பாழாய்ப்போன உலகம் எல்லாவற்றுக்கும் ஒரு முட்டாள்த்தனமான வரையறை வகுத்துள்ளதே… காதலை சொல்வதோ, காமத்தில் திழைப்பதோ அவை பெண்கள் முன்னெடுக்கும்போது இயல்பாகவே அந்த வரையறையை மீறியதாகப் பார்க்கிறார்கள்.. ஆசையாய் கணவனைத் தொடும்போது, எதிர்கொள்ள வேண்டிய
    பார்வையா அது?… ஐயோ, பழுக்க காய்ச்சிய கம்பியை தலையில் தேய்த்ததுபோலஉயிரைப் பிளந்திடும் பார்வை.. அதற்குமேல் சோதித்து பார்க்கவெல்லாம் மனதில் திடமில்லை.. ஆசைகளை ஆழமாய் மனதிற்குள் புதைத்து வாழத்தொடங்கினாள்..

    யோசித்தபடியே வீட்டை நெருங்கிவிட்டாள்… தெருவின் முனையில் சாலையோர பள்ளத்தில் தேங்கிக்கிடந்த சேற்றுநீரில் கால் வைத்துவிட்டாள்..

    செருப்பெல்லாம் சகதி… இவள் குழம்பிய மனதோடு நடந்துவந்ததில், ஆற்று நீரை கடந்திருந்தால் கூட ஆச்சர்யமில்லை… “இந்த கார்ப்பரேஷன்காரங்க என்னதான் வேலை பார்க்குறாங்க” கணவன் மீதிருந்த கவலை, சில வினாடிகள் கார்ப்பரேஷன் மீதான கோபமாய் மாறியிருந்தது..

    ஐயோ புது செருப்பெல்லாம் சகதியாப் போச்சே!.. பேசாம போன் பண்ணி கார் வரச்சொல்லிருக்கலாம், வாளுபோய் கத்தி வந்தது போல இதை எங்கே கழுவுறது?…

    சேலையை தூக்கிப்பிடித்தபடி ஒருவழியாய் வீட்டின் கேட் அருகே வந்துவிட்டாள்.. இப்படியே அழைப்புமணியை அடித்தால், அனாவசிய சலசலப்புக்கு வழிவகுத்துவிடுவதாய் ஆகிவிடும்.. “ஏன் நடந்து வந்த?, எவ்ளோ சொன்னாலும் புரியாதா உனக்கு?.. போன வாரம் ஒரு பொண்ணு செய்னை அறுத்துட்டுப் போனானுகளே, மறந்துட்டியா?” இப்படி அரவிந்தின் ஆயிரம் கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டியிருக்கும்.. சத்தமில்லாமல் சேற்றை கழுவிக்கொண்டு, உள்ளே போகலாம்… ஆட்டோவில் வந்ததாய் சொல்லி சமாளித்துக்கொள்ளலாம்..

    சத்தமில்லாமல் கேட்டைத் திறந்து, அப்படியே கொல்லைப்புறத்தில் இருக்கும் பைப்பை நோக்கி நடந்தாள்.. தண்ணீரை மெள்ள திறந்துவிட்டு, செருப்பைக் கழுவினாள்… சேலையின் கீழ்ப்புறத்திலும் சேற்றின் திட்டுக்கள்…

    அதனையும் தண்ணீர் தொட்டு துடைத்துவிட்டு நிமிர்ந்தாள் அமுதா.. படுக்கையறையின் ஜன்னலின் மீது பார்வை படர்ந்தது.. ஜன்னல் கதவு ஒருக்களித்து சாத்தப்பட்டிருக்கிறது… ஏசியின் காற்று அதனூடே கசிந்து வீணாவதாய் எத்தனையோ முறை மனம் பதைத்தபோதிலும், அரவிந்திற்கு எப்போதும் அது ஒரு பொருட்டாகவே தெரிந்ததில்லை..

    அருகிலிருந்த திட்டின் மீது ஏறி நின்று, அதனை அழுத்தி சாத்த முற்பட்டபோதுதான் ஒருவித வித்யாசமான சத்தம் உள்ளிருந்து காற்றினூடே காதுகளை அடைந்தது.. என்ன சத்தம் இது?.. ஏதோ முனகல் சத்தம் போலல்லவா கேட்கிறது.. அழுத்தி சாத்திட எத்தனித்த கைகள், அனிச்சையாகவே ஜன்னல் கதவினை மெள்ள திறந்தது.. உள்ளே என்ன நடக்கிறது?… அடக்கடவுளே!… ஒருசில வினாடிகள் தலை சுற்றிதடுமாறி நின்றது..

    அரவிந்துடன் வேறொரு நபர் நிர்வாண கோலத்தில் கட்டிப்பிடித்தபடி படுக்கையில்… ஐயோ.. அதுவும் யாரோ ஒரு ஆணுடன்… கடவுளே!… அரவிந்தாக அது இருக்கக்கூடாது என மனம் பதறியது… உற்று கவனித்தபோது, உறுதியாக அவனேதான்…

    கால்கள் செயலிழந்ததைப் போல தடுமாறின.. நிற்க வலுவின்றி சுவற்றோடு சாய்ந்து கீழே அமர்ந்தாள்.. மனம் நிதானிக்க மறுத்தது.. உடல் முழுக்க ஊசியால் குத்தும் உணர்வு, வியர்வை சுரப்பிகள் வெடித்து உமிழ்ந்ததில் வியர்வை அரும்பி வழிகிறது… வகிட்டுக்குங்குமம் வியர்வையோடு கரைந்து, மூக்கிற்கு நேராக சிவப்புக்கோடு வரைந்தது.. எச்சில் தொண்டையை தாண்டி உள்ளே செல்ல மறுத்தது.. ஓவென அழவேண்டும் போல தோன்றினாலும், அதற்கான திராணி அற்று பிண்டம் போல அமர்ந்திருந்தாள்.. கண்களின் ஓரத்தில் கண்ணீர் ஊற்றுநீராய் பொங்கி வழிந்துகொண்டிருக்கிறது…

    சீதையை தொடமறுத்த இவள் ஏகபத்தினி விரதன், கட்டிலில் யாரோ ஆடவனுடன்!.. இவ்வளவு காலமும் என் மீது தவறென நினைத்து, இத்தனை வேடங்கள் தரித்தபோதும் ஏமாளியாய் நிற்பதென்னவோ நான்தான்.. முகத்தின் செயற்கை பூச்சுகள் கம்பளிப்பூச்சியின் வருடலைப்போல அரிக்கத்தொடங்கியது.. மல்லிகையின் மணம் நெடியேற்றும் துர்நாற்றமாய் உருமாறியது…

    வேகமாய் எழுந்து, சூடியிருந்த பூவை பிய்த்து வீசியெறிந்தாள்… தண்ணீர் குழாயைத் திறந்து, கொட்டிய நீரை முகத்தின்மீது ஓங்கி இறைத்தாள்.. கண்ணின் கருப்பு மையும், முகத்தின் வண்ண பூச்சுகளும் நீரோடு கலந்து சாயமாய் தரையில் பாய்ந்தது.. வேஷம் கலைந்தது!..

    (முற்றும்)

    Share
  • அமுதா . . . (சமூகத்தால் ஒடுக்கப்பட்ட திருநங்கையின் கதை…)

    விஜய் விக்கி…

    சமூகத்தால் இன்றளவும் ஒடுக்கப்பட்டுள்ள திருநங்கை சமூகத்தின் உண்மை நிலையை எடுத்துச்சொல்லவே இந்த படைப்பு… இது உண்மை சம்பவத்தை தழுவிய சிறுகதை…

    ஐந்து மணிக்கெல்லாம் எழுந்துவிட்டாள் அமுதா… பால் வாங்கி காய்ச்சி டீ போட்டு பிளாஸ்க்கில் ஊற்றிவைத்துவிட்டு, சமையல் வேலைகளையும் முடித்தாகிவிட்டது… ஏழு மணிக்கெல்லாம் குளித்து முடித்து கிளம்புவதற்கும் ஆயத்தமாகிவிட்டபோதும், செல்வியும் ரோஸியும் இன்னும் எழுந்திருக்கவே இல்லை, எப்படியும் பத்து மணி ஆகலாம்.. இருவருக்குமே காலை சாப்பாடு சாப்பிடும் பழக்கமில்லை என்பதால், தேநீர் மட்டும் குடித்துவிட்டு மதிய சாப்பாட்டிற்கு பைபாஸில் பயணித்துவிடுவார்கள்…

    “ரோஸி, டீ போட்டு வச்சிருக்கேன்… கத்தரிக்காய் குழம்பும் வச்சிட்டேன், சோறு மட்டும் வடிச்சுக்கோங்க.. நான் கிளம்பட்டுமா?” கடிகாரத்தை பார்த்துக்கொண்டே கேட்டாள் அமுதா…

    சோம்பல் முறித்து, கண்களை கசக்கி எழுந்து படுக்கையில் அமர்ந்தாள் ரோஸி.. கடிகாரத்தை பார்த்தாள், இன்னும் மூன்று மணி நேரத்தூக்கம் மிச்சம் இருக்கிறது… ஆழமாக ஒரு கொட்டாவி விட்டபடி, “இன்னிக்கு ஞாயித்துக் கிழமையாச்சே, லீவு இல்லையா??” என்றாள்…

    “டீச்சரக்கா இருக்காகள்ல, அவங்க பக்கத்து வீட்டுக்கு யாரோ புதுசா குடி வந்திருக்காங்க.. வேலைக்கு பார்த்த ஆள் நாளக்கிதான் வருதாம், அதான் இன்னிக்கு மட்டும் வந்துட்டுப்போகச் சொன்னாங்க..”

    “ஒருநாள் கூட ஓய்வில்லாம ஒழைக்கனுமா?.. டீச்சரக்கா சொன்னா, முடியாதுன்னு சொல்லவேண்டியதுதான?.. ஏண்டி இவ்ளோ கஷ்டப்படுற?.. பேசாம எங்ககூட தொழிலுக்கு வந்திடு, உன் அழகுக்கு விட்டில் பூச்சிங்க மாதிரி பார்ட்டிங்க
    விழுவானுங்க…” அமுதாவின் கன்னத்தை உருவி முத்தம் கொடுத்தாள்…

    நமட்டுச்சிரிப்பு சிரித்துக்கொண்டாள் அமுதா.. “நீதான் ராத்திரி பார்ட்டிய கூட்டிட்டு வந்தியா?.. பக்கத்து வீட்டு பொம்பள காலங்காத்தாலயே சண்டைக்கு வருது…”

    “ஏன், அவ புருஷனையா கூப்ட்டேன்?… நல்ல கிராக்கி, ஐந்நூறு ரூபாய்க்கு மடிஞ்சான்.. இடமில்லைன்னு சொன்னதால கூட்டிட்டு வந்தேன், குந்தாணி பன்னண்டு மணிக்கு நான் வர்றத பார்த்திருக்கு பாரேன்” பொங்கினாள் ரோஸி..

    “வீட்டுக்கு ஆள கூட்டிட்டு வராதன்னு எத்தன தடவ சொல்றது உனக்கு?.. ஓனரண்ணே பாவம்டி, அவருக்கு நம்ம சங்கடத்த குடுக்கணுமா?” தூக்கம் களைந்து எழுந்த செல்வியும் கோபித்துக்கொண்டாள்…

    “காலைலேயே சண்டை வேணாம்டி, இனி அப்டி எதுவும் நடக்காம பார்த்துக்கறேன்..
    ஆமா, உனக்கு நேத்து செம்ம கலெக்சன் போல, ரெண்டு மணிக்குத்தான் வீட்டுக்கு வந்த?” செல்வியை கேள்வியின் மூலம் திசைதிருப்ப முயன்றாள் ரோஸி….

    ஆனாலும், அடுத்த வீடு தேடவேண்டி வருமோ? என்கிற பயம் அவளுக்குள் உண்டாகியிருந்தது..

    “அடப்போப்பா.. இருநூறு ரூபாய்க்கு ஒரு மணி நேரமா பேரம் பேசி, பொழப்ப கெடுத்துட்டான் ஒரு சாவுகிராக்கி… ஆயிரம் ரூபாய்க்கு பெங்களூர் பொண்ணுகளே கெடைக்குது, உனக்கு முன்னூறு குடுக்கமுடியாதுன்னு சாதிக்கிறான்… அப்புறம் என்ன மயித்துக்குடா அரவாணிகிட்ட வந்தன்னு செவுல்லையே விட்டு பத்திவிட்டேன்…” காலை நேரத்து சூழலை கொஞ்சம் இறுக்கமாக்கியது செல்வியின் பேச்சு… ஒவ்வொரு நாளிலும் இப்படி எதிர்கொள்ளும் ஏளனப்பேச்சுகளை அவர்களுக்குள் பகிர்ந்துகொள்ளும்போது, வீடும் நிசப்தமாகிவிடுவது வழக்கம்…

    “ஐயோ நேரமாச்சு.. சாயந்திரம் வந்து பேசுவோம்!” சேலையை சரிசெய்துகொண்டு, அவசரமாக கிளம்பினாள் அமுதா..

    வீட்டை விட்டு கிளம்பியது முதலாகவே, அமுதாவை வட்டமடிக்கும் கண்கள் கணக்கில் அடங்காதவை.. பெரும்பாலும் அந்த பார்வைகள், அவளின் அங்கங்களை துழைத்து எடுப்பதிலேயே குறியாக இருப்பதுண்டு… அதனாலேயே தன்
    தோழிகளைப்போல உதட்டுச்சாயம், கிரீம்கள் என அரிதாரம் பூசிக்கொள்ள விரும்பமாட்டாள்… கழுத்தில் மாட்டியிருக்கும் பாசியும், முகத்தில் பூசிய பவுடருமேகூட பலநேரங்களில் தனக்கு விருப்பமில்லாமல் செய்துகொள்ளும்
    ஒப்பனைதான்…

    “வா அமுதா… போகலாமா?” வாசலிலேயே டீச்சர் அமுதாவிற்காக காத்திருந்தாள்…
    “சரிக்கா…”
    “ஒன்னும் பெரிய வேலை இல்ல… குழந்தைய வச்சுகிட்டு அந்த வீட்டுக்குவந்திருக்கிற பொண்ணு ரொம்ப கஷ்டப்படுது… சாமான்களை பிரிச்சு அடுக்கி வச்சு கொஞ்சம் ஒத்தாசை பண்ணனும், மதியம் போய்டலாம்..”
    “சரிக்கா.. செஞ்சிடுறேன்…”

    “உன்னப்பத்தி சொல்லிருக்கேன்… ஒன்னும் அத பெருசா எடுத்துக்கல.. திருநங்கைனு எதாச்சும் கேலி பேசக் கூடாதுன்னும் தெளிவா சொல்லிட்டேன்” அமுதாவின் முதுகை தட்டியபடி சொன்னாள் டீச்சர்… பலநேரங்களில் அமுதா எதிர்கொள்ளும் பாலின மாற்றம் தொடர்பான அவச்சொற்களை டீச்சரிடம் நிறையவே பகிர்ந்துகொன்டதன் விளைவுதான், இப்படியோர் கண்டிஷனுக்கும் காரணம்..

    “சரிக்கா…” கண்களால் நன்றி சொன்னாள்…
    பேசிக்கொண்டே இருவரும் அந்த வீட்டினை அடைந்துவிட்டனர்… அழைப்புமணியை அடித்துவிட்டு அமுதாவை பார்த்த டீச்சர், “சம்பளத்த நீயே பேசிக்கோ…”

    கிசுகிசுப்பாக சொன்னாள்…
    தலையை மட்டும் அசைத்துக்கொண்டாள் அமுதா…
    மூன்றாம் அழைப்பு மணியின் சத்தத்திற்கு பிறகுதான் கதவை திறந்தார் ஒரு முப்பதுவயது மதிக்கத்தக்க இளைஞர்..

    டீச்சரை பார்த்ததும் முன்முறுவல் செய்துவிட்டு, “வாங்க டீச்சர்… உள்ள வாங்க” என்று கதவை முழுமையாக திறந்துவிட்டு, உள்ளே சென்று அவசரக்கோலத்தில் ஒரு சட்டையை மாட்டிக்கொண்டு ஹாலுக்கு வந்தார் அவர்… அறைக்குள் குழந்தை அழும் சத்தம் கேட்டது… சுவரில் அரைகுறையாக மாட்டப்பட்டிருந்த சில புகைப்படங்களும், மின் இணைப்பு கொடுக்கப்படாத தொலைக்காட்சிப் பெட்டியும் தூசி துடைக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்தது.. ஹாலின் பெரும்பகுதியை பிரிக்கப்படாத அட்டைப்பெட்டிகள் நிரப்பியிருந்தன, அநேகமாக அவற்றுள் புத்தகங்களோ, அலங்காரப் பொருட்களோ இருக்கலாம்… இவற்றை பிரித்துவைக்கவே ஒருநாள் ஆகலாம், அமுதா கண்களால் பெருமூச்சு விட்டுக்கொண்டாள்…

    “ஒன்னும் பயப்படவேணாம்மா… இதை எதையும் நீங்க பிரிக்கவேணாம், இதல்லாம் நான் பார்த்துக்கறேன்… அடுப்படி ஐட்டங்களை மட்டும் நீங்க பிரிச்சு வையுங்க, போதும்” அமுதாவின் யூகத்தை அடையாளம் கண்டதுபோல அப்பட்டமாகச் சொன்னார்…

    “ஐயோ… அப்டி இல்லைங்க சார்..” சிரித்துக்கொண்டாள்…

    “அமுதா ரொம்ப நல்ல பொண்ணு… நம்ம விஜயா ஹாஸ்பிட்டல்லதான் வர்க் பண்றா, இன்னிக்கு சண்டே லீவுங்கறதால கூப்ட்டதும் வந்துட்டா… என்ன பண்ணனும்னு சொல்லுங்க, பர்பெக்டா செஞ்சிடுவா… நான் கிளம்புறேன் ரகு சார்…”
    டீச்சர் கிளம்ப ஆயத்தமாகிவிட்டாள்…

    “ஐயோ இருங்க… காபி குடிச்சிட்டு போகலாம்… மாலு இப்போ வந்திடுவா..”

    “இல்ல பரவால்ல சார்., அவங்க குழந்தை வேலையா இருக்காங்க போல.. அப்புறம் வந்து பார்த்துக்கறேன்.. நீங்க வேலைய பாருங்க…” பிடிவாதமாக கிளம்பிவிட்டார் டீச்சர்…

    ஹாலில் இருந்த அட்டைப்பெட்டிகளை ஓரமாக நகர்த்திவைத்துவிட்டு, குப்பைகளை கூட்டத்தொடங்கினாள் அமுதா… குளித்துமுடித்து அறைக்குள் சென்ற ரகு, அமுதாவைப்பற்றி மனைவியிடம் சிலாகித்து பேசிக்கொண்டிருந்தான்..

    “திருநங்கைனு சொன்னா நம்பவேமாட்ட மாலு, அப்டியே பொண்ணு மாதிரி இருக்கா..”

    “அவகிட்டபோய் இத சொல்லிக்கிட்டு இருக்காதிங்க… நமக்கு வேலைதான் முக்கியம்.. குழந்தைய பிடிங்க, நான் போய் வேலைய சொல்லிட்டு வரேன்”

    இன்னும் சிணுங்கிக்கொண்டிருந்த குழந்தையை ரகுவிடம் கொடுத்துவிட்டு, தலைமுடியை வாரிச்சுருட்டி முடிந்துகொண்டே ஹாலை நோக்கி நடந்தாள் மாலினி…

    “அந்த பெட்டிகளை நகர்த்தி வச்சிட்டு ஹாலை கூட்டனும், போட்டோ பிரேம்களை துணியால தொடச்சு ஆணில மாட்டணும், ஜன்னல் கம்பிகள்ல படிஞ்சிருக்குற தூசிய தொடைக்கணும்..” தான் எதையல்லாம் சொல்லவேண்டும் என்று மாலினி நினைத்துக்கொண்டு வந்தாளோ, அவை அத்தனையும் ஏற்கனவே செய்துமுடித்திருப்பதைக்கண்டு ஆச்சர்யமடைந்தாள்.. நல்ல பொறுப்பான பொண்ணுதான் போல, தினமும் வரமுடியுமான்னு கேட்கணும்.. மனதிற்குள்
    யோசித்தபடியே சமையலறைக்குள் சுத்தம் செய்துகொண்டிருந்த அமுதாவின் அருகில் சென்றுவிட்டாள்… சாக்கு மூட்டைக்குள் இருந்த பாத்திரங்களை அடுக்கி வைப்பதில் முனைப்பாக இருந்த அமுதா, மாலினியை கவனிக்கவில்லை… அமுதாவை பார்த்ததும் மாலினிக்கு எப்போதோ பரிச்சயமான முகம் போல தெரிந்தது, பலநாட்கள் பழகிய சாயல் தொனித்தது…

    ஆழ்மனதை கசக்கி, அவள் சாயலைக்கொண்டு அடையாளம் காண முயற்சித்தாள்.. பயனில்லை, நினைவிற்கே வரவில்லை.. இப்படியாக இரண்டொரு நிமிடங்கள் தனது அருகாமையில் நின்று யோசித்துக் கொண்டிருந்த மாலினியை அப்போதுதான் கவனித்தாள் அமுதா… சட்டென எழுந்து சிரித்துக்கொண்டே வணக்கம் சொன்னபிறகுதான், அமுதாவின் முகமும் மெள்ள இறுக்கமாக மாறியது…

    “அக்கா…” தழுதழுத்த குரலில் அழைத்தாள் அமுதா…

    ஒருவழியாக யோசிப்புகள் முற்றுப்பெற்று ஒரு தீர்மானத்திற்கு வந்ததைப்போல, “சுரேஷ்?” சத்தம் வராமல் மாலினியின் உதடுகள் மட்டும் அசைந்தது… அதனை ஆமோதிப்பதைப்போல கண்களில் சுரந்த கண்ணீர் மல்க, தலையை மேலும் கீழும் அசைத்தாள் அமுதா…

    மாலினி திகைத்துப்போனாள்… அடக்கடவுளே!.. இப்படியொரு தருணத்திலா சுரேஷை சந்திக்கணும்?… தான் அத்தனை செல்லம் கொடுத்து வளர்த்த தம்பியா இது?.. அவனை கட்டி அணைத்து, சோகம் தீர அழவேண்டும் போன்று மாலினிக்கு தோன்றியது.. நிறைய பேசணும், உடல்நலம் பற்றி விசாரிக்கணும், ஆசையாக தோசை வார்த்துக்கொடுக்கணும் என எல்லா ஆசைகளும் ஒன்றன் மேல் ஒன்றாக உயரப்பறந்தது… ஆனால், இப்படி பெண்ணாக மாறிய தம்பியிடம் அப்படியல்லாம் உறவு கொண்டாட அவள் மனம் ஒப்பவில்லை.. அதுமட்டுமல்லாமல் “இதுதான் ஆறு வருஷத்துக்கு முன்ன வீட்டை விட்டு ஓடிப்போன என் தம்பி!”ன்னு ரகுவிடம் எப்படி அறிமுகப்படுத்தமுடியும்?… அப்படிச்சொன்னால் நிச்சயம் அதன்மூலம் குடும்பத்தில் வெடிக்கும் சண்டைகளின் விளைவு கணிக்கமுடியாத அளவல்லவா இருக்கும்… கணவரை சமாளித்தாலும் கூட அவர் குடும்பத்தினர், அக்கம் பக்கம்னு ஒவ்வொருவரையும் சமாளிப்பது பச்சைத்தண்ணீரில் வெண்ணை எடுப்பது போன்றதுதான்..

    “எப்புடிக்கா இருக்க?” ஆசையாக மாலினியின் கைகளைப்பிடித்து கேட்டாள் அமுதா… சட்டென அவள் கைகளை விலக்கிக்கொண்டு, இரண்டடிகள் பின்னே நகர்ந்துகொண்டாள்…

    “இங்க எதுக்கு வந்த?” இத்தனை வருடங்கள் கழித்து பார்க்கும்போது, முகத்தைக்கூட நேருக்கு நேர் பார்த்திடாமல், முகச்சுளிப்போடு அக்கா இப்படி கேட்பாள் என்பதை அமுதா கனவிலும் நினைக்கவில்லை… ஒருவாறாக தன்னை நிதானித்துக்கொண்ட அமுதா, “இது உன் வீடுன்னு தெரியாதுக்கா.. டீச்சர்தான் வரச்சொன்னாக…” கண்களை
    துடைத்துக்கொண்டாள்…

    “இப்பதான் தெரிஞ்சிருச்சுல்ல, முதல்ல கெளம்பு… என் வீட்டுக்காரருக்கு இப்டி ஒன்னு என் கூட பொறந்ததுன்னு தெரியாம இருக்குறதுதான் நல்லது…”

    அமுதா திகைத்துப்போனாள்… சிறுவயது முதலாகவே அம்மாவின் அன்பிற்கு நிகராக பாசமூட்டி வளர்த்த அக்காவா இப்படி வெறுத்துப்பேசுகிறாள்?.. தனக்கு எது கிடைத்தாலும், “இது தம்பிக்கு!”ன்னு ஒரு பங்கு அக்காகிட்ட எப்பவும்
    இருக்கும்.. தோற்பதற்காகவே என்கூட விளையாடுவாள், சண்டைகளின் இறுதியில் முதலில் சமாதானம் செய்வாள், எந்த தருணத்திலும் விட்டுக்கொடுக்காதவள்.. ஆனால் இன்று?… அமுதாவால் தன்னை நிதானிக்க முடியவில்லை, கண்ணீர் அவளை மீறி வழிந்துகொண்டிருந்தது…

    “சும்மா ஒப்பாரி வைக்காம கிளம்பு, அவர்கிட்ட நான் எதாவது சொல்லி சமாளிச்சுக்கறேன்..” மாலினி இப்படி சொல்லிக்கொண்டிருக்கும்போது, ரகுவும் அவர்களை நோக்கி வந்துவிட்டான்…

    “வாவ்.. அமுதா… ரொம்ப நல்லா வீட்டை சுத்தம் பண்ணிருக்கிங்க… ஒரு காபி போட்டுத்தரமுடியுமா?” சூழல் புரியாமல் இடைபுகுந்தான் ரகு…

    “ஐயோ ரகு.. பேசாம இருங்க, நான் காபி போட்டுத்தரேன்..” பல்லை கடித்துக்கொண்டு உறுமினாள்…

    “நீ ரெஸ்ட் எடும்மா, இன்னிக்கு இவங்க பார்த்துப்பாங்க… மயக்கமா வருதுன்னு சொன்னில்ல, போய் படு…” தோளோடு தோளாக மாலினியை அணைத்து படுக்கையறைக்குள் அழைத்துச்சென்றான்..

    “அவ வேணாம்ங்க… நானே பார்த்துக்கறேன்…” எப்படிச்சொல்லி புரியவைப்பதென்று தடுமாறினாள்..

    “இங்கபாரு மாலு, இது 2015… நம்ம கவர்மென்ட்டே அவங்கள அங்கீகரிச்சுடுச்சு, இன்னுமென்ன தயக்கம்?.. இன்னிக்கு ஒருநாள்தான அட்ஜஸ்ட் பண்ணிக்கோம்மா, நமக்கு வேலை நடக்குதுல்ல..” மாலினியின் மனதைப்புரியாமல் விளக்கிக் கொண்டிருந்தான் ரகு… நிஜமாகவே மாலினிக்கு கண்கள் இருளத்தொடங்கியது, ரகுவிடம் வாதம் புரிந்தும் பயனில்லை…
    மனதிற்குள் எழுந்த பலநூறு குழப்பங்களோடு மெள்ள படுக்கையில் சாய்ந்தாள்.. சுரேஷ் வீட்டின் செல்லப்பிள்ளையாக வளர்ந்தவன்… அப்பாவிற்கும் கூட ஆசைக்கு ஒரு பெண்ணும், ஆஸ்திக்கு ஒரு பையனுமாக பிறந்ததில் எல்லையில்லா
    மகிழ்ச்சிதான்.. ஆனால் ஒருகட்டத்தில் வீட்டைவிட்டு அவன் ஓடிப்போகையில், வீடே மயான பூமியாக காட்சியளித்தது… நிறைய தேடினோம்.. காவல்துறையில் புகார், நீதிமன்றத்தில் ஹேபியஸ் கார்பஸ் மனு… எல்லாமும் வீணாகத்தான்
    போனது… எப்போது மீண்டும் தம்பியை பார்ப்பேன்? என்றிருந்த அதே மனதுதான், இப்போது ஏன்தான் பார்த்தோம்? என்று அரிக்கத்தொடங்கியுள்ளது.. குழந்தையை தோளில் போட்டபடியே சமயலறைக்கு வெளியே நின்று அமுதாவை அழைத்தான் ரகு… முகத்தை சேலையின் முனையில் துடைத்தபடி, வெளியே வந்தாள் அமுதா..

    “என்னம்மா காபி போடலையா?.. மாலு ஏதும் பேசிட்டாளோ?.. சாரிம்மா, அவளுக்கு இன்னும் விவரம் பத்தாது.. நீங்க வேலைய பாருங்க..” கனிவாக பேசினான்..

    முன்பு ரகுவை அமுதா எதிர்கொண்ட பார்வைக்கும், இப்போது பார்ப்பதற்கும் நிறைய மாற்றங்கள் தென்பட்டன… அக்காவின் கணவனல்லவா, ஒளிக்கீற்று கண்களில் ஒளிக்கத்தான் செய்யும்… இரண்டு நிமிடத்தில் கோப்பையில் காபியை ஆற்றியபடி ஹாலுக்கு எடுத்துவந்து ரகுவிடம் நீட்டினாள்..

    “குழந்தைய கொஞ்சநேரம் பிடிங்கம்மா.. காபி குடிச்சிட்டு வாங்கிக்கறேன்..” கைகள் நடுங்க வாங்கி கன்னத்தில் ஒற்றிக்கொண்டாள் அமுதா… குழந்தை அழகாக சிரித்தது, அக்காவை அப்படியே உரித்துவைத்திருந்தது… ரகு பார்க்காதபோது கன்னத்தில் முத்தம் கொடுத்தாள்.. காலம் முழுக்க இங்கேயே இருக்கும் வாய்ப்பு கிடைத்திடாதா? என்று மனம் ஏங்கத்தொடங்கியது.. குழந்தையின் சிரிப்பு அவளை அழவைத்துவிடுவது போல இருந்தது..

    “குடுங்கம்மா…” காபியை குடித்துவிட்டு குழந்தையை வாங்கிக்கொண்டான் ரகு.. இப்படி வாங்கிக்கொள்வான் என்று தெரிந்திருந்தால், இன்னும் சூடாக பெரிய குவளையில் கொண்டுவந்து கொடுத்திருப்பாள்.. அரைமனதோடு குழந்தையை கொடுத்தாள்…

    “நீங்க எந்த ஊரும்மா?”

    “திரு….. திருப்போரூர் சார்…” திருச்சி தொண்டைக்குழியோடு திரும்பிவிட்டது… அக்காவை மேலும் சங்கடப்படுத்த விரும்பவில்லை.. அதற்கு மேலும் அங்கிருந்தால், மேற்கொண்டு பொய்களை சொல்லவேண்டிவரலாம்..

    சமையலறைக்குள் சென்றுவிட்டு அடுத்தடுத்த வேலைகளை செய்யத்தொடங்கினாள்…

    சமையலறையின் வாயிலில் அமர்ந்தபடியே மற்றப்பொருட்களை பிரிக்கத் தொடங்கினான் ரகு… புத்தகங்களை அதிலிருந்து எடுக்கும்போது தூசி தட்டுவதைப்போல முகத்தை மறைத்துக்கொண்டு, கண்களை மட்டும் லேசாக உயர்த்தி அமுதாவை நோட்டமிட்டான்.. பாதி நேரம் வேலையும், மீதி நேரம் அமுதாவின் அங்கங்களின் மீதான பார்வையுமாக நேரத்தை கழித்துக்கொண்டிருந்தான்… வேலைகளை முடித்துவிட்டு சமையலறைக்குள் நுழைந்தான் ரகு..

    “என்ன சார் வேணும்?” இயல்பாக கேட்டாள் அமுதா…

    “தண்ணி வேணும்…” குவளையில் எடுத்துக்கொடுத்தாள்…

    “நீங்க யார்கூட தங்கிருக்கிங்க அமுதா?”

    “என்கூட ரெண்டு பேர் இருக்காங்க சார்..”

    “அவங்களும் ஹாஸ்பிட்டல்லதான் வேலை பார்க்குறாங்களா?”

    “இல்ல… அவங்க…” தயங்கினாள் அமுதா…

    “ஓ சரி… புரியுது… அப்போ உங்களைவிட அவங்க அதிகமா சம்பாதிப்பாங்கன்னு நினைக்குறேன்..”

    “….” பதில் சொல்லவில்லை..

    “போலிஸ் பிரச்சினயல்லாம் எப்டி சமாளிப்பாங்க?”

    “தண்ணி குடிச்சிட்டிங்களா சார்?” இன்னும் கிளம்பலையா? என்பதின் நாகரிக வடிவம்தான் இந்த கேள்வி…
    “ஓ.. சாரி, தப்பா நினைச்சுக்காதிங்க… நான் சாதாரணமாதான் கேட்டேன்”

    அவசரமாக சொல்லிவிட்டு, அங்கிருந்து வெளியேறிவிட்டான் ரகு.. நல்லவேளையாக பூசிமொழுகிய கேள்விகளோடு மாமா நிறுத்திவிட்டார்… மேற்கொண்டு பேசி சிக்கல்களுக்கு வழிவகுத்திருந்தால், அறைக்குள் உறங்கிக் கொண்டிருக்கும் அக்காவிற்கு தேவையில்லா தர்மசங்கடம்… வேலைகளை முடித்துவிட்டு ஹாலுக்கு வந்தாள் அமுதா… மாலினியும் குழந்தையும் படுக்கையறையில் உறங்கிக்கொண்டிருந்தார்கள்.. ரகுவை காணவில்லை, எங்காவது கடைக்கு போயிருக்கலாம்… கண்ணாடி திரைக்கு பின்னிருந்த அக்காவின் திருமண புகைப்படத்தை ஆசையாக
    பார்த்துக்கொண்டிருந்தாள்… இரண்டு வருடங்களுக்கு முன்புதான் திருமணம் ஆகியிருக்கும் போல.. அப்பா, அம்மா, அக்கா என ஒவ்வொருவராக அவள் கடக்கும்போதும் அமுதாவின் மனம் விசும்பிக்கொண்டிருந்தது.. வெகுநேரமாக
    நின்றபடி வெறித்துக்கொண்டிருந்தாள், நினைவுகள் காலச்சக்கரத்தின் ஊடே பின்னோக்கி பயணித்துக் கொண்டிருந்தன…

    “அமுதா…” ரகுதான் அழைத்தான்…திடுக்கிட்டு திரும்பிப்பார்த்தாள்..

    “என்ன இங்க நிக்குறீங்க?”

    “இல்ல சும்மாதான்… வேலை முடிஞ்சிடுச்சு, அதான் சார்…” பதறினாள்…

    அவள் உடம்பெல்லாம் வியர்த்துக்கொட்டியது…

    “ஏன் டென்ஷனா இருக்குறீங்க?… கூல்…” அமுதாவின் வெகு அருகில் வந்துநின்று தோளை தட்டி ஆசுவாசப்படுத்தினான்…

    “உன் கஷ்டங்கள் எனக்கு புரியுது.. எதுக்காக ஹாஸ்பிட்டலுக்கு வேலைக்கு போய் கஷ்டப்படனும், இங்கயே ரெகுலரா வந்திடுவே?” தோளின் மீதிருந்த கை, ஊர்ந்து முதுகை தழுவியிருந்தது.. மனம் முழுவதும் மரத்துப்போயிருந்ததால்,
    உடலின் உணர்ச்சிகள் அப்போது அமுதாவிற்கு புரிபடவில்லை…

    “ஒன்னும் பெரிய வேலை இல்ல, சம்பளம் நீ எதிர்பாக்குறதை கொடுக்குறேன்!”

    இப்போது இரண்டு கைகளும் அவளை வட்டமிட்டு சுற்றியிருந்தன.. சூழல் அப்போதுதான் அமுதாவிற்கு புரிந்தது.. தன் முழு பலத்தையும் செலுத்தி, ரகுவின் பிடியிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டு இரண்டடிகள் பின்னே நகர்ந்து நின்றாள்… அவள் முகம் வெளிறிப்போயிருந்தது, அதிர்ச்சியின் உச்சத்தில் இருந்தாள்…

    “ஏய் என்ன பிரச்சின உனக்கு?… உனக்கு கல்யாணம் காட்சியா ஆகப்போகுது?…

    இப்டி கிடைக்கிற சந்தோஷங்கள ஏன் மறுக்குற?.. இதல்லாம் ஒன்னும் தப்பில்ல..” சொல்லிக்கொண்டே மீண்டும் அமுதாவின் அருகில் நெருங்கத்தொடங்கினான் ரகு.. ஐயோ கடவுளே.! என்ன இது கொடுமை?… அக்காவின் வீட்டில் இப்படியொரு சோதனையா காத்திருக்கணும்?… இதுவே வேறு ஆண் செய்திருந்தால் இந்நேரம் முகத்தில் காரி உமிழ்ந்து, சட்டையை கிழித்து சண்டை போட்டிருப்பாள்… ஆனால், அக்காவின் கணவனிடத்தில் என்ன செய்வது?… தலையில் அடித்துக்கொண்டு அழுதாள், அழுகை சத்தம் கூட அறைக்குள் இருக்கும் அக்காவிற்கு கேட்டுவிடக்கூடாது என்கிற பதற்றத்தோடு அழுதாள்… அதற்குமேல் அங்கிருந்து சிக்கலை அதிகமாக்கிட விரும்பவில்லை.. விறுவிறுவென
    எழுந்து வீட்டை விட்டு வெளியேறினாள்… கண்ணீரை துடைக்கத்துடைக்க மறுபுறம் கசிந்துகொண்டே இருந்தது.. இவள் மீதான பார்வைகள் அருவருப்பாய் தோன்றியது… யாரிடமாவது சொல்லி அழவேண்டும் போல இருந்தாலும், அதற்குரிய
    வாய்ப்பும் இல்லை.. இன்னும் அவள் கண்கள் சுரப்பதை நிறுத்தவில்லை… வீட்டை அடைந்தபோதுதான் வாசலில் எழுந்த சத்தத்தை கவனித்தாள், பக்கத்து வீட்டுப்பெண்மணி, ரோசியிடம் சண்டை போட்டுக்கொண்டிருந்தாள்… வழக்கமான
    சண்டைதான், ஆனால் அமுதாவின் வழக்கமான மனநிலை இல்லையே இன்று… போன வேகத்தில் அந்த பெண்ணின் நேருக்கு நேர் நின்று, “இப்ப என்னதான் உனக்கு வேணும்?” என்றாள் அமுதா…

    “நீங்க பண்றதை கேக்க ஆள் இல்லைன்னு நெனச்சியா?… அதுக ராத்திரி படுக்க போற மாதிரி, நீ பகல்ல போயிட்டு வார… இதல்லாம் நாலு குடும்பம் குடித்தனம் இருக்குற ஏரியா, ஏன் இப்புடி அசிங்கம் பண்றீங்க?” மொத்தத்தையும் கொட்டினாள் அந்தப்பெண்…

    “ஆமா.. எல்லாரும் பிராத்தலுக்குதான் போறோம்… உன் மவனுக்குதான் இன்னும் கல்யாணம் ஆகலையே, எங்க மூணு பேர்ல ஒருத்தருக்கு கல்யாணம் பண்ணிவச்சு எங்கள மாத்தப்பாரேன்… இல்லைன்னா நல்ல பையனா பார்த்து நீயே கட்டிக்கொடு, நாங்கல்லாம் நல்ல வழிக்கு மாரிடுறோம்…” அமுதாவும் விடுவதாக இல்லை…

    “என்ன பேசுற நீ?.. அந்தம்மா பேசுறதுல என்ன தப்பு, நீ ஒழுக்கமில்லாம இருந்துட்டு இப்ப உனக்கு கல்யாணம் பண்ணிவைக்கனுமாக்கும்?” கூட்டத்திலிருந்த ஒரு நாற்பது வயது நபர் குரல் கொடுத்தார்…

    “ஒழுக்கத்தப்பத்தி நீ பேசுறியா?.. எப்படா சேலை வெலகும், ஜாக்கெட்டை பாக்கலாம்னு நீ அலைஞ்ச அலைச்சல்லதான் உன் ஒழுக்கம் நல்லா தெரிஞ்சுதே…”

    அமுதா ஒருவரையும் விடுவதாக இல்லை.. அதற்கு மேல் இவர்களின் ஒழுக்கத்தைப்பற்றி குறைகூற எத்தனித்த ஒழுக்க சீலர்கள் யாரும் இல்லை என்பதால், மெள்ள கூட்டம் கலைந்தது… ரோஸி இன்னும் அதிசயமாகவே பார்த்தாள்
    அமுதாவை. ஆனாலும் எதுவும் கேட்டுக்கொள்ளவில்லை.. வீட்டிற்குள் நுழைந்த வேகத்தில் படுக்கையில் போய் விழுந்தாள் அமுதா… தலையணையில் முகத்தை புதைத்து விம்மி அழுதாள்.. அப்படியே தூங்கியும் போனாள்.. கனவு முழுக்க அக்காவும் குழந்தையுமாக நிறைந்திருந்தார்கள்…

    “அமுதா… அமுதா…” ரோஸி எழுப்பினாள்… தூங்கி வெகுநேரம் ஆகிவிட்டது போலும், அந்தி நேரம் ஆகிவிட்டதை போல தெரிகிறது… அமுதாவின் தலை கனத்திருந்தது, தலையை பிடித்தபடியே எழுந்து அமர்ந்தாள்…

    “டீச்சர் உன்னபாக்க வந்திருக்காக?”

    முகத்தை துடைத்துக்கொண்டு வாசலை நோக்கி நடந்தாள்.. நடந்த எதையும் சொல்லக்கூடாது, அக்காவிற்கு வீண் கஷ்டத்தை கொடுக்கக்கூடாது… மாலை இருள் வாசலை ஆட்கொள்ள தொடங்கியிருந்த நேரம்… டீச்சருடன் வேறொரு
    பெண்ணும் நின்றுகொண்டிருந்தாள்…

    “உள்ள வாங்க டீச்சர்” கையை பிடித்து உள்ளே அழைத்தாள்.. டீச்சரின் பின்னே அந்த பெண்ணும் உள்ளே வந்தாள்… வந்தவள் வேறு யாருமில்லை, அவள் அக்காவேதான்.. அமுதா அதிசயித்து நின்றாள், முகம் முழுவதும் பிரகாசமாக
    மாறியது… அவசரமாக இரண்டு இருக்கைகளை எடுத்துப்போட்டு அமரச்செய்தாள்..

    “என்ன சாப்பிடுறீங்க?.. காபி போடவா?” பூரிப்பாக கேட்டாள்…

    “அதல்லாம் ஒன்னும் வேணாம் அமுதா… நீ வர்றப்போ பணம் வாங்கலையாம், அதான் மாலினி கொடுக்கலாம்னு வந்துச்சு… உன்ன வீட்டுக்கு வரச்சொல்றேன்னு சொன்னேன், என்னமோ அது உங்க வீட்டை பாக்கனும்னு சொன்னுச்சு… அதான் கூட்டி வந்தேன்..”

    மாலினி ஒரு ஐந்நூறு ரூபாய் தாளை மடித்து அமுதாவின் கைகளில் கொடுத்தாள், அப்போது அவள் கைகளை அழுத்தி கண்களால் மன்னிப்பும் கேட்டாள்… அந்த பணத்தை பிரித்துப்பார்த்தபோது, அதனுள்ளே “அக்காவ மன்னிச்சிடும்மா..”
    என்று எழுதியிருந்தது..

    எதற்காக மன்னிப்பு?.. அவள் அப்படி பேசியதற்கா? அல்லது மாமா செய்த தவறுகள் தெரிந்தா?… புரியவில்லை… மேற்கொண்டு என்ன செய்வதென்று புரியாமல் தடுமாறி நின்றுகொண்டிருந்தாள்…

    “எனக்கு ஒரு காபி கிடைக்குமா அமுதா?” அக்காவேதான் கேட்டாள்…

    “இதோ ஒரு நிமிஷம்..” பறந்துபோய் சமையலறைக்குள் பாத்திரங்களை உருட்டத்தொடங்கினாள் அமுதா… ரோசியோடு மாலினி பேசிக்கொண்டிருந்தாள்.. மிகவும் கலகலப்பாக, உற்சாகமாக பேசினாள்…

    “உங்களுக்கு எத்தனை குழந்தைங்கக்கா?” ரோஸிதான் கேட்டாள்…

    “ஒண்ணுதான்… அதை சமாளிக்கவே நேரம் போதல..” மாலினி சிரித்தாள்…

    “பையனா? பொண்ணா?”

    “அதை பெருசானதும் அந்த குழந்தையே முடிவு பண்ணிக்கட்டும்!” அக்கா சொல்லும்போது, அடுப்பிலிருந்த பாலும் பொங்கியது…

    Share