ஆண்களே…! இதில் நீங்கள் எந்த வகை?

1

-விஜய் விக்கி

பாயும் ஆறு முதல் பதறவைக்கும் புயல் வரையிலும் எங்கும் எதிலும் பெண்களின் நாமம்தான்… அரசியல் முதல் அறிவியல்வரைக்கும் பெண்ணுரிமை பற்றிய பேச்சுகள்தான்… நிலவு, காற்று, வானம் என வர்ணிக்கும் அழகெல்லாம் பெண்களுக்கென்றே உரித்தாகிவிட்டது. பெண்களைச் சுற்றியே சுழல்கின்ற இந்த உலகத்தில், ஆண்களைப்பற்றி எண்ணிப்பார்ப்பதே அபூர்வமான சிந்தனையாகிவிட்டது. அந்த அபூர்வச் சிந்தனையின் ஒரு துளிதான் இந்தக் கட்டுரையும்!

ஓர் ஆணுக்கு எது அழகு? பெண்களைக் கவர்கின்ற ஆண்களின் ஆளுமைதான் அழகு! ஆறு அடிகள் உயரமும், ஆஜானுபாகுவான உடல்வாகும், ஆர்யாவின் கசின் போன்ற புறத்தோற்றமும் ஒரு பெண்ணிடம் ஆணின் மீதான ஈர்ப்பை உண்டாக்குவதைவிட, ஆண்மகனின் ஆளுமைதான் அதிகம் கவர்ச்சியை உண்டாக்குகிறது என்கிற அறிவியல் உண்மையைத்தான் இங்கே பார்க்கப்போகிறோம்.

அந்த ஆளுமையின் அடிப்படையில் ஆண்களை ஐந்து வகையாக பிரிக்கிறது உளவியல் உலகம்.

ஆல்பா (alpha), பீட்டா (beta), காம்மா (gamma), ஒமேகா (omega), சிக்மா (sigma) என்கிற ஐந்து பிரிவுகளுக்குள் உலகின் முன்னூறு கோடி ஆண்களையும் புகுத்திவிடமுடியும்.

ஒரு தமிழ்த் திரைப்படம் என்றால், அதன் முதல் காட்சியே ஹீரோ இன்ட்ரொடக்ஷன்தான்! அதன்படிப் பார்க்கையில், ஆல்பா ஆண்களைத்தான் இங்க முதலில் அறிமுகப்படுத்தணும். காரணம், இந்த உலகம் ஆல்பா ஆண்களைத்தான் நாயகர்களாக ஏற்றுக்கொள்கிறது. நாம் மட்டும் விதிவிலக்கா என்ன?

ஆல்பா ஆண்கள் யார்? அவர்களை எப்படி அடையாளம் கண்டுகொள்வது?

நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும்,
நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்,
திமிர்ந்த ஞானச் செருக்கும்

இந்த பாரதியின் வரிகளே ஒட்டுமொத்தமாக ஆல்பா ஆளுமையைக் குறிப்பாக உணர்த்திவிடுகிறது. சற்று விளக்கமாகக் கூறவேண்டுமானால், இவர்கள் வலிமையான மனவுறுதி பெற்றவர்கள். எப்போதும் தம்மை வெற்றியாளராகவே கருதுபவர்கள். அதற்காக எப்போதும் வெற்றிபெற்றுக்கொண்டே இருப்பார்களா? என ஆச்சர்யப்படவேண்டாம். ஆல்பா ஆண்களுக்கு அவ்வப்போது தோல்வியும் நேரிடலாம். ஆனால், அந்தத் தோல்விகளில் துவண்டு மேலே எழமுடியாமல் தடுமாறுபவர்கள் அல்லர். விழுந்த வேகத்திலேயே நம்பிக்கையோடு எழுந்து நிற்கும் குதிரை போன்றவர்கள். தன்னுடைய தோல்வியைக்கண்டு பிறர்
எள்ளி நகையாடக்கூடாது எனவும், தம் மீது பிறருக்குப் பரிதாபம் உண்டாகக்கூடாது எனவும் எண்ணுவதால் தமது தோல்வியின் தடம், சுவடே தெரியாமல் மறைந்துபோகும் அளவிற்கு அடுத்த இலக்கை நோக்கிப் பயணிப்பவர்கள்.

ஒருமுறை கிடைத்த தோல்வியின் மூலம் கிடைக்கும் கற்பினையால், அடுத்த இலக்கின் வெற்றி எதிரிக்கு சம்மட்டி அடியாய் அடிக்கவேண்டுமெனக் கடுமையாக உழைப்பவர்கள். அதேபோலத் தமது வெற்றியைப் பிறரிடம் சொல்லித் தம்பட்டம் அடித்துக்கொள்பவர்கள் இல்லை. வெற்றியைக்கூட அதிகம் வெளிப்படுத்திக்கொள்ள எத்தனிக்காமல், மேற்கொண்டு அதைத்தாண்டிய வரலாற்று வெற்றிக்காக உழைப்பவர்கள். வெளித்தோற்றம் ஆல்பா ஆண்களைத் தீர்மானிப்பதில்லை. ஆனால் ஒருமுறை பேசுவதிலேயே தனது ஆளுமையைப் பிறருக்கு பதியவைத்துவிடுவார்கள்.

எதிரே நிற்பவரின் கண்களை எதிர்கொண்டுதான் பேசுவார்கள். பேச்சில் தெள்ளிய நீரோடை போன்ற தெளிவு இருக்கும். அநாவசியப் பேச்சுகள் இருக்காது. பேசும் வார்த்தைகளில் கண்ணியம் தொனிக்கும். அவர்கள் நடையில் கூட ஒரு நிதானம் இருக்கும். எடுத்துவைக்கும் அடிகளில் ஓர் அழுத்தம் தென்படும். நான்கு நபர்களுக்கு மத்தியில் பேசிக்கொண்டிருக்கும்போது, தான் நிற்கவேண்டிய இடத்தைக்கூட யோசித்துதான் நிற்பார்கள். பேசும் சில மணித்துளிகளிலேயே அந்தக் குழுவைத் தன்வசப்படுத்திவிடுவார்கள்.

ஒரு குழுவாகச் செயலை செய்வதாக இருந்தால்கூட, ஆல்பா ஆண்களின் தலையீடுதான் அதில் பிரதானமாக இருக்கும். தாம் செய்யவேண்டிய விஷயங்கள் மட்டுமல்லாது, பிறர் செய்வதற்கான பணிகளைக்கூட இவர்கள்தான் தீர்மானிப்பார்கள். எதிர்கொள்ளும் இலக்கினில் ஏதேனும் பிரச்சனைகள் உண்டாகுமேயானால், அதனைத் துணிச்சலாக முன்னின்று எதிர்கொள்வர். ஒரு மன அழுத்தமான சூழலில் கூடத் தம் மனக்குமுறலை பிறரிடம் வெளிப்படுத்தமாட்டார்கள். எந்தத் தருணத்திலும் தம் பலவீனம் பிறருக்குத் தெரியக்கூடாது என்பதில் தெளிவாய் இருப்பார்கள். கடுமையான சூழலில் கூடப் பொறுமையாகவும், பிறருக்குப் பதற்றத்தை உண்டாக்காத அளவிலும் செயல்படுவார்கள்.

பிறர் தம்மை அங்கீகரிக்க வேண்டுமென எப்போதும் எதிர்பார்க்காதவர்கள். தமக்கான உலகத்தில், தமக்குப் பிடித்தவற்றைச் செய்தால் போதும். அதற்கு யாரோ ஒரு மூன்றாம் நபரின் பாராட்டுப்பத்திரம் பெரிய விஷயமில்லை என நினைப்பவர்கள். மகிழ்ச்சி என்பது தாம் செய்யும் செயல்மூலம் கிடைப்பது, அந்தச் செயலின்வழி கிடைக்கும் பாராட்டால் கிடைப்பது அன்று என உணர்ந்தவர்கள்.

உடை உடுத்துவது முதல் செயல்கள் செய்வதுவரை எது தமக்குப் பிடிக்கிறதோ அதைமட்டும்தான் செய்வார்கள். எல்லோருக்கும் நல்லவனாக, நண்பனாக இருக்கவேண்டுமென நினைப்பவன் ஆல்பா ஆணாக முடியாது. “எல்லோருக்கும் பிடித்தவனாக இருக்கணுமென்றால், நீ பிரியாணியாகத்தான் இருக்கணும்!” என்றொரு பழமொழி உண்டு. இவர்கள் பிரியாணி அல்ல….மொத்தத்தில் தன்னை நம்புபவன், தனக்காக வாழ்பவன், தன்னம்பிக்கை உடையவன் என்று மூன்றே வார்த்தைகளில் சொல்லிவிடலாம். இவ்வளவுதான் ஆல்பா ஆளுமை!

இதனை முன்வைத்தே நாம் பீட்டா ஆளுமையை எளிமையாகக் கணித்துவிடமுடியும்! எல்லா விஷயங்களிலும் நேரெதிர் ஆளுமைதான் பீட்டா.

பீட்டா ஆண்களைப் பொறுத்தவரை ஒரு குறிப்பிட்ட பாதுகாப்பு வளையத்தைத் தாண்ட விரும்பாதவர்கள். துணிச்சலாக ஒரு சவாலை ஏற்கத் தயங்கி, தன் வட்டத்தைத் தாண்ட தயங்குபவர்கள். ஒரு புதிய முயற்சியைக் கையிலெடுத்து, அதிலெதாவது தோல்வி உண்டாகுமானால், அதனைக் கிரகிக்கும் மனத்திடம் இல்லாதவர்கள். அந்தத் தோல்விக்கு பயந்தே, எல்லை தாண்டிப் பயணிக்க விரும்பாதவர்கள். தமது கூச்ச சுபாவத்தால், புதியவர்களிடம் பழகிடத் தடுமாறுபவர்கள். “நல்ல பையன்” பெயரைத் தக்கவைத்துக்கொள்ள விரும்புபவர்கள். எப்போதும் அவர்களுக்குப் பிறரின் அங்கீகாரம் தேவைப்பட்டுக்கொண்டே இருப்பதால், சற்றுக் கடுமையான விஷயமாகக் கருதப்படும் செயல்களில் ஈடுபட விரும்பாதவர்கள். பிறரைத் திருப்திப் படுத்துவதிலேயே தம் நேரத்தைச் செலவிடுவர். எல்லோருக்கும் தாம் பிடித்தவராக இருக்கவேண்டுமென நினைப்பவர்கள்.

எல்லா விஷயங்களிலும் நூல் பிடித்தபடி, கோடிட்டு வாழ நினைப்பவர்கள். அப்படி வாழ்வதன்மூலம் பிறர் தம்மை அதிகமாக மதிப்பார்கள் என்று நினைப்பார்கள். இவர்களின் எல்லாச் செயலுக்கும் அர்த்தமிருக்கும்; தம்மை அழகூட்டிக்கொள்ள அதிகம் மெனக்கெடுவார்கள், பிறருக்கு உதவுவார்கள். ஆனால் இவை எல்லாமுமே பிறரின் அங்கீகாரம் கருதியே செயல்பட்டிருக்கும். ஒரு விவாதம் எழுகிறதென்றால், அதில் தம் தரப்பில் வாதம் புரிய முறையான விஷயங்கள் இருந்தால் கூட, அதை வெளிப்படையாய்ப் பேசத் தயங்குவார்கள்.

மனத்திற்குள் எழும் ஆதங்கங்களை, எச்சிலைப்போல விழுங்கிக்கொள்வார்கள். தாம் தமது நியாயத்தை முன்வைத்தால், மற்றவரின் முகச்சுளிப்பை எதிர்நோக்க
வேண்டிவருமோ எனவும் மற்றவரின் பகையைச் சுமக்க நேரிடுமோ எனத் தயங்கியே மௌனித்து போவார்கள். ஓர் உதவியைப் பிறருக்குச் செய்யும்போது கூட, என்றைக்காவது ஒருநாள் அதற்கான பதிலுதவி கிடைக்குமென எதிர்பார்த்தே செய்வார்கள். ஏதாவது விதத்தில் ஆதாயம் கிடைக்குமெனில் தயங்காமல் உதவி செய்வார்கள்.

ஒரு குழுவாகச் செயல்படும்போது, பீட்டா ஆண், “நான் என்ன செய்யணும்னு சொல்லுங்க!” எனப் பிறரின் கட்டளைக்காகக் காத்திருப்பார்கள். தாமே முன்வந்து
எதையாவது செய்து, அது சொதப்பிவிடுமோ? எனத் தயங்குவார்கள். அதையும் மீறித் தவறு நிகழும் பட்சத்தில், “நீங்க சொன்னதுதானே செய்தேன்!” என்று
தப்பித்துக்கொள்ளும் முன்னெச்சரிக்கையோடு செயல்படுவார்கள். அதாவது ஒரு செயலைச் செய்வதற்கு முன்பே அதில் தோல்விதான் உண்டாகும் என்கிற எதிர்மறைச் சிந்தனை அவர்களுக்குள் பொதிந்திருக்கும். செயலைச் செய்துமுடிக்கும்வரை, “நான் செய்றது சரியா?.. இதைத்தானே நான் செய்யணும்னு சொன்னிங்க?” என்று ஒவ்வொரு நகர்வுக்கும் ஒப்புதல்பெற நினைப்பார்கள். என்றைக்குமே தம் விருப்பத்திற்காக ஒரு செயலைச் செய்யமாட்டார்கள். பிறர் விருப்பத்தை முன்னிறுத்தியே காரியத்தில் இறங்குவார்கள். அதனால், செய்யும் செயல்களில் முழு மனத்துடன் ஈடுபட முடியாமல் தவிப்பவர்கள். உலகமே தமக்கு எதிராய்ச் செயல்படுவதாய் நினைப்பார்கள். ஒரு தோல்வி ஏற்படும்போது, அதில் தம்மைத்தவிர தம்மைச் சூழ்ந்திருக்கும் அத்தனை பேரின் மீதும் பழியைப் போடுபவர்கள். விளையாட்டாய்த் தம்மைப் பகடி செய்யும்போதுகூட, அதில் ஆயிரம் கற்பிதங்கள் கற்பித்துத் தம்மை நொந்துகொள்வார்கள்.

எளிதில் உணர்ச்சியவயப்படுபவர்கள்; சோர்ந்து போகக்கூடியவர்கள். எல்லோரிடமும் நல்லவர்களாக இருக்க முற்பட்டு, ஒருகட்டத்தில் நடித்து வாழும் சூழலுக்குத் தள்ளப்படுவார்கள். தம் சுயத்தை இழந்து பிம்பமாக வாழ்பவர்கள். தம் இயல்பை மீறிய விஷயங்களுக்கும் ஒப்புதல் கொடுத்துவிட்டு, பின்பு வாக்கினைக் காப்பாற்ற முடியாது தவிப்பார்கள்.

பிறரின் பாராட்டு ஒன்றே அவர்களின் ஒரே குறிக்கோளாக இருக்கும். எந்த ஒரு கேள்விக்கும் அவர்களிடம் விடை இருக்கும். “எனக்குத் தெரியாது!”ன்னு ஒரு பதிலைச் சொல்லவே விரும்பமாட்டார்கள். தெரியாத விஷயங்களைக் கூடத் ‘தெரியும்!’ என்று சொல்லி, அதன்மூலம் சிக்கல்களை
உருவாக்கிக்கொள்வார்கள். இவைதான் பீட்டா ஆளுமை!

ஆல்பா ஆளுமையைப்பற்றி படித்தபோது, ஏதோ திரைப்படத்தின் கதாநாயகனைப்பற்றி விவரிப்பதைப் போலத் தோன்றியிருக்கலாம். ஆனால், உலகம் ஹீரோக்களால் சூழப்பட்டது இல்லை என்ற நிதர்சனம் அறியாதவர்கள் இல்லையே நாம்.

அந்தவகையில் நம்மில் பெரும்பாலானவர்கள் பீட்டா ஆண்களாகத்தான் இருக்கிறார்கள். ஆனால், பெரும்பாலும் அதனை ஏற்கத் தயங்குவார்கள்.
ஒருவன் தன்னை பீட்டா ஆணாக ஏற்றுக்கொள்வது மட்டுமே, ஆல்பா ஆணாகத் தம்மை மாற்றிக்கொள்வதற்கான முதல் படி” என்கிறார்கள் உளவியலாளர்கள்.

ஒரு குழந்தை பிறக்கும்போதே அதன் ஆளுமை தீர்மானிக்கப்படுவதில்லை.. பீட்டா ஆணாக ஒரு குழந்தை உருவாவதற்கு நிறைய காரணிகள் இருக்கின்றன. குழந்தை வளர்ந்த விதம், வாழும் சமூகச் சூழல், தந்தையின் ஆல்பா நிலையைப் பார்த்து வளரமுடியாத சூழல் எனப் பல்வேறு காரணிகள் உண்டு. தந்தை ஆல்பா நிலையில் இருந்து வழிநடத்திடாத காரணம் பிரதானமாகக் கருதப்படுகிறது.

ஆளுமை மிக்கத் தந்தையின் தடம் அவன் மனத்தில் பதியமறுத்து, பெண்மையின் தடம் பதிவேருகிறது. ஆய்வாளர்கள் சொல்வதென்னவென்றால், குகைகளில் வாழும்போதே நமது மூதாதையர் பீட்டா ஆளுமை பெற்றவர்களாகத்தான் வாழ்ந்தார்கள். காலப்போக்கில் தப்பித்தவறி உருவானதுதான் ஆல்பா கலாசாரம் என்கிறார்கள்.

காரணிகள் எதுவாக இருந்தாலும், எதிர்பாலினத்திடம் அதிக ஈர்ப்புக் கொண்டவர்கள் ஆல்பா ஆண்கள்தான் எனும்போது பரிணாம வளர்ச்சியைக் குற்றம் சொல்லுதல் முறையில்லை. ஆல்பா ஆண்களிடம் பெண்கள் பாதுகாப்பை உணர்வதாக ஆய்வுகள் தெரிவிக்கிறது. வாழ்க்கையின் கடைமட்டத்தில் இருந்தால்கூட, இவனால் உயர்நிலைக்கு வரமுடியும் என்று பெண்கள் நம்புகிறார்கள். ஆனாலும், நம் ஊர்களில் ‘பிழைக்கத் தெரிஞ்சவன்’ என்ற பாராட்டுக்கு உரியவர்கள் பீட்டா ஆண்கள்தான்.

இவர்களில் யார் சிறந்தவர்கள்? என்ற விவாதத்திற்குள் செல்லவிரும்பவில்லை. அவரவர் விருப்பம் அவரவருக்கு என்பதால் மற்ற மூன்று பிரிவுகளைப்பற்றிச் சுருக்கமாக பார்த்துவிடலாம்.

ஒமேகா – ஆல்பா ஆண்களைப் போலவே நம்பிக்கை உடையவர்கள், புத்திசாலிகள், செய்யும் செயல்களின் தெளிவு உடையவர்கள். ஆனால், ஆல்பா ஆண்களைப் போல அல்லாமல், தமக்காகவே வாழ்பவர்கள். எவருடனும் உணர்வுப்பூர்வ ஒட்டுதல் இல்லாதவர்கள். வெகு சிலரை மட்டுமே நம்புவார்கள், அதனினும் வெகு சிலரைத்தான் நெருங்கிய வட்டத்துக்குள் சேர்த்துகொள்வார்கள். தலைமையைப் பற்றி கவலைப்படாதவர்கள். ‘எனக்கு நானே தலைவன்!’ என்று வாழ்பவர்கள்.

காம்மா – ஒருவகையான தலைமறைவு நபர்கள். ஆல்பாவைப் போல, தாங்கள் இருக்கும் இடத்தைத் தம் வசப்படுத்துபவர்களும் அல்லர்; அருகில் நின்று ஆமோதிக்கும் ‘பீட்டா’ போலவும் அல்லாதவர்கள். அறையின் சுவர்களைப்போல அவர்களும் ஒரு பிராப்பர்ட்டிதான். யாருக்கும் தொந்தரவு செய்யாதவர்கள், அதேநேரத்தில் பிறருக்கு மறக்கமுடியாத அளவுக்குத் தம் இருப்பினைக் காட்டிக்கொள்பவர்களும் அல்லர். தலைமைக்கும் ஆசைப்படாது, பின்தொடர்பவர்களாகவும் இருக்க விரும்பாதவர்கள். அதிகச் சிரமமில்லாத இலக்கை, தமக்கு வசதிப்பட்டால் கையில் எடுத்துக்கொள்வார்கள்.

சிக்மா – திறமையான சாணக்கியர்கள். தன் இரைக்காகக் காத்திருக்கும் சிலந்தியைப்போலத் தனக்கான வாய்ப்புக்காகக் காத்திருப்பார்கள். தம் இலக்கினை அடைவதற்குப் பிறருக்குக் குழிபறித்துக் காத்திருப்பவர்கள். ஆல்பா ஆண்கள் போலவே, ஒரு குழுவில் இவர்களுடைய குரலுக்கு அதிக வலிமை இருக்கும். ஆனால், அது தலைமைப் பண்பினால் உண்டாகும் மதிப்பு அன்று! “இவன் பேச்சைக் கேட்காவிட்டால், நம்மை எதிலாவது (சிக்கல்களில்) மாட்டிவிடுவானோ?” என்ற அச்சத்தில் பிறர் ஆமோதிப்பார்கள். விதியே என நொந்து இவரைத் தலைவனாக ஏற்றுக்கொள்வார்கள். இதன்காரணமாகச் சில நேரங்களில் ஆல்பா ஆண்களை விட அதிக உயரத்துக்குச் செல்லும் வாய்ப்புகள் கூடக் கிடைக்கலாம். வாய்ப்புக் கிடைக்கும்வரை பீட்டா போலவும், கிடைத்தபிறகு ஆல்பா போலவும் மாறிக்கொள்ளும் ’அமைதிப்படை அமாவாசை’கள்!

இவ்வளவுதான் ஆண்கள்! இனக்கவர்ச்சி என்பது ஏதோ ஒரு சபலம் சம்மந்தப்பட்ட விடயமன்று! மனித இனத்தின் பரிணாம வளர்ச்சியின் அடிநாதமே இனக்கவர்ச்சிதான். ஏவாளின் மீது ஆதாமுக்கு இனக்கவர்ச்சி ஏற்பட்டிருக்காமல் போயிருந்தால், என்னாகியிருக்கும்?

ஆகையால் பெண்களைக் கவர்கின்ற ஆண்களின் ஆளுமைப் பட்டியலை இங்கே வரையறுத்திருப்பதும் அவசியமாகவே படுகிறது. “அவன் திமிர்பிடிச்சவன்!” என்று ஆல்பா ஆளுமையைப் புறந்தள்ளும் பெண்களும் உண்டுதான். அத்தகைய பெண்கள் பீட்டா ஆண்களைத் தேடிப்பிடிப்பதும் உண்டு. ஆனால், பெரும்பாலும் பெண்களின் தேடல், ஆல்பா ஆளுமை மிக்க ஆண்களைச் சுற்றியே சுழல்கிறது என்பதுதான் உண்மை.

ஒருவன் தன் ஆளுமையை வளர்த்துக்கொள்ள முதல் படியே, தனது ஆளுமையின் படிநிலையை உணர்வதுதான். அந்தவகையில் ஆளுமைகளைப்பற்றி அறிந்துகொள்வதுதான், தலைமைப்பண்பு மிக்க ஆல்பா ஆணாக உருவாவதன் முதல்நிலை. இதனைச் சரியாகப் புரிந்துகொண்டால் உங்களுக்கும் ஒரு ஹீரோ இன்ட்ரொடக்ஷன் பாடல் தயாராகிவிட்டது என்று பொருள் கொள்க!

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “ஆண்களே…! இதில் நீங்கள் எந்த வகை?

  1. கட்டுரை சுவாரசியமாக இருந்தது. எல்லா ஆண்களுமே ஆல்ஃபாவாகப் பிரியப்பட்டால், யார் அவர்களைப் பின்தொடர்வது? 

    இந்த சிக்மா ஆண்கள் ஆல்ஃபாக்காரர்களை, `அகங்காரம் பிடித்தவன்’ என்று பழிப்பதும் உண்டு. அவர்கள் சொல்லைக் கேட்காதவர்கள் எல்லாரும்  கர்விகள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *