இலக்கியச்சித்திரம் – இனிய பிள்ளைத்தமிழ் -18

0

-மீனாட்சி பாலகணேஷ் 

கேசவா! நாராயணா! மாதவா!

ஆயர்பாடியில் நந்தகோபனின் திருமனை அலங்கரிக்கப்பட்டுள்ளது. வாயிலில் அழகான கோலங்கள்! எங்கும் அழகான தோரணங்கள்! மலர்மாலைகள்! பட்டாடைகள் அணிந்த இடைச்சியர். இவர்கள் தயிர், பால் விற்பனையை இன்று பொழுதோடு முடித்துக்கொண்டு வந்துவிட்டார்கள். சிறுவன் கண்ணனுடைய ஆய்ப்பாடித்தோழர்களும் வந்துள்ளனர். முற்றமெங்கும் ஓடியாடி மகிழும் அவர்களது மணியோசை போன்ற இனிய குரலோசை கேட்கவில்லையா? தொழுவத்தில் அசைபோடும் மாடுகளும் கூட இன்றைய தினத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்துள்ளனபோல் ஆவலோடு தலையை உயர்த்திப் பார்க்கின்றனவே!

 பெரிய தாம்பாளத்தில் வெற்றிலை, பாக்கு, பழங்கள், இன்னும் கிருஷ்ணனுக்குப் பிடித்தமான பலவகைத் தின்பண்டங்கள், மங்கலப்பொருட்கள் அனைத்தும் அழகுற அடுக்கிவைக்கப்பட்டுள்ளன. யசோதையும் வாயிலையே நொடிக்கொருமுறை நோக்கியபடி உள்ளும் புறமும் சென்றுவருகிறாள். ஆவலோடு துவங்கிய இந்த நாள், நெடுநேரமாகிவிட்டதால் இப்போது எதிர்பார்ப்பின் எல்லையைமீறி, சலிப்பையும், ஆற்றாமையையும் அவளிடம் எழுப்பிவிட்டுவிட்டது. பாவம், என்னவாயிற்று?

“எத்தனையோமுறை சொல்லியாயிற்று. உன் தந்தைக்கு இதற்கெல்லாம் நேரமே இல்லை; என்பேச்சை அவர் காதிலேயே வாங்கிக்கொள்வதில்லையடா கிருஷ்ணா! ear-piercing-ceremony1போதாத குறைக்கு இந்தக் கம்சன் எனும் கொடியவனும் உனக்குத் தீங்கு விளைவிக்க என்றே எப்போதும் காத்துக்கொண்டு இருக்கின்றான். உனக்கு ஏதேனும் ஆயிற்றென்றால் உன்னை யார்தான் காப்பாற்றுவார்கள்? நான் என்னதான் செய்வேன் என் கண்ணா? நீயானால் தனியே  பட்டிமேயும் கன்றைப்போல் ஊரெல்லாம் சுற்றியலைந்து திரிகிறாய். என் கேசவநம்பீ! அதனால்தான் உனக்குக் காதினைக் குத்திவிடலாம் என எண்ணினேன். அதற்காகவே இவர்களை வரவழைத்தும் உள்ளேன் பார்! எல்லாப்பொருட்களையும் வெற்றிலை பாக்கினையும் தயாராக வைத்துள்ளனர் பார்த்தாயா? நீ எங்கேயடா என் குழந்தாய்?” எனத் தனக்குத்தானே அவனிடம் கூறுவதுபோல கூறிக்கொள்கிறாள்.

 தன் சிறுகுழந்தைக்குக் காதுகுத்தவேண்டும் என்று அன்னைக்கு ஆசை! இந்தக் காதுகுத்தல்’ என்ற அழகான சிறுநிகழ்வில் பலபொருட்கள் அடங்கி நிற்கின்றன. அவளுடைய ஆதங்கம் யார் அந்த விழாவிற்கு முக்கியமோ, அவனே எங்கோ ஒளிந்துகொண்டுள்ளான், வராமலிருக்கிறான் என்பதே!

(குழந்தைக்குக் காதுகுத்துவது என்பது நமது நாட்டில் இன்றளவும் ஒரு சிறுவிழாவாகவே கொண்டாடப்படுகிறது. ஒரு நல்ல தினத்தில் சுற்றமும் நட்பும் சூழ, குழந்தையின் தலைமயிரை மழித்து, காதினில் துளையிட்டு ஒரு சிறு கடுக்கனை அணிவிக்கும் வழக்கம் உள்ளது. குழந்தைக்குப் பரிசுகளும் அனைவருக்கும் விருந்தும் அன்று உண்டு.

காதினைக் குத்தித் துளையிடுவதால் மூச்சடைப்பு வராது என மருத்துவரீதியாகக் கூறப்படுகிறது. இளம்வயதிலேயே காதுகுத்துவதால் புத்திக்கூர்மை அதிகரிப்பதாகவும், சிந்தனாசக்தி வளருவதாகவும், முடிவுகளைத் துணிந்து எடுக்கும் திறன் கிட்டுவதாகவும் தத்துவ, விஞ்ஞான ரீதியாகக் கூறுகின்றனர். மேலும் பெண்குழந்தைகளுக்கு – ஆண்மக்களுக்கும் கூட- விதம்விதமான காதணிகளை அணிவித்து அழகுபார்க்கப் பெற்றோர் தலைப்படுகின்றனர்.)

 யசோதைக்கும் தன் மகனின் காதினைக்குத்தித் தோட்டினை அணிவித்து அழகுபார்க்கவேண்டும் என ஆசையிராதா என்ன?

  போய்ப்பாடு உடையநின் தந்தையும் தாழ்த்தான்;
                   —பொருதிறல் கஞ்சன் கடியன்
          காப்பாரும் இல்லை, கடல்வண்ணா! உன்னை,
                   —தனியேபோய் எங்கும் திரிதி;
          பேய்ப்பால் முலைஉண்ட பித்தனே! கேசவ
                   —நம்பீ! உன்னைக் காதுகுத்த
          ஆய்ப்பாலர் பெண்டுகள் எல்லாரும் வந்தார்;
                   —அடைக்காய் திருத்திநான் வைத்தேன்.

(பெரியாழ்வார் திருமொழி)

மற்றகுழந்தைகளுக்குக் காதுகுத்துவதைக் கிருஷ்ணன் பார்த்திருக்கிறான். அவ்வமயம் அவர்கள் வலியில் துடித்து அழுவதனையும் கண்டிருப்பதனால், அவன் இப்போது இந்தப்பக்கமே வர மறுக்கிறான். ”நான் வரமாட்டேன். வலிக்கும், எரியும்”, எனக்கூறும் அவனிடம் பல ஆசைவார்த்தைகளைக் கூறுகிறாள் அன்னை.

“நாராயணா, பார் இந்த அழகான தங்கக்காதணிகளை! எப்படிப் ‘பளபள’வென ஒளிவீசுகின்றன எனப்பார்த்தாயா? இது உனக்காகவே நான் செய்துவைத்தது. எண்ணும் எண்ணங்களுக்கெல்லாம் அப்பாற்பட்ட பிரானே! உனக்கு எரிச்சல் ஏற்படாதவாறு உன் காதுக்குத் திரியை நான் இடுவேன், இவை உன் கண்களுக்கும் நல்லது. வாராய்,” எனக் கெஞ்சி அழைக்கிறாள்.

“அழகான பவளவடத்தினை அரையில் அணிந்தும், மலர்ப்பாதங்களில் அணிந்துள்ள கிண்கிணி ஆர்ப்பரித்து அழகான ஒலியை எழுப்பவும் செய்தபடி என்னருகே வருவாய்,” என ஆசையாக வேண்டுகிறாள்.

            வண்ணப் பவளம் மருங்கினிற் சாத்தி
                   —மலர்ப்பாதக் கிண்கிணி ஆர்ப்ப,
          நண்ணித் தொழுமவர் சிந்தை பிரியாத
                   —நாராயணா! இங்கே வாராய்;
          எண்ணற்கு அரிய பிரானே! திரியை
                   —எரியாமே காதுக்கு இடுவன்;
          கண்ணுக்கு நன்றும் அழகும் உடைய
                   —கனகக் கடிப்பும் இவையா!

(பெரியாழ்வார் திருமொழி)

 “மாதவா! உன் காதினில் திரியை இடும்போது சிறிதேதான் வலிக்கும். ஆனால் அவ்வலி தெரியாதிருக்க உனக்குச் சுவையான தின்பண்டங்களைத் தருவேன்; அத்தனையும் செய்து வைத்துள்ளேன். கோவிந்தா! உனக்குப் பலாப்பழம் கொண்டுவந்து வைத்திருப்பதைப்பார்!” எனப் பலவிதமாக அவனை வேண்டுகிறாள். அவன் ஒன்றினையும் கேட்டுக்கொள்வதாக இல்லை!

ஓடியோடி ஒளிபவனை எவ்வாறோ பிடித்து, அவனுடைய ஒருகாதில் துளையிட்டு காதணியையும் போட்டுவிட்டாள் யசோதை. இவனோ உடனே அதைப்பிடுங்கி வீசிவிட்டு ஓடிவிட்டான்.

“திரிவிக்கிரமா! நீ சிறுகுழந்தையாக இருந்தபோதே, உன்தலை சரியாக நிற்காத மிக்க இளம்பொழுதிலேயே உன் காதினைக் குத்தாமல் விட்டது என் தவறுதான்,” எனத் தன்னையே நொந்துகொள்கிறாள்.

 “கூழைக்காது எனக்கூறிப் பெண்கள் நகைப்பார்கள் சிரீதரா! உன்னொத்த மற்ற ஆய்ப்பாடிச்சிறுவர்கள் தத்தம் காதுகளைப் பெருக்கிக்கொண்டு நடமாடுவதைக் கண்டாயா?” என்பவளிடம், “என்காது வீங்கி எரிந்து வலித்தால் அப்பெண்களுக்கும் உனக்கும் என்ன ஆயிற்றாம்? வலிப்பது எனக்கு; மகிழ்வது நீயும் அவர்களுமா?” என்கிறான் இவன்.

 மேலும், “இல்லையாடா கண்ணா! மிக இலேசாகத்தான் வலிக்கும்; உனக்கு உண்ணக் கனிகள் தருவேன்; தட்டு நிறைய வைத்திருக்கிறேன் பார்! பெரிய பெரியSakatasura2 அப்பங்களையும் உனக்காகவே செய்து வைத்திருக்கிறது பார்,” எனவெல்லாம் கூறியவளிடம், “என் காதில் வலி உண்டாகும்படித் திருகி இக்கடுக்கனை இடுவதனால் உனக்கு என்ன மகிழ்ச்சி? எனக்குக் காது வலிக்கும்; வரமாட்டேன் போ,” என்கிறான். “உனக்கு மிகவும் விருப்பமான நாவற்பழம் தருவேன்; முலைப்பால் அருந்திப் பூதனை எனும் அரக்கி, வண்டிச்சகடம் இறுத்து சகடாசுரன் எனும் அரக்கன் ஆகியவர்களைக் கொன்றவனே, தாமோதரனே! இங்கு வருவாயாக!” என்கிறாள்.

            வாஎன்று சொல்லி என்கையைப் பிடித்து
                   —வலியவே காதிற் கடிப்பை
          நோவத் திரிக்கில், உனக்கு இங்கு இழுக்குற்றென்?
                   —காதுகள் நொந்திடும்; கில்லேன்;
          நாவற்பழம் கொண்டு வைத்தேன், இவைகாணாய்;
                   —நம்பீ! முன்வஞ்ச மகளைச்
          சாவப்பால் உண்டு சகடுஇறப் பாய்ந்திட்ட
                   —தாமோதரா! இங்கே வாராய்.

(பெரியாழ்வார் திருமொழி)

பின் என்னவாயிற்றோ, நாமறியோம்! கி. பி. 8-ம் நூற்றாண்டில் வாழ்ந்த பெரியாழ்வார் என்னும் திருமால் அடியார் எழுதிய இச்சுவைமிகு பாசுரங்களைப் படித்து இரசிக்கும் தருணத்தில் இப்பாசுரங்கள் அவர் கண்ணனைச் சிறுகுழந்தையாகக் கண்டு, அவனுடைய வளர்ச்சியின் பலகட்டங்களிலும் நிகழும் நிகழ்வுகளைப் பாடல்களாக்கி அனுபவித்துப் போற்றி மகிழ்ந்ததை உணர்கிறோம்.

Hugkrish3பெரியாழ்வாரின் பாசுரங்கள் பிள்ளைத்தமிழ் எனும் சிற்றிலக்கிய அமைப்பாக இல்லையெனினும், அத்தகைய இலக்கிய அமைப்பிற்கு முன்னோடியாகத் திகழ்கின்றன. பிள்ளைத்தமிழ் இலக்கியத்தில் வரிசைப்படுத்தப்பட்ட பத்து பருவங்களில் காப்பு, செங்கீரை, சப்பாணி, தால், அம்புலி ஆகியவற்றையே இங்குக் காண்கிறோம். இவற்றுடன் மற்ற பிள்ளைத்தமிழ் நூல்களில் காணாத சிறப்பாகக் கண்ணனின் திருமேனி அழகு, குழந்தை தளர்நடை நடந்துவருதல், அணைக்க அழைத்தல், குழந்தை அன்னையைப் புறம்புல்குதல், அப்பூச்சிகாட்டி விளையாடுதல், அன்னை குழந்தையை முலையுண்ண அழைத்தல், காதுகுத்துதல், நீராட அழைத்தல், குழல்வாரக் காக்கையை அழைத்தல், பூச்சூட, அந்திக்காப்பிட அழைத்தல் ஆகியனவற்றையும் அழகுறப் பாடியுள்ளார்.

 இந்தப் பாசுரங்களின் அழகு, இவை கண்ணனை முன்னிலைப்படுத்தி யசோதை கூறும் கூற்றுகளாக அமைவதுதான். காதுகுத்துதல் எனும் நிகழ்ச்சியில் சில பாடல்கள் கண்ணன் – யசோதை இருவர் கூற்றாக அமைந்து பயிலுவோர்களைப் பரவசமூட்டுகின்றன. காதுகுத்த அழைத்தல் எனும் இப்பாசுரங்களில் வைணவர்கள் உயர்வாகக்கருதும் திருமாலின் பன்னிரு நாமங்களையும் (கேசவா, நாராயணா, மாதவா, கோவிந்தா, மதுசூதனா, திரிவிக்கிரமா, வாமனா, சிரீதரா, இருடீகேசா, பற்பநாபா, தாமோதரா, அச்சுதா) பாடலுக்கொன்றாக அமைத்துள்ளமை படிப்போர் உள்ளத்தைப் பக்தியிலாழ்த்திப் பரவசப்படுத்தும்.

 பெரியாழ்வார் தாம் கிருஷ்ணன்மீது கொண்ட அன்பின் வெளிப்பாட்டை  ஒரு இலக்கியத்தின் இலக்கண நியதிகளுக்குள் அடக்க முயலவில்லை. அது மடைதிறந்த வெள்ளமெனப் பெருக்கெடுத்துப் பாய்வதனை இப்பாடல்களில் உணர்ந்து உள்ளம் மகிழலாம். அவருடன் சேர்ந்து நாமும் கிருஷ்ணன் எனும் குழந்தையைக் கொஞ்சலாம்; அவன் குறும்புகளில் மயங்கலாம்; ஆனந்தத்தில் திளைக்கலாம். பாடப்பட்ட எளிய இனிய தமிழ்ப்பாசுரங்களை நாமும் பாடிக் களிக்கலாம்.

அனைத்திற்கும் சிகரமாக, இவ்வாறெல்லாம் குழந்தையின் பிள்ளைப்பருவத்தைப் பகுத்துப் பாடுவதென்பது தமிழுக்கே உரிய தனித்தன்மை எனவெண்ணி இறும்பூதெய்தலாம். சிறப்புவாய்ந்த ஒரு சிற்றிலக்கியமாக அது தழைத்தோங்கியுள்ளதையும் எண்ணி மகிழலாம்.

***

மீனாட்சி க. (மீனாட்சி பாலகணேஷ்)
{முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை,
கற்பகம் பல்கலைக் கழகம், கோவை,
நெறியாளர்: முனைவர் ப. தமிழரசி,
தமிழ்த்துறைத் தலைவர்}

பெரியாழ்வார் திருமொழிப் பாசுரம் – மீனாட்சி பாலகணேஷ்

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.