பெயரின் முதல் எழுத்து (சிறுகதை)

நிர்மலா ராகவன்
“அம்மா! நான் பட்டம் வாங்கறச்சே, எல்லாரோட அப்பா அம்மாவும் யூனிவர்சிடிக்கு வந்திருந்தா. எனக்கு மட்டும்..,” எப்பவோ நடந்ததை நினைத்து, அஞ்சனா பெருமூச்சு விட்டுக்கொண்டாள்.
“நான் வேலை செஞ்சாத்தான் நாம்ப சாப்பிட முடியும், ஒன்னைப் படிக்கவைக்க முடியும். ஒனக்குத் தெரியாதா, அஞ்சனா?” கங்காவின் குரல் கெஞ்சியது.
“நான் ஒன்னைக் குத்தம் சொல்லலே. இன்னிக்காவது சொல்லிடும்மா. நெத்தியிலே பொட்டு இட்டுக்கறே. கழுத்திலேயும் இருக்கு. ஆனா, ஒனக்குத் தாலி கட்டினவரை நான் பாத்ததே இல்லே. அப்படி ஒத்தர் இருக்காரா, இல்லே..”.
கங்கா பதறினாள். “என்ன வார்த்தை சொல்றே! நான் அப்படிப்பட்டவ இல்லேடி. சட்டப்படி என்னை ஒத்தர் கல்யாணம் பண்ணிண்டார். அவருக்குப் பிறந்தவதான் நீ.”
“பின்னே ஏன் அவர் நம்பகூட இல்லே?”
“என்னத்தச் சொல்ல! எங்க கல்யாணம் முடிஞ்ச மறுநாளே அவருக்கு என்னப் பிடிக்காம போயிடுத்து”.
“நீ அப்படி என்ன பண்ணினே?”
“நான் ஒரு தப்பும் பண்ணலே”. மகள் சற்றும் எதிர்பாராவிதமாக, கங்கா தன் புடவையைத் தூக்கினாள். “பாத்தியா? இதுதான்..!” அவள் சுட்டிய இடத்தில் சருமத்தின் நிறம் மாறியிருந்தது.
“`குஷ்டரோகம் இருக்கிற பொண்ணை எல்லாருமா சேர்ந்து என் தலையிலே கட்டியிருக்கேள்!’ அப்படின்னு கத்திட்டுப் போனவர்தான். எங்கப்பா, `இவளுக்குச் சின்ன வயசிலேருந்து இப்படி ஒரு தழும்பு இருக்கு. இது வியாதியில்லே, மாப்பிள்ளை,’ அப்படின்னு அவர் காலைப் பிடிச்சுண்டு எவ்வளவோ கெஞ்சினார். அந்த மனுஷன் மசியலியே!”
தனக்கு வேறு எந்த விவரமும் தெரியாதே என்று நினைவிலெழ, “முக்கியமானதை விட்டுட்டியேம்மா. ஒன்னை நிர்கதியா விட்டுட்டுப் போனவரோட பேரு?”
கங்கா மௌனம் சாதித்தாள்.
அஞ்சனா மேலும் துருவினாள். “என் பேருக்கு முன்னாடி G ன்னு தலைப்பெழுத்து போட்டியே. அது ஒன்னோட பேரோட முதல் எழுத்துதானே?”
“அவரோட பேரும் அதிலதான் ஆரம்பிக்கும்”. சொல்லியபடியே முகத்தைத் திருப்பிக்கொண்டாள் கங்கா, இதற்குமேலும் இதைப்பற்றிப் பேசத் தான் தயாரில்லை என்பதை உணர்த்துவதுபோல்..
அதற்குமேலும் அம்மாவைக் கஷ்டப்படுத்த மனம் வரவில்லை அஞ்சானாவுக்கு. “இன்னிக்கு ஏதாவது சினிமா பாத்துட்டு, அப்படியே வெளியில சாப்பிட்டுட்டு வரலாமா?” என்று பேச்சை மாற்றினாள்.
`அதுக்கெல்லாம் காசு கொட்டியா கெடக்கு?’ என்று முன்போல் சொல்ல முடியவில்லை கங்காவுக்கு. அவர்கள் உரையாடலால் அவள் மனமும் தத்தளித்துக்கொண்டுதான் இருக்கும். பாவம்!
“இரு. புடவையை மாத்திண்டு வரேன். நீயும் பௌடர் அடிச்சுண்டு வா,” என்று சிரிக்க முயன்றாள்.
அஞ்சனாவின் மனம் படத்தில் செல்லவில்லை.
G என்ற எழுத்தில் என்னென்ன பெயர்கள் இருக்கும் என்ற யோசனையில் ஆழ்ந்தாள். கணேசன், கணபதி? கங்காதரன்?
அதற்குமேல் யோசிக்க முடியவில்லை.
படத்தில் கதாநாயகன் நாலைந்து தடியன்களை அடித்து உதைத்துக்கொண்டிருந்தான். பின் எப்படித்தான் கதாநாயகியின் மனதில் இடம் பிடிப்பது?
அஞ்சனா முகத்தைச் சுளித்தாள். இந்த காதல், கத்தரிக்காய் எல்லாம் திரையில் பார்க்கத்தான் சுவாரசியமாக, கிளுகிளுப்பாக இருக்கும். நடைமுறையில் அம்மா மாதிரி எத்தனை பெண்கள் கஷ்டப்படுகிறார்களோ!
“ஒரே சத்தமா இருக்கு,” என்று முணுமுணுத்துவிட்டு, மெல்ல எழுந்தாள். இருண்டிருந்த தியேட்டரின் கதவிலிருந்து வெளிப்பட்டவளுக்கு ஒரு சிறு கும்பல் கண்ணில்பட்டது.
`என்ன நடக்கிறது இங்கே?’
ஒருவர் தரையில் கிடந்தார். முகம் நீல நிறமாக மாறியிருந்தது. கைகள் விறைத்திருக்க, கண்கள் என்னவோ திறந்தபடிதான் இருந்தன.
அருகில் வேதனை தோய்ந்த முகத்துடன் நின்றிருந்தவர் அவரது நண்பர் போலும்! “இருதயச் சிகிச்சை நடந்து ஒரு மாசம்கூட ஆகல,” என்று பொதுவாகத் தெரிவித்தார்.
“நகருங்கள், ப்ளீஸ். என்னால் உதவ முடியும்,” என்றபடி, அவர் அருகில் சென்றாள் அஞ்சனா.
அவர்களிருவரும் வீடு திரும்புகையில், கங்கா விசாரித்தாள்: “பாதி படத்திலே எங்கேடி போயிட்டே?”
“நான் போனதும் நல்லதாப்போச்சு. ஒரு உசிரைக் காப்பாத்தினேன்”. நடந்ததை விவரித்தாள். “இந்த reflexology-யால ஒடனே பலன்! அவர் கையில சில எடங்களை அழுத்திப்பிடிச்சேன். ரத்த ஓட்டம் சீராகி, எழுந்து நடந்து போனார். `பை’ அப்படின்னு கையை ஆட்டினார்னா பாத்துக்கயேன்!”
“அப்படியே புண்ணியம்!” தாய் மெச்சிக்கொண்டாள். “அவர் யாருன்னு கேக்கலியா நீ?”
“யாரா இருந்தா என்னம்மா? அவர் எழுந்து நடந்ததும், அங்கே இருந்தவாளெல்லாம் என்னைப் பாத்து சிநேகமா சிரிச்சதே சந்தோஷமா இருந்தது! ஒண்ணும் பேசாம நடந்துட்டேன்”.
வேடிக்கை பார்த்தபடி பேரங்காடியில் நடந்துகொண்டிருந்த அஞ்சனா குரல் வந்த திசையில் திரும்பினாள்.
“ஹலோ! அன்னிக்கு பேர்கூடச் சொல்லாம அவசரமா போயிட்டீங்களே! எனக்கும் கேக்கத் தோணல”.
அவள் முகத்திலும் சிரிப்பு படர்ந்தது. பெயரைச் சொல்லிவிட்டு, “சௌக்கியமா?” என்று விசாரித்தாள்.
“ஒங்க புண்ணியத்தால நல்லா இருக்கேன். வாங்களேன், காபி சாப்பிட்டுக்கிட்டே பேசலாம்”.
“ஒங்க பேரைச் சொல்லலியே, ஸார்?”
“கௌரிசங்கர்”.
G – யில் ஆரம்பிக்கும் பெயர்! இவருக்கும் தன் அப்பா வயதுதான் இருக்கும். ஒரு கணம் திகைத்தவள், தன்னையே கடிந்துகொண்டாள்.
இது என்ன பைத்தியக்காரத்தனம்?
`வேண்டாம்’ என்று அம்மாவைத் துரத்தியவரைப்பற்றி எதற்காக ஓயாது யோசித்து மூளையைக் குழப்பிக்கொள்வது? அந்த மனிதர் எங்கே, எவளுடன் இருக்கிறாரோ!
“மத்தவங்க எல்லாரும் வேடிக்கை பாத்துக்கிட்டு நின்னப்போ, நீதான் என்னை.,” மார்பில் கையைப் பதித்துக்கொண்டார். “ஒங்க அம்மாவும் அப்பாவும் ஒன்னை நல்லபடியா வளத்திருக்காங்க அஞ்சனா”.
ஏதோ சொல்லவந்தவள், தன்னை அடக்கிக்கொண்டாள். `எனக்கு அம்மா மட்டும்தான்’ என்பதை கண்டவரிடமெல்லாம் சொல்லிக்கொண்டிருப்பானேன்!
“மனுஷனாப் பிறந்து ஒருத்தருக்கு ஒருத்தர் உதவி செய்யட்டா எப்படி?” என்றாள் அடக்கத்துடன்.
“எனக்கு யாருமேயில்ல,” குழந்தைபோல, சுயபரிதாபத்துடன் கூறினார். “ரெண்டு கல்யாணம். ஒண்ணும் நிலைக்கலே”.
ஒரு முறை அவரை ஏறிட்டுப் பார்த்துவிட்டு, தலையைக் குனிந்துகொண்டாள். இவ்வளவு பெரியவரிடம் எப்படித் துருவித் துருவிக் கேட்பது!
தன் மனப்பாரத்தை யாரிடம் கொட்டுவது என்று காத்திருந்தவர்போல் அவரே தொடர்ந்தார்: “ஒருத்திக்குத் துரோகம் பண்ணினேன். தீர விசாரிக்காம அவளைத் துரத்தினேன்”.
அவரே பேசட்டும் என்று அஞ்சனா காத்திருந்தாள்.
“பெருநோய் அவ்வளவு லேசா பரவற வியாதியில்ல. ரொம்ப நாள், அதுவும் நெருக்கமா இருக்கிறவங்களுக்குத்தான் அந்த வியாதி வர வாய்ப்புண்டு. அது தெரிஞ்சதும், குத்த உணர்ச்சி உறுத்திக்கிட்டே இருந்திச்சு. எனக்கு அவசர புத்தி”.
`இப்போது இந்தப் பேச்சு எதற்கு?’ என்று அஞ்சனா கேட்கவில்லை.
“இன்னொருத்தியை ஏத்துக்க முடியல. அவ கேஸ் போட்டா. எனக்கு..,” தலையைக் குனிந்துகொண்டார். “நான்.. ஆம்பளையே இல்லேன்னு!”
அஞ்சனாவுக்கு அதற்குமேலும் சந்தேகம் இருக்கவில்லை.
`நீங்கள் ஆண்மகன்தான். உங்களுக்குப் பிறந்த பெண் நான்!’ என்று கூறிவிடலாமா?
`எதற்காக?’ என்று அவள் மனம் இடக்கு செய்தது.
துரோகமாம், குற்ற உணர்ச்சியாம்! என்னமாக அளக்கிறார்! பிரயாசைப்பட்டுத் தேடியிருந்தால் அம்மா இருக்கும் புதிய இடத்தைக் கண்டுபிடித்திருக்க முடியாதா?
இத்தனை வருடங்களாக அம்மா எத்தனை அவமானங்களைச் சந்தித்திருப்பாள்! ஏன், தானே கேட்கவில்லையா, `நீ முறையாகக் கல்யாணம் செய்துகொண்டவள்தானா?’ என்று?
இந்த மனிதர் நன்றாகத் துடிக்கட்டும்.
சே! இவருக்கா உதவி செய்தேன்! மற்றவர்களைப்போல, வேடிக்கை பார்த்துவிட்டு நகர்ந்திருக்கலாம்.
“என்னம்மா அஞ்சனா எழுந்துட்டே?”
“எனக்கு அவசரமா ஒரு எடத்துக்குப் போகணும். மறந்தே போயிட்டேன்,” என்றபடி அஞ்சனா அங்கிருந்து விரைந்தாள்.
அவள் போன திசையையே பார்த்தபடி இருந்தவருக்கு ஏதோ புரிந்தாற்போல் இருந்தது. இவளைப் பெற்றவள் தான் கைவிட்ட கங்காதான். அதே சாயல்! வேறு ஒருவரை மணந்து, இவளைப் பெற்றிருக்கிறாள்.
தாலி கட்டிய பெண்ணுக்குத் துரோகம் செய்துவிட்டதாக எண்ணி இவ்வளவு காலமும் துடித்தோமே! எல்லாம் வீண்.
கௌரிசங்கருக்கு அழுகை வரும்போல இருந்தது.
வீடு திரும்புகையில், அஞ்சனா பலவாறாக யோசித்தாள்.
`அம்மா! நான் அப்பாவைப் பாத்துப் பேசினேன்’.
`அவர் யார் தெரியுமா? அன்னிக்கு ஒரு நாள் தியேட்டரில..’
அம்மா என்ன சொல்வாள்?
`கையோட அப்பாவை அழைச்சிண்டு வந்திருக்கமாட்டியோடி?’ என்பாள். கண்களில் ஆர்வம் கொப்புளிக்கும்.
அவர் வந்தால், அம்மாவின் உலகத்தில் அவரும், அவருடைய உலகத்தில் அம்மாவும்தான் இருப்பார்கள், கடந்தகால இழப்பைச் சரிசெய்வதுபோல். இனி, அவளை யார் கவனிக்கப்போகிறார்கள்!
வேண்டாம். யானை தன் தலையில் தானே மண்ணை வாரிப் போட்டுக்கொள்வதுபோல் ஆகிவிடும். எனக்கு அம்மா வேண்டும்.
“எங்கே போயிட்டே, அஞ்சனா? ரொம்ப இருட்டிப்போயிடுத்தே! வேலை அதிகமா இன்னிக்கு?” அம்மாவின் உண்மையான கரிசனம் ஒரு கணம் அவளை நிலைதடுமாறவைத்தது. சட்டென்று மனதைத் திடப்படுத்திக்கொண்டாள். `ஆமாம்மா. ரொம்ப வேலை!” என்றாள், முகத்தைப் பரிதாபமாக வைத்துக்கொண்டு.