Parasakthi poster

அண்ணாகண்ணன்

பராசக்தியின் அடிப்படைத் தோல்வி, அதன் கதையிலிருந்து தொடங்குகிறது. மொழிப் போராட்டத்தில் 70 பேர் துடிதுடித்து மாண்டுள்ளனர். தங்கள் உடலுக்குத் தீவைத்துக்கொண்டு பலர் கருகிச் சாய்ந்துள்ளனர். இத்தனை உணர்ச்சிமிகு வரலாற்றுப் பின்புலத்தை எடுத்துக்கொண்டு, சப்பையான இறுதிக் காட்சியை வைத்தது, இயக்குநரின் திறமையின்மையைக் காட்டுகிறது.

இந்தித் திணிப்பு என்பதற்கு உரிய காட்சிகள் குறைவாகவே உள்ளன. அதிலும் சமூகத்தில் அனைத்து நிலையினரையும் பாதிக்கும் வகையில் அது இருந்தது என முன்வைக்கவில்லை. அஞ்சல் நிலையத்தில் படிவங்கள் இந்தியில் மட்டுமே இருந்தன எனக் காட்டப்படுகிறது. பணம் அனுப்ப வந்த பெண்கள், தங்களுக்கு அதை நிரப்பத் தெரியாது என்று கூறுகின்றனர். சரி இதை நீங்களே நிரப்புங்கள் என அஞ்சல் அலுவலர்களிடம் கூறுகின்றனர். அவர்கள், எங்களுக்கும் இந்தி தெரியாது என்று கூறுகின்றனர். அஞ்சல் அலுவலர்களுக்கே இந்தி தெரியாத போது, அவர்களால் எப்படி இந்திப் படிவங்களைக் கையாள முடியும்? படத்தில் இது மிகப் பெரிய ஓட்டை. நடைமுறையில் இவ்வாறு செய்ய மாட்டார்கள்.

புறனானூற்றுப் படையினர், தமிழின் ஆதி வடிவமான பிராமி மொழியில் செய்திகள் பரிமாறுவதாகக் காட்டுகிறார்கள். இதை நாயகன் தன் நெஞ்சில் பச்சை குத்தியும் இருக்கிறார். ஆனால், இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு மொழியினர் பிராமி மொழியை எவ்வாறு கற்றுக்கொண்டனர், இதைக் கற்பித்தவர் யார் எனப் படத்தில் காட்டவில்லை. இது அவ்வளவு எளிதான செயல் இல்லை. புதிதாக இந்தி மொழியைக் கற்க முடியாது என்று எதிர்க்கின்றனர். ஆனால், பிராமி மொழியில் கற்றுச் சங்கேத மொழியில் எழுதவும் பச்சை குத்தவும் கற்கின்றனர். இதிலும் இந்தி மொழியைக் கற்க அமைப்புகள் இருக்கின்றன. ஆசிரியர்களும் இருக்கின்றனர். ஆனால், பிராமி மொழியைக் கற்க உரியவர்கள் இல்லை. எப்படிப்பட்ட முரண் இது?

நாயகன் இந்தி மொழியைக் கற்க முடிவு செய்கிறார். ஆனால், அந்த ஊரில் நாயகியைத் தவிர, இந்தி ஆசிரியர் ஒரே ஒருவரே இருக்கிறார். அவரும் நான் யாத்திரை செல்கிறேன் எனக் கிளம்புகிறார். இந்தித் திணிப்பு எனக் காட்டப்படும் படத்தில் தான் இந்த நிலை. பிறகு எங்கிருந்து திணிப்பு வருகிறது எனில், அரசின் கொள்கை அறிவிப்பு அளவில்தான் அது உள்ளது. இது நடைமுறைக்கு வந்தால் நம் வாழ்க்கை அவ்வளவுதான், நம் மொழி அவ்வளவுதான் என்ற கற்பனை அச்சமே மாணவர்களைப் போராடத் தூண்டுகிறது. அதாவது, திணிப்புக்கு முன்னதாகவே அதை எதிர்த்து அவர்கள் போராடுகிறார்கள்.

ரெயில்வே துறை நேர்காணல், தில்லியில் நடக்கிறது. ரெயில்வே பயணச் சீட்டுப் பரிசோதகர் வேலைக்கு உனக்கு இந்தி தெரிந்திருக்க வேண்டும் என்கிறார்கள். இந்தி மாநிலங்களில் பணியமர்த்தப்பட்டால் அது தேவைதான். ஆனால், இதே போல் தென் மாநிலங்களில் பணியமர்த்தப்படும் வடமாநிலப் பயணச் சீட்டுப் பரிசோதகர்களுக்கு அந்தந்த மாநில மொழி தெரிந்திருக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருக்க வேண்டும். ஆனால், இந்தித் திணிப்பு என்ற அளவில் இந்தக் காட்சி முடிந்துவிடுகிறது.

தமிழக முதலமைச்சராகக் காட்டப்படும் பக்தவத்சலம், மதுரையில் இந்தி மொழி வாரத்தைத் தொடங்கி வைக்கிறார். ஆனால், அவரோ, தமிழக அமைச்சர்களோ இந்தியில் ஒரு வார்த்தையும் பேசவில்லை. படத்தில் காட்டப்படும் கள யதார்த்தத்தின்படி சமூகத்தில் எந்தப் பெரிய தாக்கத்தையும் இந்தி செலுத்தவில்லை. இந்தித் திரைப்படங்கள் தமிழகத்தில் வெற்றிகரமாக ஓடியதைக் கூட இந்தத் திரைப்படத்தில் தெளிவாகக் காட்டவில்லை.

இந்தித் திணிப்பு என வாய் ஓயாமல் பேசினாலும் அவற்றைத் தெளிவாகத் திரையில் காட்டவில்லை. தில்லியில் எல்லாப் பேருந்துகளிலும் தமிழில் எழுதியது போன்ற நடக்காத போராட்டங்களைக் காட்டியிருக்கிறார்கள். இறுதிக் காட்சி, மிக மிக மொக்கையாக அமைந்திருக்கிறது. எழுச்சி ஊட்டியிருக்க வேண்டிய ஒரு திரைப்படம், இயக்குநரின் அலட்சியத்தால் பிசுபிசுத்துவிட்டது. இதைப் படக்குழுவினரும் தயாரிப்பாளரும் கூடச் சரியாகக் கவனிக்கவில்லை.

ஆனால், கற்பனை அச்சத்தைக் காட்டியே காலத்தை ஓட்டலாம், வாக்குகளை அறுவடை செய்யலாம் என்ற அரசியல் சாதுர்யத்தைப் படம் எடுத்துக் காட்டுகிறது.

மாணவர்களின் தன்னெழுச்சியான போராட்டத்தை ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சிக்குச் சார்பாக இயக்குநர் வளைத்துள்ளார். இந்தப் போராட்டம் குறித்து, அண்ணாவின் கருத்துகள் மட்டும் ஆங்காங்கே காட்டப்படுகின்றன. இதர கட்சியினர், தலைவர்கள், தமிழறிஞர்கள் ஆகியோரின் குரல் காட்டப்படவில்லை. இது, திட்டமிட்டு மாணவர்களைத் திமுக சார்பாளர்களாகக் காட்டுகின்றது.

படத்தின் ஒரே நல்ல கூறு, இந்தித் திணிப்புப் போரை ஒடுக்கும் அதிகாரியாகத் தமிழர் ஒருவரைக் காட்டியதே. இவரை வட இந்தியராகக் காட்டியிருந்தால், வட இந்தியருக்கு எதிரான உணர்வு இங்கே பெருகியிருக்கும்.

படம் என்பது வெறும் தொழில்நுட்பம், ஒப்பனை, அரங்கப் பொருள்கள் மட்டுமில்லை. அதற்கு வலுவான கதையும் பாத்திரங்களும் தேவை. எல்லாப் படங்களையும் எல்லோரும் எடுத்துவிட முடியாது என்பதைச் சுதா கொங்கரா உணர வேண்டும்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.