திவாகர்

 

இல்லம்மா.. காரணம் என்னன்னா திருச்சிலேர்ந்து இந்தப் பொண்ணை அனுப்பி வெச்சது கந்தசாமிதான். அவங்களை அடிக்கடி வந்த் பார்க்கறதும் அவர்தான். சுந்தரை அறிமுகம் பண்ணி வெச்சு இங்க வேலை பண்ண வெச்சதும் அவர்தான். சுந்தருக்கு நாங்க எதும் பணம் தர்றது இல்லே.. ஆனா சுந்தர் வந்து எல்லா வேலையும் செஞ்சு கொடுப்பார். அதனால் எனக்கு அவங்க பேசினதுல ஒரு சந்தேகமும் வரல்லைம்மா. அன்னிக்கு அவர் சுந்தர்கிட்ட கெஞ்சினது கூட சந்தேகமா படலே..

 

“அவ்வளவுதானா நடந்தது?”

 

“பிராயச்சித்தம்னு சொன்னீங்களே.. அதை இங்கேயே ஆரம்பிக்கலாமேன்னு சொன்னார் சுந்தர். உடனே எங்கிட்டே சொன்னாரு.. அவரோட பிள்ளை கல்யாண் வந்தவுடனே அவரோடு பேசி பத்துலட்சம் ரூபா இந்த ஆசிரமத்துக்கு தரேன்னு எனக்குச் சொன்னார். நான் அதுக்கு, ரொம்ப சந்தோஷம்.. நீங்க சுந்தர் கையில கொடுத்தீங்கன்னா அவர் பேங்க்ல அக்கௌண்ட்ல போட்டுடுவார். ரசீதும் கொடுப்பார்’னு சொன்னேன். அவர் கையைப் பிடிச்சு மெதுவா கார்ல அழைச்சுட்டு சுந்தர் போயிட்டாரு.”

 

“ஓ! அது சரி, உங்க ஆசிரமத்துக்கு யார் ஓனர்? அதாவது யாராவது முக்கியமானவங்க இதைக் கவனிப்பாங்க இல்லையா.. அவங்க யாரு?”

 

“பாலபாலிகா’ங்கிறதே தெலுங்குப் பேருதாம்மா..  சிறுவர் சிறுமியர்னு தமிழ்ல சொல்லுவாங்க.  பேருதான் பால பாலிகா.. பசங்க யாரும் சேர்க்கறதில்லே. நெல்லூர்லேர்ந்து சென்னைக்கு வந்த ஒரு ரெட்டிகாரு ஆரம்பிச்சாரு. அவரோட பில்டிங்க்தான். அவரு இப்போ இல்லை. அவரு பசங்க எப்போதாவது வருவாங்க. கொஞ்சம் பேங்க்ல பணம் போடுவாங்க. இங்க இருக்கறவங்க அத்தனை பேருக்கும் விருந்து கொடுப்பாங்க, எனக்கு மாச சம்பளம் கரெக்டா அனுப்பி வெப்பாங்க்க.. இங்க வந்தா சந்தோஷமா எல்லாரும் இருக்கறதைப் பார்த்துத் திருப்தியா போயிடுவாங்க. வருஷா வருஷம் ஆடிட்டர் இவங்களுக்கு பேப்பர் அனுப்பி கையெழுத்துக் கேட்பாரு. அவங்களும் போட்டு அனுப்புவாரு. எல்லாம் சுந்தர் சரியா பார்த்துக்குவாருங்க..”

 

“ரொம்ப சந்தோஷம் பெரியவரே.. அந்த ரசீது புக் கிடைச்சுதுன்னா நல்லது.. சுந்தர் எப்போ வந்து எப்போ தருவாரோ.. நாங்களே அந்த மேஜை டிராயரை ஓபன் பண்ண டிரை பண்ணலாமா.. ஒரு ஸ்க்ரூ டிரைவர் இருந்தா கொடுங்க..”

 

“தாராளமா டிரை பண்ணுங்கம்மா.. அதுல அக்கௌண்ட் புக்குங்க,  ரசீது புக் இருக்கும். ஸ்க்ரூ டிரைவர் இருக்கும்மா.. முயற்சி பண்ணிப் பாருங்க..!

 

என்ற பெரியவர் ஸ்க்ரூடிரைவரைக் கொடுத்தார். அந்த மேஜையின் சாவித் துவாரத்தில் ஸ்க்ரூடிரைவரை வைத்துப் பார்த்துத் திருகினாள். முதலில் முடியவில்லை. சாந்தியும் உதவி செய்தாள். இரு பெண்களும் முயற்சி செய்வதைப் பார்த்து அந்தப் பெரியவர்

 

“இன்னொரு ஸ்க்ரூடிரைவர் கொஞ்சம் பெரிசா இருக்கா பாக்கறேன்மா..” என்று சொல்லி விட்டு உள்ளே போனார். அவர் உள்ளே போனதும் இன்னொரு முயற்சியை சாந்தி செய்யும்போது மேஜை திறந்து கொண்டது. மேஜைக்குள் துழாவினால் டக்கென்று ஒரு மொபைல் கையில் பட அதை உடனடியாக எடுத்தாள். சாந்தியின் கையிலிருந்து சடக்கென பிடுங்கி தன் கைப்பைக்குள் வைத்துக் கொண்டாள் கோம்டி. அதற்குள் இன்னொரு ஸ்க்ரூ டிரைவருடன் வந்தவர் மேஜை டிராயர் திறக்கப்பட்டதைக் கண்டவர், அவர்களை நகரச் சொல்லிவிட்டு ரசீது புத்தகத்தை எடுத்து அவர்களிடம் தந்தார். கோம்டி அவர் கொடுத்த புத்தகத்தைப் புரட்டி கடைசி  நான்கு மாதங்களில் வரவு வைக்கப்பட்ட பகுதிகளைப் பார்த்தாள். சில ரசீது காப்பிகளை தன் மொபைல் ஃபோனில் படம் பிடித்துக் கொண்டாள். புத்தகத்தை அவரிடம் கொடுத்து மேஜையை பழையபடி மூடச் சொன்னார். உள்ளே மூடப்பட்டதும் அது மறுபடியும் பழையபடி லாக்காகி விட்டதைச் சொன்னார்.

 

“நல்லதுதான். எங்களுக்கு சுந்தர் மேல சில சந்தேகம் இருக்கு.. அதனால நீங்க நான் வந்து உங்களை விசாரித்தது பற்றி சுந்தர்கிட்டே சொல்லவேண்டாம். மீறிச் சொன்னீங்கன்னா இந்த வயசுல உங்களை சாட்சிக்காக போலீஸ் ஸ்டேஷன் வரச் சொல்லிக் கட்டாயப்படுத்துவாங்க.. உங்க மேல எங்களுக்கு எந்தவித சந்தேகமும் இல்லே.. இந்த ரசீதுகளைப் பாக்கறச்சே சுந்தரைத்தான் சந்தேகப்படணும்.. எதுக்கும் உங்க பேங்கர் யாரு? ஸ்டேட் பேங்க்தானே.. அங்க அக்கௌண்ட் நம்பர் மாத்திரம் கொடுங்க.. நான் செக் பண்ணிக்கிறேன்.”

 

அக்கௌண்ட் நம்பரை வாங்கிக் கொண்டு அவரிடம் ஒரு நன்றியையும் சொல்லிவிட்டு வெளியே வந்தனர். வண்டியில் ஏறுவதற்கு முன் இன்னொரு சிநேகிதிக்கு ஃபோன் செய்தாள்.

 

“வித்யா.. பேங்க்ல இருக்கியா? ரொம்ப நல்லதா போச்சு. ஒரு கேஸுக்காக ஒரு அக்கௌண்ட் நம்பரைச் செக் பண்ணனும். நான் அக்கௌண்ட் நம்பர் மெஸேஜ் பண்ணறேன். எனக்கு ஒரு நாலு மாச ஸ்டேட்மெண்ட் வேணும்.. இல்லே.. பெரிசால்லாம் இருக்காது, எனக்குத் தெரிஞ்சு ஒரு பக்கம்தான் வரும். என் வாட்ஸாப் நம்பருக்கு அனுப்பேன்.. ரொம்ப தேங்க்ஸ் வித்யா.”

 

ஃபோனில் மெஸேஜ் செய்தவள் கொஞ்சம் திருப்தியுடன் வண்டியில் ஏறினாள்.

“சாந்தி, இப்போ பேசினது என் கஸின் வித்யாகிட்டே.. அவ மௌண்ட் ரோடு பிராஞ்ச் எஸ் பி ஐலதான் வேலை பண்றா. சில கேஸுங்கள்ல இந்த பண பரிமாற்றம்னு சொல்லுவாங்க.. அது ஒண்ணே சாட்சியா வேலை பெரிசா உதவும்.. பார்க்கலாம்.”

 

 

கோம்டி வீட்டின் கிலினிக் (பின் மாலை நேரம்)

 

சாந்தியும் கோம்டியும் கிலினிக் இல் சாய்ந்து கொண்டு பேசிக் கொண்டிருக்கிறார்கள். சாந்தி கிலினிக்கில் இருந்த கல்யாணின் ஃபோட்டோவைக் காட்டி சிரித்துக் கொண்டே சொல்கிறாள்.

 

“இப்போதாண்டி உன் கிலினிக்குக்கு ஒரு களையே வந்திருக்குடி.. எத்துப்பல்லன் இதைப் பார்த்தா என்ன சொல்வானோ?”

 

“என்ன சொல்வான்? என் போட்டோவைப் போட்டா தனக்கு மாடலிங்க் ஃபீஸா பத்தாயிரம் கொடுன்னு கேட்பான்..”

 

“சரியா அவனை எடை போட்டுருக்கே.. பல்லழகன் கேட்டாலும் கேட்பான். சரி, எவ்வளோ தூரம் வந்திருக்குடி இப்போ அவனோட கேஸ்..? இந்த ஆசிரமத்து விசிட்ல ரொம்ப உபயோகமா இருந்தது அந்த ஆப்பிள் ஃபோன் கிடைச்சதுதான் நம்ம லக். சுந்தர் நல்ல சாமர்த்தியக்காரன்தான்.  அவன் வீட்ல ஒருவேளை போலீஸ் சோதனை போட்டா கிடைக்குமேன்னு பயந்து அதை ஆசிரமத்துல ஒளிச்சு வெச்சிருக்கான். ஆனா அந்த ஃபோனை இன்னொரு தடவை எனக்குக் காமிக்காதேடி.. ரொம்ப அருவருப்பா இருக்கு. பாவம் அந்த சின்னப் பிள்ளைங்கல்லாம்.”

 

“எஸ்.. ஆனா உலகம் இப்படித்தாண்டி இருக்கு. போகப் போக இன்னும் குரூரமா கூட ஆகலாம். பெண்கள்ங்கிறது ஆண்களுக்கு என்னிக்குமே போகப் பொருள்தான்.. ஆண்களோட வக்கிரபுத்திக்கு எப்பவுமே பெண்கள்தான் பலி. இதுக்கெல்லாம் முடிவு கிடைக்குமாங்கிறதெல்லாம் சொல்லவே முடியாது.. சுந்தர் மேல வலுவா இப்போ சாட்சிகள் திரும்பியிருக்கு.. ஆனா அவன் இந்தக் கொலையை ஏன் பண்ணனும்? அவனைப் பொறுத்தவரை மொராலிடி பாக்கறான்னு சொன்னாலும் நாலு மாசமா அவங்க பெரியப்பாகிட்டே காசு வாங்கறான். இப்போ பத்து லட்சம் வாங்கிருக்கான்.. ஆனா ரசீது புக்ல எல்லாமே சரியா இருந்தாலும் ஆசிரம அக்கௌண்ட்லதான் அந்தளவு அமௌண்ட் இல்லே.. ஸோ அவங்க மாமா கொடுத்த பணமெல்லாம் அவன் எடுத்துக்கறான்.. ஆசிரம அக்கௌண்டையும் அவனே பாக்கறதினாலே அதை அட்ஜஸ்ட் பண்ணிடறான்.  இங்க அவன் நிச்சயமா மாட்டுவான். மாமா கொடுமையையையும் குரூர புத்தியையும் இவனுக்கு வரவு, அதாவது வருமானம்தானே? அப்போ இவன் ஏன் கொலை பண்ணனும்.. ஆனா இது சீக்கிரம் முடிவுக்கு வந்துடும். சீக்கிரமே இன்ஸ்பெக்டரை முன் வெச்சே நாம சேகரிச்ச விவரம்லாம் கொடுத்துடுவோம். அதுக்கப்பறம் போலீஸ் என்னவேணா ஆக்ஷன் எடுக்கட்டும்.  ஆனா எனக்கு இதுல ஒரு திருப்தி என்னன்னா இந்த கல்யாணுக்கு இப்போ அவன் பெரியப்பாவைப் பத்தியெல்லாம் உண்மை தெரியத் தெரிய வெறுப்பு ஜாஸ்தியாயிருக்கு. டிரெயின்ல வரச்சே என்னவெல்லாம் புகழ்ந்தான் தெரியுமா..”

 

“அது சரி! அவனுக்குச் சொல்லிட்டியா?”

 

“எதை?”

 

“அதாண்டி.. அவங்க பெரியப்பனோட இங்க நடந்த கதையை..”

 

“சொல்லலே.. இன்னும் அதுக்கு வேளை வரல்லேடி..”

 

கதவைத் தட்டும் சப்தம் கேட்கிறது. நர்ஸ் வந்து நிற்கிறாள்.

 

“அம்மா.. நான் கிளம்பட்டுமா.. வெளியே ஒரு ஆள் உட்கார்ந்திருக்கிறார். நீங்க வரதுக்கு முன்னாடி ஒரு தடவை வந்து கூட கேட்டுட்டுப் போனார். அவர் பல் தெத்துப்பல்லுனு பேசினாலே தெரியுது.. பெரிய கேஸ்..” என்று சொல்லியவள் சட்டென அந்த ஃப்ரேம் போட்டோவைப் பார்க்கிறாள்..

 

“அம்மா.. இந்தாள்தான் வெளியே உட்கார்ந்திருக்காரு. ஒரு ஆள்தான்.. ஆமாம்.. இந்த ஆளுக்கு இன்னிக்கு அப்பாயிண்ட்மென்ட் ஃபோன்ல கொடுத்தீங்களா? மயக்க மருந்து காலி ஆயிடுச்சும்மா.. நாளைக்கு வரச்சே வாங்கிவரேன். நாளைக்கு வரச் சொல்லட்டுமா.. டாக்டர் இன்னிக்கு பிஸின்னு சொல்லிடறேன்..”

 

“இரு இரு.. அந்தாளை உள்ள அனுப்பு.. அவரு ஆபரேஷனுக்காக வரலே..”

 

சாந்தி குறுக்கிடுகிறாள். “ஆமா! அதுக்கும் வேளை வரணுமில்லே” என்று சொல்லி விட்டு சிரிக்கிறாள்.

 

உள்ளே கல்யாண் வருகிறான். நர்ஸ் பெண் மறுபடி உள்ளே வந்து வீட்டுக்குப் போக அனுமதி கேட்கிறாள்.

 

“சரி, போயிட்டு வா..” என்று கோம்டி சொல்ல அவள் கிளம்புகிறாள். கல்யாண் தன் போட்டோவை அங்கே பார்த்து சிரிக்கிறான். சாந்தி அலறுகிறாள். கோம்டி அவனைப் பார்க்கிறாள்.

 

“கல்யாண், சிரிச்சீங்களா.. சாந்திக்குக் குழந்தை மனசு.. குழந்தையைப் போலவே பயப்படறா பாருங்க.. தயவு செய்து சிரிக்காம பேசுங்க..”

 

“அது எப்படி? அன்னிக்கு என்னமோ வாயை மூடிப் பேசு’ன்னீங்க.. இன்னிக்கு என்னவோ சிரிக்காம பேசு’ன்னு சொல்லறீங்க.. இதெல்லாம் முடியுமா? அடச்சே ஒரு மனுஷனுக்கு நல்ல அதிர்ஷ்டம் கிடைச்சுதுன்னா ஜனங்களுக்குப் பொறுக்காது..”

 

“ஸார்.. டைரக்டாவே சொல்லுங்க! மறைமுகமா பேசாதீங்க! என்ன பொறுக்காது எங்களுக்கு? நாங்க ரெண்டு பேருமே டெண்டல் சர்ஜன்ஸ்.. அதுவும் டெண்டல் சர்ஜரில டாப் ஸ்டூடென்ட்ஸ்னு பேரு வாங்கினவங்க.. சீக்கிரம் ஒரு முடிவுக்கு வாங்க.. சாந்தி அடுத்த மாசம் யூ எஸ்’க்குப் போறா.. அவளுக்கும் ஒரு நல்ல சர்ஜரி பண்ண எக்ஸ்பீரியன்ஸ் கிடைக்கும்.. என்னடி சாந்தி சொல்லறே?”

 

“நான் இப்பவே ரெடி.. சாருக்கு வசதி எப்படி?”

 

“ஐய்யய்யோ.. என்னங்க . நான் உங்க க்ளயண்ட்தான்.. அது இன்வெஸ்டிகேஷன் விஷயத்துலதான்.. டெண்டல் க்ளையண்டோ பேஷண்டோ இல்லே. உங்களுக்கு டெண்டல் கேஸ் கிடைக்கலேன்னா நானா கிடைச்சேன்.. அதுவும் என் அதிர்ஷ்டத்தை இழக்கறதுக்கு சம்மதம் தருவேனா.. (தன் ஃப்ரேம் செய்யப்பட்ட படத்தைக் காண்பித்து) பாருங்க என் பல்லாலே உங்க கிலினிக்கோட களையே எங்கயோ போயிடுத்து. சாயங்காலம் இங்க ஒருதடவை வந்தப்போ கூட பார்த்தேன்.. உள்ளாற ஒரு பேஷண்ட்.. வெளியே மூணு பேஷண்ட் வெயிட்டிங்க்.. எல்லாம் என் படத்தாலே அதுவும் என் பல்லாலே வந்த அதிர்ஷ்டம்.  அந்த அதிர்ஷ்டத்தை நீங்க அடைஞ்சிருக்கீங்க.. நார்மலா இந்தப் படம் கொடுத்ததுக்கு நான் ஃபீஸ் வாங்கணும்.. நீங்க ஃப்ரெண்டாயிட்டிங்க.. ஃப்ரீயா வெச்சுக்குங்க.. ஆமா.. இந்தப்படம் அன்னிக்கு ஸெல்ஃபீ எடுத்ததுதானே.. எங்கூட நீங்களும் இருந்தீங்களே.. உங்களைக் கட் பண்ணி எடுத்துட்டு என்னை மாத்திரம் தனியா என் அதிர்ஷ்டப்பல்லுக்காகப் போட்டிருக்கீங்க.. ஊம்ஹூம்.. இன்னும் நல்லா அழகா பெரிசா சிரிச்சபடி எடுத்துருக்கலாம்.  ஏங்க.. ‘எனக்கு விளம்பரம் வேணும், உங்க போட்டோ சிரிச்சபடி போஸ் கொடுங்க’ன்னா இன்னும் இதை விட சூபரா கொடுத்திருப்பேனே,, இன்வெஸ்டிகேஷன்ல சூபரா இருக்கற உங்க அறிவு இந்த டெண்டல் பிராக்டீஸ்ல போறல.. ம்..”

 

கோபமாகப் பார்த்தாள் கோம்டி. “போதுமே உங்க பல் புராணம். எங்களுக்கும் இந்த போஸ் போதும்.. இன்னும் நல்லா சிரிச்சீங்கன்னா அதை ஃப்ரேம் பண்ணிப் போட்டோ போட்டோம்னா க்லினிக்குக்கு குழந்தைங்க வந்தா பயப்படுவாங்க.. பெரியவங்க வந்தா எதுக்குங்க இந்த திருஷ்டிப் பரிகார போட்டோ’ன்னுவாங்க.. நாங்க சொல்லறதைக் கேட்டு சீக்கிரம் ஒரு முடிவுக்கு வந்து அந்த எத்துப் பல்லுங்களை ரிமூவ் பண்ணுங்க..”

 

“முடியாத விஷயத்தை மறுபடி மறுபடி பேசி எதுக்குங்க நமக்குள்ள இந்த விளையாட்டு?  ஆமாம் சாந்தி யூ எஸ் போறாங்களா? எனக்குக்கூட யூஎஸ் பி1 விஸா இருக்குங்க.. நானும் உங்க கூட வரட்டா?”

 

“கூட வரலாம்.. ஆனா முதல்ல உங்க கேஸ் முடிங்க.. அப்பறம் யூ எஸ் பத்திப் பேசலாம். பாருங்க நான் இவளுக்குக் கூட விஸா போட்டு வாங்கியிருக்கேன்.. ஆனா அவ என்ன சொல்லறா? அவ முதல் பிரெஃபெரன்ஸ் உங்க பெரியப்பா கேஸாம்.. ஆக்சுவலா அது உங்க கேஸ்.. நீங்க நடுவுல விட்டுட்டு என்னோட வரேன்னு சொல்லறீங்க.. ஆனா இவளைப் பாருங்க.. ஒரு டெடிகேடிவ் டிடக்டிவா எப்படி சூபரா வேலை செய்யறா தெரியுமா?”

 

அதே சமயம் கிலினிக்கில் தான் உட்கார்ந்திருக்கும் இடத்தின் பின்னால் ஒரு மூலையில் இன்னொரு படம் ஃப்ரேம் செய்யப்பட்டு மாட்டப்பட்டிருப்பதைப் பார்க்கிறான். கோம்டியின் கிலினிக்கில் ஒரு நர்ஸ் ஒரு நோயாளியின் பல்லை சுளுவாக எடுப்பதைத் தத்ரூபமாக படம் எடுத்து மாட்டியிருந்தாள் கோம்டி. அந்தப் படத்தைப் பார்த்து முகம் சுளித்தான்.

 

“என்ன சார் அந்தப் படத்தைப் பார்த்தவுடன் பயம் வந்திடுச்சா? பல் எடுக்கறது ரொம்ப ஈஸின்னு காமிக்கற படம்.. நீங்க பயப்பட வேணாம்.”

 

சாந்தியை இடைமறித்தான் கல்யாண்.

“இல்ல..  படத்துல அந்த நர்ஸ்.. அதான் சுமதி.. எப்படி இங்கே?”

 

கோம்டி புன்னகைத்தாள். “ஸோ. இந்த சுமதியும்  உங்க கேஸ்ல வர சுமதியும் ஒண்ணுதான் இல்லையா?”

 

“ஆமா..” அவன் தலையசைத்தான். “ஆனா அவள்.. இங்கே.. எப்படி?”

 

கோம்டி தன் நாற்காலியில் சாய்ந்துகொண்டு விவரித்தாள்.

“யெஸ்.. சுமதி எங்கிட்டேதான் முதன்முதலா நர்ஸா ஜாயின் ஆயி வேலை செஞ்சா.. ஒரு வருஷம் வரைக்கும் தான் உண்டு தன் வேலை உண்டுன்னு அவ இருந்தா.. சாயங்காலம் நாலு மணிக்கு உள்ள வந்தாள்ன்னா ராத்திரி எட்டு ஒன்பது மணி வரைக்கும் அவளுக்கு இங்கே ட்யூடி. இங்கயேதான் இருப்பா.. வாரத்துக்கு ரெண்டு நாள் லீவு வேணும்னு முதல்லயே சொல்லி வீக் எண்ட்ல லீவுல போயிடுவா.. எல்லாம் நல்லபடியா போயிண்டுதான் இருந்தது.. உங்க பெரியப்பா கண்ல படறவரை.”

 

கல்யாண் சோகமான முகத்துடன் பார்த்தான். கோம்டி அவனைப் பார்த்துக் கொண்டே பேசினாள். “உங்க பெரியப்பா ஒரு நாள் சாயங்காலம் என்னோட கிலினிக் வாசல்ல எதேச்சையா நிக்கற சுமதியைப் பார்த்துட்டு இங்கே வந்தார். உடனே அவர் வர்றதைப் பார்த்த சுமதி என் ரூமுக்கு இங்கதான் வந்தா. அப்போ இதோ சாந்தியும் கூடவே இருந்தா..  மிஸ்டர் கல்யாண் நீங்க அவ கதையையும் அடுத்து நடந்த நிகழ்ச்சியையும் தெரிஞ்சுக்கணுமே.”

 

நிகழ்ச்சி நான்கு மாதம் முன்பு நடந்ததற்கு மாறுகிறது. அதே இடம்..கோம்டியின் கிலினிக்.

 

உள்ளே சாந்தியும்  கோம்டியும் உட்கார்ந்தபோது சுமதி பரபரப்பாக வருகிறாள். அவள் கையில் கைப்பை இருக்கிறது. வார்த்தையில் வேகம் தெரிந்தது. கண்களும் அவள் குரலோடு சேர்ந்து கெஞ்சின.

“அம்மா.. என்னைப் பார்த்துட்டு உங்க எதிர்வீட்டுக்காரன் வரான்மா.. நான் கிளம்பறேன்மா.. ஆனா அவன் போகணும்.. நான் உங்க வீட்டுக்குள்ளே பின் வழியா போயிடறேன்.. என்னைப் பத்தித் தெரியாதுன்னு சொல்லிடுங்கம்மா.. ப்ளீஸ்..” என்று கை கூப்பிக் கெஞ்சியவள் கடகடவென அந்த அறையின் பின் வாசல் வழியே கோம்டியின் வீட்டுக்குள் ஓடி விடுகிறாள்.

 

கோம்டிக்கு எதுவும் புரியவில்லை.. அதற்குள் அங்கே கந்தசாமி வருகிறார்.. க்லினிக்கை சுற்று முற்றும் பார்க்கிறார். கோம்டியின் அறைக்குள் வருகிறார்.  அங்கும் சுற்றுமுற்றும் பார்க்கிறார். கோம்டியைப் பார்க்கிறார்.

 

தொடரும்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.