Tag: வேதாத்திரி மகரிஷி

  • பள்ளி மாணவர்களின் கல்வி மேம்பாட்டில் வேதாத்திரி மகரிஷியின்  யோகப்பயிற்சிகள் – ஓர் ஆய்வு

    பள்ளி மாணவர்களின் கல்வி மேம்பாட்டில் வேதாத்திரி மகரிஷியின் யோகப்பயிற்சிகள் – ஓர் ஆய்வு

    கு.பூங்கொடி, முனைவர் பட்ட ஆய்வர், 
    யோகமும் மனித மாண்பும் துறை, பாரதியார் பல்கலைக்கழகம், கோவை                            
    
    முனைவர் பெ. சுந்தரமூர்த்தி, நெறியாளர், 
    யோகமும் மனித மாண்பும் துறை, விஷன்ஸ்கை ஆராய்ச்சி மையம் ஆழியாறு, பொள்ளாச்சி

    சுருக்கம்

    மாணவப் பருவம் என்பது கற்கும் பருவம். கல்வி என்பது அறிவையும் மற்றும் ஒழுக்கத்தையும் வளர்த்துக் கொள்ள வழி செய்கிறது. மாணவர்கள் தம்மை செம்மைபடுத்திக் கொள்ள ஏற்ற இடமாகக் கல்விக் கூடம் அமைகிறது. மாணவர்களுக்கு அழிவு இல்லாத சிறந்த செல்வம் கல்வியே ஆகும். பிற செல்வங்கள் அத்தகைய சிறப்புக்குரியவை ஆகாது. இதையே வள்ளுவ பெருந்தகை

    கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவருக்கு

    மாடல்ல மற்றை யவை. (குறள் 400) எனப் பகர்கிறார்.

          இன்றைய மாணவர்களின் கல்வி மற்றும் ஒழுக்கமும், நற்பண்புகளும், நன்னெறிகளும் கூடிய ஆளுமைத்திறனே தேசத்திற்கு ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்கும். தற்போதைய கல்வி முறையில் யோகப்பயிற்சிகள் பள்ளியிலே கற்றுத் தருவதன் மூலம் மாணவர்களின் உடலும், மனமும் மேம்பட்டு, ஒருமுகப்பட்டு, சிந்திக்கும் ஆற்றல் அதிகரிக்கும். கல்வியில் சில மாற்றங்களைக் கொண்டு வருவதன் மூலம் மாணவ சமுதாயத்தின் தனிநபர் முன்னேற்றம் சமுதாய முன்னேற்றமாக மிளிரும்.

    கலைச் சொற்கள் : காயம், கல்பம், அலைச்சூழல், உயிர்வளம்

    முன்னுரை

    மாணவப் பருவம் ஒரு மகத்தான பருவம், சிந்தனைக்கு ஏற்றபடி சிறகடித்து, வாழ்வை வளமாக்கும்; பருவம். உலக அரங்கில் இந்தியா நல்லரசாக மாற இன்றைய இளைய சமுதாயத்தால் மட்டுமே முடியும். எனவேதான் நமது அன்புக்குரிய டாக்டர் அப்துல்காலம் அவர்கள் “கனவு காணுங்கள்” என்கிறார்.

    கல்விக்கூடம்  மாணவர்களைச் செதுக்கும் கலைக்கூடம். வெறும் ஏட்டுக்கல்வியை மட்டும் கற்றுக் கொள்ளாமல், கல்வியுடன் கூடிய ஒழுக்க நெறிகள், ஆளுமைப் பண்புகள், தனித்திறன் மேம்படுத்துதல் ஆகியன மாணவ முன்னேற்றத்திற்கு அவசியமாகின்றன.  ஆசிரியர்கள் மாணவர்களிடம்  உயர்வு தாழ்வு பாராமல் வாழ்வியல் விழுமியங்களை  உணர்த்துகிறார்கள்.

    மாணவர்களுக்கு ஒரே மாதிரி பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன. பள்ளிப் பருவ இறுதியில் நடக்கும் தேர்வில் பெரும்பாலோர் வெற்றி பெறுகின்றனர். சில பேர் குறைவான மதிப்பெண் பெறுவதும், ஒரு சிலர் தோல்வியைத் தழுவியதையும் பார்க்கிறோம். இதன் அடிப்படையை ஆராய்ந்தால் தேர்வின் போது மாணவர்களுக்கு ஏற்படும் உடல்நலக் குறைபாடு, மன ஒருமைப்பாடு இன்மை, நினைவாற்றல்  திறன் குறைபாடு  ஆகியவற்றில் ஏதேனும் ஏற்பட்டிருக்கலாம்.

    எதுவாயினும் அதற்கான தீர்வைக் கண்டாக வேண்டும். அதைப் போக்க யோகப் பயிற்சிகள் உதவியாக இருக்குமா? என ஆராயப்படுதல் வேண்டும்.

    வேதாத்திரி மகரிஷியின் யோகப் பயிற்சிகள்

    யோகம் என்பது உடலோடு மனம் இணையவும், மனதோடு உயிர் இணையவும், சமுதாயத்திற்கும், இயற்கைக்கும் இனிமை காக்கவும் வேண்டும். இதற்கு தத்துவஞானி வேதாத்திரி மகரிஷியின் எளியமுறை யோகப் பயிற்சிகள் உறுதுணையாக இருக்கின்றன. உடலுக்கு உடற்பயிற்சியும், மனதிற்கு அகத்தவப்பயிற்சியும் உயிருக்குக் காயகல்பப் பயிற்சியும் கற்றுத் தரப்படுகின்றன.

    உடல் நலம் காக்க எளிய முறை உடற்பயிற்சி

    தினந்தோறும் எளியமுறை உடற்பயிற்சியைச் செய்வதால், உடலில் உச்சந் தலையிலிருந்து உள்ளங்கால் வரையில் அனைத்து உறுப்புகளும் நலம் பெறுகின்றன.

    இப்பயிற்சியில் மொத்தம் 9 நிலைகள் உள்ளன. அவை

    1. கைப்பயிற்சி
    2. கால்பயிற்சி
    3. நரம்பு தசை நார் மூச்சுப் பயிற்சி
    4. கண்பயிற்சி
    5. கபாலபதி
    6. மகராசனம்
    7. உடம்பைத் தேய்த்து விடுதல்
    8. அக்குபிரஷர்
    9. உடம்பைத் தளர்த்துதல் – ஓய்வு தரும் பயிற்சி ஆகியன ஆகும்.

    பயன்கள்

    1. உடலின் இரத்த ஓட்டம், வெப்ப ஓட்டம், காற்றோட்டம், காந்த ஓட்டம் மற்றும் உயிரோட்டம் ஆகியன சீர்படுத்தப்படுகின்றன.
    2. நோய் எதிர்ப்புத் தன்மை அதிகரிக்கிறது.
    3. முடிவெடுக்கும் திறன் மற்றும் மன ஒருமைப்பாடு அதிகரிக்கின்றன.
    4. உடல் நலம் மற்றும் மனம் நலம் மேம்படுகிறது.

    மன வளம் காக்கும் அகத்தவப் பயிற்சிகள்

    தவத்தின் போது புலன்களின் இயக்கம் குறைந்து விடுவதாலும், எப்போதும் அலைபாய்ந்து கொண்டிருக்கின்ற மனத்தை ஒருமுகப்படுத்துவதாலும், உயிர் ஆற்றலின் செலவு தவிர்க்கப்பட்டு ஆற்றல் சேமிக்கப்படுகிறது.

    மன அலைச்சூழலானது நான்கு அலைவரிசைகளில் இயங்குகிறது அவையாவன.

    1. பீட்டா
    2. ஆல்பா
    3. தீட்டா
    4. டெல்டா

    இதில் பீட்டா அலையானது உணர்ச்சி வசப்பட்ட நிலையில் இயங்கிக் கொண்டிருக்கும். இந்நிலையில் மனம் ஒருவிதப் பதற்றத்துடன் காணப்படும். பெரும்பாலான நேரங்களில் மனம் இந்த நிலையில் இருக்கும். அகத்தவப் பயிற்சியால் மனம் படிப்படியாகக் குறைந்து ஆல்பா நிலைக்கு வரும். இந்த நிலையில் மனம் அமைதியாகச் செயல்படும். மாணவர்கள் அகத்தவப் பயிற்சியை மேற்கொண்டு மனதை அமைதி நிலையில் இருத்தி பாடங்களைப் படித்தால் நன்றாக மனதில் பதிவு ஆவதோடு,  தேவைப்படும் போது எளிதில் நினைவுக்கு கொண்டு வந்து பயன்படுத்த முடியும்.

    பயன்கள்

    1. நினைவாற்றல் மேம்படுகிறது
    2. மன நிறைவு மற்றும் தன்னம்பிக்கை கிட்டுகின்றன.

    உயிர்வளம் காக்கும் காயகல்பப்பயிற்சி

    “காயம்” என்பது உடல். “கல்பம்” என்பது உறுதி.இப்பயிற்சியைத் தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி அவர்கள் தனது 40 ஆண்டு கால ஆராய்ச்சிக்குப் பின் மனித குலத்திற்கு அளித்துள்ளார். உயிரின் வளமே மன நலம் ஆகும். இப்பயிற்சியில் உயிர்சக்தியின் வளத்தை அதிகரிக்கிறோம். இதனால் உடல், மனம் பாதிப்புகள் நீங்கி உடலும் மனமும் ஆரோக்கியத்துடன் விளங்கும்.

    பயன்கள்

    1. மாணவ ஒழுக்கத்திற்கு உறுதுணையாக உள்ளது.
    2. முதுமையைத் தள்ளிப் போடலாம்.
    3. படிப்பில் கவனம் மேலோங்கும்.

    ஒழுக்கத்தை வளர்க்கும் கல்வி

     “உயிர்களுக்குத் துன்பம் தரா உயர்ந்த செயல் ஒழுக்கமாகும்”.கல்வியில் ஒழுக்கம், கடமை, ஈகை ஆகிய மூன்றும்; கற்பிக்கப்படல் வேண்டும். அன்பும், பண்பும் மாணவர்கள் மனதில் உள்ளுணர்வாக வெளிப்பட வேண்டும்.

    ஒழுக்கமும் ஈகையும்

    ஒழுக்கமும் ஈகையும் உளத்தில் கொண்டால்

    உயர்ந்துகொண் டேஇருக்கும் அறிவுச் செல்வம்.

    அழுக்காறு அவாவெகுளி, வன்சொல் இன்றி

    அன்பூறும்; பண்பாட்டின் எடுத்துக் காட்டாய்

    வழுக்காத பேரறிவில் வாழ்க்கை செய்ய,

    வளர்த்தறிவை இறைநிலையோ டிணைப்ப தற்குப்

    பழுக்கும்வாறு எண்ணம்சொல் செயல்க ளெல்லாம்

    பழிச்சுமையை நீக்கும்அருள் ஆற்ற லாகும்.

    ஞானக் களஞ்சியம் -1 பா.எண்-457  ப.எண்-168

    முடிவுரை

    ஒவ்வொரு மாணவரும் தமது உடலை, மனதை மற்றும் உயிரை உயர்த்தும் பயிற்சிகளை முறையாக கற்றுக்கொண்டு தன்னுடைய கல்வித்திறனை மேம்படுத்தி சமுதாய நலனில் அக்கறை கொள்ள வேண்டும். கல்வியினால் வாழ்வில் வளம் துய்த்து நாட்டிற்கும், வீட்டிற்கும் தொண்டாற்றும் கடமையுணர்வை மாணவர்கள் மனதில் கொள்ள வேண்டும். வருங்கால சந்ததியினர் வளமுடனும், நலமுடனும் வாழ இப்பயிற்சிகள் உறுதுணையாக இருக்கும்.

    துணை நூல்களும், வலைதளங்களும்

    1. தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி, எளியமுறை உடற்பயிற்சி, வேதாத்திரி மகரிஷி, வேதாத்திரி பதிப்பகம் , 6 ஆம் பதிப்பு 2006
    2. வேதாத்திரி மகரிஷி, காயகல்பம், முதல் பதிப்பு ,வேதாத்திரி பதிப்பகம் , 2005.
    3. வேதாத்திரி மகரிஷி, குணநலப் பேறும் சமுதாய நலனும் ,ஆன்மிக மற்றும் உள்ளுணர்வு கல்வி நிலையம் 6 ஆம் பதிப்பு, ஆகஸ்டு 2005
    4. வேதாத்திரி மகரிஷி, உடல், உயிர், மனம் தொகுப்பு, ஆன்மிக மற்றும் உள்ளுணர்வு கல்வி நிலையம் ,வேதாத்திரி பதிப்பகம் 3 ஆம் பதிப்பு.
    5. வேதாத்திரி மகரிஷி, ஞானக்களஞ்சியம் பகுதி-1 ,, வேதாத்திரி பதிப்பகம் ,1991.
    6. www.vethathiri.edu.in

     

    ____________________________________________________________________________________________

    ஆய்வறிஞர் கருத்துரை (Peer Review):

    பள்ளி மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்கு வேதாத்திரி மகரிஷியின்  யோகப்பயிற்சிகள் எவ்வாறு உதவும் என்பதை விளக்குவதாக இக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது. பள்ளிமாணவர்களுக்கு மனதளவில் ஏற்படக்கூடிய சிக்கல்களை விளக்கி வேதாத்திரி மகரிஷியின் யோகப்பயிற்சிகள் அவற்றைப் போக்க எவ்வாறெல்லாம் உதவுகிறது என்பதை கட்டுரையாளர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர். சான்றாதாரங்கள் அடிப்படையிலும் விவாதங்களின் அடிப்படையிலும் ஒரு ஆய்வுக்கட்டுரைக்கு உரிய தன்மையோடு இல்லாமல் பொதுக்கட்டுரையாகவே இக்கட்டுரை உள்ளது. கள ஆய்வின் வழியாக மாணவர்களின் சிக்கல்களைப் பதிவுசெய்து சிக்கல்களைப் போக்கக்கூடிய வழிமுறைகளை அவர்களுக்குச் சொல்லி அதன் முடிவுகளை ஆய்வு முடிவாகக் கொண்டு இக்கட்டுரை எழுதப்படுமாயின் சிறந்த ஆய்வுக்கட்டுரையாகத் திகழும். 

    ____________________________________________________________________________________________

    Share
  • (Peer Reviewed) சித்தர் பாடல்கள் – வேதாத்திரி மகரிஷி பாடல்கள்: ஓர் ஒப்பீடு

    (Peer Reviewed) சித்தர் பாடல்கள் – வேதாத்திரி மகரிஷி பாடல்கள்: ஓர் ஒப்பீடு

    .பரமசிவன்
    முனைவர் பட்ட ஆய்வாளர்
    யோகமும் மனித மாண்பும் துறை
    தமிழ்ப் பல்கலைக்கழகம்
    தஞ்சாவூர்
    முனைவர் ரமேஷ்
    ஆய்வு நெறியாளர்
    விஷன் ஆராய்ச்சி மையம்
    ஆழியாறு
    பொள்ளாச்சி

    முன்னுரை:

    தமிழ்நாட்டில் சித்தர் பாடல்கள், மெய்ப்பொருள் நாட்டம் உடையோர்க்கு ஓர் உந்து சக்தியாக விளங்கி வந்துள்ளன. சித்தர் நூல்களில் உள்ள கவிதைகளின் உண்மைப் பொருளைத் தெளிவாகப் புரிந்துகொள்வதில் சிரமம் இருந்துகொண்டுதான் உள்ளது. வள்ளலார் அருளைப் பெற்ற அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்கள், சமீப காலத்தில் வாழ்ந்த மகான். அவர் ஞானக் களஞ்சியம் என்னும் கவிதைத் தொகுப்பினை அளித்துள்ளார்கள். அதில் மிக எளிமையான மெய்விளக்கமளிக்கும் ஞானப் பாடல்கள் உள்ளன. சித்தர் பாடல்களோடு வேதாத்திரி மகரிஷி அவர்களது பாடல்களை ஒப்பாய்வு செய்வதுவே இக்கட்டுரையின் நோக்கம் ஆகும்.

    அறிவாற்றலால் உயர்ந்த நிலையில் வாழ்ந்த சித்தர்கள் பலர், தமிழ்நாட்டில் இருந்துள்ளார்கள். அவர்களில் ஒரு பகுதியினரைச் சித்தர்கள் எனக் குறிப்பிடுகின்றனர். சித்தர்கள் எழுதிய ஓலைச்சுவடிகள் இன்றும் உள்ளன. அவற்றில் வைத்தியம், ஜோதிடம், மந்திரம், ரசவாதம், கற்பசாதனைகள், மூச்சுப் பயிற்சிகள், இறவாமல் சமாதி நிலை அடைதல் போன்ற பல்வேறு உயர்ந்த விஷயங்கள் பேசப்பட்டுள்ளன. பொதுவாகப் பதினெண் சித்தர்கள் என்று குறிப்பிடுவது மரபு ஆயினும் நூல்களில் கூறப்பட்டுள்ளவர்களது பெயர்களை எல்லாம் தொகுத்துப் பார்த்தால் சுமார் 40-க்கு மேற்பட்டவர்கள் உள்ளதாகத் தெரிகிறது. சித்தர்கள் அனிமா, மகிமா, இலகிமா, சரிமா, பிராப்தி, வசித்துவம், பரகாமியம், ஈசத்துவம் என்றும் அட்டமா சித்திகளை பெற்றவர்கள் என்றும் கூறப்படுகிறது.

    தமிழ்நாட்டில் அவ்வப்போது மகான்கள் தோன்றி, சித்தர்களது கருத்துகளின் அடிப்படையில் மக்களுக்கு உயர்ந்த வாழ்க்கை முறையை கற்றுக் கொடுத்துள்ளனர். அருட்பெருஞ்சோதி வள்ளலார் அவர்களைத் தொடர்ந்து இன்று தமிழகமெங்கும் மக்கள் கடைப்பிடிக்கும் மனவளக்கலையை வழங்கியவர், வேதாத்திரி மகரிஷி அவர்கள். சென்னைக்கு அருகில் கூடுவாஞ்சேரியில் ஓர் எளிய நெசவாளர் குடும்பத்தில் 1911-ஆம் ஆண்டு பிறந்தார்கள். ஆன்மீகச் சாதனைகளை, அவர்களுக்கு வைத்தியம் கற்றுத் தந்த கிருஷ்ணராவ் பூபதி அவர்களிடம் ஆரம்பத்தில் கற்று, பின்னர் பரஞ்சோதி மகான் அவர்களிடமும் கற்றுச் சாதனை புரியும் காலத்தில், வள்ளலார் அவர்களது அருளும் கிட்டியது. திருவள்ளுவர், திருமூலர், தாயுமானவர், வள்ளலார் ஆகியோரது பாடல்களை வழிகாட்டுதலாகக் கொண்டு மனவளக்கலை என்னும் பெயரில் இக்கால மக்களுக்கு ஏற்ற வகையில் எளிய உடற்பயிற்சிகள், எளிய
    முறை காயகல்ப பயிற்சி, அகத்தவப் பயிற்சி, அகத்தாய்வுப் பயிற்சிகள், பிரம்ம ஞான
    விளக்கப் பயிற்சி எனக் கல்வியாக, பயிற்சிகளாக வடிவமைத்துள்ளார்கள். இவை அனைத்தையும் மக்களுக்குக் கொண்டு செல்ல, உலக சமுதாய சேவா சங்கம் என்ற அமைப்பினை 1958-ஆம் ஆண்டு ஆரம்பித்தார்கள் .

    சித்தர் பாடல்களும் வேதாத்திரி மகரிஷி பாடல்களும்:

    சித்தர்கள் தங்களது உடலை மிகவும் போற்றிப் பாதுகாத்தார்கள். கற்பசாதனைகளை மேற்கொண்டு நீண்ட காலம் வாழ்ந்தார்கள். யோகப் பயிற்சிகள், மூச்சுப் பயிற்சிகள்; மூலிகைகள், உபரசங்கள், உலோகங்கள், பாசனங்கள் இவற்றால் ஆன மருந்துகள் என்பனவற்றைத் துணையாகக் கொண்டு தாங்கள் விரும்பும் வரை பூமியில் வாழ்ந்த பின் சமாதி என்ற நிலையில் வாழ்வை நிறைவு செய்தார்கள். அவர்களது சமாதிகள் கோயில்களாக உள்ளன.

    உடம்பார் அழியின் உயிரார் அழிவர்
    திடம்பட மெய்ஞ்ஞானஞ் சேரவும் மாட்டார்
    உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே
    உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே                                  – திருமந்திரம் 724

    வேதாத்திரி மகரிஷி அவர்களும் உடல் நலம் பேணுதலை முக்கியமாகக் கற்பித்து வந்தார். அவர்களுக்குச் சித்த மருத்துவம், ஆயுர்வேத மருத்துவம், ஹோமியோபதி மருத்துவம் ஆகியவை தெரியும். தாம் கற்ற மருத்துவ அறிவைக் கொண்டு நோய் வராமல் தடுக்கவும் வந்த நோயைக் குணமாக்க உதவும் விதத்திலும் எளிய முறையிலான உடற்பயிற்சித் தொடர் ஒன்றினை வடிவமைத்தார்கள். அதனைப் பலரும் கற்றுப் பயன்படுத்தி வருகின்றனர்.

    மேலும் நமது உடலில் ரசம், ரத்தம், மாமிசம், கொழுப்பு, எலும்பு, மஜ்ஜை, சுக்கிலம் என எழு தாதுக்கள் உள்ளன. ஏழாவது தாதுவாகிய விந்துவே உடலில் உயிர் இருந்து இயங்குவதற்கு அடிப்படை. அதனைப் போற்றிப் பாதுகாப்பதன் மூலம் நீண்ட காலம் வாழலாம், நோய்களை குணப்படுத்திக் கொள்ளலாம் என்ற கருத்தின் அடிப்படையில் சாதாரண மக்களும் கற்றுப் பயன்படுத்தும் வகையில் எளிய முறையில் காயகல்ப பயிற்சி ஒன்றினை உருவாக்கிக் கற்றுக் கொடுத்துள்ளார்.

    சுக்கிலத்தை மேலேற்றி மனதை வைத்துத்
    துரிய நிலை நின்று தவம் ஆற்றும் யோகம்
    சுக்கிலத்துத் தவம் குதத்துப் பயிற்சி கூட்டி
    தூக்கம், போகம், உணவு முன்னம் செய்ய
    சுக்கிலமே கெட்டியாம் ஆண்மை ஓங்கும்
    தொல்லை தரும் நோய் வகைபோம் இளமை காக்கும்
    சுக்கிலத் தோடுயிர் சிவ காந்தம் மிக்கும்
    சூட்சுமமாம் இக்கலையே காயகல்பம்                                 -ஞானக் களஞ்சியம் 518

    மேற்கண்ட பயிற்சி இன்று உலகம் முழுவதும் மனவளக்கலை மன்றங்களில் கற்றுக் கொடுக்கப்படுகிறது. இலட்சக்கணக்கானோர் கற்றுப் பயன்பெற்று வருகின்றனர்.

    சித்தர்களின் வழி, அறிவுப் பூர்வமானது. அவர்கள் காலத்தில் நிலவிய பல்வேறு அடிப்படையற்ற மூட நம்பிக்கைகளை அவர்கள் சாடியுள்ளதை அவர்கள் பாடலில் காணலாம். குறிப்பாக, அறிவுக்குப் பொருந்தாத இறை வழிபாட்டினை அவர்கள் மாற்ற விரும்பியதைச் சிவவாக்கியரின் பிரபலமான பாடல்கள் உணர்த்தும்.

    என்னிலே இருந்ததொன்றை நானறிந்ததில்லையே
    என்னிலே இருந்ததொன்றை நானறிந்து கண்ட பின்
    என்னிலே இருந்ததொன்றை யாவர் காண வல்லீரோ
    என்னிலே இருந்து யானுணர்ந்து கொண்டேனே                         – ஞானக் கோவை

    என்று வேதாத்திரி மகரிஷி அவர்கள் பாடியுள்ளார்.

    எங்கும் நிறைவாக இருக்கின்றார் கடவுளென்பீர்
    இங்கு நம் உடல் உள்ளத்துறைந்தும் இருப்பாரன்றோ
    அங்கங்கே போய்த் தேடி அலைவானேன் அவர்க்காக
    தங்க நம் உயிர்க்குயிராம் தவநிலையில் அவரே நாம்                -ஞானக் களஞ்சியம் 1168

    என்று வேதாத்திரி மகரிஷி அவர்கள் கூறியுள்ளார் .

    சித்தர்கள் மனத்திற்கே மிகவும் முக்கியத்துவம் அளித்தார்கள். மனிதனின் உயர்வு
    அவரின் மனத்தின் உயர்வைப் பொறுத்தது தான் என்று உறுதியிட்டுக் கூறினார்கள்.

    மனமது செம்மையானால் மந்திரஞ்செபிக்க வேண்டா
    மனமது செம்மையானால் வாயுவை யுயர்த்த வேண்டா
    மனமது செம்மையானால் வாசியை நிறுத்த வேண்டா
    மனமது செம்மையானால் மந்திரஞ் செம்மையாமே

                                                                                      – அகஸ்தியர் ஞானம்-2 ஞானக் கோவை

    வேதாத்திரி மகரிஷி அவர்கள், தாம் வகுத்துள்ள பயிற்சிக்கு மனவளக்கலை என்றே
    பெயர் வைத்து உள்ளார்கள். அவர்கள் தமது பாடலில்

    மனம் புலன் உணர்வினில் மயங்கிட மாயை ஆம்
    மனம் உயிர் வெளியினில் மருவித் தோய்ந்திட
    மனம் விரிந்தறிவெறும் மாபதம் எய்திடும்
    மனம் அறிவாகிய மனிதனும் தெய்வமே                              ஞானமும் வாழ்வும் 301-303

    என மனத்தை உயர்த்துவதன் மூலமே மனிதன் தெய்வ நிலைக்கு உயர முடியும் என்று
    கூறியுள்ளார்.

    முடிவுரை:

    மேற்கண்ட கவிதைகள், ஓரளவு நேரடியாகப் பொருள் விளங்குபவையே. இவற்றைக் காணும்போது சித்தர்கள் பாடல்களில் கூறியுள்ள கருத்துகள் இக்காலத்திற்கு ஏற்ப வேதாத்திரி மகரிஷி அவர்களின் பாடல்களிலும் உள்ளது எனத் தெளிவு பெறலாம்.

    துணை நூல்கள்:

    1. சித்தர் பெரிய ஞானக் கோவையென விளங்கும் சித்தர் பாடல்கள் – பிரேமா பிரசுரம்
    -2014
    2. வேதாத்திரி மகரிஷி , ஞானமும் வாழ்வும் – வேதாத்திரி பதிப்பகம், 2004
    3. வேதாத்திரி மகரிஷி , ஞானக்களஞ்சியம் I & II வேதாத்திரி பதிப்பகம், 2000

    ==================================================================

    ஆய்வறிஞர் கருத்துரை (Peer Review)

    சித்தர் பாடல்களோடு வேதாத்திரி மகரிஷி அவர்களின் பாடல்களை ஒப்பிட்டு எழுதப்பட்ட இக் கட்டுரை, சித்தர்கள் கூறிய உடல், மனம் ஆகிய சிந்தனைகளோடு வேதாத்திரி மகரிஷியின் சிந்தனைகள் எவ்வாறு பொருந்திச் செல்கின்றன என்பதை எடுத்துரைப்பதாக அமைகிறது. விரிவாகப் பலநிலைகளில் ஆராயப்பட வேண்டிய கருத்துகளை இக்கட்டுரை உள்ளடக்கி இருந்தாலும் பக்க வரையறைக்காக சுருக்கமாக எழுதப்பட்டுள்ளது. இருவேறு காலங்களில் வாழ்ந்த மனிதர்களின் சிந்தனைகள் எவ்வாறு ஒத்துப் போகின்றன என்பதை எடுத்துரைக்கும் விதமாக எழுதப்பட்ட இக்கட்டுரை, ஆய்வுக் கட்டுரையாக விரியும் நிலையில் பயனுள்ளதாக அமையும். முடிவுரையில் ஆய்வின் முடிவுகள்  தொகுத்துச் சொல்லப்பட்டிருக்கலாம்.

    Share