Blog

  • 2013 ஆண்டு முடிவுக்குள் பரிதியிலே துருவ மாற்றம் நிகழ்ந்து விடலாம் .. !

    Sun's Pole Reversal

     

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா 

    http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=34gNgaME86Y

     [The Sun’s Magnetic Field is About to Flip by NASA ]

    http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=y3_vW5yrNek

    [ Hidden Magnetic Portals Around the Earth ]

    http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=6j4bl57D_1U

    [ Solar Max Double Peaked ]

    பதினோர் ஆண்டுகட்கு ஒருமுறை

    பரிதியின் காந்த துருவங்கள்

    மீண்டும் மீண்டும்

    மாறி விடுதில் தவறுவது இல்லை !

    சூரிய முக வடுக்கள் பெருகி

    உச்சமாகி மாறும் துருவங்கள் !

    பரிதிப் புயல்கள் பாய்ந் தடிக்கும் அப்போது !

    பூமியின் சூழ்வெளி மண்டலத்தை

    அலை அலையாய்த் தாக்கும்

    ஒளித்துகள்கள் !

    மின்னியல் நுட்பக் கருவிகள்

    தன்னியல்பை   இழக்கும்

    சுற்றும் துணைக் கோள்களில் ! பரிதி

    வடுக்களின் காந்தப் புயல்கள்

    நடுங்க வைக்கும் பூமியை  !

    குவல யத்தின் உட்கருவும்  அதிரும் !

    அவல நிலை ஏற்படப்

    பூதளம் தோளசைத்து மேளம் போல்

    தாளமிடும் !

    கடல் பொங்கிச் சுனாமி படை எடுக்கும் !

    எரிமலைப் புண் புரையோடி

    ஆறாக ஓடும் அக்கினிக் குழம்பு !

    சூறாவளிப் பேய் மழை அடிக்கும் !

    துக்க வினைகள் என்ன நேரும், எப்படி நேரும்

    எக்கணம் நேருமென்று

    எந்த விஞ்ஞானியும் அறியார் !

    +++++++++++++++++++++++++++

    Corona Mass Ejection

    “பரிதியில் துருவம் முனைநோக்கி நகரும் போது தற்போதுள்ள எதிர்த்துருவத்தை மெதுவாய் அழிக்கிறது.   காந்த தளம் பூஜியமாகி, பிறகு எதிர்த்துருவமாய்த் துள்ளி எழுகிறது.   அது கடற்கரையில் அலை எழுச்சி [Tide] வருவது போலும், அகல்வது போலும் தெரிகிறது.  ஒவ்வோர் அலை அடிப்பும் சிறிதளவு மிகையான நீரைச் சேர்ப்பது போல், முடிவில் முழுத் துருவ மாற்றம் நிரம்பி நிகழ்கிறது.   அதனால் புறக்கோளான பூதக்கோள் வியானிலும் பெரும் புயல்கள் எழுகின்றன !  சனிக்கோளில் கூடத்  துருவமுனைத் தோரணங்கள் [Auroras] தோன்றுகின்றன !”  [2013 நவம்பர் முதல்வாரம், பிலிப்பைன்ஸ் தீவுகளில்  அடித்த கோரச் சூறாவளிப் பேய்மழையும் இதனால் ஏற்பட்டதா என்று நாம் சிந்திக்கலாம்].

    டாடு ஹோக்சீமா,  [சூரிய பௌதிக விஞ்ஞானி, ஆளுநர், ஸான்ஃபோர்டு வில்காக்ஸ் பரிதி ஆய்வகம்]

    “பரிதியில் நிகழ்ந்து கொண்டிருக்கும் துருவமாற்றத்தில் ஓர் விந்தையான விளைவு என்ன வென்றால், பரிதியின் பாதிக் கோளங்கள் [Hemispheres]  வெவ்வேறு வீதத்தில் மாறி வருகின்றன !   இவ்வாண்டு [2013] வேனிற் காலத்தில் வடபுறக் கோளம் துருவத்தை மாற்றியது.  ஆனால் தென்புறக் கோள் துருவம் இனிமேல்தான் ஆண்டு முடிவுக்குள் மாறும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.”

    டாடு ஹோக்சீமா,  [சூரிய பௌதிக விஞ்ஞானி, ஆளுநர், ஸான்ஃபோர்டு வில்காக்ஸ் பரிதி ஆய்வகம்]

    Sun's pole change 2013

    சூரியனில் ஒரு பெரும் நிகழ்ச்சி நேரப் போகிறது.  நாசா உதவி செய்து இணைந்துழைக்கும் விண்ணோக்கு ஆய்வகங்கள் அனுப்பிய அளவீடுகளின்படி, பரிதியின் பரந்த காந்த தளத்தில் துருவ மாற்றம் வெகு சீக்கிரம் நிகழப் போகிறது !   அதாவது இன்னும் 2 மாதங்களுக்குள் இம்மாற்றம் நேரப் போவதுபோல் தெரிகிறது. இந்த மாறுதல் பூமி உட்படச் சூரிய மண்டலக் கோள்களில் அதிர்வலைகளைப் பரப்பிடும். அதாவது பதினோர் ஆண்டுகட்கு ஒருமுறைப் பரிதியின் காந்த துருவங்கள் மாறுகின்றன.  சூரிய வடுத்தோற்றச் சுழற்சியின் உச்சியில், பரிதியின் உட்கருக் காந்த ஜெனனி   [Sun’s Inner Magnetic Dynamo]  தன்னை நேரியக்கி, ஒருமைப் படுத்திக் கொள்கிறது.   இந்த மாற்றம் துருவச் சுழற்சி 24 இன்  மையத்தில் உண்டாகும்.

    டாடு ஹோக்சீமா [Todd Hoeksema, Solar Physicist, Stanford University]  [August 7, 2013]

    சூரிய காந்தசக்தி பலவீனமாகிப்  பூஜியமாகி, எதிர்த் துருவமாகி மீண்டும் வலுப் பெறும்.   இது பரிதியில் நேரும் இயல்பான சுழற்சி நடப்பு.   பரிதியின் வட துருவம் ஏற்கெனவே தன் சின்னத்தை மாற்றிக் கொண்டது.    இப்போது தென் துருவம் தன்னை மாற்றிக் கொள்வதில் விரைவாய்  முனைந்துள்ளது !  சீக்கிரம் இரு துருவங்களும் திருப்பமாகி, அடுத்த பாதி, பரிதி உச்சம்  [Solar Max]  பூர்த்தியாகும்.

    பிலிப்ஸ் செர்ரர்  [Philips Scherrer,  Solar Physicist, Stanford University]  

     

    Solar Activity

    2013 ஆண்டு முடிவுக்குள் பரிதியின் துருவ மாற்றம் எக்கணமும் நிகழலாம் !

    வெகு சீக்கிரம் பூமியைச் சுற்றியுள்ள, புலப்படாத பேரளவு காந்த தளங்கள்,  துகள்களின் கதிர்வீச்சு, மற்ற பெருங் கோள்களின் பண்புகளும் பரிதியின் துருவ மாற்றத்தால் மாறப் போகின்றன.   குறிப்பாக சூரியனின் துருவ காந்த தளமும், வடதென் துருவங்களும் திசை மாற்றம் அடையும்.   இந்தத் திருப்பம் பரிதி உச்சத்தில் [Solar Maximum] நிகழும்.   அந்த உச்ச நிலையில் சூரிய வடுக்கள் [Sun Spots], தீ நாக்குகள்   [Flares],  பிழம்பு நிறை வீச்சுகள் [Corona Mass Ejections (CME)] ஆகியவற்றின் இயக்கம் மிகையாய் இருக்கும்.   அந்தத் துருவச் சுழற்சி மாற்றம் 11 ஆண்டுக்கு  ஒருமுறை மீள்கிறது.   ஆனால் அம்மாற்றம் மெதுவாக நிகழ்கிறது.  முழுமாற்றம் முடிய  கூடியவரை 18 மாதங்கள் கூட நீடிக்கலாம்.   அப்போது சூரிய துருவங்களின் காந்த தளம் கீழிறங்கி பூஜியமாகி எதிர்த்திசையில் மீண்டும்  உருவாகிறது.

    சில மாதங்களுக்கு முன் [2013  ஆண்டு வேனிற் காலத்தில்] பரிதியின் வடதுருவம் ஏற்கனவே தன்னை மாற்றிக் கொண்டது.  ஆனால் இன்னும் தென்துருவம் இதுவரை தன்னை மாற்றிக் கொள்ள வில்லை.   அந்த நிகழ்ச்சியும் 2013 முடிவுக்குள் எக்கணமும் நேரலாம் என்று எதிர்பார்க்கப் படுகிறது.    அப்போது பரிதியிலிருந்து 10,000 கி.மீ. அடர்த்தியுள்ள மின்னியல் துகள்கள் [Electrically Charged Particles] மில்லியன் கணக்கான கி.மீ. நீட்சியில் வெளியாகும்.    இந்தத் துகள்கள் வீச்சு, புளுடோ வரை பரிதி மண்டலம் முழுவதும் பரவுகின்றன.

    What happens to the Sun

     

    பரிதியின் துருவகங்கள்  மாறுவதில் நிகழ்வது என்ன ?

    சூரியனில் ஒரு பெரும் நிகழ்ச்சி நேரப் போகிறது.  நாசா உதவி செய்து இணைந்துழைக்கும் விண்ணோக்கு ஆய்வகங்கள் அனுப்பிய அளவீடுகளின்படி, பரிதியின் பரந்த காந்த தளத்தில் துருவ மாற்றம் வெகு சீக்கிரம் முடியப் போகிறது !   அதாவது இன்னும் ஓரிரு மாதங்களுக்குள் இம்மாற்றம் நேரப் போவதுபோல் தெரிகிறது. இந்த மாறுதல் பூமி உட்படச் சூரிய மண்டலக் கோள்களில் அதிர்வலைகளைப் பரப்பிடும். அதாவது பதினோர் ஆண்டுகட்கு ஒருமுறைப் பரிதியின் காந்த துருவங்கள் மாறுகின்றன.  சூரிய வடுத்தோற்றச் சுழற்சியின் உச்சியில், பரிதியின் உட்கருக் காந்த ஜெனனி   [Sun’s Inner Magnetic Dynamo]  தன்னை நேரியக்கி, ஒருமைப் படுத்திக் கொள்கிறது.   இந்த மாற்றம் துருவச் சுழற்சி 24 இன்  மையத்தில் உண்டாகும்.

    சூரிய துருவ மாற்றம் உண்டாக்கும் திரிபுகள் பரிதி மண்டலம் பூராவும் நேருகின்றன.   அவை பூதளக் காந்த தளத்தில் புதிய அலை அடிப்பை உண்டாக்கிக் கலக்குகின்றன.   எழுந்த இம்மாறுதல்கள் விண்வெளிக் காலநிலைத் [Space Weather] திரிபை  ஏற்படுத்தும்.   பூமியின் காந்த தளம், மேல் நிலைச் சூழ்வெளி  [Earth’s Magnetic Field and Upper Atmosphere] இவற்றால் பாதகம் அடையும்.  அப்போது பூமியின் துருவத் தோரணங்கள் பேரளவுக் காட்சியாய் ஒளிரும்.   அத்துடன் பூமியில் தூண்டப் பட்ட “பூகாந்த மின்னோட்டங்கள்”  [Geomagnetic Currents] மனித சமுதாயத்துக்குப் பேரளவு சீரழிவைத் தரும்.

     

     

    2013 SunspotsSolar cycles 22-23-24

     

    2013 ஆண்டு இறுதி மாதங்களுக்குள் பரிதியின் துருவங்கள் மாறப் போகின்றன.

    சூரியனில் ஒரு பெருத்த துருவ மாற்றம் சமீபத்தில் சீக்கிரம் நிகழப் போகிறது.    அம்மாதிரி துருவ மாற்றங்கள் 11 ஆண்டுகட்கு ஒருமுறை பரிதியில் நேரிடும்.   2000 -2002 ஆண்டுகளில் ஒருமுறை துருவங்கள் மாறி 11 ஆண்டுகள் கழித்து 2013 -2014 இல் அடுத்து மீண்டும் துருவங்கள் திருப்பம் அடையப் போகின்றன. சூரிய காந்தசக்தி பலவீனமாகிப்  பூஜியமாகி, எதிர்த் துருவமாகி மீண்டும் வலுப் பெறும்.   இது பரிதியில் நேரும் இயல்பான சுழற்சி நடப்பு.   பரிதியின் வட துருவம் ஏற்கெனவே தன் சின்னத்தை மாற்றிக் கொண்டது.    இப்போது தென் துருவம் தன்னை மாற்றிக் கொள்வதில் விரைவாய்  முனைந்துள்ளது !  சீக்கிரம் இரு துருவங்களும் திருப்பமாகி, அடுத்த பாதி, பரிதி உச்சம்  [Solar Max]  பூர்த்தியாகும்.

    பரிதியின் துருவ மாற்றத்தால் விளையும் விளைவுகள்: 

    சூரிய மண்டலத்தில் பரிதியில் வடுக்கள் [Sunspots] தோன்றுவதும், அவற்றின் உச்சத்தில் 11 ஆண்டுகட்கு ஒருமுறை, துருவங்கள் மாறுவதும் ஒரு பெரும் விண்வெளி  நிகழ்ச்சி விளைவாகக் கருதப்படுகிறது.  அந்த காந்த தளத் திசை மாற்ற அலை அதிர்வு, பல பில்லியன் மைலுக்கு அப்பால் உள்ள புளுடோ கோளைத் தாண்டியும் செல்கிறது !   பரிதி பௌதிக விஞ்ஞானிகள் அதைப் பற்றிச் சொல்லும் போது, தாறுமாறான காந்த மட்டத் தன்மையை -அதாவது “மின்னோட்டத் தாளை”   [Current Sheet]   குறிப்பிடுவார்.    அது சூரிய மத்திய ரேகைப் பகுதியில் மெதுவாய்ச் சுற்றும் காந்த தளம் தூண்டும் மின்னோட்டத்தைக் காட்டுவதே.   உண்டாகும் மின்னோட்டம் சதுர மீட்டர் பரப்பில் மிகச் சிறியதே.  ஆனால் மொத்தப் பரப்பளவில் மிகையானது.  

    Sun spots

    துருவ மாற்ற சமயத்தில்  “மின்னோட்டத் தாள்”  அதிர்வலைகள் மிகுந்திருக்கும்.  நமது பூமி பரிதியைச் சுற்றும் போது, இந்த மின்னோட்டத் தாளில் மூழ்கியும், மேல் எழுந்தும் வருகிறது.   இது ஒரு புறத்திலிருந்து மறுபுறம் நிகழும் போது, பூமியில் சூறாவளிப் புயல்கள் கிளம்பும்.   அப்போது அகிலக்கதிர்களும் [Cosmic Rays] பாதிப்படையும்.   காலக்ஸிகளில் அதி விரைவுச் சக்தி துகள்கள், ஒளி வேகத்தை ஒட்டிய பெரு வேகமுற்று,   சூப்பர் நோவா வெடிப்புகள் நேர்ந்திடும் !    மின்னோட்டத் தாள் அகிலக் கதிர்களுக்கு அரணாக அமைந்து திசைமாற வைத்துவிடும்.   துருவ மாற்றங்கள் முடிவடையும் போது, பரிதியின் இரு கோளங்கள் [Lower and Upper Spheres] சீரற்றுப் போய் [Out of synch] அவை முரணாய்  இயங்கும். சூரிய காந்தசக்தி பலவீனமாகிப்  பூஜியமாகி, எதிர்த் துருவமாகி மீண்டும் வலுப் பெறும்.   இது பரிதியில் நேரும் இயல்பான சுழற்சி நடப்பு.   பரிதியின் வட துருவம் ஏற்கெனவே தன் சின்னத்தை மாற்றிக் கொண்டது.    இப்போது தென் துருவம் தன்னை மாற்றிக் கொள்வதில் விரைவாய்  முனைந்துள்ளது !  சீக்கிரம் இரு துருவங்களும் திருப்பமாகி, அடுத்த பாதி, பரிதி உச்சம்  [Solar Max]  பூர்த்தியாகும். 2013 ஆண்டு முடிவில் வடுக்கள் உச்சமடைந்து துருவ மாற்றம் பூரணம் அடையும் போது அதனால் என்ன விளைவுகள் உண்டாகும், எப்படி உண்டாகும், எப்போது உண்டாகும் என்பது விளைவுகள் நிகழ்ந்த பின்புதான் தெரியும் என்று விஞ்ஞானிகள்கள் கூறுகிறார்.

    Fig 1 Increases Solar Activity

    “2011 ஆம் ஆண்டு இறுதியில் அல்லது 2012 ஆண்டு நடுவில் நேரப் போகும் பரிதியின் “24 ஆம் சுழல் நிகழ்ச்சி” எனப்படும் காந்தத் துருவத் திருப்பம் (Solar Cycle 24) 2008 ஆம் ஆண்டு மார்ச் மாதம் (Plus or Minus 6 Months) முதலிருந்தே ஆரம்பமாகும் !  2013 ஆண்டு துருவத் திருப்பம் முழுமை அடையும்.   அந்த சுழல் நிகழ்ச்சியின் தீவிரம் வலுத்ததா அல்லது பலவீனமானதா என்று விஞ்ஞானிகள் முன்னறிவிப்பதில் ஏகோபித்த முடிவின்றி பிளவு மனப்பான்மையில் உள்ளது. எவ்வளவு சீக்கிரம் தோன்றிப் புதிய சுழல் நிகழ்ச்சி பழைய தேயும் நிகழ்ச்சியை மூழ்க்கி விடுகிறதோ அத்துணைத் தீவிரத்தில் பற்பல பரிதி வடுக்கள் (Sunspots) தோன்றி வலுவான காலநிலை மாறுதல் இருக்கும் என்னும் கருத்தில் இருதரப்பாரும் ஒத்துப் போகிறார்.  புதிய சுழல் நிகழ்ச்சி முழுவதும் மலரும் போது மென்மேலும் பரிதி வடுக்கள் பெருகிப் (பூமியில்) அதிகமான பூதப் புயல்களை உண்டாக்கும்.”

    நோவா விஞ்ஞானி டக்லஸ் பைசேக்கர் முன்னறிப்பு (Douglas Biesecker NOAA) (National Oceanic & Atmospheric Administration) (ஏப்ரல் 25, 2007)

    “விண்வெளிப் பொறிநுணுக்க ஆய்வு அடிப்படையில் நமது வளரும் உளவியல் கருவிகள் உன்னத முறைகளில் அமைக்கப்படத் தேவைப்படுகின்றன.  அதற்குக் காரணம் கடந்த காலத்தை விடத் தற்போது நாம் மிகையாக விண்வெளிக் காலநிலைப் பாதிப்புகளுக்குப் பலியாகிக் கொண்டிருக்கிறோம்.”

    அமெரிக்கன் ஓய்வு வைஸ் அட்மிரல், டாக்டர் கொன்ராடு லௌடன்பாச்சர் (Conrad Lautenbacher Junior)

    Fig 1A Solar Initiation of Global Problems

    கடந்த வரலாற்றுப் பதிவுகள் பூமியின் அடுத்த துருவத் திருப்பம் வரப் போவதை வழிமொழிகின்றன.  சராசரியாக 400,000 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூதளக் காந்த துருவ மாற்றம் நிகழ்கிறது.  அந்தக் கால எண்ணிக்கைத் தாறுமாறாகவும் வேறுபடுகின்றது.  பூமியின் சென்ற துருவத் திருப்பம் சுமார் 800,000 ஆண்டுகளுக்கு முன்பு நேர்ந்திருப்பதாகப் பூதளவியல் வரலாற்றுப் பதிப்புகள் கூறுகின்றன.  துருவத் திருப்பங்கள் எதிர்பாராத கால வேறுபாடுகளில் தோன்றுபவை.  அந்தத் துருவ மாற்றம் இன்னும் சில நூற்றாண்டுகளில் வரலாம்.  அல்லது சில மில்லியன் ஆண்டுகள் கழிந்தும் ஆகலாம்.”

    ஆன்ரு பிக்கின்.

    “கடந்த ஆண்டுகளில் சில பறவை இனங்கள் துருவத் திருப்பக் காலங்களில் கடற் பயணம் புரிந்த போது திசை தடுமாறிப் போயுள்ளன !  ஒற்றைச் செல் உயிர் ஜந்துகள் (Single-celled Organisms) சில மேல், கீழ் நிலை அறிய முடியாதபடி அழிந்து போயிருக்கின்றன !  கடந்த காந்த முனை மாற்ற காலங்களில் மனித இனம் பிழைத்து எழுந்திருப்பதாகத் தெரிகிறது.  ஆகவே அடுத்து வரப் போகும் புதியத் துருவத் திருப்பத்தில் மனித இனம் பாதகம் அடையாமல் மீட்சி பெறலாம் !”

    டேவிட் குப்பின்ஸ், லீட்ஸ் பல்கலைக் கழகம், இங்கிலாந்து.

    Fig 1B Earth's Atmosphere

    நோவா விஞ்ஞானிகள் 2012 ஆண்டு பரிதிச் சுழல் நிகழ்ச்சி பற்றி முன்னறிப்பு

    பரிதியின் அடுத்த பதினோர் ஆண்டுத் துருவத் திருப்ப நிகழ்ச்சி 2008 மார்ச் மாதத்திலே ஆரம்பித்து விட்டது !  அதன் உச்ச நிலை 2011 ஆம் ஆண்டு இறுதியில் அல்லது 2012 ஆம் ஆண்டு மத்தியில் உண்டாகி இன்னும் ஓராண்டு கூட நீடிக்கலாம் என்று அமெரிக்க §சீய கடற் சூழ்வெளிக் கண்காணிப்பு ஆணையகம் (NOAA) (National Oceanic & Atmospheric Administration) ஓர் எச்சரிக்கை முன்னறிப்பை உலக நாடுகளுக்கு வெளியிட்டுள்ளது.  பரிதியின் அந்த இயற்கை துருவத் திருப்பம் “பரிதிச் சுழல் நிகழ்ச்சி 24″ (Solar Cycle 24) என்று விஞ்ஞானிகளால் குறிப்பிடப் படுகிறது.  நோவாவின் விஞ்ஞானக் குழுவினர் அந்நிகழ்ச்சி யின் எதிர்காலப் பாதக விளைவுகளைக் கணிக்கும் போது, அவை தீவிரம் மிகுந்ததா அல்லது குன்றியதா என்று கூறுவதில் ஏகோபித்த உடன்பாடில்லாது அவர்களுக்குள் பிளவு பட்ட முரணான ஊகிப்பே தெரிய வருகிறது !  மேலும் அது ஓர் கோர நிகழ்ச்சியாக இருக்கலாம் என்றும் உறுதியாக இருதரப்பாரும் கூற முடியவில்லை !

    Protection for Earth

    “நோவாவின் விண்வெளிச் சூழ்நிலை மையம் (NOAA’s Space Environment Center) அண்ட வெளிக் காலநிலை (Space Weather) விழிப்பூட்டல், எச்சரிக்கை, முன்னறிவிப்பு ஆகிய உலகப் பணிகளை மேற்கொண்டுள்ளது,  (பூமியைச் சுற்றும் விண்ணுளவிகள் மூலம்) பரிதி முதல் புவியின் கடல்வரை இரவும் பகலும் வருடம் பூராவும் கண்காணித்து வருகிறது” என்று நோவாவின் வணிகத்துறைச் செயலாளர் அமெரிக்கன் ஓய்வு வைஸ் அட்மிரல், டாக்டர் கொன்ராடு லௌடன்பாச்சர் (Conrad Lautenbacher Junior) கூறுகிறார்.

    சூரியக் கொந்தளிப்பு விளைவால் பூமியில் ஏற்படும் கோர நிகழ்ச்சிகள்

    தீவிர இயக்கப் போக்கின் சமயத்தில் பரிதியில் அசுரக் கொந்தளிப்புகள் ஏற்பட்டு அடிக்கடி “கனல் நாக்குகள்” (Solar Flares) பல மில்லியன் மைல்கள் நீண்டு அனைத்துக் கோள் களையும் தாக்குகின்றன.  சூரியத் தீ நாக்குகள், வாயுக் கனல் உமிழும் அகண்ட வெடிப்புகள் (Vast Explosions Known as Coronal Mass Ejections), அதி தீவிர ஒளித் துகள் களையும் (Energetic Photons), மின்கொடை மிகுந்து முறுக்கேறிய பிண்டங்களையும் (Highly Charged Matter) பூமியை நோக்கி எறிகின்றன.  அப்போது பூமியில் என்ன பாதிப்புகள் நேருகின்றன ?

     

    Fig 1D Satellite Communications

     

    1. பூமியின் அயனிக் கோளத்துக்கு (Ionoshere) தீ நாக்குகளால் ஓர் உதை கிடைக்கிறது.

    2. பூகோளக் காந்த தளத்திற்கு (Geomagnetic Field) தீ நாக்குகளால் ஓர் உதை கிடைக்கிறது.

    3. மின்சக்தி பரிமாற்ற இணைப்பு ஏற்பாட்டில் (Power Grid) மின்னோட்டத் துண்டிப்புகள் நிகழும்.

    4. இராணுவக் கண்காணிப்பு, ஆகாய விமானத் தொடர்பு, துணைக் கோள்கள் தொடர்பு, பூகோள இடக்குறிப்பீடு நோக்குச் சமிக்கைகள் (Global Positioning System Signals) போன்றவை தடைப்படும் !

    5 அண்டவெளிப் பயணங்களில் விண்வெளி விமானிகள் தீங்கிழைக்கும் கதிர்வீச்சுத் தாக்கப் பட்டுப் (Harmful Radiations) பாதிக்கப்படுவார்.

    6 துருவப் பகுதிகளில் செந்நிறத்திலும், பச்சை நிறத்திலும் விண்வெளியில் வேடிக்கை காட்டும் “வண்ணொளிக் கோலங்களுக்குப்” (Colourful Aurora) பேரொளி ஊட்டப்படும்.

    Sunspot Prediction of Solar Cycle 24

     

    சூரியனில் துருவத் திருப்பத்தைப் புரியும் பரிதி வடுக்கள்

    பதினோர் ஆண்டுகட்கு ஒருமுறை சூரியனின் துருவத் திருப்பத்தைத் தூண்டுபவை பரிதியின் முகத்தில் தேமல் போல் முளைக்கும் செந்நிற வடுக்களே !  இந்தப் பரிதி வடுக்களைப் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே (கி.மு. 2100) பார்த்து அறிந்தவர் சைனாவின் வானியல் ஞானிகள்.  17 ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் முதன்முதல் தன் தொலைநோக்கி மூலம் கண்டவர் இத்தாலிய வானியல் மேதை காலிலியோ.  ஆயினும் பரிதி வடுக்களை முறையாக 1826 ஆம் ஆண்டில் பதிவு செய்தவர் ஜெர்மன் விஞ்ஞானி சாமுவெல் ஹென்ரிச் சுவாபே (Samuel Henrich Schwabe)  1843 இல் அவர் உறுதியாகச் சோதித்துப் பரிதி வடுக்கள் எண்ணிக்கையில் நீச்சத்திலிருந்து உச்சத்துக்கும், பிறகு உச்சத்திலிருந்து நீச்சத்துக்கும் மாறி வருவதாகக் காட்டி பரிதிச் சுழல் நிகழ்ச்சி நியதியை முதன்முதல் உருவாக்கினார்.

    Solar field strength

    1915 இல் காலி·போர்னியா மௌன்ட் வில்ஸன் நோக்ககத்தின் அமெரிக்க வானியல் விஞ்ஞானி ஜியார்ஜ் எல்லெரி ஹேல் (GeorgeEllery Hale) பரிதி வடுக்கள் பொதுவாக இரட்டை இரட்டையாக இருப்பவை என்றும் அவை பரிதி மத்தியக் கோட்டு இணையாக (Parallel to the Sun’s Equator) இருப்பவை என்றும் எடுத்துக் காட்டினார். மேலும் இரண்டு வடுக்களும் வெவ்வேறாக நேர் எதிர்த் துருவக் காந்தத்தில் மாறி இருக்கும் விந்தையைக் கண்டு பிடித்தார்.  அடுத்த விந்தையாக பரிதியின் வடகோளப் பகுதியில் இருந்த அத்தனை இரட்டை வடுக்களும் வட திக்கை நோக்கி இருப்பதையும், தென்கோளப் பகுதியில் உள்ள இரட்டை வடுக்கள் அனைத்தும் தென் திக்கை நோக்கி இருப்பதையும் அறிவித்தார்.  அதாவது பரிதியின் துருவ முனைகளின் வடதென் திசையை நிர்ணயம் செய்பவை பரிதியின் வடுக்களே என்பது உறுதிப் படுத்தப் பட்டது !

    சராசரி 11 ஆண்டுகளுக்கு ஒருமுறை பரிதி தனது துருவ முனைகளைத் திருப்புகிறது என்பது தெளிவாக அறியப் பட்டது.  வட துருவம் தென் துருவமாகவும், தென் துருவம் தென் துருவ மாகவும் சூரியனில் தவறாமல் நிகழும் ஓர் இயற்கை நிகழ்ச்சியாக இருந்தது.  அதாவது 22 ஆண்டுகளுக்கு ஒருமுறை சுழல் நிகழ்ச்சியாக ஒரு துருவம் திசைமாறி மறுபடியும் ஒரே திசைக்கு மீண்டது.  பரிதியின் இந்தப் புதிர் நிகழ்ச்சி ஏன் அவ்விதம் ஓர் சுழல் நிகழ்ச்சியாக  மீண்டும் மீண்டும் நேருகிறது என்று விஞ்ஞானிகள் காரணம் கண்டுபிடிக்க முடியவில்லை !  அதுபோல் பூமியும் 780,000 ஆண்டுகளுக்கு முன் தனது துருவத்தின் திசையை ஏன் மாற்றியது என்பதற்கும் விஞ்ஞானிகள் காரணம் அறிய முடியவில்லை !  1645 ஆண்டு முதல் 1715 வரை பரிதி வடுக்கள் நீச்ச அளவில் (Maunder Minimum) இருந்ததை பிரிட்டிஷ் வானியல் விஞ்ஞானி வால்டர் மௌண்டர் (Walter Maunder) பதிவு செய்துள்ளார்.  பரிதியின் சுழல் நிகழ்ச்சியின் தீவிரம் பரிதி வடுக்களின் உச்ச எண்ணிக்கையைப் பொறுத்தது.  அந்த உச்ச எண்ணிக்கை அப்பகுதியில் நேரும் காந்தக் கொந்தளிப்பைக் காட்டுகிறது.  மிகையான பரிதி வடுக்கள் அப்பகுதியிலிருந்து எழும் அசுரப் புயல் அடிப்பின் தீவிரத்தைக் எடுத்துக் காட்டும்.

    Fig 1F Sunspot Build up

    பூமியில் நேரும் இயற்கைத் தீங்குகளைத் தூண்டும் காரணிகள்

    நியூட்டனின் முதல் நகர்ச்சி நியதி கூறுகிறது : “ஓர் அண்டம் முடங்கிக் கிடக்கும் அல்லது சீராகத் தொடர்ந்து செல்லும், வேறோர் வெளிப்புறத் தூண்டுதல் அதை உந்தித் தள்ளா விட்டால்.”  இந்த அரிய நியதியே நமக்கு எதிர்ப்படும் இயற்கைத் தீங்குகளைத் தூண்டும் காரணிகளைக் கூறும்.  பூமியில் திடீரென எரிமலை வெடிப்பது ஏன் ?  யாரும் அறியாமல் பூமி அதிர்ந்து பூகம்பம் உண்டாவது ஏன் ?  கடற்தள அடித்தட்டுகள் உந்தப்பட்டுக் கடல் வெள்ளம் பொங்கி அசுர வேகத்தில் சுனாமியாக மாறிக் கடற்கரைகளைத் தாக்குவது ஏன் ?  பூமிக்குள்ளே உலோகத் திரவத்துக்குள் பம்பரமாய்ச் சுழலும் இரும்பு உட்கரு உருண்டை எப்படி இவற்றை எல்லாம் இயக்கிப் பூமிக்கு மேல் எழச் செய்து மக்களுக்குத் தொல்லை கொடுத்து வருகிறது என்னும் கேள்வி நமக்கு எழுகிறது.  உட்கருவில் இந்தக் கொந்தளிப்பைத் திடீரென உண்டாக்கும் வெளிப்புறத் தூண்டுதல்களில் பரிதிப் புயல்கள் ஒரு காரணம் என்று சொல்லலாம் !  அடுத்து பதினோர் ஆண்டுகட்கு ஒருமுறை பரிதி வடுக்கள் எண்ணிக்கை பெருகிக் கதிர்வீச்சுகளோ, காந்த எழுப்புகளோ பூமியைத் தாக்குவது ஒரு காரணம் என்று சொல்லலாம் !  எல்லாவற்றுக்கும் மேலாக பூமியில் அரைமில்லியன் ஆண்டுகளுக்கு ஒருமுறை நேரும் பயங்கரத் துருவ மாற்றமும் ஒரு காரணம் என்று நாம் கூறலாம் !

    [தொடரும்]

    +++++++++++++++++++

    தகவல்: Picture Credits: NASA, JPL; National Geographic; Time Magazine, Discovery, Scientific American & Astronomy Magazines, Science Illustrated, Wikipedia & Earth Science & the Environmental Book.

    1. Our Universe – National Geographic Picture Atlas By: Roy A. Gallant (1986)

    2. 50 Greatest Mysteries of the Universe – How Did the Solar System form ? (Aug 21, 2007)

    3. Astronomy Facts File Dictionary (1986)

    4. The Practical Astronomer By Brian Jones & Stephen Edberg (1990)

    5. National Geographic – Invaders from Space – Meteorites (Sep 1986)

    6. Cosmos By Carl Sagan (1980)

    7. Dictionary of Science – Webster’s New world (1998)

    8. Physics for Poets By :  Robert March (1983)

    9. Atlas of the Skies (2005)

    10 Universe Sixth Edition By: Roger Freedman & William Kaufmann III (2002)

    11 Universe By : Roger Freedman & William Kaufmann III (2002)

    11 (a) Earth Science & The Environment By : Graham Thompson & Jonathan Turk (1993)

    11 (b)  Hutchison The Encyclopedia of Earth : Magnetism, Gravity & Heat (1985)

    12 Science Daily : Magnetic Field Reversals Illuminated By Lava Flows Study [September 26, 2008]

    13 Pure Energy System News : Earth’s Magnetic Field Reversal By : Mary-Sue Haliburton

    14 Magnetic Storm Home Page What Drives Earth’s Magnetic Field (Oct 2003)

    15 BBC News : Is The Earth Preparing to Flip ? By : David Whitehouse (March 27, 2003)

    16 Scientific American Magazine – Our Ever Changing Earth – Probing the Geodynamo By : Gary Glatzmaier & Peter Olson (September 26, 2005)

    17 Solar Pole Shift & Pole Reversal in 2012 ( http://newsvote.bbc.co.uk/mpapps/pagetools ) By : Patrich Geryl (May 19, 2009)

    18 Science at NASA – The Sun Does a Flip (February 15 2001)

    19 India Daily Technology Team (Aug 8, 2005)

    20 NASA Claims Sun Polar Shift Due in 2012 (Dec 9, 2005)

    21 Earth Wobbles Linked to Extinctions (Oct 11, 2006)

    22 The Sun’s Magnetic Cycle By Dr. David Stern (April 12, 2007)

    23 Earth’s Magnetic Reversals & Moving Continents By Dr. David Stern (Feb 23, 2008)

    24 The Sunspot Cycle By Mitzi Adams (June 6 2009)

    25 ECTV News Letter – Has The Solar Magnetic Pole Reversal Already Begun ? By : Mitch Battros (Oct 10, 2005)

    26 New Sunspot Activity Threatens Mobile Phone Networks (Jan 7, 2008)

    27 Sun’s Polar Reversal 2012 – The Next Magnetic Polar Shift & Consequences

    28 http://www.thinnai.com/?module=displaystory&story_id=40906041&format=html (Earth’s Pole Reversal)

    29 National Geographic – Sun Bursts By Curt Suplee (July 2004)

    30 American National Oceanic & Atmospheric Administration (NOAA) Forecast – Next Solar Storm Cycle 24 Will Start Late NOAA Website : http://www.noaa.gov & NOAA’s Space Environment Center: (April 25, 2007)

    31 Solar Cycles & the Earth’s Weakening Magnetic Field By Alexi Ansari (April 23, 2009)

    32   http://lynleahz.com/2013/08/06/nasa-confirms-suns-magnetic-field-is-about-to-flip/  [August 6, 2013]

    33  http://dddusmma.wordpress.com/2013/07/12/sun-spots/  [July 12, 2013]

    34  http://survivingthepoleshift.com/tag/solar-maximum/  [July 24, 2013]

    35  http://www.npr.org/blogs/thetwo-way/2013/08/08/210184749/nasa-sun-getting-ready-for-a-field-flip  [August 8, 2013]

    36  http://www.spacedaily.com/reports/The_Suns_Magnetic_Field_is_about_to_Flip_999.html [August 7, 2013]

    37  http://www.universetoday.com/103960/   [August 6, 2013]

    38  http://science.nasa.gov/science-news/science-at-nasa/2013/05aug_fieldflip/  [November 15, 2013]

    39.  http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=6j4bl57D_1U

    40  http://blogs.scientificamerican.com/life-unbounded/2013/10/22/dont-panic-its-just-a-solar-field-reversal/  [October 22, 2013]

    ******************

    S. Jayabarathan [jayabarathans@gmail.com]  (November 16, 2013)

    http://jayabarathan.wordpress.com/

    YouTube – Videos from this email
    Share
  • த்ரில்

    கோதை நாராயணன் 

    “ஏய்  உன் பட்டிக்காட்டு மச்சான் வந்துட்டாண்டி ….”

    “வாட் நான்சென்ஸ்… இன்னொரு தடவை என்னோட மச்சான்னு சொன்னீங்க நடக்கிறதே வேற….”

    “ஏண்டி நீ ப்ரொபசர் பொண்ணு அப்டிங்கறதுக்காக ஒன்லி ஃபார் சிட்டி பாயிஸ் அப்டின்னு ரூல் இருக்காடி… அவன் உன் சொந்த காரன் வேற…. “தோழிகள் மேலும் கலாய்க்க…

    “ஐயோ…. ஸ்டாப் திஸ் சில்லி திங்… ரித்திகா உண்மையிலேயே டென்ஷன் ஆக ஆரம்பித்தாள் .

    அவனும் அவன் மூஞ்சியும், ஐய…பேரப் பாரு துரைப்பாண்டி… அம்மாவை சொல்லணும் என்னமோ நன்றி கடனாம், அதுக்கு வேற கல்லூரியில் சீட் வாங்கி கொடுத்திருக்கலாமே… இப்டி நான் படிக்கிற,அதுவும் என் டிபாட்மெண்டெ… ஐயோ ஒவ்வொரு நாளும் ப்ரண்ட்ஸ் அடிக்கிற கொட்டம் தாளல… இதுக்கு ஒரு முடிவு கட்டணும்… தீர்மானித்தபடியே வகுப்புக்கு சென்றாள் .

    ப்ரொபசர் மல்லிகாவின் புதல்வி ரித்திகா, சிறு வயதிலேயே ரித்திகாவின் அப்பா பரலோக பதவி அடைந்து விட்டதால், தனி பெண்ணாக போராடி முன்னிலைக்கு வந்தவர் மல்லிகா. அப்படி அவர் கஷ்டப்பட்ட காலங்களில், மேல்படிப்பிற்கு பணம் கட்ட வழி இல்லாத ஒரு காலகட்டத்தில் பணம் கொடுத்து உதவியவராம் மயில்சாமி தாத்தா. அதற்கு நன்றி கடனாக தான் அவருடைய மகன் வழி பேரன் துரைப்பாண்டிக்கு, தான் வேலை பார்க்கும் அதே கல்லூரியில் சீட் வாங்கி கொடுத்தார். கிராமத்திலேயே  பிறந்து வளர்ந்து, பள்ளிப் படிப்பையும் முடித்தமையால் துரைப்பாண்டி இங்கு நகரத்திலேயே பிறந்து வளர்ந்து நுனி நாக்கு ஆங்கிலம் பேசும் தன் சக தோழர்களுக்கு நடுவில் அல்லோலபட்டுக் கொண்டிருந்தான்.

    மறுநாள் கல்லூரி சுற்றுலா செல்ல அனைவரும் ஆயத்தப்பட்டு கொண்டு இருந்தார்கள். அனைவர் மனதிலும் உற்சாகமும், குதூகலமும் …..

    ரித்திகாவும் தன் தோழிகளுடனும்,தோழர்களுடனும் அமர்க்களப்படுத்தி கொண்டு இருந்தாள். ப்ரொபசர் என்பதால் மல்லிகாவும் வேறு சில பேராசிரியர்களும் என ஒரு பெரிய படையே கிளம்பியது. மாணவர்கள் தனியாகவும், மாணவிகள் தனியாகவும் என இரண்டு பேருந்துகள் கிளம்பின .

    மல்லிகாவின் பைகளை கொடுக்க வந்த ரித்திகா மாணவர்களின் பேருந்திலேயே இருக்கும்படி ஆயிற்று. ரித்திகாவுக்கு அம்மாவின் மேல் ஒரே கோபம் .

    “போம்மா ….உன்னால தான் லேட் …”

    “சரி இப்போயென்ன ரித்தி… அடுத்த நிறுத்தத்தில் நீ இறங்கி மாறிக்கோ….”

    அவருக்கு தெரியாது அல்லவா அடுத்த நிறுத்தம் வரப்போவதே இல்லை என்று.

    “ப்ச்” என சலித்தபடியே தன் மாணவ தோழர்களுடன் போய் அமர்ந்து கொண்டாள் .

    அனைவரும் கை தட்டி பாட்டு பாடிய படியே பேருந்து சென்று கொண்டிருந்தது.

    “ஏலே …”

    “ஏ …துரைபாண்டி …!” மாணவர்கள் கிண்டலாக இப்படி தான் அழைத்து கொண்டிருந்தார்கள். இங்கும் அங்குமாக அவர்கள் இழுப்புக்கெல்லாம்  சிரித்தபடியே சென்று கொண்டிருந்தான்.

    ரித்திகாவுக்கு தமாசாக இருந்தது அவனைப் பார்க்க……கை தட்டி துரையை அழைத்தாள்.

    வேகமாய் வந்து நின்றான்.

    “போய் …பின்னாடி ராஜேஷ் கிட்ட வாட்டர் பாட்டில் வாங்கிட்டு வா ….”

    “சரி”யென …வெட்கமாய் சிரித்தபடியே சென்றான்.

    “கொடுமைடா சாமி” என முணுமுணுத்துக் கொண்டாள்.

    போன வேகத்தில் இல்லையென வந்தவனை …ப்ச் … என எரிச்சலாய் முறைத்து விட்டு தானே எழுந்து பின் சீட்டிற்கு சென்றாள்.

    ரித்திகாவை கண்டதும் சில ஆல்ஹகால் பாட்டில்கள் மறைக்கப்பட்டன…

    “என்ன ரித்தி ….?”

    “இல்ல …நானும் அப்போதிலிருந்து பார்த்துக்கிட்டு இருக்கேன், எல்லோரும் அப்பப்போ பின்னாடி சீட்டுக்கு வந்துட்டு போறீங்களே… அதான் நானும் வந்தேன்…”

    அசட்டு சிரிப்பு சிரித்தபடியே “இதையெல்லாம் கண்டுக்காத ரித்தி… உனக்கு தெரியாதாயென்ன?” — இது ராஜேஷ்.

    மறைக்கப்பட்ட பாட்டில்களை பார்த்த ரித்திகா, “ஐயோ! கர்மம் கர்மம்! ஏண்டா, இன்னும் நாம பார்க்க வேண்டிய இடத்தை ரீச் பண்ணவே இல்ல … அதுக்குள்ளவா ?”

    “இதெல்லாம் ஒரு த்ரில் ரித்தி… காலேஜ் டூர் அதிலும் இறுதி ஆண்டு ஒரு த்ரில் வேண்டாமா?” — இது ரவி.

    “ஒவ்வொரு நிமிஷத்தையும் என்ஜாய் பண்ணனும் ரித்தி” — இது ரிஷி.

    “அங்க முன்னாடி உங்க மாம் பிளஸ் மேம் இருக்கிறதால இப்டி பின்னாடி வந்துட்டு போறோம்” –அரவிந்த் கிண்டலாக.

    “ம்….அதுவரைக்கும் சந்தோஷம்” எனக் கூறி சிரித்தபடியே ரித்திகா தன் இருக்கைக்கு வர திரும்பிய கணப்பொழுதில் அது நடந்தது.

    எதிரே வந்த லாரியின் மேல் இவர்களது பேருந்து மோதுவதிலிருந்து காப்பாற்ற அருகிலிருந்த மரத்தில் லேசாக மோதி டிரைவர் வண்டியை நிறுத்த, நின்று கொண்டிருந்தமையால் ரித்திகாவால் சுதாரிக்க முடியாமல் போக, உடைந்த கண்ணாடி ஒன்று அவள் தோளில் பலமாக பதம் பார்க்க, இரத்த வெள்ளத்தில் மயங்கினாள் ரித்திகா.

    கூக்குரல் எடுத்து முதலில் கத்தி பின் நிலைமையை உணர்ந்த அனைவரும் படபடவென இறங்கினார்கள். மாணவர்கள் என்பதால் வேக வேகமாக செயல்பட்டார்கள்.

    மல்லிகா சத்தமாக அழ ஆரம்பித்தார் .”ஐயோ ரித்தி… கண்ணை முழிச்சு பாருடி…”

    “மேம்… டோண்ட் ஒரி மேம்… பக்கத்துல தான் ஹாஸ்ப்பிடல்… சீக்கிரம் போய்டலாம்”

    “டே ய்! வாங்கடா சீக்கிரம்”

    ஆம்புலன்ஸ் வரவழைக்கப் பட்டு அனைவரும் ஹாஸ்ப்பிடல் வந்து சேர்ந்தனர்.

    எமர்ஜென்சி பிரிவுக்கு அனுமதிக்கப்பட்ட ரித்திகாவை சோதித்து விட்டு வெளியே வந்த டாக்டரை அனைவரும் சூழ்ந்தனர்.

    அழுதபடியே மல்லிகா,”டாக்டர் ……..?”

    “நத்திங் டு ஒர்ரி… மயக்கம் இன்னும் கொஞ்ச நேரத்துல தெளிஞ்சுடும்… ஒரு மைனர் ஆபரேஷன் தோளில் பண்ணனும்… இரத்தம் ரொம்ப வெளியேறி இருப்பதால் உடனடியாக இரத்தம் தேவை… அதற்கு பிரச்சனை இருக்காது இல்​லையா…?”

    “பிரச்சனை இல்லை டாக்டர் அதற்கு என் மாணவர்கள் இவ்ளோ பேர் இருக்கிறார்கள் …” என திரும்பி தன் மாணவர்களை பார்த்தார்.

    ‘த்ரில்லில்’ ஈடுபட்டிருந்த அத்தனை மாணவர்களும் மல்லிகாவை எதிர் கொள்ள முடியாமல் திகைத்து பின்வாங்க, “நான் தருகிறேன் டாக்டர் என் இரத்தத்தை” எனக் கூறிய துரைப்பாண்டியின் குரல் மயக்கதிலிருந்த ரித்திகாவின் காதுகளுக்கு உயிராக ஒலித்தது.

    Share
  • சச்சின் டெண்டுல்கர் – இந்தியக் கிரிக்கெட்டின் ஒரு சகாப்தம்

    சு. ரவி

    SACHIN TENDULKAR

    இச்சிறு  பாலகன் தான்

    இந்திய  நாட்டைப் புகழின்

    உச்சியில் ஏற்றிவைத்தான்

    உண்மையில் கிரிக்கெட்டுக்கே

    அச்சினைப் போலே நிற்பான்;

    ஆணிவேர் போலே ஆவான்

    சச்சினைப் போலே இங்கே

    சகாப்தமாய் நிற்பார்  யாரே?

     

    எத்தனை சதங்கள்? மொத்தம்

    எத்தனை  ஆயிரங்கள்?

    எத்தனை களங்கள் ? மற்றும்

    எத்தனை சாதனைகள்?

    அத்தனை  உயரம் கண்டும்

    அணுவள வேனும் கருவம்

    சச்சினைத் தொட்டதாகச்

    சரித்திரம் சொன்ன தில்லை!

     

    சாதனை நிகழ்த்தும் போதும்

    சட்டென வீழ்ந்த போதும்

    சோதனையாக நடுவர்

    சொதப்பிடும் தீர்ப்பின்போதும்

    யாதொரு சலனம் தோன்றா

    ஓவியத் தலர்ந்த பூவாய்

    மேதகு கம்பன்  வாக்கின்

    மெய்ப்பொருள் போலே நிற்பான்!

     

    கறங்கெனச் சுழலும்  மட்டை

    கையிலே தாங்கும் வீரன்

    விறல்மிகும் ஆட்டம் கண்டு

    வியந்தவர், பந்து வீச

    மறந்தவர், களத்தில் நிற்க

    மருண்டவர், பந்து வீச்சைத்

    துறந்தவர்,துரத்திசென்று

    துவண்டவர்-எத்தனைபேர்?

     

    நிருத்தனப்  பாதம்  வைத்து

    நீவிளையாடி உந்தன்

    குருத்திளம்   தோள்கள் மீது

    குன்றெனச் சுமந்தாய்! உனபோல்

    ஒருத்தரும் இருந்த தில்லை!

    ஓய்வினை விருப்பம் கொண்டாய்!

    வருத்தமாய்  விழிநீர் சோர

    விடைகொடுக் கின்றோம்! வாழி!

    Share
  • பட்டினத்தடிகளின் பாடல்கள் – 14ம் பகுதி

    தஞ்​சை ​வெ. ​கோபாலன்

    உடைக்கை யொருக்கி உயிரை அடைத்து வைத்த

    சடக்கைச் சதமென்று சார்ந்து அங்கு இறுமாந்தை
    உடைக்கைத் தகர்த்தே உயிரை யமன் கொள்கையிலே
    அடக்கமாய் வைத்த பொருள் அங்கு வரமாட்டாதே. 1.

    புலால் உடலைக் காற்றால் நிரப்பி மூடி, அதில் உயிரை அடைத்து இந்த உடலை நிரந்தரமானது என்று எண்ணி இறுமாப்போடு அதில் குடியிருந்தாய்; பிறகு எமதர்மன் வந்து இந்த உடலில் நிரம்பியிருந்த உயிரைப் பறித்துக் கொண்டு போகின்ற காலத்தில், நீ அதுநாள் வரை சேர்த்து மறைந்து வைத்திருந்த பொருட்களும், செல்வங்களும் உன்கூட வராது என்பது உனக்கும் தெரியும் அல்லவா, அப்போது என்ன செய்வாய்?

    தித்திக்கும் தேனைத் தெவிட்டாத தெள்ளமுதை
    முத்திக்கு வித்தான முப்பாழைப் போற்றாமல்
    பற்றிப் பிடித்து இயமன் பாசத்தால் கட்டும் வண்ணம்
    சுற்றியிருக்கும் வினை சூழந்தனையே நெஞ்சமே. 2.

    ஏ மனமே! சொல்லச் சொல்லத் தெவிட்டாத தேனைப் போன்றது சிவனுடைய ஐந்தெழுத்து மந்திரம். அப்படிப்பட்ட தித்திக்கும் தெவிட்டாத தேனை ருசிக்காமல், தேவர்கள் அருந்தும் அமிழ்தத்தையொத்த *முப்பாழாம் அதிமுக்கிய தத்துவங்களை வணங்கிப் போற்றிப் புகழாமலும் தலை வணங்காமலும், எமன் வந்து உயிரைத் தான் பாசக்கயிற்றால் கட்டிப் பற்றி இழுக்கும்போது உன்னைச் சுற்றியிருக்கும் தீவினைகள் எனும் காட்டில் அழுந்திக் கிடக்கின்றனையே.

    (*முப்பாழாவன மாயைப் பாழ், போதப்பாழ், உபசாந்தப்பாழ் ஆகியன. போதப்பாழ் என்பது ஆன்ம அறிவு அகல விளங்குதல், உபசாந்த நிலையில் பரவெளியில் இருத்தல் உபசாந்தப் பாழ். மாயைப் பாழில் தத்துவங்கள் தூய்மை அடையும்; போதப் பாழில் ஆன்மா தூய்மை அடையும்; காரிய காரண உபாதைகள் நீங்குவதால் உபசாந்தம் உண்டாகும் என்கிறது “திருமந்திரம்”. ‘தத்வமசி’ நீ அதுவாகிறாய் எனும் வாக்கின் பொருளை விளக்கும் விதத்தில் அமைந்த கருத்து. தத்+துவம்+அசி இவை ‘இரண்டு அல்லாதது” அதாவது பரமாத்மாவும் ஜீவாத்மாவும் வேறு வேறானவை அல்ல என்பது. இதன் பொருள் “நீ அதுவாகிறாய்”7

    மாயப்பாழும், சீவப்பாழும், உபசாந்தப் பாழும் நிலைபெற்ற பரனின் அறிவுக்கு அப்பாற்பட்ட முப்பாழ் என்கிறது. சிவசக்தியான அருளில் ஜீவன் ஓங்கி நிற்கும் மூன்று பாழ்நிலைகளாம். அத்தகைய தூய்மையான சிவ சொரூபத்தில் அடங்கி நிற்பதே ‘தத்வமசி’ எனும் வாக்கியத்தின் முடிவாகும்.)

    அஞ்செழுத்தாய் எட்டெழுத்தாய் ஐம்பத்தோ ரட்சரமாய்ப்
    பிஞ்செழுத்தாய் நின்ற பெருமானைப் போற்றாமல்
    வஞ்சகமாயுற்ற முலை மாதவர் வலைக்குள்ளாகிப்
    பஞ்சரித்துத் தேடிப் பாழுக் கிரைத்தோமே. 3.

    ஒப்புயர்வற்ற எழுத்து பஞ்சாட்சரம் எனும் ஐந்தெழுத்து மந்திரம்; எட்டு அட்சரம் கொண்டது அஷ்டாட்சரம்; ஐம்பத்தோரு அட்சரமாகவும், சக்தியின் பீஜாக்ஷரமாகவும் விரிந்து பரவியுள்ள நம் பரமேஸ்வரனைத் துதித்துப் போற்றாமல் வஞ்சக மனமும், மயக்கும் மார்பகமும் கொண்ட பெண்களின் மாயா மோக வலையில் அகப்பட்டு அவர்களிடம் அடிமைப்பட்டுக் கீழ்ப்படிந்து மன்றாடி நின்று காலத்தை வீணடித்தோமே.

    (அஞ்செழுத்து என்பது “சிவாயநம” எனும் மந்திரம். எட்டெழுத்து என்பது “ஓம்; ஆம்; அவ்வும்’ என்பதாகும், இதுவும் சிவாயநம: என்பதாகும். ஐம்பத்தோரு அட்சரம் என்பதை பிஞ்செழுத்து, சத்தியாக்ஷரமாகிய வகரம் ஆகியவைகளை குரு மூலமாக உபதேசம் பெறுதல் வேண்டும் என்கின்றனர் பெரியோர்)

    அக்கறுகு கொன்றை தும்பை அம்புலியும் சூடுகின்ற
    சொக்கர் திருத்தாளைத் தொழுது வணங்காமல்
    மக்கள் பெண்டிர் சுற்றமுடன் வாழ்வை மிகநம்பி அன்பாய்
    எக்காலமும் உண்டென எண்ணினையே நெஞ்சமே. 4.

    ஓ என் நெஞ்சே! சிவனுக்கே உரிய ருத்திராக்ஷ மாலையும், கொன்றை மலர்களையும், தும்பைப் பூக்களையும், பிறைச் சந்திரனையும் தன் முடியில் சூடிய எம்பெருமான் சொக்கநாதரின் திருவடிகளே சரணமென்று விழுந்து வணங்காமல், நீ இன்னாள் வரை என்ன செய்து கொண்டிருந்தாய்? நான் எனது எனும் ஆணவ மலத்தோடு கூடிய உறவு முறையில் என் மக்கள், என் மனைவி, என் சுற்றம் என்று இந்த வாழ்வு என்னவோ நிரந்தரமானது என்று நம்பிக்கொண்டு இந்த உறவுகளோடு எப்போதும் இப்படியே மகிழ்ச்சியோடு உறவாடிக் கொண்டிருக்கலாம் என்று நினைத்தாயே, சரிதானா?

    ஆண்ட குருவின் அருளை மிகப் போற்றி
    வேண்டும் கயிலாய வீட்டு வழிபாராமல்
    பூண்ட குழல் மாது நல்லார் பொய் மாய்கைக்கு உள்ளாகித்
    தூண்டிலில் அகப்பட்டுத் துடி கெண்டை யானேனே. 5.

    உலகத்து உயிர்களையெல்லாம் அருள்பாலித்து ஆண்டு அனுக்கிரகம் செய்யும் பரமகுருவான சிவபெருமானின் பேரருளைப் போற்றி வழிபட்டு அவனடியில் வீழ்ந்து வீடுபேறு பெற்று கயிலாயம் செல்ல வழி காணாமல், வாசமலர்களை அணிந்த அழகிய மாதரார்தம் பொய்மை மயக்கத்துக்கு ஆட்பட்டுத் தூண்டிலில் மாட்டிக் கொண்ட கெண்டை மீனைப் போல துடிக்கலானேனே, என் செய்வேன்.

    ஏணிப் பழுவாம் இருளை அறுத்தாள முற்றும்
    பேணித் தொழுங் கயிலை பேறு பெறமாட்டாமல்
    காணவரும் பொருளாய்க் கண் கலக்கப்பட்டு அடியேன்
    ஆணியற்ற மாமரம் போல் ஆகினனே நெஞ்சமே. 6.

    ஓ எந்தன் மனமே! கேள். ஏணிப் படிகளைப் போல ஒன்றன் மேலொன்றாக மனத்தில் ஆணவ இருள் வளர்ந்து கொண்டிருக்க, அவற்றை முழுவதுமாக அறுத்தெறிந்து விடுபட்டு கயிலை நாதனாம் சிவபெருமானை தொழுது அடி பணிந்து பெரும்பேற்றைப் பெறமுடியாமல், உயிரையும், சேர்த்து வைத்த செல்வம் முதலான பொருளையும் நிலையானது என்ற ஆணவத்தில் அடியவனான நான் இப்போது ஆணிவேர் அறுந்த மாமரம் போல ஆகிவிட்டேனே என் செய்வேன்.

    கோத்துப் பிரகாசம் கொண்டு உருகி அண்டமெல்லாம்
    காத்தபடியே கயிலாயம் சேராமல்
    வேற்றுருவப் பட்டு அடியேன் வெள்ளம் போல் உள்ளுருகி
    ஏற்றுங் கழுவிலிருந்த பணமானேன். 7.

    மனத்தில் அருள் ஒளியுண்டாகி இவ்வண்டங்களையெல்லாம் தன் கருணையினால் காத்தருளும் கயிலாசவாசியான சிவபெருமானின் திருவடிகளே சரணமென்று சென்றடையாமல், மனவேறுபாட்டோடு அடியவனான நான் மனத்தினுள் வருந்தி கலக்கமடைந்து கழுவில் ஏற்றப்பட்ட பிணம்போல காட்சி தருகின்றேனே.

    நிலைவிட்டு உடலை உயிர் நீங்கி அகலுமுன்னே
    நிலை தொட்ட வேடன் எச்சில் தின்னானைச் சேராமல்
    வலைபட்டு உழலுகின்ற மான்போல் பரதவித்துத்
    தலைகெட்ட நூலதுபோல தட்டழிந்தாய் நெஞ்சமே. 8.

    ஓ என் நெஞ்சே! ஊர்மெச்ச வாழ்ந்த உயர்ந்த நிலையில் இருந்த இந்த பூதவுடலைவிட்டு உயிரானது பிரிந்து செல்லும் முன்பாகவே, காளத்தி வேடனாம் கண்ணப்பன் எச்சிற்படுத்திக் கொடுத்த உணவை உண்ட அந்த சிவபிரான் கழல்களைச் சேர்ந்து உய்ய வழிகாணாமல், இப்படி வலைக்குள் சிக்கிய மான் போல பரிதவித்துத் நூற்கண்டின் நூல் நுனி எது என்றறியாமல் துழாவிடும் மனிதனைப் போல் தவிக்கின்றேனே.

    முடிக்குமயிர்ப் பொல்லா முழுக் குரம்பை மின்னாரின்
    இடைக்கு நடைக்கு இதங்கொண்ட வார்த்தை சொல்லி
    அடிக்கொண்ட தில்லை வனத்து ஐயனே நாயனையேன்
    விடக்கை இழந்த மிருகமது வானேனே. 9.

    எனையாளும் தில்லையில் நடம் பயிலும் நடராசப் பெருமானே! கேவலம் நான் ஒரு நாயைப் போல அலைகின்றேனே. புழு நெளிந்து புண்ணழுகி யோசனை நாறும் கழிமுடை நாற்றத்த உடலைக் கொண்ட மாதரார் கூந்தலை வர்ணித்து, இடையைக் கண்டு மகிழ்ந்து, நடையைப் பார்த்துப் பாராட்டி, மனத்துக்கு இதம் தரும் சொற்களால் அவள் மனத்தை மகிழவைத்து இறுதியில் உன் திருவடிகளை அடையாமல் வாயில் கவ்வியிருந்த மாமிசத்தை இழந்து ஏமாந்து போன மிருகமாய் ஆகிவிட்டேனே.

    பூவாணர் போற்றும் புகழ் மதுரைச் சொக்கரது
    சீபாதம் போற்றிச் சிவலோகம் சேராமல்
    தாவாரம் தோறும் தலை புகுந்த நாய்போல்
    ஆகாத நெஞ்சமே அலைந்து திரிந்தாயே. 10.

    எனக்கு எதிரியான என் நெஞ்சமே! இப்பூமியில் வாழும் மாந்தரெல்லாம் போற்றி வழிபடும் மதுரை சொக்கநாதக் கடவுளின் சீரான பாதங்களைப் போற்றி வழிபட்டு சிவலோகம் சென்றடையும் வழி காணாமல், வீணில் வீடுதோறும் சென்று தலைகாட்டிவிட்டு வரும் நாயைப் போல அலையவிட்டாயே நியாயமா?

    (இன்னும் வரும்)

    Share
  • தன்னைச் சுடும்!..

    ஜெயஸ்ரீ ஷங்கர்

     

    ஹேய்….இங்க பாரேன் கிரி….! மூணு மாசக் குழந்தையைக் கூட இந்த ‘மாண்டசரி ஸ்கூல்ல’ சேர்த்துக்கறாளாம். வெரி நைஸ்…இல்லபா …நல்லவேளையா இப்ப ..நம்ம கீட்ஸு க்கு நாளையோட அவன் பொறந்து நாலாவது மாசம் முடியப் போறது ..இன்னி வரைக்கும் இந்த ஹோர்டிங் அட்வெர்டைஸ்மென்ட் என் கண்ணுலயே படல பார்த்தியா..? டூ யு நோ திஸ் பிஃபோர் ரா….?

    நோ….பார்…….!

    தெரியாதுங்கறியா….? இல்ல ‘நோ பார்’னே சொல்றியா..

    இல்ல பார்கவி தெரியாதுன்னு சொல்றேன். நானும் உன்கூட சேர்ந்து இப்பத்தான் இதைப் படிக்கறேன்..

    யூ…சோம்பேறி …டெய்லி இந்த வழியாத் தானே வரே நீ…அதெப்படி உன் கண்ணுலேர்ந்து இவ்ளோ பெரிய ஹோர்டிங் தப்பிச்சது ?

    இதெல்லாம் உங்க கண்ணுக்குள்ள மட்டும் தான் சிக்கும் ….நான் பாட்டுக்கு ரேடியோ மிர்ச்சி கேட்டுக்கிட்டு எனக்கு முன்னாடி யார் வண்டி ஓட்டறா..? ஏதாவது அம்ச ஃபிகர் கண்ணுல மாட்டாதான்னு டைம் பாஸ் சைட் அடிச்சுண்டு இருப்பேன்..போயும் போயும் இதெல்லாம் யாருக்கு வேணும்? நான் தனியா வெளில வந்தாச்சுன்னா அவ்ளோ தான். சென்ட் பெர்செண்ட் பாச்சலர் ரா…!

    அதே .தான் நானும் திங் பண்ணேன்…உன்னைப் பத்தி….நீயே அதை அக்செப்ட் பண்ணீட்டே…ஹேய் மிஸ்டர் கிரி….நீ தான் மிஸஸ் பார்கவியாகி ரெண்டு வருஷமாயாச்சு….அதுக்கு அடையாளமா..?

    உன் கழுத்துல தாலி தொங்கலை….!

    ம்கும்….உன் காதுல கடுக்கண் மின்னறது மச்சான்….மண்டைக்கு சூடு போட்டுக்கோ சொல்லிட்டேன்….ஒழுங்கா ஆபீஸ் போனமா….வேலையை மட்டும் பார்த்தோமா…பார்கவிக்கும், கீட்சுக்கும் பிடிச்சதை வாங்கித் தந்தோமான்னு நல்ல பையனா லட்சணமா சமத்தா நடந்துக்கணம்…..சரியா….காரை ஒட்டிக் கொண்டிருந்த கிரியின் காதைத் திருகி அழகு காட்டினாள் பார்கவி.

    அங்க பாரேன்… பார்….அந்தப் பொண்ணு எப்படி பைக்குல அவனோட ஒட்டிக்கிட்டுப் போறாள்னு….நீயும் இருக்கியே….ஆயிரம் சொல்லு பைக் பைக்கு தான் கார் ….கார்…தான். இல்லியா பார்….!

    நீ திருந்தவே மாட்ரா ..! உன்னோட லொள்ளும்…ஜொள்ளும் ..

    என்னோட கவச குண்டலங்கள் மாதிரி…!

    வீட்டுக்கு வா…அம்மா காதுல போட்டு வைக்கிறேன்…..உன்னோட திருவிளையாடலை….! உங்கம்மா பண்ற அர்ச்சனைக்கு மட்டும் தான் நீ அடங்குவே..!

    வேண்டாண்டி…பார்….என் பாவமான மூஞ்சியைப் பாரேண்டி ..! அம்மாவுக்கு, ஆரம்பிச்சா நிறுத்தத் தெரியாதுன்னு உனக்கே தெரியுமே.

    .சரி.சரி…ஜோக்ஸ் அபார்ட்…..இப்ப விஷயத்துக்கு வா……நம்ம கீட்ஸுக்கு நல்ல ஸ்கூல் கிடைச்சாச்சு…நாளைக்கே போயி விசாரிக்கணம்….அட்ரெஸ மெசேஜ் பண்ணி சேவ்ல போட்டு வெச்சுக்கோ.

    கஷ்டம் கஷ்டம்..இவன் பொறந்து வெறும் நாலே மாசம் தானே ஆறது….அதுக்குள்ளே உனக்கு என்னாச்சு பார் .? இவ்ளோ அவசரப் படறே. அட…நான் தான் மறந்தே போய்ட்டேன்….நீ தான் ஒன்பது மாசம் முடிஞ்சதுமே ஹாஸ்பிடல்ல ரூம் போட்டு, இன்னிக்கு இந்த நட்சத்திரத்துல தான் என் குழந்தை பொறக்கணும்னு அடம் பிடிச்சு சிசேரியன் கேஸாச்சே.உன் கிட்ட என் பருப்பு வேகாது…..!.

    ஆஸ்பத்திரி வாசல்ல நாதஸ்வரம் ஏற்பாடு பண்ணி வெச்சு குழந்தை பொறந்த உடனே வாசிக்க சொல்லியிருந்தேனே அதை நீ பாராட்டவேயில்லை…கிரி ….!

    ஆமாமா…..அதான் குழந்தை பயத்தில், பிறந்ததும் இன்குபேட்டர்ல போய் படுத்துண்டான்…இதெல்லாம் என்னமோ…தெரியலை….நீ மட்டும் தான் அப்படியா இல்லை உன் குடும்பத்துல வேற யாராச்சும் இப்படி மரை கழண்ட கேஸுகள் இன்னும் இருக்கா…?

    உனக்குத் தெரியாதா….? இதெல்லாம் கூட வாஸ்து மாதிரி தான்…இப்பல்லாம் இதெல்லாம் ஃபேஷனாவே ஆயாச்சு.. இப்படில்லாம் பண்ணாதவா தான் குறைவு.

    நான் இதுல ஜீரோ….பட் நோ..பெயின் ……நோ கெய்ன்டி பார்….!

    ம்கும்…நோ பெயின் பட் கெய்ன்..கீட்ஸ்…!

    நான் உன்ன மாதிரி..என்னை மாதிரியெல்லாம் நம்ம குழந்தையை வளர்க்க மாட்டேனாக்கும். எனக்குன்னு ஒரு ப்ளான். என் கசின் சிஸ் திவ்யா தெரியுமா.?..ஞாபகம் இருக்கா?

    ம்ம்….அந்த பரட்டைத் தலை…..அச்சச்சோ….அந்த பாப் தலைவி…!

    அது…..! அவள்….குழந்தை வயித்தில இருக்கும்போதே அதுக்குன்னு எதோ ஒரு கிளாசுக்கு போயிருக்கா…அதனாலத் தான் அவ குழந்தை பிரேமுக்கு ஒரு வயசு தான் ஆறது…அதுக்குள்ளே புத்தகத்துல இருக்கும் அத்தனை படத்தையும் ஐடெண்டிஃபை
    பண்ணி டக்கு டக்கு ன்னு சொல்றானாம். இவளுக்கு ரொம்பப் பெருமையா இருக்காம்…போன வாரம் கூட ஃபோன் பண்ணிச் சொல்லி சந்தோஷப் பட்டாள் .

    ரொம்ப முக்கியம்….! இல்ல…..இல்ல….பிரேம் இப்பவே நம்ம கீட்ஸ் க்கு வில்லனாயிட்டானா..? ன்னு.

    என்ன நீ கிரி…..நம்ம கீட்ஸ் கூட அவனை மாதிரி வரவேண்டாமா…? அதுக்குத் தான் இந்த ஸ்கூல்.

    இந்த விஷயத்தில் நீ அவசரப் படாதே பார்…! அம்மாட்டயும் கேட்கணும்..அவாளுக்கு இதிலெல்லாம் நம்பிக்கையே இருக்காது நீ வேணாப் பாரேன்……எவனோ காசு பிடுங்க போடற ஐடியாவில் நீங்க முதலீடு செய்யாதேங்கோன்னு சொல்வா.

    ஆமாமா…அப்டித் தான் சொல்வா…நான் சொல்ற எதுக்கு உங்கம்மா உடனே அப்படியா சரின்னு சொல்லிருக்கா..?அதெல்லாம் கேட்டுண்டு இருந்தா நம்ம குழந்தை கடைசி பெஞ்சுல கண்ணைக் கட்டிண்டு உட்காரணம், பரவாயில்லையா..? உங்களுக்கு வேணா பரவாயில்லைன்னு இருக்கலாம்….என்னால முடியாது.ஐ வில் மேக் ஹிம் தி பெஸ்ட் கிட் …! உலகம் எவ்வளவு வேகமா போறது தெரியுமா? அதுக்கேத்த வேகம் இருந்தாத் தான் வர காலத்துல பிழைக்க முடியும்.

    வீட்டுக்குள் போனதும் என்ன மாதிரியான வாக்குவாதம் நடக்கப் போறதோ….இப்பவே மனத்தில் 70mm அளவுக்குத் திரை விழுந்து அதில் பார்கவி ஃபுல் ஸ்க்ரீனில் முறைத்துக் கொண்டு தெரிந்தாள் . அதை ஜூம் அவுட் பண்ணுவதற்குள் வீடு வந்து விட்டது.

    காரைப் பார்க் செய்து விட்டு, ஹேய்….கமான் பார்…..பி ரிலாக்ஸ்ட்….இங்கேர்ந்தே மூஞ்சியைத் தூக்கி வெச்சுக்காதே….அம்மா கண்டு பிடிச்சுடுவா…! ஒ கே. கூல் பேப்..கொஞ்சம் சிரியேன் .

    எனக்குத் தெரியாதா..? உங்கம்மாக்கு உடம்பெல்லாம் கண்ணுன்னு..இதுக்கொண்ணும் குறைச்சலில்லை…..ஈஈஈஈ ……போதுமா…?

    அது சரி…ரொம்ப வாராதே..! ரொம்ப ஜாஸ்தி….கொஞ்சம் குறைச்சுக்கோ பரவாயில்லை ‘சின்ன இ’ யே…போதும்.

    நான் என்ன இங்க ஈயாப் பிடிக்கறேன்….’சின்ன ஈ’ போதும்…வெ வெ வெ வெ ..கிரியைப் பார்த்து அழகு காட்டினாள்…இங்க பாரு .அம்மாக்கிட்ட எனக்கு நீ சப்போர்ட் பண்ணிப் பேசணம் ..புரிஞ்சுதா? நான் என் குழந்தைக்கு எது செஞ்சாலும் அவன் நல்லதுக்குத் தான் செய்வேன்.

    அது சரி…..எல்லாருக்குமே அப்படித்தான் குழந்தை மேல பாசம் உண்டு பார்.

    யார் இல்லைன்னா…..அப்டி இருந்தால் எனக்கு யார்ட்டயும் இதுக்காக கெஞ்சவே வேண்டாமே..நாளைக்கே அந்த ஸ்கூல்ல சேர்த்துடலாம்….இல்லையா?

    வீட்டுக்குள் நுழையும் வரை பேசிக் கொண்டே செருப்பைக் கழற்றி விட்டு, உள்ளே நுழைந்ததும்,

    ஊஞ்சலில் உட்கார்ந்து ஆடிக் கொண்டே ‘சரவணன் மீனாட்சி ‘ சீரியலில் ஐக்கியமாகி பார்த்துக் கொண்டிருந்த சுபத்ரா , ஊஞ்சலை நிறுத்தி விட்டு, ஷாப்பிங் போய்ட்டு வந்தாச்சா…? கீட்ஸ் பசிச்சு அழுதானா….முதல்ல அவனுக்கு திருஷ்டி சுத்திப் போடணம். என்றபடி ஊஞ்சலிலிருந்து இறங்கினாள் .

    ம்மா…..உன் மருமகள் சொல்வா….கேளேன்…..நம்ம கீட்ஸ்சை நாளையிலேர்ந்து ஸ்கூல்ல சேர்க்கப் போறாளாம்..

    என்னடாது கூத்தாயிருக்கு…?.பொறந்து நாலு மாசம் கூட கழியலை…இந்தப் பிஞ்சுக் குழந்தைகளுக்கெல்லாம் யார் ஸ்கூலை கட்டி வெச்சுண்டு உட்கார்ந்திருக்கா . நன்னாருக்கு போ..!

    அதெல்லாம் இருக்கு. குழந்தை வயித்துக்குள்ள இருக்கும்போதே சொல்லித் தர ஸ்கூல் எல்லாம் கூட வந்தாச்சாம். பார்கவி சொல்றா. நமக்கு தான் இதெல்லாம் ஒண்ணும் தெரியலை.

    அதுக்குள்ளே ஸ்கூலாவது….கீலாவது … நான் இதுக்கு ஒருக்காலும் சம்மதிக்க மாட்டேன். ப்ளே ஸ்கூலுக்கு போக மூணு வயசானவட்டு பார்த்துக்கலாம்.

    ம்மா…நீ கொஞ்சம் சும்மா இரேன்….கிரி அம்மாவின் வாயை அடைத்துக் கொண்டிருக்கும் போதே உள்ளே நுழைந்த பார்கவி,
    ஏன் நிறுத்திட்ட கிரி…நீயே அம்மாட்ட சொல்லியாச்சா..?

    இல்லையில்ல இப்பத் தான் சொல்லிண்டு இருக்கேன்.

    இதோ பார் பார்கவி…அவன் எல்லாம் சொன்னான்….ஆனா அதெல்லாம் நம்மாத்து குழந்தைக்கு இந்தக் கூத்தெல்லாம் ஒண்ணும் வேண்டாம். பொறந்து நாலு மாசம் ஆகும் குழந்தையை யாராவது ஸ்கூல்ல சேர்ப்பாளா ? இன்னும் முகம் பார்க்கவே முழுசா ஆரம்பிக்கலை.

    இப்பல்லாம் வயித்தில் இருக்கும் குழந்தைக்கே பாடம் சொல்லித் தர ஸ்கூல் இருக்கு தெரியுமா?

    அந்தக் கண்றாவியெல்லாம் நமக்கெதுக்கு? யாரோ பைத்தியம் பிடிச்சவா பண்ணினா நம்மளும் பண்ணணமா ? குழந்தைக்கு செர்லாக் கரைத்துக் கொண்டே சொல்லும் சுபத்ராவைப் பார்த்து,

    அதெல்லாம் ஒண்ணுமாகாதும்மா . கீட்ஸ் கண்டிப்பா இந்த ஸ்கூல்ல சேருவான். ஒரே வருஷத்தில் அத்தனையையும் கத்துப்பான்…நீங்களே பார்த்து அசந்து போயிடுவேள்.

    கிரிதரனை நாங்க அஞ்சு வயசுல தான் ஸ்கூல்லயே சேர்த்தோம்…அவனுக்கு என்ன படிப்பா வரலை…? அவன் அப்பா பள்ளிக் கூடம் போன வயசென்ன தெரியுமா..? பத்தோ பன்னெண்டோ…அவர் என்ன வக்கீலாகலையா?

    அது அந்தக் காலம்…நீங்க அந்தக் காலத்துலேயே இன்னும் இருந்தாக்கா நான் என்ன செய்றது? காலத்துக்கேத்தா மாதிரி மாறித் தானே ஆக வேண்டியிருக்கு. கோபத்துடன் அடம் பிடிக்கும் கீட்ஸின் வாயில் செர்லாக்கைத் திணித்தபடியே சொன்னாள் பார்கவி.

    அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம். நான் சொன்னால் கேளு. காலம் ஒண்ணும் அப்படியே தலை கீழா மாறிப் போகலை. கொஞ்சம் மாடர்னா இருக்கு..ஒத்துக்கறேன்.கட்டினவனை வாங்கோ…போங்கோ..ன்னு கூப்பிடறதிலிருந்து வா..போ..ன்னு பேசறது வரைக்கும்…மத்தபடி ஒண்ணும் பெரிய மாற்றம் இல்லை.

    நீங்க இந்த வீட்டுக்குள்ள இருந்துண்டு இவ்ளோ தான் மாற்றம்னு சொன்னா ஆச்சா?

    இல்லையே…டீவி சீரியல்ல இப்பத் தான் கேட்டேன்..சரவணனை மீனாட்சி…வாடா…போடான்னு ஏலம் போடறாளே, அதை வெச்சுத் தான் சொல்றேன். ஏன்….நம்மாத்தில் நடக்கலையா?

    இதைக் கேட்டதும், படக்கென்று குழந்தையை மடியிலிருந்து வாரியெடுத்து தோளில் சார்த்திக் கொண்டு கிண்ணங்களை தொப் தொப்பென்று கிட்சன் சிங்கில் போட்டு விட்டு விருட்டென்று படுக்கையறைக்குள் நுழைந்து கொண்டு கதவைச் சார்த்திக் கொள்கிறாள் பார்கவி.

    ஒண்ணுமே இல்லாததுக்கு இவ்ளோ கோபமா? சிவ சிவா….! இந்தக் காலத்துப் பொண்களுக்கு பேருக்கு ஆம்படையான் பேரைப் பின்னாடி வாலாட்டமா எழுதறாப்பல.முன்னால கோபிஷ்டின்னு சேர்த்தாலும் தேவலை போலத் தோணறது.

    டேய்…கிரி….நீங்க ரெண்டு பேரும் சாப்டாச்சா? வெளில வாசல்ல போயிட்டு வந்தாலே கூடவே ஏதாவது பிரச்சனையையும் சேர்த்து வாங்கீண்டு வந்தால் நான் என்ன பண்ணுவேன் ? எல்லார் சௌகரியம்…நான் சொல்லியாச்சு…கேட்டால் கேளுங்கோ…கேக்காட்டா எப்படியோ ஆகட்டும்….அறுத்தவ சொல்லு அந்த அடுக்களை முட்டும் தான் எந்த அம்பலமும் ஏறாதுன்னு தெரியும்…..இருந்தும் நான் மாமியார் பவுசு காட்டறேன் பார்…என் புத்தியைச் சொல்லணம் …அவாள்லாம் படிச்சவா….பல இடம் போறவா….வரவா……ம்ம்ம்ம்….டேய்…கிரி……பார்கவியை சாப்பிடக் கூப்பிடு. மத்தபடி அவளோட எந்த விஷயத்துலயும் நான் என் ஜலதோஷ மூக்கை நுழைக்கலை. சொல்லிக் கொண்டே வாஷ்பேசினை நோக்கிச் சென்று மூக்கைச் சீந்தி அலம்புகிறாள்.

    ம்ம்மா….போகட்டும் .விடேன்…நீ வீணா இதுல தலையிடாதே. அவளுக்கு நம்ம கீட்ஸ் ரொம்ப சின்ன வயசிலயே நிறைய படிச்சுடணம்னு ஆசைப்படறா . நான் ஏற்கனவே சொல்லிப் பார்த்தாச்சு…உனக்குத் தான் அவ குணம் தெரியுமே.

    நல்ல குணம்..!தான் பிடிச்ச முயலுக்கு மூணே காலுன்னு ….!

    கொஞ்சம் விட்டுப் பிடிச்சா சரியாயிடும்மா..!

    என்ன…தும்ப விட்டு வாலைப் பிடிக்கச் சொல்றே? நான் விடறேன் நீ பிடிச்சுக்கோ. நீயாச்சு…உன் பொண்டாட்டியாச்சு. நானா சம்பாத்திக்கறேன்…நானா காசு கட்டப் போறேன்…?

    அப்போ சும்மா இரேன்…!

    எப்பவும் நான் சும்மா இருந்தா உங்களுக்கு சந்தோஷம் தானேப்பா.

    ம்மா, பார்த்தியா கோச்சுக்கறே.

    இப்பல்லாம் உங்க காட்ல மழை…..ஜமாயிங்கோ. நான் ஏன் கோவிச்சுக்கப் போறேன்..? அந்தக் காலம் போலையா இந்தக் காலம்…அதான் இந்தக் காலத்துக்கு புதுசா கம்ப்யூட்டர் கொம்பு முளைச்சிருக்கே…!

    இந்த ஒரு வார்த்தை பச்சைக் கொடியில் , பார்கவி ‘கீட்ஸ்’ஸுக்கு அடுத்த நாளே அட்மிஷன் போட்டு விட்டாள். நம்ம கீட்ஸ் கிட்ட ஒரு போட்டோவை காண்பிக்க, அவன் எவ்வளவு உன்னிப்பா அதையே பார்த்துண்டு இருந்தான் தெரியுமா..?

    ஏதோ பெரிய விஷயமாக அதைச் சொல்லி சந்தோஷப்பட்டுக் கொண்டிருந்தாள்.

    ஆமா…..எல்லாம் சரி தான்..இதுக்கு அவாளுக்கு எவ்வளவு தட்சணை எடுத்து வெச்சேள் ?

    நாலு மாசத்திலேர்ந்து ஒரு வயசு வரைக்கும் இருபதாயிரம் ஃபீஸ். அதுக்கப்பறம் கூட பத்தாயிரம் ஆகுமாம்.

    பேஷ்….பேஷ்…ரொம்ப நன்னாருக்கு….முகம் பார்க்க ஆரம்பிக்கிற குழந்தைக்கு என்னத்தை அப்படி சொல்லித் தந்துடுவா? அப்போ என் பேரன் ஐஸ்டின் மாதிரியோ இல்லாட்டா அப்துல் கலாம் மாதிரியோ வரப் போறானா?

    இந்த நக்கல் தானேம்மா வேண்டாங்கறது…நிச்சயமா என்னை மாதிரியோ உங்க பிள்ளை மாதிரியோ இருக்க மாட்டான்…முகத்தில் பெருமை பொங்கச் சொன்னவள் குழந்தையை வாரி அணைத்துக் கொண்டாள் .இவனும் ஏதாவது புதுசாக் கண்டுபிடிச்சு இந்தியாவுக்கு பெருமை சேர்ப்பான். அதுக்கு இப்பல்லாம் நிறைய ஆப்பர்ச்யூனிட்டி இருக்கு. இவாளுக்குத் தான் இனிமேல் நிறைய ஓபனிங்ஸ். அம்மா…இன்னைக்கு நிஜம்மா நீங்க இவனுக்கு திருஷ்டி சுத்திப் போடுங்கோ…அப்டியே எனக்கும்…! என்று சொன்ன பார்கவியைப் பார்த்து,

    அது சரி….! என்னமோடிம்மா …உன் ஆசைக் கனவு ஜெயிச்சால் நான் நல்ல மாமியார்…தான்..என்று கேலியாகச் சொல்லிவிட்டு கிச்சனுக்குள் நுழைகிறாள் சுபத்ரா.

    என்னம்மா நீங்க…இதுக்குப் போயி அலட்டிகறேள். ஐம் சாரிம்மா…..கெஞ்சலான குரலில் ஐஸ் வைத்து சொல்வதைக் கேட்டதும் சுபத்ராவும் உருகித் தான் போனாள்.

    காலச் சக்கரச் சுழற்சியில் பத்து வருடங்களை முழுங்கியிருந்தது. சுபத்ரா தெய்வமாகி சட்டத்துக்குள் சிரித்துக் கொண்டிருந்தாள்….மென் மேலும் பதவி உயர்வில் கிரி நேரமே இல்லாமல் தவித்தான். பார்கவி கூடிப்போன பத்து கிலோவை தன் உடம்பிலிருந்து கரைக்க அரும்பாடு பட்டு டயட்டில் தவித்துக் கொண்டிருந்தாள். கீட்ஸ் மட்டும் பத்து வயது சிறுவனா அல்லது இருபது வயது வாலிபனா என்று அனைவரையும் சிந்திக்க வைத்தான்.

    கீட்ஸ்…படிச்சுட்டியா…ஹோம் வொர்க் பண்ணியாச்சா?

    ஓவர்….நத்திங் பெண்டிங். படிக்க ஒண்ணுமேயில்லை …ஐம் கோயிங் டு வாட்ச் மூவி நௌ .

    மா….இட்ஸ் ஸோ போரிங் …எனக்கு வெளில போகணும்….கார் சாவி தாயேன் ..ஒரு ரவுண்ட் போயிட்டு வரேன்..

    அய்யய்யோ வேண்டாம்டா ப்ளீஸ்….!

    ….ம்ம்ம்மா……ஐ கான்ட் டாலரேட் யூ .மாம்…நீங்க சும்மாயிருங்க ..எனக்கு இப்பவே காரை எடுத்துண்டு வெளில போகணும்…நான் போறேன்…பை….என்று துள்ளிக் குதித்து வெளியில் ஓடும் போது, பார்கவி ஆடித்தான் போவாள்.

    ஒண்ணா….ரெண்டா….பத்து வயதுப் பையனுக்கு என்ன தோணுமோ, அதெல்லாம் அவனுக்கு மூணு வயசிலயே தெரிஞ்சு போன மாதிரியும், இப்போ அவன் ஒரு காலேஜ் படிக்கிற பையனைப் போல நடந்து கொள்ளும்போது மனசு கலங்கித் தான் போனது பார்கவிக்கு.

    நாளாக நாளாக , இதுவே பெரிய தலைவலியாகிப் போனது அவளுக்கு.

    டாட்….எனக்கு ஐ போன், வேணும்….ப்ளூ ரே கேம் சிடீஸ் வாங்கிக்கறேன்…ஒரு டென் தௌசண்ட் செக் எழுதுங்கோ.

    இவன் பார்க்கும் தோரணையில், கிரியின் கை, தானாக செக்கில் கையெழுத்துப் போட்டுக் கொடுத்து விடும்.

    டாட்…எனக்கும் ஒரு பேங்க் அக்கௌண்ட், கிரெடிட் கார்ட் எல்லாம் வேணும்..ப்ளீஸ் டூ இட். ஒரு பெரிய பிஸ்னெஸ் பண்ணப் போறேன்….கேமிங்….!

    போச்சுடா…! ரெண்டு கைகளையும் தலையில் வைத்துக் கொள்வார்.

    ஸ்கூல் டீச்சர் தினசரி போன் செய்து, உங்க சன் கீட்ஸ் மத்த பசங்களைக் கெடுக்கிறான்….பர்ஸ்ட் ரேங்க் மட்டும் வாங்கினாப் போதாது…மத்தவங்களுக்கு இடைஞ்சலா இருக்கக் கூடாது..அவனுக்கு நாங்க டபிள் ப்ரமோட் பண்ணி வேற கிளாஸ்ல போடலாம்னு யோசிக்கறோம்..ஹி இஸ் ஓவர் ஸ்மார்ட்…வெரி வெரி இன்டெல்லிஜென்ட். அதான்…என்று தயங்க.

    பெருமை ஒரு பக்கம் இருந்தாலும்…..இது எங்கே கொண்டு விடுமோ என்று அடிவயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டு பயந்து கொண்டே இருந்தாள் பார்கவி.

    ஒரு நாள் அவள் பயந்தது கூட நடந்தது.

    டபிள் பிரமோஷனில் இன்னும் துளிர் விட்டுப் போனது கீட்ஸ்ஸுக்கு. தன்னுடன் படிக்கும் பெண்ணுக்கு லவ் லெட்டர் கொடுக்கப் போக, மைனர் பெண்ணின் கவனத்தைச் சிதறல் செய்கிறான் என்று அவர்கள் வீட்டிலிருந்து நாலு பேர்கள் இவர்கள் வீட்டை முற்றுகையிட்டு எச்சரித்து விட்டுப் போகையில், பார்கவிக்கும், கிரிக்கும்…கீட்ஸ்ஸுக்குமிடையே பூகம்பமே வெடித்தது.

    கடைசியில் இதுக்குத்தானா ஆசைப்பட்டாய் பார்கவி நீ ? நீ நினைச்சது ஒண்ணு …நடக்கறது ஒண்ணாச்சே….ஆரம்பத்தில் அம்மா சொன்னதைக் கேட்டிருந்தால்…இப்படியெல்லாம் நடந்திருக்காதோ என்னவோ.?

    கற்றுக்கொள்ளும் வயதில் அத்தனையும் தெரிந்து விட்ட நிலையில் அடுத்தது என்ன என்ற தேடலின் உச்சியில் இருந்தாலும் அங்கு அவனுக்கென்று ஒன்றுமே இல்லாதது போலவும்…உலகப் பாடத்தில் கற்றுக் கொள்ளவென்று எதுவுமே தனக்கு இல்லை என்றும் உணர்வுகளோடு நடந்தான் கீட்ஸ்.

    எப்போதும் எல்லோரையும் பார்க்கும் போதும் தனக்கு மட்டும் எல்லாம் தெரிந்து விடுகிறது என்ற ஆளுமையும் அதிகார உணர்வும் மேலோங்கிய அவனை யார் கண்டாலும் ‘திமிர் பிடித்தவன்’ பெரிய கர்வம் பிடிச்சவன்….என்றெல்லாம் பட்டம் கொடுத்து கேலி பேசுவார்கள். இவன் வருவதையும் தவிர்ப்பார்கள்.

    பட்டமும், கேடயமும், பரிசுக் கோப்பைகளும் ஒரு புறம் நிரம்பி வழிந்தாலும்…அதைத் தரை மட்டமாக்கும் நிகழ்வுகளும் கூடவே நடக்கத் தொடங்கி அவனை நிலை குலைய வைத்தது.

    அது கோபமாக வெளியேறத் துவங்கிய போது பார்கவிக்கும் கிரிக்கும் பிள்ளைப் பாசத்தைக் கடந்து ‘இவனை வைத்துக் கொண்டு சமாளிப்பது கடினம் என்று தோன்றியது’.

    பார்…இப்பப் பார்….! எவ்ளோ சொன்னேன்…அப்பவே சொன்னேன்…இதெல்லாம் சரிபட்டு வராதுன்னு. உலகத்தோட ஒத்துப் போகத் தெரியாமல் உன்னோட பேராசைக்கு நம்ம பையனை பலியாடாக ஆக்கி வைச்சுட்டியே..

    டாக்டரே சொல்லிட்டார். அதுக்கும் இதுக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை. இன்ஃ பாக்ட் சின்னக் குழந்தையா இருக்கும்போதே அவன் படு சுட்டி..ஹைபர் ஆக்டிவ் சைல்ட். தெரிஞ்சுக்கோ. வாட்ஸ் நெக்ஸ்ட்….! இது இப்ப அவனை மனசுக்குள் ரொம்பப் படுத்தறதுன்னு நினைக்கறேன்.

    அவனை ஒரு சைக்கியார்டிஸ்ட்ட அழைச்சிண்டு போனால் எல்லாம் சரியாய்டும். பார்கவி சமாதானப் படுத்தினாள் .

    இப்பத் தானே பதினைந்து வயசாறது. அதுக்குள்ளே எங்க வந்து நிக்க வெச்சுட்டான் பாரேன் ? பார்.கிரி புலம்பிக் கொண்டிருந்தான்..எல்லாம் உன்னால…வந்த வினை.

    அதே சமயம் அவனைப் பாராட்டு கிரி…..அவன் ஷேர் ட்ரேட் பண்றான்….ரியல் எஸ்டேட்ல என் பேர்ல இன்வெஸ்ட் பண்ணிருக்கான். லேப்டாப் ரிப்பேர் பண்றான்…கம்ப்யூட்டர் அசெம்பிள் பண்றான்…இதெல்லாம் அவனோட பிளஸ்…தெரியுமா?
    வி ஷுட் கவுண்ட் ஹிஸ் குட் திங்க்ஸ் டூ…! எவ்ளோ அட்வான்ஸ்டா திங் பண்றான்.

    அவனுக்கு எது வேணும் எது வேண்டாம்னு நம்மால சிந்திக்க முடியலை. நம்ம நினைக்கறது எல்லாமே அவனுக்கு அவுட் டேட்டட்டா இருக்கு. இப்பவாவது உனக்கு புரியறதா? என்னால நிம்மதியா இருக்க முடியலை பார்.

    இதெல்லாம் ரொம்ப காமன் தான்…கிரி. நாம தான் இன்னும் கொஞ்சம் அவனுக்கேத்தா மாதிரி அட்ஜஸ்ட் பண்ணிக்கணும்.

    நாம பண்ணிக்கலாம்….வெளி உலகம் பண்ணிக்குமா? போடா சர்தான்னு சொல்லிட்டுப் போகும். எல்லாத்துலயும் நான் தான் டாப்பு மீதியெல்லாம் டூப்புன்னு இருந்தா, ஹௌ எனி ஒன் வில் டாலரேட் திஸ்.? இப்பக் கூட ஒரு நல்ல ஃப்ரெண்ட் இல்லை அவனுக்கு.

    நீ சொல்றாப்பல லாப்டாப், கம்ப்யூட்டர், ன்னு எல்லாத்தையும் பிரிச்சு மேயறான்…சரி தான். அதே நேரம் அவனுக்குக் கோபம் வந்தால் அதே கம்ப்யூட்டரைத் தூக்கிப் போட்டு உடைக்கிறானே. கேட்டது கிடைக்கலைன்னு தெரிஞ்சா சுவத்துல ஓங்கி குத்தி தன் கையைத் தானே காயப் படுத்திக்கறானே….எல்லாம் அவனுக்கு சாதகமா நடக்கணும்னு யோசிக்கறானே இதெல்லாம் தப்பில்லையா ? அஃப் கோர்ஸ்….அது ஜெனெடிக்னு வெச்சிக்கலாம்.

    கோபத்தில் தன் கையிலிருந்த காப்பி டம்ப்ளரைத் தூக்கி எறிகிறாள் பார்கவி.

    இத…இத….இதத் தான் சொன்னேன்…என்று கிரி சொல்லவும்

    பார்கவி ‘ஓ’ வென தலையில் அடித்துக் கொண்டு அழுகிறாள்.

    சரி…சரி….ஸாரி …அழாதே…நீ மட்டும் என்ன செய்வே.?..நாளைக்கு டாக்டர்கிட்ட போகலாம். அப்பாயின்ட்மென்ட் வாங்கிடறேன் சரியா…அவளை சமாதானப் படுத்தி விட்டுப் படுத்துக் கண்களை மூடிக் கொள்கிறார் கிரிதரன். வழக்கம் போலவே தூக்கம் அவருக்கு ‘டா டா…பை பை ‘ சொல்லிக்கொண்டு ஓடியது. எத்தனை இரவுகள் தூக்கம் போயிருக்கும்..? தூக்கம் மட்டுமா…அப்படியே தலையைத் தடவிப் பார்க்கும் போது மொழு மொழுவென்று வழுக்கைத் தலையில் விரல்கள் வழுக்குகிறது.

    அடுத்த நாள் இரவு…!

    என்னங்க மேடம் இது…இதுக்குப் போயா உங்க பையனுக்கு கவுன்சிலிங் பண்ண அழைச்சிட்டு வந்தீங்க. தயவுசெய்து உங்க வீணான கவலையை விட்டுத் தள்ளுங்க. நான் அவன்கிட்ட தனியாப் பேசிப் பார்த்த பிறகு தான் இதைச் சொல்றேன்….உங்க சன் செம ஸ்மார்ட். மூளைதான் அவனோட மூலதனம். எங்க போனாலும் பின்னிப் பெடலெடுப்பான் . டோன்ட் வொர்ரி. என்ஜினீயரிங் சேர்த்து விடுங்க…கோல்ட் மெடல அள்ளிட்டு வந்திடுவான். அப்பப்பப்பப்பா….எதைக் கேட்டாலும் டக்கு டக்குன்னு நெத்தியடியா பதில் சொல்ற பிள்ளைய கைல வெச்சிட்டு நீங்க கலங்கினா…ஐம் சாரி….உங்களைத் தான் பார்க்கறவங்க தப்பு சொல்லுவாங்க…சம்திங் ராங்ன்னு…! இப்ப இருக்குற காலத்துக்கு இவ்ளோ ஸ்பீட் ரொம்ப ரொம்ப அவசியம். உங்களுக்கு இப்பப் புரியாது. போகப் போகப் பாருங்க..!

    டாக்டர் சொல்லியனுப்பியத்தை நினைத்துக் கொண்டே கண்களை வெறுமனே மூடியபடி படுத்திருந்தாள் பார்கவி.

    நிம்மதியா தூங்குவதா…..? இவ்வளவு இண்டெலிஜெண்ட் கீட்ஸ்ஸுக்கு ஏன் அடிக்கடி விரக்தி வருகிறது…? கோபம் வருகிறது?
    வீட்டிலும் இருக்கப் பிடிப்பதில்லை…..பள்ளியில் இருக்கவும் பிடிப்பதில்லை…..மனம் அமைதியில்லாமல் அலைபாய்கிறது.
    எங்க போனாலும் தனக்கு மிஞ்சியவர் யாருமே இல்லைங்கற ஒரே எண்ணத்தில் தானே நுழைகிறான். அவனுக்குள் இருக்கும் சுபீரியர் தாட்ஸ் தான் எல்லாத்துக்கும் காரணம். அவன்கிட்ட சொல்லிப் புரிய வைக்கலாம்னு நினைச்சால்..பேசவே விட மாட்டேங்கறான். என்னன்னு சொல்லறது..?

    நாட்களும் வாரங்களும் மாதங்களுமாக ஓடி வருடங்களைக் கடத்திச் சென்றன.

    மனசுக்குள் புகுந்து கொண்டு இறங்க மறுத்த வருத்தம் பார்கவியின் வயதை இருபது வருடங்கள் கூட்டியது.சுகரும், இரத்த அழுத்தமும் கூட துணைக்கு வந்து அவளுடன் கைத்தடி போலச் சேர்ந்து கொண்டது.

    பாதி நாட்கள் வீட்டுக்கே வராமல், படிப்பையும் முடிக்காமல் கீட்ஸ், இமயமலை வரைக்கும் சென்று வந்து…மாம்….ஐ லைக் ஒன்லி ஹில்ஸ்…அதும் ஹிமாச்சல் ..நான் அங்கயே கூட போய் இருந்துக்கலாம்னு முடிவு பண்ணியிருக்கேன்…..கீட்ஸ் இதைச் சொன்னதும், அவள் தலையில் இமயமலையையே ஏற்றி வைத்தது போலிருந்தது பார்கவிக்கு.

    என்னடா சொல்றே….கீட்ஸ்..? உனக்கு இப்பத்தான் முப்பது வயசாகுது….ஒரு கல்யாணம் காட்சி செய்யாமல்…குடும்பம்னு ஒண்ணு இருந்தால் இந்த மாதிரி தாட்ஸ் எல்லாம் வராது…! வாழ வேண்டிய வயசில் நீ இப்படிச் சொல்றது கொஞ்சம் கூட சரியில்லை.

    மாம்….டாட்…நீங்க தான் நான் இன்னும் சின்ன வயசா நினைச்சுக்கிட்டு இருக்கீங்க..பட் ….எனக்கு இந்த மெட்டீரியல் வேர்ல்ட்ல எதுவும் பெரிசா இருக்கறதாத் தெரியலை. ஐ ஹேட் எவெரிதிங். ப்ளீஸ் லீவ் மீ அலோன். ஐ கான்ட் ஸ்டே எனிமோர் ஹியர்.
    ஐ நீட் பீஸ்….அமைதி மட்டும் தான் நிரந்தரம்…அது தான் எனக்கு வேணும்.இந்த உலகம் ரொம்ப ஸ்லோ…அதனால தான் ஒரு அமைதியான இடத்தில் என்னை அமைதியாக்கிக்க பழகிக்கப் போறேன்..ஏன்னா எனக்கு இந்த மைண்ட் ஸ்பீட் பிடிக்கலை.

    இதைக் கேட்டு அதிர்ந்தே போனாள் பார்கவி. அவள் தலை தானாகக் குனிந்தது. கிரிதரன் விழிகளில் கண்ணீர் நிறைந்த பார்வை அவனது அம்மாவின் படத்தின் மேல் விழுந்தது.

    இந்த வார்த்தை தான் அவர்களை பெற்றவர்களாக அழைத்து மதித்து அவன் பேசிய கடைசி பேச்சு. அன்று தான் கீட்ஸை அவர்கள் கடைசியாகப் பார்ப்பது என்பதை அப்போது அவர்கள் அறிந்திருக்கவில்லை.

    மகன் கிளம்பிப் போய் வீடு வெறிச்சென்று சூனியம் பிடித்தாற்போலிருந்தது. ஒரே நாளில் அனைத்தையும் இழந்த செல்வந்தரின் நிலை போல உணர்ந்த இருவருக்கும் அதிர்ச்சியும் ஆச்சரியமும் ஏற்படுத்துவது போல ஒரு அழைப்பு மணி அடித்தது.

    மீண்டும் மகன் வந்து விட்டானோ….? ஓடிச்சென்று கதவைத் திறந்த பார்கவியால் நம்ப முடியவில்லை.

    அங்கு, கையில் ஆறு மாதக் குழந்தையுடன் அழகானப் பெண்றொருத்தி “ஐ ம் தீட்சா…திஸ் இஸ் கீட்ஸ்’ஸ் சன்…” சொல்லிக் கொண்டே பார்கவியைத் கடந்து வீட்டுக்குள் நுழைகிறாள்.

    Share
  • குறவன் பாட்டு – 17

    சச்சிதானந்தம்

    குறவனும் குறத்தியும் தத்தம் பயணத்தைத் தொடர்தல்

     

    பசியும் தாகமும் தணிய, நடு

    நிசிபோல் கண்கள் சுழன்று இழுக்க,

    அசையும் தருக்கள் தென்றல் வீச,

    அசைவின்றித் துயின்றனர் குறவனும், குறத்தியும்!                           131

     

    இடியெனப் பிளிறிய பிடியின் ஒலியால்,

    திடுக்கிட்டுக் குறத்தியின் தூக்கம் கலைய,

    அடிமனம் அடைந்த படபடப் பாலே,

    நொடியினில் குறவனின் தூக்கம் கலைத்தாள்!                                                                                    132

     

    குறவன் எழுந்து குறத்தியை இழுத்து,

    சேயை அணைக்கும் தாயைப் போல,

    மார்பில் அணைத்து அச்சம் நீக்க,

    அச்சம் நீங்கி, நாணம் கொண்டாள்!                                                                                                              133

     

    நாணம் நீங்காக் குறத்தி மீண்டும்,

    குறவனை நீங்கிக் கானகம் சென்றாள்,

    குறவனும், குறத்தியின் அச்சம் எண்ணிக்,

    கலங்கிய மனதுடன் மறுதிசை சென்றான்!                                                                                             134

     

     

     

    பிற்பகல் உறக்கம்

     

    குறவனும் குறத்தியும் துயின்றதைப் போல,

    குரங்குகள் இரண்டு மரத்தின் மேலே,

    இயற்கை அரங்கின் எழிலில் மயங்கி

    உறங்கும் அழகைக் குறத்தியும் கண்டாள்!                                                                                             135

     

    மனிதர்கள் மந்திகள் மட்டும் அல்ல,

    பறவைகள் விலங்குகள் தருக்களின் உடனே,

    ஆறுகள், ஏரிகள், மீன்களும் கூட,

    பிற்பகல் உறக்கம் கொள்வது இயற்கை!                                                                                                  136

     

    இமையற்ற மீன்களும் நீருக் குள்ளே,

    அமைவுற்ற பாறையின் பிளவுக் குள்ளே,

    தமையுற்று உறங்கும் கண்ணுக் குள்ளே,

    இணையற்ற பிற்பகல் நற்பொழு தினிலே!                                                                                             137

     

    முதலை போலத் தோலைக் கொண்ட,

    தவளை ஓன்று முயலைப் போல,

    தாவிக் குதித்துத் தாமரை மீது,

    ஏறிப் படுத்துத் தூங்கிடும் பிற்பகல்!                                                                                                             138

     

    மேற்திசைக் கதிரவன் மேகத்திற்குள் மறைந்ததுபோலக்,

    கதிர்களின் வீச்சில் வெம்மை குறைந்து,

    மென்மை வளர, விலங்குகள் பறவைகள்,

    மீண்டும் வெளிவரக் கானகவாழ்க்கை தொடர்கிறதே!                                                                    139

     

    Share
  • வாழ்க்கை நலம் – 35

    குன்றக்குடி அடிகள்

    35. பொறாமை கொள்ளற்க!

     

    அழுக்காறு  – அழுக்கு நிறைந்த வழி. அதாவது நன்மையும் இன்பமும் இல்லாத வழி. இத்தகு அழுக்கு வழியில் வாழ்தல் வளர்ச்சிக்குத் துணை செய்யாது. இனியவை கூறல் பற்றிப் பல குறட்பாக்கள் இயற்றிய திருவள்ளுவர். “அழுக்காறு என ஒரு பாவி” என்று அழுகாற்றினைத் திட்டுகிறார்.

    ஆம்! அழுக்காறு ஒரு பொழுதும் நன்மை பயக்காது.  மாறாகத் தீமையைத் தரும். இந்த அழுக்காறு தான் மக்கள் மத்தியில் “பொறாமை” என்று பேசப்படுகிறது. அதாவது மற்றவர்களின் ஆக்கத்தைத் தாங்கிக்கொள்ள முடியாமை பொறுத்துப் போற்ற முடியாமை அழுக்காறு ஆகும்!

    ஆனால் இன்று பலர் நல்லவைகளில்   – கல்வியில் பொறாமைப்படலாம். தீமையன்று என்று அறியாமல் கூறுகின்றனர். இது தவறு. ஒருவர் நன்மை செய்வதில் அழுக்காறு கொள்பவன், நன்மை செய்ய முனைப்புக் கொள்ள மாட்டான். அழுக்காறு நிறைந்த உள்ளத்தியல்பும், நன்மை செய்வதில் ஊக்கம் காட்டாது என்றே திருக்குறள் கூறுகிறது.

    நஞ்சு, அமுதாவது ஏது? சாக்கடை நன்னீராவது ஏது! அதுபோலவே தான் நல்ல மதிப்பெண் வாங்கும்  மாணவனைப் பார்த்து குறைந்த மதிப்பெண் வாங்குபவன் அழுக்காறு கொண்டால் கூடுதல் மதிப்பெண் வாங்கும் முயற்சியில் ஈடுபடமாட்டான். அதற்கு மாறாக அதிக மதிப்பெண் வாங்கியவன் மீது குற்றங்களை, குறைகளைக் கற்பித்துக் கூறுவான். ஏன் ‘காப்பியடித்து’ விட்டான் என்றே கூறுவான்.  மேலும் ‘மோசமாகி’ ஆசிரியர், கையூட்டுப் பெற்றுவிட்டார் என்று கூடக் கூறுவான்.  ஆதலால், எந்த வகையிலும் அழுக்காறு தீதே.

    அழுக்கற்றை அகற்றும் வழி, நல்லவர்களை  – வாழ்பவர்களைப் பாராட்டி மகிழ்வதுதான். அதோடு பெற்றவைகளைக் கொண்டு மகிழும் மனம் வேண்டும். பெறாதவைகளைப் பெறும் முயற்சியும் வேண்டும். உப்பரிக்கைகளைப் பார்த்துப் புழுங்குதலைத்  தவிர்த்து குடிசைகளில் வாழ்பவரை நோக்கி இரக்கங் கொள்ளுதல் வேண்டும். இத்தகு மனப்பான்மை வாழ்க்கைக்கு ஆக்கம் தரும்.

    எப்போதும் நல்லவனவற்றையே நாடுதல், நல்லனவற்றைப் பற்றியே பேசுதல் அழுக்கற்றிலிருந்து தப்பும் ஒரு வழி. எங்கும் எதிலும் எவரிடத்திலும் குற்றம்  – குறைகள் இருக்கும்.  எல்லாரும் கடவுளா என்ன? நாம் அவர்களிடத்தில் உள்ள குணங்களையே  எடுத்துக் கொள்ள வேண்டும். நல்லவைகளைப் பாராட்ட வேண்டும். நாம் ரோசாச் செடியில் முட்களை எடுக்கக் கூடாது. மலர்களையே எடுக்க வேண்டும்.

    அழுக்காறு என்ற தீய குணத்திலேயே மனித குலம் ஒன்றுபட்டு வாழ முடியவில்லை. பகையில் சிக்கித் தவிக்கிறார்கள். அழுக்காறு தனித்தும் நிற்காது. அழுக்காற்றின் படை அவா, வெகுளி இன்னாதன சொல்லல், கலகம் எல்லமேயாம்.

    ஆதலால் அழுக்காறு கொண்ட மனிதன் வளர்தல் அரிது; வாழ்தல் அரிது; அதனாலேயே ‘திருச்செற்றுத் தீயுழி உய்த்துவிடும்’ என்றது திருக்குறள். தேளின் கொடுக்கு, நஞ்சாம் தன்மைபோல அழுகாறுடையார் உள்ளம் நஞ்சாகும்.

    அழுக்காறு கொள்ளற்க! மற்றவர் வாழ்வதைக்கண்டு மகிழ்க! நீயும் வாழ முயல்க!  நல்லனவற்றையே காண்க! நல்லனவற்றையே பேசுக. மற்றவர்கள் ஆற்றலை, அறிவைப் பாராட்டி மகிழ்க! எவரோடும் பழகுக! தோழமை கொள்க! மறந்தும் மற்றவர்களைப் பற்றிப் புழுக்கம் கொள்ளற்க!

     

     

     

     

     

     

    _________________________________
    REF: http://www.tamilvu.org/library/nationalized/pdf/47.KUNDRAKUDIADIGALAR/VAZAKAINALAM.pdf
    இது ஒரு நாட்டுடைமையாக்கப்பட்ட  நூல், நாட்டுடைமையாக்கப்பட்டது  நிதியாண்டு 2007-2008 ல்

    மின்பதிப்பாக்க உதவி: தேமொழி

     

     

     

     

    Share
  • சம்பத்து – கிம்பத்து

    சு. ​கோதண்டராமன்

          “உனக்கு ஒரு சம்பவம் ஞாபகம் இருக்கா, கிம்பத்து? நாம ஃபோர்த் ஃபார்ம் படிக்கும்போது ஒரு நாளைக்கு எங்க ஸான்ஸ்கிரிட் வாத்யார் வழக்கம் போல மேஜை மேலே சாய்ஞ்சு தூங்கிண்டிருந்தார். அந்த நேரம் பார்த்து, கல்வி அதிகாரி வரார். நாங்க ஜன்னல் வழியாப் பாத்துட்டு, சார், சார், டிஈஓ வரார் சார் என்று எழுப்பினோம். மனுஷன் பதட்டமே படாமல், தஸ்மாத் னு சொல்லிண்டே நிமிர்ந்தார். இவர் நிமிர்றதுக்கும் டிஈஓ உள்ளே நுழையறதுக்கும் சரியா இருந்தது.

          “என்னங்காணும் என்னைப் பாத்த உடனே தஸ்மாத்துங்கிறீர். வெய்யறீரா, என்ன அர்த்தம் தஸ்மாத்துன்னான்னு கேட்டார் அதிகாரி.

          “தஸ்மாத் னா அதனாலேன்னு அர்த்தம்னார் இவர்.

          “அதனாலேன்னா இதுக்கு முன்னாடி ஏதோ சொல்லிக்கிட்டு இருந்தீர்னு ஆகுதே. நீங்க மேஜையிலே குப்புறப் படுத்துத் தூங்கினதைப் பார்த்தேனேன்னார் அவர்.

          “கும்பகர்ண ஏவம் நித்ராயாம் மக்னஹன்னு முதல்லே சொன்னேன். நீங்க அதை விட்டுட்டு தஸ்மாத்தை மட்டும் புடிச்சிண்டிருக்கேளேன்னார் இவர்.

          “அதுக்கு என்ன ஓய் அர்த்தம்னார் அவர்.

          “இப்படியாகக் கும்பகர்ணன் தூக்கத்திலே ஆழ்ந்திருந்தான்னு அர்த்தம்.

          “தத்ரூபமா நடிச்சுக் காட்டறீரோ, சரி, சரி போம்ன்னுட்டார் வந்தவர்.”

          “இதைக் கேளு சம்பத்து, அதே வருஷம் எங்க தமிழ் வகுப்பிலே நடந்ததைக் கேளு. தமிழ் ஐயா இலக்கண வகுப்பு நடத்திண்டிருந்தார். எனக்குத் தூக்கம் சொக்கித்து. ஐயா என்னை எழுப்பி, கிம்பத்து எழுந்திரு. நான் சொன்னது காதிலே விழுந்ததான்னார்.

          “நன்னா விழுந்தது ஐயான்னேன்.

          “தேமாங்கா, புளிமாங்கான்னா என்னன்னு விளக்கம் சொல்லு பார்ப்போம்னார்.

          “புளி மாங்காய்ங்கிறது ஆவக்காய் ஊறுகாய். தே மாங்காங்கிறது தேனிலே ஊறப்போட்டு முரப்பா பண்றதுன்னேன். பெஞ்சி மேலே ஏறுடான்னார். நான் ஏறினேன். நாலு பக்கத்து ஜன்னல் வழியாவும் பார்த்துட்டேன் ஐயா. எந்த மரத்திலேயும் மாங்கா இல்லேன்னேன். எல்லாரும் கொல்லுன்னு சிரிச்சப்பறம் எனக்கு முழிப்பு வந்தது.”

          கிழவர்கள் இருவரும் சிரித்து மகிழ்ந்தார்கள்.

          “என்னவோ கிம்பத்து, பார்க்கிலே வந்து உன்னோட பேசிண்டிருக்கிற ஒரு மணி நேரம் தான் மனசுக்கு நிம்மதியா இருக்கு. வீட்டிலே அந்தக் கிழவி படுத்தற பாடு தாங்கல்லே. சித்த நாழி ஒக்கார விடமாட்டா. ரேஷன் கடைக்குப் போ, எலக்ட்ரிக் பில் கட்டு, பால் கார்டு வாங்கிண்டு வான்னு வெரட்டிண்டே இருக்கா.”

          “சேலை இல்லேன்னு சின்னாயி கிட்டப் போனாளாம். அவ ஈச்சம்பாயைக் கட்டிண்டு எதிர்க்க வந்தாளாம்கிற கதையா இருக்கு. எங்காத்துக் கதையும் ஒண்ணும் கொறச்சல் இல்லே. என் பேத்தி இருக்கே மகா ராட்சசி. அப்படியே அச்சு அவதாரம் பாட்டி. சித்த நாழி உக்கார விடாது. தூக்கிண்டு அங்கே போ, இங்கே போன்னு வெரட்டிண்டே இருக்கு. குழந்தையைப் பெத்தவா ஜாலியா ஆபீசுக்குப் போயிடறா. என் ஆம்படையாளான்னா எனக்கு அடுப்பங்கரையிலே வேலை இருக்கு, சித்த குழந்தையைப் பாத்துக்கப்படாதான்னு வெரட்டறா. மத்தியானம் ஆச்சுன்னா, நான் டீவிலே சீரியல் பாக்கணும், குழந்தையைத் தூங்கப் பண்ணுங்கோன்னு உத்திரவு. அதுவானா தூளிலே படுத்துண்டு கை விடாம ஆட்டிண்டே இருங்கறது. சித்த கண்ணை அசந்தா அலறி ஊரைக் கூட்டறது குட்டிப் பிசாசு. எங்கேயாவது போய் ஒரு வாரம் நிம்மதியா இருந்துட்டு வரலாம் போல இருக்கு. நம்ம அருமை அவாளுக்கும் அப்பத் தான் புரியும்.”

          “எனக்கும் அப்படித்தாண்டா இருக்கு. திருப்பதிலே வாலண்டியர் வேணும்னு பேப்பர்லே போட்டிருக்கான். ஒரு வாரம் தான் வேலையாம். போய்ட்டு வரலாமா?”

          “சரி, போகலாம். விசாரிச்சுப் பாரு.”

          *     *     *     *     *

          “ஹலோ, திருப்பதிக்கு வாலண்டியர் வேணும்னு கேட்டிருக்கேளே, நானும் என் சினேகிதரும் வரலாம்னு இருக்கோம்.”

          “என்ன வயசாறது?”

          “ரெண்டு பேருமே அறுபத்தஞ்சு தான்.”

          “உடம்பிலே எந்த வியாதியும் இல்லியே?”

          “சுகர் பிரஷர் எதுவும் இல்லே. அம்மா பிசைஞ்சு போட்ட பழையது மகிமை. கல்லுக்குண்டு மாதிரி இருக்கோம்.”

          “சரி. பேரைச் சொல்லுங்க.”

          “என் பேரு சம்பத்து. என் சினேகிதர் பேரு கிம்பத்து.”

          “அது என்ன பேரு, வடக்கத்திக்காரரா?”

          “இல்லே. நம்மூர் தான். கிருஷ்ணசாமின்னு பேரு. சின்ன வயசிலேருந்து ஒண்ணாப் படிச்சோம். எப்போதும் ரெண்டு பேரும் சேர்ந்தே இருப்போம். அதனாலே மத்த பசங்கள்ளாம் சம்பத்து- கிம்பத்துன்னு பேரு வெச்சுட்டா. அதுவே நிலைச்சுப் போச்சு.”

          “சரி, இன்னிக்கு ராத்திரி 9 மணிக்கு வேன் புறப்படறது. சத்திய நாராயணர் கோவிலுக்கு வந்துடுங்க.”

          *     *     *     *     *     *

          “ஏண்டா வயசைக் கொறைச்சுச் சொன்னே?”

          “எழுபதுன்னு உண்மையான வயசைச் சொன்னா சேத்துக்க மாட்டா. கவலைப் படாதே. பர்த் சர்ட்டிபிகேட் எல்லாம் கேக்க மாட்டா.”

          *     *     *     *     *     *     *

          “உனக்கு எங்கேடா ட்யூட்டி கிம்பத்? உன்னோடே சேத்துப் போடுன்னேன். கேக்க மாட்டேன்னுட்டார் அந்த சூபர்வைசர். எங்கே வேகன்சி இருக்கோ அங்கே தான் போடுவாராம். வைகுண்டம் க்யூவிலே வரவாளை ரெகுலேட் பண்ணுன்னுட்டார். நாள் பூரா நின்னு நின்னு காலை வலிக்கறதுடா.”

          “எனக்கு செருப்பு பாத்துக்கற வேலை. ஒரு புள்ளையாண்டான் கம்ப்யூட்டரை வெச்சிண்டு ஒக்காந்திருந்தான். நான் வரவா பாதுகை எல்லாம் வாங்கி ராக்கிலே வெச்சுட்டு அந்தப் பொந்து நம்பரைச் சொன்னா அவன் ரசீது அடிச்சுக் குடுப்பான். நாள் பூரா குனிஞ்சு நிமிந்து பெண்டு கயண்டு போச்சுடா. நாளைக்கி நாம இதிலேருந்து கயண்டுட வேண்டியது தான். என்ன சொல்றே?”

          “பண்டரிபுரம் போறோம், ஒரு வாரம் ஆகும்னு சொல்லிட்டு வந்திருக்கோம், நினைவு இருக்கா. இப்ப போய் நின்னா, என்ன ஏதுன்னு ஆயிரம் கேள்வி வரும். பேசாம கீழ்த் திருப்பதிக்குப் போயி ஒரு லாட்ஜிலே தங்கிட்டு சொன்ன தேதிக்கு வீட்டுக்குப் போயிடலாம்.”

          “சரிடா.”

                    *              *              *              *              *              *              *

          “என்னடா இது, இந்த லாட்ஜிலே மேனேஜர்லேருந்து ரூம் பாய் வரைக்கும் நம்மையே சுத்தி சுத்தி வரான். ரெண்டு நிமிஷத்துக்கு ஒரு தடவை கதவைத் தட்டறான். நிம்மதியா இருக்க விடமாட்டானுக போல இருக்கே.”

          “நம்மைத் தீவிரவாதின்னு சந்தேகப்படறாண்டா. நான் வெத்திலை வாங்கக் கீழே போனப்ப, அவா தெலுங்கிலே பேசிண்டிருந்தது காதிலே விழுந்தது. இளம் தம்பதிகளா வருவா, வயசான தம்பதிகளா வருவா, இள வயசுக்காரா ரெண்டு பேர் சினேகிதாளா வருவா. ரெண்டு கிழவாளா இதுவரைக்கும் வந்ததில்லே. தீவிர வாதிகள் தான் சந்தேகம் வராம இருக்கணும்னு கிழவாளைப் புடிச்சு அனுப்பி இருக்கான்னு பேசிண்டிருந்தா.”

          “சரி. இந்த எடம் சரிப்படாது. எனக்குத் தெரிஞ்சவர் ஒத்தர் முதியோர் இல்லம் நடத்தறார். அவர் கிட்டே கேக்கறேன், பேயிங் கெஸ்டா ஒரு அஞ்சு நாளைக்கு இருக்கலாமான்னு.”

          “சரி. உடனே கேளு.”

          *     *     *     *     *     *     *

          “என்னவோ தெரிஞ்சவர்னு சொன்னியேன்னு பாத்தேன். செமத்தியா வேலை வாங்கறார்டா. இங்கே பணம் குடுத்தவா, குடுக்காதவா, பர்மனெண்டா இருக்கறவா, டெம்பரரியா இருக்கறவா எல்லாரும் சமம். நமக்கு நாமேங்கிறார். பெஞ்சைத் துடை, எலையை எடுத்துப் போடு, தண்ணியை எடுத்து வைன்னு வெரட்டிண்டே இருக்கார்டா.”

          “வேலை கூடச் செஞ்சுடலாம் போல இருக்கு. மத்தக் கிழங்கள்லாம் பேசற பேச்சு புடிக்கல்லே. உங்க பையன் வெளிநாட்டிலே இருக்கானாங்கிறது ஒண்ணு. புள்ளே மாட்டுப் பொண்ணு வீட்டை விட்டு வெரட்டிட்டாளான்னு கேக்கறது இன்னொண்ணு. இவாளுக்குப் பதில் சொல்ல முடியல்லே.”

          “சும்மாத் தான் நாலு நாளைக்கு வந்திருக்கோம்னு சொன்னா நம்ப மாட்டேங்கிறா. குடைஞ்சு குடைஞ்சு கேள்வி கேட்டுண்டே இருக்கா. பகல்லேயும் தூங்க முடியல்லே. ராத்திரிலேயும் கொசுக்கடி தூங்க முடியல்லே. நாளைக்குக் காலம்பற ஊரைப் பார்க்க போய்ச் சேர்நதுடுவோமா?”

          “அது தான் சரி. கஷ்டமோ, நஷ்டமோ நம்ம வீடு தான் நமக்கு சொர்க்கம்.”

    Share
  • நிமிர்ந்த நினைவு

    நிர்மலா ராகவன்

    ஒரு ​பெரிய காம்பவுண்டுக்குள் இருந்தது அந்த சிறிய வீடு. வாசலைச் சுற்றி உயரமான சுவர் எழுப்பப்பட்டு இருந்தது. மூடப்பட்ட கேட்டில் பெரிய  பூட்டு. ஏதோ சிறை போன்றிருந்தது.

    அலுவலகத்தினுள் ஐம்பது வயது மதிக்கத்தக்க ஒரு மாது. எதிரே, ரேணு — குனிந்த தலையுடன். நகத்தைக் கடிக்க வேண்டுமென்ற துடிப்பை அடக்கிக்கொள்ள பெரும் பிரயத்தனப் பட்டுக்கொண்டு.

    “பெரிய படிப்பு படிச்சவங்க நீங்க! இந்த இடத்துக்கு வரலாமா?” அங்கலாய்ப்புடன் கேட்டாள் லீலா.

    `என்றுமே என் உலகம் தனிதான்!` என்ற அயர்ச்சி எழ, ரேணுவின் முகத்தசைகள் இறுகின.

    அவ்வீட்டில் பெண்களும், குழந்தைகளும் மட்டும்தான். பன்னிரண்டு வயதுக்குமேல் ஆன எந்த ஆணுக்குமே அதற்குள் நுழைய அனுமதி கிடையாது. அவளைப் போன்றே கணவனிடம் வதைபட்டு, காவல் துறை அனுப்பியதாலோ, அல்லது தன்னிச்சையாகவோ வந்திருந்த, மலாய், சீனர் உள்பட, மற்றும் இருபது பெண்கள் அந்த ஆதரவு மையத்தில் இருந்தாலும், அவர்களைப்போல் தன் மணவாழ்க்கையின் அவலத்தை உரக்கப் பகிர்ந்துகொள்ளவோ, அல்லது தினசரி யார் என்ன வேலை செய்வது என்று வாய்ச்சண்டையில் பொழுதைப் போக்கவோ அவளால் முடியவில்லை.

    இல்லத் தலைவியான லீலாவின் பரிதாபத்தை எதிர்கொள்ள முடியாது முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.

    ஏழெட்டு ஆண்டுகளாக பெரும்பாடுபட்டு மறைத்து வைத்திருந்த அவலம் இப்படி பகிரங்கமாகி விட்டதே என்ற அவமானம்.

    காலையில் படுக்கையில் படுத்தபடியே கண்களைத் திறந்தபோது, தான் எங்கே இருக்கிறோம் என்றுகூட புரியாது திகைத்துப்போய், சொல்லவொண்ணாத பயம் மேலெழ, மீண்டும் கண்களை இறுக மூடிக் கொண்டது நினைவுக்கு வந்தது.

    பயம்…பயம்…

    கிட்டத்தட்ட பத்து வருடங்களாக. அதாவது, திருமணமாகி ஓரிரண்டு ஆண்டுகளுக்குள்ளேயே, வேறு எந்தவித உணர்ச்சியுமே மனிதப் பிறவிக்குக் கிடையாது என்பதுபோல் அல்லவா பயம் அவளை அலைக்கழிந்திருந்தது!

    `அது என்ன சில வருடங்கள்?` உள்மனம் கடுமையாக ஆட்சேபித்தது.

    லீலா ஏதோ சொல்வதுகேட்டது. “சீனச்சி, `எதுக்கும் இருக்கட்டும்`னு புருஷனுக்குத் ​தெரியாம, அப்பப்போ கொஞ்சம் பணத்தைப் பதுக்கி வைச்சுக்குவா. பிள்ளைங்களுக்கு விவரம் ​தெரியற வயசு வந்ததும், அவங்ககிட்ட சொல்லிட்டு, தனியா போயிடுவா. ஆயுசு பூராவும் அடி வாங்கிச் சாக மாட்டா. மலாய், தமிழ்ப் பொண்ணுங்கதான் இப்படி — கட்டினவன் என்ன செஞ்சாலும், பொறுத்துப்போறது!” உணர்ச்சியற்ற குரலில் சொன்னதைக் கேட்டால், பல​பேரிடம் இதையே திரும்பத் திரும்பச் சொல்லியிருக்கலாம் என்று ஊகிக்கும்படி இருந்தது. “ஒங்களுக்குத்தான் சுய சம்பாத்தியம் இருக்கே! தனியா போயிருக்கலாமே!”

    ரேணு மௌனம் சாதித்தாள்.`அவர் மாறுவாரென்று நம்பிக்கிட்டு இருந்தேன்,` என்று சொல்வது எவ்வளவு முட்டாள்தனம் என்று அவளுக்கே புரிந்தது.

    “ஒங்க வீட்டுக்காரருக்கோ வேலை இல்லை. என்னமோ தில்லுமுல்லு பண்ணினதில, வக்கீல் தொழில் செய்யற லைசன்சைப் பிடுங்கிக்கிட்டாங்க. நீங்க அப்படியா! சரி.. எப்படிப் பாத்தாலும், ஒங்க கைதானே ஓங்கியிருக்கணும்? ஆனா, நெசமாவே அவரோட கை ஓங்கி இருந்திருக்கு. அதுக்கு ஒங்க ஒடம்பு முழுவதும் அத்தாட்சி!” நம்ப முடியாதவளாக தலையை ஆட்டிக்கொண்டாள் லீலா. “எத்தனை எலும்பு முறிஞ்சிருக்கு! பொறுமைக்கும் ஒரு அளவு கிடையாதா, என்ன ரேணு? இங்க வந்து சேர்ந்திருக்காட்டி, ஒங்க உசிரே போயிருந்தாக்கூட ஆச்சரியமில்லை”. வதைபட்ட பெண்களுக்கு நல்வாழ்வு காட்டுவதிலேயே தன் காலத்தைச் செலவழித்திருந்தவள் லீலா. “இப்படி சுவரையே வெறிச்சுப பாத்துக்கிட்டிருக்காம, ஏதாவது பேசுங்க. நீங்க எல்லாத்தையும் மனம்விட்டுச் சொன்னாதான்  நாங்க ஒங்களுக்கு உதவ முடியும். நீங்களும் ஒரு தீர்வு காண முடியும்”.

    “தீர்வா?”

    “அதான், திரும்ப ஒங்க கணவர்கிட்ட போகப்போறீங்களா, இல்ல விவாகரத்துக்கு மனு போடப்போறீங்களான்னு..”

    “விவாகரத்து வேணாம்..” அவசரமாகச் சொன்னாள் ரேணு. கல்லூரி நாட்களில், அறிவார்த்தமாகத் தன்னுடன் பேசிப் பழகி, மரியாதையாக நடத்திய கிரியை இனி காண்போமா என்ற ஏக்கம் எழுந்தது.

    “நீங்க எந்த முடிவு எடுத்தாலும் எங்க பக்கபலம் உண்டு. ஆனா, திரும்பத் திரும்ப ரத்தக்களரியா இங்கே திரும்பி வரமுடியாது. எங்க விதிப்படி, ஒருத்தர் மூணு தடவைதான் வரலாம்”.

    உடல் உயரமாக இருந்தாலும், குறுகியபடி எதிரே அமர்ந்திருந்தவளின் மன இறுக்கத்தைக் குறைக்க ஒரே வழி தான் நிறைய பேசுவதுதான் என்று அனுபவத்தில் உணர்ந்திருந்த லீலா, “எனக்கு ஒண்ணுதான் புரியல. ஒங்களைப்பத்தி நீங்க பெருமையா நினைச்சு நடந்திருக்கணும். அது எப்படி  ஒங்களை இவ்வளவு மட்டமா ஒருவர்.., அது ஒங்க கணவரே ஆனாலும், நடத்த விட்டீங்க? ப்ளீஸ் ரேணு!  என்னை ஒரு தோழியா நினைச்சுச் சொல்லுங்க!”

    தோழி!

    இதுநாள்வரை தனக்கு நெருக்கமான ஒரு தோழிகூட கிடையாது என்ற உண்மை கசப்பாக அடிநாக்கில் படிந்தது. ரேணு விம்மினாள்.

    அவளை அழவிட்டுக் காத்திருந்தாள் மற்றவள்.

    எல்லாப் பெண்களையும்போல் தான் எந்த ஆடவனையும் சார்ந்து வாழ முடியாது என்றுதான் ரேணு நினைத்திருந்தாள், கிரியைச் சந்திக்கும்வரை. அந்த நினைப்பின் வித்து பக்கத்து வீட்டுக் கிழவர் அவளது ஆடைகளைக் களைந்து, ஏதேதோ செய்தபோது அவளது உள்மனத்தில் ஆழமாக விழுந்திருந்தது.

    தான் ஏதோ தப்பு செய்கிறோம் என்றவரை அந்தக் குழந்தை மனதுக்குப் புரிந்தது. ஆனால், பாவாடை அழுக்கானால்கூட திட்டும் தாயிடம் தாழிட்ட அறைக்குள் அடிக்கடி நடந்ததை எப்படிப் பகிர்ந்துகொள்வது?

    அவளால் முடிந்ததெல்லாம் தன் உடலை ஆக்கிரமிக்கும் தாத்தாவைக் கண்டு பயப்படுவது ஒன்றுதான். அந்த பயமே அவருக்குச் சாதகமானது புரியும் வயதாகவில்லை அப்போது.

    அடுத்த வருடமே ரேணுவின் பெற்றோர் வேறு வீட்டிற்கு மாறிப் போய்விட்டாலும், அந்த நாட்களின் பாதிப்பு வாழ்நாட்கள் பூராவும் தன்னை உறுத்தும் என்று அப்போது ரேணு எதிர்பார்த்திருக்கவில்லையே!

    தான் மிகவும் கேவலமானவள், இல்லாவிட்டால் தன்னை ஒருவர் இப்படியெல்லாம் நடத்தி இருக்கமாட்டார் என்ற குற்ற உணர்ச்சி அவளோடு தானும் வளர்ந்தது. மற்ற பெண்களைவிட எப்போதும், எல்லாவற்றிலும் தான் ஒரு படி மேலே நிற்க வேண்டும் என்ற வீம்பு உண்டாயிற்று.

    பதினாறு வயதில் சக மாணவிகள் ஆண்களைப்பற்றி கூடிக் கூடிப் பேசி, காரணமில்லாமல் சிரித்தபோது, அந்த மாதிரி பேச்சுக்கும் தனக்கும் எந்தவித சம்பந்தமும் கிடையாது என்பதுபோல் விட்டேற்றியாக நடந்துகொண்டாள்.

    “இப்படி இந்த வயசிலேயே சாமியாரா இருந்தா, யாராலதான் கிளாசில எப்பவும் முதலாக வரமுடியாது?” என்றெல்லாம் வயிற்​றெரிச்சலுடன் அவர்கள் பேசியது அவள் காதிலும் விழாமல் இல்லை. தன்னைப் பார்த்துப் பிறர் பொறாமைப்படும் அளவுக்கு உயர்ந்திருப்பதை எண்ணி பெருமைப்பட முடியவில்லை. இப்படி எல்லாரிடமிருந்தும் மாறுபட்டுப் போனோமே என்ற வருத்தம்தான் எழுந்தது அவளுக்கு.

    அப்போதெல்லாம், தன்னை இப்படி ஒரு கேலிப்பொருளாக, அரைப் பைத்தியமாக ஆக்கி விட்டிருந்த அந்தக் கிழவரின்மேல் ஆத்திரம் மூளும். அவர் என்றோ இறந்து போயிருக்கக்கூடும். ஆனால் அவர் செயலின் பாதிப்பு நிரந்தரமாகத் தங்கிவிட்டது அவளிடம்.

    இனி என்னதான் யோசித்தாலும், நடந்ததை மாற்றவா முடியும் என்ற உண்மை உறைக்கையில், இரண்டு மூன்று நாட்கள் ஏதோ அடியற்ற பாதாளத்தில் விழுந்துவிட்டதைப்போல் இருக்கும். மிகுந்த பிரயாசை செய்து, மேல் எழுவாள். அத்தகைய சமயங்களில் கொழுகொம்பாக அமைந்தது படிப்பு. மேலும் மேலும் புத்தகங்களுக்குள்ளேயே மூழ்கி, தனித்துப் போனாள்.

    `இப்படியே இருந்துவிட்டால் போதும்,` என்று சிறிது நிம்மதி எழுந்தபோதுதான் கிரி அவள் வாழ்க்கையில் புகுந்தான்.

    ரேணுவின் போக்கே புதுமையாக, ஒரு சுவாரசியத்தை உண்டு பண்ணுவதாக இருந்தது அவனுக்கு. அவன் நெருங்க நெருங்க, அவள் ஒதுங்கிப் போனது சவாலாக இருந்தது.

    `மற்ற பெண்களைவிட நீங்கள்தான் எத்தனை வித்தியாசமாக இருக்கிறீர்கள்!`

    `எவ்வளவு விஷயம் ​தெரிந்து வைத்திருக்கிறீர்கள்! பூர்வ ஜன்ம வாசனையாகத்தான் இருக்க முடியும்`.

    கடல் அலையால் ஓயாது அலைக்கழைக்கப்படும் பாறாங்கல்லே நாளடைவில் தன் கூர்மையை இழந்து, உருண்டையாக ஆகிவிடுகிறது. இவள் கேவலம், உயரமும், ஒல்லியுமான பெண். சற்றுக் கூனல் வேறு என்று கணக்குப் போட்டான். மாற்ற முடியாதா, என்ன!

    `இன்னும் என்னென்ன செய்தால் இவளை வழிக்குக் கொண்டு வரலாம்?` என்று யோசித்து யோசித்து திட்டம் போடுவதே ​பேரின்பமாக இருந்தது. ஓடும் விலங்கை துரத்தித் துரத்திப் பிடிப்பதில்தானே வேடுவனுக்கு உற்சாகம்!

    நாலடி தள்ளியே நின்று, அறிவுபூர்வமாக எதையாவது விவாதிக்கும்போது அவள் முகத்தின் இறுக்கம் குறைகிறது என்று புரிந்துகொண்டான். வழக்கமான தனது மன்மத ஆட்டங்களைக் குறைத்துக்கொண்டு, பல்வேறு பொருட்களில் அமைந்த புத்தகங்களைத் தேடிப் படித்தான். மறுநாள் வாசகசாலையிலோ, உணவு விடுதியிலோ ரேணுவைத் `தற்செயலாகச்` சந்தித்து, தன் அறிவுத்திறமையை வெளிப்படுத்திக் கொண்டான்.

    `என்னை மாதிரியே இவரும் ஒரு தனிமை விரும்பி. ஓயாது படிக்கிறாரே! என்ன துயரமோ, பாவம்!` என்று ஆரம்பத்தில் பரிவு காட்டியவள், தனிமையிலேயே வாடும் இருவர் ஒருவரை ஒருவர் சார்ந்தால், வாழ்க்கை எத்துணை இனிமையாக இருக்கும் என்று எண்ண ஆரம்பித்தாள்.

    பழம் கனிந்துவிட்டதை உணர்ந்தான் கிரி. இவளை அனுபவித்துவிட்டு ஓடிவிட ஒத்துக்கொள்ளமாட்டாள், கல்யாணம் ஒன்றுதான் வழி என்பதைப் புரிந்துகொண்டிருந்ததால், தன் கோரிக்கையை மெள்ள வெளியிட்டான்.

    உடனே அவள் சம்மதித்தபோது, தன் ஆற்றலில் மிகுந்த கர்வம் உண்டாயிற்று கிரிக்கு.

    முதல் வருடம், அவன் என்ன பேசினாலும் மெய்மறந்து, அவனுடைய முகத்தையே பார்த்த மனைவியால் கிரியின் ஆண்மை பெருமிதம் கொண்டது.

    போகப் போக, ஒரு இளம்பெண்ணுக்குரிய துடிப்பு சற்றுமின்றி, கண்ணிலும் ஒளியின்றி அவள் மந்தமாக இருந்தது அவனுக்கு ஏமாற்றமாக இருந்தது.

    அவனுடைய உடலின் நெருக்கத்தை அவள் வேண்டாவெறுப்பாகப் பொறுத்துப் போவதுபோல்தான் பட்டது.  `இவளுக்கு மரத்தால் செய்த உடம்பா என்ன,` என்ற ஆத்திரம் வந்தது அவனுக்கு.

    அவனுக்குப் புரியவில்லை, என்றோ மனதில் படிந்த பயம், அத்தருணங்களில் தன் உடலின் மேலேயே அவளுக்கு உண்டான அருவருப்பு, `இதெல்லாம் தவறு` என்ற உறுதியான எண்ணம் முதலியவைதான் அவள் போக்கிற்குக் காரணமென்று.

    புதுமோகம் எழுந்த வேகத்திலேயே மறைய, பிற பெண்களை நாடினான். மனைவியிடம் சிடுசிடுக்க ஆரம்பித்தவனுடைய போக்கை எந்தவித எதிர்ப்பும் காட்டாது அவள் ஏற்றது அவனுடைய ஆத்திரத்தை மேலும் அதிகப்படுத்தியது.

    `போயும் போயும் இப்படி ஒரு உம்மணாமூஞ்சியை மயக்கவா அவ்வளவு பாடுபட்டேன்!` நனவுலகத்தின் கசப்பை மாற்ற குடித்தான். குடித்ததால், இன்னும் கேவலமாக ஆனான்.

    ஒரு நாள் ரேணுவின் கன்னத்தில் ஓங்கி அறைந்தான் கிரி — ரசத்தில் உப்பு போட மறந்துவிட்ட குற்றத்துக்காக. உடனே, சம்பளத்தை அப்படியே தன் கையில் கொடுத்துவிடும் சாதுவான மனைவியைப் பகைத்துக் கொள்வதா சupதானா என்ற நினைப்பு எழுந்தது. ஆனால், ரேணுவின் கண்களில் அவனைவிட அதிக பயம் தென்பட்டபோது, அவனுக்குள் ஒரு பூரிப்பு. ஒரு போதை. தான் எப்படி வதைத்தாலும் இவள் எதிர்ப்பு காட்டமாட்டாள் என்று சந்தேகமற புரிந்தபோது, அவனுடைய கொடுமையும் அதிகரித்தது.

    `நான் ஒரு ஈனமான பிறவி. ஆண்கள் ஏதோ விதத்தில் என்னைப் பந்தாடுவதற்காகவே பிறந்து தொலைத்திருக்கிறேன் போலிருக்கிறது!` என்று, எது நடந்தாலும் அதைத் தன் குற்றமாக ரேணு ஏற்றது அவனுடைய போதையை அதிகரிக்கச் செய்தது.

    இரண்டு நாட்களுக்கு முன்னர், தேத்தண்ணீரில் சீனி குறைவாக இருந்ததென்று,  எண்ணை போத்தலால் நெற்றிப் பொட்டில் அடிக்கப்பட்டு, ரத்தம் பீறிட மயங்கிக் கிடந்தவளை பக்கத்து வீட்டினர் மருத்துவமனையில் சேர்த்திராவிட்டால், அந்தச் சமூக சேவகி சொல்லியதுபோல், இந்நேரம் அவள் கதை முடிந்திருக்கும்.

    ரேணுவின் நினைவோட்டம் நிகழ் காலத்தை வந்தடைந்துவிட்டதை முகத்தின்வழி உணர்ந்துகொண்ட லீலா தொடர்ந்து பேசினாள்: “மாஸ்டர்ஸ் பட்டமில்ல வாங்கி இருக்கீங்க! எவ்வளவு அறிவு! எவ்வளவு உழைப்பு! தனியார் பள்ளியில தலைமை அதிகாரியா இருக்கீங்க!”

    “உதவி தலைமை அதிகாரிதான்!” ரேணு முணுமுணுத்தாள்.

    “ச​உை. மத்தவங்க ஒங்களை இந்த அளவுக்கு தாழ்த்த எப்படி விட்டீங்க, ரேணு?”

    ரேணுவின் ஆள்காட்டி விரல் தன்னிச்சையாக வாய்க்குள் போய், மேல்பற்களுக்கும் கீழ்பற்களுக்குமிடையே மாட்டிக்கொண்டது.

    “அட, படிப்பை விடுங்க. படிச்சிருக்கீங்களோ இல்லியோ, நீங்களும் ஓர் ஆத்மா. ஓர் உயிர். நம்ப எல்லாருக்கும் சுதந்திரமா, பயமில்லாம வாழற உரிமை இருக்கு”. அழுத்தந்திருந்தமாக லீலா கூறியது மனதைத் தைத்தது.

    `இனியும் என்மேல் ஒருவர் ஆதிக்கம் செலுத்தி, கண்டபடி ஆட்டிவைக்க விடக் கூடாது`. உறுதி செய்துகொள்ள முயலும்போதே அது அவ்வளவு எளிதல்ல என்பதும் புரிந்தது.

    பிறருக்கு அடங்கியே பழகிவிட்ட நான் மாற முடியுமா?

    ஆனால், தான் இப்படியே இருந்தால், தன்மீது இன்னும் இன்னும் மதிப்பு குன்றி, வெறுப்பே தோன்றிவிடும் என்ற பயம் எழுந்தது.

    பயம்.

    இன்னும் எத்தனை காலத்திற்குத்தான் உணர்வுகள் முழுமையாக வளராத குழந்தையாக, எல்லா சந்தர்ப்பங்களிலும் பயந்து நடுங்கியே காலத்தைக் கழிப்பது!

    எந்த மனிதப்  பிறவியும் தனிமரமில்லை. `பிறருக்கு நன்மை செய்வதே வாழ்வெடுத்ததன் பயன்` என்று நினைக்கும் லீலா போன்ற நல்லவர்களும் இந்த உலகில் இல்லாமல் போகவில்லை.

    அந்த நிதரிசனமே துணிச்சலைத் தர, ரேணுவின் முகத்தில் சிறு நகை பூத்தது.

    லீலாவும் அதில் பங்கு கொண்டாள். “என்ன முடிவு எடுத்திருக்கீங்க? ரொம்ப அவசரப்படுத்தறேனோ?”

    “இல்ல.. மொதல்ல, ஒங்ககிட்ட ஒண்ணு சொல்லணும்,” ரேணு ஆரம்பித்தாள். “அப்போ எனக்கு ஏழு, இல்ல எட்டு வயசு இருக்கும்”. விம்மல் எழுந்தது, காலதாமதமாக.

    “எங்கம்மா என்னை பக்கத்து வீட்டில விட்டுட்டு, வேலைக்குப் போவாங்க..” பாம்புச் சுருளாய் இறுகிப் போயிருந்த நினைவுகள் சிறிது சிறிதாக நீள, குறுகியிருந்த ரேணுவின் நெடிய உருவமும் நிமிர ஆரம்பித்ததது.

    Share
  • தணிக்கைக்குணுக்கு-2

    இன்னம்பூரான்

    kunukku

    ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம். பத்து நாட்களுக்கு முன்னால் 30 10 2013 அன்று தமிழ்நாட்டு சட்டசபையில் சமர்ப்பிவிக்கப் பட்ட ஆடிட் ரிப்போர்ட்டிலிருந்து ஒரு சோறு. அந்த கூத்தைக்கேளுமையா. 1400 ஊழியர்களின் மாதாந்திர சேமிப்பை கஜானாவில் கட்டி விடவேண்டும், அத்துடன் கார்ப்பரேஷன் பங்கையும் கட்டி விடவேண்டும் என்று 2003லேயே வந்த அரசாணையை திரஸ்கரித்தது,திருச்சி கார்ப்பெரேஷன் என்று ஆடிட் குற்றம் சாட்டியது, அந்த ரிப்போர்ட்டில். பத்து வருடமா இதற்கு என்று கேட்டு விடாதீர்கள். அந்த சேமிப்பை விதி மீறி வங்கிகளில் தங்க வைப்பதிலும் மாதக்கணக்காக தாமதம். முனிசிபல் கார்ப்பரேஷன் இதனால் விளைவித்த நஷ்டம் ரூபாய் 33.40 லக்ஷம். இது எந்த தெய்வத்துக்கு ப்ரீதி? என்ன தான் பதில் சொல்றாக என்று பார்த்தால்:

    ஆடிட் கிட்ட சொன்னது: எதிர்பாராத தாமதம் என்ற சால்ஜாப்பு.

    டைம்ஸ் ஆஃப் இந்தியாவிடம்: ஆடிட்காரன் சொன்னது பழங்கதை; விதிப்படி செய்து விட்டோமே 2013ல். ஞொய்ங்!

    ( 2003லிருந்து தாமதமேனோ? -மவுனம்.)

    சில ஆவணங்கள் கிடைக்கவில்லை. அதான் தாமதம். (என்ன ஆவணமோ? ஆடிட் ரிப்போர்ட்படி அந்த சால்ஜாப்பு சொல்லவே இல்லையே.)

    எனக்கு என்னமோ தோன்றுவது இது தான்: என்னப்பா குப்பற விழுந்துட்டாயே. காயம் பட்டதா?

    ரத்தத்தைத் துடைத்துக்கொண்டு பதில்: விழுந்தேனா? நல்லாருக்கு போ! இது புருடா வித்தை.

    Image Credit: http://2.bp.blogspot.com/-crEqfwq7Tac/TngFR_bxj8I/AAAAAAAAEZE/G3Cm5UjEPHQ/s320/kunukku.JPG

     

    Share
  • சீதாயணம் – 6

     

    image

    அன்புள்ள நண்பர்களே,

    “சீதாயணம்” என்னும் எனது நாடகத்தைத் தமிழ்கூறும் வலை உலகம் படித்தறிந்திடச் சமர்ப்பணம் செய்கிறேன். முக்கியமாக இந்த நாடகத்தில் வரும் இராமன், இராவணன், அனுமான், சுக்ரீவன் போன்ற அனைவரும் மனிதராகக் காட்டப் படுகிறார்கள். இராம பிரானைத் தேவ அவதாரமாகக் கருதும் அன்பர்கள் என்னை மன்னிக்க வேண்டும். வால்மீகி முனிவருக்கு ஆசிரமத்தில் தன் முழுத் துன்பக் கதையைச் சொல்லி, பிள்ளைகளை இழந்து, கணவனால் புறக்கணிக்கப்பட்டு இறுதியில் தன் உயிரையும் போக்கிக் கொண்ட சீதாவின் பரிதாப நிகழ்ச்சி இது.

    அன்புடன்,
    ஜெயபாரதன், கனடா

    +++++++++++++

    [சென்ற வாரத் தொடர்ச்சி]

     

    சீதாயணம் படக்கதை

    நாடகம் : சி. ஜெயபாரதன், கனடா

    வடிவமைப்பு : வையவன்

    ஓவியம் : ஓவித்தமிழ்

     

     Scene -10

    Scene -11

    [தொடரும்]

    +++++++++++++++

    தகவல்

    1. Bharathiya Vidhya Bhavan Ramayana By C. Rajagopalachari [1958]

    2. Valmiki ’s Ramayana, Dreamland Publications, By: Ved Prakash [2001] and Picture Credit to Kishan Lal Verma

    3. Mahabharatha By: Rosetta William [2000]

    4. The Wonder that was India By: A.L. Basham [1959]

    5. The Ramayana & The Mahabharata By: Romesh C. Dutt [1969]

    6. Ramayana [Torchlight Publishing] By: Krishna Dharma [2004]

    **************

    S. Jayabarathan [jayabarathans@gmail.com ] (

    ​November ​6​, 2013) [R-2]

    http://jayabarathan.wordpress.com/

    Share
  • அவனை அழைக்காதீர்!…

    செண்பக ஜெகதீசன்

     

    அவனை அழைக்காதீர்,

    அவன்வழியில் செல்லட்டும்…!

    அவனொரு வானம்பாடி,
    வானிலெங்கும் வட்டமிட்டுப் பறக்கட்டும்..

    அவனொரு கவிக்குயில்,
    செந்தமிழில் சுதந்திரமாய்க் கூவட்டும்..

    அவனொரு வெண்புறா,
    சமாதானச் சிறகோசை கேட்கட்டும்..

    அவனொரு மடவன்னம்,
    நஞ்சொதுக்கி அன்புப்பால் பருகட்டும்..

    அவனொரு பொன்வண்டு,
    பூக்களிலே தேனருந்திக் களிக்கட்டும்..

    அவனொரு புள்ளிமான்,
    துள்ளியவன் துணைநாடிச் செல்லட்டும்..

    அவனொரு எருமைமாடு,
    தூற்றுபவர் தூற்றிக்கொண்டிருக்கட்டும்..

    அவனோர் அணிப்பிள்ளை,
    அன்புள்ளோர் அவன்முதுகைத் தடவட்டும்..

    அவனொரு கருமேகம்,
    கவின்மொழியில் கவிமழையாய்ப் பொழியட்டும்..

    அவனொரு கோவிற்படி,
    கும்பிடுவோர் காலடிகள் மிதிக்கட்டும்..

    அவனொரு கைகாட்டி,
    நாடுவோர்க்கு நல்லவழி காட்டட்டும்..

    அவனொரு சுமைதாங்கி,
    அல்லலுற்றோர் மனச்சுமையை இறக்கட்டும்..

    அவனொரு நிழற்குடை,
    அவதியுற்றோர் இளைப்பாறிச் செல்லட்டும்..

    அவனொரு பரம்பொருள்,
    எல்லாமாய் எங்கேயும் இருக்கட்டும்..

    அதனால்,
    அவனை அழைக்காதீர்,
    அவன்வழியில் செல்லட்டும்…!

    Share
  • ஒரு ஊதாப்பூவின் கண்ணுறக்கம்

    தேமொழி

    புஷ்பா தங்கதுரை என்ற புனைபெயரில் தமிழ் வாசகர்களுக்கு அறிமுகமான எழுத்தாளரின் இயற்பெயர் ஸ்ரீ வேணுகோபாலன். இவர் 1000 த்திற்கும் மேற்பட்ட சிறுகதைகளையும், 300 க்கும் மேற்பட்ட புதினங்களையும் எழுதியவர்.

    இவர் கதைகளில் அமைதியில்லா என் மனமே, துள்ளுவதோ இளமை, சிகப்பு ரோஜா கதைகள், என் பெயர் கமலா, காதல் ஒரு கனவு, தாரா… தாரா… தாரா… திருவரங்கன் உலா, மதுரா விஜயம், சத்ய சாய் போன்ற பல நூல்கள் குறிப்பிடத் தக்கன. நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த இவர் 1931 ஆம் ஆண்டு பிறந்தவர். இவரது முதல் கதை இவரது 18 ஆவது வயதில் 1949 இல் தினமணிக்கதிர் பத்திரிக்கையில் வெளியானது.

    இவரது கதைகள் அறிவியல், சமூகம், துப்பறியும் கதைகள் எனப் பலப் பரிமாணங்களில் வெளிவந்துள்ளன. கதைகளைத் தவிர்த்து தலபுராணங்கள், தொலைகாட்சித் தொடர்கள், நாடகங்கள், ஆன்மீக வரலாற்று நூல்கள் எனப் பல்துறைகளிலும் தனது எழுத்தாற்றலை வெளிப்படுத்தியுள்ளார். இவரது புதினங்கள் பல பிறமொழிகளிலும் மொழிபெயர்க்கப் பட்டுள்ளன. இவர் துப்பறியும் கதைகளைத் தனது புனை பெயரிலும், தலபுராணக் கட்டுரைகளைத் தனது இயற்பெயரிலும் வெளியிட்டுள்ளார்.

    ஸ்ரீ வேணுகோபாலனாக ஆன்மீக, வரலாற்றுப் புதினங்கள் மற்றும் சமுதாயக் கதைகளை எழுதியவரும், புஷ்பா தங்கதுரை என்ற பெயரில் வணிக நோக்கில் புகழ்பெற்ற இளமைத் துள்ளல் கதைகளை எழுதியவரும் இவரே என்பது இவரது வேறுபட்ட எழுத்துத் திறமையைக் காண்பிக்கும். உண்மைக் கதைகளை எழுதப் புனைபெயரைத் தேர்ந்தெடுததாக இவர்  குறிப்பிட்டுள்ளார். பதினைத்து ஆண்டுகள் எழுத்தாளர் வாழ்க்கையில் அடையாதப் புகழை ஆறே வாரங்களில் இவருக்குப் புனைபெயர் பெற்றுத் தந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

    சென்னை தபால் தலைமையகத்தில் வெளிநாட்டுத் தபால் பிரிவில் பணியாற்றிய இவரால் “ஊதாப்பூ” என்ற மாதாந்திர புதின பத்திரிக்கை ஒன்றும் சொந்தமாகத் துவங்கப்பட்டு, குறுகிய காலத்தில் 50,000 பிரதிகள் வரை விற்பனையை எட்டினாலும், நடைமுறையில் எதிர்கொள்ளப்பட்ட மேலாண்மை தொடர்பான குறைபாடுகள் எழவே நிறுத்தப்பட்டது. ஆன்மிகம் என்ற பத்திரிக்கையையும் ஆசிரியராக இருந்து நடத்தி வந்துள்ளார்.

    இவரது எழுதாற்றலுக்காகப் பரிசுகள் பலவும் பெற்றவர். மதுரகவி நாடகத்திற்காக இந்திய அரசாங்க விருது, சிறந்த சிறுகதைக்காக கல்கி பத்திரிக்கை பரிசு, சிறந்த எழுத்தாளருக்கான சாவி பத்தாண்டு விழா விருது, ராணி வெள்ளிவிழா விருது மற்றும் பாலு ஜுவெல்லேர்ஸ் விருது, சிறந்த திரைக்கதைக்காக சென்னை திரைப்பட ரசிகர்கள் விருது, அமுதசுரபி நாவல் போட்டி பரிசு எனப் பலப் பரிசுகளைப் பெற்றவர் இவர்.

    இவரது “ஒரு ஊதாப்பூ கண்சிமிட்டுகிறது,” “நந்தா என் நிலா,” மற்றும் “அந்த ஜூன் 16 ஆம் நாள்”ஆகிய கதைகள் திரைபடங்களாக வெளிவந்துள்ளன. அந்த ஜூன் 16 ஆம் நாள் திரைக்கதை வசனத்தையும் எழுதியுள்ளார். 2011 ஆம் ஆண்டு கேன்ஸ் திரைப்பட விழாவில் பங்கேற்கத் தேர்வாகிய கலை இயக்குனர் பிரபாகரன் இயக்கியுள்ள ‘அம்மா’ என்னும் குறும்படம் புஷ்பா தங்கதுரை எழுதிய சிறுகதையை மையமாக‌க் கொண்டு உருவாக்கப் பட்டது. இவரது ‘பெண் ஒரு ஜீவநதி, ‘நான் குடும்பத்து ஸ்டார்,’ ‘ஊரார்’ கதைகள் தொலைகாட்சித் தொடர்களாக வெளிவந்தன.

    நூல்கள் சேகரிப்பில் ஆர்வமுள்ள இவர் பல்லாயிரக் கணக்கான நூல்கள் நிரம்பிய நூலகம் ஒன்றையும் உருவாக்கி இருந்தார். உடல்நலமற்று ராஜீவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனையிலும், பிறகு தனியார் மருத்துவமனை ஒன்றிலும் சிகிச்சை பெற்று வந்த புஷ்பா தங்கதுரை அவர்கள் தனது 82 வது வயதில், நவம்பர் 10, 2013 அன்று உயிர் நீத்தார்.

    பின் குறிப்பு: எனது சிறுவயதில், இவர் கதைகள் சிறுவயதினர் படிக்கத் தகுதியற்றது என்று என் அம்மாவினால் தடை உத்தரவு போடப்பட்டது . இது இவரது எழுத்திற்கு அக்காலத்தில் இருந்த வரவேற்பைக் காட்டும்.

     

    படங்கள் உதவி:
    https://plus.google.com/photos/107223873489690009994/albums/5643981174513298545?banner=pwa

    http://www.kittz.info/2013/04/blog-post.html

    Share
  • அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் – கடல்வழிப்பயண அருங்காட்சியகம்

    13. அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் – கடல்வழிப்பயண அருங்காட்சியகம், மட்ரிட், ஸ்பெயின்

    சுபாஷிணி ட்ரெம்மல்

    கடல் பயணங்களின் வரலாற்றினை அறிந்து கொள்ள ஆர்வம் உள்ளவர்கள் ஒவ்வொருவரும் அவரவர் வாழ்கின்ற நாடுகளில் எங்கேனும் அமைந்திருக்கக்கூடிய கடல்பயணத்திற்கென்றே பிரத்தியேகமாக உருவாக்கப்பட்டுள்ள அருங்காட்சியகங்களைப் பற்றி கேள்விப்பட்டிருக்கலாம். விக்கி பக்கத்தின் இப்பகுதி http://en.wikipedia.org/wiki/Maritime_museum உலகின் அனைத்து கண்டங்களிலும் உள்ள பிரசித்தி பெற்ற கடல்வழிப்பயண, கப்பல் கட்டுமானம் தொடர்பான அருங்காட்சியகங்களின் பட்டியலை வழங்குகின்றது. இப்பக்கத்தின் பட்டியலில் இருப்பதை விடவும் மேலும் பல அருங்காட்சியகங்கள் நிச்சயம் இருக்கக்கூடும்.

    எனது அனுபவத்தில் என் வெவ்வேறு பயணங்களின் போது இத்தகைய வகையிலான ஒரு சில அருங்காட்சியகங்களுக்குச் சென்று வந்திருக்கிறேன். பொதுவாக கடல்வழிப்பயணம், கப்பல்கள், அதன் தொழில்நுட்பம், கடல் பயணங்களை விவரிக்கும் ஆவணங்கள், சித்திரங்கள், கருவிகள் என்பனவற்றின் தொகுப்பாக இத்தகைய அருங்காட்சியகங்கள் அமைக்கப்பட்டிருக்கும். நீர்மூழ்கிக் கப்பலை விளக்கும் ஒரு அருங்காட்சியகத்தை நெதர்லாந்தில் பார்த்த ஞாபகமும் ஒரு அரச கடற்படை கப்பலின் அருங்காட்சியகத்தை மலேசியாவின் பங்கோர் தீவில் பார்த்த ஞாபகமும் இப்போது மனதில் நிழலாடுகின்றன. இந்த என் அனுபவங்களை விரிவாக்கும் தன்மையுடன் அமைந்தது ஸ்பெயின் தலைநகர் மட்ரிட்டில் அமைந்திருக்கும் கடல்வழிப்பயண அருங்காட்சியகம் (Naval Museum)

    அருங்காட்சியகத்தின் நுழைவாயில் (ஏப்ரல் 2013)
    அருங்காட்சியகத்தின் நுழைவாயில் (ஏப்ரல் 2013)

    உலகின் மிக முக்கியமான கடல்வழிப்பயணங்களுக்கான அருங்காட்சியகங்களில் இடம்பிடிக்கும் ஒன்றாக இது திகழ்கின்றது. இந்த அருங்காட்சியகத்தில் சேகரிக்கப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள சேகரங்கள் ஐபீரிய தீபகற்பத்தின் (ஸ்பெயின்) கடல் பயணங்கள், கடற்படையினர் பயன்படுத்திய கருவிகள், ஆகியவற்றை விளக்குவதாக அமைவதோடு உலக வரலாற்றில் ஸ்பெயின் நாட்டினரின் கடல் பயணங்களை விளக்கும் ஆவணங்களின் தொகுப்பாகவும் விளங்குகிறது என்று குறிப்பிட்டால் அது மிகையாகாது.

    இந்த அருங்காட்சியகம் மட்ரிட் நகரின் ஏனைய சிறப்பு வாய்ந்த அருங்காட்சியகங்களான, ப்ராடோ, ரைனெ சோஃபியா அருங்காட்சியகங்களின் அருகிலேயே அமைந்திருக்கின்றன. 1792ம் ஆண்டு முதன் முதல் இந்த அருங்காட்சியகம் மட்ரிட் நகரில் ஆரம்பிக்கப்பட்டாலும், 1843ம் ஆண்டில் தான் மட்ரிட் நகரில் இது ஒரு முழுமையான அருங்காட்சியகமாக உருப்பெற்றது. அதன் பின்னர் இந்த அருங்காட்சியகம் தற்போது அமைந்திருக்கும் இடத்திற்கு 1932ம் ஆண்டில் மாற்றம் செய்யப்பட்டது. 1977ம் ஆண்டு தொடக்கம் இந்த அருங்காட்சியகம் ஸ்பெயின் Ministry of Defense கட்டிடத்தின் ஒரு பகுதியுடன் இணைக்கப்பட்டுள்ளது.

    போரில் பயன்படுத்தப்பட்ட ஒரு கருவி, அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது (ஏப்ரல் 2013)
    போரில் பயன்படுத்தப்பட்ட ஒரு கருவி, அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது (ஏப்ரல் 2013)

    இந்த அருங்காட்சியகத்தின் உள்ளே செல்லும் முன் காவல் அதிகாரிகளின் சோதனைகளை முடித்துக் கொண்டுதான் செல்ல வேண்டும். நான் இங்கு சென்றிருந்த சமயத்தில் இப்படி ஒரு அதிகாரி என் பைகளை சோதிக்க நான் அவரிடம் நான் ஒரு சாதாரண சுற்றுப்பயணி மட்டுமே. ஒரு தீவிரவாதியல்ல என்று கூற அவரும் உடன் இருந்தவர்களும் சிரித்து விட்டனர். இத்தகைய சோதனைக்குப் பிறகு படிகளில் ஏறி முதல் மாடிக்குச் செல்லவேண்டும். இங்குதான் நுழைவாயில் பகுதி உள்ளது. இங்குள்ள அலுவலகப் பகுதியில் கட்டணம் செலுத்தி டிக்கட்டை பெற்றுக் கொண்டு அருங்காட்சியகத்தின் உள்ளே நுழையலாம்.

    இந்த அருங்காட்சியகத்தின் மிகச் சிறப்பு வாய்ந்ததொரு சேகரிப்பாகக் கருதப்படுவது Mappa Mundi எனப்படும் ஒரு வரைபடம். 1500ம் ஆண்டு வரையப்பட்டதாகக் கருதப்படும் இதனை வரைந்தவர் ஜூவான் டி லா கோஸா (Juan de la Cosa). இந்த வரைப்படம் கொலம்பஸ் அமெரிக்காவிற்கு மேற்கொண்ட பயணத்தை படிப்படியாக விளக்குவதாக அமைக்கப்பட்டுள்ளது. இதுவே அமெரிக்காவின் முதல் வரைபடம் என்பதும் இங்கு குறிப்பிடப்பட வேண்டிய ஒன்று.

    1500 இல் வரையப்பட்ட மேப்பா முண்டி (அசல்) - அருங்காட்சியகத்தின் உள்ளே (ஏப்ரல் 2013)
    1500 இல் வரையப்பட்ட மேப்பா முண்டி (அசல்) – அருங்காட்சியகத்தின் உள்ளே (ஏப்ரல் 2013)

    1450லிருந்து 1460க்குள் பிறந்தவராக இருக்கலாம் எனக் கருதப்படும் ஜூவான் ஒரு வரைபட நிபுணர். இவர் அமெரிக்காவிற்கான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கடற்பயணங்கள் சிலவற்றை மேற்கொண்டிருக்கிறார். அதில் கொலம்பஸ்ஸுடன் மூன்று முறை அமெரிக்க பயணம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அத்தகைய பயணங்களின் போது இவரது பணி அமெரிக்க வரைபடத்தை முழுமையாக உருவாக்குவது என்பதாகவே அமைந்தது. பின்னர் கமாண்டராக பதவி உயர்வு பெற்று அப்படி ஒருமுறை கப்பலில் அமெரிக்காவில் புதிய குடியேற்றத்திற்காக ஸ்பேனிஷ் மக்களை ஏற்றிக் கொண்டு சென்றிருந்தார். அப்பணியில் இருக்கும் வேளையில் அமெரிக்க இந்தியர்களால் தாக்கப்பட்டு அமெரிக்காவிலேயே இறந்தார்.

    மேப்பா முண்டியின் ரெப்ளிக்கா - வாசல் பகுதி சுவற்றில் இருப்பது. (ஏப்ரல் 2013)
    மேப்பா முண்டியின் ரெப்ளிக்கா – வாசல் பகுதி சுவற்றில் இருப்பது. (ஏப்ரல் 2013)

    இவர் தயாரித்த அமெரிக்க வரைபடமான மாப்பா முண்டி ஒரு ஜெர்மானிய அறிஞரான அலெக்ஸாண்டர் ஹும்போல்ட் அவர்களுக்கு தற்செயலாக ஒரு பெர்ஷிய கடையில் 1832ம் ஆண்டு காணக் கிடைத்தது. இதனை Baron Walckenaer வைத்திருந்தார். அது சமயம் அவர் தொகுத்துக் கொண்டிருந்த அட்லஸ் தொகுப்பில் இது இடம்பெறுவது அவசியம் எனக் கருதி இதனையும் இணைத்துக் கொண்டார் திரு.ஹும்போல்ட். முழு உருவாக்கம் பெற்ற Atlas Géographique et Physique இந்த மாப்பா முண்டியையும் இணைத்துக் கொண்டு வெளிவந்தது. இது உலகின் ஆய்வாளர்கள் மத்தியில் திடீர் கவன ஈர்ப்பை பெற்றது. Baron Walckenaer இறந்த சமயத்தில் ஸ்பெயின் அரசியார் இந்த வரலாற்று முக்கியத்துவம் நிறைந்த வரைபடத்தை வால்க்கனீயர் குடும்பத்தினரிடமிருந்து விலை கொடுத்து வாங்கினார். அது தொடக்கம் இந்த வரைபடம் அருங்காட்சியகத்தின் சேகரத்தில் ஒன்றாக இடம்பெற்றுள்ளது. தனி மனித சொத்தாக இருப்பதை விட இப்படி அருங்காட்சியகத்தில் இடம்பெறும் போது இங்கு வருகை தருவோர் அனைவரும் இந்த வரைபடத்தைக் காணும் வாய்ப்பு அமைகின்றது.

    சற்றே பிற்காலத்தில் உருவாக்கப்பட்ட மேலும் ஒரு வரைபடம் - கடல் வழி பயணங்களைக் காட்டுவதாக அமைந்துள்ளது.
    சற்றே பிற்காலத்தில் உருவாக்கப்பட்ட மேலும் ஒரு வரைபடம் – கடல் வழி பயணங்களைக் காட்டுவதாக அமைந்துள்ளது.

    அமெரிக்காவின் முதல் வரைபடம்.. கி.பி.1500ம் ஆண்டு ஆவணம்.. இது மட்டும் இந்த அருங்காட்சியகத்தின் சிறப்பன்று. ஏனைய மற்ற காட்சிப்பொருட்களையும் காணச் செல்வோமா?

    தொடரும்..

    Share
  • இந்த வார வல்லமையாளர்!

    திவாகர்

    நமது பாரதம் வாத விவாதங்களுக்குப் பெயர் போனது. அந்தக் காலங்களில் செய்யப்பட்ட விவாதங்கள் அனைத்துமே நல்ல நெறிக்கே இறுதியில் அழைத்துச் சென்றன என்பதை சமயம் சம்பந்தப்பட்ட வரலாறு படித்தோருக்கு நிச்சயமாகப் புரியும். மாணிக்கவாசகரின் புத்தபிட்சுக்களுடனான வாதம் அப்படியே எழுத்து வடிவில் நமக்குக் கிடைத்துள்ளது. ஆதி சங்கரராகட்டும் ராமானுஜராகட்டும், விவாதங்களில் மிகப் பெரிய அளவில் பங்கு கொண்டிருந்தனர். பண்டிதர்கள், ஆழ்ந்த அறிவுடையவர்கள், வெற்றி தோல்விகளை ஏற்றுக் கொண்டுள்ளார்கள் என்பது மட்டுமல்லாமல் வெற்றி பெற்றவரின் சீடர்களாகவும் ஆனது பற்றிய செய்தியும் அவர்களது வரலாற்றிலிருந்து தெரிய வரும்.

    இந்த விவாதங்கள் எல்லாமே ஒரு சில வரம்புகளுக்குக் கட்டுப்பட்டவை. ஆத்திகரானாலும் நாத்திகரானாலும் வெவ்வேறு மதங்களைச் சார்ந்தவராக இருந்தாலும் இந்த வரம்பு மீறாதநிலையில்தான் வாதப்பிரதிவாதம் செய்தனர் என்பதை பெரும்பாலான நிகழ்ச்சிகளில் அறிகின்றோம். இவை பற்றிய இன்று கிடைக்கும் செய்திகள் கூட இருபக்கங்களையும் நியாயமானவர்களாகவே வர்ணித்து எழுதியுள்ளார்கள் என்பதையும் இங்கே கவனிக்கவேண்டும். வாதத்துக்கும் விவாதத்துக்குமே இடம் உண்டே தவிர குதர்க்க வாதத்துக்கோ பிடிவாதத்துக்கோ அங்கு இடம் இல்லை. நவீன காலத்தில் பட்டி மன்றங்களாக இவை உருவெடுத்தன என்றாலும், பட்டி மன்றங்கள் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளாக மட்டுமே மாறிவிட்டதாகத்தான் இன்றைய நிலையில் அவைகளைக் கவனிக்கையில் இப்படி நினைக்க வேண்டியுள்ளது.

    ஒருகாலத்தில் நேருக்கு நேர் நின்று முகம் பார்த்துச் செய்யும் விவாதங்கள், இணையம் உலகத்தைச் சுருக்கிவிட்ட இன்றைய காலகட்டத்தில் முகமறியாத விதத்தில் விவாதங்கள் தொடர்ந்து நடந்துகொண்டுதான் இருக்கின்றன. இணையம் கொடுத்திருக்கிற வசதிகள் மூலம் படித்தவர்கள் பலர் பங்கு பெற்றுக் கொண்டுதான் இருக்கின்றனர். யார் வேண்டுமானாலும் எது வேண்டுமானாலும் இந்த இணைய விதத்தில் கலந்துகொள்ளும்போது பேசலாம் என்பத்யால் பல விவாதங்கள் குதர்க்க திசையில் போனாலும் நிறைய பயனுள்ள செய்திகள் அவைகள் மூலம் கிடைக்கின்றன (அதாவது நல்லவை தீயவை அறியப்படுகின்றன) என்பதையும் ஒப்புக்கொண்டுதான் ஆகவேண்டும். அப்படிப்பார்க்கையில் இந்த விவாதங்களில் பங்கு பெறுகின்ற பண்டிதரான திரு தேவராஜ் அவர்கள் அவ்வப்போது கொடுத்துக் கொண்டிருக்கும் விவரங்களும் செய்திகளும் நமக்கு, நமது எண்ணங்களுக்கு விருந்தாக அமைகின்றன என்பதை நிச்சயம் சொல்லலாம்.

    சமீபத்தில் ஒரு விவாதம் – படிப்பதால் உண்மையான ராஜயோகம் கிட்டும் என்கிற விஷயம்தான். இந்த வாரம் இந்த விவாதத்தினைக் கூர்ந்து கவனித்ததில் திரு தேவ் அவர்கள் சொல்லும் செய்திகள் எல்லாமே அவரது அறிவின் முதிர்ச்சியையும், ஆழ்ந்த ஞானத்தையும் சிறப்பாக வெளிப்படுத்துகின்றன. இவரது பாண்டித்யம் பற்றிப் பல இடங்களில் பார்த்ததுண்டு.

    எங்கு சமூகத்துக்கென எதிர்மறையான விஷயங்கள் பேசப்படுகின்றதோ அது தவறு என்பதையும் நம் முன்னோர்கள் எப்படியெல்லாம் நம் சமூகத்தை சீர்திருத்த முயற்சி எடுத்தார்கள் என்பதையும் மிகத் தெளிவான ஆதார விவரங்களோடு எடுத்து வைப்பதில் திரு தேவ் அவர்களுக்கு நிகர் தேவ் மட்டுமே. சமூகம் அதுவும் கற்றவர் சமூகம் என்பது மிகவும் பண்பட்டதாக மாறவேண்டும் என்ற இவரது எண்ணம் இவரது எழுத்தில் வெளிப்படுவதாகத்தான் உணர்கின்றேன்.

    சமீபத்தில் இவர் சிந்தனை ஒன்று ஒரு விவாத களத்தில் வந்து விழுந்ததை கையில் எடுத்து அவர் மொழியில் உங்களுக்காக முன் வைக்கிறேன். படிப்பின் பயன்பாடு எப்படி இருக்கவேண்டும் என்பதை இங்கு உணர்த்துகிறார்.

    “இதே வழியில்தான் என் சிந்தனையும் சென்றது. Dev2

    நூற்கல்வி விவேக மலர்ச்சிக்கு உறுதுணையாக

    அமைதல் வேண்டும்; அந்த விவேகம் மலர்ச்சி பெற்று

    ஞானமாகப் பரிணமிக்கும். விவேகத்தை ஊக்குவிக்காத

    எவ்விதக் கல்வியும் ஆன்மிகப் புலத்துக்கு ஒவ்வாதது,

    அது பெரும்பாலும் செருக்குக்கே அடிகோலும் என்பதே

    நான் புரிந்து கொண்டிருப்பது. கல்வியும், செல்வமும்

    மேலும் மேலும் சேகரிப்பைத் தூண்டுவன. ”உத்தவரின்

    கல்வி உதவாமற் போனது”. ஒப்புக்கொள்வோர்

    ஒப்புக்கொள்ளட்டும்,”

    பல விஷயங்கள், பல மேற்கோள்கள் மூலமாக பல இடங்களில் இவர் மூலம் எனக்குக் கிடைக்கின்றன. இவர் தெளிந்த ஞானம் பலருக்கு செல்கிறது என்பதே ஒரு பெரும் பயன் தானே.. இந்த வாரம் வல்லமையாளராக திரு தேவ் அவர்களைத் தேர்ந்தெடுப்பதில் என்ன ஆச்சரியம் இருக்கப்போகிறது? பண்டிதர் தேவ் அவர்கள் ஞானச் செல்வம் பற்பலருக்கும் இன்னும் நீண்டகாலம் மென்மேலும் சென்றடையவேண்டும் என்பது என் ஆசை. வல்லமையாளரான் திரு தேவ் அவர்களுக்கு தனிப்பட்ட முறையிலும் வல்லமைக் குழுவினர் சார்பிலும் என் வாழ்த்துகள்.

    கடைசி பாரா: திரு சத்திய மணி’யின் தீபாவளிப் பட்டாசு

    வெடி வெடி வெடியென இடபுறம்

    வெடியால் செவிடர்கள் வலபுறம்

    புகைந்திடும் சூழல் இடபுறம்

    இருமலில் இரைப்பவர் வலபுறம்

    கலகலச் சக்கரம் இடபுறம்

    கடனுக்கு கஞ்சி வலபுறம்

    இளைஞராய் குதிப்பவர் ஒருபுறம்

    இயலாமையில் சிலர் மறுபுறம்

    ந‌ரகாசுரர்க‌ள் எதிர் புற‌ம்

    நார‌ணண் ந‌ம்பி ந‌ம்புற‌ம்

    Share