Author: சாந்தி மாரியப்பன்

  • காகிதக்குறிப்புகள்..

     

    சாந்தி மாரியப்பன்

     

    காற்தடம் பதியாப்பாதையெனவும்,
    எழுதப்படாத வெற்றுக்காகிதமெனவும்
    முன் நீண்டு கிடக்கிறது
    இன்றைய தினம்.

    புட்களின் அதட்டலுக்குப் பயந்த
    விடிகாலைச்சூரியன்
    மேகப்போர்வை விலக்கி
    மெல்ல முகம் காட்டவும்
    தலையசைத்துப் பூமழை சொரிந்து
    பச்சையம் சுமந்த பயிர்களெலாம்.
    வரவேற்பு அளிக்கவுமென
    நன்றாகத்தான் ஆரம்பிக்கின்றன
    ஒவ்வொரு தினமும்,
    வெற்றுக்காகிதமென. (more…)

    Share
  • சிறகுதிர்த்த மின்மினி

    சாந்தி மாரியப்பன்

    மின்மினி மந்தையினின்று
    வழி தப்பிய எரிகல்லொன்று
    கவணிடை
    எறிகல்லாய்ப்புறப்பட்டது..
    வெகுதூரப்பயணமோவென
    ஏங்கி வினவிய சகாக்களைப்
    புறங்கையால் ஒதுக்கிவிட்டு
    உல்லாசமாய்ப்புறப்பட்ட உற்சாகத்துடன்
    துள்ளித்துழைந்தது அண்டப்பெருவெளியில்.
    இலக்கில்லாப்பயணத்தில்
    அதிரும் பிம்பங்களைச் சிதற விட்டபடி
    துழாவித்துழாவி உணர்கொம்புகள் நீட்டி
    முன்னேறிக்கொண்டுதானிருந்தது அது.
    இலக்கில்லா எவரோ.. எதுவோ..
    என்றேனும் ஓர் நாளில்
    இலக்கினை அடைந்தே தீரவேண்டிய
    நியதிக்குட்பட்டு
    பூமாதேவியிடம் மயங்கி
    முத்தமிட முயன்றதில்
    சீறி எரித்தது
    லக்ஷ்மண ரேகை..
    உதிர்ந்து வீழ்ந்தது மின்மினி
    ஆயிரமாயிரம் பரப்பளவில் தன் சிறகுகளை உதிர்த்தபடி..

    படத்திற்கு நன்றி: http://www.foxnews.com/science/2013/02/15/injuries-reported-after-meteorite-falls-in-russia-ural-mountains

    Share
  • இடப்பெயர்ச்சி

    சாந்தி மாரியப்பன்

    பக்கத்து வீட்டுத் தாத்தா
    திரும்பாப்பயணம் புறப்பட்டு விட
    சலனமின்றி
    இடம் பெயர்ந்தது சாவிக்கொத்து
    முன்னுரிமைப்படி..

    சாய்வு நாற்காலிக்கு அடுத்த தலைமுறையும்
    சொகுசு நாற்காலிக்கு மூன்றாம் தலைமுறையும்
    அவசரமாய் அடித்துக்கொண்டு
    ஆரவாரமாய் இடம் பெயர
    அமைதியாய் நிகழ்ந்ததோர் இடப்பெயர்ச்சி..
    துணி மூட்டையுடனும் தட்டுடனும்
    திண்ணையில் பாட்டி.

     

    படத்திற்கு நன்றி : http://valerioberdini.photoshelter.com/gallery/Life-on-the-Pavement-Kolkata-India/G0000.2lGdfeOmrg

    Share
  • கையறு நிலையில்

    சாந்தி மாரியப்பன்

    “எப்போதான் கண் திறந்து
    பார்க்கப்போறியோ?”
    அங்கலாய்த்த பக்தனுக்குக்
    கூரையைப்பிய்த்துக்கொண்டாவது
    உதவிடும் துடிப்பில்
    ஓடி வந்த கடவுள்
    பேச்சற்று நின்றார்..
    பிய்ப்பதற்குப்
    பொத்தல் கூரைக்கும் வழியின்றி
    வானமே கூரையாய்
    உறங்கும்
    நடைபாதை வாசியாய்க்கண்டு.

     

    படத்திற்கு நன்றி:http://www.123rf.com/photo_10678670_kolkata-india–february-03-streets-of-kolkata-man-sleeping-on-the-streets-of-kolkata-india-on-februa.html

    Share