சாந்தி மாரியப்பன்

 

காற்தடம் பதியாப்பாதையெனவும்,
எழுதப்படாத வெற்றுக்காகிதமெனவும்
முன் நீண்டு கிடக்கிறது
இன்றைய தினம்.

புட்களின் அதட்டலுக்குப் பயந்த
விடிகாலைச்சூரியன்
மேகப்போர்வை விலக்கி
மெல்ல முகம் காட்டவும்
தலையசைத்துப் பூமழை சொரிந்து
பச்சையம் சுமந்த பயிர்களெலாம்.
வரவேற்பு அளிக்கவுமென
நன்றாகத்தான் ஆரம்பிக்கின்றன
ஒவ்வொரு தினமும்,
வெற்றுக்காகிதமென.

ஏதேனும் சில வரிகளாவது கிறுக்கப்படலாம்,
மனங்களை வெல்லும்
வண்ண ஓவியமொன்று வரையப்படலாம்,
வரலாற்றைப் புரட்டிப்போடும்
சகாப்தங்கள் எழுதப்படலாம்,
அல்லது
எதற்குமே உபயோகப்படுத்தப்படாமல்
கசக்கி வீசப்படவும் கூடும்.
எதற்குமே அது கோபித்துக் கொள்வதில்லை.
மீண்டும் மீண்டும் வந்து
காலைக்கட்டிக்கொள்ளும்
செல்லக்கோபத்திற்குப் பயப்படாத குழந்தையாய்
வந்து கொண்டுதான் இருக்கிறது நம்மிடம்.

தான் சுமந்திருக்கும் பூக்களின் நறுமணத்தில்
தன்னை மறந்து
பால்வெளியில் உயரப்பறக்கும்
மிதவைத்தருணங்களில்
சேற்றிலும் விழுந்து தொலைத்து விடுகிறது,
சட்டென இழுபட்டு.
கருப்புக்கறைகளைக் காலம் முழுக்கச் சுமக்க நேரிட்ட
அவலத்தையெண்ணி,
அவை நினைவு கூரப்படும்போதெல்லாம்
மவுனத்தைப் பூசிக்கொண்டு விடுகிறது.

அற்புதமானதாகவோ சாதாரணமாகவோ
ஏதேனும் ஒரு
கிறுக்கலையாவது பரிசளிப்பது மிக நன்று.
அதை
வெறுமையாகவே விட்டுச்செல்வதை விட.

 

 

பதிவாசிரியரைப் பற்றி

10 thoughts on "காகிதக்குறிப்புகள்.."

  1. புதிய நாளும் வெற்றுத் தாளும் …
    தாளை உபயோகிக்கும் விதமும் அந்நாளில் நிகழ்த்திய செயல்களுமென …
    நீங்கள் ஒப்பிடும் பரிமாணம் அருமையாக இருக்கிறது சாந்தி.
    கவிதையும் அதன் தலைப்பும் பொருத்தம், அருமை, நன்றி.
    அன்புடன் 
    ….. தேமொழி 

  2. தாளோடு நாளை ஒப்பிட்டிருப்பது சிறந்த சிந்தனையாகத் தோன்றுகின்றது. நீங்கள் சொல்வதுபோல் நம்முடைய செல்லக் கோபத்திற்கெல்லாம் நாள் பயப்படுவது இல்லை; மீண்டும் மீண்டும் நம் காலைக் கட்டிக்கொள்ளவே செய்கிறது.
    நம் வான்புகழ் வள்ளுவர் ஒவ்வொரு நாளையும் உயிரை அறுக்கும் வாளோடு ஒப்பிடுகின்றார்.
    “நாளென ஒன்றுபோல் காட்டி உயிர்ஈரும்
    வாளது உணர்வார்ப் பெறின்.”

    கவிதை அருமை. பாராட்டுக்கள் சாந்தி! தொடர்ந்து கவி விருந்து படையுங்கள்!

  3. “ஒன்றுமில்லாத ஒரு தினம் எதற்காவது பயன்படுத்து’ அருமையான கரு.

    “மீண்டும் மீண்டும் வந்து
    காலைக்கட்டிக்கொள்ளும்
    செல்லக்கோபத்திற்குப் பயப்படாத குழந்தையாய்
    வந்து கொண்டுதான் இருக்கிறது நம்மிடம்”

    இவை நான் ரசித்த வரிகள்.

    ஒரு பொழுதை ஒன்றும் செய்யாமல் காலண்டரின் தாளை கிழித்து எறிவது போல் தேமே என்று வீனாக்குவது ஏன்? சூடு சொரனை இல்லாம்ல் இருப்பதை விட சரியோ தப்போ எதையாவது சொல்லு என்பார்கள். கவிதையின் கடைசி 4 வரிகள் இதைத்தான் சொல்கிறது.அருமையான கவிதை. வாழ்த்துக்கள்.

  4. வல்லமையாளர் திரு.லோகநாதன் அவர்களுக்கும், அமைதிச்சாரல் சாந்தி அவர்களுக்கும் வாழ்த்துகள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.