Author: கோதை நாராயணன்

  • திருப்புமுனைத் திருப்பதி!

    கோதை நாராயணன்

    அமர்க்கள 
    ஆரம்பம் எங்கள் 
    திருப்பதிப் பயணம்…!
    பெருமாளின் திருவடிப்                               balaji
    பெருமை உணர்ந்த 
    பரவசம் அனைவரிடமும்…!

    சந்திப்புகள் வந்தும் 
    சலிக்காமல் சென்ற ரயிலின் 
    வேகத்தை நட்பு கொண்டு 
    விவேகமாய் இறங்கியதும் 
    புரிந்தது தைரியத்தின் விலை…

    ஆவலாய்ப் பயணித்த எங்களின் 
    அடுத்த கட்டமோ அம்பாளை நோக்கி…
    என் தாய் திருவடி தேடிய யாவரும் 
    மெய் மறந்த அவ்வேளை,
    ரோஜா மணக்க 
    பட்டு ஜொலிக்க 
    தெய்வீகம் திணறச் செய்ய 
    அலங்காரத்தில் அம்சமாய் அம்பாள் 
    அன்பால் எங்களை ஆட்கொள்ள…
    பிரார்த்தனைக்கு வார்த்தையின்றித் தேடப் 
    பிள்ளையின் பசி அறியாத தாயாயென்ன ?
    இன்னும் 
    இனிமையாய் ரோஜா மணம் …!

    இன்முகமாய் நாங்கள்… 
    அவளின் கண்கள் பேசியதோ 
    பெருமாளைக் காணக் காத்திருந்த 
    பக்த கண்களோடு ரகசிய மொழி…

    அவளின் அருள் தித்திப்பில் 
    திகைப்பாய் நகர்ந்தோம் திருவடி காண…
    வகை வகையாய் வரிசைகள்…
    வான் முழுதும் கலந்த 
    என்பெருமாளின் அருள் சுகந்தம்…
    இடர்களை இடித்து 
    இன்பம் தரும் நம்பிகையொளி…

    ஆம்…தந்தார் தரிசனத்தை அமைதியாய்…
    மெய்சிலிர்க்கக் காணக் கண்கள் கோடி…
    சில்லென்று உணர்ந்த தருணம் 
    சிங்காரமாய் தெய்வமே…ஏழுமலையானே…ஸ்ரீனிவாசா…
    தங்க மேனியில் தணலாய் ஜொலிக்கக் 
    குவிந்த எங்கள் கரங்கள் 
    குறை தீர்ந்த திருப்தியில்…!

     

    Share
  • ஆக்கிரமிப்பு

    கோதை நாராயணன்

    “என்னடி ஆச்சு… பெரிய கப்பல் கவிழ்ந்தாப்புல கன்னத்துல கை வைச்சுண்டு… நான் வருவது கூட தெரியாம…?

    “ஏன்னா… நம்ம 51 F  சுகன்யா இருக்காளே குழந்த…?”

    “யாரு.. நம்ம விகாஷினி குட்டியோட அம்மாவை தான சொல்ற… அவளுக்கென்ன இப்போ புது அறிமுகம் ?”

    “முதல்ல சொல்லுறத கேளுங்கோ…! அவ தன் ஆத்துகாரரோட டைவர்ஸ் வாங்க போறாளாம் ….” சொல்லும் போதே சரஸ்வதி மாமிக்கு மூச்சிறைத்தது .

    “பின்னே அவா அவா  ஆத்துக்காரரோட தான் டைவர்ஸ் வாங்க முடியும் …ஹா ..ஹா ..” சிரித்தார் சுந்தரம் .

    “உங்களுக்கு எல்லாமே கேலியா போச்சு … நான் பெத்த பிள்ளையாட்டம் நினைச்சுண்டு இருந்தேனே இப்டி பண்றாளே … காலையில வந்து ஒரு பாடு சுகன்யா அழுதுண்டு தான் தீர்மானமா இருக்கிறதா சொல்லிட்டு போய்ட்டான்னா … அதுல இருந்து மனசு கிடந்து அடிக்கிறது … நல்ல பொண்ணு… ரகுவிற்கும் என்ன குறைச்சல் அவனும் நல்ல பையன்… பின்ன ஏன் இவாளுக்கு புத்தி இப்டி போறது?”

    சுந்தரம் பதிலளிக்கும் முன்னே, இண்டர்காம் 51 H யிலிருந்து வர “ஆமா கௌசி .. உனக்கு எப்ப தெரியும் ?” சுந்தரத்திடம் புலம்பியவற்றின் தொடர்ச்சியை போனில் தொடர்ந்தாள் சரஸ்வதி.

    அந்த ப்ளாட்டில் நிறைய பேர் குடியிருந்தாலும் சரஸ்வதி மாமி மற்றும் சுகன்யாவுடன் சேர்த்து ஒரு நாலு குடும்பம் மட்டும் மிகவும் ஒன்றுக்குள் ஒன்றாக பழகி வந்தார்கள். இதில் குழந்தை இல்லாத தம்பதிகளான  சுந்தரம் – சரஸ்வதி தம்பதிகள் மட்டுமே வயதில் பெரியவர்கள். இதில் சுகன்யா – ரகுவும் காதல் மணம் புரிந்து இந்த பிளாட்டிற்கு குடி வந்த போது சரஸ்வதி அவர்களுக்கு பெருமளவு அரவணைப்பு கொடுத்தாள். சுகன்யாவிற்கு தலைபிரசவம் ஆன போது இவளே முன் நின்று அனைத்தும் பார்த்தாள். குழந்தை விகாஷினி என்றால் அனைவருக்கும் உயிர். ரகுவும் சுகன்யாவும் வேலைக்கு சென்ற பின் இவர்கள் மூன்று குடும்பங்கள் மட்டுமே மாற்றி மாற்றி குழந்தையை பார்த்து கொண்டார்கள். இந்த இரண்டு வருடமாக தான் விகாஷினி ஸ்கூலுக்கு சென்று வருகிறது. இந்த தருணத்தில் தான் சுகன்யா டைவர்ஸ் குண்டை தூக்கி போட்டு விட்டு சென்றாள்.

    தொடர்ந்து வந்த நாட்களில் மாமி புலம்பி புலம்பி அடிக்கடி மற்ற தேவகி ,கௌசி இவர்களுடன் ஆலோசனை கூட்டம் போட்டு போட்டு ஓய்ந்தாள் .

    சுந்தரமும் இரு முறை லிப்டிலும், கீழே பார்க்கிங்கிலும் சில முறை ரகுவை பார்க்க நேர்ந்தது. பிரச்னை என்றால் அதில் ஆண் என்ன பெண் என்ன… பெண்களாவது புலம்பி அழுது தீர்த்து கொள்கிறார்கள். ஆண்கள் தங்களுக்குள்ளேயே இறுக்கி கொண்டு… ம்…. ரகுவின் முகமும் தொங்கி போய் தான் இருந்தது. சுந்தரத்தை கண்ட போதெல்லாம் சங்கடமாய் ஒரு சிரிப்பு வலுக்கட்டயமாய் உதிர்த்து விட்டு மொபைலை காதில் சொருகி கொண்டான்.

    அன்று அலுவல் முடிந்து வீட்டிற்கு வந்த சுந்தரத்தை சரஸ்வதி, “ஏன்னா … நா… ஒண்ணு சொல்லட்டுமா …?”

    “ஒண்ணு என்ன எத்தனை வேணா சொல்லு…”

    “ப்ச் … நா … சீரியஸா பேசிண்டுருக்கேன் நீங்க தமாஸ் பண்ணாம கேளுங்கோ ….!”

    “சுகன்யாவும் ரகுவும் டைவர்ஸ் வாங்க போறா …” “பத்து நாளா இத மட்டும் தான் நீ என்கிட்டே சொல்லிட்டு இருக்க தெரிமோ … வேற ஏதாவது புது விஷயமா …?”

    ஒரு நிமிஷம் சுந்தரத்தை முறைத்து விட்டு, “என் மனதுக்கு நீங்க போய் பேசி பார்த்தா, அவா மனசு மாறுவான்னு தோன்றதுன்னா …..”

    “ஏன் என்ன பார்த்தா தான் மடையன்னு தோண்றதா உனக்கு … இங்க பாரு சரசு … இப்ப எல்லாருமே படிச்சவளா தானே இருக்கா … அதனால அவா தீர்மானத்துல நாம தலையிடக் கூடாதுடி … உணர்வுகளுக்கு மீறிய புரிதல் இந்த காலத்துல யாருக்கு இருக்கு?”

    “நீங்க போய் பேசி பார்த்துட்டு விடுடின்னு சொல்லுங்கோ நா கேட்குறேன் … எனக்கு மனசு ஆறவே மாட்டேங்குது … விகாஷினியை நினைச்சு பாருங்கோ… அவளுக்காக போய் பேசுங்கோ …!”

    விகாஷினி பேரை கேட்டதும் சுந்தரத்திற்கு மறுக்க முடியவில்லை .

    மறுநாள் ரகுவின் வீட்டிற்கு சென்ற சுந்தரம் பேசி தோற்று தான் திரும்பினார் .

    அவர் வரவுக்காகவே காத்திருந்த சரஸ்வதி, “சொல்லுங்கோ … போனேளா … பேசினேளா … மனசு மாறினாளா…?”

    புன்னகையை உதிர்த்த சுந்தரம், “பிரியத்தான் போறாங்களாம்…!”

    “அட …ராமா …!”

    “ஆனா அவா பிரியமா இருக்க வைக்கிறது ரொம்ப சுலபம் சரஸ்வதி …..!”

    விழிகளில் ஆச்சரியமாய், “அட …எப்டினா … அத சொல்லுங்கோ முதல்ல …. எப்டி … அதானே நமக்கு வேணும் ?”

    “சரஸ்வதி நம்ம காலம் போல இப்போ இல்ல … இரண்டு பேரும் வேலைக்கு போறா, நிறைய மக்களை சந்திக்கிறா, வீட்டில் இருக்கும் நேரமும் குறைவு, கல்யாணத்துக்கு முன் பேசிய அளவில் பாதி கூட கல்யாணத்திற்கு பின் பேசுவது இல்லை … முக்கியமா மனசு விட்டு பேசுவது இல்லை …. சரி, நீ என்ன பண்ற நம்ம மலை முருகர் கோவிலுக்கு நாம எல்லாரும் ஞாயிற்றுக்கிழமை போவோம் … சுகன்யாவையும் ரகுவையும் நீ எப்டியாவது சம்மதிக்க வை கோவிலுக்கு வர… அப்புறம் நான் சொல்லுற படி நீயும் பேசு… நம்ம கௌசி -வெங்கடேஷ், தேவகி -கண்ணன்  அவா ஆத்து குட்டீஸ் என எல்லோரும் போவோம் … சுகன்யா-ரகுவை சைலண்ட்டா அட்டாக் பண்ணுவோம்” என சுந்தரம் பேச பேச குஷியானாள் மாமி.

    ஞாயிறும் வந்தது.

    மலை மீது நின்று கொண்டு கீழே பார்க்கும் போது நாம் மட்டும் உயரத்தில் இருக்கும் இறுமாப்பு அனைவர் முகத்திலும். நான்கு குடும்பங்களும் முருகரை தரிசித்து விட்டு மனநிறைவுடன் அருகிலுள்ள ஒரு பார்க் போன்ற இடத்திற்கு வந்தமர்ந்தனர். சாப்பிடுவதற்கு சரஸ்வதி மாமி எல்லாருக்கும் புளியோதரையும், தயிர் சாதமும் கொண்டு வந்திருக்க, மற்றவர்கள் தின்பண்டங்கள் என அந்த இடமே களைக்கட்டியது. குட்டீஸ் ஒரு பக்கம் விளையாட ஆரம்பிக்க, மாமி, கௌசி, தேவகி, சுகன்யா என பெண்கள் ஒரு குழுவாகவும், சற்று தொலைவில் சுந்தரம் தலைமையில் ஆண்கள் ஒரு குழுவாகவும் தனி தனியாக அரட்டை கச்சேரியை ஆரம்பித்தனர்.

    கௌசி மெதுவாக, “சுகன்யா இந்த புடவை உன் நிறத்திற்கு எடுப்பா இருக்கு … யாரோட செலெக்ஸன் …?”

    “இது …” என சுகன்யா ஆரம்பிக்கும் முன்னே வெங்கடேசின் குரல் அழைக்க, ஒரு நிமிஷம் என கௌசி எழுந்து சென்றாள்.

    திரும்பிய கௌசி ,”வண்டியில் தண்ணீர் பாட்டில் மறந்துட்டார் போய் எடுத்து கொடுத்துட்டு வரேன் …ம் …சொல்லு …சுகன்யா….?”

    “இது …..”

    “என்ன இங்க பட்டிமன்றம் …..”கேட்டபடியே அங்கு வந்த சுந்தரம், தேவகியை கண்ணன் அழைப்பதாக கூற தேவகி எழுந்து சென்றாள் .

    இப்பிடியாக சில முறை சுந்தரம் இவர்கள் பக்கம் வந்து வந்து போனார் .

    சுகன்யாவிற்கு எரிச்சலே வந்தது, என்ன பெண்கள் இவர்கள் ? எதற்கு எடுத்தாலும் அடிமை போல், எடுபிடி போல் ஓடிக்  கொண்டு என நினைக்க…

    இதே நாடகம் அங்கு ரகுவின் முன் சுந்தரத்தின் மூலம் நடந்தேறிக்  கொண்டிருந்தது .

    மனதிற்குள் சலித்த ரகு என்ன மனிதர் இவர் சரியான பொண்டாட்டி தாசனாய் இருப்பார் போலவே. நினைத்தவனாய் சுந்தரத்தை பார்த்து “என்ன மாமா இது… உங்களுக்கு கோபமே வராதா …?”

    “யார் சொன்னது எனக்கு கோபம் வராதுன்னு… அழகா வரும், வந்தா உடனே நம்ம ப்ளாட் கார்டன் இருக்கோன்னோ அங்க போய் மண்வெட்டி எடுத்து தேவை இல்லாத களைகள் எல்லாத்தையும் கொத்தி கொஞ்ச நேரம் சுத்தபடுத்திடுவேன். கோபமும் ஒரு வகை ஆற்றல் தானே. அதை களைகளின் மேல் காமிச்சுட்டா அங்க இடமும் சுத்தமாகும், என் மன வேகமும் அடங்கிடும். அப்புறம் கொத்தின களைப்புல மாமி கையாள சூடா காப்பி கிடைக்காதான்னு தோணிடும். சரஸ்வதியும் ஒண்ணுமே நடவாத மாறி சூப்பரா ஒரு கும்பகோணம் டிகிரி காப்பியை எடுத்துண்டு வருவா பாரு… எல்லா கோபமும் பறந்திடும்.  ரகு கணவன் -மனைவிக்குள்ள கோபம் வரலாம் ஆனா வெறுப்பு வரக் கூடாது. கோபம் வருவதற்கு ஒரு காரணம் இருக்கிற மாறி நான் அவள விரும்பினதுக்கும் பல காரணம் இருக்குமோன்னோ, அத யாரும் திருமணத்திற்கு அப்புறம் நினைக்கிறதே இல்ல… நா கொஞ்ச நாழி அத நினைச்சுப்பேன்… அழித்து அழித்து செய்ய வாழ்க்கை என்ன வரைபடமா ரகு? ஹ ஹ ஹா ….” தான் பெரிய ஜோக் அடித்தாற் போல் சிரித்தார் சுந்தரம்.

    சுருக்கென்று இருந்தது ரகுவிற்கு…

    குழந்தைகள் ஓடி வர, எல்லாருக்கும் பசி வயிற்றை கிள்ளியது. வட்டமாக அமர்ந்து ஒருவருக்கொருவர் பரிமாறி சாப்பிட, ரகு-சுகன்யா முகங்கள் மட்டும் எதையோ சிந்தித்த படியே இருந்தது.

    குழந்தைகள் அப்பளத்திற்கு சண்டையிட கௌசியும், தேவகியும் அவரவர் குழந்தைகளை அதட்ட, விகாஷினி தனக்கு தான் அப்பளம் என அடம் பிடித்து கொண்டிருந்தாள்.

    “சரி .. சரி .. விடுங்க குட்டீஸ் … பாவம் விகாஷினி தாய்-தகப்பன் ஆதரவில்லாம வளர போற குழந்த, அவளுக்கு கொடுங்க முதல்ல …!!” கூறிய சரஸ்வதியை இரண்டு ஜோடி தீக்கண்கள்  நோக்கின. மற்றவர்கள் எதார்த்தமாய் சாப்பிட்டு கொண்டிருக்க விகாஷினி குட்டி தனக்கு அப்பளம் கிடைத்த சந்தோஷத்தில் கை கொட்டி சிரித்தது.

    வீடு திரும்பும் போது ரகுவும் சுகன்யாவும் வேனில் சேர்ந்து அமர்ந்திருக்க சுந்தரம் சரஸ்வதியை பார்த்து நமுட்டு சிரிப்பு சிரித்தார். கச்சிதமாக எல்லாம் முடிந்த திருப்தி அனைவர் முகங்களிலும்.

    அடுத்து வந்த நாட்களில் ரகு-சுகன்யா வீட்டிலிருந்து டைவர்ஸ் பத்தி எந்த தகவலும் இல்லை. நாட்கள் வாரங்கள் ஆகி, வாரங்கள் மாதங்கள் ஆனபோது விகாஷினிக்கு தம்பி வர போகும் செய்தி மட்டும் வந்தது.

    செய்தி கேட்ட சரஸ்வதி, “ஏன்னா … உங்களுக்கு மெடல் தான் கொடுக்கணும் போங்கோ … வார்த்தைக்கு வார்த்தை டைவர்ஸ்ன்னு பேசினவாளை இப்டி சமத்தா ஆக்கிட்டேளே … ஆனா எனக்கு ஒரு சந்தேகம் ..?”

    “வந்துட்டுதா?”

    “இல்ல நம்ம ப்ளாட்டுல கூட ஒரு கெட் டுகதர் வச்சு இருக்கலாமேன்னா … அத விட்டுட்டு அவ்ளோ தூரம் மலை முருகர் கோவிலுக்கு போய் … ஏன்னா அந்த முருகர் அவ்ளோ சக்தி வாய்ந்தவரான்னா?”

    “புத்திசாலி முருகர்!!!!!!”

    “.!!!!…” மாமி முழிக்க…

    “இல்லையா பின்ன சுத்தமா செல் போன் டவர் கிடைக்காத இடமா பார்த்துல கோயில் கொண்டு இருக்கார்……!!!!!!!!!!”

    “ஆ …” வென்று தன் ஆத்துக்காரரின் சமோசிதத்தை எண்ணி அயர்ந்து நின்றாள் மாமி .

    Share
  • ஆணிவேரின் நம்பிக்கை

    கோதை நாராயணன்

    பயத்தில்  வேர்த்து கொட்டியது யாழினிக்கு …..

    நேற்று அவ்ளோ தூரம் சொன்ன பிறகும் ஏன் இப்படி பண்ணினான் குமார்? கேள்விகள் மனதை குடைந்தன… அவசரமாக தன் செல்போனை எடுத்து கெளதமை அழைத்தாள்.

    “ஹலோ, கெளதம்… நான் குமாரோட ஹாஸ்டலில் இருந்து பேசுறேன்… குமார் ஹாஸ்டலை காலி பண்ணிட்டு ஊருக்கே போய்ட்டானாம்… நீ கொஞ்சம் சீக்கிரம் நாம எப்போதும் மீட் பண்ற இடத்துக்கு வா… அர்ஜெண்டா பேசணும்…!”

    “இன்னும் பத்து நிமிஷத்தில் அங்க இருப்பேன் யாழினி… டோன்ட் ஓரி “

    ஹாஸ்டல் நிர்வாகியிடம் திரும்பி ,”ஓ.கே சார்… குமார் எதுவும் போன் பண்ணினா…. நான் வந்தேன்னு சொல்லுங்க. நன்றி!”

    “ஏம்மா… எதுவும் தப்பு தண்டாவாம்மா?”

    “அப்டியெல்லாம் இல்ல சார்…” என சிநேகமாய் புன்னகைத்து விட்டு தன் ஸ்கூட்டியை பூங்காவை நோக்கி பறக்க விட்டாள்.

    இவளுக்கு முன்னே அங்கு காத்திருந்த கெளதம், “என்னாச்சு யாழினி குமாருக்கு? நாம தான் நேத்து அத்தனை தூரம் அவனுக்கு நம்பிக்கை கொடுத்தோமே! அப்புறம் என்ன?”

    “தெரியலடா… நேத்து நம்மகிட்ட காட்டின அவங்க அம்மாவோட லெட்டர் குப்பையில் கிடந்தது”

    எழுப்பதைந்து வயதானவளின் இரத்தின எழுத்துக்கள்… குண்டு குண்டாய் அங்கொன்றும் இங்கொன்றுமாய்… ஒரு சில நாட்களுக்கே  சமைக்க அரிசி இருப்பதாகவும், எப்படியோ சமாளிப்பதாகவும், வேலை கிடைத்ததா என்பது பற்றியும் கேட்டு கொண்டிருந்த ஒரு வளமான வறுமை கடிதம் கசங்கிய நிலையில் யாழினி கையில்.

    “அத்தோடு அவன் மெடிக்கலில் வாங்கிய தூக்க மாத்திரை பில்லும் இருந்ததுடா.”

    “ப்ச்… இவனுக்கு ஏன் இப்படி புத்தி போகுது. எனக்கு கோவம் தான் வருது. இப்ப என்ன பண்ணலாம்?”

    “நீ உடனே கிளம்பி அவன் ஊருக்கு போய் அவனை காப்பாத்து எப்டியாவது. நா சுதா வீட்டுக்கு போறேன்.”

    “அவளுக்கு தெரியுமா விசயம்?”

    “தெரியல யாருக்கோ கிளம்பும் போது கண் கலங்கிய படியே போன் பேசினானாம்”

    “இவனுக்கெல்லாம் காதல்!”

    “நீ டென்ஷன் ஆகாத கெளதம். டோன்ட் வேஸ்ட் டைம். கிளம்பு” என அவனை அனுப்பி விட்டு சுதாவைத் தேடி போனாள்.

    குமார், யாழினி, கெளதம் மூவரும் ஒரே கல்லூரியில் படித்து நல்ல ரேங்க்கில்  பாஸ் செய்தவர்கள். வேலைத் தேடிக் கொண்டு இருக்கிறார்கள். இன்னும் கிடைத்த பாடு இல்லை. இதில் குமார் தான் மிகவும் ஏழை குடும்பத்தில் பிறந்தவன். அதுவும் அவன் தாய் தந்தைக்கு பிள்ளை பாக்கியமே இல்லாமல் இருந்து பின் வெகு வெகு வருடங்களுக்கு பின் பிறந்தவன். தாயின் கொஞ்ச நஞ்ச நகைகளையும் விற்று படித்தாயிற்று. முடித்தவுடன் வேலை என கனவு கண்டவனுக்கு தகுந்த வேலை கிடைக்காமல் அல்லாடும் நிலை. தான் காதலிக்கும் சுதாவின் வீட்டிலோ வேலை இல்லாத குமாரின் நிலை கேள்விக்குறியாக பார்க்கப்பட்டது .

    முதல் நாள் தன் தாயிடம் இருந்து வந்த கடிதத்தையும் காண்பித்து, சுதாவின் அப்பா சற்று கேவலமாக தன்னை பேசியதை பற்றியும் கூறி கண்ணீர் விட்டான். இனி வேலை கிடைக்காத பட்சத்தில் தான் உயிரை மாய்த்து கொள்ள போவதாக நம்பிக்கையற்று பேசினான்.

    பஸ்சை விட்டு இறங்கிய கெளதமுக்கு சுத்தமான காற்றும், பச்சை மண் வாசனையும் காந்தமாக இருந்தது. இந்த சூழ்நிலையில் வளர்ந்தவனா குமார். கொடுத்து வைத்தவன் என மனதில் நினைத்தபடியே நடந்தான். சிறிய ஊர் என்பதால் குமாரின் வீட்டை எளிதாக கண்டு பிடித்தான். வீடு உள் பக்கமாக பூட்டி இருந்தது.

    “குமார்!… குமார்…!”

    வேகமாக கதவு திறக்கப்பட்டது. திறந்த குமாருக்கு எதிர்பாராமல் அங்கு நின்ற கெளதமை பார்க்க அதிர்ச்சியாக இருந்தது.

    “வ…வ… வாடா… நீ… எங்க?” வேர்த்து கொட்டி இருந்தது. இடக்கையை அவசரமாக மறைத்தான். மாத்திரைகள்…!!

    விடு விடுவென்று  உள் நுழைந்த கெளதம், குமாரின் கன்னத்தில் பளார் என்று அறைந்தான்.

    கெளதமின் அடியை எதிர்ப்பாராத குமார் நிலைகுலைந்து போனான்.

    “கொழுப்படா உனக்கு? நானும் யாழினியும் எவ்ளோ தூரம் படிச்சு படிச்சு சொன்னோம், அதுக்கு அப்புறமும் இப்டியொரு மடத்தனமான முடிவுக்கு வந்து இருக்கேன்னா… உன்னையெல்லாம் எப்படி நண்பன்னு சொல்றது?”

    “இல்லடா… நேத்து சுதாவின் அப்பா ரொம்ப கேவலமா பேசிட்டார்டா!”

    “பேசட்டும். அதற்கென்ன… மகளுக்கு தகுந்த பாதுகாப்பு வேணும்னு அவர் நினைக்குறதுல என்ன தப்பு?”

    “ஒவ்வொரு வார்த்தையும்…”

    “பதிலுக்கு நல்ல நம்பிக்கையான வார்த்தைகளை கொடுத்து இருக்க வேண்டியது தானே அவருக்கு? அத விட்டுட்டு உயிரை போக்கி கொள்ள துணிவது கெட்டிகாரத்தனமா?”

    “சுதாவின் அழுகை என்னை தூங்கவிடலைடா…” சொல்லும் போதே குமாரின் கண்கள் குளமாகியது.

    “பெரிய்ய்ய்ய இவன்… காதலிக்கும் பெண்ணுக்கு நம்பிக்கை கொடுக்க முடியாத உனக்குக்கெல்லாம் எதுக்குடா காதல்? யாழினியின் மாமா சிபாரிசு செய்தாரே அந்த வேலையாவது இப்போதைக்கு ஒத்துக்கோ…”

    “அது என் சொந்த முயற்சி இல்லையே!”

    “ஓ! சுதாவின் அப்பா பேசினா அவமானமா இருக்கு, சுதா அழுதா தாங்க முடியல, சிபாரிசுல வேலை கிடைச்சா உன் தன்மானம் இடிக்குது… சோ… இப்டி சத்தம் இல்லாம உயிரை விட்டுட்டா எல்லா பிரச்சனையும் தீர்ந்திடும் இல்லையா?”

    குமார் பேச எத்தனிக்கும் தருவாயில் வாசல் கதவு கிறீச் என சத்தமிட இருவரும் திரும்பினர்.

    நெற்றியில் வழிந்த வேர்வையை சேலை முந்தானையால் துடைத்தபடியே “ஸ்ஸ்… என்ன வெயிலு!” நன்கு கருத்த மேனி, ரவிக்கை அணியாத கண்டாங்கி சேலை, காதுகளில் பாம்படம், கையில் ஒரு ஓலை பெட்டியுடன் விரல்களை குடையாக புருவத்தின் மேல் வைத்து, “யாரு குமாரு… உன் சேக்காழியா…?”

    “ஆமாம்மா!” எனக் கூறிய குமார் தாயாரின் கையிலிருந்த பெட்டியை பார்த்தான். அதில் அரிசி, பருப்பு, காய்கறி என ஒரு பத்து நாளைக்கு தேவையான சாமான்கள் இருந்தன.

    “என்னம்மா இது? யார்கிட்டயும் போய் கடன் வாங்கினயா?”

    “இல்ல ராசா. நேத்து தினக்கூலிக்கு ஒரு ஆள் குறையுதுன்னு  மேலத்  தெரு அண்ணாச்சி சொன்னாக, அதான் போனேன். அதுல தான் இது. இந்த கட்டைல உசிரு இருக்கிற வரைக்கும் எம் மவனுக்கு நா உழச்சு சோறு போடாம யாரு போடுவா… நீ கவலை படாதேய்யா. வேல கிடைக்குறப்போ கிடைக்கட்டும். உக்காந்து பேசுங்கய்யா இரண்டு பேரும்” என கூறிய படியே நிலைப்படியை உராய்ந்த படியே அடுப்படிக்கு சென்றாள் மோர் கொண்டு வர.

    சொடேர் என்று இருந்தது குமாருக்கும், கெளதமுக்கும். ஒருத்தர் முகத்தை ஒருத்தர் பார்க்க முடியாமல் வார்த்தைகள் தொலைந்து நின்றனர், பெரியவளின் நம்பிக்கைக்கு முன் தோற்று.

    மறு நாள் வீட்டிலிருந்து சந்தோசமாக கிளம்பினான் வருங்கால தொழிலதிபதி குமார். முதலீடாக அவன் கோல்டு மெடல்கள் அவன் பையில்.

    முன்னேற்றத்தை தேடும் சிந்தனை  மட்டுமே அவன் முகத்தில்…

    Share
  • த்ரில்

    கோதை நாராயணன் 

    “ஏய்  உன் பட்டிக்காட்டு மச்சான் வந்துட்டாண்டி ….”

    “வாட் நான்சென்ஸ்… இன்னொரு தடவை என்னோட மச்சான்னு சொன்னீங்க நடக்கிறதே வேற….”

    “ஏண்டி நீ ப்ரொபசர் பொண்ணு அப்டிங்கறதுக்காக ஒன்லி ஃபார் சிட்டி பாயிஸ் அப்டின்னு ரூல் இருக்காடி… அவன் உன் சொந்த காரன் வேற…. “தோழிகள் மேலும் கலாய்க்க…

    “ஐயோ…. ஸ்டாப் திஸ் சில்லி திங்… ரித்திகா உண்மையிலேயே டென்ஷன் ஆக ஆரம்பித்தாள் .

    அவனும் அவன் மூஞ்சியும், ஐய…பேரப் பாரு துரைப்பாண்டி… அம்மாவை சொல்லணும் என்னமோ நன்றி கடனாம், அதுக்கு வேற கல்லூரியில் சீட் வாங்கி கொடுத்திருக்கலாமே… இப்டி நான் படிக்கிற,அதுவும் என் டிபாட்மெண்டெ… ஐயோ ஒவ்வொரு நாளும் ப்ரண்ட்ஸ் அடிக்கிற கொட்டம் தாளல… இதுக்கு ஒரு முடிவு கட்டணும்… தீர்மானித்தபடியே வகுப்புக்கு சென்றாள் .

    ப்ரொபசர் மல்லிகாவின் புதல்வி ரித்திகா, சிறு வயதிலேயே ரித்திகாவின் அப்பா பரலோக பதவி அடைந்து விட்டதால், தனி பெண்ணாக போராடி முன்னிலைக்கு வந்தவர் மல்லிகா. அப்படி அவர் கஷ்டப்பட்ட காலங்களில், மேல்படிப்பிற்கு பணம் கட்ட வழி இல்லாத ஒரு காலகட்டத்தில் பணம் கொடுத்து உதவியவராம் மயில்சாமி தாத்தா. அதற்கு நன்றி கடனாக தான் அவருடைய மகன் வழி பேரன் துரைப்பாண்டிக்கு, தான் வேலை பார்க்கும் அதே கல்லூரியில் சீட் வாங்கி கொடுத்தார். கிராமத்திலேயே  பிறந்து வளர்ந்து, பள்ளிப் படிப்பையும் முடித்தமையால் துரைப்பாண்டி இங்கு நகரத்திலேயே பிறந்து வளர்ந்து நுனி நாக்கு ஆங்கிலம் பேசும் தன் சக தோழர்களுக்கு நடுவில் அல்லோலபட்டுக் கொண்டிருந்தான்.

    மறுநாள் கல்லூரி சுற்றுலா செல்ல அனைவரும் ஆயத்தப்பட்டு கொண்டு இருந்தார்கள். அனைவர் மனதிலும் உற்சாகமும், குதூகலமும் …..

    ரித்திகாவும் தன் தோழிகளுடனும்,தோழர்களுடனும் அமர்க்களப்படுத்தி கொண்டு இருந்தாள். ப்ரொபசர் என்பதால் மல்லிகாவும் வேறு சில பேராசிரியர்களும் என ஒரு பெரிய படையே கிளம்பியது. மாணவர்கள் தனியாகவும், மாணவிகள் தனியாகவும் என இரண்டு பேருந்துகள் கிளம்பின .

    மல்லிகாவின் பைகளை கொடுக்க வந்த ரித்திகா மாணவர்களின் பேருந்திலேயே இருக்கும்படி ஆயிற்று. ரித்திகாவுக்கு அம்மாவின் மேல் ஒரே கோபம் .

    “போம்மா ….உன்னால தான் லேட் …”

    “சரி இப்போயென்ன ரித்தி… அடுத்த நிறுத்தத்தில் நீ இறங்கி மாறிக்கோ….”

    அவருக்கு தெரியாது அல்லவா அடுத்த நிறுத்தம் வரப்போவதே இல்லை என்று.

    “ப்ச்” என சலித்தபடியே தன் மாணவ தோழர்களுடன் போய் அமர்ந்து கொண்டாள் .

    அனைவரும் கை தட்டி பாட்டு பாடிய படியே பேருந்து சென்று கொண்டிருந்தது.

    “ஏலே …”

    “ஏ …துரைபாண்டி …!” மாணவர்கள் கிண்டலாக இப்படி தான் அழைத்து கொண்டிருந்தார்கள். இங்கும் அங்குமாக அவர்கள் இழுப்புக்கெல்லாம்  சிரித்தபடியே சென்று கொண்டிருந்தான்.

    ரித்திகாவுக்கு தமாசாக இருந்தது அவனைப் பார்க்க……கை தட்டி துரையை அழைத்தாள்.

    வேகமாய் வந்து நின்றான்.

    “போய் …பின்னாடி ராஜேஷ் கிட்ட வாட்டர் பாட்டில் வாங்கிட்டு வா ….”

    “சரி”யென …வெட்கமாய் சிரித்தபடியே சென்றான்.

    “கொடுமைடா சாமி” என முணுமுணுத்துக் கொண்டாள்.

    போன வேகத்தில் இல்லையென வந்தவனை …ப்ச் … என எரிச்சலாய் முறைத்து விட்டு தானே எழுந்து பின் சீட்டிற்கு சென்றாள்.

    ரித்திகாவை கண்டதும் சில ஆல்ஹகால் பாட்டில்கள் மறைக்கப்பட்டன…

    “என்ன ரித்தி ….?”

    “இல்ல …நானும் அப்போதிலிருந்து பார்த்துக்கிட்டு இருக்கேன், எல்லோரும் அப்பப்போ பின்னாடி சீட்டுக்கு வந்துட்டு போறீங்களே… அதான் நானும் வந்தேன்…”

    அசட்டு சிரிப்பு சிரித்தபடியே “இதையெல்லாம் கண்டுக்காத ரித்தி… உனக்கு தெரியாதாயென்ன?” — இது ராஜேஷ்.

    மறைக்கப்பட்ட பாட்டில்களை பார்த்த ரித்திகா, “ஐயோ! கர்மம் கர்மம்! ஏண்டா, இன்னும் நாம பார்க்க வேண்டிய இடத்தை ரீச் பண்ணவே இல்ல … அதுக்குள்ளவா ?”

    “இதெல்லாம் ஒரு த்ரில் ரித்தி… காலேஜ் டூர் அதிலும் இறுதி ஆண்டு ஒரு த்ரில் வேண்டாமா?” — இது ரவி.

    “ஒவ்வொரு நிமிஷத்தையும் என்ஜாய் பண்ணனும் ரித்தி” — இது ரிஷி.

    “அங்க முன்னாடி உங்க மாம் பிளஸ் மேம் இருக்கிறதால இப்டி பின்னாடி வந்துட்டு போறோம்” –அரவிந்த் கிண்டலாக.

    “ம்….அதுவரைக்கும் சந்தோஷம்” எனக் கூறி சிரித்தபடியே ரித்திகா தன் இருக்கைக்கு வர திரும்பிய கணப்பொழுதில் அது நடந்தது.

    எதிரே வந்த லாரியின் மேல் இவர்களது பேருந்து மோதுவதிலிருந்து காப்பாற்ற அருகிலிருந்த மரத்தில் லேசாக மோதி டிரைவர் வண்டியை நிறுத்த, நின்று கொண்டிருந்தமையால் ரித்திகாவால் சுதாரிக்க முடியாமல் போக, உடைந்த கண்ணாடி ஒன்று அவள் தோளில் பலமாக பதம் பார்க்க, இரத்த வெள்ளத்தில் மயங்கினாள் ரித்திகா.

    கூக்குரல் எடுத்து முதலில் கத்தி பின் நிலைமையை உணர்ந்த அனைவரும் படபடவென இறங்கினார்கள். மாணவர்கள் என்பதால் வேக வேகமாக செயல்பட்டார்கள்.

    மல்லிகா சத்தமாக அழ ஆரம்பித்தார் .”ஐயோ ரித்தி… கண்ணை முழிச்சு பாருடி…”

    “மேம்… டோண்ட் ஒரி மேம்… பக்கத்துல தான் ஹாஸ்ப்பிடல்… சீக்கிரம் போய்டலாம்”

    “டே ய்! வாங்கடா சீக்கிரம்”

    ஆம்புலன்ஸ் வரவழைக்கப் பட்டு அனைவரும் ஹாஸ்ப்பிடல் வந்து சேர்ந்தனர்.

    எமர்ஜென்சி பிரிவுக்கு அனுமதிக்கப்பட்ட ரித்திகாவை சோதித்து விட்டு வெளியே வந்த டாக்டரை அனைவரும் சூழ்ந்தனர்.

    அழுதபடியே மல்லிகா,”டாக்டர் ……..?”

    “நத்திங் டு ஒர்ரி… மயக்கம் இன்னும் கொஞ்ச நேரத்துல தெளிஞ்சுடும்… ஒரு மைனர் ஆபரேஷன் தோளில் பண்ணனும்… இரத்தம் ரொம்ப வெளியேறி இருப்பதால் உடனடியாக இரத்தம் தேவை… அதற்கு பிரச்சனை இருக்காது இல்​லையா…?”

    “பிரச்சனை இல்லை டாக்டர் அதற்கு என் மாணவர்கள் இவ்ளோ பேர் இருக்கிறார்கள் …” என திரும்பி தன் மாணவர்களை பார்த்தார்.

    ‘த்ரில்லில்’ ஈடுபட்டிருந்த அத்தனை மாணவர்களும் மல்லிகாவை எதிர் கொள்ள முடியாமல் திகைத்து பின்வாங்க, “நான் தருகிறேன் டாக்டர் என் இரத்தத்தை” எனக் கூறிய துரைப்பாண்டியின் குரல் மயக்கதிலிருந்த ரித்திகாவின் காதுகளுக்கு உயிராக ஒலித்தது.

    Share