கோதை நாராயணன்

பயத்தில்  வேர்த்து கொட்டியது யாழினிக்கு …..

நேற்று அவ்ளோ தூரம் சொன்ன பிறகும் ஏன் இப்படி பண்ணினான் குமார்? கேள்விகள் மனதை குடைந்தன… அவசரமாக தன் செல்போனை எடுத்து கெளதமை அழைத்தாள்.

“ஹலோ, கெளதம்… நான் குமாரோட ஹாஸ்டலில் இருந்து பேசுறேன்… குமார் ஹாஸ்டலை காலி பண்ணிட்டு ஊருக்கே போய்ட்டானாம்… நீ கொஞ்சம் சீக்கிரம் நாம எப்போதும் மீட் பண்ற இடத்துக்கு வா… அர்ஜெண்டா பேசணும்…!”

“இன்னும் பத்து நிமிஷத்தில் அங்க இருப்பேன் யாழினி… டோன்ட் ஓரி “

ஹாஸ்டல் நிர்வாகியிடம் திரும்பி ,”ஓ.கே சார்… குமார் எதுவும் போன் பண்ணினா…. நான் வந்தேன்னு சொல்லுங்க. நன்றி!”

“ஏம்மா… எதுவும் தப்பு தண்டாவாம்மா?”

“அப்டியெல்லாம் இல்ல சார்…” என சிநேகமாய் புன்னகைத்து விட்டு தன் ஸ்கூட்டியை பூங்காவை நோக்கி பறக்க விட்டாள்.

இவளுக்கு முன்னே அங்கு காத்திருந்த கெளதம், “என்னாச்சு யாழினி குமாருக்கு? நாம தான் நேத்து அத்தனை தூரம் அவனுக்கு நம்பிக்கை கொடுத்தோமே! அப்புறம் என்ன?”

“தெரியலடா… நேத்து நம்மகிட்ட காட்டின அவங்க அம்மாவோட லெட்டர் குப்பையில் கிடந்தது”

எழுப்பதைந்து வயதானவளின் இரத்தின எழுத்துக்கள்… குண்டு குண்டாய் அங்கொன்றும் இங்கொன்றுமாய்… ஒரு சில நாட்களுக்கே  சமைக்க அரிசி இருப்பதாகவும், எப்படியோ சமாளிப்பதாகவும், வேலை கிடைத்ததா என்பது பற்றியும் கேட்டு கொண்டிருந்த ஒரு வளமான வறுமை கடிதம் கசங்கிய நிலையில் யாழினி கையில்.

“அத்தோடு அவன் மெடிக்கலில் வாங்கிய தூக்க மாத்திரை பில்லும் இருந்ததுடா.”

“ப்ச்… இவனுக்கு ஏன் இப்படி புத்தி போகுது. எனக்கு கோவம் தான் வருது. இப்ப என்ன பண்ணலாம்?”

“நீ உடனே கிளம்பி அவன் ஊருக்கு போய் அவனை காப்பாத்து எப்டியாவது. நா சுதா வீட்டுக்கு போறேன்.”

“அவளுக்கு தெரியுமா விசயம்?”

“தெரியல யாருக்கோ கிளம்பும் போது கண் கலங்கிய படியே போன் பேசினானாம்”

“இவனுக்கெல்லாம் காதல்!”

“நீ டென்ஷன் ஆகாத கெளதம். டோன்ட் வேஸ்ட் டைம். கிளம்பு” என அவனை அனுப்பி விட்டு சுதாவைத் தேடி போனாள்.

குமார், யாழினி, கெளதம் மூவரும் ஒரே கல்லூரியில் படித்து நல்ல ரேங்க்கில்  பாஸ் செய்தவர்கள். வேலைத் தேடிக் கொண்டு இருக்கிறார்கள். இன்னும் கிடைத்த பாடு இல்லை. இதில் குமார் தான் மிகவும் ஏழை குடும்பத்தில் பிறந்தவன். அதுவும் அவன் தாய் தந்தைக்கு பிள்ளை பாக்கியமே இல்லாமல் இருந்து பின் வெகு வெகு வருடங்களுக்கு பின் பிறந்தவன். தாயின் கொஞ்ச நஞ்ச நகைகளையும் விற்று படித்தாயிற்று. முடித்தவுடன் வேலை என கனவு கண்டவனுக்கு தகுந்த வேலை கிடைக்காமல் அல்லாடும் நிலை. தான் காதலிக்கும் சுதாவின் வீட்டிலோ வேலை இல்லாத குமாரின் நிலை கேள்விக்குறியாக பார்க்கப்பட்டது .

முதல் நாள் தன் தாயிடம் இருந்து வந்த கடிதத்தையும் காண்பித்து, சுதாவின் அப்பா சற்று கேவலமாக தன்னை பேசியதை பற்றியும் கூறி கண்ணீர் விட்டான். இனி வேலை கிடைக்காத பட்சத்தில் தான் உயிரை மாய்த்து கொள்ள போவதாக நம்பிக்கையற்று பேசினான்.

பஸ்சை விட்டு இறங்கிய கெளதமுக்கு சுத்தமான காற்றும், பச்சை மண் வாசனையும் காந்தமாக இருந்தது. இந்த சூழ்நிலையில் வளர்ந்தவனா குமார். கொடுத்து வைத்தவன் என மனதில் நினைத்தபடியே நடந்தான். சிறிய ஊர் என்பதால் குமாரின் வீட்டை எளிதாக கண்டு பிடித்தான். வீடு உள் பக்கமாக பூட்டி இருந்தது.

“குமார்!… குமார்…!”

வேகமாக கதவு திறக்கப்பட்டது. திறந்த குமாருக்கு எதிர்பாராமல் அங்கு நின்ற கெளதமை பார்க்க அதிர்ச்சியாக இருந்தது.

“வ…வ… வாடா… நீ… எங்க?” வேர்த்து கொட்டி இருந்தது. இடக்கையை அவசரமாக மறைத்தான். மாத்திரைகள்…!!

விடு விடுவென்று  உள் நுழைந்த கெளதம், குமாரின் கன்னத்தில் பளார் என்று அறைந்தான்.

கெளதமின் அடியை எதிர்ப்பாராத குமார் நிலைகுலைந்து போனான்.

“கொழுப்படா உனக்கு? நானும் யாழினியும் எவ்ளோ தூரம் படிச்சு படிச்சு சொன்னோம், அதுக்கு அப்புறமும் இப்டியொரு மடத்தனமான முடிவுக்கு வந்து இருக்கேன்னா… உன்னையெல்லாம் எப்படி நண்பன்னு சொல்றது?”

“இல்லடா… நேத்து சுதாவின் அப்பா ரொம்ப கேவலமா பேசிட்டார்டா!”

“பேசட்டும். அதற்கென்ன… மகளுக்கு தகுந்த பாதுகாப்பு வேணும்னு அவர் நினைக்குறதுல என்ன தப்பு?”

“ஒவ்வொரு வார்த்தையும்…”

“பதிலுக்கு நல்ல நம்பிக்கையான வார்த்தைகளை கொடுத்து இருக்க வேண்டியது தானே அவருக்கு? அத விட்டுட்டு உயிரை போக்கி கொள்ள துணிவது கெட்டிகாரத்தனமா?”

“சுதாவின் அழுகை என்னை தூங்கவிடலைடா…” சொல்லும் போதே குமாரின் கண்கள் குளமாகியது.

“பெரிய்ய்ய்ய இவன்… காதலிக்கும் பெண்ணுக்கு நம்பிக்கை கொடுக்க முடியாத உனக்குக்கெல்லாம் எதுக்குடா காதல்? யாழினியின் மாமா சிபாரிசு செய்தாரே அந்த வேலையாவது இப்போதைக்கு ஒத்துக்கோ…”

“அது என் சொந்த முயற்சி இல்லையே!”

“ஓ! சுதாவின் அப்பா பேசினா அவமானமா இருக்கு, சுதா அழுதா தாங்க முடியல, சிபாரிசுல வேலை கிடைச்சா உன் தன்மானம் இடிக்குது… சோ… இப்டி சத்தம் இல்லாம உயிரை விட்டுட்டா எல்லா பிரச்சனையும் தீர்ந்திடும் இல்லையா?”

குமார் பேச எத்தனிக்கும் தருவாயில் வாசல் கதவு கிறீச் என சத்தமிட இருவரும் திரும்பினர்.

நெற்றியில் வழிந்த வேர்வையை சேலை முந்தானையால் துடைத்தபடியே “ஸ்ஸ்… என்ன வெயிலு!” நன்கு கருத்த மேனி, ரவிக்கை அணியாத கண்டாங்கி சேலை, காதுகளில் பாம்படம், கையில் ஒரு ஓலை பெட்டியுடன் விரல்களை குடையாக புருவத்தின் மேல் வைத்து, “யாரு குமாரு… உன் சேக்காழியா…?”

“ஆமாம்மா!” எனக் கூறிய குமார் தாயாரின் கையிலிருந்த பெட்டியை பார்த்தான். அதில் அரிசி, பருப்பு, காய்கறி என ஒரு பத்து நாளைக்கு தேவையான சாமான்கள் இருந்தன.

“என்னம்மா இது? யார்கிட்டயும் போய் கடன் வாங்கினயா?”

“இல்ல ராசா. நேத்து தினக்கூலிக்கு ஒரு ஆள் குறையுதுன்னு  மேலத்  தெரு அண்ணாச்சி சொன்னாக, அதான் போனேன். அதுல தான் இது. இந்த கட்டைல உசிரு இருக்கிற வரைக்கும் எம் மவனுக்கு நா உழச்சு சோறு போடாம யாரு போடுவா… நீ கவலை படாதேய்யா. வேல கிடைக்குறப்போ கிடைக்கட்டும். உக்காந்து பேசுங்கய்யா இரண்டு பேரும்” என கூறிய படியே நிலைப்படியை உராய்ந்த படியே அடுப்படிக்கு சென்றாள் மோர் கொண்டு வர.

சொடேர் என்று இருந்தது குமாருக்கும், கெளதமுக்கும். ஒருத்தர் முகத்தை ஒருத்தர் பார்க்க முடியாமல் வார்த்தைகள் தொலைந்து நின்றனர், பெரியவளின் நம்பிக்கைக்கு முன் தோற்று.

மறு நாள் வீட்டிலிருந்து சந்தோசமாக கிளம்பினான் வருங்கால தொழிலதிபதி குமார். முதலீடாக அவன் கோல்டு மெடல்கள் அவன் பையில்.

முன்னேற்றத்தை தேடும் சிந்தனை  மட்டுமே அவன் முகத்தில்…

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “ஆணிவேரின் நம்பிக்கை

  1. கதையில் ஜீவன் இருக்கின்றது. நடையும் நன்றாக வந்திருக்கின்றது. முடிவு திருப்தியாக இருக்கின்றது. வளர்ச்சிப்பாதையை நோக்கிய முன்னேற்றம் கண்டு அகமகிழ்கின்றேன், //“இல்ல ராசா. நேத்து தினக்கூலிக்கு ஒரு ஆள் குறையுதுன்னு மேலத் தெரு அண்ணாச்சி சொன்னாக, அதான் போனேன். அதுல தான் இது. இந்த கட்டைல உசிரு இருக்கிற வரைக்கும் எம் மவனுக்கு நா உழச்சு சோறு போடாம யாரு போடுவா… நீ கவலை படாதேய்யா. வேல கிடைக்குறப்போ கிடைக்கட்டும். உக்காந்து பேசுங்கய்யா இரண்டு பேரும்” என கூறிய படியே நிலைப்படியை உராய்ந்த படியே அடுப்படிக்கு சென்றாள் மோர் கொண்டு வர.

    சொடேர் என்று இருந்தது குமாருக்கும், கெளதமுக்கும். ஒருத்தர் முகத்தை ஒருத்தர் பார்க்க முடியாமல் வார்த்தைகள் தொலைந்து நின்றனர், பெரியவளின் நம்பிக்கைக்கு முன் தோற்று.

    மறு நாள் வீட்டிலிருந்து சந்தோசமாக கிளம்பினான் வருங்கால தொழிலதிபதி குமார். முதலீடாக அவன் கோல்டு மெடல்கள் அவன் பையில்.
    //

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *