ஐயப்பன் திருப்புகழ் – 1
சு.ரவி
ஸ்வாமியே சரணம் ஐயப்பா!
வணக்கம், வாழியநலம்,
மயிலையில் பி.எஸ். உயர்நிலைப்பள்ளியில் கணிதம் மற்றும் ஆங்கில ஆசிரியராகப் பணியாற்றிய என் அப்பா, தனது மாலைநேரங்களில் ராஜாஜி சீவல்ஸ்டோர்ஸில் வாங்கிய ரெண்டணா சந்தனத்தைப் பூசிக்கொண்டு வீட்டின் மொட்டைமாடியில் ஈஸிசேரில் படுத்திருக்க, நான் கால்பிடித்துவிடுவேன். அந்த சுகத்தில் 4கட்டை ஸ்ருதியில் அவர் பாடும் திருப்புகழ்ப் பாடல்கள் தான் எனக்கு அருணகிரியாரை அறிமுகப்படுத்தின.
” கைத்தல் நிறைகனி, உம்பர் தரு தேனு, சந்ததம் பந்தத் தொடராலே, திருமகளுலாவும், அதலசேடனாராட,
ஏதுபுத்தி ஐயா…” என தினம் ஒரு நாலைந்தாவது வரும்..
பின்னர் என் பத்தாம் வகுபு நாட்களில், TMS பாடி,நடித்த ‘அருணகிரிநாதர்’ படத்தின் “முத்தைத்தரு, பக்கரை விசித்ரமணி, தண்டையணி வெண்டையும்” ஆகிய பாடல்கள்
ஒருமுறை கேட்டமாத்திரத்தில் என் உள்ளம் புகுநது, அப்பாவைத்திருந்த திருப்புகழ்ப் புத்தகத்தை அட்டையொடு அட்டை படிக்கவைத்தன. எததனை சந்தங்கள்.. எத்தனை தாளங்கள்.. என்ன எளிமை.. அன்றே நான் அருணகிரியின் சந்தத் தமிழுக்கு அடிமையானேன்..
பின்னர் அருணகிரியாரின் தடங்களை ஒட்டி காமாக்ஷி தாஸர் என்பவர் அன்னை காமாக்ஷி மீது எழுதிய திருப்புகழ், திருவகுப்புகள் போன்ற நூல்களையும் படித்து பிரமித்தேன் ( இந்த நூல்கள இப்போது கிடைக்கிறதா என்று தெரியவில்லை)
பித்துக்குளி முருகதாஸ் அவர்தம் குளுகுளு குரலிலும், வள்ளிமலையில் வள்ளிமலைஸ்வாமிகள் வகுத்துக் கொடுத்தமுறைப்படி திருப்புகழ்ப் பாடல்கள் இசைக்கப்படுவதையும், அதனையொட்டி திரு ராகவன் அவர்களின் இசையிலும் கேட்கும் பேறு பெற்றேன்.
எனை இவ்வாறு முற்றிலும் ஆட்கொண்ட சத்குருநாதர் அருணகிரிநாதரின் சந்தத் தமிழே குருவாக, என் சபரிமலை யாத்திரைகளின் போது ஐயப்பன் மீது இயற்றிய ஐயப்பன் திருப்புகழ்ப் பாடல்களை இத்தளத்தில் பகிர்கிறேன்.
இந்தத் திருப்புகழ்ப் பாடல்களை ஏற்ற ராகங்களில் இசையமைத்துப் பாடி மெருகேற்றிய என் சக ஐயப்ப நண்பர் திரு.V.K. நாராயணன் அவர்களை நன்றியோடு நினைவு கூர்கிறேன்.
இந்தத் திருப்புகழ், நாமகிரிப்பேட்டையார் சிந்துபைரவியில் வாசித்த சந்தத் திருப்புகழைக் கேட்டபாதிப்பில் சிந்துபைரவியில் உருவானது. பின்னர் நண்பர் நாராயணன் இதனை ராகமாலிகையாக முறையே ” செஞ்சுருட்டி,மோஹனம்,புன்னாகவராளி,சங்கராபரணம், மாண்ட், முகாரி, சிந்துபைரவி, மத்யமாவதி ” ஆகிய ராகங்களில் செதுக்கிக் கொடுத்தார்.
(பாடிப்) பார்க்க, ரசிக்க…..
இணைப்பாக நெய்ப்பிரியன் -அக்ரிலிக் ஓவியம்- பார்க்க, ரசிக்க…
ஐயப்பன் திருப்புகழ்
தனன தானன தந்தன தானன
தனன தானன தந்தன தானன
தனன தானன தந்தன தானன தனதான
கனக மேனியி னின்னொளி மேவிட
இலகு மோர்நகை சிந்தியு லாவிட
அளக பாரம சைந்திட வேல்விழி மயல்வீச
கவினு லாவிய பெண்மையெ லாமொரு
கவிதை யாகிம யங்கிய தோவென
வடிவு மேவிவி ளங்கிய மோஹினி மனமாற
பனிநி லாவொடு கங்கைகு லாவிய
சடையு ளானர வங்களு லாவரும்
அழகு மேனிய னன்றொரு தாருக வனமீது
பதித ரானவர் தம்குல மாதரின்
மனமெ லாமழி யும்படி தேசுறு
வடிவி னான் சிவ சங்கர தேவனும் உறவாட
வனமு லாவிய பம்பையி லேசிறு
மதலை யாகிவ ளர்ந்தவ னேகொடு
மஹிஷி மாளச ரந்தனை ஏவிய சபரீசா!
வரையி லாதுவ ளர்ந்திடு தீவினை
அதனி லேஉழ லும்படி மாயையில்\
அறிவி லாதும யங்கிட வேஎனை விடுவாயோ!
எனது நானெனும் எண்ணமெ லாமற
இடைய றாதும னந்தனி லேபத
சரண மேநிலை நின்றிட நீதிரு அருள்தாராய்!
சபரி மாமலை தங்கிய மோஹன
வரிக ளோடிய வன்புலி வாஹன
ஹரிஹரா பதி னெண்படி மேவிய பெருமாளே!
(பத சரண மேநிலை நின்றிட நீதிரு அருள்தாராய்!)


Sairam, SvAmi sharaNam. Thanks for sharing. Our love for Tiruppugazh seems to have a similar path – with father and gurus (Shri Raghavan and Shri Murugadas) playing a great role. May the ‘patineNpaDi meviya perumAL’ ever shower His Infinite Grace on your thoughts, words and deeds, and bless you with the varams you seek in this inspiring song. SvAmi sharaNam, Sairam.
பக்தியும் புலமையும் ஒருங்கே அமைந்த வண்ணச் சந்தம் நெஞ்சைத் தொட்டது.
பழைய நாளினில் கந்தனின் தாசரின்
.. பரம ஞானநி றைந்தவொர் நூலுள
…..பதிகள் யாவிலும் நின்றிடு வேலனின் புகழ்பாடி(ப்)
பழகி மாதவன் சங்கரன் தாமளி
.. மழலை யாகிவ ளர்ந்தவன் பேரிலும்
….பழமி தாமெனும் வண்ணமிங் கேகவி தருவோனே!
.. அனந்த் 25-11-2013
(அனந்தநாராயணன்)
Dear Shankar ji,
Thanks for your kind words; I am motivated always by your warm words of encouragement.
Swamy saraNam!
Dear Shri AnanthaNarayaNan,
சந்தத்திலேயே பதிலனுப்பி வாழ்த்தியமைக்கு என் நெஞ்சார்ந்த நன்றி!
சு.ரவி