Author:

  • (Peer Reviewed) கம்பராமாயணம் மிதிலைக் காட்சிப் படலத்தில் அகத்திணை மரபும் மாற்றமும்

    முனைவர் ஹெப்ஸி ரோஸ் மேரி.அ
    உதவிப் பேராசிரியர், தமிழ்த் துறை,
    கேரளப் பல்கலைக்கழகம்,
    திருவனந்தபுரம்

    கம்பராமாயணம் மிதிலைக் காட்சிப் படலத்தில் அகத்திணை மரபும் மாற்றமும்

    கம்பர் முத்தமிழ்த் துறை வித்தகர், உத்தமக் கவிஞர்.  அவர் இயற்றிய இராமாயணம், வால்மீகி ராமாயணத்தைத் தழுவி எழுதியதாக இருப்பினும் அதில் தமிழர் மரபும் பண்பாடும் காப்பியம் முழுமையும் விரவிக் கிடப்பதைக் காணலாம். கம்பர், வால்மீகி ராமயணத்தினின்று மாறுபட்டு படைத்துக் கொண்டுள்ள சிறந்த பகுதியாகக் கருதப்படுவது இராமனும் சீதையும் மணந்து கொண்ட வரலாறாகும். சங்க இலக்கிய மரபில் வந்த புலவரான கம்பர், இப்பகுதியைத் தமிழ் அகப்பொருள் மரபைத் தழுவி புதுமையாகப் படைத்துக் கொள்கிறார். தொல்காப்பியரது அகத்திணை மரபுகள்,  கம்பராமாயணத்தில் பயின்று வருமாற்றையும் அவற்றினின்று விலகி வருவனவற்றையும் இக்கட்டுரை எடுத்துரைக்கிறது.

    அவத்தைகள்

    “கலந்த பொழுதும் காட்சியும் அன்ன (தொல்.பொரு18)”

    என்ற நூற்பா உரையில் இளம்பூரணர் கலந்த பொழுது என்பது தலைமகளைக் கண்ணுற்றவழி மன நிகழ்ச்சி உளதாங்காலம்: அக்காட்சி, பின்னர்க் குறிப்பறியும் துணையும் நிகழும் நிகழ்ச்சி. காட்சியாவது தலைவியை எதிர்படுதல். குறிப்பறிந்த பின்னர்ப் புணருந்துணையும் நிகழும் முன்னிலை யாக்கல் முதலாயின புணர்தல் நிமித்தம். இவை அந்நிகரனவன்றி பொதுப்பட நிற்றலின் வேறு ஓதப்பட்டன. அன்ன என்பது (இவையும்) ஓர் இடத்து நிகழும் உரிப்பொருள் என்றவாறு. ஓரிடமாவது கைக்கிளை. அதாவது காட்சி முதலிய நான்கும் கைக்கிளையாமன்றிப் புணர்தல் நிமித்தமாகா என்பதற்கு இதனால் விளக்கம் தந்துள்ளார். ஏனைய தொல்காப்பிய உரையாசிரியர்கள் குறிப்பிடாத ஒன்று. ஏனையோர் இதனை உரிப்பொருள் மயக்கம் என்று கூறுகின்றனர். இளம்பூரணர் காட்சி ஐயம் துணிவு குறிப்பறிதல் ஆகிய நான்கும் இயற்கைப் புணர்ச்சிக்கு நிமித்தம் எனவும் இவை கைக்கிளையாம் எனவும் கூறுவார். ஆராயின் இது கைக்கிளையின் பாற்படும்.

    தொல்காப்பியரது கருத்துப்படி இயற்கைப்புணற்சிக்கு முன்பு தலைவன் தலைவியர்
    ஒருவரையொருவர் கண்டு காதல் கொள்ளும் நிகழ்ச்சி உண்டு என்பதை உணரலாம்.
    அத்தகைய காட்சியைக் கம்பரும் ராமாயணத்தில் காட்டுகிறார். விசுவாமித்திரர், இராம இலக்குவர் இம்மூவரும் மிதிலை மாநகரின் காட்சிகளைக் கண்டுகொண்டே செல்கின்றனர். இவர்கள் கண்ட காட்சிகளை ஒவ்வொரு பாடலின் இறுதியிலும் ஆடலரங்கு கண்டார், உலாவக் கண்டார், உதயங்கண்டார், எனப் பாடியுள்ளார். அவ்வாறு பல காட்சிகளைக் கண்டவர்கள், சீதையைக் கண்டதும்,

    ”கன்னிம் மாடத் தும்பரின் மாடே களிபேடோ
    டன்னம் மாடு முன்னுறை கண்டங் கயனின்றார். (மிதிலை. கா.ப 23)”

    என்று குறிப்பிடுகிறார்.

    அதாவது பொன்னினது ஒளியும், வண்டுகள் உண்ணும் தேனினது இனிய சுவையும் திருத்தமான சொற்களாலமைந்த பாட்டினது இன்பமும் ஆகியவை அனைத்தும் ஓர் உருக்கொண்டு விளங்குவது போல சீதையைக் கண்டு பிரமித்து அவளைக் கண்ட இடத்திலேயே நின்றனர். அங்கே சீதையை இராமன் கண்ட காட்சியை,

    ”எண்ணரு நலத்தினாளினைய நின்றுழிக்
    கண்ணொடு கண்ணிணை கெளவி ஒன்றையொன்று
    உண்ணவு நிலைபெறா துணர்வும் ஒன்றிட
    அண்ணலு நோக்கினான் அவளும் நோக்கினாள்” (மி.கா.ப. 35)

    ஒருவர் பார்வையோடு ஒருவர் பார்வை ஒன்றையொன்று பற்றி விழுங்கினது போல இருவர் உணர்வுகளிலும் தத்தம் இடத்து நிலைபெறாமல் ஒன்றையொன்று நாடி ஒன்றாய்க் கூடிக் கலக்கும் காதற் பார்வையாக இராமனும் சீதையும் கண்டனர். இருவருடைய உள்ளங்களும் ஒன்று கலந்தன. (மி.கா.ப.100) என்று இராமன் சீதை களவுக் காதலைப் பாடுகின்றார் கம்பர்.

    அவர்களது உள்ளப் புணர்ச்சியை எடுத்துரைக்கிறார்.

    காட்சி முதல் இயற்கைப் புணர்ச்சி நிகழும் காலம் வரையுள்ள இடைப்பட
    நிலையிலுள்ள மன நெகிழ்ச்சியைத் தொல்காப்பியர்,

    வேட்கை ஒருதலை உள்ளுதல் மெலிதல்
    ஆக்கஞ் செப்பல் நாணுவரை இறத்தல்
    னோக்குவ எல்லாம் அவையே போறல்
    மறத்தல் மயக்கஞ் சாக்காடு என்றிச்
    சிறப்புடை மரபினவை களவென மொழிப (தொல்.பொரு 97)

    என்கிறார்.

    வேட்கை- பெறல் வேண்டும் என்ற உள் நிகழ்ச்சி, ஒருதலை உள்ளுதல் – இடைவிடாது
    நினைத்தல், மெலிதல்- உண்ணாமையால் உடல் இளைத்தல், ஆக்கம் செப்பல்- உறங்காமை போன்ற நிலையை வர்ணித்தல், நாணும் வரை இறத்தல் –நாணம் நீங்குதல், நோக்குவ எல்லாம் அவையே போறல்- தன்னால் காணப்பட்டதெல்லாம் தான் கண்ட உறுப்புப் போலத் தோன்றுதல், மறத்தல்- தினசரி மறவி – பித்தாதல், மயக்கம்—மோகித்தல் வெறித்தனமாக நினைத்து மயங்குதல், சாக்காடு- மரணம் – சாதல். இவையெல்லம் களவுகாலத்து நிகழ்பவை. இவற்றைக் கைக்கிளை பாற்படும் என்று உரைக்கிறார். இதற்கு இளம்பூரணர் அவத்தைகள் என்று விளக்கம் தருகிறார்.

    கைக்கிளை என்பது ஒருதலைக் காமம். ஒருவரது காதலை எடுத்துக் கூறும் வரையுள்ள மன நிலையையும் ஒருதலைக் காமமாகக் கொள்ளலாம். இராமன் – சீதை இருவரிடையே நிகழும் களவின்போது தொல்காப்பியர் கூறிய பத்து அவத்தைகளுள் பல நிகழ்வதைக் காணலாம். பின்வரும் பகுதி, அவற்றை எடுத்துரைக்கிறது.

    காட்சிக்குப் பின் ஐயம் நிகழும் (தலைவியைக் கண்டதும் ஐயம் ஏற்படும்). இதனை விளக்குவதற்குத் திருக்குறளை எடுத்துக் காட்டியுள்ளனர், தொல்காப்பிய உரையாசிரியர்கள்.

    கூற்றமோ கண்ணோ பிணையோ மடவரல்
    நோக்கிம் மூன்று முடைத்து                       (குறள்-1085)

    அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை
    மாதர்கொல் மாலுமென் நெஞ்சு                 (குறள்-1081)

    இவ்வாறு ஐயம் கொள்ளும் காட்சி, கம்பராமாயணத்திலும் பயின்று வந்துள்ளது. இராமன், சீதையைக் கண்டு துயில் கொள்ளாது மாடத்தில் வைத்து புலம்பும் பகுதி இதனைத் தெளிவு செய்கிறது.

    விண்ணி நீங்கிய மின்னுரு விம்முறை
    பெண்ணின் அன்னலம் பெற்றதுண்டோ? (மி. கா.ப. 58)

    கை கால் முதலிய அவயவப் பகுப்பில்லாத மின்னுருவம் கண நேரத்தில் மறைந்து ஒழிவதல்லது நிலையானதாய் இவ்வாறு அவயவப் பகுப்புடைய பெண் போலச் சிறந்த அழகு பெற்றதுண்டோ? நான் காண்கின்ற இவ்வுரு மின்னுருவோ அல்லது பெண்ணுருவோ? என்று ஐயம் கொள்கின்றான். ’இவ்வாறு நிகழும் ஐயம் தலைமகன் மாட்டுதான் நிகழும், தலைமகள் மாட்டு நிகழாது. தலைமகள் ஐயப்படாது ஏனெனில், அவள் ஐயப்படுங்கால் தெய்வமோ என்று ஐயுறல் வேண்டும். அவ்வாறு ஐயுற்றால் அச்சம் வரும். அஃது ஏதுவாகக் காம நிகழ்ச்சி உண்டாகாது என்று இளம்பூரணர் குறிப்பிடுகிறார்.”

    ஆனால், இதற்கு மாறாக, கம்பராமாயணத்தில் சீதையும் ஐயப்படுதல் காணப்படுகிறது. இராமனைக் கண்ட சீதை, காமம் ஆற்றப்பெறாளாய் ,

    பொருப்புறழ் தோள்புணர் புண்ணி யத்தது
    கருப்புவில் லன்றவன் காம நல்லனே (மி.கா.ப. 54)

    என் நெஞ்சினுள் பிரவேசித்து நிறையையும் பெண் தன்மையையும் நெகிழச் செய்து அவற்றை என் உயிரோடு கவர்ந்து கொண்டு போனவனுடைய மலை போன்ற தோள்களைச் சேரும் பாக்கியத்தைப் பெற்று விளங்கும் வில் கரும்பு வில்லன்று ஆதலால் அவன் காமன் அல்லன் என்று கூறுவதிலிருந்து சீதை இராமனைக் காமன் என ஐயுற்று அவது வில்லைவைத்து காமனல்லன் எனத் தெளிவுறுகிறாள். இங்கு கம்பர், தொல்காப்பிய மரபிலிருந்து விலகிச் செல்வதையும் காணலாம்.

    வேட்கை

    பத்து அவத்தைகளுள் ஒன்று, வேட்கை. பெறல் வேண்டு என்ற உள்ள நிகழ்ச்சி. கம்பராமாயணத்தில் இருவருக்கும் இவ்வேட்கை உணர்வு மேலிட்டதைக் கம்பர்
    எடுத்துரைத்துள்ளார். சீதையும் இராமனும் ஒருவரையொருவர் கண்டு காதல் கொண்ட பின்பு, ஒருவரையொருவர் நினைத்துப் புலம்பும் காட்சிகள் அனைத்து வேட்கையின்பாற்படும். சீதை இராமனை நினைத்து வெதும்புகிறாள் நிலவின் கதிர்கள் அவள்மேல் விழுந்ததால் தளர்வடைந்து சோர்ந்தாள், தோழியர் சந்தனக் குழம்பை அள்ளிப் பூசப் பூச உலர்ந்தது. மற்ற நோய்க்கு மருந்திருத்தல் போல ஆசை நோய்க்கு மருந்துண்டோ என்று ஆசிரியர் கேட்கிறார்.

    இராமனும் சீதை தன் உள்ளத் தாமரையில் வீற்றிருப்பதாகக் கூறுகிறான் . இவை
    தொல்காப்பியர் கூறிய வேட்கையாகும்.

    ஒருதலையுள்ளுதல்

    ஒருதலையுள்ளுதல் என்பது இடைவிடாது நினைத்தல். மாலைப் பொழுது வந்ததும்
    சீதை,

    பெண்வழி நலனோடும் பிறந்த நாணோடும்
    எண்வழி உணர்வு நானெங்கும் காண்கிலேன் (மி.கா.ப. 55)

    பெண் நலங்களையும் அவற்றுள் தோன்றிய நாணத்தையும் அறிவையும் என் அகத்தே தேடியும் காண்கிலேன், இராமன் அவற்றைக் களவாடியதாகக் கூறுகிறாள். இந்திர நீலத்தை ஒத்த நிறமும், தாழ்ந்த கைகளும், பூரண சந்திரனையொத்த முகமும் நீல மலையொத்த தோள்களும் சீதையின் உயிரை உண்டதாகக் குறிப்பிடுகிறார். மாரழகினும் தாளழகினும் அதிகமாக நடையழகு மனதில் நிலைத்திருப்பதாகக் கூறுகிறார். இவ்வரிகளிலிருந்து சீதை, ராமனை இடைவிடாது நினைத்தலை உணரலாம்.

    மெலிதல்

    மெலிதல் என்பது காம நோய் காரணமாக உண்ணாமையால் உடல் நலிதலாகும்.

    மாலுற வருதலு மனமு மெய்யுந்தான்
    நூலுறு மருங்குல் போனுடங்கு வாணெடுங்
    காலுறு கண்வழி புகுந்த காத நோய்            (மி.கா.ப. 41)

    இராமன் மீது கொண்ட காதலால் மனமும் தேகமும் இடைபோல மெலிவுற்றது என்று
    கூறுகிறார்.

    ஆக்கஞ் செப்பல்

    ஆக்கஞ் செப்பலுக்கு இளம்பூரணர் உறங்காமையும் உறுவது ஓதல் முதலாயின என்று உரையெழுதுகிறார். சீதை இராமன் காதலிலும் இத்தகைய அவத்தை பயின்று வந்துள்ளது. சீதை மாலைப் பொழுதையும் சந்திரனையும் பழிக்கும் காட்சிகள் அனைத்தும் இதன்பாற்படும். இராமனும் தூக்கம் வராமல் உலாவும் காட்சியை வர்ணிக்கிறார்.

    நோக்குவயெல்லாம் அவையே போறல்

    தன்னால் காணப்பட்ட அனைத்தும் தான் நினைத்ததாகவே தோன்றுதல். இக்காட்சியும் முழுமையாக இராமாயணத்தில் காணக் கிடைக்கின்றது.

    ஆல முலகிற் பரந்ததோ வாழி கிளர்ந்த தேவர்தன்
    நீல நிறத்தை யெல்லாரு நினைக்க வதுவாய் நிரம்பியதோ (மி.கா.ப.67)

    இரவு வந்ததும் அவ்விரவு நீல நிறம் போன்று எங்கும் காட்சியளிக்கிறது. ஆலம் உலகத்தில் பரவியதோ. சமுத்திரம் மேலோங்கி எங்கும் பெருகியதோ அவர் நீல நிறத்தை நினைக்க அதுவாய் பரவியதோ என்றும் கூறும் பகுதியிலிருந்து சீதை காணும் காட்சியனைத்தும் இராமனாகவே தோன்றுவதாகக் குறிப்பிடுகிறார். இராமனும்

    தெருளிலாவுலகிற் சென்று நின்றுவாழ்
    பொருளெலாமவள் பொன்னுரு வானவே ( மி.கா.ப. 123)

    என்னும் வரிகளில் உலகில் காணும் அனைத்து பொருட்களிலும் சீதையது அழகிய வடிவம் காட்சியளிப்பதாக இராமன் கூறுகிறார்.

    கம்பர், வால்மீகியைத் தழுவி ராமாயணத்தை அமைத்தாலும் தமிழ் மரபிற்கேற்பவே
    இதனை அமைத்துள்ளார். தொல்காப்பியர் களவுக்கு ஆமென்று வகுத்த பத்து அவத்தைகளுள் பெரும்பான்மையானவை சீதாராமன் களவிலும் பயின்று வந்து சிறப்பித்துள்ளன என்றும் சில இடங்களில் விலகியும் சென்றுள்ளன என்பதை இதினின்று அறிந்துகொள்ளலாம்.

    பயன்பட்ட நூல்கள்

    • கம்பராமாயணம் பாலகாண்டம், இராவ் சாகிப், வெ.ப.சு. நூல் நிலையம், மதுரை,1995
    • தொல்காப்பியம் பொருளதிகாரம், இளம்பூரணர் உரை, திருவரங்கம் அச்சகம், சென்னை,1974
    • தொல்காப்பியத்தில் மணமுறைகள், செல்வராசு.சிலம்பு. நா , காவ்யா, சென்னை,2010
    • காப்பிய நோக்கில் கம்பராமாயணம், பாண்டுரங்கன்.அ, நியூ செஞ்சுவரி புக் ஹவுஸ், சென்னை

    படத்திற்கு நன்றி: விக்கிப்பீடியா

    ================================================================

    ஆய்வறிஞர் கருத்துரை (Peer review):

    ஆய்வாளர், கம்பராமாயணத்தின் பால காண்டத்தில், மிதிலைக் காட்சிப் படலத்தில்  காணப்படும் அகத்திணை மரபுக் கூறுகளை ஆய்ந்து அவற்றை அம் மரபுக்கு இயைய பொருத்திக் காட்டியிருக்கிறார். கட்டுரை சிறப்பாக அமைந்திருக்கிறது. எடுத்துக்கொண்ட தலைப்புக்கிணங்க, பால காண்ட நிகழ்வுகளை வைத்து ஆய்ந்திருக்கிறார். சுந்தர காண்டம் காட்சிப் படலத்திலும் இந்தக் கூறுகள் காணக் கிடைக்கின்றன. ஆய்வாளர், பால காண்டத்தோடு நிறுத்திக்கொண்டிருக்கிறார் எனினும் சிறப்பாகச் செய்திருக்கிறார். கட்டுரையின் நடை, கடுமையாக இருக்கிறது. இன்னும் எளிமையாக எழுதுவது, வாசகர்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்தும்.

    ================================================================

    Share
  • (Peer Reviewed) ஆகமம்

    முனைவர் ஹெப்ஸி ரோஸ் மேரி, அ.
    உதவிப் பேராசிரியர், தமிழ்த் துறை
    கேரளப் பல்கலைக்கழகம்
    திருவனந்தபுரம்

    ஆகமம்

             எழுத்துக்கள் தம்முள் புணர்வதைத் தமிழில் புணர்ச்சி என்றும் வடமொழியில் சந்தி என்றும் அழைப்பர்.  சந்தியை அகச்சந்தி (Internal Sandhi) என்றும் புறச்சந்தி (External Sandhi) என்றும் இருவகைப்படுத்துவர்.  ஒரு சொல்லின் இரு கூறுகளுக்கிடையே நிகழும் சந்தியை அகச்சந்தி என்றும் (வந்தான், அங்கு), இரண்டு சொற்களுக்கிடையே நிகழும் சந்தியைப் புறச்சந்தி என்றும் கூறுவர்.  இவ்வகைப் புணர்ச்சியில் தோன்றல், திரிதல், கெடுதல் என்னும் மூன்று விகாரங்கள் நிகழும். தோன்றல் விகாரத்தை வடமொழியில் ஆகமம் என்பர்.  இக்கட்டுரை தொல்காப்பியம் லீலாதிலகம் கூறும் தோன்றல் விகாரத்தை விளக்க முயல்கிறது.

    புணர்ச்சி விதிகள் தோன்றக் காரணம்

          தமிழ் எழுத்திலக்கணத்தின் உயிர்ப்பகுதி புணரியல் தான்.  அதனாலேயே எழுத்ததிகாரத்தின் பெரும்பகுதியையும் புணரியல் பற்றிக்கொண்டு இருக்கிறது என்று குறிப்பிடுகிறார் தமிழ் வரலாற்றிலக்கண ஆசிரியர் ஆ. வேலுப்பிள்ளை. புலமையும் வித்துவத் தன்மையும் காட்டுவதே முக்கியம் என்ற கருத்து நிலவிய காலத்தில் தோன்றிய உரைநடையிலும் செய்யுளிலும் கடின சந்தி விகாரங்களை அமைத்துக் கடின நடையில் தமிழறிஞர் எழுதிவந்தனர்.  கருத்துத் தெளிவே முக்கியம் கருத்தைப் புலப்படுத்த மொழி ஒரு கருவியே என்ற கருத்து இன்று நிலவுவதால் இன்றைய தமிழ் நடையில் சந்தி விகாரங்கள் பெரும்பாலும் அவசியமான இடங்களிலேயே இடம்பெறுகின்றன என்று கூறுகின்றார்.  இன்றைய நிலையில் விரிவான அளவில் புணர்ச்சி முறைகள் நமது மொழிக்கு வேண்டியதில்லை என்னும் கருத்தினை அவர் வலியுறுத்துகிறார்.  ஆனால் பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் விரிவான முறையில் புணர்ச்சி விதிகள் பற்றித் தமிழ் இலக்கண நூலால் கூறவேண்டிய தேவையிருந்தது.  சொற்களுக்கு இடையே இடைவெளியிட்டு எழுதும் வழக்கம் அச்சு இயந்திர வரவாலும் ஆங்கிலமொழிச் செல்வாக்காலும் ஏற்பட்டது அதற்கு முன்னர் எழுதுகருவிகள்  காரணமாக எவ்வளவு தூரம் எல்லாச் சொற்களையும் தொடுத்து எழுத முடியுமோ அவ்வளவுக்கு எழுது முயற்சியும் சிக்கனப்படுத்தப்பட்டன. இத்தகைய சிக்கன முயற்சிக்குப் புணர்ச்சி விதிகள் பெருமளவும் உதவின என்று சண்முகதாஸ் குறிப்பிடுகிறார்(2008:82).

              அன்றைய வழக்கில் இருந்த செய்யுள் வடிவமும் பெரும்பாலான புணர்ச்சி விதிகள் செய்யுள் நோக்கில்  அமைக்கக் காரணமாயின.  இக்கருத்தினைச் சொல்லிலக்கணத்தில் யாப்பின் செல்வாக்குப் பற்றி எழுதிய பண்டிதர் க.வீரகக்தியின் கருத்துக்கள் இதற்கு வலுசேர்க்கும்.  அவர் வெவ்வேறு ஓசையின் ஒழுங்கான வரையறைகளே யாப்பிலக்கணமாகி இலக்கணத் துறைகளில் ஒன்றாக விரிவும் தெளிவும் பெற்றுள்ளது.   நேர்சீராயில்லாத சீரமைப்பும் தளைப்பிணிப்பும் பாவின் நீரோசையைச் சிதைத்து அதனை உரைநடைக்குள் தள்ளிவைக்கும்.  “எழுத்திற்கு மாத்திரை கோடலும் அசைத்தலும் சீர்செய்தலும் தளையறுத்தலும் ஓசை பற்றி அல்லது எழுத்துப் பற்றியன்று” என்று கூறும் சிவஞான முனிவரின் விளக்கம் ஓசைக்குள் செல்வாக்கைத் தெளிவாகத் தெரிய வைக்கின்றது.  ஓசை மாசுபடாதிருப்பதற்காக எழுத்தும் சொல்லும் சொற்றொடரும் வேண்டிய இடங்களில் யாப்புக் கட்டுக்கோப்புக் கருதித் தம் இயல்பான அமைதி நிலையிழந்து ஓசை ஓட்டத்திற்குப் பாதை திறந்துவிடுதல் வேண்டும்.  அன்றி ஓசை இவற்றிற்கு விலகிக் கொடுக்காது. விலகின் யாப்பு யாப்பற்றதாய் விடும்.  யாப்பின் செல்வாக்கு இன்றேல் எழுத்திலக்கணம் இத்துணை விரிவடைய இடமில்லை.  சார்பெழுத்துக்களின் விரிவு பல்வகைப்பட்ட விகாரங்கள் எல்லாம் யாப்பின் தாக்கமே(2008:116) என்ற பண்டிதர் க.வீரகத்தியின் கருத்து இங்கு எண்ணத்தக்கது. இதிலிருந்து தமிழ் இலக்கணங்களில் ஏன் பெருந்தொகையான புணர்ச்சி விதிகள் அமைக்கப்பட்டன என்பதற்குரிய காரணத்தினை ஓரளவு ஊகிக்கலாம்.

    தொல்காப்பியமும் புணர்ச்சி விதிகளும்

              தொல்காப்பிய எழுத்ததிகாரம் ஆறு இயல்களில் புணர்ச்சி பற்றிக் கூறுகிறது.  புணர்ச்சி பற்றிய பொதுவான கருத்துக்களெல்லாம் புணரியல் என்னும் இயலிலேயே வகைப்படுத்துகிறார்.  முதல் நூற்பாவில் புணர்ச்சி நடைபெறக்கூடிய இடமும் அதனுடன் தொடர்புடைய எழுத்துக்களும் கூறப்படுகின்றன. மொழிக்கு முதலாக வருமென்று கூறிய எழுத்துக்கள் முதனிலையிலும் மொழிக்கு ஈறாக வருமென்று முன்னர் கூறிய எழுத்துக்கள் ஈற்று நிலையிலும் வரும் என்பதை,

                 “எல்லா மொழிக்கும் இறுதியும் முதலும்

                   மெய்யெ யுயிரென்று ஆயிரியல” ( தொல். 104)

    என்று குறிப்பிடுகிறார்.

    புணர்ச்சிக்குரிய மொழிகளினியல்பு அடுத்து கூறப்படுகின்றது. இரண்டு சொற்களினெல்லைகளில் புணர்ச்சி நடைபெறும். அவ்வாறான சொற்களில் புணர்ச்சிக்குரிய ஈற்றினை  நிறுத்தச்சொல் (நிலைமொழி) என்றும் முதனிலையுடையதைக் குறித்தசொல் (வருமொழி) என்றும் கூறுவார். அவ்விருசொற்களின் ஈறும்முதலும் வரும்மாற்றினை,

          “உயிரிறு சொல்முன் உயிவரு வழியும்

            உயிரிறு சொல்முன் மெய்வரு வழியும்”

    தொல்காப்பியர் குறிப்பிடுகிறார். அவ்விருவகைப்பட்ட சொற்களும் எத்தகைய மாற்றங்கள் நிகழும் என்பதைத் தொல்காப்பியர் பின்வருமாறு வகைப்படுத்துகிறார். பெயர் + பெயர், பெயர் + தொழில் (வினை), தொழில் + பெயர், தொழில் + தொழில் என்பனவாகும்.  புணர்ச்சி காரணமாக ஏற்படும் மாற்றங்கள் மூன்று வகைப்படும். அவை,

              “மெய்பிறிதாதல் மிகுதல் குன்றலென்று

             இவ்வெனமொழிப திரியுமாறே”  ( தொல். 110)

    மெய்வேறுபடுதல் (திரிதல்) மிகுதல், குன்றல் என்பனவாகும்.   திரிதல் பண்பு மெய்யெழுத்துக்கு மட்டும் உரியது.  மிகுதலும் குன்றுதலும் உயிருக்கும் மெய்யுக்கும் பொதுவானவை. இவ்வாறு நடைபெறும் புணர்ச்சியினைத் தொல்காப்பியர் வேற்றுமைப்  புணர்ச்சி என்றும் அல்வழிப்புணர்ச்சி என்றும் இருவகையாகப் பாகுபாடு செய்வர்.  உருபுகள், சாரியைகள் புணர்ச்சியிலே எவ்வாறு இடம்பெறுகின்றன என்றும்  புணர்ச்சி காரணமாகப் பொருள் வேறுபடுதலையும் புணரியலில் எடுத்துரைக்கிறார்.

    ஆனால் லீலாதிலகம் புணர்ச்சி விதிகளை விரிவாகவும் விளக்கமாகவும் கூறவில்லை.  தமிழ்ப்புணர்ச்சி விதிகளையே பின்பற்றியுள்ளதாகக் கே. என். எழுத்தச்சன் குறிப்பிடுகிறார்.  லீலா திலகம் புணர்ச்சிக்கு 28 விதிகள் தான் கூறியுள்ளது.  அவர் கூறும் விதிகள் உயிர்முன் உயிர், உயிர்முன் மெய், மெய்முன் மெய் என்ற மூன்று அமைப்பில் காணப்படுகிறது.  மெய்முன் உயிர் என்ற அமைப்பில் இடம்பெறவில்லை.  பெரும்பாலும் பெயர் + பெயர் அமைப்பிற்கே விதிகள் கூறுகின்றது..

    ஆகமம்

    புணர்ச்சி நடைபெறுமிடத்து மூன்று வகையான மாற்றங்கள் நிகழுமெனத் தமிழ் இலக்கண நூலார் குறிப்பிடுகின்றனர்.   அம்மாற்றங்களாவன தோன்றல், திரிதல், கெடுதலாகும். தோன்றல் புனர்ச்சியை வடமொழியாளர் ஆகம சந்தி என்பர். தோன்றல் புணர்ச்சி காரணமாகச் சில இடங்களில் எழுத்துக்களோ சாரியைகளோ தோன்றுவது பற்றித் தொல்காப்பியர் விதியமைத்துள்ளார். பொதுவாக இரண்டு உயிரெழுத்துக்கள் புணரும்போது அவற்றை ஒன்று சேர்ப்பதற்கு அல்லது அவ்விடத்து விட்டிசைத்தலைத் தடுக்க யகர வகரம் உடம்படு மெய்யாக வரும்.  தொல்காப்பியர் உடம்படு மெய்யின் உருபுகொளல் வரையார் (தொல். எழுத்து. 141) எனப் பொதுவாகக் கூறுகிறாரே ஒழிய  இன்னின்ன மெய்கள் உடம்படுமெய்களாக வரும் என்றும் இன்ன உயிர்முன் இன்ன உயிர் வருமென்று குறிப்பிடவில்லை.   லீலாதிலகம் இரண்டு உயிர்களுக்கு இடையில் யகரம் தோன்றும் என்றும் தனித்து நிற்கும் அ, இ ஆகியவற்றின் முன் உயிர் வரின் வகரம் தோன்றும்.  சிலயிடத்து இரட்டித்து வரும் என்று குறிப்பிடுகிறது.

    எ.டு

            ஆன + அது                  =             ஆனயது

            காண்மூ + அது          =             காண்மூவது

           அ + அழகு                     =             அவழகு

           இ  + அழகு                    =             இவழகு

    லீலாதிலகம்  நன்னூலைப்  பின்பற்றவில்லை என்பது இங்கு தெளிவாகிறது.  நன்னூலார் “இ ஈ ஐ வழி யவ்வும் ஏனைய உயிர்வரின் வவ்வும்” என்று குறிப்பிடுகிறார். ‘இ’ யின் முன் உயிர் வரின் வகரம் வரும் என்று கூறுவதிலிருந்து இதனை அறியலாம். “ய வ முன் வரினே வகர ஒற்றும்’’ (தொல்.உயிர்மயங். 4) இந்த தொல்காப்பிய நூற்பாவை ஒட்டியே “தஸ்ய  தித்வம் வ சிலயிடத்து இரட்டும்” என்று லீலாதிலகம் குறிப்பிடுகிது.

    எ.டு

            அ + அழகு     =             அவ்வழகு

           இ + அழகு     =             இவ்வழகு

    பொதுவாகத் திராவிட மொழிகள் எல்லாவற்றிலும் இரண்டு உயிர்களுக்கிடையே உண்டாகும் இடைவெளி ‘வ’கர அல்லது ‘ய’கர உடம்படுமெய் நுழைவால் தடுக்கப்பெறும் என்று கால்டுவெல் கூறுவார்.  திராவிட மொழிக் குடும்பத்தின் அடிப்படை என்று இதனைக் கூறலாம்.

             “சுட்டின் முன்னர் ஞ ந மத் தோன்றின்

            ஒட்டிய ஒற்றிடை மிகுதல் வேண்டும்” ( தொல். எழுத்து. 206)

    இதனை அடியொற்றி லீலாதிலகம் “கேவலாஞ்ஞானமவா நாம் ச”  வினாப்பொருளில் வருகின்ற எகரத் தனிச் சொல்லின்முன் வரும் ஞ ந ம வ ஆகிய எழுத்துக்கள் இரட்டும் என்று குறிப்பிடுகிறது.

    எ.டு

           எ + ஞாண்  = எஞ்ஞாண், எந்நூல், எம்மரம்

    தொகைச் சொற்களிலும் ஒ, ந, ம வக்கள் அல்லாத மெய்கள் இரட்டும்.

    எ.டு

          ஆன  + காடு = ஆனக்காடு ( யானைகள் வாழும் இடம்)

    ய ர ல ழ ள ஆகியவற்றின் முன்வரும் கசதபக்கள் இரட்டும் (லீ.தி. 56) என்ற லீலாதிலகம் கூறுவது ‘ரகார இறுதி யகார இயற்றே’ (தொல். 363) என்ற தொல்காப்பிய நூற்பாவை அடியொற்றியாகும்.

    எ.டு

           பொய் + குதிர =        பொய்க்குதிர

           நீ + கோழி      =   நீர்க்கோழி

    ‘அளவும் நிறையும் வேற்றுமையியல ( தொல். 32) என்ற நூற்பாவைப் பின்பற்றி மகர ஈற்றுப் பெயரின்  முன் வல்லினம் வரின் இரட்டும் என்று லீலாதிலகம் குறிப்பிடுகிறது.

    எ.டு

           வட்டம்   +  பலக      = வட்டப்பலக

          சதுரம்  + கிணறு  = சதுரக்கிணறு

    ‘யரழளப்ய : கசதபனம த்வித்வம்’(லீ.தி. 388)  ய, ர, ல, ழ, ள ஆகியவற்றின் முன்வரும் கசதபக்கள் இரட்டும்.

    எ.டு

           வால் + கிண்டி          = வால்க்கிண்டி

           முள்   + கொம்பு       = முள்க்கொம்பு

    இவ்வாறு சொற்கள் இரண்டினை இணைத்து ஒரு சொற்றொடராக மாற்றுவதற்குப் புணர்ச்சியில் தோன்றல் விகாரம் பயன்படுகிறது.  உச்சரிப்பினை இலகுவாக்குவதற்கு மொழியில் பல இடங்களில் தோன்றல் விகாரம் நடைபெறுகின்றது.  பிற்கால மலையாள இலக்கண ஆசிரியர்கள் லீலாதிலகம் அமைத்த ஆகம சந்தி மலையாளத்துக்குரியது என்று கூறுவர். ஆனால் லீலாதிலகம் ஆகமசந்திக்குக் கூறும் விதிகள் அனைத்தும் தொல்காப்பியத்தைப் பின்பற்றி அமைந்தவையாகும்.

    பயன்பட்ட நூல்கள்

    1. இளையபெருமாள், மா., லீலாதிலகம், கேரளப் பல்கலைக்கழக வெளியீடு.
    2. இளம்பூரணர், தொல்காப்பியம், கழக வெளியீடு, சென்னை.
    3. சண்முகதாஸ், தமிழ் மொழி இயல்பு, பாவை வெளியீடு, 2008.

     ========================================

    ஆய்வறிஞர் கருத்துரை (Peer Review)

    லீலா திலகம், மணிப்பிரவாள மொழிநடையை விளக்குவதற்காக எழுந்த இலக்கணம். இக்கட்டுரையில் தொல்காப்பியம் கூறும் தோன்றல் புணர்ச்சி விதியை லீலா திலகத்தின் ஆகம சந்தி என்னும் புணர்ச்சி விதியோடு ஒப்பிட்டுப் பார்த்திருக்கிறார் கட்டுரையாளர். அதன் விளைவாகத் தொல்காப்பியத்தின் தோன்றல் புணர்ச்சி விதி தான் லீலா திலகத்தில் கூறப்பட்டிருக்கும் ஆகம சந்தி என்னும் புணர்ச்சி விதி என்று இக்கட்டுரையின் மூலம் நிறுவுகிறார். கட்டுரையில் பயன்படுத்திய நூல்களின் விவரங்கள், அவற்றின் பதிப்பு ஆண்டுகள் ஆகியவற்றை ஆய்வாளர் கட்டாயம்  பதிவு செய்ய வேண்டும்.

    ========================================

    Share
  • மலையாளம் தமிழ் அகராதி

         தமிழோடு நெருங்கிய தொடர்பு கொண்ட திராவிட மொழிகளில் ஒன்றே மலையாளம்.  இன்று இலக்கியச் செல்வங்களுடன் புதுப் பொலிவு பெற்றுத் திகழும் மலையாள மொழி பண்டைய தமிழ் நாட்டின் மேற்குப் பகுதியான சேர நாட்டில் பேசப்பட்டு வருகிறது.  இதற்குப் பதிற்றுப்பத்து, சிலப்பதிகாரம் போன்ற நூற்களே சான்றாகும்.  மலையாள மொழியின் தொடக்க காலத்தில் தோன்றிய இலக்கியங்களிலும் தமிழின் ஆதிக்கமே மிகுந்துள்ளது.  இம்மொழி தனித்தனியாகப் பிரிந்தாலும் இன்றும் அம்மொழி பேசுவோர் இலக்கணமோ அகராதியோ இன்றி தமிழர் மலையாளத்தையும் மலையாளி தமிழையும் புரிந்துகொள்ளத்தான் செய்கின்றனர்.   இருப்பினும் மொழியின் உள்ளமைப்பில் ஏற்படுகின்ற மாற்றங்களும் பிறதொடர்புகளும் வேறுபடுவதால் செப்பமாக மொழியைப்பயில்வதற்கு இலக்கண நூல்களும் அகராதிகளும் ஏழவேண்டிய தேவை எழுகிறது.  இத்தேவையை நிறைவு செய்யும் வகையில் கேரளப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை மலையாளம் தமிழ் அகராதி ஒன்றை உருவாக்கி 2016 – ஆம் ஆண்டில் வெளியிட்டது.

          மலையாளம் தமிழ் அகராதி உருவாக்கத்திற்கு வித்திட்டவர்கள் இத்துறையின் மேனாள் பேராசிரியர் பெருமக்களாவார்.  அவர்கள் இத்துறையில் பணியாற்றிய காலத்தில் ஆய்வு மாணவர்களைக்கொண்டு சங்க இலக்கியம் முதல் தற்கால இலக்கியம் வரையிலான அனைத்து இலக்கியதங்களுக்கும் சொல்லடைவு உருவாக்கி அகராதி தொகுப்பிற்கு வித்திட்டனர்.  அவர்களுள் குறிப்பிடத்தக்கவர் பேரா. மா . இளையபெருமாள் ஆவார்.  அவர் மலையாள இலக்கண நூல்களைத் தமிழுக்கும்  தமிழ் இலக்கண நூல்களை மலையாளத்திற்கும் மொழிபெயர்த்துள்ளார். மேலும் அவர் மலையாளம் –  தமிழ் , தமிழ் – மலையாளம் அகராதியையும் தயாரித்து வைத்திருந்தார். அது அச்சில் வராமல் போனது. அவரைத் தொடந்து தற்போது பணியாற்றும் பேரா. ப. . ஜெயகிருஷ்ணன் அவர்களின் தலைமையில் நான் உள்ளிட்ட துறையின் பேராசிரியர்கள், ஆய்வாளர்கள் போன்றொரின்  அரிய முயற்சியால் உருவானதே இவ்வகராதி. இதனை கேரளப் பல்கலைக்கழகப் பதிப்புத்துறை வெளியிட்டுள்ளது.

    அகராதி அமைப்பு

          மலையாளம் – தமிழ் அகராதி வரலாற்றில் இது முதன்மையானது.  மலையாளம் தலைச்சொல்லாக அமைகிறது.  தொடர்ந்து அச்சொல்லுக்காண இலக்கண விளக்கம் , ஆங்கில ஒலிபெயர்ப்பு , தமிழ் விளக்கம் என்ற அமைப்பில் இவ்வகராதி அமைந்துள்ளது. தலைச்சொல் மலையாள சொல்லாக இருப்பதால் மலையாளம் அறியாத அனைவரும் எளிதில் வாசிக்கும் வகையில் ஆங்கில் ஒலிபெயர்ப்பு ( Translitration)  கொடுக்கப்பட்டுள்ளது. பின்வரும் நிலையில் இவ்வகராதி அமைந்துள்ளது.

    இவ்வகராதிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைச்சொற்கள் தற்கால மொழிப்பயன்பாட்டிற்கு ஏற்ற முறையிலான இருபதாயிரம் மலையாளச் சொற்கள் தேர்வுசெய்யப்பட்டன. இச்சொற்கள் சப்ததாராவலியில் இருந்தும், மலையளப்பேரகராதியில் இருந்தும் மலையாளச் சொல்தரவகத்திலிருந்தும் எடுக்கப்பட்டவையாகும்.

    இருமொழி அகராதி உருவாக்கச் சிக்கல்களும் தீர்வுகளும்

         ஒருமொழி அகராதி உருவாக்குவதை விட பணிச்சுமையும் குழப்பங்களும் கொண்டதே இருமொழி அகராதி உருவாக்கம்.  இருமொழி அகராதியின் தலையாய நோக்கம் ஒருமொழியிலுள்ள சொற்களைப் பிரிதொரு மொழிச்சொல்லோடு ஒப்புமைப்படுத்திக்க காட்டுவதாகும்.தமிழும் மலையாளமும் ஒரு மொழிக்குடும்பத்தைச் சார்ந்த மொழிகள் என்றாலும் அம்மொழிகள் பேசுவோர் இருவேறு சமூகத்தைச் சார்ந்தவர் ஆவர்.  அவர்களின் பழக்கவழக்கங்கள், பண்பாடுகள், மொழிக்கூறுகள், போன்றவை பல நேரங்களில் சிக்கல்களைத் தோற்றுவிக்கின்றன.    உலகமொழிகள் அனைத்திலும் அவ்வவ் மொழிக்குரிய தனித்தன்மைகள் காணப்படத்தான் செய்கின்றன.  பிஞ்சு, காய் போன்ற சொற்கள் ஆங்கிலத்தில் இல்லாதது போல கணினி, பேருந்து போன்ற சொற்கள் மலையாளத்தில் இல்லை. எனினும் மலையாலத்திற்கே உரிய  தனிப்பட்ட சொற்கள் அம்மொழியில் காணப்படத்தான் செய்கின்றன.  சான்றாக,

         மாப்பு சாக்ஷி – என்ற சொல்லிற்கு இணையான  தமிழ் சொல் இல்லை. அதற்கு அகராதியில் ஒரு தொடராகத்தான் விளக்கம் கொடுக்க முடிந்தது. அதாவது ”குற்றங்களைச் செய்து விட்டு கூட இருப்பவரைக் காட்டிக்கொடுத்து சாட்சி கூறுபவன்”. எனபொருள் விளக்கம் கொடுக்கப்பட்டது.

         கேரளப் பண்பாட்டோடு தொடர்புடைய சில பண்பாட்டுச் சொற்களுக்கு விளக்கம் தரும்போதும் சிக்கல்கள் ஏற்பட்டது.  சான்றாக,

    கை நீட்டம் – என்ற சொல்லுக்கு இணையான தமிழ்ச்சொல் இல்லை. அதற்கு “ விசுப்பண்டிகையின் போது கொடுக்கப்படும் பரிசுப்பொருள் ‘ என் விரிவான முறையில் விளக்கம் கொடுக்கப்பட்டது.

    அஞ்சாம்புரை – நம்பூதிரிப் பெண்ணை விசாரணைக்காக வைக்கப்படும் அறை

    படிப்புர-  வெளிப்புறக் கதவுள்ள வீடு.  இச்சொற்கள் கேரளப் பண்பாட்டோடு தொடர்புடைய சொற்களாகும்.

         மலையாளம் தமிழ் அகராதி உருவாக்கத்தின்போது தமிழ் மலையாள ஒலியொற்றுமையுடைய சொற்களுக்கு பொருள் எழுதும்போதும் சிக்கல்கள் தோன்றின.

    கழி- மலையாளத்தில் சாப்பிடுதல் என்னும் பொருளில் வரும். தமிழில் வெளியேற்றுதல், மலம் கழித்தல் என்னும் பொருளில் வரும். அதேபோன்று  அவசரம்- என்ற சொல் மலையாளத்தில் சந்தர்ப்பம் வாய்ப்பு என்ற பொருளில் வருகிறது. தமிழில் சீக்கிரம் என்ற பொருளில் வருவதைக்காணலாம்.

    ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்

    சான்றோன் எனக்கேட்ட தாய்  – என்ற குறளுக்கேற்ப

         மலையாளம் தமிழ் அகராதி உருவாக்கத்தின் போது பல்வேறு சிக்கல்கள் தோன்றினும் இன்று இருமொழியாளர்களுக்கும் பயன்படும் விதத்தில் அமைந்திருப்பது மகிழ்ச்சியே.

    ஆசிரியர்:-

    முனைவர் ஹெப்சி ரோஸ் மேரி. அ

    உதவிப்பேராசிரியர், கேரளப் பல்கலைக்கழகம்

    Share
  • கேரளத் தமிழர்களின்  மொழிச்சூழலும் மொழிப்பயன்பாடு

    முனைவர். ஹெப்சி ரோஸ் மேரி.அ,உதவிப்பேராசிரியர், கேரளப் பல்கலைக்கழகம்காரியவட்டம், திருவனந்தபுரம்.

    தமிழர்கள் பண்பாட்டிலும் நாகரிகத்திலும் ஒரு நெடும் பாரம்பரியம் மிக்கவர்கள். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்த சங்க இலக்கியம் தமிழர்தம் பண்பாட்டினை  உணர்த்துகின்றன.  நீண்ட வரலாற்றுப் பின்புலம் கொண்ட ஒரு சமூகம் அது தோன்றிய காலம் முதல் பல்துறைச் சார்ந்த வாழ்வியல் கூறுகளில் குறை நிறைகளைச் செம்மைபடுத்திக் கொண்டே வருவது இயல்பு.  கால வளர்ச்சிக்கேற்பவும் சமூகத்தேவைக்கேற்பவும் கருத்துக்கள் புத்தாக்கம் பெறுவதும் புதுப்பொலிவு பெறுவதும் இயற்கை.  இத்தகைய வளர்ச்சியைக் காலந்தோறும் பெற்று வந்தாலும் அடிப்படையான கருத்தாக்கங்களில் மாற்றம்பெற எந்த சமூகமும் விரும்புவதில்லை. ஆனால் மொழியைப் பொருத்தவரை அச்சமூகத்தின் பேச்சுமொழியில் அதிசீக்கிரத்தில் மொழிக்கலப்பு நிகழ்வதைக் காணலாம். காரணம் ஒரு சமூகம் பிறசமூதாயத்தின் மொழியைக்கற்று அவர்களோடு இடைத்தொடர்பை ஏற்படுத்திக்கொள்வதாலாகும். இக்கட்டுரை கேரளத்தமிழர்தம்  மொழிச்சூழலையும் மொழிப்பயன்பாட்டையும் எடுத்துரைப்பதாக  அமைகிறது அதிலும் குறிப்பாக திருவனந்தபுரத்தில் வாழும் தமிழர்களை மையமிட்டே இக்கட்டுரை அமைகிறது.

    மொழிப்பயன்பாடு:-

    மொழி என்பது ஒரு சமூகத்தோடு இணைந்து வாழ்வதற்கும் கருத்துப் பரிமாற்றாத்திற்காகவும் பயன்படும் ஒரு கருவியாகும்.  பொதுவாக இன்றைய சமுதாயம் இருவேறுபட்ட சமுதாயமாகவோ பல்வேறுபட்ட சமுதாயமாகவோ காணப்படுகின்றது.  இந்தியாவிலுள்ள ஒவ்வொரு மாநிலத்திலும் பல இனங்கள் வாழ்கின்றன.  தமிழகத்தில் தமிழர்களோடு கேரள மாநிலத்தவர்களும் , கர்நாடக, தெலுங்கு , உருது , இந்தி போன்ற மொழிகள் பேசும் மக்களும் இணைந்து வாழ்கின்றனர்.  அவ்வாறு பல இனமக்கள் இணைந்து வாழும்போது அவ்வினங்களுக்கு இடையே இடைத்தொடர்பு ஏற்படுவதால் பண்பாடு, கலாச்சாரம், மொழி போன்றவை உள்வாங்கப்படுகின்றதைக் காணலாம்.  அவற்றுள்ளும்  மொழியே அதிகமாக உள்வாங்கப்படுகின்றது.  அதற்குக் காரணம் ஒவ்வொரு இனமக்களும் தமக்கும் இடைத்தொடர்பு ஏற்படுத்திக் கொள்வதற்கு முதன்மைக் காரணியாக மொழியைப் பயன்படுத்திக் கொள்கின்றமையாகும்.  தமது எண்னங்கள், விருப்பு வெறுப்புகள் , நேர்மறை, எதிர்மர்றை உணர்வுகளை வெளிப்படுத்துவதற்கு மொழியைப் பயன்படுத்துகின்றனர். இவ்வாறு ஒரு சமூகம் ஏனைய சமூகத்தின் மொழியை மிக இலகுவாகக் கற்றுக் கொள்கின்றது.

    கேரளத்தமிழர் வரலாறு

    கேரளம் பழந்தமிழகத்தின் ஒரு பகுதியாகவும் இப்பகுதியில் பேசும்மொழி தமிழாகவும் இருந்தது. பண்டுதொட்டே கேரளமும் தமிழகமும் நெருங்கிய தொடர்புடையது.  இதற்குச் சான்றாக விளங்குவது சங்க நூல்களில் 350 பாடல்கள் சேர நாட்டோடு தொடர்புடையனவாக இருந்தன. {மு. இராகவையங்கார் 1947: முன்னுரை). மலையாள மொழியின் முதல் இலக்கண நூலான லீலாதிலகம் மலையாளத்தை மலை நாட்டுத்தமிழ் என்றே அழைக்கிறது. மலையாளத்தில் தொடக்கத்தில் இருந்த பாட்டு ,மணிப்பிரவாளம்  என்ற இலக்கிய நெறிகளில் பாட்டுமரபு தமிழ் மரபைத் தழுவியதாகும். அன்று வழக்கத்தில் இருந்த மலை நாட்டுத்தமிழ் காலவோட்டத்தால் வேறுபட்டு தமிழ் மலையாளமாக வேறு வேறாகப் பிரிந்தது. தமிழ் மலையாள வேறுபாடு நிலையாக ஏற்பட்ட பின்னர்  கி.பி 17 ஆம் நூற்றாண்டிற்குப் பின்னர் தமிழகத்திலிருந்து குடியேறிய மக்கள் இன்று தமிழர்கள் என வேறுபடுத்தி அழைக்கப்படுகின்றனர்.

    கேரளத்தில் இருமொழிச் சூழல்

    தாய்மொழியை மட்டும் அறிந்தவர்களைத் தனிமொழியாளர் என்றும் தாய்மொழியோடு இன்னொரு மொழியினையும் அறிந்து,    பேசும் சூழலுக்கு ஏற்ப  அவற்றைத் தனித்தனியே பயன்படுத்துவோரை இருமொழியாளர் என்று குறிப்பிடுவர். தமிழகத்தின் அண்டை மாநிலங்களாக இருப்பன கேரளமும் கர்நாடகமும் ஆகும். அதிலும் தமிழகத்தோடு நெருங்கிய தொடர்புடைய மாநிலம் கேரளமே. கேரளத்தின்  எல்லையோர மாவட்டங்ககளான திருவனந்தபுரம், பாலக்காடு , இடுக்கி மாவட்டங்களில்  ஏராளமான தமிழர்கள வாழ்கின்றனர். அவர்களது பேச்சுமொழியில் மலையாளத்தின் கலப்பு மிகுதியாகக் காணக்கிடக்கின்றன.  அவ்வண்ணமே தமிழகத்தின் தென்கோடியில் இருக்கும் கன்னியாகுமாரி மாவட்டத் தமிழரின் பேச்சு மொழியிலும் மலையாளம் கலந்திருப்பதைக் காணலாம்.

    திருவனந்தபுரத்தில் தமிழ் பேசுவோர்

    தமிழகத்தின் பலபகுதிகளில் இருந்து வேளாளர், ரெட்டியார், செட்டியார், நாடார் பிராமணர் போன்றோர் குடிபெயர்ந்து கேரளத்தின் பல பகுதிகளில் குடியேறி வாழ்கின்றனர். குறிப்பாகப் பாலக்காடு, இடுக்கி மாவட்டங்களில் ஏராளமான தமிழர்கள் வாழ்கின்றனர்.  இம்மாவட்டங்களுடன் ஒப்பிடும்போது திருவனந்தபுரத்தில் வாழும் தமிழர்கள் குறைவாகவே இருக்கின்றனர் எனலாம்.  இன்று திருவனந்தபுரத்தில் வாழும் தமிழர்களின் மொழிப்பயன்பாட்டடிப்படையில்  பின்வருமாறு மூன்று நிலைகளில் பிரித்துப் பார்க்கலாம்.

    • சமீபகாலத்தில் தொழில், வேலை காரணமாகத் தமிழகத்திலிருந்து திருவனந்தபுரத்திற்குக் குடியேறியவர்கள். இவர்கள் தங்கள் வீட்டில் தமிழ்பேசுவதோடு தமிழை முதல்மொழியாகக் கற்பவர்கள். மாநில மொழியாம் மலையாளத்தைப் பேச முயல்பவர்கள்.
    • தமிழகத்திலிருந்து குடியேறி இரண்டு மூன்று தலைமுறையினராக திருவனந்தபுரத்தில் வாழ்பவர்கள். இவர்களை மூன்றாககப் பிரிக்கலாம்.      முதலாவதாக வீட்டில் தமிழ் பேசுவதோடு கல்வி, தொழில்சார்பாகத்      தமிழைப் பயன்படுத்துவோர்.
    1. இரண்டாவதாகத் வீட்டில் தமிழ் பேசுவோர் ஆனால் கல்வி , வாணிபம், தொழில் முதலியவற்றில் மலையாளத்தைப் பேசுபவர்கள்.
    2. மூன்றாவதாக தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் ஆனால்   வீட்டிலும் அலுவலகத்திலும் மலையாளத்தைப் பேசுபவர்கள்
    • தமிழர்கள் கேரளத்தில் குடியேறி மலையாளிகளை மணந்து வீட்டில் மலையாளமொழியைப் பயன்படுத்துவதோடு கல்வி/ தொழிலிடங்களிலும் மலையாளத்தைப் பயன்படுத்துபவர்கள்.
    • தொடக்கத்தில் தமிழ் பேசுபவர்களாக இருந்தோர் காலப்போக்கில் தமிழை மறந்து வீட்டுமொழியாகவும் தாய்மொழியாகவும் மலையாளத்தை ஏற்றுக்கொண்டு மலையாளிகளாக மாறிவிட்டவர்கள்.

    முதல் இரண்டு பிரிவினரும் காலப்போக்கில் திருமண உறவு, சமூகமதிப்பீடு, பொருளாதாரம், நடைமுறை வசதிகாரணமாக மூன்றாம் பிரிவினராக மாறிவிடுகின்றனர். கலப்புத்திருமணம் காரணமாகத் தமிழர்கள் மலையாளத்தை மட்டுமே பேசிவருகின்றனர். வியாபாரத்தின் பொருட்டு திருவனந்தபுரம் வந்த நாடார்களில் சில பிரிவினர் திருவனந்தபுரம பகுதியில் வாழ்பவர்கள் இன்றும் மலையாளத்தை மட்டுமே பேசிவருகின்றனர்.  அதே நேரத்தில் தமிழகத்தில் வாழும் மலையாளிகள் தமிழை முதல்மொழியாகக் கொண்டு வெளியே செயல்பட்டாலும் தங்களது வீட்டில் மலையாளத்தையே பேசுகின்றனர்.

    கேரளத்தமிழர் தமிழை விட்டுவிடுவதற்குக் காரணம்:

    கேரளத்தில் வாழும் தமிழர்கள்  தமிழை விட்டுவிடக் காரணம் யாது? என நோக்கும்போது பின்வருவனவற்றைக் காரணங்களாகச் சுட்டலாம்.

    • அவர்கள் வாழும் பிறமொழிச்சூழலின் வற்புறுத்தல் முதன்மைக் காரணமாக அமைகின்றது.
    • இரண்டாவதாகத் தமிழர்கள் தாங்களே தாம் பேசும் தமிழ் மொழியையே கைவிடத் தயாராகின்றனர். சான்றாகப் பொது இடங்களில் தமிழைப் பேசினால் மலையாளிகள் தமிழர்களை பாண்டி ( பாண்டி நாட்டவர் என்றும்) அண்ணாச்சி என்றும் கிண்டலாக அழைப்பர் என்ற மனப்பான்மை தமிழர்களிடையே நிலவுகின்றது.
    • பள்ளி விண்ணப்ப படிவங்களில் தாய்மொழியைப் பதிவுசெய்யுமிடங்களில் தங்களுக்குத்தெரியாத தமிழைப் பதிவுசெய்வதைவிட தங்களுக்குத்தெரிந்த மலையாளத்தையே பதிவுசெய்கின்றனர்.
    • மூன்றாவதாக மூன்று சக்கர வாகனங்களில் தமிழ்பேசிக்கொண்டே பயணித்தால் அதிகமான கூலி வசூலிக்கப்படுகிறது என்ற காரணத்தால் பொது இடங்களில் தமிழர்கள் தமிழைப் பேச தயக்கம் காட்டுகின்றனர்.
    •  நான்காவதாகச் சமூக அந்தஸ்து காரணமாகத் தமிழர்களே தங்களுக்குள் மலையாள மொழியைப்பேசுகின்றனர்.
    • திருவனந்தபுரத்திற்கு வந்து இரண்டு மூன்று தலைமுறை ஆகினவர்கள் தங்களைத் தமிழன் என்பதற்குப் பதில் மலையாளி என்றே கூறிக்கொள்கின்றனர்.
    • கேரளத்தில் குடிபெயர்ந்து அரசு நிறுவனங்களில் வேலைபார்க்கும் தமிழர்கள் தங்களது குழந்தைகளின் தாய்மொழியாக மலையாலத்தையே பதிவுசெய்கின்றனர். தமிழ் ஆசிரியர்களும் பேராசிரியர்களும் கூட தங்களது குழந்தகளுக்கு இரண்டாம் மொழியாகக் கூட தமிழைக் கற்றுக்கொடுக்க முன்வருவதில்லை. இதற்கும் பல காரணங்கள் நிலவுகின்றன. அரசு பள்ளிகளில் தமிழ்வழிக்கல்வியும் இரண்டாம் மொழியாகத் தமிழைக் கற்க வாய்ப்புகள் உள்ளன. ஆனால் உயர்மட்டத் தமிழர்கள் தங்களது குழந்தைகளைத் தனியார் கல்வி நிறுவனங்களிலேதான் படிக்கவைக்கின்றனர். அங்கு இரண்டாம்மொழியாகத் தமிழைக் கற்கும் சூழல் இல்லை. இந்நிலையில் அவர்கள் மலையாளம், இந்தி, ஃப்ரென்ஞ் போன்ற மொழிகளை இரண்டாம் மொழியாகக் கற்கின்றனர். இதுவும் வீடுகளில் தமிழைப் பேசுவதற்குரிய சூழலைக் குறைக்கிறது. இச்சூழல் ஒன்றிரண்டு தலைமுறை மாறும்போது அவர்கள் மலையாளிகளாக உருமாறுவதற்குக் காரணமாக அமைகின்றது.

    கேரளத்தமிழ் – ‘தமிழாளம்

          கேரளத்தமிழர்கள் பேசும் தமிழை தமிழாளம் என்றுதான் கூறவேண்டும். தமிழும் மலையாளமும் கலந்த தமிழ் தமிழாளம் என்று கூறலாம். கேரளத்தமிழர்கள் அனைவரும் தமிழாளத்தைப் பயன்படுத்துவது இல்லை. தமிழைத் தக்கவைத்துக் கொள்ளவேண்டும் என்ற கல்வியாளர்கள், தனித்தமிழை நிலைனிறுத்தவேண்டும் என்ற எண்ணமுடையவர்கள் மட்டுமே தனித்தமிழைப் பேசுகின்றனர்.  கல்வி கற்காதவர்களும் வியாபாரிகளும் இந்த தமிழாளத்தைப் பேசுகின்றனர்.  மலையாள மொழித் தாக்கம் அதிகமாக உள்ள இடங்களில் பெரும்பான்மையான மக்களும் மலையாளச் சொற்களை எவ்வித மாற்றமும் இன்றி அப்படியே பயன்படுத்துகின்றனர்.  மேலும் பல மலையாளச் சொற்களைத் தமிழ்ப்படுத்தியும் பேசுகின்றனர்.  தனித்தமிழ்ச் சொற்கள் இவர்கள் பேச்சில் மிகக் குறைந்த அளவில்தான்  காணப்படுகின்றன. திருவனந்தபுரத்திலுள்ள பெரும்பான்மையான தமிழர்களும் மலையாளச் சொற்களை எவ்வித மாற்றமும்மின்றி அப்படியே பயன்படுத்துகின்றனர்.

    எ.டு

    அத்தற – அவ்வளவு, – நீ அத்தற ரூபாய் கொடுத்தியா?

    சோறு அத்தறதான் இருக்கு

    அவதி – விடுமுறை,

    நாளைக்கு பள்ளிக்கூடம் அவதின்னு சொன்னாங்க

    அவசானம்- கடைசியில்,

    அந்த சினிமாவோட அவசானம் கதா நாயகன் செத்துட்டான்

    ஓர்ம – ஞாபகம்,

    என்ன ஒனக்கு ஓர்ம இருக்கா?

    கள்ளம் பொய்

    நீ கள்ளம் சொல்லாதே

    பூச்சா- பூனை      அந்த பூச்சய விரட்டு

    பொக்கம் – உயரம்,  அந்த மாப்பிள்ளைக்குக் கொஞ்சமும் பொக்கமில்ல

    ஒருமிச்சு- சேர்ந்து – நீங்க என்வீட்டுக்கு ஒருமிச்சு வாங்க

    குளிக- மாத்திரை- காச்சல் போக குளிக சாப்பிடு

    கரயாதே – அழாதே,இத்தற, இத்தறே – இவ்வளவு, எடபாடு – ஒழுங்குபடுத்துதல், ஒடக்கு – சண்டை, ஒருபாடு- அதிகமாக, நாணம் – வெட்கம், கள்ளம் – பொய், பேடி-  பயம், கொச்சு – பிள்ளை, செமச்சு – இருமல், செலப்பம்- சில நேரம், தெற்று – தவறு, பூச்சா- பூனை, பொக்கம் – உயரம், விர்த்தி – சுத்தம், வெள்ளம்- தண்ணீர், வையா – சுகமில்லை, வையிட்டு – சாயங்காலம், சர்தி – வாந்தி போன்ற  மலையாலச் சொற்களை எவ்வித மாற்றமும்மின்றி அவ்வாறே தங்கள் மொழியில் பயன்படுத்துகின்றனர்.

    ஒலிமாற்றம்

    சில மலையாளச் சொற்களை ஒலிமாற்றம் செய்து பயன்படுத்துகின்றனர்.

    எ.டு

    அக்‌ஷரம் – அச்சரம் –  க்‌ஷ>ச்ச் ( எழுத்துப்பிழை)

    தேசியம்     – தேச்சியம் ஷ்>ச்ச் (கோபம்)

    ஆழ்ச்ச      – ஆச்ச      –      ழ்ச் > ச்ச் (வார்ம்)

    எப்போள்    –      எப்பழு            ப்போ >ப்ப ஓ > அ (எப்போது)

    பாற்ற –      பாச்ச – ற்ற் .>ச்ச் ( கறப்பான் பூச்சி)

    முழுவன் > முளுவன்     ழ>ள (முழுவதும்)

    எணி – எளி –ண > ள ( எந்தி)

    பறஞ்ஞு – பறஞ்சு ( சொல்லுதல்)

    குறச்சு – கொறச்சு – உ > ஒ (கொஞ்சம்)

    தமிழில் மஞ்சள், பஞ்சு, கஞ்சி என்ற ஞகரத்திற்கு முன் சகர வல்லினத்தையே பயன்படுத்துகிறோம்.  மலையாளத்தில் இரண்டு மெல்லின எழுத்துக்கள் இணைந்து வருவது மரபு எனவே தான் ஞகரம் வந்தவுடன் சகரம் ஒலிக்கப்படுகிறது). தமிழ் மொழியில் மலையாள மொழி கலப்பதால் உரையாடலில் குறி மாற்றம் (  code switching ), குறிக்கலத்தல் (code mixing ) நிகழ்வதைக் காணலாம்.

    கேரளத்தமிழர்கள் தொடர்ந்து தக்கவைத்தலின் அவசியத்தை இக்கட்டுரை உணர்த்துகிறது. அவர்கள் வெளியே மலையாளத்தைப் பேசினாலும் தங்களது இல்லத்தில் தமிழைக் கட்டாயமாகப் பேசவேண்டும். தங்களது குழந்தைகளுக்குத் தமிழை பேசுவதற்கும் எழுதுவதற்கும் கட்டாயம் கற்றுக்கொடுக்க வேண்டும்.  சமூக அந்தஸ்தை விரும்பி மொழியை மறக்காமல் தமிழர்கள் தங்களிடயே தமிழைப் பேசப்பழகிக்கொள்ளவேண்டும். தனியார் கல்வி நிறுவனங்களிலும் இரண்டாம் மொழியாகத் தமிழைக் கற்றுத்தரும் சூழலை உருவாக்கவேண்டும். இதற்குத் தமிழ்சங்கங்களும் தமிழ்வளர்ச்சிக்கழகம் போன்ற அமைப்புக்களும் முயன்றால் நலம் பயக்கும். தமிழ்ச்சங்கங்கள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் தமிழ்தெரியாத தமிழர்களுக்கும் மலையாளிகளுக்கும் தமிழைக் கற்றுத்தருவதற்குரிய குருகியகால வகுப்புக்களை நடத்தலாம்.  தமிழன் என்ற உணர்வையும் தாய்மொழியின் சிறப்பையும் உணர்த்தும் வகையில் கருத்தரங்கங்கள், சிறப்புச்சொற்பொழிவுகள் போன்றவற்றை நடத்தலாம்.

     

    Share
  • நேமிநாத உரையின் காலம் பதினைந்தாம் நூற்றாண்டா?

     

    முனைவார் ஹெப்சி ரோஸ் மேரி. அ,உதவிப்பேராசிரியர், கேரளப்  பல்கலைக்கழகம்,திருவனந்தபுரம்.

    தமிழ் இலக்கண மரபில் தொல்காப்பியத்தைப் பின்பற்றி எழுந்த நூல்களில் ஒன்றே நேமிநாதம்.  இது ஒரு சமண நூல்.  சமணர்களால்  வணங்கப்படும் இருபத்து நான்காம் தீர்த்தரங்கர்களுள் இருபத்தி இரண்டாம் தீர்த்தரங்கரான  நேமிநாதர் பெயரால் இந்நூல் வழங்கப்படுகிறது.  நேமிநாதம் தோன்றிய காலத்தில் ஒரு புகழ்பெற்ற நூலாக இருந்திருக்க வேண்டும்.  ஏனெனில்  நன்னூல் தோன்றுவதற்கு முன் தொல்கப்பியத்தைக் கற்பவர் முதலில் இந்நூலைக் கற்ற பின்னரே தொல்காப்பியத்தைக் கற்றுவந்தனர்.  தொல்காப்பியக் கடலைக் கடக்க நேமிநாதம் சிறுபடகாகப் பயன்பட்டது  என்பதை,

    ‘தொல்காப்பியக் கடலிற் சொற்றீபச் சுற்றளக்கப்

    பல்காற்கொண் டோடும் படகென்ப  ( நே. நா. சி.பா) என்னும் சிறப்புப்பாயிரம் வரிகள் வாயிலாக அறிந்து கொள்ள முடிகிறது. இந்நூலுக்கு சிறந்த உரை ஒன்று உண்டு.  இதன் காலம் பற்றி அறிஞர் பெருமக்கள் பல்வேறு கருத்துக்களை எடுத்துரைப்பர். அக்காலத்தை ஆராய்வதாகக் இக்கட்டுரை அமைகிறது.

    நேமிநாத உரை

    நேமிநாதத்திற்குச் சிறந்த உரை ஒன்று உள்ளது.  இவ்வுரையாசிரியரின் ஊர், பெயர் எதுவுமே தெரியவில்லை என்றும் இதன் உரையாசிரியர் வயிரமேகர் என்றும் இருவேறு கருத்துக்கள் ஆய்வுலகில் நிலவுகின்றன.  நேமிநாத பழைய உரையாசிரியர் வயிரமேகம் என்னும் பெயரைக் கொண்டவர் என்றும் இவரே  நேமிநாத விருத்தியுரை எழுதியவர் என்றும் அவர் வயிரமேகம் என்னும் பெயரைக் கொண்டவர் என்றும் இவரே நேமிநாத விருத்தியுரை எழுதியவர் என்றும் அவ்வுரை வயிரமேக விருத்தி என வழங்கும் என்று மு. ராகவையங்கார் தம் கட்டுரை ஒன்றில் குறிப்பிடுவதாக மு. அருணாசலம் குறிப்பிடுகிறார்.

    “மூவரா யவரின்  முதல்வராய் அதிதி

    புதல்வராய முப்பத்து முத்

    தேவரா யவர் தம் ராசராசபுரி

    வீதி மாதர் கடைதிறமினோ ( த.ப.10)

    என்ற தக்கயாகப் பரணித் தாழிசையில் அதன் உரையாசிரியர் வயிரமேக விருத்தி என்ற நூலைக் குறிப்பிடுகிறார்.  ‘முப்பத்து முத்தேவராயவர் தம் ராசராசபுரி என வரும் தொடருக்கு முப்பத்து மூன்று தேவர்கள் ஆராயும் அவருடைய இராசராசபுரி என்று பொருள் கூறிப் பின்னர் தேவராயவர் தம் என்பதில் தேவர் ஆயும் அவர் எனச் செய்யுமென்னும் பெயரெச்சத்தின் உகரமும் மகரவொற்றும் கெட்டன எனவுணர்க.  இது வயிரமேக விருத்தியுள் விளங்கும் என்று குறிப்பு எழுதியிருக்கிறார்.  வயிரமேக விருத்தி என்பது இலக்கணம், பற்றிய ஓர் விருத்தியுரை என்பதாகும்.  அன்றியும் செய்யும் என்னும் பெயரெச்சத்தில் மெய்யுடன் உகரம் கெடுதலையே தொல்காப்பியம் இளம்பூரணருரை (233) நன்னூல் மயிலை நாதருரை ஆகியன குறிப்பிடும்.  ஆனால் மெய்யுடன் உகரம் கெடுதலோடு ஏற்று ஒற்றும் கெடும் எனபதை விளக்கிக் கூறியவர் வயிரமேக விருத்தியுரைக்காரர் என்பது தக்கயாகப் பரணி உரையாசிரியர் கூற்றாகின்றது.

    அந்தக் கொளகையை முதன் முதலில் வெளியிட்ட நூலாசிரியர் நேமிநாதம் செய்தவரேயாவர்.

    செய்யு மென்னும் பேரெச்சத்தீற்று மிசைச்சில்லு கரம்

    மெய்யொடும் போம் ஒற்றொடும்போம் வேறு ( நே. நா. 63)

    என்று நேம்மிநாதம் இக்கருத்தை வெளியிடுவதைக் காணலாம்.  இவ்வாறு நேமிநாத ஆசிரியர் இக்கருத்தைச் சொன்னாரே ஒழிய, சொற்சுருங்கக் கூறிய அவரது சூத்திரக் கருத்தினை முன்னூல் பிராமாணத்துடன் விளக்கிக் கூறியவர் அந்நேமிநாத உரையாசிரியரே ஆவார்.  ஆகவே ஆயவர் என்பதை ஆயுமவர் என விரித்து அதற்கு விதி விளக்குமிடமாகத் தக்கயாகப் பரணியுரையாசிரியர் கூறும் வயிரமேக விருத்தி என்பது நேமிநாத விருத்தியே என்று கருதலாம் என்பர் அருணாசலம் (1969).  இவ்வுரை கருத்துரையும் பொழிப்புரையும் உதாரணமும் வினாவிடைகளும் சூத்திரத்தின் பொருள் நன்கு விளங்குவதற்குரிய உரைகளும் மேற்கோள்களும் கொண்ட விருத்தி உரையாகத் திகழ்கின்றது.

    உரையாசிரியரின் காலம்

    நேமிநாதம் ஒரு தொகுப்பு நூல், சுருக்க நூல், சுருக்க நூலுக்கு உடனுக்குடன் உரை எழுதாவிடில் பின்னே தெளிவு குன்றிப்போகும் என்பதனாலும் ஜைன இலக்கணங்கள் அனைத்தும் நூலாசிரியரை ஒட்டிய காலத்திலேயே உரையைப் பெற்றிருக்கின்றன என்பதாலும் நேமிநாதமும் குணவீரபண்டிதரின் காலத்திலேயே உரையைப் பெற்றிருக்க வேண்டும் என க. ப அறவாணன் ( 1974) குறிப்பிடுகிறார்.

    நேமிநாதம் 74 ஆம் பாடல் உரையில் ‘முத்தன் என்கோ முதல் மூர்த்தி என்கோ’ என்ற திரு நூற்றந்தாதிப் பாடலை ( 31) மேற்கோளாக எடுத்துக் காட்டுகிறார் உரையாசிரியர்.  இவ்வந்தாதியின் காலம் 14 ஆம் நூற்றாண்டின் இறுதி. ஆகவே இவ்வுரையாசிரியரின் காலம் இதே காலம் அல்லது இதற்குச்சற்றுப் பிற்பட்டது. 14 ஆம் நூற்றாண்டின் இறுதி  அல்லது 15 ஆம் நூற்றாண்டின் தொடக்கம் என்று கொள்வது பொருத்தமாகும் என்று மு. அருணாசலம் கூறியுள்ளார் ( 1969:109) பிற்காலத்தில் இக்கருத்தை இலக்கண அறிஞர்கள் பலரும் ஏற்றுக் கொண்டனர்.  நேமிநாத உரையாசிரியரின் காலம் 14 ஆம் நூற்றாண்டின் இறுதி அல்லது 15 ஆம் நூற்றண்டின் தொடக்கம் என்று கூறுவதற்குக் காரணமாய் அமைந்த ‘ முத்தன் என்கோ முதல் மூர்த்தி என்கோ” என்ற திரு நூற்றன்ம்தாதிப் பாடல் கேரளப் பல்கலைக்கழகச் சுவடியியல் நூலகத்தில் உள்ள நேமிநாத பழைய சுவடி (6370) ஒன்றில் காணப்படவில்லை.  இதைப் பார்க்கும்போது இப்பாடல் பிற்காலத்தில் இடைச்செருகலாக நுழைந்திருக்கலாம் என்று தோன்றுகிறது.  எனவே இவரது காலம் கி.பி 14 ஆம்  நூற்றாண்டுக்கு  முற்பட்டது.  க.ப. அறவாணன் கூறுவது போல மூல நூலாசிரியர் காலத்தை ஒட்டியே எழுதியிருக்கலாம் என்பது தெளிவு.

    மேலும் இவ்வுரையயின் காலம் கி.பி 15 ஆம் நூற்றாண்டு என்றால் இவ்வுரையாசிரியர் தம் உரையில் தொல்காப்பியம் ( 11, 12, 13… ) அணியியல் ( எ.4) யாப்பருங்கலக் காரிகை ( சொல்40) யாப்பருங்கல விருத்தி ( சொல்.54) போன்ற இலக்கண நூல்களை மேற்கோள்களாகக் காட்டும் உரையாசிரியர் தமது காலத்திற்கு முன்தோன்றிய நன்னூலை ஓரிடத்திலாவது குறிப்பிட்டிருக்க வேண்டும்.  ஆனால் இவர் அவ்வாறு குறிப்பிடவில்லை.  எனவே இவர் பவணந்திக்கு முற்பட்டவராக இருக்க வேண்டும்.  மேலும் நன்னூலின் பழைய உரையாசிரியரான மயிலைநாதர் தமது உரைநடையில் நேமிநாத உரையாசிரியரின் உரையைப் பத்தொன்பது இடங்களில் மேற்கோள்காட்டியுள்ளார்.  எனவே மயிலைநாதரின் காலம் நேமிநாத உரையாசிரியரின் காலத்துக்கு முற்பட்டது என்பது தெளிவு.  எனவே மயிலை நாதரின் காலம் நேமிநாத உரையாசிரியரின் காலத்துக்கு முற்பட்டது என்பது தெளிவு.  மயிலை நாதர் பவணந்தியின் காலமாகிய 13 ஆம் நூற்றாண்டிற்குப் பின் வாழ்ந்தவர்.  நூலுக்கு உரை தேவைப்படும் அளவு பிரசித்தியடையக் குறைந்தது ஒரு நூறு  வருடம் செல்லுமென்று கொண்டாலும் இவரது காலம் 14 ஆம் நூற்றாண்டுத் தொடக்கமாகலாம் ( 1969) என்று அறிஞர் பெருமக்கள் கருதுகின்றனர்.  எனவே நேமிநாத உரையாசிரியர்   நேமிநாதம் தோன்றிய அதே காலத்தில், உரைகள் எழுந்த தொடக்கத்திலேயே அதாவது 12 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலோ அல்லது இறுதியிலோ வாழ்ந்தவராதல் வேண்டும் என்பது தெளிவு.

    பயன்பட்ட நூல்கள்

    அரவிந்தன். மு வை      -உரையாசிரியர்கள், மணிவாசகர் பதிப்பகம், சிதம்பரம். 1968

    அருணாசலம். மு  , தமிழ் இலக்கியவரலாறு,12,13,14 ஆம் நூற்றாண்டு, பாரி நிலையம் சென்னை, 1970.

    அறவாணன். க.ப.சைனரின் தமிழிலக்கண நன்கொடை, ஜைன இளைஞர் மன்றம், சென்னை, 1974

    கோவிந்தராச முதலியார் – நேமிநாதம், தென்னிந்திய சைவசித்தாந்த. நூற்பதிப்புக் கழகம், சென்னை, 1973

     

    Share