கேரளத் தமிழர்களின் மொழிச்சூழலும் மொழிப்பயன்பாடு
முனைவர். ஹெப்சி ரோஸ் மேரி.அ,உதவிப்பேராசிரியர், கேரளப் பல்கலைக்கழகம்காரியவட்டம், திருவனந்தபுரம்.
தமிழர்கள் பண்பாட்டிலும் நாகரிகத்திலும் ஒரு நெடும் பாரம்பரியம் மிக்கவர்கள். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்த சங்க இலக்கியம் தமிழர்தம் பண்பாட்டினை உணர்த்துகின்றன. நீண்ட வரலாற்றுப் பின்புலம் கொண்ட ஒரு சமூகம் அது தோன்றிய காலம் முதல் பல்துறைச் சார்ந்த வாழ்வியல் கூறுகளில் குறை நிறைகளைச் செம்மைபடுத்திக் கொண்டே வருவது இயல்பு. கால வளர்ச்சிக்கேற்பவும் சமூகத்தேவைக்கேற்பவும் கருத்துக்கள் புத்தாக்கம் பெறுவதும் புதுப்பொலிவு பெறுவதும் இயற்கை. இத்தகைய வளர்ச்சியைக் காலந்தோறும் பெற்று வந்தாலும் அடிப்படையான கருத்தாக்கங்களில் மாற்றம்பெற எந்த சமூகமும் விரும்புவதில்லை. ஆனால் மொழியைப் பொருத்தவரை அச்சமூகத்தின் பேச்சுமொழியில் அதிசீக்கிரத்தில் மொழிக்கலப்பு நிகழ்வதைக் காணலாம். காரணம் ஒரு சமூகம் பிறசமூதாயத்தின் மொழியைக்கற்று அவர்களோடு இடைத்தொடர்பை ஏற்படுத்திக்கொள்வதாலாகும். இக்கட்டுரை கேரளத்தமிழர்தம் மொழிச்சூழலையும் மொழிப்பயன்பாட்டையும் எடுத்துரைப்பதாக அமைகிறது அதிலும் குறிப்பாக திருவனந்தபுரத்தில் வாழும் தமிழர்களை மையமிட்டே இக்கட்டுரை அமைகிறது.
மொழிப்பயன்பாடு:-
மொழி என்பது ஒரு சமூகத்தோடு இணைந்து வாழ்வதற்கும் கருத்துப் பரிமாற்றாத்திற்காகவும் பயன்படும் ஒரு கருவியாகும். பொதுவாக இன்றைய சமுதாயம் இருவேறுபட்ட சமுதாயமாகவோ பல்வேறுபட்ட சமுதாயமாகவோ காணப்படுகின்றது. இந்தியாவிலுள்ள ஒவ்வொரு மாநிலத்திலும் பல இனங்கள் வாழ்கின்றன. தமிழகத்தில் தமிழர்களோடு கேரள மாநிலத்தவர்களும் , கர்நாடக, தெலுங்கு , உருது , இந்தி போன்ற மொழிகள் பேசும் மக்களும் இணைந்து வாழ்கின்றனர். அவ்வாறு பல இனமக்கள் இணைந்து வாழும்போது அவ்வினங்களுக்கு இடையே இடைத்தொடர்பு ஏற்படுவதால் பண்பாடு, கலாச்சாரம், மொழி போன்றவை உள்வாங்கப்படுகின்றதைக் காணலாம். அவற்றுள்ளும் மொழியே அதிகமாக உள்வாங்கப்படுகின்றது. அதற்குக் காரணம் ஒவ்வொரு இனமக்களும் தமக்கும் இடைத்தொடர்பு ஏற்படுத்திக் கொள்வதற்கு முதன்மைக் காரணியாக மொழியைப் பயன்படுத்திக் கொள்கின்றமையாகும். தமது எண்னங்கள், விருப்பு வெறுப்புகள் , நேர்மறை, எதிர்மர்றை உணர்வுகளை வெளிப்படுத்துவதற்கு மொழியைப் பயன்படுத்துகின்றனர். இவ்வாறு ஒரு சமூகம் ஏனைய சமூகத்தின் மொழியை மிக இலகுவாகக் கற்றுக் கொள்கின்றது.
கேரளத்தமிழர் வரலாறு
கேரளம் பழந்தமிழகத்தின் ஒரு பகுதியாகவும் இப்பகுதியில் பேசும்மொழி தமிழாகவும் இருந்தது. பண்டுதொட்டே கேரளமும் தமிழகமும் நெருங்கிய தொடர்புடையது. இதற்குச் சான்றாக விளங்குவது சங்க நூல்களில் 350 பாடல்கள் சேர நாட்டோடு தொடர்புடையனவாக இருந்தன. {மு. இராகவையங்கார் 1947: முன்னுரை). மலையாள மொழியின் முதல் இலக்கண நூலான லீலாதிலகம் மலையாளத்தை மலை நாட்டுத்தமிழ் என்றே அழைக்கிறது. மலையாளத்தில் தொடக்கத்தில் இருந்த பாட்டு ,மணிப்பிரவாளம் என்ற இலக்கிய நெறிகளில் பாட்டுமரபு தமிழ் மரபைத் தழுவியதாகும். அன்று வழக்கத்தில் இருந்த மலை நாட்டுத்தமிழ் காலவோட்டத்தால் வேறுபட்டு தமிழ் மலையாளமாக வேறு வேறாகப் பிரிந்தது. தமிழ் மலையாள வேறுபாடு நிலையாக ஏற்பட்ட பின்னர் கி.பி 17 ஆம் நூற்றாண்டிற்குப் பின்னர் தமிழகத்திலிருந்து குடியேறிய மக்கள் இன்று தமிழர்கள் என வேறுபடுத்தி அழைக்கப்படுகின்றனர்.
கேரளத்தில் இருமொழிச் சூழல்
தாய்மொழியை மட்டும் அறிந்தவர்களைத் தனிமொழியாளர் என்றும் தாய்மொழியோடு இன்னொரு மொழியினையும் அறிந்து, பேசும் சூழலுக்கு ஏற்ப அவற்றைத் தனித்தனியே பயன்படுத்துவோரை இருமொழியாளர் என்று குறிப்பிடுவர். தமிழகத்தின் அண்டை மாநிலங்களாக இருப்பன கேரளமும் கர்நாடகமும் ஆகும். அதிலும் தமிழகத்தோடு நெருங்கிய தொடர்புடைய மாநிலம் கேரளமே. கேரளத்தின் எல்லையோர மாவட்டங்ககளான திருவனந்தபுரம், பாலக்காடு , இடுக்கி மாவட்டங்களில் ஏராளமான தமிழர்கள வாழ்கின்றனர். அவர்களது பேச்சுமொழியில் மலையாளத்தின் கலப்பு மிகுதியாகக் காணக்கிடக்கின்றன. அவ்வண்ணமே தமிழகத்தின் தென்கோடியில் இருக்கும் கன்னியாகுமாரி மாவட்டத் தமிழரின் பேச்சு மொழியிலும் மலையாளம் கலந்திருப்பதைக் காணலாம்.
திருவனந்தபுரத்தில் தமிழ் பேசுவோர்
தமிழகத்தின் பலபகுதிகளில் இருந்து வேளாளர், ரெட்டியார், செட்டியார், நாடார் பிராமணர் போன்றோர் குடிபெயர்ந்து கேரளத்தின் பல பகுதிகளில் குடியேறி வாழ்கின்றனர். குறிப்பாகப் பாலக்காடு, இடுக்கி மாவட்டங்களில் ஏராளமான தமிழர்கள் வாழ்கின்றனர். இம்மாவட்டங்களுடன் ஒப்பிடும்போது திருவனந்தபுரத்தில் வாழும் தமிழர்கள் குறைவாகவே இருக்கின்றனர் எனலாம். இன்று திருவனந்தபுரத்தில் வாழும் தமிழர்களின் மொழிப்பயன்பாட்டடிப்படையில் பின்வருமாறு மூன்று நிலைகளில் பிரித்துப் பார்க்கலாம்.
- சமீபகாலத்தில் தொழில், வேலை காரணமாகத் தமிழகத்திலிருந்து திருவனந்தபுரத்திற்குக் குடியேறியவர்கள். இவர்கள் தங்கள் வீட்டில் தமிழ்பேசுவதோடு தமிழை முதல்மொழியாகக் கற்பவர்கள். மாநில மொழியாம் மலையாளத்தைப் பேச முயல்பவர்கள்.
- தமிழகத்திலிருந்து குடியேறி இரண்டு மூன்று தலைமுறையினராக திருவனந்தபுரத்தில் வாழ்பவர்கள். இவர்களை மூன்றாககப் பிரிக்கலாம். முதலாவதாக வீட்டில் தமிழ் பேசுவதோடு கல்வி, தொழில்சார்பாகத் தமிழைப் பயன்படுத்துவோர்.
- இரண்டாவதாகத் வீட்டில் தமிழ் பேசுவோர் ஆனால் கல்வி , வாணிபம், தொழில் முதலியவற்றில் மலையாளத்தைப் பேசுபவர்கள்.
- மூன்றாவதாக தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் ஆனால் வீட்டிலும் அலுவலகத்திலும் மலையாளத்தைப் பேசுபவர்கள்
- தமிழர்கள் கேரளத்தில் குடியேறி மலையாளிகளை மணந்து வீட்டில் மலையாளமொழியைப் பயன்படுத்துவதோடு கல்வி/ தொழிலிடங்களிலும் மலையாளத்தைப் பயன்படுத்துபவர்கள்.
- தொடக்கத்தில் தமிழ் பேசுபவர்களாக இருந்தோர் காலப்போக்கில் தமிழை மறந்து வீட்டுமொழியாகவும் தாய்மொழியாகவும் மலையாளத்தை ஏற்றுக்கொண்டு மலையாளிகளாக மாறிவிட்டவர்கள்.
முதல் இரண்டு பிரிவினரும் காலப்போக்கில் திருமண உறவு, சமூகமதிப்பீடு, பொருளாதாரம், நடைமுறை வசதிகாரணமாக மூன்றாம் பிரிவினராக மாறிவிடுகின்றனர். கலப்புத்திருமணம் காரணமாகத் தமிழர்கள் மலையாளத்தை மட்டுமே பேசிவருகின்றனர். வியாபாரத்தின் பொருட்டு திருவனந்தபுரம் வந்த நாடார்களில் சில பிரிவினர் திருவனந்தபுரம பகுதியில் வாழ்பவர்கள் இன்றும் மலையாளத்தை மட்டுமே பேசிவருகின்றனர். அதே நேரத்தில் தமிழகத்தில் வாழும் மலையாளிகள் தமிழை முதல்மொழியாகக் கொண்டு வெளியே செயல்பட்டாலும் தங்களது வீட்டில் மலையாளத்தையே பேசுகின்றனர்.
கேரளத்தமிழர் தமிழை விட்டுவிடுவதற்குக் காரணம்:
கேரளத்தில் வாழும் தமிழர்கள் தமிழை விட்டுவிடக் காரணம் யாது? என நோக்கும்போது பின்வருவனவற்றைக் காரணங்களாகச் சுட்டலாம்.
- அவர்கள் வாழும் பிறமொழிச்சூழலின் வற்புறுத்தல் முதன்மைக் காரணமாக அமைகின்றது.
- இரண்டாவதாகத் தமிழர்கள் தாங்களே தாம் பேசும் தமிழ் மொழியையே கைவிடத் தயாராகின்றனர். சான்றாகப் பொது இடங்களில் தமிழைப் பேசினால் மலையாளிகள் தமிழர்களை பாண்டி ( பாண்டி நாட்டவர் என்றும்) அண்ணாச்சி என்றும் கிண்டலாக அழைப்பர் என்ற மனப்பான்மை தமிழர்களிடையே நிலவுகின்றது.
- பள்ளி விண்ணப்ப படிவங்களில் தாய்மொழியைப் பதிவுசெய்யுமிடங்களில் தங்களுக்குத்தெரியாத தமிழைப் பதிவுசெய்வதைவிட தங்களுக்குத்தெரிந்த மலையாளத்தையே பதிவுசெய்கின்றனர்.
- மூன்றாவதாக மூன்று சக்கர வாகனங்களில் தமிழ்பேசிக்கொண்டே பயணித்தால் அதிகமான கூலி வசூலிக்கப்படுகிறது என்ற காரணத்தால் பொது இடங்களில் தமிழர்கள் தமிழைப் பேச தயக்கம் காட்டுகின்றனர்.
- நான்காவதாகச் சமூக அந்தஸ்து காரணமாகத் தமிழர்களே தங்களுக்குள் மலையாள மொழியைப்பேசுகின்றனர்.
- திருவனந்தபுரத்திற்கு வந்து இரண்டு மூன்று தலைமுறை ஆகினவர்கள் தங்களைத் தமிழன் என்பதற்குப் பதில் மலையாளி என்றே கூறிக்கொள்கின்றனர்.
- கேரளத்தில் குடிபெயர்ந்து அரசு நிறுவனங்களில் வேலைபார்க்கும் தமிழர்கள் தங்களது குழந்தைகளின் தாய்மொழியாக மலையாலத்தையே பதிவுசெய்கின்றனர். தமிழ் ஆசிரியர்களும் பேராசிரியர்களும் கூட தங்களது குழந்தகளுக்கு இரண்டாம் மொழியாகக் கூட தமிழைக் கற்றுக்கொடுக்க முன்வருவதில்லை. இதற்கும் பல காரணங்கள் நிலவுகின்றன. அரசு பள்ளிகளில் தமிழ்வழிக்கல்வியும் இரண்டாம் மொழியாகத் தமிழைக் கற்க வாய்ப்புகள் உள்ளன. ஆனால் உயர்மட்டத் தமிழர்கள் தங்களது குழந்தைகளைத் தனியார் கல்வி நிறுவனங்களிலேதான் படிக்கவைக்கின்றனர். அங்கு இரண்டாம்மொழியாகத் தமிழைக் கற்கும் சூழல் இல்லை. இந்நிலையில் அவர்கள் மலையாளம், இந்தி, ஃப்ரென்ஞ் போன்ற மொழிகளை இரண்டாம் மொழியாகக் கற்கின்றனர். இதுவும் வீடுகளில் தமிழைப் பேசுவதற்குரிய சூழலைக் குறைக்கிறது. இச்சூழல் ஒன்றிரண்டு தலைமுறை மாறும்போது அவர்கள் மலையாளிகளாக உருமாறுவதற்குக் காரணமாக அமைகின்றது.
கேரளத்தமிழ் – ‘தமிழாளம்’
கேரளத்தமிழர்கள் பேசும் தமிழை தமிழாளம் என்றுதான் கூறவேண்டும். தமிழும் மலையாளமும் கலந்த தமிழ் தமிழாளம் என்று கூறலாம். கேரளத்தமிழர்கள் அனைவரும் தமிழாளத்தைப் பயன்படுத்துவது இல்லை. தமிழைத் தக்கவைத்துக் கொள்ளவேண்டும் என்ற கல்வியாளர்கள், தனித்தமிழை நிலைனிறுத்தவேண்டும் என்ற எண்ணமுடையவர்கள் மட்டுமே தனித்தமிழைப் பேசுகின்றனர். கல்வி கற்காதவர்களும் வியாபாரிகளும் இந்த தமிழாளத்தைப் பேசுகின்றனர். மலையாள மொழித் தாக்கம் அதிகமாக உள்ள இடங்களில் பெரும்பான்மையான மக்களும் மலையாளச் சொற்களை எவ்வித மாற்றமும் இன்றி அப்படியே பயன்படுத்துகின்றனர். மேலும் பல மலையாளச் சொற்களைத் தமிழ்ப்படுத்தியும் பேசுகின்றனர். தனித்தமிழ்ச் சொற்கள் இவர்கள் பேச்சில் மிகக் குறைந்த அளவில்தான் காணப்படுகின்றன. திருவனந்தபுரத்திலுள்ள பெரும்பான்மையான தமிழர்களும் மலையாளச் சொற்களை எவ்வித மாற்றமும்மின்றி அப்படியே பயன்படுத்துகின்றனர்.
எ.டு
அத்தற – அவ்வளவு, – நீ அத்தற ரூபாய் கொடுத்தியா?
சோறு அத்தறதான் இருக்கு
அவதி – விடுமுறை,
நாளைக்கு பள்ளிக்கூடம் அவதின்னு சொன்னாங்க
அவசானம்- கடைசியில்,
அந்த சினிமாவோட அவசானம் கதா நாயகன் செத்துட்டான்
ஓர்ம – ஞாபகம்,
என்ன ஒனக்கு ஓர்ம இருக்கா?
கள்ளம் பொய்
நீ கள்ளம் சொல்லாதே
பூச்சா- பூனை அந்த பூச்சய விரட்டு
பொக்கம் – உயரம், அந்த மாப்பிள்ளைக்குக் கொஞ்சமும் பொக்கமில்ல
ஒருமிச்சு- சேர்ந்து – நீங்க என்வீட்டுக்கு ஒருமிச்சு வாங்க
குளிக- மாத்திரை- காச்சல் போக குளிக சாப்பிடு
கரயாதே – அழாதே,இத்தற, இத்தறே – இவ்வளவு, எடபாடு – ஒழுங்குபடுத்துதல், ஒடக்கு – சண்டை, ஒருபாடு- அதிகமாக, நாணம் – வெட்கம், கள்ளம் – பொய், பேடி- பயம், கொச்சு – பிள்ளை, செமச்சு – இருமல், செலப்பம்- சில நேரம், தெற்று – தவறு, பூச்சா- பூனை, பொக்கம் – உயரம், விர்த்தி – சுத்தம், வெள்ளம்- தண்ணீர், வையா – சுகமில்லை, வையிட்டு – சாயங்காலம், சர்தி – வாந்தி போன்ற மலையாலச் சொற்களை எவ்வித மாற்றமும்மின்றி அவ்வாறே தங்கள் மொழியில் பயன்படுத்துகின்றனர்.
ஒலிமாற்றம்
சில மலையாளச் சொற்களை ஒலிமாற்றம் செய்து பயன்படுத்துகின்றனர்.
எ.டு
அக்ஷரம் – அச்சரம் – க்ஷ>ச்ச் ( எழுத்துப்பிழை)
தேசியம் – தேச்சியம் ஷ்>ச்ச் (கோபம்)
ஆழ்ச்ச – ஆச்ச – ழ்ச் > ச்ச் (வார்ம்)
எப்போள் – எப்பழு ப்போ >ப்ப ஓ > அ (எப்போது)
பாற்ற – பாச்ச – ற்ற் .>ச்ச் ( கறப்பான் பூச்சி)
முழுவன் > முளுவன் ழ>ள (முழுவதும்)
எணி – எளி –ண > ள ( எந்தி)
பறஞ்ஞு – பறஞ்சு ( சொல்லுதல்)
குறச்சு – கொறச்சு – உ > ஒ (கொஞ்சம்)
தமிழில் மஞ்சள், பஞ்சு, கஞ்சி என்ற ஞகரத்திற்கு முன் சகர வல்லினத்தையே பயன்படுத்துகிறோம். மலையாளத்தில் இரண்டு மெல்லின எழுத்துக்கள் இணைந்து வருவது மரபு எனவே தான் ஞகரம் வந்தவுடன் சகரம் ஒலிக்கப்படுகிறது). தமிழ் மொழியில் மலையாள மொழி கலப்பதால் உரையாடலில் குறி மாற்றம் ( code switching ), குறிக்கலத்தல் (code mixing ) நிகழ்வதைக் காணலாம்.
கேரளத்தமிழர்கள் தொடர்ந்து தக்கவைத்தலின் அவசியத்தை இக்கட்டுரை உணர்த்துகிறது. அவர்கள் வெளியே மலையாளத்தைப் பேசினாலும் தங்களது இல்லத்தில் தமிழைக் கட்டாயமாகப் பேசவேண்டும். தங்களது குழந்தைகளுக்குத் தமிழை பேசுவதற்கும் எழுதுவதற்கும் கட்டாயம் கற்றுக்கொடுக்க வேண்டும். சமூக அந்தஸ்தை விரும்பி மொழியை மறக்காமல் தமிழர்கள் தங்களிடயே தமிழைப் பேசப்பழகிக்கொள்ளவேண்டும். தனியார் கல்வி நிறுவனங்களிலும் இரண்டாம் மொழியாகத் தமிழைக் கற்றுத்தரும் சூழலை உருவாக்கவேண்டும். இதற்குத் தமிழ்சங்கங்களும் தமிழ்வளர்ச்சிக்கழகம் போன்ற அமைப்புக்களும் முயன்றால் நலம் பயக்கும். தமிழ்ச்சங்கங்கள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் தமிழ்தெரியாத தமிழர்களுக்கும் மலையாளிகளுக்கும் தமிழைக் கற்றுத்தருவதற்குரிய குருகியகால வகுப்புக்களை நடத்தலாம். தமிழன் என்ற உணர்வையும் தாய்மொழியின் சிறப்பையும் உணர்த்தும் வகையில் கருத்தரங்கங்கள், சிறப்புச்சொற்பொழிவுகள் போன்றவற்றை நடத்தலாம்.