Year: 2014

  • தமிழால் முடியுமா? – தமிழக அறிவுஜீவிகள் பலரும் எழுப்பும் கேள்வி – 49

    பேராசிரியர் இ. அண்ணாமலை

    தமிழால் முடியுமா என்னும் கேள்வி நவீன காலத்தில் தோன்றியுள்ள கேள்வி. நவீன காலத்திற்கு முன்னால் இந்தக் கேள்வியைத் தமிழர்கள் கேட்டதாகத் தெரியவில்லை. சமஸ்கிருதத்தின் ஆதிக்கம் மேலோங்கியிருந்த காலத்தில்கூட இந்தக் கேள்வி எழவில்லை. காலனிய காலத்தில் ஆங்கிலத்தின் ஆதிக்கம் வேரூன்றியபோதே இந்தக் கேள்வி எழுந்தது. இது பாமரர்களிடம் எழவில்லை; ஆங்கிலம் கற்றவர்களிடம் எழுந்தது. முடியும் என்போர், முடியாது என்போர் என இரண்டு அணிகள் எழுந்தன; எரிந்த கட்சி, எரியாத கட்சி வாதத்திற்கு இன்னும் விடிவில்லை. இந்தக் கேள்வி எது முடியுமா என்று கேட்கிறது என்று வெளிப்படையாகச் தெரியப்படுத்தவில்லை. இது நிச்சயமாகக் காதல் செய்வது பற்றிக் கேட்கவில்லை; இலக்கியம் செய்வது பற்றிக் கேட்கவில்லை; திரைப்படம் எடுப்பது பற்றிக் கேட்கவில்லை; உழவுத்தொழில் செய்வது பற்றிக் கேட்கவில்லை; வணிகம் செய்வது பற்றிக் கேட்கவில்லை. இப்படிப்பட்ட பலவேறு துறைகளில் தமிழில் இயங்கமுடியுமா என்று இந்தக் கேள்வி கேட்கவில்லை. இந்தக் தமிழால் நாட்டை ஆட்சி செய்வதைப் பற்றியது; நீதிமன்றங்களில் வழக்காடுவது பற்றியது; கல்லூரிகளில் கல்வி கொடுப்பதைப் பற்றியது. அதாவது, தமிழ் அதிகார மொழியாக, அறிவு மொழியாகச் செயல்பட முடியுமா என்பதே இந்தக் கேள்வியின் சாரம்.

    மொழிக்கென்று உள்ளார்ந்த தனித்திறன் எதுவும் இல்லை. ஒரு மொழி செய்வதை இன்னொரு மொழி அதன் தன்மை வேறுபாட்டால், இலக்கண வேறுபாட்டால் செய்ய முடியாது என்பதில்லை. எந்த மொழியும் எதையும் செய்ய முடியும். இதற்கு வாய்ப்பு வேண்டும். வாய்ப்பைத் தர அந்த மொழியைப் பேசுபவர்கள் விரும்ப வேண்டும்; விருப்பத்தை நிறைவேற்ற அவர்களுக்கு பலம் வேண்டும். இந்த பலம் ஆட்சி பலம், பண பலம் மட்டுமல்ல; அறிவு பலமும் ஆகும். ஆட்சி பலமும், பண பலமும் பெறுவது வரலாற்றுக் காரணங்களைப் பொறுத்தது; அறிவு பலம் பெறுவது சமூகத்தின் கையில் இருக்கிறது; செய்யவேண்டும் என்ற சமூகத்தின் முனைப்பில் இருக்கிறது. தமிழர்களின் அறிவு பலம் –அறிவியல் பலம், சட்டவியல் பலம், வணிக மேலாண்மை பலம் முதலானவை எல்லாம்- ஆங்கிலத்தில் கட்டப்பட்டிருக்கிறது. இந்த பலத்தின் கனம் தமிழர்களின் காலைத் தமிழ் அறிவு உலகில் ஓடவிடாமல் கட்டிப்போடுகிறது; தங்களால் முடியாது என்ற மனநிலையையும் உருவாக்குகிறது. இந்த மனநிலைதான் தமிழ் அறிவுத்துறைகளில் மேலே செல்லாமல் தடுக்கும் கால்கட்டு; தமிழ் மொழி அல்ல. தங்களால் முடியாது என்னும் மனநிலை தமிழால் முடியாது என்னும் சமாதானத்தில் மறைக்கப்படுகிறது.

    அறிவுத் தமிழ் தான்தோன்றி அல்ல. இது அறிவியல் தமிழ் மட்டுமே அல்ல.; அதை விடப் பரந்துபட்டது இந்தத் தமிழ் உருவாவது அறிவுத்துறைகளில் புலமை பெற்றவர்களின் கையில் உள்ளது. தங்கள் புலமையைப் பிற மொழிகளின் வழியே பெற்றவர்கள் அதைப் பயன்படுத்தித் தமிழில் எழுத வேண்டும். மாணவர்களுக்கு மட்டுமல்ல, பொதுமக்களுக்கும் எழுத வேண்டும். பிற அறிவுத்துறைகளைச் சாரந்த புலவர்களுக்கும் தங்கள் துறை அறிவைத் தமிழில் எழுதவேண்டும். இந்த எழுத்தியக்கத்தைத் துவங்க அரசின் தயவுக்குக் காத்திருக்கத் தேவை இல்லை; அரசின் ஆங்கிலவழிக் கல்விக் கொள்கையை மாற்றாமல் செய்ய முடியாது என்று கையைப் பிசையத் தேவை இல்லை.; பழியை மற்றவர்களின் மேல்போடத் தேவை இல்லை.  பிரச்சனையைக் கையில் எடுத்துக்கொண்டு களத்தில் இறங்க இன்றைய தொழில்நுட்பம் கைகொடுக்கிறது. தமிழ்வழியே பல துறை அறிவை வளர்க்க எழுதுவதை, உலகமயமாதலின் விளைவாகத் தோன்றும் பொருளாதார, சமூக, கலாச்சாரக் கேள்விகளுக்குப் பதில் தேடி எழுதுவதை வலைப்பூக்களில், மின்னிதழ்களில், இணையதள விவாதக்குழுக்களில் ஆரம்பிக்கலாம். இங்கும் அரைத்த மாவையே அரைக்கத் தேவை இல்லை. எந்தத் துறையறிவைப் பற்றியும் தமிழில் எழுதினால், தமிழ்த்துறை சார்ந்தவர்களே எழுத வேண்டும் என்னும் நியதி மாற வேண்டும்.

    அறிவுத்தமிழ் எழுதப் தமிழ்ப் புலமை தேவை என்பது தடுக்கும் சுவராக, விலங்காக அமையக் கூடாது. கலப்பற்ற தமிழில்தான் இந்தத் தமிழை எழுத வேண்டும் என்ற தேவை இல்லை. குழந்தை நடக்கத் துவங்கும்போது நேராக நடக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது இயற்கைக்கு முரணானது. புதிய துறையில் ஒரு மொழியின் வளர்ச்சியும் இப்படியே.

    எழுத்தறிவு இயக்கத்தைப் போல, அறிவுத்தமிழ் எழுத்தியக்கமும் தமிழுக்கு அறிவொளி இயக்கமாகப் புத்தாண்டில் அடியெடுத்து வைப்பது தமிழ் அறிவுஜீவிகளின் கையில் இருக்கிறது.

    Share
  • சுயநலம்

    jay

    சுயநலம்

    சி. ஜெயபாரதன், கனடா

     

    சுயநலம் நமது பிறப்புரிமை !
    குருதியில் கலந்தது !
    கூடப் பிறந்தது !
    மனித ஆணிவேர் ஆவது !
    சுதந்திரம் மனிதர் இறப்புரிமை !
    பறி போவது ! மரிப்பது !
    பற்றியும் பற்றாமல் குறைவது !
    புலி அதோ வருகுது !
    புலிக்குப் பயந்தவர் என்மேல்
    தலை வைப்பீர் !

     

    கடவுள் படைப்பிலே
    பெண் சுயநலம் !
    ஆண் பொது நலம் !
    ஆயினும் சுயநலம் இல்லையேல்
    பொது நலம் இல்லை !
    அன்னை தெரேசாவின்
    காப்பில்லம் பொது நலமா ?
    ஆத்மீகச் சுயநலம்,
    மனச் சாந்தி !

     

    சுயநலம் வளர்பிறை !
    பொது நலம் தேய்பிறை !
    வளர்பிறை, தேய்பிறை ஒருவித
    ஒளிச் சுழற்சி மாயை !
    நீர்க் குமிழியாய்
    மேல் மிதக்கும் பொது நலம் !
    நுனி மட்டும் தெரிய
    பனிப் பாறைப் பெருங்குடல்
    மூழ்கிடும் சுயநலமாய் !
    முதல் மந்திரி போட்ட மாலைக்கு
    தையல் மெஷின் அளிப்பார்
    தன் பயணம் தொடர !

     

    பொது நலத்தைப் பிளந்துள்ளே
    பார்த்தேன்
    பதுங்கி விழித்திருந்தது
    சுயநலச் சிங்கம் !
    பொது நலம் விரியும் ஆல‌மரம்
    சுயநலம் விழுது !
    மேடையில்
    தன் வாடை மணக்க
    பொன்னாடை போர்த்துவார்
    முன்னோடி மனிதர் !
    சுயநலம் ஒரு செங்கல் !
    பொதுநலம் கட்டிய கோபுரம் !
    புவி வியப்பான
    தாஜ்மகாலைக் கட்டியது
    ஷாஜஹானின் சுய நலமா ?
    பொது நலமா ?

    ++++++++++++

    Share
  • புத்தாண்டு வாழ்த்துக்கள்

    தனுசுnew yearimages

    கண்களை மூடி
    கடவுளை நினைத்தால்
    அவன்
    பிரகாசிக்கிறான் உள்ளத்தில்

    அதே கண்களை மூடி
    தோழமையை நினைத்தால்
    உள்ளே சிலாகிப்பதோ நீங்கள்

    நட்புக்கு நல்லதோர் தேரானாது
    இந்த சின்ன உவமை
    என் வலை நட்பில்
    அழகானது நம் வல்லமை

    முன்னேற வேண்டுமா
    முன் மாதிரியாக வேண்டுமா
    அதற்கு
    மாற்றி யோசி  எனும் முழக்கம்
    முழுமையைடைந்திருக்கும் இவ்வேளையில்
    அதையும் மாற்றி யோசித்து
    இனி
    யோசித்து மாறு எனும் மந்திரம்
    உங்கள் முன் வைத்து

    வாழ்த்துகிறேன்
    புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    படத்துக்கு நன்றி

    http://www.newhdwallpapers.in/happy-new-year/happy-new-years-2014-6/

    Share
  • 2014 வருக….

    விசாலம்    2new yearimages

    “யார் அஙகே?  நுழைகிறாய் ?
    யாருக்கும் அஞ்சாமல்   நுழைந்தும் விட்டாயா?
    பார்க்க அழகாகத்தான் இருப்பாய்.
    பார்க்க முடியவில்லையே உன்னை
    இனி .புரிந்து விட்டது எனக்கு
    இனிய புத்தாணடு நீதானோ ?
    ,நீதான்” இரண்டாயிரத்து பதினாலோ?”
    நீ வர என் வயது குறைகிறதே!

    “நான் தான்  காலதேவன்
    காலம் என் கையில் .
    ஒருவருக்கும் நிற்பதில்லை
    ஒருவர்  சொல்லையும் கேட்பதில்லை
    ஓயாமல் கடமையைச் செய்கிறேன்
    ஒடிக்கொண்டே இருக்கிறேன் ,
    எத்தனை விடிவுகள்
    எத்தனை வீழ்ச்சிகள்.
    எத்தனை மலர்ச்சி
    எத்தனை  இகழ்ச்சி ”

    ” இனிய வரவேற்பு , காலதேவா,
    இந்த  வருட கணிப்பு என்னவோ?
    என் உள்ளத்தில் ஒரு கிளர்ச்சி
    எத்தனை சாம்ராஜ்ய கனவுகள் !
    என் கனவுகள் நினைவாகுமா?
    என் உழைப்புக்கு பலன் கிட்டுமா?.
    மழைப்பொழிய காட்டு கருணை
    மாநிலங்களில் நிரப்பு மகிழ்ச்சி
    பசுமை விரிப்பில்  என் மகிழ்ச்சி
    பஞ்சம் நீக்கி வளமாக்கு நாட்டை.
    கொடுப்பாயா எங்கும் சுகம்
    கொட்டுவாயா எங்கும் இன்பம்  ?”

    “இன்பம் அளிக்கவே வந்துள்ளேன் .
    இதை  துன்பம் ஆக்குவது நீங்களே!
    எங்கும்  இயற்கையின் எதிர்ப்பு
    எங்கும் மரங்களின் ஒழிப்பு
    பல காடுகளின்  அழிவு
    பிராணவாயு முறிவு
    எங்கும் கான்கிரீட் கட்டடங்கள்.
    எட்டி ஆகாயம் வரை எழுப்ப
    அங்கே மாரி எப்படி பெய்யும் ?
    அங்கே  பசுமை எப்படி அமையும் ?”

    2014  காலதேவனே
    மக்கள் மனதில் மகிழ்ச்சி பொங்க
    மங்கலப்பொங்கலில்  அனைவரும் களிக்க
    பஞ்சபூதங்களுடன் கலந்த நீ
    பாரினில் முக்காலங்களில் தவழும் நீ
    எங்களைப் பூரிக்க வைப்பாயா?”
    எங்கள் உடல் நலம் காப்பயா?

    “சந்தோஷம் என்பது உங்கள் கையில்
    சற்றே  இன்று  சிந்தியுங்கள்
    இன்பம் துன்பம்  உங்கள் மனதில்
    இனி வேண்டாம் இந்த மதபேதம்
    பழிக்குப்பழி   அகலட்டும்
    பட்டென்று அகற்றுங்கள் சாதி வெறி
    அருமையான போதனைகள் கண்டு
    அன்பின் வழி நடப்பதுவே   முறை
    இனிக்கட்டும் உங்கள் வாழ்க்கைக் கரும்பு
    மனித நேயம் வளர ,மலரும் அங்கு  அரும்பு ”

    படத்துக்கு நன்றி

    http://www.hdwallpapersinn.com/happy-new-year-2014-cards.html

    Share