Tag: சேஷாத்ரி ஸ்ரீதரன்

  • கல்வெட்டுகள் சொல்லும் கதைகள்

    -சேஷாத்ரி ஸ்ரீதரன்

     

    1) சதுர்வேதி மங்கலம் உருவான வகை பற்றிய கல்வெட்டு

    தமிழகத்தில் பண்டு நிலவிய நான்கு ஆட்சிஅதிகார அடுக்கில் முறையே முதல் அடுக்கில் வேந்தனும், இவனுக்கு அடங்கி இரண்டாம் அடுக்கில் மன்னனும், மன்னனுக்கு அடங்கி மூன்றாம் அடுக்கில் அரையன் என்ற அரசனும், அரசனுக்கு அடங்கி நான்காம் அதிகார அடுக்கில் நாட்டுக் கிழான் என்ற கிழார் கோனும் இருந்துள்ளனர். இப்படி உள்ள நான்கு அதிகார அடுக்கினர் தத்தம்முள் பெண் கொண்டும் கொடுத்தும் உறவு பேணி வந்தனர். ஆனால் இந்த வரலாற்று உண்மையை அறியாத மூடர் அரசர்களை அந்தப்புரத்திற்கும், போர்க்களத்திற்கும் அனுப்பி வைத்துவிட்டு அமைச்சராக, அரசகுருவாக இருந்து பிராமணர் ஆட்சி அதிகாரம் செலுத்தினர் என்று பொருத்தமற்ற கதையை கட்டி விடுகின்றனர்.

    இந்த மூன்றாம் அதிகார அடுக்கில் இருந்த அரசன் வாணகோவரையனால் 22 வீடுகளும், 1-1/2 புன்செய்யும், 128 நிலமும் கோவில் பணியாளருக்கு கொடுக்க முடிந்திருந்தது என்றால் ஒரு வேந்தனால் எந்த அளவு கொடுக்க முடிந்திருக்கும் என்ற கேள்விக்கு அதை விட 10-15 மடங்கு வசதிசெய்து தரமுடியும் என்று தெரிகின்றது. இதற்குச் சான்றாகப் பாண்டியன் சடையன் குலசேகரன் ஏற்படுத்திய உலகுடை முக்கோக்கிழானடி சதுர்வேதி மங்கலக் கல்வெட்டு திகழ்கின்றது. இக்கல்வெட்டு 250 பிராமணர்களுக்கு இந்த சதுர்வேதி மங்கலத்தை, குடியேற்ற ஊரைப் பாண்டிய வேந்தன் ஏற்படுத்தியதாகச் சொல்கின்றது. இக்கல்வெட்டு திருநெல்வேலி வட்டம் பாலாமடையில் உள்ள வேங்கடேசப் பொருமாள் கோயில் கருவறை தென் அதிட்டானத்தில் இடம் பெற்றுள்ளது.

    கல்வெட்டுப் பாடம்:

    1. ஸ்வஸ்திஸ்ரீ கோனேரின்மை கொண்டான் உலகுடைய முக்கோக் கிழானடி சதுர்வேதி மங்கலத்து சபையார்க்கு, தங்களூர், அக்காழ்வி திருநாமத்தால் உலகுடைய முக்கோக்கிழானடி சதுர்வேதி மங்கலமென்று வேதமும் சாஸ்திரமும் போய் பூர் _ _ _ _
    2. தியாதர் களாயிருக்கும் சதுர்வேதி பட்டர்கள் இருநூற்றைம்பதின் மற்கு கீழ்க்களக் கூற்றத்து கற்குடியான சுத்தமல்லி நல்லூரும், படையெடுப்பான் குளமும், ஆலங்குளமு, பிரா
    3. யோடு குளமும், நீலன்கோன் குளமும் கீழ்வேம்பை நாட்டு ஆத்தி சிந்தாமணி நல்லூர்பால் சர்வதேவி விளாகமும் இடையாற்றூர் கள நிலம் முக்காலு ஒரு மாவரை வாகைக்குளம் புரவரி நல்லூரும் பாரி
    4. மங்கலமும் கொறக்கோட்டையான அபிமான சிவமங்கலமும் கீழேறங்குடியில் பள்ளிச்சந்த நீங்கியுள்ள குளமும் மேலேறங்குடியில் மானாபரணப் பாடியில் ஸ்ரீ குலைசேகர விண்ணகர் எம்பெருமான்
    5. தேவதானமும் பள்ளிச்சந்தமும் நீங்கியுள்ள நிலமும் திருக்களக் குறிச்சியும் கண்டநாட்டு மலையும் பதரூர்பால் திருவாலவாயுடையார் தேவ
    6. தானமான சுங்கந் தவிர்த்த விளாகமும் சிறுசெழிய னூரும் இவ்வூர்கள் முன்னுடையாரையும் பழம்பெயரையும் தவிந்து ஒரு நாட்டினுக் கீழ்களக் கூற்றமும் ஓரூரும் ஒரு புரவாக்கி அணிந்தானப்பனான வீரவினோத பல்லவரைய
    7. ன் பிரமதேயஞ் செய்யப் பெறவேணுமென்று ஐயந் முனையதரையர் நமக்குச் சொன்னமையில் அக்காழ்வி திருநாமத்தால் உலகுடை முக்கோக் கிழானடி சதுர்வேதி மங்கலமென்னும் பேரால் வேதமும் சாஸ்திரமும் போய் பூர்
    8. தியாதர் களாயிருக்கும் சதுர்வேதி பட்டர்கள் இருநூற்றைய்ம்பதின் மர்க்கு பிரமதேயமாக கீழ்க்களக் கூற்றத்து கற்குடியான சுத்தமல்லி நல்லூரும், படையெடுப்பான் குளமும், ஆலங்குளம், பிராயோடு குளமும், நீலங்கோன் குளமும்,
    9. கீழ்வேம்பை நாட்டு ஆத்தி சிந்தாமணி நல்லூற்பால் சர்வதேவி விளாகமும் இடையாற்றூர்களநில முக்காலே யொரு மாவரை வாகைக்குளம் புரவரி நல்லூரும் பாரிமங்கலமும் கொறகோட்டையான அபிமான சிவமங்கலமும் கீழேறங்குடியில் பள்ளிச் சந்தம் நீங்கியுள்ள நி
    10. லமும் மேலேறங்குடியில் மானாபரணப் பாடியில் ஸ்ரீ குலசேகர விண்ணகர் ஆழ்வார் தேவதானமும் பள்ளிச் சந்தமும் நீங்கியுள்ள நிலமும் திருக்களக் குறிச்சியும் கண்டநாட்டு மலையும் பதரூர் பால் தென் திருவாலவாயுடையார் தேவதானமான நிலம் ஏ
    11. ழுமாவரையும் திருமேற்றளிசயுடையார் தேவதானமான சுங்கந் தவித்த விளாகமும் சிறுசெழியனூரும் இவ்வூர்கள் மூன்றாவது பிசானமுதல் முன் உடையாரையும் பழம் பெயரையும் தவிர்த்து ஒரு நாடு கீழ்க்களக் கூற்றமும் ஓரூரும் ஒருபுரவு மாக்கி இவ்வூர்களில் கற்குடி
    12. யான சுத்தமல்லி நல்லூர் _ _ _ திருதேவதான _ _ _ நிலங்களால் _ _ _ லாம் _ _ _ எற்றைக்கு கடமை _ _ _

                 (கல்வெட்டு முற்றப் பெறவில்லை)

    சொற்பொருள்:

    சதுர்வேதி மங்கலம் – பிராமணர் குடியேற்ற ஊர்; பூர்தியாதர்கள் – வேதக் கல்வி நிறைவுசெய்தோர்; விளாகம் – சூழ்ந்த இடம்; பள்ளிச்சந்தம் – சமணபள்ளிக்கு வழங்கிய நிலதானம்

    கல்வெட்டு விளக்கம்: இன்னொரு கல்வெட்டு இதே செய்தியைத் தாங்கி  வருகின்றது அதில் சடையன் குலசேகரனைக் குறிப்பிடுவதை வைத்து கோனேரின்மை கொண்டான் > இரண்டாம் ராஜாதிராஜனுக்கு அடங்கி (1166 – 1178) ஆண்ட சடையன் குலசேகர பாண்டியனின் ஆட்சியில் (1162 – 1177)  ஆட்சி ஆண்டு குறிப்பிடாத இக்கல்வெட்டு தன் அக்காள் மேல் கொண்ட பாசத்தால், மதிப்பால் ஏற்கெனவே அரையோலையில் தந்தபடி ஓலையாக மட்டுமே இருப்பதை நடைமுறையில் செயற்படுத்த பிராமணரும், திருநெல்வேலி வட்டத்து உதயனேரி என்னும் பாலாமடை வேங்கடேசப் பெருமாள் கோயில் அறங்காவலர் (ஸ்ரீகாரியம்) அணிந்தானப்பனான வீரவினோத பல்லவரையன் சொன்னதால், ஐயன் முனையதரையர் பிரமதேயஞ் செய்யப் பெற வேண்டுமென்று சொன்னதால் வேத சாஸ்திரம் கற்று முழுத் தேர்ச்சி பெற்ற 250 பிராமணர்களுக்கு வரி நீக்கி சதுர்வேதி மங்கலத்து நிலத்தை தந்துள்ளான். இவர்கள் வாழும் அந்நிலத்தை சதுர்வேதி மங்கலம் ஆக்கி அதற்கு தன் அக்காள் பெயரைத் தேர்ந்து உலகுடைய முக்கோக் கிழானடி சதுர்வேதி மங்கலம் என்று பாண்டியன் பெயர் சூட்டியுள்ளான். இந்த சதுர்வேதி மங்கலத்து நிலப்பரப்பு ஏழு குளங்களை உள்ளடக்கியும், ஏற்கெனவே இருந்த ஆறு ஊர்களையும் அத்தோடு இரண்டு கோவில் விளாகங்களையும் ஒரு மலையையும் சமணர் கோவில் பெருமாள் கோவில் ஆகியவற்றின் இறையிலி நீங்கிய பள்ளிச் சந்தம் தேவதான நிலம் ஆகியவற்றையும் உட்கொண்டதாக ஆக்கி இவ்வூர்களின் பழைய பெயரையும் அதில் ஏற்கெனவே வாழ்வோரையும் தவிர்த்து, இதாவது, நீங்கலாக உருவாக்கப்பட்டது.

    சதுர்வேதி மங்கலம் என்றால் பிராமணக் குடியேற்ற ஊர். அந்த வகையில் இந்நிலப்பரப்பில் ஏற்கெனவே வீட்டோடு குடியிருந்த பிராமணர் நீங்கலாக புதிதாக 250 பிராமணருக்கு வீடும், கொல்லைப்புறமும் அதோடு விளை நிலங்களும் தந்திருக்க வேண்டும் என்று புரிகின்றது. ஆனால் கல்வெட்டின் அந்தப் பகுதி வெட்டப்படாமல் பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளது. இவ்வண்ணமாகத் தான் பிற சதுர்வேதி மங்கலங்கள் இதற்கு முன்பு உருவாக்கப்பட்டுள்ளன எனத் தெரிகின்றது. இவ்வாறு ஆட்சியாளர்கள் பண்டு பிராமணருக்கு பிரமதேயம் வழங்கிய காரணம் என்வென்றால் ஆட்சியாளர்கள் கோவில்களை தமக்கு சொந்தமாக எண்ணியதால் தம் கோவிற் பணியாளருக்கு இந்த சலுகைகளை செய்தனர் எனக் கொள்வதே சரியாகப் படுகின்றது. இப்படி பிராமணருக்கு தான் என்றில்லை வைத்தியருக்கும், பறைகொட்டும் உவச்சருக்கும், கோயில் கணக்கு எழுதுவோருக்கும் ஆட்சியாளர் வீடு, நிலம் ஆகியவற்றை தானம் கொடுத்து உள்ளனர்.

    பார்வை நூல்: திருநெல்வேலி மாவட்டக் கல்வெட்டுகள் தொகுதி I, பக். 7-8. தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை வெளியீடு, எழும்பூர், சென்னை – 8.

     

    2) 26 உவச்சருக்கு நிலங்கொடுத்ததை காட்டும் பாளையங்கோட்டை கல்வெட்டு

    பாளையங்கோட்டையில் அமைந்த கோபாலசுவாமி கோயிலான வீரநாராயண பெருமாள் கோவிலில் திருப்பலி கொட்டவும், திருமஞ்சனம் கொட்டவும், திருப்பள்ளி எழுச்சியின் போது சாமம் கொட்டவும், காளம் ஊதவும் 26 உவச்சருக்கு முதலாம் இராசராசனின் 22 ஆம்ஆட்சி ஆண்டில் (கி.பி.1007) மகாசபையோரால் நிலதானம் வழங்கப்பட்டுள்ள செய்தி கல்லில் வெட்டப்பட்டுள்ளது.

    கல்வெட்டுப் பாடம்:

    1. திருப்புகழ்சேர் ஈழ மண்டலமும் இரட்டபாடி ஏழரை இலக்கமும் திண்(றிதல்) வென்றித் தண்டாற் கொண் _ _ _ ழில் எலா யா
    2. ண்டுந் தொழுதகை விளங்கும் யாண்டேய் செழியரைத் தேசு கொள் ஸ்ரீ கோராஜராஜ கேஸ _ _ _
    3. ண்டு 22 ஆவது  ஸ்ரீ ராஜராஜ தேவர் சி(று) த(ன)த்து பணிமகன் ஆதனூர் (பவை பெகறை வழி) _ _ _ _ _ _
    4. _ _ _ _ ப்ரஹ்மதேயம் (ஸ்ரீ) வல்லப மங்கலத்து (மஹாஸ)பை(யோம்). இவ்வூர் (ண) வீரநாராயண _ _ _ _ ளை மாடக்கு
    5. (பைக்) கூடி இருந்து ஸ்ரீ வீரநாராயண விண்ணகர் ஆள்வார்க்கு ஸ்ரீபலா கொட்டவும், திருமஞ்சனம் கொட்டவும், திருப்பள்ளி எ _ _ _(சாமங்) கொட்டவும் (உவற்ச) ஆள்
    6. த்(த)னுக்கு (ஆளுக்கு) நிலன் ஒரு (மாவு)மாக நிலம்பத்து மாவும் உவற்சர் (தலை) பறை கொட்டுவானொருவனுக்கு நில_ _ _
    7. நிலம் பன்னி ரெண்டும் (அட)ங்கும். காளம் ஊதுவார் நால்வர்க்கு ஆளாள் ஒரு மாவாக நிலன் நாலு(மாவும்) நிலன்_ _ _

    சொற்பொருள்:

    திண்திறல் – திரண்டுபெருகிய; வென்றி – வெற்றி; தண்டு- படை; சிறீதனம் (ஸ்ரீதனம்) – கருவூலம், treasury; மகாசபையோர் – கருவறைப் பட்டர்கள்; உவச்சர் – இசைக் கருவி முழக்குவோர்; ஆளாள் – ஒவ்வொரு ஆளுக்கும், per individual.

    கல்வெட்டு விளக்கம்:

    முதலாம் இராசரானின் மெய்கீர்த்தியோடு கல்வெட்டு தொடங்குகின்றது. அவனுடைய 22 ஆம் ஆட்சி ஆண்டில் (கி.பி.1007) அவனது கருவூலத்துப் பணிமகன் ஆதனூரன் கொண்டு வந்து கொடுத்த ஆணைப்படி இற்றைய பாளையங் கோட்டையான அற்றைய வல்லபமங்கலத்து பெருமாள் கோவில் கருவறைப் பிராமணர்கள் ஒன்றுகூடி வீரநாராயண விண்ணகர் பெருமாளுக்கு திருப்பலியின் போது பறைகொட்டவும், திருமஞ்சனத்தின் போது பறை கொட்டவும், திருப்பள்ளி எழுச்சியின் போது சாமம் கொட்டவும் ஏற்பாடான உவச்சர் ஆள் ஒருவருக்கு இதாவது, ஒவ்வொருவருக்கும் தனித்தனியே ஒரு மா என பத்து மாவும், தலைப் பறை கொட்டுவார் ஒவ்வொருவருக்குமாக நிலம் பன்னிரண்டும், காளம் ஊதும் நால்வருக்கு ஆளாளுக்கு ஒரு மா என நாலு மாவும் நிலம் கொடுக்கப்படுகின்றது. ஆக 26 உவச்சர் நிலம் பெற்றனர் என்று தெரிகின்றது. கல்வெட்டு இதன்பின் சிதைந்துள்ளது. எனவே இதற்குமேல் என்ன செய்தி உள்ளது என்று அறிய முடியவில்லை. அதில் நிலஅளவும் நிலம் அமைந்த இடமும் குறிக்கப் பெற்றிருக்கலாம். உவச்சர்களே 26 பேர் என்றால் கோயில் பிராமணர், கணக்கு எழுதுவோர், கோயில் மருத்துவர், தேவரடியார், கோயில் இடையர் என பலரையும் உள்ளடக்கினால் தொகை 100க்கு மேல் செல்லும். இதிலிருந்து ஒரு கோயிலை நம்பி பல குடும்பங்கள் பிழைத்தன எனத் தெரிகின்றது.  காட்டை அழித்து ஒரு கோயில் ஊரை அமைத்தால் இறையிலி நிலம் போக எஞ்சிய நிலங்கள் ஆட்சியாளருக்கு அதிக வரி வருவாயைத் தேடித் தந்தன என்பதை உணரலாம். கோயில் ஊர்கள் உருவாகி இராவிட்டால் இந்த அளவிற்கு வரிவருவாய் வந்திருக்காது.

    பார்வை நூல்: திருநெல்வேலி மாவட்டக் கல்வெட்டுகள் தொகுதி I, பக்.22. தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை வெளியீடு, எழும்பூர், சென்னை – 8.

     

    3) கணக்கன் நிலதானம் பெற்றதைக் காட்டும் பாளையங் கோட்டைக் கல்வெட்டு

    பாளையங்கோட்டையில் அமைந்த கோபாலசுவாமி பெருமாள் கோவில் தென்புறச் சுவர் கல்வெட்டு கி.பி. 1526 இல் வேணாட்டு வேந்தரின் ஆட்சிக்கு இப்பகுதி உள்ளடங்கி இருந்தபோது கோயில் நிர்வாகக் கணக்காக கணக்கு எழுதும் குமரன் ஈசுவரனுக்கு நிலதானம் கொடுத்த செய்தியைத் தருகின்றது.

    கல்வெட்டுப் பாடம்:

    1. ஸுபமஸ்து அருளில் செயல் கொல்லம் 700 1 (701) ஆண்டு பங்குனி மாதம் 20 8 (28) நாள் ஸ்ரீவல்லவ
    2. ன் மங்கலத்து நாயனார் அழகிய மன்னார் கோவிலுக்கு ஸ்ரீ விருந்தாவன ஆழ்வா
    3. ர் கோயிலுக்கும் நயினார் வேத நாயகர் பெருமாள் கோயிலுக்கும் இக்கோயிலிற்
    4. கைக்கோளரில் மூன்றாங்குடி குமரன் ஈச்சுவரனுக்கும் காணியாட்சை பண்டா
    5. ரக் கணக்காகக் குடுப்பித்த தானக் கணக்கும் எழுதிக் கொண்டு பழைய படியே  உடை
    6. மையும் பிரசாதமும் பற்றிக்கொண்டு சந்திராதித்தவல் சந்ததிப் பிரவேசமே க
    7. ல்லிலுஞ் செம்பிலும் வெட்டிக் கணக்கு எழுதி பழையபடி உடமையும்
    8. ப்ரசாதமும் பற்றிக் கொண்டு இன்னாள் முதல் 700 1 (701) ஆண்டு பங்குனி மாஸம் 20 8 (28) க
    9. ற்பித்த அளவுக்குத் தானம் இன்னாள் முதல் இத்தரகு பிடிபாடாக இவ்வ
    10. கைப் படியே கணக்கு எழுதி உடமையும் பற்றிக் கொள்ளும் படியு
    11. ம் பாற்க இப்படிக்கு இராமன் இராமன் எழுத்து.

    சொற்பொருள்:

    கொல்லம் – கி.பி. 875 இல் தொடங்கிய சேரநாட்டு ஆண்டுக் கணக்கு; அழகிய மன்னார் – இராசகோபாலன் என்பதன் தமிழ் வடிவம்; விருந்தாவன ஆழ்வார் –கிருஷ்ணன்;  கைக்கோளர் – செங்குந்தர்; மூன்றாங்குடி – மூன்றாம் தலைமுறை; காணியாட்சை – விளைநில உரிமை; உடமை – வீடு, வீட்டை ஒட்டிய நிலம், கிணறு, தோட்டம், தோப்பு உள்ளிட்டவை; சந்ததிப் பிரவேசம் – பிறங்கடை வழிவழியாகத் தொடர்வதாக; பிடிபாடு – வழிகாட்டுநெறி, guidelines.

    கல்வெட்டு விளக்கம்:

    ஆய்குலத்து வேணாட்டு வேந்தர் வீரரவி கேரளவர்ம குலசேகர பெருமாள் (1504-1528) ஆண்ட காலத்தே திருநெல்வேலி வேணாட்டு ஆட்சிக்கு உட்பட்டிருந்தது. கொல்லம் ஆண்டு 701 (கி.பி.1526) பங்குனி மாதம் 28 நாளில் எழுதப்பட்ட இந்த ஓலை ஆணை வல்லப மங்கலத்து நாயனாரான இராசகோபாலர் கோவில், கிருஷ்ணன் கோவில், மூலவர் வேதநாயகப் பெருமாள் கோவில் ஆகிய கோவில்களுக்கும் இவற்றில் கணக்கனாகப் பணிபுரியும் கைக்கோளன் குமரன் ஈசுவரனுக்கும் காணிஉரிமையாக நிலம் தானமாகத் தரப்பட்டது. இந்த தானத்தைப் பெற்றுக் கொண்ட குமரன் ஈசுவரன் பழையபடியே கோயிலில் உடைமையும் மூன்றுகால பூசையில் வரும் பிரசாதமும் பெற்றக் கொண்டு நிலவும்ஞாயிறும் உள்ள வரை தலைமுறை தலைமுறையாக வேலையைச் செய்துவரலாம் என்று சொல்லப்பட்டு உள்ளது. இதைக் கல்லிலும் செப்பிலும் வெட்டி வைத்து கொல்லம் 701 (கி.பி. 1526) 28ஆம் நாள் முதல் சொல்லிய அளவிற்கு தானம் பற்றிய கணக்கு எழுதி பழையபடியே கோயிற் கணக்கு எழுதிக்கொண்டு உடமையும் பிரசாதமும் பெற்று வருக என்று இராமன் இராமன் ஓலை ஆவணம் எழுதினார். கைக்கோளர் பல்லவப் பேரரசு காலத்திலேயே பாண்டிய நாட்டில் படையாள்களாக குடியேறிவிட்டனர். பல்லவர் பாண்டியரோடு சதையும் குருதியுமாக சேர்ந்துவிட்டனர். இக்கல்வெட்டு மூலம் பிராமணர் மட்டும் அல்லாது பிற கோவில் பணியாளரும் நிலதானம் பெற்ற செய்தியை அறிய முடிகின்றது.

    பார்வை நூல்: திருநெல்வேலி மாவட்டக் கல்வெட்டுகள் தொகுதி I, பக்.27. தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை வெளியீடு, எழும்பூர், சென்னை – 8.

    https://tamilnadu-favtourism.blogspot.com/2017/05/mannar-rajagopalaswamy-temple-Palayamkottai.html

    https://www.alltravels.com/india/tamil-nadu/palamadai/photos/current-photo-83074720

    Share
  • மண்ணாப்பேடி புலைப்பேடி ஒழிப்பு அரசாணை பற்றிய கல்வெட்டு

    -சேஷாத்ரி ஸ்ரீதரன்

    மேல் சாதிப் பெண் மீது கீழ்சாதி ஆடவன் (புலையன், வண்ணான்) இரவில் கல்லோ குச்சியோ எறிந்தால் அவளை சாதி விலக்கி அந்த ஆடவனுடன் குடும்பம் நடத்த அனுப்பி வைக்கும் ஒரு சமூக வழக்கும் தான் இந்த மண்ணாப்பேடி புலைப்பேடி என்ற வழக்கம். மண்ணாப்பேடி என்றால் வண்ணாரிடம் அச்சம், புலைப்பேடி என்றால் புலையரிடம் அச்சம். இந்த மண்ணாப்பேடி புலைப்பேடி ஒழிப்பு அரசாணை பற்றிய 106 வரி கல்வெட்டு குமரி மாவட்டம் கல்குளம் வட்டம் திருவிதாங்கோட்டில் உள்ள பத்மனாபபுரம் அருங்காட்சியகத்தில் உள்ளது. இந்த ஆணையை வேணாட்டு வேந்தர் வீரகேரளவர்மன் சிறைவாய் மூத்தவர் பிறப்பித்தார்.

    கல்வெட்டுப் பாடம்:

    கன்னி வியாழம் / நின்ற கொல்ல / ம் 800 70 1 (871) / தை மாதம் 20 7 (27) / சனியாட்செ / யும் சதயவும் / பூர்வ பக்கிஷத்து / பிறதி பதவும் சிங் / ஙங் கரணவும் பரி / கம நாமயோக / வும் இந்நாளா / ல் வீரகேரள வ / ற்ம சிறவாய் மூத்த / தம்பிரானார் கல்க் / குளத்து எழுந்த / ருளி  இருந்தருளி / கல்ப்பித்த படி / க்கு ரண்டு வக / மகாசனவும் கூ / டி கல்ப்பித்த மொ / ளியாவது தோ / வாளைக்கு மேக் / கு கண்ணாற்று / க்கு கிழக்கு கட / லினும் மலைக்கு / ம் அகத்து அகப் / பட்ட நாட்டில் பில / பேடியும் மண்ணா / ப் பேடியும் இல்லா / எந்த நம் தம்புரா / ன் திருவுள்ளம் / பற்றிக் கல் / ப்பிச்ச ப / டிக்கு ரண் / டு வக மாச / னங் கூடி / கல்ப்பிச்சு / கல்லு வெ / ட்டி நாட்டி / ய கல்ப்பினை / மறுத்து பி / லப்ப பேடியு / மண்ணாப் / பேடியும் உ / ண்டாம் கா / லத்து / மண்ணாப் / பேடியும் வகி / ற்றுப் பிள்ள / ஆதியா தோ / ண்டி வெ / ட்டுமாறு / ம் இந்த க / ல்ப்பினை மறு / த்து பிலப் / பேடியும் ம / ண்ணாப் / பேடி எந் / த வகை பொண்ணு/ ம் பிள்ளை / க்கு உண்டா / யால் / ப் பெண்ணு / ம் பிள்ள / குளிச்சு / கர ஏறிக் / கொண் / டால் தோ / ழமல்ல / எந்நும் க / ல்ப்பிச்ச / து. இ வண் / ணம் புல் / லும் பூமி / யும் கல்லு / ம் காவே / ரியும் ஒள் / ள காலத் / து நடக்கு / மாறும் க / ல்ப்பிச் / சது. திருவயத்து ம / ற்ற கண்டு வ / த்திக் கரிக்கு / ம்  திருவுள்ளம் ப / ற்றிக் கல்ப்பிச்சது./ திருவிதாங் / கோட்டு தெண்ட / ப்படை வீட்டில் / வடக்கு வாசலில் / கல்லு வெட்டி நாட் / டினது. இந்தக் / கல்லுக்கு யாதாமொ / ருத்தர் ஒரு கால / ம் யாதாம் ஒரு / வர் விக்கிநஞ் / செய்தார் அ / வர்கள் கெங்க / கரையில் காரா / ம் பசுவை கொ / ண்ட தோசத் / தில் போவா / ராகவும்.  

    சொற் பொருள்: கொல்லம் – கி.பி. 824-825 ல் தொடங்கிய ஒரு சேர ஆண்டுக் கணக்கு; வியாழம் – குருபார்வை ; சனியாழ்ச்சை – சனிக்கிழமை; பூர்வ பக்ஷம் – வளர்பிறை; எழுந்தருளி – வந்திருந்து; இருந்தருளி – தங்கியிருந்து; மகாசனம் – பொதுமக்கள்; கல்பித்த – வழிகாட்டிய, பிடிபாடு தந்த; மொழியாவது – உரையாவது, பேச்சு; கண்ணாறு – வாய்க்காலை ஒட்டி அமைந்த பாதை; எந்த – என்ற; தம்புரான் – வேந்தன், உயர்குடிமகன், noble man; கல்பினை – பிடிபாடு, வழிகாட்டுநெறி, guidelines; மறுத்து – மறுதலித்து, புறந்தள்ளி, reject; வகிற்று – வயிற்று; உண்டாம் – கருவுண்டாகும் சமயத்து; ஆதியா –   ; எந்நும் – என்றும்; ஒள்ள – உள்ள; திருவயம் – வயம் என்றால் நீர், குதிரை என்ப்பொருள். திரு என்ற சிறப்படையை ஒட்டி திருக்குளம் என்ற கொள்ளலாம்.; வத்திக் கரி – ; தெண்டப்படை வீடு – படைக்கொட்டில்; யாதாம் ஒருவம் – எவரேணும் ஒருவர்; கொண்ட – கொன்ற;

    விளக்கம்: கன்னி இராசியும் குருநோக்கும் நின்ற கொல்லம் ஆண்டு 871 (கி.பி.1695-1696) தை 27 ஆம் நாள் சனிக்கிழமை சதய நட்சித்திரம் கூடிய வளர்பிறையான இந்நாளில் வேணாட்டு வேந்தன் வீரகேரளன்வர்மன் சிறைவாய் மூத்தவர் கல்குளத்தில் வந்திருந்து தங்கியிருந்த காலப் பொழுதில் ஆணையிட்டபடி புலையர் வண்ணார் ஆகிய இரு சாதி பொதுமக்கள் கூடி இருக்க வழிகாட்டிநெறியால் சொன்னதாவது, தோவாளைக்கு மேற்கு வாய்க்காலுக்கு இப்பாலும் கிழக்கு கடலின் மலைக்கும் இடைப்பட்ட நாட்டில் புலைப்பேடி மண்ணாப்பேடி வழக்கம் இல்லாது ஒழிக என்று வேந்தன் முடிவு கொண்டு அதற்கு வழிகாட்டுநெறி வழங்கியபடி இரு வகை சாதிமாரும் கூடி பிடிபாட்டு வழிகாட்டுநெறியை ஏற்று அதைக் கல்லில் வெட்டி நாட்டிய உடன்பாடு. இந்த உடன்பாட்டு ஆணையைப் புறந்தள்ளிப் புலைப்பேடியும் மண்ணாப்பேடியும் ஏற்படும் காலத்தே மண்ணாப்பேடி வயிற்றுப் பிள்ளையை குழிதோண்டி வெட்டிக் கொல்ல வேண்டும். இந்த பிடிபாட்டை வழிகாட்டுநெறியைப் புறந்தள்ளிப் புலைப்பேடி, மண்ணாப்பேடி ஆகிய எந்த வகையால் பெண் கருவுற்றாலும் பெண்ணும் பிள்ளையும் தீட்டுகழியக் குளித்து கரை ஏறினால் எந்த தோஷமும் இல்லை குற்றமும் இல்லை என்றும் வழிகாட்டுநெறி தரப்படுகின்றது. இவ்வண்ணம் புல்லும் பூமியும் கல்லும் காவேரியும் நிலைக்கும் காலம் வரை இந்த பிடிபாடு செல்வதாகச் சொல்லப்பட்டது. இது திருவிதாங்கோட்டில் உள்ள படைக் கொட்டிலின் (armoury) வடக்கு வாசலில் கல்வெட்டி நாட்டப்பட்டது. இந்தக்  கல்லுக்கு எவரேனும் ஒருவர் கேடு செய்தால் அவர் கங்கைக்கரையில் காராம் பசுவைக் கொன்ற குற்றத்தை பாவத்தை அடைவராக என்று முடிக்கப்பட்டுள்ளது.  மேல் சாதி கீழ் சாதி கலப்பை சமூகத்தில் அறவே ஒழிக்கும் முயற்சி இது என்பது புலனாகின்றது. இது சரியான நடவடிக்கை என்றால் இதை ஏன் 17 ஆம் நூற்றாண்டின் இறுதியில் தடைசெய்ய வேண்டும்? ஏன் முற்பட்ட நூற்றாண்டுகளிலேயே தடை செய்யவில்லை? என்ற கேள்வியும் இயல்பாகவே எழுகின்றது. அப்படியானால் புலையர், வண்ணார் போன்ற சாதிகள் 16 – 17 ஆம் நூற்றாண்டுகளிற் போல் இழிவாக, தாழ்வாக அதற்கு முந்தைய நூற்றாண்டுகளில் எண்ணப் படவில்லை, நடத்தப்படவில்லை என்பதே காரணமாகலாம். காலத்தைச் சுற்றி வளைத்து சுருக்கியதில் தீண்டாமை 16 ஆம் நூற்றாண்டில் உருவாகி 17 ஆம் நூற்றாண்டில் வலுப்பெற்றது என்ற கருத்து தான் மேலெழுகின்றது. ஆனால் வெள்ளையர்கள் ஏதோ ஒரு மூலையில் கரையானுக்கு இரையாகிக் கொண்டிருந்த மனுதர்மத்தை அச்சில் எடுத்துப்போட்டு அது தான் இழிவுபடுத்தியது, தாழ்வுபடுத்தியது, ஒடுக்கியது என்று சொல்வதைக் கல்வெட்டுச் சான்றுகள் பொய்ப்பிக்கின்றன. ஒரு இடத்தில் நிகழ்ந்த சமூகக் கொடுமையை எல்லா இடங்களிலும் நிகழ்ந்ததாகக் காட்டுவது எத்தகு குற்றமோ அத்தகு குற்றம்தானே பிற்பட்ட நூற்றாண்டு சமூகக் கொடுமையை இன்னும் முற்றபட்ட நூற்றாண்டில் நடந்தேறியதாகக் காட்டித் திணிப்பதுவும், இதாவது 400 ஆண்டு கால நிகழ்ச்சியை 2,000 ஆண்டுகளாக இழித்து தாழ்த்தி ஒடுக்கப்பட்டதாகச் சொல்வதும்.

    கல்வெட்டில் சேரநாட்டு பேச்சு வழக்குத் தமிழ் ஆங்காங்கே தலைப்படுகின்றது.

    புலைப்பேடி மண்ணாப்பேடி பற்றி அறிய https://www.jeyamohan.in/20559#.XHtDP8Azbcc

    பார்வை நூல் கன்னியாகுமரி மாவட்டக் கல்வெட்டுகள், 2008 வெளியீடு, பக். 141-144. தமிழ்தாடு அரசுத் தொல்லியல் துறை, சென்னை – 8.

    Share
  • 22 பேர் பெற்ற பிரமதேய நிலக் கல்வெட்டு

    -சேஷாத்ரி ஸ்ரீதரன்

    மேலதிருமாணிக்கம் மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில் 

    மதுரை மாவட்டம், பேரையூர் வட்டம் உசிலம்பட்டி அருகே மேலத்திருமாணிக்கம் என்ற ஊரில் அமைந்த மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் கருவறை வடக்குச் சுவர் கல்வெட்டு.

    பிரமதேயம் என்றால் பிராமணர்க்கு இறையிலியாக வழங்கும் நிலம் என்று தெரியும் ஆனால் அது எப்படியானது என்று விளங்கத் தெரியாது. இக்கல்வெட்டில் அது பற்றிய தெளிவு ஏற்படுகின்றது. வாணகோவரையன் கட்டித் தந்த 22 வீட்டுக் கல்வெட்டை நினைவுபடுத்துவதாக இக்கல்வெட்டு உள்ளது. 13 ஆம் நூற்றாண்டில் விக்கிரம பாண்டியனின் 13 ஆம் ஆட்சி ஆண்டில் தென்முட்ட நாட்டு மணிக்கயத்து சிவன் கோவிலுக்கும், குலசேகர மங்கலத்து நாயனார்க்கும் வழங்கிய தேவதானத்தின் எல்லையும் கருநிலக்குடி நாட்டு பிரம்மதேயத்தில் ஒவ்வொரு பிராமணரின் பெயரைக் குறிப்பிட்டு அவருக்கான பங்கினை அரை முதல் ஒன்றேகால் நிலம் வரை குறிப்பிடுகின்றது. இந்த வேறுபாடு அவரவர் பொறுப்பிற்கும் தகுதிக்கும் தக்கவாறு அமைந்ததாகலாம். இவர்கள் பெரும்பாலும் சுற்றத்தாராகவே உள்ளனர் என்பது எண்ணிப் பார்க்கத்தக்கதாக உள்ளது. இதில் செய்தி கிடைக்கின்ற அளவில் 21 பிராமணர்கள் இருப்பது தெரிகின்றது இதற்கு மேலும் இருக்கக்கூடும். ஆனால் இக்கல்வெட்டு இறுதி முற்றும் முன்பு உள்ள பகுதி சிதைந்துள்ளதால் அதில் இடம்பெற்றோரின் பெயர்கள் அவர்கான பங்குகள் அறிய முடியாமல் உள்ளது.   இந்த பிரமதேயம் நன்செய், புன்செய் அல்லாத வீட்டு அடிமனை என்றே கொள்ளத்தக்கது. அப்படியானால் வீடு கட்டித் தரப்பட்டதா என்ற செய்தியும் அறியமுடியாமல் உள்ளது.

    கல்வெட்டு:

    ஸ்வஸ்திஸ்ரீ திருமகள் ஜயமகள் / திருப்புயத்திருப்ப எழுக / டலளவு நிலமகள் புணர / க் கடவுள் மேருவி[ற்] கயல் / விளையாட _ _ _ / வந்தம் _ _ _/ நெடு _ _ _ வெண்கு / டைநிழ _ _ _ செங்கோ / ல் நடப்பக் [கருங்]கலி துரந்து / வேத வீதி _ _ / _ _ _ / ஞ்ச வீரமும் _ _ _ புகழுமிகளணி விளங்க _ _ _ / மதிப்பெருச் சடை முடி நாத / னிம்ப திகழ்மணி முடி சூடி வி / ளங்கிய மணியணி வீரஸிம்ஹா / சனத்து வீற்றிருந்தருளிய [கோ] மாறபன்மரான திரிபுவனச் சக்கரவ / த்திகள் ஸ்ரீ விக்கிரம பாண்டிய [தே] / வற்கு யாண்டு13 வது ஸ்ரீ பாண் / டி மண்டலத்து மதுரை உதைய / வளநாட்டுத் தென் / முட்ட நாட்டு திரு / மணிக்கயத்து உடை / யார்த் திருமணிக்கய / முடைய  நாயனார் தேவ / தானம். கருநிலக்குடி நா / ட்டு ப்ரஹ்மதேய[ம்] ஸ்ரீ குலைசே / கரச் [சதுர்வேதி மங்]கலத்து / டைய நாயனார் தேவதான / _ _ _ க் கய நல்லூர் மூலப்பி /_ _ _ / லை[ப் பெ]ருந்தலைக் குளத்தில் வய / லில் மேல் வரம்புக்கு மேற்[கு] / பெருந்தலை குளத்தில் வயலில் / வாயல்ப் பவளசேரிக்கு நின்றும் / _ _ _ ப்போன பெருவ / [ழியே]ய்க் கொண்டு நாலப் பொய் / [கையார்] இக் குளத்துக்கு பாய்கி / ற காலுக்கு மேற்கும் தென்னெல்லை /அத்தாணி நல்லூர்[க்கா] லுக்கு  வடக்கும் மேல்லெல் / லை கிழவர்குறிச்சி வயலுக் / கு கிழக்கும் ஆனை சுரத்தில் நின் / றும் தெற்கு நோக்கிப் போகிற / வழிக்கு கிழக்கும் வடவெல்லை /  தலைமலை ஆற்றுக்கு தெற்கும் இ / _ _ _ / [மா] _ _ _ மும் கீணோக்கிய கிணறும் [மற்றும்] / யெப் பேற்பட்டனவும் / _ _ _ ளிச் / _ _ த்து இருந்து ஸ்ரீ மாஹே[ஸ்வர] _ _ _ / வாஜ கோத்ரத்து _ _ _ / த்துமு _ _  திறபடி _ _ _  / _ _ _ _ / தம்பி ஸுப்ரஹ்மண்ய பட் / டன் பாக[ம்] ஒன்றும் இக்குடியில் / இக்கோத்திரத்து இச்சூத் / திரத்து சுந்தரத் தோளுடை / யான் பட்டன் பாகம் முக்கா / லும் இவன் தம்பி சோலை பிரா / ன் பட்டன் பாகம் அரையும் இவ / ன் மகன் ஸுப்ரஹ்மண்ய பட்டன் பாகம் / அரையும் இக்குடியில் ஸ்ரீ க்ருஷ்ண பட்டன் பாக / ம் ஒன்றும் இக்குடியில் சோலைப் பி / [ரான் பாக]ம் ஒன்றும் இக்[குடியி] / _ _ _ ட வில்லி பட்டன் பா _ _ _ / _ _ _ ப கோத்திரத்து வெ / பிரான் பட்டன் பாகம் _ _ _  கோத்திரத்து / _ _ _ _ / ஒன்றும் இவன் _ _ _ / ண் காடுடைய _ _ _ / இவன் தம்பி _ _ _ / பாகம் ஒன்று _ _ _ / ம் ஹரி கோத்ரத்து இ / ஸுத்திரத்து குரவசேரி ஸ்ரீ / குமார பட்டன் பாகம் ஒன் / றும் [ஸ்வத்தாப] கோத்ரத்து வேற்புறத்து ஸுப்ரஹ்மண்ய ப / ட்டன் பாகம் ஒன்றே காலும் / இக்குடியில் இவன் தம்பி மருளாள / ப் பெருமாள் பட்டன் பாகம்  ஒன்றும் பாரத்து / வாரிய கோத்திரத்து இஸூத்திரத்துக்கு ரோவி / கேசவ பட்டன் பாகம் ஒன்றும் ஹரிதகோத் / திரத்து _ _ _ ஸூத்திரத்து பிறையம்புரத்து சிவநாரா / யண பட்டன் பாகம் ஒன்று இவன் தம்பி / அருளாளப் பெருமாள் பட்டன் பாகம் ஒன்றும் காஸ்ய / ப கோத்திரத்து உருப்புட்டூர் இராமபிரான் பட்டன் / பாகம் ஹரித கோத்ரத்து இஸூத்திரத்து கோமபுறத்து பா / கம் ஒன்றே காலும் இவன் தம்பி முற்றுமாண்டான் _ _ _ / யும் _ _ _ இவன் மகன் திருவரங்கம் _ _ _ / இஸூத்திரத்து காரம்பி செட்டுதிருவேங் _ _ _ / யும் வஸிஷ்ட கோத்திரத்து இ ஸூத்திரத்து _ _ _ / ஒன்றும் இக் கோத்திரத்து இஸூத்திரத்து _ _ _ / பாகம் _ _ _ இ கோத்திரத்து இஸூத்திரத்து / _ _ _

    இக்குடியில் – இக்கோவிலில் பணிசெய்யும்; அல்லது இவ்வழியில், கோத்திரத்தில் வந்த (lineage) அல்லது இவ்வூரைச் சேர்ந்த.

    விளக்கம்: விக்கிரம பாண்டியனின் மெய்கீர்த்தி முதலில் இடம் பெறுகின்றது. அன்றைய திருமணிக்கயம் இன்று திருமாணிக்கம் ஆகிவிட்டது. மேற்கு திசையை குறிக்கும் மேல என்பது ஊருக்கு முன்னொட்டாகிவிட்டது. இதில் பிரமதேய நிலம் பெற்ற 22 பிராமணர் கோத்திரமும் பெயரும் இன்னார்க்கு இன்னார் உறவு என்பதும் தெளிவாகக் குறிக்கப்பட்டுள்ளது. 97 வரிகளுக்கு மேல் செல்வதாக இக்கல்வெட்டு உள்ளது. மன்னவர் கோவில் தமது எனக் கருதியதாலும் அதில் பணியாற்றுவோர் தமது பணியாளர் என்று கருதியதாலும் இவ்வாறு அளப்பரிய கொடைகளை ஈந்துள்ளனர் போலும். அடிமனையை வைத்து என்ன செய்வது? வீட்டை யார் கட்டித்தருவது என்ற கேள்வி எழுகிறது? ஆனால் கல்வெட்டு நடுநடுவே சிதைந்துள்ளதைப் போல இறுதியில் சிதைந்துள்ளதே!! அதனால் கற்பனையை கைவிடவேண்டியது தான். பிற பழங் கோவில்கள் போல இக்கோவிலை அண்டி ஆறு பாய்ந்தது கல்வெட்டில் குறிக்கப்பெறுகின்றது.

    Share
  • 40 குடும்பத்து 105 அடிமைகள் பற்றிய கல்வெட்டு – கொறுக்கை வீரட்டேசுவரர் கோயில்

    -சேஷாத்ரி ஸ்ரீதரன்

    நாகை மாவட்டம், மயிலாடுதுறை வட்டம், கொறுக்கை என்னும் தேவாரப் பாடல் பெற்ற தலம். இங்குள்ள வீரட்டேசுவரர் கோயில் மகாமண்டபம் வடக்கு சுவர் கல்வெட்டு. இது மூன்றாம் இராசராசனின் 19 ஆவதுஆட்சி ஆண்டில் (கி.பி. 1235) வெட்டிய கல்வெட்டு என்பது எழுதமைதியால் கணிக்கப்பட்டுள்ளது. இதில் மக்கள் குடும்பம் குடும்பமாக அடிமைகளாக கோவிலுக்கும் தனிஆள்களுக்கும் விற்றுக் கொண்ட செய்தி உள்ளது. இவர்களுக்குள்ள உறவுமுறையும் குறிக்கப்பட்டுள்ளது. இவர்கள் கடன்வாங்கி திருப்பி செலுத்த முடியாமல் ஓட்டாண்டி (திவால்) ஆகி அடிமைசெய்வாராக ஆனார்களா? அல்லது சாதி நீக்கி ஊராரால் ஒதுக்கப்பட்டு அடிமையாக வந்தார்களா? அல்லது ஏதேனும் நேர்த்திக்கடன் செலுத்த அடிமை ஆனார்களா? அல்லது கோவில் சலுகை ஒன்றைப் பெற அடிமை ஆனார்களா? இப்படி எந்த முடிவும் கொள்வதற்கு இடம் தரும்படியாக கல்வெட்டில் எந்த ஒரு துப்பும் இல்லை. சிலர் இறைவனுக்கு அடிமையாய் தாமே ஒப்புக்கொண்டவர், விலைக்கு விற்றுக் கொண்ட அடிமைகள் சிலர், இன்னும் சிலர் விலைக்கு வாங்கி தானம் கொடுக்கப்பட்ட அடிமைகள்.

    இதற்கும் முற்பட்ட இரண்டாம் இராசாதிராசன், மூன்றாம் குலோத்துங்கன் காலத்தில் அடிமையானோரும் இக்கல்வெட்டின் பிற்பகுதியில் குறிக்கப்படுகின்றனர். விந்தையாக இந்த அடிமைகளின் பெயர்களை உற்று நோக்கும் போதும்; இதில் குறிக்கப்பட்டுள்ள அகமுடையாள் என்ற பிராமணர் வீட்டில் புழங்கும் சொல்லையும் நோக்க இந்த அடிமைகள் பலரும் பிராமண குடும்பத்தவர் என்று தெரிகின்றது. சில அரசுகுடியோர் பெயரும் இடம்பெறுகின்றது. இணைப்பில் உள்ள 2/1994 கல்வெட்டின் இறுதியில் சில பிராமணர்கள் கையொப்பம் இட்டுள்ளனர். அதைக் கொண்டு இவர்கள் பிராமணர் என முடிவுகட்டப் பட்டது. கல்வெட்டு பாடத்தை படிக்கும் முன் அதன் கீழே கொடுக்கப்பட்டுள்ள வரிக்குவரி விளக்கத்தை படித்தால் இதன் பொருளை நன்றாக தெரிந்து கொள்ளலாம். பின்பு கல்வெட்டு பாடத்தை படித்தால் எளிதாக பொருள் புரியும். 

    கல்வெட்டு பாடம்:

    1. ஸ்வஸ்திஸ்ரீ திரிபுவனச் சக்கரவத்திகள் ஸ்ரீஇராஜராஜ தேவற்கு யாண்டு பத்தொன்பதாவது விருதராஜ பயங்கர [வளநாட்டுக்] குறுக்கை நாட்டுத் திருக்குறுக்கை உடையார் திருவீரட்டானமு[டை]யார் மூலபிருத்தியரான சண்டேசுர தேவ[ற்]கு [திருவாய்மொழிந்]தருளின திருமுகப்படி பெற்ற அடிமைக்கும் பலர் பக்கலும் விலைகொண்ட அடிமைக்கும் தானத்தால் பெற்ற அடிமைக்கும் கல்வெட்டினபடி திருமுகப்படி  ஆழ்வாரடிமையாய் பெற்ற ஆச்சபிடாரன்,  இவன்  அகமுடையாள் சோழி. இவன் மகன் எழுவடியான் இவந் தம்பி தேவன் இவன் தம்பி திருவெண்காடு டையான் இவந் தம்பி வள்
    2. ளல். இந்த ஆச்சபிடாரன் மகள் ஆளுடையாள். இவள் மகன் திருவெண் காடுடையாந் இவந் தம்பி மணவாளன். இவந் தங்கை ஆண்ட நங்கை இவள் தங்கை செல்வம். வீரவிநோதவேளான் இவந் தம்பி சிங்க பிரான். இவன் தங்கை மண்டையாண்டி அழ[கி]யாந் மகந் வ _ _ _ [த]ங்கை செல்வம். இவள் மகன் பெருமாள். இவன் தங்கை ஆண்டாள். சிவசரணத்தின் அகமுடையாள் மண்டை இவள் மகந் பெருங்காடந் இவந் தம்பி வேங்கடம் இவந்தம்பி வள்ளல் இவந் தங்கை பெற்றாள். இவள் _ _ _  உடையாந் இவன் தங்கை பெரியாள். இந்தப் பெருங்காடந் சிறிய தாய் ஆழ்வா நங்கை. இவள் மகந் வடையாந் இவந்தம்பி பெருமாள். இவந் தங்கை பெரியாள். இவள் மகள் ஆண்டாள் இ
    3. ப்பெரியான் தங்கை செல்வம். இவள் ம[க்]கள் உமையாண்டாள் சீவேதவனப் பெருமாள் நங்கை. இச்செல்வத்தின் தங்கை பொற்சாத்தி. தாழஞ்சேரிக் கம்பந் மருமகன் திருவீரட்டானமுடையான். கோவிந்தன் ஆச்சபிடாரன் உடப்பிறந்தாள் நாராயணி. இவள் மகள் செல்வம். இவள் மகந் திருவெண் காடுடையாந். இவந்தம்பி செல்வந் இவந்தம்[பி உய்]யவந்தாந் இவந் தம்பி இருள்நீக்கி. கவிணிந உத்தம சோழந் சூரிய தேவர் தாநம் பண்ணி[னபே]ர், ஆடவலாந் கொத்தில் செல்வி. இவள் மக்கள் இவள் தங்கை பெற்றாள் கொத்து. இவள் தங்கை திருச் சிற்றம்பல முடையாள். சடையன் அகமுடையாள் செல்லகொத்து. வெண்ணைக் கூத்தந் அகமுடையாள் பெருங்காடி. மகந் கோவிஞ்சி கொத்து இவள் தங்[கை] மந்றமுடையாள் கொத்து. இவ
    4. ள் தம்பி திருச்சிற்றம்பலமுடையாந். நாற்பத்தெண்ணாயிரம் பிச்சந் அகமுடையாள் நங்கை கொத்து. சந்திரந் அ[க]முடையாள் திருவிந் கொத்து. கீர்த்தி நாராயணஞ் சிங்கப் பிராந் பக்கல் தாநத்தால் பெற்ற சந்திரசேகர திருவெண்காட்டு நங்கை. இவள் மகந் சோறுடையான் இவன் தங்கை பெற்றாள். கவிணியன் சூரியதேவந் தெக்ஷணாமூர்த்தி பக்கல் விலை கொண்டுடைய பெருங்காடனந் கெங்கை இவன் மகந் திருச்சிற்றம்பல முடையாந் பெருங்காடி பாரத்துவாஜி. தில்லை நாகந் பெரியநம்பி பக்கல் கொண்டுடைய வீரட்டந் சொறி. இவள் மகந் பிடாரந் தவுமியந் வெண்காடு தேவந். சோமாசி _ _ _ மா[றனும்], கண்ணுவநந் கருமாணிக்கம் சீரிளங்
    5. கோ பட்டநும் பக்கல் கொண்ட வீரட்டந் பெற்றாள். கவிணியந் சூரிய தேவந் திருச்சிற்றம்பல முடையாந் பக்கல் விலை கொண்ட பெருங்காடந் சோறுடையான். தவுமியந் வெண்காடு தேவந், திருச்சிற்றம்பல முடையாந் பட்டசோமாசியார் பக்கல் கொண்ட தத்தபட்டன்திரு. இவள் மகந் அற்ப சந்தோஷி வீரட்டந் இவந் தங்கை ஆண்டமை. பிரமதேச ராஜராஜச் சருப்பேதி மங்கலத்து பாரத்துவாஜி திருவிக்கிரமனும், இவந் தம்பி உ[மா சகி]தந் திருச்சிற்றம்பல முடையானும் பக்கல் கொண்டுடைய கூத்தாடி சூற்றிய தேவி இவள் மகள் மண்டையாண்டி. இவள் தம்பி கண்ணந் இவள் தங்கை
    6. பெற்றாள். இவந்தம்பி இராம தேவந். இவந் தங்கை உமையாண்டாள் இவள் தம்பி திருநட்டப் பெருமான். பெற்ற கோவில் சோழ விழுப்பரையன் பக்கல் கொண்ட கேசவந் சீ _ _ _ _. இவன் மகந் பெற்றாந் கேசவந் வேதம் உடைய பிரான். இவன் தங்கை அவையம் புக்காள் இ _ _ _ _ கள் கூத்தாடி நங்கை. இவன் தங்கை _ _ _ க்குடுத்தி. திருமங்கலத்து அரயந் அரயந் நாகந் பிள்ளையாழ்வாந்நாந குலோத்துங்க சோழக் கெணியாத ராயர் பக்கல் விலை கொண்ட அரயந் உடையாண்டி. இவள் மகள் அம்மச்சி. நித்தந் திருவடியும், நித்தந் சிங்கனூரானும் பக்கல் கோயில் கொண்டு இவன் பக்க
    7. ல் பெற்ற நித்தந் னம்பி. இவந் தம்பி சிங்கப்பிரான். தவுமியந் வெண்காடு தேவந், ஆதித்த தேவந் பக்கல் கொண்ட வீரட்டந் சோறுடையாள். இவள் மகள் ளாசு பாரத்துவாசி. இரவிதாஸந் சக்கரபாணி, பிராம்மணி வாழ்வி தாட்சானி பக்கல்   கொண்ட பிராந்தக தேயந் ஸ்ரீகிருஷ்ணந். திரிபுவன சக்கரவத்திகள் ஸ்ரீ குலோத்துங்க சோழ தேவற்கு யாண்டு ஒன்பதாவது கவினிய நாகனூர் ஆதி சண்டேசுர தேவர்கு விற்ற அடியாள் ஆவாள். இவ்வூர் கவுணியன் சூரிய தேவன் திருச் சிற்றம்பல முடையான் பக்கல் விலை கொண்டுடையநாய் இத்தேவர் சிவநாமத்து இக்கவிணியன் நாகனூரன் சூற்றி பெருங்காடி பின்பு இவன் பெற்ற மகள் உ  
    8. டையள். இவன் தங்கை பெரியாள். இவள் தம்பி சூற்றி. இவன் தங்கை சோறாண்டி. இவன் தம்பி தியம்பகன்.இ பெண்களில் பெரியாள் மகன் சூற்றி. இஎவாண்டை நாளில் வரகூரான ஜயஸிம்ஹ குலகாலச் சருப்பேதி மங்கலத்து காஸ்யபந் தவதேவிசந் _ _ _ _ பட்டநாந அருமாரி நம்பி  ஆதிசணேடேசுவர தேவற்க்கு விற்றுக் குடுத்த அடிமையாளாவாள் பொற்ப்பா _ _ _ யும், இவள் மகள் உய்யவந்தாளும். இவள் தங்கை செல்வமும் [கல்வெட்டு எண் 2] திரிபுவநச் சக்கரவத்திகள் ஸ்ரீ ராஜாயிராஜ தேவற்கு யாண்டு ஏழாவது நாளில் விருதராஜ பயங்கர வளநாட்டுக் குறுக்கை நாட்டு ஆற்றூராந ராஜநாராயணச் சருப்பேதி மங்கலத்து திருபுவன மாதேவிச்சேரி குரவிசிரின வீரட்டந்
    9. பிராமணி உய்ய வந்தாள் சாநி கோமுத்தந் மகன் குரவிநாராயண பட்டநை முதுகண்ணாகக் கொண்டு இவ்வுய்யவந்தாள் [சா]நி பக்கல் காசு 60 காசு அறுபதுக்கு  விலைகொண்ட நங்கை மகள் அம்மையாண்டாள். இவள் மகள் பெரியாண்டாள் இவள் தங்கை நித்த[கல்யா]ணப் பிச்சந் _ _ _ _ இவள் தங்கை குளுந்தாள், இவ[ள்] தங்கை னங்கை. திரிபுவநச் சக்கரவத்திகள் ஸ்ரீ குலோத்துங்க தேவற்கு யாண்டு பத்தாவது செயங்கொண்டு சோழ வளநாட்டு விளைநாட்டு விளைநகரான நித்த விநோதச் சருப்பேதி மங்கலத்துப் பாலாசிரி[ய]ந் இளைய சங்[கர]ச் சிவனும், இவந் பிந்நோ நாத்தமையன் மகந் சிவந் சங்கரநும் பக்கல் பத்தொந்பது காசுக்கு விலைகொண்ட [அடிமை] அரை
    10. யா நாகமுடையாள். இவள் மகள் சோறுடையாள் செல்வி. இவள் மகள் சோறுடையாள் சீதேவி நங்கை. இவள் மகள் சோறுடையாள் ஆழ்வாந் நங் _ _ _ _ ள் மகன் சோறுடையான் பெருங்காடன். இவன் மகன் சோறுடையாந் புற்றிடங் கொண்டான்.

    ஆழ்வாரடிமை – இறைஅடிமை; அகமுடையாள் – மனைவி (பிராமணர் வழக்கு); பட்டன் – சமஸ்கிருத அறிஞனான வேத பிராமணன்; வேளான் – அரசன், அரசமரபினர்; பிடாரன் – ஆசிரியர், மருத்துவர்; பக்கல் – சார்பாக, on behalf; சாநி – பிராமணப் பெண் பெயர்ப் பின்னொட்டு; முதுகண் – supervisor, caretaker, கங்காணி; 

     

    விளக்கம்: 1 – 2 வரிக்கு > பிராமணன் ஆச்சபிடாரன் குடும்பம் அவன் மகள் குடும்பம் என இரு குடும்பத்தில் பேரன், பேத்திகள் உட்பட 7 ஆடவர், 4 மகளிர் இறைவனுக்கு தம்மை அடிமை ஆக்கினர். வீரவிநோத வேளான் அரசகுடியினர் ஆவார். இவரது பேரன், பேத்திகள் உட்பட இரு குடும்பத்தில் 4 ஆடவர், 3 பெண்கள் தம்மை இறைவனுக்கு அடிமை ஆக்கினர். பிராமணர் சிவசரணத்தின் பேரன் பேத்திகள் உள்ளிட்ட 5 குடும்பத்து உறவினர் 6 ஆடவர், 9 மகளிர் தம்மை இறைவனுக்கு அடிமை ஆக்கினர்.

    விளக்கம்: 3 – 4 வரிக்கு > 1 மருமகன். பிராமணர் ஆச்சபிடாரன் உடன்பிறந்தாள் பேரன், பேத்தி உட்பட 3 குடும்பத்து 5 ஆடவர் 2 மகளிர் தம்மை இறைவனுக்கு அடிமை ஆக்கினர். சூரியதேவர் தானமாகக் கொடுத்த அடிமைகள், கொத்தில் செல்வி குடும்பத்தில் 3 மகளிர். சடையன் மனைவி ஒருத்தி. வெண்ணைக் கூத்தன் 2 குடும்பத்தில் 2 ஆடவர், 2 மகளிர். நாற்பத்தெண்ணாயிரம் பிச்சன் மனைவி குடும்பத்தில் இருவர். சந்திரன் குடும்பத்தில் மனைவி ஒருத்தி. சிங்கப் பிராந் சார்பாக ஒரு குடும்பத்து 1 ஆண், 2 மகளிர் தானமாகத்  தரப்பட்டனர். தக்ஷிணாமூர்த்தி சார்பாக விலை கொடுத்து பெற்ற ஒரு குடும்பத்து பிராமண அடிமைகள் 2 ஆடவர். பெரியநம்பி சார்பாக விலைக்கு பெற்ற அடிமை ஒரு குடும்பத்து 1 ஆண், 1 பெண்.

    விளக்கம்: 5 -6 வரிகள் > சோமாசி & கண்ணுவந் ஆகிய இருவர் சார்பாக விலைக்கு வாங்கிய ஒரு குடும்பத்து அடிமை 1 ஆண். கவிணியன் விலையால் கொண்ட ஒரு குடும்பத்து அடிமை 1 ஆண். பட்டசோமாசியார் சார்பாக விலைக்கு பெற்ற ஒரு குடும்பத்து பிராமண அடிமைகள் 2 ஆடவர், 1 மகளிர். பிராமணர் திருவிக்கிரமன், தம்பி உமாசகிதன் இருவர் சார்பில் ஒரு குடும்பத்து 4 ஆடவர், 3 மகளிர் விலைக்கு வாங்கப்பட்டனர். அரசகுடி விழுப்பரையன் விலையாகக் கொண்ட 2 குடும்பத்து அடிமைகள் 3 ஆடவர், 2 மகளிர். அரசகுடி அரயன் பிள்ளையாழ்வான் ஒரு அரசகுடும்பத்து அடிமைகளான 2 பெண்ணை விலைக்கு வாங்கினான்.

    விளக்கம்: 7 – 8 வரிகள் > நித்தன்திருவடி & சிங்கனூரன் இந்த இருவர் சார்பாக கோயில் பெற்ற அடிமைகள் ஒரு குடும்பத்து 2 ஆண்கள். தவுமியன் & ஆதித்தன் இந்த இருவர் சார்பாக பெற்ற அடிமை ஒரு பிராமண குடும்பத்து 2 பெண்கள். சக்கரபாணி & பிராம்மணி என்ற பிராமணர் சார்பாக 1 குடும்பத்து அடிமை 1 ஆண். இதற்கு முன்பு மூன்றாம் குலோத்துங்கன் 9 ஆம் ஆட்சி ஆண்டில் (கி.பி.1187) விலைக்கு வாங்கி இறைவனுக்கு உரிமையாக்கி விடப் பட்டவர் குறிக்கப்படுகின்றனர். நாகனூர் கவுணியன் ஒரு குடும்பத்து ஒரு பெண்ணை இறைவனுக்காக விற்றான். சூரியதேவன் சார்பாக பெற்ற அடிமை 2 குடும்பத்து 5 ஆடவர், 2 மகளிர் ஆவர். அருமாரி நம்பி இறைவனுக்கு விற்றுக் கொடுத்த அடிமை 1 குடும்பத்து 3 மகளிர் ஆவர்.

    விளக்கம்: 9 – 10 வரிகள் > இரண்டாம் இராசராசனின் 7 ஆம்ஆட்சி ஆண்டில் (கி.பி. 1153) பிராமணி சாநி சார்பாக கோவிலுக்கு தானமளிக்க அவள் மகன் மேற்பார்வையில் 1 குடும்பத்து 5 மகளிர் 60 காசுக்கு வாங்கப்பட்டனர். மூன்றாம் குலோத்துங்கன் 10 ஆம் ஆட்சி ஆண்டில் (கி.பி. 1188) பாலாசிரியன் & சங்கரசிவன் சார்பில் 19 காசுக்கு 3 குடும்பத்து 2 ஆடவர், 3 மகளிர் விலைக்கு வாங்கப்பட்டு கோவிலுக்கு தானமாக கொடுக்கப்பட்டனர்.

    ஆக நான்கு வெவ்வேறு காலங்களில் மூன்று வேந்தர் ஆட்சியில் 40 குடும்பத்து 48 ஆடவர், 57 மகளிர் என 105 அடிமைகள் கோவிலுக்கு தம்மைத் தாமே தானமாகத் தந்தும், பிறரால் பணம் கொடுத்து வாங்கப் பெற்று கோவிலுக்கு தானமாகத் தரப்பட்டவர்களும் ஆவர். இந்த அடிமைத்தனம் ஏதோ ஒரு நம்பிக்கையின் காரணமாக நடந்தேறியதாகவே தோன்றுகிறது. எண்ணிப் பார்க்கையில் சிறுபிள்ளை விளையாட்டாகவே உணரமுடிகிறது. ஆனால் பலரும் இக்கல்வெட்டுகளை பலவராகப் புரிந்துகொண்டு திட்டிதீர்த்து வெறுப்பை உமிழ்கிறார்கள்.

    பார்வை நூல்: தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள், பக். 202-205, 2004, தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை வெளியீடு, எழும்பூர், சென்னை – 8.

    Share
  • வலங்கை இடங்கை குறிக்கும் கல்வெட்டு

    சேசாத்திரி

    வலங்கை இடங்கை குறிக்கும் கல்வெட்டு

    தமிழ்நாட்டின் நடுநாடாம் பெரம்பலூர் வட்டம் அசூர் ஊரில் உள்ள அருள்மிகு சொக்கநாதசுவாமி கோவில் முன்மண்டபம் தெற்கு அதிட்டாணம் ஜகதி. 6 வரி கல்வெட்டு.

    1. ஸ்வஸ்திஸ்ரீ ஸகாப்தம்1350 இதன்மேல் செல்லா நின்ற சௌம்ய வருஷம் மார்கழி மாதம் 27 நாள் த்ரயோதஸியும் சனிக்கிழமையும் பெற்ற மூலத்து நாள் திருச்சிராப்பள்ளி உசாவடியில் கரிகால கன்ன வளநாடு ஆன வன்னாட்டு வெண்பாற் நாட்டில் அசுகூரில் வலங்கை தொண்ணூற்று எட்டும் இடங்கை தொண்ணூற்று எட்டும்
    2. நிறைவற நிறைந்து குறைவறக் கூடி உடையார் சொக்கநாத நயினார் கோயிலில் திருக் கட்டளையில் கல்வெட்டினபடி இந்த நாட்டுக்கு பூறுவம் மற்ற மரியாதி பயிர்வழி கடமை இறுக்கும் இடத்து நன்செய்க்கு பாழ், சாவி கழித்து பயிர் கூடின நிலத்துக்கு வேலி ஒன்றுக்கு அன்பது பணமும் புன்செய் வரகு கேழ்வரகுக்கு பாழ் சாவி கழித்து பயிர் கூடின நிலத்திலே
    3. பத்தில்லொன்று கழித்து பயிர் கூடின நிலத்துக்கு வேலி ஒன்றுக்கு இருபத்து அஞ்சு பணமும் இளவரிசை ஆன பல பயிருக்கும் இளவரிசைத் துண்டம் கால்வாசி கழித்து பயிர் கூடின நிலத்திலே பத்தில் ஒன்று கழித்து பயிர் கூடின நிலத்துக்கு வேலி ஒன்றுக்கு இருபத்து அஞ்சு பணமும் வான்பயிர் ஆன செங்கழுநீர் கரும்பு கொழுந்துக்கு நூறு குழிக்கு
    4. அஞ்சு பணமும் வாழை மஞ்சள் இஞ்சிக்கு நூறு குழிக்கு இரண்டரைப் பணமும் கமுகு தென்ன மரத்துக்கு தலை கூடின முதலிலே மரம் ஒன்றுக்கு அரைக்கால் பணமும் ஆட்டைக்  காணிக்கைக்கு இருநூற்று இருபது பொன்னும் மகமை தலையாரிக்கத்துக்கு எண்பது பொன்னும் பட்டடைக் குடிஆன செட்டிகள், கைக்கோளர், சேனை கடையார், வா
    5. ணியர் பேற்கு பேர் ஒன்றுக்கு இரண்டரைப் பணமும் இடையர், வலையர், கண்மாளர் குடிமக்கள் பறையர் பேற்கு பேர் ஒன்றுக்கு இரண்டு பணமும்  புன்பயிற் செய்தால் புனத்துக்கு  ஒரு பணமும்  இம்மரியாதி இம்முதல் குடுக்க கடவோமாகவும் இது ஒழித்து வேறு புறமுதல் புதுவரி என்று குடுக்க கடவோம் அல்லவாகவும்
    6. இப்படிக்கு இந்த கல்வெட்டுப்படி செய்யாமல் இருந்தோர்க்கு உடன்பட்டு கல்வெட்டை அழித்து செய்வார்கள் உண்டானால் அவர்களைத் தீர விளங்கி மேற்படக் குத்தி கீழ்ப்பட இழுத்துப்போடக் கடவோம் ஆகவும் இந்த கல்வெட்டை அழித்தவர்கள் கெங்கைக் கரையிலே கபிலையைப் கொன்ற பாபத்திலே போகக் கடவர்கள் ஆகவும் ஸுபமஸ்து.

    விளக்கம்:

    விஜயநகரம் இரண்டாம் தேவராயர் ஆட்சிக் காலத்தில் கி.பி. 1428 இல் வெட்டிய கல்வெட்டு. திருச்சிராப்பள்ளி உசாவடியில் கரிகால கன்ன வளநாடு ஆள வன்னாட்டு வெண்பாற் நாட்டில் உள்ள அசுகூரான அசூரில் உள்ள சொக்கநாத சுவாமி கோயிலில் கூடிய வலங்கை 98 சாதிகளும், இடங்கை 98 சாதிகளும் குறைவின்றி நிறைவே நிறைந்தவராய் தாம் அரசுக்கு செலுத்த வேண்டிய பயிர்க் கடமை(வரி), பல இனத்தார் செலுத்த வேண்டிய பல வரிகள் குறித்து இக் கல்வெட்டு கூறுகிறது.

    நன்செய் பயிரில் பாழும் உமி மட்டும் உள்ள சாவியைத் தவிர்த்து வளர்ந்த பயிரில் வேலி ஒன்றுக்கு ஐம்பது பணமும், வரகு கேழ்வரகு விளையும் புன்செய் பயிரில் வீணாகிய பாழ், உமி ஆகிய சாவி தவிர்த்து வளர்ந்த பயிரில் பத்தில் ஒன்று 1/10 கழித்து வேலி ஒன்றுக்கு 25 பணமும் இவற்றுக்குக் கீழான இளவரிசை துண்டில் 4 ல் 1 பங்கான கால்வாசி கழித்து, மேலும் 10 ல் 1 பகுதி கழித்து, வேலி ஒன்றுக்கு 25 பணமும் வானாவாரி பயிருக்கு 100 குழிக்கு 5 பணமும், வாழை மஞ்சள் இஞ்சி க்கு 100 குழிக்கு 2-1/2 பணமும், முதல் குருத்து விட்ட கமுகு, தென்னை மரங்களுக்கு மரம் ஒன்றுக்கு அரைக்கால் பணமும் தரவேண்டும். ஆண்டு காணிக்கைக்கு 220 பொன்னும், மகமை என்னும் கோவில் வரி, தலையாரிக் காவல் வரிக்கு 80 பொன்னும் தரவேண்டும். பட்டடைக் குடிஆன செட்டிகள், கைக்கோளர், சேனை கடையார், வாணியர் ஒருவர்க்கு இரண்டரைப் பணமும் இடையர், வலையர், கண்மாளர், பறையர் ஒருவர்க்கு இரண்டு பணமும் புன்செய் பயிர் செய்தால் புனத்து 1 பணமும் தரவேண்டும். இவை தவிர்த்து வேறு எந்தப் புது வரியும் செலுத்த வேண்டாம்.

    இந்த ஏற்பாட்டிற்கு உடன்படாமல் கல்வெட்டை அழிப்பவர்களை நன்றாக வாட்டி வதைத்து, தலையில் குத்தி, கீழே இழுத்துப் போடுவோம் என்று எச்சரிக்கின்றனர். வலங்கை இடங்கையில் இடம்பெறாமல் இருப்பதால் தான் செட்டிகள், கைக்கோளர், சேனை கடையார், வாணியர், இடையர், வலையர், கண்மாளர், பறையர் என்போர் தனித்துக் காட்டப்பட்டார்களோ அல்லது இவர்கள் ஊழியத் தொழில் ஆற்றுவோர் என்பதால் இவர்கள் குறைவான வரி செலுத்தினால் போதும் என்று தனியே காட்டப்பட்டார்களா?

    மொத்தத்தில் இக்கல்வெட்டில் பறையர் பிற சாதிமாரோடு சரிநிகராக வைக்கப் படுவது, 15 ஆம் நூற்றாண்டில். இவர்கள் தாழ்த்தப்படவோ, ஒடுக்கப்படவோ இல்லை. தீண்டாமைக்கு ஆட்படவும் இல்லை எனத் தெரிகின்றது.

    பார்வை நூல்:

    தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள், தொகுதி III பக்கம் 15, 2010, தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை வெளியீடு

    Share