Tag: சேஷாத்ரி ஸ்ரீதரன்

  • கைக்கோளர் படை

    கைக்கோளர் படை

    சேஷாத்ரி ஸ்ரீதரன்

    கைக்கோளர் என்போர் இந்நாளில் செங்குந்த முதலியார் என அறியப்படுகின்றனர். அண்மைக் காலம்வரை தறி நெசவு இவர்க்குத் தொழிலாய் இருந்துள்ளது. ஆனால், பல்லவர் ஏற்படுத்திய  இந்த சாதிமார் ஒரு படைக்குடி ஆவர். கல்வெட்டில் இவர்கள் பட்டடைக்குடி எனத் தெளிவாக குறிக்கப்பட்டுள்ளது.  ‘குந்தம்’ என்பதற்கு வேல் என்ற பொருளே இதற்கு சான்று. கள்ளர் படை, மறவர் படை என்பது போல 12 ஆம் நூற்றாண்டு வரை கைக்கோளப் படை என்று தனியாகவே இருந்துள்ளது. இப்படி போர்க்குடிகளாக இருந்த இவர்கள் சைவ சமய எழுச்சியின் காரணமாக அதன்பால் மிக்க ஈடுபாடு கொண்டதனாலும், இவர்கள் நம்பி இருந்த பல்லவர்கள் வேந்தர் என்ற நிலையும் மன்னவர் என்ற நிலையும் இழந்து அரையர்களாக, கிழார்களாக சிதறுண்டு போனதன் காரணமாகவும் போர்த் தொழிலை விட்டு வணிகத்தைப் பிழைப்பாக மேற்கொண்டனர்.  இதாவது, நெய்த ஆடைகளை விற்பதைத் தொழிலாக மேற்கொண்டனர். ஆனாலும் கைக்கோளர் சிலர் மட்டும் பல்வேறு ஆட்சியாளரிடம் படைத்தலைவர்களாகவும் படைஆள்களாகவும் தொடர்ந்து வேலை செய்தனர். இப்படி தொழில் மாறி பிழைப்பு மேற்கொண்டாலும் அதிக வரி, பிற மொழித் துணி வணிகரின், சிறப்பாக சௌராட்டிரர், பத்மசாலி ஆகியோரின் தொழிற் போட்டி ஆகியன இவர்களை வறுமையின் பிடிக்குத் தள்ளியது.  இவற்றுக்கும் சான்று கல்வெட்டுகளில் உண்டு.

    கைக்கோளரைப் போலவே சேனைக்கடையார், செட்டியார், வாணியர் போன்ற போர்க்குடிகளும் போர்த் தொழிலை விட்டுவிட்டு வணிகத்தை மேற்கொண்டனர். கைக்கோளர் படைத்தொழிலை விட்டதுமுதல் பல்லவர் ஆட்சி போலவே சோழர் ஆட்சியும் விரைந்து சரிந்தது. அதன்பின் வடக்கே இருந்து இசுலாமியப் படையெடுப்பு, விசயநகர படையெடுப்பு ஆகியவற்றால் தமிழராட்சி அறவே தொலைந்து போனது.  அரையர்கள் பலரும் பல்லவர் வழிவந்தவர் என்ற வகையில் கூட்டரசை (confederacy) அமைத்திருக்க முடியும். ஆனால் படை ஆளுக்கு எங்கே போவது? பட்டடைக்குடி சாதிகள் படைத்தொழிலை விட்டதனால் அதற்கும் வழி இல்லாமல் போனது. உண்மையில், வட தமிழ்நாட்டில் தமிழர் படை சுருங்கிப் போயிருந்தது. சம்புவராயர் ஆட்சியும் குறுகிய காலத்தில் வீழ்ந்ததற்குத் தம் படையை மேலும் பெருக்க முடியாமல் போனதே முதற் காரணம் ஆகும்.

    ஒரு தொழிலைச் செய்யும் ஒரு கூட்டத்து மக்கள் அத்தொழிலை விடுத்தால் மாற்று ஏற்பாடாக வேறு ஒரு கூட்டத்தாரை அத்தொழிலில் ஈடுபடுத்திச் சமூகத்தில் தொழில் சம நிலையைப் பேண வேண்டும். ஒரே தொழிலில் அதிகம் பேர் ஈடுபட்டாலோ அல்லது ஒரு தொழிலில் தேவைப்படும் பணிஆள்களில் பற்றாக்குறை ஏற்பட்டாலோ தொழிற் சமநிலை இழப்பு ஏற்படும்.  அதனால் தான் பண்டு ஒரு தொழில் செய்தவர் மாற்று தொழில் மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டதில்லை. அதனால் தொழில் அடிப்படையில் சாதிகள்  உண்டாயின என்பது உண்மைதான். வேந்தர் அனுமதித்தால் சில தனிஆள்கள் மட்டும் தொழில் மாறலாம் மற்றபடி அது பொதுவான வழக்கம் அல்ல. கைக்கோளரைத் தொழில் மாறவிட்டதன் விளைவாக தமிழக வரலாற்றில் பிற மொழியாளருக்கு அடிமைப்படும் அளவிற்கு தன்னாட்சியை மாபெரும் விலையாகத் தமிழகம் கொடுத்தது ஒருவரலாற்றுப் பிழையே. அந்த மாபெரும் பிழையால் தமிழகம் வந்து புகுந்த அயலவர் பொன்னான வாழ்வு பெற்றுவிட்டார்கள்.  இந்த வரலாற்று உண்மைகளைத் தெளிவுபடுத்தவே கீழ்க்காணும் கல்வெட்டுகளின் விளக்கம்.

    தஞ்சை மாவட்டம், கும்பகோணம் வட்டம், திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோவில் கருவறை தென் சுவரில் பொறித்த 7 வரிக் கல்வெட்டு.

    ஸ்வஸ்தி ஸ்ரீ கோப்பர / கேசரி பந்மற்கு யா / ண்டு 2 ஆவது சிங்க ளாந்தக தெரிந்த கைய் / கோளரிற் முத்தி திருநா / [ரணன்] குடு[த்]த வாள் ஸ்ரீ க / ண்டம் கோத்த செ[ம்]முனை வாள்  1.

    தெரிந்த கைக்கோளர் – திறவாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட கைக்கோளர், chosen or selected as skillful; ஸ்ரீகந்தம் – சந்தனம்; கோத்த – பதித்த; செம்முனை –செங்குறுதி தோய்ந்த முனை.

    விளக்கம்: முதற் பராந்தகன் மகன் அரிஞ்சயனின் 2 ஆம் ஆட்சி ஆண்டினதாக கருதப்படும் இக்கல்வெட்டில் பராந்தகனின் பெயரான சிங்களாந்தகன் என்ற பெயரினைத் தாங்கிய தேர்ந்தெடுத்த கைக்கோளப்படையைச் சேர்ந்த முத்தி திருநாரணன் என்பவன் சந்தனக் கைப்பிடியில் பதித்த குறுதிக்கறை படிந்த முனை உள்ள வாள் ஒன்றினை இறைவனுக்கு கொடுத்தார்.

    சோழர்கள் முற்று முழுதாக கைக்கோளரை மட்டுமே கொண்ட திறவாளராக பார்த்துத் தேர்வு செய்யப்பட்ட கைக்கோளப் படை ஒன்றை பேணினர் என்று இதனால் தெரிகின்றது.

    பார்வை நூல்: தென்னிந்தியக் கல்வெட்டுகள், தொகுதி 19, பக். 3. A.R.No 244 of 1907.

    தஞ்சை மாவட்டம், கும்பகோணம் வட்டம், திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோவில் கருவறை தென் சுவரில் பொறித்த 6 வரிக் கல்வெட்டு.

    1. ஸ்வஸ்தி ஸ்ரீ கோப்பர கேசரி பந்மற்கு யாண்டு 2 ஆவது திருவிடை மருதில்
    2. ஸ்ரீமூலஸ்தாநத்தில் பெருமான்அடிகள் கோவிலில் பெரியமண்டபத்தில் முன்
    3. பில் திருப்பலகணியும் திருக்கதவும் நிலையும் படியும் கைக்கோளப் பெரும்படை
    4. யோமினால் சமைப்பித்து எங்கள் ஆச்சமார் திகைஆயிரத்தைஞ்ஞூற்றுவர் தம்
    5. பேர் சாத்தினமையில் இந்த தர்மம் திகைஆயிரத்துஅஞ்ஞூற்றுவர் ரக்ஷை.
    6. இந்த தர்மத்தினை ரக்ஷித்தார் ஸ்ரீ பாதம் எங்கள் ஸிரத்தின்.

    பெருமானடிகள் – வேந்தர், இறைவன்; பலகணி – சன்னல்; சமைப்பித்து – உருவாக்கி; ஆச்சமார் – ஆசான்கள், ஆசிரியர்கள்; சாத்தின – சூட்டிய

    விளக்கம்: முதலாம் இராசேந்திரச் சோழனின் 2 ஆம் ஆட்சி ஆண்டில் (பொ.ஊ. 1014) திருவிடைமருதூர் மூலவர் அமைந்த கருவறைப் பெரியமண்டபத்தின் முன்புறத்தில் சன்னலும், கதவும், வாயில் நிலையும், படியும் கைக்கோளப் படையினர் ஏற்படுத்தி அதற்கு தமது சண்டைப் பயிற்சி ஆசான்களான திசைஆயிரத்துஐநூற்றுவர் பெயரை வைத்து கொடுத்தனர். இதனால் இத்தருமத்தை திசை ஆயிரத்து ஐநூற்றுவர் தான் காத்திடவேண்டும். இத்தருமத்தை காத்தவர் பாதம் எங்கள் தலைமேல் படுவதாக என்று கல்வெட்டி உள்ளனர் கைக்கோளர்.

    திசைஆயிரத்து ஐநூற்றுவ வணிகர் தம் பாதுகாப்பிற்கென்று தனிப் படை வைத்திருந்தனர் போலும். அதில் இருந்த திறம்மிக்க பயிற்சியாளர்கள் இக் கைக்கோளப் படைக்கும் பயிற்சி தந்துள்ளனர் என்று தெரிகின்றது. ஆச்சமார் பன்மைச் சொல் என்பதை நோக்கி இப்படித் தான் பொருள் கொள்ள வேண்டும்.

    பார்வை நூல்: தென்னிந்தியக் கல்வெட்டுகள், தொகுதி 19, பக். 3. A.R.No 253 of 1907.

    வடஆர்க்காடு மாவட்டம், வேலூர் வட்டம், அகரம் கிராமம் பெருமாள் கோவில் 14 வரிக் கல்வெட்டு.

    1. சுபமஸ்த்து சுவஸ்த்தி ஸ்ரீ மனு மகாமண்டலேசுவரனு ஹரிராய விபாடன் பாசைக்குத் தப்புவராயர் கண்டன் மூவராய கண்டன் கண்டநாடு கொண்டு கொண்டநாடு குடாதன் பூர்வ்வ தட்சிண பச்சிம உத்திர ஸமுத்திராபதி கஜவேட்டை கண்டருளிய மல்லிகார்சுன மஹாராயர் பிரித்திவிராச்சயம் பண்ணி அருளா நின்ற சகாப்தம் 1391 –ல் மேல் செல்லா நின்ற விரோதி வருஷம் மகரநாயற்று பூர்வ்வபச்சத்து பஞ்சமியும் சனிவாரமும் பெற்ற திருவோனத்து நாள்
    2. ஜெயங்கொண்ட சோழமண்டலத்து பளுவூர்கோட்டத்து கரைவழி ஐம்புழுநாட்டு ஆழ்மை ஊரிலும் வந்து பாலிநாட்டு அகரத்திலிருக்கும் கைக்கோளரில் சோழகோன் தீத்தமுடையான் மகன் பெரியராகுத்தனும் இவன் தம்பி சங்கேதி இராகுத்தனும் நல்லானும் நாங்கள் மூவரும் எங்கள் தங்கை கங்கையும் இவள் மகள் திருமலைச்சியும் வீரனும், திம்மனும் பெரிய இராகுத்தன் மகள் பெரிய வெங்காத்தாளையும் சிறிய வெங்காத்தாளையும் முதலியையும் இலக்குமனையும் சாந்தியும் பெண்கள் அஞ்சுபேரையும் இவன் மகன்
    3. கொழுந்தனையும் ஆக எங்கள் பதின்மூன்று பேரையும்  கொத்து அடிமை ஆக எம்பெருமான் திருக்கோயிலுக்குக் கொள்வாருளரோ என்று முற்கூறி. இம்மொழி கேட்டு எதிர்மொழி கொடுத்தான் அகரம் பெருமாள் ஆனைகாத்த அப்பன் சீகாரியம் பாற்கும் வன்னிய திம்மயநாயக்கர் நாயக்கன் முற்கூடியபடி உங்கள் மூவரையும் உங்கள் பெண்கள் ஏழுபேரையும் பிள்ளைகள் மூவரையும் ஆக பதின்மூன்று பேரையும் விலைக்குத்தரில் ஆனைக்காத்த அப்பன் அருளிச் செயல்படிக்கு விலைதந்து கொள்வான்
    4. என்று பிற்கூறி முற்கூறிய இராகுத்தன் உள்ளிட்டாரும் பிற்கூறிய சமைய குமாரர் வன்னிய திம்மய நாயக்கரும் இந்த பதின்மூன்று பேற்கும் எம்மில் இசைந்த விலைப் பொருள் வாசிப்படா நற்பணம் 2380. இப்பணம் இரண்டாயிரத்து முன்னூற்று எண்பதுமே எங்கள் பதின்மூன்று பேற்கும் விலை ஆவது ஆகவும் நாங்கள் மூவரும் எங்கள் பெண்கள் ஏழுபேரும் பிள்ளைகள் மூவரும் ஆக  பதின்மூன்று பேற்கும் விலைப்படி பணம் இரண்டாயிரத்து முன்னூற்று எண்பதும் சமயகுமாரர் வன்னியத் திம்முநாயக்கர் பண்டாரத்திலே பற்றிகொண்டு
    5. எங்களை நாங்களே ஆனைகாத்த அப்பன் திருக்கோயிலுக்கு கொத்து அடிமை ஆக விலைபிரமாணம் பண்ணிக்குடுத்தமைக்கு   
    6. நாங்கள் மூவரும் பிள்ளைகள் மூவரும் சிரிபாதம் தாங்கவும் திருமேனிக் காவலுக்கும் திருக்கைக்கோளருக்கும் உண்டான அடிமைத்
    7. தொழிலுக்கும் எங்கள் பெண்கள் ஏழுபேரும் ஆடிபாட எம்பெருமான் அடியாற்கு உண்டான அடிமைத் தொழில்களுக்கும்
    8. உரித்தாகக் கடவோம் ஆகவும் கொத்தடிமை ஆக ஆனைக்காத்த அப்பன் திருக்கோயிலுக்கு பிரமாணம் பண்ணிக்குடுத்தமைக்கு
    9. எங்கள் வழிவழி பரிபாலனம் உள்ளது. ஆண்பிள்ளை உள்ளது சிரிபாதம் தாங்கவும் திருமேனிகாவலுக்கு உரித்தாகவும். பெண் உள்ளது எம்பெருமான் அடிமைக்கும் உரித்தாகக் கடவராகவும்
    10. இப்படி சம்மதித்து பிரமாணம் பண்ணிக் குடுத்தோம் ஆனைகாத்த அப்பன் திருக்கோயில் சிரிகாரியம் பாற்கும் சமையகுமாரர் வன்னியத் திம்முநாயக்கற்கு சோழகோன் தீத்தமுடையார் மகன் ராகுத்தனும்
    11.  சிறு இராகுத்தனும் நல்லானும் கங்கையும் உள்ளிட்ட பதின்மூன்று பேரும் பெரிய இராகுத்தன் சிறு ராகுத்தன் கெங்கை உள்ளிட்டார் எழுத்து. இந்த சாதனமும் தொண்டைமண்டலம் பிரமராயர்
    12. ஆனைகாத்த பெருமாள் அருளியச் செயல்படிக்கு பட்டர் வாரியன் அப்பிளை. இந்த எழுத்து எல்லாம் எழுதினான் இந்தக் கல்வெட்டு விரற்கு மிண்ட ஆசாரி நம்பாண்டை வெட்டினான்
    13. இந்த சாதனங்களுக்கு அறிவுக்கு எழுத்திட்ட பேர் வன்னிய நாட்டுநாயகஞ் செய்வார் சந்திரநாயனார் மேற்படி மாரிக்கூத்தர் தொரபள்ளி கொண்ட பெருமாள் கோயில் தானத்தார். இப்படி அறிவேன் பட்டாசாரியர் ஆனைக்காத்த _ _ _ _. இப்படி அறிவேன் கேசவபட்டர். இப்படி அறிவேன் தேஸப்பட்டர். இப்படி அறிவேன் வாதுள பட்டர்
    14. கீழைவீதி தொண்டைமானார் சேதிராயர் காவனூர் தென்னவராயர் இரிஞ்சிபுரம் சமயமுதலியார் பெரியநாட்டு நம்பிமார் மாதவராமன்.

    இராகுத்தன் – குதிரை வீரன்; கொத்து அடிமை – வழிவழி பரம்பரை அடிமை; முற்கூறி – முன்னறிவிப்பு, முதலில் சொல்லிய, pre announcement, formerly quoted; எதிர்மொழி – மறுமொழி, reply, revert; ஸ்ரீ காரியம் பார்க்கும் – இறைப்பணி செய்யும்; பிற்கூறிய – பின்னர் சொல்லிய, later quoted; சாதனம் – சாஸனம், ஆவணம்; அறிவுக்கு – acknowledge

    விளக்கம்: விசயநகர வேந்தர் மல்லிகார்சுனர் ஆட்சியில் விரோதி ஆண்டு 1469-ல் மகர ராசி ஞாயிற்றுக் கிழமையும் வளர்பிறை ஐந்தில் சனிக் கிழமையில் நிகழும் திருவோன நட்சத்திரத்திரத்து நாளில் இக் கல்வெட்டு வெட்டப்ப்பட்டது.

    இக்கால வேலூரின் அக்கால பளுவூர் கோட்டத்தின் பாலிநாட்டு அகரத்தில் வாழும் கைக்கோளர்களில் சோழகோன் தீத்தமுடையான் மகன்கள் பெரியஇராகுத்தன், சங்கேதி இராகுத்தன், நல்லான் ஆகிய மூன்று உடன்பிறந்தார், தங்கை கங்கை இவள் மகள் திருமலைச்சி, மகன்கள் வீரன், திம்மன் இவர்களோடு பெரிய இராகுத்தன் மகள்கள் ஐவரான பெரியவெங்காத்தாள், சிறிய வெங்காத்தாள், முதலி, இலக்குமனை, சாந்தி ஆகியோரும் இவன் மகன் கொழுந்தன் என மூன்று பெரிய ஆடவர், 7 பெண்கள், மூன்று ஆண்பிள்ளைகள் என 13 பேரையும் விலைகொடுத்து கொத்தடிமையாக ஆனைக்காத்த (கஜேந்திர) பெருமாள் கோவிலுக்கு ஆக்கிட முன்னறிவிப்பு செய்யப்பட்டது. இந்த அறிவிப்பை கேட்டு அகரம் கிராமத்தின் ஆனைக்காத்த அப்பன் பெருமாள் கோவிலின் இறைப்பணியாளர் வன்னிய திம்மய்யநாயக்கர் முன்னே சொன்னபடி   13 பேரையும் விலைக்கு வாங்கினார். இதற்கு விலையாக 2380 பணம் திம்முநாயக்கர் கொடுத்தார். இதைப் பெற்றுக் கொண்ட ஆடவக் பெரியோர் மூவரும் பிள்ளைகள் மூவரும் இறைவனை எழுந்தருளச் செய்த வாகனங்களை தூக்கவும் திருமேனிகளுக்கு காவல் புரியவும் திருக்கைக்கோளருக்கு அடிமை செய்யவும் ஒப்புக்கொண்டனர். அதே நேரம் ஏழு பெண்களும் கோவிலில் பெருமாளுக்கு ஆடிப்பாடவும் பக்தர்களுக்கு அடிமைத் தொழில் செய்யவும் ஒப்புக் கொண்டு உறுதிமொழி ஆவணம் செய்துகொடுத்தனர் இந்த 13 பேர். இந்த ஆவணத்திற்கு  தொண்டை மண்டல பிரமராயர் சார்பில் கோவில் பட்டர்களின்  வாரியத்தை சேர்ந்த அப்பிள்ளை கையெழுத்திட்டான். அரையர்கள் சிலரும் கையெழுத்திட்டனர்.

    குதிரைவீரர்களான இராகுத்தர்கள் வேலை இழந்ததாலோ அல்லது கடன் தொல்லையாலோ தம்மை இப்படி கோவிலுக்கு கொத்தடிமையாக விற்க நேர்ந்துவிட்டது போலும். என்றாலும் கோவில் பணி என்பதால் இவர்களுக்கும் மற்றவரைப்போல வீடு, நிலம், சோறு கிட்டுவதால் அதை இவர்கள் விரும்பி தேர்ந்தெடுத்துள்ளது விளங்குகின்றது.

    பார்வை நூல்: தமிழ் கல்வெட்டுகள் வெளிச்சமிடுகிற அரிய உண்மைகள், பக். 306 – 307, ஆசிரியர் முனைவர் வஞ்சியூர் க. பன்னீர்செல்வம்

    புதுச்சேரி மாநிலம், திருப்புவனை திருவாண்டார் கோவில் 3 வரிக் கல்வெட்டு.

    1. சுவஸ்தி ஸ்ரீ மன் மகாமண்டலேசுவரன் மேதினிமீஸ்வர கண்டகட்டாரி சாளுவ நரசிங்க தேவ மகாராயர் பிரிதிவிராச்சியம் பண்ணி அருளா நின்ற  சகாப்தம் 1425 – ல் மேல் செல்லா நின்ற உரோத்திரதாரி வருஷம் அற்பசி மாதம் 15-தேதி நரசநாயக்கர் காரியத்துக்குக் கடவ அம்பிகாமக் கிழவர்
    2. அறம்வளர்த்த நாயனார் திருபுவனை மாதேவிப்பற்று நடுவுக்கரைப்பற்று நென்மலியப்ப னாயக்கர் கைகோளற்கு பெண்ணைக்கரை யிராச்சியத்தில் உண்டான கைக்கோளர்க்கு நன்மைத் தீமைக்கு  தண்டு சங்குந் பந்தப்பட்ட ஆலே தங்களுக்கும் தண்டும் சங்கும் தந்தோம் கைக்கோளர்களுக்கு நன்மை தீமைக்கு சந்திராதித்தர்
    3. வரையும் தண்டும் சங்கும் நடத்த கடவதாகவும். இதுக்கு சபையாரும் மழவராயர் நீலகங்கரையரும் இருந்து பண்ணி நின்ரயந்து யாதொருத்தர் அயிதஞ் சொன்னால் செழியங்கநல்லூரில் கல்வெட்டியபடி ஆகக்கடவதாகவும். இவை அறம்வளர்த்த நயினார் எழுத்து. இவை திருபுவனை மாதேவி சபையார் சொற்படிக்கு சேரமாண்டார் எழுத்து.  மழவராயர் எழுத்து. நீலகங்கரையர் எழுத்து.

    காரியத்துக்கு கடவ- செயல் பொறுப்பாளர்; தண்டு – ; சபையார் – கருவறை பிராமணர்.

    விளக்கம்: விசயநகர வேந்தர் சாளுவ நரசிங்கர் ஆட்சியில் உரோத்திரதாரி ஆண்டு (பொ.ஊ.1503) ல் ஐப்பசி மாதம் 15-ம்தேதி நரசநாயக்கருக்கு செயல் பொறுப்பாளரான அம்பிகாமக் கிழவர் அறம்வளர்ந்த நாயனார் திருப்புவனை மாதேவிப்பற்று, நடுவுக்கரைப்பற்று ஆகிய இடங்களில் வாழும் நென்மலியப்ப நாயக்கரின் கைக்கோளற்கும், பெண்ணைக்கரை இராச்சியத்தில் வாழும் கைக்கோளர்க்கும் வீட்டின் நன்மை, தீமை நிகழ்வுகளுக்கு தண்டும் சங்கும் முழங்க உரிமை தந்தார்.  இந்த உரிமை நிலவும் ஞாயிறும் நிலைக்கும் காலம் வரை செல்லவதற்கு கோவில் கருவறை பிராமணரும், மழவராயர் நீலகங்கரையர் ஆகிய அரயரும் இதற்கு துணையாக இருந்து யாரொருவரும் தடங்கல் செய்யாமல் செழியங்கநல்லூர் கல்வெட்டில் உள்ளபடி நடந்தேற வேண்டும் என்று ஆணை இடப்பட்டுள்ளது.

    மிச்சம் மீதி இருக்கின்ற கைக்கோளர் படைத்தொழிலை விட்டு அகலாமல் இருக்கவே இந்த மரியாதை மதிப்புகள் கைக்கோளருக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளன.  விசயநகர ஆட்சி வரையில் மழவராயர், நீலகங்கரையர் ஆகிய அரையர்கள் ஆட்சியில் அரையர்களாக தொடர்ந்தனர் என்பது இக்கல்வெட்டால் தெரிகின்றது.

    பார்வை நூல்: தமிழ் கல்வெட்டுகள் வெளிச்சமிடுகிற அரிய உண்மைகள், பக். 307, ஆசிரியர் முனைவர் வஞ்சியூர் க. பன்னீர்செல்வம்

    Share
  • வரி என்னும் கொள்ளைக்கு எதிர்ப்பு

    வரி என்னும் கொள்ளைக்கு எதிர்ப்பு

    -சேஷாத்ரி ஸ்ரீதரன் 

    வரி என்பது பெரிய அரச படையைப் பேணி மக்கள் உயிர்க்கும் உடைமைக்கும் பாதுகாப்பு நல்கவும், அரச நிருவாகம் நடத்தவும் வேந்தர், மன்னர் என்ற முதலாம், இரண்டாம் அதிகார அடுக்கு ஆட்சியாளர்களால் வரி என்ற மக்களின் பங்களிப்பு ஏற்படுத்தப்பட்டது. இந்த வரியை மக்களிடம் சமமாகத் தண்டவும் எவரும் வரி கட்டுதலில் இருந்து விட்டுப்போகாமல் இருக்கும்படியும் ஆட்சிப் பரப்பின் எல்லா பகுதியிலும் வரியை நடைமுறைப்படுத்தவும் துணைப் படைகளை திரட்டி போருக்கு அனுப்பவும் மூன்றாம், நாலாம் அதிகார அடுக்குகளான அரையர் என்னும் அரசர், கிழார்கோன் ஆகிய கீழ்நிலை அதிகார அடுக்குகள் வேந்தர், மன்னவரால் உண்டாக்கப்பட்டன.

    பழங் காலத்தில் வரிகள் மிகப் பலவாகும். இந்த வரித் தண்டல் பண்டமாற்று நிலவிய காலத்தில் பெரும்பாலும் மக்கள் உருவாக்கிய பொருளாகவே பெறப்பட்டன. ஏனென்றால் மக்களிடம் காசு புழக்கம் அரிதாகவே இருந்தது. வணிகரிடம் காசாக வரி பெறப்பட்டது. எப்படியானாலும் பண்டு வரி அதிகமாகவே இருந்தது. மக்கள் வரிச் சுமை தாங்காமல் திக்குமுக்காடிப் போயினர். சில வேளைகளில் ஊரை விட்டே அகலும் அளவிற்கு வரிக் கொடுமை தாங்கமுடியாததாக இருந்தது. மக்கள் சிலபோது ஆட்சியாளரிடம் முறையிட்டு வரிக் குறைப்பு பெற்றனர். இந்த வரிச்சுமை சோழர் ஆட்சியில் இருந்ததை விட விசய நகர ஆட்சியில் இன்னும் கூடுதலாக இருந்தது. கையும் காலுமே உடைய உழைப்பை நம்பி  கூலிக்கு செல்வோர் கூட வரி கட்டவேண்டி இருந்தது. இடங்கை, வலங்கைப் பிரிவு என்று குறிப்பிட்டு சில வரித் தொடர்பான கல்வெட்டுகள் காணக் கிடைக்கின்றன.

    மக்கள் தாமே சட்டத்தை கையில் எடுத்து வரித் தண்டுவோரை கொல்லும் அளவிற்கு உடன்பாடு காணும்படியாக ஊராக ஒன்றுகூடி அதிக வரிக்கு எதிராக ஆவண ஒப்பந்தம் செய்த கல்வெட்டுகள் சில உள. இது போன்ற நிகழ்வுகள் குறிப்பாக தேவதான ஊர்களில் இதாவது, இறையிலியாக அறிவிக்கப்பட்ட இடங்களில் அரங்கேறி உள்ளன. ஏனென்றால் இவ்வூர்களில் ஆட்சியாளர் என்று இல்லாமல் கோவில் நிர்வாகப் பொறுப்பில் இருந்தமையால் மக்களால் அதற்கு எதிராக எளிதில் ஒன்று திரள முடிந்தது. அரையர்களைப் போல கோவிலார் ஆயுதம் ஏந்தி மக்களை அடக்கப் போவதில்லை என்பதே இதற்கு காரணம்.

    ஏதோ ஒருகாலத்தில் வேந்தர், மன்னர், அரையர் ஆகியோரால் கோவிலின் வளர்ச்சி, கோவிலைச் சூழ்ந்த ஊரின் வளர்ச்சி ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு அவ்வூர்களில் தண்டப்படும் வரிகளை அரசருக்கு (இறை) செலுத்த வேண்டாம் (இலி) என்று ஆட்சியாளரால் ஓலையில் உரிமை எழுதிக் கொடுக்கப்பட்டவையே இந்த இறையிலி ஊர்கள். இது ஆட்சியாளருக்கும் கோவிலாருக்கும் இடையேயான உடன்பாடு தானே தவிர இதில் பொது மக்கள் குறுக்கிட ஒன்றும் இல்லை. இறையிலி ஆனாலும் மக்களைப் பொறுத்தமட்டில் வரி கட்டித்தான் ஆக வேண்டும். இந்நாளில் பலரும் இறையிலி என்றால் வரியே இல்லை என்று தவறாகப் புரிந்து கொண்டுள்ளனர். வரியே இல்லாமையை சர்வ மானியம் என்று கல்வெட்டுகள் குறிக்கின்றன. வரியே இல்லாவிட்டால் பின் எப்படி கோவில் வளர்ச்சியும் கோவிலூரின் வளர்ச்சியும் நடைமுறைப்படுத்த முடியும்.  வரியே இல்லை என்ற விளக்கத்தால் இறையிலியின் நோக்கமே அடிபட்டு போகும் போது அதை ஏன் ஆட்சியாளர் இறையிலி என்று அறிவிக்க வேண்டும்? என்று சிந்திக்க வேண்டும்.  இந்த இறையிலி ஊர்களில் கோவில் பொறுப்பாளர்களே தமக்கு இசைந்தவாறு வரியிட்டு தண்டிவந்தனர்.  அதை எதிர்த்து மக்கள் எதிர்வினையாற்றிய செய்திகளை கீழ் உள்ள கல்வெட்டுகள் விளக்குகின்றன.

    புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி வட்டம், திருவரங்குளம் ஊர், ஹரதீர்தீசுவரர் கோவில் கருவறைக்கு முன் உள்ள மண்டபத்தின் கிழக்கு சுவரில் உள்ள 15 வரிக் கல்வெட்டு.

    1. ஸ்வஸ்தி ஸ்ரீ திரிபுவனச் சக்கரவத்திகள் மதுரையு மீழமுங் கருவூரு பாண்டியன் முடித்தலை[யு]
    2. ங் கொண்டு மதுரையில் வீரர் அவிஜேகம் விசையர் அவிஷேகமும் பண்ணியரு[ளிய_ _]
    3. புவன வீரதேவற்கு யாண்டு 40 நாற்பதாவது இராஜராஜ வளநாட்டு வல்ல நாட்டு [வ _ _ _
    4.  கூரப்பாத்தாழ்வு ] தேவி மங்கலத்து நாடா இசைந்த நாட்டோமெங்களி லிசைந்து உடையார் தி
    5. ருவரன்குளமுடைய நாயனார் திருப்பதி தேவுந் திருமுடையான் திருமண்டபத்து நாடாய்
    6. குறைவறக்கூடி இருந்து கற்கடக நாயற்று மூன்றாந் தியதி நாள் இசைவு தீட்டுமிட்டு கல்வெட்டி
    7. குடுத்த பரிசாவது இந்நாயனார் திருப்பதியில் நாலுவரத்துக் குள்ளு இருந்த குடிமக்களை நோ
    8. க்குவோமாகவு புறத்தேவதானங்களையுங் குடிமக்களையு நோக்குவோமாகவும் நோக்குமிடத்து பறித்தல் கன்று
    9. காலி பிடித்தல் மற்றுஞ் சில சிதம்புகள் செய்தாருண்டாகில் நீர் நிலத்திலே இரண்டு இரண்டு மாச்செய்யுந் திருசூலக்கல் நா
    10. ட்டி குடுத்து பறிச்சின பிடிசின விடுவோமாகவும் இத்திருப்பதியில் சிவபிராமணர், செட்டிகள், வெள்
    11. ளார், கைக்கோளர், தேவரடியார், கண்மாளர், இடையர் மற்றுந் இத்திருப்பதியி இருந்து_ _ _
    12. வர் சிலர் எங்கள் பக்கல் விலை கொண்டுடைய நீர்நிலங்களும் புன்சைகளு குடி நீங்கா தேவ
    13. தானமாக எங்கள் நாயனாற்கு இறை இறுப்பராகவும் இ[று]க்குமிடத்து நீர் நில[த்]துக்கு மாத்தால் ப
    14. தில் கலநே தூணிப்பதக்காக வந்த நெல்லும் புன்சைக்கு மாத்தால் பதினைஞ்சே_ _ _
    15.  திகாசும் கொள்ளக்கடவதாகவு இப்படியால் வந்த நெல்லுங் காசும் சந்திராத்தயவல்_ _ _

    இசைந்த – இணங்கிய; இசைவுத் தீட்டு – ஒப்பந்த ஆவணம்; திருப்பதி – கோவில் திருத்தலம்; நாலுவரத்து- நாற்புறத்தில் இருந்து உள்ளே வருகை; பறித்தல் – பறிமுதல்; கன்றுகாலி – கால்நடை; சிதம்பு – தன்மை அழிப்பு, debasement in quality; பக்கல் – எங்கள் இடம் இருந்து, from us; மாத்தால் – ஒரு மா நிலம்.

    விளக்கம்: திரிபுவனவீரதேவர் என்று மூன்றாம் குலோத்துங்கனை குறிப்பிட்டு, அவனது 40 ஆம் ஆட்சிஆண்டில் (பொ.ஊ. 1218) கற்கடக ஞாயிற்று 3 ம் நாளில் இராசராச வளநாட்டு தேவி மங்கலத்து நாட்டார் இணங்கி நாங்கள் எங்களுகுள்ளே ஒன்றுபட்டு திருவரங்குளமுடைய ஈசன் திருக்கோவில் தலத்தில் ஒப்பந்த ஆவணம்  எழுதிக் கொடுத்த ஏற்பாடு என்னவென்றால் நாற் திசையில் இருந்து உள்ளே வரும் குடிமக்களையும் கருத்தில் கொள்வோம் அதே நேரம் பிற தேவதானங்களையும் அவற்றின் குடிமக்களையும் கருத்தில் கொள்வோம் என்றும், அப்படி கருத்தில் கொள்ளுமிடத்தில் பொருள் பறிமுதல், கால்நடைகளை பிடித்து கொள்ளுதல், தரம் அழித்தல் போன்றவற்றை செய்பவர்  இருப்பாரானால்அதற்கு இழப்பீடாக இரு மா அளவு வயலை திரிசூலக்கல் நாட்டி கொடுப்பதோடு பறிமுதல் செய்த பொருளையும் பிடித்து வைத்த கால்நடையையும் விடுவிப்போம். இத்திருத்தலத்தை சேர்ந்த சிவபிராமணர், செட்டியார், வெள்ளாளர், செங்குந்தர், தேவரடியார், கம்மாளர், இடையர் மற்றும் இத்தலத்தவர் சிலர் எங்களிடம் இருந்து விலைக்கு வாங்கிய நீர்நிலங்கள், புன்செய் நிலங்களுக்கு இடம்பெயரா குடிகளாக வரி இறுக்கலாம். அவ்வாறு இறுக்கும் போது நீர்நிலத்திற்கு ஒரு மாவிற்கு பத்து கலன் தூணிப்பதக்காக நெல்லும், புஞ்செய் நிலத்திற்கு ஒரு மாவிற்கு பதினைந்து _ _ _ காசும் வரியாகக் பெறுவோம். இப்படி வந்த நெல்லும் காசும் ஞாயிறும் நிலவும் நிலைக்கும் பொழுது வரை (கோவிலுக்கு பயன்படுத்தப்படும்) என்று கோவில் பொறுப்பாளர்கள் உடன்பட்டனர்.

    அளவிற்கு விஞ்சி வரித் தண்டியதால் மக்கள் வெகுண்டெழுந்து முறைப்பாடு செய்ததாலோ என்னவோ ஊரார் ஒன்றுகூடி வரன்முறை வகுத்து வரி தண்டுவது குறித்து வரையறை செய்து இவ்வூரில் வாழும் குடிகளிடம் மட்டும் வரியும் காசும் குறிப்பிட்டபடி தண்டுவது என்று ஒப்பந்த ஆவணம் எழுதிக் கொடுத்தனர். இதற்கு கோவில் பொறுப்பாளர்கள் ஒப்புக் கொண்டதாகத் தெரிகின்றது. பண்டைக் காலத்தே எளிய மக்களிடம் காசு புழக்கம் குறைவு என்பதால் நெல்லாகவே வரியைக் கட்டினர் என்று தெரிகின்றது.

    பார்வை நூல்: தென்னிந்தியக் கல்வெட்டுகள், தொகுதி 34, பக். 263.

    திருச்சிராப்பள்ளி மாவட்டம், குளித்தலை வட்டம். இரத்தினகிரி ஊர், இரத்தினாசலேசுவரர் கோவில் கருவறை வடக்கு சுவரில் பொறிக்கப்பட்ட 25 வரிக் கல்வெட்டு.

    1. _ _ _ _ மக் கொருவர்க்கு உடற்பட்டு எய்முகங் குடுத்து கோட் குறளை கே _ _ _
    2. குடிகேடு கெடுத்தாருண்டாகிலும் அன்னியாயங்களுக்கு உடற் பட்டாருண்_ _ _
    3. பிராமணராகில் கண்ணும் பறித்து மூக்கும் அறுக்க கடவதாகவும் இ _ _ _ _
    4. _ க்[கூ]னி பட்டாநாகில் செய்தவனுக்கு தோஷ மின்றிக்கேயிருக்க [எ]_ _ _
    5. ம் யே _ _ _ மாரியாகில் பன்றியிலொன்றாக குத்துண்ணக் கடவனாகவும் _ _ _
    6. ராமங்கள் நகரங்களில் கடமை குடிமைக்கன்றியிலே அன்னியாயக் கடமை _ _ _
    7. ளிருவரைப் பிணைத்தும் குற்றம் குற்றமன்றியிலே தெற்ற குற்றத்துக்கு தண்டமி _ _
    8. ல்லாதாகவும் நாடுபெற்று வந்த முதல் கவளமுதல் காணும்மிடத்து கிராமமும் நாடும் நகர _ _ _ _
    9. ணக்கடவோமாகவும் உற்கணக்கர் அன்னியாயக் கடமைக்கு தரவெழுதக் கடவதல்லவாகவும்
    10. வீரக்கொடியார் கைய்யாலே குலை உண்ணக்கடவகளாகவும். இப்படி தவிர  ஒருவரிருவர் _ _ _
    11. கில் நாடாக குடிவாங்கி போகக் கடவோமாகவும் குடிவாங்க இருக்கச் செய்தே நம் _ _ _ _
    12. [ழுதிக் குழமு]ட்டாகல் மேழிபட்டத்தாரெல்லாரையும் பன்றியிலொன்றாக வீரக்கொடியாரே _ _ _
    13. இவகள் செத்தால் இவகள் பிணமும் பன்றியிலொன்றும் நாய்ப்பிணமுமாக _ _ _     
    14. மாளர், கொல்லர், தச்சர் உள்ளிட்ட பணிசமக்கள் நாடு குடிவாங்கி இருக்கச் செய் _ _ _
    15. டாகில் வீரகொடியார் பணியேசாதனமாக கொல்லக் கடவகளாகவும் உடையார் _ _ _
    16. டய நாயநார்க்கு ஏழாவது கார் முதல் பெரிய நாட்டான் திருமாளிகைக்கு ப்ரஹ்ம _ _ – [தலையாக] _ _ _ _
    17. ன் கடையாக [கு]டிமை குறுணிக்கு அரைநாள் கட்ட[த்தும்] த _ _ _ _  
    18. னம் குறுணி நெல்லும் குடக்க கடவோமாகவும் இப்படி சம்மதித்து அமைவுக்க _ _ _ _ _ _
    19. டோமும் கிராமங்களோமும் நகரங்களோமும் இவ்வனைவோம் நாடுகளும் நகர _ _ _
    20. பணியால் அமைவு கச்சமெழுதினேன் ப்ரமத்சங் குழித் தண்டலை மத்தியதன் கு _ _ _ _ _
    21. டையான் திருவரங்க நாராயணன் திருத்தாந் தோன்றியான எழுநூற்றுவ _ _ _ _
    22. டு பணியால் மருதூர் உடையான் பெரிய நாட்டு வேளான் எழுத்து. ஆதனூர் நாடும் கிராம _ _ _ _ _
    23. கரங்களும் பணியால் சோழகுல மாணிக்கச் சருப்பேதி மங்கலத்து பிரம பிரியன்  எழுத்து குறுநன் _ _ _ _
    24. கரம் பணியாலும் ஐஞ்ஞூற்றுவ வேளான் எழுத்து. இப்படிக்கு இவை திருவி _ _ _ _ _
    25. வீரமாகாளம் ஜெயம் குழித்தெண்டலை மத்தயத்தன் நாராயணன் ஆதி _ _ _ _

    உடற்பட்டு – உடன்பட்டு; எய்முகம் கொடுத்து –  பணிந்து போய்; கோட் குறள் – புறங்கூறல்,  back biting; குத்துண்ண – குத்துபட்டு; தரவெழுது – கூலிக்கு ஆவணம் எழுது; வீரக்கொடியார் – போர்க்குடியுள் ஒரு முதலியார் பிரிவினர்; மேழிபட்டத்தார் – வெள்ளாளர்; அமைவுக் கச்சம் – முடிவான தீர்மானம்;

    விளக்கம்: மேலுள்ள வரிகள் சிதைந்துள்ளதால் அவற்றின் பொருளை அடுத்து வரும் வரிகளோடு பொருத்தி பொருள் கொள்ள முடியவில்லை. முதல் சில வரிகள் சிதைந்துள்ளன. ஒருவருக்கு உடன்பட்டு பணிந்து அவரது கோள்சொல்லைக் கேட்டு ஒரு குடியைக் கெடுத்தார் இருப்பாரானால், அநியாயங்களுக்கு உடன்பட்டவர் இருப்பாரானால், அவர் பிராமணர் என்றால் கண்ணைப் பிடுங்கியும் மூக்கை அறுத்தும் போடுவோம்.

    கிராமங்கள் நகரங்களில் நியாயமான கடமை வரி, குடிமை வரி அன்றி அநியாயக் கடமை வரி திரட்டினவரை பிணைத்து குற்றம் உசாவும் குற்றமன்றத்தில் தெளிவாக மெய்ப்பிக்கப்பட்ட அக்குற்றத்துக்கு தண்டமிடுவோம் (fine). ஊர் கணக்கர் அநியாயமாக வரித் தண்டினால் இனிமேல் அவர் ஆவணம் எழுத அனுமதி கிடையாது. மேலும் அவர்கள் வீரக்கொடி என்ற போர்குடியாரால் கொலை யுண்டாவர். மேழிபிடிக்கும் வெள்ளாளராகின் பன்றிக் கூட்டத்தில் ஒன்றாகக் கருதி வீரக்கொடியாரே அவரைக் கொல்வார். அப்படி செத்த போது இவர்கள் பிணங்களை பன்றிப் பிணத்தில் ஒன்றாக நாயின் பிணத்தில் ஒன்றாகக் கருதி எறிவோம். கம்மாளர், கொல்லர், தச்சர் உள்ளிட்ட பணிசெய் மக்களை ஊரை விட்டு போகச் செய்தார் இருப்பாரானால் அவர்களை வீரக் கொடியார் தம் பணியாக கொன்று போடுவார்களாக என்று ஒப்புக் கொண்டு முடிவான தீர்மானத்தை கிராமத்தாரும் நகரத்தாரும் எழுதினோம் என்று பிராமணரும் வேளாளரும் கையெழுத்திட்டுள்ளனர். இறைவர்க்கு கல்வெட்டின ஆண்டில் இருந்து ஏழாவது ஆண்டு கார் காலம் முதல் பெரியநாட்டான் திருமாளிகை என்னும் கோவில் சுவரைப் பேண குடிமைக்குறுணியும் குடிமை நெல்லும் தர கிராமத்தார் ஒப்புக் கொண்டனர். கல்வெட்டு அதிகம் சிதைந்துள்ளதால் இந்த அளவே பொருள் கொள்ள முடிந்தது.

    பல கல்வெட்டுகளில் பிராமணனை கொன்ற பாவத்தை அடைவான் என்ற கருத்தை கூறுவதால் அதை மனதில் ஏந்தி பிராமணக் கொலை கூடாது என்று பிராமணருக்கு மட்டும் கொலை மிரட்டல் விடக்காமல் கண்ணைப்பிடுங்கி முக்கை அறுத்துப் போடுவோம் என்று மிரட்டி உள்ளனர். மற்ற சாதியாரை பன்றியும் நாயுமாக கருதி கொல்லுவோம் என்கின்றனர்.

    பார்வை நூல்: தென்னிந்தியக் கல்வெட்டுகள், தொகுதி 34, பக். 155-156.

    செங்கற்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம், பூலிப்பரக்கோவில் எனும் ஊரில் வியாக்ரபுரீஸ்வரர் கருவறை வடபுற ஜகதியில் பொற்க்கப்பட்ட 8 வரிக் கல்வெட்டு.

    1. ஸ்வஸ்தி ஸ்ரீ மந் மஹாமண்டலீசரன் வீரவிஜயபூபதிராய உடையா[ர்]ற்க்குச் செல்லா நின்ற ஏவிளம்பி வுருஷம் தை மாஸம் 5 ந்தியதி உடையார் திருப்புலி[ப]
    2. கவ நாயினார் திருமடை விளாகம். புலிப்ப[க]வர் கோயில் தானத்தார் இவ்வூர் கைக்கோளர்க்குக் கல்வெட்டிக் குடுத்தபடி.  நாட்டில் கோயில் பற்ற அற்ற மரி
    3. ஆதி வாசல்ப்பணம் கழிக்கவேணும் என்று புறநாட்டிலே  சந்திரகிரிச் சாவடிஇலே போயிருக்கைஇல் பூர்வத்தில் கடமை பணம் 9-1/2 க்கு தறி கண்டவாசலுக்
    4. கு வாசல்பணம் மூன்றும் கழித்து [கொண்ட]தறிக்கு தறி ஒன்றுக்குக் கொள்ளூம் பணம் 6-  சேனைக் கடைக்கும் வாசல் பணம் 3 ம் கழித்துக் கொள்ளும்
    5. பணம் 6-1/2  கச்சவடவாணியர் பேர் ஒன்[று]க்குக் கொள்ளும் பணம் 3 சிவன்படவர் பேர் ஒன்றுக்கு கொள்ளும் பணம் 2-1/2 முன்னாள் தானத்தார்க்கு நடந்து
    6. வரும் புடவை முதலு பணம் 4 ம் கார்த்திகை காணிக்கைக்கு பணம் 4 ம் இறுக்க கடவார்கள் ஆகவும் உபாதி விநியோகம் நாட்டில் கோயில்ப்பற்று
    7. அற்ற மரிஆதி இறுக்கக் கடவர்கள் ஆகவும் இம்மரிஆதி சந்த்ராதித்யவரையும் நடக்கும் படிக்குக் கல்வெட்டிக் குடுத்தோம். இவ்வூர் ஊரவற்கு
    8. உடையா[ர்]த் திருப்புலிபகவ நாயினார்கோயில் தானத்தாரோம் ஸ்ரீ மாஹேஸ்வரரோ ரக்ஷை. ஆலாலசுந்தரன்.

    திருமடைவிளாகம் – கோவிலைச் சூழ்ந்த பகுதி; நாட்டில் – ஊரில்; கோயில்பற்று – கோயிலுக்கு என்று ஒதுக்கிய; மரியாதி – வழக்கம், மரபு; வாசல்பணம் – வீட்டை கணக்கிட்டு பெறும் வரி; கழிக்க – குறைக்க, reduce; புறநாட்டிலே – outpost; தறிகண்ட வாசல் – தறி உள்ள வீட்டிற்கு; நடந்து வரும் – நடப்பில் உள்ள, current practice; உபாதி – வரிவகை; விநியோகம் – பொதுச் செலவை ஈட்டுகட்ட வாங்கும் வரி;

    விளக்கம்: வீர விஜ பூபதி என்பது வீர விஜபுக்க ராயரை (1422-1424) குறிக்குமானால் ஏவிளம்பி 1417-1418 இல் நிகழ்கின்றது. இந்த இரண்டில் ஏதோ ஒன்று தவறாக குறிக்கப்பட்டு உள்ளது. தை மாதம் 5 ம் நாள் திருப்புலிப்பகவ இறைவர் கோவிலைச் சூழ்ந்த திருமடை விளாகத்தில் வாழும் கோவில் பொறுப்பாளர்கள் இவ்வூர் செங்குந்தருக்கு வரிக் குறைப்பு குறித்த கல்வெட்டு ஒன்றைத் தந்தனர். அக் கல்வெட்டு ஊரில் கோயிலுக்கு ஒதுக்கப்படாத மரபாக வாசல்பணம் என்னும் வரியை குறைக்க வேண்டும் என்று சந்திரகிரிக்கு ஊர்ப்புறத்தே உள்ள சாவடிக்கு போய் இருந்தபோது அங்கே மன்னரை சந்தித்து வரிக்கழிவு பெற்று வந்ததற்கு இணங்க முன்பு கடமை வரிக்கு பெற்ற பணம் 9-1/2 க்கு தறி உள்ள வீட்டிற்கு வாசல் பணம் 3 கழித்து கண்டதறி ஒன்றுக்கு இனி வாங்கும் வரிப் பணம் 6-1/2, வெற்றிலை விற்கும் சேனைக்கடையார்க்கு வாசல் பணம் 3 கழித்து இனி வாங்கும் பணம் 6-1/2. கயிறு விற்கும் கச்சவடவாணியர் ஆள் ஒருவருக்கு இனி கொள்ளும் பணம் 3, மீனவரான சிவன்படவர் ஆள் ஒருவருக்கு இனி கொள்ளும் பணம் 2-1/2 ஆகும். முன்னாளிலே கோவில் பொறுப்பாளருக்கு புடவை முதலாக கட்டிய பணம் 40 -ம், கார்த்திகை காணிக்கைக்கு கட்டிய பணம் 4 –ம் அப்படியே தொடரும் அதை அப்படியே கட்ட வேண்டும். பிற வரி வகைகள், பொதுச் செலவு வரி, ஊரில் கோவிலுக்கு ஒதுக்கப்படாத மரபு வரிகளையும் அப்படியே கட்ட வேண்டும். இந்த மரபு ஞாயிறும் நிலவும் நின்று நிலைக்கும் காலம் வரை தொடரட்டும் என்று இவ்வூரார்க்கு திருப்புலிப்பகவ இறைவர் கோவில் பொறுப்பாளர்கள் கல்வெட்டி உறுதிமொழி கொடுத்தோம். இந்த வரி வரையறையை சிவனடியார் காத்து நிற்க வேண்டும். ஆலால சுந்தரன் இதை எழுதிக் கையெழுத்திட்டான்.

     இதில் இடம்பெறும் கைக்கோளர், சேனைக் கடையார், வாணியர் என்போர் முன்பு போர் தொழில் செய்யும் பட்டடைக் குடிகள் ஆவர். இராசராசன் ஆட்சியின் போது தேவார மீட்சி, குலோத்துங்கன் ஆட்சியில் பெரிய புராண தொகுப்பு ஆகியவற்றால் நிகழ்ந்த சைவ சமய எழுச்சியால் இந்தப் போர்க்குடிகள் கொலைத் தொழிலென்று போர்த்தொழிலை நீங்கி வணிகத்தில் ஈடுபட்டனர். அதன் விளைவு போர்ப்புரியும் குடிகள் குறைந்ததால் எதிர்த்து போரிட்டு துரத்த முடியாதபடி தமிழகம் வலுவிழந்ததால் கடந்த 600 ஆண்டுகளாக அயல் மொழியார் ஆட்சிப் பிடியுள் கட்டுண்டு கிடக்கின்றது. ஆயுதங்கள் மட்டுமே ஏந்தி வந்தவரிடம் இதாவது, இன்று மக்கள் தொகையில் 1% மட்டுமே உள்ள அயல் மொழியாரிடம் தமிழகத்தின் 50% மேலான விளைநிலங்கள் உரிமையாகி உள்ளன.

    பார்வை நூல்: தென்னிந்தியக் கல்வெட்டுகள், தொகுதி 36, பக். 260.

    Share
  • பண்டைக் கால குற்ற தண்டனை

    -சேஷாத்ரி ஸ்ரீதரன்

    Codified law என்பதற்கு குடிமை ஒழுங்கை சமூகத்தில் நிறுவ தொகுத்து பதிவுபடுத்திய  சட்டம் என்று பொருள். இப்படி நெறிமுறைப்பட்ட சட்டம் என்பது பண்டைய தமிழகத்தில் இருந்ததாகத் தெரியவில்லை. அரையர்கள் எனும் அரசர்கள் அந்தந்த நேரத்திற்கு சினந்து வெகுண்டு இட்ட ஆணைகளே சட்டங்களாகி நடைமுறைப் படுத்தப் பட்டன என்று தெரிகின்றது. இத்தகு தான்தோன்றிச் சட்டங்கள் நியாயமானதாக இருக்கவில்லை. பொதுவானதாக இருக்க வில்லை. ஏனென்றால் செல்வமுடையவர் தம்மிடம் இருந்த செல்வத்தால் கோவிலில் விளக்கேற்றி விட்டு தப்பிவிட்டனர். குற்றங்களை மெய்ப்பித்து தண்டனை பெற்றுத் தரும் காவல்துறை போன்ற அமைப்பு இல்லாமையால் ஊர் மக்கள் தாமாகவே முன் வந்து குற்றவாளிக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளும் அவலநிலையே இருந்துள்ளது. மனுதருமச் சட்டம் என்பதெல்லாம் இருந்ததில்லை என்றே தெரிகின்றது. இவற்றை எல்லாம் கீழ்க் காணும் கல்வெட்டுகள் உறுதி செய்கின்றன.

    தென்னார்க்காடு மாவட்டம், திருக்கோவிலூர் வட்டம், ஜம்பை ஜம்புநாதர் கோவில் கருவறை வடக்கு சுவர் 18 வரிக் கல்வெட்டு.

    1. ஸ்வஸ்தி ஸ்ரீ கோ இராஜகேசரி பந்மராந த்ரிபுவநச் சக்கரவ
    2. த்திகள் ஸ்ரீ குலோத்துங்க சோழ தேவற்கு யாண்டு 3 ஆவது
    3. வாணகோப்பாடி ராஜராஜவள நாட்டுப் பெண்ணைத் தெந்கரை
    4. க்கீழ் கொன்றைநாட்டு முடியனூரிருக்கும்  பள்ளிசேரி அடியநம்
    5. பியான கோவலராயப் பெரையன் மேற்படி நாட்டுப் பெண்ணை வட
    6. கரைச் செங்குன்ற நாட்டு வாளைவெட்டியில் இருக்கும் வெள்ளாளன் பொ
    7. ன் பற்றியுடையான் குன்றன் சீருடையானைக் கோவலராயர்(யர்) வை
    8. [வ]டையிலே இவன் சேரி அடியநம்பி விருகத்தை எய்ய பிழை
    9. ச்சு இச்சீருடையான் மேலே அம்புபடப் பட்டமையில் எழு
    10. பத்தொன்பது நாட்டுச் சித்திரமேழிப் பெரிநாடுங் கூடி
    11. இருந்து இக்கோவலராயப் பெரையன் மேலே பழியாக்கி இவந்
    12. ரேலிந்தப் பழிதீரக் கொண்ட நடையாவது இன்நாட்டுச் ச
    13. ண்பையாந வீர்ராஜேந்த்ரபுரத்து உடையார் திருத்தாந் தோன்
    14. றி ஆள்ளுடையார் ஸ்ரீ கோயிலிலே இரண்டு திருநுந்தாவி
    15. ளக்கு வைக்கக் கடவநாக்கி இவந் விட்ட சாவாமூவாப் பசு
    16. அறுபத்து நாலு. இப்பசு அறுபத்து நாலுங் கைக்கொ
    17. ண்டோம் இக்கோயிலில் திருவுண்ணாழிகை ஸபையோம்.
    18. சந்த்ராதித்தவல். இது பந்மாயிஸ்வர ரக்ஷை.

    பள்ளி சேரி – பள்ளி மக்கள் வாழும் சேரி, பெரையன் – பறையன், விருகத்தை – செந்நாய் வகை; எய்ய – ஏவ; பிழைச்சு – பிழையாக, தவறாக; பட்டமை – செத்ததனால்; பழியாக்கி – குற்றஞ் சுமத்தி; நடையாவது – நடவடிக்கையாவது; திருவுண்ணாழிகைச் சபையோர் – கருவறைப் புகும் பிராமணர்; பன்மாகேசுவரர் ரக்ஷை – சிவனடியார் காப்பு.

    விளக்கம்: இரண்டாம் குலோத்துங்கனது மூன்றாம் ஆட்சி ஆண்டில் (பொ.ஊ. 1135-1136) வாணகோப்பாடி இராசராச வளநாட்டின் கண் அமைந்த தென் பெண்ணையின் தென்கரை ஊரான கீழ்க் கொன்றை நாட்டு முடியனூரில் உள்ள பள்ளிச்சேரியில் வாழுகின்ற அடியநம்பி கோவலராயன் எனும் பறையன் வாணகோப்பாடி இராசராச வளநாட்டின் வடகரைச் செங்குன்ற நாட்டில் வாளைவெட்டி ஊரில் இருக்கும் வெள்ளாளன் பொன்பற்றியுடையான் குன்றன் சீருடையான் என்பானைக் வேட்டையின் போது இவனுடைய சேரியைச் சேர்ந்த அடியநம்பி இவனுடன் சென்று வேட்டை நாயை ஏவ அதே நேரம் கோவலராயன் தொடுத்த அம்பு குறி தவறி சீருடையான் மேல் பட்டு தைத்து அவன் இறந்து போகின்றான். எழுபத் தொன்பது நாட்டின் சித்திரமேழிப் பெரியநாட்டு மக்கள் கூடி வந்து இருந்து இக் கோவலராயப் பறையன் மீது கொலைப் பழி சுமத்துகின்றனர். கோவலராய பறையன் ஒரு அரசன் நிலையில் இருந்ததால் அவனை தப்பவிடாமல் செய்யவே இவ்வாறு ஊரே திரண்டு அவனது குற்றத்திற்கு நடவடிக்கையாக சண்பை (ஜம்பை) திருத்தான் தோன்றி இறைவர் திருக்கோவிலில் இரண்டு திருநொந்தா விளக்கு ஏற்ற வேண்டும் என்று தண்டனையாக இடுகின்றனர். அதன்படி கோவலராயன் அறுபத்து நான்கு சாவோ மூப்போ எய்தாத இளம் பசுக்களை தருகின்றான். அவற்றை கருவறை பிராமணர்கள் ஏற்றுக் கொண்டு நிலவும் ஞாயிறும் நிலைக்கும் நாள் வரை நந்தாவிளக்கு ஏற்றுவதாக உறுதி கூறினர். இந்த நடைமுறையை சிவனடியார் காக்க வேண்டும் என்ற குறிப்போடு முடிகின்றது.

    கோவலராயன் செல்வ வளமுடையவன் என்பதால் 64 பசுக்களை அவனால் கொடுக்க முடிந்தது. இங்கே எழும் கேள்வி கோவிலில் விளக்கேற்றுவது எப்படி குற்றத்திற்கான தக்க தண்டனையாக இருக்க முடியும் என்பது தான்? தண்டத் தொகை, சிறைத் தண்டனை என்றால் அவற்றை தண்டனை என்று கருதலாம். இது அப்படி அல்ல. பழமையில் சிறைத் தண்டனை என்பதே இருந்ததில்லை போலும் என்று எண்ணத் தோன்றுகின்றது.

    இக்காலத்தே காடுகள் ஒதுக்குபுறமான மலைப் பகுதியில் இருப்பது போல் அல்லாமல் அக்காலத்தே காடுகள் நடுவே தான் ஊர்களே அமைந்திருந்தன என்பது கோவலராயன் வேட்டையில் இருந்து அறிந்து கொள்ள முடிகின்றது. அக்கால் ஊர்கள் தொடர்ச்சியாக அல்லாமல் விட்டுவிட்டு இப்படித் தான் காட்டின் நடுவே இருந்தன போலும்.

    பார்வை நூல்: தென்னிந்தியக் கல்வெட்டுகள், தொகுதி 22 பகுதி I, பக். 65-66.

    தென்னார்க்காடு மாவட்டம், திருக்கோவிலூர் வட்டம், ஜம்பை ஜம்புநாதர் கோவில் கருவறை சுவரில் பொறிந்துள்ள 11 வரிக் கல்வெட்டு

    1. ஸ்வஸ்தி ஸ்ரீ திருமகள் போலப் பெருநிலச் செல்வியு ந்தனக்கே யுரிமை பூண்டமை மனக்கொளக் காந்தளூர்
    2. ச்சாலை கல மறுத்தருளி வேங்கை நாடுங் கங்கபாடியு ந்தடிகை பாடியு நுளம்ப பாடியும் குடமலை நாடும் கொல்ல
    3. முங் கலி[ங்]கமு மெண்டிசை புகழ்தர வீழ மண்டலமு மிரட்டபாடி யேழரை யிலக்கமு ந்திண்டிறல் வென்றி தண்டாற் கொண்
    4. ட தன்னெழில் வளரூழி யெல்லாவியாண்டு ந்தொழுதக விளங்கு மியாண்டே செழியரைத் தேசுகொள் ஸ்ரீ கோவிராச ராச ராசகேசரி ப
    5. ந்மரான  ஸ்ரீ ராசராச தேவற் கியாண்டு 28 ஆவது. இவ்வூர் வியாபாரி அங்காடி பொற்றாமன் வைச்சுக் கொ[ண்]டிருந்த பெண்டாட்டி
    6. [சீமா]தேவி பெற்றியை முனைப்பாடி நாவலூரிலிருக்கும் பிராட்டி சீ[ரா]ளன் இராத்திரி [சீ]மாதேவிபெற்றியை வலியப்புக்கு பிடி
    7. _ _ _ _ அங்காடி பொற்றாமன் என் மணவாட்டியை நானிருக்கவே வலிய பிச்சானென்று புக்கு படக் குத்தினமையில் அங்காடி
    8. [பொ]ற்றாமன் மேல் வழக்கழிவு இலாமையில் பிராட்டி சீராள மாடைத் தோடொருங்கி பிராட்டி சீராளனுக்காக ஒரு நொந்தா விளக்கு
    9. _ _ _ _ த்தான் தோன்றியாள்வார்க்கு சந்த்ராதித்தவற் நிசத முழக்கு எண்ணை யட்டி விளக்கெரிக்க அங்காடி பொற்றாமன் குடுத்த பொ
    10. [ன் ப]தின் கழஞ்சும் கொண்டு நிசத முழக்கெண்ணை யச்சுவோமானோ யிந்நாட்டு பெண்ணைத் தெந்கரை பாலைப்பந்தலூ
    11. [ரோம்] சந்த்ராதித்தவற். பந்மாஹேஸ்வர ரக்ஷை.

    புக்கு – புகுந்து; பிடிச்சான் – கட்டிப் பிடித்தான்; படக் குத்தி – செத்து விழும்படிக் குத்தி; வழக்கழிவு – குற்றம் இல்லாமல் ஒழிய, மாடைத்தோடொருங்கி – ; நிசதம் – ஏற்பாடு, அட்டி – ஊற்றி

    விளக்கம்: இராசராசனின் மெய்க்கீர்த்தியோடு இக் கல்வெட்டு தொடங்குகின்றது. அவனது 28 ஆவது ஆட்சி ஆண்டில் (பொ.ஊ. 1012) பொறிக்கப்பட்டுள்ளது. சண்பையில் வாழும் வணிகன் அங்காடி பொற்றாமன் வைத்துக் கொண்டிருந்த சீமாதேவி பெற்றியை முனைப்பாடி நாவலூரில் வாழும் பிராட்டி சீராளன் என்பான் இரவில் வீடு புகுந்து சீமாதேவியைக் கட்டிப் பிடித்தான். எதிர்பாரத வகையில் அங்கு வந்திருந்த அங்காடி பொற்றாமன் “நானிருக்கும் போதே என் மணவாட்டியை வலியப் வந்து புகுந்து கட்டிப் பிடித்தாயா”? என்று உள்ளே புகுந்து சீராளன் செத்து விழுமாறு குத்தினான். மாடைத் தோடொருங்கி என்ற சொல்லுக்கு பொருள் விளங்க முடியவில்லை என்பதால் தெளிவான விளக்கம் அறிய முடியவில்லை. இதனால் அங்காடி பொற்றாமன் மேல் குற்ற வழக்கு போகாததால் பிராட்டி சீராளனுக்காக ஒரு நுந்தா விளக்கு எரிக்க தான்தோன்றி இறைவர்க்கு நிலவும் ஞாயிறும் நிலைக்கும் காலம் வரை உழக்கு எண்ணெய் ஊற்றி விளக்கு எரிக்க ஏற்பாடாகி அதற்கு பொற்றாமன் 15 கழஞ்சு பொன் கொடுத்தான். அதைப் பெற்றுக் கொண்டு பெண்ணைத் தென்கரையில் பாலைப்பந்தலூர் வாழும் பிராமணர் உழக்கு எண்ணை ஊற்றி நந்தா விளக்கு எரிப்பதாக உறுதி கூறினர்.

    ‘’யாரோ ஒருவன் வைப்பாட்டி தானே’’ என்று சீராளன் தகாத செயலில் ஈடுபட்டு அதன் எதிர்வினையால் மாண்டான். இது அந்நாளில் பண்பற்றோர் சமூகத்தில் வாழ்ந்ததற்கு எடுத்துக்காட்டு. அதே நேரம் செல்வம் உள்ளவன் தண்டனை பெறாமல் தப்புவான் என்பது அங்காடி பொற்றாமனால் இக்கல்வெட்டில் மெய்ப்படுகின்றது. ஒரு கட்டமைந்த பேரரசுக் காலத்திலேயே இப்படி என்றால் சங்க காலத்திலே மட்டும் எப்படி இருந்திருக்கும் நீதியும் நியாயமும்?

    பார்வை நூல்: தென்னிந்தியக் கல்வெட்டுகள், தொகுதி 22 பகுதி I, பக். 72-73.

    ?????????????
    ?????????????

    தென்னார்க்காடு மாவட்டம், திருக்கோவிலூர் வட்டம், ஜம்பை ஜம்புநாதர் கோவில் கருவறை தெற்கு சுவரில் பொறிந்துள்ள 12 வரிக் கல்வெட்டு

    1. ஸ்வஸ்தி ஸ்ரீ திருமருவி[ய] செங்கோல் வேந்தன் முன்னோன் சேனை பின்னதுவாக இரட்டபாடி ஏழரை இலக்கமும் கொண்டு கொல்
    2. லாபுரத்து சயத்தம்பம் நாட்டி முன்னாணை தவிர்த்து த[ன்]னாணை செலுத்தி எதிரமர் பெறாது எண்டிசை திகழ பறைய
    3. து கறங்க ஆங்கது கேட்டு பேராற்றங்கரை கொப்ப[த்து] வந்தெதிர் பொருந ஆஹ[வ]மல்லன் அஞ்சி புறங்கிட்டோட ஆ
    4. னையுங் குதிரையும் பெண்டிர் பண்டாரமும் ஆங்கவன் விபவம் அ_ங்கலுங் கொண்டு விஜை[ய] அபிஷேகம் செய்
    5. து வீரசிங்காசனத்து வீற்றிருந்தருளிய கோப்பரகேசரி பந்மரான உடையார் ஸ்ரீ ராஜேந்த்ர தேவற்[கு] யாண்[டு] 3 வது. வாணகோப்பாடியான ரா
    6. ஜேந்த்ர வளநாட்டு பெண்ணைத் தென்கரை நரிப்பள்ளி நாட்டு கூகூர்ப்பாடி யிருக்கு[ம்] மலையமான் காட்டிமேலூருடையான் பழங்கூரன் கு
    7. ன்றன் மேற்படியூரிருக்கும் வீரர்பு[த்]திரன் தாய் சே[ந்]தன் உமையாளை இறைகாட்ட அவள் இறை கடவேனல்லேனென்று சொல்ல அவளை
    8. கொச்செய்விக்க. அவள் நஞ்சு குடித்து சாவ. நான்கு திசை பதினெண் பூமி நாநாதேசியும் கூட நிரைந்து. இந்த பழங்கூரன் குன்றன் மேல் ப
    9. ழியாக்கி [இ]வன் மேலிந்த பழிதீர கொண்ட நடையாவது வாளையூராகிய ராஜேந்த்ரபுரத்து திருத்தான் தோன்றி மாதேவர்க்கு திருநுந்தா விளக்
    10. கொன்று வை[க்க]க் கடவனாக்கி. இவன் வைத்த காசு முப்பத்திரண்டு. இக்காசு முப்பத்திரண்டு வாளையூரா[கிய] ராஜேந்த்ரபுரத்து நகரத்தோம் கொண்டோ
    11. ம் கொண்டு அருமொழிதேவ[ன்] மரக்காலோடு ஒக்கும் உழக்கால் நிசதம் உழக்கெண்ணை அட்டகடவோம் இவ்வெண்ணை வணிக்கிராமத்தோம்
    12. இருகூறும், சங்கரப்பாடியோம் ஒருகூறும். சந்திராதித்தவல். இது பன்மாஹேஸ்வரர் ரக்ஷை.

    இறை – வரி அல்லது கடன்; இறைகாட்ட – கட்ட வேண்டிய பணம் இவ்வளவு என்று சொல்ல; கொச்செய்விக்க – இழிமை செய்ய, சிறுமைபடுத்த, மானபங்கம் செய்; பழியாக்கி – குற்றம் சுமத்தி; பழிதீர – குற்றதண்டனையாக; நடை – நடவடிக்கை; ஒக்கும் – ஈடான, பொருத்தமான; இருகூறு – 2/3; ஒருகூறு- 1/3

    விளக்கம்: இராண்டாம் இராசேந்திரனின் மெய்கீர்த்தியோடு தொடங்கும் கல்வெட்டு அவனது 3 ஆம் ஆட்சிஆண்டில் (பொ.ஊ. 1056-1057) வாணகோப்பாடியான ராசேந்திர வளநாட்டு பெண்ணைத் தென்கரையில் நரிப்பள்ளி நாட்டு கூகூர்ப்பாடியில் இருக்கும் மலையமான் காட்டி மேலூருடையான் பழங்கூரன் குன்றன் அதே ஊரைச் சேர்ந்த வீரபுத்திரன் என்பான் தாய் சேந்தன் உமையாளை இறை (வரி/கடன்) கட்ட சொல்கிறான். அவள் இறை கட்ட முடியாது என்று மறுக்கிறாள். அப்போது பழங்கூரன் குன்றன் அவளை சிறுமைப்படுத்தி அல்லது மானபங்கப்படுத்தி விடுகின்றான். இது அன்னாளிலே பெண் மீது நிகழ்த்தப்பட்ட கொடுமை ஆகும். இதனால் மனமுடைந்த அவள் நஞ்சு அருந்தி மாண்டு போகின்றாள்.  இதனால் வெகுண்டு திரண்ட நாற்றிசை பதினெண்பூமி நாநாதேசி வணிகர் கூடி நிரைந்து இந்த பழங்கூரன் குன்றனை குற்றவாளி ஆக்கி இதற்கு தண்டனை நடவடிக்கையாக திருத்தான்தோன்றி இறைவர்க்கு திருநுந்த விளக்கு ஒன்று வைக்க வேண்டும் என்று வற்புறுத்துகின்றனர். அதற்கென்று இவன் கொடுத்த காசு 32 ஆகும். இந்த 32 காசை வாளையூர் ராசேந்திரபுரத்து நகர்த்தவர் பெற்றுக்கொண்டனர். இதை வைத்து அருமொழித் தேவன் மரக்காலுக்கு ஈடும் இணையுமான உழக்கினால் நிலவும் ஞாயிறும் நிலைக்கும் வரை நுந்தா விளக்கிற்கு உழக்கெண்ணை ஊற்றுவதாக உறுதி கூறுகின்றனர். இந்த வெண்ணையை வணிகக் கிராமத்தார் இரண்டு கூறும் (2/3,) சங்கரபாடி வணிகர்ஒரு கூறும் (1/3) தர ஏற்பாடு செய்தனர்.

    ஒரு சாதியார் அல்லது ஒரு தொழில் செய்வோர் கூட்டமாக அழுத்தம் கொடுத்தால் தான் அநியாயத்திற்கு நீதியும் நியாயமும் அந்நாளில் கிடைத்தது போலும் என்பதை மேற்கண்ட இக் கல்வெட்டுகள் உணர்த்துகின்றன.

    பார்வை நூல்: தென்னிந்தியக் கல்வெட்டுகள், தொகுதி 22 பகுதி I, பக். 75-76.

    ?????????????

    வட ஆர்க்காடு மாவட்டம், வந்தவாசி வட்டம், வழுவூர் பிரம்மபூரீசுவரர் கோவில் திருச்சுற்றில் தென் சுவரில் வெட்டப்பட்ட 5 வரிக் கல்வெட்டு,

    1. சறுவாதிகாரி வருஷம் மாசிமாதம் 30 நாள் வழுகூர் ஊரவ[ர்] எம்மில் பொரிந்தியிசை ஓலை[யிட்]டு[க்] கொண்டபடி . மீநவராயர் அவப்படாக்காரி கடைப்பற்ற பொருமாள் கோயிலிலே பூந்து அடைத்துக் கொள்ளுகையில்.
    2. நாளது சாக கடைவனாகவும் நாளது சாகையில் ஊரிலே இருபது பணம் குடுக்க கடவோம் ஆகவும் மேலைக்கும் யாதொருவர் பறை எடுத்ததுண்டாநால் [இரு]பது பணம் குடுக்க கடைவோம் ஆகவும்
    3. பறை எடுத்த அன்று சாகக் கடைவனாகவும் யாதொருத்தர் ஒருநாள் யிரண்டு நாள் தாமதம் சொன்னதுன்டானா[ல்] அவன் சாதிக்கும் பிறம்பாய் நங்கை நாசிவனும் விலக்கி நன்மை தின்மை துறந்து சாதிக்குப் பி
    4. றம்பாகக் கடைவனாகவும் யிடங்குடுத்தவனே இந்தச் சேதம் உள்ளது குடுத்து யிராசகரத்துக்கும் அபராதமும் குடுத்து ஆவிக்க[ட]னையும் படக்கடைவனாகவும். இப்படி சம்மதித்து யிசை ஓலையிட்டுக் கொண்டோம் இவ்
    5. வனைவரோ(ம்). மிப்படிக்கு இவை ஊற்கு சமைந்த அபிமான பூஷண வேளார் எழுத்து. இப்படிக்கு இவர்கள் சொல்ல எழுதினமைக்கு  ஊற்க்கு தண்டகநாட்டு ப்ரமராயர் திருமலையார் மகன் அழகிய வரதன் எழுத்து.

    இசை ஓலை – உடன்பாட்டு ஒப்பந்தம், consent agreement; கடைப்பற்ற – பின்தொடர, துரத்த, follow; நாளது –இற்றை நாள்; மேலைக்கும் – இதற்கு மேலும், furthermore; பறை – அறிவிப்பு, சேதி, information; பிறம்பாய் – புறம்பாக, எதிராக, against; சேதம் – சீர்கேடு; இராசகரம் – அரசாங்க வரி; ஆவிக் கடன்- பிறவிக்கடன்; சமைந்த – உடன்பட்ட.

    விளக்கம்: தமிழ் அறுபது ஆண்டு குறிப்பு கல்வெட்டில் இடம்பெறுவது கம்பண்ணர் படையெடுப்பிற்கு பிறகு வழக்கில் வந்தது. அதற்கு முன் இது அருகிய வழக்காகவே இருந்துள்ளது. இக்கல்வெட்டில் வேந்தன் பற்றிய குறிப்பு இல்லாகினும் சோழர் கால பிரம்மராயர் பதவி இதில் இடம்பெறுகின்றது. இந்தப் பதவி நாயக்கர் ஆட்சியில் இல்லை என்றாலும் விசயநகர ஆட்சியின் முற்பகுதி வரை அருகிய பதவியாக இருந்துள்ளது என்பதால் 15 – 16 ஆம் நூற்றாண்டில் இந்த சர்வாதிகாரி ஆண்டை வைக்க வேண்டி உள்ளது. சர்வாதிகாரி ஆண்டு 1408, 1468, 1528 ஆகிய ஆண்டுகளில் நிகழ்கின்றது. இவற்றில் ஏதோ ஒரு ஆண்டில் இக் கல்வெட்டை சுட்டலாம்.

    மீனவராயர்க்கு அவபடக்காரியை துரத்திப் பின்தொடர அவன் பெருமாள் கோயிலிலே புகுந்து கதவை உட்புறமாக அடைத்துத் தப்பி மறைந்துவிடுகிறான். அவன் இன்றே சாகவேண்டும், அப்படி செத்தால் ஊரிலே 20 பணம் கொடுப்போம் என்று ஊரார் முடிவெடுக்கின்றனர். மேலும் யாராவது அவன் இருப்பிடத்தை அறிவிப்பார்களானால் அவருக்கு 20 பணம் கொடுப்போம். இருப்பிடத்தை அறிவித்த அன்றே அவபடக்காரி சாகவேண்டும். அவன் இருப்பிடம் அறிந்த எவரொருவரும் அதைக் கூற ஓரிரு நாள் காலந்தாழ்தினாலும் அவன் தன்  சாதிக்கு புறம்பானவன் ஆகிடுவான். அவனை நங்கையும் நாசிவனும் விலக்கிட வேண்டும் என்றும் அவன் நன்மை தீமைகளுக்கு கலந்துகொள்ளாமல் அவன் சாதிக்கு புறம்பானவன் ஆகிட வேண்டும் என்றும் அவன் இருப்பிடத்தை அறிவிக்காமல் தப்பவிட்டவன் இந்த சீர்கேட்டிற்கான இழப்பீட்டை ஏற்று அரசவரி செலுத்த வேண்டும் அதற்கான தண்டத் தொகையையும் கட்ட வேண்டும். அவன் ஆவிக்கடனையும் அடைக்க வேண்டும் என்று உத்தாரவாளனுக்கு இதாவது, ஆதரவாளனுக்கு எச்சரிக்கை விடுத்தனர் ஊரவர். இந்த தண்டனைக்கு ஒப்புக் கொண்டு ஊரவர் அனைவரும் உடன்பாட்டு ஒப்பந்தம் செய்துகொண்டனர். இதற்கு ஊரின் கருத்துப்படி உடன்பட்டு அபிமாண பூசண வேளான் கையெழுத்திட்டான். இப்படி ஊரார் சொல்ல தண்டக நாட்டு பிரமராயன் மகன் அழகிய வரதன் எழுதி கையொப்பமிட்டான்.

    அவபடக்காரி மக்கள் செலுத்திய வரிப் பணத்தை தன்னகப்படுத்தியதாலோ அல்லது பெண்களிடம் கொச்சையாக நடந்த்தாலோ என்னவோ? இப்படி காரணம் குறிக்காத குற்றத்திற்காக மக்கள் வெகுண்டெழுந்து அவனுக்கு சாவுத் தண்டனை வழங்குகின்றனர். ஆம் சட்டத்தை தாமே கையில் எடுத்துக் கொண்டனர். மீனவராயர் உயர்அதிகாரம் உள்ள அரசர் அவருக்கு இவ்வாறு ஊரவர் தண்டனை கொடுத்ததாக தென்னிந்தியக் கல்வெட்டு 25 இல் விளக்கம் தந்திருப்பது ஏற்புடையதல்ல.

    பார்வை நூல்: தென்னிந்தியக் கல்வெட்டுகள், தொகுதி 25, பக். 82-83.

     https://tamilnadu-favtourism.blogspot.com/2016/01/jambunatheshwarar-temple-jambai.html

    Share
  • அடித்தட்டு மக்களுக்கு முடியாட்சியில் நில மானியம்

    அடித்தட்டு மக்களுக்கு முடியாட்சியில் நில மானியம்

    -சேஷாத்ரி ஸ்ரீதரன்

    ஆறகளூர் திருக்காமீசுவரர் கோவில்

    சேலம் மாவட்டம், ஆத்தூர் வட்டம், ஆறகளூர் திருக்காமீசுவரர் கோவில் கருவறை வடக்கு சுவர் கொண்ட 11 வரிக் கல்வெட்டு.

    1. ஸ்வஸ்தி ஸ்ரீ சகாத்தம் 1430 இதந் மேல் செல்லா நிந்ற விபவ சங்வற்சரத்து கும்ப நாயற்று பூர்வ்வபக்ஷத்து தெசமியும்
    2. ஆதித்தவாரமும் ஆயிலியத்து நாள் மகதைம[ண்ட]லம் ஆறகழ்ஊர் நாயினா[ர் திருக்காமீ]சுரமுடைய னாயனார் பாண்டியர் னாள் முதல் இந்தாள் வரைக்கும்
    3. திருநாளும் நடவாதிருக்கையில் சுவாமி நளோகண்டந்  வங்கி நாராயணந் மறைபுக்கார் காவலந் வல்லாள இராய பயங்கரந் சாடிக்காறர் கண்ட
    4. ந் ஸ்ரீமது எறமாஞ்சி துலுக்கண நாயக்கர் நாயனார் திருக்காமீசுரமுடைய நாயனாற்க்கு தேரும் சமைத்து திருநாளும் மாசித் திருநாளாக ஆயிலியத்திலே தேரும்
    5. மகத்திலே திருமசஞ்சநமும் ஆக கட்டளை பண்ணி திருநாள் நடக்கயில் தாமக _ _ _ நல்லூரில் கைக்கோளந் பெருமாள் மகன் பறையந் பறை எடுத்து, முதலியார் சன்னகமல
    6. னாயனார் ஆதிசண்டேசுர நாயநாரும் தாருமும் மாகேசுரரும் ஆக ஆறை னாயக மண்டபத்தில் நிறைவற நிறைந்து குறைவற கூடி இருந்து ஆதிசண்டேசுர னாயனார்
    7. திருவாய் மலர்ந்தருளிநபடி இந்த பறையனுக்கு உதித்_ _ _ டி ஆக ஆறகழ்ஊர் நன்செய் நிலத்தில் காளி அம்மை உடைப்புக்கு மேற்கு தியாகண நல்லூர் வய
    8. லுக்கு கிழக்கு நன்செய் உரூபாய் 250 ஓரணை ஏர் நடத்த பட்டு புன்செய் மாநிபமும் ஒருமனையும் ஒரு_ _ _ _ _க்கும் மானியமும் திருமஞ்சன வழிக்குதெற்கு இரண்_ _
    9. _ _ _ _ டு ஒரு தோட்டமும் கோயிலிலே நிற்றம் இருநாழி அருசியில் சோறும். மனையாவது சந்நதி தெருவில் வடசிறகில் ஒரு மனையும் குடுத்தருளி
    10.  _ _ _ _  ஆதிசண்டேசுரனாயனார் திருவாய் மலர்ந்தருளிநபடியாலே இந்த சுவந்திரம் உண்டாநது. இவன் தகப்பன் பெருமாளும் இவந் வற்கத்தாரும்  சந்திறாதித் _ _
    11. _ _ _ _ _ அனுபவித்து கொள்ளகடவர்களாகவும்இவை திருஞாந சம்பந்த பண்டிதர் எழுத்து. இவை பலமுதல் கங்காணி நயினார் எழுத்து.

    கட்டளை – அளவுகோள்; கைக்கோளன் – போர்வீரன்; முதலியார் –  தலைவர்;  உதிரப்பட்டி – இறந்தோர் நினைவாக தரப்படும் நிலதானம்; உடைப்பு – கரைஉடைந்தோடும் கால்வாய்; ஓரணை – ஓரேர் மாட்டிணை; வடசிறகு – வடக்கு பக்கம்; சுதந்திரம் – உரிமை

    விளக்கம்: சக ஆண்டு 1430 (பொ.ஊ.1508) விபவ ஆண்டு கும்ப ராசி ஞாயிறு, வளர்பிறை பத்தாம் நாள் ஞாயிற்றுக் கிழமை ஆயில்ய நட்சத்திரம் கூடிய நாளில் மகதைமண்டத்தில் அமைந்த ஆறகளூரில் வீற்றிருக்கும் திருக்காமீசுவரர் கோவிலில் பாண்டியர் ஆட்சிக் காலம் தொட்டே இக்கல்வெட்டு பொளிந்த நாள்வரையில் 200 ஆண்டுகளுக்கும் மேலாக  எந்த திருவிழாவும் நடக்காதிருந்தது. தலைவர் நாளோகண்டன் வங்கி நாராயணன் மறைபுக்கார் காவலன் வல்லாள இராய பயங்கரன் சாடிக்காரர் கண்டன் ஸ்ரீமத் எறமாஞ்சி துலுக்கண நாயக்கர் திருக்காமீசுரருக்கு தேர் ஒன்று செய்வித்துக் கொடுத்ததோடு மாசியிலே திருவிழாவும் மாசி ஆயில்ய நட்சத்திரத்தில் தேர் ஓடவும் மக நட்சத்திரத்தில் திருமஞ்சனம் நடக்குவும் காலஅளவாக வைத்தார். (சக ஆண்டும் விபவ ஆண்டும் ஒத்துப் போகவில்லை பிழையாக உள்ளது. விபவ ஆண்டு 1498 & 1558 இல் ஏற்படுகின்றது.) இப்படியாக திருவிழா நடக்கையில் போர்வீரனாக கைக்கோளன் பெருமாள் என்பான் மகன் பறையன் ஒருவன் இருந்தான். இப்பறையன் ஏதோ காரணத்தினால் இறந்து விடுகின்றான். பறை எடுத்து என்ற சொற்றொடர் இவன் இக்கோவிலில் பறை அடித்திருக்க வேண்டும் என்பதை உணர்த்துகின்றது. அதனாலேயே இவன் குடும்பத்தாருக்கு இம்மானியம் கிட்டுகின்றது.

    இத்திருவிழாவின் போது தலைவர் சன்னகமல நாயனார், ஆதிசண்டேசுவர நாயனார், மாகேசுவரர் ஆகியோர் ஆறைநாயக மண்டபத்தில் கூடி இருக்கின்ற போது ஆதிசண்டேச்சுவரர் தம்வாயால் சொன்னபடியே இறந்த இப்பறையனுக்கு உதிரப்பட்டியாக இதாவது, இறந்தோர் நினைவாக அவன் குடும்பத்தாருக்கு தரப்படும் நிலதானமாக ஆறகளூர் நன்செய் நிலங்களில் உடைந்தோடும் காளி அம்மை கால்வாய்க்கு மேற்கில் தியாகணநல்லூர் வயலுக்கு கிழக்கே நன்செய் நிலமும், உரூபாய் 250க்கு காளைகள் பூட்டிய ஓர் ஏர் நடத்தப்பட்டு புன்செய் மானியமும் ஒரு வீடும் தரப்படுகின்றது. (இரு இடங்களில் கல்வெட்டு சிதைந்துள்ளதால் அங்கு என்ன கூறப்படுகின்றது என்று அறியமுடிவில்லை.) திருமஞ்சன வழிக்கு தெற்கே ஒரு தோட்டமும் கோயிலிலே நித்தம் இரு பொழுதிற்கு அரிசி சோறும் வழங்க ஏற்பாடானது. இந்த வீடானது சைவ உணவு உண்ணும் பிராமணர், வெள்ளாளர் வாழுகின்ற கோவில் முன்னிலையான சன்னதி தெருவிற்கு வட பக்கத்தில் அமைந்திருந்தது. இந்த உரிமை யாவும் ஆதிசண்டேசுவரர் தம்வாயால் சொன்னதினாலே உண்டானது. இதை இவன் தந்தையும் இவன் வழிவந்தாரும் நிலவும் ஞாயிறும் நிலைக்கும் வரை அனுபவிக்கக் கடவார்களாக என திருஞான சம்பந்த பண்டிதன் எழுதி ஒப்பமிட்டான். கங்காணி பெரியநயினார் ஒப்பமிட்டுள்ளார். பொதுவாக கோவிலில் பணிசெய்யும் பிராமணர், பணிப் பெண்டுகள் உள்ளிட்ட கோவில் பணியாளர் வாழ ஒரு வீடும், நிலமும், கோவிலில் இருந்து சோறும் பெற்றனர். இந்த பறையனுக்கும் அவ்வாறு தந்ததில் வியப்பு ஒன்றும் இல்லை, வழக்கமானது தான்.

    பறையன் இறந்ததால் அவரது உற்றார் உறவுகள் வாழ்வதற்கு பிராமணர் வாழும் தெருவை அண்டிய வட பகுதியில், இதாவது ஊரிலேயே வீடும் தரப்படுகின்றது. அதோடு ஒவ்வொரு நாளும் இரு பொழுதிற்கு அரிசிச் சோறும் கோவிலில் இருந்து வழங்கப்படுகின்றது. இவை அல்லாமல் நன்செய், புன்செய் நிலங்கள், தோட்டம் உள்ளிட்டனவும் மானியமாக வாழ்வாதாரத்திற்கு கொடுக்கப்பட்டுள்ளன. சிறப்பு யாதெனில் இந்த பறையர் கோவிலினுள் சென்று பறை அடித்தார் என்பது தமிழக கோவில்களில் தீண்டாமை 16 ஆம் நூற்றாண்டு வரை இருந்ததில்லை என்றும் அது 17-18  ஆம் நூற்றாண்டில் தெலுங்கு நாயக்கர் ஆட்சிக் காலத்தில் தான் வழக்கில் வந்திருப்பதாகத் தெரிகின்றது.

    சனாதன தர்மம், அதன் நால்வருணக் கோட்பாடு ஆகியவற்றைக் கொண்டு பிராமணர் தலித்துகளை அழுத்தி விட்டதாக கடந்த 130 ஆண்டுகளாக தலித்திய முன்னோடிகளும், 100 ஆண்டுகளாக திராவிடமும் சொல்லி வந்த செய்தி இக்கல்வெட்டு மூலம் பொய் என்றாகிவிட்டது.

    பி.கு: ஒரு செங்குந்தருக்கு பறையன் மகனாக இருக்க முடியாது, மகனும் செங்குந்தராகத் தான் இருக்க வேண்டும். அதே போல் ஒரு பறையனுக்கு ஒரு செங்குந்தன் தந்தையாக இருக்க முடியாது அவனும் ஒரு பறையனாகத் தான் இருக்க முடியும் . இதுவேசமூக நியாயம், முறை. ஆதலால் கல்வெட்டில் இடம் பெறும் கைக்கோளன் என்பது இங்கு செங்குந்தரை குறிப்பதல்ல மாறாக போர் வீரனையே குறிக்கின்றது.

    சிலர் தீண்டாமையை நிறுவ புலவர்களின் கற்பனைப் பாடலை, இதாவது இடைச் செருகல், அடித்தல் திருத்தல் நிரம்பிய பாடலை நாடி ஓடி அதில் சில வரிகளைச் சுட்டுகிறார்கள். ஆனால் அடித்தட்டு மக்கள் நேரடியாக அனுபவப்பட்ட செய்திகளை ஏந்தும் கல்வெட்டுச் செய்திகளை புறந்தள்ளுகிறார்கள். இது அவர்தம் பொய்மைச் சார்பை காட்டுகின்றது.

    பார்வை நூல்: தென்னிந்தியக் கல்வெட்டுகள், தொகுதி 28, பக். 421- 422.

    செங்கல்பட்டு மாவட்டம் திருவாடாணை திருவல்லீசுவரர் கோவில் கருவறை தென்சுவரில் பொறிக்கப்பட்டுள்ள 4 வரி கல்வெட்டு.

    1. வெகுதானிய வருஷம் சித்திரை மாதம் 10 நாள் ஸ்ரீ மத் கேதாயுதானர் காரியத்துக்கு கடவர் தாசரும் தானத்தாரும் வித்தூர் உடையார்க்  கோயில் சேவிக்கும் பெண்களுக்கு கல்வெட்டு பூறுவம். சேவிக்கு பெண்களில்லாத படியா
    2. லே வரதராசர் புதுசாக விடுவித்த  அக்கநாயன் மகள் அப்பநாச்சிகு சன்னதி தெருவில் தென்சிறகில் கீழை  இரண்டுமனை விட்டு மூன்[றாம்] மனையும், இவள் தங்கை அறமளத்த நாச்சிக்கு மேலை மனையும் அழகியர் மகள் [எ]றமநாச்சிக்கு
    3. இதில் மேலை மனையும், கம்பர் மகள் அழகிய நாச்சிக்கு வடசிறகில் மூன்றாமனையும், வெள்ளந்தாங்கினா மகள் பொன்னாகு கீழை மனையும் கி_ _ _ கீழ்பாதிரி [பு] நூற்[று] இருபது குழியும் நின்றப் பெற் பேரிலே நூறு குழியும் கோயிலே நாழி சோறும் சந்திராதி
    4. த்தவரையும் இம்மதிகா பெற்று கோயில் சேவுகும் கா_ _ _ சேவித்து [நடத்தக்] கடவார்களாகவும் [இத]ன் சுகத்திலே இருக் _ _ _ _ _

    தானத்தார் – கோவில்பொறுப்பாளர்; பூறுவம் – முன் வைத்து; சேவிக்கும்- தொண்டு (அ) ஊழியம் செய்யும்; விடுவித்த – வேலைக்கு கொண்டுவந்து விட்ட; சன்னதிதெரு – கிழக்கும் மேற்குமாக கோவிலின் கிழக்கு வாயிலில் அமைந்த தெரு; சிறகு – தெருப் பக்கம்

    விளக்கம்: கல்வெட்டில் சக ஆண்டு குறிப்போ அரசர் ஆட்சிஆண்டுக் குறிப்போ இல்லை. வெகுதானிய ஆண்டு 1518 அல்லது 1578 இல் நிகழ்கின்றது. சித்திரை மாதம் 10 ஆம் நாள் கேதாயுதானர் செயல்களுக்கு அமைந்த துறவியும் கோவில் பொறுப்பாளரும் வித்தூர் இறைவர் கோவிலில் தொண்டுசெய்யும் பணிப்பெண்களுக்கு இக் கல்வெட்டை முன் சான்றாக வைத்தனர்.

    இக்கோவிலில் தொண்டாற்றும் பணிப்பெண் இல்லாமையால் வரதராசர் என்பவர் புதிதாக 5 பணிப் பெண்களை வேலைக்கு கொண்டு வந்து விட்டார். அவருள் அக்கநாயன் மகள் அப்பநாச்சிக்கு சன்னதி தெருவிற்கு தென் பக்கத்தில் கிழக்குமுகத்தில் அமைந்த இரண்டு வீட்டை அடுத்து மூன்றாவது வீடும், இவள் தங்கை அறமளத்த நாச்சிக்கு அங்கேயே மேற்கு முகத்தில் வீடும், அழகியருடைய மகள் எறமநாச்சிக்கு இதே மேற்கு முகத்தில் ஒரு வீடும், கம்பர் மகள் அழகியநாச்சிக்கு சன்னதி தெருவிற்கு வட பக்கத்தில் மூன்றாவது வீடும், வெள்ளம்தாங்கினான் மகள் பொன்னாளுக்கு கிழக்கு முகத்தில் அமைந்த வீடும் தரப்பட்டன. இவர்களுக்கு கீழ்பாதிரியில் புன்செய் 120 குழியும், நிலையாக வேலையில் நின்றவர் பெயருக்கு 100 குழியும் ஆக 220 குழி நிலமும் அதோடு இவர்களுக்கு கோவில் பணியாளருக்கு சோறு வழங்கும் வேளையில் ஒவ்வொருவருக்கும் நாழி அளவு சோறும் தரப்படுகின்றது. இந்த மதிப்பை நிலவும் ஞாயிறும் நிலைக்கும் காலம் வரை பெற்று அனுபவிப்பார்களாக.

    முதல் கல்வெட்டிற்கு துணைச்சான்றாக இக்கல்வெட்டு வைக்கப்பட்டது. முதல் கல்வெட்டில் பயன்படுத்தும் சொற்களும் அதன் கருத்தடைவும் இதிலும் உணரப்படுகின்றது.

    பார்வை நூல்: தென்னிந்தியக் கல்வெட்டுகள், தொகுதி 36, பக். 256 – 257.

    திருநெல்வேலி மாவட்டம், மானூர் அம்பலவாணசுவாமி கோவில் உள்ளே அமைந்த இரண்டாம் தூணில் பொறிக்கப்பட்ட 127 வரிக் கல்வெட்டு. இடத் தேவை கருதி சாய்வுக் கோடாக வரிகள் குறிக்கப்பட்டுள்ளன.

    ஸ்வஸ்திஸ்ரீ ப்ரஸாத / ஞ் செ[ய்]தருளிய திருமு / வப்படி த்ரிபுவனச் / சக்ரவத்தி_  _ _ கோனே / ரின்மைய் கொண் / டான் களக்குடி நாட் / டுக் கருவாநல்லூரா / ன விக்கிரம பாண்டி / ய நல்லூர் ஸ்ரீ குலசே / கர விண்ணகர் ஆழ் / வார் கோயில் நம்புசெ / [ய்] வானுக்கும் இவ்வாழ் / வாற்கு மிழலைக் கூற் / றத்து நடுவிற்கூறு பு / ல்லூற்குடி பொன்பற் / றி உடையான் பொ _ _  / பெருமாளான ஐய்ய / ன் காலிங்கராயர் த / ம் பேரால் கண்ட மனம்பெரியான் ஸந்தி / க்கு திருப்படிமாற்றுள் / ளிட்டு வேண்டும் நிப / ந்தங்களுக்கு இந்நாட்டு / மானநிலை நல்லூரில் / வெட்டியாற்கு ஜீவி / தமாய் போந்தப் பா / டகப்படி  நிலம் ஒன் / றே முக்காலே ஒருமா / வும் இவர்களைத் தவி / ர்[ந்]து இரண்டாவதி /  னெதிராமாண்டு முத / ல் இம்மானநிலைந / ல்லூர் ஸபையார் /  க்கு காராண்மையும் _ _ _  / [வினி]யோகமும் தருவதா / ன அச்சும் காரியவா / ராட்சிச்சியும் வெட்டி / பாட்டமும் பஞ்சுபீலி /  சந்துவிக்கிரகப் பேறு / ம் வாசல்பேறும் இலா / ஞ்சினைப் பேறும் / பொன் வரியும் மற்றும் / எப்பேர்ப்பட்டினவும் / உட்பட தேவதான இ / றையிலியாய் இறு /  ப்பதாக இடப்பெற / வேணுமென்று ஐய்ய / ன் காலிங்கராயர் நம / க்குச்  சொன்னமையி / ல்  இவ்வாழ்வார்[க்கு] ஐ / யன் காலிங்கராயர் த_ _ / திருப்படி மாற்றுள்ளி / ட்டு வேண்டும் நிவந் / தங்களும் இன்னாட் / டு மானநிலை ந[ல்]லூரி / ல் வெட்டியாற்கு ஜீ / விதமாய்ப் போ(ர்)ந்த /  பாடகப்படி நிலம் ஒ / ன்றே முக்காலே ஒரு மா வும் இவர்களை தவிர் /  ந்து இம்மானநிலை[ந] / ல்லூர் ஸபையாற்கு /  காராண்மையும் இவ் / வாழ்வாற்கு கடமையு / ம் அந்தராயமும் வினி / யோகமும் தருவதான /  அச்சும் காரியவாரா / ட்சியும் வெட்டிப்பாட் / டமும் பஞ்சுபீலி சந் / து விக்கிரகப் பேறும் / வாசல்பேறும் இலா / ஞ்சினைப் பேறும் /  பொன் வரியு மற்றும் / எப்பேற்பட்டனவும் / உட்பட தேவதான இ / றையிலியாய் இறு / ப்பதாக இட்டு வரியி / லார் எழுந்திட்ட உள் / வரியும் நங்கேழ்வியு / ம் தரச் சொன்னோம் _ _ / கைக்கொண்டு திரு / ப்படி மாற்றுள்ளிட் / டு வேண்டும் நிவந்த / ங்கள் செல்லப்பண் / ணி இப்படி சந்த்ராதித்ய / வற் செல்வதாக கல்லி / லும் செம்பிலும் வெ  /  ட்டிவித்து கொள்க. / இவை செவ்விருக்கை / நாட்டு அச்சுதவயல் / அரையன் வண்டுவ / வரையப் பெருமானான கு / லசேகர விழுப்பரை / யன் எழுத்து உ யாண் / டு 3 நாள் 910 இவை  / மிழலைக்கூற்றத்து / வடபாம்பாற்று தண் / ணிரண்டக்குடியான /  தரணிவிச்சாதிர நல் / லூர் அடைக்குடை / யான் தேவபிரான் / தேசுடைய தேவனான /  காடுவெட்டி எழுத் / து உ இவை மதுரோ / தய வளநாட்டு கரஞை /  இருக்கை உழக்குடி மூ / த்தன் ஆள்கொண்டவி / ல்லியான பல்லவரா / [ய]ன் எழுத் / தினாலும் / ப்ரஸாதஞ் / செய்தரு /  ளிவித்து / இவை ப்ரஸாதஞ் செ / ய்தருளின திருமுகப்படி / கல்லில் வெட்டினேன் / இவூற்(த்) தச்சாரியன் / உடையானழகனான / பாண்டிய சிவாமணி யா /  சாரியன் எழுத்து உ / இவை ப்ரஸாதஞ் செயிதரு / ளின திருமுகப்படி கல்லில் / வெட்டினேன் இவ்வூ[ர்] தச்சாசா / ரியன் காகுந்தன் பரமனான /  ஆயிரத்தெண்வ ஆசாரியன் /  எழுத்து.

    நம்புசெய்வான் – பூசனை செய்பவன்; திருப்படி – கோயில் வாயிற்படி; நிவந்தம் – பூசை செலவு திட்டம்; வெட்டியார் – கிராம பணியாளர் அல்லது பிணஞ்சுடுபவர்; போந்த – முடிவான, finalized; பாடகப்படி – நில அளவு; காராண்மை  – ஒரு வரி; அச்சும் – பணமாக இறுக்கும் வரி; காரியவாராட்சி –அரசு அலுவலர்காக செலுத்தும் வரி, வெட்டிப்பாட்டம் –   ஒரு வரி; பஞ்சுபீலி – பஞ்சின் மீதான வரி, கேழ்வி – அரசன் வாய்மொழி உத்தரவு; இறையிலி – ஆளும் அரசர்களுக்கு தான் வரி சென்றுசேராது ஆனால் இனி ஊர் அல்லது கோவில் மேம்பாட்டிற்கு அது பயன்படுத்தப்படும் என்ற வகையில் எப்போதும் போல் மக்களுக்கு வரி உண்டு.

    விளக்கம்: இரண்டாவதின் எதிராமாண்டு என்பது 3-ம் ஆட்சி ஆண்டைக் குறிக்கின்றது. ஆனால் வேந்தர் பெயர் கல்வெட்டில் குறிக்கப்படவில்லை. கோனேரின்மை கொண்டான் என்று சிறப்பு அடைச்சொல் குறித்துள்ளதால் இது முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியன் காலத்தது என்று குறித்துள்ளனர். இதுபொ.ஊ. 1271 ஆகும்.

    களக்குடி நாட் டுக் கருவாநல்லூரான விக்கிரம பாண்டிய நல்லூர் ஸ்ரீ குலசேகர பெருமாள் கோயில் பூசனை செய்பவனுக்கும் இப்பெருமாளுக்கும் மிழலைக் கூற்றத்து நடுவிற்கூறு புல்லூர்குடி பொன்பற் றி உடையான் பெருமாளான ஐயன் காலிங்கராயன் தனது பேரால் கண்ட மனம்பெரியான் கோயில் திருப்படியை மாற்றுதல் உள்ளிட்ட வேண்டும் பூசை செலவிற்கு இந்நாட்டு மானநிலை நல்லூரில் வெட்டியாற்கு பிழைப்பாய் இருக்கவேண்டி முடிவு செய்து தரப்பட்ட பாடகப்படி நிலம் ஒன்றே முக்காலே ஒருமா ஆகும்.  இந்த வெட்டியார்களைத் தவிர்ந்து மூன்றாம் ஆட்சி ஆண்டு முதல் இம்மானநிலைநல்லூர் கோவில் சபையார்க்கு காராண்மை எனும் வரியும், பெருமாளுக்கு கடமை எனும் வரியும் அந்தராயமும், வினியோகமும், பணவரியும், காரியவாராட்சியான அரசு அலுவலர் வரியும்,  வெட்டிபாட்ட வரியும், பஞ்சு வரியும், சந்துவிக்கிரகப் பேறும், வாசல்பேறும், இலாஞ்சினைப் பேறும், பொன் வரியும் மற்றும் எப்பேர்ப் பட்டனவும் உட்பட எல்லாம் தேவதானமாகப் போய்விடும், அரசற்கு இனி போகாத இறையிலியாய் எப்போதும் போல் மக்களால் வரி கட்டப்படவேண்டும் என்று ஐயன் காலிங்கராயன எனக்குச்  சொன்னதால்  இப்பெருமளுக்கு உள்வரியும் தர உத்தரவிட்டு இவற்றைக் கைக்கொண்டு கோயில் திருப்படி மாற்றம் உள்ளிட்ட தேவையான செலவுகளை எதிர்கொள்ள வழி செய்தான் செவ்விருக்கை நாட்டு அச்சுதவயல் அரையன் வண்டுவ  வரையப் பெருமானான குலசேகர விழுப்பரையன், மதுரோதய வளநாட்டு கரஞை இருக்கை உழக்குடி மூத்தன் ஆள்கொண்டவில்லியான பல்லவராயன் என சில அரசர்கள் இப்படி கையெழுத்திட்டு நிலவும் ஞாயிறும் நிலைக்கும் வரையில் இந்த ஏற்பாடு செல்வதாகக் கல்லிலும் செம்பிலும் வெட்டிவித்து கொள்ளச் சொல்கின்றனர்.

    இக் கல்வெட்டில் இவர்கள் தவிர்ந்து என்று தெள்ளத்தெளிவாக வெட்டியார் அனுபவிக்கும் நிலத்தை தவிர்த்து பிறவற்றில் வரும் காராண்மை வரி வருவாய் இனி கோவில் சபையார்க்கு செல்வதாக என எழுதிக் கொடுத்த போதும் காராண்மை என்பதற்கு உழும் உரிமை என்ற பொருளைக் கொண்டதால் வெட்டியார் நிலம் இறையிலி ஆக்கப்பட்டு கோவிலுக்கு தேவதானமாக ஆக்கப்பட்டு விட்டதாக தென்னிந்தியக் கல்வெட்டு தொகுதி 22 பகுதி 2 நூலில் பிழைபட பொருள் கூறி உள்ளனர்.  இதே போல் தப்பும் தவறுமாய் பொருள் தந்ததால் தானோ என்னவோ இராசராசன் பறையரிடம் இருந்து நிலம் பறித்துக் கொண்டான் என்பதும்? அக்கல்வெட்டின் மூல பாடம் தந்தால் தக்க பொருளை அறிந்து கொள்ள முடியும்.

    பார்வை நூல்: தென்னிந்தியக் கல்வெட்டுகள், தொகுதி 22 பகுதி 2, பக். 350 – 351.

    https://www.youtube.com/watch?v=wk_0FI5lg14

    Share
  • பகை முறித்து அமைதி உடன்படிக்கை

    பகை முறித்து அமைதி உடன்படிக்கை

    -சேஷாத்ரி ஶ்ரீதரன்

    பண்டை நாளில் வழங்கிய முடியாட்சி என்பது ஒரு அப்பட்டமான குடும்ப ஆட்சி என்பதைத் தான் கல்வெட்டுகள் விளம்புகின்றன. இதனால் தமது குடும்ப ஆட்சியை தக்கவைக்க எல்லா வகையான வழிகளையும் அரசகுடும்பத்தார் கைக்கொண்டனர். தம்பி, பிள்ளை, பேரன், மருமகன், மைத்துனன் என பலரும் இதற்காகத் தம் இன்னுயிரை ஈந்துள்ளனர்.  இதைத் தான் வேந்தன், மன்னன், அரையன், கிழான் உள்ளிட்ட நான்கு அடுக்கு அதிகாரப் பிரிவு குடும்பத்தாரும் செய்தனர்.

    ஆனால் தமிழகத்தில் மட்டும் தான் இந்த வரலாற்று உண்மை மறைக்கப்பட்டு தனிமனிதனான ஒரு அரசகுரு திரைக்குப் பின்னால் இருந்து ஆட்சி செய்துவிட்டான் என்று சொல்லி பகுத்தறிவின் பெயரால் தமிழ் மக்களின்அறிவு மழுங்கடிக்கப்பட்டுள்ளது. இந்த உண்மையை நீங்களே இதில் உள்ள விளக்கப் பகுதியை படித்து தெளியலாம்.

    தமது ஆட்சி அதிகாரத்தை நிலைபெறச் செய்ய மக்கள் விரும்பாத போரை மக்களை மீது திணித்து மக்களை வருத்தி வெற்றி கண்டவர்கள் தமது இயலாமையின் போது போர் ஒழித்து அமைதி உடன்படிக்கை கண்டும் ஆட்சி அதிகாரத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளனர். மக்களுக்காக அல்ல அரசகுடும்பம் அழிவில் இருந்து தப்பவே இந்த அமைதி உடன்படிக்கை என்பது உங்களுக்கு புரிந்துவிடும்.  புதுக்கோட்டை மாவட்டத்தில் சில கோவில்களில் இவ்வகை அமைதி உடன்பாட்டு கல்வெட்டுகள் காணப்படுகின்றன. அவற்றை இனி படித்து அறிந்துகொள்வோம்.

    புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூர் வட்டம், குன்னாண்டார்கோயில் பர்வதகிரீசுவரர் கோவிலின் கிழக்கு திருச்சுற்றில் குறுக்கு சுவரில் உள்ள 9 வரிக் கல்வெட்டு.

    1. ஸ்வாஸ்திஸ்ரீ  கோச்சடை பன்ம திருபுவனச் சக்கரவத்திகள் ஸ்ரீ சுந்தர பாண்டிய தே
    2. வற்க்கு யாண்டு 12 காத்திகை மாதம் ஜெயசிங்க குலகால வளநாட்டு  வடபன
    3. ங்காட்டு நாட்டு உடையார் திருக்குன்றாக்குடி உடைய நாயனார் கோஇல் தானத்து முத
    4. லிகளுக்கு இன்னாட்டு இரண்டு மலை நாட்டு அரையகளோம் எங்களில் இசைந்து
    5. பிடிபாடு பண்ணிக் குடுத்த பரிசாவது நாங்கள் பகை கொண்டு எய்யுமிடத்து எங்கள் காவல்
    6. ஆன ஊர்கள் வழிநடைக் குடிமக்கள், இடை குடிமக்கள் இவர்களை அழுவு செய்
    7. யக்கடவோ மல்லவாகவும். ஒருவன் அழிவு செய்யில் நூறுபணம் தெண்டம்
    8. வைக்கவும். ஒரு ஊராக அழிவுசெய்யில் அஞ்நூறு பணம் வைக்கவும் கடவதாகவும்
    9. இப்படி செய்யும் இடத்து வெட்டியும் குத்தியும் செத்து நோக்க கடவர்களாகவும்.

    தானத்து முதலி- கோவில் பொறுப்பாண்மைத் தலைவர்; பிடிபாடு – வழிகாட்டுநெறி, guidelines; எய்யுமிடத்து – அம்பு எய்தி போர் நிகழ்த்து; பரிசாவது – முறை, விதம், வகைமை யாதெனில்; அழிவுசெய்யில் – அழித்தால்; தண்டம் – குற்றத் தொகை.

    விளக்கம்: 13-14 –ம் நூற்றாண்டில் ஜடவர்ம சுந்தரபாண்டியனின் 12-ம் ஆட்சிஆண்டில் கார்த்திகை மாதம் செயசிங்க குலகால வளநாட்டு வடபனங்காட்டு நாட்டு திருக்குன்றாக்குடி இறைவர் கோவிலில் அதன் பொறுப்பாண்மைத் தலைவருக்கு வடபனங்காட்டு இரண்டு மலைநாட்டு அரையர்களும் இசைந்து இனி நடந்து கொள்வதற்கான வழிகாட்டுநெறி என்று தாம் நடந்துகொள்ளப்போகும் முறையை பற்றி சொல்கிறார்கள். பகையால் அம்பு எய்யும் போது எங்கள் காவலுக்கு உட்பட்ட ஊர்களில் வழிநடையில் வாழும் மக்கள், ஊர் இடையே வாழும் மக்கள் ஆகியோருக்கு இனி எந்த அழிவையும் செய்ய மாட்டோம் என்று உறுதி மேற்கொள்கின்றனர். அவ்வாறு எவரையாவது ஒருவரை கொன்று விட்டால் 100 பணத்தை தண்டத் தொகையாக கட்டுவோம். அதே நேரம் ஊரையே அழித்தால் 500 பணத்தை தண்டத் தொகையாகக் கட்டுவோம். இப்படி ஆவதற்கு காரணமானவரை வெட்டியும் குத்தியும் செத்துப் போகச்செய்வோம் என்று உறுதி கூறுகின்றனர்.

    இக் கல்வெட்டு பொதுவாகப் போரின் போது வழிநடையில் வாழ்வோர், ஊர்நடுவே வாழ்வோர் போர்செய்யும் படைகளால் வெறித்தனமாகத் தாக்கப்பட்டு கொல்லப்படுவதை மறைமுகமாகச் சுட்டுகின்றது. இந்த உடன்படிக்கையில் அத்தகு தாக்குதலை இனி தவிர்ப்பதாக இருதரப்பு அரையர்களும் ஒப்புக் கொள்கின்றனர். நாம் பொதுவாக இந்நாள் போரில் தான் போரின் போது நாடே போரில் ஈடுபடுவதாகவும் அதனால் நாட்டின் எப்பகுதியும் தாக்கப்படும் என்று எண்ணுகின்றோம். ஆனால் பண்டைய போர் முறையில் எங்கேனும் ஆறு, ஏரிக் கரை ஒரங்களில் தான் போர் நடக்கும் என்று தவறாகப் புரிந்து கொண்டுள்ளோம். இக்கல்வெட்டு இக்கருத்தை உடைத்து பொய் என்றாக்கிவிட்டது. போர் இரு தரப்பாரிடையே மூண்டால் பொது மக்களும் தாக்கப்பட்டு அவரும் அவர் உடைமையும் அழிவிற்கு ஆளாவதை தெளிவாக விளக்குகின்றது.  அப்படி என்றால் போரில் நாடே பங்கு பெற்றதாகத் தானே பொருள். கோவிலை ஆட்சியாளர் தம் கட்டுக்குள் வைத்திருந்தனர் என்பதால் தான் மலைநாட்டு அரையர்கள் இருவரும் கோவில் பொறுப்பு தலைவர் முன்னிலையில் போர்நெறி உடன்படிக்கையில் ஈடுபடுகின்றனர். இப்படி கோவில் பொறுப்பாளர் முன்னிலை நேர்ந்த உடன்படிக்கை என்பதால் இந்த வரலாற்று நிகழ்வு கோவிலில் ஒரு கல்வெட்டாக இடம்பெற்றது. இல்லாவிட்டால் இது நம் அறிவிற்கு எட்டி இருக்காது.

    முன்னம் போர்க் காலத்தில் ஒன்றும் அறியா அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதற்கு தமது முன்னோர்களே காரணம் என்று இந்நாளிலே தம்மை ஆண்ட பரம்பரையர், ஆளப் பிறந்தவர், அடக்கி ஆண்டவர், மண்ணாண்டவர், பாரண்டவர் என்று மார்தட்டுவோர் பொறுப்பேற்பார்களா? ஏன் பொறுப்பு ஏற்க கூடாது என்பதே கேள்வி?

    பார்வை நூல்: தென்னிந்தியக் கல்வெட்டுகள், தொகுதி 34, பக். 330.

    புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூர் வட்டம், நாங்குபட்டி எனும் மடத்துக்கோவில் அம்பாள் சன்னதி மேற்கு அடித்தளத்தில் வெட்டிய 8 வரிக் கல்வெட்டு.

    1. ஸ்வஸ்தி ஸ்ரீமந் மகாமண்டலீசுரன் எம்மண்டலமும் கொண்டருளிய ஸ்ரீ வீர இராயண்ண உடையார் திருஇராச்சியம் பண்ணி அருளாநின்ற விகாரி வருஷம் ஆனி மாதம் 25 நாள். பேராம்பூர் [வரந்]தரு [தேவ]ன் அழகியார் ஆன நரசிஞ்க தேவர் உள்ளிட்டாரோம்
    2. கீழைக்குறிச்சி ஊரவற்குப் பகை ஒருக்கம் தீந்து கல்வெட்டிக் குடுத்தபடி முன்பே எங்கள் பேர[னார்] சேமநரசிஞ்கத் தேவர் நாள் முதல் அடைக்கலங்காத்தார் நரசிஞ்கதேவர் நாள்அளவாக உற்று நிலை அற்ற வினோதப் பகையாய் அங்கும் இஞ்கும் நால்பது நூறு
    3. மனிதரும் பட்டு சிறைமாடும் பிடித்து ஆறாப் பகையாக கிடக்கையில் அடைக்கலங்காத்தார் நரசிஞ்கத்தேவர் நாளிலே இவரும் மேற்படி சேமரும் மேற்படி குமு[த]ய நாயநாரும் நாங்களும் எங்களில் பொருந்தி கீழைக்குறிச்சி
    4. ஊரவரை அழைத்து விட்டு உங்களுக்கும் எங்களுக்கும் ஒரு உற்று நிலை அற்ற பகைக்கு விபரீதமாய் இருக்க வேண்டுவதில்லை என்றும் அங்குப்பட்டது அறுதியாக மேல்பட்டு பேராம்பூர் கீழைக்குறிச்சியும் கீழைக்குறிச்சி பேராம்பூருமாக ஒன்றுபட
    5. நடத்திப் போதக்கடவோம் என்று நாங்கள் அரன்குளவர் சன்னதியிலே அறுதி பண்ணிக்குடுத்து அந்த அறுதிபடியிலே இற்றை வரையும் நடத்தி போதுகையில் இற்றை நாள் தென்மலை நாட்டாரும் _ _ _ னூர் புதுவயல் ஊரவரும் முதுசொற்குடி நாட்டாரும்
    6. முன்பாக கல்வெட்டிக் குடுக்கையில் இன்னாள் முதல் சந்திரஆதித்தவரையும் பேராம்பூர் அரசு வெறுத்த இடம் கீழைகுறிச்சி வெறுத்தும் கீழைகுறிச்சி வெறித்த இடம் பேராம்பூர் அரசு வெறுத்தும் இரண்டு நினையாமல் நடத்தப் போதக் கடவோமாகவும்
    7. இரண்டு நினைத்தோமாகில் எங்கள் வழிபடு தெய்வமான நாயனார் திருப்பெருமானாண்டார் சீபாதம் தப்பினோம் ஆவதாகவும். இப்படிக்கு நரசிஞ்க தேவர் எழுத்து. இப்படி அறிவோம் தென் மலைநாட்டவரோம். இப்படி அறிவோம் கீரனூர் புதுவயல் ஊரவரோம்
    8. இம்மரியாதி ஒழுந்து கீழைகுறிச்சி ஊரவர் இரண்டு நினைத்தோம் ஆகில் நாயனார் உடைய நாயனார் சீபாதம் தப்பினோம் ஆவதாகவும். இப்படிக்கு ஊற்கு சமைந்து இவ்வூர் கணக்கு உடையான் ஒடுவாய் நாட்டு வேளான் எழுத்து.

    தீந்து – முடித்து வைத்து; உற்றுநிலை – உண்மைக் காரணம்; அங்குபட்டது –அவ்வாறு தோன்றிய எண்ணம்; அறுதி – வரையறை, முடிவு; ஒன்றுபட – ஒற்றுமையாக; இரண்டு நினையாமல் – மாற்று கருத்து கருதாமல், second thought; சிறீபாதம் தப்பினோம் – திருப்பாதம் விலகினோம்; வெறுத்த – விரும்பாத; மரியாதி – ஏற்று, மதித்து நடக்கும் வழக்கம்

    விளக்கம்: 1419 பொ. ஊ. விகாரி ஆண்டு ஆனி 25-ம் நாள் (சூன் 21) விசயநகர வேந்தர் இராயண்ண உடையார் ஆட்சிக் காலம். பேராம்பூர் வரந்தரு தேவன், அழகியார் ஆன நரசிங்க தேவர் உள்ளிட்டார் கீழைக்குறிச்சி ஊராரோடு பகை உணர்வை முடித்து வைத்த வகைமை யாதெனில் முன்பே இவர்களது பேரன் சேமநரசிங்கத் தேவர் தொடங்கி அடைக்கலங்காத்த நரசிங்கதேவர் வரை உண்மைக் காரணம் இல்லாத பகையாக அங்கும் இங்கும் 40 பேர் 100 பேர் இறந்தும் மாடுகளை சிறைபிடித்தும் நீங்காத பகை ஏற்பட்டு இருந்தது. அடைக்கலங்காத்தார் நரசிங்க தேவர் காலத்தில் அவரும் மேலே குறிப்பிட்ட சேமரும் மேற்படி குமுதய நாயநாரும் பேராம்பூராரும் நரசிங்க தேவருடன் கூடி  கீழைக்குறிச்சி ஊராரை அழைத்து வந்து உங்களுக்கும் எங்களுக்கும் உண்மையான பகைக்கு காரணம் இல்லாத போது நமக்குள் இனி பகை வேண்டாம் என்றும் முடிவாகி அதன்மேற்பட்டு பேராம்பூர்  கீழைக்குறிச்சியாகவும் அவ்வண்ணமே கீழைக்குறிச்சி பேராம்பூராகவும்  ஆகி ஒற்றுமையாய் நடந்துகொள்வோமாக இறைவன் அரனகுளவர் திருமுன்பாக முடிவு செய்து அந்த முடிவுப்படியே இன்றுவரை நடந்துவருகின்றனர். இப்போது தென்மலை நாட்டார், புதுவயல் ஊரார், முதுசொற்குடி நாட்டார் முன்பாகவும் அந்த முடிவைக் கல்வெட்டிக் கொடுக்கும் இந்நேரத்தில் இன்று முதல் ஞாயிறும் நிலவும் உள்ள நாள் வரையில் பேராம்பூர் அரசு கீழைக்குறிச்சியை விரும்பாமல் பகை கொண்டது என்றும் அதே போல் கீழைக்குறிச்சி விரும்பாமல் பகை கொண்ட இடம் பேராம்பூர் அரசு என்ற இரண்டாம் கருத்து, மாற்று கருத்து கருதாமல் நடந்து கொள்வோம். அவ்வாறு மாற்று கருத்து கருதினால் நாங்கள் வழிபடும் தெய்வமான திருப்பெருமானாண்டார் திருப்பாதத்தை விலகினோம் என்றாவதாகும் என்று தென்மலைநாடு, புதுவயல் ஆகிய ஊரார் முன்னிலையிலும் நரசிங்க தேவர் மீண்டும் உறுதி ஏற்கின்றார்.  இந்த உறுதியை ஏற்று, மதித்து நடக்கும் வழக்கத்தை விட்டு கீழைகுறிச்சி ஊரார் மாற்று கருத்து கொண்டால்  அவரது இறைவனான உடைய நாயனாரின் திருப்பாதத்தை விட்டு விலகியவர் என்று ஆகிவிடுவார் என்று ஊரின் விருப்பிற்கு இசைந்து கீழைக்குறிச்சி கணக்கு உடையவனான ஒடுவாய்நாட்டு வேளான் எழுதி கையொப்பமிட்டான்.   

    பார்வை நூல்: தென்னிந்தியக் கல்வெட்டுகள், தொகுதி 34, பக். 318-319.

    புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி வட்டம், திருவரங்குளம் ஹரதீர்தீசுவரர் கோவில்  முதல் திருச்சுற்றில் உள்ள பழைய மடைபள்ளியின் மேற்கு சுவரில் வெட்டிய 20 வரிக் கல்வெட்டு

    1. ஸ்வஸ்தி ஸ்ரீ கோமாறு பன்மரான திருபுவனச் சக்கரவத்திகள் ஸ்ரீ வீரபாண்டிய தேவர்
    2. க்கு யாண்டு 29 வது காத்திகை 29 ள் இராசராச வளநாட்டு வல்ல நாட்டு உடையா
    3. ர் திருவரகுளமுடைய நாயநார் திருக்கொயில் தானத்தார்க்கும் ஊரார்க்கு
    4. ம் பூவரசகுழி அரைய மக்களில் சூரியன் தொண்டைமானு மக்கள் மருமக்களும் சோழி
    5. யன் உலக மாணிக்கப் பரையனும் மக்களும் பாணித் தேவரான ஈழத்தரை
    6. யர் மகன் வீரமூவன் விசையர் தேவனும் வீரமூவன் ஈழத்தரையுனும் தம்பி[யெ]
    7. க்கனும் கல்வெட்டி குடுத்த பரிசாவது அடியார்க்கு நல்லான் துண்டராயரை சு[ந்]
    8. தன் நாரசிங்க தேவந் குத்துகையில் இந்த பகையை நோக்கி இன்பன் உலக மா
    9. ணிக்கப் பரையனும் பாணித்தேவரான ஈழத்தரையரும் வாழ்வனாந
    10. ஈழத்தரையனும் சுந்தந் நாரசிங்க தேவரையும் சோழன் உலக மா
    11. ணிக்கப் பரையனையும் குத்துகையில் இந்தப் பகையென்று சொ
    12. ல்லக் கடவதல்ல என்று சந்திராயித்தவரைக்கு சூரியன் தொண்
    13. டைமாநாரும் இவர் மக்களும் தொண்டைமாநாரும் மருமக்களான சேர
    14. சோழ கோனும் அரங்குத்தானும் புத்தனும் சோழன் அரங்குளவ நாட்டாரை
    15. யனும் உடப்பாண்டானும் உள்ளிட்டாரும் ஆக இவ்வநைவரும் இந்தப
    16. கை என்று சொல்லக் கடவோமல்ல என்று பகை ஒருங்க திரு
    17. மலையில் கல்வெட்டிக் குடுத்தோம். இந்த இரண்டு வகையில்
    18. மனித்தரும் இந்தப் பகையை நோக்கி வரும் நலந்[தீ]ங்கு
    19. ஒருத்தர்க்கு வந்தது அனைவர்க்கும் என்று அனுபவி
    20. க்க கடவோமாகவு _ _ _ _

    விளக்கம்: 1325 பொ.ஊ. வீரபாண்டியனின் 29 ஆம் ஆட்சி ஆண்டு கார்த்திகைத் திங்கள் 29-ம் நாள் இராசராச வளநாட்டு வல்ல நாட்டின் திருவரங்குளமுடைய இறைவர் கோயில் பொறுப்பாளருக்கும் ஊராருக்கும் பூவரசகுழியைச் சேர்ந்த அரையர்கள் சூரிய தொண்டைமான் பிள்ளைகளும் மருமக்களும் சோழன் உலக மாணிக்கப் பரையனும் அவன் பிள்ளைகளும் ஈழத்தரையன் வீரமூவ விசைய தேவன் அவன் தம்பி இயக்கன் ஆகியோர் சேர்ந்து கல்வெட்டைவெட்டிக் கொடுத்த விதமாவது அடியார்க்கு நல்லான் துண்டராயனை சுந்தன் நாரசிங்க தேவன் குத்தியதால் ஏற்பட்ட பகையை வைத்து இன்பன் உலகமாணிக்கப் பரையனும் பாணித்தேவரான ஈழத்தரையனும் வாழ்வனான ஈழத்தரையனும் சுந்தன் நரசிங்க தேவனையும் சோழன் உலகமாணிக்கப் பரையனையும் குத்தினர். இது பகை என்று சொல்லக் கடவதல்ல என்று ஞாயிறும்நிலவும் நீடிக்கும் காலம் வரை சூரியன் தொண்டமானும் இவனுடைய பிள்ளைகளும் மருமக்களான சேரசோழ கோனும் அரங்குத்தானும் புத்தனும் சோழன் அரங்குளவ நாட்டரையனும் உடப்பாண்டானும் ஆகிய இவ்வனைவரும் இந்த பகையை பகை என்று கருதாமல் பகை ஒடுங்க திருமலையில் கல்வெட்டுவித்தோம். இந்த இரண்டு பிரிவு மனிதரும் இந்த பகையால் வரும் நல்லது தீது எது வந்தாலும் ஒருவருக்கு வரும் துன்பம் மற்றவருக்கும் எல்லாருக்கும் ஏற்பட்டதாக அனுபவிப்போம் ஆக.

     இக்கல்வெட்டு அரையர் குடும்பத்தார் எல்லோரையும் இந்த உடன்படிக்கைக்கு இணங்க வைத்ததை பார்க்கும் போது ஒவ்வொரு அரையர் குடும்பமும் அதன் தலைமை அரையனை கம்பளிப் பூச்சி போல சூழ்ந்திருந்தனர் என்பதை உணர்த்துகின்றன. அப்படியானால் அந்த குடும்பமே ஆட்சி செய்ததாக ஆன்றோ பொருள். பின் எப்படி இவர்களை எல்லாம் மீறி ஒரு அரசகுருவால் ஆட்சி செலுத்த முடியும்?

     பார்வை நூல்: தென்னிந்தியக் கல்வெட்டுகள், தொகுதி 34, பக். 288-289.

    புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி வட்டம், திருவரங்குளம் ஹரதீர்தீசுவரர் கோவில்  முதல் திருச்சுற்றில் உள்ள பைரவ மண்டபசுவரில் வெட்டிய 18 வரிக் கல்வெட்டு.

    1. கா[ல]யுத்த வருஷம் புரட்டாதி மாதம் 18 நாள் இராசராச வளநாட்டு வல்ல நாட்டு பூ[வரச]குழி அரை _ _ _ ல் கெ_ _ _ நாரசிங்க தேவனை
    2. _ _ _ ண்டராயரும் தம்பிமாரும் மக்கள் மருமக்களும் கு[த்து]கையில் இந்தப் பகையிலே [நா]டு இரண்டு வரிசையும் பட்டும் கெட்டும்
    3. _ _ கையில் தெற்காட்டூர் வாணாதராயர் வ[கை] [யறு]த்தபடி கொ[ப்ப]ணன் நாரசிங்க தேவன் பழிக்கு இன்பன்
    4. _ _ ட்டது பழி ஆகக்கடவதாகவும் வாழவன் துண்டராயற்கும் தம்பிமாற்கும் மருமக்களுக்கும் [மச்சினனாற்கும்]
    5. _ _ வதரையன் படுகையில். இவன் பட்டதும்_ _  _ _ வன் துண்டராயன் தம்பித் தமையன்மாரிலும் மக்கள் மருமக்களிலும்
    6. பெண்டாட்டி இன்பர் பட்டதும் மிகுதிக்க _ _ _ பலநாளும் ப(ல்)ல நாட்டிலும் _ _  வகையிலுமிலட்டூர்
    7. _ _ _ _ _ ளும் பகுதிக்காறர் சொம்மாய் அழிந்த முதல்களும் வாழவன் துண்டராயரும் தம்பிமாரும் மருமக்களும் பொரு
    8. _ _ _ _ வாகவும் வாழவன் துண்டராயர் மகன் இராகுத்தனும் எழு_ _ம் புதனுக்[கு]த் தானும்_ _ _ 
    9. _ _ _ வாழவன் துண்டராயரும் தம்பிமாரும் மக்களும் மருமக்களும் உடன் இந்தப்பகைக்கு _ _ _ _சேர_ _லக்கடலுக்கு _ _
    10. _ _ _ _ _ கொப்பணன் நாரசிங்கதேவன் மகன் [அடி]யாற்கு நல்லானுக்கும் மருமக்களுக்கும் _ _ _ இன்னும் [வாழ]வன்தானுக்கும்_ _ _ _ _ _
    11. _ _ _ _ _ _ _ சொம்மாய_ _ மாகவும் அடியாற்கு நல்லானும் கொப்பணன் [மருமக்களும்] _ _ _ ல்லக் கடவ_ _ _ _
    12. _ _ இப்படி பகைத்து _ _ _ _ _ இடுகையில் இம்மரியாதி நிற்கு செய்வர்களாகவும் இம்ம[ரியாதி]ல்லாமல் இருக்கிற_ _  _
    13. _ _ _ உடையார் திருவரன்குளமுடைய நாயனார் திருக்கோயில் தான[த்தாரும்] _ _ _ [ண்டாரும்]_ _ _
    14. _ _ க் கடவர்களாகவும் கேட்கு _ _ ன்பது_ _க் கொண்டா_ _ _ பத்து பணமும்_ _ _
    15. _ _  இருபது பணமும் உதிரத்த _ _ தால_ _[செய்]த பாண்டியற்கு [ஈ]ழத்தரை_ _ __
    16. _ _ லத்தால் திருமேனியும் சமைத்துத் திரண _ _ _ _  _ _ _    ___
    17. _ _ _ வாகவும் இப்படிக்கு இரண்டும்_ _ _ நிலைகா_ _ காட்டுராயர் _ _ _ _
    18. _ _ _ நாட்டுக்கு ஆவுடைநாடன் எழுத்து.

    இரண்டுவரிசை –இரண்டு பிரிவு, இரண்டு அணி; கெட்டும் – அழிந்தும்; 

    விளக்கம்: 1318 பொ.ஊ ஆகுமோ? என்று தொல்லியலாளர் குறித்துள்ளனர். இதில் உள்ள மாந்தரின் பெயர் பிற கல்வெட்டுகளில் இடம் பெறுவதை வைத்து ஒரு ஒப்பீட்டில் இந்த ஆண்டை சுட்டினர் போலும். கல்வெட்டில் வேந்தர் பெயர் இல்லை. காலயுத்த ஆண்டு புரட்டாசி மாதம் 18 ஆம் நாள் இந்த அமைதி உடன்படிக்கை ஏற்பட்டு இக்கல்வெட்டு பொறிக்கப்பட்டது. இராசராச வளநாட்டு வல்லநாட்டு பூவரசகுழி அரைசரில்  கோப்பண்ண  நரசிங்க தேவனை துண்டராயனும் அவன் தம்பிமார், பிள்ளைகள், மருமக்கள் ஆகியோர் குத்தி ஏற்பட்ட பகையில் நாடு இரண்டு பிரிவாகி அழிந்தது போகையில் தெற்காட்டூர் வாணாதராயர் வகையறுத்தபடி கோப்பண்ண நாரசிங்க தேவன் கொலைகப் பழிக்கு இன்பன் இறந்தது பழிக்கு ஈடு ஆக்கப்பட்டுவிட்டதாகவும்; அப்படியே வாழவன் துண்டராயற்கும் தம்பி தமையன்மார் பிள்ளைகளும் மருமகன்களும் மைத்துனர்களுக்கும் துண்டராயர் இறந்ததையும் துண்ட ராயன் அவன் தம்பி தமையன் மருமக்களிலும் பெண்டாட்டி இன்பர் இறந்ததும் பலநாள்களாக  பல நாட்டிலும் பேசப்பட்டது. இதனால் கோப்பண்ணன் நரசிங்கதேவன் மகன் அடியார்க்கு  நல்லானுக்கும் துண்டராயன் மகன் இராகுத்தனுக்கும் இடையே அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டு அதை மதித்து நடக்க வேண்டும் என்றும் திருவரன்குள கோவில் பொறுப்பாளர்களும் இதை கவனித்து வருவராக என்றும் கூறப்பட்டுள்ளது. பத்து பணம், இருபது பணம் என்பதுதண்டத் தொகையா?

    பார்வை நூல்: தென்னிந்தியக் கல்வெட்டுகள், தொகுதி 34, பக். 282.

    Share
  • பறையரை அவமதித்த அரையர்

    பறையரை அவமதித்த அரையர்

    -சேஷாத்ரி ஸ்ரீதரன்

    பண்டைய தமிழக அரசியலில் நான்கு அதிகார அடுக்குகள் இருந்தது, கல்வெட்டுகள் மூலம் தெள்ளப் புலனாகின்றது. அவை முறையே வேந்தன்(emperor). அவன் கீழ் மன்னன்(king). மன்னன் கீழ் அரையன்(duke). அரையன்  என்ற அரசன் கீழ் கிழான்(knight) அல்லது கிழார் கோன் என்பவாம். தமிழகத்தில் ஒரு குறிப்பிட்ட காலத்தில் வேந்தர் 4-5 பேர் இருந்தால் மன்னவர் அதைவிட கூடுதலாக 15-20 பேர் வரை இருந்தனர். அரையர்கள் 40-50 பேருக்கு மேல் இருந்தனர். கிழார்கள் 150-200 பேருக்கு மேல் இருந்தனர். கல்வெட்டுப் பதிவுகளில் நிலம் விற்று ஆவணமாகும் போது அதை வேளாண் எனும் அரையர்களும் கிழார்களும் ஒப்பமிட்டு ஏற்பிசைவு தந்ததை வைத்து மேற்சொன்ன கூற்றைச் சரி என்று உணரலாம்.

    வேளாண் என்னும் அரையர்களான அரசர்கள் இக்கால் ஆண்ட பரம்பரை, ஆளப்பிறத்தவர், அடக்கி ஆண்டவர், மண்ஆண்டவர், பாராண்டவர் என்று மார்தட்டிக் கொள்ளும் சாதிகளில் கலந்துவிட்டது தெரிகின்றது. குறிப்பாக, வெள்ளாளர், துளுவ வேளாளர், படையாச்சி, கொங்கு வேளாளர், கள்ளர் முதலாய சாதிகளே அவை. பறையர்கள் சில இடங்களில் கிழார்களாக அல்லது கிழார்களிடத்திலும் அரையர்களிடத்திலும் பாதுகாவலர்களாக (பந்தோபஸ்து), ஊராளிகளாக, படைத் தலைவர்களாக இருந்த போர்க்குடிகளாவர். இதனால் இந்த அரையர், கிழார்களிடத்தில் பறையருக்குப் பல நேரங்களில் அவமதிப்பு நேர்ந்துள்ளது. இந்த அவமதிப்பு பிற்காலத்தே 16-17ஆம் நூற்றாண்டில் தீண்டாமையாக உருப்பெற்றது. மேற்கண்டதை விளங்கிக்கொள்ள சில கல்வெட்டுகள் சான்றாக உள்ளன.

    இக்கால் பறையர்கள் பலர் தமது தீண்டாமைக் கொடுமைக்குப் பிராமணரே பொறுப்பு, காரணம் என்று தப்பும் தவறுமாக எண்ணமிட்டு வருகின்றனர். ஆனால் ஆயுதம் ஏந்தாத, எண்ணிக்கையில் குறைவான பிராமணரால் அவ்வாறு தம்மைத் தீண்டாமையில் ஆட்படச் செய்திட முடியாது என்பதை அவர்களால் சிந்திக்க முடியவில்லை. இதற்குக் காரணம் ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னோடிகளாகக் கருதப்படும் அயோத்திதாச பண்டிதர், அம்பேத்கர் போன்றோர் பிராமணரை முன்னிலைப்படுத்தியே, பிராமணரை வெறுக்கும்படியாக எழுதியும் பேசியும் பரப்புரை செய்து வந்தது தான். இதைப் பறையர் மட்டுமல்லாமல் பிராமணர் அல்லா பிற சாதிமாரும், அரையர் குடியில் வந்த சாதிகளும் கூட முழுமையாக நம்புகின்றனர். இதனால் தமிழ்ப் பிராமணர், தமிழ்ச் சாதிகளின் வெறுப்பிற்கு ஆளாகி உள்ளனர். எப்படி என்றால் அடுத்த வரும் 500 ஆவது ஆண்டில் ஒரு குழந்தை பிராமண சாதியில் பிறக்கப் போகின்றது என்றால் அதையும் இதே வெறுப்பில்தான் தமிழ்ச் சாதிகளில் பலர் அணுகுகின்றனர். குழந்தை பிறக்கும் என்ற செய்தி மட்டும் தான் உறுதியே தவிர அதற்கு பெயர் இல்லை, அதன் வினை என்ன என்பதெல்லாம் எவருக்கும் தெரியாது. அப்படிப்பட்ட நிலையிலும் அதன்மீதும் வெறுப்புக் கருத்து சுமத்தப்படுகின்றது. இது எந்த வகையிலும் பகுத்தறிவின்பாற்படாது என்பதை யாவரும் அறிவர்.   இதைப் பற்றி தமிழ்ச் சாதிகள் கருத்துத் தெளிவு பெற வேண்டும் என்பதற்காக ஈண்டு சில கல்வெட்டுகள் ஆராயப்படுகின்றன. இதைப் படித்தாவது தமிழ் மக்கள் இந்த அயோத்திதாச பண்டிதர், அம்பேத்கரின் கற்பனைக் கருத்துகளை முழுமையாகப் புறக்கணிக்க வேண்டும். ஏனென்றால் பறையர்கள் அரையர் குலத்தவரான பண்ணையார்களிடம் தான் வேலை செய்கின்றனர். அவருடைய சுரண்டலுக்கும் ஏச்சிற்கும் பேச்சிற்கும் ஆளாகி அவமானப்பட்டனர் என்ற வகையில் இந்த நிலக்கிழார் சாதிகளிடம் இருந்து விடுதலை பெற்றாக வேண்டும் என்பதை உணர்த்தாமல் பிராமணரை நோக்கி, தப்பாக இம்மக்களை வழிநடத்தியதால் 130 ஆண்டுகாலப் போராட்டம், உழைப்பாற்றல், காலம் எல்லாம் வீணாகிப்போனது.  இன்றுவரை பறையர் இழிவு, குறை தீரவில்லை என்பதே உண்மை.

    திருச்சிராப்பள்ளி மாவட்டம் திருவரங்கம் அரங்கநாதர் கோவில் உடையவர் சன்னதி எதிரே 4 –ம் பிரகாரத்தில் பொறிக்கப்பட்ட 3 கல்வெட்டுகள்.

    1. ஸ்வஸ்திஸ்ரீ வீற்றிருந்தாந் சேமனாந அகளங்க நாடாழ்வா(ர்)
    2. ற்கு திருவரங்கத்து கைக்கோள முதலிகளில் நாயநான அழகிய ம
    3. ணவாள மாராயநேந் இவற்கு பிந்பு சாவாதே  இருந்தேநாகில் எந்
    4. மிணாட்டியைப் பறையற்குக் குடுத்து எங்கள்ளம்மைக்கு நானே
    5. சிதைந்துள்ளது

    கைக்கோளர் – செங்குந்தப் படைவீரர்; முதலி – தலைவர்; நாயநான – தலைவர்க்கு தலைவனான; மிணாட்டி – மனைவி; அம்மை – தாய்; மிணாளன் – கணவன்; உடன்வேளையாக – in no time, சட்டென்று.

    விளக்கம்:  அழகிய மணவாள மாராயன் என்பான் வீற்றிருந்தான் சேமனான அகளங்க நாடாழ்வான் எனும் அரையனிடம் கைக்கோளச் செங்குந்தர் படைத்தலைவர்களுக் கெல்லாம் தலைவனாக பொறுப்பேற்றுக் கொண்டு சூளுரை செய்தது யாதெனில், ‘’இவரது உயிருக்கு எப்போதும் பாதுகாப்பாய் இருப்பேன். அந்தவகையில் இவர் உயிர் துறக்கும் முன்பே நான் உயிர் துறப்பேன். அப்படி அல்லாமல் நாடாழ்வார் இறந்து நான் அதன்பின்னும் வாழும் சூழல் ஏற்படுமானால் என் மனைவியை பறையர் புணர விட்டுக் கொடுத்ததோடும் அல்லாமல் என் தாயை நானே  புணர்ந்தவன் ஆவேன்’’.

    1. ஸ்வாஸ்தி ஸ்ரீ வீற்றி[ரு]ந்தாந் சேமநாந அகளங்க நாடாழ்வாற்கு திருவரங்
    2. கத்துக் கைக்கோளரி லரியாநாந கிடாரத்தரைய னேந் இவற்கு உட
    3. ந் [வே]ளையாகச் சாவக்கடவேநாகவும் இவற்கு பிந்பு சாவாதே இருந்
    4. தேநாகில் எந் மிணாட்டியை பறையற்கு [கு]டுத்து எங்களம்மைக்கு நா
    5. நே மிணாளநாவேந்.

    விளக்கம்:  அரியானான கிடாரத்தரையன் என்பான் வீற்றிருந்தான் சேமனான அகளங்க நாடாழ்வான் எனும் அரையனிடம் கைக்கோளச் செங்குந்தர் படைத்தலைவனாக பொறுப்பேற்றுக் கொண்டு சூளுரை செய்தது யாதெனில், ‘’இவரது உயிருக்கு எப்போதும் பாதுகாப்பாய் இருப்பேன். அதனால் உடன்வேளையாக (in no time) இவர் உயிர் துறக்கும் முன்பே அவர் உயிரைக் காப்பதில் நான் உயிர் துறப்பேன். அப்படி அல்லாமல் நாடாழ்வார் இறந்து நான் அதன்பின்னும் வாழும் சூழல் ஏற்படுமானால் என் மனைவியை பறையர் புணர விட்டுக் கொடுத்ததோடும் அல்லாமல் என் தாயை நானே  புணர்ந்தவன் ஆவேன்’’.

    1. ஸ்வாஸ்தி ஸ்ரீ வீற்றிருந்தாந் சேமநாந அகளங்க நாடாழ்வாற்கு
    2. திருவரங்கத்துக் கைக்கோளரில் உலகநாந அழகானைச் சோ
    3. ழ மாராயநேந் இவற்கு உடந் வேளையாகச் சாவக்கடவேநாகவு
    4. ம் இவற்கு பின்பு சாவாதே இருந்தேநாகில் எந் மிணாட்டியைப் 
    5. றையற்குக் குடுத்து எங்கள்ளம்மைக்கு நாநே மிணாளநா
    6. வேந்.

    விளக்கம்: உலகனான அழகானைச் சோழன் மாராயன் என்பான் வீற்றிருந்தான் சேமனான அகளங்க நாடாழ்வான் எனும் அரையனிடம் கைக்கோளச் செங்குந்தப் படைத்தலைவனாக பொறுப்பேற்றுக் கொண்டு சூளுரை செய்தது யாதெனில், ‘’ இவரது உயிருக்கு எப்போதும் பாதுகாப்பாய் இருப்பேன். அதனால் உடன்வேளையாக (in no time) இவர் உயிர் துறக்கும் முன்பே அவர் உயிரைக் காப்பதில் நான் உயிர் துறப்பேன். அப்படி அல்லாமல் நாடாழ்வார் இறந்து நான் அதன்பின்னும் வாழும் சூழல் ஏற்படுமானால் என் மனைவியை பறையர் புணர விட்டுக் கொடுத்ததோடு அல்லாமல் என் தாயை நானே  புணர்ந்தவன் ஆவேன்’’.

    மேற்கண்ட மூன்று திருவரங்கக் கல்வெட்டில் மூன்று செங்குந்தர்களான கைக்கோளர்கள் படைத் தலைவர்களாக தனித் தனியே சூளுரை ஏற்றது பொறிக்கப்பட்டுள்ளது. கைக்கோளர் என்போர் பல்லவரது பட்டடைக்குடி / படைக்குடியாக பல்லவர்களால் உருவாக்கப்பட்ட தனி சாதியார் ஆவர். அரையரான அகளங்க நாடாழ்வான் இவர்களை கட்டாயப்படுத்தி எவ்வாறு இழிவாக சூளூரை ஏற்கசெய்துள்ளார் என்பது தெரிந்தாகிவட்டது. பார்வை நூலில் இவர்கள் சாகும்  வரை வேலைக்காரனாக சாவதாக சூளுரை ஏற்பதாக பொருத்தமற்ற விளக்கம் தரப்பட்டுள்ளது. வேந்தர் பெயரும் காலமும் குறிக்காததால் கல்வெட்டின் காலம் என்ன என்று அறிய முடியவில்லை.

    பார்வை நூல்: தென்னிந்தியக் கல்வெட்டுகள், தொகுதி 24, பக்கம் 162, தொடர்ச்சியாக மூன்று கல்வெட்டுகள்  (A.R.No 267 to 269 of 1930) 

    விழுப்புரம் மாவட்டம், ஜம்பை, ஜம்பநாதர் கோயில் கல்வெட்டு

    1. ஸ்வஸ்தி ஸ்ரீ சகலபுவனச் சக்கரவர்த்திகள் ஸ்ரீ கோப்பெருஞ்சிங்க தேவற்கு யாண்டு 11 வது பெண்ணை வடகரை வாணகோப்பாடி நாட்டு செண்பையான வீரராசேந்திர சோ
    2. ழபுரத்து உடையார் திருத்தொந்தோன்றி ஆவுடையனாயனார் தேவதாநம் பெண்ணை தென்கரை குணமங்கலம் பயிற் செய்யும் படிக்கு ஏழாவழ முதல் காசாயம், பொன்வரி, ஆளமஞ்
    3. சி, அன்தராயம் கொள்ளக் கடவதல்லவாகச் சொன்னோம் ஆறகளூருடைய வாணகோவரையன் இராசராச தேவன் வந்நெஞ்ச இராயனேந். இப்படி சன்திராதித்தவரை செய்வதே. இது மாறுவான்
    4.  தன் மிணாட்டியை பரைமாயன்நுக்கு குடுப்பான். இது பன்மாகேசுர இரக்ஷை.

    செண்பை – ஜம்பை; காசாயம் –  காசாக வந்த வரி; ஆளமஞ்சி – நீர்நிலைகள் பேண வரி; அன்தராயம் – நிலவரி அல்லாத அகநாட்டு வரி ; மாறுவான் – இந்த ஏற்பாட்டை மாற்றுபவன்; குடுப்பான் – கொடுத்தவன் ஆவான்.

    விளக்கம்: காடவப் பல்லவன் கோப்பெருஞ்சிங்கனின் 11 ஆம் ஆண்டு ஆட்சியில் (பொ.ஊ.1253) பொன்பரப்பின வாணகோவரையர் வழிவந்த வாணகோ இராசராச தேவன் வன்நெஞ்சராயன் தென்பெண்ணையின் வடகரையில் அமைந்த வாணகோப்பாடி நாட்டு செண்பை கிராமத்தில் அமைந்த திருத்தொன்தோன்றி ஆவுடையார் கோவிலின் தேவதானம் ஆன தென்பெண்ணை தென்கரையில் உள்ள குணமங்கலம் என்ற ஊரில் பயிர் செய்வதற்கு காசாயம், பொன்வரி, அன்தராயம் உள்ளிட்ட  வரிகள் தண்டவேண்டாம் என்று வரிவிலக்கு அளித்தேன் என்கிறான். இந்த ஏற்பாட்டை மாற்றுபவன் தன் மனைவியை பரைமாயன் புணர விட்டுக் கொடுத்தவன் ஆவான். இந்த தர்மத்தை சிவபக்தர்கள் காக்க வேண்டும். பறையர் குறித்து வாணகோ வன்நெஞ்சன் கொண்டிருந்த இழி கருத்து இக்கல்வெட்டில் வெளிப்படுகின்றது.

    பார்வை நூல்: தொல்குடி வேட்டுவர் சமூக ஆவணங்கள், ஆசிரியர் ப. ஆனந்தகுமார், பக்.106

    கோயம்புத்தூர் மாவட்டம், அவினாசி வட்டம், திருமுருகன்பூண்டி முருகநாதர் கோவில்

    ஸ்வஸ்தி ஸ்ரீ விக்கிரம சொழதேவர்க்குத் திருவெழுத்திட்டுச் செல்லாநின்ற திருநல்லியாண்டு 11 வதுக் கெதிராவது புரட்டாதி மாதம் 18 தியதி ஞாயிற்றுக் கிழமை முதல் வாயறைக்கா நாட்டுப் பல்லவிடத்தில் வெள்ளாளன் மாப்புள்ளிகளில் சோழன் பறையனான தனபாலனேன். நாயனார் திருமுருகன்பூண்டி ஆளுடையார்க்கு கோயில் நாயகர்க்கு நாளொன்றுக்கு நாழியரிசி அமுதுபடி செல்வதாக இக்கோயில் காணியுடைய சிவப்பிராமணர் காஸ்ய கோத்திரத்து அவிநாசி முருகனான சீகாழியானும் அவிநாசிமுருகன் உள்ளிட்டாரும் சாந்தாரைக் காப்பான் திருவேங்கடமுடையானும் இவ்வனைவோங்கள். இவ்வச்சு பத்துக் கொண்டு எங்கள் மக்கமக்கள் குடங்கொண்டு கோயில் குடங்கொண்டு கோயில் புகுவான் சந்திராதித்தவரை செல்வதாக. இது பன்மாகேஸ்வர ரட்சை.

    நல்லியாண்டு – முடிசூட்டிய ஆண்டு, வெள்ளாளன் – கிழான் அல்லது அரையன், மாப்புள்ளி – தலைமை மதிப்பீடு செய்வோன், chief assessor, சாந்தாரை – சந்தனக் கல், மக்க மக்கள் – பேரர் வழிப் பேரர்.

    விளக்கம்: கொங்கு சோழன் விக்கிரமசோழன் முடிசூட்டி 11 ஆம் ஆண்டிற்கு எதிர்ஆண்டான 12 ஆம் ஆண்டு ஆட்சியில் (பொ.ஊ.1285) புரட்டாசி மாதம் 18 –ம் நாள் ஞாயிறு தொட்டு வாயறைக்கா நாட்டு பல்லடத்தின் கிழானான வெள்ளாளனிடத்தில் மாப்புள்ளியாக பொறுப்பில் இருக்கும் சோழன் பறையனான தனபாலன் திருமுருகன் பூண்டி இறைவர்க்கு ஒவ்வொரு நாளும் அமுதுபடிக்காக நாழியரிசிக்கு பத்து அச்சு வழங்கினான்.  இக்கோயில் காணியுடைய சிவப்பிராமணர் காசியப கோத்திரத்து அவிநாசி முருகன் சீகாழியான், அவிநாசி முருகன்,  திருவேங்கடமுடையான் ஆகியோர் பத்து அச்சு பெற்றுக்கொண்டு மக்களுக்கு மக்கள் என வழிவழிப் பேரர் காலம் வரை இதைநடத்தி வருவோம் என்று உறுதி கூறுகின்றனர்.

    இதனால் சோழப்பறையன் தனபாலன் கோவிலில் நுழைந்து இறை வழிபாடு செய்துள்ளான் என்று உறுதி ஆவது தீண்டாமை அக்கால் இருந்த்தில்லை என்பது மட்டுமல்ல அவன் தலைமை மதிப்பீட்டாளனாக இருந்துள்ளான் என்பது பறையர் உயர் பொறுப்பில் இருந்தனர் என்பதையும் தெரிவிக்கின்றது. இக்கல்வெட்டு பறையர் உயர் பொறுப்பில் இருந்தனர் என்பதற்கு சான்று. இதாவது, நிலம், பயிருக்கு வரி மதிப்பீடு செய்தான் என்பதற்கு சான்று.

    பார்வை நூல்: கொங்கு வேளாளர் கல்வெட்டும் காணிப்பாடலும், பக். 138

    திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் ரிஷபேசுவரர் கோயில் வடக்குக் கருவறைச் சுவர் 11 வரிக் கல்வெட்டு.

    1. ஸ்வஸ்தி ஸ்ரீ ஸகாப்தம் ஆயிரத்து ஒரு நூற்று எண்பதின் மேல் செல்லாநின்ற ஸிம்ஹ நாயற்று அபரபக்ஷத்துத்ருதியையும் நா[ய]ற்றுக்கிழமையும் பெற்ற ரேவதி நாள் ஆடையூர்நாட்டு எலியூற்றுக்கு மேற்கும் நம் _ _ _ _ _ _ _  க்கு உள்ளுப்பட்ட நாடும் மலையும் அடிவாரமும் தென்கரை நாடும் மூவரை வென்றநல்லூற்கு மேற்கு சிற்றிங்கை[க்]குக் கிழக்கு உட்பட்ட 
    2.  நாடும் மலையு முட்பட்ட நாடும் இந்த இரண்டு கரைநாட்டுக்கு உள்ளுப்பட்ட நாட்டவரும் நாட்டுநாயகஞ் செய்வார்களும் மன்றாடுவார்களும் பிள்ளைமுதலிகளும் [தனி]யாட்களும் படைநாயகஞ் செய்வார்களும் தனியாள் முதலிகளும் _ _ _ _ _ _ ம்பனாயகரு _ _ _ _ _ லிகளும் கூலிச்சேவகரும் கொந்த விச்சாதிரரும் நவிரமலைத் தென்பற்று நாட்டவரும் நாட்டுமுதலிகளும் வடமலைநாட்டவரும் நாட்டுமுதலிகளு முன்னுப்பட்ட
    3. பலசனத்தோமும் அடிவாரத்து மலையாளரும் மலையாள முதலிகளும் முதுநீர்மலையாளரும் மலையரண்முதலிகளும் செட்டிகளும் வாணிகரும் கணக்கரும் கருமப்பெரும் பன்னாட்டவரும் பன்னாட்டு முதலிகளும் பொற்கொ[ற்ற] கைக்[கோளரும் ஆண்]டார்களும் சிவப்ராஹ்மணரும் மன்றாடிகளு முவச்சரும் தென்கரைநாட்டு வடதலைநாட்டவரும் தென்மலை நாட்டாரும் உட்பட்ட நாட்டவரும் தெல்ல _ _ _ _ _ புலவ[ரு]ம் பண்
    4. ணுவாரும்  நியாயத்தாரும் பன்னிரண்டு பணிமக்களு முள்ளிட்ட பெரும் வேடரும்   பாணரும் பறையரும் பறைமுதலிகளும் செக்கிலியரும்      இறுளரு முள்ளிட்ட அனைத்துச்சாதிகளு[ம்] அந்தணன் தலையாக அரிப்பான் கடையாக உள்ளுப்பட்ட அனை[த்}துச்சாதி[மா]ற்க்கு தெ _ _ _ _ ல்லாரும் __ _ _ _ _ [ண]ம் பண்ணினபடியாவது எங்கனாயனாரமட்டன் கரிகாலச்சோழ ஆடையூர் நாடாழ்வார் திருவிராச்சியம் பண்ணி எழுந்தருளி[இ]ருக்க. இவர் ஏவி அருளினபடியே இவர்கள் திருத்தம்பி
    5. யார் நாயனார் நரசிங்கபன்மர் செய்து எழுந்தருளியிருக்க நாயனார் நரசிங்கபன்மர் மகன் பெரியுடையானும் இவன் தம்பி அர[சக]ணாயனும் கருப்புக்கட்டி நாயக்க[ருட]னே கூடி எங்கள் நாயன்[மாற்]கும் எங்களுக்கு[ம்] பகைதேடிக் கிழற்றுப்போயிருக்க இவர்கள் செய்த பிழையும் பொறுத்து இவர்கள் கூச்சந்தீ[ர்த்து]த் திருவெழுத்துச்சாத்தின திருமுகமும் குடுத்துச் செட்டிபுணை[ப]ட்டு அமைத்துவிட்ட இடத்து திருமுகமு மறுத்து எங்கள் நாயன்மாற்கு
    6. ம் எங்களுக்கும் பகைதேடி வெறுப்பான பேருடனே கூடி எங்களுக்குப் பகையாகையினாலும். இவர்கள் பிரிதிகங்கர் வ[ழியி]லுள்ள பேராகையாலும் இப்பெரியுடையாநும் அரசகணாயனும் இவர்கள் [த]ம்பி அமட்டாழ்வானும் எங்கள் நாயன்மாற்கு இராசத்துரோகிகளும்      நாட்டுத் துரோகிகளுமாய் இவர்கள் மூவரையும் பெண்டிழந்தான் கூட்டத்தில் ஒன்றாகப் புற[க்]கடித்தோம். பிரிதிகங்கர் மக்கள் எங்கள் நாயன்
    7.  மாற்குப் புகுந்த நம்பிராட்டியார் வயிற்றிற் பிறந்த பிள்ளைகளை அரசுக்குக் கொள்ளக் கடவதல்லவாகவும் அல்லாத பிள்ளைகள் பூர்வர்முறையிலே இராச்சியம் பண்ணப் கடவர்களாகவும் இம்மண்[ணு]ம் மலையு முள்ளதனையும் எங்கள் [ம]க்கள் மக்கள் வழிவழி இப்பெரியுடையானையும் அரச[கணா]யனையும் இவர்கடம்பி [அ]மட்டாழ்வாரையும், இவர்கள் மக்களி[ல்] [வழி]வழி ஒருத்தரையும் இம்மண்ணில் புகுத ஒட்டோம்
    8. இவர்களுக்கு இடங்குடுப்பதுஞ் செய்யோம், இடங்குடுப்பாரோடு கூடுவதுஞ் செய்யோம். இவர்க[ள்] மூவரும் இம்மண்ணுக்கு உரியரென்று சொல்லு[த]ல் சொல்லுவ[ர்க்கு] இடங்குடுக்[கச்] செய்யக்கடவோமு மல்லோம். இவர்களுக்குக் கீழோலை விடுதல், இவர்களைக் கா[த்]தல், இவர்க[ள் _ _ _ _ _] சருடன் பேசுதல்  செய்தாருண்டாகில் இராசத்துரோகிகளுமாக்கி நாயிலும் பன்றியிலும் கடையா[க ரு]த்தறுக்கக்கட _ _ _ _ கவும். இவர்கள் பெண்டுகளை மூக்கு மூலையுமறுத்துவிட
    9.  க்கடவோமாகவும். இவர்கள் பக்கல் பெண்டுகள் போனவன் குடியாக இப்படி [ஆகச்] செய்யகடவோமாகவும் இவர்கள் பக்கல் போன பேரைப் ப[ணி]செய் மக்[களை]  இட்டுக் கொன்றுபோடக்  கடவோமா[க]வும் இப்படிக்கு நாங்க ளனைவரும் பூணை ஓலைப்பாடியு[ம் ந]ந்திமங்கலமும் உள்ளுப்பட்ட இந்த அனைத்து[ங்] _ _ _ _ _இப்படி நிலைமைக் _ _ _ _ள் ப்ரமாணமிட்டோம்.
    10. இப்படி அற்றுமறவும் செய்திலோமாகில் வல்லவரையன் சத்தியம் தங்களம்மைக்குத் தானே மிணாளன் அசல வன்னியர் குதிரைக்குப் புல்லுப்பறிக்கி[ற] ப[றை]யற்கு எங்கள் பெண்டுகளைக் குடுத்தோமாகில் படுக்க[த] ஒலைப்பாடிக்குத் தப்பினாருண்டாகில் செயங்கொண்ட நாச்சியார் கோயிலில் செவ்வாய்க்கிழமையில் பட்ட[ஆ]டுபட்டது படக்கடவோமாக செயங்கொண்ட நாச்சியார் திரி_ _ _ _ _ தமிட்டுச் சிங்கநாயற்று இருபத்துமூன்றா
    11.  ந் தியதியான பஞ்சமியும் கஸ்வதியும் பெற்ற செவ்வாய்க் கிழமை நாள் ஆடுவெட்டிப் பூதமுதை[த்]து நிலைமை ப[ண்ணி] இப்படிக்குத் [தி]ருஇடவந்துறை நாயனார் கோயிலிலே கல்லும் வெட்டிக்குடுத்தோம் இவ்வனைவோம். இக் கல்வெட்டினபடிக்குத் தப்பினவன் கெங்கை குமரியிடைக் குராற்பசுக் கு[த்]தினவன் பாவங்கொள்வான். இப்படிக்கு இவனைத்து நாட்டவரும் பணிக்கக் கல்லுவெட் _ _ _ _ ய நாட்டாசாரியனேன். இவை என்னெழுத்து.

    மலையாளர் – மலையகத்து வாழ்வோர், பெண்டிழந்தான் – கம்மனாட்டி, புறக்கடித்தோம் – புறக்கண்ணித்தோம், ஓடவிட்டோம், பூரவர்முறை – தந்தைக்கு பின் மூத்த மகன் நாடாளுதல் முறை. இராச்சியம்  பண்ணு – அரசாளுதல், கீழோலை – நட்புத் தூது, அற்றுமறவும் – செய்யாமல் மறத்தல்.

    விளக்கம்: வேந்தன் பெயர் குறிப்பிடாத சக ஆண்டு 1180, பொது ஆண்டு 1258 இல் பொறித்த கல்வெட்டு. அமட்டன் கரிகாலச் சோழ ஆடையூர் நாடாழ்வான் என்ற அரையன் ஆட்சி செய்துவர இவன் ஏவியபடி இவனுடைய தம்பி நரசிங்கபன்மன் ஆட்சி செய்துவர, இவனது மூன்று மகன்கள் பெரியுடையான், அரசகணாயன்,  அமட்டாழ்வான் ஆகியோர் கருப்புக்கட்டி நாயகனுடன் சேர்ந்து கொண்டு இந்த சூளுரையை செய்யும் ஊரவர்க்கும் ஆடையூர் நாடாழ்வானுக்கும் இடையே பகையை வளர்த்து விடுகின்றனர். இந்த பெரியுடையான், அரசகணாயன், அமட்டாழ்வான் ஆகிய அண்ணன் தம்பிகள் மூவர் பிரிதிகங்கரைசருடன் நட்பு கொண்டவர்கள் என்பதோடு ஆடையூர் நாடாழ்வானுக்கு இராச துரோகிகளும் நாட்டுத் துரோகிகளும் ஆனதினால் இம்மூவரையும் பெண்டிழந்தான் (மனைவி இழந்தான்) கூட்டத்தோடு ஒன்றாக்கி சூளுரைப்போர் புறக்கடித்தனர். பிரிதிகங்கரைசர் பிள்ளைகள் ஆடையூர் நாடாழ்வான் பிராட்டிக்கு பிறந்த பிள்ளைகளை மகுடம் ஏற்கமுடியாதவராக ஆக்கி அப்படி அல்லாத பிள்ளைகளை பூர்வர்முறையில் அரசாளவைத்துவிட்டனர். அதனால் இம்மண்ணும் மலையும் உள்ள காலம் வரை, எமக்குப் பிள்ளைகள் அவர்கள் பிள்ளைகள் என வழிவழியாக பெரியுடையான், அரசகணாயன், அமட்டாழ்வான் ஆகிய அண்ணன் தம்பிகள் மூவரையும் இவர்கள் பிள்ளைகள் வழிவழி ஒருவரையும் இம்மண்ணில் புகவிடமாட்டோம், இவர்களுக்கு இடம் கொடுக்கவும் மாட்டோம். இவர் மூவருக்கு இடங் கொடுப்பவரோடு நட்பு கொள்ளமாட்டோம். இம்மூவர் இம்மண்ணுக்கு உரியவரென்று சொல்பவருக்கும் இடம் கொடுக்க மாட்டோம். இவர்களுக்காக தூதுபோதல், இவரைக் காத்தல், இவருடன் பேச்சு வைத்திருப்போர்  ஆகியோரை இராசதுரோகிகளாக்கி நாயினும் பன்றியினும் கடையராக எண்ணி அத்தகையோர் மனைவியர் மூக்கு முலைகளை அறுத்துவிடுவோம். இம்மூவருக்காக பணிசெய்யும் மக்களை கொன்றுபோடுவோம். இப்படிக்கு பூணை ஓலைப்பாடி, நந்திமங்கலம் உள்ளிட்ட ஊர் மறவர்கள் நாங்கள் மேற்கண்ட அனைத்தையும் பிரமாண செய்தோம். அப்படிச் செய்யாமல் மறந்துவிட்டோமானால் எங்கள் தாயை யாமே புணர்பவர் ஆனோம் அதோடு அசல வன்னியர் குதிரைக்கு புல்பறிக்கும் பறையருக்கு எமது மனைவிமாரை புணர விட்டவர் ஆனோம். படுக்கத ஓலைப்பாடிக்கு தப்பிச்செல்வோர் இருந்தால் செயங்கொண்ட நாச்சி கோவிலில் செவ்வாய்க் கிழமை பலிஇடப்படும் ஆடுபோல படுவோமாக என்று செய்ங்கொண்ட நாச்சியார் திருமுன்பு சபதமிட்டோம். சிங்க ராசி நிகழும் ஞாயிற்றுக் கிழமை 23 ம் நாள். பஞ்சமியான செவ்வாய்க் கிழமை ஆடுவெட்டி பூதம் உதைத்தோம். இப்படிக்கு திருஇடவந்துறை இறைவர் கோவிலில் நாங்கள் கல்வெட்டினோம். இக்கல்லில் உள்ளது படி நடவாதவன் கங்கைக்கும் குமரிக்கும் இடை வாழ்பவர் குராற்பசுவை கொன்று கொண்ட பாவத்தை கொள்வானாக.

    ஆடையூர் நாடாழ்வான் தன் பிள்ளைகள் சிறியவராய் இருப்பதால் தன் தம்பியை அரசனாக பதவி ஏற்க செய்துள்ளான், அவன்பின் தன் பிள்ளை அரசராக பதவி ஏற்க வேண்டும் என்ற புரிந்துணர்வோடு. ஆனால் தம்பி நரசிங்கபன்மன் பிள்ளைகள் தந்தைக்கு பின் மூத்தபிள்ளை என்ற முன்னைய வழிமுறைப்படி பிரிதிகங்கர் மகன்களின் உதவியோடு தாமே அரசராக ஆனதாகத் தெரிகின்றது. இதை எதிர்த்து தம் நாயகன் மீதான தமது நம்பிக்கையை மெய்ப்பிக்கும் வண்ணமாக பூணை ஓலைப்பாடி, நந்திமங்கலம் வாழ் மறவர்கள் மேற்கண்டபடி  சூளுரை செய்துள்ளனர். அரசியல் அறியாத வெகுளி மக்கள் அவர்கள் என்று தெரிகின்றது. இவர்கள் பறையரை இழிவாக மதிப்பிட்டது படைத்துறையில் அப்படியாக இருந்த ஒரு சொல்வழக்கைப் நமக்குப் புலப்படுத்துகின்றது. இக்கல்வெட்டில் சாதி குறிப்பிடப்படுவது சாதிமுறை 13 ஆம் நூற்றாண்டிலேயே வலுப்பெற்றுவிட்டதைக் காட்டுகின்றது.மொத்தத்தில் கல்வெட்டுச் செய்து அரிய செய்திகளை நமக்கு வழங்குகிறது.

    பார்வை நூல்: தென்னிந்தியக் கல்வெட்டுகள், தொகுதி 7, பக். 49-50, (A.R.No 105 of 1990) 

        

    Share
  • கலகம் பற்றிய கல்வெட்டு பதிவுகள்

    -சேஷாத்ரி ஸ்ரீதரன்

    கலகம் என்றால் சச்சரவு சண்டை எனப் பொருள். இதாவது, இருதரப்பார் நடுவில் நிகழும் பிணக்கு. இதன்போது ஒரு தரப்பு இன்னொரு தரப்பின் மீது அநியாயாமாக நடந்து கொள்வதும் நேரும். கல்வெட்களில் அது பற்றிய பதிவை கீழே காணலாம்.

    நாகை மாவட்டம் திருத்துறைப்பூண்டி வட்டம் திருத்துறைப்பூண்டி மூன்றாம் இராசராசன் 2 ஆம் ஆண்டு (1218 பொயு) 85 வரிக் கல்வெட்டு. இடங்கருதி எண்ணிற்கு பகரமாக சாய்வுக் கோடு இடப்பட்டுள்ளது.

    ஸ்வஸ்த்திசிரி திரிபுவனச் சக்கரவத்திகள் / சிரிராசராச தேவற்கு யாண்டு / இரண்டாவது ஆவ _ _ _ / இராசேந்திர வளநாட்டு உடையார் / திருத்துறைப்பூண்டி _ _ _ _ _ திருமடைவிளாகத்துக் கும்பிட்டிருக்கும் ஆண்டார்களில் / சிவஞானசம்பந்தரும் கிருதயதேவனும் / இவ்விருவோம் காசிக்ஹாவிக்குடி / ஆண்டார் திருச்சிற்றம்பலமுடைய / முதலியார் இத்திருத்துறைப் பூண்டியிலே / எழுந்தருளினவாறே இவரை கண்டு / பூண்டி உடையார்களுக்கும் மங்கலங்கி / ழையார்களும் எம்பெருமான் /  இத்திருப்பதியிலே எழுந்தருளி இருக்கவேணும் / இங்குத்தகைக்கு நாங்கள் ஒரு குகை எடுத்து / தருகிறோம் என்று சொல்லி பிச்சையும் / தங்கள் அகங்களிலே ஆக்கி படைத்து அமுது செய்துவார நீக்கச்சிதை பின்பு / எழுந்தருளி  இருக்க குகையும் எடுக்க வேண்டுகையில் /  வடகரையிலே பூண்டி உடையாருக்கு காணியான நிலத்திலே ஆற்றங்கரைக்கு / வடக்கே எழுபதி குழி நாயனாற்கு பரிவத்திச்ச / இக்குழிக்கு உடையார் ஸந்னிதிக்கு தெற்காக / பண்ணி சாதனமும் கொண்டு குகையும் எடுத்து / இவர் எழுந்தருளி இருந்து வாச்சே / இப்பூண்டி உடையாருக்கு முதலியார் இனக்கு /  பச்சைப்படைத்து வாரா நீக்க நீங்கள் உங்கள் / மடத்தில் வந்து தங்கின் தேசாந்திரி /  முதலிகள் அமுது செய்ய பெறாதே போக நில் என்று அருளிச் செய்தவாறே பின்பு / இப்பூண்டி உடையார் தங்கள் காணியாந தென்கரை / நிலத்து பாண்டியக்கல்லிலே மேற்க்கு இட்டு / மாவரை நிலம் விளைநிலமும் அரைமாநிலம் புஞ்சை / இந்நிலம் இரண்டு மாவும் தேசாந்திரிகளுக்குடலாக / இறையிலி செய்து குடுக்க இவ்வகையிலே / இதன் நிலம் அனுபோவித்து தேசாந்திரிகளுக்கு / அமுதுமாக்கி படைச்சி வைச்சதே பெரியதேவர்க்கு / இரண்டாவது நாளிலே குகையிடி கலகத்திலே இஸாதானங்கள் / அன்தாபமன் இதுக்கு பின்பு முதலியார் திருச்சிற்றம்பலம் / உடைய முதலியார் இருபத்துநாலாவது வரை / இப்படி அனுபவித்து வாச்சிதே இவர்களுக்கு இருபத்திநாலாவது / வரையிலே சிவலோகத்துக்கு எழுந்தருளினார் இம் / மடத்து முதலியார் சிவஞானசம்மந்தரும் முதலியார் கிருதயதேவரும் /  இரண்டு குகையிலும் எழுந்தருளி இருக்கையிலே / எழுந்தருளி இருந்தமை இப்படி அறிவேன் பூண்டி / உடையான் திருத்துறை நாயகன் இப்படிக்கு இவை என் எழுத்து /  இப்படி அறிவேன் நெடுமணலுடையான் ஆதிச்சதேவன் எழுத்து/  இப்படி அறிவேன் நெடுமணலுடையான் நம்பியாரு ஊரான் / எழுத்து இப்படி அறிவேன் மாதேவபட்டன் மகன் இருன்கிரிபட்டன் / எழுத்து இது பூண்டி உடையான் அஞ்சல் என்றாதுறையன் /  பிள்ளையாழ்வான் சயிஞாதனமைக்கும் இப்படிக்கும் /  இவை திருத்துறை நாயகவேளான் எழுத்து / இப்படி அறிவேன் இவை /  திருமாணிக்கப்பிள்ளை எழுத்து / இப்படிக்கு இவை இராபிச்சன் எழுத்து / இது தில்லைனாயபிச்சன் /   சதிசாதன்மைக்கும் / இப்படிக்கு /  இவை வேடம்பரம் உடையான் எழுத்து / இப்படி அறிவேன் / கங்கைகொண்ட பிச்சன் /  எழுத்து பூமி உடையான் /  அஞ்சல் என்றான் திருவாலவாய் /  உடையான் /  சஞாதன்மைக்கு இவை /  குடப்பலம் உடையான் எழுத்து /  இப்படி அறிவேன் /  நெடுமணல் உடையான் /  திருத்துறைநாயன் உடைய பிள்ளை / ஆண்டான் எழுத்து / இப்படி அறிவேன் மங்கலங்கிழையான் எழுத்து. / இப்படிக்கு இவை / நெடுமணலுடையான் ஆதிச்ச தேவன் எழுத்து / நெடுமணலுடையான் திருத்துறைபிச்சன் /  புலியூரந் சைச சாதனமைக்கு /  கடவக்குடையான் எழுத்து /  இப்படி அறிவேன் /  திருவீதிப்பிள்ளையார் எழுத்து /  இப்படி அறிவேன் / நம்பியார்யூரான் திருவீதி / பிள்ளை மகன் / தேவிமுன்டான் சைச்சாதனமைக்கு /  இவை சேந்த மங்கலமுடையான் எழுத்து.

    திருமடைவிளாகத்து – கோவிலைச் சுற்றி உள்ள இடம்; கும்பிட்டிருக்கும் ஆண்டார் – வணங்கிய அடியார், devotees; தகைக்கு – தங்குகை; குகை – முனிவர் இருப்பிடம், தவக்குடில்;  வாச்சே – வரச்சே, வருகையில்; முதலியார் – தலைவர், சுவாமிகள், மடாதிபதி; நீக்கச்சிதை –   ; தேசாந்திரி – ஊர் ஊராய் திரியும்; உடலாக – மூலமாக; இஸாதானங்கள் –  ; அன்தாபமன் –

    சோழவேந்தன் மூன்றாம் இராசராசனின் 2 ஆம் ஆட்சி ஆண்டில் (1218 பொ.யு) இராசேந்திர வளநாட்டு திருத்துறைப்பூண்டி இறைவர், “திருத்துறைப்பூண்டி கோவில் சுற்றிடத்தில் வாழ்ந்திருக்கும் அடியார்களில் திருஞானசம்பந்தனும் கிருதயதேனும் ஆகிய நாங்கள் இருவரும் காசிக்காவிக்குடி அடியார் திருச்சிற்றம்பலமுடைய  முதலியார் இத்திருத்துறைப் பூண்டியில் வந்துதங்கி இருக்கையில், இவரை நேரில் கண்டுப் பூண்டி உடையார்களும் மங்கலங்கிழையார்களும் ‘எம்பெருமான் இத்திருப்பதியிலே எழுந்தருளி இருக்கவேண்டும்’ என்று வேண்டி ‘இங்குத் தங்குகைக்கு நாங்கள் ஒரு தவக்குடில் எழுப்பித் தருகிறோம்’ என்று சொல்லி அவருக்கான பிச்சையையும் தங்கள் வீடுகளிலேயே ஆக்கி படைத்து உண்டுவித்துவர வடகரையில் பூண்டி உடையாருக்கு காணியான நிலத்தில் வினைக்கருவி கொண்டு குகையும் கட்டிஎழுப்பி அதில் இவர் எழுந்தருளி இருந்து வரும்நேரத்தே பூண்டி உடையார் ஊர் ஊராய் திரிபவர் உண்ண இறையிலி நிலம் ஒதுக்குகின்றார். அதில் இந்த தேசாந்திரிகளுக்கு சோறு ஆக்கிப் படைக்கப்படுகின்றது. இவ்வாறு நடந்து வர பெரியதேவர் இறப்பிற்கு இரண்டாவது நாளில் குகை இடிப்பு கலகம் நடந்தது. இடித்தவர் யார் என்ற குறிப்பு இல்லை. இதற்கு பின்பு திருச்சிற்றம்பலமுடைய முதலியார் 24 –ம் நாள் சிவலோக பதவி அடைந்தார். பின்பு முதலியார் சிவஞானசம்மந்தரும் முதலியார் கிருதயதேவரும் இரண்டு குகையில் எழுந்தருளி இருக்கையில் எழுந்தருளி இருந்தமையை அறிவேன் என்று 24 பேர் கையொப்பமிட்டு உள்ளனர்.

    தொடக்கத்தில் குறிப்பிடப்படும் பூண்டி உடையார் என்பவரே பெரியதேவன் என்று குறிக்கப்படுகின்றார். இவர் குகைஇடி கலகத்தில் பாதிப்புற்று 2 -ம் நாள் இறந்திருக்க வேண்டும். இதன் பிறகு திருச்சிற்றம்பலமுடைய முதலியார் 24 –ம் நாளில் இறந்துபோகின்றார். அவருக்குப் பின் சிவஞானசம்மந்தரும், கிருதயதேவரும் இரண்டு குகைகளில் முதலியார் (சுவாமிஜி) ஆகிவிடுகின்றனர். இதை கையொப்பமிட்ட பெரியோர்கள் நேரில் வந்திருந்து கண்டு ஆசிபெற்றனர். முதலியார் என்ற சொல் அக்காலத்தே எந்த சாதியையும் குறிப்பதல்ல. அதற்கு தலைவர் என்ற பொதுப் பொருள் தான் இருந்தது. இதில் தலைவர், படைத் தலைவர், தவக்குடிலின் தலைவர் ஆகியோர் அடங்குவர். தமிழில் தலைவர் என்பதை சமஸ்கிருதத்தில் சுவாமி என்பர். அந்த சுவாமி என்பது சுவாமிகள் ஆகி இக்கால் சுவாமிஜி ஆகிவட்டது. இந்த சுவாமிகள் என்ற சமஸ்கிருத சொல் புழக்கத்தில் வரும் முன், சுவாமிகள் என்பதை முதலியார் என்று விளிதனர் என்பதற்கு இக் கல்வெட்டு சான்றாக உள்ளது.

    பார்வை நூல்: தமிழ் கல்வெட்டுகள் வெளிச்சமிடுகின்ற அரிய உண்மைகள், பக். 296-298, முனைவர் வஞ்சியூர் க. பன்னீர் செல்வம் 098867 69865 / 09632967153.      ARIEp 1999, B. No: 272

    நாகப்பட்டினம் மாவட்டம், நாகை வட்டம், கீழையூர், முதலாம் சுந்தரபாண்டிய தேவர் 10 ஆம் ஆண்டு (பொ.யு 1261) 5 வரிப் பெருங் கல்வெட்டு.

    1. ஹரி ஓம். ஸ்வஸ்த்திசிரி கோச்சடபன்மரான சிரி சுந்தர பாண்டிய தேவற்கு யாண்டு 10–த்தாவது மகறநாயற்று பூர்வ்வபச்சத்து பஞ்சமியும் செவ்வாய் கிழமையும் பெற்ற விசாகத்து நாள் இராசேந்திர வளநாட்டு ஆளநாட்டுப் பிரமதேயம் சிரிராசராச சதுர்வேதி மங்கலத்து உடையார் பார்த்தீஸவரமுடையார் கோயிலில் மூவாயிரவன் திருவெடுத்தக் கட்டிலிலே முதலிகளும், பட்டர்களும், மஹாசனமும் பெருங்குறி      செய்து கொண்டு இருந்து
    2. விவஸ்த்தை பண்ணியபடி நம்மூர் அரையன் மூவாயிரகோண் நாடாழ்வான் முன்னாள் பள்ளிகள் கலகம் செய்ததின் நாளில் தாமதைக் கீழ் காரியஞ் செய்தார் கணக்கு எழுதினாரும் அன்னியாயத்தால் பிரம்மச்சை தங்கள் விலையாக எழுதுவித்துக் கொண்டு அன்னாளில் அனுபவித்துப் போந்த நிலங்களாய் உலகுடையப் பெருமாள் இன்னிலங்கள் அவர்களைத் தடுத்து _ _ _ முன்னாலிலே பிரம்மசேத்திரமாக பற்றிக் கொள்வதென்று முன்னாள் பிரஸாதஞ் செய்து நினைப்பிட்டருள திருமுகம் வருகையில் திருவாசகம் கல் விநியோகம் திருமுகச் சம்படம் உள்ளிட்டு முதலான பணத்துக்கு அன்னியாயங்கள் விலையாக நிச்சயத்து நாம் பணம் ஒடுக்கி விற்றின நிலத்து நம்முடையார் கோயிலில் பாண்டி மண்டலத்து குடநாட்டு ஆலகுமங்கலமான வீரபாண்டியன் மடிகைமாநகரத்து நாயனார் அழுகன் சிங்கநாயன் எழுந்தருளிவித்து உடையார் நரசிங்கஈஸ்வர முடையார்க்கு பாசைக்கும் அமுதுபடி சாத்துப்படிக்கும் திருப்பணிக்கும் திருநாள் எழுந்தருளி _ _ _ கொள்படிக்கும் திருநாமத்துக் காணியாக கொண்டு இட்ட
    3. பிடாகை உத்தமச்சோழநல்லூரில் பட்டினம் பெருவழிக்கு கிழக்கு திருவரங்கவதிக்கு மேற்கு விருதராச பயங்கர நல்லூர் எல்லைக்கு நடுவுபட்ட காட்டுக்கண்டத்து தெற்கடைய நிலம் கோவன் நிலத்து தெற்கடைய தடி பலவால் கங்கைகொண்ட சோழநல்லூர் சுகுவ கிழக்கு தாரவாய்க்காலுக்கு கிழக்கு வடக்கு கூத்த திருவரங்க வதிக்கு கிழக்கும் ஆக நிலம் குலோத்துங்க சோழநல்லூரில் _ _ _ பரமேசுவர வாயக்காலுக்கு மேற்கு கூத்து
    4. வீரராசேந்திர நல்லூரில் காந்திய் சோழவாய்க்காலுக்கு தெற்கு கூத்து பெரிய _ _ _ _  இதன் கிழக்கு தடிபலவால் _ _ _ _ _ பெரியநாச்சி என்று சொல்லப்பட்ட சிறகு _ _ _ _ குத்து ஆக இந்நிலமாவரை அரைக்காணி _ _ _ _ _ _ இன்னமும் இன்னாயனாருக்கு குடுத்த _ _ _ _ _சோழநல்லூரில் கணபதி வாய்க்காலுக்கு வடக்கு தானபாதம் என்று பேர்கூவப்பட்ட தடியில் மூல ஆற்றுவாய்படுகையும் மனைதிடரும் உள்ப்பட இந்நிலம் நாலே முக்காலே ஒருமாவும் ஆக இன்னிலம் பத்தே அரைக்காணி முந்திரகையும் எதிராமாண்டு கார்முதல் இன்னிலத்தால் இறுப்புக்கு வரும் _ _ _ _ ழுத்து ஊருடனே கூட்டிக்கொண்டு ஸந்திராதித்தவரையும் இந்நாயனாருக்கு இறையிலியாக குடுத்தபடிக்கும்

    இதன் பிறகு இக்கல்வெட்டு உடைந்துள்ளது.

    திருவெடுத்தக் கட்டிலில் – தலைமை ஏற்ற இருக்கையில்; முதலிகள் – படைத்தலைவர்; பெருங்குறி – கருத்துப் பறிமாற்றம் செய்து: விவஸ்தை – தீர்மானம்;

    சடையவர்ம சுந்தரபாண்டியனின் 10 ஆம் ஆட்சி ஆண்டின் (1261 பொயு) போது மகர ராசி கூடிய ஞாயிற்றுக் கிழமையும் வளர்பிறையின் 5-ம் நாள் செவ்வாயக்கிழமை விசாக நட்சித்திரம் கூடிய நாளில் இராசேந்திர வளநாட்டில் அடங்கிய ஆளநாட்டு பிரமதேயமான ஸ்ரீ இராசராச சதுர்வேதி மங்கலத்து பார்த்தீசுவரமுடையார் கோயிலில் மூவாயிரவன் தலைமையில் கூடிய கூட்டதில் படைத் தலைவர், பூசகர்கள், பெரியோர் அவையினர் ஆகியோர் கருத்துப் பறிமாற்றம் நிகழ்த்தி ஒரு தீர்மானம் கொண்டபடி கீழையூர் மூவாயிரகோன் நாடாழ்வான் முன்னிலையில், ”முன்னாளிலே பள்ளிகளான வன்னியர் கலகம் செய்த காலத்தில் அதனினும் கீழான செயல் செய்தார் கணக்கு எழுதியவர். அநியாயமாக பிராமணர் நிலங்களை தாம் விலைக்கு வாங்கியதாக எழுதிக் கொண்டு அனுபவித்து இறந்தார் அந்த உலகுடையப் பெருமாள்.

    அவர்களின் இந்த செயலைத் தடுத்து இந்நிலங்களை மீண்டும் பிராமணர் வயல்களாக ஆக்க முன்னாளிலே எண்ணியிருந்த நேரத்தில் அதற்கான அரசாணை. வருகையில் திருவாசகம், கல் விநியோகம், திருமுகச் சம்படம் முதலானவற்றுக்கு ஆகும் பணம் அநியாய விலை நிச்சயத்து அதற்கு நாம் பணம் கொடுத்து விற்ற நிலத்தில் நம்இறைவர் கோயிலில் பாண்டி மண்டலத்து குடநாட்டு ஆலகுமங்கலமான வீரபாண்டியன் மடிகைமாநகரத்து நாயனார் அழகன் சிங்கநாயனை வருவித்து இறைவர் நரசிங்கஈஸ்வர முடையாருக்கு பாசைக்கும், அமுதுபடி சாத்துப்படிக்கும், திருப்பணிக்கும், திருநாமத்துக் காணியாக இரண்டு இடங்களில் இறையிலி  நிலம் தரப்படுகின்றது”. அந்த நிலங்களின் இருப்பிடம், எல்லை குறிக்கப்படுகின்றது.

    பள்ளிகள் ஆன வன்னியர் முன்னாளிலே கலவரத்தில் ஈடுபட்ட போது உலகுடையப் பெருமாள் என்பவர் பிராமணர் நிலங்களை விலைக்கு வாங்கியாதாக பொய் ஆவணம் எழுதி அவற்றை அனுபவித்தார் என்கின்றது இக்கலவெட்டு.

    பார்வை நூல்: தமிழ் கல்வெட்டுகள் வெளிச்சமிடுகின்ற அரிய உண்மைகள், பக். 294-295, முனைவர் வஞ்சியூர் க. பன்னீர் செல்வம் 098867 69865 / 09632967153.      ARIEp 1947, B. No: 98

    திருமுருகன்பூண்டி திருமுருகநாதர் கோயில் அந்தராள வடக்கு வாயில் மேல். கொங்கு சோழன் வீரராசேந்திரன் 3 ஆம் ஆட்சி ஆண்டு (பொ.யு.1211 நாள் 301) 29 வரிக் கல்வெட்டு.  இடங்கருதி எண்ணிற்கு பகரமாக சாய் கோடு இடப்பட்டுள்ளது.

    ஸ்வஸ்தி ஸ்ரீ திருபுவனச் சக்கரவர்த்திகள் கோனேரிமேல் / கொண்டான் வடபரிசார நாட்டில் ஆளுடையார் திருமுருக / ன் பூண்டி ஆளுடையார் கோயில் சிவபிராமணரில் காசியபன் பிள் / ளை நாயனான பொன்னம்பல நம்பிக்கும் பொன்ன புகழ் வேந்த /  நுக்கு நம்மோலை குடுத்தபடியாவது இந்நாயனார் கோயில் / சிவபிராமணக் காணி தங்களது மாதவகள் பேசிக் குலவ / ட்டு முண்டாயிருக்க தம்பியான நாலேமுருகாண்டான் / அஞ்சவைத்து தங்காணியை அழிவு செய்கையாலே / தா நமக்கு மூன்றாவது நாளிலே நம்பக்கலே _ _ _ _ எங்கள் / காணி எங்களுக்கு ஆக வேணுமென்று நமக்கு தரும் அச்சு பத் / தும் தொண்டைமானார் பெறுவமுண்மைக்கு அச்சு மஞ்சும் / அச்சு பதினைஞ்சும் தாங்கள் வைக்கையில் இக்கோயில் / ரையநித _ _ _ _ த்தியங்களும் சைவாசாரி / யங்களும் மு_ _ _ _ல கல _ _ _ _ / விக்கவும்_ _ _ _ கோயில் பரிகலக்கடு பண்ணி /  சு நாழியும்_ _ _ _ ந படியில் அட்டிது செம்பாதி / யும் அட்டிது _ _ _ _ அச்சந போகமும் பிடி பி / டியிலும் _ _ _ _ இந்நான்கு எல்லைக்கு உட்பட்ட /  தேவதாநமும் எழுத்து _ _ _ _ பட்டன் மற்றும் எற்பட்டனவும் தன் மகன் மக்களுக்கு விலை ஒன்றி தன்ம / தானம் சீதனத்துக்கு உரித்தாகவும் இப்படிக்குச் / செம்பிலும் சிலையிலும் வெட்டிக் கொள்ளப் / பெறுவானாகவும் இப்படிச் சந்திராதித்தவரை /  செல்வதாக நம் / ஓலை குடுத்தோ / ம் 3 ஆவது நாள் /. 301 இவை நந் / தியம்மந் எழுத்து. / _ _ _ _ . 

    மாதவகள் – தலைமை கணக்கர் அல்லது கோயில் கணக்கர்; குலவட்டு – உபாயம், வழிமுறை; நம்பக்கல் – என்னிடம் வந்து; அச்சு – பொற்காசு

    கோனேரின்மை கொண்டான் கொங்கு சோழன் வீரராசேந்திரனின் மூன்றாம் ஆட்சி ஆண்டில் 1211 பொ.யு. வடபரிசார நாட்டில் திருமுருகன்பூண்டி திருமுருகநாதர் கோவில் சிவபிராமணர் பொன்னம்பல நம்பிக்கும், (அரையன்) பொன்ன புகழ் வேந்தனுக்கும் கொங்கு வேந்தன் வீரராசேந்திரன் நேரடியாக ஓலை ஒன்றை அனுப்புகிறார். அதில் “சிவபிராமணன் காணி குறித்து தங்களது தலைமை கணக்கர் பேசித்தீர்த்து வழிமுறை தந்துள்ளார். அந்த வழிமுறை செயலாகும் முன்னமே உமது தம்பியான நாலே முருகாண்டான் சிவபிராமணரை அஞ்சுறுத்தி அவரது காணியை அழித்ததாக சிவபிராமணன் மூன்றாம் நாள் என்னிடம் வந்து என் காணி எனக்கு வேண்டும், மீட்டுத் தருக என்று முறைப்பாடு செய்துள்ளான்.  இந்த சிவபிராமணன் 10 பொற்காசைத் நமக்கு தருகிறான், அதோடு தொண்டைமானும் 5 பொற்காசைத் தருகின்றார். ஆக இந்த 15 பொற்காசையும் நீங்கள் பெற்றுக் கொண்டு” என்பதோடு கல்வெட்டு தெளிவுபட பொருள் அறியமுடியா வண்ணம் ஆங்காங்கே சிதைந்துள்ளது. அதன் பின் இந்நான்கு எல்லை என்பதில் இருந்து கல்வெட்டு தெளிவாகத் தெரிவதில் இருந்து வேந்தன் தேவதானமும் சிவபிராமணனுக்கு நிலமும் கொடுத்து அதற்கு வரிகள் தவிர்த்து இறையிலியாகத் தருகிறான்.  இந்நிலத்தை சிவபிராமணன் தனக்குப் பின் தனது மகன் அதன் பின் அவனது மக்கள் அனுபவிக்க, விலைக்கு விற்க, தானதருமமாக வழங்க, சீதனமாக வழங்க உரிமையும் தருகின்றான் வேந்தன். இதைக் கல்லிலும் செப்பிலும் வடித்துக் கொள்ள வேணுமாயும் இது நிலவும் ஞாயிறும் நின்று நிலவும் வரை நடக்கக் கடவதாக சொல்கிறான். இந்த ஓலையை வேந்தனின் அணுக்கன் நந்தியம்மன் வேந்தன் சொல்லக் கேட்டு எழுதிக் கையொப்பம் இடுகின்றான்.

    இதில் புழங்கும் குலவட்டு என்பதை கொலை வெட்டு என்று புரிந்துகொண்டு இது ஏதோ கலகம் பற்றி சொல்கின்றது என்று தவறாகக் கொண்டு விட்டேன். ஆழ்ந்து படித்தபோது தான் அது வழிமுறை என்று பொருள் உணர்ந்தேன். என்றாலும் தட்டச்சி முடித்ததால் இதனுடன் சேர்க்கின்றேன்.

    இக்கோயில் சிவபிராமணர் முன்னம் ஏதோ வட்டிக்கு கடன் பெற்று விட்டு அதைத் திருப்பி வட்டியுடன் கட்டமுடியாமல் போகவே தலைமை கணக்கர் அது பற்றி எச்சரித்து அதற்கு வழிமுறை சொல்லிச் செல்கின்றார் என்று ஊகிக்க முடிகின்றது. அதன் பின் அரையனின் தம்பி வட்டிக்கு அடமானம் வைத்த நிலத்தைப் பாழ்படுத்தி பறிமுதல் செய்கின்றார். சிவபிராமணன் இதை உடனே வேந்தனிடம் முறைப்பாடு செய்கின்றார்.

    கல்வெட்டால் தெரியவரும் ஒரு உண்மை என்னவென்றால் வேந்தனுக்கு கீழ் மன்னன் அவனுக்கு கீழ் அரையன் அவனுக்குக் கீழ் கிழான் என்று நான்கு அதிகார அடுக்கு நிலவிவந்ததை காட்டும் கல்வெட்டுகள், இது போக இந்த நான்கு அதிகார அடுக்கினரின் குடும்பத்தவரும் நிர்வாகத்தில் தலையிட்டு அதிகாரம் செலுத்தி வந்தது இக்கல்வெட்டு குறிக்கும் தம்பி நாலே முருகாண்டான் மூலம் தெரிகின்றது. இப்படி இருக்கும் போது தமிழர் அல்லது தமிழராக நடிக்கும் சிலர் முட்டாள்தனமாக ஆட்சியாளரை அந்தப்புரத்திலும் போர்க்களத்திலும் அனுப்பிவிட்டு பிராமணர் ஆட்சி அதிகாரம் செலுத்தினர் என்று கூசாமல் பொய் உரைக்கின்றனரே! அதையும் இந்த சிந்தனை சுருங்கிய தமிழர் நம்புகின்றனரே!! இவர்களை எல்லாம் மீறி ஒரு பிராமணனால் ஆட்சி அதிகாரம் செலுத்த இயலுமா? என்ற கேள்வி அல்லவா எழவேண்டும்!!

    பார்வை நூல்: கொங்குநாட்டுக் கல்வெட்டுகள், கோயம்புத்தூர் மாவட்டம், பக் 70 & 71. ஆசிரியர் மா. கணேசன் & இரா. ஜெகதீசன்.

    https://tamilnadu-favtourism.blogspot.com/2017/07/piravi-maruntheeswarar-temple-thiruthuraipoondi.html

    Share
  • கல்வெட்டு குறிக்கும் ஆரியர் என்பவர் யார்?

    -சேஷாத்ரி ஸ்ரீதரன்

    பெரம்பலூர் மாவட்டம் வாலிகண்டபுரம் மூன்றாம் இராசராச சோழன் 11 ஆம் ஆண்டு 11 வரிக் கல்வட்டு

    1. ஸ்வஸ்த்திசிரி [!] திருபுவனச் சக்கரவத்திகள் இராசராசதேவற்கு
    2. யாண்டு 11 வது வடகரை வன்நாட்டு வாலிகண்டபுரத்து உடையார்
    3. திருவாலீஸிரமுடைய நாயனார் திருக்கோயிலில் இடங்கை தொண்ணூற்றெட்டுக்
    4. கலனையும் நிறவறநிறைந்து குறவறக்கூடி கல்வெட்டியபடியாவது
    5. பலமண்டலங்களில் பிராமணரும் ஆரியரும் சித்திர மேழிப்
    6. பெரியநாடான யாதவர் குலத்தலைவரான நத்தமக்களும் சதிரமுடித் தலைவரான
    7. மலையமான்களும் காயங்குடி கண்ணுடை அந்தணரும் சம்புவர்குலபதிப்
    8. பன்னாட்டாரும் பதினென் விஷயத்து வாணிய நகரங்களும் பொற்கோயிற் கைக்கோளரும்
    9. யிடங்கை தொண்ணூற்றெட்டுக் கலனைகளுக்கும் ஒருவற்கு வன்த நன்மைத் தீமை
    10. அனைவற்கும் ஆவதாகவும் யிப்படி விலங்கிலோமாகில் மாறுடாதிக்குங்
    11. கீழ்சாதிக்குங் தாழ்வு செய்தோமாக இத்தனை யிப்படி ஒரு காலாலும் யிருகாலாலும் முக்காலாவதும்.[!]

    கலனை – ஒன்றற்கமைந்த பல வகை உறுப்புகள், parts, as of a whole; ஆரியர் –உயர்குடியர், aristocrat, noble; விலங்கிலோமாகில் – குறுக்காக இருந்தோமானால்; மாறுடாதி –

    விளக்கம்: மூன்றாம் குலோத்துங்கனின் 11 ஆம் ஆட்சி ஆண்டில் பொ.யு. 1227 இல் வடகரை வன்நாட்டில் அமைந்த வாலிகண்டபுரத்து வாலீசுரர் கோவிலில் இடங்கை தொண்ணூற்று எட்டு உட்பிரிவினரும் நிறைவுறநிறைந்து குறைவறக் கூடித் தாம் கொண்ட முடிவை கல்வெட்டாய் வெட்டுவித்த செய்தியாவது யாதெனில், “பல மண்டலங்களில் வாழுகின்ற பிராமணர் எனும் அந்தணர், ஆரியர் எனும் வேளாண்கள், சித்திரமேழிப் பெரியநாடான யாதவகுலத் தலைவரான நத்த மக்கள், சதிரமுடித் தலைவரான மலையமான்கள், காயங்குடி கண்ணுடைய பிராமணர், வன்னியரான சம்புவர்குலபதிப் பன்னாட்டார், பதினென் விஷயத்து வாணியர், பொற்கோவில் கைக்கோளர் ஆகியோருடன் இடங்கை தொண்ணூற்று எட்டு உட்பிரிவினரும் கூடி ஒருவர்க்கு வந்த நன்மை தீமையை நம்மில் அனைவர்க்கும் ஏற்பட்டதாகக் கருத வேண்டும் அந்த அளவிற்கு ஒன்றுமையாக இருக்க வேண்டும். இந்த ஒற்றுமைக்கு குறுக்காக இருந்தோமானால் கீழ்சாதி மக்களுக்கு தாழ்வு செய்தோம் என்று கருதக்கடவது”. இதனை ஒரு காலாலும், இருகாலாலும், முக்காலாவதாக என்று கல்வெட்டு முற்றுப்பெறாமல் விடுபட்டுள்ளது எனவே அதன் பொருள் விளங்கவில்லை.

    சமூகத்தில் ஏதோ ஒரு கேடு நிகழ்ந்ததால், குறிப்பாக அதிக மழை அல்லது வறட்சி இவற்றால் ஏதோ ஒரு வற்கடம் (பஞ்சம்) வந்த போது அனைவரும் ஒவ்வொருவரது இன்ப துன்பத்தில் பங்கெடுக்க வேண்டும் என்று வலங்கை இடங்கை கூட்டத்தைக் கூட்டி வற்புறுத்தப்படுகின்றது. இவ்வாறு நடந்துகொள்வதற்கு எதிராக இருப்பது உழைக்கும் மக்களை தாழ்வு செய்தது போன்றதாகும் என கல் வெட்டி உள்ளனர். இங்கே ஆரியர் என்ற சொல்லாட்சி வேளாண் என்ற அரசகுடிகளைக் குறிக்கின்றது. 9 ஆம் நூற்றாண்டில் சோழரது பேரரசு ஆட்சியில் அரச குடியினருக்கு என்று ஒரு சாதி அமைப்பு உருவாகியது. இதில் இணைந்து வேந்தர்கள், மன்னர்கள், அரையர்கள் குடும்பத்து உறுப்பினர்கள் தம்மை வேளாண் என்று அறிவித்துக் கொண்டனர். பின்னாளில் இந்த வேளாண் என்ற சாதி பெருவாரியாக வெள்ளாளரோடு கலந்து விட்ட பண்ணை சாதி ஆகும். இந்த வேளாண்கள் படையாச்சி, கொங்கு வேளாளார், துளுவ வேளாளர், கள்ளரிலும் கலந்துள்ளனர். இந்த வெள்ளாளார்தாம் இக் கல்வெட்டில் ஆரியர் எனப்படுகின்றனர். இங்கு ஆரியர் என்பது உயர்குடியோர் என்ற பொருளில் தான் குறிக்கப்படுகின்றது. விந்தை என்னவெனில் வரலாற்றில் உண்மையாகவே ஆரியர் என்று குறிக்கப்பட்ட இந்த சாதி மக்கள் தாம் பின்னாளில் பிராமணரைப் பார்த்து ஆரியர் என்று சொல்லி தூற்றி அவமானப் படுத்தி வெறுப்பை அவர்பால் சமூகத்தில் வளர்க்கின்றனர். இதற்கு மனோன்மணியம் சுந்தரனார், மறைமலை அடிகள் ஆகியோரைக் காட்டாலாம். தமிழகத்தை ஆண்ட பல்லவ, வாண, நுளம்ப வேளிர்கள் தமிழகத்தின் குமரிப் பகுதி வரை சென்று ஆண்டுள்ளனர். இவர்கள் உண்மையாகவே ஈரான் ஈராக்கு பகுதியில் இருந்து வந்த ஆரியர்கள் என்பதைப் பல ஆய்வுகள் சொல்லுகின்றன. ஆனால் இவர்கள் தம் அயலகத் தாயகத்தை மறைத்து பிராமணர் தாம் ஆரியர் என்று கூறித் திரிகின்றனர். ஆனால் கல்வெட்டுகள் இவர்தம் பொய்களை தோலுரித்துக் காட்டுகின்றன. அடுத்து வரும் ஒரு கல்வெட்டு இதனை உறுதி செய்கின்றது.

    பார்வை நூல்: தமிழ் கல்வெட்டுகள் வெளிச்சமிடுகின்ற அரிய உண்மைகள், பக். 300, முனைவர் வஞ்சியூர் க. பன்னீர் செல்வம் 098867 69865 / 09632967153. ARIEp 1944, B. No: 276

    ஸ்வஸ்திஸ்ரீ திரிபுவனச் சக்கர
    வத்திகள் மதுரையும் ஈழமும் க
    ருவூரும் பாண்டியன் முடித்தலை
    யும் கொண்டு வீரா அபிஷேகமு
    ம் விஜையா அபிஷேகமும் பண்
    ணியருளிய திரிபுவன வீரதே
    வற்கு யாண்டு 37 ஆவது
    வம்பணாரும் புண்டரிக மலர்
    மடந்தை பாலடி நாளுஞ்
    சம்பு மாமுனி மாபலி வந்தோ. . . . .
    சிகையில்லாச கங்கை நாதா
    ர(வி)ந்த மலற்க்குழற் கண்ணக் கவ. . . .
    மகள் கழல் தொழ ஆரியோர்,
    அந்தணர் தம் ஆகுதியில் அ
    றங்காவல் பெற்றுடை
    யோர் வஞ்சி, கூடலுரை, கா
    ஞ்சி, வளவர் கோமானருளினா
    லே தஞ்சையுள்ளுங் காப்ப
    தற்க்குச் சக்கர வாளம் பெற்று
    டையோர் நாயனார் திருச்
    சிற்றம்பலமுடையார் ஸ்ரீ
    பாதங்களை நோக்கி பன்
    னெடுங்காலம் பணி
    கொண்டு அருநவதிக்கு
    எழுபத்தொன்பது னாட்
    டுப் பன்னாட்டோம்

    விளக்கம்: தாமரை மலரில் உறையும் இலக்குமியின் திருவடிகளை நாளும் வணங்கும் சம்பு மாமுனிவரின் பெருவேள்வியில் இருந்து வந்தோர். தலைக் கொண்டையில் ஆகாய கங்கைதனைக் கொண்ட கையிலாச நாதன் சிவனின் தாமரைப் பாதத்தை, உமையின் பாதத்தை வணங்கும் ஆரியரான அரசகுடி வேளாண் மக்கள் அந்தணரைக் கொண்டு வளர்க்கும் வேள்வித் தீயைக் காத்து நிற்கும் காவல் உரிமை பெற்றவர்கள். வஞ்சி, கூடல் (கருவூர்), காஞ்சி ஆகிய தேசங்களைக் காப்பதுபோல சோழர் கோமான் கொடுத்த உரிமையால் தஞ்சையைக் காவல் காக்க சங்கரவாளப் படையைப் பெற்றவர்கள். தில்லை திருச்சிற்றம்பலமுடைய கூத்தனின் திருப்பாதங்களில் பன்னெடுங்காலம் பணிசெய்து வருபவர்கள். நவதிக்கு (ஒன்பது திசை) 79 நாடுகளிலும் வாழும் பன்னாட்டவர் (வன்னியர்கள்) என்று தம் இனத்து சிறப்பை மெய்க்கீர்த்தியாக கல்வெட்டி உள்ளனர்.

    மூன்றாம் 37 ஆம் ஆண்டு ஆட்சியில் பொயு.1215 இல் வெட்டிய கல்வெட்டு. வன்னியர்களை “சம்பு மாமுனிவன் வேள்வித்தீயில் தோன்றியவர்கள்” என்று சொல்கிறது. வேள்வித்தீயில் தோன்றியவர்கள் என்பவர்கள் “க்ஷத்ரிய மரபினர்கள்” என்பது தெளிவாகும்.

    மேலும் இக்கல்வெட்டு கையிலாசநாதரான சிவன் பார்வதியை வணங்கும் அரசகுடி ஆரியர் அந்தணரைக் கொண்டு வளர்க்கும் வேள்வித் தீயைக் காத்துநிற்கும் காவல் உரிமை பெற்றவர்கள் வன்னியர்கள். அந்தணர்கள் வளர்க்கும் வேள்விக்குண்டத்தை காவல் செய்யும் பணி என்பது க்ஷத்ரியர்களின் பணி என்பதாகும். எனவே, வன்னியர்கள் என்பவர்கள் “க்ஷத்ரிய மரபினர்” என்பது உறுதியாகிறது.

    பொதுயுகம் 5 ஆம் நூற்றாண்டில் இராசத்தான் அபு மலையில் மேற்குஆசியாவில் இருந்து வந்த பார்த்தியர், சகரர் உள்ளிட்ட அயல்நாட்டு ஆட்சியாளர்களுக்காக வேள்வி வளர்த்து இவர்களை இராசபுத்திரர் என்ற பட்டத்துடன் இவரது ஆளும் உரிமையை தக்கவைத்து வேள்வி சமயத்தின் புரவலர், காவலர் என்ற பொறுப்பையும் பிராமணர் இவர்குளுக்குத் தந்தனர். இந்த வேள்விச் சடங்கு ஏன் நிகழ்த்தப்பட்டது என்றால் குப்தர்கள் இந்த அயலக ஆட்சியாளர்களை வந்தேறிகள் என்று சொல்லி சொல்லித் தான் உள்நாட்டு மக்களிடம் இருந்து அயன்மைப்படுத்தி இவருடன் கடும்போர்ச் செய்து வெற்றி கொண்டு இவரையும் இவர் ஆட்சியையும் வடக்கே ஒழித்துக் கட்டினர். அந்த நேரத்தே இந்த கையறுநிலையில் இருந்து இவர்களை விடுவிக்க இவர்குளுக்கு உதவிக்கை நீட்டி ஒரு வேள்வியால் இவர்களை உள்நாட்டு மக்களாக, இராசபுத்திரராக அறிவித்து அரசியலில் இவர்களுக்கு மீண்டும் மறுவாழ்வு தந்தனர் பிராமணர். அதன்பின்பு தான் சத்திரியரை விட பிரமணரே முன்நிலை என்ற வருணாசிரம நிலையை, ஸ்தானத்தை பிராமணர் இவர்களின் ஒப்புதலோடு பெற்றனர். இந்த இராசபுத்திரர் தாம் கொண்ட சூளுரைக்கு ஏற்ப வேள்வி சமயத்தையும், புராண சமயத்தையும் பேரளவில் உத்தாரம் (ஆதரவு) கொடுத்து தூக்கி நிறுத்தினர். தெற்கே பல்லவரும் சாளுக்கியரும் அத்தகு இராசபுத்திரர் ஆவர். அதனால் இவர்களால் சைவமும் வைணவமும் மதங்களாக வளர்ந்தன.

    மேற்கண்ட அரியலூர் மாவட்டக் கல்வெட்டைப் படியெடுத்து வெளியிட்டவர் முனைவர் இல. தியாகராஜன். இக்கல்வெட்டும் செய்தியும் James Robert சோழனார் முகநூல் பதிவில் உள்ளது.

    https://tamilnadu-favtourism.blogspot.com/2019/02/valeeswarar-temple-valikandapuram-perambalur.html

    வாலிகண்டபுரம் அருள்மிகு வாலாம்பிகை சமேத வாலீஸ்வரர் திருக்கோவில், வரலாறு, சிறப்பு மற்றும் இப்பொழுதைய நிலை (1)

    திருச்சிராப்பள்ளி மாவட்டம் திருவரங்கம் கோவில் சந்தன மண்டபம் தெற்கு சுவர் 24 வரிக் கல்வெட்டு.

    1. ஸ்வஸ்தி ஸ்ரீ[ ] கோயில் [பதிமு] பல
    2. கொத்திலும் செய்வதாக
    3. பெருமாள் சுந்தரபாண்டிய
    4. தேவர் ப்ரஸாதஞ் செ[ய்]தருளின
    5. திருமுகத்துக்கு கல்வெட்டு
    6. ஏ தன் விஸ்வமஹிபாலமணி கொ
    7. .. ர ..ண்ட்நம் [ ] ஸ்ரீமன் ஸூந்த்ரபாண்ட்யஸ்ய
    8. [ஸா]ஷநம் வைர . ஷநம் [ ] த்ரிபுவனசக்
    9. (க்)கரவ[ற்]த்தி கோனேரின்மை கொண்டா
    10. ன் அழகிய மணவாளப்பெருமாள்
    11. கோயில் ஸ்தாநபதிகளுக்கு இக்கோ
    12. யிலுக்கு முன்பு செய்துபோதும் [பதிமு]
    13. ஒரு கொத்தாகப் பெறாதுஎன்னூமித்தையிட்டு
    14. பலகொத்துமாக பத்தாவது ஆவணி மாத மு
    15. தல் [பதிமு] இட்டுக்கொள்வதாகவும் பொற்
    16. காவல் உள்ளவிடமெங்கும் ஆரியரும் உள்ளூராரும்
    17. ஒக்க காக்கவும் பண்ணுவதாக வாணாதராயற்குச்
    18. சொன்னோம். இப்படிக்கு இவ்வோலை பிடிபாடா
    19. க கொண்டு இப்படி செய்துபோதவும் ப
    20. ண்ணி இப்படி சந்த்ராதித்யவல் செய்வதாக கல்
    21. லிலும் செம்பிலும் வெட்டிகொள்க. இப்படி
    22. சொல்லுவதாக யா _ _ _ _ _ _ _ மாகக் காட்டச் சொ
    23. ன்னோம் இவைகச்சிநெல்மலி உடையா
    24. னெழுத்து யாண்டு 10 ள் 405

    திருமுகத்துகல்வெட்டு – அரசாணைக் கல்வெட்டு; ஸ்தானாதிபதி –தலைவர் chief; ஒக்க – இணைந்து

    விளக்கம்: பெருமாள் சுந்தர பாண்டியன் என்னும் சடவர்ம சுந்தரபாண்டியன் வாணாதராயருக்கு தனது10 ஆம் ஆண்டு ஆட்சியில் (1261 பொ.யு.) 45 ஆம் நாளில் இட்ட அரசாணையாவது, “கோனேரின்மை கொண்டான் அழகிய மணவாளப் பெருமாள் (திருவரங்கன்) கோயில் தலைவருக்கு! முன்பு செய்ததுபோல பதிமு ஒரு கொத்தால் செய்யப்பெறாது பலகொத்தாக சேர்ந்து ஆவணி 10 ம் நாள் பதிமு இட்டுக்கொள்ள பொற்காவல் (கருவூலம்) உள்ள இடமெங்கும் ஆரியரும் உள்ளூராரும் இணைந்து காத்தல் செய்ய வாணாதராயருக்குச் சொன்னோம். இதை இந்த ஓலையில் உள்ள வழிகாட்டுதல்படி சந்திராதித்தவர் வரை நடந்தேற கல்லிலும் செம்பிலும் வெட்டிக் கொள்க”.

    கருவூலத்தை காக்க ஆரியரும் உள்ளூராரும் என்ற சொற்றொடரில் பயிலும் ஆரியர் என்ற சொல் காவல் காக்க என்று வருவதால் பிராமணரைக் குறிக்கவில்லை வேளாண் அரசகுடியாரைக் குறிப்பதே என்பது தெளிவு. இதனால் 13 ஆம் நூற்றாண்டில் வேளாண் என்போர் ஆரியர் என்று அறியப்பட்டனர் என்றாகின்றது.

    பார்வை நூல்: தென்னிந்திய கல்வெட்டுகள் தொகுதி 24, பக் 226, No 202 A.R. No 84 of 1938-39

    திருச்சிராப்பள்ளி மாவட்டம் திருவரங்கம் கோவில் சந்திர புஷ்கரணிக்கு எதிரே உள்ள சுவரில் உள்ள 8 வரிக் கல்வெட்டு.

    1. கோனரயவம்மர் த்ரிபுவனச்சக்ரவத்திகள் ஸ்ரீ குலசேகரதேவர்க்கு யாண்டு 4 ஆவது ஆடி மாதம் 10 தியதி / நாள் கோயில் அகரம் இரவிவம்மச்சதுர்வேதிமங்கலத்து பட்டர்களுக்கு
    2. திருப்பதி ஸ்ரீ வைஷ்ணவர்களில் ஸ்ரீ வைகுந்ததாதரேன் பற்றுமுறி குடுத்த பரிசாவது [ ] இவ்வகர நத்தத்துக்கு வாஸ்து ஸேஷத்துக்கும் தவராசன் படுகைக்கும் விலையாக நிச்சயித்து திருக்கோட்டகாரத்தில்
    3. ஒடுக்குவதாந பணம் 2200. இப்பணம் இரண்டாயிரத்திரு நூற்றுக்கும் பற்றின திருப்பணிக்கு பிறித்த பணத்தில் பற்றின இரண்டாவது எதிராமாண்டு தை மாதம் 29 ம் தியதி திருப்பேரில் பிறி
    4. த்துத் தந்து பற்றின பணம் 200 ம் திருமுற்றுப்பற்று ஜகதேகவீர சதுர்வேதி மங்கலத்து பற்றின பணம் 829 ம் ஆகப் பணம் ஆயிரத்திருபத்தொன்பதும் ஆனி மாதம் இரண்டாந்தியதி ஆ
    5. ரியரைத் தெண்டம் நிச்சயித்த பணத்தில் பற்றின பணம் 1130. கைக்கோளர் பேரால் தெண்டம் நிச்சயித்த பணத்தில் குலசேகரதாதர் தந்து பற்றின பணம் 41 ம் ஆக பணம் 1171 ஆக பணம் 2200
    6. இப்பணம் இரண்டாயிரத்து இருநூறும் இப்படிகளால் பற்றிக் கொண்டு இரண்டாவதில் எதிராமாண்டு சித்திரை மாதம் ஏழாந்திய[தி] நாள் திருச்சிவிகைக்கும் திருவாசிகை[யு]ம் உள்ளிட்டனவயிற்றுக்கு நான்
    7. பொற்பண்டாரத்தில் ஒடுக்கின பொன்னிலே இவ்வாட்டை மார்கழி மாதம் 13 தியதி பிறித்து குடுத்து
    8. பற்றுமுறி குடுத்தேன் பட்டர்களுக்கு ஸ்ரீ வைகுன்ததாதரேன் [ ]. இப்பணம் பொற்பண்டாரத்திலே முதலிட்டு குடுத்தமைக்கு.

    கோயில் அகரம் – திருவரங்கம் அக்கிரகாரம்; பற்றுமுறி – ஒப்புகைச்சீட்டு, receipt, தண்டம் – fine; சிவிகை – சிறு பல்லக்கு; வாசிகை – ; திருக்கோட்டாகாரம் / பொற் பண்டாரம் – கருவூலம், முதலிட்டு – முன்பணம், advance

    விளக்கம்: குலசேகர பாண்டியனுக்கு 4 ஆம் ஆட்சிஆண்டில் (1317 சூலை7 ல்) ஆடி மாதம் 1 ம் நாள் கோயிலான திருவரங்கத்தின் அக்கிரகாரமான இரவிவர்மச் சதுர்வேதிமங்கலத்து பட்டர்களுக்கு திருப்பதி வைணவரான ஸ்ரீவைகுந்ததாசர் கொடுத்த பற்றுமுறி பரிசு யாதெனில் அந்த அக்கிரகாரத்து நத்தத்திற்கும் வாஸ்துசிறப்பிற்கும் வாங்கிக் கொடுத்த தவராசன் படுகை நிலத்திற்காக விலை தீர்மானித்து அவர் 2,200 பொன்னை திருக்கோட்டாகாரத்தில் செலுத்தினார். பின்பு இப்பணத்தை திருப்பணிக்காக பிரித்து வழங்குகிறார். இதாவது சிவிகை, வாசிகை உள்ளிட்டவற்றை வாங்குவதற்கும் இவர் கருவூலத்தில் செலுத்திய பொன்னில் அவ்வாண்டு மார்கழி மாதம் 13 ம் நாள் அப்பணத்தை பிரித்துக் கொடுத்ததற்கான, இதாவது பண்டாரத்திலே முன் பணத்தை கொடுத்ததற்கான பற்றுமுறியை பட்டர்களுக்கு ஸ்ரீ வைகுந்ததாசர் கொடுத்தார். அவருக்கு இந்த 2,200 பொன் எப்படி வந்ததென்றால் பணம் பெற்ற மூன்றாம் ஆண்டு தை மாதம் 29 ம் நாள் இறைவன் பேரில் பிரித்துத் தந்த பணம் 200 ம் ஜகதேகவீர சதுர்வேதி மங்கலத்தில் பெற்ற பணம் 829 ம் ஆக மொத்தம் 1029 பணம். ஆனி மாதம் இரண்டாம் நாள் ஆரியருக்கு தீர்மானித்த தண்டம் பணமாக பெற்றது 1,130. அதேபோல் கைக்கோளரிடம் தண்டமாக தீர்மானித்து குலசேகரதாசர் தந்து பெற்ற பணம் 41 என மொத்தம் 1171 பணம் ஆகும். 1029 + 1171= 2,200.

    குலசேகரதாசரும் வைகுந்த தாசரும் துறவிகள் போலத் தெரிகின்றது. போர்த் தொழில் செய்யும் வேளாண் ஆரியரும், கைக்கோளரும் தாம் போரிலோ அல்லது வேறு ஒரு காரணமாகவோ செய்த கொலை முதலான குற்றச் செயலுக்கு கழுவாயக செலுத்திய தண்டப் பணம் 1,171 என கருதலாம். ஏனெனில் பணம் எதற்காக தண்ப்பட்டதுஎன்ற செய்தி இல்லை.

    பார்வை நூல்: தென்னிந்திய கல்வெட்டுகள் தொகுதி 24, பக் 267, No 244 A.R. No 36 of 1936-37

    Share
  • பண்டு சமூகத்தில் நிலவிய விந்தை வழக்கம்

    -சேஷாத்ரி ஸ்ரீதரன்

    பண்டைக் கால மக்களிடம், குறிப்பாக சில சாதி மக்கள், சில பகுதி மக்களிடம் விந்தையான  வழக்கங்கள் கடைபிடித்து ஒழுகப்பட்டன என்பது கல்வெட்டுகளால் அறியப்படுகின்றது. இவற்றை படித்துஅறியும் போது அவர்களின் நம்பிக்கை அதனால் அவர்பெற்ற பயன் ஆகியவை பற்றிய கேள்வி நம் நெஞ்சத்தில் கட்டாயம் எழும்.

    கோவை மாவட்டம் அவினாசி வட்டம் அன்னூர் எனும் ஊரில் கோவில் கொண்ட மன்னீசர் கருவறைத் தெற்கு சுவரில் காணப்படும் 5 வரிக் கல்வெட்டு.

    1. ஸ்வஸ்திஸ்ரீ கோக்கலிமூர்க்கந் ஸ்ரீ விக்கிரம சோழ தேவற்குத் திருவெழுத்திட்டுச் செல்லாநின்ற யாண்டு இருப்தேத்தேழாவது புரட்டாதி திங்கள் முதல்
    2. கவையன்புத்தூரிலிருந்து வாழும் புள்ளங் _ _ _ _ மன்னியூர் பரதேவரர்க்கு எனக்கு காற்காலத்தில் வண்டு கொட்டி இல்லை வைச்சு என்னடியார் பொ
    3. துவங்கோதையும் மக்களைஉம் கோசநமேயையும் மக்களையும் மன்னியூராழ்வார்க்கு நீரொட்டிக் குடுத்தேன் என்னடியாரை _ _ _ _
    4. என் ஸ்வரூவமாக ஒருபடிமமும் _ _ _ _ பெண்படிமமும் ஸந்தி விளக்கொன்றும் அவ்விளக்குக்குப் பொன் முக்கல முக்கழஞ்சுங் கொண்டு சந்த்ராத்திதவலு மெரிப்பிக்கக் கடவார்
    5. மன்னியூர் ஸபைஓம்.

    திருவெழுத்திட்டு – முடிசூடி; இல்லை வைச்சு – பச்சிலை வைத்து; என்னடியார் – வேலையாள்; படிமம்  – பாவை, பதுமை, பொம்மை; சபையோம் – கருவறை பிராமணர்.

    விளக்கம்: கொங்கு சோழன் கலிமூர்க்கன் விக்கிரம சோழனின் 27 ஆம்ஆண்டு ஆட்சியில் (கி.பி. 1032) புரட்டாசி மாதம் முதல் அன்று கவையன் புத்தூரைச் சேர்ந்த புள்ளன் என்பான் மன்னியூர் ஈசனுக்கு,  “எனக்கு  மழைக் காலத்தில் வண்டு கொட்டி பச்சிலை வைத்து குணமானதால் என் வேலையாள்கள் பொதுவன் கோதை அவன் பிள்ளைகள், கோசன் மேய் அவன் பிள்ளைகள் ஆகியோரை மன்னியூர் ஈசனுக்கு நீரட்டித் தானமாகக் கொடுத்தேன். என்னை ஒத்த வடிவில் ஒரு பாவையும் என் (மனைவி) வடிவில் ஒரு பெண் பாவையும் செய்து கொடுத்தேன், அத்தோடு ஒரு சந்தி விளக்கும் அவ்விளக்கு எரிக்க பொன், முக்கல முக்கழசு (நெல்) கொடுத்தேன்”. இதை சந்திரசூரியர் வரை எரிக்கக் கடவதாக ஒப்புக் கொண்டோம்  மன்னியூர் கருவறை பிராமணர்.

    கோவையில் இன்றும் பதுமைகளைச்  செய்து வழங்கும் வழக்கம் நிலவுவதாகச் சொல்லப்படுகிறது. வேலையாள்களை அடிமைகளாகக் கோவில்களுக்கு அன்றைய ஆண்டைகள் கொடுத்துள்ளனர் என்பது தெரிகின்றது. மூன்று இடங்களில் இக்கல்வெட்டு சிதைந்துள்ளதால் செய்தியைத் தெளிவாக அறிந்துகொள்ள முடியவில்லை.

    பார்வை நூல்: கோயம்புத்தூர் மாவட்டக் கல்வெட்டுகள், தொகுதி  I, பக். 75, த.நா.அ. தொல்லியல் துறை, சென்னை – 8.

    பாகூர் திருமூலநாதர் கோவில் கருவறை தென்சுவர் 16 வரிக் கல்வெட்டு

    1. ஸ்வஸ்திஸ்ரீ கன்னர [தேவர்க்கு யாண்]
    2. டு 202 (22) வேசாலிப்பாடி வடகரை வாகூர் நா
    3. ட்டு மன்றாடிகளே வாகூ[ர்] ஸ்ரீ மூலட்டா[ன]த்து
    4. ப் பெருமாளுக்கு நாங்கள் வைய்த்த தந்ம
    5. ங் கட்டிலேறப் போம்போது ஒரு ஆடு கு
    6. டுத்துக் கட்டிலேறுவோமாகவும் [புற]நா
    7. ட்டி நின்று வந்து இஞ்ஞாட்டிற் கட்டி
    8. லேறு மன்றாடி வசமொரு ஆடு குடுப்ப
    9. தாகவும் கூடாது திறம்பி[னோ]மைக் க
    10. ணப் பெருமக்களுந் தேவரடியாரு மிர
    11. ண்டாடு பிடித்துக்கொள்ளப் பெறு
    12. வதாகவும் ஒட்டிக் குடுத்தோ மிஞ்ஞா[ட்]
    13. [டு] மன்றாடிக(ள்)ளோம் இத் தம்மம் ஸ
    14. ந்த்ராதித்தவந் நிற்பதாக நிறுத்திக் குடு
    15. ப் போமானோ [மி]ஞ்ஞா[டு] மதகு செய்கின்
    16. ற மதகரோம் ஸ்ரீ0 0 0

    மூலட்டானத்து – மூலத்தானத்து; கட்டிலேறு – முதலிரவு கூடுகை நிகழ்த்து; மன்றாடி – இடையர், ஆயர்; திறம்பினோமைக்கு – தவறுதல், மாறுதல், பிறழ்தல்; கணப்பெருமக்கள் – சாதிப் பெருமக்கள்; ஒட்டி –  இரட்டித்து; நிற்பதாக நிறுத்தி – இருப்பதாக நடத்தி; இஞ்ஞாட்டு – இந்நாட்டு, இவ்வூர்; மதகு – நீர்பாயும் மடை, குமிழித் தூம்பு, தேவையான நீரைச் சீராக வெளியேற்றுவதற்கு ஏற்ற வகையில் திறந்து மூடக்கூடிய அமைப்பு.

    விளக்கம்: இராட்டிரகூட வேந்தன் மூன்றாம் கிருஷ்ணனான கன்னரதேவனின் 22 ஆம் ஆண்டு ஆட்சியில் (கி.பி. 961) வேசாலிப்பாடி வடகரையில் அமைந்த வாகூர் நாட்டின் இடையர்களோம், “வாகூர் மூலத்தானத்துப் பெருமானுக்கு நாங்கள் வைத்த தர்மமாவது யாதெனில்  கட்டிலேறுதலான முதலிரவுக் கூடுகை நிகழ்த்தப் போகும் போது ஒரு ஆடு கொடுத்துக் கட்டிலேறுவோமாகவும், பிற ஊரில் இருந்து வந்து இங்கு முதலிரவுக் கூடுகை நடத்தும் மன்றாடியிடம் ஒரு ஆடு கொடுப்பதாக ஒப்புக் கொண்டோம். இப்படி ஒப்புக் கொண்டபடி நடக்கத் தவறினால் இடையர் சாதி பெருமக்களும் தேவரடியாரும் இரண்டு ஆடு பிடித்துக் கொள்வார்களாக என்று ஆடுகளை இரட்டித்துக் கொடுத்தோம் இந்தஊர் மன்றாடிகளோம். இத்தர்மம் சந்திரசூரியர்  வரை இருப்பதாக நடத்திக் கொடுப்போமானோம் இவ்வூர் மதகு செய்கின்ற மதகரோம்“

    பண்டு சிறுபிள்ளையின் போதே திருமணம் நடத்திவிடுவர். மணமகள் அதன்பின் தன் தாய்வீடு சென்றுவிடுவாள். அவள் பருவம் எய்திய பின்பு நாள் பார்த்து அவளை கணவனிடத்தில் கொண்டு சேர்க்கும் போது அவ்விணையர் குடும்பம் நன்கு பெருகி வளர வேண்டும் என்ற நோக்கில் அதற்கு அடையாளமாக அவர்கள் இல்லற வாழ்வில் முதன்முதலாக ஈடுபடும் போது ஒரு ஆட்டை கோவிலுக்கு தானமாகக் கொடுப்பதை இடையர் வழக்கமாகக் கொண்டிருந்துள்ளனர். அவ்வூர் பெண்ணை மணந்து அவ்வூரிலேயே வாழவரும் மணமகனுக்கும் ஒரு ஆட்டை வளர்ச்சியின் அடையாளமாக கொடுத்துள்ளனர் போலும். இதைக் கண்காணிக்க மதகு பணிசெய்வோரை அமர்த்தி உள்ளனர். அவர்கள் இதற்கு ஏன் ஏற்படுத்தப்பட்டனர் என்று புரிந்துகொள்ள முடியவில்லை. ஒருகால் இருசாராரும் ஊருக்கு வெளியே அண்டிய பகுதியில் வீடு அமைத்து வாழ்ந்ததால் ஒருவரை ஒருவர் அறிவர் என்று  ஒரு சான்றுக்காக மதகு செய்வோர் இப்படி ஆக்கப்பட்டனரோ?

    பார்வை நூல்: புதுச்சேரி மாநிலக் கல்வெட்டுகள், பாகூர்  S Kuppusamy & G Vijaya venugopal,  Institute Francais De Pondichéry :  2006.

    Share
  • வீரபாண்டியன் மணந்த தேவரடியாள்

    -சேஷாத்ரி ஸ்ரீதரன்

    கோவில் இயக்கம் தந்திவர்மன், அவன் மகன் கம்ப வர்மன் காலத்தில் கருங்கல் கட்டடமான கற்றளி இயக்கமாக உருப்பெற்று ஆகமமாக முறைப்படுத்தப்பட்ட போது கோவில்களில் ஆடல், பாடல், பூசனை நடவடிக்கைகள் அறிமுகப்படுத்தப்பட்டு அதற்கெனத் தம்மைத் தாமே மனமுவந்து ஒப்புக் கொடுப்போர் கோவில்களில் ஏற்கபட்டு அவர்களுக்கான வாழ்வாதார ஏற்பாடுகளும் ஆட்சியாளர்களால் செய்துதரப்பட்டன. தம்மை இறைவனுக்கு அடியவராக ஒப்புக் கொடுத்ததால் இவர்கள் தேவரடியார் எனப்பட்டனர். இதில் ஆண், பெண் இருபாலரும் அடங்குவர். இவருள் அரசகுலத்தாரும் இருந்தனர். கோவில்களில் பெண்களுக்குத் தரப்பட்ட மிக உயர்ந்த பதவி இது என்பதே உண்மை மற்றபடி பலரும் எண்ணுவது போல இந்த தேவரடியார் பாலியற் பெண்டிர் அல்லர்.

    பல்லவர் காலத்தை அடுத்து வந்த சோழப் பேரரசு காலத்தில் கோவில் கற்றளி இயக்கம் அவர் ஆட்சிப் பரப்பு முழுவதும் விரிவுபடுத்தப்பட்டது. இராசராசன் ஆட்சியின் போது தஞ்சைப் பெருவுடையார் கோவிலின் உள்ளே மாடித் தளத்தில் தேவரடியார்க்கு என்றே இடம் ஒதுக்கப்பட்டது. இந்த தேவரடியாருக்கு தனி வீடுகள் கட்டித்தரப்பட்டன. இவர்கள் ஆடல், பாடல், கல்வி, கேள்விகளில் சிறந்தோராக இருந்ததால் வேந்தர் முதல் பொதுமக்கள் வரை அனைவராலும் நன்கு மதிக்கப் பட்டனர்.  இவர்கள் சிறந்த கொடையாளிகளாகவும் இருந்துள்ளனர். கோவில்களுக்கு பல நிவந்தங்கள், கொடைகள் வழங்கி உள்ளனர். இவர்களின் சிறந்த குணங்களுக்காக இவருள் சிலரை வேந்தரும், மன்னவரும், அரையரும் மணந்தனர். இதில் குறிப்பிடத்த தக்கவர் மதுரை ஆண்ட  வேந்தர் வீரபாண்டியன் ஆவார். இவர் திருவானைக்காவில் சாந்தி கூத்து ஆடும் சொக்கத்தாண்டாள் என்ற தேவரடியாளை மணந்தார். வேந்தனை மணந்ததால் அவள் உலகமுழுதுடையாள் எனப்பட்டாள். இவளைப் பற்றிய கல்வெட்டுகள் குமரி மாவட்டம் சுசீந்திரம், நெல்லை வள்ளியூர் ஆகிய இடங்களில் காணக் கிடைக்கின்றன. இவற்றை இனி நாமும் காண்போம்.  

    சுசீந்திரம் கோவில் மேற்கு பிரகாரத்தில் உள்ள வாகனப் புரைச் சுவரில் பொறித்த கல்வெட்டு.

    1. கொல்லம் – 432  மாண்டை(த்) தனு ஞாயிறு 19 சென்ற வி(யாழ) வாட்டையும் வி
    2. சாகமும் ஏகாதேசியும் பெற்ற இந்நாளால் நாஞ்சி நாட்டூர் சுவீந்த்ர சுந்தர சோழச் சதுர்வேதி
    3. தி மங்கலமுடையார் சுவீந்தரம் உடைய நயினார் சீ கோயிலில் திருச்சுற்று மண்டபத்திலிருந்து
    4. சபையும் ஸ்ரீகாரியஞ் செய்வாரும் இருந்தெழுதின செய்கட ஓலை(க்) கரணமாவது உடையார் சுவீந்தர
    5. முடையார்க்கு பெருமாள் ஸ்ரீ வீரபாண்டிய தேவர் நம்பிராட்டியார் சொக்கத்தாண்டாளான
    6. உலக முழுதுடையார் நித்தல் செல்வதாக திருவமுதுக்கு கற்பிச்ச அரிகுறுணி இருநாழிக்கும் அஞ்சிரண்டால்
    7. நெல் முக்குறுணி ஒரு நாழியும் பூஜாகாலத்து அமுது செய்யும் பிராமணர் மூவர்க்கு வெஞ்ச
    8. நமுட்பட நெல் முக்குறுணியுங்கூட _ _ _ _ க்குங் கல்பிச்ச புதுப்பொன் அச்சு இருநூறு
    9. இவ்வச்சு இருநூற்றிலும் இவ்வூர் தேவரடியாள் குன்றாண்டி திருவாண்டி கைக்கொ
    10. ண்ட அச்சு 155 க்கும் நாளொன்றுக்குச் செலுத்தும் அரிகுறுணி யிதில் பெரிய நாயனார்(க்)கு திரு
    11. வமுதுக்கு அரி அஞ்ஞாழியும் திருவேங்கடத்துக்கு திருவமுது செய்விச்சு சோறுதான் கொண்டுவரும்
    12. அரி முந்நாழியும் பிராமண போஜனத்துக்கு ஓராண்டில் இவள் செலுத்தும் மாசம் ஒன்பது
    13. ம் இப்படி செலுத்துவாளாகவும் செலுத்துமிடத்து முட்டுகில் இவள் கைக்கொண்ட அச்சு 155
    14. க்கும் ஓன்றொன்றே காலாக வரக் கண்ட அச்சு 39 ங்கூட அச்சு 194 க்குஞ் செலுத்தின  நில
    15. ங்கள் வேட்கைக் குளத்தின் கீழ் அமரபுயங்க வாய்க்காலுக்கு வடக்கு _ _ _ _ _ _ _ _
    16. கீழ் மருதுறை தடி 1 நில _ _ _ _ _ _ பள்ள மடை தடி _ _ _ _ _ _ யும் இந்திர வீரவாய்க்காலுக்கு தெற்கு _ _ _ _
    17. _ _ _ _ _ _ யும் ஆகத்தடி மூன்று _ _ _ _ _ _ ன் மேல் அச்சு _ _ _ _ _மேல் அச்சு _ _ _ _ மேல்படியாள்  _ _ _ _ _ _ _
    18. _ _ _ _ _ அமரபுயங்க வாய்க்காலுக்கு தெக்கு _ _ _ _ கேசவநாராய _ _ _ _ _ _
    19. _ _ _ _ _ _ பனையறைதடி ஒன்று நிலம் வாய்க்கால் _ _ _ _ _ கு வடக்கு
    20. றைதடி 1 நில _ _ _ _ _ _ ஆக _ _ _ _ _ யின் மேலும் ஓ _ _ _ _ _ _
    21. _ _ _ _ _ _ _ _ _ யின் மேலும் ஒள்ள _ _ __ _ _ _ __
    22. அச்சு _ _ _ _  பிரம்ம சுவமில் 5 ஆம் கண்ணாற்றில் குளத்தில் பெரு _ _ _ _ _
    23. அச்சு 90 கொடுத்து விலை கொண்டுடைய _ _ _ _ _ றொன்றாலும் ஆன இந்நில _ _ _
    24. தொண்ணூற்று நாலும் மேல்படியில் செல்லாண்டி சேகராண்டாள் கைக் கொண்ட _ _ _

    வியாழவாட்டை – வியாழ ஆழ்ச்சை(கிழமை); செய்கட ஓலை – செய்யக்கடவது பற்றிய ஓலை; சபை – கருவறை பிராமணர்; ஸ்ரீகாரியம் – கோவில் திருப்பணியாளர்; கரணம் –ஆவணம்; நம்பிராட்டி – துணைவி, தேவி, மனைவி;  நித்தல் – எப்பொழுதும்;  கற்பிச்ச – பிடிபாடு, வழிகாட்டுநெறி,  guidelines; வெஞ்சனம் – சமையல்; அச்சு – காசு; முட்டுகில் – நின்றுபோனால். 

    கொல்லம் ஆண்டு 432 (கி.பி. 1257) தனுர் ராசி நேரும் ஞாயிற்றுக்கிழமை 19 நாள் இந்த கல்வெட்டு வெட்டப்பட்டது. கடந்த வியாழக்கிழமை விசாக நட்சத்திரமும் ஏகாதேசியும் கூடிய நாளில் நாஞ்சில் நாட்டூரான சுசீந்திரம் என்னும் சுந்தரச்சோழ சதுர்வேதி மங்கலத்தில் சுசீந்திரமுடைய ஈசனின்  கோவில் திருச்சுற்று மண்டபத்தில் கருவறைப் பிராமணரும் கோவிற் பணியாளர்களும் அமர்ந்து எழுதிய செய்யக்கடவதான ஓலை ஆவணம் யாதெனில் இறைவர் சுசீந்திர ஈசனுக்கு வேந்தன் வீரபாண்டியனின் தேவியான சொக்கத்தாண்டாள் என்னும் உலகமுழுதுடையாள் எப்பொழுதும் இறைவனுக்கு திருவமுது நடந்துவர வேண்டும் என்று வழிகாட்டுநெறி தந்து அரிசிகுறுணி அளவில் இருநாழிக்கும் 10ன் அளவு நெல்லை ஒரு நாழி அளவிற்கு அதற்குத் தரவேண்டும். பூசனை காலத்தில்  சோறு உண்பிக்க மூன்று பிராமணருக்கான சமையல் செலவு உட்பட நெல் முக்குறுணி அளவிற்கு கொடுக்க வழிகாட்டுநெறி தந்து இவற்றுக்கு அவள் தந்த புதுப்பொன்னாலான காசு இருநூறு ஆகும். இந்த இருநூறு பொற்காசில் 155 ஐ சுசீந்திரத்து தேவரடியாள் குன்றாண்டி திருவாண்டி என்பாள் கடனாகப் பெற்றுக் கொண்டாள். இதற்கான வட்டியை  இவள் ஒவ்வொரு நாளும் குறுணி அளவு அரிசி தரவேண்டும். இந்த குறுணி அரிசியில் ஐந்துநாழி ஈசன் திருவமுதுக்கும்  எஞ்சியவற்றில் திருமாலுக்கு திருவமுது சோறும் ஆக்க வேண்டும்.  இவள்  மூன்று நாழி அளவில் கொண்டு வரும் அரிசி பிராமணர் உணவிற்கு ஆகும். ஓராண்டில் இவள் மாதாமாதம் செலுத்த வேண்டிய பணம் ஒன்பது ஆகும். இவற்றை எல்லாம் செய்ய முடியாது நின்று போனால் 155 பொற்காசுகளுக்கு  ஒரு காசிற்கு கால் பொற் காசு என்ற கணக்கில் 39 பொற்காசையும் கூட்டி 155 + 39 = 194 பொற்காசிற்கு செலுத்த வேண்டிய அடமான நிலங்கள் வேட்கைக் குளத்திற்கு கிழக்கே உள்ள அமரபுயங்கன் வாய்க்காலுக்கு வடக்கேயும், இந்திர வீரவாய்க்கால்க்கு தெற்கேயும் உள்ளன என்று நில எல்லைகள் குறிக்கப்படுகின்றன. இவளோடு வேறு ஒரு தேவரடியார் செல்லாண்டி சேகராண்டாள் வாங்கிய பணதிற்கு என்ன செய்யவேண்டும் என்று கல்வெட்டில் கூறப்பட்டுள்ளது. இதன் கல்வெட்டு பெரிது என்பதால் இங்கே தரப்படவில்லை. இணைப்பில் அதைக் காணலாம்.

    உலகுமுழுதுடையாள் தந்த காசு உடனடியாக வட்டிக்கு விடப்பட்டு அதன் மூலம் வட்டியாக குன்றாண்டி திருவாண்டியிடம் அரிசி பெறப்பட்டு  உலக முழுதுடையாளின் திருவமுதப்படிக்கான வழிகாட்டுநெறி நிறைவேற்றப்படுகின்றது. இது ஏனெனில் பண்டு காசு புழக்கம் செல்வரிடம் மட்டுமே நிலவியது. பொது மக்கள் பண்டமாற்றில் வாழ்க்கையை நடாத்தினர். அதனால் இப்படி ஒரு மாற்று ஏற்பாடு செய்யவேண்டிய கட்டாயம் கோவில் பணியாளருக்கு ஏற்பட்டது. கோவில் பணியாளருக்கும் குன்றாண்டிக்கும் ஏற்பட்ட உடன்பாடே கல்வெட்டாகக் காட்சிப்படுகின்றது. பிற்பகுதியில் கல்வெட்டு பல்லிடங்களில் சிதைந்துள்ளதால் செய்தியை முழுவதுமாக அறிய முடியவில்லை. கல்வெட்டில் சேரநாட்டு வழக்குச்சொல் ஆங்காங்கே புழங்குகின்றது. கி.பி.

    1257 இல் ஜடவர்ம சுந்தர பாண்டியன் தான் ஆட்சியில் இருந்தான், வீரபாண்டியன் 1309 இல் தான் ஆட்சிப் பொறுப்பிற்கு வருகிறான். ஆண்டுக் கணக்கு வாசிப்பில் ஏதோ தவறு நிகழ்ந்துள்ளது. அல்லது சுந்தர பாண்டியனுக்கு வீரபாண்டியன் என இன்னொரு பெயர் இருந்துள்ளது எனக் கொள்ள வேண்டும்.

    பார்வை நூல்: கல்வெட்டு ஆராய்ச்சி, பக். 45 & 46, ஆசிரியர் கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை. மூல நூல் Travancore archaeological series, Vol 5.  

    இனி, திருநெல்வேலி வள்ளியூரில் உள்ள மூன்றுமுக அம்மன் கோவிலில் பொறித்த கல்வெட்டு

    1. ஸ்வஸ்திஸ்ரீ கோசடைய பன்மரான திரி
    2. புவன சக்ரவர்த்திகள் ஸ்ரீ வீர பாண்டிய
    3. தேவர் (க்)கு யாண்டு 4 வது (ராஜகம்பீ)
    4. ர வளநாட்டு திருவானைக்காவில்
    5. திருப்பதியில் சாந்திக் கூத்திகளில்
    6. சொக்கத் தாண்டாரான உலகமு
    7. ழுதுடையார் வள்ளியூர் வடக்கு வா
    8. சலில் தேவி கோயிலுக்கு உபான (ஜெ
    9. கதி குமுதோபரி பட்டிகையந்த மகா) 
    10. தேவியையும் வர்திச்சுத் தங்கள் பேத்தி(யா
    11. ரா) சிறிய பிள்ளை (யை உலகத் தாண்டாளுக்)
    12. கும் _ _ _ _ _ ல அவ _ _ _ _ _ _ _ _ யு
    13. ருளு _ _ _ _ _ _ _ கோயில் _ _ _ _ _ _ _ _
    14. ஞ்செ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _  உலகமுழுதுடையா
    15. த _ _ _ _ _ _ _ _ க்கு _ _ _ _ _

    சாந்தி கூத்தி – சாந்தி கூத்தாடும் ஆட்டத்தி; உபான ஜகதி – கருவறைப் புறச் சுவர் கீழ் பகுதி;  குமுதோபரி – விமான உறுப்புள் ஒன்று; பட்டிகை – கருவறை புறச் சுவர் உறுப்பு; வர்திச்சு – எழுந்துருளவித்து

    வேந்தன் வீரபாண்டியனின் 4 ஆம் ஆட்சி ஆண்டில் (கி.பி. 1313)  ராஜகம்பீர வளநாட்டில் அமைந்த திருவானைக்காவல் கோவிலில் சாந்தி கூத்தாடும் கூத்திகளில் சொக்கத் தாண்டாள் எனும்  உலக முழுதுடையாள் வள்ளியூர் வடக்குவாசலில் அமைந்த அம்மன் கோவில் கருவறை புறச்சுவருக்கு உபான ஜகதி, குமுதம், முப்பட்டை ஆகியவற்றை கட்டிக் கொடுத்து அந்த அம்மனை எழுந்தருளச் செய்தாள். தன் பேத்தியோடு இக்கோவிலுக்கு வந்திருந்தாள். பிற செய்தி கொண்ட கல்வெட்டுப் பகுதி சிதைந்ததால் அச்செய்திகளை அறிய முடியவில்லை.

    வீரபாண்டியனின் 4 ஆம் ஆட்சி ஆண்டில் சொக்கத் தாண்டாள் தன் பேத்தியோடு இக்கோவிலுக்கு வந்திருந்தாள் என்றால் வீரபாண்டியன் முதுமையில் தான் ஆட்சிப் பொறுப்பை ஏற்றான் எனத் தெரிகின்றது. இளமையில் இவன் அவளை மணந்தான் என்பது புலனாகின்றது. சொக்கத் தாண்டாள் ஒரே காலத்தில் சுசீந்திரம் மற்றும் வள்ளியூருக்கு திருச்செலவு சென்றாள் என அறியலாகின்றது.

    பார்வை நூல்: கல்வெட்டு ஆராய்ச்சி, பக்.  48 & 49, ஆசிரியர் கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை. மூல நூல் A.R.E. 1929-30 No 364 P 37.

    Share
  • கல்வெட்டில் வரிகள், பட்டணவர் பற்றிய செய்தி

    சேஷாத்ரி ஸ்ரீதரன்

    கல்வெட்டில் வரிகள், பட்டணவர் பற்றிய செய்தி

    புதுவை அருகு  திருவாண்டார் கோயில் எனும் ஊரில் அமைந்த பஞ்சநதீசுவரர் கோயிலின் தனித்துக் கிடக்கும் கற்பலகையில் உள்ள 18ஆம் நூற்றாண்டு எழுத்தமைதி கொண்ட  கல்வெட்டு.

    1. விளம்பிஸ்ரீ_ _ _
    2. மாதம் 10 தேதி நயினார்
    3. வசவப்ப மழவராயர்
    4. திருவய்யாறுடை
    5. ய நயினார் கோயில்
    6. வந்தேறு குடியளு
    7. க்கு கட்டளை விட்டபடி
    8. திருவாண்டார் கோயி
    9. லில் குடியிலிபா
    10. ழாக இருக்கவல்
    11. அண்ணமாரை
    12. யன் குடியேற்
    13. றிக் கொள்ள சொல்
    14. விருத்தகை இரு
    15. க்கையில் தம் கு
    16. டியளுக்கு கட்டளை
    17. இட்டபடி கையிகோளர்
    18. வியாபாரியள் உண்
    19. டான பலபட்டடை
    20. காசவற்கத்துக்கும்
    21. குடியளுக்கும் இவரு
    22. ஷம் ஒன்றுக்கு
    23. மானியம். அதுக்கு
    24. மேல் மாதம் ஒன்றுக்
    25. கு அரைக் கட்டணமு
    26. ம் ஆயத்துக்கு மா
    27. தம் மூன்று காசு

    விருத்தகை – வேண்டுகோள்; பலபட்டடை – வணிகர் மற்றும் கைத் தொழில் செய்வோர் வரி; காசவற்கம் – வரியை நாணயமாக செலுத்தும் கைத்தொழிலோர், வணிகர்; ஆயம் – நிர்வாகம் வரி.

    விளக்கம்: விளம்பி ஆண்டு 16 ஆம் நூற்றாண்டில் 1539 & 1599 ஆகிய ஆண்டுகளில் நிகழ்கின்றது. வசவப்ப மழவராயர் கட்டளைப்படி பஞ்சநதீசுவரர் கோயில் அமைந்த திருவாண்டார் கோயில் ஊரில் வந்து குடியேறும் குடிகளுக்கு இட்ட கட்டளை. திருவாண்டார் கோவிலில் குடியில்லாத வறிதாக இருக்கின்ற நிலங்களில் அண்ணமாரையன் குடியேற்றிக் கொள்ளச் சொல்லி வேண்டுகோள் தெரிவித்திருந்தபடி தம் குடிகளிடம் கட்டளையிட்டபடி கைக்கோள வணிகர்கள் உள்ளிட்ட பல தொழில் செய்வோர், வரிகட்டும் வணிகர் உள்ளிட்ட குடியேறும் குடிகள் இவ்வாண்டு மட்டும் மானியம் பெறலாம். அதன்பின் மாதம் ஒன்றுக்கு அரைக் கட்டணமும் நிர்வாகத்திற்கு மாதம் மூன்று காசும் செலுத்த வேண்டும்.

    இந்நாளைய நகர வரி போல் உள்ளது, அந்நாளைய ஆயம். பண்டு மக்கள் அதிக வரிச்சுமைக்கு ஆளாகி இருந்தனர். அதிலும் குறிப்பாக நாயக்கர் ஆட்சிக் காலத்தில் கட்ட முடியாத அளவிற்கு அதிக வரிச்சுமை.

    பார்வை நூல்: வரலாற்றில் திருவாண்டார் கோயில், வில்லியனூர் புலவர் ந. வேங்கடேசன்

    புதுவை காரைக்கால் அருகு மேல்பொன்பேத்தி ஊரில் தனியார் வீட்டின் வாயிற்படியில் உள்ள கற்பலகையில் பொறித்த  16 ஆம்  நூற்றாண்டு 20 வரிக் கல்வெட்டு. இந்தக் கோட்டுச்சேரி, காரைக்காலிலிருந்து பொறையாறு செல்லும் வழியில் 5 கி.மீ. தொலைவில் உள்ளது.

    1. ஆங்கீர ஆண்டு வைய்யாசி 10ந் தேதி
    2. ஸ்ரீமதுராயச _ _ _ _ _ ருவர் அய்யன் கா
    3. ரியத்துகே _ _ _ _ _ தவதரையர்
    4. கோட்டுச்சேரி பட்டணவர் செங்
    5. கணச்செட்டி எறையச் செட்டி ஆ
    6. லத்துடைய நம்பி அறம்[வ]ளத்த
    7. நம்பி உள்ப்பட்டாற்கு குடுத்த ச
    8. றுவ மானியப் பட்டையம்
    9. இந்த ஊர்ப் பட்டணச்சேரி வரு
    10. ஷம் ஒன்றுக்கு அய்யன் கட்டளை
    11. பொன் அறுபது இந்தக் கட்டளை
    12. இட்ட[தி]ல் தரும் பொன் அறுபதுக்கு
    13. ள்ளே இந்த ஊரில் பரவை மீனு
    14. [ம்] பட்டணச்சேரி _ _ _ _ _ த்துடநே சே
    15. [ர்]ந்தபடியாலே [நா]ளது முதல் சந்தி
    16. ராதித்தவரையும் கோட்டுச்சேரி பரவை
    17. மீன் உள்பட பட்டணவரே அனு
    18. பவித்துக் கொள்ளவும் யிந்த மாநி
    19. யத்தை இயாதொருவ_ _ _ _ _
    20. அழித்தவன்

    பட்டணவர்–மீனவச் செட்டியார்  அய்யன் கட்டளை – அய்யனுடைய  நில எல்லை பரவை மீன் – கடல் மீன்

    விளக்கம்: 18ஆம் நூற்றண்டில் ஆங்கிர ஆண்டு கி.பி. 1742-1743 இல் நிகழ்கின்றது. கோட்டுச்சேரி பட்டணவரான செங்கணச் செட்டி, எறையச்செட்டி, ஆலத்துடைய நம்பி, அறம்வளர்த்த நம்பி உள்ளிட்ட நால்வருக்கு கொடுத்த சர்வமானிய பட்டயம் யாதெனில் அய்யன் கட்டளை வரை உள்ள பட்டணச்சேரியில் ஆண்டு ஒன்றுக்கு 60 பொன் ஓபோ கட்டவேண்டும். இப்படி தரும் பொன் அறுபதுக்கு கடல்மீனை பிடிக்கும் உரிமையை இந்த நால்வரே அனுபவிப்பாராக என்று கூறப்பட்டுள்ளது.

    இந்தப் பட்டணவர் 12ஆம் நூற்றாண்டில் துணி, ஆடை நெய்து விற்றுவந்தனர் என்று தெரிகின்றது. 18 ஆம் நூற்றாண்டில் மீன் விற்க வந்துவிட்டனர்.

    பார்வை நூல்: புதுச்சேரி மாநிலக் கல்வெட்டுகள், பாகூர்                       S. Kuppusamy & G. Vijayavenugopal.

    திருப்புவனை வரதராஜ பெருமாள் கோயில் மேற்கு வராந்தா திருச்சுற்று மதில் 10 வரிக் கல்வெட்டு

    1. ஸ்வஸ்திஸ்ரீ பூமாது புணரப் புவிமாது விளங்க நாமாது வி[ளங்க] ஜயமாது மகிழத் தந்திரு பாதமலர் மன்நவர் சூட மந்நிய வுரிமையில் மணிமுடிசூடிச் செங்கோல் செந்று திசை தொறு நடப்ப வேங்கலி  நீங்க மெய்யறந் தழைப்பக் கலிங்க மிரியக் கடம
    2. லை நடத்தி வலங்கோளாழி வரையாழி [ந]டப்ப இருசுடரளவும் ஒருகுடை சுழற்றச் செம்பொன் வீரஸிம்ஹாஸனத்து முக்கோக் கிழாநடிகளோடும் வீற்றிருந்தருளிய கோப்பரகேசரிபந்மரான த்ரி(பு)ஹுவ[ன]ச் சக்கரவத்தி
    3. கள் ஸ்ரீ விக்கிரம சோழ [தேவர்]க்கு யாண்டு ஒன்பதாவது ராஜராஜ வளநாட்டு வீராவதார வளநாட்டு ப்ரஹ்மதேயம் [த்ரி]புவன மாதேவிச் சதுப்பேதி மங்கலத்து [ந]டுவிற் கோயில் ஸ்ரீவீரநாராயண விண்ணகராழ்வார்க்கு இர _ _ _ _ _
    4. ணவர் ப்ரஹ்மவைஸ்வநு[க்]கு ஜனித்த [ப்ரித்ரஷ்ட] ஆயோஹவாரானப் பற்றுள்ணர்கு உபநயாநாதி கருமங்களுக்கும் தேவர்களுக்கு  [த்வ]ஜ படமும் சாத்தியருளத் திருப்பரிசட்டங்களும் ராஜாக்களுக்குச் சாத்தியருளத் திருப்பரிச்ச[ட்டங்களும்]
    5. நெய்யக் கடவ முறைமையாலும் பல ஆஹமங்களும் ங ஸ்மிதிகளாலும் ((ஞ்) சொல்லுதலாலும் செய்யக்கடவராவ[ர்]களே யாதலால் இக்கோயிலுக்கு இவர்களுக்கு நிமந்தமாகவிட்ட நிலம் ஜனனாத நல்லூர்க் கட்டளையில் இவ்வாழ்வார்
    6. யிறையிலி நிலத்தில் திரிபுவனமாதேவி வதிக்கு மேற்குப் பிராந்தக வா[ய்]க்காலுக்கு வடக்கு இரண்டாங் கண்ணாற்று முதற் சதிரத்துக் கிழக்கடைய நிலம் ஆறுமாவில்  வடக்கடைய நில[ம்] இருமாவரையும் சேட்படி விளாகத்தில் வடதலை
    7. யிலே பத்து மனையுங்  கைக்கொண்டு  வைகாசித் திருநாளைக்கு நாலு  திருப்பரிச்சட்டமும்  திருவுத்திரியம் இரண்டு  திருமுடிச்சேலை  இரண்டும்  விஷுவயன ஸங்கிரமங்கள் நாலுக்கு திருப்பரிசட்டம்  நாலும் து[வ]ஜ படமும்  திருவாசலுக்கு  திருநமநி
    8. கையும் திருவிதான ஒந்றும் ஆக இவ்வூர்க்கள் பணிமாரக் கடவோமாக இந்நிலம் இம்மனைகளும் கைக் கொண்டு சிலாலேகை  பண்ணிக்   குடத்தோம்  இயோரிரான பட்டணவரோம். இப்படி  செய்யாவிடில்  இவ்வாழ்வார் கோயிலில் ஸ்ரீவயிஷ்ண
    9. வர் தடுத்தும் வளைத்தும்  தண்டியும்  சிறையாக்கியும் கொள்ளக்கடவ[ர்]களாக  ஸம்மதித்தோம்  செங்காட்டுப் புத்தூரான உத்தம சோழப் பட்டணத்தோமும் உம்பர்பாடியான உய்யக்கொண்ட  சோழபட்
    10. டணத்தோமும்  வேளார்  காணியான  இராஜேந்திர சோழபுரத்தோமும்  கருப்பூரான  விக்கிரம  சோழபுர்த்தோ[மு]ம்.  ஸ்ரீ வைஷ்ணவர்  இரக்ஷை.

    உபநயநாதி கர்மம் – பூணூல் சடங்கு; தேவர்களுக்கு – பிராமணர்களுக்கு; த்வஜ படமும் – பிராணமத் துணியும்; திருப்பரிசட்டம் – செப்புத் திருமேனிகளுக்கு சாற்றும் ஆடை; கட்டளை – எல்லைக்கு உட்பட்ட, jurisdiction;  வதிக்கு –  கால்வாய்க்கு; கண்ணாறு – சிறு பாசன வாய்க்கால்; திருவுத்திரியம் – தோள் துண்டு; விஷுவயன சம்கிரமங்கள் – புத்தாண்டு, அயன கால சடங்குகள்; பணிமார – செய்து தர; இயோரியரான –

    விளக்கம்: விக்கிரம சோழனின்  9 ஆம் ஆண்டு (கி.பி. 1127) ஆட்சிக் கல்வெட்டு. முதல் இரண்டு வரிகளில் மெய்கீர்த்தியுடன் தொடங்குகின்றது. பிரதிலோமரில் அடங்கும் பிரம்ம வைசியரான இதாவது, பிராமணத் தந்தைக்கும் வைசியத் தாய்க்கும் பிறந்த ஆயோகவரான பட்டணவர் பற்றியது.  பூணூல் சடங்குகளில் பிராமணருக்கு பிராமண ஆடை, மேனியில் சாற்றத் துணி. அதே போல் வேந்தர், மன்னவர், அரசர், கிழார் உள்ளிட்ட ஆளும் குடிக்கு மேனியில் சாற்றும் துணியும் நெய்ய வேண்டிய முறையில் நெய்ய ஆகமங்களும் ஸ்மிருதிகளும் சொல்லுகின்ற முறையில் நெய்பவராதலால்  இக்கோயில் தெய்வத் திருமேனிகளுக்கு ஆடை சாற்ற இவர்களுக்கு நிவந்தமாக (பணிக்கூலி) விட்ட நிலம் ஐனனாத நல்லூர் வரம்பில் உள்ள இவ்விறைவர்க்குச் சொந்தமான இறையிலி நிலம் (நான்கு எல்லை குறிக்கப்படுகின்றது) இருமாவரையும் அதோடு சேட்படி விளாகத்தில் வடதலையில் பத்து வீடுகளும் இவர்கள் ஏற்று வைசாகித்  திருநாளுக்கு  நான்கு  சாற்றும் ஆடை, தோள்துண்டு, இரண்டு  திருமுடிச்சேலை,  கொடிக்குத் துணி,  திருவாசலுக்கு திருநமநிகை திருவிதானம் ஒன்று என இந்த உருப்படிகளைச் செய்து தந்து இந்நிலம் இவ்வீடுகளை கைக்கொண்டு இப்படியே ஆவதாகக் கல்வெட்டிக் கொடுத்தோம் பட்டணவரான நாம். இப்படி செய்யாவிட்டால் ஸ்ரீ வைஷ்ணவர் எங்கள் தொழிலைத் தடுக்கவும், எம் உடலை வளைக்கவும், எம்மைத் தண்டிக்கவும், சிறைப்படுத்தவும் ஒப்புக்கொண்டோம். செங்காட்டுப் புத்தூர் உத்தம சோழ பட்டணத்தோம், உம்பர்பாடி உய்யக்கொண்ட சோழ பட்டணத்தோம்,  வேளார் காணி ராஜேந்திர சோழபுரத்தோம், கருப்பூரான விக்கிரம சோழபுரத்தோம் என நான்கு ஊர் பட்டணத்தவர் இந்த ஒப்பந்தத்தை    மேற்கொண்டனர். இது கோயில் சார்பாளர் பட்டணத்தவர் என இரு தரப்புக் கல்வெட்டு ஆகும்.

    எப்படி அனுலோமர் என்பது உண்மையில் இல்லாததோ, அப்படித்தான் பிரதிலோமர் என்பதும் இல்லாதது. அதனால்தான் இங்கு சாஸ்திரம் வலிந்து சுட்டிக் காட்டப்படுகின்றது. பட்டணவர் எவரும் சாஸ்திரம் சொல்லுவது போல பிராமணத் தந்தைக்கும் வைசியத் தாய்க்கும் பிறந்தவர் அல்லர்.  மாறாக தந்தை தாய் இருவருமே வணிகர் குலத்தவர்தாம்.  இந்தப் பட்டணவர் சாதி, பிராமண தந்தை வைசியத் தாய்க்கு பிறந்தவரை மூதாதையராகக் கொண்டது என்பதும் ஏரணப்படி ஏற்புடையது அல்ல. இந்த வரையறை பட்டணவருக்குத் தெரிந்திருக்க வாயப்பில்லை. அப்படி தெரிந்திருந்தால் அதை அவர் ஏற்றிருக்க மாட்டார் என்பது திண்ணம். என்றாலும் இப்படி ஒன்றிரண்டு கல்வெட்டுகள் இருப்பதை மட்டுமே கருத்தில் கொண்டு நால் வருணமும் மனு தர்மமும் சோழர் ஆட்சியில் கோலோச்சியதாகப் பிதற்றுகின்றனர், தொல்லியல் வரலாற்று ஆசிரியர்கள் சிலர்.

    மேற்கண்ட இரண்டாம் கல்வெட்டில் பட்டணவர் மீனவச் செட்டியாராக அறியப்படுகின்றனர். இக்கல்வெட்டிலோ, ஆடை நெய்பவராக அறியப்படுகின்றனர். இவற்றில் இடம்பெறும் இருவரும் ஒரே சாதியார் என்றால் 12ஆம் நூற்றாண்டில் ஒருதொழிலும் 18ஆம் நூற்றாண்டில் வேறு ஒரு தொழிலும் செய்யக் காரணம் என்ன? என்று ஆராய்ந்தால் அயலவரான விஜயநகரர் ஆட்சியின் போதும் நாயக்கர் ஆட்சியின் போதும் ஆந்திரத்தில் இருந்து அழைத்து வரப்பட்ட சௌராஷ்டிரர் மற்றும் முத்திரிய நாயுடுகள் ஆகியோர்  கோயில் ஆடைகள் நெய்யவும் ஆட்சியாளருக்கு ஆடை நெய்யவும் உரிமை பெற்றதால் தமிழ்ப் பட்டணவர் வாழ்வாதாரம் இழந்து மீன் விற்கும் தொழிலுக்கு தள்ளப்பட்டதாகத் தெரிகின்றது. அயலவர் படையெடுப்பும் ஆட்சியும் இந்த அளவிற்கு சமூக பொருளியல் பாதிப்பை தமிழருக்கு  ஏற்படுத்தியதை இக்கல்வெட்டின் மூலம் உணர முடிகின்றது.

    பார்வை நூல்: புதுச்சேரி மாநிலக் கல்வெட்டுகள், பாகூர்                         S. Kuppusamy & G. Vijayavenugopal,  Institut Francais De Pondichéry :  2006

    https://en.wikipedia.org/wiki/Varadharajaperumal_temple,_Thirubuvanai

    Share
  • தேவரடியார் பெற்ற சிறப்புச் சலுகைகள் உரிமைகள் பற்றிய கல்வெட்டு

    – சேஷாத்ரி ஸ்ரீதரன்

    திருமுருகன் பூண்டி திருமுருகநாதர் கோயில்

    திருக்கழுக்குன்றம் புடைப்புச்  சிற்பம்

       திருவொற்றியூர் புடைப்புச்  சிற்பம்.

    பொதுவாகக் கல்வெட்டுகள் தேவரடியார்கள் கோவிலுக்கு அளித்த தானங்களைத் தான் எடுத்து இயம்புகின்றன, ஆனால் மிகச்சில கல்வெட்டுகளே கோவில்களில் தேவரடியார் பெற்றிருந்த உரிமைகள் சிறப்புச் சலுகைகளைப் பற்றிக் கூறுகின்றன. இந்த உரிமைகள் தேவரடியார்க்கு சில கோவில்களில் மட்டுமே வழங்கப்பட்டதாக இருந்ததால் அதுவும் இதற்கு காரணமாகலாம். இதற்கு சில கோவில்களில் மட்டுமே  சிற்பங்கள் சான்றாக உள்ளன. ஒன்றரை ஆண்டுகள் முன் நான் திருக்கழுக்குன்றம் பக்தவத்சலேசுவரர் கோயிலுக்கு சென்ற போது ஈசுவரன் சன்னதி முன் மண்டபத்தில் ஒரு தூணில் தலையில் கொண்டை போட்டு ஆடை அணியுடன் இரு தேவரடியார் புடைப்புச் சிற்பம் தம் கையில் திறவுகோல் வைத்திருப்பது போல் செதுக்கப்பட்டிருந்தது. இந்த சிற்பம் அவர்கள் கோவிலைத் திறந்து வழிபாடு நடத்துவதைக் குறிப்பதாக இருந்தது. கோபுர வாயில் கதவை இவர்கள் திறக்கப்போவதில்லை. பின் எதைத் திறக்கத் திறவுகோல்?  கருவறைக் கதவுகளை திறப்பதாக இருந்தால் மட்டுமே அதை சிறப்பாகக் குறிக்க கையில் திறவுகோலை செதுக்கி இருக்க வேண்டும் என்று உணர முடிந்தது. இதே கருத்தை உணர்த்துவது போல சென்னை திருவொற்றியூர் கோயிலில் ஆதிபுரீசுவரர் சன்னதியை நுழைவதற்கு முன் அமைந்த புறமண்டபத்தின் ஒரு தூணில் இரு தேவரடியார் புடைப்புச் சிற்பம் கையில் திறவுகோலுடன் நல்ல அலங்காரத்துடன் செதுக்கப்பட்டு உள்ளது. இந்த இரு தூண் சிற்பங்களும் தேவரடியார் கோயிலைத் திறந்து ஏதோ ஒரு பூசனை ஆற்றும் உரிமை பெற்றிருந்ததைக் குறிக்கின்றது. இதற்கான மேலும் சில சிற்ப, எழுத்துச் சான்றை நான் பல கோயில்களில் தேடி அலைந்து, கல்வெட்டு நூல்களைத் தேடி ஆராய்ந்நு 1- ½ ஆண்டுகள் ஓடி, பின் இறுதியில் இப்போது அச்சான்று திருப்பூர் திருமுருகன் பூண்டி கல்வெட்டாக வந்து நின்றது. இனி கல்வெட்டுச் சான்றை பார்க்கலாம்.

    திருமுருகன்பூண்டி தேவி கோயில் கருவறை வடக்கு ஜகதியில் பொறித்த 3 வரிக் கல்வெட்டு.

    1. ஸ்ரீ கோனேரின்மை கொண்டான் ஆளுடையார் திருமுருகன் பூண்டி கோயில் தேவகன்மிகளுக்கு நம் ஓலை குடுத்தபடியாவது இத்தானத்தில் குல
    2. சோழமண்டல கச்சா தேவரடியார்களுடை _ _ _ பெறும் முதன்மை தாநம் ஆளுடையார் திருமுருகன் பூண்டி யாண்டார்க்கு நாலாவது முதல் திருமேற்பூச்சும் குடுத்தோம். இப்படிக்கு
    3. செம்பிலும் சிலையிலும் வெட்டிக் கொள்க. இவை இலாடத்தரையன் எழுத்து. நந்தமாற் படுத்துக் கொள்க. இது பந்மாயேசுரரட்சை.

    தேவகன்மிகள் – கோயில் இறைப்பணியார்கள்; இத்தானத்தில் – இக்கோயில் தளத்தில், இந்த ஸ்தானத்தில்; தாநம் – ஸ்தானம், நிலை, status;  திருமேற்பூச்சு – சந்தனப்பூச்சு;  நந்தமார் –  பன்மாஹேஸ்வர ரக்ஷை – பல சிவனடியார்கள் காக்கவேண்டும்.

    கோனேரின்மை கொண்டானான கொங்கு சோழன் வீரராஜேந்திரச் சோழன் ஆட்சி (ஆண்டு குறிக்கவில்லை). திருமுருகன் பூண்டி கோயில் இறைப்பணியாளர்களுக்கு நாம் தந்த ஓலைஆணையாவது இந்த கோவிலில் சோழமண்டலத்  தேவரடியார்கள் பெறும் முதன்மைநிலை (ஸ்தானம்) யாதெனில் திருமுருகன் பூண்டி இறைவர்க்கு நாலாம் நாள் முதல் திருமேற் பூச்சு செய்யும் உரிமை கொடுத்தோம். இதை செம்பிலும் கல்லிலும் வெட்டிக் கொள்ளலாம். இவை இலாடத்தரையன் ஆணைஎழுத்து. நந்தமார் படுத்துக் கொள்க. இந்த நடைமுறை சிவனடியார் காப்பில் விடப்படுகின்றது.

    இதன்படி கோவிலில் இறைவர்க்கு சந்தனமேற் பூச்சு செய்ய சோழமண்டல தேவரடியார்கள் முதல்நிலை உரிமை பெறுகிறார்கள், இதாவது திருமுழுக்காட்டும் உரிமை பெறுகிறார்கள். பொதுவாக பிராமணர் தவிர்த்து பிறர் கருவறைக்குள் நுழைய முடியாது என்பது ஒரு கட்டுப்பாடு அது இங்கே தளர்த்தப்பட்டிருக்கின்றது. இப்படி உரிமை கொடுக்கக் காரணம் கோவில்கள் வேந்தர், மன்னவர்ஆகியோருக்கு  சொந்தமானது, அவர்களே இதன் தலைவர்கள் பிராமணர் அவர் சொல் கேட்டு நடக்க வேண்டியவர் என்ற கருத்திற்கு இக்கல்வெட்டு சான்றாகின்றது. நந்தமார் படுத்துக் கொள்க என்பது இதில் அவர்கள் தலையிட வேண்டாம் என்பதே.

    பார்வை நூல்: கொங்குநாட்டுக் கல்வெட்டுகள், கோயம்புத்தூர் மாவட்டம், பக் 84 & 85 மா. கணேசன் & இரா. ஜெகதீசன்.

    திருமுருகன்பூண்டி திருமுருகநாதர் வடக்கு சுவரில் பொறித்த 9 வரிக்  கல்வெட்டு.

    1. தண்டீஸ்வரன் ஓலை சாகரஞ்சூழ் வையகத்துக் கண்டீஸ்வரன் கருமமாரய்க _ _ _  பண்டே அறஞ்செய்தான் அறங்காத்தார் பாதம் திறம்பாமல் சென்னிமேல் வைத்து அவர்களால் சண்டேஸவரன் ஆதேசம் நம்
    2. உடையார் திருமுருகன்பூண்டி ஆளுடைய நாயனார் கோயில் தேவரடியாற் ஆடக்கொண்ட நாச்சிமகள் _ _ _ பெருமாளான சவுண்டய நங்கை(க்கு)ம் இவள் தங்கை மக்கள் தோழியான திருவுண்ணாழியர் நங்கைக்கும் இவள்
    3. தங்கை காங்கய நாச்சியான ஆலால சுந்தர நங்கைக்கும் நம் ஒலை குடுத்தபடியாவது ஈஸ்வர சம்வத்சர _ _ ராக _ _ _ முதல் இவர்களுக்கு நாம் குடுத்த திருவந்தி காப்புக் குடுக்கையில் இவர்கள் திருவந்திக் காப்பும் எடுத்துப் பணியுமுறை
    4. யுஞ் செய்து  உடையார்க்கு பணியாக _ _ _ _ காலந்தோறும் திருநீற்றுக் கா_ _ _ _ திருக் கண்ணா மடை வண்காட _ _ _ லியற் இக்காள _ _ _ _ உள்ளிட்டாரையும் _ _ _  பார்க்கவும் திருநாளுக்கு நடே
    5. ஸ்வர நாயனார் எழுந்தருளும் பொழுது முன்னரங்கு ஏறக்கடவார்களாகவும் இவர் திருமுன்பு பிச்சவேஷம் _ _ _ _ கவும் இந்த ஹொதுசவத்துக்கு ஏறியருளும் திருத்தேர் திருநட்டப் பூங்கோயில் திருநடைக்கா
    6. வண முள்ளிட்ட ஆசநங்களேறக் கடவார்களாகவும் திருமார்கழித் திருவாதிரை மூற்றா(வதா)யுள்ள  திருவெம்பாவைக்கு கைநாட்டி  மூன்றாம் அறை முதலாயுள்ள அறையுங் கடக்கக் கடவ
    7. ர்களாகவும் மேற்சாத்தும் பரிவட்டமும் பெறக்கடவார்களாகவும் இந்தத் திருவந்திக் காப்பால் வந்த பிராப்தியங்களான வரிசைகளும் பெறக்கடவார்களாகவும். இப்படிக்கு இவர்கள் மக்கள் மக்கள் சந்திரா
    8. தித்தவரை அனுபவித்து வருவார்களாகவும் .இப்படிக்கு செம்பிலும் சிலையிலும் வெட்டிக் கொள்வார்களாகவும் (நாம் நம்ஓலை) குடுத்தோம். இப்படிக்கு அருளிச்செயல்படிக்கு தேவர்கள் சீர்காழிப் பிள்ளை எழுத்து. பால் வண்ணத் தாண்டான் பெருமாள் எழுத்து. அண்ணாமலையான் எழுத்து. அடிக்கிளத்தை எழுத்து. சத்தி
    9. ன் எழுத்து மாடாபத்தியம் காஞ்சிபுரத்து சோமனா தேவன் எழுத்து. கானக் கா _ _ _ எழுத்து. கண்டியதேவன் எழுத்து. ஆனந்தக் கூத்தன் எழுத்து. முத்திக்கு நாயகன் எழுத்து. திருவம்பலப்பட்டி காட்டிய கைய்யன் எழுத்து. ஆனந்தக் கூத்தனார் எழுத்து. இவை அருளால் ஆதிசண்டேஸவரஸ்ரீ கரணத்தன் எழுத்து.  

    திருவந்திக் காப்பு – திருவிழாமுடிவில் கண்ணூறு போகச் செய்யும் சடங்கு; மேற்சாத்து – சால்வை; பரிவட்டம் – தலைப்பாகை போன்ற கட்டு; அருளிச்செயல்  – அனுமதி.

    தண்டீசுவரன் ஓலைஆணை யாதெனில் திருமுருகன் பூண்டி இறைவர்க்கு ஊழியம் செய்யும் கோயில் தேவரடியார் ஆடக்கொண்ட நாச்சி மகள் _ _ பொருமாளான சவுண்டய நங்கைக்கும் இவளுடைய தங்கைப் பிள்ளைகளின் தோழியான திருவுண்ணாழியர் நங்கைக்கும் இவளுடைய தங்கை காங்கய நாச்சியான ஆலால சுந்தர நங்கைக்கும்  நான்கொடுத்த ஓலைஉரிமை யாதெனில் இவர்களுக்கு நான் தந்த திருவந்திக் காப்பு சடங்கின்  போது அந்த திருவந்திக் காப்பை முறையாக மேற்கொள்ள வேண்டும். அதேபோல காலந்தோறும் திருநீற்றுக் காப்பும் செய்ய வேண்டும். உற்சவ காலங்களின் போது நடராஜர் எழுந்தருளும் போது முன்னரங்கில் வீற்றிருக்க வேண்டும்.  நடராஜர் திருமுன்பு பிச்சவேஷம் இட வேண்டும். திருத்தேர், திருநட்டப் பூங்கோயில் திருநடைக்கு ஆகவேண்டியன ஆகிய நேர்வுகளின்  போது வீற்றிருக்க வேண்டும்.  மார்கழித் திருவாதிரையின் போது மூன்றாவதாக உள்ள திருவெம்பாவைக்கு திருநடம் புரியும் போது வீற்றிருக்க வேண்டும்.  மூன்றாம் அறையான கருவறை முன் அறையையும் கடக்க வேண்டும். அதன்போது சால்வையும், தலைப் பரிவட்டமும் ஏற்க வேண்டும். இந்தத் திருவந்திக் காப்பால் அடையப்படுவதான வரிசைகளும் (மதிப்பு) பெறவேண்டும். இப்படியான நிகழ்வுகளின் இந்த உரிமை இவர்களுக்கும் இவர் பிள்ளைகளுக்கும், இவர் பேரர்களுக்கும் என தலைமுறை தலைமுறையாக சந்திர சூரியர் உள்ள நாள் வரையும் அனுபவித்து வருக. இதை செப்புத் தகட்டிலும் பாறையிலும் பொறித்துக் கொள்வாராக என்று உரிமைஓலை கொடுத்தேன். இந்த மேலிட ஆணையை உடன் உள்ள அதிகாரப் பொறுப்பில் உள்ளவர்கள் ஏற்று ஒப்பமிட்டு கொடுத்துள்ளனர்.

    இக்கல்வெட்டில் ஆட்சியாளன் பெயரும் ஆட்சிஆண்டும் குறிக்கப்படவில்லை. தேவரடியார் கண்ணூறு நீக்கும் சடங்கு நடத்தவும், திருநீற்று காப்பு நடத்திடவும் உரிமை தரப்பட்டது அல்லாமல் இறைவர் எழுந்தருளும் போது வீற்றிருக்க வேண்டும். திருத்தேர், திருநடை திறப்பு ஆகியவற்றில் அவர்களுக்கு உள்ள இருக்கையைப் பெறவும் திருவாதிரையின் போது கைநாட்டி கோவில் கட்டட அமைப்பில் முன் மண்டபம், கூடம், உள்கூடம் என்ற மூன்றாம் அறையை கடந்து அதற்கும் அப்பால் உள்ள கருவறை வரையும் செல்ல அனுமதி தரப்பட்டுள்ளது. அதன்போது அவர்களுக்கு சால்வையும், பரிவட்ட மரியாதையும் தரப்பட வேண்டும். இந்தத் திருவந்திக் காப்பிற்கு உள்ள மரியாதை பெற உரிமை தரப்பட்டுள்ளது.  இந்தச் சலுகை இவர்களுடன் நில்லாமல் இவர் பெண் பிள்ளைகளுக்கும் பேத்திகளுக்கும் தொடர வழிவகை செய்யப்பட்டுள்ளது. தீட்டாகும் பெண்களுக்கு இந்த சலுகை, உரிமை ஆகியன ஆகமங்களை மீறித் தான் தரப்பட்டிருக்க வேண்டும் என்று தெரிகின்றது அல்லது அரசாணை ஆகமத்திற்கும் மேலானது என்பதைப் புரிந்து கொள்ள முடிகின்றது. இக்கல்வெட்டு பிராமணர்களை மற்ற சாதாரண பணியாளர் போலத் தான் வைக்கின்றது. வேந்தன், மன்னன் முன் இவர்கள் கீழ்நிலையர் என்பது தெளிவாகின்றது.

    பார்வை நூல்: கொங்குநாட்டுக் கல்வெட்டுகள், கோயம்புத்தூர் மாவட்டம், பக் 74 & 75 மா. கணேசன் & இரா. ஜெகதீசன்

    மன்னியூர் மன்னீசுவரர் கோயில் வடக்கு சுவரில் பொறித்த 5 வரிக் கல்வெட்டு.

    1. கோனேரின்மை கொண்டான் வடபரிசார நாட்டு ஆளுடையார் மன்னியூராண்டார் தேவகன்மிகளுக்கு நம்மோலை குடுத்தபடியாவது இத்தேவர்க்கு நாங்குடுத்தவூர் இராசடியான இயாழவல சோழநரல்லூரென்று தேவதானமாக ஊரேற்றிக்
    2. கொள்வார்களாகவும் இவ்வூர்க்கு நான்கெல்லை குழிமங்கலத்(தி) _ _ _ _ (க்கு) வடக்கும் இலுப்பையெல்லைக்கு மேற்கும் வாதிக்கரைக்கு தெற்கும் பாண்டிகுல மாணிக்க (வதிய்) எல்லைக்குக் கிழக்கும் இந்நாந்கெல்லை(க்)கு உள்(ப்)பட்ட நந்செய் புந்செ(ய்)யிலு
    3. ள்ள இறை புரவு சிற்றாயமும் எலவை யுகவை _ _ _ _  தெண்டகுற்றம் (எப்)பேர்ப்பட்டனவும் இத்தேவர்க்குத் திருப்பணிக்கும் தேவரடியார், நட்டுவர், காந்தப்பர், திருப்பதியம் பாடுவார், நிமந்தக்காறர்க்கும் இட்டு வருவதாக நமக்கு இருபத்தொன்
    4. றாவது முதல் நம்மோலை குடுத்தோம். இவை சோழகுல மாணிக்க மூவேந்த வேளாநெழுத்து. இயாண்டிருபத்தொற்றாவது நாளிரு நூற்றெழுபது இலாடத்தரையறெழுத்து காடுவெட்டி யெழுத்து. குருகுலத்தரைய நெழுத்து. கோசலத்தரைய ரெழுத்து. இது
    5. பன்மாஹேசுவரரக்ஷை.                                           

    ஊரேற்று – குடியேற்று; புரவு – விளைநில வரி; சிற்றாயம் – சிறு வரி; தெண்டக் குற்றம் – குற்றத்திற்கான தண்டம், fine; நட்டுவர் – நட்டுவனார், நாட்டியம் ஆடுவிப்போன்; காந்தப்பர் – கந்தர்வர் போல் பாடுபவர்; நிமிந்தக்காரர் – வாகனங்களை தண்டில் கட்டுவோர்

    கோனேரின்மை கொண்டானன வீரராஜேந்திரனின் 21 ஆம் ஆட்சிஆண்டில் 270 ஆம் நாளில் மன்னியூர் ஆண்டவர் கோயிலுக்கு இராசடி என்ற இயாழவல சோழநல்லூரை என்ற ஊரை உருவாக்கி தேவதானமாகக் கொடுத்து குடியேற்றிக் கொள்ள அனுமதிக்கப்படுகின்றது. இந்த ஊருக்கு நான்கு எல்லை குறிக்கப்படுகின்றது. இந்த ஊரில் நன்செய் புன்செய்யில் திறட்டப்படும் வரி, வயல்வரி, சிறுவரி, எல்லை வரி, உகவை, குற்றதண்ட வரி என எப்பேர்பட்ட வரியும் இறையிலியாக்கப்பட்டு அந்த வருவாய் இக்கோயிலில் பணியாற்றும் தேவரடியார், நட்டுவனார், காந்தப்பர், திருப்பதியம்பாடுவோர், வாகன தண்டு கட்டும் நிமிந்தர் போன்றோருக்கு சம்பளமாகக் கொடுக்க வேந்தன் இசைவளிக்க அதை மூவேந்த வேளான், இலாடத்தரையன், காடுவெட்டி, குருகுலத்தரையன், கோசலத்தரையன் போன்றோர் கையொப்பமிட்டுக் கொடுக்கின்றனர்.

    வேந்தரும் மன்னவரும் கோயிற் பூசனை பணியாளருக்கு மட்டுமல்லாமல் பிற தொண்டு ஊழியருக்கும் நிவந்தங்கள் தானங்கள் வழங்கி கோயில் இயக்கம் தடையின்றி நடந்துவர பல்வேறு வகையில் ஏற்பாடு செய்ததற்கு இக்கல்வெட்டு ஒரு சான்று. அவ் வகையில் தேவரடியார் என்போர் ஏதோ ஆடல்புரிபவர் என்றல்லாமல் கோயில் பணியாளரில் ஒருவராகவே ஆக்கப்பட்டனர் என்று தெரிகின்றது.

    பார்வை நூல்: கொங்குநாட்டுக் கல்வெட்டுகள், கோயம்புத்தூர் மாவட்டம், பக். 114 மா. கணேசன் & இரா. ஜெகதீசன்.

    திருமுருகன் பூண்டி  http://www.nammacoimbatore.in/article_view.php?newsId=2316

    Share
  • ராஜதுரோக தண்டனை குறித்த கல்வெட்டுகள்

    – சேஷாத்ரி ஸ்ரீதரன்


    உடையார்குடி ஆனந்தீஸ்வரர் கோயில் 

    ராஜதுரோக தண்டனை

    துரோகம் என்றால் நம்பிக்கை குலைய நடத்தல், நம்பினோர்க்கு இரண்டகம் செய்தல் எனப் பொருள்.  இது பல்வேறு வகைத்து. இராஜதுரோகம் என்பது அவற்றில் முகாமையானது. இது பற்றி சில கல்வெட்டுகள் அறியக் கிடக்கின்றன. பொதுவாகப் பகை மன்னன் சதிக்கு உடன்பட்டு அவனுக்கு உத்தாரமாக (supportive) தனது மன்னனை வேவுபார்த்தல், உளவு பார்த்தல், அவன் ஆள்கள் தங்க இடம் அளித்தல், உதவுதல் போன்ற செயல்களில் ஈடுபடுவது இராஜதுரோகம் ஆகும். இதற்கு பழங்காலத்தில் பிற குற்றங்களை விட கடுமையான தண்டனை தரப்பட்டது. இராஜதுரோகி ஆக அறிவிக்கப்பட்ட ஒருவர், அவர் சார்ந்தவர் நிலமும், வீடும், உடைமையும் பறிமுதல் செய்யப்பட்டு ஏலத்தில் விடப்பட்டு அப்பணம் கருவூலத்தில் சேர்க்கப்பட்டது. பெரும்பாலும் இராஜ துரோகிகள் கூடா நட்பு, பதவி செல்வத்திற்கு ஆசைப்பட்டும் அவ்வாறு நடந்து கொண்டனர். குறிப்பாக, அதிகமாக வேளான் என்ற அரசகுடியாரும், பிராமணரும் இந்த தண்டனைக்கு ஆட்பட்டது தெரிகின்றது. நான்கு அகவை முதல் இலவச உண்டு உறைவிடமான வேதபாட சாலையில் கல்வி, சரஸ்வதி பண்டாரம் என்ற நூல் நிலையம், கோவிலில் வேலை அதற்கு நிவந்தமாக விளை நிலம், குடியிருக்க இலவச வீடு, கோயிலில் ஆதுர சாலைகள் இப்படி உயிர்த்துள்ள நாள் வரையில் வேறு எவருக்கும் கிட்டாத பல வசதிகளை மன்னரிடம் இருந்து மானியமாகப் பெற்ற போதும் சில பிராமணர்கள் குறுகிய நோக்கில் அரச அதிகாரிப் பதவிகளைப் பெறுவதற்காக இப்படி நரித்தனமாக நடந்துகொண்டது வரலாற்றில் பதிவாகி உள்ளது. அதைப் பதிந்தவரும் பிராமணரே. கீழே இதற்கு சான்றாக மூன்று கல்வெட்டுகளைப் பார்க்கலாம்.

    உடையார்குடி ஆனந்தீஸ்வரர் கோயில் கருவறை மேற்கு சுவரில் பொறிக்கப்பட்டுள்ள முதலாம் இராசராசனின் 2 ஆம் ஆண்டு கல்வெட்டு.

    “ஸ்வஸ்தி ஸ்ரீ கோ ராஜகேசரிவர்மர்க்கு யாண்டு 2 ஆவது வடகரை பிரமதேயம் ஸ்ரீ வீரநாராயண சதுர்வேதி மங்கலத்து பெருங்குறி பெருமக்களுக்கு சக்கரவர்த்தி ஸ்ரீமுகம் பாண்டியனைத் தலைகொண்ட கரிகால சோழனைக் கொன்று துரோகிகளான சோமன்……………………………………….. தம்பி ரவிதாசனான பஞ்சவன் பிரம்மாதிராஜனும் இவன்றம்பி பரமேஸ்வரன் ஆன இருமுடிச் சோழ பிரம்மாதிராஜனும் இவர்கள் உடப்பிறந்த மலையனூரானும் இவர்கள் தம்பிமாரும் இவர்கள் மக்களிடும் இவர் பிரமாணிமார், பெற்றாளும் இ……………………ராமத்தம் பேரப்பன் மாரிடும் இவர்கள் மக்களிடம் இவர்களுக்குப் பிள்ளை குடுத்த மாமன்மாரிடும் தாயோடுடப் பிறந்த மாமன் மாமன்மாரிடும் இவர்கள் உடபிறந்த பெண்களை வேட்டாரினவும் இவர்கள் மக்களை வேட்டாரினவும் ஆக இவ்வனைவர் (முடமை)யும் நம் ஆணைக்குரியவாறு கோட்டயூர் பிரம்ம ஸ்ரீராஜனும் புள்ளமங்கலத்து சந்திரசேகர பட்டனையும் பெறத் தந்தோம். தாங்களும், இவர்கள் கண்காணியோடும் இவர்கள் சொன்னவாறு நம் ஆணைக்குரியவாறு குடியோடு குடிபெறும் விலைக்கு விற்றுத்தலத்திடுக. இவை குருகாடிக்கிழான் எழுத்து என்று இப்பரிசுவர இ ஸ்ரீமுகத்தின் மேற்பட்ட மலையனூரான் ஆன பாப்பனச்சேரி ரேவதாச கிரமவித்தனும் இவன் மகனும் இவன்றாய் பெரிய நங்கைச்சாணியும் இம்மூவரிதும் ஆன நிலம் ஸ்ரீ வீரநாராயன சதுர்வேதி மங்கலத்து மிப்பிடாகை தேவமங்கலம் ஆன பட்டில நிலம் ஸ்ரீவீரநாராயண சதுர்வேதி மங்கலத்து சபையார் பக்கல் வெண்ணையூர் நாட்டு வெண்ணையூருடையான் நக்கன் அரவணையானான பல்லவ முத்தரைய மகன் பரதனான வியாழகஜமல்லப் பல்லவரையனேன். இந்நிலம் பழம்படி இரண்டே முக்காலே ஒருமாவும் அகமனை ஆறும் ஆக இந்நிலமும் இம்மனையும் நூற்றொருபத்தி ருகழஞ்சு பொன் குடுத்து விலைகொண் டிவ்வூர் திருவனந்தீஸ்வரத்து பட்டாரகர் கோயிலிலே இவ்வாட்டை மேஷநாயற்று நாயற்றுக்கிழமை பெற்ற புரட்டாசி ஞான்று சந்திராதித்தவர் ஆழ்வார் கோயில் முன்பு மூவாயிரத்தரு நூற்றுவனான நிலையம்பலத்து தண்ணீர் அட்டும் பிராமணன் ஒருவனுக்கு நிச தம் படி நாழி நெல்லும் ஆட்டைவட்டம் ஒரு காகம் நிசதம் பதினைவர் பிராமணர் உண்பதற்கு ஆக பதினாறு இவறுள் ஐவர் சிவயோகிகள் உண்ணவும் வைத்தேன் அரையன் பரதன் ஆன வியாழகஜமல்ல பல்லவரையனேன். இதர்மம் ரஷிகின்ற மகாசபையார் ஸ்ரீபாதங்கள் என் தலை மேலன”

     பெருங்குறி பெருமக்கள் –   மதிப்புடைய வெகுமக்கள்; ஸ்ரீ முகம் – திருமுகம், அரசாணை;  பிரமாணிமார் – பிராமணர் மனைவியர்; பெற்றாளும் – தாயும், குடியோடு குடிபெறும் விலை – சாதாரண மக்கள் பெறும் விலை; பிடாகை – உள்அமைந்த சிறுகிராமம்; அகமனை – குடியிருக்கும் சொந்தமனை.

    விளக்கம்: கடலூர் மாவட்டம் சிதம்பரம் வட்டத்தில் உள்ள உடையார்குடியில் ஆனத்தீஸ்வரர் கோயில் கருவறை மேற்கு சுவரில் பொறிக்கப்பட்டுள்ள முதலாம் இராசராசனின் 2 ஆம் ஆண்டு ஆட்சியில் கி.பி.987 வெண்ணையூர் நாட்டு வெண்ணையூருடையானான நக்கன் அரவணையானான பல்லவ முத்தரைய மகன் பரதனான வியாழகஜமல்லப் பல்லவரையன்  6 சொந்த வீடுகளையும், இரண்டுவேலி 16 மா நிலத்தையும் 112 பொற்காசுகளுக்கு வாங்கி கோயிலுக்கு விட்டான். அதைக் கொண்டு வீரநாராயண சதுர்வேதி மங்கலத்து திருக்கோயிலில் தண்ணீர் சொரியும் மூவாயிரத்தரு நூற்றுவன் என்ற நிலையம்பலத்து தண்ணீர் அட்டும் பிராமணன் ஒருவனுக்கு நிசதம் படி நாழி நெல்லும் ஆட்டை வட்டம் ஒரு காகம். அதே நேரம் நிசதம் 15 பிராமணர் உண்பதற்கும் ஆக பதினாறு 16 பிராமணர்களுக்கு, இவருள் ஐவர் சிவயோகிகள் உண்ணவும் வேண்டும் என்று கொடுத்தான் அரையன் பரதன் ஆன வியாழகஜமல்ல பல்லவரையன். இத்தர்மம் காக்கின்ற மகாசபையார் திருப்பாதங்கள் என் தலை மேலன என்று குறித்தான்.

    இவன் வாங்கிய 6 வீடும் நிலமும் இரண்டாம் ஆதித்தகரிகாலரை கி.பி. 965 ல் வஞ்சகமாகக் கொன்ற வீரநாராயண சதுர்வேதி மங்கலத்து பிராமணர்களில் ஒரே குடும்பத்தை சேர்ந்த சோமன், இவன் தம்பி இரவிதாசனான பஞ்சவன் பிரமாதிராஜன். இவன் தம்பி பரமேஸ்வரன் ஆன இருமுடிச் சோழபிரமாதிராஜன். இவர்தம் தம்பி மலையனூரன் பஞ்சவன் பிரமாதிராஜன் ஆகிய நான்கு பேர்களும் சேர்ந்து இரண்டாம் ஆதித்த கரிகாலனை வஞ்சகமாக கொலை செய்த இராசதுரோகிகள் ஆவர். இவர்ளுக்கு தண்டனை வழங்கப்பட்ட செய்தி இராசராசனின் 2 ஆம் ஆண்டு ஆட்சியில் (கி.பி.987) பதிவாகி உள்ளது. தண்டனை வழங்கப்பட்டபோது இராசதுரோகிகள் நால்வரது பிள்ளைகள், மனைவியர், பெற்ற தாய், பேரப்பன்மார் இவர்களுக்கு பெண்கொடுத்த மாமனார்களும், தாயுடன் பிறந்த மாமன்மார்களும், இவருடன் பிறந்த பெண் மக்களும் இனி பிராமணர் அல்லாத வேற்றவர், வேற்று சாதியார். இவர் தம் பிள்ளைகளும் வேற்றுசாதியார் என சமூகம் கருத வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது. இவர்களது உடைமைகள் பறிமுதல் செய்யப்பட்டு ஆணைப்படி கோட்டையூர் பிரம்ம ஸ்ரீராஜன், புள்ளமங்கலத்து சந்திரசேகர பட்டன் ஆகியோர் பொறுப்பில் விடப்பட்டது. இந்த இருவரும் இவர்கள் கண்காணியோடும் இவர்கள் சொன்னவாறு ஆணைப்படி குடியோடு குடிபெறும் விலைக்கு விற்றுத் கருவூலத்தில் சேர்க்க வேண்டும் என்று குருகாடிக்கிழான் ஆணைஓலை தந்தான். ஏனென்றால் இந்த ஆணைஓலையில் மேற்படி குறித்த இராஜதுரொகிகளின் தம்பி மலையனூரான் ஆன பாப்பனச்சேரி ரேவதாச கிரமவித்தனும், இவன் மகனும், இவன் தாய் பெரிய நங்கைச் சாணியும் ஆகிய இம்மூவருடைய நிலம் ஸ்ரீ வீரநாராயண சதுர்வேதி மங்கலத்து பிடாகையான தேவமங்கலத்தில் அமைந்த பட்டில நிலம் தான் அந்த இரண்டுவேலி 16 மா நிலம் என்பது.

    இவர்களில் மற்றவர் உடைமைகள் எந்தெந்த ஊர்களில் இருந்தனவோஅங்கும் இதே நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கும் என்பதுதெளிவு. இந்த கல்வெட்டு வியாழகஜமல்லப் பல்லவரையன்  தொடர்பானது என்பதால் இந்த அளவு செய்தி மட்டுமே கல்வெட்டில் அறியத் தரப்பட்டது. இது இராஜ துரோகிகளின் நேரடியான தண்டனைக் கல்வெட்டு அன்று. அதனால் இரண்டாம் ஆதித்ய சோழன் எங்கு? எவ்வாறு? எப்போது? எப்படிக் கொல்லப்பட்டான் என்ற செய்தி இக்கல்வெட்டில் இடம்பெறவில்லை. இப்படி இராஜதுரோக தண்டணைக்கு உள்ளானவருக்கு ஊரார் உதவிட, ஒத்துழைக்க முன்வரமாட்டார் மாறாக ஒத்துழைக்க அஞ்சுவார். இவர்கள் தம் தண்டனைக் குற்றம் யாது என்று பிறரால் அறியப்படாதவாறு வேற்றூர் சென்று அக்ஞாத வாசம் செய்தால் அன்றி ஊராரால் ஒதுக்கப்பட்டு வாழ்வதற்கே இடர்படுவர், மிடிமைப்படுவர் என்பதை உணரமுடிகின்றது. இதனால் ஒன்றும் அறியாத அப்பாவியான உறவினர் படும் துன்பம் தான் வேதனையானது.

    பார்வை நூல்: EP, IND Vol XXI, PP 165-170

    கொங்கின் கடத்தூர் பகுதியில் உள்ள திருமருதுடையார் கோயில் 17 வரிக் கல்வெட்டு.

    1. ஸ்வஸ்திஸ்ரீவிக்கிரமசோழ தேவற்கு யாண்டு 29 தாவது விக்கிரம சோழத் திருபுவன சிங்க
    2. னேன் கடற்றூர் ஆளுடையார் திருமருதுடையார் எனக்கு பிரமேகம் தீற்தமையில் இந்நாயனா _ _ _
    3. ரை திருவோத்த சாமத்துக்கு நாள் ஒன்றுக்கு அரிசி குறுணிக்கு நான் நீர்வார்த்து விட்ட நிலமாவ
    4. ன (கரை)வழிநாட்டுக் கண்ணாடிப்பூத்தூர் வடகரையில் உதயாதிச்ச தேவர் துரோகியாய் வடகொங்(கு)
    5. ப் போனமையில் அவர்நிலம் ஆறுகலமும் எனக்கும் என் தம்பி சோழசிங்கதேவற்கும் இவ்விருவ
    6. ற் _ _ _ _ இது காணியாகத் திருவிள்ளம் செய்து திருமுகம் தந்(த)மையில் இதில் என்னொரு பாதி மன்றாட்டு வி
    7. கலமும் இந்நாயனாற்குத் திருவத்த சாமப்படிக்கு நீர்வாத்துக் குடுத்து இந்நில முக்கலத்துக்கும்  _ _ _
    8. வது வடகரையில் பூலுவப்பற்றி விதை ஆறுகலத்தில் என்னொருபாதி விதை முக்கல(த்துக்கெ)
    9. ல்லையாவது இக்கிழைக்கு வடக்கும் உதையாதித்த தேவர் நிலத்துக்கு மேக்கும் அதியமான் _ _ _
    10. சோழீஸ்வரமுடையார் தேவதானத்துக்கு கிழக்கும் அழகாண்டார் செய்க்குத்  தெற்கும் இந்நாள் _ _ _
    11. ட்ட நெல்விதை இரு கலமும் வீரசோழீஸ்வருமுடையார் தேவதானத்துக்கு வடக்கும் மே
    12. னத்துக்குக் கிழக்கும் அழகாண்டார் செய்க்கு மேற்கு இந்நிலத்துக்குப் பாய்கிற கவருக்கு தெற்
    13. ல்லைக்குட்டபட நெல் விதை(க்) கலமும்  முக்குறுணியில் நெல் விதை கலமும் ஆக நெ
    14. ல் விதை முக்கலமும் இறையிலி முற்றூட்டாக எனக்கும என் மக்கள் மக்களுக்கும் விலையொற்றி
    15. ன ஸீதனத்துக்குரித்தாவுதாக நாயனார் திருமகம் திருவிள்ளம் செய்(த)படியே ஆளுடை
    16. மருதுடையாற்கு கல்வெட்டிக் குடுத்தேன் விக்கிரம சோழதிரிபுவன சிங்க தேவனேன்  (தி)
    17. ருபுவன சிங்கதேவன் எழுத்து. இவை கோத்தப்பச் சோழன் எழுத்து. இது பன்மாஹேஸ்வர ரக்ஷை.

    முற்றூட்டு – முழு விளைச்சல்,  முழுவருவாய்; நாயனார் – மன்னர்.

    விளக்கம்: பண்டு கொங்கு வறண்ட பகுதிகளை உடைய பகுதி வட கொங்கு எனவும், வளமையான பகுதிகளை உடைய நாடு தென்கொங்கு எனவும் இரு பகுதிகளாக இருந்தது. அவற்றை இரு வேறு ஆட்சியாளர்கள் ஆண்டுள்ளனர். இக்கல்வெட்டு கடத்தூர் பகுதியில் உள்ள திருமருதுடையார் கோயிலில் மகாமண்டப நுழைவு வாயிலின் கிழக்கு சுவரில் வெட்டப்பட்டு உள்ளது. கொங்கு சோழன் மூன்றாம் விக்கிரம சோழனின் 29 ஆம் ஆட்சி ஆண்டில் (கி.பி. 1302) விக்கிரம சோழ திரிபுவன சிங்கனான எனக்கு திருமருதுடை இறைவர் நோய் தீர்த்து வைத்ததால் இவ்இறைவர்க்கு சாமத்து பூசையின் போது குறுணி அரிசிந் தரத் தீர்மானித்து அதற்கான நிலத்தை நீர்வார்த்து தானமாகக் கொடுத்தேன். நான் தரும் நிலமானது முன்பு கரைவழி நாட்டு கண்ணாடிப்பூத்தூர் வடகரையில் வாழ்ந்திருந்த அரச அதிகாரப் பொறுப்பாளர் உதயாதிச்ச தேவர் அரச துரோகியாகி வடகொங்குப் போனமையால் (அவர் உடைமைகள், சொத்துக்கள், நிலங்கள் மன்னனால் பறிமுதல் செய்யப்பட்டு கோயில் பண்டாரத்தின் பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டது. இச்செய்தி இக்கல்வெட்டில் பொறிக்கப்படவில்லை).  அவருடைய ஆறுகல நிலம் எனக்கும் என் தம்பி சோழசிங்க தேவர்க்கும் காணியாக்க மன்னன் ஆணயிட்டுத் திருஉள்ளம் தந்தபடியால் என் பங்கான மூன்று கல நிலத்தையும் அதில் விதைப்பதற்கான நெல் ஆறு கலத்தில் என் பங்கு மூன்று கலமும் இறைவர்க்குத் தந்தேன். இந்த மூன்று கல நிலம் வடக்கில் உதையாதித்த தேவர் நிலத்துக்கும், மேற்கில் அதியமான் நிலத்துக்கும், சோழீஸ்வரமுடையார் தேவதானத்துக்கு கிழக்கும்.  அழகாண்டார் செய்க்குத் தெற்கும் அமைந்துள்ளது.  நெல்விதை இரு கலமும் வீரசோழீஸ்வருமுடையார் தேவதானத்துக்கு வடக்கிலும், மேனத்துக்குக் கிழக்கிலும், அழகாண்டார் செய்க்கு மேற்கிலும் இந்நிலத்துக்குப் பாய்கிற கவருக்கு தெற்கெல்லைக்குட்டபட நெல் விதைக் கலமும் முக்குறுணியில் நெல் விதை ஒரு கலமும் ஆக நெல் விதை முக்கலமும் இறையிலி முற்றூட்டாக கொடுத்தேன். எனக்குப் பின் என் மக்கள் அவர்க்கு பின் அவரது மக்களுக்கும் (பேரர்களுக்கும்) விலையொற்றின சிதனத்துக்குரித்தாவதாக, இதாவது பரிசாவதாக என்று கூறி மன்னர் ஆணையிட்டு திருஉள்ளமும் செய்தபடியே ஆளுடைமருதுடையாக்கு கல்வெட்டிக் கொடுத்தேன் விக்கிரம சோழதிரிபுவன சிங்க தேவனாகிய நான். இது திரிபுவன சிங்கதேவன் எழுத்து. இவை கோத்தப்பச் சோழன் எழுத்து என்று கையொப்பமிட்டு கொடுத்தனர்.

    விக்கிரம சோழசிங்க தேவன் அரச குடியினர் என்பது புலனாகின்றது. இந்நிலத்தை அண்ணன் தம்பிமார் விலைகொடுத்து வாங்காமல் மன்னனிடம்இருந்து நேரடியாக மானியாமாகப் பெற்றுள்ளனர் இல்லாவிட்டால் காணியாக்குவதற்கு மன்னனின் ஆணையைப் பெற வேண்டிய தேவை வந்திருக்காது.  மன்னனுக்கு ஏதோ வகையில் உறவினராக இருத்தல் வேண்டும்.  விக்கிரம சோழதிரிபுவன சிங்கர் தம் பங்கான மூன்று கல நிலத்தையும் அதில் விதைக்க மூன்று கல விதை நெல்லையும் கோயிலுக்குக் காணியாகக் கொடுத்தார்.

    பார்வை நூல்:கொங்குநாட்டுக் கல்வெட்டுக்கள், கோயம்பத்தூர் மாவட்டம், 2001, பக்.131-132, மா.கணேசன் & இரா. ஜெகதீசன்

    திருப்பூர் தாராபுரம் வட்டம் பிரம்மியம் என்ற ஊரின் திருவலஞ்சுழி கோயில் கருவறை தெற்கு சுவர் 9  வரிக் கல்வெட்டு.

    1. ஸ்வஸ்திஸ்ரீ கோஇராஜயிராஜ ஸ்ரீவீரசோழ தேவற்குத் திருவெழுத்திட்டுச் செல்லாநின்ற திருநல்லி யாண்டு அஞ்சாவதின் எதிராம் யாண்டு தென்கரை நாட்டு ப்ரஹ்மதேயம் ஸ்ரீ வீரசங்காத சதுர்வேதி மங்கலத்து ப்ரஹ்மணன் காமாக்கா
    2. ணிசோமாசி சோமாசி ராஜத்ரோஹம் பண்ணிப் போனமையில் அவன் பூமியானது பெருமாள் கொண்டருள பொருமாள் சாமந்தரில் பெரியாந் சோழனான வீரசோழ கங்கவன் பெருமாள் பண்டாரத்துக்கு
    3. நகரக்கல் துளை முப்பது பொன் வைச்சுப் பொன்னை குடுத்து நிலமறக் கொண்டு இவ்வூர்த் திருவலஞ்சுழி பரமேஸ்வரர்க்குத் திருப்பதியப்புறமாக வைச்ச நிலம் அன்னசு[ர]ப்போயிற் கிடக்காணியும், பள்ளப்போயிற் கிடகாணியு
    4. ம், பனையோடு செய்யிற் பாதியும், பெரிய செய்பனையோடு செய்யடைய அரைக் காணியும், அதிராத்தி வாக்காலில் வடக்கடையந் காணியும், கொங்க தோட்டத்தில் பாதியும், கோவிலார் தோட்டத்தில் பாதியு
    5. ம், வடவூரந் தோட்டத்திற் பாதியும், திருநாராயண விளாகத்திற் பாதியும், இன்நிலத்தால் வந்த வீடுகூறும் மடுகூறும் ஸ்வத்தியும் பரத்தியும் மற்றுமிப்பேர்பட்டிதும் இத்தேவர்க்குத் திருப்பதியப்புறமாவதாகவும் இ
    6. ன்னிலத்துக்கு அரையே யரைக்காப் பெயரை மாகாணிப் பங்குக்கு இறையிழிச்சு இவ்வூர் ஸபையார் பக்கற் குடுத்தப் பொன் நகரக்கல் துளை பத்து. இப்பொன் பத்துங்கைக் கொண்டு இறைவரி எச்சோறும் ஊர்ப்
    7. படுகுடிமையும் மற்றமெப்பேர்பட்டதும் இறுத்து முன்பு தேவதான முழுகற்படி உழுது ஊர் நஞ்சைமேல் வாரந்தேவர்க்குக் குடுக்கக்கடவோமானோம் ஸபையோம். இப்பரிசு இன்னிலந் திருப்பதியப்புற
    8. மாக சந்திராதித்தவற் செல்லக் கல்வெட்டிக் குடுத்தேன் வீரசோழ காங்கயனேன். இத்தம்மம் ரக்ஷிப்பான் ஸ்ரீபாதமென் தலைமேலின இத்தம்மம் அழிவுநினைப்பான் வழிஏழெச்சமறுவான். இது  பன்மாஹே
    9. ஸ்வர ரக்ஷை.

    திருவெழுத்திட்டு – முடிசூடி; பெருமாள் – மன்னன், சாமந்தர் – படைத்தலைவர் அமைச்சர்; நிலமற – ஒரு நிலம் கூட மிச்சமில்லாமல்; திருப்பதியப்புறம் – திருப்பாடல் பாடுதற்கு கொடையாக; இறையிழிச்சு – வரிநீங்கி; எச்சோறு பொது ஊழியர்க்கு பகலில் தரும் சொறு;  ஊர்ப்படுகுடிமை – ஊர்வரி;  வழிஏழெச்சமறுவான் – ஏழுதலைமுறை அற்றுப்போவான்.

    விளக்கம்: கொங்கு சோழன் இரண்டாம் வீரசோழனின் 6 ஆம் ஆட்சி ஆண்டில் (கி.பி. 1106) தென்கரை நாட்டு பிரமதேயமாம் ஸ்ரீ வீரசங்காத சதுர்வேதி மங்கலத்து பிராமணன் காமாக்காணி சோமாசி சோமாசி இராஜதுரோகம் பண்ணிப் போனமையால் (இன்னது என்று குறிக்கவில்லை) அவனது நிலத்தையும் உடைமையையும் மன்னர் பறிமுதல் செய்தார். அதனை மன்னனின் படைத்தலைவர் சோழனான வீரசோழ காங்கவன் பெருமாள் பண்டாரத்துக்கு நகரக்கல் துளை முப்பது பொன் கொடுத்து நிலம் ஏதும் மிச்சம் விடாமல் பிராமணனின் 10 இடத்தில்அமைந்த நிலம், தோட்டம்,  வீடு ஆகியவற்றை வாங்கி அவற்றை திருவலஞ்சுழி பரமேசுவரர்க்குத் திருப்பதியப்புறமாகக் கொடுத்தான். அதோடு அரையே அரைக்கால் மாகாணிப் பங்குக்கு வரிநீக்கி திருவலஞ்சுழி சபையாரிடம் அவன் கொடுத்தப் பொன் நகரக்கல் துளை பத்து. இப்பரிசு திருப்பதியப்புறமாக சந்திராதித்தவர் வரை செல்லவதாக கல்வெட்டிக் கொடுத்தான் வீரசோழ காங்கயன். இத்தர்மம் காப்பான் திருப்பாதமென் தலைமேல் என்றும், இத்தர்மம் அழியநினைப்பான் ஏழுதலைமுறை அற்றுப்போவான் என்றும் சாவித்தான்.

    சோழனான வீரசோழ காங்கவன் பெருமாள் மன்னனுக்கு அமைச்சராய் படைத்தலைவராய் இருப்பது அவரது உறவினர் என்பதால் ஆகலாம். இதைப் பெயரைக் கொண்டு  அறியமுடிகின்றது. மேலுள்ள மூன்று  கல்வெட்டுகளிலும் பறிமுதல் செய்த இராஜதுரோகிகளின் நில, உடைமைகளை உள்ளூரார் எவருமே வாங்க முன் வராததால் அவற்றை அரசதிகார பொறுப்பில் உள்ளவர்களே வாங்கிக் கொண்டு  கோவிலுக்கு நன்கொடையாகத் தந்து விடுகின்றனர். ஏனெனில் உள்ளூரார்க்கு ஏற்பட்ட அச்சமும், அவரிடம் பெரிதாக பணமும் இல்லாமல் இருக்கலாம் என்ற இரண்டு காரணங்கள் தாம். அதேநேரம் வெளியூரார் வந்து வாங்கிப் போட்டு நிலத்தையும் வீட்டையும் பயன்படுத்த முடியாது ஏனென்றால் அவர்கள் அந்த ஊருக்கே குடிபெயர்ந்தாக வேண்டி நிலை.

    பார்வை நூல்: திருப்பூர் மாவட்டக் கல்வெட்டுகள், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சென்னை – 8, 2012, பக். 160-161.

    https://veludharan.blogspot.com/2017/09/sri-soundranayaki-samedha-sri.html

    Share
  • திருவிடைமருதூரில் சோழர் காலத்தில் சாக்கைக் கூத்து நாடகம் பற்றிய கல்வெட்டு

    -சேஷாத்ரி ஸ்ரீதரன்

    முத்தமிழில் ஒன்று நாடகத் தமிழ். இந்த நாடகக் கலை கூத்துவடிவில் சோழர் கால ஆட்சியில் கோவில்களில் நடத்தப்பெறுதற்கு வேண்டிய கொடையை நல்கி நல்லாதரவு தந்து வளர்த்ததற்கு சான்றாக உள்ளவையே கீழ் உள்ள கல்வெட்டுகள். இவை இரண்டும் திருவிடைமருதூரில் உள்ள மகாலிங்கேசுவரர் கோவில் மண்டப வடக்கு சுவரில் பொறிக்கப்பட்டுள்ளன.

    1. இரண்டாம் ஆதித்ய கரிகாலனின் ஆட்சியில் சாக்கைக் கூத்தனுக்கு பசிக்கு கூலியாக ஒரு வேலி நிலம்.

    கல்வெட்டுப் பாடம்:

    ஸ்வஸ்திஸ்ரீ பாண்டியன் தலைகொண்ட கோப்பரகேசரி பந்மற்கு யாண்டு 4 ஆவது திருவிடைமருதில் ஸ்ரீ மூலஸ்தானத்தில் பெருமானடிகளுக்கு ஆரியக் கூத்தாட ஸ்ரீ காரியம் ஆராய்கின்ற சிற்றிங்கண் உடையான் கோயில் மயிலை ஆன பராந்தக மூவேந்த வேளாரும் திரைமூர் நாடுடையாரும் திருவிடைமருதில் நகரத்தாரும் தேவகந்மிகளும் நாடக சாலையிலேயிருந்து கித்திமறைக்காடன் ஆன திருவெள்ளறை சாக்கைக்கு நிவந்தஞ் செய்து குடுக்க என்று ஏவலால் இத்தேவர் தேவதானம் விளங்குடி நிலத்தில் பறைச்சேரி பத்து உள்பட நிலம் வேலியும் இவ்வாண்டின் எதிராமாண்டு முதல் இந்நிலங்கொண்டு தைப்பூசத் திருநாளிலே ஒரு கூத்தாடுவதாகவும், திருத்தம் ஆடின பிற்றை நாள் துடங்கி மூன்று கூத்தாடுவதாகவும்,  வைகாசித் திருவாதிரையின் பிற்றைநாள் தொடங்கி மூன்று கூத்தாடுவதாகவும் ஆக இந்தக் கூத்து ஏழு அங்கமும் ஆடுவதாகவும் பண்டாரத்தே பதினாற்கல நெல்லு கொற்றுப் பெறுவதாகவும் இந்நெல்லும் விலை அடைப்படி நெல்லும் கொற்றும் இரட்டி அவ்வவ் வாட்டையாடுகவும். இப்பரிசு கித்திமறைகாடனால் திருவெள்ளறை சாக்கைக்குச் சந்திராதி _ _ _ _ _

    சொற்பொருள்:  
    காரியம் ஆராய்கின்ற – கருத்தாலோசிக்கும், consultant; சிற்றிங்கண் – தணிக்கை செய்கிற. முதுகண் என்பதற்கு எதிர்ச்சொல் ஆகுமோ; கோயில் மயிலை –     ; தேவகன்மிகள் – இறைப்பணியாளர்; நிவந்தம் – கோயிற்பணி செலவு; ஏவல் – மேலிடத்துக் கட்டளை; எதிராமாண்டு – ; திருத்தம் – பத்தாம் நாள் நடைபெறும் தீர்த்தவாரி; கொற்றும் – உணவு; கூத்து – ஆடி நடிப்பது.

    கல்வெட்டு விளக்கம்:  

    இரண்டாம் ஆதித்ய கரிகாலனின் 4 ஆம்ஆண்டு ஆட்சியில் (கி.பி. 968) திருவிடைமருதூர் மூலவருக்கு ஆரியக் கூத்தாடுவற்கான திருப்பணி பற்றி கருத்தாலோசனை செய்கின்ற தணிக்கை செய்கின்ற அதிகாரியான பராந்தக மூவேந்த வேளாரும், திரைமூர் நாட்டவரும், திருவிடைமருதூர் நகரத்தாரும், இறைபணியாளர்களும், நாகடசபையில் கூத்தாடும் திருவெள்ளறை சாக்கையான கித்திமறைக்காடன் என்பானும் இவனுக்கு பணிக்கூலி கொடுக்க மேலிடக் கட்டளையால் ஒன்று கூடி ஆலோசித்து விளங்குடியில் இவ்இறைவர்க்கு உள்ள தேவதான நிலத்தில் பறைச்சேறிபற்று உள்பட ஒரு வேலி நிலத்தை  கோயிற்பணி கூலியாக ஏற்றுக் கொண்டு எதிர்வரும் ஆண்டு முதல், இதாவது, ஐந்தாம் ஆட்சி ஆண்டு முதல் தைப்பூசத்தன்று ஒரு கூத்தாடவும், தீர்த்தவாரி கழிந்து வரும் பின் மூன்று நாளும், வைகாசித் திருவாதிரைக்கு பின் மூன்று நாளும் ஆக இந்தக் கூத்து ஏழு அங்கங்கள் ஆடவேண்டும். கோயில் அலுவலகத்தில் 16 கலம் நெல், உணவு பெற்றுக் கொள்ளவும் இசைவு தரப்பட்டது. அடுத்தடுத்த ஆண்டுகளில் கூத்து நடத்த 16 கல நெல்லும், விலை அடைப்படி நெல்லும், உணவும் இரட்டிப்பாக பெற்றுக் கொள்ளலாம். இந்த வெகுமதிப் பரிசு திருவெள்ளறை சாக்கையருக்கு கித்தமறைக்காடனால் சந்திராதித்தர் வரை தொடர்வதாக என்று குறிக்கப்பட்டுள்ளது.

    திருவிடைமருதூர் கோவிலில் நாடகசபை ஒன்று இருந்ததையும் அதில் மூலவருக்காக ஆண்டுதோறும் கூத்து நடைபெற ஏற்பாடு ஆனது பற்றியும் அறியமுடிகின்றது. சாக்கை கூத்து ஆடியவர்கள் பறையர்கள் என்பதால் கித்தமறைக்காடனுக்கு பறைச்சேரியில் உள்ள பற்று ஒதுக்கப்படுகின்றது. அதைக் கொண்டு அவர் பறையர் என்பதையும் அறிய முடிகின்றது. புராணத்தில் பக்த நந்தனார் தீண்டாமைக்கு ஆட்பட்டு கோயிலுக்கு வெளியே நிறுத்தப்பட்டார். ஆனால் இங்கோ கித்திமறைக்காடன் என்ற பறையர் கோயிலில் அமைந்த நாடக சபையில் கூத்து நிகழ்த்துகிறார். இவ்விரண்டு செய்திக்கும் எத்தனை முறண். இது சோழர் காலத்தில் தீண்டாமை இல்லை என்பதற்கு சான்று. எவரும் தாழ்த்தி ஒடுக்கப்கவில்லை என்பதற்கு சான்று. இதனால் இரண்டாயிரம் ஆண்டு ஒடுக்குமறை என்பது பொய்யன்றோ?

    2. முதற் பராந்தகன் காலத்தில் உடுக்கை அடிப்போனுக்கு பணிக்கூலியாக நிலம்.

    கல்வெட்டுப் பாடம்:

    ஸ்வஸ்திஸ்ரீ மதுரைகொண்ட கோப்பரகேசரி பந்மற்கு யாண்டு 17 ஆவது திருவிடைமருதூருடையாருக்கு ஸ்ரீ காரியம் ஆராய்கின்ற குறும்பில் வாஸுதேவனார் ஆராய்ச்சியில் திரைமூர் ஸபையாரும் _ _ _ _ _ த _ _ _ ரல் நகரத்தாரும் திருக்கோயிலுடையார்களும் பதிபாத மூலத்தாரும் நாடக சாலையிலிருந்து திருவிடைமருதூருடையார்க்குத் திருஓலக்கத்து மூன்றுஸந்தியும் உடுக்கை வாசிப்பான் ஒருவனுக்கு விளங்குடி தேவர் நிலத்தில் நிவந்தமாகச் செய்த நிலம் முக்கால்.

    சொற்பொருள்:  
    ஆராய்ச்சி – கருத்தாலோசனை, consult; பதிபாத –  சிவன்கோயில் பூசகர்; திருஓலக்கம் – நாயனம், நாதஸ்வரம்.

    கல்வெட்டு விளக்கம்:  

    முதற் பராந்தகனின் 17 ஆம் ஆண்டு ஆட்சியின் (கி.பி. 924) போது திருவிடைமருதூர் ஈசன் கோயிலில் கருத்தாலோசனை செய்கின்ற குறும்பில்லைச் சேர்ந்த வாசுதேவன் நடத்தின கருத்தாலோசணை கூட்டத்தில் பங்கெடுத்த திரைமூர் கருவறை பட்டர்களும், நகரத்தவரும், திருக்கோயில் பணியாளர்களும், சிவன்கோயில் பூசகரும் கூடி நாடக சபையில் இருந்து திருவிடைமருதூருடைய ஈசர்க்கு நாதாவரம் வாசிக்கின்ற போது மூன்று கால பூசனையின் போது உடுக்கை அடிப்பவனுக்கு விளங்குடியில் உள்ள தேவதான நிலத்தில் தானமாகக் கொடுத்த நிலம் முக்கால் பங்கு வேலி.

    கூத்து, நாடகம் முதலியவை கோவிலகளில் இராசராசனுக்கு முன்பே பல்லவர் காலத்திலேயே தொடங்கி விட்டன போலும்.  உடுக்கை அடிப்பவர் பறையர் என்பதால் விளங்குடியில் அவருக்கு நிலக் கொடை வழங்கப்பட்டது.

    பார்வை நூல்: திருவிடைமருதூர் கல்வெட்டுகள், வெளியீடு 1960, ஸ்ரீ மகாலிங்க சுவாமி தேவாதானம்.

    இந்த மகாலிங்க சுவாமி தேவஸ்தானம், திருப்பதி தேவஸ்தானம் போல ஆங்காங்கே உள்ள திருக்கோயில் நிருவாகத்தார் தமது கோயில் கல்வெட்டுகளை அச்சில் ஏற்றி இருந்தால் தமக்கு இப்போது எவ்வளவோ கல்வெட்டுகள் ஆராயக்கிட்டி இருக்கும்.

    Share
  • கல்லிடைக் குறிச்சி தனிக்கல் காட்டும் சமூக வரலாறு

    -சேஷாத்ரி ஸ்ரீதரன்

    நெல்லை அம்பாசமுத்திரம் வட்டம் கல்லிடைக் குறிச்சியில் கோட்டைத் தெருவில் உள்ள தனிக்கல் கொல்லம் ஆண்டு 628 இல் (கி.பி.1453) 44 வரிகளில் வெட்டப்பட்டு உள்ளது. இதில் வெள்ளார் எவரும் இனி வெள்ளை நாடார்களை தம் பணியில் அமர்த்திக் கொள்ள வேண்டாம் என்று தடை செய்து அதை இக்கல்வெட்டில் குறித்துள்ளனர். இது அக்கால சமூக நிலையை அறிய மிகவும் உதவுகின்றது.

    கல்வெட்டுப் பாடம்:

    1. கொல்லம் 600 20 8 (628) ஆண்டு சித்திரை மாதம்
    2. (5) நாள் முன்னாள் நாட்டின கல்லு
    3. (இ)ரண்டுக்கும் படி எடுப்பு. கொ
    4. ல்லம் 500 50 5 (555) ஆண்டு  கும்ப னாயறு
    5. (14) நாள் சென்றது நம்முடைய நாட்
    6. டில் வெள்ளாழற்க்கு பிழைப்
    7. போர் சில காரியம் வெள்ளை நாடாரி
    8. ல் சோதினை உள்ளிருப்பு பாசித்த
    9. லை விக்கிரம ஆதித்தன் செய்
    10. கையாலேயம் நாட்டினகல்லி
    11. ல் வாசகமும் 500 60 1 (561) ம் ஆண்டு மீன்னா
    12. யறு 26 சென்றது. னாட்டில் வெள்
    13. ளாழற்கு பிழைப்பார் சிலகாரி
    14. யம் வெள்ளை னாடாரில் கணக்கு
    15. கோளரி அய்யப்பனும், அய்யப்ப
    16. ன் குமரனும், அண்டூர் செழியங்க
    17. னும் செய்கையாலேயும் செனமு
    18. ம் காரணப் பட்டவர்களும் காரியஞ்
    19. செய்கிறவர்களும் கணக்கெழு
    20. முதுகிறவர்களும் மற்றும் நாட்
    21. டில் வெள்ளாழராயுள்ளவர்களை
    22. ல்லாருங் கூடி இருந்து கற்பித்த
    23. காரியம் பிழைத்தவர்கள் மூவரை
    24. யும் கொன்று பரிகாரம் சொய்யுமா
    25. றும் வெள்ளை நாடாராயுள்ளவர்கள்
    26. நம்மோடுங் கூடக் கூலிச் சேவகம்
    27. சேவிக்க இளைப்பதென்றும் கா
    28. ரணப் படுகையும் காரியஞ்
    29. செய்கையும் கணக்கெழுதுகை
    30. யும் தேசங் கைய்யாளுகையும்
    31. இளைப்பதென்றும் கற்பித்து நா
    32. ட்டின கல்லி(ன்) வாசகம். இம்மரிசா
    33. _ _ _ _ _ _ _ _ (பக்கம் 2)
    34. 600 20 8 (628) ம் ஆண்டு சித்திரை மாதம் 10 நாட்
    35. டின கல்லில் முன்பில் வாசக
    36. த்தோடு கூடி இப்போதை க
    37. ல் வெட்டிக் கூட்டின வா
    38. சகம் வெள்ளை நாடார் _ _ _
    39. ப்பாகத்து பெண் கட்ட அரி
    40. தென்றும் கையாள அரிதென்
    41. றும் பிழைத்தவர்களுக்கு
    42. _ _ _ _ _ _ _ _ _ _
    43. அய்யப்பன் மார்த்தாண்டன் இரா
    44. மன் சந்திரக் கணக்கு.

    சொற்பொருள்:

    செய்கை – ஒழுக்கக்கேடு, பெண்ணிடம் முறைதவறி நடத்தல்; சென்றது – கடந்த காலத்தில்; வெள்ளாழற்கு பிழைப்பு – கணக்கு எழுதுதல், ஆவணம் எழுதுதல் போன்றன; செனமும் – பொது மக்களும்; காரணப்பட்டவர்கள் – victim,  பாதிப்புற்றவர்கள்; காரியம்செய்கிறவர் – வேலைக்கு அமர்த்திக் கொள்பவர், job engager; முதுகிழவர்கள் – மூத்த வெள்ளாளர்; கற்பித்த – நடக்க வேண்டிய நெறி, guidelines; சேவிக்க – ஊழியம் ஆற்ற, service; இளைப்பது – இணைய இயலாது; தேசங் கையாள்கை – நிர்வாக, பொதுப்பணி வேலைகள்.

    கல்வெட்டு விளக்கம்:

    கொல்லம் ஆண்டு 555 (கி.பி.1380) ல் பொறித்த கல்வெட்டு. கும்ப லக்னம் கூடிய ஞாயிற்றுக்கிழமை 14 ஆம் நாள் (மாதம் குறிக்கப்படவில்லை). கடந்த காலத்தில் நம் நாட்டில் வெள்ளாளர் தொழில் செய்து பிழைப்போர் சில வேலைகளுக்கு ஈடுபடுத்திய போது வெள்ளை நாடாரில் சோதனை உள்ளிருப்பு பாசித்தலில் விக்கிரம ஆதித்தன் கெட்ட நடத்தையால் நாட்டின கல்லில் இருந்த செய்தியும், கொல்லம் 561 (கி.பி.1386) ல் பொறித்த கல்வெட்டு. மீன லக்னம் ஏற்பட்ட ஞாயிற்றுக் கிழமை 26 ஆம் நாள் (மாதம் குறிக்கப்படவில்லை). கடந்த காலத்தில் நம் நாட்டில் வெள்ளாளர் தொழில் செய்து பிழைப்போர் சில வேலைகளுக்கு வெள்ளை நாடாரில் கணக்கு எழுத கோளரி அய்யப்பன், இவன் மகன், அண்டூர் செழியங்கன் ஆகியோரது கெட்ட நடத்தையால் பொது மக்களும், பாதிப்புற்றவர்களும், தம் வேலைக்கு அமர்த்துவோரும், கணக்கு எழுதும் மூத்தோரும் மற்றும் நாட்டில் வெள்ளாளர்களாய் உள்ள எல்லோரும் கூடி இருந்து மேற்கொண்ட வழிமுறையாவது வேலைஆற்றிய குற்றவாளிகள் மூவரையும் கொன்று கழுவாய் தேடுமாறு முடிவு கொண்டனர். இனி வெள்ளை நாடார்கள் எவரும் நம்மோடு சேர்ந்து இணைந்து கூலிக்கு ஊழியம் செய்ய இயலாது (தடை செய்யப்பட்டது). பிறரது வேலையில் அமர்வதும், வேலை செய்வதும், கணக்கு எழுதுவதும், நாட்டு நிர்வாகப் பணியில் ஈடுபடுவதும் ஆகிய எல்லாமும் தடை செய்யப்பட்டது என்றும் தீர்மானித்து வழிகாட்டி நாட்டிய கல். மேற்கண்ட இரு கல்லின் வாசகத்தையும் படி எடுத்து அதோடு கொல்லம் 628 (கி.பி. 1453) ஆம் ஆண்டு சித்திரை மாதம் 10 ஆம் நாள் நாட்டிய கல்லில் முன்பிருந்த வாசகத்தையும் சேர்த்து இப்போதைய கல்லில் சேர்த்துக் கொள்ளப்பட்ட வாசகம் யாதெனில் இனி வெள்ளை நாடார்களை கூலிக்கு சேர்த்துக் கொள்ளும் வெள்ளாளர்கள் தம் சாதியில் பெண்கட்டுவது அரிது, வேலையில் அமர்வதும் அரிது என்று வெள்ளாளற்கு பிழைப்பவர்களுக்கு எச்சரிக்கை விடுத்து அய்யப்பன் மார்த்தாண்டன் இராமன் சந்திரன் என்ற கணக்கன் உத்தரவு பிறப்பித்த செய்தி இக்கல்வெட்டில் இடம் பெற்றுள்ளது.

    பிற இடங்களில் வேலைக்கு செல்வோர் வேலையை மட்டும் பார்க்க வேண்டும். அதையும் மீறி வேலைக்கு செல்லும் இடங்களில் உள்ள பெண்களிடம் அத்துமீறி நடந்தால் சமூகத்தின் எதிர்வினை இப்படியாகத் தான் இருக்கும் என்பது தெளிவு. குறைந்த கூலிக்கு வெள்ளை நாடார்களை வேலைக்கு அமர்த்தி அதில் லாபம் பார்க்கலாம் என்ற நோக்கில் முதல் இரண்டு முறை அறிவுறுத்தியும் அதை மதிக்காமல் வெள்ளாளர் புறக்கணித்ததால் மூன்றாம் முறையாக வெள்ளார்க்கு தடைஏற்படுத்தி இந்த கல்வெட்டில் கடுமையான எச்சரிக்கை விடப்பட்டுள்ளது கூடுதல் செய்தி ஆகும். இக் கல்வெட்டு முழுக்க முழுக்க வெள்ளாளர் தரப்பின் நலன் கருதி எடுக்கப்பட்ட எச்சரிக்கையுடன் கூடிய அறிவுரைக் கல் என்பது புரிகின்றது. Vellalars, for Vellalars, by Vellalars என்பதே இதன் பொருளடக்கம்.

    கல்வெட்டுச் செய்தியை எளிதில் புரிந்துகொள்ள முடியாதபடி அதில் ஆளப்பட்டுள்ள சொற்கள் வெள்ளாள மக்களிடம் புழங்கும் சொற்களைக் கொண்டு எழுத்தப்பட்டு உள்ளது. எனது சொற்பொருள்பட்டி இதில் இடர் நீக்கி தெளிவிக்கின்றது.  

    பார்வை நூல்: திருநெல்வேலி மாவட்டக் கல்வெட்டுகள் தொகுதி I, பக்.302/303. தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை வெளியீடு, எழும்பூர், சென்னை – 8

    Share