Tag: சக்தி சக்திதாசன்

  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . . .(26)

    சக்தி சக்திதாசன்

    அன்பினியவர்களே !

    சிலநேரங்களில், சில பொழுதுகளில் ஏதோ உணர்வுகள் மனதினில் ஊசலாடும். கண்முன்னே, ஊடகங்களில் என்று பலவழிகளில் நாம் பார்த்தும் கேட்டும் அறிந்து கொண்ட நிகழ்வுகள் மனதை ஏதோ செய்யும். அப்படியான ஒரு பொழுதை, அந்தப் பொழுதினில் எனது மனதில் பதிந்த கருத்துக்களை உங்களுடன் இம்மடலில் பகிர்ந்து கொள்ள எழுந்த ஆசையின் விளைவே இது.

    ஒரு ஐந்து வயதுச் சிறுமி ஈழத்தின் அவலத்திலிருந்து தப்பி தனது குடும்பத்தினருடன் இங்கிலாந்தில் தஞ்சம் புகுந்து இனியாவது வாழ்வில் அமைதி கிட்டும் எனும் நம்பிக்கையுடன் வாழ்ந்து வரும் ஒரு ஈழத்து இளம் சிறுமி. தனக்கேயுரிய குழந்தைகளுக்கான விளையாட்டாகத் தனது மாமனின் கடைதனில் ஆடி மகிழ்ந்திருந்த வேளை அச்சிறுமியின் வாழ்வையே திசை திருப்பும் நிகழ்வு நடைபெறுகிறது.

    என்ன ஒரேயடியாகக் கதையளக்கிறானே என எண்ணுகிறீர்களா? இல்லை உண்மையாகவே சுமார் ஒன்றரை வருடங்களின் முன் நடந்த ஒரு நிகழ்வையே குறிப்பிடுகிறேன்.

    துஷா கமலேச்வரன் எனும் ஈழத்தின் குழந்தைகளில் ஒன்று. ஐந்தே ஐந்து வயதாக இருக்கும் போது சுமார் ஒன்றரை வருடங்களின் முன்னால் லண்டனில் உள்ள “ஸ்டாக்வெல் (Stockwell) எனும் இடத்தில் உள்ள தனது மாமனின் கடையில் ஆடி மகிழ்ந்திருந்தது.

    அப்போதுதான் லண்டனின் பெயரையே மாசுபடுத்தும் கோஷ்டி மோதல்களில் ஈடுபடும் குழுக்களைச் சேர்ந்த மூவர் அக்கடையினில் நுழைகிறார்கள் தொடர்ந்து நடந்த அசம்பாவிதங்களில் அக்காடையர்களால் விடுக்கப்பட்ட அகோரத் துப்பாக்கி வேட்டு ஒன்று வழி தவறி இந்தச் சிறுமியைத் தாக்கி விடுகிறது..

    பலத்த காயத்துடன் விழுந்த சிறுமி அவசரச் சத்திர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டார். அன்றிரவு இருமுறை துடிப்பிழந்த அந்தச் சிறு இதயத்தை அரும்பாடுபட்டு இயங்க வைத்தார்கள் அற்புத வைத்திய நிபுணர்கள்.

    இன்று ஒன்றரை வருடங்களின் பின்னால் சக்கர நாற்காலியின் உதவியுடன் புன்னகை பூத்த வதனத்துடன் வலம் வரும் அந்தச் சிறுமியின் முகத்தில் ஒளிவிட்ட நம்பிக்கையை பி.பி.ஸி இணையத்தளத்தில் பார்த்த போது உள்ளம் நெகிழ்ந்தது.

    பள்ளிக்கூடம் போகப் பிடிக்குமா? எனக்கேட்ட நிருபருக்கு புன்னகையுடன் ஆமாம் என்று பதிலளித்த சிறுமி தான் ஒரு டாக்டராக வேண்டும் என்பதுவே தனது கனவு என்று கூறியது.

    இனி இக்குழந்தை தன் வாழ்நாளில் நடப்பது சந்தேகமே என்கிறார்கள் வைத்திய நிபுணர்கள்.

    இக்குழந்தையின் எதிர்காலப் பராமரிப்புக்கு ஏற்படப்போகும் செலவினை எண்ணும் போது நெஞ்சமே பதைக்கிறது. இந்த நேரத்தில் தான் நாம் வாழும் இந்த நாட்டில் வாழும் மனிதாபிமானத்தின் ஆழம் புரிகிற செயலொன்று கடந்த சில நாட்களின் முன்னால் நடைபெற்றது.

    அது என்ன என்கிறீர்களா?

    ஒவ்வொரு நாட்டிலும் அந்நாட்டின் போலீஸாரைப் பற்றிய அபிப்பிராயம் சிறிது எதிர்மறையாகவே இருக்கும் ஆனால் இல்லை நாமும் மனிதர்தாம் எமக்கும் உணர்வுகள் உண்டு சில போலீசார் விடும் தவறுகளுக்கு நாமனைவரும் பொறுப்பல்ல என்று நிரூபித்திருக்கிறார்கள் இந்தச் சிறுமியின் வழக்கை விசாரித்து குற்றவாளிகளுக்குத் தண்டனை வாங்கிக் கொடுத்த துப்பறியும் பிரிவைச் சேர்ந்த இலண்டன் போலீஸார்.

    பொதுவாக ஒரு வாகன விபத்தில் ஒரு சிறுமி அகப்பட்டு அவரது இயக்கத்தை இழந்து விட்டால் காப்புறுதியின் மூலம் அக்குழந்தையின் வாழ்நாள் பராமரிப்புக்கு ஏற்ற நஷ்ட ஈட்டுத்தொகை கிடைக்கும் ஆனால் இத்தகைய ஒரு காயரின் தாக்குதலுக்கு உள்ளானவர்களுக்கு கிடைக்கும் நஷ்ட ஈடோ மிகவும் சொற்பமானது.

    அதை உணர்ந்த இந்த வழக்கிலீடுபட்ட போலீஸார் இங்கிலாந்தின் அதி உயரமான மூன்று மலைகளில் ஏறுவதன் மூலம் இக்குழந்தைக்காக நிதிச் சேகரிப்பில் ஈடுபட்டு ஏறக்குறைய £180,000 பவுண்ட்ஸ் வரையில் சேகரித்துள்ளார்கள். இது இக்குழந்தையின் எதிர்காலத்திற்காக அவர்களுக்கு கொடுக்கப்படும் என்று கூறியுள்ளார்கள்.

    இந்த மலையேறும் கருணைப் பயணத்தில் ஈடுபட்ட ஒரு போலீஸ் ஆபிசர் கூறும்போது “இப்பயணத்தில் ஈடுபட்ட அனைவருக்கும் குழந்தைகள் உண்டு, இந்தக் குழந்தைக்கு நடந்த கொடுமை எங்கள் மனதை மிகவும் பாதித்தது. இக்குழந்தையின் ஊனத்தின் காரணமான காடையரைப் பிடிக்கும் பணியில் ஈடுபட்ட வகையிலும், இக்குழந்தைக்கும் அவரது ஏனைய குடும்ப அங்கத்தவர்களுக்கும் அனுசரணை அளிப்பதிலும் நாம் இக்குழந்தையுடன் சுமார் ஒரு வருடத்துக்கு மேலாகப் பழகி வந்துள்ளோம். எமக்கு இது அவர் மீது பாசத்தை ஏற்படுத்தியது ” என்றார்.

    பறிபோய்விட்ட அந்த இனிய சிறுமியின் சுதந்திரத்தை எத்தனை கோடிப் பணமும் பெற்றுத் தந்து விடாது ஆனால் மிகவும் சிக்கலாக அமையப் போகும் அவரது எதிர்கால வாழ்க்கையின் சிரமத்தை ஓரளவு குறைக்க உதவும்.

    மனித நேயம் என்பது மதம், மொழி, இனம், நிறம் எனும் அனைத்து வேறுபாடுகளையும் கடந்து நிற்பது. மனிதம் ஒன்றே உலகின் மகத்துவம். இதனை இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த இந்த போலீசாரின் கருணை உணர்த்தி நிற்கிறது.

    அது மட்டுமின்றி போலீஸாரும் மனிதரே அவர்களின் நெஞ்சிலும் ஈரம் இருக்கிறது என்பதற்கு இதுவே ஒரு நல்ல எடுத்துக்காட்டு.

    நம்பிக்கையின் சிகரத்தையே இச்சிறுமி தொட்டுக்காட்டி எம் அனைவருக்கும் ஒரு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளார். அவரது விருப்பப்படியே அவர் ஒரு டாக்டராகி சமுதாயத்திற்கு அரும்பணியாற்றி தமிழன்னையைத் தலைநிமிரச் செய்வார் என்பது எனது திடமான நம்பிக்கை.

    இதற்காகத்தான் ஒரு கவிஞர்

    எங்கே போய்விடும் காலம் அது
    என்னையும் வாழவைக்கும் – உன்
    இதயத்தைத் திறந்து வைத்தால் அது
    உன்னையும் வாழ வைக்கும் ” என்றாரோ

    நன்றி — படங்களுக்காக (பல இணையத்தளங்கள்)

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . . (25)

    சக்தி சக்திதாசன்
     
     

    அன்பினியவர்களே ! 

    காற்றோடு காற்றாகக் காலம் கரைகிறது. கற்றது கைம்மண்ணளவு கல்லாதது கடலளவு என்றாள் ஒளவை மூதாட்டி. 

    கல்வி ஒவ்வொருத்தருடைய வாழ்க்கையையும் ஒவ்வொரு விதத்தில் மாற்றியமைக்கிறது. கல்வி அடிப்படையில் மனிதருக்குக் கொடுப்பது அறிவு. நாம் படித்துப் பணிபுரியத் தொடங்கியதும் நாம் படித்தவற்றை அப்படியே உபயோகிப்பது என்பது நடைபெறாத விடயம். நாம் பயின்றவற்றை உபயோகித்து நாம் புரியும் பணியைச் செவ்வனே செய்யவதற்குத்தான் நாம் பள்ளியில் கற்ற கல்வி உதவுகிறது. 

    எம்மிடையே பள்ளியையே எட்டிப்பார்த்திராத பல வெற்றியடைந்த தொழிலதிபர்கள் உண்டு. கல்வி தான் ஒரு மனிதனின் வாழ்விற்கு அத்தியாவசியம் என்றால் பின்பு எப்படி பள்ளி வாசலையே மிதித்திராதவர்கள் வாழ்வில் வெற்றியடைந்திருக்கிறார்கள் ? 

    கேள்வி மிகவும் நியாயமானதே ! 

    எல்லாவற்றிற்கும் மேலாக மனிதர் வாழ்விலே முன்னேற அவர்களுக்குத் தேவையானது முயற்சி ஒன்றே. அம்முயற்சியின் பலனாக வாழ்வில் வெற்றியடைவோம் எனும் நம்பிக்கையின் வலுவில் தமது வாழ்வின் அனுபவங்களைத் திரட்டி அவற்றின் அறிவின் அடிப்படையில் முன்னேறுவது சாத்தியமே ! ஆனால் இவ்வதிர்ஷ்டம் வாழ்க்கையில் சிலருக்கு மட்டுமே கிடைக்கிறது. 

    என்ன ? எதற்காக இந்த அலங்கார விளக்கம் என்று சிந்திக்கிறீர்களா ? 

    இங்கிலாந்தின் கல்விமுறையில் மாற்றங்களைக் கொண்டு வருவதற்கான புதிய சட்டமூலங்களைச் சமர்ப்பிப்பதற்கு ஏதுவாக, இதுபற்றிய வாதப் பிரதிவாதங்களைத் தூண்டும் வகையில் இங்கிலாந்தின் கல்வியமைச்சரினால் சில மாற்றங்கள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. 

    தற்போது இங்கிலாந்தில் நடைமுறையில் இருந்து வருவது ஜீ.சி.எஸ்.இ என்றழைக்கப்படும் GCSEஅதாவது General Certificate of Secondary Education எனும் பட்டமாகும். இது மாணவர்களின் 16வது வயதினில் பெறப்படுவதாகும். 

    இதற்கு முன்னால் 1986ம் ஆண்டு வரை நடைமுறையில் இருந்து வந்தது ஜீ.சி..இ (சாதாரண தரம்) மற்றும் சி.எஸ்.சி எனும் அமைப்புமாகும். இவையும் மாணவர்களின் 16வது வயதில் அவர்களின் உயர்கல்வியை நிர்ணயிப்பதற்கான திட்டங்களாகும். 

    ஆனால் இத்தகைய இரு பாடத்திட்ட அமைப்பு முறையின் படி மாணவர்கள் 16 வயதினில் இரு வகையினராகப் பிரிக்கப்படுவது உகந்த செயலல்ல எனும் காரணத்தினால் 1986ம் ஆண்டு புதிய திட்டமான ஜீ.சி.எஸ்.இ நடைமுறைக்கு வந்தது. 

    இத்திட்டத்தின் கீழ் ஒரே பாடம் பல பரீட்சைத் திணைக்களங்களினால் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்தது. காலப் போக்கில் இப்பரீட்சையின் பெறுபேறுகள் (மதிப்பெண்கள்) மிகவும் முன்னேற்றமடைந்து, சித்தியெய்தும் மாண்வர்களின் விகிதம் பெருமளவில் அதிகரிக்கத் தொடங்கியது. 

    அதே சமயம் பல்கலைக்கழகங்களில் இருந்து வெளியேறும் பட்டதாரிகளை வேலைக்கு அமர்த்தும் கம்பெனிகள் அவர்களின் தரத்தின் குறையைப்பற்றி விமர்சிக்கத் தொடங்கினார்கள். கல்விமுறை மிகவும் இலகுவாக்கப்படுவதாகப் பொதுவான அபிப்பிராயம் தலைதூக்கத் தொடங்கியது. 

    இப்பரீட்சைத் திட்டத்தின்படி மாண்வர்கள் 16வது வயதில் ஜீ.சி.எஸ் பயிலத் தொடங்கியதும் செமிஸ்டர் முறையில் Course Work உடன் பரீட்சையும் வைத்து அதன் பெறுபேறுகளை இரண்டு வருட முடிவில் கூட்டிப்பார்த்து அவர்களுக்கு இறுதி பெறுபேறுகள் தரப்பட்டன. 

    1994ம் ஆண்டு “ஏ ஸ்டார்” எனப்படும் அதிகூடிய பெறுபேற்றை பெற்ர மாணவர் விகிதம் 2.8 ஆக இருந்தது. 2012ல் 7.3 விகிதமாக உயர்ந்தது. இதுவே இப்பரீட்சை மிகவும் இலகுவாகக்கப்பட்டிருப்பதற்கு ஆதாரம் என்று வாதிட்டனர் பலர். 

    அதுமட்டுமின்றி எந்தப் பரீட்சைத் திணைக்களங்களின் வினாத்தாள்கள் இலகுவாக சித்தியெய்தக்கூடியதாக உள்ளதோ, அவற்றை தமது மாணவர்களை எடுக்கப் பண்ணுவதன் மூலம் தமது பாடசாலையின் பெறுபேற்றை உயர்த்தி பாடசாலைப்பட்டியலில் முன்னேறுவதற்கு ஏதுவாக ஆசிரியர்கள் செயற்படுகிறார்கள் என்று வேறு குற்றம் சாட்டப்பட்டது. 

    விளைவு ! குதித்தது கூட்டரசாங்கம். இப்பரீட்சை முறையை மாற்றியமைக்கப் போகிறோம் என்று ஆரம்பித்தார்கள். கூட்டரசாங்கத்தின் அங்கமாகிய லிபரல் டெமகிரட்ஸ் கட்சி இதை எதிர்த்தமையால் இது பின் தள்ளப்பட்டுக் கொண்டிருந்தது. ஆனால் இப்போது அதன் தலைவர் நிக் கிளேக் ஆத்ரவுடன் தமது மாற்றத்தை முன்மொழிந்துள்ளார்கள் கூட்டரசாங்கத்தினர். 

    இவர்களின் இமமாற்றத்தின் படி புதிய பரீட்சை “EBACC Certificate (Engilsh Baccalaureate)” என்று அழைக்கப்படும். இம்முறையிலான பாடத்திட்டங்கள் 2015ம் ஆண்டிலிருந்து ஆரம்பிக்கும் எனவும், இம்முறையிலமைந்த பரீட்சைகளை 16 வயதான மாண்வர்கள் 2017ம் ஆண்டிலிருந்து ஆரம்பிப்பார்கள் எனவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. 

    இதன் கீழ் Course Work ம், செமிஸ்டர் முறையிலான பரீட்சைகளும் ரத்துச் செய்யப்பட்டு மாணவர்கள் இரண்டுவருடங்கள் தொடர்ந்து படித்து விட்டு இரண்டு வருட முடிவில் மிகவும் கடினமாக்கப்பட்ட பரீட்சையை எழுதுவார்கள் என்று அறிவிக்கப்படுகிறது. 

    ஆங்கிலம், கணிதம், விஞ்ஞானம் ஆகிய மூன்று பாடங்களின் முக்கியத்துவத்தை நிலைநிறுத்தும் வகையில் இப்பாடத்திட்டங்கள் அமையும் என கல்வியமைச்சர் மைக்கல் கோவ் (Michael Gove)அறிவித்துள்ளார். 

    விஞ்ஞானம் அதிவேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறது. அன்றைய குழந்தைகளைப் போலல்லாது இன்றைய குழந்தைகள் தமது அறிவில் விருத்தியடைந்தவர்களாகவே காணப்படுகிறார்கள். அவர்களின் கைகளில் தவழும் புதிய கருவிகள் அவர்களின் அறிவின் வளர்ச்சியின் வேகத்தைக் கூட்டுகிறது. 

    அதுமட்டுமின்றி மிகவும் கடினமாக தமது கல்வியில் கவனத்தைச் செலுத்துவதன் மூலம் அவர்கள் திறமையாகச் சித்தியெய்துகிறார்கள். நாம் பரீட்சைகள் இலகுவாகிவிட்டன என்று கூறுவது அவர்களின் தன்னம்பிக்கையைச் சிதைத்து விடாதா ? 

    பாடப்புத்தகங்களை மட்டும் படித்து இரண்டு வருடங்களின் முடிவில் பரீட்சையில் சித்தியெய்திவிட்டால் மட்டும் போதுமா? மாண்வர்களின் அறிவு பலவகைகளில் விருத்தியடையவும், அவர்களின் கற்பனா சக்தி விரிவடையவும் course work உதவுகிறதே அதன் முக்கியத்துவத்தைக் குறைப்பது அவர்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தாதா? 

    கல்வியமைச்சர் அவசரப்பட்டுவிட்டார். தேவையான அளவு ஆசிரியர்களும் மற்றைய மாணவர்களின் நலன்களில் அக்கறை கொண்டுள்ளவர்களையும் கலந்தாலோசிக்கத் தவறி விட்டார். 

    இவையெல்லாம் இதற்கு எதிரானவர்களின் வாதம். 

    இங்கிலாந்து நாட்டின் கல்வித் தராதரம் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும் போது வீழ்ச்சியடைந்து விட்டது. இதற்கு எமது பரீட்சைகளும்,அவற்றிற்கான பாடத்திட்டங்களுமே காரணம். 

    மாணவர்கள் முக்கியமான பாடங்களைக் கைவிட்டு மிகவும் இலகுவாக சித்தியெய்தக்கூடிய பிரயோசனமற்ற பாடங்களைப் பயில்கிறார்கள். தமது பாடசாலைகளின் கணிப்பை உயர்த்துவதற்காக சில பாடசாலை நிர்வாகிகளும் இதற்குத் துணை போகிறார்கள். இம்முறை நிச்சயம் மாற்றப்படத்தான் வேண்டும் என்கிறார்கள் இதற்கு ஆதரவானவர்கள். 

    ஒருநாட்டின் முதுகெலும்பு அந்நாட்டின் இளைய சந்ததியினரே. தெளிவான சிந்தனை, துணிச்சலுடன் கூடிய திட்டங்கள், தொலைநோக்கு இவைகளை மாணவர்களுக்கு அளிப்பது கல்வி. இத்தகைய மிகவும் முக்கியமான அங்கத்துடன் மாற்றங்களைச் செய்யும் போது அவையும் அரசியல் லாபங்களையும், தமது செல்வாக்கினையும் கடந்த தூய நோக்கம் கொண்டதாக அமைய வேண்டும். 

    அத்தகைய துணிச்சலையும் உயர்ந்த சிந்தனையும் கொண்டவர்களாக அரசியல் தலைவர்களும், அவர் சார்ந்த கட்சிகளும் செயலாற்ற வேண்டும். 

    இம்மாற்றங்கள் இவர்கள் எத்தகைய நோக்கம் கொண்ட அரசியல் தலைவர்கள் என்பதைக் காட்டுமா? காலம் தான் பதிலிறுக்க வேண்டும். 

    “ மாபெரும் சபைதனில் நீ நடந்தால் உனக்கு

    மாலைகள் விழ வேண்டும் ஒரு

    மாற்றுக் குறையாத மன்னவன் இவன் என்று

    போற்றிப் புகழ வேண்டும் ” என்றார் கவியரசர். இத்தகைய இளைய சமுதாயத்தை எமது கல்விமுறை தோற்றுவிக்குமா ? 

    பொறுத்திருப்போம் . . . . 

    அன்புடன்

    அடுத்த மடலில் சந்திக்கும்வரை

    சக்தி சக்திதாசன்

    லண்டன்

    Share