சக்தி சக்திதாசன்
 
 

அன்பினியவர்களே ! 

காற்றோடு காற்றாகக் காலம் கரைகிறது. கற்றது கைம்மண்ணளவு கல்லாதது கடலளவு என்றாள் ஒளவை மூதாட்டி. 

கல்வி ஒவ்வொருத்தருடைய வாழ்க்கையையும் ஒவ்வொரு விதத்தில் மாற்றியமைக்கிறது. கல்வி அடிப்படையில் மனிதருக்குக் கொடுப்பது அறிவு. நாம் படித்துப் பணிபுரியத் தொடங்கியதும் நாம் படித்தவற்றை அப்படியே உபயோகிப்பது என்பது நடைபெறாத விடயம். நாம் பயின்றவற்றை உபயோகித்து நாம் புரியும் பணியைச் செவ்வனே செய்யவதற்குத்தான் நாம் பள்ளியில் கற்ற கல்வி உதவுகிறது. 

எம்மிடையே பள்ளியையே எட்டிப்பார்த்திராத பல வெற்றியடைந்த தொழிலதிபர்கள் உண்டு. கல்வி தான் ஒரு மனிதனின் வாழ்விற்கு அத்தியாவசியம் என்றால் பின்பு எப்படி பள்ளி வாசலையே மிதித்திராதவர்கள் வாழ்வில் வெற்றியடைந்திருக்கிறார்கள் ? 

கேள்வி மிகவும் நியாயமானதே ! 

எல்லாவற்றிற்கும் மேலாக மனிதர் வாழ்விலே முன்னேற அவர்களுக்குத் தேவையானது முயற்சி ஒன்றே. அம்முயற்சியின் பலனாக வாழ்வில் வெற்றியடைவோம் எனும் நம்பிக்கையின் வலுவில் தமது வாழ்வின் அனுபவங்களைத் திரட்டி அவற்றின் அறிவின் அடிப்படையில் முன்னேறுவது சாத்தியமே ! ஆனால் இவ்வதிர்ஷ்டம் வாழ்க்கையில் சிலருக்கு மட்டுமே கிடைக்கிறது. 

என்ன ? எதற்காக இந்த அலங்கார விளக்கம் என்று சிந்திக்கிறீர்களா ? 

இங்கிலாந்தின் கல்விமுறையில் மாற்றங்களைக் கொண்டு வருவதற்கான புதிய சட்டமூலங்களைச் சமர்ப்பிப்பதற்கு ஏதுவாக, இதுபற்றிய வாதப் பிரதிவாதங்களைத் தூண்டும் வகையில் இங்கிலாந்தின் கல்வியமைச்சரினால் சில மாற்றங்கள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. 

தற்போது இங்கிலாந்தில் நடைமுறையில் இருந்து வருவது ஜீ.சி.எஸ்.இ என்றழைக்கப்படும் GCSEஅதாவது General Certificate of Secondary Education எனும் பட்டமாகும். இது மாணவர்களின் 16வது வயதினில் பெறப்படுவதாகும். 

இதற்கு முன்னால் 1986ம் ஆண்டு வரை நடைமுறையில் இருந்து வந்தது ஜீ.சி..இ (சாதாரண தரம்) மற்றும் சி.எஸ்.சி எனும் அமைப்புமாகும். இவையும் மாணவர்களின் 16வது வயதில் அவர்களின் உயர்கல்வியை நிர்ணயிப்பதற்கான திட்டங்களாகும். 

ஆனால் இத்தகைய இரு பாடத்திட்ட அமைப்பு முறையின் படி மாணவர்கள் 16 வயதினில் இரு வகையினராகப் பிரிக்கப்படுவது உகந்த செயலல்ல எனும் காரணத்தினால் 1986ம் ஆண்டு புதிய திட்டமான ஜீ.சி.எஸ்.இ நடைமுறைக்கு வந்தது. 

இத்திட்டத்தின் கீழ் ஒரே பாடம் பல பரீட்சைத் திணைக்களங்களினால் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்தது. காலப் போக்கில் இப்பரீட்சையின் பெறுபேறுகள் (மதிப்பெண்கள்) மிகவும் முன்னேற்றமடைந்து, சித்தியெய்தும் மாண்வர்களின் விகிதம் பெருமளவில் அதிகரிக்கத் தொடங்கியது. 

அதே சமயம் பல்கலைக்கழகங்களில் இருந்து வெளியேறும் பட்டதாரிகளை வேலைக்கு அமர்த்தும் கம்பெனிகள் அவர்களின் தரத்தின் குறையைப்பற்றி விமர்சிக்கத் தொடங்கினார்கள். கல்விமுறை மிகவும் இலகுவாக்கப்படுவதாகப் பொதுவான அபிப்பிராயம் தலைதூக்கத் தொடங்கியது. 

இப்பரீட்சைத் திட்டத்தின்படி மாண்வர்கள் 16வது வயதில் ஜீ.சி.எஸ் பயிலத் தொடங்கியதும் செமிஸ்டர் முறையில் Course Work உடன் பரீட்சையும் வைத்து அதன் பெறுபேறுகளை இரண்டு வருட முடிவில் கூட்டிப்பார்த்து அவர்களுக்கு இறுதி பெறுபேறுகள் தரப்பட்டன. 

1994ம் ஆண்டு “ஏ ஸ்டார்” எனப்படும் அதிகூடிய பெறுபேற்றை பெற்ர மாணவர் விகிதம் 2.8 ஆக இருந்தது. 2012ல் 7.3 விகிதமாக உயர்ந்தது. இதுவே இப்பரீட்சை மிகவும் இலகுவாகக்கப்பட்டிருப்பதற்கு ஆதாரம் என்று வாதிட்டனர் பலர். 

அதுமட்டுமின்றி எந்தப் பரீட்சைத் திணைக்களங்களின் வினாத்தாள்கள் இலகுவாக சித்தியெய்தக்கூடியதாக உள்ளதோ, அவற்றை தமது மாணவர்களை எடுக்கப் பண்ணுவதன் மூலம் தமது பாடசாலையின் பெறுபேற்றை உயர்த்தி பாடசாலைப்பட்டியலில் முன்னேறுவதற்கு ஏதுவாக ஆசிரியர்கள் செயற்படுகிறார்கள் என்று வேறு குற்றம் சாட்டப்பட்டது. 

விளைவு ! குதித்தது கூட்டரசாங்கம். இப்பரீட்சை முறையை மாற்றியமைக்கப் போகிறோம் என்று ஆரம்பித்தார்கள். கூட்டரசாங்கத்தின் அங்கமாகிய லிபரல் டெமகிரட்ஸ் கட்சி இதை எதிர்த்தமையால் இது பின் தள்ளப்பட்டுக் கொண்டிருந்தது. ஆனால் இப்போது அதன் தலைவர் நிக் கிளேக் ஆத்ரவுடன் தமது மாற்றத்தை முன்மொழிந்துள்ளார்கள் கூட்டரசாங்கத்தினர். 

இவர்களின் இமமாற்றத்தின் படி புதிய பரீட்சை “EBACC Certificate (Engilsh Baccalaureate)” என்று அழைக்கப்படும். இம்முறையிலான பாடத்திட்டங்கள் 2015ம் ஆண்டிலிருந்து ஆரம்பிக்கும் எனவும், இம்முறையிலமைந்த பரீட்சைகளை 16 வயதான மாண்வர்கள் 2017ம் ஆண்டிலிருந்து ஆரம்பிப்பார்கள் எனவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. 

இதன் கீழ் Course Work ம், செமிஸ்டர் முறையிலான பரீட்சைகளும் ரத்துச் செய்யப்பட்டு மாணவர்கள் இரண்டுவருடங்கள் தொடர்ந்து படித்து விட்டு இரண்டு வருட முடிவில் மிகவும் கடினமாக்கப்பட்ட பரீட்சையை எழுதுவார்கள் என்று அறிவிக்கப்படுகிறது. 

ஆங்கிலம், கணிதம், விஞ்ஞானம் ஆகிய மூன்று பாடங்களின் முக்கியத்துவத்தை நிலைநிறுத்தும் வகையில் இப்பாடத்திட்டங்கள் அமையும் என கல்வியமைச்சர் மைக்கல் கோவ் (Michael Gove)அறிவித்துள்ளார். 

விஞ்ஞானம் அதிவேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறது. அன்றைய குழந்தைகளைப் போலல்லாது இன்றைய குழந்தைகள் தமது அறிவில் விருத்தியடைந்தவர்களாகவே காணப்படுகிறார்கள். அவர்களின் கைகளில் தவழும் புதிய கருவிகள் அவர்களின் அறிவின் வளர்ச்சியின் வேகத்தைக் கூட்டுகிறது. 

அதுமட்டுமின்றி மிகவும் கடினமாக தமது கல்வியில் கவனத்தைச் செலுத்துவதன் மூலம் அவர்கள் திறமையாகச் சித்தியெய்துகிறார்கள். நாம் பரீட்சைகள் இலகுவாகிவிட்டன என்று கூறுவது அவர்களின் தன்னம்பிக்கையைச் சிதைத்து விடாதா ? 

பாடப்புத்தகங்களை மட்டும் படித்து இரண்டு வருடங்களின் முடிவில் பரீட்சையில் சித்தியெய்திவிட்டால் மட்டும் போதுமா? மாண்வர்களின் அறிவு பலவகைகளில் விருத்தியடையவும், அவர்களின் கற்பனா சக்தி விரிவடையவும் course work உதவுகிறதே அதன் முக்கியத்துவத்தைக் குறைப்பது அவர்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தாதா? 

கல்வியமைச்சர் அவசரப்பட்டுவிட்டார். தேவையான அளவு ஆசிரியர்களும் மற்றைய மாணவர்களின் நலன்களில் அக்கறை கொண்டுள்ளவர்களையும் கலந்தாலோசிக்கத் தவறி விட்டார். 

இவையெல்லாம் இதற்கு எதிரானவர்களின் வாதம். 

இங்கிலாந்து நாட்டின் கல்வித் தராதரம் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும் போது வீழ்ச்சியடைந்து விட்டது. இதற்கு எமது பரீட்சைகளும்,அவற்றிற்கான பாடத்திட்டங்களுமே காரணம். 

மாணவர்கள் முக்கியமான பாடங்களைக் கைவிட்டு மிகவும் இலகுவாக சித்தியெய்தக்கூடிய பிரயோசனமற்ற பாடங்களைப் பயில்கிறார்கள். தமது பாடசாலைகளின் கணிப்பை உயர்த்துவதற்காக சில பாடசாலை நிர்வாகிகளும் இதற்குத் துணை போகிறார்கள். இம்முறை நிச்சயம் மாற்றப்படத்தான் வேண்டும் என்கிறார்கள் இதற்கு ஆதரவானவர்கள். 

ஒருநாட்டின் முதுகெலும்பு அந்நாட்டின் இளைய சந்ததியினரே. தெளிவான சிந்தனை, துணிச்சலுடன் கூடிய திட்டங்கள், தொலைநோக்கு இவைகளை மாணவர்களுக்கு அளிப்பது கல்வி. இத்தகைய மிகவும் முக்கியமான அங்கத்துடன் மாற்றங்களைச் செய்யும் போது அவையும் அரசியல் லாபங்களையும், தமது செல்வாக்கினையும் கடந்த தூய நோக்கம் கொண்டதாக அமைய வேண்டும். 

அத்தகைய துணிச்சலையும் உயர்ந்த சிந்தனையும் கொண்டவர்களாக அரசியல் தலைவர்களும், அவர் சார்ந்த கட்சிகளும் செயலாற்ற வேண்டும். 

இம்மாற்றங்கள் இவர்கள் எத்தகைய நோக்கம் கொண்ட அரசியல் தலைவர்கள் என்பதைக் காட்டுமா? காலம் தான் பதிலிறுக்க வேண்டும். 

“ மாபெரும் சபைதனில் நீ நடந்தால் உனக்கு

மாலைகள் விழ வேண்டும் ஒரு

மாற்றுக் குறையாத மன்னவன் இவன் என்று

போற்றிப் புகழ வேண்டும் ” என்றார் கவியரசர். இத்தகைய இளைய சமுதாயத்தை எமது கல்விமுறை தோற்றுவிக்குமா ? 

பொறுத்திருப்போம் . . . . 

அன்புடன்

அடுத்த மடலில் சந்திக்கும்வரை

சக்தி சக்திதாசன்

லண்டன்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *