விவசாயி

முனைவர் கு. வளர்மதி,
உதவிப்பேராசிரியர்,
இளங்கலைத் தமிழ்த்துறை,
தி ஸ்டாண்டர்டு ஃபயர்ஒர்க்ஸ் இராஜரத்தினம் மகளிர் கல்லூரி,
சிவகாசி.

“விடியுமுன் குளியல்
குளக்கரை குளிர்நீரில்;
மானம் மரியாதைக்கு
வேட்டியும் துண்டுமே!
நெற்றிநிறை திருநீறு
அதிகாலை சூரியவழிபாடு!
தேவாமிர்தமாக வயிறுகுளிர
பழையசோற்றுத் தண்ணீர்!

உச்சிவெயிலையும் பொருட்படுத்தாத
உன்னதமான உழைப்பு!
கால்வயிற்றுக் கஞ்சிக்காக
அயராது உழைத்தும்
வயிற்றிலே சுருக்கங்கள்,
கண்ணிலே ஏக்கங்கள்!
பண்டிகை நாட்களிலும்
பட்டாடை உடுத்தியதில்லை,
விடுமுறை நாட்களிலும்
ஏர்பிடிக்க மறந்ததில்லை!

பெற்றபிள்ளையின் கல்விக்காக
காய்த்துப்போன கரங்கள்!
கண்ணாடி பார்க்காத அழகு,
கள்ளங்கபடமற்ற புன்னகை!
நெற்றிவியர்வை நிலத்தில்சிந்தி,
விதைவிதைத்து, பயிர்காத்து,
அறுவடைசெய்யும் விவசாயிக்கு
அரிசிச்சோறு கிடைப்பதில்லை!
உழைப்பிற்கேற்ற ஊதியமில்லை,
உழும்நிலம் சொந்தமில்லை!
தனக்கென வாழ்ந்ததில்லை,
பஞ்சுமெத்தையில் உறங்கியதில்லை!

வாயைக்கட்டி வயிற்றைக்கட்டி
வளர்த்தபிள்ளைக்குத் தெரிவதில்லை
விவசாயத்தின் அருமை!
விதவிதமான பலகாரங்கள்
பேரன்பேத்தியின் வாய்ருசிக்கு
கடன்வாங்கியும் செய்ததுண்டு!

ஊரார்உண்ண நெல்விளைவித்த
விவசாயியின் விவசாயக்கடனை
அடைத்திடயாரும் முன்வரவில்லை,
அரசாங்கமும் தள்ளுபடிசெய்யவில்லை!
மனம்உடைந்த கடைசிவிவசாயியின்
பரிதாபநிலையோ தற்கொலை!”

Share

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *