Tag: மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா

  • பாரதி என்றுமே தமிழுக்குச் சொத்தாவான்!

    பாரதி என்றுமே தமிழுக்குச் சொத்தாவான்!

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மேனாள் தமிழ் மொழிக்கல்வி இயக்குநர்
    மெல்பேண், ஆஸ்திரேலியா

    பாரதி எங்கள் பண்பாட்டுப் பெட்டகம்
    பட்டதை பக்குவமாய் ஈந்திட்ட வரகவி
    விடுதலை நோக்கியே விரைந்திட்ட வீரன்
    வீரமும் விவேகமும் நிறைந்த நற்கவிஞன்

    தமிழன்னை ஈன்றெடுத்த தவப்புதல்வன் பாரதி
    அமுதென்று தமிழதனை அகமிருத்திச் செப்பினான்
    பன்மொழிகள் தெரிந்தாலும் தாய்மொழியாம் தமிழை
    தலையேற்றி நின்று தரணிக்கே உரைத்தான்

    முற்போக்குச் சிந்தனையை முன்னுக்கு வைத்தான்
    பிற்போக்கு என்றாலே பிய்த்துமே எறிந்தான்
    நற்போக்கு உள்ளோரை நயந்தேற்றி நின்றான்
    நாட்டின் விடுதலைக்காய் நலமிழந்தும் நின்றான்

    மூடத் தனத்தை மூர்க்கமாய் எதிர்த்தான்
    சாதித் திமிரை தகர்த்தெறிந்து நின்றான்
    உண்மையை நேர்மையை உயிரெனவே எண்ணினான்
    கண்ணிலே கம்பீரம் காட்டியே  நின்றான்

    பாரதியின் பாட்டு பாமரர்க்கு விருந்தாகும்
    பண்டிதர்க்கு அவர்பாட்டு வேண்டாத மருந்தாகும்
    பாப்பாவை முன்னிறுத்திப் பலவுரைத்தான் பாரதி
    பற்பல தத்துவங்கள் பலருக்கும் இருந்தன

    பக்தியைப் பாரதி பக்குவமாய்ப் பார்த்தான்
    சத்தியமாய் பக்தியாய் தன்மனதில் இருத்தினான்
    கீதையைப் பாடினான் கண்ணனைப் பாடினான்
    பாஞ்சாலி சபதத்தால் பலவற்றைக் கூறினான்

    எதுகையும் மோனையும் இணைந்துமே நின்றன
    எத்தனையோ வித்தைகளை கவிதையில் காட்டினான்
    பாரதியின் பாட்டைப் பலருமே படித்திட்டால்
    பார்க்காத அத்தனையும் பார்த்துமே வியந்திடலாம்

    அடிமைத் தளையகற்ற அத்தனையும் பாடினான்
    ஆனாலும் அதனூடே அன்னைத்தமிழ் ஒளிர்ந்தது
    அதிகார வர்க்கத்தை அவன்பாட்டு அசைத்தது
    அஞ்சாத சிங்கமாய் அவனெங்கும் திரிந்தானே

    விடுதலை வேண்டுவார் பாரதியைப் பார்க்கின்றார்
    வீரத்தை நாடுவார் பாரதியை நாடுகிறார்
    பக்திக்கும் பாரதியே பண்புக்கும் பாரதி
    பாரதி என்றுமே தமிழுக்குச் சொத்தாவான் !

    Share
  • இருக்கும் வரைக்கும் ஏற்றதைச் செய்வோம்!

    இருக்கும் வரைக்கும் ஏற்றதைச் செய்வோம்!

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
    மெல்பேண், ஆஸ்திரேலியா

    குடும்பம் என்றால் குதூகலம் வேண்டும்
    தாத்தா பாட்டியைத் தாங்கிட வேண்டும்
    மூத்தோர் வார்த்தை கேட்டிட வேண்டும்
    முடியும் வரைக்கும் உதவிட வேண்டும்

    உறவுகள் ஒன்றாய் இணைந்திட வேண்டும்
    மறைவுகள் நமக்குள் அகன்றிட வேண்டும்
    கரவுடன் பழகுதல் மறந்திட வேண்டும்
    கனிவுடன் உறவினைப் பேணிட வேண்டும்

    செல்வம் பார்க்கா சேர்ந்திட வேண்டும்
    சிறந்த பண்பை மதித்திட வேண்டும்
    பொய்மை நட்பை உதறிட வேண்டும்
    பொங்கும் சினத்தைப் பொசுக்கிட வேண்டும்

    வறுமை கண்டு ஒதுக்கிடல் வேண்டாம்
    மனத்தை உடைக்க நடந்திட வேண்டாம்
    பொறுமை என்பதை அணிகலம் ஆக்கி
    பூதலம் போற்றிட வாழ்ந்திட வேண்டும்

    அன்பை அகத்தில் நிறைத்தல் வேண்டும்
    அறத்தின் வழியில் நடந்திட வேண்டும்
    துன்பம் காணின் துடித்துமே நின்று
    அன்பைக் காட்டி அணைத்திடல் வேண்டும்

    உள்ளம் உடைந்திட உரைத்திடல் வேண்டாம்
    உணர்வை இழக்கச் செய்திட வேண்டாம்
    பாசம் காட்டிடும் வேசம் வேண்டாம்
    பழசை மறந்தும் செயற்பட வேண்டாம்

    பிறந்த நாளை யாவரும் அறிவோம்
    பிறக்கும் வேளை பெருகிடும் இன்பம்
    இறக்கும் நாளை எவரும் அறியார்
    இருக்கும் வரைக்கும் ஏற்றதைச் செய்வோம்

    காலன் வந்தால் விடவே மாட்டான்
    கெளரவம் காசைப் பார்க்கவும் மாட்டான்
    முடிவு என்பது நிச்சயம் என்பதை
    மனதில் வைத்தால் குடும்பம் சிறக்கும்

    Share
  • மூவுல கேத்திடும் மூஷிக வாகனா!

    மூவுல கேத்திடும் மூஷிக வாகனா!

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மேனாள் தமிழ் மொழிக்கல்வி இயக்குநர்
    மெல்பேண், ஆஸ்திரேலியா

    முத்திக்கு வித்தான முக்கண்ணன் மகனே
    எத்திக்கு பார்த்தாலும் இருந்திடு கணபதி
    சந்திக்குச் சந்தி சன்னதி ஆகியே
    கொண்டிடும் கணபதி குழந்தைக் கடவுளே

    கைத்தலம் நிறைகனி அப்பமொ டவல்பொரி
    எப்பவும்  ஏற்றிடும் எம் கணநாதா
    முத்தமிழ் நிறைந்திட வைத்திடும் அரன்மகன்
    மூவுல கேத்திடும் மூஷிக வாகனா

    மோதகம் விரும்பிடும் மூஷிக வாகனா
    காதலால் அடியார் கற்கண்டு படைப்பார்
    இனிப்பே உனக்குப் பிடிக்கும் என்று
    எண்ணிடும் அடியவர் இனிப்பாய் படைப்பார்

    ஆனை முகத்துடன் இருப்பாய் நீயும்
    ஆனால் குழந்தையாய் தெரிவாய் அப்பா
    பானகம் பல்பழம் தேனெலாம் உனக்குப்
    படைத்துமே அடியார் பரவசம் அடைவார்

    மஞ்சளில் புல்லில்  சாணத்தில் அமர்வாய்
    மக்கள் விரும்பும் இடமெலாம் அமர்வாய்
    விதிமுறை பாராய் மேலாய் இருப்பாய்
    பரவிடும் அடியவர் பக்கமே நிற்பாய்

    உன்னைத் தொட்டே அனைத்தும் தொடங்கும்
    தொடங்கும் அனைத்தும் துலங்கிட வைப்பாய்
    வெவ்வினை வேரற வைத்திடும் வல்லமை
    கொண்டவன் நீயே விக்ன விநாயகா

    மனிதனும் மிருகமும் இணைந்திடு உருவம்
    மருளை அகற்றிட வந்தநல் வடிவம்
    மனிதனைப் புனிதனாய் ஆக்கிடும் வகையில்
    மிருக இயல்பினைக் களைந்திடும் உருவம்

    நெற்றியில் குட்டிக் குனிந்து எழுந்து
    உன்னைக் கும்பிட வைத்தவன்  நீயே
    அத்தனை மாந்தர்க்கு அது மருந்தாகும்
    அகத்தில் அமர்த்திட வைத்தவன் நீயே

    மருந்தாய் இருக்கிறாய் விருந்தாய் இருக்கிறாய்
    மாபெரும் சக்தியாய் விளங்கிறாய் நீயும்
    அணுகிட அடியார் அருகினில் அணையும்
    ஆனந்த சொரூபமாய் அமைகிறாய் விநாயகா

    ஆவணிச் சதுர்த்தி ஆனை முகவனை
    அடியவர் ஏத்திப் பிடித்திடு விரதம்
    நலமுடன் வாழ வேண்டியே அடியவர்
    விநாயகன் திருவடி தொழுதிடு விரதம்

    ஆலயம் அனைத்தும் ஆவணிச் சதுர்த்தி
    ஆன்மீக ஒளியை பரப்பியே நிற்கும்
    ஆனை முகத்தான் அருளைப் பெற்றிட
    ஆவணிச் சதிர்த்தி அருந்துணை ஆகும்

    Share
  • கீதையைப் படிப்போம் பாதையை அறிவோம் !

    கீதையைப் படிப்போம் பாதையை அறிவோம் !

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
    மெல்பேண், ஆஸ்திரேலியா

    எண்ணாய் இருப்பான் எழுத்தாய் இருப்பான்
    கண்ணாய் இருப்பான் மணியாய் இருப்பான்
    உண்ணும் உணவாய் பருகும் நீராய்
    எல்லாம் ஆகி இருப்பான் கண்ணன்

    கடலாய் இருப்பான் அலையாய் எழுவான்
    முகிலாய் இருப்பான் மழையாய் பொழிவான்
    வயலாய் இருப்பான் பயிராய் இருப்பான்
    வளமாய்க் கண்ணன் நிறைந்தே இருப்பான்

    ஆக்கும் சக்தியாய் அழிக்கும் சக்தியாய்
    காக்கும் சக்தியாய் கண்ணன் இருப்பான்
    நோக்கும் இடமெலாம் இருப்பான் கண்ணன்
    வாக்கும் கண்ணனே வரமும் கண்ணனே

    எல்லாச் சுவையிலும் இருப்பான் கண்ணன்
    கண்ணன் இல்லாச் சுவையே இல்லை
    பாலும் அவனே தேனும் அவனே
    பழத்தின் சுவையாய் இருப்பவன் அவனே

    பிறப்பைக் கொடுப்பான் இறப்பைக் கொடுப்பான்
    பிறவிப் பிணியை நீக்கவும் செய்வான்
    அறத்தை மறந்தால் அழிக்கவும் செய்வான்
    அன்பைக் காட்டி அணைத்துமே நிற்பான்

    அன்பாய் அழைத்தால் அருகில் வருவான்
    அமைதி தருவான் ஆறுதல் அளிப்பான்
    ஆணவம் கொண்டால் ஆத்திரம் அடைவான்
    அவனே ஆசான் அவனே அரசன்

    நல்வழி காட்டும் நண்பனும் ஆவான்
    நயமுடன் உரைக்கும் நாயகன் அவனே
    தொல்லை கொடுத்தால் புகட்டுவான் பாடம்
    தூய்மையாம் மனத்தில் துயிலுவான் கண்ணன்

    இசையும் அவனே இலக்கியம் அவனே
    இங்கிதம் அவனே சங்கீதம் அவனே
    அசையும் பொருளும் அசையாப் பொருளும்
    அனைத்தும் கண்ணன் இருப்பிடம் ஆகும்

    கண்ணனே பரம்பொருள் கண்ணனே அனைத்தும்
    கண்ணனே அனைத்துமாய் ஆகியே இருக்கிறான்
    பூதல மாந்தர் புனிதமாய் இருக்க
    கீதையை ஈந்ததும் கண்ணனே ஆவான்

    கீதை என்பது வேதமே ஆகும்
    கீதையைப் படித்தால் கீழ்க்குணம் அகலும்
    கீதையில் இல்லா வழிமுறை இல்லை
    கீதையைப் படிப்போம் பாதையை அறிவோம்

    Share
  • காத்திடுவோம் வாருங்கள்!

    காத்திடுவோம் வாருங்கள்!

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
    மெல்பேண், ஆஸ்திரேலியா

    பண்பாடு கலாசாரம் காத்திடுதல் முக்கியமே
    பண்பாடு கலாசாரம் கண்போன் றிருக்கிறது
    கண்ணின்றி வாழ்தல் எண்ணவே முடியாது
    கண்ணான கலாசாரம் காத்திடுவோம் வாருங்கள்

    காட்டிலே திரிந்தோம் நாட்டை உருவாக்கினோம்
    கடவுளை உணர்ந்தோம் கருணையை அறிந்தோம்
    மனிதனாய் வாழ வழிகளும் கண்டோம்
    இலக்கியத்தை  இலக்கணத்தை எம்முடமை ஆக்கினோம்

    பண்பாடு கலாசாரம் பலவாறு காத்தோம்
    பாருலகில் பக்குவமாய் வாழவும் செய்தோம்
    நாகரிக எல்லைக்குள் நச்சுக்குள் புகுந்திடவே
    பண்பாடு கலாசாரம் பதறியே துடிக்கிறது

    ஆன்மீகம் அறமெல்லாம் அழுதுமே நிற்கிறது
    ஆளுமைகள் பலபேரும் அகவொழுக்கம் குன்றுகிறார்
    கல்வியொடு மருத்துவம் காசுக்குள் அமிழ்கிறது
    கண்ணியமும் கெளரவும் கலங்கியே அழுகிறது

    மூத்தோரை யாவரும் மூலையிலே ஒதுக்கிட்டார்
    அவருரைத்த அறிவுரைகள் ஆழவே புதைத்திட்டார்
    பாட்டியெனும் பக்குவத்தை பாராமல் ஒதுக்கிட்டார்
    பகட்டான வாழ்வையே பண்பாடாய் ஆக்கிட்டார்

    மதங்கண்ட மனிதன் மனிதத்தை மறந்திட்டான்
    இதமான வார்த்தைகளை ஈயவே தயங்குகிறான்
    சூழலை மறக்கின்றான் சூதினை அணைக்கின்றான்
    கலாசாரம் பண்பாடு கதிகலங்கி நிற்கிறது

    Share
  • முப்பால் நூலினை முழுமையாய் படிப்போம் !

    முப்பால் நூலினை முழுமையாய் படிப்போம் !

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
    மெல்பேண், ஆஸ்திரேலியா

    எப்பொழுதும் எல்லோர்க்கும் இப்புவியில் உதவுதற்கு
    முப்பாலை உவந்தளித்தார் முழுமையுடன் வள்ளுவனார்
    முப்பொருளைப் பக்குவமாய் முப்பாலும் செப்பியதே
    அச்செயலை அகமெண்ணி ஆனந்தம் அடைந்திடுவோம்

    வரலாற்றில் பலநூல்கள் வந்துவந்து போகிறதே
    வரலாறாய் ஒருநூலே வாழ்ந்தபடி இருக்கிறதே
    வரலாறாய் வாழ்வதற்கு வரமதற்கு வாய்த்ததனால்
    வள்ளுவவரின் முப்பாலாய் மலர்ந்துமே இருக்கிறதே

    இலக்கியங்கள் இலக்கணங்கள் எவ்வளவோ இருக்கிறது
    அதைப்படித்த பலபேர்கள் தலைக்கனத்தில் இருக்கின்றார்
    தலைக்கனத்தைத் தகர்ப்பதற்கு தகுந்தவொரு மருந்தாக
    முப்பாலைக் கொடுத்தாரே முறையாக வள்ளுவனார்

    அறம் பொருளின்பம் அனைவர்க்கும் அவசியம்
    அறத்தொடு நிற்றல் அதினிலும் அவசியம்
    உரைத்தது முப்பால் எனும்பெரும் பொக்கிஷம்
    நிலத்தினில் அறமே நிம்மதி நல்கிடும்

    முப்பால் என்னும் திருப்பாற் கடற்குள்
    மூழ்குவார் யாவரும் அமுதமே பருகுவார்
    தப்பாய் இருப்பார் அனைவரும் திருந்த
    முப்பால் காப்பாய் முந்தியே நிற்கும்

    கடவுளைத் துதிக்கா எதுவும் தொடங்கா
    கடவுளின் பெயரினைக் காட்டியே தொடங்கும்
    கடவுளைத் துதித்தும்  கடவுளைக் காட்டா
    கருத்தை நுட்பமாய் மொழிந்தது  முப்பால்

    அறவாழி என்றும் ஆதிபகவன் என்றும்
    வாலறிவன் என்றும் போற்றியது முப்பால்
    பெயர்சுட்டா வகையில் பெரும்பொருளைக் காட்ட
    வகைசெய்த முப்பால் வாழும் நூலாகிறதே

    இல்லறம் சிறக்க நல்லற மீந்தது
    எவையுமே சொல்லா முறையிலே அமைந்தது
    உலகமே வியந்திடும் உயரறம் உரைத்ததால்
    உலகிலே முப்பால் உயர்ந்துமே நிற்கிறது

    அன்பினைப் பற்றி உரைத்திடும் வகையில்
    முப்பால் நூலே முத்திரை பதித்தது
    அடைக்கின்ற தாழே இல்லையே என்று
    அன்பின் உயர்வை முப்பால் மொழிந்தது

    அன்பினை அனைத்திலும் அமர்த்திட வேண்டும்
    அன்பினை அகத்தில் நிறைத்திட வேண்டும்
    அன்புதான் வாழ்வின் ஆணி வேராகும்
    அதுவே முப்பால் உணர்வே ஆகும்

    இன்சொல் என்பது இன்பமே ஆகும்
    எவர்க்கும் ஏற்றதும் இன்சொலே ஆகும்
    இன்சொல் மொழிந்தால் இடரொடிந் தோடும்
    என்றே மொழிந்தது முப்பால் ஆகுமே

    ஒழுக்கம் என்பது உயிரினும் உயர்ந்தது
    ஒழுக்கம் தவறின் உயிரும் பிரியும்
    உணரும் யாவரும் உயர்வார் வாழ்வில்
    உரைத்திடும் முப்பால் உயர்ந்த நன்னூலே

    செல்விருந்து வருவிருந்து நல்விருந்து யாவும்
    இல்லறத்தின் நல்லறமாய் வாய்த்த வரமாகும்
    உள்விரும்பி உபசரித்து உலகிலே வாழ்ந்தால்
    உயர்விருந்து கிடைக்குமென உரைத்ததுவே முப்பால்

    அழுக்காறை அகற்று அவாவினை அடக்கு
    புறங்கூறும் புத்தியை புரட்டியே போடு
    எழுந்திடும் சினத்தை கொழுந்திலே கிள்ளு
    வளம்பெறும் வாழ்வு வாய்த்திடும் என்றது

    அவிசொரிந் தாயிரம் வேள்வி செய்தாலும்
    உயிரைக் கொல்லாமை உயர்வென் றுரைத்தது
    கொல்லானை புலால் மறுத்தானை உயிரெலாம்
    தொழுமெனச் சொன்னது முப்பால் ஒன்றே

    மாசில்லா மனத்துடன் வாழ்வது வாழ்வே
    ஆசையை அடக்குதல் அனைவர்க்கும் கடனே
    பொருளது வாழ்வில் முக்கியம் ஆகும்
    அருளே என்றும் அழிவிலாப் பொருளே

    அறமொடு ஆட்சி அமைந்திடல் வேண்டும்
    அமைச்சும் அறநிறை பேணிட வேண்டும்
    கறையுடை தலைமை நிறையுடை ஆகா
    என்றே வுரைத்தது முப்பால் அன்றே

    இல்லறம் என்பதே நல்லறம் ஆகும்
    இன்பமும் ஊடலும் இணைந்தே இருக்கும்
    முப்பால் காதலை உணர்த்திடும் பாங்கு
    கற்பார் மனத்தைக் கவர்ந்தே இழுக்கும்

    செந்தமிழ் இன்பம் செறிந்துமே நிறைய
    வந்திடும் உவமைகள் வகையில வகையில
    முப்பால் புலவர் வாழ்வினை நுகர்ந்த
    அத்தனை அனுபவம் அகநிறை அனுபவம்

    எத்தனை சிந்தனை எத்தனை தத்துவம்
    வித்துவம் நிறைந்த வியத்தகு முப்பால்
    உத்தம வள்ளுவர் உவந்தெமக் களித்தார்
    நித்தமும் படிப்போம் நெஞ்சினில் பதிப்போம்

    முப்பால் எங்கள் முதுசொம் ஆகும்
    அப்பால் செல்லா அதுவே அரனே
    தாய்ப்பால் போல முப்பால் எமக்கு
    ஊக்கம் அளிக்கும் உயிர்ப்பும் அளிக்கும்

    செந்தமிழ் வள்ளுவர் செப்பிய முப்பால்
    நந்தமிழ் மக்களின் பொக்கிஷம் ஆகும்
    அந்தமில் முப்பொருள் அடங்கிய முப்பால்
    எந்தையாம் வள்ளுவர் ஈந்தநற் கொடையே

    மலர்ந்தது தமிழில் பெயர்ந்தது பன்மொழியில்
    பார்த்தவர் வியந்தார் படித்தவர் விழித்தார்
    முப்பால் நூலினை முழுமையாய் படிப்போம்
    இப்புவி வாழ்வு இன்பமாய் அமையும் !

    Share
  • சிவனார் நண்பர் செந்தமிழ் சுந்தரர்!

    சிவனார் நண்பர் செந்தமிழ் சுந்தரர்!

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
    மெல்பேண், ஆஸ்திரேலியா

    அரனார்  தொண்டராய் அருகி லிருந்தார்
    அவரின் மனத்தில் காமம் எழுந்தது
    காமனை எரித்தவர் சாபம் கொடுத்தார்
    அரனின் தொண்டர் அவனியில் பிறந்தார்

    புவனியில் பிறவென அரனார் மொழிந்தார்
    தொண்டர் திகைத்து தாழினை பணிந்தார்
    கவலை விட்டிடு காப்பேன் என்றார்
    புவனியில் தொண்டர் பயணந் தொடர்ந்தார்

    அந்தண குலத்தில் பிறந்தார் அடியார்
    அழகாய் இருந்ததால் சுந்தரர் ஆனார்
    அழகுக் குழந்தையை அரசன் கண்டான்
    ஆசைப் பட்டுக் குழந்தையைக் கேட்டான்

    அரசன் மனையில் சுந்தரர் வளர்ந்தார்
    அணிமணி புனைந்து அவரும் இருந்தார்
    ஆலால சுந்தரர் அரண்மனை வாழ்வு
    ஆனந்தக் கடலாய் ஆகியே விரிந்தது

    திருமண வயதினை எட்டினார் சுந்தரர்
    மணவினை ஆற்றிட பெற்றோர் விரும்பினர்
    மங்கல நாளினில் மணமகன் மணமகள்
    வந்திடும் வேளை சங்கடம் வந்தது

    எந்தையாம் ஈசன் சுந்தரர் தமிழை
    தந்திரம் செய்து கேட்டிட  வந்தார்
    கிழவனாய் வந்தார் யாவரும் கேட்டிடச்
    மணமகன் சுந்தரன் அடிமையே என்றார்

    அடிமை என்றதும் அனைவரும் திகைத்தனர்
    மணமகன் சுந்தரர் வெகுண்டுமே எழுந்தார்
    பித்தா என்று கிழவனைத் திட்டினார்
    வந்தவர் யாவரும் கிழவரைப் பார்த்தனர்

    அடிமை இவனே ஆதாரம் உண்டு
    கிழவர் ஓலையைக் காட்டினார் சபையிலே
    யாவரும் மெளனம் ஆகியே நின்றனர்
    கிழவர் பின்னே மணமகன் சென்றனன்

    ஆலயம் ஒன்றனுள் கிழவர் புகுந்தார்
    அனைவரும் காணவே அரனார் தோன்றினார்
    சுந்தரர் அழுதார் தொழுதார் அரனை
    பாடிடு என்று பரமன் பணித்தார்

    எப்படிப் பாடுவேன் என்றார் சுந்தரர்
    திட்டிய வார்த்தையை முதலாய் கொள்ளு
    பித்தா பிறைசூடி  பெருமானே அருளாளா
    முத்தாய் தமிழில் முகிழ்த்துமே வந்தது

    சிவனார் மகிழ்ந்தார் சேவித்தார் சுந்தரர்
    தலமெலாம் சென்றார் தமிழமு தீந்தார்
    சைவம் தளைக்க தத்துவம் சிறக்க
    சுந்தர் செந்தமிழ் சுவையுடன் எழுந்தது

    சுந்தரர் பக்தி தோழமைப் பக்தி
    செந்தமிழ் அடியார் போற்றிடும் பக்தி
    அந்தமில் அன்பில் விளைந்த நல்பக்தி
    ஆண்டவன் அருகினில் அணைந்திடும் பக்தி

    பூதலம் பிறந்த காதல் பெண்களை
    கைத்தலம் பற்றிட வைத்த நல்பக்தி
    காதல் தூதாய் கறைக்கண்டன் சென்றிட
    கட்டளை இட்ட கனிவுடைப் பக்தி

    பக்திச் சுவையினைப் பருகப் பருக
    சேக்கிழார் காப்பியம் ஆக்கியே அளித்தார்
    காப்பியப் பொருளைக் கொடுத்தவர் சுந்தரர்
    காலம் முழுதும் நினைக்கிறார் யாவரும்

    சுந்தரர் பாடல்கள் சுவையுடைப் பாடல்கள்
    செந்துருப் பண்ணில் சிறந்திடும் பாடல்கள்
    சம்பந்தர் அப்பர் தொட்டிடாப் பண்ணே
    தமிழுக்கு வாய்த்திட்ட வரமான பண்ணே

    ஏழாந் திருமுறை ஆகியே நின்று
    எங்கள் சைவம் காத்திட வந்தது
    ஆழமாங் கருத்தை அடக்கியே வைத்து
    ஆலால சுந்தரர் அருந்தமிழ் ஈந்தது

    வன்தொண்டர் பெயரினைப் பெற்றிட்ட போதும்
    வன்மமே இல்லா மென் தொண்டராகினார்
    கயிலை நாதனே கயிலை அழைத்தார்
    காமம் கலைந்தது கலந்தார் சுந்தரர்

    அரச வாழ்வில் வாழ்ந்தார் சுந்தரர்
    ஆனால் அகத்தில் அரனே நிறைந்தார்
    மண்ணக வாழ்வினைப் புண்ணிய மாக்கினார்
    மாசிலா மனத்துடன் வையகம் இருந்தார்

    பக்தியில் நட்பினை புகுத்திய அடியார்
    பரமனைப் பற்றியே வாழ்ந்த நல்லடியார்
    முத்தியைக் கூட நட்புக்கும் பகிர
    சுத்தமாம் மனத்துடன் கேட்ட நல்லடியார்

    மனத்தை அடக்கு மாசுகள் அகலும்
    கணத்தில் கூடக் காமம் வேண்டாம்
    சிவத்தை ஒதுக்கில் சிறப்பை இழப்பாய்
    அகத்தில் இருத்து அரனும் அருள்வான்

    உயரிய இடத்தில் இருப்பவர் யாவரும்
    உறுதியை இழந்தால் தகுதியை இழப்பார்
    வேண்டா வினைகள் தொடரும் என்பதை
    விளக்கிடச் சுந்தரர் பிறப்பே பாடம்

    Share
  • பெண்ணாகப் பிறந்தாலும் மண்சிறக்க வாழ்ந்தார்!

    பெண்ணாகப் பிறந்தாலும் மண்சிறக்க வாழ்ந்தார்!

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
    மெல்பேண், ஆஸ்திரேலியா

    பன்மொழிகள் பாரெங்கும் பரவியே இருக்கு
    பசுந்தமிழோ தனித்துவமாய் எழுந்துமே இருக்கு
    பக்தியை இலக்கியமாய் கண்டதும் தமிழே
    பாருக்குப் பண்ணிசையைக் கொடுத்ததும் தமிழே

    கடவுளையே மொழியாக்கிக் கண்டதும் தமிழே
    கடவுளே தமிழ்கேட்க விரும்பியதும் உயர்வே
    அடியார்கள் தமிழ்கேட்டு ஆண்டவனே மகிழ்ந்தான்
    அகிலத்தில் தமிழ் மொழியே அமுதமாயிருக்கு

    எம்மொழியும் பக்தியினைத் தொட்டதும் இல்லை
    பக்தியெனும் பெரு வெளியில் பயணிக்கவில்லை
    எம்மொழியாம் தமிழொன்றே பக்தியினைப் பற்றியதே
    இதனாலே தமிழுமே தனித்துவமாய் மிளிர்கிறது

    பக்தியை இலக்கியமாய் பாருமே பார்ப்பதற்கு
    படைத்திட்ட எங்கள்மொழி பாருக்குள் உயர்வாகும்
    பக்திக்குள் மூழ்கிவிட்டால் பரவசமே உருவாகும்
    பரவசத்தை அளிப்பது பாங்குடைய தமிழாகும்

    பக்தி இலக்கியத்தை தொடக்கிய முன்னோடி
    காரைக்கால் ஈன்றெடுத்த கனிவான பெண்ணாவார்
    மாதரில் மாணிக்கமாய் மாசில்லா மங்கையாய்
    மாதவத்தின் உருவமாய் வந்துமே பிறந்திட்டார்

    நல்லறமாம் இல்லறத்தில் நங்கையும் இணைந்திட்டாள்
    நற்கணவன் கைபிடித்து நலமுடனே வாழ்ந்திட்டாள்
    தெய்வமது சித்தத்தால் சீரான குடும்பமதில்
    தித்திக்கும் மாங்கனி திசைமாறச் செய்ததுவே

    கைபிடித்த கணவன் கண்ணான மனைவியை
    சந்தேக மனத்துடனே சஞ்சலத்துள் ஆழ்த்தினான்
    மாங்கனியின் மாயத்தை மனமேற்க மறுத்ததால்
    மாதரசி மங்கையினை மனமொதுக்கி அகன்றிட்டான்

    பதிறித் துடித்தாள்  பரமனையே பற்றினாள்
    அழகுடைக் கோலத்தை அருவருப்பாய் எண்ணினாள்
    யாருமே விரும்பாத கோலத்தை மனங்கொண்டாள்
    பேயுருவை பெருவிருப்பாய்  பெற்றிட்டாள் இறைவனிடம்

    காரைக்கால் அம்மை பேயுருவாய் மாறினார்
    கணக்கில்லாப் பேரன்பை கடவுளிடம் காட்டினார்
    பக்திப் பெருவெளியில் பயணிக்கத் தொடங்கினார்
    பரமனைப் பாடினார் பக்திக்கும் வித்திட்டார்

    அன்னைத் தமிழுக்கு அம்மையார் பெருஞ்சொத்தே
    முன்னவராய் இருந்து இணைத்திட்டார் பக்தியினை
    பக்தி இலக்கியமாய் மலர்வதற்கு வித்திட்டார்
    பசுந்தமிழும் அதையேற்று பார்போற்ற எழுந்ததுவே

    இசையாலே தமிழ்பாடி இறைதுதிக்க வழிசெய்த
    எங்கள்தமிழ் முன்னோடி காரைக்கால் அம்மையே
    அவர்வகுத்த அடியொற்றி அவர்பின்னே வந்தடியார்
    ஆண்டவனைப் பண்ணோடு அன்புருகப் பாடினரே

    அந்தாதி தந்தார் பதிகமும் தந்தார்
    திருவிரட்டை மணிமாலை சிறப்பாகத் தந்தார்
    பதிகத்தைத் தொடக்கி பக்தியைக் காட்டி
    அந்தாதிக் கருத்திருத்தி ஆண்டவனைப் பாடினார்

    பக்திப் பாமரபில் முன்னோடி  அம்மையார்
    பதிகத்தைத் தொடக்கியவரும் காரைக்கால் அம்மையார்
    வெண்பாவைத் தொட்டார் விருத்தத்தை காட்டினார்
    பண்பாடிப் பக்தியிலே பலர்தொடர வழிவகுத்தார்

    இசைத் தமிழால் பாடுதற்கு வித்தானாரிவரே
    பண்பாடி பக்தியினைப் பரப்புதற்கும் முன்னோடி
    நாயன்மார்  பண்ணோடு  நற்றதமில் பாட
    காரைக் காலம்மையே தனிப்பாதை வகுத்தார்

    சைவத்தை மேலாகத் தன்னகத்தில் கொண்டார்
    தமிழ்ப் பக்தியியக்கத்தின் முன்னோடி ஆனார்
    பேயுருவை உவந்தேற்ற பெரும்பெண்ணும் ஆனார்
    பெம்மானே அம்மையென அழைத்த பெண்ணுமாவர்

    இறையுணர்வை இலக்கியத்தில் இணைத்த பெண்ணாவார்
    இறையடியில் இருப்பதை இன்பமாய் ஏற்றார்
    பேயுருவில் கைலாயம் சென்ற பெண்ணாவர்
    பெம்மானின் கோவிலில் இருப்பிடமும் பெற்றார்

    காரைக்கால் அம்மையை கருத்தினிலே வைப்போம்
    காலத்தால் அழியாத கவிமரபை அளித்திட்டார்
    திருமுறைகள் வருவதற்குத் திறவுகோல் அவராவார்
    அவர் நினைவை அனவருமே அகமிருத்துவோமே

    பெண்ணாகப் பிறந்தாலும் மண்சிறக்க வாழ்ந்தார்
    பெருமானின் திருவடியை பெரும்பேறாய் கொண்டார்
    பக்திப் பெருவெளியில் முத்தாக ஒளிர்ந்தார்
    பாடினார் பாடினார் பரமனுமே மகிழ்ந்திட்டார்

    Share
  • என்றுமே கவிமணி வாழ்கிறார்  கவிகளில் !

    என்றுமே கவிமணி வாழ்கிறார் கவிகளில் !

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
    மெல்பேண், ஆஸ்திரேலியா

    கவிமணி எங்கள் தமிழ் மணி
    கனிவாய் தமிழில் கவி தந்தார்
    புவியினை புனிதமாய் அவர் கண்டார்
    புத்தரை இத்தரை போற்றிட வைத்தார்

    எளிமையாய் கவிதை ஈந்தார் கவிமணி
    இயல்பாய் சொற்கள் இணைந்தன அவரிடம்
    புவியினை எண்ணியே புகன்றார் கவிதையை
    அறிவுரை ஆகியே அனைத்துமே அமைந்தது

    செந்தமிழ் ஆங்கிலம் சிறப்புடன் கற்றார்
    சிறந்திடு படைப்புகள் செப்பமாய் அளித்தார்
    நந்தமிழ் போற்றிடும் நற்றமிழ் கவியாய்
    நாநிலம் மெச்சிட வாழ்ந்தனர் கவிமணி

    ஆசிய ஜோதியாய் ஆக்கினார் புத்தரை
    அவரின் பாதையை அருமையாய்க் காட்டினார்
    அவலம் காட்டினார் அறிவுரை பகர்ந்தார்
    சிகரம் ஆகவே தீட்டினார் கவிமணி

    பக்தியைப் பாடினார் பரமனைப் பாடினார்
    சத்தியம் நேர்மையைச் சமத்துவம் பாடினார்
    இத்தரை குழந்தைக்கு ஏற்பன பாடினார்
    எளிமையாய் இனிமையாய் கவிமணி பாடினார்

    கவிமணி கவிதைகள் கரும்பாய் இனித்தன
    இரும்பாம் இதயத்தை இளகிடச் செய்தன
    உருக்கமும் இருந்தது இரக்கமும் இருந்தது
    உயிர்ப்புடன் தமிழும் ஓங்கியே எழுந்தது

    மலரும் மாலையும் கவிமணி சூட்டினார்
    மாநிலம் பயனுற கவிதைகள் யாத்தனர்
    ஓடும் உதிரத்தில் ஒழுகிடும் கண்ணீரில்
    உயர்ஞான தத்துவத்தை உரைத்தனர் கவிமணி

    தோட்டத்தில் மேயுது வெள்ளைப் பசுவென்று
    சுவையுடன் கவிமணி சொல்லிய பாடலை
    கேட்டவர் மகிழ்வர் கிளுகிளுப் படைவர்
    குழந்தைகள் யாவரும் துள்ளியே குதிப்பார்

    அன்பினைப் பாடுவார் அன்புடன் பாடுவார்
    ஆரையும் நொந்திட பாடிடார் கவிமணி
    ஆறுதல் தருவதாய் அவருமே பாடுவார்
    ஆதாலால் கவிமணி வாழ்கிறார் கவிகளில்

    வசையினைப் பாடா வளமினைப் பாடினார்
    வாழ்த்தியே பாடினார் வரம்பினைக் காட்டினார்
    எளிமையாய் பாடினார் ஏற்றதைப் பாடினார்
    என்றுமே கவிமணி வாழ்கிறார் கவிகளில்

    Share
  • மேதையாய் ஞானியாய் விளங்குகிறார் அடிகள் !

    மேதையாய் ஞானியாய் விளங்குகிறார் அடிகள் !

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
    மெல்பேண், ஆஸ்திரேலியா

    ஈழத்தின் கிழக் கெங்கும் எழில் கொஞ்சும்
    எங்குமே பண்பாடு சிறந் தோங்கும்
    வாளை கெண்டை  மீன்கள் துள்ளியோடும்
    வய லெங்கும் பயிர் செழித்து நிற்கும்

    தாள மொடு பெண்கள் பாட்டிசைப்பார்
    தலை யசைத்து ஆண்கள் ரசித்திடுவார்
    கால மதை எண்ணாமல் உழைத்திடுவார்
    கடவுளுமே நல் அருளை வழங்கிடுவார்

    சமத்துவமாய் மக்கள் அங்கே  வாழ்ந்திடுவார்
    சமயநெறி தனையவரும் கடைப் பிடிப்பார்
    மீன்பாடும் அதிசயமும் அங்கே உண்டு
    தேனாக  உபசரிப்பில்  தித்திபார் அங்கு

    மீன்பாடும் தேனாட்டை வியந்து பார்க்க
    மேதையென மயில் வாகனன் பிறந்தாரே
    அதிசயமே இல்லாது  அவருமே பிறந்தார்
    அனைவருமே போற்றிடவே அம்மேதை  வாழ்ந்தார்

    பெளதிக ஆசானாய் படித்தவரும் வந்தார்
    பண்டிதராய் பின்னே பட்டமவர்  பெற்றார்
    கிழக்கிருந்து அவரும் வடக்குக்கு  வந்தார்
    கேண்மைமிகு ஆளுமைகள் பலரும் இணைந்தார்

    ஆசானாய் அமர்ந்தார் அதிபராய் உயர்ந்தார்
    ஈசனை எண்ணியே எல்லாமே செய்தார்
    இல்லற இன்பத்தை நாடாமல் அவரும்
    நல்லறமாய் துறவறத்தை நயந்தேற்று நின்றார்

    இராமகிருஷ்ண இயக்கம் ஈர்த்தது அவரை
    பிள்ளைத் திருநாமம் பெயர்ந்துமே போனது
    உள்ளம் வெளுத்தது உயர்நாமம் ஆகவே
    விபுலானந்த நாமம் வெளிச்சமாய் ஆகியதே

    இல்லறத்தைத் துறந்தாலும் இதயத்தில் தமிழை
    ஏந்தியே விபுலானந்தார் எங்குமே சென்றார்
    பன்மொழிகள் கற்றார் பலநூல்கள் படைத்தார்
    பல்கலைக் கழகத்தில் பேராசானாய் அமர்ந்தார்

    அண்ண மலை அவரை அணைத்தது
    ஆருமே ஆற்றாத பணிகளை ஆற்றினார்
    ஈழமும் அவரை ஏந்தியே நின்றது
    எங்குமே விபுலானந்தர் அறிவொளி பரந்தது

    பாமரர்க்குப் பாரதியை பக்குவமாய் காட்டினார்
    பண்டிதர்கள் எதிர்த்தாலும் பாரதியை உயர்த்தினார்
    ஈழத்து ஆசானால் எங்கள்கவி பாரதியும்
    ஆழமாய் அனைவரதும் அகத்திலே அமர்ந்திட்டான்

    அடிகளார் மாணாக்கர் அனைவருமே ஆளுமைகள்
    ஆராய்ச்சிப் பாதைக்கு அவரேதான் அடித்தளமே
    அறிவியலைத் தமிழோடு இணைத்தாரே அடிகளார்
    அன்னைத் தமிழும் அதியுயர்வு பெற்றதே

    யாழ்நூலை ஆக்கியதால் யாவருமே வியந்தார்கள்
    அறிவியலைத் தமிழோடு இணைத்திட்டார் அடிகளார்
    இப்படி ஒருநூலை எவருமே ஆக்கார்கள்
    அடிகளார் ஆராய்ச்சி தமிழுக்குப் பொக்கிஷமே

    வெள்ளைநிற மல்லிகையை வேறெவரும் தரமாட்டார்
    உள்ளக் கமலத்தை உவந்தளித்தார் அடிகளார்
    தெள்ளத் தெளிவாக தித்திக்கும் கவிதைகளை
    அள்ளிக் கொடுக்க ஆருமே இங்கில்லை

    ஏழைகள் கல்வியைக் கற்றிட வழிசமைத்தார்
    வாழுகின்ற நெறிகளை வைத்திட்டார் கற்றலிலே
    அனைவரையும் அணைத்தார் அறிவுலகைக் காட்டினார்
    ஆன்மீக ஞானியாய் திகழுகிறார் அடிகளார்

    காரைதீவின் மைந்தன் கற்றதால் உயர்ந்தார்
    கரையேறாப் பலரையும் கரையேற்றி விட்டார்
    கடவுளை நம்பினார் கண்ணியத்தைக் காத்தார்
    காய்தல் உவத்தலின்றி கடமையினை ஆற்றினார்

    முத்தமிழ் வித்தகராய் அடிகளார் இருந்தார்
    மூத்ததமிழ் அறிஞரெலாம் வியந்துமே பார்த்தார்
    வித்தகராய் விளங்கினார் விபுலானந்த அடிகள்
    மேதையாய் ஞானியாய் விளங்குகிறார் அடிகள்

    Share
  • ஆண்டவனே வழிகாட்டு !

    ஆண்டவனே வழிகாட்டு !

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
    மெல்பேண், ஆஸ்திரேலியா

    அதிகாரம் என்றும் ஆகாது உடலுக்கு
    அதிகாரம் உலக அழிவுக்கு வித்தே
    இதிகாசம் புராணம் எடுத்துமே சொன்னது
    எதையுமே கேளா எழுந்தது அதிகாரம்

    அதிகாரம் அரச கட்டிலில் அமர்கிறது
    எதையுமே பாரா எக்காள மிடுகிறது
    ஊதிப் பெருக்க ஒன்றாக இணையும்
    பாதகர் பலரும் பக்கமாய் வருகின்றார்

    நீதியை மிதிக்கின்றார் நிட்டூரம் செய்கிறார்
    போதனை போதனை பொய்யாய் விரிக்கிறார்
    பாதகத்தை செய்ய பக்குவமாய் சொல்கிறார்
    பாரிருப்பா ரெல்லாம்  பதறித் துடிக்கின்றார்

    அநியாயம் அங்கே அதிரசமாய் ஆகிறது
    ஆலவட்டம் பிடிப்பார் அகமகிழ்ந்து நிற்கின்றார்
    அதிகார அரக்கன் அஹிம்சையை மறந்து
    அதிகார வெறியால் ஆடியே நிற்கின்றான்

    காவலர்க ளெல்லாம் கடிநாயாய் மாறுகிறார்
    கடித்துக் குதறி கடுவிஷமாய் ஆகின்றார்
    நீதிமான்கள் யாவருமே நினைவிழந்து நிற்கின்றார்
    அதிகாரம் அங்கே அதிர்ந்துமே சிரிக்கிறது

    வள்ளுவர் கண்ணீர் கடலினுள் மூழ்கின்றார்
    வள்ளலார் மனமொடிந்து வாடியே நிற்கின்றார்
    தெள்ளுதமிழ் பாரதியார் உள்ளம் ஒடிகின்றார்
    தேசபிதா காந்திமகான் தனைமறந்து அழுகின்றார்

    அறமுடையார் அனைவருமே ஆண்டவனை நாடுகிறார்
    அவலங்கள் போக்கிடவே அனைவருமே வேண்டுகிறார்
    அமைதியொடு அன்புயர அதிகார வெறியழிய
    அனைத்துமாய் இருப்பவனே ஆண்டவனே வழிகாட்டு

    Share
  • நினைத்துப் படிப்போம் நிமலனும் மகிழுவான் !

    நினைத்துப் படிப்போம் நிமலனும் மகிழுவான் !

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
    மெல்பேண், ஆஸ்திரேலியா

    வள்ளுவம் படிப்போம் வள்ளலார் படிப்போம்
    பட்டினத் தடிகள் பாட்டையும் படிப்போம்
    நாலடி படிப்போம் நல்லுரை படிப்போம்
    தேனார் திரு  வாசகம் படிப்போம்

    மூலரைப் படிப்போம் மூதுரை படிப்போம்
    சீலமாம் அடியார் திருமுறை படிப்போம்
    கம்பனைப் படிப்போம் கவிமணி படிப்போம்
    பாரதி பாரதி தாசனைப் படிப்போம்

    படிப்போம் படிப்போம் பலதும் படிப்போம்
    படித்ததை மனதில் பக்குவப் படுத்துவோம்
    படித்ததை படித்த நிலையிலே விட்டிடா
    படித்ததை  வாழ்வுக்குப் படிக்கல் லாக்குவோம்

    முன்னவர் நமக்காய் எழுதிக் குவித்தார்
    முது சொம்மாக நிறைந்தே இருக்கு
    எடுக்க எடுக்க எமக்கே பயனே
    எடுத்துப் படித்தால் இமயமாய் உயருவோம்

    வாழ்வின் தத்துவம் வண்ணமாய் சொன்னார்
    வரம்பைக் கட்டிக் காத்தார் வாழ்வினை
    வழுக்கி வீழா காத்திட முனைந்தார்
    நினைத்துப் பார்க்கையில் நெஞ்சம் நிறையுது

    கையைப் பிடித்து அழைத்துச் சென்று
    கடமை கண்ணியம் காட்டி நிற்கிறார்
    அறத்தை உணர்த்தி அன்பை உணர்த்தி
    ஆண்டவன் நினைப்பை அகத்தில் பதிக்கிறார்

    நூல்களைப் படிப்போம் நுண்மாண் கருக்களை
    வாழும் வாழ்வுக்கு வழியாய் கொள்ளுவோம்
    மனத்தின் மாசை அகற்றும் மருந்தாய்
    நினைத்துப் படிப்போம் நிமலனும் மகிழுவான்

    Share
  • வாசகரின் வாசகத்தை மனமுருகிப் படிப்போம்!

    வாசகரின் வாசகத்தை மனமுருகிப் படிப்போம்!

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
    மெல்பேண், ஆஸ்திரேலியா

    ஆதியந்த மில்லா அருருளான சோதியை
    அதிமதுரத் தமிழினில் அமர்த்தினார் வாசகர்
    தேசமே வியந்தேற்ற திவ்ய திருவாசகமாய்
    மலர்ந்துமே வந்து மனமமர்ந்து நிற்கிறது

    வாதவூர் பிறந்தார் மனமெல்லாம் இறையே
    சோதனையை வாதவூரர் சுகமாகக் கண்டார்
    காதலுடன் கடவுளை கைகூப்பி நின்றார்
    கையணைத்துக் கடவுளும் கரையேற்றி விட்டார்

    மந்திரியாய் இருந்தார் மனமெல்லாம் சிவனே
    மாணிக்கம் வைரம் மனமேற்க வில்லை
    பார்க்கு மிடமெங்கும் பரமனே தெரிந்தார்
    பாடினார் வாசகத்தைப் பரமனுமே ஏற்றார்

    அதிகாரம் வாதவூரர் அகம் ஏறவில்லை
    ஆணவம் அவரிடத்து அணுகிடவும் இல்லை
    அகமுழுக்க அரனே அமர்ந்துமே இருந்தார்
    ஆசையில்லா நிலையினிலே வாதவூரர் வாழ்ந்தார்

    பக்தியின் பக்குவத்தைப் பலவாறு பாடினார்
    பாடிய அத்தனையும் பசுந்தமிழின் சொத்தே
    தத்துவம் இருந்தது தர்க்கமும் இருந்தது
    இத்தரையில் யாவர்க்கும் ஏற்றதாய் அமைந்தது

    மதங்கடந்து பலபேரும் மனமேற்றி நின்றார்
    மாபெரும் தத்துவத்தை வாசகரே மொழிந்தார்
    தேனாகாத் தித்திக்க திரு வாசகத்தை
    ஊனுருக உவந்தளித்தார் உளமுருகி வாதவூரர்

    வாசகரின் வாசகத்தை மனமுருகிப் படித்தால்
    மனமாசு அகன்றோடும் மாவெளிச்சம் வந்துவிடும்
    சித்தம் தெளியும் சிவனருளும் கிடைக்கும்
    நித்தம் படிப்போம் நிம்மதியைப் பெற்றிடுவோம்

    Share
  • தமிழ்க் கவியுலகில் தனிக்கொடி ஏற்றினார் !

    தமிழ்க் கவியுலகில் தனிக்கொடி ஏற்றினார் !

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மேனாள் தமிழ் மொழிக்கல்வி இயக்குநர்
    மெல்பேண், ஆஸ்திரேலியா

    முத்தமிழ் வாழ்த்த முத்தையா பிறந்தார்
    சொத்தாகத் தமிழைச் சேர்த்துமே வைத்தார்
    கம்பனைத் தொட்டார் கவிமழை பொழிந்தார்
    கண்ண தாசனாய் கவி மன்னரானார்

    பக்தியில் திளைத்தார் பரமனைத் துதித்தார்
    நெற்றியில் நீறும் பொட்டுமாய் திகழ்ந்தார்
    ஆலயம் சென்றார் அரனை வணங்கினார்
    ஆத்திக வாதியாய் ஆனந்தம் அடைந்தார்

    அரசியல் அலையால் அள்ளுண்டு போனார்
    ஆத்தீக அகத்தில் நாத்திகம் நுழைந்தது
    விதண்டா வாதம் பேசினார் எழுதினார்
    வீணாய்க் காலம் கழித்தார் இருளில்

    சாமியை ஏசினார் சாத்திரம் எதிர்த்தார்
    சங்கர மடத்தைத் தகர்ப்பேன் என்றார்
    தேவார புராணம் தீயிட முனைந்தார்
    திசை அறியாமல் சிக்கினார் இருளில்

    நாத்திகம் என்பது நஞ்சென உணர்ந்தார்
    ஆத்தீகம் அவரை அணைத்துமே நின்றது
    கண்ணனைப் பாடினார் காஞ்சியை நாடினார்
    திருமுறை படித்தார் திளைத்தார் பக்தியில்

    பக்திப் பாடல்கள் பற்பல பாடினார்
    பாமரர் விளங்க பலவும் பாடினார்
    தத்துவம் பாடினார் சித்தரைப் போலவே
    இத்தரை பயனுற எழுதினார் எழுதினார்

    உரைநடை உலகில் உயர்ந்தே நின்றார்
    உரைநடை கூட கவிநடை ஆனது
    உள்ளம் அமர உரைநடை அமைந்தது
    கவி கண்ணதாசன் உரை மன்னரானார்

    திரைக்கதை வசனம் காவியம் ஆனது
    கவிதை நடையில் வசனம் எழுந்தது
    கவித்துவ நிலையைக் காட்டியே நின்றார்
    கவி கண்ணதாசன் கலைமகள் வரமே

    சமயங் கடந்து தமிழை எழுதினார்
    அவலம் களைந்திட அதிகம் எழுதினார்
    மனதில் பட்டதை வண்ணமாய் வடித்தார்
    மாபெரும் கவியாய் திகழ்கிறார் மனங்களில்

    வெள்ளித் திரைக்கு அள்ளிக் கொடுத்தார்
    வேதனை சோதனை சாதனை பாடினார்
    தத்துவப் பாடலை முத்திரை ஆக்கினார்
    தமிழ்க் கவியுலகில் தனிக்கொடி ஏற்றினார்

    Share
  • அப்பா எனும் பொழுது  ஆண்டவனே தெரிகிறார்!

    அப்பா எனும் பொழுது ஆண்டவனே தெரிகிறார்!

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மேனாள் தமிழ் மொழிக்கல்வி இயக்குநர்
    மெல்பேண், ஆஸ்திரேலியா

    அப்பா எனும் பொழுது
    அன்பு தெரிகிறது
    அப்பா எனும் பொழுது
    கருணை தெரிகிறது
    அப்பா எனும் பொழுது
    ஆண்டவனே தெரிகிறார்
    அப்பா எனும் வார்த்தை
    அனைவர்க்கும் மந்திரமே !

    அன்னையால் நாம் பிறந்தோம்
    அப்பாதான் வேராவார்
    அவரருகில் இல்லை என்றால்
    அனைத்துமே அகன்றிடுமே
    வழித் துணையும் அவரே
    மருத்துவரும்  அவரே
    மா மருந்தாய் இருந்து
    காத்திடுவார் அப்பா !

    பெருமை கொள்வார் அப்பா
    பிறந்ததுமே பார்த்து
    மழலை குரல் கேட்டு
    மயங்கிடுவார் அப்பா
    உச்சி தொட்டுக் கொஞ்சி
    உருகிடுவார் அப்பா
    உள்ள வரம் அனைத்தும்
    பிள்ளையென நினைப்பார் !

    தன் முகத்தைப் பார்த்து
    மழலையைப் பார்ப்பார்
    தனை மறந்து அப்பா
    மூழ்கிடுவார் மகிழ்வில்
    இறை கொடுத்த வரமாய்
    எண்ணிடுவார் அப்பா
    இவ் உலகு அவர்க்கு
    இன்பமாய் தெரியும் !

    பிள்ளை மனம் அறிந்து
    பேணிடுவார் அப்பா
    உள்ளம் எலாம் பிள்ளை
    நினைவுடனே இருப்பார்
    அள்ள அள்ள குறையா
    அன்பினையே கொடுப்பார்
    அவர் என்றும் துணையாக
    ஆகியே இருப்பார்  !

    கற்கின்ற கரு அதனை
    கருத்திலே கொள்வார்
    கல்வி கற்க வாழ்வினிலே
    கண்ணாக இருப்பார்
    தன் பிள்ளை ஆளுமையாய்
    வரவெண்ணி உழைப்பார்
    கற்றவர்கள் சபை அமரக்
    காத்திருப்பார் அப்பா !

    நல்லவனாய் வல்லவனாய் வர
    அப்பா நினைப்பார்
    எல்லையில்லாப் புகழ் பெறவே
    எல்லாமே கொடுப்பார்
    நல்ல பிள்ளை என்று
    நாடெல்லாம் சொல்ல
    நாழும்  எண்ணி அப்பா
    வாழ்ந்திடுவார் மண்ணில்  !

    Share