Tag: மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா

  • மங்கலம் ஆக விளங்கிறாள் வரலக்ஷ்மி!

    மங்கலம் ஆக விளங்கிறாள் வரலக்ஷ்மி!

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மேனாள் தமிழ் மொழிக் கல்வி இயக்குநர்
    மெல்பேண், ஆஸ்திரேலியா

    மங்கலம் என்பது எங்கும் தங்கிட
    வரமருள் என்றுமே வேண்டுவார் யாவரும்
    தந்திடும் தாயாய் இருப்பாள் வரலக்ஷ்மி
    வரலக்ஷ்மித் தாயைப் போற்றுவோம் வாரீர்

    காத்திடு தாயே என்றுமே வேண்டிக்
    காப்புக் கட்டி வேண்டுவார் பெண்கள்
    மங்கலம் நிறைந்திட மங்கல மாதர்
    வரமருள் என்றுமே வேண்டுவார் உருகி

    குடும்பம் சிறக்க கொண்டவர் சிறக்க
    வைத்திடு என்றுமே வேண்டுவார் மாதர்
    மாங்கல்யம் நிலைக்க வரமருள் என்று
    வேண்டுவார் யாவரும் வரலக்ஷ்மித் தாயை

    அஷ்ட செல்வங்களும் அருள்வாள் வரலக்ஷ்மி
    அவளின் பாதத்தை அனைவரும் பற்றுவோம்
    பற்றுவார் வாழ்வில் மங்கலம் நிறையும்
    மங்கலம் ஆக விளங்கிறாள் வரலக்ஷ்மி !

    Share
  • உணர்ந்தால் சமநிலை ஒழுங்காய் இருக்கும்!

    உணர்ந்தால் சமநிலை ஒழுங்காய் இருக்கும்!

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மேனாள் தமிழ் மொழிக் கல்வி இயக்குநர்
    மெல்பேண், ஆஸ்திரேலியா

    சமநிலை சரிந்தால் சகலதும் சரியும்
    சமநிலை வாழ்வின் ஆணிவேர் ஆகும்
    சமநிலை அற்றார் துணிவினை இழப்பார்
    சமநிலை பேணுவோம் சகலதும் சிறக்கும்

    சமயங்கள் அனைத்தும் சமநிலை பேசுது
    சமநிலை என்பதே தத்துவம் ஆகும்
    சமநிலை என்பதே இறையது நிலையே
    இறையது உருவே இயற்கையாய் இருக்கு

    இயற்கை என்பதில் சமநிலை முக்கியம்
    இயற்கை குலைந்தால் எல்லாம் குலையும்
    இயற்கையைக் குலைய வைத்திடும் பாங்கில்
    நடப்பது அனைத்தையும் தடுத்திடல் வேண்டும்

    விஞ்ஞானம் என்பது விந்தைகள் வரவே
    விந்தைகள் பெருகிடச் சமநிலை தளரும்
    மெஞ்ஞானம் என்பது மேலான விந்தையே
    உணர்ந்தால் சமநிலை ஒழுங்காய் இருக்கும் !

    Share
  • இணையிலா ஞானியே இராம கிருஷ்ணராவார்!

    இணையிலா ஞானியே இராம கிருஷ்ணராவார்!

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
    மெல்பேண், ஆஸ்திரேலியா

    பள்ளிக்குச் சென்றார் படிப்பிலே நாட்டமில்லை
    துள்ளி விளையாடினார் சோலைகளை நாடினார்
    பாடினார் ஆடினார் பரவசத்தில் மூழ்கினார்
    பக்குவத்தை நோக்கியே பயணத்தைத் தொடங்கினார்

    வித்தியாச விளையாட்டு வித்தியாசச் சிந்தனை
    ஓவியத்தில் நாட்டம் உணர்வெல்லாம் இறையே
    கழிமண்ணை எடுப்பார் கடவுளுரு ஆக்குவார்
    கண்களை மூடுவார் காசினியை மறந்திடுவார்

    அந்தணராய் பிறந்தார் ஆசையின்றி இருந்தார்
    அர்ச்சகராய் அம்பாளை அனுதினமும் சேவித்தார்
    காமமும் அறியார் கசடவர் மனமில்லை
    காளியம்மா நினைப்புடனே ஆலயத்தில் இருந்தார்

    தனைமறந்து தியானத்தில் சலனமின்றி இருப்பார்
    வீடுதனை நாடாமல் காளிகோவில் இருப்பார்
    தேடிவரும் உறவுகள் திகைத்துமே நிற்பார்
    தினந் தினமும் இப்படியே நடந்தபடியிருக்கும்

    தாயார் பயந்தார் தமயனும் பயந்தார்
    மணமுடித்தால் நிலமாறும் எனவவரும் நினைத்தார்
    சரியான தேர்வாகச் சாரதா அமைந்தார்
    சாமியார் மகனுக்குத் தாரமாய் ஆக்கினார்

    கட்டிய மனைவியை காளிமாதாவாய் கண்டார்
    காதலோ காமமோ அவரகம் இல்லை
    எல்லா இடமும் காளியே தெரிந்தாள்
    இறுகப் பற்றினார் காளியின் திருவடி

    பாசம் பந்தம் அனைத்தும் காளியே
    பகலும் இரவும் தியானத்தில் இருந்தார்
    ஞானம் காளியால் அவருளே நிறைந்தது
    ஞானியாய் மலர்ந்தார் ராமகிருஷ்ண பரமஹம்சர்

    அவருடைய வாக்கில் அருள்நிறைந் திருக்கும்
    அவருடைய நோக்கில் அஞ்ஞானம் அகலும்
    அவர்தொட்டு விட்டால் ஆணவமே அகலும்
    அவரருகில் இருப்பார் ஆசியினைப் பெறுவார்

    வந்தாரே ஒருவர் தொட்டாரே அவரை
    வந்தவர் மனத்தில் உருவேறி நின்றது
    உருவேற்றம் பெற்றவர் உண்மையை உணர்ந்தார்
    உத்தம சீடராய் உலகவலம் வந்தார்

    வீரத் துறவியாய் வெளிப்பட்டார் அவரும்
    வேதத்தின் சாரத்தை விளக்கினார் எங்கும்
    குருவினது பெயராலே தொடக்கினார் இயக்கம்
    ராமகிருஷ்ண மிஷனாக விரிந்ததே எங்கும்

    மதங்கள் அனைத்தும் வழியெனச் சொன்னார்
    மதங்களின் நோக்கம் இறையினைக் காண்பதே
    பெண்களை மதிப்பது பெருங்கடன் என்றார்
    அனைத்துப் பெண்களும் அன்னையர் என்றார்

    யாவரும் விளங்கிட போதனை புகன்றார்
    உபதேசம் அனைத்துமே உன்னதம் ஆகும்
    பற்றே இல்லா வாழ்ந்தார் உலகிலே
    பக்குவம் பக்தியைத் தத்துவம் ஆக்கினார்

    சாராதா அம்மையார் சரித்திரம் ஆவார்
    இந்திய தேசத்து இணையிலாப் பெண்ணவர்
    கட்டிய கணவனைத் தெய்வமாய் கண்டவர்
    கற்புத் தெய்வமாய் ஒளிர்கிறார் அம்மையார்

    இணையிலா ஞானியே இராம கிருஷ்ணராவார்
    கலியுகத்தில் ஞானியாய் கால்பதித்து நின்றார்
    அவருடைய வாழ்க்கை அவருடைய சிந்தனை
    அருமருந்தா யனைவருக்கும் அமைந்துமே இருக்கு !

    Share
  • தெளிந்த துணிவே திறந்திடும் அனைத்தையும்!

    தெளிந்த துணிவே திறந்திடும் அனைத்தையும்!

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
    மெல்பேண், ஆஸ்திரேலியா

    எண்ணித் துணிகவென இயம்பினார் வள்ளுவர்
    எண்ணாமல் தொடங்குவார் இருக்கிறார் பலபேர்கள்
    காரியம் முடிந்தபின் கவலையில் மூழ்குவார்
    வள்ளுவரின் உட்கருத்தை மனமேற்றா விட்டவரே

    ஆரம்பம் என்பது அனைவர்க்கும் முக்கியமே
    ஆரம்பம் கோணினால் அனைத்துமே குலைந்துவிடும்
    ஆரம்ப வேளையிலே அலட்சியமாய் இருந்திட்டால்
    அடிபதிக்கும் அத்தனையும் ஆடியே போய்விடுமே

    வாழ்கையில் ஆயிரம் படிகள் உண்டு
    தாவிக் குதித்தால் தடுக்கியே வீழுவோம்
    படிகளைத் தாண்டிடப் பக்குவம் அவசியம்
    பதட்டமாய் தாண்டுவார் தடக்கியே வீழுவார்

    எப்படித் தாண்டலாம் எப்படி ஏறலாம்
    என்பதை எண்ணியே தாண்டிடல் முக்கியம்
    வீழ்ந்து நொந்து வெதும்பிய பின்னால்
    வெந்து நிற்பதில் நியாயந்தான் உண்டா

    எண்ணித் துணிவது என்பது தத்துவம்
    செய்வதைத் சீராய் செய்வதே முக்கியம்
    எண்ணிய முடிக்கும் திண்ணிய மனத்தாய்
    எண்ணிய முடித்தால் எல்லாம் சிறக்கும்

    எண்ணித் துணிவதில் இலக்கே முக்கியம்
    இலக்கை இழந்தால் எண்ணியது குழப்பமே
    துணிவு என்பதில் கலக்கம் வேண்டாம்
    தெளிந்த துணிவே திறந்திடும் அனைத்தையும்!

    Share
  • காத்திடும் தெய்வமாய் விளங்குவார் வாழ்வில்!

    காத்திடும் தெய்வமாய் விளங்குவார் வாழ்வில்!

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மேனாள் தமிழ் மொழிக் கல்வி இயக்குநர்
    மெல்பேண், ஆஸ்திரேலியா

    தாத்தா என்பது தனித்துவம் மிக்கது
    தலைமை தாங்கும் வலிமை கொண்டது
    அன்பொடு அறிவு அனுபவம் நிறைந்த
    பொக்கிஷம் தாத்தா என்பதே சத்தியம்

    பாட்டி என்றால் பரிவு பக்குவம்
    பாட்டி என்றால் பகிர்ந்திடும் தத்துவம்
    பண்பின் வடிவம் பாசத்தின் சிகரம்
    பாட்டி என்னும் பசுந்தமிழ்ப் பதமே

    தாத்தா கடுமை தண்டிப்ப தல்ல
    தடுமாறி விழாமல் தடுத்திடும் காப்பே
    ஒவ்வொரு சொல்லும் உள்ளம் திருந்த
    உரைத்திடும் தாத்தா உயர் பாடமாகும்

    காவல் தெய்வமாய் தாத்தா இருப்பார்
    கண்ணியம் இழக்கா காத்திடும் காவலர்
    மண்ணிலே தாத்தா வரமாய் இருக்கிறார்
    கண்ணெனத் தாத்தாவை எண்ணிடல் வேண்டும்

    வீட்டில் பாட்டி இருப்பது சிறப்பே
    காட்டிக் கொடுக்கா காத்துமே நிற்பார்
    வாட்டும் நோய்க்கு மருத்து கொடுக்கும்
    மருத்துவர் ஆகவும் மாறுவார் பாட்டி

    பற்பல கதைகளைப் பாங்காய் சொல்வார்
    தத்துவம் சத்தியம் நிறைந்துமே இருக்கும்
    விளங்கா அனைத்தும் விளங்கும் வகையில்
    பாட்டியின் கதைகள் பாடம் நடத்தும்

    தாத்தா பாட்டி வீட்டில் இருந்தால்
    காத்திடும் தெய்வமாய் விளங்குவார் வாழ்வில்
    காத்திடும் தெய்வம் வீட்டிலே இருந்தால்
    கவலைகள் அகலும் களிப்பே பெருகும் !

    Share
  • மாசகற்றும் மாசக்தி யானவனே இறைவன்!

    மாசகற்றும் மாசக்தி யானவனே இறைவன்!

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா 
    மேனாள் தமிழ் மொழிக் கல்வி இயக்குநர் 
    மெல்பேண், ஆஸ்திரேலியா

    உள்ளம் பெருங்கோவில்  என்றாரே  திருமூலர்
    ஊனுடம்பு ஆலயம் என்றவரும் சொன்னாரே
    கள்ளமிலா உள்ளமெலாம் கடவுள் வந்தமர்வார்
    கருத்திலே இருத்தினால் சிறப்பாக இருக்கும்

    நம்பிக்கை வைத்தால் நல்லதே நடக்கும்
    நம்பினார் கெடுவதில்லை நான்குமறை வாக்கு
    நால்வேதப் பொருளாக நாதனே இருக்கிறான்
    என்பதை நம்புவார் இவ்வுலகில் இருக்கின்றார்

    நம்புவார் நம்பாதார் யாவர்க்கும் இறைவன்
    நாளுமே படியளந்து கொண்டுமே இருக்கிறான்
    நம்புவார் இறையை  நயந்தேற்றிப் போற்கிறார்
    நம்பாதார் தம்முயற்சி என்றுமே வியக்கிறார்

    வேண்டுவார் வேண்டுவதைக் கொடுப்பவன் இறைவன்
    வேறுபாடு காட்டாத மெய்ப்பொருளே இறைவன்
    மாறுபடு மனத்தாரை மாற்றிடுவான் இறைவன்
    மாசகற்றும் மாசக்தி யானவனே இறைவன் !

    Share
  • சக்தியும் சிவனும் நித்தியம் ஆவார்!

    சக்தியும் சிவனும் நித்தியம் ஆவார்!

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மேனாள் தமிழ் மொழிக் கல்வி இயக்குநர்
    மெல்பேண், ஆஸ்திரேலியா

    ஆர நவமணி மாலைகள் ஆட
    அம்மை யோடப்பன் ஆடினார் நடனம்
    ஆடும் அரவம் அசையா நின்றது
    அமரர் அனைவரும் அரகரா என்றனர்

    நாரதர் தம்புரா நயமாய் மீட்டினார்
    நந்தியின் மத்தளம் சேர்ந்துமே ஒலித்தது
    வாணியின் வீணை வழங்கிய நாதம்
    மாதொரு பாகனின் ஆட்டத்தில் கலந்தது

    மண்ணும் மகிழ்ந்தது விண்ணும் மகிழ்ந்தது
    மாதொரு பாகனின் அடியார் மகிழ்ந்தார்
    திருமுறைச் செல்வர்கள் திருவடி தொழுதனர்
    ஆனந்தக் கடலில் அனைவரும் மூழ்கினர்

    வேதம் அனைத்தும் கையைக் குவித்தது
    தத்துவம் எல்லாம் தம்மை மறந்தது
    தீமைகள் அனைத்தும் தெறித்து ஓடின
    நன்மைகள் மலர்ந்து நறுமணம் எழுந்தது

    மாதொரு பாகன் ஆடா நின்றால்
    பூமியில் எதுவும் அசையா நின்றிடும்
    இறைவனின் நடனமே இயக்கும் சக்தி
    சக்தியும் சிவனும் நித்தியம் ஆவார்!

    Share
  • அகந்தை விட்டோடினால் தெரிந்திடுவான் சிவனாய்!

    அகந்தை விட்டோடினால் தெரிந்திடுவான் சிவனாய்!

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா 
    மேனாள் தமிழ் மொழிக் கல்வி இயக்குநர் 
    மெல்பேண், ஆஸ்திரேலியா 

    காலனைக் காலால் உதைத்ததும் சிவமே
    கண்ணப்பன் கண்ணை ஏற்றதும் சிவமே
    ஆலமாம் விஷத்தை உண்டதும் சிவமே
    அனைத்துமாய் எங்கும் இருப்பதும் சிவமே

    பிட்டுக்காய் மண்சுமந்து நின்றதும் சிவமே
    பிரம்படி ஏற்றிட வந்ததும் சிவமே
    கெட்டவர் ஆயினும் கேட்டிடும் வரத்தைக்
    கொட்டியே கொடுப்பதும் சிவமே ஆகும்

    விண்ணும் சிவமே மண்ணும் சிவமே
    உண்ணும் உணவெலாம் கொடுப்பதும் சிவமே
    எண்ணம் சிவமே எழுத்தும் சிவமே
    இயக்கம் சிவமே இயக்குநர் சிவமே

    ஆதியும் அந்தமும் இல்லா சிவமே
    அனைத்துக்கும் ஆதியாய் அமைந்தது வியப்பே
    சோதியின் தொடக்கம் யாருக்குந் தெரியா
    சோதியாய் ஆனதும் யாரெனத் தெரியோம்

    விடை தெரியாத வினாக்கள் பற்பல
    விடை தெரியாது தவிக்கிறோம் யாவரும்
    மாலும் தேடினார் அயனும் தேடினார்
    விளங்கா நிலையில் சிவத்தை நாடினார்

    உப்புக் கடலருகே உவப்பான நீருக்கு
    உயர்வான மலைகளிலே உன்னத மருந்திருக்கு
    சிப்பிக்குள் முத்திருக்கும் சிலந்திக்குள் திறனிருக்கு
    எப்படித்தான் வந்ததுவோ எவருக்கும் தெரியாது

    இருப்பார்க்கு இருப்பான் இல்லார்க்கு இல்லான்
    இல்லானே என்பார் இயற்கையே என்பார்
    ஏகனும் அவனே அநேகனும் அவனே
    இயற்கையும் அவனே இயக்கமும் அவனே

    அவனின்றி ஓர் அணுவும் அசையாது
    அணுவாயும் இருப்பான் அதைத்தாண்டி இருப்பான்
    ஆணவத் தோடவனைத் தேடினால் தெரியான்
    அகந்தை விட்டோடினால் தெரிந்திடுவான் சிவனாய் !

    Share
  • எங்கும் இருப்பான் முருகனே!

    எங்கும் இருப்பான் முருகனே!

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
    மெல்பேண், ஆஸ்திரேலியா

    கால் வண்ணம் கண்டேன்
    கழல் தொழுது நின்றேன்
    வேல் வண்ணம் கண்டேன்
    விழுந்து நான் விட்டேன்

    மால் மருகன் முருகன்
    மா அடியைப் பற்றினேன்
    பால் வண்ணங் கண்டேன்
    பரவசத்தில் மூழ்கி விட்டேன் !

    சேல் கொண்ட கண்ணழகி
    தேவ யானை கண்டேன்
    மனத்தால் அரு கணைந்த
    வனக்குறவர் மகள் கண்டேன்

    ஒளவை பால் அன்பால்
    அமுதத் தமிழ் கொட்டியது
    அருணகிரி மேல் அன்பால்
    அருந்து கிறோம் தத்துவப்பால்

    திருமுகன் வைத்த அன்பால்
    குமரகுரு தமிழ்ப் பாலை
    பக்தி மயம் ஆக்கியே
    பருகிடவே வைத்து விட்டார்

    வஞ்சத்தால் மனம் மாறா
    வஞ்சகராம் சூரர் தமை
    வெஞ்சினத்தால் வேர் அறுத்த
    வேல்முருகன் கால் பணிந்தேன்

    பால் எல்லாம் முருகனே
    பல் சுவையும் முருகனே
    வேல் என்றால் முருகனே
    நால் வேதம் முருகனே

    எல்லாப் பாலிலும் முருகனே
    எல்லாச் சுவையிலும் முருகனே
    இல்லா இடமே இல்லையே
    எங்கும் இருப்பான் முருகனே!

    Share
  • கவிமணி தமிழைக் கனிரசம் ஆக்கினார்!

    கவிமணி தமிழைக் கனிரசம் ஆக்கினார்!

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
    மெல்பேண், ஆஸ்திரேலியா

    படிக்கும் பாங்கில் எடுத்துச் சொற்களை
    பாட்டாய் ஆக்கிடும் தமிழ்மணி கவிமணி
    எழுத்தும் பொருளும் இயல்பாய் இணைய
    இனிய கவிதைகள் தருவார் கவிமணி

    வித்துவம் காட்டா வித்தகர் கவிமணி
    சத்தியம் நேர்மை மிக்கவர் கவிமணி
    உழைப்பை உயர்வாய் நினைப்பவர் கவிமணி
    உளத்தில் இறையை இருத்தினார் கவிமணி

    குழந்தைக் கவிதைகள் கொஞ்சிக் கொடுப்பார்
    படித்தவர் குழந்தையாய் ஆகியே மகிழ்வார்
    அமுதாய் தேனாய் கவிதைகள் இனிக்கும்
    அன்னைத் தமிழும் அணைத்தே நெகிழும்

    தத்துவக் கருத்துகள் சமயக் கருத்துகள்
    வித்துவ நிலையில் விளம்பிட மாட்டார்
    கற்பவர் கருத்தினில் பதிந்திடும் வண்ணம்
    கவிமணி கனிவாய் கவிதைகள் தருவார்

    அகமும் முகமும் அன்பே இருக்கும்
    எளிமை இனிமை நிறைந்தே இருக்கும்
    பக்தியின் வழியில் பயணப் படுவார்
    பசுந்தமிழ் பாவலர் கவிமணி ஆவார்

    சமத்துவம் கவிமணி தனித்துவம் ஆகும்
    உள்ள உயர்வே உன்னதம் என்பார்
    நல்லதன் நிறைவே செல்வம் என்பார்
    சொல்வதைச் சுவையாய் சொல்வார் கவிமணி

    மலரும் மாலையும் மனமமர் இலக்கியம்
    ஆசிய ஜோதி அருந்தமிழ் பொக்கிஷம்
    மணி மணியாகத் தமிழ்பதம் எடுத்து
    கவிமணி தந்தார் கவிதை மாலையாய்

    கவிமணி கவிதை கற்கண்டாய் இனிக்கும்
    செவிகளில் தேனாய் பாய்ந்துமே செல்லும்
    அவரது கவிதை அருந்தமிழ்ச் சொத்தே
    கவிமணி மீண்டும் பிறந்திட வேண்டும்

    பாட்டுக் கொரு புலவன் பாரதியடாயெனத்
    துணிவுடன் சொன்னவர் கவிமணி ஆவார்
    பாரதி தமிழை இனிக்குது என்றான்
    கவிமணி தமிழைக் கனிரசம் ஆக்கினார்!

    Share
  • சித்தம் தெளிந்தேன் தெரிந்தேன் தத்துவம்!

    சித்தம் தெளிந்தேன் தெரிந்தேன் தத்துவம்!

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
    மெல்பேண், ஆஸ்திரேலியா

    தந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவினர்
    வந்து நான் பிறந்து விட்டேன்
    சொந்தங்கள் பந்தங்கள் தூரவே நின்றன
    நொந்து நான் வெந்து விட்டேன்

    எந்தையும் என்னை விட்டுமே போயிட
    ஏங்கியே தாயுடன் தவித்துமே நின்றேன்
    வந்தது ஏனென தினமுமே எண்ணி
    வாடியே நானும் மருண்டு விட்டேன்

    சின்னப் பிள்ளை என்னதான் செய்வேன்
    சிறகின இளந்த பறவையாய் ஆகினேன்
    அடைக்கலம் கிடைத்தது அம்மாக்கும் எனக்கும்
    ஆறுதல் தேறுதல் அடைக்கலம் ஆனது

    எழுந்து நடந்திட ஊன்றுகோல் கிடைத்தது
    என்றுமே நானும் எண்ணியே இருந்தேன்
    ஆதாரம் ஆணிவேர் ஆகிய அம்மாவும்
    அனாதையாய் என்னை விட்டுமே அகன்றார்

    எப்படி எழுந்தேன் எப்படி நிமிர்ந்தேன்
    எனக்கே தெரியா சித்தே நடந்தது
    படித்தேன் படித்தேன் பட்டங்கள் பெற்றேன்
    பதவிகள் வந்தன பலருமே பார்த்தனர்

    துணைகளை இழந்தேன் துயரப் பட்டேன்
    வாழ்க்கைத் துணையென வந்தாள் வரமாய்
    வசந்தம் மிகுந்தது வாழ்வு ஒளிர்ந்தது
    வாழும் வாழ்க்கை மங்கலம் ஆனது

    இறைவனை நம்பினேன் எனை விடவில்லை
    கணபதி தாழினைப் பற்றியே வளர்ந்தேன்
    கஷ்டங்கள் அனைத்தையும் கணபதி போக்கினார்
    கணபதி தொழுதிடக் கஷ்டங்கள் அகலும்

    அப்பா அம்மாவை அடிக்கடி நினைப்பேன்
    அவர்களை நினைக்கா இருந்ததே இல்லை
    எவ்வுலக கிருந்தும் எனை வாழ்த்துவார்கள்
    என்னும் நினைப்பும் என்னுளம் இருக்கு

    சித்தாத்தம் வேதாந்தம் தெரியா திருந்தேன்
    தெரியும் காலத்தில் வந்துமே நிற்கிறேன்
    எத்தனை சிக்கல் எத்தனை கலக்கம்
    சித்தம் தெளிந்தேன் தெரிந்தேன் தத்துவம்!

    Share
  • பித்தனே என்றார் பித்தாய்ப் பாடினார்!

    பித்தனே என்றார் பித்தாய்ப் பாடினார்!

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
    மெல்பேண், ஆஸ்திரேலியா

    இறையுடன் தோழமை பூணலாம் மென்னும்
    வழியினைக் கண்டவர் ஆலால சுந்தரர்
    ஆலால சுந்தரர் தோழமை என்பது
    அன்பு சிவத்துடன் இணைந்திடு நிலையே

    ஏசினார் பேசினார் எள்ளிநகை யாடினார்
    இறைவனோ அவரை விட்டு விடவில்லை
    பேசிய வாயினால் பாடுக என்றார்
    பித்தனே என்றார் பித்தாய்ப் பாடினார்

    தொண்டருள் சுந்தரர் வன்தொண்டர் ஆவார்
    வன்தொண்டர் அடைமொழி அவரது சிறப்பே
    எம்பிரான் அருளைப் பெற்றது வன்சொலே
    தோழமை உணர்வால் சொன்னதும் வன்சொலே

    அரன் அடியார்கள் பெருமையை அறிந்திட
    வைத்தவர் ஆலால சுந்தரர் ஆவார்
    சுந்தரர் தொட்ட வித்தினைக் கண்டார்
    சேக்கிழார் பெரிய புராணத்தைத் தந்தார்

    அரன் அடியாரை அனைவரும் அறிய
    அரன் அடியாரின் அற்புதம் விளங்க
    அடித்தளம் அமைந்தவர் சுந்தரர் ஆவார்
    சுந்தரர் என்றுமே சிவசைவச் சொத்து

    எளிமையும் இனிமையும் உரிமையும் அன்பும்
    இருந்திடும் சுந்தரர் பாடல்கள் அனைத்தும்
    நட்பும் இருக்கும் பக்தியும் இருக்கும்
    சங்கரன் சரணாகதி தாங்கியும் இருக்கும்

    சந்தமொடு ஓசையுடன் தாள லயமோடு
    செந்தமிழில் தேவாரம் தந்து குவித்தாரே
    செந்துருத்திப் பண்ணாலே பாடி அளித்தாரே
    சம்பந்தர் அப்பர் தொட்டுவிடாப் பண்ணால்

    தீதகன்று உலகுய்ய திருவவதாரம் செய்தார்
    தெய்வத்தமிழ் தத்திடவே சுந்தரரும் வந்தார்
    நாதனுடன் நட்புரிமை பூண்ட நல்லடியார்
    நம்சைவ அடியாரை நாடறியச் செய்தார்

    அழகும் சுந்தரர் அலங்காரம் சுந்தரர்
    அரனுக்குக் அருகிருக்கும் அருநட்பும் சுந்தரர்
    அந்தணராய் பிறந்தார் அரசராய் வாழ்ந்தார்
    ஆனாலும் சுந்தரர் அரனுக்கு அடிமையே !

    Share
  • முத்தமிழில் முகிழ்த்தார் வித்தகராய் எழுந்தார்!

    முத்தமிழில் முகிழ்த்தார் வித்தகராய் எழுந்தார்!

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
    மெல்பேண், ஆஸ்திரேலியா

    ஈழத்தின் கிழக்கில் எழுந்த தொருமுத்து
    ஆழவே தமிழில் மூழ்கிய நல்முத்து
    வாழ்வையே பணியாய் ஆக்கியே நின்று
    வரமெனவே மாநிலத்தில் வந்தந்த முத்து

    தந்தைதாய் வைத்த பெயர் மயில்வாகனம்
    தவவாழ்வைத் தேர்ந்ததனால் பெயர் மாறினார்
    வெள்ளை நிறமல்லிகையாய் இறை நாடினார்
    விபுலானந்த அடிகளாய் நிலை மாறினார்

    பட்டங்கள் பெற்றார் பதவிகள் பெற்றார்
    பற்றற்ற வாழ்வையே பற்றியே நின்றார்
    பற்றற்று நின்றாலும் பசுந்தமிழைப் பற்றினார்
    பாடினார் பேசினார் பலநூல்கள் எழுதினார்

    முத்தமிழ் வித்தகராய் முகிழ்த்தவரும் எழுந்தார்
    முத்தமிழை வாழ்விலவர் ஏந்தியே வாழ்ந்தார்
    பண்தொட்டுப் பலவாய்வு செய்துமவர் நின்றார்
    பலபேரும் வியக்கவே யாழ்நூலைத் தந்தார்

    அடிகளார் கவிதைகள் அனைத்துமே சிறப்பு
    வெள்ளை நிறமல்லிகையே மேலதிகச் சிறப்பு
    அடிகளார் அடையாளம் இக்கவிதை என்றால்
    அதைமறுத்து எவருமே உரைக்க வரமாட்டார்

    ஆசானாய் இருந்தார் அதிபராய் ஆனார்
    அதியுயர்வாய் பல்கலைக்கழகப் பேராசான் ஆகினார்
    முத்தமிழில் முகிழ்த்தார் வித்தகராய் எழுந்தார்
    அர்த்தமுடன் வாழ்ந்தார் அவரெங்கள் சொத்தே

    கல்வியைக் கொடுப்பதற்கும் கடும்பாடு பட்டார்
    பலகல்விக் கூடங்களை அமைத்தவரும் நின்றார்
    அடிகளார் அரும்பணியால் அனைவருமே கற்றார்
    அறமோடு ஆசாரம் அங்கவரும் கொடுத்தார்

    பண்போடு கல்வி பக்தியுடன் கல்வி
    பாமரப் பிள்ளைகளும் படிப்பதற்கு வசதி
    இத்தனையும் இணைய கல்வியினைக் கொடுத்தார்
    முத்தமிழின் வித்தகர் சுவாமி விபுலானந்தர்!

    Share
  • அம்மனது அருள்நிறைந்த மாதமதே ஆடி!

    அம்மனது அருள்நிறைந்த மாதமதே ஆடி!

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மேனாள் தமிழ் மொழிக் கல்வி இயக்குநர்
    மெல்பேண், ஆஸ்திரேலியா

    பண்டிகை அனைத்தும் பண்பாட்டைக் காட்டும்
    பக்தியும் பக்குவமும் அதுவுணர்த்தி நிற்கும்
    வருடத்தில் வருகின்ற பண்டிகை அனைத்தும்
    மக்களது வாழ்வியலில் முக்கியமே  ஆகும்

    வருடத் தொடக்கத்தை கொண்டாடி மகிழ்வார்
    அரைவருடம் முடிந்ததும் ஆடிவந் தமையும்
    ஆடிப் பிறப்பை அகமிருத்தி அனைவருமே
    அரைவருடத் தொடக்கத்தை விழாவாக்கி மகிழ்வார்

    ஆதவன் தெற்குத்திசை அடிவைத்து நிற்பான்
    அவன் வெப்பந்தணிந்து குளிர்ச்சியங்கே அமரும்
    மக்களும் மகிழ்வர் கொண்டாட்டம் தொடங்கும்
    ஆடிப் பிறப்பங்கு ஆனந்தம் கொடுக்கும்

    அம்மனுக்கு விழாவெடுத்து அனைவருமே மகிழ்வார்
    ஆடியிலே கூழ்காய்ச்சி அம்மனுக்குப் படைப்பர்
    ஊரெல்லாம் கூடும் உறவுகளும் சேரும்
    கூழுண்டு மகிழ்வர் கொண்டாட்டம் பெருகும்

    ஆடியிலே வருகின்ற செவ்வாயும் சிறப்பு
    ஆடியிலே வருகின்ற வெள்ளியும் சிறப்பு
    ஆடிப்பூரம் சிறப்பு அனைத்துமே சிறப்பு
    பீடைமிக்க ஆடியல்ல பீடுடைய ஆடியே

    அபொழுது ஈழத்தில் ஆடிக்கு விடுதலை
    இப்பொழுது விடுதலையை எடுத்தெறிந்து விட்டார்
    என்றாலும் ஆடிக்கூழ் அம்மனுக்குப் படைத்து
    இல்லாத விடுதலையைப் பொய்யாக்கி விட்டார்

    பட்டம் விடுவார்கள் பலபேரும் மகிழ்வார்
    பனங்கட்டி பயறோடு கூழ்காய்சிச் சுவைப்பார்கள்
    கொழுக்கட்டை அவிப்பார்கள் கொண்டாடி மகிழ்வார்கள்
    மக்களது மனமெல்லாம் ஆடியே அமர்ந்திருக்கும்

    மாடியிலே இருப்பாரும் கூழ்காய்ச்சி மகிழ்வார்
    மண்குடிசை இருப்பாரும் கூழ்காய்ச்சி மகிழ்வார்
    ஆடியெனும் மாதமது அமங்கலமே அல்ல
    அம்மனது அருள்நிறைந்த மாதமதே ஆடி!

    Share
  • அமருலகு சென்றுவிட்டார் அவரிசையை அளிப்பதற்கு!

    அமருலகு சென்றுவிட்டார் அவரிசையை அளிப்பதற்கு!

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
    மெல்பேண், ஆஸ்திரேலியா

    வாடாத மல்லிகையாய் ஜானகி வந்தார்
    வரமாக வந்தாரே தமிழிசைக்கு அம்மா
    தேனான குரலாலே பாடினார் அம்மா
    தித்திக்கப் பாடினார் ஜானகி அம்மா

    ஊனுருக்க பலபாடல் அவரெமக்குந் தந்தார்
    உளம் இனிக்க உணர்வாக அவரீந்துநின்றார்
    வாழ்வதனை இசையாக்கி வாழ்ந்தாரே அம்மா
    வானவர்க்குப் பாடுதற்குச் சென்றுவிட்டார் அம்மா

    கலைவாணி குயிலாய் இருந்தாரே அம்மா
    கான சரஸ்வதியாய் ஆகிநின்றார்  அம்மா
    பலவிருதை பாராட்டைப் பெற்றாரே அம்மா
    பண்பாடி மனமெல்லாம் அமர்ந்தாரே அம்மா

    சிங்கார வேலனைத் தொட்டாரே அம்மா
    திரையுலகில் சிறகடித்துப் பறந்தாரே அம்மா
    அன்னக்கிளி சின்னகண்ணன் அமுதமாய் தந்தார்
    செந்தூரப் பூவாகத் திகழுகிறார் இசையில்

    பன் மொழியில் பாடினார் ஜானகியம்மா
    மென் மொழியில் பாடினார் மேதினியேவியக்க
    புன் முறுவல் முகத்தைக் காணமுடியாமல்
    இன்னிசையும் இப்போ ஏங்கி அழுகிறதே

    ஆயிரக் கணக்கில் அவர்பாடி நின்றார்
    அத்தனையும் இசையுலகின் சொத்தாகி இருக்கு
    இசையெனும் மொழியை ஏந்திநின்றார் அம்மா
    அவரிசையைக் கேட்பதற்கு அழைத்துவிட்டான் இறைவன்

    இசையுலகம் அழுகிறது இசைப்பிரியர் அழுகின்றார்
    எங்களம்மா ஜானகி இசையாகக் கரைந்துவிட்டார்
    அசையாத மனங்களையும் அசைத்திடுவார் இசையாலே
    அமருலகு சென்றுவிட்டார் அவரிசையை அளிப்பதற்கு!

    Share