அப்பா எனும் பொழுது ஆண்டவனே தெரிகிறார்!

மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ் மொழிக்கல்வி இயக்குநர்
மெல்பேண், ஆஸ்திரேலியா

அப்பா எனும் பொழுது
அன்பு தெரிகிறது
அப்பா எனும் பொழுது
கருணை தெரிகிறது
அப்பா எனும் பொழுது
ஆண்டவனே தெரிகிறார்
அப்பா எனும் வார்த்தை
அனைவர்க்கும் மந்திரமே !

அன்னையால் நாம் பிறந்தோம்
அப்பாதான் வேராவார்
அவரருகில் இல்லை என்றால்
அனைத்துமே அகன்றிடுமே
வழித் துணையும் அவரே
மருத்துவரும்  அவரே
மா மருந்தாய் இருந்து
காத்திடுவார் அப்பா !

பெருமை கொள்வார் அப்பா
பிறந்ததுமே பார்த்து
மழலை குரல் கேட்டு
மயங்கிடுவார் அப்பா
உச்சி தொட்டுக் கொஞ்சி
உருகிடுவார் அப்பா
உள்ள வரம் அனைத்தும்
பிள்ளையென நினைப்பார் !

தன் முகத்தைப் பார்த்து
மழலையைப் பார்ப்பார்
தனை மறந்து அப்பா
மூழ்கிடுவார் மகிழ்வில்
இறை கொடுத்த வரமாய்
எண்ணிடுவார் அப்பா
இவ் உலகு அவர்க்கு
இன்பமாய் தெரியும் !

பிள்ளை மனம் அறிந்து
பேணிடுவார் அப்பா
உள்ளம் எலாம் பிள்ளை
நினைவுடனே இருப்பார்
அள்ள அள்ள குறையா
அன்பினையே கொடுப்பார்
அவர் என்றும் துணையாக
ஆகியே இருப்பார்  !

கற்கின்ற கரு அதனை
கருத்திலே கொள்வார்
கல்வி கற்க வாழ்வினிலே
கண்ணாக இருப்பார்
தன் பிள்ளை ஆளுமையாய்
வரவெண்ணி உழைப்பார்
கற்றவர்கள் சபை அமரக்
காத்திருப்பார் அப்பா !

நல்லவனாய் வல்லவனாய் வர
அப்பா நினைப்பார்
எல்லையில்லாப் புகழ் பெறவே
எல்லாமே கொடுப்பார்
நல்ல பிள்ளை என்று
நாடெல்லாம் சொல்ல
நாழும்  எண்ணி அப்பா
வாழ்ந்திடுவார் மண்ணில்  !

Share

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *