மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா மேனாள் தமிழ் மொழிக்கல்வி இயக்குநர் மெல்பேண், ஆஸ்திரேலியா
அப்பா எனும் பொழுது
அன்பு தெரிகிறது
அப்பா எனும் பொழுது
கருணை தெரிகிறது
அப்பா எனும் பொழுது
ஆண்டவனே தெரிகிறார்
அப்பா எனும் வார்த்தை
அனைவர்க்கும் மந்திரமே !
அன்னையால் நாம் பிறந்தோம்
அப்பாதான் வேராவார்
அவரருகில் இல்லை என்றால்
அனைத்துமே அகன்றிடுமே
வழித் துணையும் அவரே
மருத்துவரும் அவரே
மா மருந்தாய் இருந்து
காத்திடுவார் அப்பா !
பெருமை கொள்வார் அப்பா
பிறந்ததுமே பார்த்து
மழலை குரல் கேட்டு
மயங்கிடுவார் அப்பா
உச்சி தொட்டுக் கொஞ்சி
உருகிடுவார் அப்பா
உள்ள வரம் அனைத்தும்
பிள்ளையென நினைப்பார் !
தன் முகத்தைப் பார்த்து
மழலையைப் பார்ப்பார்
தனை மறந்து அப்பா
மூழ்கிடுவார் மகிழ்வில்
இறை கொடுத்த வரமாய்
எண்ணிடுவார் அப்பா
இவ் உலகு அவர்க்கு
இன்பமாய் தெரியும் !
பிள்ளை மனம் அறிந்து
பேணிடுவார் அப்பா
உள்ளம் எலாம் பிள்ளை
நினைவுடனே இருப்பார்
அள்ள அள்ள குறையா
அன்பினையே கொடுப்பார்
அவர் என்றும் துணையாக
ஆகியே இருப்பார் !
கற்கின்ற கரு அதனை
கருத்திலே கொள்வார்
கல்வி கற்க வாழ்வினிலே
கண்ணாக இருப்பார்
தன் பிள்ளை ஆளுமையாய்
வரவெண்ணி உழைப்பார்
கற்றவர்கள் சபை அமரக்
காத்திருப்பார் அப்பா !
நல்லவனாய் வல்லவனாய் வர
அப்பா நினைப்பார்
எல்லையில்லாப் புகழ் பெறவே
எல்லாமே கொடுப்பார்
நல்ல பிள்ளை என்று
நாடெல்லாம் சொல்ல
நாழும் எண்ணி அப்பா
வாழ்ந்திடுவார் மண்ணில் !
பேராதனை பல்கலைகழக தமிழ் சிறப்புப் பட்டதாரி.அத்தோடு, கல்வியியல் துறையில் டிப்ளோமா, சமூகவியல் துறையில் டிப்ளோமா,கற்பித்தல் நுணுக்கத்தில் முதுகலை தத்துவமானி பட்டங்களையும் பெற்றவர்.கல்வித்திணைக்களத்தில் உதவிக் கல்விப் பணிப்பாளராகவும்,வட இலங்கை புனித பிரான்சிஸ் சேவியர் செமினறியில் பகுதி நேர தமிழ், இந்துகலாசார விரிவுரையாளராகவும், யாழ்/ பேராதனை பல்கலைக்கழகங்களின் வெளிவாரி பட்டப்படிப்புப்பிரிவில் தமிழ் விரிவுரையாளராகவும்,இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்தில் அறிவிப்பாளராகவும், நாடகத்தயாரிப்பாளராகவும் கடமையாற்றியுள்ளார். மாற்றம்,உதயன்,ஈழ நாடு, சிந்தாமணி, உதயசூரியன் இந்துசாதனம், மெல்லினம், உதயம்,பத்திரிகைகளில்.. கவிதை, கட்டுரை,சிறுகதை,விமர்சனம், ஆகியவற்றை எழுதியுள்ளார்.10க்கு மேற்பட்ட நூல்களையும்,100 ஓரங்க நாடகங்களையும்,10க்கு மேற்பட்ட வில்லுப்பாட்டுக்களையும்,20க்கு மேற்பட்ட நாட்டிய நாடகங்களையும், எழுதியுள்ளதோடு.. “முதற்படி” என்னும் குறுந்திரைப்படத்துக்கு கதை வசனம் எழுதி நடித்து 2007ல் அவுஸ்த்திரேலியாவில் மெல்பேண் நகரில் வெளியீடும் செய்யப்பட்டது.ஈழத்தில் பல ஸ்தலங்களுக்கு ஊஞ்ஞல் பாடியுள்ளதோடு.. அண்மையில் மேற்கு அவுஸ்த்திரேலியா பேர்த் மாநகரில் கோவில்கொண்டிருக்கும் பாலமுருகப்பெருமான் மீதும் ஊஞ்ஞல் பாடியுள்ளார்.2008ல் மதுரைமாநகரில் நடைபெற்ற அகில உலக சைவ சித்தாந்த மாநாட்டில் புராணப்பகுதிக்கு தலைவராகவும், ஆய்வுக் கட்டுரையாளராகவும் விளங்கியுள்ளார்.அண்மையில் ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் சென்று அங்கெல்லாம்.. தமிழ்,கலாசாரம், இந்துசமயம்,சம்பந்தமாக விரிவுரைகள் ஆற்றியுள்ளார்.லண்டனில் ஜி.ரி.வி. நிலையத்தார் சமயம்,தமிழர்பண்பாடுசம்பந்தமாக இரண்டு தினங்கள் பேட்டி கண்டு நேரடியாக ஒளிபரப்புச்செய்தனர்.
தற்போது மெல்பேண் தமிழ்ச்சங்கத்தின் ஆலோசகராகவும்,விக்டோரியா இந்து கல்விமையத்தின் ஆலோசகராகவும், தமிழ் அவுஸ்த்திரேலியன் சஞ்சிகையின் இணை ஆசிரியராகவும் விளங்குகிறார்.
பூர்வீகம் தமிழ்நாடு தாராபுரம். வளர்ந்தது, படித்தது, வேலை பார்த்தது, யாவுமே இலங்கையில்..தற்போது குடியுரிமை பெற்றிருப்பது அவுஸ்த்திரேலியாவில்.