Tag: இராமன்

  • சீதையின் சீற்றம்!

    சீதையின் சீற்றம்!

    ஒரு அரிசோனன்

    எனக்கு அலுத்துப்போய் விட்டது.  கோபம் கோபமாக வருகிறது! 

     12

     இப்பொழுது எங்கு பார்த்தாலும், “சீதைக்கு அநீதி இழைக்கப்பட்டு விட்டது.  அவள் அடிமைபோல நடத்தப் பட்டாள்!  கற்பிற்கு இலக்கணமாகத் திகழ்ந்த அவளுக்குக் காலம் முழுதும் கண்ணீரே பரிசாகக் கிடைத்து!  இப்படிப்பட்ட அநீதி இழைத்தவனை, கொடுமைக்காரனை, அவதார புருஷன் என்றும், நேர்மையின் மறு உருவம் என்றும், அறநெறியாளன் என்றும் எப்படிப் போற்றமுடியும்? 

    “மனைவியை மதிக்கத் தெரியாதவனை மகேசன் எ+னப் புகழலாமா?  ஒருமுறை தீயில் புகுந்து மீண்டவளை மீண்டும் எவனோ சொன்னான் என்று கானகம் அனுப்பிய கல்நெஞ்சனல்லவா இவள் கணவன்!  அப்படியாவது அவளைக் கானகத்தில் நிம்மதியாக இருக்கவிட்டனா?  மீண்டும் உன் கற்பை நிருபித்துக் காட்டு என்று சொல்லி, அவளை மனம் உடையச் செய்து, உயிர் துறக்கச் செய்துவிட்டானே!”  என்று எனக்குப் பரிந்து பேசுவதாகத் தங்களையே எனக்கு வழக்காடுவோராகச் செய்து கொள்வோர் சிலர்.

    இன்னும் சிலரோ, மனம் போனபோக்கில் இன்னும் என்னென்னவோ சொல்கிறார்கள். 

    “என்னடா இது, சீதை கற்பில் சிறந்தவள் என்று நாமே ஒப்புக்கொள்கிறோமே, அப்படிப்பட்ட கற்புக்கரசி தனது கணவனை மற்றவர் தூற்றுவதைத் தாங்குவாளா?” என்று கணநேரமும் கருத்தில் கொள்வதில்லை.

    கணவன் தன்மீது அவதூறு சொல்வது தவறு என்று தட்டிக்கேட்டுத் தீக்கடவுளுக்கே சவால் விட்டவள், தன் கணவன் மீது எப்பழியும் விழக்கூடாது என்று இவ்வுலகுக்குக் காட்டுவதே பெரிது, தனது உயிர் கூடத் துச்சமே என்று எண்ணிய பெண்குலப் பெருவிளக்கு, அவளது கணவரைக் கண்டவர் பழிப்பதை விரும்புவாளா என்று ஏன் அவர்களால் எண்ணிப்பார்க்கத் தொன்றவில்லை?

    எப்படி இருந்தாலும், நீங்கள் அனைவரும் என் அன்பான குழந்தைகளே ஆவீர்கள்!  தந்தை ஒழுக்கம் கற்பிக்கிறார் அன்று அவர்களுக்குத் தோன்றாது, தன்னைத் தண்டிக்கிறார், எனவே அவர் இரக்கமற்றவர் என்றே நினைப்பார்கள்!  தாயைத் தந்தை கடிந்து கொண்டால், அவரை அடிக்கக் கையை ஓங்கிக்கொண்டு வரும் அறியாக் குழந்தைகளாகத்தான் உங்களை எண்ணுகிறேன்.

    எனவே, என்னை யாரும் அடிமை செய்யவில்லை, ஆதிக்கம் செய்யவில்லை, செய்யவும் இயலாது, என் கருத்து என்ன என்று ஒரு தாயாக உங்களுக்கு விளக்கக் கடமைப்பட்டு உள்ளேன்!

    என் கண்ணினும் இனிய செல்வங்களே! கேளுங்கள்…

    …அதற்கு முன்னர், அறிவியலில் வல்ல குழந்தைகளுக்கு விஞ்ஞான விளக்கமும், ஆன்மீகத் துறையில் ஆர்வம் உள்ள சிறார்களுக்கு ஆன்மிகம் மூலமாகவும், பெண்மை ஆண்மையைவிட எவ்வளவு உயர்த்து, பெண்கள் இல்லாமல் ஆண்களே இல்லை,  ஆண்மையே இல்லை, இந்த உலகம், இயற்கை, படைப்பு எதுவுமே எல்லை என்பதையும் விளக்கிவிடுகிறேன்.

    மனிதர்களிடம் இருபத்திரண்டு பண்பு காரணித் தொகுப்புகளும் (genes), இரண்டு இனக்கீற்றுகளும் (choromosomes)  இருந்த போதிலும், மனிதக் கரு இரண்டு இனக்கீற்றுகள் மூலம் உருவாகிறது, அது ஆணின் ஒன்றும், பெண்ணின் ஒன்றும் இணைந்து உருவாவது என்பதைத் விஞ்ஞானம் அறிந்த குழந்தைகளுக்கு நான் விளக்கவேண்டியதில்லை. பெண் கரு இரண்டு x இனக்கீற்றுகளின் இணைப்பினாலும், ஆண் கரு ஒரு  x, ஒரு y இனக்கீற்றுகளின் இணைப்பினாலும் உருப்பெறுகின்றன என்பதும் நீங்கள் அறிந்ததே!

    பெண் x  இனக்கீற்றை மட்டுமே உண்டுபண்ணுகிறாள், ஆண் x மற்றும் y இனக்கீற்றை உண்டுபண்ணுகிறான்.  இதில் y இனக்கீற்று x இனக்கீற்றை விடச் சிறியது என்றும் என்னுடைய விஞ்ஞானக் குழந்தைகள் கண்டறிந்திருக்கிறார்கள்.

    x இனக்கீற்று 1098  மரபணுக்களையும், y இனக்கீற்று 26 மரபணுக்களையும் உள்ளடக்கியதில் இருந்து, பெண்ணை உருவாக்கும் x இனக்கீற்றின் உயர்வை உள்ளலாமே! [1]

    பெண்மையே பெரிது என்று அறிவியலிலிருந்து அறிந்துகொள்ளலாமே!

    இதுமட்டுமா!  ஆண் உள்ளர்ந்த ஆற்றல் (potential energy) உடையவன் என்றால், பெண் இயங்காற்றல் (kinetic energy) உடையவள்.  இதைதான் சிவம் என்றும், சக்தி என்றும் ஆன்மீகக் குழந்தைகள் இயம்புகிறார்கள்.  சிவத்திடம் எதையும் படைக்கும், காக்கும், அழிக்கும், மறைக்கும், அருளும் உள்ளார்ந்த ஆற்றல் இருந்தாலும், அதை உணரும் ஆற்றல் இல்லை.  சிவத்திடம் உணரும் ஆற்றலை (ego) உண்டுபண்ணி, அவனைத் அவன் தொழில்களை ஆற்றவைப்பவள் உமையம்மையான, பென்மையின் வடிவமாகிய சக்தியே என்று ஆதி சங்கரர்  இயம்பி உள்ளாரே! [2]

    சக்தியுடன் இணைந்த பின்னரே சிவம் ஆக்கும் திறனைப் பெறுகிறது;  அந்த இணைப்பின்றி சிவம் அசையக்கூட இயலாது.”

    என்றல்லவா அழுத்தம் திருத்தமாகப் பெண்மையைப் போற்றிப் புகழந்து உள்ளார்! [3]

    எனவேதானே, நாவுக்கு அரசரான அப்பர் பெருமானும் தாயை முதலில் வைத்து, சிவபெருமானை, “அம்மையே, அப்பா, ஒப்பிலா மணியே!” என்று போற்றுகிறார்.  “வேயுறு தோளி பங்கன்” என்று காழிப்பிள்ளையாரும் அப்பனின் உடலில் பாதியை அம்மை தனதாக்கியதை உணர்ந்து ஓதுகிறார்!

    பெண்மையைப் போற்றி, ஆண்கள் பெண்ணடிமை செய்வதாகக் கூறும் என் குழந்தைகளும், பழமையே சிறந்தது என்று ஆண்களை மேலாகப் பேசும் என் செல்வங்களும் ஒரு வடமொழி சுலோகத்தை மேற்கோள் காட்டுகிறார்கள்.

    பித்ருர் ரக்ஷதி பாலாப்யே, பர்த்ருர் ரக்ஷதி கெளமாரே |

    புத்ரோர் ரக்ஷதி வ்ருத்தாப்யே, ந ஸ்திரீ ஸ்வாதந்த்ரமர்ஹதி  ||

    தந்தை சிறுவயதில் காப்பாற்றுகிறார், கணவர் குமரிபருவத்தில் காப்பாற்றுகிறார்,

    பிள்ளை வயோதிகத்தில் காப்பாற்றுகிறான், பெண் தானாக இருக்கத் தகுதி பெறுவதில்லை.

    சரியாக, உள்ளார்ந்து பார்த்தால், பெண்களாகிய நாங்கள் ஆண்களை எங்கள் கட்டுப்பாட்டிற்குள் வைத்துவிட்டோம் என்பது இந்த சுலோகத்தில் இருந்து புரியும்.  பெண்களுக்குத் தொண்டு செய்வதே ஆண்களின் கடமை என்று சொல்லாமல் சொல்லுகிறது அல்லவா இந்தக் குறட்பா!  அதுதானே ஆண்களின் “கால்கட்டு” என்று வழங்கப்படுகிறது.  ஒருவரைக் காப்பாற்றவேண்டும் என்றால், காப்பாற்றுபவர் தனது சுதந்திரத்தையும்தானே இழக்கிறார்!

    ஆக, தந்தை, கணவன், மகன் இவர்கள் மூவரின் தானியங்கும் தகுதியையும் ஒரு பெண் கைப்பற்றி விடுகிறாள் என்பதுதானே இந்த சுலோகத்தின் தொடர்ப் பயன், இயல் விளைவு, பின்விளைவு எல்லாம்!

    எனவே, ஆண்களைத் தனது பிறப்பிலிருந்தே தனது ஆதிக்கத்தில் வைத்துவிடும் பெண்ணினத்தை ஆண்களால் அடிமை செய்துவிட இயலுமா?  நாணல் மாதிரி வளைந்து கொடுத்து வெள்ளத்திலும் நிலைத்துவிடும் பண்பு கொண்டவர் பெண்கள் – எதிர்த்து நின்று வீழ்பவர்கள் ஆண்கள்!  இது அவரவர் இயல்பு!  வளைந்து கொடுப்பதால் பெண்கள் வலிமை அற்றவர்கள் அல்ல.  வரட்டுப் பிடிவாதத்துடன் நிமிர்ந்து நிற்பதால் ஆண்கள் வலிமையிர் சிறந்தவரும் அல்ல.

    தத்துவம் போதும் என்று தோன்றி விட்டதல்லவா! எனவே,  என்னைப்பற்றிச் சொல்லப் போகிறேன்…

    …என் கணவர் இராமன் மனிதத் தாயான கோசலையின் வயிற்றில்தான் பிறந்தார்.  எனவே, அவர் பிறப்பு இயற்கைப் பிறப்பு.  ஆனால் என்னை அரசமுனியான ஜனகர் பிள்ளைவரம் வேண்டி நிலத்தை உழுதபோது நான் நிலத்திற்கு அடியில் கிடைத்தேன். [4]  எனவே, நான் மனிதக் குழந்தையாகத் தோன்றினாலும், மனிதப் பிறப்பு அல்ல, தெய்வப் பிறப்பு.  எக்குழந்தையால் மண்ணுக்கடியில் பலகாலம் புதைத்து இருக்க இயலும்?  அறிவுகொண்டு ஆலோசனை செய்யும் என் கண்மணிகளே, சிந்தித்துப் பாருங்கள்.

    நான் பிறப்பிலேயே உயர்ந்தவள்.  என்னால் மண்ணுக்கடியில் இருக்க இயலுமானால், என் திறன் எப்படிப்பட்ட உயர்வுள்ளதாக இருக்கவேண்டும்!  ஆகவே, பிறப்பிலேயே அதிக வலிமை படைத்தவளாகத்தான் பிறந்தேன்.

    என் மிகைப்பட்ட வலிமை விரைவிலேயே வெளிப்பட்டது.

    சிவபெருமானின் வில் இருந்த பெட்டியை ஐயாயிரம் வலிமை மிக்க வீரர்கள் இழுத்து வரவேண்டி இருந்தது! [5]  அப்படிப்பட்ட வில்லை என்னவர் இராமன் நின்று, எடுத்து, நிறுத்தி, நாண் ஏற்றித்தானே உடைத்தார்!  அதற்கு இரு கைகளும்தானே வேண்டி இருந்தது!  என்னைவிட எட்டு வயது பெரிய என்னவருக்கு இரண்டு கைகள் தேவைப்பட்டது.  ஆனால் பூப்பந்து விளையாடிய சிறுமியான நானோ, பந்து சிவபெருமானின் வில் இருந்த பேழைக்கடியில் சென்றபோது, குனிந்து அமர்ந்து, என் ஒரு கையினாலேயே வில் இருந்த பேழையை உயர்த்திப் பந்தை எடுத்தேன்.

    இப்போது சொல்லுங்கள், யாருக்கு வலிமை அதிகம்?  எனக்கா, என்னவருக்கா?  ஐயாயிரம் வீர்களுக்கு இல்லாத வலிமை என்னவருக்கு இருந்தது.  அவரைக் காட்டிலும் அதிக வலிமை எனக்கு இருந்தது.  இதை அறியாதவரா என்னவர் இராமன்!  அவரைவிட வலிமை உள்ள என்னை அடிமை செய்ய அவரால் இயலாது என்று அவருக்குத் தெரியாதா, என் கண்மணிகளே!

    “என்னருமைத் தாயான சீதையே!  அப்படியானால், அவர் சொன்னதை எல்லாம் நீங்கள் எவ்வாறு ஏற்றுக்கொண்டீர்கள்?  ஏன் இராவணனை உங்களைச் சிறைப் பிடித்து எடுத்துச் செல்ல விட்டர்கள்? உங்கள் கணவரது அவதூறான சொற்களை ஏன் பொறுத்துக்கொண்டீர்கள்? நாங்களாக இருந்தால் இப்படிப்பட்ட ஒரு கணவரை விட்டு நீங்கி இருப்போமே!

    “தீக்குளித்து உங்கள் தூய்மையத் துலங்கச் செய்த பின்னரும், உளவாளிகள் உரைத்த சொல்லுக்காக, கருவுற்றிந்த உங்களை இரக்கமின்றிக் காட்டுக்கு அனுப்பினாரே உங்கள் கணவர்!  பின்னர் தங்களை முனிவர் வால்மிகியின் ஆசிரமத்தில் கண்டும், மீண்டும் அப்பழுக்கற்றவள் என்று சான்று காட்டச் சொல்லித் தங்களை இவ்வுலகிலிருந்தே நீங்கச் செய்தாரே!  அப்படிக் கருணை என்பதே கடுகளவும் இல்லாதவராக உங்களவர் இருந்தும் தாங்கள் ஒரு உணர்ச்சியற்ற பதுமையைப் போலத்தானே இருந்து விட்டீர்கள்! பொங்கி எழுந்திருக்க வேண்டாமா?” என்றுதானே கேட்கிறீர்கள்!

    ஏன் என்று விளக்குகிறேன்.

    “நீ எங்கு வேண்டுமானாலும் செல்லலாம், இலக்குவனையோ, பரதனையோ, சுக்கிரீவனையோ, இன்னும் மனதில் தொன்றுபவருடன் நீ செல்லலாம்.” என்று என்னவர் சுட்டுப் பொசுக்கும் சொற்களால் என் இதயத்தை பிளக்க முற்பட்டபோது, நான் கலங்கி நின்றேனா!

    “ஒரு இழிந்தவன், ஒரு இழிந்தவளுடன் பேசுவதுபோல, சொல்லத்தகாத சொற்களை ஏன் சொல்லுகின்றீர்?” என்று எதிர்த் தாக்குதல்லவா தொடுத்தேன்! [6]

    यथा मे हृदयं नित्यं नापसर्पति राघवात् |

    तथा लोकस्य साक्षी मां सर्वतः पातु पावकः ||[7]  ६-११६-२५

    யதா மே ஹ்ருதயம் நித்யம் ந அபஸர்ப்பதி ராகவாது |

    ததா லோகஸ்ய ஸாக்ஷீ மாம் ஸர்வத: பாது பாவக: || 6-116-25

    நெருப்புக் கடவுளான அக்னியே! உள்ளத்தினாலோ, சொல்லாலோ, நான் களங்கப் பட்டவள் என்றால், கோபம் கொண்டு (என்னைச்) சுட்டு எரிப்பாயாக!

    என்று சவால் விட்டுத்தானே தீப் புகுந்தேன்!  அடிமை செய்யப்பட்டவளாக இருந்தால் அச்சப்பட்டு நடுங்கி இருந்திருக்க மாட்டேனா!

    அதுமட்டுமா!

    பொசுக்கும் செந்நாக்குகளை உடைய தீக்கடவுளே எனது கற்புக் கனலைத் தாங்கமுடியாது திணறி, என்னை வெளிக்கொணர்ந்து, என்னவரிடம் எனக்காக மன்றாடுகிறான்.  படைக்கும் கடவுளான பிரம்மன் முதல் முக்கண்ணன் வரை அனைவரும் என் பெருமையையே பேசுகிறார்கள் என்றால் அவர்களும் என்னைப் போற்றி, என் பெருமையை அறிந்துகொள்ளும் வண்ணம் என்னவருக்கு அறிவுரை கூறினார்கள் என்றுதானே பொருள்!

    கம்பநாட்டாரும்,

    அங்கி யான் என்னை இவ் அன்னை கற்பு எனும்

    பொங்கு வெந் தீச்சுடப் பொறுக்கிலாமையால்

    இங்கு அணைந்தேன் உறும் இயற்கை நோக்கியும்

    சங்கியா நிற்றியோ எவர்க்கும் சான்றுளாய். [8] – 9.3983

    என்று என் கற்பைப் போற்றுகிறார்.

    சுடுசொல் சொன்ன என்னவரை விட்டு நான் என் நீங்கவில்லை?  அப்படி நீங்கி இருந்தால் அவர் சொன்னது உண்மை என்று நான் ஒப்புக்கொண்டதாகத்தானே ஆகும்!

    “இராமனின் சுடுசொல் தாங்காமல் சீதை நீங்கியதுதான் சரி!” என்றா உலகம் கூறும்?

    “சீதை குற்றம் இழைத்தவள்.  எனவே, இராமனின் சொல்லில் இருக்கும் உண்மையைத் தாங்க மாட்டாமல் ஓடி விட்டாள்!” என்றுதானே என்னைத் தூற்றி இருக்கும்!  கற்புக்கரசி சீதை என்று புகழ்பவர்களே, இராமன் பெண்ணடிமை செய்தான் என்று எனக்குப் பரிந்துகொண்டு வருபவர்களே இன்று என்மீது வசை பாடி இருப்பார்கள்!

    இராவணனை அழிக்கவேண்டும் என்று அவதாரம் எடுத்தவர் என்னவர்.  அதை நான் செய்துவிட்டால் அவருக்கு என்ன பெருமை!  அவர் அவதாரம் எடுத்தது வீணாகி அல்லவா போயிருக்கும்!  எனவே நான் இராவணன் என்னைக் கவர்ந்து செல்ல அனுமதித்தேன்! எரிக்கடவுளே என் கற்புத் தீயைத் தாங்க இயலாதபோது, அரக்கன் இராவணனைச் சுட்டுப் பொசுக்க என்னால் இயலாதா?

    “நீங்கள் சொல்வதெல்லாம் சரிதான் அன்னையே!  இராமர் தங்களைத் தீப்புகும் நிலைமைக்குத் தள்ளியது என்ன நீதி?” என்றுதானே கேட்கிறீர்கள்!

    அன்புள்ள ஒரு கணவன் என்ற முறையில் அவர் அதைச் சொல்லி இருந்தால் அது தவறுதான்.  அப்படி அவர் சொல்ல நேர்ந்ததற்குத்தான் என்னிடம் சரியாக வாங்கிக் கட்டிக்கொண்டார்.

    त्वया तु नरशार्दूल क्रोधमेवानुवर्तता |

    लघुनेव मनुष्येण स्त्रीत्वमेव पुरस्कृतम् || [9]  ६-११६-१४

    த்வயா து நரஸா’ர்தூல க்ரோதமேவ அனுவர்த்ததா |

    லகுனேவ மனுஷ்யேண ஸ்த்ரீத்வமேவ புரஸ்க்ருதம் || 6-116-14

    மாந்தரில் புலிக்கு நிகரானவரே!  வலிமையற்ற மனிதனைப்போல பெண்மைக்கே முக்கியத்துவம் அளித்து, உம்மால் கோபமே கைக்கொள்ளப்பட்டது. – 6.116.14

    என்னவரை வலிமையற்றவர் என்றும், ஆண்மையைக் கைக்கொள்ளாது பெண்மையைக் கைக்கொண்டு, சினம் காட்டுகிறீர்கள் என்று சாடினேன்.  என் உரிமையை அப்படித்தான் நிலை நாட்டினேன்.

    இருப்பினும், அவர் ஒரு மன்னவர்.  மன்னவரின் மானம் காக்க நடத்தப்படும் போரில் பல்லாயிரக் கணக்கானவர்கள் மடிகிறார்கள்.  அந்தப் போர்வீரர்கள் தங்களது தனிப்பட்ட பகைக்காவா எதிரிப் போர்வீரனை வீழ்த்துகிறார்கள்!  இல்லையே!  மன்னனுக்காகத்தானே!

    ஆகவே, ஒரு மன்னனுக்கு மனைவியைவிட மக்களே பெரிது!  மக்களின் மதிப்பே பெரிது. எனவே மன்னனை ஒரு மனைவியின் கணவனாக மட்டும் அளவிடக்கூடாது, என் குழந்தைகளே!

    “அரசியைக் கவர்ந்து சென்ற அரக்கனை அரசர் அழித்தது சரியே!  ஆயினும், மாற்றான் ஒருவன் மனையில் மாதக்கணக்கில் இருந்தவளை நமது மன்னர் எப்படி ஏற்றுக்கொள்ளலாம்?” என்றுதான் மக்கள் முழங்குவார்கள் என்பதை என்னவர் அறிவார்.

    அவருக்காக உயிரையும் உவப்புடன் கொடுக்கும் மக்கள், தன் மீது பழி சொல்லக்கூடாது என்பதில் அரசனுக்கு ஆர்வம் இருக்கவேண்டும்;  எனவே அரசி தன் தூய்மையை துலங்கவைக்கவேண்டும் என்பது அவர் மனதில் உயர்ந்து ஓங்கி இருந்தது.

    மக்களுக்காகத்தான் மகேசன்.  அவனுக்காக மக்களல்ல என்ற நெறியை உணர்ந்து அதன்படி நடந்துகொண்டவர் என்னவர்.  அவரைப் போற்றாமல் நான் எப்படித் தூற்றுவேன், அல்லது மற்றோரை – அவர்கள் என் மக்கட்செல்வங்களாக இருந்தாலும் – எப்படித் தூற்றவிடுவேன்?

    மீண்டும் ஒரு ஒற்றன் கொண்டுவந்த தகவலைக் கேட்டு ஏன் என்னைக் காதுக்கு அனுப்பினார்?

    ஒரு சிறு தீப்பொறி ஒரு பெரிய காட்டையே கொளுத்திவிடும்.  எனவே, அது பெரிதாவதற்குள் அதை அணைத்துவிட வேண்டும்.  இன்று ஒருவன்தானே பேசுகிறான் என்று வாளாவிருந்தால், சில நாள்களில் பலர் பேசுவார்கள்.  “சீதை தீப்புகுந்ததை நாம் நேரிலா பார்த்தோம்!  ஏதோ கண்கட்டி வித்தை செய்து, அப்படி ஒரு செய்தியை உண்டாக்கி விட்டார்கள்!” என்று புறம் பேசத் துவங்குவார்கள்.  காது, கண், மூக்கு வைத்து அவர்களே ஒரு கதையையும் உண்டாக்கி விடுவார்கள்.

    அதனாலேயே அவர் மீண்டும் என்னைக் காட்டுக்கு அனுப்பினார்.

    “உங்களைத்தானே காட்டுக்கு அனுப்பினார்!  தான் சுகவாசியாகத்தானே இருந்தார்!  அவரும் பதவியைத் துறந்து உங்களுடன் கானகம் ஏகி இருக்கலாமே!” என்று நீங்கள் கேட்கும் வினாவுக்கு இதுவே எனது விளக்கம்:

    அவர் அப்படிச் செய்திருந்தால், “அவருக்காக ஆயிரக்கணக்கானவர் இராவணனை எதிர்த்துப் போர் புரிந்தோமே!  கடலில் பாலம் சமைத்தோமே!  இது வீண்தானா?  விழலுக்கு இறைத்த நீர்தானா?” என்று தூற்றி இருக்க மாட்டார்களா?

    அவர் காலடியே சுவர்க்கம் என்று தன்னையே அவருக்காகக் கொடுத்த அனுமனே அவரை விட்டல்லவா நீங்கி இருப்பான்!  அவருக்காகப பதினான்கு ஆண்டுகள் தந்து, தனது அரச போகத்தையும், இல்லாளையும் துறந்து, தமையனுக்குத் தொண்டு செய்த இலக்குவன் அவரை உயர்வாக மதித்திருப்பானா?

    என் அருமைச் செல்வங்களே!  அறிவில் சிறந்த என் கண்மணிகளே!  சிந்தித்துப் பாருங்கள்!  அரசன் என்று ஆகிவிட்டால் தனது நலத்தைவிட மக்களிடம் நற்பெயர் வாங்குவதே தலையாயதாகி விடுகிறது.

    என்னவரும் சுகபோகம் அனுபவிக்கவில்லை.  என் நினைவிலேயே ஏங்கினார்.  அந்நிலையில் அது ஒன்றைத்தானே அரசரான அவரால் செய்ய இயலும்?  நினைத்திருந்தால் வேறு மனைவியரைக் கைக்கொண்டு இருந்திருக்கலாம்.  அதை அன்றைய நெறியும் அரசர்களுக்கு அனுமதித்தது.  அவர் அதைச் செய்யவில்லையே!  என்மேல் இருந்த காதலால்தானே அதைச் செய்தார்!  காதலனை நினைத்து ஏங்கும் கன்னியரைப் பற்றி நிறையக் காவியங்கள் புனைவதைப் படித்திருப்பீர்கள்.  காதல் மனைவியே நினைத்துக் கற்புடன் இருந்த கணவர் என்னவர்தானே!

    கடைசியில், நான் என் உயிர் துறந்தேன், என்னவர் மீண்டும் என்னைத் தூயவள் என்று நிரூபிக்கும் நிலைமைக்குத் தள்ளினார் என்ற கேள்வியும் எழத்தான் செய்கிறது.

    முனிவர் வால்மீகி என் செல்வங்களாகிய லவனும், குசனும் அரியணை ஏறி, ரகு வம்சத்தின் மேன்மையைத் தொடர வேண்டும் என்று விரும்பினார்.  என்னவர் என்னை மீண்டும் அப்படியே எப்படி ஏற்பார்?  ஆண்டுகள் கடந்தால் அநியாயப் பழி நீங்கி விடுமா?  மீண்டும் தோண்டி எடுத்துப் பழி போடமாட்டர்களா?

    எனவேதான் என்னவர் அமைதி காத்தார்.

    எனக்கும் அலுத்து விட்டது.  அவரும் அமைதி பெறவேண்டும், நானும் மீண்டும், மீண்டும் வீண்பழியிலிருந்து விலகவேண்டும் என்று தோன்றி விட்டது.  ஆகவே, நான் எங்கிருந்து வந்தேனோ, அந்த நில அன்னையிடமே சரணடைந்தேன்.

    “என் நில அன்னையே!  நான் உண்மையிலேயே என் கணவருக்கு கற்புடைய மனைவியாக விளங்கி இருந்தால், உன் சீதையை இந்த வாழ்வுச் சுமையிலிருந்து விடுவித்துவிடு!” [10]

    என்று கோரினேன்.  அவளும் என்னை அன்புடன் அழைத்துச் சென்றாள்.

    நான் தற்கொலை செய்துகொண்டேன் என்று நீங்கள் பலர், பல மொழிகளிலும் எழுதி வருகிறீர்கள்.  உங்களை ஒன்று கேட்கிறேன், என் செல்வங்களே!  தீயினாலேயே தீண்ட இயலாத நான் மலையிலிருந்து வீழ்ந்தால்தான் இறந்துவிடுவேனா, அல்லது நான் விரும்பாமல் பூமி பிளந்துதான் என்னைக் கொண்டுபோக இயலுமா?  நன்கு சிந்தியுங்கள். மண்ணில் தோன்றிய மாபெரும் பிறப்பு என்னுடையாது.  நானே என் அன்னையான மண்ணைச் சரணடைந்தேன்.

    இலங்கையில் தீயில் புகும் முன்னர் நான் வாழவேண்டும் என்று விரும்பினேன்.  எனவே என் கற்புக்கனல் தீக்கடவுளைச் சுட்டுப் பொசுக்கியது.  அவனும் என்னைத் திரும்ப என்னவரிடம் ஒப்படைத்தான்.  மீண்டும் பழி சொல்லி என்னைக் கானகத்திற்கு அனுப்பச் செய்த, என் அருமையை அறியாத மாந்தர்கள் நடுவில் நான் வாழ விரும்பவில்லை.  என் இரு கண்ணின் மணிகளை என்னவரிடம்  இணைத்துவிட்டு, என் அன்னையின் மடியில் தஞ்சம் புகுந்தேன்.  அவ்வளவே!…

    என் மனதில் உள்ளதை என் செல்வங்கள் உங்களிடம் பகிர்ந்து கொண்டதும் என் சீற்றம் தணிந்து விட்டது.  என் குழந்தைகளான நீங்கள் பதினாறும் பெற்றுப் பெருவாழ்வு வாழ வாழ்த்துகிறேன்.

     

    ************************************************

    [1]  Chromosomes:  Definitions and Structure, by Jessie Szalay, Live Science, February 19, 2013

    [2]  ஆதி சங்கரர் அருளிய சௌந்தரிய லகரி:  சுலோகங்கள் 1 – 41

    [3]  சௌந்தரிய லகரி, முதல் சுலோகத்தின் தமிழாக்கம்

    [4]  வால்மீகி இராமாயணம் – பாலகாண்டம் –  சர்க்கம் 66 – சுலோகங்கள் 13-16

    [5]  வால்மீகி இராமாயணம் – பாலகாண்டம் –  சர்க்கம் 67 – சுலோகங்கள் 3 & 4

    [6]  வால்மீகி இராமாயணம் – உயுத்த காண்டம், சர்க்கம் 116, சுலோகம் 5

    [7]  வால்மீகி இராமாயணம் – உயுத்தகாண்டம் –  சர்க்கம் 116 – சுலோகம் 25

    [8]  கம்பராமாயணம் – மீட்சி படலம், செய்யுள் 3983

    [9]  வால்மீகி இராமாயணம் – உயுத்தகாண்டம் –  சர்க்கம் 116 – சுலோகம் 14

    [10]  வால்மீகி இராமாயணம் – உத்தரகாண்டம்

    Share
  • கம்பனும் வால்மீகியும் – இராமாயண இலக்கிய ஒப்பீடு – 4

    கம்பனும் வால்மீகியும் – இராமாயண இலக்கிய ஒப்பீடு –  4

    ஒரு அரிசோனன்

    kamban valmiki 4b

    சீதை அப்பழுக்கற்றவள் என்று அறிந்தும் அவளை தீக்குளிக்கும் நிலைக்கு இராமன் ஏன் தள்ளினார் என்று இன்றுவரை பலவிதமான வாதங்கள், ஆராய்ச்சிகள், பாத்திரப் பகுப்புகள் (character analysis) செய்யப்பட்டுக் கொண்டுதான் வருகின்றன. இராமாயணம் இவ்வையகத்தில் உள்ளவரை இவை ஓயப்போவதில்லை. அதில் அதிக நேரம் செலவிடாது, அந்நிகழ்ச்சியைக் கவிமுனி வால்மீகியும், கவிச்சக்கரவர்த்தி கம்பனும் எப்படிக் கையாண்டிருக்கிறார்கள் என்பதைக் காண்போம்.

    பள்ளி இறுதி ஆண்டில் நான் வடமொழி வகுப்பில் பயின்ற பகுதிதான் வால்மீகி இராமாயணத்தில் யுத்த காண்டத்தில் வரும் இராம-சீதை வாக்குவாதம். இதையே இராமாயணத்தின் மிகச் சிறந்த பகுதியாக நான் எண்ணுகிறேன். சீதையின் வாதத் திறமையும், அவளது கற்பின் சீரிய மென்மையும் இங்குதான் புலப்படுத்தப் படுகிறது. என்னைப் பொறுத்தவரையில் இப்பகுதி சீதையின் பொற்பை, கற்பை, சிறப்பை, உலகுக்கு எடுத்துக் காட்டவே வடிவமைக்கப்பது என்றே தோன்றுகிறது.

    …இராவணன் போரில் வீழ்ந்து படுகிறான். அனுமன் சீதாப்பிராட்டிக்கு இந்த நற்செய்தியைக் கூறி, அவளை, இராமன் இருக்குமிடம் அழைத்து வருகிறான். அண்ணலும், அன்னையும் மீண்டும் ஒன்று சேரும் நன்நிகழ்ச்சியைக் காண மன்னவரும், விண்ணவரும், தானவரும் ஒருசேர அங்கு குழுமி இருக்கின்றனர்…

    வால்மீகியின் யுத்தகாண்டத்தின் 115வது சர்க்கத்தில் துவங்குவோம்:

     

    இருபத்திமூன்று சுலோகங்களில் இராமன் சீதையிடம் சொன்ன வார்த்தைகளை மொழிமாற்றம் செய்யும் பொது என் விரல்கள் தடுமாறுகின்றன. என் கண்கள் குளமாகின்றன.  கற்பில் சிறந்த சீதைக்கா இந்நிலை ஏற்பட்டது என்று என் மனம் கலங்குகிறது. என் மனத்தைக் கல்லாக்கிக் கொண்டு தொடர்கிறேன்.

    तां तु पार्श्वे स्थितां प्रह्वां रामः संप्रेक्ष्ये मैथिलीम् |

    हृदयान्तर्गतं भावं व्याहर्तुमुपचक्रमे || ६-११५-१

    தாம் து பார்ச்வே ஸ்திதாம் ப்ரஹ்வாம் ஸம்ப்ரேக்ஷ்யே மைதிலீம் |

    ஹ்ருதய அந்தர்கதம் பாவம் வ்யாஹர்த்தும் உபசக்ரமே || 6-115-1

    एषासि निर्जिता भद्रे शत्रुं जित्वा रणाजिरे |

    पौरुषाद्यदनुष्ठेयं मयैतदुपपादितम् || ६-११५-२

    ஏஷாஸி நிர்ஜிதா பத்ரே சத்ரும் ஜித்வா ரணாஜிரே |

    பௌருஷாது  யத் அனுஷ்ட்டேயம் மயை: தது உபபாதிதம் || 6-115-2

    गतोऽस्म्यन्तममर्षस्य धर्षणा संप्रमार्जिता |

    अवमानश्च शत्रश्च युगपन्निहतौ मया || ६-११५-३

    கதோஅஸ்ம்யந்தமமர்ஷஸ்ய தர்ஷணா ஸம்ப்ரமார்ஜிதா ||

    அவமானச்ச சஸ்த்ரச்ச யுகபன்னிஹதௌ மயா || 6-115-3

    अद्य मे पौरुषं दृष्टमद्य मे सफलः श्रमः |

    अद्य तीर्णप्रतिज्ञोऽहं प्रभवाम्यद्य चात्मनः || ६-११५-४

    அத்ய மே பௌருஷம் திருஷ்டம் அத்ய மே ஸபல: ஸ்’ரம: |

    அத்ய தீர்ணப்ரதிஞோ அஹம் பிரபவாம்யத்ய சாத்மன: || 6-115-5

    தன் அருகில் தலை குனிந்து நின்ற மைதிலியை நன்றாகப் பார்த்த இராமனோவேன்றால், தன் இதயத்தினுள் சென்ற உணர்ச்சிகளைச் சொல்ல ஆரம்பித்தார்.

    நல்லாளே! ஆண்மையால் எதைச் செய்யவேண்டுமோ, என்னால் அது போர்க்களத்தில் எதிரியை வென்று (வெல்வதன் மூலம்) செய்யப்பட்டதால், (நீ) மீட்கப்ப்பட்டு இருக்கிறாய். தாக்குதல் முடிந்து, கோபத்தின் முடிவை அடைந்து இருக்கிறேன்.

    என்னால் எதிரிகளும், அவச்சொல்லும் உடனே அழிக்கப்பட்டார்கள். இப்பொழுது என்னுடைய ஆண்மை (அனைவராலும்) பார்க்கப்பட்டது. இன்று என் முயற்சி வெற்றி அடைந்தது.

     இன்று நான் வாக்குறுதியைக் காப்பாற்றி உள்ளேன்.  இப்பொழுது என் ஆத்மாவுக்கே மன்னனாகி இருக்கிறேன். — 6.115.1-4

    … இப்படிச் சொன்ன இராமன், அனுமன் முதல் விபீஷணன் வரை தனக்கு உதவி செய்த ஒவ்வொருவரையும் குறிப்பிட்டு, அவர்களின் முயற்சி பயனளித்தது, தன் மானத்தையும், தனது குலத்திற்கு அவப்பெயர் ஏற்படாதவாறு காத்துக்கொள்ளவும், இராவணனை வதைத்து உன்னை மீட்டேன் என்று சீதையிடம் சொல்லுகிறார்…

    पश्यतस्तां तु रामस्य समीपे हृदयप्रियाम् |

    जनवादभयाद्राज्ञो बभूव हृदयं द्विधा || ६-११५-११

    பஸ்யதஸ்தாம் து ராமஸ்ய சமீபே ஹ்ருதயப்ப்ரியாம் |

    ஜனவாத பயாது ராஜோ பபூவ ஹ்ருதயம் த்விதா || 6-115-11

    அருகில் (இருந்த) நெஞ்சிற்கு இனியவளான அவளைப் பார்த்தும், மக்களின் தூற்றத்தால் (நேரும்) அச்சத்தால் அரசர் இராமனுடைய நெஞ்சம் இரண்டாகியது. – 6.115.11

    …தன் மனத்தைக் கல்லாக்கிக்கொண்டு, நல்லாள் சீதையை நோக்கிக் கடும் சொற்களை வீச ஆரம்பித்தார்…

    यत्कर्तव्यं मनुष्येण धर्षणां प्रतिमार्जता |

    तत्कृतं रावणं हत्वा मयेदं मानकाङ्क्क्षिणा || ६-११५-१३

    யத்கர்த்தவ்யம் மனுஷ்யேண தர்ஷணாம் ப்ரதிமார்ஜதா |

    தத்க்ருதம் ராவணம் ஹத்வா மயேதம் மானகாங்விக்ஷணா || 6-115-13

    இந்த மானக் கேட்டினால் (ஏற்பட்ட) இழிவைத் துடைக்க, மனிதனால் எக்கடமை (செய்யப்பட) வேண்டுமோ, அது இராவணனைக் கொன்று என்னால் செய்யப்பட்டது – 6.115.13

    विदितश्चास्तु भद्रं ते योऽयं रणपरिश्रमः |

    सुतीर्णः सुहृदां वीर्यान्न त्वदर्थं मया कृतः || ६-११५-१५

    விதிதச்சாஸ்து பத்ரம் தே யோஅயம் ரணபரிச்ரம: |

    ஸுதீர்ண: ஸுஹ்ருதாம் வீர்யான்ன த்வதர்த்தம் மயா க்ருத:|| 6-115-15

    रक्षता तु मया वृत्तमपवादम् च सर्वतः |

    प्रख्यातस्यात्मवंशस्य न्यङ्गं च परिमार्जता || ६-११५-१६

    ரக்ஷதா து மயா வ்ருத்தமபவாதம் ச ஸர்வத: |

    ப்ரக்யாதஸ்யாத்மவம்சஸ்ய ந்யங்கம் ச பரிமார்ஜதா || 6-115-16

    प्राप्तचारित्रसंदेह मम प्रतिमुखे स्थिता |

    दीपो नेत्रातुरस्येव प्रतिकूलासि मे दृढम् || ६-११५-१७

    ப்ராப்த சாரித்ர சந்தேஹ மம ப்ரதிமுகே ஸ்த்திதா |

    தீபோ நேத்ராதுரஸ்யேவ ப்ரதிகூலாஸி மே த்ருடம் || 6-115-17

    तद्गच्छ त्वानुजानेऽद्य यथेष्टं जनकात्मजे |

    एता दश दिशो भद्रे कार्यमस्ति न मे त्वया || ६-११५-१८

    தத்கச்ச த்வாநுஜானே அத்ய யதேஷ்டம் ஜனகாத்மஜே |

    ஏதா தச திசோ பத்ரே கார்யமஸ்தி ந மே த்வயா || 6-115-18

    कः पुमांस्तु कुले जातह् स्त्रियं परगृहोषिताम् |

    तेजस्वी पुनरादद्यात् सुहृल्लेख्येन चेतसा || ६-११५-१९

    க: புமாம்ஸ்து குலே ஜாதஹ ஸ்த்ரியம் பரக்ருஹோஷிதாம் |

    தேஜஸ்வீ புனராதத்யாது ஸுகல்லேக்யேன சேதஸா || 6-115-19

    எந்தப் போர் முயற்சி சிறப்பாக வீரமிக்க என் நண்பர்களின் உதவியுடன் என்னால் செய்யப்பட்டதோ, அது உன் பொருட்டு அல்ல என்று தெரிந்து கொள்).  நீ நன்றாக இருப்பாயாக!

    நற்பெயருக்கு எல்லா இடத்திலிருந்தும் (வரும்) இழுக்கையும், புகழ்வாய்ந்த என் குலத்தின் (மீது ஏற்படும்) குற்றச்சாட்டையும் துடைத்தெறிய என்னால் காப்பாற்றிக் கொள்ளப்பட்டது.

    நடத்தையில் சந்தேகம் அடைந்தவளாக  என் முன் நிற்கும் (நீ) கண் பார்வை அற்றவன் முன் இருக்கும் விளக்கைப் போல என் (மனதைப்) புண்படுத்துகிறாய்.

    ஜனகரின் மகளே! நல்லாளே! எனக்கு உன்னால் ஒரு காரியமும் ஆக வேண்டியதில்லை. இப்பொழுது உன் விருப்பப்படி பத்துத் திசைகளில் எங்கும் செல்ல (உன்னை) அனுமதிக்கிறேன்.

    அந்நியன் வீட்டில் இருந்த பெண்ணை நற்குலத்தில் பிறந்த உயர்ந்தவன் எவன் ஆவலுடன் திரும்ப ஏற்றுக்கொள்வான்? – 6.115.15-19.

    இவ்வாறு சீதையைப் பார்த்துக் கடும் சொற்களை அள்ளி வீசிய இராமன், வெந்த புண்ணில் வேலைச் சொருகுவது போன்ற வார்த்தைகளைச் சொன்னார்….

    तदद्य व्याहृतं भद्रे मयैतत् कृतबुद्धिना |

    लक्ष्मणे वाथ भरते कुरु बुद्धिं यथासुखम् || ६-११५-२२

    ததத்ய வ்யாஹ்ருதம் பத்ரே மையைதது க்ருதபுத்தினா |

    லக்ஷ்மணே வாத பரதே குரு புத்திம் யதாஸுகம் || 6-115-22

    நல்லவளே! ஆகையால், தீர்மானமான நெஞ்சுடன் என்னால் இவ்விதம் விளக்கப்பட்டது.  எது நலம் அளிக்குமோ, (அவ்வாறு) இலக்குவனையோ, பரதனையோ, உன் மனதில் கொள்.  – 6.115.22

    … அதோடு விடவில்லை. “சத்ருக்னனையோ, சுக்ரீவனையோ, அரக்கன் விபீஷணனையோ, உன் மனத்திற்கு இசைந்தவனையோ, நீ கொள்ளலாம்; மனதுக்கு இனியவளாகவும், மிகுந்த அழகுடனும் உள்ள உன்னைத் தன்னிடத்தில் சிறை வைத்திருந்த இராவணன் உன் பிரிவை அதிக நாள் பொறுத்து இருந்திருக்கமாட்டான்.” என்றும் கூரிய அம்புகளை அள்ளி வீசினார்…

    ततः प्रियार्हश्रवणा तदप्रियं प्रियादुपश्रुत्य चिरस्य मैथिली |

    मुमोच बाष्पं सुभृशं प्रवेपिता गजेन्द्रहस्ताभिहतेव वल्लरी || ६-११५-२५

    தத: ப்ரியார்ஹச்ரவணா தது அப்ரியம் ப்ரியாது உபஸ்’ருத்ய சிரச்ய மைதிலீ |

    முமோச பாஷ்பம் ஸுப்ருசம் ப்ரவேபிதா கஜேந்த்ரஹஸ்தாபிஹதேவ வல்லரீ || 6-115-25

    தனக்குப் பிரியமானவரிடமிருந்து அன்பான சொற்களையே கேட்டுவந்த மைதிலி, இப்படிப்பட்ட நேசமற்ற சொற்களைக் (கேட்டு), நெடுநேரம் மிகவும் நடுங்கினாள். யானையின் துதிக்கையால் பிய்த்தெறியப்பட்ட கொடியைப்போல (ஆகி) கண்ணீரைச் சொரிந்தாள்.  – 6.115.25

    இதற்கு அடுத்த சர்க்கம் முழுவதையும் சீதை, இராமனுக்கு அளிக்கும் பதிலாகப் பதிவு செய்திருக்கிறார் மாமுனி வால்மீகி. கொண்டவனால் எந்தவிதமான குற்றச்சாட்டைக் கேட்கக் கூடாதோ, அதையே பெருங்கூட்டத்திற்கு முன் கேட்டவுடன், அவமானத்தால் கூனிக் குறுகிய சீதை, கண்ணீரால் குளிப்பாட்டப்பட்ட தன் முகத்தை துடைத்துக்கொண்டு, தடுமாறும் குரலில் பதில் கூறினாள் என்று எழுதுகிறார்…

    किं मामसदृशं वाक्यमीदृशं श्रोत्रदारुणम् |

    रूक्षं श्रावयसे वीर प्राकृतः प्राकृताम् इव || ६-११६-५

    கிம் மாமஸத்ருஸ’ம் வாக்யமீத்ருஸ’ம் ஸ்ரோத்ரதாருணம் |

    ருக்ஷம் ச்ராவயசே வீர ப்ராக்ருத: ப்ராக்ருதாம் இவ || 6-116-5

    पृथक्स्त्रीणां प्रचारेण जातिं त्वं परिशङ्कसे |

    परित्यजेमां शङ्कां तु यदि तेऽहं परीक्षिता || ६-११६-७

    ப்ருதக்ஸ்த்ரீணாம் ப்ரசாரேண ஜாதிம் த்வம் பரிசங்கசே |

    பரித்யஜே மாம் சட்காம் து யதி தே அஹம் பரீக்ஷிதா || 6-116-5

    यद्यहं गात्रसंस्पर्शं गतास्मि विवशा प्रभो |

    कामकारो न मे तत्र दैवं तत्रापराध्यति || ६-११६-८

    யத்யஹம் காத்ர ஸம்ஸ்பர்ஸ’ம் கதாஸ்மி விவசா ப்ரபோ |

    காமகாரோ ந மே தத்ர தைவம் தத்ராபராத்யதி || 6-116-5

    मदधीनं तु यत्तन्मे हृदयं त्वयि वर्तते |

    पराधीनेषु गात्रेषु किं करिष्याम्यनीश्वरा || ६-११६-९

    மததீனம் து யத்தன்மே ஹ்ருதயம் த்வயி வர்த்ததே |

    பராதீனேஷு காத்ரேஷு கிம் கரிஷ்யாமயனீஸ்வரா || 6-116-9

    सहसंवृद्धभावाच्च संसर्गेण च मानद |

    यद्यहं ते न विज्ञाता हता तेनास्मि शाश्वतम् || ६-११६-१०

    ஸஹஸம்வ்ருத்தபாவாச்ச ஸம்ஸர்கேன ச மானத |

    யத்யஹம் தே ந விஞ்ஞாதா ஹதா தேனாஸ்மி  சாஸ்வதம் || 6-116-10

    வீரரே! இழிந்தவன் (ஒருவன்) இழிந்தவளிடம் (பேசுவதைப்) போல, கேட்பதற்குக் தகாத, இப்படிப்பட்ட கடும் சொற்களை ஏன் என்னைக் கேட்க வைக்கிறீர்?

    தீநடத்தை கொண்ட பெண்களைப் பற்றிக் கேள்விப்பட்டு, பெண் குலத்தையே நீர் நம்ப மறுக்கிறீர்! உம்மால் தேர்வு செய்யப்பட்ட என்னை ஒருவேளை நீர் சந்தேகப்பட்டால், (அதை) விட்டுவிடும்.

    பிரபுவே! ஒருவேளை நான்  (இராவணனின்) உடலின் தொடுதலை அடைந்திருந்தால்  அது வேறுவழியில்லாமல் ஏற்பட்டது. என் விருப்பத்தினால் அல்ல. அங்கு விதிதான் குற்றவாளிவாகும்.

    என்னுடையதான இதயம் என் வசமானது. அது உம்மிடமே உள்ளது. உதவியற்றவளும், அன்னியன் வசத்தில் இருந்த என் உடலை நான் என்ன செய்ய இயலும்?

    கௌரவத்தை அளிப்பவரே! உடன் வளர்ந்த உணர்வினாலும், உடன் பழகியும், நான் உம்மால் அறிந்து கொள்ள இயலாதவள் ஆனாது போனால் (என் நடத்தையைப் பற்றி உம்மால் அறிந்துகொள்ள இயலாது போனால்), அதனால் நிரந்தரமாக அழிந்துபோனேன். – 6.116.5-10

    …”என்னைத் தேடி இலங்கைக்கு அனுமனை அனுப்பினீரே, அப்பொழுதே என்னை விட்டுவிட்டதாக ஏன் தெரிவிக்கவில்லை. அப்படிச் செய்தி அனுப்பி இருந்தால், வானரர் தலைவனான அனுமனின் கண் எதிரேயே என் உயிரை விட்டிருப்பேனே! நீரும், உமது நண்பர்களும் உங்கள் உயிரைப் பணயம் வைத்து இந்த தேவையில்லாத போரை நடத்தி இருக்க வேண்டியதில்லையே!” என்று வாதிடுகிறாள்…

    त्वया तु नरशार्दूल क्रोधमेवानुवर्तता |

    लघुनेव मनुष्येण स्त्रीत्वमेव पुरस्कृतम् || ६-११६-१४

    த்வயா து நரசார்தூல க்ரோதமேவ அனுவர்த்ததா |

    லகுனேவ மனுஷ்யேண ஸ்த்ரீத்வமேவ புரஸ்க்ருதம் || 6-116-14

    மாந்தரில் புலிக்கு நிகரானவரே!  வலிமையற்ற மனிதனைப்போல பெண்மைக்கே முக்கியத்துவம் அளித்து, உம்மால் கோபமே கைக்கொள்ளப்பட்டது. – 6.116.14

    …ஜனகர் தன்னை வளர்த்தாலும், தான் நிலத்திலேயே பிறந்ததாகவும், அப்படிப்பட்ட சிறந்த பிறப்பையும் மதிக்காமல், இளமையிலேயே தன்னைக் கைப்பிடித்தும், தனது பக்தியையும், கற்பையும் புறக்கணித்ததாக இராமனைக் குற்றம் சாட்டுகிறாள் சீதை.,.

    चितां मे कुरु सौमित्रे व्यसनस्यास्य भेषजम् |

    मिथ्यापवादोपहता नाहं जीवितुमुत्सहे || ६-११६-१८

    சிதாம் மே குரு ஸௌமித்ரே வ்யஸனஸ்யாஸ்ய பேஷஜம் |

    மித்யாபவாதோபஹதா நாஹம் ஜீவிதும்  உத்ஸஹே || 6-116-18

    अप्रीतेन गुणैर्भर्त्रा त्यक्ता या जनसंसदि |

    या क्षमा मे गतिर्गन्तुं प्रवेक्ष्ये हव्यवाहनम् || ६-११६-१९

    அப்ரீதேன குணைர்பர்த்ரா த்யக்தா ஜான்ஸம்ஸதி |

    யா க்ஷமா மே கதிர்கந்தும் ப்ரவேக்ஷ்யே ஹவ்யவாஹனம் || 6-116-19

    …”சுமித்திரையின் மகனே (இலக்குவா)! இந்த துயரத்திற்கான அருமருந்தான சிதையை எனக்காகச் செய். பொய்க்குற்றம் சாட்டப்பட்ட நான் வாழ விரும்பவில்லை. மக்கள் சபை முன்னால், என் குணங்களால் நிறைவு பெறாத, கணவரால் கைவிடப்பட்ட நான் செல்லக்கூடிய (ஒரே) வழியான நெருப்பில் புகுவேன்”. – 6.116.18&19

     हि रामं तदा कश्चित्कालान्तकयमोपमम् |

    अनुनेतुमथो वक्तुं द्रष्टुं वा प्यशकत्सुहृत् || ६-११६-२२

    ஹி ராமம் ததா கஸ்சித்காலாந்தகயமொபமம் |

    அனுனேதுமதோ வக்தும் த்ருஷ்டும் வா ப்யசகத்ஸுஹ்ருது || 6-116-22

    அப்பொழுது  காலனைப்போன்று (தோன்றிய) இராமனையோ அங்கு யாரும் சொல்லவோ, பார்க்கவோகூட திறனற்றவர் ஆயினர். – 6.116.22

    यथा मे हृदयं नित्यं नापसर्पति राघवात् |

    तथा लोकस्य साक्षी मां सर्वतः पातु पावकः || ६-११६-२५

    யதா மே ஹ்ருதயம் நித்யம் ந அபஸர்ப்பதி ராகவாது |

    ததா லோகஸ்ய ஸாக்ஷீ மாம் ஸர்வத: பாது பாவக: || 6-116-5

    எப்பொழுது என் இதயம் இராகவனிடமிருந்து அனுதினமும் நகர(பிரிய)வில்லையோ அப்பொழுது உலகத்தின் சாட்சியான அக்னி என்னைப் பாதுகாக்கட்டும்.  – 6.116.25

    …எப்படிச் சொல்லிவிட்டு சீதை கொழுந்துவிட்டு எரியும் தீயில் புகுந்து விடுகிறாள்.  அதைக்கண்டு மனிதர், வானரர், வானவர், அரக்கர் அனைவரும் கூக்குரல் இடுகிறார்கள்…

    ततो हि दुर्मना रामः श्रुत्वैवम् वदतां गिरः |

    दध्यौ मुहूर्तं धर्मात्मा बाष्पव्याकुललोचनः || ६-११७-१

    ததோ ஹி துர்மனா ராம: ஸ்’ருத்வைவம் வததாம் கிர: |

    தத்யௌ முஹூர்த்தம் தர்மாத்மா பாஷ்பவ்யாகுலலோசன: || 6-117-1

    அப்பொழுது இப்படிப்பட்ட  கூக்குரலிட்ட சொற்களைக் கேட்டு, அறநெறி உள்ளத்தவரான (தர்மாத்வான) இராமன் நீர் நிறைந்த கண்களுடனும், கலங்கிய மனத்துடனும் சற்று சிந்தித்தார். – 6.117.1

    …சிதையைச் சிதற அடித்துக்கொண்டு, சீதையுடன் தீக்கடவுளான அக்னி தோன்றினான்…

    नैव वाचा न मनसा नैव बुद्ध्या न चक्षुषा |

    सुवृत्ता वृत्तशौण्डीर्यं न त्वामत्यचरच्छुभा || ६-११८-६

    நைவ வாசா ன மனஸா நைவ புத்யா ந சக்ஷுஷா |

    ஸுவ்ருத்தா வ்ருத்தஸௌண்டீர்யம் ந த்வாமத்யசரச்சுபா || 6-118-6

    சொற்களாலோ, மனதாலோ, நடத்தையாலோ, கண்களாலோ, நன்னடத்தையுள்ள, நல்லொழுக்கமுள்ள (இந்த) மங்கலச் செல்வி (சீதை) உன்னை விட்டு விலகவில்லை. – 6.118.6

    kamban valmiki 4a

    … சீதை அப்பழுக்கற்றவள் என்று அக்கினித் தேவன் ஏழு சுலோகங்களில் இராமனுக்கு எடுத்து இயம்புகிறான். அதைச் செவியுற்ற இராமன் தீக்கடவுளுக்கு பதில் அளிக்கிறார்…

    अनन्यहृदयां भक्तां मचत्तपरिवर्तिनीम् |

    अहमप्यवगच्छामि मैथिलीं जनकात्मजाम् || ६-११८-१५

    அனன்யஹ்ருதயாம் பக்தாம் மசத்தபரிவர்த்திநீம் |

    அஹமப்யவகச்சாமி மைதிலீம் ஜனகாத்மஜாம் || 6-118-15

    इमामपि विशालाक्षीं रक्षितां स्वेन तेजसा |

    रावणो नातिवर्तेत वेलमिव महोदधिः || ६-११८-१६

    இமாமபி விசாலாக்ஷீம் ரக்ஷிதாம் ஸ்வேன தேஜஸா |

    ராவணோ நாதிவர்த்தேத வேலமிவ மஹோததி: || 6-118-16

    प्रत्ययार्थं तु लोकानां त्रयाणाम् सत्यसंश्रयः |

    उपेक्षे चापि वैदेहीं प्रविशन्तीं हुताशनम् || ६-११८-१७

    ப்ரத்யயார்த்தம் து லோகானாம் த்ரயாணாம் ஸத்யஸம்ஸ்’ரய: |

    உபேக்ஷே சாபி வைதேஹீம் ப்ரவிஸ’ந்தீம் ஹுதாஸ’நம் || 6-118-17

    ஜனகரின் மகளான மைதிலியை மாற்றாரிடம் நெஞ்சத்தை (செல்ல விடாதவளும்), பக்தி உள்ளவளும், என் நினைவில் சுற்றிவருபளுமாக நானும் அறிகிறேன்.

    பெருங்கடல் (தன் கரையை எப்படித்) தாண்டமுடியாதோ, (அதேபோல) இந்த அகண்ட கண்களை உடையவளும், தன் (கற்பின்) வலிமையால் (தன்னை) காத்துக்கொள்பவளுமான (சீதை), இராவணனால் பலவந்தப் படுத்த முடியாதவள்.

    சத்தியத்தில் தஞ்சம் புகுந்த மூன்று உலகங்களையும் நம்பவைப்பதற்காகவே நெருப்பில் புகுந்த வைதேகியை அலட்சியம் செய்தேன். – 6.118.15-17

    … பிரம்மாவும், சிவனும், மற்ற எல்லா தேவர்களும் இராமனுக்கு அவர் யார் என்பதைச் சொல்லி, சீதை இலக்குமி என்றும், அவளது கற்பு நிகரில்லாதது என்றும், அவளை ஏற்கவேண்டும் என்றும் உரைக்கிறார்கள்.  இராமனின் தந்தை தயரதனும் வந்து மகனுக்கும், மருமகளுக்கும் வாழ்த்துத் தெரிவிக்கிறார். புஷ்பக விமானத்தில் இராமன் சீதையுடன் அயோத்தியை அடைகிறார்…

     sri-sita-rama-lakshmana-han a

    கம்பராமாயணத்தில், யுத்தகாண்டத்தில், மீட்சிபடலத்தில் துவங்குவோம்:

    … இராவணன் அழிந்ததும், சீதையை அலங்கரித்து அழைத்து வா என்று இராமன் ஆணையிடவே, அனுமன் அசோகவனத்தில் கற்புக்கரசி சீதையைக் கண்டு விவரம் தெரிவிக்கிறான். அசோகவனத்தில் எப்படி இருந்தேனோ, அதைத்தான் தன் கணவரும், விண்ணவரும், முனிவர்களும், மற்றவரும் காண வேண்டும், அலங்கரித்துக்கொண்டு செல்வது முறையாகாது என்று சீதை மறுக்கிறாள்.  விபீடணும் இது இராமபிரானின் கட்டளையாகும் என்று எடுத்துரைக்கவே, சீதை சம்மதிக்கிறாள். அரம்பை, திலோத்தமை முதலான தேவமங்கையர் சீதையை நன்கு அலங்கரிக்கின்றனர்.  வீடணனும், சீதையை இராமனிடம் அழைத்துச் செல்கிறான்…

    சீலமும் காட்டி என் கணவன் சேவகக்

    கோலமும் காட்டி என் குலமும் காட்டி இஞ்

    ஞாலமும் காட்டிய கவிக்கு நாள் அறாக்

    காலமும் காட்டும்கொல் என் கற்பு என்றாள்.  – 9.3948

    நல் ஒழுக்கமும் காட்டி, என் கணவருக்கு (இராமனுக்கு) பணி செய்த விதத்தையும் தெரிவித்து, என் குலத்தையும் (வழக்கமான கற்பு நெறிப்படி நான் ஒழுகுவதையும் இராமனுக்குத்) எடுத்துச் சொல்லி, (சிறைப்பட்டிருந்த எனக்கு) இந்த (வெளி) உலகையும் காண்பித்த வானரப் பெருந்தகைக்கு (அனுமனுக்கு) எனது கற்பின் (வலிமை) நாள் இறுதி இல்லாத காலத்தையும் (சிரஞ்சீவித் தன்மையையும்) கொடுக்கும் என்றாள் (சீதை). 

    … இவ்வாறு அனுமனைச் சிரஞ்சீவியாக இருக்கும்படி ஆசீர்வதித்த சீதை, சிறை நீங்கிய மகிழ்ச்சியுடனும், நெடுநாள் பிரிந்திருந்த கணவரைக் காணும் ஆவலுடனும் வந்து, இராமனை வணங்கி நின்றாள்…

    அணங்குறு நெடுங் கண்ணீர் ஆறு வார்வுற

    வணங்கு இயல்மயிலினை கற்பின் வாழ்வினை

    பணம் கிளர் அரவு என எழுந்து பார்ப்புறா. – 9.3953

    நீண்ட கண்ணீர் ஆறு பெருக, கற்பின் உறைவிடமான, மயிலுக்கு இணையான, (தன்னை) வணங்கும் பெண்ணை (சீதை) படம் எடுத்து எழுந்து நிற்கும் பாம்பைப் போல எழுந்து (சீற்றத்துடன்) பார்த்தான் (இராமன்).

    ஊன் திறம் உவந்தனை ஒழுக்கம் பாழ்பட

    மாண்டிலை முறை திறம்பரக்கன் மாநகர்

    ஆண்டு உறைந்து அடங்கினை அச்சம்தீர்ந்து இவண்

    மீண்டது என் நினைவு எனை விரும்பும் என்பதோ – 9.3954

    இறைச்சியின் சுவையை விரும்பினாய். (உன்) கற்புநெறி கெட்டபின்பும் (நீ) இறக்க வில்லை. நீதிநெறி தவறி (வாழ்ந்த) அரக்கனின் (இராவணன்) பெரிய நகரத்தில் (இலங்கையில், அவனுக்கு) அடங்கி வாழ்ந்து வந்தாய். (அவன் அழிந்ததால்) பயம் நீங்கி எந்த நினைப்பில் இங்கு மீண்டும் வந்தாய்? (நான்) உன்னை விரும்பி ஏற்றுக்கொள்வேன் என்பதாலோ?

    உன்னை மீட்பான் பொருட்டு உவரி தூர்த்து ஒளிர்

    மின்னை மீட்டுறு படை அரக்கர் வேர் அற

    பின்னை மீட்டு உறு பகை கடந்திலேன் பிழை

    என்னை மீட்பான் பொருட்டு இலங்கை எய்தினேன். – 9.3955

    “உன்னை மீட்டுச் செல்வதற்காக கடலின்மீது பாலம் கட்டி, மின்னலைப் போன்ற ஒளி பொருந்திய (வஜ்ராயுதத்தை உடைய இந்திரனை) தோற்கடித்த அரக்கனை (இந்திரஜித்தை) வேரோடு அழிக்கவில்லை. அப்படியானால் எதற்காக என்றால், என்மீது ஏற்பட்ட பழியைப் போக்குவதற்காகவே, இலங்கைக்கு வந்தேன்.

    மருந்தினும் இனிய மன்னுயிரின் வான் தசை

    அருந்தினையே நறவு அமைய உண்டியே

    இருந்தனையே இனி எமக்கு என்பன

    விருந்து உளவோ உரை வெறுமை நீங்கினாய் – 9.3956

    “(என்பால் கொண்டிருந்த) அன்பை நீக்கினாய். சுவர்க்கத்தின் அமுதை விடச் சிறந்தது என்று இவ்வுலகத்து உயிர்களின் சதையை (இறைச்சியை) உண்டாயே. மது அருந்தினாயே. இனிமேல் எனக்கு என்ன விருந்து படைக்கப் போகிறாய்? சொல்.

    பெண்மையும் பெருமையும் பிறப்பும் கற்பு எனும்

    திண்மையும் ஒழுக்கமும் தெளிவும் சீர்மையும்

    உண்மையும் நீ எனும் ஒருத்தி தோன்றலால்

    வண்மை இல் மன்னவன் புகழின் மாய்ந்தவால். – 9.3958

    “பெண்ணாகப் பிறப்பதனால் உள்ள பெருமையும், கற்பு என்ற வலிமையையும், ஒழுக்கமும், தெளிந்த குணமும், புகழும், உண்மையாக (நடந்து கொள்ளுதலும்) (சீதை) என்ற நீ ஒருத்தி பிறந்ததால், வலிமை இல்லாத மன்னவனின் புகழ் மறைத்து போவது போல மறைத்து போய்விட்டன.

    அடைப்பர்  ஐம் புலன்களை ஒழுக்கம் ஆணியாச்

    சடைப் பரம் தகைந்ததூர் தகையின் மாதவம்

    படைப்பர் வந்து இடை ஒரு பழி வந்தால் அது

    துடைப்பார் தம் உயிரோடும் குலத்தின் தோகையார். – 9.3959

    “நற்குலத்தில் பிறந்த மங்கையர் தனது ஐந்து புலன்களையும் அடக்கி வாழ்வார். கற்பொழுக்கம் சிதையா வண்ணம், தலை முடியை வாராது, சடையைத் திரித்து பெரிய தவத்தில் ஈடுபடுவர். இடையில் ஒரு பழி வந்து நேர்ந்தால் தமது உயிரைக் கொடுத்தாவது அதைப் போக்கிக் கொள்வார்கள்.

    யாது யான் இயம்புவது உணர்வை ஈடு அறச்

    சேதியாநின்றது உன் ஒழுக்கச் செய்தியால்

    சாதிஆல் அன்று எனின் தக்கது ஓர் நெறி

    போதிஆல் என்றனன் புலவர் புந்தியான். – 9.3960

    “இனி நான் சொல்ல என்ன இருக்கிறது? உன்னுடைய (தீய)ஒழுக்கச் செயல் (என்) உள்ளத்தை ஈடு கட்டமுடியாத அளவுக்கு அறுத்துத் தள்ளுகிறது.. (நீ) சாவாயாக!  இல்லாவிட்டால் உனக்கு எது நல்லது என்று படுகிறதோ, அங்கு போவாயாக!” என்று ஆன்றோர் நினைவில் (குடியிருக்கும் இராமன்) சொன்னான்.

    அதைக்கேட்ட அனைவரும் கதறி அழுதனர். தன் கணவருடன் சேரப் போகிறோம் என்ற ஆவலுடனும், மகிழ்ச்சியுடன் ஓடோடியும் வந்த சீதையின் கண்களில் நீர் ஆறாகப் பெருகியது…

    இற்றது போலும் யான் இருந்து பெற்ற பேறு

    உற்றதால் இன்று அவம் என்றென்று ஓதுவாள். – 9.3964

    எத் தவம் எந் நலம் என்ன கற்பு நான்

    இத்தனை காலமும் உழந்த ஈது எலாம்

    பித்து எனல் ஆய் அவம் பிழைத்ததாம் அன்றே

    உத்தம நீ மனத்து உணர்ந்திலா மையால். – 9.3966

    நான் (கற்புடன்) இருந்து பெற்ற பயன் இவ்வளவுதான். (அது) அழிந்தது போலும்.  இன்று எனக்கு பழி ஏற்பட்டது என்று (மேலும்) சொன்னாள்.

    “உத்தமரே! இத்தனை காலமாக நான் மிகவும் வருத்தி எத்துணை தவம், எத்தனை நற்செயல்கள், சிறந்த கற்பறங்கள் செய்தும், உம மனம் அதை உணர்ந்து பார்க்க இயலாது போனதால், (அவை) பைத்தியக்கரச் செயல்கள் என்று ஆகிப் பயனின்றிப் போயினவே.

    ஆதலின் புரத்தின் யாருக்காக என்

    கோது அரு தவத்தினைக் கூறிக் காட்டுகேன்

    சாதலின் சிறந்தது ஒன்று இல்லை தக்கதே

    வேத நின் பணி அது விதியும் என்றானள். – 9.3969

    இளையவன்தனை அழைத்து இடுதி தீயென

    வளை ஒலி முன் கையாள் வாயின் கூறினாள்

    உளைவறு மனத்தவன் உலகம் யாவுக்கும்

    களைகணைத் தொழ அவன் கண்ணின் கூறினான். – 9.3970

    “வேதத்தின் உருவே! எனவே, வெளியார் யாருக்காக எனது குற்றமற்ற சிறந்த தவத்தினை (கற்பு நெறியை) உரைத்துக் காட்டப் போகிறேன்? இறப்பை விடச் சிறந்தது ஒன்றும் இல்லை. உமது கட்டளையும் (எனக்குப்) பொருத்தமானதே! அது (என்) விதியும் (ஆகும்)” என்றாள்.

    முன் கைகளில் (மணிக்கட்டில்) ஒலி எழுப்பும் வலைகளை அணிந்த (சீதை), இளையோனான (இலக்குவனை) அழைத்து, தீயை மூட்டு என்று (அனைவருக்கும் கேட்கும்படி) வாயால் சொன்னாள்.  (இதைக் கேட்டு) மன உளைச்சல் கொண்ட (இலக்குவன்), உலகம் அனைத்துக்கும் புகலிடம் அளிக்கும் (இராமனைத்) வணங்கி (நோக்க), அவனும் தன் கண்களாலேயே (பதில்) கூறினான்.

    … எனவே, வீரம் மிகுந்த இலக்குவன், விம்மி வரும் அழுகையுடன், சாத்திரங்கள் சொல்லிய விதிப்படி சிதை அமைத்து நெருப்பை மூட்டினான்…

    தீயிடை அருகுறச் செண்டு தேவர்க்கும்

    தாய் தனிக் குருகலும் தரிக்கிலாமையால்

    வாய் திறந்து அரற்றின மறைகள் நான்கொடும்

    ஒய்வு இல் நல் அறமும் மற்று உயிர்கள் யாவையும். – 9.3972

    (மன்னுயிர்கள் அனைத்துக்கும் மட்டுமல்லாது) விண்ணவர்களுக்கும் தாயான (சீதை) அந்த நெருப்பின் அருகில் தாயகச் சென்றதைக் தாங்க இயலாது நான்கு வேதங்களும், (என்றுமே) ஓய்ந்து போகாத நன்னெறிகளும், மற்ற உயிர்கள் எல்லாமும் தங்கள் வாயைத் திறந்து கதறின.

    மனத்தினால் வாக்கினால் மறு உற்றேனெனின்

    சினத்தினால் சுடுதிஆல் தீச் செல்வா என்றாள்

    புனத் துழாய்க் கணவற்கும் வணக்கம் போக்கினாள். – 9.3976

    நீந்த அரும் புனலிடை நிவந்த தாமரை

    ஏய்ந்த தன் கோயிலே எய்துவா ளெனப்

    பாய்ந்தனள் பாய்தலும்  பாலின் பஞ்சு எனத்

    தீய்ந்தது அவ் எரி அவள் கற்பின் தீயினால். – 9.3977

    “நெருப்புக் கடவுளான அக்னியே! உள்ளத்தினாலோ, சொல்லாலோ, நான் களங்கப் பட்டவள் என்றால், கோபம் கொண்டு (என்னைச்) சுட்டு எரிப்பாயாக!” என்று சொல்லி, துழாய் மாலையை அணிந்திருக்கும் தந்து கணவருக்கும் வணக்கம் செலுத்தினாள்.

    நீந்திச் செல்லுவதற்கும் கடினமான நீரின் நடுவில் விழித்து மலர்ந்திருக்கும் தாமரை பொருந்திய தனது கோவிலை (இலக்குமியான சீதை) அடைவோம் என்று (நெருப்பில்) பாய்ந்தாள்.  அப்படிப் பாய்ந்தவுடன், அவளுடைய கற்புத் தீயினால் அந்த நெருப்பும் பாலின் (நிறத்தை ஒத்த) பஞ்சாகப் பற்றி எரிந்தது.

    … சீதையின் கற்புக் கனலைத் தாங்க இயலாத கனல் தேவன், இரு கரங்களையும் கூப்பி, மாசற்ற சீதையைத் தன் கனல் பிழம்புகலான கையினால் தூக்கி வெளி வந்தான்.  சீதை மேல்தான் உனக்குச் சினம்.  என்மேல் உனக்கு என்ன கோபம்?  நான் உனக்கு என்ன செய்தேன்? இந்தக் கற்புக்கரசியின் கற்புக் கனலால் என்னை எரிக்க முற்படுகிறாயே?” என்று இராமனிடம் முறையிட்டான்.  “நீ யார்? தீய நெறி உள்ள இவளை எரிக்காது ஏன் பாது காத்தாய்?” என்று இராமன் கேட்டதும்,….

    அங்கி யான் என்னை இவ் அன்னை கற்பு எனும்

    பொங்கு வெந் தீச்சுடப் பொறுக்கிலாமையால்

    இங்கு அணைந்தேன் உறும் இயற்கை நோக்கியும்

    சங்கியா நிற்றியோ எவர்க்கும் சான்றுளாய். – 9.3983

    ஐயுறு பொருள்களை ஆக இல் மாசு ஒரீஇக்

    கையுறு நெல்லியம் கனியின் காட்டும் என்

    மெய்யுறு கட்டுரை கேட்டும் மீட்டியோ

    பொய் உறா மாருதி உறையும் போற்றலாய். – 9.3985

    “அனைவருக்கும் சாட்சியானவனே! நான் தீக்கடவுள் (அக்னி பகவான்).  இந்த அன்னையாம் (சீதையின்) கற்பு என்ற கொழுந்து விட்டு எரியும் கனல் என்னைச் சுட்டெரிக்கவே, அதைப் பொறுத்துக்கொள்ளும் தன்மை இல்லாததால் நான் அணைந்து போன தன்மையை இங்கு பார்த்த பின்னும், நீ (சீதாப் பிராட்டியிடம்) ஐயம் கொண்டு நிற்கலாமா?

    சந்தேகம் கொண்ட பொருள்களின் (நிலையை) அறிந்து, (அந்த சந்தேகம்) என்னும் குற்றத்தை நீக்கி, உண்மை இது என்று (உள்ளங்)கையின் மீது இருக்கும் நெல்லிக்கனியைப் போலச் சுட்டிக்காட்டும் என் உரையைக் கேட்டும் (சீதையைத்) திரும்பப் பெற்றுக்கொள்ள மாட்டாயா? பொய்யே பேசாத அனுமனின் சொல்லையும் மதிக்க மாட்டாயா?

    பெய்யுமே மழை புவி பிளப்பதன்றியே

    செய்யுமே பொறை அறம் நெறியில் செல்லுமே

    உய்யுமே உலகு இவள் உணர்வு சீறினால்

    வய்யுமேல் மலர்மிசை அயனும் மாயுமே. – 9.3987

    இவள் (கற்பிற் சிறந்த சீதை) மனதில் (துன்பமடைந்து) சீற்றத்தில் சபித்தால், மழை பெய்யுமா? இந்த பூமி பிளந்து (எல்லாவற்றையம் விழுகி விடுவதைத் தவிர) வேறு எதையும் செய்யுமா?  தர்மம் நன்னெறியில் செல்லுமா? உலகு உய்யுமா? தாமரை மலர்மேல் வீற்றிருக்கும் பிரம்மனும் இறந்துபடுவானே?

    …சீதையின் பெருமைகளையும், அவளது கற்பையும் புகழ்ந்து அவளை ஏற்றுக்கொள்ளும்படி சொல்லி, அக்னி, அவளை இராமனின் அருகின் கொண்டு வந்து சேர்த்தான்…

    அழிப்பு இல சான்று நீ உலகுக்கு ஆதலால்

    இழிப்பு இல சொல்லி நீ இவளை யாது ஓர்

    பழிப்பு இலள் என்றனை பழியும் இன்று இனிக்

    கழிப்பிலள் என்றனன் கருணை உள்ளத்தான். – 9.3989

    கருணை உள்ளம் கொண்டவன் (இராமன்), தீக் கடவுளைப் பார்த்து), “அழிவே இல்லாத நீ உலகிற்கே சாட்சியாக ஆனபடியால், அவதூறு இல்லாதா சொற்களைச் சொல்லி, நீ இவளை ஒரு குற்றமும் இல்லாதவள் என்று கூறினாய். (சீதை) இனிமேல் (என்னால்) நீக்க முடியாதவள் என்றான்.

    …ஏனைய விண்ணவர்கள் அனைவரும், நான்முகனும், முக்கண்ணனும் இராமனிடம், அவன் பரம்பொருள் என்ற உண்மையை விளக்குகின்றனர்.

    ஒப்பீடு:

    இராமன் சீதையின் மீது வீசிய கடும் சொற்களை கம்பர், வால்மீகி இருவரும, விவரித்ததைப் கண்ணுறும் பொது நமக்கே மேனி சிலிர்த்து, உள்ளம் நடுங்குகிறது என்றால், சீதாப்பிராட்டி எப்படிக் கலங்கி விதிர்விதிர்த்துப்போய் இருப்பாள் என்பதை அவர்கள் இருவருமே நமக்கு நன்கு படம் பிடித்துக் காட்டி இருக்கிறார்கள்.

    இராமனின் நேர்மையையும், அறநெறியைக் காக்கத் தன் உயிருக்கு உயிரானவளையுமே துறக்க முடிவு செய்து, அவளை அப்பழுக்கு அற்றவள் என்று உலகுக்குக் காட்ட விழையும் அவர் உள்ளத்தையும் அறியாதவர்கள் மட்டுமே இராமனின் மீது காழ்ப்புணர்வு கொள்வார்கள்.  இரக்கமற்றவன் என்று தூற்றுவார்கள்.  பெண்ணடிமை செய்த பெரும்பாவி என்று ஏசுவார்கள்.

     இராமாயணம் முழுவதையும் படித்துப்பார்க்காமல், ஒருசில வரிகளை மட்டுமே எடுத்துக்கொண்டு, பல்லாயிரம் ஆண்டுகள் முன்பு இருந்தவர்களை, இக்காலத்தைய அளவுகோல் கொண்டு அளப்பவர்களே! என்ன சொன்னால் சீதை தன்னைக் குற்றமற்றவள் என்று நிரூபிப்பாள், அவள் கற்புக்கரசி என்று உலகம் போற்றும் என்பதை நன்கு அறிந்துதான், தன் இதயத்தில் குருதி பொங்க அச் செயலைச் செய்தார் என்று அறியாதவர்களே!

    மன்னனுக்கு மக்கள் நலனும், மக்களின் நல்லெண்ணமுமே மனைவியைவிட மேல் என்பதை அறியாதவர்கள் என்று எண்ணி அவர்களின் பழிச் சொற்களை விட்டுவிடவேண்டியதுதான். அவற்றை மறந்துவிட வேண்டியதுதான்.

    அதைக் கம்பர் எப்படி வெளிப்படுத்துகிறார்?  தானே, சீதையை நன்கு அலங்கரித்துக் கூட்டி வருமாறு அனுமனுக்கும் வீடணனுக்கும் கட்டளை இட்டுவிட்டு, விண்ணழகிககளால் அலங்கரிக்கப்பட்டு தன் எதிரில் நின்ற சீதையைப் பார்த்து, “நன்னெறியுடன் ஒழுகும் பெண்டிர் கற்பொழுக்கம் சிதையா வண்ணம், தலை முடியை வாறாது, சடையைத் திரித்துப் பெருந்தவத்தில் ஈடுபடுவர்” என்று இராமன் சாடுவதாக எழுதியுள்ளார்.

    வால்மீகியோ, ”நெஞ்சிற்கு இனியவளான அவளைப் பார்த்ததும், மக்களின் தூற்றத்தால் நேரும் அச்சத்தால் இராமனுடைய நெஞ்சம் இரண்டாகியது.” என்கிறார்.

    இராமனுக்கு சீதையைப் பற்றி என்ன நினைப்பு இருந்தது என்பதை உள்ளங்கை நெல்லிக்கனி ஆக்கி விட்டு, மாற்றான் இடத்தில் இருந்தவளை மீண்டும் ஏற்றால் உலகம் என்ன அவதூறு செய்யும் என்பதை நினைத்து உள்ளம் உடைந்தான் என்று இராமனின் நெஞ்சக் கிளர்ச்சியை விவரிக்கிறார்.

    ஆக, இருவருமே இராமனுக்கு சீதையின் பால் உள்ள பாசத்தையும், அசையா நம்பிக்கையையுமே நமக்கு உணர்த்துகிறார்கள்.

    இருப்பினும், எதைச் சொன்னால் சீதை உயிரைத் துறந்தாவது தனது தூய்மையை உணர்த்த முற்படுவாள் என்பதில்தான் சிறிது வேறுபடுகிறார்கள்.

    “இலக்குவனையோ, பரதனையோ, இன்னும் வேறு எவரை வேண்டுமானாலும் உன் மனதில் கொள்!  மனதுக்கு இனியவளாகவும், மிகுந்த அழகுடனும் உள்ள உன்னைத் தன்னிடத்தில் சிறை வைத்திருந்த இராவணன் உன் பிரிவை அதிக நாள் பொறுத்து இருந்திருக்கமாட்டான்.” என்று சொன்னதாக வால்மீகி கூறுகிறார். இப்படிச் சொன்னால் சீதை உயிரையும் ஒரு பொருட்டாகக் கருதமாட்டாள் என்று உணர்த்துகிறார்.

    “நீ சாவாயாக!  இல்லாவிட்டால் உனக்கு எது நல்லது என்று படுகிறதோ, அங்கு போவாயாக!” சீதையைச் செத்து மடி என்று, சந்தேகத்திற்கு இடமில்லாமல் என்ன செய்யவேண்டும், என்ன செய்தால் அவளது கற்பு நிரூபணம் ஆகும் என்று தெரிவிப்பதாகக் கம்பர் கவி புனைகிறார்.

    இதைக் கேட்டதும் சீதையின் எதிர்ச் செயல் எப்படி இருக்கிறது என்பதில் இருவரும் நன்றாகவே மாறுபடுகிறார்கள்.

    சீதை மனம் சோர்வுற்று, நொந்துபோய், தனது கற்பும், பொற்பும், சீலமும், பித்துப்பிடித்த செயலுக்கு ஒப்பானதே என்று வருந்தி, “நான் உள்ளத்தினாலோ, சொல்லாலோ, நான் களங்கப் பட்டவள் என்றால், என்னைச் சுட்டு எரிப்பாயாக!” என்று தீப் புகுவதாக கம்பர் கசிந்து கவி நவின்றிருக்கிறார்.

    வால்மீகியின் சீதை, தன்னைக் குளிப்பாட்டிய கண்ணீரைத் துடைத்துக்கொண்டு வீராங்கனையாகச் சீறி எழுகிறாள்.

    அதை மிகவும் சிறப்பாக சீதையின் பதிலின் முதல் சுலோகத்திலேயே தந்திருக்கிறார் மாமுனி வால்மீகி. “வீரரே! இழிந்தவன் ஒருவன் இழிந்தவளிடம் பேசுவதைப் போல, கேட்பதற்குக்தகாத, இப்படிப்பட்ட கடும் சொற்களை ஏன் என்னைக் கேட்க வைக்கிறீர்? தீநடத்தை கொண்ட பெண்களைப் பற்றிக் கேள்விப்பட்டு, பெண் குலத்தையே நீர் ஏன் நம்ப மறுக்கிறீர்!”

    ஆகா!  எப்படிப்பட்ட பதில் அது! கனவிலும், நினைவிலும், சதா சர்வகாலமும் தன் நினைப்பில் நீக்கமற நினைந்திருக்கும் தன் அன்புக் கணவரே சொல்லத் தகாத சொற்களைக் சொல்கிறாரே என்று நிலை குலைந்து போகவில்லை. “இழிந்தவன் ஒருவன், இழிந்தவள் ஒருத்தியிடம் பெசுவதைப்போலப் பேசுகிறீரே!” என்று சிலிர்த்து எழுகிறாள்.

    இந்த நேரத்தில் இராமனின் வீரத்தையும் மீறிக்கொண்டு, சீதையின் கற்புச் செருக்கே சிறந்து மிளிர்கிறது.

    அதுமட்டுமல்ல, “வலிமையற்ற மனிதனைப்போல பெண்மைக்கே முக்கியத்துவம் அளித்து, உம்மால் கோபமே கைக்கொள்ளப்பட்டது.” என்று சொல்லி, முப்பத்திமுக்கோடி தேவர்களையும் அடக்கி ஆண்ட இராவணனை அழித்த மாவீரனையே, தன் கற்பைச் சந்தேகித்த கணவனையே, “வலிமையற்றவன், பெண் குணம் கொண்டவன்” என்று சொற்கணைகளால் துளைத்து எடுத்து விடுகிறாள். வீரலட்சுமியாகத் திகழ்கிறாள்.

    கடைசியாக, தீப்புகும்போது, “என் இதயம் இராகவனிடமிருந்து என்றும் பிரியவில்லையோ, அப்பொழுது உலகத்தின் சாட்சியான அக்னி என்னைப் பாதுகாக்கட்டும்!” என்று தீக் கடவுளுக்கே சவால் விடுகிறாள்.

    வால்மீகியின் இந்த சீதை உலகத்தின் எல்லாப் பெண்களுக்கும் இலக்கணமாக, தன்னிகரற்ற வீராங்கனையாத் திகழ்ந்து, விளங்கி நிகற்கிறாள்.

    இராமன் பெண்ணடிமை செய்தான் என்று பேசுபவர்களின் முகத்தில் கரியைப் பூசிவிடுகிறாள், வால்மீகியின் சீதை. புதுமைப் பெண்ணுக்கும் புதுமைப் பெண்ணாகவும், பழமையின் உயர்வைப் பறைசாற்றும், கற்பின் பொற்பை நிலைநாட்டும் வீரச் செல்வியாகவும் திகழ்கிறாள்.

    இப்படிப்பட்ட வீரம் சிறு வயதிலிருந்து ஒன்றாகப் பழகிய இராமனிடமிருந்து பெற்றதுதானே!  எனவே, இராமன்தான் சீதைக்குத் தனது வீரத்தையும், தீரத்தையும், தர்மத்தை நிலைநாட்ட தன்னையே பழிக்கும் கணவனையே சாடும் திறனையும் கொடுத்தான் என்று கூறி, உலகம் உள்ளவரை நிலைத்து நிற்கும் இதிகாசமான, இராமன்-சீதையின் வரலாறும், அவர்கள் நமக்கு விட்டுச் சென்ற நீதியும், நம்மை வழி நடத்தும் என்று கூறி என் ஒப்பீட்டை நிறைவு செய்கிறேன்.

    நீரை நீக்கிப் பாலை அருந்தும் அன்னப் பறவையைப் போல, என் முயற்சியில் எவ்வளவுதான் குறைகள் இருப்பினும், அதை நீக்கி, இருக்கும் ஒருசில நிறைவுகளை எடுத்துப் பருகுமாறு ஆன்றோர்களையும் சான்றோர்களையும், தாள் பணிந்து வேண்டிக் கொள்கிறேன்.

    சிறுவயதிலிருந்து நான் பருகிய இராமாயணப் பாலை எனக்குப் புகட்டிய கம்பனும், வால்மீகியும் என் தாய் தந்தையர்கள். எனவே, இது மகன் பாடும் பெற்றோரின் புகழ்!

    வாழிய கம்பன், வாழிய வால்மீகி, வாழிய அவர்தம் இராமகாதை!

    வணக்கம்.

    ****************************************************************************************************

    Share
  • கம்பனும் வால்மீகியும் – இலக்கிய ஒப்பீடு 3

    கம்பனும் வால்மீகியும் – இலக்கிய ஒப்பீடு 3

    ஒரு அரிசோனன்

    சென்ற இரு ஒப்பீடுகளில் கம்பனும், வால்மீகியும் எப்படி வேறுபடுகிறார்கள் என்பதைக் கண்டோம்.  இந்த ஒப்பீட்டில் இராவணன் சீதையைக் கவர்ந்து செல்வதைப் பற்றிக் கண்ணுறுவோம். இவண், மரபுப் பண்பாடு மாற்றம் மிக நன்றாகவே தெரிகிறது. அது மட்டுமன்றி, சீதையின் வாக்குத் திறனும் புலனாகிறது.

     வால்மீகி ஆரண்ய காண்டத்தில், நான்கு சர்க்கங்களில் (46-49), 130 குறள் பாக்களில் (260 வரிகள்), இராவணன்-சீதையின் வாக்கு வாதத்தை எழுதி உள்ளார்.

    அக்காட்சியே, சடாயு உயிர் நீத்த படலத்தில் 53 விருத்தப் பாக்களில் (212 வரிகள்) கம்பனால் தீட்டப் பட்டிருக்கிறது. இருவரின் கைவண்ணமுமே நம் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளுகிறது.

    சீதை சொல்லத்தகாத வார்த்தைகளைச் சொன்னதால் மனம் உடைந்த இலக்குவன், இராமன் சென்ற இடம் நோக்கிச் சென்றான்.  சீதை தனியாக விடப்பட்டாள். அது கண்டு, இராவணன் ஒரு துறவியைப் போல வேடம் அணிந்துகொண்டு, சீதை இருக்கும் பர்ணகசாலையை அடைந்தான்.

    வால்மீகியின் ஆரண்ய காண்டத்தின் 46வது சர்க்கத்தில் துவங்குவோம்:

    संदृश्य न प्रकंपन्ते न प्रवाति च मारुतः |

    शीघ्र स्रोताः च तम् दृष्ट्वा वीक्षंतम् रक्त लोचनम् || ३-४६-७

    स्तिमितम् गंतुम् आरेभे भयात् गोदावरी नदी |

    ஸந்த்ருஷ்ஸ்ய ந ப்ரகம்பந்தே ந ப்ரவாதி ச மாருத: |

    ஸீக்ர ஸ்ரோதா: ச தம் த்ருஷ்ட்வா வீக்ஷந்தம் ரக்த லோசனம் || 3-46-7

    ஸ்திதமிதம் கந்தும் ஆரேபே பயாது கோதாவரீ நதீ |

    அவனைக் கண்ட காற்றும் தனது வேகத்தைக் குறைத்துக்கொண்டது. குருதிச் சிவப்பான கண்களை உடைய அவனைப் பார்த்த அச்சத்தால் வேகமாகச் செல்லும் கோதாவரி ஆறும் மெல்லச் செல்ல ஆரம்பித்தது. – 3.46.7

    अभ्यवर्तत वैदेहीम् चित्राम् इव शनैश्चरः |

    सहसा भव्य रूपेण तृणैः कूप इव आवृतः || ३-४६-१०

    அப்யவர்த்தத வைதேஹீம் சித்ராமிவ சனைச்சர: |

    ஸஹஸா பவ்ய ரூபேண த்ருணை: கூப இவ ஆவ்ருத: || 3-46-10

    புற்களால் மறைக்கப்பட்ட கிணறுபோல, தகுந்த (துறவி) வேடத்தில் (மறைத்துக்கொண்டு), சித்திரையில் (தோன்றும்) சனியைப்போல வைதேகி முன்னால் சென்றான். – 3.46.10

    दृष्ट्वा काम शर आविद्धो ब्रह्म घोषम् उदीरयन् |

    अब्रवीत् प्रश्रितम् वाक्यम् रहिते राक्षस अधिपः || ३-४६-१४

    த்ருஷ்ட்வா காம ஸ’ர ஆவித்தோ ப்ரஹ்ம கோஷம் உதீரயன்னு |

    அப்ரவீது பிரஸ்ரிதம் வாக்கியம் ரஹிதே ராக்ஷசம் அதிப: || 3-46-10

    ताम् उत्तमाम् त्रिलोकानाम् पद्म हीनाम् इव श्रियम् |

    विभ्राजमानाम् वपुषा रावणः प्रशशंस ह || ३-४६-१५

    தாம் உத்தமாம் த்ரிலோகானாம் பத்மஹீனாமிவ ஸ்ரியம் |

    விப்ராஜமானாம் வபுஷா ராவண: பிரஸ’ஸ’ம்ஸ ஹ || 3-46-15

    காமனின் அம்புகளால் அடிக்கப்பட்ட அரக்கர் தலைவன் தனியளான (சீதையைப்) பார்த்துவிட்டு, பிரம்ம கோஷங்களை (வேதங்களை) முழங்கிக்கொண்டு, மரியாதையான சொற்களைச் சொன்னான். மூன்று உலகங்களிலும் சிறந்தவளும், தாமரை இல்லாத (தாமரையில் நிற்காத) இலக்குமியைப் போன்ற அவளின் உடலை முன்னும் பின்னுமாக (முன்னழகையும், பின்னழகையும்) இராவணன் புகழ்ந்தான். – 3.46.14-15

    …இராவணன் பதினோரு சுலோகங்களில் சீதையின் உடல் உறுப்புக்கள் ஒவ்வொன்றையும் கொச்சையாக வர்ணிக்கிறான். அதன் பிறகு, நான்கு சுலோகங்கள் மூலமாக தன்னந்தனியளாக ஏன் சீதை இருக்கிறாள் என்று கேட்கிறான்….

    द्विजाति वेषेण हि तम् दृष्ट्वा रावणम् आगतम्  |
    सर्वैः अतिथि सत्कारैः पूजयामास मैथिली || ३-४६-३३

    த்விஜாதி வேஷேண ஹி தம் த்ருஷ்ட்வா ராவணம் ஆகதம் |

    ஸர்வை: அதிதி ஸத்காரை: பூஜயாமாஸ மைதிலீ || 3-46-33

    प्रसह्य तस्या हरणे धृढम् मनः समर्पयामास आत्म वधाय रावणः || ३-४६-३७

    பிரஸஹ்ய தசா ஹரணே த்ருடம் மன: ஸமர்ப்பயாமாஸ ஆத்ம வதாய ராவண: || 3-46-37

    ब्राह्मणः च अतिथिः च एष अनुक्तो हि शपेत माम् |

    इति ध्यात्वा मुहूर्तम् तु सीता वचनम् अब्रवीत् || ३-४७-२

    ப்ராஹ்மண: ச அதிதி: ச ஏஷ அனுக்தோ ஹி சபேத மாம் |

    இதி த்யாத்வா முஹூர்த்தம் து சீதா வசனம் அப்ரவீது || 347-2

    இருபிறப்பாளரின் (அந்தணரின்) வேடத்திலேயே வந்த அந்த இராவணனைப் பார்த்த மைதிலி, எல்லாவிதமான விருந்தினர் உபசாரத்துடன் பூசித்தாள்.  – 3.46.33

    இராவணன் அவளைக் கட்டாயப்படுத்திக் கடத்தவேண்டுமென்ற உறுதியைத் தன் அழிவிற்காக மனதில் அர்ப்பணித்தான். – 3.46.37  

    மறையவராகவும் விருந்தினராகவும் (இருக்கும்) இவர் பதில் கூறாமல் இருந்தால் என்னைச் சபித்து விடுவார் என்று சிறிது நேரம் சிந்தித்த சீதை பதில் சொன்னாள்.  – 3.47.2

    …மிதிலையின் அரசமுனி ஜனகனின் மகள் சீதை தான் என்றும், பேரரசன் தசரதனின் மைந்தன் இராமனை மணமுடித்து, அயோத்தியில் பன்னிரண்டு ஆண்டுகள் இனிது வாழ்ந்ததையும், கைகேயின் சொற்கேட்டு, தசரதன் இராமனை பதினான்கு ஆண்டுகள் காட்டில் வாழ்ந்து வருமாறு பணித்ததால், தனது கணவன் இராமன், தான், மற்றும் இளையோன் இலக்குவன் கங்கையைத் தாண்டி தண்டகாரண்யம் வந்ததையும், பொன்மானைப் பிடிக்க இராமன் சென்றதையும், சீதை வாய்மொழியாக இருபது சுலோகங்களால் வால்மீகி வரைந்திருக்கிறார்…

    आगमिष्यति मे भर्ता वन्यम् आदाय पुष्कलम् |

    रुरून् गोधान् वराहान् च हत्वा आदाय अमिषान् बहु || ३-४७-२३

    ஆகமிஷ்யதி மே பர்த்தா வந்யம் ஆதாய புஷ்கலம் |

    ருருனு கோதானு வராஹானு ச ஹத்வா ஆதாய அமிஷானு பஹு  || 347-23

    सः त्वम् नाम च गोत्रम् च कुलम् आचक्ष्व तत्त्वतः |

    एकः च दण्डकारण्ये किम् अर्थम् चरसि द्विज || ३-४७-२४

    ஸ: த்வம் நாம ச கோத்ரம் ச குலம் ஆசக்ஷ்வ தத்த்வத: |

    ஏக: ச தண்டகாரண்யே கிம் அர்த்தம் சரஸி த்விஜ || 347-24

    என் கணவர் காட்டிலிருந்து நிறையக் கருவரி மான்கள், கீரிப்பிள்ளைகள் (போன்ற மிருகங்கள்), பன்றிகளையும் கொன்று, நிறைய இறைச்சி எடுத்துக் கொண்டு வருவார்.  இருபிறப்பாளரே (அந்தணரே), உண்மையில் உமது பெயரையும், கோத்திரத்தையும், குலத்தையும், தெளிவு படுத்துவீராக;  தண்டகாரண்யத்தில் தனியாக எதற்காக அலைகிறீர்? – 3.47.23&24

    …தான் அரக்கர்கோன் இராவணன் என்றும், கடலின் நடுவில் உள்ள இலங்கைக்கு அரசன் என்றும், அழகுள்ள பல மனைவியர் இருந்தும், அவளிடம் தான் மனதைப் பறிகொடுத்ததாகவும்,  அவள் தன்னுடன் வந்தால், அனைவருக்கும் தலைவியாக ஆக்குவதாகவும், (9 சுலோகங்கள்) ஆசை காட்டுகிறான்.  அதனால் கோபம் அடைந்த சீதை.பதினேழு சுலோகங்களில் தான் இராமனின் கற்புள்ள மனைவி என்றும், தன் கணவனின் பெருமையைப் பற்றியும், இராவணனால் தன் கணவரை வெற்றி கொள்ள இயலாது என்றும், இந்திரனின் மனைவி சசிதேவியைக் கடத்திச் சென்றாலும் ஒருவேளை அவனிடமிருந்து தப்பிவிடலாம், ஆனால் இராமனிடமிருந்து அவன் தப்ப இயலாது என்றும் அறிவிக்கிறாள். இபாடி ஒரு அரக்கனிடம் தனியாகச் சிக்கிகொண்டோமே என்று…

    गात्र प्रकंपात् व्यथिता बभूव वात उद्धता सा कदली इव तन्वी || ३-४७-४९

    காத்திர பிரகம்பாது வ்யதிதா பபூவ வாத உத்ததா கதலீ இவ தன்வீ || 347-49

    …காற்றினால் வீழ்த்தப்பட்ட வாழைமரத்தைப் போல உடல் நடுங்கி சித்திரவதைக்கு உள்ளானாள் (சீதை).  – 3.47.49

    …குபேரனின் மாற்றாந்தாய் மகனான தான் மிகுந்த பலவான் என்றும், மானிடனான இராமன் தனக்கு ஒரு பொருட்டே இல்லை என்றும் இராவணன் தற்பெருமை பேசுவதாக நாற்பத்திஎட்டாம் சர்க்கத்தில் 19 சுலோகங்களில் விளக்குகிறார் வால்மீகி….

    कथम् वैश्रवणम् देवम् सर्व देव नमस्कृतम् |

    भ्रातरम् व्यपदिश्य त्वम् अशुभम् कर्तुम् इच्छसि || ३-४८-२१

    கதம் வைஸ்’ரவணம் தேவம் சர்வ தேவ நமஸ்க்ருதம் |

    ப்ராதரம் வ்யப்திஸ்’ய த்வம் அசுபம் கர்த்தும் இச்சஸி || 348-21

    அதைக் கேட்ட சீதை, “எல்லா வானவர்களாலும் வணங்கப்படும் தேவனான வைஸ்ரவனை (குபேரனை) உடன்பிறப்பு என்று அறிவித்துக்கொண்டே, நீ எப்படி நலமில்லாததைச் (தீய செயலை) செய்ய விரும்புகிறாய்?” என்று கோபிக்கிறாள்.  – 3.48.21

    …அதனால் சினமடைந்த இராவணன், தனது அரக்க உருவத்தைக் காட்டி, (12 குறட்பாக்களில்) தற்பெருமை பேசுகிறான். அதன் பிறகு சீதையின் சொற்களால் மிகவும் கோபம் அடைந்து, தனது பெரிய வடிவத்தை எடுக்கிறான். தனது பலத்தால் எதையும் அழிக்கும் ஆற்றல் தனக்கு இருக்கிறது என்று மார் தட்டுகிறான். அந்தண வடிவை விட்டுவிட்டு, பத்து தலையுடனும், இருபது கைகளுடனும் காட்சி அளிக்கிறான்…

    जग्राह रावणः सीताम् बुधः खे रोहिणीम् इव || ३-४९-१६

    ஜக்ராஹ ராவண: சீதாம் புத: க்கே ரோஹிணீம் இவ || 349-16

    वामेन सीताम् पद्माक्षीम् मूर्धजेषु करेण सः |

    ऊर्वोः तु दक्षिणेन एव परिजग्राह पाणिना || ३-४९-१७

    வாமென சீதாம் ப்த்மாக்ஷீம் மூர்த்தஜெஷு கரேண ஸ: |

    ஊர்வோ: து தக்ஷிணேன ஏவ பரிஜக்ராஹ பாணினா || 349-17

    तम् दृष्ट्वा गिरि शृंग आभम् तीक्ष्ण दंष्ट्रम् महा भुजम् |

    प्राद्रवन् मृत्यु संकाशम् भय आर्ता वन देवताः || ३-४९-१८

    தம் த்ருஷ்ட்வா கிரி ஸ்ருங்க ஆபம் தீக்ஷ்ண தம்ஷ்ட்ரம் மஹா புஜம் |

    ப்ராத்ரவன்னு ம்ருத்யு ஸங்காஸ’ம் பய ஆர்த்தா வன தேவதா: || 349-18

    புதன் ரோகிணியைப் பிடித்தது போல, இராவணன் சீதையைப் பற்றினான். அவன் தாமரையைப் போன்ற கண்களை உடைய சீதையின் கூந்தலை இடது கையாலும்,, வலது கையினால் தொடைகளின் பின்புறத்தையும் பிடித்தான். நீண்ட கோரைப் பற்கள் உள்ளவனும், பெரிய புஜங்கள் உடையவனும், காலனைப் போன்றவனுமான அவனைப் பார்த்துப் பயந்து வனத்தின் தெய்வங்கள் விரைந்தோடின.  – (3.49.16-18)

    …அப்படியே சீதையைத் தனது புஷ்பக விமானத்தில் இராவணன் கவர்ந்து சென்றான் என்கிறார் வால்மீகி…

    சடாயு உயிர்நீத்த படலத்தில் கம்பநாட்டார் இதைப்பற்றி என்ன சொல்கிறார் என்பதைக் காதுறுவோம்:

     

    ஊண் இலனாம் என உலர்ந்த மேனியன்

    சேண் நெறி வந்தது ஓர் வருத்தச் செய்கையன்

    பாணியின் உழந்து இடைப் படிக்கின்றான் என

    வீணையின் இசைபட வேதம் பாடுவான்.  – 3-823

    உணவே இல்லாதவன் போல மெலிந்த உடல் உடையவன்; நீண்ட தூரம் வந்ததால் துயர் அடைந்து, தாளத்திற்கு ஏற்றவாறு பாடுவதைப்போல வீணையின் இசையைப்போன்ற குரலில் (சாம)வேதத்தைப் பாடினான்.

    இவ்வாறு தவசியின் வேடத்தைப் புனைந்த இராவணன் தூய்மையான மனமுடைய அருந்ததிக்கு இணையான கற்புடைய சீதை இருந்த இடத்தை அடைந்து நாக்குழற, “இங்கு இருப்பது யார்?” என்று கேட்டான்.

    தோகையும் அவ் வழி தோம் இல் சிந்தனைச்

    சேகு அறு நோன்பினர் என்னும் சிந்தையால்

    பாகு இயல் கிளவியாள் பவளக் கொம்பர் போன்று

    ஏகுமின் ஈண்டு என எதிர் வந்து எய்தினான்.  – 3.827

    குற்றமற்ற நினைவு உடையவர் ஆறு (விதமான) நோன்புகளைச் செய்பவர் (அந்தணர்) என்ற நினைப்பால், (சர்க்கரைப்) பாகு போன்ற மொழியுடையவுளும், தோகை மயிலைப் போன்றவளும், பவளக்கொடி போல இருந்த (சீதை), இங்கு வாருங்கள் என்று (அழைக்கவும்), எதிரே வந்து நின்றான்.

    சீதையின் அழகில் மயங்கிய இராவணன், தன்னை மறக்கிறான். தான் பெற்ற நீண்ட ஆயுளும், இருபது கண்களும் சீதையின் அழகைக் கண்டு களிக்கப் போதாது என்று மறுகுகிறான்.  மூன்று உலகத்தில் இருக்கும் அனைவரும் இவளுக்கு தொண்டு செய்யும்படி செய்வேன்.  இவள் காலடியில் விழுந்து கிடப்பேன், இவளைப் பற்றிச் சொன்ன என் தங்கை சூர்ப்பனகைக்கு என் அரசைத் தந்து விடுவேன் என்று பகல் கனவு காண்கிறான்.  அந்தணன் வேடத்தில் வந்த அவனுக்கு பிரம்பினால் செய்த ஆசனத்தை அளித்து உபசரிக்கிறாள் சீதை….

    நடுங்கின மலைகளும் மரனும் நா அவிந்து

    அடங்கின பறவையும் விளங்கும் அஞ்சின

    படம் குறைந்து ஒதுங்கின பாம்பும் பாதகக்

    கடுந்தொழில் அரக்கனைக் காணும் கண்ணினே.  – 3.837

    மற்றவர்களுக்குக் தீமை விளைவிக்கும் கொடிய செயல்களைச் செய்யும் அரக்கன் (இராவணனைக்) கண்ட உடனே, மலைகளை கூட நடுங்கின.  (காற்றில் இலைகளை அசைத்து ஒலி எழுப்பிக் கொண்டு இருக்கும்) மரங்களும் பேச முடியாமல் அடங்கிப் போய்விட்டன.  பரவைகளும், (காட்டில் இருக்கும்) மிருகங்களும் பயந்து (அமைதியாகி விட்டன).  படம் எடுத்து ஆடக்கூடிய பாம்புகளும், (படத்தை) குறுக்கிக்கொண்டு ஒதுங்கி (ஒளிந்து) கொண்டன.

     ..இராவணன் சீதையிடம் அவளைப்பற்றிக் கேட்கிறான். சிற்றன்னையின் சொல்லை நிறைவேற்றுவதற்காகக் கானகம் வந்திருக்கும் தனது கணவர், தம்பியுடன் தானும் வந்திருக்கிறேன் என்று பதில் சொல்கிறாள் சீதை.  அவன் எங்கிருந்து வந்திருக்கிறான் என்று வினவுகிறாள். அதிற்கு எட்டு விருத்தப் பாக்களில் இராவணன் பதில் அளிப்பதாகச் சொல்கிறார் கம்பர். துறவி வேடம் பூண்ட அரக்கர் தலைவன், தான் இராவணின் தலை நகரான இலங்கையில் நீண்ட காலம் இருந்து விட்டுத் திரும்பியதாகக் கூறுகிறான்.  திருக்கயிலை மலையையே பெயர்த்து எடுத்தவன் இராவணன், படைக்கும் கடவுளான பிரம்மனின் குளத்தில் தோன்றியவன், மிகவும் அறிவாளி, பலசாலி, சிவபெருமான் தந்த வாளைப் பெற்றவன், அவன் ஒரு மங்கையைத் தேடிக் கொண்டிருக்கிறான் என்று சீதையிடம் தன்னைப்பற்றியே பெருமையாகச் சொல்லிக் கொள்கிறான். அதைக் கெட்ட சீதை…

    வேதமும் வேதியர் அருளும் வெஹ்கலா

    சேதன மன்னுயிர் தின்னும் தீவினைப்

    பாதக அரக்கர்தம் பதியின் வைகுதற்கு

    ஏகு என் உடலமும் மிகை என்று எண்ணுவீர்.  —  3.851

    “என் உடம்புகூட துறக்கப்பட வேண்டிய ஒன்று என்று நினைக்க வேண்டிய (துறவியான) நீங்கள், வேதங்களையும், வேதியர் (வேதத்தைக் தந்த சிவபெருமானின்) அருளையும் வேண்டித் (தவம்) புரியாமல், ஆறறிவு உடைய மனிதர்களைத் உண்ணகூடிய தீய செயல்களைச் செய்கின்ற பாவிகளான அரக்கர்களின் நகரத்தில் தங்குவதற்காக எதற்காகச் சென்றீர்கள்?” என்று கேட்கிறாள்.

    …நீங்கள் மிகவும் தவறான செயலைச் செய்து விட்டர்கள் என்று அவனைக் கடிந்து கொள்கிறாள்.  சீதை தன்மீது சந்தேகம் கொள்கிறாள் என்று இராவணன் அறிந்து கொள்கிறான்.  எனவே, மனிதர்களைப் புசிப்பது  அரக்கர்களின் இயல்பு, நாம் என்ன செய்ய முடியும் என்று அதற்குச் சமாதானம் சொல்கிறான். அதை சீதை ஒப்புக் கொள்ளாமல் அவனுடன் வாதம் செய்கிறாள்.  இருவரும் தங்கள் பக்கமே சரி என்று விவாதம் செய்கிறார்கள்.

    அரண் தரு திரள் தோள் சால வள எனின் ஆற்றல் உண்டோ

    கரண்ட நீர் இலங்கை வேந்தைச் சிறைவைத்த கழற்கால் வீரன்

    திரண்ட தோல் வனத்தை எல்லாம் சிறியது ஓர் பருவம்தன்னில்

    இரண்டு தோள் ஒருவன் அன்றோ மழுவினால் எறிந்தான் என்றாள்.  —  3.863

    மதில்கள் போன்று பாதுகாப்புத் தருகின்ற சிறந்த தோள்கள் பல இருந்தால் மட்டும் வலிமை உண்டாகி விடுமா?  நீர்க் காக்கைகள் மிகுந்த இலங்கையின் அரசனை (இராவணனை) வீரக் கழல்கள் (சிலம்புகள்) அணிந்த வீரன் (கார்த்த வீர்யார்ச்சுனன்) சிறைப் பிடித்தான்.  (அப்படிப்பட்ட கார்த்த வீர்யார்ச்சுனனின்) காட்டு மரங்கள் போன்ற (ஆயிரம்) பலம் பொருந்திய தோள்களை, இரண்டே தோள்கள் கொண்ட ஒருவன் (பரசுராமன்)தான் கோடாரியால் வெட்டி எறிந்தான் என்று கேட்டாள்

    …அதனால் கடும் கோபம் கொண்ட இராவணன், தனது துறவி வேடத்தை நீக்கிவிட்டு, தனது இயல்பான அரக்க உடலை எடுத்துக் கொள்கிறான்.  சீதை அதைக்கண்டு பயப்படுகிறாள் “என்னை இவ்வாறு தூற்றிய எவரையும் நான் கொன்று தின்று விடுவேன். நீ பெண் என்பதால் உன்னை விட்டு விடுகிறேன்.  நீ என்னுடன் வந்துவிடு, உன்னை மிகவும் சிறப்பாக வைத்துக் கொள்கிறேன்” என்று கூறுகிறான்…

    புவியிடை ஒழுக்கம் நோக்காய் பொங்குஎரி புனிதர் ஈயும்

    அவியை நாய் வேட்டதென்ன என் சொனாய் அரக்க என்னா.  —  3.869

    “இந்த உலகத்தில் ஒழுக்கமாக இருப்பதை விரும்ப மாட்டாய்; பெரிதாக எரிகின்ற (யாக அக்னியில்) தூயவர்கள் இடப்போகும் ஆகுதியை நாய் விரும்புவதைபோல எத்தகைய (இழிவான சொற்களைச்) சொல்கிறாய், அரக்கா?” என்று கேட்டாள்.

    … என் கணவர் இராமனின் கூரிய அம்புகள் உன் மீது பாய்வதற்கு முன் இங்கிருந்து ஓடிப்போய் உன் இலங்கையில் ஒளிந்துகொள் என்று சிறிதும் அஞ்சாமல் சீறி எழுகிறாள் சீதை.  அதைப் பொருட்படுத்தாமல், இராமனின் அம்பு என்னை ஒன்றும் செய்யாது. என்னை ஏற்றுக்கொள் என்று தரையில் விழுந்து அவளை வணங்கிக் கேட்கிறான் இராவணன்.  தன்னை இந்த இக்கட்டான் நிலைமையில் இருந்து காக்குமாறு இராமனையும், இலக்குவனையும் சீதை, கூவி அழைக்கிறாள்…

    ஆண்டு ஆயிடை தீயவன் ஆயிழையைத்

    தீண்டான் அயன் முன் உரை சிந்தைசெயா

    தூண்தான் எனல் ஆம் உயர்தோள் வலியால்

    கீண்டான் நிலம் யோசனை கீழ்ப் புடையே.  —  3.874

    முன்காலத்தில் பிரம்மா கொடுத்த (சாபச்) சொற்களை நினைவில் கொண்டு, அப்பொழுது தீயவனான (இராவணன்), நூலைப்போன்ற இடையுடைய (சீதையை)த் தொட வில்லை.  தூண்கள் போன்ற உயர்ந்த தோள்களின் வலிமையால், (சீதையையும் சேர்த்து ஒரு) யோசனை அளவுக்கு நிலத்தைத் தோண்டி எடுத்தான்.

    அதனால் மயக்கம் அடைந்த சீதையை, தான் தோண்டி எடுத்த நிலத்துடன் புஷ்பக விமானத்தில் எடுத்துச் சென்றான் என்று எடுத்துரைக்கிறார் கம்பர்.

    ஒப்பீடு

     

    துவக்கம் ஒரே மாதிரி இருந்தாலும், வால்மீகியும், கம்பனும் இந்நிகழ்ச்சியைக் கூறியிருப்பதில் நிறைய மாற்றமிருக்கிறது.  எனவே, மாற்றங்கள் என்ன என்று பார்ப்போம்.

    1. மிகப் பெரிய மாற்றம், இராவணன் சீதையைத் தூக்கிச் செல்லும் முறைதான். சீதையின் தலை மயிரை ஒரு கையாலும், தொடைகளின் பின்புறத்தை இன்னொரு கையாலும் பிடித்துத் தூக்கிச் சென்றான் என்று வால்மீகி எழுதி உள்ளார்.  ஆனால், ஒரு யோசனை நிலத்தை அகழ்ந்து, சீதையைக் கவர்ந்தான் என்று கம்பர் குறிப்பிடுகிறார்.  “அயன் முன் உரை சிந்தைசெயா தீயவன் ஆயிழையைத் தீண்டான்”, அதாவது, பிரம்மா முன்நாளில் அளித்த சாபத்தைக் கருதியே, சீதையைத் தீயவனாகிய இராவணன் தொடவில்லை என்று எழுதி இருக்கிறார்.

    கற்பில் சிறந்த சீதையை இராவணன் தொட்டுத் தூக்கிச் செல்வதைத் தமிழ் மக்கள் ஒப்புக்கொள்ள மாட்டார்கள், எனவே, மரபு காரணமாக கம்பர் இராவணனுக்கு ஒரு சாபம் இருந்தது என்று கம்பர் புனைந்து விட்டார் என்று எண்ணிவிடக் கூடாது.  அந்த சாபத்திற்கு ஆதாரத்தை அவர் வால்மீகியின் வடமொழி மூலத்திலிருந்துதான் பெற்றிருக்கிறார். யுத்த காண்டத்தில், பதிமூன்றாம் சர்க்கத்தில், பத்திலிருந்து பதினைந்தாம் சுலோகங்களில் அதை இராவணனின் வாய்மொழியாகவே, வால்மீகி எழுதிருக்கிறார்.  மகாபார்ச்வனுக்கு ஒரு இரகசியத்தைச் சொல்கிறேன் என்று இராவணன் தனது சாபத்தைப் பற்றிக் கூறுகிறான்.  புஞ்சிதஸ்தலை என்ற தேவகன்னிகையைத் தான் பலாத்காரம் செய்ததாகவும், அதை பிரம்மா அறிந்து மிகவும் கோபம் கொண்டு சபித்ததாகவும் சொல்கிறான்.

    अद्यप्रभृति यामन्याम् बलान्नारीम् गमिष्यसि |

    तदा ते शतधा मुर्धा फलिष्यति न संशयः || ६-१३-१४

    அத்யப்ரபூதி யாமன்யாம் பலான்நாரீம் கமிஷ்யஸி |

    ததா தே சததா முர்த்தா பலிஷ்யதி ந ஸம்சய: || 349-18

    இன்றிலிருந்து எந்த பிற பெண்ணிடம் பலவந்தமாகச் செல்கிறாயோ (பலாத்காரம் செய்கிறாயோ), அப்பொழுது உன் தலை நூறாக வெடிக்கும், சந்தேகமில்லை.  —  6.13.14

    இதற்குப் பயந்தே நான் சீதையைக் கட்டாயப்படுத்தித் தன் விருப்பத்திற்கு உள்ளாக்கவில்லை என்று இராவணன் தெரிவிக்கிறான்.  இந்த ஆதாரத்தையே, கம்பர் குறிப்பிட்டு, சீதையை, அத்தீயவன் தீண்டவில்லை என்று தமிழ் மரபுக்கு ஏற்ப மாற்றி அமைத்திருக்கிறார்.  இதிலிருந்து கம்பருக்கு வால்மீகி இராமாயணத்தில் இருந்த புலமையும், வடமொழித் திறனும் புலனாகிறது.

    இருவருமே சீதையை கற்பில் சிறந்தவளாகத்தான் போற்றி இருக்கிறார்கள். இராவணன் சீதையை பலாத்காரமாகத் தூக்கித்தான் சென்றான், ஆனால் பலவந்தம் செய்யவில்லை என்பதை இராவணனின் மூலமாகவே வால்மீகி தெள்ளக் தெளிவாக்கி உள்ளார்.

    அந்தணத் துறவியாக வேடம் அணிந்து வந்த இராவணனை சீதை வரவேற்று உபசரித்தாள் அரக்கரின் அரசன் சீதையை அங்கம் அங்கமாக, அவளிடமே வர்ணிக்கிறான் என்று வால்மிகி கூறியிருந்தாலும், ஒரு பெண்ணை, அவள் முன்னே அப்படி வர்ணிப்பது தமிழ் மரபாகாது என்று கம்பர் தவிர்த்து விடுகிறார்.

    அதற்குப் பதிலாக, சீதையின் காலடியிலேயே விழுந்து கிடப்பேன், அவளைப் பற்றிச் சொன்ன தனது தங்கை சூர்ப்பனகைக்குத் தனது அரசையே பரிசளிப்பேன் என்று மனதிற்குள் மருகியதாக எழுதிவிடுகிறார்.

    அரக்கன் அப்படித் தன்னை வர்ணித்தாலும், தன்னைச் சபித்துவிட்டால் என்ன செய்வது என்றே சீதை அவனுக்குப் பதில் சொல்கிறாள் என்று வால்மீகி சொல்கிறார்.

    கம்பர் சொல்லாத ஒரு செய்தியை வால்மீகி சீதையின் வாயிலாகத் தெரிவிக்கிறார். காட்டு மிருகங்களின் இறைச்சியை (மாமிசத்தை) என் கணவர் நிறையக் கொண்டு வருவார், அந்த உணவு கிடைக்கும் என்று தெளிவு படுத்திய பின்னரே, கள்ளவேடம் பூண்ட துறவியின் குலம், கோத்திரம் பற்றி வினவுவதாக எழுதி இருக்கிறார். இதன்மூலம், இராமாயண காலத்தில் அனைவரும் இறைச்சி உண்டார்கள் என்று புலனாகிறது.

    ஆயினும், கம்பனுக்கு ஆயிரத்து இருநூறு ஆண்டுகளுக்கு முன்னரே, திருவள்ளுவர் புலால் மறுத்தல், கள் உண்ணாமை போன்ற இரண்டு பண்புகளையும் வலியுறுத்தி இருக்கிறார். எனவே, மறையவர்கள், துறவிகள் மாமிசம் உண்ணுவது என்பது திருவள்ளுவர் காலத்திலேயே தமிழ் நாட்டில் இருந்திருக்க இயலாது. அதனாலேயே கம்பர் இவ்வாறு எழுதாமல் தவிர்த்திருக்கிறார்.

    மேலும் புறநானூற்றில் எவர் வீட்டில் எப்படிப்பட்ட உணவு கிடைக்கும் என்பது பற்றிய பாட்டில், அந்தணர் வீட்டில், அரிசிச் சோறும், கீரையும் கிட்டும் என்று நான் படித்திருக்கிறேன். ஆகவே, இடத்திற்குத் தகுந்தவாறு உணவும் மாறுபட்டது. இன்றும் காஷ்மீர் பண்டிதர்கள் ஆட்டிறைச்சியும், வங்காள பிராமணர்கள் மீனும் உண்ணுகிறார்கள். ஆனால் தென்னிந்தியா, குஜராத், ராஜஸ்தானில் புலால் (இறைச்சி) அவர்களால் தவிர்க்கப்படுகிறது.

    எனவே, வால்மீகியை ஆதாரம் காட்டி தவறாக யாரையும் பழிக்கக் கூடாது என்பதற்காகவே, சீதை வாய்மொழியான இந்த சுலோகம் இக்கட்டுரையில் சேர்க்கப்பட்டது. எவர் மனத்தையும் புண்படுத்தவதற்காக அல்ல.

    யார் என்று சீதை கேட்டதும், தன்னை இலங்கை மன்னன் என்றே அறிமுகம் செய்துகொள்வதாக வால்மீகி சொன்னாலும், கம்பர் அதை வேறுவிதமாகச் சொல்கிறார்.

    இலங்கை மன்னனின் அரசவையில் சுகமாகக் காலம் கழித்து விட்டுத் திரும்பி வருவதாக அவன் சொல்வதாகக் கூறுகிறார்.  அதோடு மட்டுமல்லாமல், சீதையின் அறிவையும், வாதத் திறமையையும் கம்பர் வெளிப்படுத்துகிறார்.  தவசி வேடத்தில் இருந்த இராவணன், இலங்கை அரசனின் புகழை – அதாவது, தந்து புகழையே — பாடியதைக் கேட்டதும், “ஆறு நோன்புகளை மேற் கொள்ளவேண்டியவரும், யாக்கையின் (உடலின்) நிலையாமையை அறிந்த நீர் எப்படி மனிதரைத் தின்னும் அரக்கனை அண்டி இருந்தீர்?” என்று கேட்கிறாள். வேதத்தை ஓதுதல், ஓதுவித்தல், வேள்விகளைச் செய்தல், மற்றவர்களுக்குச் செய்வித்தல், தானம் வாங்குதல், தனது அன்றாடத் தேவைக்கு மீந்ததை மற்றவர்க்குத் தானமாக அளித்தல் என்ற ஆறு நோன்புகளையும் அந்தணர்கள் செய்யவேண்டும் என்பதையும் நன்கு அறிந்திருக்கிறாள்; துறவிகளும், அந்தணர்களும் மற்றவர்களை அண்டியே இருக்கவேண்டும் என்றாலும், நல்லவர் அல்லாதோரை அண்டி இருக்கக் கூடாது என்ற அறிவுரையையும், ஒரு துறவிக்குச் சுட்டிக்காட்டத் தயங்காதவளாகவே சீதை கம்பரால் சித்தரிக்கப்பட்டு இருக்கிறாள்.

    இராவணன் அரக்க வடிவத்தை எடுத்த பின்னும் சீதை கலங்கவில்லை, அவனை எதிர்த்து வாதிட்டிருக்கிறாள் என்றுதான் இரு கவிகளும் எழுதி உள்ளார்கள்.  வாதிட்ட விதம்தான் மாறி உள்ளது.

    எல்லா தேவர்களாலும் வணங்கப்படும் குபேரனின் சகோதரனான நீ இந்த இழிவான எண்ணத்தை ஏன் மேற்கொண்டாய் என்று கடிகிறாள் என்று வால்மீகி சொல்கிறார்.

    ஆனால், உடல் வலிமை பயனற்றது, உன்னை ஆயிரம் கை கொன்ற கார்த்தவீர்யாஜுனன் சிறைப் பிடித்தான், அவனை இரண்டே தோள் கொன்ற பரசுராமன் வெட்டித் தள்ளினார் என்று இராவணனின் வரலாற்றையும், கார்த்தவீர்யாஜுனனின் வரலாற்றையும் சொல்லி அவனை எள்ளி நகையாடுகிறாள்.

    சீதையின் சீரிய கல்வி அறிவை இதன்மூலம் நமக்குக் கம்பர் புலப்படுத்துகிறார்.  அதுமட்டுமல்ல, வேள்வியில் (யாகத்தில்) இடப்படும் பலியை நாய் விரும்புவது போல, என்னை அடைய விரும்புவதாகச் சொல்கிறாயே என்று அவனை நாயுடன் துணிச்சலாக ஒப்பிடும் வீராங்கனையாகத் திகழ்கிறாள் சீதை என்று உச்சாணிக் கொம்புக்கே அவளை ஏற்றி விடுகிறார் கம்பர். அவளது வீர்த்திற்கு அடி பணிந்து என்னை ஏற்றுக்கொள் என்று அவள் காலிலேயே இராவணன் விழுகிறான் என்று சீதியின் கற்புச் செருக்கை ஏத்தி இருக்கிறார் கம்பநாட்டார்.

    இரு கவிச்சக்கரவர்த்திகளுமே, சீதையை, ஆணுக்கு அடங்கிப் பயந்து போகும், அடிமையாக வாழ்ந்திருக்கும் பெண்ணாகக் காட்டவில்லை. கற்புக்கே சிகரமாகவும், கற்பைக் காப்பாற்றிக் கொள்ள எத்தகைய பலமுள்ள அரக்கனையும் எதிர்த்து நிற்கும் வீரப் பெண்ணரசியாகவும்தான் காட்டி உள்ளார்கள்.

    சீதையின் அந்தத் துணிச்சலை, இராவணன் அழிவுக்குப் பின்னர், இராமனுக்கும் சீதைக்கும் இடையில் நடக்கும் உரையாடலை, அடுத்த ஒப்பீட்டில் காண்போம்.

     

    =====================================================================

    Share
  • கம்பனும் வால்மீகியும் – இலக்கிய ஒப்பீடு – 2

    கம்பனும் வால்மீகியும் – இலக்கிய ஒப்பீடு  – 2

    ஒரு அரிசோனன்

    சென்ற ஒப்பீட்டில் அகலியை சாப விமோசன’த்தைப் பற்றியும், இராமன்-சீதையின் முதல் சந்திப்பைப் பற்றியும் கண்டோம். கம்பனும் வால்மீகியும் எவ்வாறு வேறுபடுகிறார்கள் என்பதையும் கண்டோம்.  இருவரும் அவரவர்கள் காலத்துப் பண்பாட்டையும், மரபையும் ஒட்டியே இராமகாதைக்கு வடிவம் கொடுத்தார்கள். மாய மான் இராமன் குரலில் ஓலமிட்டதைக் கேட்டு சீதைக்கும், இலக்குவனுக்கும் இடையில் நடந்த வாக்குவாதத்தைப் பற்றி எவ்வாறு எழுதி உள்ளார்கள் என்பதைக் காண்போம்.

    …பொன்மானைக் கண்டதும், அதைப் பிடித்துத் தரும்படி இராமனிடம் கேட்கிறாள் சீதை.  அது மாய மான் என்று அறியாது, இலக்குவனை சீதைக்குக் காவலாக வைத்துவிட்டு, அதைப் பின்தொடர்ந்து செல்கிறான் இராமன். ஓடிக் களைத்த இராமன், மானை அம்பால் அடிக்கிறான். மாய மான் உருவம் கொண்ட அரக்கனான மாரீசன், “ஏ சீதா, ஏ லட்சுமணா!” என்று இராமனின் குரலில் கூக்குரலிட்ட வண்ணம் மண்ணில் சாய்ந்து இறக்கிறான். அக்கூக்குரல் சீதை, மற்றும் இலக்குவனின் காதுகளில் விழுகிறது…

    வால்மீகி சொல்வதைக் காண்போம்:

    आर्तस्वरम् तु तम् भर्तुः विज्ञाय सदृशम् वने |
    उवाच लक्ष्मणम् सीता गच्छ जानीहि राघवम् || ३-४५-१

    ஆர்த்தச்வரம் து தம் பர்த்து: விக்ஞாய ஸத்ருஸ’ம் வனே |

    உவாச லக்ஷ்மணம் சீதா கச்ச ஜாநீஹி ராகவம் || 3-45-1

    வனத்தில் எழுந்த பரிதாபமான குரலைத் தன் கணவனுடையதாக அறிந்து, இராமனிடம் செல் என்று இலக்குவனிடம் சீதை கூறினாள்.

    न जगाम तथा उक्तः तु भ्रातुः आज्ञाय शासनम् || ३-४५-४

    ந ஜகாம ததா உக்த: து ப்ராது: ஆக்ஞாய ஸா’ஸனம் || 3-45-4

    அவ்வாறு சொல்லப்பட்டும், அண்ணனின் ஆணையை நினைவில் கொண்டு (இலக்குவன்) செல்லாமலிருந்தான்.
    तम् उवाच ततः तत्र क्षुभिता जनक आत्मजा |

    सौमित्रे मित्र रूपेण भ्रातुः त्वम् असि शत्रुवत् || ३-४५-५

    தம் உவாச தத: தத்ர க்ஷுபிதா ஜனகாத்மஜா |

    ஸௌமித்ரே மித்ர ரூபேண ப்ராது: தவம் அஸி சத்ருவது || 3-45-5
    यः त्वम् अस्याम् अवस्थायाम् भ्रातरम् न अभिपद्यसे |

    इच्छसि त्वम् विनश्यन्तम् रामम् लक्ष्मण मत् कृते || ३-४५-६

    ய:த்வம் அஸ்யாம் அவஸ்த்தாயம் ப்ராதரம் ந அபிபத்தியசே |

    இச்சஸி த்வம் வினஸ்’யந்தம் ராமம் லக்ஷ்மண மத் க்ருதே || 3-45-6
    लोभात् तु मत् कृतम् नूनम् न अनुगच्छसि राघवम् |

    व्यसनम् ते प्रियम् मन्ये स्नेहो भ्रातरि न अस्ति ते || ३-४५-७

    லோபாது து மத் க்ருதம் நூனம் ந அனுகச்சஸி ராகவம் |

    வ்யசனம் தே ப்ரியம் மன்யே ஸ்நேஹோ ப்ராதரி ந அஸ்தி தே || 3-45-7

    அதைக்கண்டு மனம் கொதித்த ஜானகி அவனிடம் கூறினாள். “சுமித்திரையின் மகனே! நண்பனைப் போன்ற உருவத்துடன் உடன் பிறப்பின் எதிரியாக நீ இருக்கிறாய்.  எப்பொழுது நீ இந்தமாதிரி நிலையில் அண்ணனின் (உதவிக்குப்) போகாமல் இருக்கிறாயோ, இலக்குவா, நீ எனக்காக (என்னை விரும்பியே) இராமனின் அழிவை விரும்புகிறாய்.  என்(மீது) எழுந்த பேராசையால் அன்றோ தேவைப்படும்போது இராகவனைப் பின்தொடராமல் (உதவிக்குச் செல்லாமல்) இருக்கிறாய்!  தவிப்பில் இருக்கும், (அனைவருக்கும்) பிரியமான அண்ணனிடம் உனக்கு அன்பு இல்லை.”

    …இப்படிப் பட்ட கடும் சொற்களை சீதை கூறினாலும், இலக்குவன் நிதானமாக, “இராமனை யாராலும் துன்புறுத்த இயலாது, மூவுலகங்களுமே சேர்ந்து எதிர்த்தாலும், அவனைக் கட்டுப்படுத்த முடியாது, இப்பொழுது கெட்ட குரல் இராமனுடைது அல்ல. மாயையை உண்டு பண்ணும் அரக்கனுடையதாக இருக்கலாம்.  அந்த சிறந்த மானைக் கொன்றுவிட்டு உங்கள் கணவர் திரும்புவார்.” என்று பதினோரு சுலோகங்களில் எடுத்துரைக்கிறான். அவன் சொல்லில் நம்பிக்கை இல்லாததாலும், ஆபத்தில் மாட்டிக்கொண்டு இருக்கும் தன் கணவரின் உதவிக்குச் செல்லாமல், தான் கடும் சொல் கூறியும் தன்னை விட்டு அகலாமல் இருக்கிறானே என்ற பதட்டத்தினாலும் சீதை மேலும் சீற்றமடைகிறாள்…

     

    सुदुष्टः त्वम् वने रामम् एकम् एको अनुगच्छसि |

    मम हेतोः प्रतिच्छन्नः प्रयुक्तो भरतेन वा || ३-४५-२४

    ஸுதுஷ்ட: த்வம் வனே ராமம் ஏகம் ஏகோ அனுகச்ச்ஸி |

    மம ஹேதோ: ப்ரதிச்சன்ன: பிரயுக்தோ பரதேன வா  || 3-45-24

    समक्षम् तव सौमित्रे प्राणान् त्यक्ष्यामि असंशयम् || ४-५-२६

    ஸமக்ஷம் தவ ஸௌமித்ரே ப்ராணானு த்யக்ஷ்யாமி அஸம்ஸ’யம் | 3-45-26

    रामम् विना क्षणम् अपि न एव जीवामि भूतले |

    इति उक्तः परुषम् वाक्यम् सीतया रोमहर्षणम् || ३-४५-२७

    ராமம் வினா க்ஷணமபி ந ஏவ ஜீவாமி பூதலே |

    இத்யுக்த: பருஷம் வாக்கியம் சீதயா ரோமஹர்ஷணம் || 3-45-27

    अब्रवीत् लक्ष्मणः सीताम् प्रांजलिः विजितेन्द्रियः |

    उत्तरम् न उत्सहे वक्तुम् दैवतम् भवती मम || ३-४५-२८

    அப்ரவீது லக்ஷ்மண: சீதாம் ப்ராஞ்சலி: விஜிதேந்த்ரிய: |

    உத்தரம் ந உத்ஸஹே பகத்தும் தைவதம் பவதி மம || 3-45-28

    वाक्यम् अप्रतिरूपम् तु न चित्रम् स्त्रीषु मैथिलि |

    स्वभावः तु एष नारीणाम् एषु लोकेषु दृश्यते || ३-४५-२९

    வாக்கியம் அப்ரதிரூபம் து ந சித்ரம் ஸ்த்ரீஷு மைதிலீ |

    ஸ்வபாவ: து ஏஷ நாரீணாம் ஏஷு லோகேஷு திருஸ்’யதே || 3-45-29

    श्रोत्रयोः उभयोः मध्ये तप्त नाराच सन्निभम् |

    उपशृण्वंतु मे सर्वे साक्षिनो हि वनेचराः || ३-४५-३१

    ராமம் வினா க்ஷணமபி ந ஏவ ஜீவாமி பூதலே |

    இத்யுக்த: பருஷம் வாக்கியம் சீதயா ரோமஹர்ஷணம் || 3-45-31

    गमिष्ये यत्र काकुत्स्थः स्वस्ति ते अस्तु वरानने || ३-४५-३३

    கமிஷ்யே யாத்ரா காகுத்ஸ்த்த: ஸ்வஸ்தி தே அஸ்து வரானனே || 3-45-33

    रक्षन्तु त्वाम् विशालाक्षि समग्रा वन देवताः |

    निमित्तानि हि घोराणि यानि प्रादुर्भवन्ति मे |

    अपि त्वाम् सह रामेण पश्येयम् पुनरागतः || ३-४५-३४

    ரக்ஷந்து த்வாம் விசாலாக்ஷி ஸமக்ரா வன தேவதா: |

    நிமித்தானி ஹி கோராணி யானி ப்ராதுர்பவந்தி மே |

    அபி த்வாம் ஸஹ ராமேண பஸ்’யேயம் புனராகத: || 3-45-34

    “மிகவும் கெட்டவனே! என்பொருட்டு (என்னை அடைவதற்காக) நீ தனியாகவோ, அல்லது பரதனால் தூண்டப்பட்டோ, இரகசியமாக காட்டுக்கு இராமனைத் தொடர்ந்து வந்திருக்கிறாய். சுமித்திரையின் மகனே, உன் முன்னாலேயே என் உயிரைத் துறந்து விடுவேன். இப்புவியில் ஒருகணமும் இப்புவியில் இராமனில்லாமல் நான் வாழ மாட்டேன்.” (கோபத்தினால்) மயிர்க்கூச்செறிவுற்ற சீதையால் இப்படிப்பட்ட குத்தும் சொற்கள் சொல்லப்பட்டன.

    (இதனால்) உணர்வு ஓடுங்கப்பட்டுப் போன இலக்குவன் சீதையைக் கைகூப்பிச் சொன்னான்.  “மைதிலி, (நீ) எனக்கு தெய்வமாக ஆகிறாய். பதில் உரைக்கவும் திறனற்றவனானேன்.  பெண்களிடம் சொல்லத்தகாத வார்த்தைகள் (இருப்பது) என்பது வியப்பல்ல. பெண்களுடைய இப்படிப்பட்ட இயல்பு இவ்வுலகங்களில் காணப் படுகிறது. (இவ்வாறு கடும் சொற்களைச் சொல்வது) இரு காதுகளுக்கு நடுவில் (தைத்த) சுடும் அம்பைப்போல இருக்கிறது. (இதைக்) கூர்ந்து கேட்கும் காட்டில் செல்பவர் எல்லோருமே (வனம் வாழ் தெய்வங்கள் அனைவருமே) இதைக் கேட்கிறார்கள்.

    “எங்கு காகுஸ்தர் (இராமன் இருக்கிறாரோ) அங்கு செல்வேன். இனிய முகம் உள்ளவளே! நீ நலமாக இருப்பாயாக. அகண்ட கண்களை உடையவளே! வனத்தில் இருக்கும் எல்லாத் தெய்வங்களும் உம்மைக் காப்பார்களாக! இந்த சகுனங்களை மதிப்பிட்டால், தீயனவாகவே எனக்குப் படுகின்றன.  இராமனோடு கூடத் திரும்பி வருங்கால், உம்மைப் நான் பார்ப்பேனோ?”

    गोदावरीम् प्रवेक्ष्यामि हीना रामेण लक्ष्मण |

    आबन्धिष्ये अथवा त्यक्ष्ये विषमे देहम् आत्मनः || ३-४५-३६

    கோதாவரீம் பிரவேக்ஷ்யாமி ஹீனா ராமேண லக்ஷ்மண |

    ஆபந்திஷ்யே அதவா த்யக்ஷ்யே விஷமே தேஹம் ஆத்மன: || 3-45-36

    पिबामि वा विषम् तीक्ष्णम् प्रवेक्ष्यामि हुताशनम् |

    न तु अहम् राघवात् अन्यम् कदाअपि पुरुषम् स्पृशे || ३-४५-३७

    பிபாமி வா விஷம் தீக்ஷ்ணம் பிரவேக்ஷ்யாமி ஹுதாசனம் |

    ந து அஹம் ராகவாது அன்யம் கதாபி புருஷம் ஸ்ப்ருசே || 3-45-37

    …இவ்வாறு இலக்குவன் சொன்னதும், நீர் மல்கும் கண்களுடன் சீதை,

    “இலக்குவா, இராமன் இல்லாவிட்டால், கோதாவரியில் புகுவேன், தூக்கில் தொங்குவேன், இல்லாவிட்டால், மலை உச்சியில் இருந்து (குதித்து) உடலைத் துறப்பேன். இல்லை, கடும் விஷத்தைக் குடிப்பேன்; தீயில் பிரவேசிப்பேன்..  இராகவன் அல்லாது மற்ற ஆடவர்கள் ஏன்னை ஒருபொழுதும் தொட விடமாட்டேன்”

    இவ்வாறு கூறி வயிற்றில் அடித்துக்கொண்டு அழுதாள். இப்படி அழுத சீதையை வணங்கிவிட்டு,  இராமன் சென்ற இடத்தை நோக்கிச் சென்றான், இலக்குவன்.

    கம்பர் இந்நிகழ்ச்சியை எவ்வாறு சித்தரிக்கிறார்?

    …மாய மானின் கூக்குரலைக் கெட்ட சீதை, இராமனுக்குத்தான் எதோ தீங்கு நேர்ந்துவிட்டது என் நினைத்து வயற்றில் அடித்துக்கொண்டு கீழே விழுந்தால். “நான் மானைப் பிடித்துக் கொடு என்று கேட்டதால் தானே இந்நிலை நேர்ந்தது என்று தரையில் புரண்டு அழுதாள்.

    குற்றம் வீந்த குணத்தின் எம் கோமகன்

    மற்று அவ் வாள் அரக்கன் புரி மாயையால்

    இற்று வீழ்ந்தனன் என்னவும் என் அயல்

    நிற்றியோ இளையோய் ஒரு நீ என்றாள்.  – 3.806

    “குற்றம் (என்பதே) கலக்காத என்னுடைய அரசகுமாரன், அந்த அரக்கன் செய்த மாயையால் நிலைதடுமாறி வீழ்த்து விட்டான் என்று அறிந்தும், என் அருகில் நிற்பாயோ, நீ ஒரு தம்பியோ?” என்றாள்.

    இவ்வாறு சீதை சினம் கொண்டு கேட்டவுடன், இராமனுடைய வலிமையைப் பற்றியும், யாரும் அவனை வெல்ல இயலாது என்றும், தம் இருவர் பெயரையும் சொல்லி அலறி இருப்பது மான் உருக்கொண்டு வந்த அரக்கன்தான் என்றும், கவலைப்படாமல் இருக்கும்படியும் சீதையை இலக்குவன் வேண்டுவதாகக் கம்பர் ஏழு செய்யுள்களில் கூறுகிறார்.

    என்று அவன் இயம்பலும் எடுத்த சீற்றத்தள்

    கொன்றன இன்னலள் கொதிக்கும் உள்ளத்தள்

    நின்ற நின் நிலை இது நெறியிற்று அன்று எனா

    வன் தருகண்ணினள் வலிந்து கூறுவாள்.  – 3.814

    ஒரு பகல் பழகினார் உயிரை ஈவரால்

    பெருமகன் உலைவுறு பெற்றி கேட்டும் நீ

    வெருவலை நின்றனை வேறு என் யான் இனி

    எரியிடைக் கடித்து வீழ்ந்து இறப்பென் எனா.  – 3.815

    இந்த விதமாக அவன் (இலக்குவன்) சொல்லியும், (உள்ளத்தில்) எழும்பிய சீற்றத்தினால், தானே கொல்லப்படுவது போன்ற துயரத்தை அடைந்து, கொதிக்கும் உள்ளத்துடன், (இங்கு) நிற்கும் உனது நிலையானது நெறியில்லாத ஒன்றாகும் என்று கடிந்து சொல்ல ஆரம்பித்தாள். 

    ஒரு நாள் பழகியவர்கள்கூட உயிரையும் கொடுப்பார்கள். எனவே, உயர்ந்தவன் (இராமன்) தீங்கடையும் செய்தி கேட்டும், ஒன்றும் தோன்றாமல் நீ நின்று கொண்டிருக்கிறாய். இனி வேறு என்ன (செய்ய இயலும்)?  இப்போது நான் தீக்கு நடுவில் விழுந்து இறப்பேன்!” என்றாள்.

    அவளைத் தடுத்து நிறுத்திய இலக்குவன், அவள் கால்களில் விழுந்து வணங்கி, இராமன் தனக்கு இட்ட கட்டளையை மீறி, அவளைத் தனியாக விட்டுச் செல்லும்படி செய்ததை நினைத்து மனம் நொந்தவாறு செல்கிறான்.

    அறம்தனால் அழிவு இலது ஆகல் ஆக்கலாம்

    இறந்து பாடு இவர்க்கு உறும் இருக்கின் இவ் வழி

    துறந்து போம் இதனையே துணிவென் தொல்வினைப்

    பிறந்து போந்து இது படும் பேதையேன் எனா.  – 3.820

    நல்வினை(தர்மம்)யால் (மட்டுமே) அழிவு ஏற்படாதவாறு காக்க இயலும். இங்கு இருந்தால் இவருக்கு (சீதைக்கு) இறக்கும்படி ஆகிவிடும். இந்த இடத்தைவிட்டு நீங்குவதையே நான் துணிந்து செய்வேன். முன்வினைப் பயனால் உண்டான இந்த (வேதனையை) அனுபவிக்கும் பாவியானேன் என்று (மனதிற்குள் புலம்பினான்).

    இங்கு ஏதாவது தீங்கு ஏற்பட்டால், கழுகுகளின் தலைவனான (ஜடாயு) பார்த்து தன்னால் இயன்ற வண்ணம் காத்துக்கொள்வான் என்று தன்னைத் தானே தேற்றிக் கொண்டு சென்றான்.

     

    ஒப்பீடு

     

    இலக்குவன்-சீதை சொற்பரிமாற்றம் கம்பரால் சுருக்கமாகவே கொடுக்கப்பட்டிருக்திறது.  முதலில் சீதை அழுததை இரண்டு செய்யுள்களில் (8 வரிகளில்) கூறிய கம்பர், ஒரே ஒரு விருத்தப் பாவின் மூலம் (4 வரிகளில்), இலக்குவனை இராமனின் உதவிக்குச் செல்லுமாறு சீதை கூறியதாக எழுதி இருக்கிறார்..  வால்மீகி ஒரு சுலோகத்தில் (ஒரு வரியில்) மாய மானில் குரலை தனது கணவரின் குரல் என்று அடையாளம் கண்டு கொண்டபின், மூன்று சுலோகங்களில் (ஆறு வரிகளில்) இராமனுக்கு உதவியாகச் செல்லும்படி இலக்குவனிடம் சொல்வதாகச் சித்தரிக்கிறார்.

    துவக்கத்திலேயே வால்மீகியும், கம்பரும் வேறுபடுகிறார்கள்.  சீதையின் கழிவிரக்கத்தைப் பற்றி, தன்னால்தானே தன் கணவருக்கு இந்நிலை ஏற்பட்டதே என்று புலம்புவதைப் பற்றியும் கம்பர் விளக்குகிறார்.  ஆனால், வால்மீகியோ, மாய மானின் குரல், தனது கணவருடையது என்று நினைத்து சீதை இலக்குவனிடம் பேச ஆரம்பித்து விட்டதாகக் குறிப்பிட்டிருக்கிறார். இதிலிருந்து கம்பரும், வால்மீகியும் பெண்களைப் பற்றி சிறிது மாறுபாடாக எண்ணி இருக்கிறார்கள் என்று ஊகிக்கலாம்.  இது இலக்குவனின் வாய்மொழியாகப் பின்னர் வால்மீகி இராமாயணத்தில் வெளிப்படுகிறது.

    கம்ப இராமாயணத்தில், இலக்குவன் ஏழு பாக்களின் மூலம் (28 வரிகளில்), இராமனுக்கு எந்தவிதமான தீங்கும் நேராது என்றும், தன் அண்ணனின் வல்லமையும் விளக்குகிறான். வால்மீகி இராமாயணத்தில், இது சிறிது மாறுபடுகிறது.  சீதை சொல்லியும், இலக்குவன் ஏதும் சொல்லாமல் நின்றதாகவும், அதைப் பொறுக்காத சீதை ஐந்து சுலோகங்களின் மூலம் (பத்து வரிகளில்) இராமன் அழியவேண்டும் என்று இலக்குவன் விரும்புவதாகவும், அப்படி ஆகிவிட்டால், தன்னை அடையலாம் என்ற தகாத ஆசையினால் உதவிக்குச் செல்லாமல் நிற்பதாகவும், அவன் மீது கடும் சொற்களினால் குற்றம் சாட்டுவதாகவும் எழுதி உள்ளார். அதன் பின்னரே இலக்குவன், இராமனுடைய வல்லமையைப் பற்றி 10 சுலோகங்களில் (21 வரிகளில்) சொல்வதாக வர்ணிக்கிறார்.  வால்மீகி எழுதியதைப் போன்று  சீதையின் இலக்குவன் மீது கடும் சொல் அம்புகளை எய்யாததற்கு, கம்பரின் தமிழ் மரபும் ஒரு தலையாய காரணம் என்று படுகிறது.  தமையனின் தாரம் தாய்க்கு நிகர் என்பது தமிழர் பண்பாடு.  எனவே, தனயனுக்கு நிகரான இளைய பெருமாள் இலக்குவன் தன் மீது தகாத ஆசை கொள்ளுவான் என்று சீதையால் எண்ணிக்கூடப் பார்த்திருக்க இயலாது, அப்படி எழுதினால் சீதையைத் திருமகளுக்கு இணையாக என்ன, ஒரு சராசரிப் பெண்ணாகக் கூட, தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று அதை எழுதாமல், கம்பர் விட்டுவிட்டார் என்றே எண்ணத் தோன்றுகிறது. ஆனால், வால்மீகியோ, இலக்குவன் சீதையின் கடும் சொற்களுக்கு, தன்னைப் பற்றி கேவலமாகப் பேசப் பட்ட எந்தக் குற்றச் சட்டுகளுக்குமே பதில் எதுவும் சொல்லாமல், இராமனுக்கு எதுவும் நேர்ந்திருக்காது, அவரின் கட்டளையை மீறி நான் செல்ல முடியாது என்று மட்டுமே கூறுவதாக எழுதியுள்ளார். மேலெழுந்த வாரியாகப் பார்த்தால் வால்மீகி ஏன் இப்படி எழுதியிருக்கிறார், இலக்குவன் ஏன் சீதைக்கு தனது நேர்மையைப் பற்றி விளக்கம் தெரிவிக்கவில்லை என்று தோன்றும். முதலாவதாக, சீதையை சோபனே (शोभने), அதாவது, மங்கலமானவளே, மிகச் சிறந்தவளே என்றுதான் இலக்குவன் குறிப்பிடுகிறான். இதிலிருந்து அவளைப் பற்றி தவறான எண்ணம் தனக்கு எதுவும் இல்லை என்று ஒரே சொல்லில் தெரிவிக்கிறான். மேலும், சீதை இருக்கும் மன நிலையில் தான் என்ன சொன்னாலும் பயனில்லை என்றே அவன் நினைக்கிறான் என்று வால்மீகி நமக்குப் புரிய வைக்கிறார்.

    அதற்குப் பிறகும் சீற்றம் தணியாதவளாக, இலக்குவன் மீதும், ஏன் பரதன் மீதுமே குற்றச் சாட்டுகளை அடுக்குவதாக வால்மீகி எழுதுகிறார்.  கடைசியில், என்ன செய்தாலும் தன்னை அடைய முடியாது என்றும், தன்னை அடைய முயற்சித்தால் உயிரைப் போக்கிக் கொள்வதாகவும் சீதை சொல்கிறாள். இது சீதையின் கற்பை உயர்த்துவதாகவே அமைகிறது.  கணவர் உயிருக்கு ஆபத்து என்று நினைக்கும் பொது, உணர்ச்சி வசப்பட்ட சீதை தான் என்ன சொல்கிறோம் என்பதை உணராமலேய பேசுவதாகத்தான் வால்மீகி வர்ணித்திருக்கிறார். கற்பில் சிறந்திருந்தாலும், சீதை ஒரு சாதாரணப் பெண்ணாகத்தான் அவரால் உருவகப் படுத்தப் படுகிறாள். அதை அறிந்தே, இலக்குவன் சிந்தியாதவண்ணம், உணர்ச்சிப் பெருக்கில் சொல்லப்பட்ட அவளது  சொற்களை ஒதுக்கி விடுகிறான் என்றும் நாம் புரிந்து கொள்ளவேண்டி இருக்கிறது.

    இருப்பினும், ஏழு சுலோகங்களில் சீதைக்கு இலக்குவன் பதிலளிப்பதாக வால்மீகி விளக்கி உள்ளார்.  அவற்றில் சீதையை தெய்வத்திற்கு இணையாகவே தான் நினைப்பதாகக் கூறி, தனது தூய்மையை விளக்கிவிட்டு, அவளது கடும் சொற்கள் பழுக்கக் காச்சிய அம்பு போலத் தனது காதுகளுக்கு நடுவில் பாய்வது போல இருக்கிறது என்கிறான்.  அச் சொற்களால் செய்வதறியாது திகைத்து, நின்று போனேன் என்று தன் நிலைமையைச் சீதைக்கு எடுத்துக் கூறுகிறான்.  மேலும், பெண்கள் தங்கள் காரியம் ஆகவேண்டும் என்பதற்காக எதை வேண்டுமாலும் பேசுவார்கள் என்றும் சொல்கிறான். இதன்மூலம் வால்மீகி பெண்களைப் பற்றி, அவர்கள் தெய்வத் தன்மை பொருந்தியவர்கள் ஆனாலும், பெண்களாக இருந்தால் எப்படி நடந்து கொள்வார்கள் என்று இலக்குவன் மூலமாக விளக்குகிறார். கம்பரோ, பெண்களை உயர்வாகப் போற்றும் தமிழ் மரபுக்கு இவ்வாறு பெண்களைப் பற்றி விவரிப்பது உகந்ததல்ல என்று விட்டு விடுகிறார்.

    இலக்குவன் செல்லாவிட்டால் தான் உயிரைத் துறந்துவிடுவேன் என்று சீதை சொல்வதாக இரண்டு கவிஞர்களுமே எழுதி இருக்கிரார்கள். இலக்குவன் வாளாவிருப்பது நல்ல நெறி அல்லவென்றும், அவன் செல்லாவிட்டால், தீ மூட்டி உயிர் துறப்பேன் என்று சீதை வாய்மொழியாகவே கம்பர் தெரிவிக்கின்றார்.  வால்மீகியோ, இராமனைத் தவிரத் தன்னை யாரும் தொட முடியாது என்றும், அப்படி ஒரு நிலை வந்தால், உயிரை எப்படித் துறப்பேன் என்று பல வழிகளைக் சீதை கூறுகிறாள் என்று தெரிவிக்கிறார்.  சீதையின் சொல்லில் இருக்கும் முரண்பாட்டை (irony), நமக்குத் தெரிவிக்கிறார் வால்மீகி.  மற்றவர் யாரும் தன்னைத் தொடும் நிலை வந்தால் உயிர் துறப்பேன் என்ற சீதையை, இராவணன் தூக்கிச் செல்லபோகும் முன்னதாகவே முறையை நமக்குக் கோடிட்டுக் காட்டுகிறார் அந்த மகாகவி. கம்பர் இவ்வாறு சீதை வாய்மொழியாகச் சொல்லாததும் சீதை இராவணன் கவர்ந்து செல்லும் புனைவை மனதில் கொண்டுதான்.

    இவ்வாறு சீதை சொன்னதும், அவளை வணங்கிவிட்டுத் திரும்பிப் பார்த்துக்கொண்டே இலக்குவன், இராமன் இருக்குமிடம் தேடிச் சென்றான் – இது வால்மீகி சொன்னது.

    “இங்கிருந்தால் மதிப்பிற்குரிய சீதை இறப்பாள்; சென்றால் பெருங்கேடு வந்து சேரும். ஊழ் வினையால் எனக்கு இந்நிலை ஏற்பட்டது. அறம் ஒன்றினால் மட்டும்தான் அழிவைத் தடுக்க இயலும்.” என்ற இலக்குவன், சீதையைச் சுற்றி வலம் வந்து வணங்கி அங்கிருந்து அகன்றான் — இது கம்பரின் கூற்று.

    இருவருமே, இலக்குவனின் நேர்மையையும், கடமை உணர்வையும், இருதலைக்கொள்ளி நிலைமையையும் விவரிக்கிறார்கள். கம்பருக்கு ஊழ்வினையில் (கர்மா, முன்வினைப் பயன்) இவற்றில் இருக்கும் நம்பிக்கை இலக்குவன் வாயிலாக வெளிவருகிறது.  வால்மீகியோ, அதைப் பற்றி ஒன்றுமே எழுதவில்லை.

    இறுதியில், தீங்கு எதுவும் ஏற்பட்டால், கழுகுகளின் தலைவன் ஜடாயு காப்பான் என்ற நம்பிக்கையுடன் செல்கிறான் என்று முடிக்கிறார் கம்ப நாட்டார். வனத்தில் வாழ் தெய்வங்கள் சீதையைக் காப்பாற்றட்டும் என்று இலக்குவன் இயம்பியதாக வால்மீகி வரைகிறார்.

    மகாகவிகள் இருவருமே பின்நாள் வரப் போவதை, முன்கூட்டியே தெரிவிக்கிறார்கள்.  வால்மீகி சீதை வாயிலாகத் தெரிவித்தால், கம்பர், இலக்குவன் வாயிலாகத் தெரிவிக்கிறார்.

    கம்பர் சீதையைத் திருமகளின் அவதாரம் என்று காண்பிப்பதால், அத்தகைய தெய்வ மாதின் வாயில் தகாத சொற்கள் வரக்கூடாது என்று “இடக்கர் அடக்கி” இருக்கிறார்.  வால்மீகியோ, அப்படிச் சீதையைக் காண்பிக்காததால், மானிடப் பெண்ணின் இயல்புகளை அவள் மேல் போர்த்தி இருக்கிறார்.

     

    *************************************************************************************************************

    Share
  • கம்பனும், வால்மீகியும் – இராமாயண இலக்கிய ஒப்பீடு – 1

    கம்பனும், வால்மீகியும் – இராமாயண இலக்கிய ஒப்பீடு – 1

     அகலியை சாப விமோசனம், இராமன்-சீதை முதல் சந்திப்பு

    ஒரு அரிசோனன்

    இராமாயணம் என்றாலே நம் நினைவுக்கு வருவது வால்மீகியும், கம்பனும்தான். ஆயிரமாயிரம் ஆண்டுகளாக இந்துக்களின் மனதில் படிந்து நிலைத்து நிற்கும் காவியமான வால்மீகியின்  இராமாயணத்தைப் பலரும் பலப்பல மொழிகளில் எழுதியிருந்தாலும், வால்மீகியின் மூலத்திற்கு அடுத்தபடியாக உயர்வாக கருதப்படுவது, கவிப் பேரரசன் கம்பனின் ராமகாதைதான்.  அவனது கவி நயத்தைச் சுவைப்பதற்காவது, தமிழைக் கற்க வேண்டும் என்றால் அது மிகையாகாது (not an exaggeration). இருபத்தினான்காயிரம் இருவரிக் குறட்பாக்களில் வால்மீகி எழுதிய காவியத்தை, பன்னிரண்டாயிரம் நால்வரி விருத்தப்பாக்களில் வடிவமைத்தான் கம்பன் என்றால், கம்பனின் இராமகாதையும் 48000 வரிகைளைக் கொண்டதுதானே? அதிலும் கம்பன் உத்தர காண்டத்தை எழுதவில்லை;  ஓட்டக் கூத்தரின் உத்தர காண்டமே இராமாயணத்துடன் சேர்த்து வைக்கப்படுகிறது.

    வால்மீகி முனிவர் இராமாயணத்தை நமக்கு விட்டுச் சென்று சில ஆயிரம் ஆண்டுகள் சென்றுதான் கம்பன் தனது இராமகாதையைத் தீட்டினான். தமிழ்க் கவித்திறன் மிக்க கம்பன், வடமொழியான சம்ஸ்கிருதத்தையும் நன்கு கற்று அறிந்திருக்கத்தான் வேண்டும். இல்லாவிட்டால், வால்மீகியின் கவிப்பெருக்கை சுவை மாறாமல், கருத்து மாறாமல் அளித்திருக்க இயலாது.

    ஆயினும், கம்பன் இராமாயணத்தை தமிழுலகுக்குத் தரும்பொழுது, தமிழ் மரபுகளை ஒட்டியே வடிவமைத்தான். எனது ஒப்பீட்டில் வால்மீகியின் வடமொழி மூலத்தையும் (மொழி பெயர்ப்பு அல்ல, வடமொழி மூலம் மட்டுமே), கம்ப இராமாயணத்தையும் மட்டுமே துணை கொண்டிருக்கிறேன்.  எனது வடமொழி அறிவு தமிழ் அறிவு அளவுக்கு ஈடானதல்ல. எனவே, தவறிருந்தால், பிழை பொறுக்குமாறு வடமொழி அறிஞர்களை வேண்டிக் கொள்கிறேன்.

    ஆராய்ந்து பார்த்ததில் ஐந்து நிகழ்ச்சிகள் மிகவும் முக்கியமாகக எனக்குப் பட்டன. ஆகவே, கம்பனையும், வால்மீகியையும் ஒப்பிட்டு, என் மனதில் தோன்றியதைத் தமிழ் மக்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். எனது ஒப்பீடு காவியங்களின் வேறுபாடு பற்றி மட்டுமே. எதையும் உயர்த்தியோ தாழ்த்தியோ சுட்டிக் காட்டுவதற்காக எழுதப் பட்டதல்ல. என்னுடன், இராமாயணப் பாலையும் தேனையும் கலந்து பருகுமாறு தமிழன்பர்களை அழைக்கிறேன்.

    முதலாவதாக, பால காண்டத்தில் அகலியை பாவ விமோசனத்திற்கும், இராமன்-சீதையின் முதல் சந்திப்புக்கும் உங்களை அழைத்துச் செல்கிறேன்…

    வால்மீகி சொல்வதற்கும், கம்பனின் வர்ணனைக்கும் வேறுபாடு இங்கு காணப் படுகிறது…

    அரக்கி தாடகையைக் கொன்று, முனிவர்களின் வேள்வியைக் காத்தபின், அவர்களின் ஆசியுடன், இராமனையும், இலக்குவனையும், மாமுனிவர் விசுவாமித்திரர் மிதிலைக்கு அழைத்து வருகிறார்.

    வால்மீகியின் வழித்தடம் நடந்து செல்வோம்:

     

    मिथिल उपवने तत्र आश्रमम् दृश्य राघवः |

    पुराणम् निर्जनम् रंयम् पप्रच्छ मुनि पुंगवम् || १-४८-११

    மிதில உபவனே தத்ரா ஆஸ்’ரமம் திருஸ்’ய ராகவ: |

    புராணம் நிர்ஜனம் ரம்யம் பப்ரச்ச முனி புங்கவம் || 1-48-11

    इदम् आश्रम संकाशम् किम् नु इदम् मुनि वर्जितम् |

    श्रोतुम् इच्छामि भगवन् कस्य अयम् पूर्व आश्रमः || १-४८-१२

    இதம் ஆஸ்’ரமம் சங்காஸ’ம் கிம் நு இதம் முனி வர்ஜிதம் |

    ஸ்’ரோதும் இச்சாமி பகவன்னு கஸ்ய அயம் பூர்வ ஆஸ்ரம: || 1-48-12

    அங்கே மிதிலைக்கு அருகில் இருக்கும் சோலையில் பழையதாகவும், மனிதர்கள் இல்லாததும், மனத்தைக் கவரும் ஆசிரமத்தை இரகுவின் வழித்தோன்றல் (இராமன்) பார்த்தான்.  (அதைப்பற்றி) முனிவரில் சிறந்தவரை வினவினான்.

    “பூசிக்கத்தகுந்தவரே! ஆசிரமத்தை நிகர்த்தத்தும் முனிவரால் விடப்பட்டதுமான இந்த ஒரு  ஆசிரமம் உண்மையில் முன்னால் யாருடையது? செவிமடுக்க விரும்புகிறேன்”

    முனிவர் கௌதமரும் அவர் மனைவி பேரழகி அகலியையும் வசித்து வந்த ஆசிரமம் அது என்றார். அகலியையின் அழகில் மயங்கிய விண்ணவர் கோன் இந்திரன், முனிவரைப் போன்று வேடம் பூண்டு அவளுடன் கள்ள உறவு கொள்ள வந்த நிகழ்ச்சியை விவரிக்கத் துவங்கினார்.

    मुनि वेषम् सहस्राक्षम् विज्ञाय रघुनंदन |

    मतिम् चकार दुर्मेधा देव राज कुतूहलात् || १-४८-१९

    முனி வேஷம் சஹஸ்ராக்ஷம் விக்ஞாய ரகுநந்தன |

    மதிம சகார துர்மேதா ராஜ குதூஹலாது || 1-48-19

    अथ अब्रवीत् सुरश्रेष्ठम् कृतार्थेन अंतरात्मना |

    कृतार्था अस्मि सुरश्रेष्ठ गच्छ शीघ्रम् इतः प्रभो || १-४८-२०

    आत्मानम् माम् च देवेश सर्वदा रक्ष गौतमात् |

    அத அப்ரவீது ஸுரஸ்’ரேஷ்ட்டம் க்ருதார்த்தேன அந்தராத்மணா |

    க்ருதார்த்தாஸ்மி ஸுரஸ்’ரேஷ்ட்ட கச்ச ஸீ’க்ரம் இத: ப்ரபோ ||

    ஆத்மானம் மாம் ச தேவேஸ’ ஸர்வதா ரக்ஷ கௌதமாது |  1-48-20

    ரகுவின் வழிதொன்றலே (இராமா)! தபஸ்வியின் உருக்கொண்டு வந்த ஆயிரம் கண்ணனை (இந்திரனை) அறிந்துகொண்டு, தீய அறிவினால் வானவர் அரசனின் மகிழ்வுக்காக (உறவு கொள்ள) மனதில் முடிவெடுத்தாள்

    பிறகு, (அச்)செயலின் (உடலுறவின்) பயனினால் மனநிறைவு அடைந்தவளாக, தேவர்களில் சிறந்தவனிடம் (இந்திரனிடம்) சொன்னாள்.  “வானவரில் சிறந்தவரே!  (இச்)செயலின் பயனை அடைந்தேன்.  பிரபோ!  நீர் விரைவில் இங்கிடமிருந்து செல்லும்.  விண்ணவர் கடவுளே, தம்மையும், என்னையும், எப்பொழுதும் கௌதமரிடமிருந்து காப்பீராக!”

    அதைக்கேட்டு அஞ்சிக் குடிலை விட்டு வெளிவந்த இந்திரனை, முனிவர் கௌதமர் பார்த்து விட்டார். குடிலில் நடந்ததையும் ஞானக் கண்ணினால் அறிந்து கொண்டார். தாங்க இயலாத சினம் கொண்டு, ஆண்மையை இழந்து தவிக்குமாறு இந்திரனுக்குச் சாபமிட்டார்.

    तथा शप्त्वा च वै शक्रम् भार्याम् अपि च शप्तवान् |

    इह वर्ष सहस्राणि बहूनि निवषिस्यसि || १-४८-२९

    ததா ஸ’ப்த்வா ச வை ஸ’க்ரம் பார்யாமபி ச ஸ’ப்தவான் |

    இஹ வர்ஷ ஸஹஸ்ராணி பஹூனி நிவஷிஸ்யஸி ||

    वायु भक्षा निराहारा तप्यन्ती भस्म शायिनी | 1-48-29

    अदृश्या सर्व भूतानाम् आश्रमे अस्मिन् वषिस्यसि || १-४८-३०

    வாயு பக்ஷா நிராஹாரா தப்யந்தீ பஸ்ம ஸா’யினீ |

    அத்ருஸ்’யா ஸர்வ பூதானாம் ஆஸ்ரமே அஸ்மின்னு வஷிஸ்யஸி || 1-48-30

    இந்திரனைச் சபித்த பின்னரும், (சினம் தணியாமல் தன்) மனைவியையும் சபித்தார்.  “பல்லாயிரம் ஆண்டுகள் இங்கு குடியிருப்பாய். உணவின்றி, காற்றையே குடித்து, சாம்பலில் படுப்பவளாகத் துடிதுடிப்பாக. எல்லா உயிரினங்களாலும் காண இயலாதவளாக இந்த ஆசிரமத்தில் வசிப்பாயாக.

    यदा तु एतत् वनम् घोरम् रामो दशरथ आत्मजः |

    आगमिष्यति दुर्धर्षः तदा पूता भविष्यसि || १-४८-३१

    யதா து ஏதத் வனம் கோரம் ராமோ தஸ’ராத்மஜ: |

    ஆகமிஷ்யதி துர்தர்ஷ: ததா பூதா பவிஷ்யஸி || 1-48-31

    எப்போது இப்படிப்பட்ட கோரமான சோலைக்கு தசரதனின் புதல்வனும், வெல்ல முடியாதவனுமான இராமன் வருகிறானோ, அப்பொழுது தூய்மையை அடையப் பெறுவாய்..

    तस्य आतिथ्येन दुर्वृत्ते लोभ मोह विवर्जिता |

    मत् सकाशे मुदा युक्ता स्वम् वपुः धारयिष्यसि || १-४८-३२

    தஸ்ய ஆதித்யேன துர்வ்ருத்தே லோப மோஹ விவர்ஜிதா |

    மத் ஸகாசே முதா யுக்தா ஸ்வம் வபு: தாரயிஷ்யஸி || 1-48-32

    “தீய நடத்தையாளே (நடத்தை கெட்டவளே)! அவனை விருந்தோம்புவதினால் பேராசையிலிருந்தும், மயக்கத்திலிருந்தும் விடுவிக்கப் படுவாய். என் அருகாமையில் மகிழ்ச்சியைப் பெற்று, உனது வடிவத்தை அணிந்திருப்பவள் ஆகிறாய் (பெறுகிறாய்).”

    இவ்வாறு, அகலியையின் கதையைச் சொல்லி, முனிவர் கௌதமரின் குடிலில் நுழைந்து, அவளது சாபத்தை நீக்கும்படி இராமனிடம் விசுவாமித்திரர் சொன்னார். அதை ஏற்றுக்கொண்டு, முனிவரின் பின்னால், இராமனும், இலக்குவனும், குடிசைக்குள் நுழைந்தனர். உடனே, சாபம் நீங்கப் பெற்று, அகலியை இராமனின் கண்களுக்குப் புலப்பட்டாள். இருவரும், அவள் தாள் பணிந்து வணங்கினர். கௌதமரின் சொற்களை நினைவில் நிறுத்தி, இருவரின் கால்களைக் கழுவி, கைகளைக் கழுவ நீர் வழங்கி முறைப்படி உபசரித்தாள் திரும்பி வந்த கௌதமரும், அவளை ஏற்றுக்கொண்டார் என்று முடிக்கிறார், மாமுனி வால்மீகி.

    இனி, இந்நிகழ்ச்சியைக் கம்பரின் கண்களால் காண்போம்:

     

    இணைய நாட்டினில் இனிதுசென்று இஞ்சி சூழ் மிதிலை

    புனையும் நீள்கொடிப் புரிசையின் புறத்து வந்து இறுத்தார்

    மனையின் மாட்சியை அழித்து இழி மாதவன் பன்னி

    கனியும் மெட்டு உயர் கருங்கல் ஓர் வெள்ளிடை கண்டார்.  – பால காண்டம் — 1.470

    இத்தகைய நாட்டிற்கு இனிமையாகச் சென்று, நீண்ட கொடிகளை (மாலையாகப்) சூடிக்கொண்டு இருக்கும் மதில்கள் சூழும் மிதிலை நகரத்தின் புற மதிலின் அருகாமையை அடைந்தனர். இல்லற வாழ்வின் சிறப்பை (கற்பை) அழித்ததால் இழிந்து, மாபெரும் தவசியின் (கௌதமரின்) சாபத்தால் வெற்றிடத்து மேட்டில் ஒரு கருங்கல்லைக் கண்டனர்.

    கண்ட கல்மிசைக் காகுத்தன் கழல் துகள் கதுவ

    உண்ட பேதைமை மயக்கு அற வேறுபட்டு உருவம்

    கொண்டு மெய் உணர்பவன் கழல் கூடியது ஒப்ப

    பண்டை வண்ணமாய் நின்றனள் மாமுனி பணிப்பான்.  – 1.471

     (மனத்தில்) உள்வாங்கிய அறியாமை என்னும் மயக்கம் நீங்கியதும் மெய்ஞானத்தை உணர்ந்து வேறு (ஞான) உருவம் அடைந்து (இறைவனின்) திருவடிகளில் சேர்வது போல, (அவர்கள்) பார்த்த கல்லின் மீது காகுத்தர் வழிவந்தவனின் (இராமனின்) கால் தூசி பட்டவுடன் (அகலியை) முந்தைய (அழகு) வடிவத்தில் நின்றாள். பெரும் முனிவரும் (விசுவாமித்திரரும்) (அப்பெண் முனிவர் கௌதமரின் மனைவி அகலியை என்று) கூறினார்…

    …முன்னை ஊழ் வினையினாலோ நடு ஒன்று முடிந்ததுண்டோ

    அன்னையே அனையாட்கு இங்கன் அடுத்தவாறு அருளுக என்றான். – 1.473

    “முன்னாளின் (முன்பிறப்பின்) தீய செயலினாலா, (இப்பிறப்பில்) நடுவில் ஒன்று (செய்து) முடிந்ததால் உண்டாகியதா? தாய்க்கு நிகரானவளுக்கு இவ்வாறு (நிகழ்ந்ததை) அடுத்துக் கூறி அருளுங்கள்” என்று (இராமன்) கேட்டான்.

    “வானவர்களுக்கு அதிபனான இந்திரன், அகலியையின் அழகில் மயங்கி, அவளை அடைய வேண்டும் என்ற தீய எண்ணம் கொண்டான். அதற்குத் தகுந்த தருணத்தை நோக்கிக் காத்திருந்த அவன், ஒரு நாள் கௌதம முனிவரை அகலச் செய்தான்.” என்று சொன்ன விசுவாமித்திரர், மேலும் தொடர்ந்தார்…

    பொய்இலா உள்ளத்தான் தன் உருவமே கொண்டு புக்கான்.  – 1.475

    புக்கு அவளோடும் காமப் புது மண மதுவின் தேறல்

    ஒக்க உண்டு இருத்தலோடும் உணர்ந்தனள் உணர்ந்தபின்னும்

    தக்கதென்று என்ன ஒராள் தாழ்ந்தனள் இருப்ப தாழா

    முக்கணான் அனைய ஆற்றல் முனிவனும் முடுக்கி வந்தான்.  – 1.476

    மனத்தில் பொய்மையே இல்லாதவரின் (கௌதமரின்) உருவத்தை மேற்கொண்டு (குடிலில்) நுழைந்தான்.  புகுந்து, காமம் என்ற புது மதுவின் மணத்தை உடைய கள்ளை அவளுடன் உண்டு (மயங்கி) இருந்தபோது, (தன்னுடன் இருப்பவன் இந்திரன் என்று அகலியை) உணர்ந்தாள். உணர்ந்த பின்னும் (அது கற்புக்கு) தகுந்தது அல்ல என்று (அதைத்) மறுக்காமல் தாழ்ந்த (நிலைக்கு) வந்தாள்.  (அப்படி) இருக்கும் போது தாழ்ந்ததைச் செய்யாத, முக்கண்ணனுக்கு இணையான ஆற்றல் கொண்ட முனிவர் (கௌதமர்) விரைவாக வந்தார்.

    …இந்திரன் ஒரு பூனையின் வடிவில் தப்பிச் செல்ல முயன்றான். அதை அறிந்த கௌதமர் இந்திரனுக்கு சாபம் கொடுத்தார்…

    ஆயிரம் மாதர்க்குள்ள அறிகுறி உனக்குண்டாக என்று

    ஏயினான் அவைஎலாம் வந்து இயைந்தன இமைப்பின் முன்னம். —  1.478

    மெல்லியலாளை நோக்கி விலைமகள் அனைய நீயும்

    கல்இயல் ஆதிஎன்றான் கருங்கல் ஆய்மருங்கு வீழ்வாள்.  —  1.479

    பிழைத்தது பொறுத்தல் என்றும் பெரியவர் கடனே அன்பால்

    அழல் தருங் கடவுள் அன்னாய் முடிவு இதற்கருளுக என்ன

    தழைத்து வண்டு இமிரும் தண் தார்த் தசரதராமன் என்பான்

    கழல் துகள் கதுவஇந்தக்கல் உருத் தவிர்தி என்றான்.  – 1.480

    அண்ணலே உன் கை வண்ணம் அங்கு கண்டேன் கால் வண்ணம் இங்கு கண்டேன்.  – 1.481

    …பெண்களின் அடையாளம் (பெண்குறி) ஆயிரம் உன்னிடம் உண்டாகட்டும் என்று சபித்தார். கண் இமைக்கும் நேரத்திற்குள் அவை (இந்திரன் உடம்பில்) வந்து சேர்ந்தன.

    பெண்ணைப் (அகலியையை) பார்த்து, “வேசியைப் போன்று நடந்த நீயும் கல் ஆகக் கடவாய்!” என்றார்.  (அவளும்) கருங்கல் ஆகித் தடுமாறி விழப் போனாள். 

    “(மற்றவர் செய்யும்) தவறுகளைப் அன்புகொண்டு பொறுத்துக்கொள்ளுதல் சான்றோர்களின் கடமை ஆகும்.  நெருப்பைக் கக்கும் (கண்ணுள்ள) கடவுளைப் போன்றவரே, இதற்கு (இந்தச் சாபத்திற்கு) ஒரு முடிவை எனக்கு அருளுக” என்கவே (என்று அகலியை கேட்கவே), “(நன்கு தேனைப் பருகி) செழித்த வண்டுகள் (ரீங்கார) ஒலி எழுப்பக்கூடிய குளிர்ந்த மலர் மாலை அணிந்த தசரத(னின் மகன்) இராமன் என்பவன் கால் தூசு பட்டு இந்தக் கல் உருவத்தை தவிர்ப்பாய்!” என்றார் (கௌதமர்)…

    (இப்படி அகலியையின் கதையைச் சொல்லி முடித்த விசுவாமித்திரர்), “என் அன்புக்கு உரியவனே, (அரக்கி தாடகையைக் கொன்ற) உன் கைத்திறனை அங்கு (வேள்வி நடந்த இடத்தில்) கண்டேன்.  உன் காலின் (கருணைத்) திறத்தை (அகலியை சாபவிமோசனம் மூலம்) இங்கு கண்டேன்” (என்று வியந்தார்.)

    ஒப்பீடு

    அகலியையின் கதையை இருவருமே கிட்டத்தட்ட ஒரே மாதிரித்தான் சொல்லி இருக்கிறார்கள்.  இருப்பினும் சொன்ன முறையிலும், உட்பொருள்களிலும் வேறுபாடுகள் உள்ளன.  அகலியை தன் கணவன் உருவில் வந்து தன்னைச் சேர்ந்தவன் தன் கணவன் அல்ல என்று தெரிந்தும், அதற்கு உடன்படுவது தவறு, கற்புடைமை ஆகாது என்று அறிந்தும் அத்தவறைச் செய்தாள் என்றுதான் இருவருமே எழுதி இருக்கிறார்கள்.

    அவள் ஏன் அப்படிச் செய்யத் துணிந்தாள் என்பதற்கு கம்பர் விளக்கம் தரவில்லை.

    ஆனால் வால்மீகியோ दुर्मेधा என்ற ஒரு சொல்லினாலும், கள்ள உறவிற்குப் பிறகு தான் அதனால் மன நிறைவு அடைந்ததை அகலியை இந்திரனிடமே சொல்லி, அதைத் தன் கணவரிடமிருந்து மறைத்து, இருவரையும் எப்போதும் காக்குமாறு வேண்டிக்கொள்வதைக் குறிப்பிடுவதின் மூலம் அகலியையின் மன நிலையை விளக்குகிறார்.

    அகலியைக்கு தீய நினைவுகள், கெட்ட எண்ணங்கள் (दुर्मेधा – vanity) இருந்தன. அவை தன் அழகு குறித்த செருக்கால் அவளிடம் தோன்றின. தனது அழகை வானவர்கோன் இந்திரனே விரும்புகிறானே, அந்த அழகினால் கவரப்பட்டு, தன்னை அடைவதற்காகக் கடும் தவத்தின் வல்லமையால் அவனையே சுட்டெரிக்கும் சாபம் கொடுக்க வல்ல கௌதம முனிவரின் கோபத்தையும் எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறானே என்ற மனக் களிப்பும் இருந்தது.  அதுதான் அவளுக்கு அந்தக் கள்ள உறவு உள்மனதில் நிறைவைத் தந்தது என்று இந்திரனிடம் கூறுவதாகக் குறிப்பிட்டிருக்கிறார் என்று படுகிறது.

    அதைச் சொல்ல விருப்பம் இல்லாத காரணத்தால், கம்பர் அது பற்றி மௌனம் சாதிக்கிறார் என்றும் தோன்றுகிறது. ஆயினும் கம்பர் தனது உள்ளத்தில் அகலியைபால் எழுந்த குமுறலை, கௌதம முனிவர் வாய் மூலமாக “விலைமகள் அனைய” என்று பழிக்கச் செய்து, அவளை அடித் தளத்திற்கே தள்ளி விடுகிறார்.

    கற்பிற்கு அவர் கொடுத்த தலை சிறந்த மதிப்பு அவரை அவ்வாறு எழுதத் தூண்டியது போலும்!  ஆகவே, உயிரை விடக் கற்பைச் சிறப்பாக எண்ணாத கல் நெஞ்சக்காரி அகலியை என்று எண்ணி, கல்லாகச் சமைந்து போகுமாறு சாபம் பெற்றதாகக் காட்டுகிறார்.

    வால்மீகியோ, அகலியையின் அழகு வெளியார்க்குப் புலப்பட்டதுதானே இத் தவறுக்கு மூல காரணமாயிற்று என்று, அவள் யார் கண்ணுக்கும் புலப்படாமல் போகட்டும் என்று சபிக்கப்பட்டதாகப் புனைந்திருக்கிறார்.

    இருந்த பொதிலும், அகலியையின் கதையை அறிந்த பின்னும் அகலியையைத் தாயாகவே இராமபிரான் நோக்கினார் என்று இருவருமே எழுதியிருப்பது, இராமன் பெண்களுக்குக் காட்டும் மதிப்பை உணர்த்துவதாவே அமைந்து இருக்கிறது.

    இதனாலேயே, அகலியைக்கு சாபவிமோசனம் எப்படி நிகழ்ந்தது என்பதைச் சொல்வதில் இருவரும் மாறுபடுகிறார்கள்.

    கண்ணுக்குப் புலப்படாத நிலையில் அகலியை இருப்பதால், ஆசிரமத்தின் நிலை கண்டு, இராமன் வினவ, அகலியையைப் பற்றி விசுவாமித்திரர் விளக்குவதாக வால்மீகி வரைந்திருக்கிறார்.

    கம்ப நாட்டாரோ, கருங்கல்லாக இருந்த அகலியை, இராமனின் கால் தூசி பட்டுத் தன்னுருவத்தை அடைந்ததும், அந்த விந்தையான நிகழ்வைப் பற்றி விசுவாமித்திரர் தெளிவு படுத்துவதாக எழுதி இருக்கிறார்.  இதுதான் மாற்றத்தின் காரணம் என்று எனக்குப் படுகிறது.

    இந்திரனுக்குக் கொடுக்கப்பட்ட சாபத்திலும் இருவரும் மாறு படுகிறார்கள்.

    இந்திரனின் ஆண்மையே அவனைத் தவறான வழியில் நடத்திச் சென்றது என்று கருதிய வால்மீகி அவன்  ஆண்மை அழியட்டும் என்ற சாபத்தைப் பெற்றதாகக் குறிப்பிட்டிருக்கிறார்.

    கம்பரோ, பிறன்மனை புகுந்தவனுக்கு மிகக் கொடிய தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று எண்ணுகிறார். எனவே, உடல் முழுதும் பெண் குறிகள் பரவி நிலைத்திருக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டான் என்று பாடியிருக்கிறார்.  மேன்மையான நிலையில் இருக்கும் ஒருவன், செய்த தவற்றின் விளைவு அனைவர் கண்ணுக்கும் தெரியும் தண்டனையைப் பெறவைக்க வேண்டும், எதற்காக அத்தண்டனை கிடைத்தது என்பதும் தெள்ளத் தெளிவாகப் புலப்பட வேண்டும், அனைவரும் அவனைத் தூற்றவேண்டும், அவன் மனம் புழுங்கித் தன் தவற்றை உணர்ந்து திருந்த வேண்டும் என்றே, அத்தண்டனை கொடுக்கப் பட்டதாக நம்மை நினைக்க வைக்கிறார் என்பது நமக்கு விளங்குகிறது.

    இதனால், பிறன் மனை நோக்குவார்பால் தமிழருக்கு இருக்கும் வெறுப்பும் புலப்படுத்தப் படுகிறது.

    வால்மீகி சொல்லிச் சென்றதையே கம்பரும் வடித்திருந்தாலும், அவர் தமிழ் மரபை எவ்வாறு இந்நிகழ்ச்சியில் இழைத்து இருக்கிறார் என்று புலனாகிறது.

    இராமன்-சீதை முதல் சந்திப்பு

    சிவனாரின் வில்லை முறித்தபின்தான் இராமனும் சீதையும் மிதிலையில் சந்தித்தார்கள் என்று வால்மீகி முனிவர் குறிப்பிட்டிருக்கிறார். ஆனால், கவிச் சக்கரவர்த்தி கம்பரோ மிதிலையில், கன்னி மாடத்தில் நின்ற சீதையை முதல் முதலாக இராமன் பார்த்து இருவரும் ஒருவருக்கு மற்றொருவர் தத்தம் உள்ளங்களைப் பறிகொடுத்ததாகப் புனைந்துள்ளார்.

    ஆகவே, இந்த விஷயத்தில் ஒப்பீடு எதுவும் செய்ய இயலாது. இருப்பினும், வால்மீகி ஏன் அப்படி எழுதினார் என்பதற்குத் தகுந்த சான்றுகள் இருப்பதால், அதையே ஒப்பீடாகப் பிறகு எழுதுகிறேன்.

    விசுவாமித்திர முனிவர், இராமன், இலக்குவனுடன் நாமும் சீதையைச் சந்திக்கச் செல்வோம்.

    பால காண்டத்தில், பத்தாம் படலமான மிதிலைக் காட்சிப் படலத்தின் துவக்கத்தில் கம்ப நாட்டார் இருபது வெண்பாக்களில் மிதிலையின் அழகைத் தீட்டியிருக்கிறார்.

    அப்படிப்பட்ட அழகோவியம் வால்மீகி இராமயணத்தில் காணப்படவில்லை.

    இராமன் மிதிலைக்குள் நுழையும் பொது அடித்த காற்றில் சுற்றியும் படர்ந்திருந்த கொடிகள் அசைந்தாடின.  படலத்தின் முதல் வெண்பாவில் அதை கம்பர் வர்ணிக்கும் பங்குதான் என்னே!

    கம்பரசத்தைப் பருகுவோம்!

    மை அருமலரின் நீங்கியான்செய் மாதவத்தின் வந்து

    செய்யவள் இருந்தாள் என்று செழு மணிக் கொடிகள் என்னும்

    கைகளை நீட்டி அந்தக் கடி நகர் கமலச் செங்கண்

    ஐயனை ஒல்லை வாஎன்று அழைப்பதுபோன்றது அம்மா.  – 1.486

    “நான் பெரிய தவத்தினைச் செய்யவே, குற்றமற்ற (தாமரை) மலரைத் துறந்துவிட்டு, அவள் (சீதை இங்கு) வந்து இருந்தாள்!” என்று நன்கு வளர்த்திருந்த அழகிய கொடிகளால் ஆன (தனது) கைகளை நீட்டி (ஆட்டி), செந்தாமரைக்கண்ணனை விரைந்து வா என்று மிதிலை நகரமே அழைப்பது போல இருந்ததம்மா.

    இந்தச் செய்யுளின் வாயிலாக சீதையைச் செந்தாமரையில் அமர்ந்திருக்கும் இலக்குமி என்றும், இராமனைச் செந்தாமரைக்கண்ணனான திருமால் என்றும் குறிப்பிட்டிருக்கிறார் கம்பர்.

    அது மட்டுமல்லாது, மிதிலை நகரமே மாபெரும் தவத்தைச் செய்து இலக்குமியின் அவதாரமான சீதையை அடைந்தது, தனது கைகளான மலர்க்கொடிகளை நீட்டி, திருமாலின் அவதாரமான் இராமனை அழைத்தது என்று புனைந்திருக்கிறார்.

    ஒருகணம் கண்களை மூடிக்கொண்டு, கம்பரின் வர்ணிப்பை நமது மனக்கண் முன்பு நிறுத்திப் பார்த்தோமானால், அவரது ஆழ்ந்த புலமை நமக்குப் புலனாகும்.

    …அழகு மிகுந்த மிதிலை மாநகரைக் கண்ணுற்றுக்கொண்டே வந்தவர்கள், கன்னிமாடத்தில் சீதையைக் காண்கின்றார். சீதையை முதன்முதலாக கம்பர் உருவகித்து இருப்பது நமது மனதைத் தொடுகிறது…

    உமையாள் ஒக்கும் மங்கையர் உச்சிக் கரம் வைக்கும்

    கமையாள் மேனி கண்டவர் காட்சிக் கரை காணார்

    இமையா நாட்டம் பெற்றிலம் என்றாரிரு கண்ணால்

    அமையாது என்றார் அந்தர வானத்தவர் எல்லாம்.  – 1.509

    மங்கையரால் தலைக்கு மேலே கைகூப்பி வணங்கத்தக்க உமையவளைப் போன்ற நற்குணம் கொண்டவளின் உருவத்தைக் கண்டவர், அந்த அழகின் எல்லையைக் கானா இயலாது போனார்கள். (வானவர்கள் போல கண்களை) இமைக்காமல் நோக்கும் திறன் இல்லது போனோமே என்று (வருந்தினர்).  விண்ணில் (குடியிருக்கும்) தேவர்கள் அனைவரும் (சீதையின் அழகைக் காண) இரு கண்கள் போதாது என்று (பதிலிருத்தனர்).

    இங்கு கம்பன் சீதையின் அழகை வர்ணிக்க முயன்று, அதைச் செய்யும் வகை அறியாது — அரம்பை, ஊர்வசி, மேனகை, திலோத்தமை என்ற அழகு மிக்க வானுலகு மாதரைக் கண்ட விண்ணவரே தங்களால்கூட சீதையின் வனப்பைக் காண இரு கண்கள் போதாது என்று சொல்வதாகச் சொல்லித் தனது இயலாமையை முன்வைக்கிறார்.

    இருந்தபோதிலும் சீதையின் இயல்பு, அழகு பற்றிப் புகழ்ந்து பத்து செய்யுள்களின் தெரிவிக்கிறார்.

    ‘கண்டதும் காதல்’ (love at first sight) என்ற இலக்கணத்தை உருவாக்கியவர்களாக இராமனும் சீதையும் ஒருவரைக் கண்டு ஒருவர் விரும்பியதையும், இராமன் சென்றதும், காதல் நோய் கொண்டு சீதை தவித்ததையும், இராமன் சீதை நினைவால் என்கியதையும் 56 பாக்களில் விளக்கி உள்ளார் கவிச் சக்கரவர்த்தி கம்பர். அப்பாக்களில், இராமனும் சீதையும், ‘கண்டதும் காதல் கொண்ட’ பாக்கள் இரண்டை மட்டும் காண்போம்:

    எண்ண அரு நலத்தினாள் இனையள் நின்றுழி

    கண்ணொடு கண் இணை கவ்வு ஒன்றை ஒன்று

    உண்ணவும் நிலைபெறாது உணர்வும் ஒன்றிட

    அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள்.  – 1.519

    பருகிய நோக்கு எனும் பாசத்தால் பிணித்து

    ஒருவரை ஒருவர் தம் உள்ளம் ஈர்த்தலால்

    வரி சிலை அண்ணலும் வாட்கண் நங்கையும்

    இருவரும் மாறிப் புக்கு இதயம் எய்தினர்.  —  1.521

    எண்ணிப் பார்க்கக் கூட இயலாத நற்குணங்களைப் (பெற்ற) இத்தன்மையை உடையவள்(சீதை) (கன்னி மாடத்தில்) நின்று கொண்டிருந்த பொழுது, ஒருவர் கண்ணை மற்றவர் கண்கள் கவ்வி விழுங்கவும், (என்ன செய்வது என்று அறியாது) நிலையாக நிற்க முடியாமல், உணர்வுகள் (ஒருவரோடு ஒருவர்) பின்னிக் கொள்ள, மேன்மை மிகுந்த (இராமனும்) நோக்கினான், அவளும் (சீதையும் இராமனைத் திரும்ப) நோக்கினாள்.

    ஒருவரை ஒருவர் கண்களால் பருகியதால் ஏற்பட்ட காதலால், ஒருவரின் உள்ளத்தை மற்றொருவரின் உள்ளம் தன்னிடத்தில் இழுத்துக் கொண்டதால், சிறந்த வில்லை ஏந்திய மாந்தரில் சிறந்தவரும் (இராமனும்), வாள் போன்ற (பார்வையாலே வெல்லக்கூடிய) கண்ணுடைய நங்கையும் (சீதையும்), ஒருவர் இதயத்தில் மற்றவர் குடியேறினர்.

    எப்படிப்பட்ட வர்ணனை!  ஒருவரை ஒருவர் விழிகளால் கவ்வி விழுங்கிக் கொள்கிறார்களாம்!  அதனால் நிலை தடுமாறுகிறார்களாம், உள்ளத்தைப் பறிகொடுத்து, ஒருவர் இதயத்தில் மற்றொருவர் இடம் பிடித்துக் கொள்கிறார்களாம்.  தூய காதலுக்கு இதைவிட விளக்கம் வேண்டுமா என்ன?

    ஒப்பீடு

    முதலில் வால்மீகி முனிவர் இந்த நிகழ்ச்சியை ஏன் எழுதவில்லை என்பதற்குக் காரணம் ஆரண்ய காண்டத்தில் இருக்கும் இரண்டு சுலோகங்களில் (3.87.4, 3.87.10) கிடைக்கிறது.

    இராவணன் அந்தண வேடமிட்டு, சீதைக் கவர வருகிறான்.  அவனை ஒரு முனிவர் என்று நினைத்த சீதை, வரவேற்று, அவன் அமர தர்ப்பைப் புற்களால் நெய்யப்பட்ட இருக்கையை அளிக்கிறாள்.  தன்னைப் பற்றிச் சொல்லும் பொது,

    उषित्वा द्वादश समाः इक्ष्वाकूणाम् निवेशने |

    भुंजाना मानुषान् भोगान् सर्व काम समृद्धिनी || ३-४७-४

    உஷித்வா த்வாதஸ’ ஸமா: இக்ஷ்வாகூணாம் நிவேஸ’னே |

    புஞ்ஜானா மானுஷானு போகானு ஸர்வ காம ஸம்ருத்திநீ || 3-47-8

    இக்ஷ்வாகுகளின் இல்லத்தில் பன்னிரண்டு ஆண்டுகள் வசித்து, மனிதர்களின் அனைத்து இன்பங்களையும் நன்றாக அடையப்பட்டவள் ஆனேன். (என்னுடைய எல்லா விருப்பங்களும் நிறைவேற்றப்பட்டன.)

    (பிறகு கைகேயின் தூண்டுதலால் பதினான்கு ஆண்டுகள் கானகம் வர நேர்ந்தது என்று தெரிவித்த சீதை, புறப்படும் சமயத்தில் தங்கள் வயது என்ன என்று அறிவிக்கிறாள்.)

    मम भर्ता महातेजा वयसा पंच विंशकः || ४७१०
    अष्टा दश हि वर्षाणि मम जन्मनि गण्यते |

    மம பர்த்தா மஹாதேஜா வயஸா பஞ்ச விம்ஸ’க: |

    அஷ்டா தஸ’ ஹி வர்ஷாணி மாமா ஜன்மனி கன்யதே || 3-47-10

    பேரொளி கொண்ட என் கணவர் இருபத்தைந்து வயதானவர். என் வயது பதினெட்டு ஆண்டுகளாகவே எண்ணப்பட்டது.

    அவள் 12 ஆண்டுகள் அயோத்தியில் இருந்ததற்குப் பிறகு, தனக்கும் தன் கணவருக்கும் என்ன வயது என்று ஐயத்திற்கு இடமின்றி சீதை இராவணனிடம் உரைக்கின்றதாக வால்மீகி எழுதியிருக்கிறார்.

    மனக்கணக்குப் போட்டப் பார்த்தால், சீதை இராமனை மணந்த பொது அவளுக்கு ஆறே வயது (18-12=6) என்று விளங்கும்.  இராமனுக்கு பதிமூன்று ஆண்டுகள் நிரம்பி இருந்தன. அந்த வயதில் ஆறு வயதுச் சிறுமியான சீதைக்குக் காதல் என்ற உணர்வு தோன்ற வழி இல்லையே! அதனாலேயே, திருமணத்துக்கு முன் அவர்கள் சந்தித்ததாக வால்மீகி எழுதவில்ல என்று புலனாகிறது.

    வால்மீகியின் இராமாயணத்தை நன்கறிந்த மகாகவி கம்பர் ஏன் இப்படி மாற்றி எழுதத் துணிந்தார்?  இதற்கு தமிழ் நாட்டின் களவு, கற்பு இவற்றைப் பற்றி சுருக்கமாகக் கூறித்தான் விளக்க வேண்டும்.

    செந்நாப் போதாரான வள்ளுவப் பெருமான் உலகுக்கு ஈந்த தனது திருக்குறளை அறம், பொருள், இன்பம் என்று மூன்று பிரிவுகளாக(பால்களாக)ப் பிரித்திருக்கிறார்.  இன்பத்துப் பாலையும் களவியல், கற்பியல் என்று இரண்டாகப் பகுத்திருக்கிறார்.

    கற்பைப் பற்றி நாம் அனைவரும் நன்கறிவோம். களவு என்றால் என்ன? திருட்டு என்பதுதானே?  அதுவும் எப்படிப்பட்ட திருட்டு? ஒருவர் உள்ளத்தை மற்றொருவர் திருடிக் கொள்வது. நமது இதயத்தில் மற்றொருவர் குடியேற அனுமதிப்பது. நமது உள்ளம் நம்மிடத்தில் இல்லாதபோது, அது களவாடப் பட்டபின்பு, அதை எப்படி இன்னொருவருக்குக் கொடுக்க இயலும்? இன்னொருவரை நாடி மனம் எப்படிச் செல்லும்? இல்லை, நம்மிடமிருந்து திருடப்பட்ட பொருளை மீண்டும் இன்னொருவருக்கு எப்படித் திருட்டுக் கொடுக்க இயலும்? அப்படி ஒருவர் உள்ளத்தை மற்றொருவரிடம் பறிகொடுத்து, அவர் நினைவாக வாழ்வதுதான் கற்பு. ‘

    ஒருத்தனுக்கு ஒருத்தி’ என்ற பழமொழி உருவாகக் காரணமே இராமனும், சீதையும்தான். இராமன், சீதை இருவருமே கற்புக்கு இலக்கணமாகத்தான் வாழ்ந்தார்கள், வடிவமைக்கப்பட்டர்கள், அனைவருக்கும் முன்மாதிரியாக விளங்கினார்கள்.

    இதுவே தமிழ்ப் பண்பின் எடுத்துக்காட்டாகக் கம்பராமாயணத்தில் பரிணமித்தது.

    எனவே, இராமகாதையைத் தமிழில் வடித்தெடுக்கும் பொது, கற்பிற் சிறந்த சீதையும், ‘பிறன் மனை நோக்காப் பேரறிவாளனும், ஒரு மனைவி உறுதியாளனுமான இராமனும், ஒருவரிடத்தில் மற்றொருவர் உள்ளத்தைப் பறிகொடுத்தால்தான் தமிழ் மரபுப்படி வடிவமைக்க இயலும் என்று களவியலையும் கம்பர் தனது இராமகாதையில் புகுத்தினார்.

    முழுமையான களவு நடந்த பின்னர்தான், மாற்றுக் குறையாத கற்பு இருவரிடமும் நிலைக்கும் என்று கம்பர் முடிவு செய்திருக்க வேண்டும். அதுதான் இராமன்-சீதையின் முதற் சந்திப்பையும், கண்டதும் கொண்ட காதலையும் விவரித்து, இருவரின் கற்புக்கும் அடித்தளம் அமைத்திருக்க வேண்டும்.

    மேலும், கடவுளர்களின் அவதாரங்களாகக் கம்பரால் எண்ணப்பட்ட இராமனும், சீதையும், மனித உருவில்தான் காதல் என்ற நுட்பமான உணர்வைப் பெற இயலும் என்ற எண்ணமும் அவருக்கு இருந்திருக்கக் கூடும். அதுவும் இன்னொரு காரணமாக இருந்திருக்கலாம் அல்லவா!

    மூலத்தை மாற்றினாலும், கவிச்சக்கரவர்த்தி கம்பன் எந்த உயர்வான எண்ணத்துடன் அவ்வாறு செய்தார் என்று நம்மால் பகுத்து அறிந்து கொள்ள முடிகிறது.

    அடுத்த ஒப்பீட்டில் இராவணன் சீதையைக் கவர்ந்து சென்றதைப் பற்றி அணுகுவோம்.

                                                                                                                                                    ===========================================

    படங்களுக்கு நன்றி: http://www.tamilhindu.com/2014/03/kamban-valmiki-literary-comparison/

    Share